Author: நிர்மலா ராகவன்

  • பழகத் தெரிய வேணும் – 91

    பழகத் தெரிய வேணும் – 91

    நிர்மலா ராகவன்

    முதுமையில் இளமை

    நூறு வயதைக் கடந்த ஒருவர் வேடிக்கையாகக் கூறியது: “நம்மை ஒத்தவர் என்ன நினைப்பார் என்ற கவலை இனி இல்லை. ஏனெனில், அவர்களில் யாரும் இப்போது உயிருடன் இல்லை!”

    பிறர் என்ன நினைப்பார்கள்!

    நாம் அப்படி நினைத்துக் குழம்பாவிட்டாலும், பதின்ம வயதிலிருந்து, `பிறர் என்ன நினைப்பார்கள்!’ என்று கண்டித்துக்கொண்டே இருப்பார்கள் பெற்றவர்கள். அதனால், வயது ஏற ஏற, பிறருக்குப் பயந்தே வாழ்வது பழக்கமாகியிருக்கும்.

    வீண் கட்டுப்பாட்டைப் பொறுக்க முடியாது, சுதந்திரமாக நடக்கத் தலைப்பட்டவர்களுக்கு வசவும், கெட்ட பெயரும் கிடைக்கும்.

    அறுபது வயதில், யாரும் நம்மைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கவில்லை என்பது புலனாக, `இவர்களுக்காகவா பயந்து பயந்து, நம் வாழ்க்கையை வீணடித்தோம்!’ என்ற அயர்ச்சி உண்டாகும்.

    “இளமையை நல்லபடியாகக் கழித்திருந்தால், முதுமை ஓய்வாக இருக்கும்!” (ஸ்பானிஷ் நாட்டுப் பழமொழி)

    முதுமையில் வாட்டமா?

    நாம் வளர்க்கும் குழந்தைகளும் ஒரு நாள் பெரியவர்கள் ஆவார்கள்; அப்போது, அவர்களுடைய அன்பும் அண்மையும் நமக்குத் தேவைப்படும் என்பது புரியாது, அத்தியாவசியத் தேவைகளைக் கொடுப்பதுடன் தம் கடமை தீர்ந்தது என்று நினைத்து நடப்பவர்கள் முதுமையில் வாடத்தான் நேரும்.

    கதை

    நாற்பது வயதுக்கு மேல் மூன்றாவது குழந்தை ஆயிஷாவைப் பெற்றெடுத்தாள் ஹப்ஸா.

    உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும் சமயத்தில், `இது என்ன தொந்தரவு!’ என்ற எரிச்சல் ஏற்பட, குழந்தையை வளர்க்க ஒரு பெண்ணை அமர்த்தினாள். குழந்தை எப்படி வளர்கிறாள் என்று கவனிக்கும் ஆர்வம் கிஞ்சித்தும் அவளிடம் இருக்கவில்லை.

    ஒரு சமயம், “உன்னை எதற்குத்தான் பெற்றேனோ!’ என்று ஹப்ஸா எரிந்து விழ, அவள் மனம் உடைந்துபோயிற்று.

    ஆயிஷாவுக்குப் பத்து வயதானபோது, தாய் எது கூறினாலும், “நீ என்னை வளர்க்கவில்லையே” என்று எதிர்த்துப் பேசினாளாம். (அண்மையில், தன் கதையை வருத்தத்துடன் அப்பெண்ணே என்னிடம் பகிர்ந்துகொண்டது).

    அன்பு கிடைக்காது ஏங்குபவர்கள் தீய நட்பை நாடுவார்கள். ஆனால், ஆயிஷா நல்ல பெண். மகா புத்திசாலி வேறு. கல்லூரிப் படிப்புடன், தன் கவனத்தைப் பல ஆக்ககரமான வழிகளில் செலுத்தினாள்.

    தீபாவளிக்கு எங்கள் இல்லத்திற்கு வந்துவிட்டு, “நான் இவ்வளவு மகிழ்ச்சியுடன் இருந்ததே இல்லை. இன்றிரவு உங்கள் வீட்டில் தங்கலாமா?” என்று கெஞ்சலாகக் கேட்டாள்.

    அவள் உணவருந்தும்போது, மெள்ள பேச்சுக் கொடுத்தேன்.

    “நீங்கள் செய்வதுபோல், எங்கள் வீட்டில் ஒன்றாக அமர்ந்து, பேசிச் சிரித்தபடி சாப்பிடமாட்டோம். பண்டிகைச் சமயங்களில் அப்படிச் சாப்பிட்டாலும், பேசுவது கிடையாது,” என்றாள்.

    குடும்பத்தில் யாராவது தனியாகச் சாப்பிட்டாலும், கூடவே ஒருவர் இருக்கவேண்டும் என்பது நான் என் பாட்டியிடம் கற்ற பாடம். சாப்பிடுபவர் அதிகம் பேசக் கூடாது. ஆனால் உடன் இருப்பவர் சுவாரசியமாக ஏதாவது கதை சொல்வார். அனேகமாக, அது அவர் வாழ்க்கையில் சந்தித்த நபர்களைப் பற்றி இருக்கும்.

    “காரில் போகும்போதும் நான் இப்படித்தான் எதையாவது அலசிக்கொண்டிருப்பேன். பொதுவாக, அதிகம் பேசாதவர்கள்கூட அப்போது பேசுவார்கள்,” என்று நான் கூற, “நாங்கள் காரிலும் பேசிக்கொள்வது கிடையாது. அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டுக்கொண்டு இருப்பார்கள்,” என்று, விரக்தியுடன் பதில் வந்தது.

    இன்றும், `அம்மாவை எப்படியெல்லாம் ஆத்திரப்படுத்தலாம்?’ என்று யோசிப்பவள்போல் நடந்துகொள்கிறாள்.

    அவளைச் சொல்லிக் குற்றமில்லை. சிறு வயதில் அன்பாக வளர்க்கப்பட்டு இருந்தால்தானே தனக்குக் கிடைத்ததைத் திருப்பி அளிக்க முடியும்?

    வீடு திரும்புகையில், “உங்கள் கதைகளுக்கு மிக்க நன்றி,” என்று பலமுறை கூறி விடைபெற்றாள் ஆயிஷா.

    வயதானவர்களா? போர்!

    தமிழ்நாட்டில், `பெரிசு’, `கிழவி’ என்று பேரன் பேத்திகளே அழைப்பதைக் கேட்டிருக்கிறேன். அவர்களுக்கும் ஒரு நாள் முதுமை அண்டாதா?

    அதுதான் அவர்கள் பழக்கம் என்றாலும், மரியாதை இல்லாதது போலிருக்கிறதே!

    முதுமை ஒரு நோயல்ல. எத்துணை அனுபவங்களை, இடர்ப்பாடுகளைக் கடந்து வந்திருந்தாலும், முதியோர்களில் பலரும் மகிழ்ச்சியுடன் வாழ்வை நடத்துகிறார்களே!

    வயதானவர்கள் அனைவருமே மகிழ்ச்சியாக இருப்பார்கள், வாழ்க்கையிலிருந்து பாடம் கற்றிருப்பார்கள் என்று கூற முடியாது. அதற்கு இளமையில் சற்று கவனமாக நடந்திருக்க வேண்டும்.

    `எனக்கு வயதானவர்களுடன் பேசவே பிடிக்காது. போரடிப்பார்கள்!’ என்று கூறும் நடுத்தர வயதினர் முதுமை அடைந்ததும், நிராதரவாக உணர்வார்கள் — `நாம் நினைத்தது போல்தானே பிறரும் நம்மை மதிப்பிடுவார்கள்!’ என்ற தயக்கத்துடன்.

    அறிவுரையை ஏற்கலாமா?

    “நான் புகை பிடிப்பதில்லை. என் தந்தைக்கு அந்தப் பழக்கத்தால் உடல்நிலை சீர்கெட்டுவிட்டதென்று, `நீயும் இந்தப் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாதே! அதை விடவே முடியாது,’ என்று அவரே சிறுவயதிலிருந்து எனக்கு அறிவுரை கூறினார்,” என்று நண்பர் ஒருவர் கூறினார்.

    வயதில் மூத்தவர்கள் சொல்வதெல்லாம் சரி என்பதல்ல.

    ஒரு வேறுபாடு: `நான் செய்த தவற்றை நீயும் செய்யாதே!’ என்ற நல்லெண்ணத்துடன் கூறுகிறார்கள் என்று புரிந்துகொண்டால், அவர்கள் சொற்படி நடக்கமுடியும். அதுவே அவர்களுக்கு அளிக்கக்கூடிய மரியாதை.

    அறிவு வளர வேண்டுமானால், வயதும் கூடிக்கொண்டே போகவேண்டும் என்பதல்ல. பிறரது வாழ்க்கையைக் கூர்ந்து கவனித்தாலே போதும். அவர்கள் செய்த தவற்றை நாமும் செய்யாதிருப்போம்.

    எப்போதும் பாதுகாப்பா!

    சில குழந்தைகள் பாதுகாப்பை நாடி, எப்போதும் தாயை ஒட்டியபடிதான் இருப்பார்கள்.

    `மகளுக்குத்தான் என்மீது எத்தனை அன்பு!’ என்றெண்ணும் தாய்க்கு இப்போக்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், குழந்தையின் வளர்ச்சிக்கு இது நல்லதல்ல. தனியாக இயங்க வேண்டிய தருணங்களில் அச்சம்தான் எழும்.

    கதை

    பத்து வயதான மகளிடம் வீட்டு வேலை செய்யச் சொன்னாள் தாய்.

    “என் வயதில் நீ செய்தாயா?” என்ற சந்தேகம் பிறந்தது மகளுக்கு.

    “இல்லை,” என்று உண்மையை ஒத்துக்கொண்டாள் பெரியவள்.

    “பின்னே, என்னை மட்டும் செய்யச் சொல்கிறாயே?” சிறு குழந்தைகளுக்கே உரிய எதிர்ப்பு.

    “நான் வளர்ந்தபோது, எங்கள் வீட்டு வேலைகளைச் செய்ய ஆட்கள் இருந்தார்கள். அது வேறு காலம், வேறு நாடு. நீ வளர்ந்தபின், எல்லா வேலைகளையும் நீயேதான் செய்ய வேண்டியிருக்கும். அதற்காகத்தான் இப்போதே பழக்குகிறேன். என்னை மாதிரி நீயும் திண்டாடமாட்டாய், பார்!”

    சில குழந்தைகளுக்கு இத்தகைய விளக்கம் புரியும். வேறு சிலர், அம்மாமேல் ஆத்திரப்படுவார்கள். தாய் உறுதியாக இருந்தால், அவளுடைய கண்டிப்பின் காரணம் பிற்காலத்தில் புரியும்.

    அறுபது, எழுபது வயதுக்குமேல் செய்யும் ஒவ்வொரு காரியமும் மலை ஏறுவதுபோல் பிரயத்தனப்பட்டுதான் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், மலைமேலிருந்து பார்ப்பதுபோல், வாழ்க்கையின் அழகான தன்மையை உணரமுடியும் என்கிறார் திரு. அனுபவசாலி.

    வயதானால் குறைந்துகொண்டே வரும் புற அழகு. ஏன், மறைந்துவிடவும் கூடும். ஆனால், மனம் அழகாக இருந்தால், எந்த வயதிலும் அழகாகத் தெரிவார்கள்.

    காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. எல்லா உயிர்களின் உடலும் அப்படித்தான். ஆனால், நம் எண்ணங்களை காலத்துக்கு ஏற்ப மாற்றி நடந்துகொண்டால், நன்மதிப்பும் மரியாதையும் நிலைக்கும்.

    கதை

    பெரிய பணக்காரனாக வேண்டும் என்று இளமையில் கனவு கண்டு, அதற்காகக் கடுமையாக உழைத்தான் ரகுபதி. தன்னைச் சார்ந்தவர்களுக்குத் தேவைக்கும் அதிகமாகவே பணம் கொடுத்தான். பணத்துடன் அதிகாரமும் வந்தடைந்தது.

    அவற்றிற்கான விலை: நேரமின்மையால் குடும்பத்தைக் கவனியாதது.

    தங்கள் வாழ்க்கையில் இப்படி ஒரு நபர் இருப்பதையே அவன் குடும்பத்தார் உணரவில்லை.

    வயதானதும், ரகுவின் உடல்நிலை சீர்கெட்டது. எதிர்பார்த்த அன்பும் அமைதியும் மகிழ்ச்சியும் கிட்டவில்லை. ஏமாற்றமும் உலகத்தாரின் `நன்றிகெட்ட’ போக்கால் ஆத்திரமும்தான் மிஞ்சின.

    அன்பு, கனிவான பேச்சு ஆகியவற்றைக் காசு பணத்தால் ஈடுகட்டிவிட முடியுமா? இது புரியாததால்தான் இறுதிக்கட்டத்தில் பலரது வாழ்க்கையும் சோகத்தில் ஆழ்ந்துவிடுகிறது.

    முதுமையில் முடிந்துவிடுமா வாழ்க்கை?

    குழந்தைகள் வளர்ந்து, கூட்டைவிட்டுப் பறந்ததும், “அவ்வளவுதான்! என் வாழ்க்கை முடிந்துவிட்டது!” என்று விரக்தியுடன் பெருமூச்சு விடுவது எதற்கு?

    உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், அத்துடன் வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை. புதிதாகக் கற்க எவ்வளவோ இருக்கின்றன.

    துணுக்கு

    “நீ உன் வயதுக்கேற்றபடி நடந்துகொள்ளேன்!” என்று சிடுசிடுத்தாள் மகள்.

    அலட்சியமாக, தாய் அளித்த பதில்: “எல்லாரும் அப்படி நடந்துகொள்வதால்தான் உலகம் இப்படி சீர்கெட்டுக் கிடக்கிறது!”

    கதை

    அழகழகாக உடுக்கவேண்டும், புதிய நாடுகளைச் சுற்றிப் பார்க்கவேண்டும், பலவிதமான மனிதர்களைச் சந்திக்க வேண்டும் என்று ஏதேதோ ஆசைகள் மேரிக்கு.

    ஆனால், வன்முறையை பிரயோகித்த கணவன், அவளுக்கு வாய்த்திருந்தான். தாற்காலிகமான வேலை செய்து குழந்தைகளைக் காப்பாற்ற நேர்ந்தது.

    அவளுடைய முதுமையில், கணவன் இறந்தான். ஆனால், அவள் நிர்க்கதியாக விடப்படவில்லை.

    பல ஆண்டுகள், தங்களுக்காக தாய் அனுபவித்த அவதி புரிந்து, மகன் வெளிநாட்டில் வேலை செய்து, நிறைய காசு அனுப்பினான். ஒவ்வொன்றாக அவளும் தன் ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டாள்.

    மகிழ்ச்சியுடன், “கடவுளால் நான் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்!” என்கிறாள். கடந்தகாலம் கடந்தே போய்விட்டது.

    வயது ஏறிக்கொண்டே போனாலும், சிறு குழந்தைகளைப்போல், எல்லாவற்றையும் அறியும் ஆர்வமும் மகிழ்ந்து சிரிக்கும் குணமும் இருக்கும்வரை யாரையும் முதுமை அண்டுவதில்லை.

    இளமையிலிருந்த அவர்களுடைய அழகு, முகத்திலிருந்து இருதயத்திற்குப் போய்விடுகிறதோ?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 90

    பழகத் தெரிய வேணும் – 90

    நிர்மலா ராகவன்

    படைத்தலும் ரகசியமும்

    `நான் பல புத்தகங்களைக் கரைத்துக் குடித்திருக்கிறேன். அதனால் மகா புத்திசாலி!’

    இப்படி எண்ணிப் பெருமைப்படுகிறவர்கள் முக்கியமான ஒன்றைப் புரிந்துகொள்வதில்லை. நிறைய புத்தகங்களைப் படிப்பதால் மட்டும் அறிவு வளர்ந்துவிடாது. கற்பனைத்திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    ஓயாமல் தன்னைப்பற்றியோ, பிறரைப்பற்றியோ யோசிப்பதால் நேரம்தான் விரயமாகும்.

    ஒருவர் தனக்குப் பிடித்த ஆக்ககரமான பொழுதுபோக்குகளில் ஈடுபட்டால், அவரால் பிறருக்கும் உபயோகமானதாக எதையாவது செய்ய இயலும்.

    அவசியம் இருந்தால்தான் புதியதாக ஒன்றைக் கண்டுபிடிக்கும் நிலை வரும் என்பதல்ல.

    `இப்படிச் செய்தால் என்ன? ஏன், இம்மாதிரியும் இருக்கலாமே!’ என்று, நடைமுறையில் பின்பற்றப்படுவதை வேறுவகையில் மாற்றுகிறார்கள் படைப்பாளிகள். அது கண்களால் பார்க்கும் தொலைவில் இல்லாவிட்டாலும், கற்பனையால் அவர்கள் எதிரில் இருப்பதைப்போல் காண்கிறார்கள்.

    கற்பனையில் கண்டதைக் கனவாகக்கொண்டு, அதிலேயே நிறைவு கண்டுவிடாது, அவற்றை நனவாக்கவும் முயற்சித்து வெற்றி பெறுகிறார்கள்.

    எந்தக் கண்டுபிடிப்பையும், `இது பாதுகாப்பானதுதான்!’ என்று முதலில் உறுதி கூறவும்முடியாது. இருப்பினும், அதன் உபயோகம் நேரத்தையும், சக்தியையும் மிச்சமாக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன், துணிச்சலுடன் செய்கிறார்கள்.

    ஒருவர் புதியதாக எதையாவது செய்ய முயன்றால், `புரட்சி’ என்பார்கள். அதனால் விளையும் நன்மைகள் அதை முயல்கிறவருக்குத்தான் புலப்படும்.

    புதியதாக எந்தக் காரியத்தைத்தான் உடனுக்குடன் செய்ய முடியும்! பொறுமையும் விடாமுயற்சியும் அதிக அளவில் இருக்கவேண்டும். அதற்காக நிறைய உழைக்கவேண்டும். பல பிழைகளும் சறுக்கல்களும் எதிர்ப்படும்.

    இவற்றால் உற்சாகத்தை இழக்காது, எடுத்த காரியத்தை முடிக்கும் உறுதியுடன் ஈடுபட்டால்தான் முயற்சி திருவினையாகிறது.

    தற்காலத்தில், எல்லோராலும் பரவலாக உபயோகப்படுத்தப்படும் ப்ரெஷர் குக்கர் டெனிஸ் பாபின் என்ற பிரெஞ்சு நாட்டுக்காரரால், 350 வருடங்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது.

    `நீராவியாலும், அழுத்தத்தாலும் பருப்பு, அரிசிபோன்ற எல்லாவற்றையும் வெகு விரைவாக வேகவைக்க முடியுமோ?’ என்ற யோசனை அவருக்கு முதலில் எழுந்திருக்கவேண்டும்.

    ஆரம்பத்தில், `இது நம்மால் முடியுமா?’ என்ற சந்தேகம் இருந்திருந்தால், அதை அவரே வென்றிருக்கக்கூடும். எதையும் சாதிக்க தன்னம்பிக்கை அவசியமாயிற்றே!

    (இந்தியாவில் அறிமுகமானபோது, அதை உபயோகிக்க பலரும் பயந்தார்கள். அழுத்தம் அதிகமாக இருந்தபோதே, விவரம் புரியாது, மூடியைத் திறக்கமுயன்ற சிலர் முகத்தில் ஆவி அடித்தது காரணமாக இருக்கலாம்).

    ஆரம்ப சூரத்தனம்

    எந்தத் துறையாகிலும், நாம் செய்ய ஆரம்பித்த ஒரு காரியத்தை ரகசியமாக வைக்கவேண்டுவது அவசியம். சுறுசுறுப்பாக ஆரம்பித்துவிட்டு, முடிப்பதற்குள் அதைப் பற்றிப் பிறருடன் பெருமையாக பேச நினைப்பது அபாயம்.

    யாரோ ஒருவர், அதைக் கவனமாகக் கேட்டுவிட்டு, `நீ சொல்வது நடக்காது!’ என்று சந்தேகம் ஏற்படச் செய்வார் முதலில்.

    அவரது போலி சந்தேகத்தைச் சவால் என்றெடுத்துக்கொண்டு, விரிவாக விளக்குவோம்.

    இதைத்தானே அவரும் எதிர்பார்த்தார்!

    நம்மை முந்திக்கொண்டு, தானே முயன்று கண்டுபிடித்ததைப்போல், தக்க இடத்தில் விரிவாகக் கூறி, லாபம் சம்பாதிப்பார்.

    இக்காலத்தில் இம்மாதிரியான நம்பிக்கைத் துரோகிகள் மலிந்துவிட்டார்கள்.

    கதை

    ஒரு இசைக்கலைஞர் தான் இயற்றிய பாடல்களை தன் குருவிடம் காட்டினார், அவர் மகிழ்ந்து பாராட்டுவார் என்று எதிர்பார்த்து.

    அப்பாடல்களை நோட்டமிட்ட குரு ஒன்றும் சொல்லாதது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. அதன் காரணம் பிறகுதான் புரிந்தது.

    தான் இயற்றியவை அவை என்று குரு அவற்றைப் பிரகடனப்படுத்தினார்!

    `உங்களை எவ்வளவு நம்பினேன்! நீங்கள் என்னை இப்படி ஏமாற்றலாமா?’ என்று சீடரால் குருவைத் தட்டிக்கேட்க முடியவில்லை. குருபக்தியும், அவர்மேல் கொண்டிருந்த மரியாதையும் தடுத்தன.

    ஆனால், ஆயுள் முழுவதும் குருவின் நேர்மையற்ற செயல் அவரை உறுத்திக்கொண்டே இருந்தது. வருத்தம் மறையவே இல்லை.

    ஏன் காப்பி அடிக்கிறார்கள்?

    பிறரைக் காப்பி அடிப்பது எளிதாக இருக்க, `நமக்கு இருக்கிற கொஞ்சம் மூளையைக் கசக்கி, எதையாவது கண்டுபிடிப்பது முடிகிற காரியமா!’ என்ற கொள்கை உடையவர்கள் இப்படிப்பட்டவர்கள்.

    இவர்களுடைய சாமர்த்தியம் வேறுவிதமாக வெளிப்படும்.

    ஒரு ராகத்தில் அமைந்த பல பாடல்களைக் கேட்டால், இசை நன்கு பயின்றவர்களுக்குக் கற்பனை ஓடும். அவற்றை எப்படியெல்லாம் மாற்றலாம் என்ற யோசனை எழும்.

    `அவ்வளவு கஷ்டப்படுவானேன்!’ என்றுதான் காப்பி அடிக்கிறார்கள்!

    கதை

    கர்னாடக இசையில் தேர்ந்த ஒருவர் வேறு ஒருவரது பாடலுக்குத் தானே மெட்டமைத்து, ஒரு கச்சேரியில் பாடியிருந்தார். பக்கவாத்தியம் வாசித்தவர்களிடம் அடக்கமாக, தன் பங்களிப்பைத் தெரிவித்துக்கொண்டார்.

    அவர் மறைந்ததும், திரைப்பட இசை அமைப்பாளர் ஒருவர் அந்த மெட்டைத் தன்னுடையதாக ஆக்கிக்கொண்டார். அதனுடன் வேறு வாத்தியங்களையும் இணைத்தது மட்டும்தான் அவருடைய கைங்கரியம்.

    அவருக்குப் பெரும்புகழ் கிடைத்தது. `Genius’ என்றுகூட ஒரு ரசிகர் பாராட்டியிருந்தார்!

    குழுவில் படைப்பு

    இருவரோ, மூவரோ இணைந்து ஒரு படைப்பைப் படைத்தால் எளிதாக இருப்பதுடன், சுவையாகவும் இருக்கும். இதில் ஒருவர் நடைமுறையில் இருப்பதைப் புரிந்து வைத்திருப்பார். இன்னொருவர், `இப்படிச் செய்தால் என்ன?’ என்று புதிய கற்பனையைக் கொண்டுவருவார். மற்ற இரண்டையும் இணைப்பார் மூன்றாமவர்.

    அறிவிலும், திறமையிலும் ஒத்திருப்பதுடன், அவர்களுக்குள் போட்டி, பொறாமை இருக்கக்கூடாதென்பதும் அவசியம். விவாதம் வரலாம். ஆனால், சண்டையில் முடியக்கூடாது.

    `நான்தான் செய்தேன்!’ என்று கூறி, தானே முழு பாராட்டையும் பெற எண்ணுகிறவர் சுயநலவாதி. அடுத்த முறை, யார் அவருடன் இணைவார்கள்!

    கதை

    “நான்குபேர் இணைந்து, ஒரு கதையை எழுதுகிறோம். நான் இரண்டாவது, நீங்கள் மூன்றாவதாக எழுதுங்கள்,” என்று ஒரு பத்திரிகை ஆசிரியர் பணிக்க, நான் ஒப்புக்கொண்டேன்.

    எழுதி அனுப்பிவிட்டு, அதைப்பற்றி மறந்தேபோனேன்.

    வெளியானதும், `இரண்டாவது பகுதி சுமாராக இருக்கிறது. கடைசி ஒரு பக்கம்தான் சுவாரசியமாக இருக்கிறது,’ என்று தோன்றியது.

    அடுத்த மாதம் நான் எழுதியது வெளியாக, அதிர்ச்சி உண்டாயிற்று.

    அப்போதுதான் புரிந்தது, என் பகுதியின் முதல் பாகத்தை அவர் தனதாக ஆக்கிக்கொண்டார் என்பது.

    `இப்படிச் செய்துவிட்டீர்களே!’ என்று நான் கேட்கவில்லை. நான் அவரைவிடத் திறமைசாலி என்று சமாதானம் செய்துகொண்டேன்.

    அடுத்த பல மாதங்கள் அப்பத்திரிகைக்கு எதுவும் எழுதவில்லை. அப்போது அவருக்குப் புரிந்திருக்கும் என் மனவருத்தம்.

    மனச்சாட்சியே இல்லாது, இன்னொருவரின் ஆக்கபூர்வமான வேலையைத் `திருடினால்’ உண்மையான நிறைவு கிடைக்குமா?

    ஆசை இருக்கு கதையெழுத, ஆனால்…

    ஒரு படைப்பை ஆரம்பிப்பதற்குமுன், அதற்கான அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். மொழி வளமும் அவசியம்.

    `எனக்குக் கதையெழுத, பாடல்கள் புனைய ஆசை. ஆனால், படிக்கப் பிடிக்காது!’ என்றால் எப்படி?

    முன்னூறு வருடங்களுக்குமுன் இருந்த தியாகராஜர், முத்துஸ்வாமி தீட்சிதர் போன்ற வாக்கேயக்காரர்களைப் பார்ப்போமா?

    சிறுவயதிலேயே அவர்கள் பல மொழிகளில் தேர்ச்சி பெற குருமார்களிடம் அனுப்பினார்களாம் அவர்களது பெற்றோர். அதைத் தவிர, மதத்தைப்பற்றியும் கற்றார்கள்.

    பக்தி மிகுந்து, தென்னாட்டில் கோயில் கோயிலாகப் போக, அங்கிருந்த தெய்வங்களின்மேல் பாடல்களைப் புனையும் திறன் வந்தது. தெலுங்கு, சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில், கர்னாடக இசைப்பாணியில் இயற்றினார்கள்.

    அவர்களுடைய கற்பனைத்திறன் இன்றளவும் பாராட்டப்படுவது எப்படியென்றால், ஆர்வத்துடன், படைப்புக்கு வேண்டிய ஆதாரமான அறிவு, மொழித்திறன் இரண்டையும் பெற்றிருந்ததுதான்.

    எந்தத் துறையானாலும், கற்பனைவளம் மிக்கவர்களே முன்னுக்கு வருகிறார்கள்.

    தமிழ்த் திரைப்படங்கள் ஆரம்பித்த காலத்தில், செந்தமிழில் உரையாடினார்கள்.

    ஐம்பதுகளில், `நாம் அன்றாடம் அப்படிப் பேசுவது கிடையாதே! எல்லாருக்கும் இந்தத் தமிழ் புரியுமா?’ என்ற சந்தேகம் எழ, சற்றே மாற்றினார்கள். இருந்தாலும், உணர்ச்சிமயமான இறுதிக்கட்டத்தில் செந்தமிழ் துள்ளி விளையாடும்.

    காலப்போக்கில், அதுவும் மாற, வெவ்வேறு உச்சரிப்புகளுடன்கொண்ட தமிழ் பயன்படுத்தப்பட்டது.

    தெய்வங்கள் எப்படிக் காட்சி அளிப்பார்கள்?

    பரம பக்தர்களுக்குத்தான் இக்கேள்விக்குப் பதில் புலனாகும்.

    நம்மைப்போன்ற பாமரர்களுக்காக, தெய்வீகமான படங்களின் இயக்குனரின் கற்பனையால், உடை, ஆபரணங்கள் போன்றவை அமைக்கப்பட்டன. தெய்வங்கள் செந்தமிழில் உரையாட, நகைச்சுவைப் பாத்திரங்கள் தற்காலத்தமிழில் கொச்சையாகப் பேசுவார்கள்!

    ரசிகர்களும் இயக்குனர்கள் மற்றும் கதாசிரியர்களின் கற்பனையை ஏற்றுக்கொண்டனர். அவ்வப்போது, விமரிசகர்கள் குறிப்பிட்ட குறைகளையும் நிவர்த்தி செய்தனர்.

    கதை

    நான் மேற்பயிற்சிக்காகப் போயிருந்தேன். நான்குவிதமான தலைப்புகள் முதலிலேயே கொடுக்கப்பட்டிருந்தன. விரிவுரையாளர்கள் அவற்றை ஒட்டிப் பாடம் நிகழ்த்தினார்கள்.

    அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, பயிற்சி முடியும் தறுவாயில், நீண்ட கட்டுரை ஒன்று எழுதவேண்டும் – மலாய் மொழியில்.

    எங்கள் குழுவில் சீன ஆசிரியைகள் சிலர் இருந்தார்கள். அவர்கள் கற்றது, கற்பித்தது எல்லாமே சீன மொழியில்தான். ஓரளவு ஆங்கிலம் மட்டும் பேசுவார்கள்.

    மலாய் அறவே தெரியாது என்ற நிலையில், அவர்களுக்கெல்லாம் கட்டுரை எழுதித் தந்து சம்பாதித்தார் ஒருவர்! அவர்களது நிலை புரிந்து, எந்தப் புகாரும் எழுப்பப்படவில்லை.

    கற்பனை இருந்திருக்கலாம். ஆனாலும், இவர்களால் படைக்க முடியவில்லை. ஏனெனில், மொழி தெரியாமல் போயிற்று.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 89

    பழகத் தெரிய வேணும் – 89

    நிர்மலா ராகவன்

    என்ன இடர் வரினும்

    சில தாவரங்கள் வெப்பமாக இருந்தாலும், மழை அடித்துக்கொட்டினாலும் பிழைத்துக்கொள்ளும். வேறு சில வெயிலில் வாடி, பெருமழையில் அழுகிப் போய்விடும்.

    மனிதர்களும் அப்படித்தான். பலர் சிறிதளவு துன்பத்தைக்கூட தாங்கமுடியாது ஒடுங்கிவிடுவார்கள். புதிதாக ஒரு வழியைத் தேடும் உற்சாகத்தை இழந்துவிடுவதுதான் காரணம்.

    ஒரு சிலர் எவ்வளவுதான் இடர்கள் வந்தாலும், அவற்றைச் `சவால்’ என ஏற்று, `இந்த நிலையும் ஒருநாள் மாறும்!’ என்ற நம்பிக்கையுடன் நடப்பார்கள். அதுவே வாழ்வின் வெற்றிதான். (பலர் புகழ ஏதாவது செய்வதுதான் வெற்றி என்பதல்ல).

    வீட்டைவிட்டு எங்கும் செல்லக்கூடாது என்ற அண்மைக்காலத் தடையுத்தரவில், பலரும் தம் வேலையை இழந்தனர். கடைகளை மூடவேண்டிய நிலைமை பல வியாபாரிகளுக்கு.

    விமானப்பயணம் கூடாது என்ற நிலையில், விமானப் பணியாளர்களாக இருந்தவர்களுக்கு வருமானம் இல்லாதுபோயிற்று.

    ஆங்கிலத்தில் போதிய தேர்ச்சி இல்லாததால், கல்வித்தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை இன்னும் சிலருக்கு.

    இவர்கள் அனைவரும், `அவ்வளவுதான்! என் வாழ்க்கை முடிந்துவிட்டது!’ என்று நம்பிக்கை இழந்தால் என்ன ஆகும்?

    நிலைமை மாறும் என்று பொறுமையைக் கடைப்பிடிக்கமுடியுமா?

    என்ன கஷ்டம் வந்தாலும், சாப்பாடு மட்டும் எல்லாருக்கும் அவசியமான தேவை என்று, உணவுப்பொருட்களைத் தயார் செய்கிறார்கள் பலர். அவற்றை வீடுகளுக்குக் கொண்டுசெல்லும் பணி சிலருக்கு. ஆண்களோ, பெண்களோ, இவர்களில் எவரும் அந்தஸ்து பார்ப்பதில்லை.

    ஒருவர் ஆயிரம் மரவள்ளிக்கிழங்கு செடிகளை நட்டு, கிழங்கை வறுவலாக விற்று, ஒரே நாளில் பல ஆயிரம் ரிங்கிட் சம்பாதிப்பதாகச் செய்தி வந்தது.

    இருபத்தி இரண்டு வயதான சீன இளைஞன் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே பெற்றோருடைய சிறு கடையில் உதவி செய்திருக்கிறான். படிப்பு முடிந்ததும், தன் அறிவைக்கொண்டு, கணினிவழி வியாபாரத்தைப் பெருக்கியிருக்கிறான். `இதற்கு கல்லூரிப் படிப்பும், அதற்கான செலவும் வீண்!’ என்று பலர் கேலி செய்தாலும், அதைப் பொருட்படுத்தவில்லை.

    ஒரே தொழிலில் நிலைத்திருந்து கஷ்டப்படுவதைவிட, அதை விட்டுவிட்டு, புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவது அச்சத்தை விளைவித்தாலும், அதுதான் புத்திசாலித்தனம்.

    அவ்வாறு செய்தால், `முன்பே செய்திருக்கவேண்டும்!’ என்ற வருத்தம் காலங்கடந்து உண்டாகாது. கிடைப்பது தோல்வியாக இருந்தாலும், செய்யாது போய்விட்டோமே என்ற வருத்தமாவது எழாதிருக்கும்.

    கதை

    நேபாளத்தில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, விமானத்தில் கோலாலம்பூர் திரும்பிக்கொண்டிருந்தேன்.

    விமானம் தரையிறங்கும்போது, ஒரு பக்கத்திலிருந்து பல குரல்களில், மகிழ்ச்சி கலந்த சிரிப்பு உரக்கக் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். நாலரை மணிநேரப் பயணமாக இருந்தாலும், வழியில் சாப்பிட எதுவும் வாங்காது, அங்கு உட்கார்ந்திருந்தார்கள் பல நேபாளிகள்.

    முதன்முறையாக வெளிநாடு வந்திருக்கும் தொழிலாளிகள் என்று புரிந்தது.

    வெளிநாட்டுக்கு வேலை நிமித்தம் போகிறவர்கள் பலவிதத் துன்பங்களை அனுபவிக்க நேரிடும். தாமே சமைத்துச் சாப்பிட்டால்தான் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என்ற நிலை, குறுகிய இடத்தில் நிறைய பேருடன் படுக்கை, உற்றவர்களைவிட்டுப் பிரிந்திருத்தல், மாறுபட்ட கலாசாரத்தால் ஏற்படும் குழப்பங்கள் – இப்படியெல்லாம் நடக்கக்கூடும் என்று நினைத்தும் பாராது, வளமான எதிர்காலக் கனவுகளுடன் மகிழ்ந்திருந்தார்கள்.

    எதிர்ப்படும் சங்கடங்களைப் பொறுமையாகச் சகித்துக்கொண்டு, வேலையைப் பொறுப்பாகச் செய்பவர்கள் முதலாளிகளின் ஆதரவைப் பெற்று, உயர வழியுண்டு.

    வெளிநாட்டிலிருந்து இங்கு வந்த ஒரு தையல்காரர் தான் எதிர்பார்த்தபடி வாழ்க்கை எளிதாக இல்லை என்றோ, அல்லது மதுபானங்கள் எளிதாக, எங்கும் கிடைப்பதைக் கண்டோ, அப்பழக்கத்திற்கு அடிமையானார். அவரது உத்தியோகம் நிலைக்கவில்லை.

    அவர் செய்த தவறு: ஆரம்பித்த காரியத்தை (புதிய நாட்டில் கிடைத்த வேலையை) சரியாக முடிக்காது, அதில் முழுக்கவனமும் செலுத்தாது, முதலாளி பலமுறை கண்டித்தபோதும் விழித்துக்கொள்ளாமல் இருந்தது.

    புதிதாக ஒரு வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டுமானால், பழைய பழக்கங்களை, தொடர்புகளை, விட்டுவிடத் தயாராக இருக்கவேண்டும்.

    கதை

    இன்பக் கனவுகளுடன் மலேசியா வந்தடைந்த அயல்நாட்டுத் தொழிலாளி ஒருவருக்கு சம்பளம் அளிக்கப்படவில்லை, கேட்டால் அடி, உதை. சாப்பாட்டுக்கே வழியில்லாது போனபோதும், அவருக்கு எங்கு போய், என்ன செய்வதென்று புரியவில்லை. கடப்பிதழோ, முதலாளி கைவசம்.

    அவரைப் பற்றிய செய்தி தினசரியில் முதல்நாள் வெளியாகியது. பஞ்சத்தில் அடிபட்டவர்போல் காணப்பட்டார். மறுநாள், அவருடைய மரணச்செய்தி!

    இம்மாதிரியான, கொடுமைக்கார, முதலாளிகள் தண்டிக்கப்பட்டாலும், பிழைப்பை நம்பி வந்த உயிர் போனது போனதுதான்.

    பலர் எப்படியோ தப்பித்துவிடலாம். இருப்பினும், `நான் என்னென்ன கஷ்டங்களையெல்லாம் அனுபவித்தேன், தெரியுமா?” என்று கடந்தகால நினைவுகளிலேயே ஆழ்ந்துவிடுவதால் பயனில்லை. அவற்றை மாற்றவா முடியும்!

    `நான் இத்தனைத் துன்பங்களை கடந்துவந்திருக்கிறேனா!’ என்ற வியப்புடன், பல வருடங்களுக்குப்பின், பேரக்குழந்தைகளுக்குச் சொல்ல நல்ல கதைகளாக வேண்டுமானால் அவை அமையும்!

    வாழ்க்கை இன்னும் முடியவில்லை என்ற நிலையில், `வேறு என்ன செய்யலாம்?’ என்று சிந்தித்துக்கொண்டே இருப்பவருக்கு உற்சாகம் குன்றுவதே கிடையாது.

    `எல்லாம் நன்மைக்கே!’ என்று எப்போதும் சொல்லிவந்த ஒருவனுக்கு விபத்தினால் ஒரு கால் முடமாகிவிட்டது.

    `இதில் என்ன நன்மை?’ என்று சிலர் கேலி செய்ய, `ஒரு செருப்பு வாங்கினால் போதுமே,’ என்றானாம்!

    எந்த நிலையிலும் அவன் தன் உற்சாகத்தை இழக்கவில்லை என்பது பாராட்டப்பட வேண்டியது.

    கதை

    பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், நியு யூ (NIU YU) என்ற பெண் தனது பதினோராவது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக பள்ளிக்கூடத்திலிருந்து வீடு திரும்பும் ஆவலில் இருந்தாள்.

    சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அன்று நடந்த பூகம்பத்தில் 70,000 பேர் உயிரிழந்தனர். அச்சிறுமியின் பள்ளிக்கூடக் கட்டடம் இடிந்து விழ, மூன்று தினங்கள் அதனடியில் மாட்டிக்கொண்டாள். உயிர் பிழைத்தாள். ஆனால், வலது காலை எடுக்கும்படி ஆயிற்று.

    இப்போது, முழங்காலுக்குமேல் செயற்கைக்கால் வெளியே தெரிய நடக்கும் அப்பெண் ஒரு மாடல்!

    “என்னைப்போன்றவர்கள் முழுமை அற்றவர்களாக இருக்கலாம். ஆனால், நாங்களும் அழகானவர்கள்தாம்!” என்னும் அவளது தன்னம்பிக்கை பலருக்கும் தைரியம் அளித்துவருகிறது.

    கசப்பான நிகழ்வுகள் முடியும்போது, புதிய திருப்பங்கள் ஏற்பட வழியுண்டு.

    அதற்காக, துன்பம் எதிர்ப்படும்போதுதான் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்பதல்ல.

    முடிவில் ஆரம்பம்

    நான் பள்ளியில் படித்தபோது, அநேகமாக எல்லா ஆசிரியைகளும் கணவனை இழந்தவர்கள், அல்லது முதிர்கன்னிகள். பதின்ம வயதில், அவர்களுடைய நிலை புரியவில்லை.

    கதை

    இளம்வயதிலேயே கணவனைப் பறிகொடுத்தவள் அவள்.

    துக்கத்தைவிட, `இனி யார் நம்மைக் காப்பாற்றுவார்கள்!’ என்ற மலைப்புதான் பெரிதாக எழுந்தது.

    அவளுடைய தந்தை அவளுடன் வந்து தங்கி, அவள் பாதியில் விட்ட படிப்பைத் தொடரச் செய்தார்.

    புதிய இடத்தில், புதிய மனிதர்களுடன் எப்படித்தான் காலம் கழிக்கப்போகிறோமோ!’ என்று முதலில் பயம் ஏற்பட்டது. `வேறு வழியில்லை!’ என்ற நிலையில், படிப்பைத் தொடர்ந்தாள்.

    பிறகு, ஆசிரியப்பணியில் அமர்ந்தபோது, வாழ்க்கை அவ்வளவு பயங்கரமானதாகத் தோன்றவில்லை. `பிறர் கையை எதிர்பார்த்து, காலத்தைக் கழிக்கத் தேவையில்லை!’ என்று புரிய, தன்னம்பிக்கை வளர்ந்தது.

    பாதுகாப்பான நிலையைப் பெரிதாகக் கருதி, அளவுக்கு மீறிய பொறுமையுடன் இருந்தால், வளர்ச்சி ஏது!

    இளமையும் ஆரோக்கியமும் இருக்கும்போதே சிலர் ஒன்றன்பின் ஒன்றாக, பல பொழுதுபோக்குகளில் முழுக்கவனத்தையும் செலுத்திக் கற்பது தம் திறமைக்கே சவால் விட்டுக்கொள்ள எண்ணித்தான்.

    அவ்வாறு கற்பது எதுவும் வீண்போவதில்லை. வேறு எங்காவது உபயோகப்படும்.

    சில சமயம், நாம் விரும்பினாலும், எதிர்பார்க்காவிட்டாலும், மாற்றங்கள் நம்மைத் தேடி வரும். புதிய இடத்திற்கு வேலை மாற்றம் கிடைத்தால், அங்கு புதிய மொழி ஒன்றைக் கற்கவேண்டிய அவசியம் தவிர்க்கமுடியாதது.

    `புதியதாக எதிலாவது இறங்குவதா!’ என்ற அச்சம் அப்போது தடுக்கக்கூடும்.

    அடுத்தடுத்த நாட்கள் ஒரே சீராக இருந்தால், சலிப்பு ஏற்படுமே! வாழ்வில் வளர்ச்சியோ, முன்னேற்றமோ இருக்குமா?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 88

    பழகத் தெரிய வேணும் – 88

    நிர்மலா ராகவன்

    முன்னேற வயதில்லை

    “என் மகள் ஆரம்பப் பள்ளியில் மிக நன்றாகப் படித்து, ஒவ்வொரு வருஷமும் பரிசு வாங்குவாள். அதன்பின், என்ன ஆயிற்றென்று தெரியவில்லை. படிப்பில் அக்கறை போய்விட்டது,” என்று பிரலாபித்தாள் ஓர் ஆசிரியை. அவள் பள்ளி இறுதிப் பரீட்சைக்குப் பிறகு இரு வருடங்கள் பயின்றிருந்தவள்.

    பெற்றோர் தமக்குத் தெரிந்ததைக் கற்றுக் கொடுத்து, சிறு குழந்தைகள் அதைச் சுமாராகச் செய்தாலும் பாராட்டுவார்கள். குழந்தையும் மகிழ்ந்துவிடும்.

    எதில் ஈடுபட்டாலும், புகழ் கிடைக்கும்போது அதையே இன்னும் நன்றாகச் செய்யவேண்டும் என்ற ஆர்வம் பிறக்கும். நாளடைவில், பாராட்டை எதிர்பார்த்து, எந்தக் காரியத்திலும் முழுமை (PERFECTION) தேடுவார்கள்.

    பெருமை அடைந்தால் கர்வம் தலைக்கேறும். பாராட்டு கிடைக்காவிட்டால் தன்னம்பிக்கை குறைந்துவிடும்.

    பாராட்டு கிடைத்தால் ஒரேயடியாக மகிழ்ந்து, பெருமைப்படாது, அவமதிப்பு வந்தாலும் அதை ஒதுக்கித் தள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால்தான் முன்னேற முடியும்.

    தமிழில் பிரபலமான பெண் எழுத்தாளர்கள் இருவர் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டு, அழுதுகொண்டே இருந்தார்கள் என்று படித்திருக்கிறேன்.

    எனக்குத் தோன்றிய காரணம்: ஆண்கள் எப்படி ஆபாசமாக எழுதினாலும் அதை ஏற்கும் நம் சமுதாயம் பெண்களின் எழுத்து, ஒரு வரையறைக்குள்தான் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறது. ஆண்கள் சிலர், பெண்களுக்கு இழைக்கும் அநீதிகளைப் பற்றித் துணிச்சலுடன், விரிவாக எழுதும் பெண் எழுத்தாளர்கள் பழிக்கப்படுவார்கள்.

    `ஆண்களும் தவறு செய்வார்கள்!’ என்று வெளிப்படையாக எழுத இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?’ என்ற ஆத்திரம் ஆண்கள் பலருக்கு எழும். `இவள் எழுதுவதெல்லாம் ஆபாசம்!’ என்று ஏதோ சொல்லி, தம் மனக் குமுறலை வெளிப்படுத்திக்கொள்வார்கள்.

    பெண்களுக்கு உணர்ச்சிகளே இருக்கக்கூடாது, அப்படி இருந்தாலும், அவற்றை வெளியில் காட்டிக்கொள்ளக் கூடாது என்று நினைக்கும் அறிவிலிகளின் கருத்தை அலட்சியம் செய்தால்தான் பெண்கள் முன்னேற முடியும்.

    அறிவு, திறமை எல்லாம் இருந்தும் பல பெண்கள் வெளியில் அறியப்படாது இருப்பதன் காரணம் – கண்டனத்திற்கு அதிக மதிப்பு கொடுப்பதுதான்.

    நாம் ஈடுபடுவது எந்தத் துறையாக இருந்தாலும், அதில் எத்தனை காலம் தொடர்ந்திருந்தாலும், மேலும் முன்னேற இடம் இருக்கும்.

    இன்று முன்னணியில் இருக்கும் நடிகர்களையோ, இசை வல்லுனர்களையோ எடுத்துக்கொள்ளுங்கள். ஆரம்பக் காலத்தில் அவ்வளவு சிறப்பாகத் தம் தொழிலைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்களுக்கே அது புரிந்திருக்கும். அதனால் மனம் தளராது, முன்னேறும் வழிகளை ஆராய்ந்து, அவற்றை என்றென்றும் கடைப்பிடிக்கிறார்கள்.

    அவ்வப்போது தோல்விகளும் வரும். ஆனால், அவற்றால் மனம் உடைந்துவிடாது, தன்னம்பிக்கையுடன் மீண்டு எழும் வகைகளை ஆராய்ந்து, கடைப்பிடிக்கிறார்கள்.

    சிறிது வெற்றி கிடைத்தவுடன், தலைக்கனத்துடன் இருப்பவர்கள் எத்துறையிலும் நிலைத்திருக்க முடியாது.

    ஒரே சமயத்தில் தாம் கற்ற பல துறைகளிலும் ஈடுபட்டு, எல்லாவற்றிலும் வெற்றி பெற முடியுமா?

    முடியும். ஆனால், வெகு விரைவிலேயே தோல்வியைச் சந்திக்க நேரிடும் — நம் மூளை வெகுவாகக் குழம்பிப் போவதால்.

    இதைத் தவிர்க்க, ஒரு துறையில் மட்டுமே சில காலம் ஆழ்ந்துவிட்டு, பிறகு முழுக் கவனத்துடன் இன்னொன்றிற்குத் தாவலாம்.

    நான் ஒரு புதினமோ, நீண்ட கதையோ எழுத ஆரம்பித்தால், வேறு எந்தவிதமான எழுத்திலும் மனம் செல்ல விடுவதில்லை. அப்போதுதான் கதாபாத்திரங்களுடன் உறவாட முடியும். பாத்திரப் படைப்பும் நம்பகமாக இருக்கும்.

    ஒரு போட்டிக்காக நூறு பக்கங்கள் கொண்ட புதினத்தை எழுதவேண்டும் என்றால், முதலில் ஒரு நாளைக்குச் சுமார் எத்தனை பக்கங்கள் எழுதலாம் என்று யோசித்து வைக்கவேண்டும்.

    ஒரே வாரத்தில் முடிந்ததா? சில நாட்கள் அப்படியே வைத்துவிட்டு, அதன்பின், கதையைப் படித்துப் பார்த்தால், நிறைய ஓட்டைகள் புலப்படும். முடிவு தேதி வரும்வரை, திருத்தியபடி இருந்தால், கதையில் மெருகேறும்.

    வியாபாரத்தில் முன்னேற்றம்

    ஒரு மளிகைக் கடை வைத்திருந்தார் சாங். அதிக லாபம் பார்ப்பது தவறு என்ற கொள்கை அவருக்கு இருந்ததால் எல்லாப் பொருட்களும் மலிவாக இருந்தன. நிறைய வாடிக்கையாளர்கள் சேர்ந்தார்கள். அதிலேயே திருப்தி அடைந்தார் சாங்.

    அவருடைய மகன் தந்தையின் கொள்கையை ஆதரிக்கவில்லை. அவன் வியாபார நுணுக்கங்களைக் கல்லூரியில் படித்துத் தேர்ந்தான். அவனுக்கு வழிவிட்டு, பெருந்தன்மையுடன் தந்தை ஒதுங்கிக்கொண்டார். `நான் இத்தனை காலமும் இப்படித்தானே செய்து வந்திருக்கிறேன்!’ என்று மகனுடன் விவாதிக்கவில்லை.

    வியாபாரத்தைப் பெருக்க, பல வழிகளைக் கையாண்டான் ஜூனியர் சாங்.

    `எங்கள் கடைக்கு இன்னும் இரு மைல்தான் இருக்கின்றன!’ என்ற அறிவிப்பு தெருக்களில் வைக்கப்பட்டிருந்தன. விமான நிலையத்திலும்கூட ஒரு கடை — வெளிநாட்டிலிருந்து வருகிறவர்கள் உள்நாட்டில் கிடைக்கும் பொருட்களை வாங்கிப் போக வசதியாக.

    வியாபாரம் பெருகியது. ஆனாலும், பெரும் லாபம் வைத்து விற்கும் பேராசை கொள்ளாததால் நிலைத்திருக்க முடிந்தது.

    குடும்பத்தில் முன்னேற்றம்

    `கணவர் சொல்வதையோ, செய்வதையோ மறுத்துப் பேசினாலோ, குற்றம் கண்டுபிடித்தாலோதானே சண்டை வரும்!’ என்று நடக்கும் பெண்களின் குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலைக்கலாம். ஆனால், மகிழ்ச்சி?

    கோலாலம்பூரில், சில ஆண்டுகளுக்குமுன், வங்கியிலிருக்கும் ATM-இல் பணம் எடுக்குமுன், `உங்கள் குழந்தைகளிடம் அன்பு செலுத்துங்கள்!’ என்ற அறிவுரை காணப்பட்டது.

    குழந்தைகளின் அத்தியாவசியத் தேவைகளைக் கவனித்துக்கொள்வதுடன் தம் கடமை தீர்ந்துவிட்டது என்றெண்ணி, பெரும்பாலான பெற்றோர் நடப்பதை மறைமுகமாகக் குத்திக் காட்டும் முயற்சி இது.

    அண்மையில், தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க அதிகம் வெளியே செல்லமுடியாத நிலையில், வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டதே! இதனாலும், சில நன்மைகள் விளையாமல் இல்லை.

    `என் குழந்தைகளுடன் பொழுதைக் கழிப்பது எவ்வளவு மகிழ்ச்சிகரமான விஷயம் என்று இப்போதுதான் புரிந்துகொண்டேன்!’ என்று பலரும் கூறியிருப்பதாகச் செய்திகள் வந்தன.

    தம் விருப்பு வெறுப்பைப் புரிந்து பெற்றோர் அன்பாக நடந்தால்தானே குழந்தைகள் நன்கு முன்னேறுவார்கள்?

    உடல்நிலையில் முன்னேற்றம்

    `வயதாகிவிட்டது! இனி என்ன!’

    “பள்ளி நாட்களில், உடல் சம்பந்தமான கல்வி எதுவாக இருந்தாலும், அதிலிருந்து எப்படித் தப்புவது என்றே சமயம் பார்த்துக்கொண்டிருப்பேன்!”

    `நிமிர்ந்து நடப்பது விமானப் பணிப்பெண்களுக்குத்தான் அவசியம்!’

    இப்படியெல்லாம் விதண்டாவாதம் புரிகிறவர்கள் உடலை மட்டும் அலட்சியம் செய்வதில்லை. உடற்கட்டுடன் ஆரோக்கியத்தையும் சுறுசுறுப்பையும் இழந்துவிடுகிறார்கள். அதனால், சிரிப்பும் பறிபோய்விடுகிறது.

    இருபது வயதிலிருந்ததுபோல் என்றும் இளமையாகத் தோற்றம் அளிக்க முடியாவிட்டாலும், அறுபது வயதில் எழுபது வயதுக்காரர்போல் முதுமையை அடைய வேண்டுமா?

    தொண்ணூறு வயதை எட்டிக்கொண்டிருக்கும் மிஸஸ் லீ தன்னைவிடச் சற்றே இளைய பெண்மணிகளுடன் அவர்கள் வீட்டருகே இருக்கும் பூங்காவில் ஒவ்வொரு காலையும் ஒருவித உடற்பயிற்சி செய்வதைப் பார்க்கிறேன்.

    இவர்கள், `வயதாகிவிட்டதே! முன்போல் எதுவும் செய்ய முடியவில்லையே!’ என்று அலுத்துக்கொள்வதில்லை. ஏனெனில், தங்களால் முடிந்தவரை உழைக்கிறார்கள்.

    `ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரி இருக்கிறதே!’ என்ற அலுப்பு கிடையாது. அத்துடன், பிறருடன் பேசிப் பழகுவதால், குருட்டு யோசனையில் மனம் போகாது.

    கடந்த இருபத்தைந்து வருடங்களாக, அரைமணி நேரம் தொடரும் நிகழ்ச்சி இது.

    `பயிற்சிக்கு அரைமணி போதுமா? இரண்டு மணி நேரம் பண்ணினால், இன்னும் பலன் கிடைக்குமே!’

    வயதை மறந்து, இப்படி நினைத்துச் செய்தால், உடல்வலியால் பல நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியிருக்கும்.

    பரீட்சைக்கு முதலிரவு முழுவதும் தூங்காது படித்துவிட்டு, மறுநாள் பரீட்சை எழுதும்போது எதுவுமே நினைவுக்கு வராமல், அல்லது தலைவலியுடன் தவிப்பதுபோல்தான்!

    `பரீட்சைக்கு முதல்நாள் இரவு முழுவதும் நான் கண்விழித்துப் படித்தேன். ஆனாலும், ஏனோ பரீட்சையில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியவில்லை!’ என்று சில மாணவிகள் குழம்புவார்கள்.

    இதைத் தடுக்கத்தான் சில பள்ளிகளில் TEST என்று, அடிக்கடி பரிசோதனை செய்வார்கள். அவ்வப்போது, சிறுகச் சிறுகப் படித்தால், மன இறுக்கம் இருக்காது.

    நான் படித்த பள்ளியில், வாராந்தரப் பரிசோதனை, மாதாந்தரப் பரிசோதனை, கால், அரை, முழுப் பரீட்சை என்று வருடம் முழுவதுமே வைத்திருந்ததில், இறுதிப் பரீட்சைக்கு ஒரு மாதம் முன்பே, `எல்லாம் எளிதுதான். எத்தனை முறை படித்திருக்கிறோம்!’ என்ற நம்பிக்கை ஏற்பட்டுவிடும்.

    மாறாக, குறுகிய காலத்தில் மிகுந்த பிரயாசையுடன் ஒரு காரியத்தில் ஈடுபடுவது களைப்பையும் சலிப்பையும்தான் உண்டாக்கும். அப்புறம் முன்னேறுவது எங்கே!

    Share
  • பழகத்தெரிய வேணும் – 87

    பழகத்தெரிய வேணும் – 87

    நிர்மலா ராகவன்

    அச்சம்தான் வெற்றிக்கு முதற்படி

    பொறுக்கமுடியாத சந்தர்ப்பங்களில் மனிதர்கள் இரு விதமாக நடப்பதுண்டு – எதிர்த்துப் போராடுவது, இல்லையேல் அங்கிருந்து தப்பி ஓடிவிடுவது (FIGHT OR FLIGHT).

    அச்சம் அளவுக்கு மிஞ்சினால், இவற்றில் ஒன்றைக்கூடச் செய்ய இயலாது, பயந்து நிற்க நேரிடும்.

    `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்ற பயம் சிறுவயதிலிருந்தே நம்முள் விதைக்கப்பட்டுவிடுகிறது.

    அதற்குப் பதில், `பிறர் பாராட்டும்படியாக, துணிந்து ஏதாவது செய்!’ என்று தூண்டியிருக்கலாம்.

    எது தவறு?

    `தவறு செய்துவிடுவோமோ?’ என்று பயந்தே காலங்கழிப்பதுதான் தவறு.

    வாழ்க்கை எப்போதும் ஒரேமாதிரி இருப்பதில்லை. மாறிக்கொண்டே இருக்கும். இது புரியாது, அல்லது அஞ்சி, ஒத்துக்கொள்ள விரும்பாது, பழைமையிலேயே ஊறிக்கிடந்தால் அப்படி இருப்பவருக்கு மட்டுமல்லாது, அவரது குடும்பத்துக்கும் துன்பம்தான்.

    துணிந்து செய்

    எல்லா அனுபவங்களும் நல்லவிதமாக முடியும் என்பதல்ல. ஆனாலும், ஏதாவது நன்மை விளையக்கூடும்.

    நாம் எதற்கு அஞ்சுகிறோமோ, அதைச் செய்துபார்ப்பதுதான் அச்சத்தை வெல்லும் வழி.

    கதை

    நான் நீச்சல் பழக ஆரம்பித்து இரு மாதங்களுக்குப்பின், எதிர்த்திசையில் கண்களை மூடிக்கொண்டு நீச்சலடித்தவரால் அடிவாங்கி, தண்ணீருக்கு அடியில் போனேன். சில நிமிடங்கள் மேலே வரத்தெரியாது திணறினேன். (நெடுநேரமென்றுதான் அப்போது அடைந்த கலவரத்தில் தோன்றியது).

    ஒரு கரம் என்னை மேலே இழுத்து, கரை சேர்த்தது. (நீச்சல் காவலர் அதற்கென்றே நியமிக்கப்பட்டிருந்தார்).

    கவனித்துக்கொண்டிருந்த ஒரு சீனர், “உடனே நீங்கள் பயத்தை வெல்லவேண்டும்,” என்று அழுத்தமாகக் கூறினார்.

    ஒரு பெண்மணி, “என்னையும் இப்படித்தான் ஒருமுறை காப்பாற்றினார்கள்,” என்று அசட்டுச்சிரிப்புடன் ஒத்துக்கொண்டாள்.

    எதையாவது கற்கவேண்டுமென்றால், துணிச்சல் மிக அவசியம். `புதிய அனுபவம் எப்படி இருக்கும்?’ என்ற ஆர்வத்தை வளர்த்துக்கொள்பவர்களை அச்சம் தொடராது.

    “நீங்கள் மூச்சைப் பெரிதாக இழுத்துக்கொண்டு தண்ணீரின் அடியில் போய், பிறகு எம்பி, நீந்துவதுபோல் கைகளையும் கால்களையும் ஆட்டியபடி மேலே வாருங்கள். மேலே வந்ததும் மூச்சை விடலாம்,” என்று சொல்லிக்கொடுத்தார்.

    நான் தயங்கியபோது, “உங்களால் முடியாவிட்டால், நான் தூக்கிவிடுகிறேன்,” என்று பலமளிக்க, துணிந்து அவர் சொற்படி செய்தேன். அவர் உதவி தேவைப்படவில்லை.

    நான் கரையேறியதும், அவர் பெரிதாகச் சிரித்தார். “நீங்கள் முழுகவே மாட்டீர்கள். எவ்வளவு நேரம் மூச்சைப் பிடித்துக்கொண்டிருந்தீர்கள்!”

    `முடியாது’ என்று நினைத்ததைச் செய்துவிட்ட பெருமை அப்போது எழவில்லை. களைப்புதான் மிகுந்தது.

    வீடு திரும்பியதும், நடந்ததை என் பெண்களிடம் கூற, தம் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்: “நாங்கள் (ஏழு வயதில்) நீச்சல் கற்கும்போது, மாஸ்டர் எங்களை இருபது அடி உயரத்திலிருந்து தண்ணீரில் பிடித்துத் தள்ளிவிடுவார். தத்தளித்தபடி மேலே வந்துவிடுவோம். அதன்பின் பயம் இருந்தால், பால் கலக்காத சூடான காப்பி குடிக்கவேண்டும்”.

    (மூன்று மாதங்களே ஆன குழந்தையை ஆழமான தண்ணீர் தொட்டிக்குள் விட்டால், மேலே வந்துவிடும். தாயின் கருப்பையில் நீந்திய நினைவு அதற்கு மறக்கவில்லை).

    பாதுகாப்பு

    பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டதும், அம்மாவின் புடவையை இறுகப் பற்றிக்கொண்டு, சில குழந்தைகள் அழுது ஆர்ப்பாட்டம் செய்வதுண்டு. பழகிவிட்டால், `டீச்சர் திட்டினாலும், வீட்டுப்பாடம் கொடுத்தாலும் போகிறது, பள்ளிக்கூடத்தில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்களே!’ என்று பிடித்துப்போய்விடும்.

    அதேபோல், திருமணமாகி, முதன்முறையாகப் புக்ககம் செல்லும் பெண்களும் அழுவார்கள். `இதுதான் தாம்பத்தியம்,’ என்று புரியும்போது, பயம் விலகிவிடும்.

    பழகிப்போன சூழ்நிலையை மாற்றினால், வேறொரு இடத்தில் எப்படி இருக்குமோ என்ற அச்சம்தான் எல்லாவற்றிற்கும் காரணம்.

    இதே காரணத்தால்தான் பொறுக்கமுடியாத தாம்பத்தியம் அமைந்தாலும், அதைவிட்டு விலகத் துணியமாட்டார்கள் சில பெண்கள்.

    மரண பயம்

    வயது முதிர்ந்த நிலையில், படுக்கையிலேயே காலம் கழிக்கவேண்டிய நிலை ஒரு பெண்மணிக்கு. இறக்கப்போகிறோம் என்று சந்தேகமறத் தெரியும். ஆனாலும், இவ்வுலகைவிட்டு நீங்கியபின் என்ன ஆகுமோ என்ற பயம்.

    “உயிர் பிரியும் தறுவாயில் உங்களுக்குப் பிடித்தவர்கள் எல்லாரையும் மீண்டும் பார்க்கமுடியும்,” என்று ஆறுதல் கூறினேன்.

    பலமுறை விளக்கம் கேட்டார்.

    இறக்கும் தறுவாயில், என்றோ மாண்டுபோன பெற்றோர், சகோதர சகோதரியர் ஆகியோர் அவர் கண்ணுக்குத் தெரிவார்கள், அவரை வரவேற்பார்கள் என்று நான் எப்போதோ படித்ததை எடுத்துச்சொன்னேன்.

    இறுகியிருந்த முகத்தில் மலர்ச்சி. ஒரு வாரத்திற்குப்பின், தூக்கத்திலேயே மரணத்தைத் தழுவிக்கொண்டார்.

    அச்சம் தன்னம்பிக்கையின் வித்து

    மேடையில் உரையாற்றவோ, பாடவோ, நடிக்கவோ வருகிறவர்கள் எத்தனைமுறை அப்படிச் செய்திருந்தாலும், ஆரம்பிக்குமுன் சிறிது படபடப்பாக உணர்வார்கள். அந்த அச்சத்தை எதிர்கொள்ளும்போது தன்னம்பிக்கையும் கூடிக்கொண்டேபோகும்.

    எதையாவது கற்கும்போது ஆர்வத்துடன் ஆரம்பித்தாலும், போகப் போக, `இதற்கொரு எல்லையே கிடையாதா!’ என்ற மலைப்பும், பயமும் எழும். அரைகுறையாக நிறுத்திக்கொள்ளத் தோன்றிவிடும்.

    இசை, நாட்டியம், அல்லது வேறு எந்தத் துறையிலுமே கரைகாண்பது என்பது நடக்காத காரியம். இது புரிந்து, சிறுகச் சிறுக முயற்சிக்க, பயமும் போய்விடும். பயம்தான் கனவுகளின் எதிரி என்பார்கள்.

    அச்சுறுத்துகிறவர்கள்

    நம்மைக் கண்டு பயப்படுகிறவர்கள் தம் உணர்ச்சியை நம் பக்கம் தள்ளிவிட முனைகிறார்கள். அது புரிந்து, நாம் பயப்படாவிட்டால், அவர்களுடைய அச்சம் அதிகரித்துவிடும். சுவரில் வீசிய பந்துபோல்தான்.

    பெண்களிடம் முறைதவறி நடக்க முயலும் ஆண்களுக்கு இந்த விளக்கம் பொருந்தும்.

    அழகு, செல்வம், அறிவு — இப்படி ஏதோ ஒரு விதத்தில் தன்னைவிட உயர்ந்த நிலையில் ஒரு பெண் இருக்கிறாள் என்று கருதினால், துரத்தாத குறையாக, அவளை நெருங்க பெருமுயற்சிகள் எடுப்பார்கள். அவள் வயது ஒரு பொருட்டில்லை. அப்போது அவள் அடையும் அச்சம் அவர்களுக்கு வெற்றி.

    அந்தப் பெண் எதிர்த்துப் பயனில்லை. பொதுவாகவே, பெண்கள் சொல்வதும் செய்வதும் எதிர் எதிராக இருக்கும் என்று தப்புக்கணக்கு போட்டுவிடுவார்கள்.

    முதலில் பெண்ணுக்குச் சிறிது பயம் ஏற்பட்டாலும், துணிச்சலுடன் அதை எதிர்கொண்டால், அவமானம் அந்த ஆண்களுக்கு.

    பயத்துடன் கோபமும் உடன்வரும்.

    வேகமாக வரும் காரின் குறுக்கே ஒருவர் நடந்தால், காரோட்டிக்குக் கோபம் எழும்.

    ஏன் கோபம்? விபத்து நடந்துவிடுமே என்ற பயம்தான் கோபமாக மாறுகிறது.

    எதற்காவது பயந்து, அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தால், கோபம் அதிகரித்துக்கொண்டே போகிறது. அப்போது ஏற்படும் மன இறுக்கம் உடல்நிலையைப் பாதித்துவிடுமே!

    என்ன பயம் வேண்டியிருக்கிறது!

    நம்மை நாமே உணர ஒரு வழி இது.

    தன்னால் ஒரு குறிப்பிட்ட காரியத்தைச் செய்யமுடியும் என்ற நம்பிக்கை ஒருவருக்கு இருந்தால், `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்ற தயக்கமோ, `தோல்வியடைந்தால் அவமானம்!’ என்ற எண்ணமோ எழாது.

    துணுக்கு

    எனக்கு என்னென்னவோ சாதிக்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், பயம் குறுக்கே வந்நது எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது.

    என்ன பயம்?

    தோல்வி அடைந்துவிடுவோமோ என்ற பயம்தான்!

    போட்டிகளிலோ, விளையாட்டுகளிலோ பங்கெடுத்துக்கொள்பவர்களில் எத்தனைபேர் முதலிடத்தைப் பிடிக்கிறார்கள்?

    அப்படி இல்லாதவர்கள் தோல்வி அடைந்தவர்கள் அல்லர். பங்கெடுத்துக்கொள்ளவாவது துணிந்தார்களே!

    தமிழ்ப்படங்களிலிருந்து பாடம்

    அண்மையில் வெளியான கர்ணன், அசுரன் போன்ற திரைப்படங்களில், சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களைப்பற்றிக் காட்டுகிறார்கள்.

    வயது முதிர்ந்தவர்கள் தமக்கு நியாயம் கிடைக்காது என்ற அச்சத்திலேயே தழைந்துபோய்விடுகிறார்கள்.

    இளவயதினரோ, காலம் காலமாகத் தம்மை இந்த நிலையிலேயே இருக்கச் செய்யும் மேட்டுக்குடியினரைத் துணிச்சலுடன் எதிர்க்கிறார்கள். துன்பம் அனுபவித்தாலும், மனம் தளர்வதில்லை.

    இறுதியில், கல்வியால்தான் ஒரு சமூகம் உயரமுடியும் என்று உணர்கிறார்கள். அதற்கும் எதிர்ப்பு. ஆனால், பலரும் இணைந்து எதிர்த்தால், வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளலாம் என்ற பாடம் புகட்டப்படுகிறது.

    பயம் இயற்கையான உணர்வுதான். ஆனால், அதை எதிர்கொள்ளும்போதுதான் வாழ ஆரம்பிக்கிறோம்.

    Share
  • சுவரில் வீசிய பந்து (சிறுகதை)

    சுவரில் வீசிய பந்து (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    கதிரவன். அது பெற்றோர் அவருக்குச் சூட்டிய பெயரில்லை. ஆனால், எழுத்துத்துறையில் கம்பீரமாக இருக்கவேண்டாமா என்று யோசித்து, அவர் தானே தன்னை நாமகரணம் செய்துகொண்டார்.

    முதலில் வருந்திய பெற்றோரும், அவர் ஒரு தினசரியின் ஞாயிறு பதிப்பாசிரியராகப் பொறுப்பேற்றபின், `எல்லாம் அந்தப் பெயரோட ராசி! சும்மாவா? சூரியனில்ல!’ என்று பெருமைபேச ஆரம்பித்தார்கள்.

    அண்ணனுக்கு அந்தப் பெயரால்தான் வாழ்க்கையில் முன்னேற முடிந்தது என்று நம்பிய கதிரவனுடைய தம்பி பகலவனாக மாறினார்.

    “எதுக்கு அவசரமா வரச்சொன்னே?” என்று கேட்ட அண்ணனிடம் அழமாட்டாக்குறையாகச் சொல்ல ஆரம்பித்தார் பகலவன். “நான் பத்திரிகை ஆரம்பிச்சப்போ நீங்கதானே சொன்னீங்க, `நம்ப மக்களுக்கு நிறைய சினிமா செய்தி குடுடா. படம் பாத்துக்கிட்டிருந்தா, அவங்களுக்குச் சோறு தண்ணிகூட வேணாம்’னு?”

    “அதுக்கென்ன இப்போ? பத்திரிகை நல்லாத்தானே ஓடுது?”

    “இப்போ, ஆறு மாசமா, ரொம்ப நஷ்டம். எல்லாம் அந்தத் தாமரை பத்திரிகையால வந்த வினை!” பொருமினார் தம்பி.

    “காலேஜில படிச்சுக்குடுத்தவன் எவனோ ஆரம்பிச்சிருக்கானாம்!” அவர் குரலில் ஏளனம். “வேலையத்த வேலை! அவன் போடற குப்பையையெல்லாம் யார் படிப்பாங்க!”

    அண்ணன்-தம்பி இருவரும் மலேசிய ரப்பர் தோட்டப்புறங்களில் வளர்ந்தவர்கள். தமிழில் ஆரம்பக்கல்வி கற்றதோடு சரி. மெத்தப் படித்தவர்களைக் கண்டால் உள்ளுர பயம், வெளியில் அலட்சியம்.

    “நானும் அப்படித்தான் நினைச்சு சும்மா இருந்துட்டேன். இப்போ, அவன் போடற கதைங்க, விஷயங்களெல்லாம் சுவாரசியமா இருக்கு, நாலு விஷயம் தெரிஞ்சுக்கலாம்னு எல்லாரும் அதைத்தான் வாங்கிப் படிக்கறாங்க. நம்ப பத்திரிகை கடைங்கள்லே அப்படியே தொங்கிட்டுக் கிடக்கு!”

    கதிரவன் யோசனையில் ஆழ்ந்தார். சிறிது பொறுத்து, “அந்த ரோசாவோ, என்ன எழவோ, விக்காம செய்துட்டா?”

    “தாமரை!” என்று மெல்லிய குரலில் திருத்திய பகலவன், “வாங்கறவங்க கையைப் பிடிச்சு தடுக்கவா முடியும்?” என்றார் நிராசையுடன்.

    “எதை எப்படிச் செய்யணும்கிறதை எங்கிட்ட விடு!”

    அடுத்த வாரமே கதிரவனுடைய தினசரியில்  வெளியாகியிருந்தது அச்செய்தி: “நமது சகோதரரான ஞாயிறு பத்திரிகை ஆசிரியர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அன்னாரது குடும்பத்திற்கு நமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதை ஒட்டி, இன்று மாலை நாம் ஏற்பாடு செய்திருக்கும் இரங்கல் கூட்டத்திற்கு இலக்கிய ஆர்வலர்கள் அனைவரும் திரண்டு வருமாறு கேட்டுக்கொள்கிறோம்”.

    ஞானி (உண்மைப்பெயரில்லை) அதிர்ந்தேபோனான். பதினாறு வயதில், நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் ஆசையுடன் தலைநகருக்கு வந்திருந்தவன் அவன்.

    திசை தெரியாது விழித்துக்கொண்டிருந்தவனை, “தமிழில எழுதப் படிக்கத் தெரியும்தானே? எங்கிட்ட வேலைக்கு சேர்ந்துக்க,” என்றவாறு அடைக்கலம் கொடுத்தார் கதிரவன். அவரைத் தன் தெய்வமாகவே அவன் மதித்து நடந்துகொண்டதில் வியப்பேதுமில்லை.

    இப்போதோ, சுயதலத்திற்காக வன்முறையைப் பயன்படுத்தியிருந்த அவருடைய போக்கு அவனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

    “என்னங்க ஐயா, இப்படிச் செய்துட்டீங்களே!” என்று குழம்பியவனிடம், “நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா, எதுவும் தப்பில்ல,” சினிமா வசனத்தை எடுத்துக்கூறினார் கதிரவன். “அந்த நாலு பேத்தில நாம்பளும் ஒத்தங்க!”

    குருவின் இந்த உபதேசத்தால், ஒரு வழியாக உலகம் புரிவதுபோல் இருந்தது ஞானிக்கு.

    அதன்பின் `தாமரை’ முடங்கிப்போக, வாசகர்கள் மீண்டும் திரைப்படச் செய்திகளுக்கும், அரைகுறை ஆடை அணிந்த நடிகைகளின் படங்களுக்கும் தாவினர்.

    “நீங்க மந்திரியா இருக்கவேண்டியவங்கண்ணா!” என்று நன்றிப்பெருக்குடன் பகலவன் கூறியபோது, ஞானியும் அதை ஆமோதித்துத் தலையாட்டினான்.

    தம்பியின் மகிழ்ச்சி நிலைக்கவில்லை.

    “வியாபாரம் படுத்துப்போச்சுண்ணே. எல்லாப் பயலுவளும் ஹேண்ட்போன் வெச்சிருக்கானுங்க!” தான் வெளியிட்ட செய்திகள் கையிலேயே கிடைத்துவிட்டதால் யாரும் தன் பத்திரிகையை வாங்கப் பிரியப்படவில்லை என்ற கோபம் பகலவனது குரலில் வெளிப்பட்டது.

    “பேசாம, அதை மூடிட்டு, எங்கிட்ட சேர்ந்துக்க,” என்று ஆறுதல் கூறினார் கதிரவன். “அந்தப் பய ஞானிக்கு ஒழுங்கா தமிழ் எழுதத் தெரியல. நான் திரும்ப எல்லாத்தையும் திருத்தி எழுத வேண்டியிருக்கு! ஆனா, நாய்மாதிரி என் பின்னாலேயே வரான், பாவம்!”

    அதைக் கேட்டுவிட்ட ஞானியின் மனம் கொதித்தது.

    நாயா?! இருபது வருடங்கள்! எத்தனை முறை வயிற்றைக் காயப்போட்டு, மாடாக உழைத்தோம்!

    “தம்பி, டேய்! இப்பல்லாம் என் ஒடம்பு முந்திமாதிரி இல்ல. வயிறு என்னமோ பலூன்கணக்கா உப்பிக்கிட்டே போகுது,” என்று முனகினார் கதிரவன்.

    “டாக்டர் என்ன சொல்றாரு?”

    “குடியைக் குறைச்சுங்கங்கிறாரு. நான் என்னிக்குடா அந்தக் கருமத்தைத் தொட்டிருக்கேன்?”

    நடந்தால் வயிறு குறையுமோ என்ற நப்பாசையுடன் ஒருநாள் சாயங்காலம் உலவப்போனார் கதிரவன்.

    திரும்பும் வழியில் ஓரடிகூட எடுத்துவைக்க முடியாமல் போக, டாக்ஸி ஒன்றை நிறுத்தி, அதில் ஏறிக்கொண்டார்.

    அந்த வாகன ஓட்டியான மலாய்க்காரர் தன் பயணியின் முகத்தில் தெரிந்த வேதனையையும் அவருடைய பருத்த வயிற்றையும் பார்த்து ஒரு முடிவுக்கு வந்திருந்தார்.

    “இஞ்சே (INCHE — மலாயில் ஐயா)! ஒங்களுக்கு எதிரி யாராவது இருக்காங்களா?”

    “நான் பெரிய சம்பளக்காரனில்ல. எனக்கு எதிரிங்க யாரு இருக்கப்போறாங்க?” என்று அசிரத்தையாகச் சொன்னாலும், சொல்லத்தெரியாத பயம் எழுந்தது.

    “ஒங்களுக்கு யாரோ செய்வினை செஞ்சிருக்காங்க — போமோகிட்ட போய்!” அழுத்தந்திருத்தமாக வந்தது குரல்.

    போமோ (BOMOH)!

    அவரைப்பற்றித் தான் அறிந்ததையெல்லாம் நினைவுபடுத்திக்கொண்டார் கதிரவன்.

    கிராமப்புற மருத்துவர் என்று அறியப்பட்ட மலாய் மாந்திரீகர். மருத்துவர் என்ற பெயருக்கு ஏற்றபடி, வருகிறவர்களின் நோய்களைக் குணப்படுத்துவார்.

    அத்துடன் நில்லாது, அவர்களுக்கு வேண்டாதவர்களுக்கு நோய்களையோ, ஏன், மரணத்தையோகூட உண்டாக்கும் வலிமை படைத்தவர்.

    ஒருவரது தலைமுடியை வைத்துக்கொண்டே அவருக்குத் தீமை விளைவிக்க முடியும் என்பதால்தானே, அழகுநிலையத்திற்குப் போகும் மலாய்ப்பெண்கள் வெட்டப்பட்ட தங்கள் தலைமுடியில் ஓரிழைகூட விடாது சேகரித்துக்கொண்டு வந்து, பூமிக்கு அடியில் புதைத்துவிடுகிறார்கள்!

    ஒருமுறை, போமோ ஒருவரைப் பேட்டி கண்டபோது, “ஒருத்தர் மூளை கலங்கச்செய்ய அவர் வீட்டு வெளியில இருக்கிற கதவிலே நூத்துக்கணக்கான பாம்புங்க நெளியறமாதிரி பிரமை உண்டாக்க எங்களுக்குப் படிச்சுக்குடுத்திருக்காங்க!” என்று கதிரவனிடம் ரகசியக் குரலில் கூறினார். ”செவத்திலே எறியற பந்து திரும்பி நம்பமேலேயே வந்து விழறமாதிரி, கெட்டது பண்ணினாலும் அப்படித்தான், இல்லீங்களா? அதனால, நான் அந்த பக்கமே போறதில்லே”.

    பக்கத்திலிருந்தவரின் உணர்ச்சிகளைக் கவனிக்காது, தன் அறிவைப் பறைசாற்றிக்கொள்வதுபோல், காரோட்டி தன்பாட்டில் பேசிக்கொண்டேபோனார்: “நமக்குப் பிடிக்காத ஒருத்தர் சாக, அவர் வயிறு பெருத்துக்கிட்டே போகச் செய்வாங்க. அதுக்குப் பேரு..”.

    “எப்படி மாத்தறது?” ஈனஸ்வரத்தில் கேட்டார் கதிரவன்.

    “கஷ்டம். சூனியம் போட்டவரால மட்டும்தான் அது முடியும். யாருன்னு எங்கே போய் தேடறது!”

    தான் மரணத்தின் வாயிலில் இருக்கிறோம் என்று சந்தேகமறப் புரிந்தவுடன், எதிலும் பற்று இல்லாது போயிற்று கதிரவனுக்கு.

    அவர் படுத்த படுக்கையாக இருந்தபோது, தான் விடாது, சுவரில் பந்து எறிவதுபோலவும், அது திரும்பி வந்து தன்னையே தாக்குவதுபோலும் தோன்றிக்கொண்டே இருக்க, “தம்பி, தாமரை” என்று பிதற்ற ஆரம்பித்தார்.

    கூடை நிறைய பழங்களுடன் அவரைப் பார்க்க வந்த ஞானியின் உடலில் புதிய மெருகு ஏறியிருப்பது அவ்வளவு கலங்கிய நிலையிலும் அவர் கண்களுக்குத் தப்பவில்லை.

    “நீங்க இருந்த எடத்திலே என்னைப் போட்டிருக்காங்க. எல்லாம் ஒங்க ஆசிதான்! சீக்கிரமே ஒடம்பு நல்லாகி, வந்துடுங்க ஐயா!” என்ற அவனுடைய போலிப்பணிவும் கரிசனமும் நன்றாகவே புரிந்தது.

    விரைவிலேயே, `எனது ஆசான்’ என்ற தலைப்பின்கீழ் அவரது மரணச்செய்தியை ஒரு பக்கத்தில் வெளியிட்டிருந்தான் ஞானி. கூடவே, ஒரு கண்ணீர்க்கவிதை வேறு!

    அவரது அகால மரணத்திற்கு, `மாரடைப்பு, குடிப்பழக்கம், மன இறுக்கம்’ என்று ஏதேதோ காரணங்கள் கற்பிக்கப்பட்டன.

    ஆனால், கதிரவனுக்கு மட்டும் தெரிந்திருந்தது துரோகம் செய்தது யாரென்று. `நாலு பேருக்கு நல்லது செய்யணும்னா, எதுவும் தப்பில்ல. அந்த நாலு பேத்தில நாம்பளும் ஒத்தங்க!’ என்று அவனுக்குப் போதித்ததே அவர்தானே!

    அதனால்தான், இறக்கும் தறுவாயில் அவர் இதழில் ஒரு சிறு புன்னகை நெளிந்திருந்ததோ?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 86

    பழகத் தெரிய வேணும் – 86

    நிர்மலா ராகவன்

    சாமான்களை எடைபோடலாம், மனிதரை அல்ல

    “அவன் மகா கஞ்சன்!”

    “சிடுமூஞ்சி!”

    இவ்வாறு, பார்ப்பவர்களையெல்லாம் தாறுமாறாக எடைபோடுவது மனிதனுடன் பிறந்த குணமென்றே நினைக்கத் தோன்றுகிறது.

    பிறர் ஏன் அப்படி இருக்கிறார்கள் என்று சற்றே யோசித்தால், மனம்போனபடி பழிக்கத் தோன்றாது.

    ஏன் கஞ்சத்தனம்?

    இப்படி யோசிக்கலாமே! கருமித்தனமாக இருப்பவருக்குக் குழந்தைகள் இல்லை. இறுதிக்காலத்தில் யாரை நாடுவது என்ற பயத்தில், இயன்றவரை சேமித்துவைக்கிறார்.

    நீண்ட காலம் நெருங்கிப் பழகியபின்னரும் ஒருவரை முழுமையாகப் புரிந்துகொள்வது இயலாத காரியம்.

    அப்படியிருக்க, சில நிமிடங்களே பழகிவிட்டு, ஒருவரைக் குறைகூறுவது என்ன நியாயம்?

    பலவிதமான சூழ்நிலைகளில் அவர் எப்படி நடந்துகொள்கிறார் என்று கவனித்தால்தான் ஒருவரது குணத்தைப் புரிந்துகொள்ளலாம்.

    கதை

    எங்களுக்குத் தெரிந்த ஒரு கடைக்காரரின் முகம் எப்போதும் கடுகடுவென்று இருக்கும். இசை சம்பந்தமான சாமான்கள் அவர் கடையில்தான் கிடைத்ததால், போகவேண்டிய நிலைமை.

    பல வருடங்கள் பழகியபின்னர், `இவர் முகத்தில் சிரிப்பே கிடையாது. வியாபாரம் நன்றாகத்தானே நடக்கிறது!’ என்று எங்களுக்குள் சொல்லிக்கொள்வோம்.

    ஒரு நாள் தினசரியைப் பார்த்தபோது, அவரது மரணச்செய்தியை அறிய நேரிட்டது. `நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்தார்,’ என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

    எங்களுக்கு மிகுந்த குற்ற உணர்வு ஏற்பட்டது.

    தான் இறக்கப்போகிறோம் என்று புரிந்துதான் சிரிப்பை இழந்தாரா? அல்லது, தீராத உடல்நோவினாலா?

    தெரிந்தவரோ, தெரியாதவரோ, எவரைப் பார்த்தாலும், அவரவர் பின்னணியைப் பொறுத்து ஏதாவது அபிப்ராயம் எழும். இது இயற்கை. ஆனால், அதை உரக்க வெளியிடாது, கவனிப்பதுடன் நிறுத்திக் கொண்டிருக்கலாமே என்று தோன்றியது.

    `நாம் அவரைவிட மேலானவர்!’ என்ற அற்பதிருப்தி எழ அப்படிச் செய்கிறோமோ?

    நாம் மட்டும் குற்றமற்றவரா?

    எதற்காகப் பிறரிடம் குற்றம் கண்டுபிடிப்பது?

    சிலரைப் பார்த்தவுடன் உடனே நல்ல அபிப்ராயம் எழுகிறது.

    “அவர் ரொம்ப நல்லமாதிரி. எல்லாரிடமும் அருமையாகப் பழகுவார்!”

    எப்போதும் சிரித்த முகத்துடன், கலகலப்பாகப் பழகுவதால் ஒருவர் நல்லவராகிவிடுவாரா? நாம் அவரை நல்லவிதமாக நினைக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அத்தகைய பிம்பத்தை உண்டாக்குகிறாரோ, என்னவோ!

    விமானப் பணிப்பெண்கள் எப்போதும் தம் முகத்தில் புன்னகையைத் தவழ விட்டுக்கொண்டு இருப்பார்கள். அதற்கான காரணத்தை ஒரு ஆண் பணியாளர் என்னிடம் கூறியது: “சிலர் விமானத்தில் பயணிப்பதற்குப் பல வருடங்களாகச் சேமிப்பார்கள். தம்மை உயர்வாக எண்ணிக்கொண்டு, எங்களிடம் அதிகாரமாக நடப்பார்கள். அது புரிந்து, நாங்களும் சிரிப்பு மாறாது நடந்துகொள்வோம்!”

    கதை

    விருந்தினராக உறவினர் ஒருவர் வீட்டுக்குப் போய், ஒரே ஒரு நாள் தங்கியிருந்தாள் சியாமளா.

    அந்த இல்லத்தரசி, பார்கவி, கணவரையும் அவருடைய தாயையும் மதிப்பதேயில்லை என்று மற்ற உறவினர்களிடம் கதை கதையாகச் சொன்னாள்.

    ஓயாமல் பிறரைப் பற்றித் தாறுமாறாகப் பேசுகிறவர், தன்னைப் பற்றியும் யாராவது அப்படிப் பேசுவார்களா என்று யோசிப்பதில்லை.

    நான் அவளுடைய கணிப்பை ஏற்கவில்லை. திருமணத்திற்குப்பின் ஒரேயடியாக அடங்கிப்போய், மகிழ்ச்சியை இழந்தவள் சியாமளா.

    பிறரது போக்கில் நாம் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்தால், அவர்களிடம் எப்படி அன்பு செலுத்தமுடியும்?

    நாம் பிறரைப் பழித்துப் பேசாவிட்டால், நம்மைப் பற்றிப் பிறர் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்ற கவலை எழாது.

    பார்கவியின் மாமியார் அவளைப் படாதபாடு படுத்தியது உறவினர் அனைவரும் அறிந்ததுதான். அவள் செய்தது எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிப்பது, தன் அதிகாரத்தை நிலைநிறுத்த பலபேருக்கு முன்னிலையில் மட்டம் தட்டுவது என்று நடந்துகொண்டாள்.

    `எப்போது, எந்த அவமானத்தைத் தாங்க நேரிடுமோ!’ என்றெழுந்த பயத்தைத் தாளமுடியாது போக, பார்கவியின் உடல்நிலை சீர்கெட்டது.

    கணவனும் ஆதரவாக இருக்கவில்லை. “நீதான் அடங்கிப்போயேன். என் அம்மாவைப் பிடிக்கவில்லை என்றால், என்னையும் பிடிக்கவில்லை என்றுதான் அர்த்தம்!” என்று அவளை அடக்கினான்.

    கவுன்செலிங் முறைப்படி, துணிச்சலாக நடப்பது எப்படி என்று கற்றாள் பார்கவி.

    `கெஞ்சினால் மிஞ்சுவார், மிஞ்சினால் கெஞ்சுவார்,’ என்பதுபோல், அவளுடைய கை ஓங்க, மாமியார் அடங்கிப்போனாள்.

    பார்ப்பவர்களுக்கு அத்தகைய போக்கு தவறாகப்படலாம். ஆனால், பயத்திலேயே அமிழ்ந்துவிடாது இருக்க அவளுக்கு வேறு வழி தெரியவிலை.

    நம்மைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை ஏளனம் செய்யத் தோன்றுவதுபோல், வெற்றி பெற்றவர்களைப் பார்த்துப் பிரமிக்கத் தோன்றுகிறது. அவர்கள் எத்தனை உழைத்திருப்பார்கள், என்னென்ன தடைகளைக் கடந்து வந்திருப்பார்கள்!

    ஆனால், அவர்களையும் விட்டுவைப்பதில்லை இன்றைய இணையதளம். புகழ்பெற்றவர்கள் என்னென்ன தவறு செய்கிறார்கள் என்று தேடிக் கண்டுபிடித்து, உலகெங்கும் பரப்புகிறது.

    அவர்களும் மனிதர்கள்தாமே?

    குற்றங்கள் புரிந்ததால் திறமையற்றவர்கள் என்றாகிவிடுமா?

    ஐயையோ! எவ்வளவு சின்னப்பெண்!

    கதை

    நானும் என் மகளும் பாங்காக்கைச் சுற்றிப்பார்க்கச் சென்றிருந்தோம். ஒரு சாப்பாட்டுக்கடையில் ஒரு இளம்பெண்ணின் கிளுகிளுப்பான சிரிப்பு ஒலித்துக்கொண்டே இருக்க, ஆர்வத்தை அடக்கமுடியாது, நான் திரும்பிப் பார்த்தேன்.

    அப்பெண்ணுக்குப் பதினைந்து வயதுக்குமேல் இராது. அவளுடன் மிக நெருக்கமாக முப்பது வயது மதிக்கத் தகுந்த இரு ஆண்கள். அவளுடைய தொழில் இன்னதென்று புரிய, எனக்கு உண்டான அதிர்ச்சி என் கண்களில் வெளிப்பட்டிருக்க வேண்டும். அதன் எதிரொலியாக, அவள் முகத்தில் ஆழ்ந்த வருத்தம் படர்ந்தது.

    சில கணங்களே நடந்த அந்த நாடகத்தை என் மகளுடன் பகிர்ந்துகொண்டபோது, “இது அவளுடைய தொழில். அப்படி ஒன்றும் எளிதானதுமல்ல. இதில் ஈடுபட்ட ஒவ்வொரு பெண்ணும் இருமுறையாவது பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவாள்,” என்று சிறிது ஆத்திரத்துடன் விளக்கினாள்.

    அருகிலுள்ள கிராமங்களில் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள குடும்பத்தினர், தெரிந்தே தம் மகளை பாலியல் தொழிலுக்காக தலைநகருக்கு அனுப்புகிறார்களாம்.

    அப்பெண்ணின் இடத்தில் என்னைப் பொருத்திப் பார்க்காததால் ஏற்பட்ட தவறு புரிந்தது. கணவன், குழந்தை, தனக்கென ஆதரவாக ஒரு குடும்பம் என்ற ஆசைகள் அப்பெண்ணிற்கு மட்டும் இருந்திருக்காதா! எல்லாம் வெறும் கனவாகிப்போக, குடும்பத்திற்கென உழைக்கிறாள், பாவம்!

    “அப்பெண் செலவாளி!”

    கணவனது சம்பாத்தியத்தில் தான் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கலாமே என்ற சுதந்திர உணர்வுடன் செயல்படும் பெண்கள் பிறரது கண்டனத்திற்கு ஆளாவார்கள்.

    இப்படி யோசிக்கலாமே! தாய்வீட்டில் வளர்கையில் பொருளாதார வசதி குறைவாக இருந்திருக்கலாம்.

    இரு கதைகள்

    `என்ன, இப்படிக் குழந்தை வளர்க்கிறாளே!’ என்று அநேகமாக எல்லா உறவினர் பெண்களையும் கேலி பேசுவாள் சௌந்தரி — அவர்கள் பின்னால்தான்!

    சௌந்தரி ஒரு முதிர்கன்னி என்பது குறிப்பிடத்தக்கது. தனக்குக் கிடைக்காத புத்திரபாக்கியம் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறதே என்ற மனப்பொருமல் இவ்வாறு வெளியாகியிருக்கிறது. குழந்தைகளை வளர்த்துப்பார்த்தால்தானே தெரியும் அதிலுள்ள சிரமங்கள்!

    தான் மட்டும் கற்பின் சிகரம், தன் பெண்கள் ஆண்களைப் பார்த்தாலே பயந்து ஓடுவார்கள் என்று ஓயாமல் பெருமை பேசுவாள் கற்பகம். அவளைப் பொறுத்தவரை, ஆண்களுடன் சிரித்துப் பேசும் பெண்கள் ஒழுக்கம் கெட்டவர்கள்.

    பிறரிடம் குற்றம் கண்டுபிடித்து, அதை விரிவாகக் கூறினால், தாம் சொல்வதைப் பிறர் ஆர்வத்துடன் கவனிப்பார்கள் என்று நடப்பவர்கள் இவ்விருவரும்.

    இப்போக்கால் மன இறுக்கம் கூடி, உடல்நிலையைப் பாதித்துவிடுகிறது.

    இந்த இரு பெண்மணிகளும் தம் இறுதிக்காலத்தில் நகரவும், பேசவும் முடியாது ஏதேதோ நோய்கள். யாரும் அவர்களுக்காகப் பரிதாபப்படவுமில்லை.

    கதை

    அதிகம் படித்து, பெரிய உத்தியோகம் வகிக்கும் பெருமை மைத்துனர்களுக்கு. அவர்கள் வீட்டு மாப்பிள்ளை படித்தவராக இருந்தாலும், கிராமப்புறத்தவர். அதிலும், பெரும்பணக்காரர்.

    மைத்துனர்களுக்கு அவரைக் கண்டால் ஏளனம். அவருடைய கடவுள் பக்தி, நியமங்கள் ஆகியவை கேலிப்பொருட்களாக ஆயின. ஆனால், அவரைத் தூற்றியவர்களைப்போல் இல்லாது, இறுதிவரை ஆரோக்கியத்துடன் வாழ்ந்தார்.

    பெற்றோரின் பேச்சும் நடத்தையும் அவர்கள் பிள்ளைகளையும் பாதித்தது.

    பக்தியும் ஒழுக்கமும் நிறைந்தவருடைய குழந்தைகள் வாழ்வில் சிறக்க, மைத்துனர்களின் குழந்தைகள் என்னென்னவோ துயரங்களை அனுபவித்தார்கள்.

    நாம் பிறரைப்பற்றி ஏதாவது சொல்லியே ஆகவேண்டுமென்றால், அது அவர்களுக்கு உபயோகமாக இருக்கவேண்டாமா?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 85

    பழகத் தெரிய வேணும் – 85

    நிர்மலா ராகவன்

    எவரும் தாழ்ந்தவரில்லை

    தன்னைவிட ஒரு படி மேலாக இருக்கும் பிறரைக் கண்டால், சிறுமை உணர்ச்சிக்கு ஆளாகாதவர்கள் வெகு சிலரே. அதைத் தணித்துக்கொள்ள, தன்னைவிடச் சிறந்த ஒருவருடன் எப்படியோ இணைந்தால், `நம் மதிப்பும் கூடாதா!’ என்று அவர்கள் எண்ணம் போகும்.

    கதை

    கல்வி, பொருளாதாரம், அழகு ஆகிய எல்லாவிதங்களிலும் தன்னைவிட உயர்ந்த ஒருத்தியைத் தேடி மணந்தான் சம்பத் — பிறர் பொறாமை அடையவேண்டும் என்ற நப்பாசையுடன்.

    அவன் விரும்பியதுபோலவே, அவர்களுக்குப் பொறாமை ஏற்பட்டது. ஆனால், அதை மறைக்க, `ஏமாற்றிக் கல்யாணம் செய்துகொண்டுவிட்டான்!’ என்று அவனைக் கேலி செய்வார்கள் என்பதைத்தான் சம்பத் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

    அந்த ஏமாற்றம் மனைவிமேல் கோபமாக மாறியது. அவளையும், அவள் குடும்பத்தினரையும் மட்டம்தட்டிப் பேச ஆரம்பித்தான்.

    தம்பதியர் இருவருக்குமே நிம்மதி பறிபோயிற்று.

    குடும்பத்தில் உயர்வு தாழ்வு

    ஒரு குடும்பத்தில் எல்லாக் குழந்தைகளும் ஒரே தன்மை உடையவர்களாக இருப்பார்களா?

    இது புரியாது, பல பெற்றோர் பழிப்பார்கள்: `உன் தங்கையை, தம்பியைப் பார்! எவ்வளவு சுறுசுறுப்பாக, எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார்கள்! நீயும் இருக்கிறாயே!’

    மூத்த குழந்தையின் பொறுமையை `அசமஞ்சம்!’ என்று, எடுத்துக்கொள்வார்கள். எதையும் பிழையின்றி பொறுப்பாகச் செய்யும் குணம், `இவன் எல்லாவற்றிலும் அதிநிதானம்!’ என்ற கேலிக்குரியதாக ஆகிவிடுகிறது.

    சிறு வயதில், பெற்றோரும் பிறரும் தன்னைப்பற்றி என்ன அபிப்ராயம் கொண்டு நடத்துகிறார்களோ, அதை அப்படியே குழந்தைகள் நம்பிவிடுவார்களே!

    அதனால், `நான் என் பிறரைப்போல் புத்திசாலி இல்லை!’ என்று சிந்தனைபோக, தாழ்மை உணர்ச்சி ஏற்பட்டுவிடுகிறது.

    உடல் ரீதியாகவோ, அறிவாலோ, தம்மைத் தாழ்ந்தவர்களாக உணர்கிறவர்கள் பிறருடன் பழகத் தயங்கி, ஒதுங்குவதும் உண்டு.

    கதை

    என் மாணவன் ஒருவன் வெள்ளைக்காரச் சாயலாக இருப்பான். அவனோ மலாய் குடும்பத்தைச் சேர்ந்தவன்.

    ஆங்கிலேயர்களின் வசம் அன்றைய மலாய் நாடு இருந்தபோது, அவன் வம்சத்தில் யாரோ ஒரு பெண் வெள்ளைக்காரருடன் தகாத உறவு பூண்டிருக்கவேண்டும். (அவர்கள் உள்நாட்டவர்களை மணந்ததில்லை).

    பல தலைமுறைகளுக்குப்பின், இவனிடம் அந்த ஜீன்ஸ் தன் வேலையைக் காட்டிவிட்டதுதான் பரிதாபம். அவன் வயதொத்த மாணவர்கள் அவனை ஏற்கவில்லை. ஏதோ கேலிப்பொருளைப்போல் அவனை நடத்தினார்கள். அவர்களை எதிர்க்கும் தைரியமின்றி, பிறரிடமிருந்து ஒதுங்கியே இருந்தான். மூளையும் மந்தமாகிவிட்டதுபோல் இருந்தது.

    என் வயதொத்த சுபீராவின் கதையும் கிட்டத்தட்ட அவனுடையதுபோல்தான்.

    ஒரு வித்தியாசம்: அவளுடைய தந்தை ஜப்பான்காரர். (ஆங்கிலேயர்களுக்குப்பின், ஜப்பானியர் சில காலம் மலாயாவை ஆண்டார்கள்).

    சுபீராவின் தந்தை பெயர் Putih (மலாயில், வெள்ளை) என்று அடையாளக்கார்டில் குறிப்பிட்டிருந்ததால், யாரும் எதையும் சந்தேகிக்கவில்லை. அவளே சொல்லித்தான் எனக்கு மட்டும் தெரியும்.

    நான் சற்று வியப்புடன், ஒரு சரித்திர ஆசிரியையைக் கேட்டேன்: “ஜப்பானியர் மலாய்ப்பெண்களை மணந்தார்களா?”

    “இல்லை. அப்பெண்களை வைத்திருந்தார்கள்!”

    எனக்கு ஏதோ புரிந்ததுபோலிருந்தது.

    எங்கள் பள்ளிக்கு வந்த புதிதில், அவள் எல்லாருக்கும் ஏதாவது தின்பண்டங்கள் வாங்கி வருவாள்.

    (ஏதோ உள்ளர்த்தத்துடன்தான் இதைச் செய்கிறாள் என்று எனக்குத் தோன்ற, நான் வாங்க மறுத்துவிடுவேன்).

    விரைவிலேயே, எல்லாரும் அவளை ஒரேயடியாகக் கொண்டாட ஆரம்பித்தார்கள். அவளுடைய அதிகாரம் வலுத்தது. அவள் சொல்வதை யாரேனும் ஏற்காவிட்டால், சண்டை பிடித்து, அவர்களிடம் பேசவேமாட்டாள்.

    வட்டார ரீதியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு நாங்கள் இருவரும் எங்கள் பள்ளியின் சார்பில் அனுப்பப்பட்டிருந்தோம். அங்கு அவள் ஒரு வார்த்தைகூடப் பேசாது இருந்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.

    தான் ஏதாவது சொல்லப்போய், பிறர் மாற்றுக்கருத்து கூறினால், சண்டை போடத் தோன்றுமே என்று தன்னையே அடக்கிக்கொண்டிருப்பாள். ஒரு வேளை, தாழ்மை உணர்ச்சியாலோ, என்னவோ!

    சமூகத்தால் அவர்களை ஏற்க முடிகிறதோ, இல்லையோ, முறையாகப் பிறக்காத குழந்தைகளால் தங்களைத் தாமே  ஏற்க முடிவதில்லை.

    கதை

    `பல குழந்தைகளைப் பெற்ற ஒருவரின் ஆசைநாயகியாகச் சில காலம் இருந்தவள் பெற்ற பிள்ளை நான்!’ என்ற உணர்வு கிட்டுவைத் தகித்தது.

    அவன் பிறக்குமுன்பே தந்தை இறந்துவிட்டபின், அவருடைய மனைவி அன்புடன் அவனையும் அவன் தாயையும் ஏற்றாள். ஆனால், `இவர்தான் என் தந்தை!’ என்று அவன் பெருமையுடன் எங்கும் சொல்லிக்கொள்ள முடியவில்லை.

    தன்னையும் அவர்கள் குடும்பத்தில் ஓர் அங்கத்தினராக ஏற்றவர்களைப் பழிக்கு ஆளாகச் செய்யவேண்டும் என்ற வன்மமாக மாறியது கிட்டுவின் ஆத்திரம்.

    இவனைத் `தம்பி’ என்று அருமையாக ஏற்றவனுடைய மனைவியை மயக்கி, தன்னுடன் இணைந்து வாழும்படி செய்தான். அப்படியும், அவனைப் பெருந்தன்மையுடன் நடத்தினார்கள். ஆனால், சமூகத்தில் அவனுடைய மதிப்பு அறவே போயிற்று.

    உயர்வும் தாழ்வும்

    நாம் எல்லாருமே ஏதோ ஒரு விதத்தில் பிறரைவிடச் சற்றுத் தாழ்ந்த நிலையில்தான் இருப்போம்.

    தன் அறிவுகூர்மையை எண்ணிப் பெருமைப்படுகிறவன்  ஒரு சிறு பிழை புரிந்துவிட்டாலும், ஏதோ செய்யக்கூடாததைச் செய்துவிட்டாற்போல் குறுகிவிடுவான்.

    ஒரு போட்டியில் வெற்றி பெற்றவர்கள், `நான் எல்லாரையும்விட மேலானவன், திறமைசாலி!’ என்ற மிதப்புடன், தலையை நிமிர்த்தி நடப்பதைக் கண்டிருப்பீர்கள்.

    `இப்படிப்பட்டவர்களுக்குத் தோல்வி என்பதே கிடையாதா!’ என்று பிறர் அதிசயிக்க வேண்டுமாம்!

    ஒரு சிறு தோல்வி வந்தாலும், இவர்கள் துடித்துப்போய்விடுவார்கள். வெற்றி, தோல்வி நிரந்தரமல்ல என்பதை உணராதவர்கள் இவர்கள்.

    பிறருடன் எப்போதும் ஒப்பிட்டுக்கொள்ளும் குணம் நிலைத்துவிடுவதால், தன்னைவிட அழகானவர், திறமையானவர், பணக்காரர் என்று தோன்றினால், அவர்களைக் கண்டு வயிற்றெரிச்சல் எழுகிறது பெரும்பாலோருக்கு.

    தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் இருப்பவரைப் பார்த்தோ, கருணை எழுவதில்லை. அவர்களைக் கேலி செய்யத் தோன்றுகிறது. அப்போதுதானே, தான் மேலானவன் என்று காட்டிக்கொள்ளலாம்! அவர்களிடம் தன் திறமைகளை, தான் சாதித்ததைப் பெருமையாகக் கூறிக்கொள்வார்கள்.

    கதை

    பள்ளி இறுதிப் பரீட்சையில் தான் தமிழ்ப்பாடத்தில் எவ்வளவு சிறப்பான தேர்ச்சி பெற்றோம் என்று, ஆங்கிலத்தில், நீண்ட உரை நடத்தினாள் ஒரு மாது – அவளைப் பார்த்து நானும் பிரமிக்க வேண்டும் என்று எண்ணியவள்போல்.

    ஒருவழியாக ஓய்ந்ததும், “உங்களுக்குத் தமிழில் எழுதத் தெரியுமா?” என்று சவால் விடுவதுபோல் என்னிடம் கேட்டாள்.

    வலுவில் வரவழைத்துக்கொண்ட அலட்சியத்துடன், “நான் ஒரு தமிழ் எழுத்தாளர்,” என்று பதிலளித்தேன். அவள் அடைந்த அதிர்ச்சியைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

    தாம் பின்பற்றும் மதம்தான் உயர்வானது என்று பலர் கருதி, அதைப் பற்றியே பேசி, மறைமுகமாகப் பிறரை மட்டம் தட்டுவார்கள். தம்மைப் பற்றிய சந்தேகம் அவர்களுக்கே எழுந்ததாலோ?

    பணவசதி குறைந்தவர்கள் பணக்காரர்களைப் பார்த்துப் பொருமுவார்கள் என்றால், பணக்காரர்களாக இருப்பவர்கள் குடும்ப வாழ்விலோ, ஆரோக்கியத்திலோ நிறைவு இன்றி, தம்மைப்போல் இல்லாத பிறரைப் பார்த்து ஏக்கப் பெருமூச்சு விடுவார்கள்.

    முன்காலத்தில், சில அரசர்கள் தங்கத்தால் ஆன சிம்மாசனம் செய்துகொண்டார்கள். (மைசூரில் இன்றும் காணலாம்).

    கழிப்பறையில் உபயோகப்படுத்தும் சாதனத்தைத் தங்கத்தால் செய்துகொண்டார்கள் வேறு சிலர். அதில் ரத்தினக்கற்கள் பதித்துக்கொண்டவர்களும் உண்டு!

    வருவாயை எப்படிப் பிறருக்கு உபயோகமான வகைகளில் செலவிடலாம் என்ற அக்கறை இல்லாததாலா?

    இல்லை, தம் குடிமக்களைவிடத் தாம் உயர்வானவர்கள் என்று காட்டிக்கொள்ளவோ?

    சில வம்சங்களின் அழிவுக்கு இத்தகையவர்கள்தாம் காரணமாக இருந்திருக்கிறார்கள்.

    `நான் மேலானவன் (அல்லது தாழ்ந்தவன்)’ என்ற எண்ணப்போக்கு இல்லாது, இருக்கிறபடியே தம்மை ஏற்பவர்களிடம்தான் நிம்மதி நிலைத்திருக்கும்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 84

    பழகத் தெரிய வேணும் – 84

    நிர்மலா ராகவன்

    கற்பனையால் நனவாக்கலாம்

    உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் ஒரு பயிற்சியைத் தொடங்குமுன், அதை எவ்வளவு சிறப்பாகச் செய்யப்போகிறோம் என்று மனக்கண்ணால் பார்க்கிறார்கள்.

    குறிப்பிட்ட சூழ்நிலையில், எந்தத் தருணத்தில் எப்படி விளையாடலாம் என்று மெதுவாக – அது அப்போதே நடப்பதுபோல் — மனக்கண்ணால் பார்க்கிறார்கள்.

    ஆனால், வெறும் கனவுடன் நிற்காமல், அதைச் செயலில் காட்டுகிறார்கள். செயல் முக்கியம்.

    அதன்பின் சிறுகச் சிறுக தம் எதிர்பார்ப்பை உயர்த்திக்கொண்டே போய்த்தான் வெற்றி அடைகிறார்கள்.

    “விளையாட்டு என்பது 10% உடலுழைப்பு, மீதி 90% மனத்தளவில்”.

    அவர்களுக்கு நாம் சளைத்தவர்களா! எதை அடைய ஆசைப்படுகிறோம் என்பதை மனக்கண்ணால் பார்த்தால், அப்படியே நடக்கும்.

    சாதாரணமான கல்லெனப் பிறர் காண்பதில், சிற்பிகள் உருவம் அமைக்கிறார்களே, எப்படி?

    ஒன்றைக் கற்பனை செய்து பார்க்கையில், அது எதிரில் இருப்பதுபோன்றே வண்ணம், உரு எல்லாம் அவர்களுக்குக் காணப்படுகிறது.

    சில பொருட்களோ, மனிதர்களோ நம் எதிரே இல்லாது, அவற்றை நாம் உணரமுடியாதபோதும், அவை இருப்பதாகக் கற்பனை செய்வது முதல் படி.

    அதன்பின்னர், நமக்கு உகந்தவாறு, நன்மை பயக்குமாறு ஆழ்ந்த கற்பனையில் ஈடுபட்டு, மனக்கண்ணால் இப்போது நடப்பதைப்போல் பார்ப்பது அப்படியே பலிக்கும்.

    கதை

    என் மகன் சிறு குழந்தையாக இருந்தபோது, நான் அரங்கில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

    அப்போது, தன்னிச்சையாக இரு கை முழங்கைகளும் ஒன்றை ஒன்று பிடித்து லேசாக ஆட்ட, முதலில் ஆச்சரியம். பிறகு புரிந்தது: `குழந்தை அழுகிறது!’

    இடது கரத்தை லேசாகத் தடவிவிட்டுத் தட்டிக்கொண்டேன். `தூங்கு. தூங்கு!’

    அதன்பின், என் மனம் சமாதானம் அடைய, அழுகை நின்றுவிட்டது என்று தோன்றிப்போயிற்று.

    வீட்டுக்குள் நுழைந்தபோதே, “அம்மா! குழந்தை ஓயாம அழுதது. என்ன பண்ணினாலும், அழுகை நிக்கவே இல்லே. திடீருன்னு, மேஜிக் போட்டமாதிரி, தூங்கிப்போயிடுத்து!” என்று, மாறி, மாறி விவரித்தார்கள் என் பெண்கள்.

    நோய்வாய்ப்படும்போது

    நோயைப் பற்றிச் சிந்திக்காது, பிடித்த விஷயங்கள் நடப்பதுபோல் மனக்கண்ணால் பார்த்தால், நோயின் கடுமை நம்மை பாதிக்கவிடாது, நல்ல உணர்வுகளை எழுப்பலாம்.

    ஒரு முறை, நான் மருத்துவ மனையில் நான்கு தினங்களைக் கழிக்க வேண்டியிருந்தபோது, என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை ஆர்வத்துடன் கவனித்தேன். நல்ல கதைக்கான கரு ஒன்று கிடைத்தது.

    பூனைகளுக்குத் தகவல்

    அப்போது, `தினமும் காலையில், நாம் வளர்க்கும் பூனைகளுக்கு ஆகாரம் போடுவோமே!’ என்ற எண்ணம் எழ, அவை இப்போது எப்படி இருக்கின்றனவோ என்ற உணர்வு எழுந்தது.

    வேறு யாராவது ஆகாரம் போட்டிருப்பார்கள். ஆனால், அவை விசுவாசம் நிறைந்தவை என்பதால் கவலை.

    நான் நினைத்தபடியே ஆயிற்று.

    ஒரு பூனை நான் எப்போதும் உட்கார்ந்து புத்தகம் படிக்கும் நாற்காலியைவிட்டு எழுந்திருக்கவே இல்லை; ஊர் சுற்றிவிட்டு, சாப்பிடும் நேரத்துக்கு மட்டும் திரும்பும் இன்னொன்றோ, வீட்டைவிட்டு நகரவே இல்லை என்று பிறர் சொல்லக் கேட்டேன்.

    பிராணிகளுக்குக் கடிதமா போடமுடியும்!

    “நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடுவேன். எப்போதும்போல் இருங்கள்!” என்று அவற்றிற்குத் தகவல் அனுப்பினேன் – மானசீகமாக.

    அவர்களுக்கு அது கேட்டிருக்கவேண்டும். பழையபடி நடந்துகொண்டதாம்.

    வெளியூர்களுக்குப் போக வழியின்றி, உற்றவர்களையும் பார்க்கமுடியாது பலரும் தவிக்கும் இக்காலத்தில் மன இறுக்கத்தால் தவிக்காது இருக்க ஒரு நல்ல வழி: ஒரு தோட்டத்தில் இருக்கிறோம். மலர்களின் மணம், வண்ணம், வண்டுகளின் ரீங்காரம் போன்றவற்றை கற்பனையில் அனுபவித்தால், வாழ்க்கை இனிமையாகவே இருக்கும்.

    ருசி

    ஒரு கதைமாந்தர் உண்ணும்போது ஏற்படும் ருசியை ஆசிரியர் வர்ணித்திருந்தால், ஆழ்ந்து படிப்பவர்களுக்கும் தாமே ருசிப்பதுபோல் இருக்கும். நாவில் நீர் சுரக்கும்.

    சமையல் குறிப்புகளைப் படிக்கும்போதோ, கணினித் திரையில் பார்க்கும்போதோ ஆர்வம் எழுந்து, நாமும் அந்தப் பலகாரத்தை செய்ய ஊக்கம் எழுவது இதனால்தான்.

    துணுக்கு

    ஒட்டகம் வேப்பிலையைத் துண்ணுமாம்.

    ஐயோ! கஸ்க்குமே!

    அதுக்கு நீ ஏன் மூஞ்சியை அப்படி வெச்சுக்கறே? நீயா துண்ணப்போறே?

    கதைக் கரு

    சில வரிகளே கொண்ட செய்தியைப் படிக்கும்போது, அது தம் எதிரில் அப்போதுதான் நடப்பதுபோன்ற உணர்வு எழும். அதைக் கதையாக விரிவாக்குகிறார்கள் எழுத்தாளர்கள்.

    இம்மாதிரியான கற்பனைகளால் நினைவாற்றல் அதிகரிப்பதும், நிம்மதி கிடைப்பதும் உபரிப் பயன்.

    ஒரு விலாசத்தையோ, தொலைபேசி எண்ணையோ நினைவில் பதித்துக்கொள்ள திரும்பத் திரும்பச் சொல்லிப்பார்த்துக்கொள்ள வேண்டியதில்லை. அவற்றை ஒரு கரும்பலகையில் எழுதியிருப்பதுபோல் கற்பனை செய்தால், அது மனதில் பதிந்துவிடும்.

    நான் கல்பனாஸ்வரம் போட ஆரம்பித்த கதை

    எனது இசை ஆசிரியர் முதன் முறையாக, ஒரு பாட்டிற்கு ஸ்வரம் அமைக்க ஊக்குவித்தார். நான் எவ்வளவோ முயன்றும், முடியவில்லை.

    அவர் கோபிக்கவோ, கேலி செய்யவோ இல்லையாயினும், எனக்கு ஏமாற்றமாகிவிட்டது.

    இரவு தூங்குமுன், நம்மைக் குழப்பும் ஏதாவதொரு கேள்வியை மனதில் எழுப்பினால், காலையில் பதில் தெரிந்துவிடும்.

    அன்றிரவு, நான் கேட்ட ஒரு சில பிரபல பாடகர்கள் எப்படிப் பாடினார்கள் என்று நினைவில் கொண்டுவந்து, அதேபோல் நானும் பாடுவதாகக் கற்பனை செய்தேன்.

    மறுநாள் வகுப்பில் ஸ்வரங்கள் பொழிய, “ராத்திரி பூராவும் இதையே நினைச்சுண்டு இருந்தியாம்மா?” என்று அதிசயப்பட்டுக்கேட்டார் ஆசிரியர்.

    பெருமையுடன் தலையாட்டினேன்.

    நம் எண்ணங்களும், வார்த்தைகளும் பலித்துவிடும். ஆதலால், நல்லதையே நினைக்கவேண்டுவது அவசியம்.

    ஒரு காரியத்தை ஆரம்பித்துவிட்டு, அதை எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறும்போது, நல்லதொரு முடிவைக் கற்பனையால் கண்டால், அது நனவாகும்.

    கதை

    சுமார் நாற்பது ஆண்டுகளுக்குமுன், நாடு தழுவிய ஆங்கிலச் சிறுகதைப்போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதற்கு முந்தைய வருடம், “அடுத்த வருடம் எனக்கு ஒரு பெரிய பரிசு கிடைக்கப்போகிறது!” என்று என் கணவரிடம் சொன்னேன்.

    அப்போது ஆங்கிலத்தில் பெரிதாக எதுவும் எழுதும் துணிச்சலும் இருக்கவில்லை.

    எப்படிப்பட்ட கதைகள் எழுதுவது என்ற கேள்விகள் எழ, ஒரு வருடம் முழுவதும், வாரத்தில் மூன்று நாட்கள் கோலாலம்பூரில் இருந்த அமெரிக்க வாசகசாலைக்குப் போய் ஆராய்ச்சி செய்தேன்.

    அடுத்த வருடம், போட்டி அறிவிக்கப்பட்டதும், பரிசுப்பொருளான கடிகாரம் என் கவனத்தை ஈர்க்க, அப்படத்தைத் தொட்டேன். எனக்குள் உறுதி: `நான் இதை வாங்குவேன்!’

    அதன்பின், அரைமணியில் ஒரு கதை எழுதினேன். கரு பரவாயில்லை. நடை சுமார்தான் என்று தோன்ற, ஒரு வாரம் கழித்து, யாருடைய கதையையோ படிப்பதுபோல், திருத்த ஆரம்பித்தேன். பல முறை திருத்தினேன்.

    நான் விரும்பிய அதே பரிசு என் கைக்கு வந்தது.

    அந்தக் கடிகாரம் இரண்டாவது பரிசுக்கு, முற்றிலும் தங்கத்தால் ஆனது என்பதையெல்லாம் நான் கவனிக்கவில்லை. அணிவதில் ஆர்வமும் இருக்கவில்லை.

    `என்னால் ஆங்கிலத்திலும் எழுத முடியும்!’ என்ற நம்பிக்கைதான் மகிழ்ச்சி அளித்தது.

    மனம் செய்யும் மாயம்

    அண்மையில், தொற்றுநோய்க்காக இரண்டாவது முறைக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டாள் என் பேத்தி. இரண்டு நாட்களுக்குப்பின், கல்லூரியில் ஒரு முழுப்பரீட்சை.

    முதன்முறை, ஏதேதோ பக்கவிளைவுகள்.

    ஒரு மாதத்திற்குமுன்னரே நான் கூறினேன், “தினமும் தூங்கப்போறதுக்குமுன்னாடி, `எனக்கு இந்தத் தடவை ஒரு பக்கவிளைவும் இருக்காது. சுலபமாக, நன்றாகப் பரீட்சை எழுதுவேன்!’னு மனசுக்குள்ளே நினைச்சுக்கோ,” என்றேன்.

    அவள் எண்ணியபடியே நடந்தது அவளுக்குப் பெரும் மகிழ்ச்சி.

    `நமக்கு நல்லது நடக்கும்!’ என்ற நம்பிக்கையுடன் கற்பனை செய்தால், கண்டிப்பாக நாம் விரும்பியது நடக்கும்.

    Share
  • பழகத்தெரிய வேணும் – 83

    பழகத்தெரிய வேணும் – 83

    நிர்மலா ராகவன்

    சுதந்திரம் என்பது

    ஒரு குழந்தை, புதிய விளையாட்டில் ஈடுபடும்போது, “எனக்கு முடியும்!” என்று, தன் உதவிக்கு வரும் தாயை விலக்கிவிடும், இரண்டு வயதிலேயே.

    சுயமாக ஒரு காரியத்தைச் செய்து, அதில் வெற்றிபெற்றுவிட்டோம் என்று மனமகிழ்ந்து சிரிக்கும் குழந்தைக்குப் பிறரது பாராட்டோ, பரிசுப்பொருட்களோ தேவையில்லை. தன் திறமையால் கிடைக்கும் திருப்திதான் பெரிதாகப்படும்.

    சுதந்திரத்தை நாடும் மனிதனின் அடிப்படை குணம் இது.

    அதே குழந்தை நாய் துரத்தும்போதோ, இன்னொரு குழந்தை மிரட்டும்போதோ, ஓடிவந்து தாயைக் கட்டிக்கொள்ளும். சுதந்திரத்திற்கு எதிர்மாறான பாதுகாப்பை நாடும் இத்தன்மையும் இயற்கைதான்.

    வயது ஏற, ஏற, சுதந்திரத்தைச் சிறிது சிறிதாக இழக்க நேரிடுகிறது. அது இயற்கைக்கு விரோதமானதாக இருப்பதால், மகிழ்ச்சியும் குறைந்துகொண்டே வரும்.

    பாலர் பள்ளியிலோ, அதன்பின்னரோ, முதன்முறையாக கல்வி கற்கப்போகும் குழந்தைகள் எவராவது சிரித்த முகத்துடன் போவதைப் பார்த்திருக்கிறீர்களா?

    சில குழந்தைகள் தமக்கே தெரிந்த விதத்தில் எதிர்ப்பார்கள்.

    அன்றைய மதராஸில், என்னை முதல் வகுப்பில் சேர்த்ததும், என் ஓயாத, உரத்த அழுகையைக் கண்டு பயந்த பள்ளி நிர்வாகம், “இனி உங்கள் பெண்ணைப் பள்ளிக்கு அனுப்பாதீர்கள்! இவளைப் பார்த்து, மற்ற குழந்தைகளும் அழுகிறார்கள்!” என்றுவிட்டதால் நான் பிழைத்தேன். வீட்டில் சுதந்திரமாக, சுவற்றுடன் பேசிக்கொண்டிருக்க முடிந்தது.

    ஆரம்பப்பள்ளியில், ஆசிரியைகள் பெற்றோரின் புரிந்துணர்வுடன் நடத்தமாட்டார்கள். `கட்டொழுங்கு’ என்ற பெயரில் அநாவசியமாக மிரட்டுவார்கள், தண்டிப்பார்கள்.

    அவர்களுக்குப் பயந்து, `ஆசிரியை என்ன சொல்வார்கள்?’ என்று யோசித்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்ய முயலும்போது, சுயமாகச் சிந்திப்பது குறைந்துவிடுகிறது. பெரியவர்களானபோதும் இதே பழக்கம் தொடர்கிறது.

    உன்னையே அறிந்துகொள்!

    நமக்குப் பிடித்தது-பிடிக்காதது, பலம்-பலவீனம், கனவுகள் போன்றவைகளைப் புரிந்து நடந்தால் எப்போதும் எதையோ இழந்ததுபோன்ற உணர்வு எழுவதைத் தடுக்கலாம்.

    சுதந்திரமாகச் சிந்திப்பதற்குத் துணிச்சல் வேண்டும். சொந்த நாட்டில் `பொறுக்கமுடியாதவை’ என்று இருப்பவைகளைப் பகிரங்கமாகச் சொன்னாலோ, எழுதினாலோ தண்டிக்கப்பட்டவர் எத்தனை பேர்! நெல்சன் மண்டேலா ஒரு தகுந்த உதாரணம்.

    தம் துறையில் சாதித்தவர்கள், சாதிப்பவர்கள், எவரை எடுத்துக்கொண்டாலும், பிறரது பழிச்சொற்களை ஏற்காது, தம் சுதந்திரமான எண்ணங்களையும், போக்கையும் விட்டுக்கொடுக்காது இருந்ததைக் காணலாம்.

    `இந்தக் காரியத்தை எப்படித்தான் செய்து முடிக்கப்போகிறோமோ!’ என்ற சலிப்பு அவர்களுக்குக் கிடையாது. ஒரு காரியத்தை ஆரம்பித்துவிட்டு, அதை முடிக்கும் தைரியமின்றி, பாதியில் பிறர் விட்டுப்போனவற்றை எடுத்துச் செய்வார்கள். அதனால் வரக்கூடிய பாதிப்புகளைப் பொருட்படுத்தாது, இறுதிவரை போராடுவார்கள்.

    தவறு செய்ய சுதந்திரம்

    புதிதாக எதையாவது செய்ய முயலும்போது பிழைகளைத் தவிர்க்கமுடியாது. கண்டனத்திற்கும் கேலிக்கும் அஞ்சினால், புதிய முயற்சிகளில் இறங்குவது ஏது!

    பிறர் நம்மைக் கட்டுப்படுத்த விடாது நடப்பதுதான் சுதந்திரம். பிறருக்காகப் பயந்தோ, அல்லது கடமை உணர்ச்சியாலோ தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்கிறவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் பறிபோய்விடுகிறது. அதன் விளைவாக, கற்பனைத்திறன் காணாமல் போய்விடும்.

    கதை

    மலேசிய ஈப்போ மாநிலத்தில், தவசகாயம் (64 வயது) ஒரு காண்டோமினியத்தின் காவலராகப் பணிபுரிந்துவந்தார்.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தொற்றுநோய் பரவாதிருக்க நாட்டில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

    அங்கு வந்திருந்த விருந்தினர் ஒருவரது மகன் அதை மீறி, அந்த வளாகத்திலிருந்து நீச்சல் குளத்தில் இறங்கப்போனபோது, தவசகாயம் தடுத்தார்.

    ஆத்திரமடைந்த தந்தை ஒரு மேசையால் அவர் தலையில் கடுமையாகப் பலமுறை தாக்க, கிட்டத்தட்ட கோமா நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் தவசகாயம். விருந்தினருக்கு `வேண்டுமென்றே கடுமையாகத் தாக்கிய’ குற்றத்திற்காகத் தண்டனை வழங்கப்பட்டது.

    எட்டு மாதங்கள் நிலைமை மாறாது இருந்த காவலர் அண்மையில் மரணமடைந்தார்.

    மலேசிய மக்கள் கொதித்தெழுந்தனர். அநியாயமாக ஓர் உயிரைப் போக்கியவர் செய்தது கொலைக்குற்றம் என்று கையெழுத்து மனு ஒன்று பரவியது. சட்டம் அதை ஏற்றால், மரண தண்டனை.

    `எங்கள் சுதந்திரத்தை ஒருவன் பறிப்பதா!’ என்று எண்ணியதுபோல் நடந்தவர் மற்றவரது சுதந்திரம், கடமை இவற்றையெல்லாம் மதிக்காதது ஏன்?

    `என்னை ஏழைத் தொழிலாளி ஒருவன் தடுப்பதா!’ என்று, தன்னை மிக உயர்வாக மதித்ததாலோ?

    குழந்தைகளுக்குச் சுதந்திரம்

    தம் குழந்தைகளிடம் அன்பு செலுத்தும் முறை அவர்கள் எந்தத் தவறும் செய்யாமல் பாதுகாப்பது என்றுதான் பல பெற்றோர்கள் நினைக்கிறார்கள். அந்த நோக்கத்துடன், அவர்களுடைய ஒவ்வொரு செயலையும் கண்காணிக்கிறார்கள்.

    குழந்தைகள் எத்தகைய நண்பர்களுடன் பழகுகிறார்கள் என்று தெரிந்திருக்கவேண்டியது அவசியம்தான். ஆனால், `நம் அதிகாரம் பறிபோய்விடுமே!’ என்ற கவலையுடன், எத்தனை வயதானாலும், தம் சொற்படியே அவர்கள் எப்போதும் நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது அக்குழந்தைகளின் வளர்ச்சியைப் பாதிக்காதா?

    தமக்கு மகிழ்ச்சி அளிப்பது எது என்றே சிலருக்குப் புரியாது போய்விடுவது இத்தகைய பெற்றோரால்தான்.

    அண்மையில் சீனாவில் நடந்த கதை

    ஏழிலிருந்து பதினோரு வயதான ஏழு சிறுவர்கள் இசை நிகழ்ச்சி ஒன்றில் பெரும் வெற்றி பெற்றனர். இசை மட்டுமின்றி, பல்வித வாத்தியங்கள் வாசிப்பதிலும், வண்ணம் பூசுவதிலும் தங்கள் திறமையைக் காட்ட, Panda Boys புகழேணியின் உச்சாணிக்கொம்பிற்கே போய்விட்டனர்.

    அவர்களுடைய புகழ் நான்கு நாட்களே நிலைத்தது.

    “இந்த வயதில் குழந்தைகள் தம் வயதினருடன் கலந்து பழக வேண்டும், விளையாடவேண்டும், கல்வி பயிலவேண்டும். இதைவிட்டு, முகவரும் (agent), பெற்றோரும் பணம் சம்பாதிக்கும் கருவிகளாக அவர்களை ஆட்டிப்படைக்கலாமா? அவர்கள் செய்வது சிறார்வதை!” என்று, சமூக வலைத்தளத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

    இவர்களுக்குமுன் பல சிறுவர்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாகி இருப்பதையும் எடுத்துக்காட்ட, அவர்களைப்பற்றிய எல்லா விவரங்களும் அழிக்கப்பட்டுவிட்டன.

    நிறைவேறாமல்போன தமது கனவுகளைப் பிள்ளைகள்மூலம் சாதிக்க எண்ணியவர்களுக்குத் தகுந்த பாடம் இது.

    எது சுதந்திரம்?

    `என் பெற்றோர் சுதந்திரம் என்பது என்னவென்றே அறியாது வாழ்ந்துவிட்டார்கள். நான் அப்படி இருக்கப்போவதில்லை!’ என்று, இளம்வயதினர் பலர் மனம்போனபடி நடப்பார்கள். தம்மைப்போல் இல்லாதவர்களைக் கேலி செய்து, அவர்களையும் மாற்ற முயல்வார்கள்.

    தீய பழக்கங்களில் ஈடுபடுவதும், சட்டத்தில் பிடிபடுவதும் சுதந்திரமில்லை.

    தனக்கோ, பிறருக்கோ எந்தவிதத் தீங்கும் இழைக்காது, தன் திறமைகளை மேலும் வெளிக்கொணர நடப்பதுதான் ஒருவர் தனக்குத் தானே செய்துகொள்ளும் உதவி.

    வெளிநாட்டில்

    சூழ்நிலைக்கு ஏற்றவாறு தமக்குப் பிடித்ததைச் செய்யும் சுதந்திரமோ, அதற்கான துணிச்சலோ, எத்தனைபேருக்கு இருக்கிறது?

    வாழ்வாதாரத்திற்காக வெளிநாடுகளுக்குப் போகிறவர்கள் பலர், தம்மைச் சிறுமையாக உணர்வார்கள். நிறையப் பணம் சம்பாதித்தாலும், ஏதோ வெறுமை இருக்கும். பொறாமை, வலுச்சண்டை — இதெல்லாம் வலுத்துவிடுகிறது.

    தம் சுதந்திரத்தைப் பிறருக்காக விட்டுக்கொடுத்துவிடுகிறோம் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

    அந்நிய நாடு பொருளாதாரத்தில் உயர்ந்ததாக இருக்கலாம். கலாசாரத்தால் வேறுபடலாம். அதனால் அந்நாட்டவர்கள் உயர்ந்தவர்களாகிவிட மாட்டார்கள்.

    அவர்கள் நம்மை மட்டம்தட்டிப் பேசினால், அவர்களது கருத்தை ஒத்துக்கொள்வதைப்போல் அசட்டுச்சிரிப்புச் சிரிக்காது, எதிர்க்கவேண்டும்.

    அதாவது, `என்னைப் பொறுத்தவரை, நானும், என்னைச் சேர்ந்தவர்களும் உயர்ந்தவர்கள்தாம்!’ என்கின்ற மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், சிறுமை உணர்ச்சியும், மன இறுக்கமும் தாக்காது நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும். ஒரேயடியாக மாற வேண்டிய அவசியமுமில்லை.

    அத்தகைய மனஉறுதியைச் சிலர் மறுக்கிறார்களா?

    அவர்கள் நண்பர்களே அல்ல.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 82

    பழகத் தெரிய வேணும் – 82

    நிர்மலா ராகவன்

    கவலையை விட்டுத்தள்ளுங்கள்!

    “நீங்கள் எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கிறீர்களே! வாழ்க்கை உங்களை நல்லவிதமாக நடத்தியிருக்கவேண்டும்!” என்று அனுமானித்தாள் என்னுடன் அதிகம் பழகியிருக்காத ஒருத்தி.

    அதற்கும் மெல்லச் சிரித்தேன். துன்பமோ, துயரமோ அறவே இல்லாத வாழ்க்கை எங்கானும் உண்டா?

    சிறு வயதில் ஏற்பட்ட பாதிப்புகளை இறுகப் பிடித்துக்கொண்டிருந்தால், நிம்மதி ஏது!

    சில இல்லங்களில், மூத்த மகள் தந்தைக்கு அருமையாக இருப்பாள். இரண்டாவது பெண் அம்மாவின் செல்லமாக இருந்தாலும், தந்தை தன்னிடமும் அன்பைப் பொழியவில்லேயே என்ற குறை ஏற்படக்கூடும்.

    தந்தை மறைந்தபின்னும், “அப்பா உன்னைத் தலையிலே வைத்துக்கொண்டு ஆடுவார்!” என்று சகோதரியிடம் வன்மம் பாராட்டுகிறவள் தன்னைத்தானே வருத்திக்கொள்கிறோம் என்பதை உணர்வதில்லை.

    கடந்தகாலக் கசப்பான நிகழ்வுகளை எப்படிச் சமாளிப்பது என்று புரிந்துவிட்டால், வாழ்க்கை எளிதானதுதான் என்று புரிந்துபோகும்.

    நம்மால் பொறுக்கமுடியாத ஒரு நினைவிலிருந்து விடுபட வேண்டுமானால், அதைப் பற்றி ஆழமாக யோசித்துத்தான் ஆகவேண்டும் – அப்படிச் செய்வது எவ்வளவு வருத்தமாக இருந்தாலும். வேறு வழி கிடையாது. இல்லையேல், அதேபோன்ற அனுபவங்கள் தொடரும்.

    கதை

    ஒரு பெரிய குடும்பத்தில் வேண்டாத பிள்ளையாகப் பிறந்தவன் செல்வம். மூத்த அண்ணனுக்கோ, அவன் கேளாமலேயே அவனுக்குப் பல சலுகைகள் கிடைத்தன. அவன் தீய பழக்கங்களில் ஈடுபட்டு, வாழ்க்கையை நாசமாக்கிக்கொண்டவுடன், செல்வம் உறுதிபூண்டான்: `நான் முன்னுக்கு வந்து, என்னை ஒரு பொருட்டாக மதிக்காதவர்களுக்குப் பாடம் கற்றுக்கொடுப்பேன்’.

    ஆனால், தன் வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக்கொண்டபோதும், அவன் எதிர்பார்த்த மகிழ்ச்சியோ, நிம்மதியோ கிடைக்கவில்லை.

    தன்னையுமறியாது, தந்தையைப்போலவே தன்னைத் துச்சமாக நடத்தும் ஒருவனைச் சிறந்த நண்பன் என்று நம்பினான் செல்வம்.

    அதன்பின், `யாரையும் நம்ப முடியவில்லை. எல்லாரும் என்னைக் காயப்படுத்துகிறார்கள்!’ என்று புலம்ப ஆரம்பித்தான்.

    இவனிடம் பலரும் தம் குறைகளைப் பகிர்ந்துகொள்ள, அவர்களுக்கு ஆறுதலாகப் பேசுவான். அதே அன்பைத் தன்னிடமும் செலுத்த அவனுக்குத் தெரியாமல் போயிற்று.

    கடந்தகாலத்தை நினைவுகூர்ந்தாலே வருத்தம் மிக, தன்னிரக்கம் பெருகியது. அதை நினைத்தும் பார்க்க விரும்பவில்லை.

    அறியாவயதில் ஏதேதோ நடந்திருக்கலாம். கடந்த காலத்திலேயே நிலைத்து, நிகழ்காலத்தை மகிழ்ச்சியின்றிக் கடப்பானேன்!

    நல்ல நண்பர்களைப்போல் புகழ்ச்சி, பரிசுப்பொருட்களுடன் கவர்ந்து, அதன்பின் உணர்வுபூர்வமாக வதைப்பவர்கள் தொடர்பு எதற்கு?

    அப்படிப்பட்டவர்களிடமிருந்து விலகுவதுதான் நமக்கு நாமே செய்துகொள்ளும் உதவி.

    மன்னிப்பு

    பிறரால் வதைக்கப்பட்டவர்களால் வெகு காலமானாலும் அவர்களை மன்னிக்கமுடியாது.

    தாம் ஏன் வதையை அனுமதித்தோம் என்று, தம்மீது கொண்ட ஆத்திரமும் குற்ற உணர்வும்கூடத் தணியாது.

    வதைக்கு ஆளாகிய குழந்தைகளுக்கு எதனால் பாதிப்பு ஏற்பட்டது என்று கூறத் தெரியாது. அவர்களை ஏதாவது வரையச்சொன்னால், மனத்திலிருப்பது சித்திரம்வழி வெளிப்படும். (உளவியல் நிபுணர்கள் இவ்வழியைத்தான் கடைப்பிடிக்கிறார்கள்).

    செடிகளிடம் ஒரு பாடம்

    எங்கள் வீட்டில் ஒரு மல்லிகைச் செடி புதராக வளர்ந்திருந்தது. இந்தச் செடி பூத்ததே கிடையாது. ஏனெனில் ஒரு மரத்தின் நிழல் அதன்மேல் படர்ந்திருந்தது.

    அபூர்வமாக, ஒரே ஒரு கிளை மட்டும் மிக நீண்டிருக்க, அதில் மொட்டுகள்!

    சூரிய வெளிச்சம் இல்லாததால் பூக்க முடியவில்லை என்று புரிந்து, அது வெளிச்சத்தை நோக்கி வளர்ந்துவிட்டது!

    சூழ்நிலை சரியாக இல்லை என்றால், அதிலிருந்து எப்படி விடுபடுவது என்பது அதற்குத் தெரிந்திருக்கிறது!

    இயற்கையால் துன்பம்

    துன்பமோ, துயரமோ பிறர் கொடுப்பது மட்டுமில்லை. இயற்கையும் அதைச் செய்யும்.

    கதை

    என் மகளுடைய பள்ளிக்கூட ஆசிரியை கனகா என்னைச் சந்திக்க விரும்புவதாக அழைத்தாள். (`கண்டிப்பாக உன்னைப்பற்றிக் குறை கூறமாட்டேன்!’ என்று என் மகளிடம் வாக்குறுதி கொடுத்தபின்தான் அவளால் என்னுடன் தொடர்புகொள்ள முடிந்ததாம்!).

    திருமணம் செய்துகொடுத்தபின்னும், தன் மகளுடன் தங்கிவிட்ட அவளுடைய தாய் இறந்து போயிருக்கிறாள். ஆனால் கனகாவால் அத்துயரத்தை ஏற்க முடியவில்லை.

    ஒரே மகனைப் பறிகொடுத்த துக்கத்தை நான் எப்படி எதிர்கொண்டேன் என்று அறிய விரும்பினாள் அவள்.

    பொதுவாக, எந்தத் துக்கமும் ஒன்றரை வருடத்துக்குமேல் நீடிக்காது என்று கூறுவார்கள். அது சரியல்ல.

    துயரை மாற்ற நாம் எதையாவது முனைந்து செய்தால்தான் அது காலம் முழுவதும் நம்மை ஆட்டுவித்து, நடைப்பிணமாக ஆக்கிவிடாது காத்துக்கொள்ள முடியும்.

    “என் அம்மாவுக்கு பாயசம் என்றால் ரொம்பப் பிடிக்கும். இப்போது பண்டிகைக்குக்கூட பாயசம் பண்ண மனம் வரவில்லை,” என்றாள் கனகா. “இரண்டு பேரும் மாலை வேளையில், ஒன்றாக டீ குடிப்போம். இப்போது அழுகை அழுகையாக வருகிறது”.

    “எப்பவும்போல, இரண்டு கப் டீ போட்டு எதிரெதிரே வைத்துவிட்டு, `அம்மா! டீ!’ என்று உரக்கக் கூப்பிடுங்கள். சில தினங்களுக்குப் பின் மனம் அடங்கிவிடும்,” என்றேன். “அம்மாவின் ஃபோட்டோவில் வாய்க்கருகே ஒரு சொட்டு பாயசத்தை வைத்தால், முதலில் அழுகை வரும். ஆனால், நாளடைவில், நிம்மதி கிடைக்கும்,” என்று என் சொந்த அனுபவத்தை விளக்கினேன்.

    உற்றவர் மறைந்தபின் துயருறும் சிலர் என்னிடம் இவ்வாறு ஆலோசனை கேட்டிருக்கிறார்கள்.

    விபத்தில் மகனைப் பறிகொடுத்த ஒரு முதியவர், `உங்களிடம் பேசியதும், நிம்மதியாக இருந்தது,’ என்று, வெகு தூரத்திலிருந்து என்னைச் சந்திக்க வந்தார், மறுமுறை.

    சில வருடங்களுக்குப்பின், அவர் குடும்பத்தில் இன்னொரு துக்கம் நிகழ, அயல்நாட்டிலிருந்த என்னைத் தொடர்புகொண்டார்.

    `நான் மாறிவிட்டேன். நீங்களும் மாறலாம். ஓயாமல் அழுதுகொண்டிருக்க வேண்டியதில்லை,’ என்று நான் சொல்லாமல் சொன்னது அவ்விருவருக்கும் நம்பிக்கை அளித்துவிட்டது.

    போதைப் பழக்கத்தில் ஈடுபட்டு, பின்பு அதிலிருந்து விடுபட்டவர்களையும், சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துவிட்டுத் திரும்பித் திருந்தி வாழ்பவர்களையும் கல்விக்கூடங்களில் உரையாற்ற அழைக்கிறார்களே, ஏன்?

    `நீங்களும் மாறலாம்’ என்ற நம்பிக்கையைப் பிறருக்கு ஊட்டுவதற்காகத்தான்.

    `அப்போது எனக்குத்தான் தெரியவில்லை. பிறரும் என்னைக் காப்பாற்றத் தவறிவிட்டார்கள். ஆனால், நான் அப்படி இருக்கமாட்டேன். அவதிப்படும் பிறருக்கு ஆதரவாக இருப்பேன்!’ என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டவர்கள் இவர்கள்.

    அப்போக்கால், பிறரது கவலையைப் போக்குவதுடன் தம் மனதையும் ஆற்றிக்கொள்கிறார்கள்.

    பெருந்துயரோ, தீய பழக்கங்களோ மட்டும் மாற்றப்பட வேண்டியதில்லை.

    மகிழ்ச்சி எங்கே?

    `நமக்கு ஏன் மகிழ்ச்சியே கிடைப்பதில்லை?’ பலருக்கும் மன உளைச்சலை உண்டாக்கும் கேள்வி.

    தமக்கு என்ன வேண்டும் என்று புரியாததால் வரும் விளைவு இது.

    நமக்கு உகந்ததாக இல்லாவிட்டாலும், பிறரது எதிர்பார்ப்புகளை ஏற்றுச் செய்யும்போது சலிப்பாகவோ, எரிச்சலாகவோ இருக்கும். எல்லோரிடமும் நற்பெயர் வாங்கவேண்டும், பிறர் மனதை நோகடிக்கக்கூடாது என்ற எண்ணத்துடன், அக்காரியங்களைச் செய்வானேன்! எதற்காக நம்மையே கஷ்டப்படுத்திக்கொள்வது?

    நம் நலனையும் கவனித்துக்கொள்ள வேண்டாமா?

    எதிலும் சுயநலம்

    “எவருமே சிறிதும் சுயநலமின்றி, பிறருக்காகத் தம் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொள்வதில்லை” — இவ்வாறு கூறினார் ஆப்ரஹாம் லிங்கனின் நண்பர் ஒருவர்.

    மாஜி அமெரிக்க ஜனாதிபதியோ அக்கூற்றை ஏற்க மறுத்தார். “நான் பிறருக்கு நன்மை செய்வதில் என்ன சுயநலம் இருக்க முடியும்?” என்று விவாதித்தார்.

    “அப்படிச் செய்வதால் உனக்கு என்ன கிடைக்கிறது?”

    “மகிழ்ச்சிதான்!”

    “அதுவும் சுயநலம்தானே! உனக்காகத்தானே செய்கிறாய்!” என்று அவரை மடக்கினார் நண்பர்.

    கலைஞர்களும் மனக்கவலையும்

    பண்பட்ட நடிகர்களும், எழுத்தாளர்களும் தம் அனுபவங்களை செயல்மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.

    ஒருவரை ஆட்டிப்படைக்கும் எண்ணங்களை, அவற்றால் எழும் பாதிப்பை, வெகுவாகக் குறைக்கும் வலிமை எழுத்துக்கு உண்டு.

    நிம்மதி பெறுவதற்கு, எழுத்தாளராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. நம்மை அலைக்கழைக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி யோசித்து, அன்றாடம் எழுதிவந்தாலே நம் மனம் புரிந்துபோகும்.

    அநாவசியமான கவலைகளை மனதில் சுமந்து அவதிப்படுவானேன்!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 81

    பழகத் தெரிய வேணும் – 81

    நிர்மலா ராகவன்

    உன்னையே மாற்றிக்கொள்!

    `என்னதான் கிரைண்டர் வந்தாலும், அம்மியிலே அரைச்சாதான் ருசி!’

    இப்படிக் கூறிய பெண்மணிக்கு நாற்பத்தைந்து வயதுகூட ஆகியிருக்கவில்லை. ஆனால், எல்லாவித புதிய முயற்சிகளும் நல்லதல்ல, அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பது அவளுடைய ஆணித்தரமான நம்பிக்கை.

    இலக்கு: அரைப்பது.

    அம்மியில் அரைத்தால், அதிக நேரம் செலவாகும். மின்சார இயந்திரத்தால் அரைப்பதற்குச் சில வினாடிகள் போதும். வேலைப்பளுவும் வெகுவாகக் குறையும்.

    இலக்கு மாறுபடாது இருந்தால், புதிய, எளிதான முறையைப் பின்பற்ற என்ன தடை?

    `அதுதான் மெழுகுவர்த்தி இருக்கிறதே, மின்சார விளக்கு எதற்கு?’ என்று தாமஸ் ஆல்வா எடிசன் நினைத்திருந்தால், இன்றும் அரைகுறை வெளிச்சத்தில்தான் முட்டி மோதிக்கொண்டு இருந்திருப்போம்.

    விமானங்களில் பறக்க முடியாது என்ற நிலை இருந்தால், `அயல்நாடுகள்’ என்பனவற்றைப் புத்தகங்களில்தான் படித்தாக வேண்டும். முழுமையாகப் புரிந்தும் இருக்காது.

    காலத்திற்கு ஏற்றவாறு மாறாததால், பல மிருகங்கள் காணாமல் போய்விட்டன.

    நிலைமை என்று மாறும்?

    தற்காலத்தில், தொற்றுநோய் வெகுவாகப் பரவிவிட்டதால், வெளியில் அதிகம் அலைய முடியாத நிலை.

    பொறுத்துப்போவது கடினம்தான். ஆனால், வேறு வழியில்லை. இந்நிலை விரைவிலேயே மாறிவிடும் என்று நம்பிக் காத்திருக்க முடியாது. எத்தனை மாதங்கள், ஆண்டுகள் பிடிக்குமோ! `நாம் எதற்கு மாறுவது? உலகம்தான் மாறவேண்டும்!’ என்ற வறட்டுப் பிடிவாதம் நடைமுறைக்கு உதவாது. யாருக்காகவும் உலகம் மாறப்போவதில்லை.

    ஆண்டுகள் பிடிக்குமோ!

    எதிர்பாராத இந்த மாற்றங்களை ஏற்க முடியாது போக, பலரும் ஆத்திரத்திற்கு உள்ளாகிறார்கள். அதனால், வன்முறை அதிகரித்துவிட்டது.

    முதியவர்களுக்குத் தம் வயதொத்தவர்களுடன் பேசிப் பழக இயலவில்லையே என்ற மன இறுக்கம்.

    இளையவர்களோ வீட்டிலேயே அடைந்து கிடக்கவேண்டும்.  அங்கேயே அலுவலக வேலை, பள்ளிப் படிப்பு.

    பெற்றோர் நாள் முழுவதும் குழந்தைகளுடன் வீட்டிலேயே கழிக்க நேர்கிறது. பணத் தட்டுப்பாடு வேறு.

    சிறு குழந்தைகளுக்கு இதெல்லாம் புரியாது. அவர்களுடைய பிடிவாதம் அதிகரிக்கும்.

    இச்சமயத்தில் குழந்தைகளை அவர்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபடுத்தலாம். முடிந்தால், சிறுவர்களுடன் நாமும் விளையாடலாம். சிரிப்பும் களிப்புமாக இருக்கும்.

    ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் புத்தங்களைப் படித்துக் காட்டலாம். உணவு உட்கொள்ளும்போது, கதைகள் சொன்னால் அறிவும் மொழி வளமும் பெருகுவதுடன், கதை கேட்கும் சுவாரசியத்தில், என்ன சாப்பிடுகிறோம் என்றே புரியாது சாப்பிட்டுவிடுவார்கள்.

    இன்றும், என் மகள், “அம்மா! நான் சாப்பிடறபோது நீ கதை சொல்ல மாட்டேங்கறே! அசடாப் போயிடுவேன்!” என்று விளையாட்டாக மிரட்டுவாள்!

    மாறமாட்டோம்!

    “தண்ணீர், பாத்திரத்திற்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக்கொள்கிறது. அதுபோல், அறிவாளிகளும் சூழ்நிலைக்குத் தக்கவாறு தம்மை மாற்றிக்கொள்கிறார்கள்” (சீனப் பழமொழி).

    `மாற மாட்டோம்!’ என்ற கொள்கை உடையவர்களின் வாழ்க்கை எளிதாக இராது.

    `வேளை சரியாக இல்லை, கலி முத்திவிட்டது,’ என்று, தாம் கஷ்டப்படுவதற்குப் பல காரணங்கள் கற்பிப்பார்களே தவிர, தாம் எப்படி தம் வாழ்க்கையைச் செம்மையாக அமைத்துக்கொள்ள முடியும் என்ற யோசனை அவர்களுக்கு எழுவதில்லை.

    வாழ்க்கை ஒரே மாதிரி இருக்காது. `நான் செய்வதுதான் சரி!’ என்ற பிடிவாதம் இல்லாது, சற்றே பணிவுடன் நடந்தால்தான் குழப்பங்கள் அதிகரிக்காது. நிம்மதிக்காக மாறித்தான் ஆகவேண்டும்.

    புதிய நிலையை ஏற்பது

    `மாற்றம்’ என்றால், வெளிநாடுகளுக்குப் போய் திரும்பியதும், குட்டையான ஆடைகளும், ஆங்கில உச்சரிப்புடன் கூடிய நுனி நாக்குத் தமிழும், அடிக்கடி தோள்களைக் குலுக்கிக்கொள்வதும் இல்லை.

    மேற்கல்விக்காகவோ, அல்லது உத்தியோக நிமித்தமோ, வேற்றூருக்குச் சென்று, பெற்றோரின் கண்காணிப்பு இல்லாததால் சுதந்திரமாக உணர்ந்து, தம் வயதொத்தவர்களுடன் தீய பழக்கங்களில் ஈடுபடுவதும் வெற்றியளிக்கும் மாற்றமில்லை.

    கதை

    திருமணமானபின், இந்தியாவிலிருந்து நான் மலேசியா வந்தபோது, எல்லாமே வித்தியாசமாக இருந்ததுபோல் உணர்ந்தேன்.

    உத்தியோகத்திற்குப் போக ஆரம்பித்ததும், என் சக, சீன ஆசிரியைகள், மாணவிகள் ஆகியோரிலிருந்து தனித்துத் தெரிந்தேன். நான் இருந்தபடியே என்னை ஏற்க முடியவில்லை அவர்களால்.

    “When you are in Rome, do as the Romans do!” என்றார்கள் சிலர், கேலியாக.

    அதைத்தான், “ஊருடன் ஒத்து வாழ்!” என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    “தலைக்கு எண்ணெய் வைத்துக்கொள்ளாதே!” என்று முகத்தைச் சுளித்தாள், ஒருத்தி.

    “உன் நிறத்துக்கு வெள்ளை நிற முகப் பவுடர் கூடாது. பழுப்பு நிறமாகப் பார்த்து வாங்கு!” என்று நட்புடன் அறிவுரை கூறினாள் இன்னொருத்தி.

    புதிய சூழ்நிலையில் அதிக மன இறுக்கமோ, குழப்பமோ இல்லாதிருக்க ஒரு வழிதான் இருந்தது.

    தாய்மொழி, உணவுப் பழக்கவழக்கங்கள், ஆடையணி இவற்றை மாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை.

    அதற்கும் கேலி: “எப்போதும் புடவையே உடுத்துக்கொள்கிறீர்களே! உங்கள் கணவர் புகார் செய்வதில்லையா?”

    எனக்கு வந்ததே கோபம்!

    “இதில் complain பண்ண என்ன இருக்கிறது? அவருடைய அம்மா புடவை கட்டியதைப் பார்த்து வளர்ந்தவர்தானே!”

    நான் எதற்கு ஆத்திரப்பட்டேன் என்று கேட்டவளுடைய புத்திக்கு எட்டவில்லை. பயந்துவிட்டாள்.

    பேச ஆரம்பித்தபோதே, அம்மா சொல்லிக் கொடுத்தது நான் பேசும் தமிழ். அதை எதற்காக மாற்றவேண்டும்?

    `புரியவில்லை,’ என்று தமிழர்கள் பலர் குறை கூறினார்கள்.

    “நீங்கள் ஏன் எங்களைப்போல் பேசக்கூடாது? எல்லாரையும் உங்களைப்போல் மாற்ற வேண்டும் என்று பார்க்கிறீர்களோ?” என்று வேறொருத்தி சண்டை பிடித்தாள்.

    “நீங்கள்தான் அப்படிச் சொல்கிறீர்கள்!” என்று பதிலடி கொடுத்தேன்.

    என் உச்சரிப்பைக் கேட்டு யாரும் தங்களுடையதை அவ்வளவு எளிதாக மாற்றிக்கொள்ளப் போவதில்லை. முடியவும் முடியாது. (பத்து வயதுக்குள் ஒரு மொழியைக் கற்றால்தான் சரியான உச்சரிப்பு வரும். இந்த விதிக்கு முன்னணி நடிகர்கள் விலக்கு).

    உச்சரிப்பில் என்ன, உயர்த்தி, மட்டம்? திரைப்படங்களில் பலவித தமிழ் உச்சரிப்புகளைக் கேட்டு, நாம் புரிந்துகொள்ளவில்லையா?

    மொழியும், அதன் உச்சரிப்பும் இரு தரப்பினருக்குள் தொடர்பை ஏற்படுத்துவதற்குத்தான். பிரிக்க இல்லை. ஏனோ, பலருக்கும் இது புரிவதில்லை. எல்லாரும், எல்லா விதத்திலும், தம்மைப் போலவே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    மாறுவதால் வெற்றி

    ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான திரைப்படங்களைப் பார்த்தாலோ, அல்லது அப்போது எழுதப்பட்ட கதைகளைப் படித்தாலோ, இன்று பலருக்கும் ரசிக்காது. அவற்றில் இருக்கும் கருத்துகள் இக்காலத்திற்கு ஒவ்வாதிருப்பதுதான் காரணம்.

    கதை

    கற்பனைத் திறனுக்கு மாற்றம் அவசியம்.

    இது புரிந்து, பெரும் வெற்றி கண்டவர் சிட்னி ஷெல்டன் (SYDNEY SHELDON) என்ற அமெரிக்க எழுத்தாளர்.

    1948-இலேயே, திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது பெற்றவர்.

    அவரது முதல் புதினத்தில் நல்ல கரு இருந்தது. ஆனாலும், விற்பனை ஆகவில்லை. அதை மூன்றே பேர்தான் வாங்கினர் என்று சொல்லிச் சிரித்ததைக் கண்டிருக்கிறேன். அவரே ஒன்று வாங்க, அவருடைய தாய் இன்னொன்றை வாங்கினாராம்.

    வாசகர்கள் மனத்தை எப்படிக் கவருவது என்று யோசித்து, தன் எழுத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்தார்.

    எப்படி?

    சிறப்பான கருவைக் கொண்ட கதைகளுக்குள், படுக்கையறைக் காட்சிகளை நிறைய — தொடர்ச்சியாகப் பல பக்கங்களில் — புகுத்தினார். நடையும் விறுவிறுவென்று இருந்ததா? அமோகமான விற்பனை.

    `முன்பு அப்படித்தான் எழுதினேன். இன்றும் அப்படித்தான் எழுதுவேன்!’ என்று பிடிவாதமாக மாற மறுத்திருந்தால், அவருடைய எதிர்காலம் அவ்வளவு சிறப்பாக ஆகியிருக்குமா?

    மாறுங்கள், ஆனால் நல்லவிதமாக.

    வெற்றி காண.

    Share
  • கிழவரும் குட்டியும் (சிறுகதை)

    கிழவரும் குட்டியும் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “நான் இந்தக் கறுப்புப் பூனையைக் கொல்லாம விடப்போறதில்லே!” தனக்குள் பேசிக்கொள்வதாக நினைத்து, உரக்கவே சொன்னார் மாத்ருபூதம்.

    இடுப்பில் குழந்தையுடன், தோட்டத்தில் மல்லிகைப் பூக்களைப் பறித்துக்கொண்டிருந்த கவிதாவின் காதுகளிலும் மாமனாரின் வார்த்தைகள் விழுந்தன. முகத்தைச் சுளிக்காமல் இருக்கப் பாடுபட்டாள்.

    வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தவர் அருகில் பூனை எதுவும் நின்றிருக்கவில்லை. கடந்தவாரம் அவரிடம் வாங்கிய உதைகளை அந்த கறுப்புப் பூனை மறக்கவில்லையோ, என்னவோ!

    அன்று மாலை, அது அவர்கள் வீட்டின் வெளியே, தெரு ஓரமாக அசுத்தப்படுத்தியது.

    சும்மா இருப்பாரா, மா.பூதம்! அவசரமாக வெளியே ஓடி, அதை உதைத்தார். திரும்பத் திரும்ப.

    பயந்தோடிய பிராணியைப் பார்த்த கவிதா, “பாவம்பா! வாயில்லா ஜீவன்! அதுக்கு என்ன தெரியும்?” என்று மன்றாடியபோது, “நீ சும்மா இரு. நாம்ப வெளியே போறபோது, பூனை குறுக்கே வந்தா, கெட்ட சகுனம்! இது கறுப்பு வேற!” என்று அவளை அடக்கினார்.

    அவள் பிறந்தகத்தில், இரண்டு பூனைகள் துள்ளி விளையாடும். அவள் தரையில் படுத்துக்கொள்ள, அவள்மேல் ஏறும் ஒரு குட்டி.

    அவள் தன் தலையை பக்கவாட்டில் ஆட்ட, அதுவும் அப்படியே செய்ததைப் பார்ப்பதில் அவளுக்கு ஆனந்தம் பெருகும்.

    `பாடும்மா!’ என்று அவள் ஒவ்வொரு ஸ்வரமாகச் சொல்லிக்கொடுக்க, `ஸ்வர சுத்தம் இதுகிட்டதான் கத்துக்கணும்!’ என்று அவள் பெருமையாகச் சொல்லும் அளவுக்கு, இனிமையான குரலில் அப்படியே திரும்பப் பாடும் இன்னொன்று.

    “இதுக்கு என்ன பேர் வெச்சிருக்கே? ஜிஞ்சர்னு (ginger) கூப்பிடலாமா? அந்தக் கலராத்தானே இருக்கு?” என்று அவளுடைய அண்ணன் விளையாட்டாகக் கேட்க, கவிதா அதிர்ந்தாள்.

    “ஐயோ, வேண்டாம்பா. `டீ, கவி! இஞ்சியை நறுக்குடி’ன்னு அம்மா என்னைக் கூப்பிடறபோதெல்லாம் மனசு பக்கு பக்குங்கும்! இதைச் செல்லக்குட்டின்னு கூப்பிடப்போறேன்!” என்றாள் தீர்மானமாக.

    `ரொம்ப ஆசாரமா இல்லாத வீடா ஒனக்கு மாப்பிள்ளை பாக்கணும். `பூனைக்கு வேற ஆகாரம் போடணுமா! தண்டச்செலவு!’ன்னு மாமியார் நொடிப்பா’ என்று அம்மா ஆதங்கப்பட்டாள்.

    மாமியார் இல்லாத வீடே அவளுக்குக் கிடைத்தது. தனி வீடு. அதில் எல்லா சௌகரியங்களும் இருந்தன.

    ஆனால், வந்த சில நாட்களுக்குள், மாமனார், “அது என்ன, ஒங்காத்திலே ரெண்டு பூனை துள்ளி விளையாடறது? அங்கே சாப்பிடவே பிடிக்கலே. எனக்குப் பூனை, நாயெல்லாம் கண்டாலே வெறுப்பு!” என்று அடுக்கிக்கொண்டே போக, அவளுக்கு அழுகைதான் வந்தது.

    தன் அருமைப் பூனைகளைப் பரிந்து எதுவும் சொல்ல முடியவில்லை.

    `வாழ்க்கைப்பட்டுப் போற இடத்திலே எல்லாரிடமும் மரியாதையாக, அடக்க ஒடுக்கமா இருக்கணும்!’ என்று அனுதினமும் கூறிய தாயின் அறிவுரையைக் கேட்டு வளர்ந்தவளாயிற்றே!

    தாயைப் பார்க்கப் போனபோது, “ஒன் செல்லக்குட்டி ஒன்னைத் தேடறது, கவி. மூலை முடுக்கெல்லாம் மோந்து பாக்கறது! நீ எப்பவும் ஒக்காந்து படிப்பியே, அந்த நாற்காலியைவிட்டு நகர்றதே கிடையாது!” என்று அடுக்கியபோது, மீண்டும் அழுகைதான் வந்தது கவிதாவுக்கு.

    அவளைப் பார்த்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திக்கொண்டது குட்டி — அதிவேகமாக வீட்டு வாசலிலிருந்து பின்புறம்வரை ஓடி, ஓடி.

    இதையெல்லாம் எடுத்துச் சொன்னால் கிழவருக்குப் புரியுமா? இல்லை, காது கொடுத்துத்தான் கேட்பாரா?

    எப்படிச் சொல்வது?

    நோய்த்தொற்று காரணமாக வீட்டுக்குள்ளேயே அடைந்துகிடக்கும் நிலையாலோ, நண்பர்களுடன் அரசியலையும், `சினிமாக்காரி’களையும் உரத்த குரலில் அலச முடியவில்லையே என்ற எரிச்சலாலோ, அவரது மனநிலை பாதிக்கப்பட்டிருந்தது என்றுதான் கவிதாவுக்குத் தோன்றியது. இப்போதுதான் ஐந்தில் ஒருவர் அப்படி ஆகிவிட்டாராமே!

    இந்தவரை, மனிதர் தன் குடும்பத்தினரிடம் வன்முறையைக் காட்டவில்லையே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான்!

    தன் பேத்தியிடம் உயிராக இருந்தவருக்கு மற்ற இனங்களின் குட்டிகளிடம் அன்பு வைக்கமுடியவில்லையே! கவிதாவுக்குப் புரியத்தான் இல்லை.

    ஒரு நாள், தன் பின்னங்காலைத் தரையில் பதிக்கமுடியாது, அந்தப் பூனை நொண்டி நடந்ததைப் பார்த்தபோது பரிதாபம் மேலிட்டது. மாமனார் டிவியில் மூழ்கி இருந்த தைரியத்தில், காம்பவுண்டுக் கதவைத் திறந்தாள். பூனைகளுக்கு இனிப்பு ஆகாது என்று, உப்பு பிஸ்கோத்து ஒன்றைப் போட்டாள்.

    பலரிடமும் அந்தப் பூனை பிரம்படியும், உதையும் வாங்கியிருக்கும் என்ற எண்ணமே அவளால் தாங்க முடியாததாக இருந்தது.

    அடுத்த இரண்டு நாட்களிலும், ஆகாரத்தை எதிர்பார்த்து, அங்கு வந்தது அந்தக் குட்டி.

    ஏதோ திருட்டுத்தனம் செய்வதுபோல், அவளும் அதன் பசியைப் போக்கினாள்.

    இரு கால்களிடையை அது சுற்றிச் சுற்றி வந்தபோது, அதன் அன்பும், நன்றி உணர்வும் அவளுக்குப் புரிந்தது. ஆனால், பயமும் எழுந்தது.

    மெல்லிய குரலில், “போயிடு. உதை வாங்காதே!” என்று எச்சரித்தாள்.

    “நான் பாப்பாவுக்குப் பால் குடுக்கணும்,” என்று பொதுவாகக் கூறிவிட்டு, கதவைத் தாளிட்டாள்.

    “குழந்தை எங்கேப்பா?”

    `போட்ட படத்தையே போடறான்! அபூர்வமா ஒரு புதுப்படம்! அதை சுவாரசியமாப் பாக்கறபோது இதென்ன தொணதொணப்பு!’ என்றெழுந்த எரிச்சலால் வந்தது பதில் கேள்வி: “என்னைக் கேட்டா?”

    தவழும் குழந்தை! அப்படி எங்கே போயிருக்கும்?

    பதைபதைப்புடன், வீட்டில் ஒவ்வொரு அறையாகத் தேட ஆரம்பித்தாள் கவிதா.

    தண்ணீர் தொட்டிக்குள் விழுந்திருக்குமோ? குளியலறை, கழிப்பறையிலும் நுழைந்து எட்டிப்பார்த்தாள்.

    பூனை வாசலிலிருந்து கத்தியது.

    “நீ அதுக்கு ஆகாரம் ஏதாவது போட்டியா?”

    “இல்லேப்பா”. மனமறிந்து பொய் சொன்னாள்.

    “போடாதே. அப்புறம் இதான் நம்ப வீடுன்னு இங்கேயே தங்கிடும்!”

    இடைவிடாமல், மீண்டும் கத்திய சத்தம் கேட்க, “அந்த சனியனை இன்னிக்குக் கொல்லாம விடப்போறதில்லே,” என்று சபதம் போட்டுவிட்டு, தன் கைத்தடியை எடுத்துக்கொண்டு வாசல்புறம் போனார் கிழவர்.

    தான் பெற்ற குழந்தையைக் காணோம் என்ற கலவர உணர்வு சற்றே மறைய, ஒரு கொலையைத் தடுக்க அவரைத் தொடர்ந்து வாசலுக்கு விரைந்தாள் கவிதா.

    “இங்கே பாரேன்!”

    வீட்டின் வெளிப்புறத்தில் அகலமும், ஆழமுமான சாக்கடை. அதற்குள், விழிகள் விரிய, குழந்தை!

    அழவும் பயந்து, அசையாமல் உட்கார்ந்திருந்தது.

    அதையே பார்த்துக்கொண்டிருந்த பூனை மீண்டும் கத்தியது.

    “இந்தப் பூனை பலே கில்லாடி! நம்பளைக் கூப்பிடத்தான் அந்தக் கத்து கத்தியிருக்கு! நல்லவேளை, இன்னிக்கு மழை பெய்யலே!”

    மழை பெய்யும்போது, வெள்ளமாக ஓடும் தண்ணீரில் குழந்தை அடித்துக்கொண்டு போயிருக்கும் என்ற நினைப்பே இருவருக்கும் அதிர்ச்சி அளித்தது.

    “நீ இரு. நான் குழந்தையை வெளியே எடுக்கறேன்!” எப்போதும், கால் வலி, இடுப்பு வலி என்று வியாதி கொண்டாடும் கிழவர், அருமைப் பேத்தியைக் காப்பாற்ற சாக்கடைக்குள் இறங்கினார்.

    “குழந்தையை டாக்டர்கிட்ட அழைச்சிண்டு போ. மூஞ்சி, ஒடம்பெல்லாம் சிராய்ச்சிருக்கு! ஒரே ரத்தம்!” என்று கரிசனப்பட்டவர், “அப்படியே அந்தப் பூனைக்கு ஏதாவது ஆகாரம் வாங்கிண்டு வா. பாவம், வாயில்லா ஜீவன்!” என்றார்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 80

    பழகத் தெரிய வேணும் – 80

    நிர்மலா ராகவன்

    மகிழ்ச்சியுடன் வளரவிடுங்கள்!

    அநேகமாக எல்லாருமே ஏதாவதொரு சமயம் குழந்தைகளை வளர்க்கிறோம். பெற்றோராகத்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. அவர்களுடைய சகோதர சகோதரிகளுக்கோ, மூத்த குழந்தைகளுக்கோகூட இப்பொறுப்பு ஏற்படக்கூடும்.

    `இப்படித்தான் இருக்கவேண்டும்!’ என்ற பொதுவான நியதியோ, பாடமோ இதற்குக் கிடையாது. ஏனெனில், குழந்தைக்குக் குழந்தை வளர்ப்புமுறை மாறுபடும்.

    கதை

    ஒரே வயது நிரம்பிய என் முதல் குழந்தையை பணிப்பெண்ணிடம் விட்டுவிட்டு வேலைக்குப் போவது என் வழக்கம்.

    ஒரு நாள், பக்கத்து வீட்டிலிருந்த இளம்பெண், “உங்களிடம் ஒன்று சொல்லவேண்டுமே!” என்ற பீடிகையுடன், “நீங்கள் இல்லாதபோது, குழந்தை அழுதுகொண்டே இருக்கிறது,” என்று தெரிவித்தாள்.

    `இன்னொருவர் குடும்ப நிர்வாகத்தில் தலையிடலாமா?’ என்று தயங்கியிருப்பாள்.

    நான் அவளுக்குத்தான் நன்றி கூற வேண்டும்.

    எனக்கு ஒரே அதிர்ச்சி. எனக்குக் குழந்தைகளை வளர்த்த பழக்கம் கிடையாது. ஆனால், ஒரு குழந்தை சிரித்தபடி, மகிழ்ச்சியுடன் இருந்தால், வளர்ப்புமுறை சரியெனக் கொள்ளலாம் என்றவரை தெரியும்.

    “வீட்டு வேலை முன்னேபின்னே இருக்கலாம். ஆனால், குழந்தைகளை நன்றாகப் பார்த்துக்கொள்ளவேண்டும்,” என்று அடுத்தடுத்த ஆண்டுகளில் வெவ்வேறு பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்தியவுடன், என் எதிர்பார்ப்பைக் கூறுவேன்.

    யாருக்குமே அது புரிந்ததாகத் தெரியவில்லை.

    “நீங்க புத்தகத்திலே போட்டிருக்கிறமாதிரி வளர்க்கணும்னு சொல்றீங்க. அது எப்படி முடியும்? நல்லா அடிச்சு வளர்க்கணும்,” என்று என்னிடம் தப்பு கண்டுபிடித்தாள் ஒருத்தி!

    அவள் வளர்ந்த சூழ்நிலையில், விவரம் தெரியாத பெற்றோர் அப்படிச் செய்ததை, `நாங்க எல்லாம் வளர்ந்து ஆளாகலியா?’ என்று நியாயப்படுத்தலாம். ஆனால், என்னால் அந்த வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    “நாங்க அடிக்கறதில்லே. நீயும் சும்மாச் சும்மா திட்டக்கூடாது,” என்றேன்.

    என்னுடைய இந்த கண்டிப்பால், பணிப்பெண்களை அடிக்கடி மாற்றும்படி நேர்ந்தது. அதனால் எனக்கும் கெட்ட பெயர்!

    பெண்களின் பொறுப்பா?

    பொதுவாக, ஆண்களைவிடப் பெண்களுக்குப் பொறுமை சற்று அதிகம். அதனால், குழந்தை வளர்ப்பு அவர்களுடைய வேலை என்றாகிவிட்டது.

    வெளிவேலைக்குப் போகாத நாட்களில், அவர்கள்தாம் அதிக நேரத்தைக் குழந்தைகளுடன் செலவிட வேண்டியிருந்தது மற்றொரு காரணம்.

    பொறுப்பிலிருந்து தப்பிக்கவோ, மனைவிக்கு மரியாதை கொடுப்பதாக நினைத்துக்கொண்டோ, இன்றும் பல ஆண்கள் இந்தக் கடமையை அவளிடம் விட்டுவிடுகிறார்கள்.

    தந்தை அதிகம் படித்தவராகவும், தாய் படிக்காதவளாக, காலத்துடன் ஒன்றிப்போகத் தெரியாதவளாகவும் இருந்தால்?

    கதை

    அரசாங்கத்தில் உயர்தர உத்தியோகத்திலிருந்தார் ரம்லான்.

    அவர் மணக்கச் சரியானவள் என்று அவருடைய தாய் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்திருந்தாள்.

    அவருக்கென்று எந்த விருப்பு வெறுப்பும் இருக்கவில்லை.

    நான்கு குழந்தைகளுக்குப் பின்னர், “என் குழந்தைகள் ரொம்ப வீக்!” என்று அங்கலாய்ப்பார், என்னிடம்.

    ரம்லான் செய்த தவறு, குழந்தைகளை வளர்ப்பதை முழுமையாக மனைவி அயினியிடம் ஒப்படைத்ததுதான்.

    குழந்தைகள் விஷயத்தில் அவள் என்ன செய்தாலும், அதில் தான் தலையிட்டால், அவளை அவமரியாதையாக நடத்துவதுபோல் ஆகிவிடும் என்றெண்ணி நடந்திருக்கிறார்.

    அவளோ, அதிகம் படிக்காத பட்டிக்காட்டுப் பெண். அன்புக்குப் பதில் அதிகாரம் செலுத்துவாள்.

    “பண்டிகைக்கு என் மகளுக்கு பத்து உடைகள் தைத்தேன்!” என்று அயினி அலுத்துக்கொண்டபோது பிரமித்தேன்.

    ஒன்றோ, இரண்டோதான் வாங்குவார்கள். எதற்காக அத்தனை?

    “என் மகள், `ஒனக்கு நான் ஒரே பொண்ணுதானேம்மா? இவ்வளவு கருமியா இருக்கியே!’ என்று சொல்லிச் சொல்லி வாங்கவைத்தாள்!”

    பதினைந்து வயது மகள் தாயை மரியாதை இல்லாது பேசியபோது அவளைக் கண்டிக்கத் தெரியவில்லை தாய்க்கு.

    ஒரு முறை, அயினி சில நாட்கள் வெளியூருக்குச் செல்ல நேரிட்டது.

    மூத்த மகனிடம், “தங்கை, தம்பிகள் வீட்டுப்பாடம் ஒழுங்காகச் செய்கிறார்களா என்று பார்த்துக்கொள். தெரியாவிட்டால், சொல்லிக்கொடு,” என்று சொல்லிவிட்டுப் போனாளாம்.

    திரும்பி வந்தபோது, அவள் கூறியது எதையுமே செய்திருக்கவில்லை அவன்.

    “எல்லாரும் கூட்டு சேர்ந்துகொண்டு, எனக்கு எதிராக வேலை செய்கிறார்கள்!” என்று என்னிடம் பிரலாபித்துவிட்டு, அழ ஆரம்பித்தாள் அயினி.

    சிறிது காலமாவது, அம்மாவின் கண்டிப்பும் அதிகாரமும் இல்லாமல் இருக்கலாமே என்று குழந்தைகளை அவர்கள் போக்கில் விட்டிருக்கிறான் அண்ணன்.

    நான் சிரிப்பை அடக்கிக்கொண்டு, “விடு! எல்லாக் குழந்தைகளும் அப்படித்தான்!” என்று சொல்லிவைத்தேன்.

    ஒத்த மனம்

    தாய், தந்தை இருவரும் வளர்ப்புமுறை இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதில் ஒரே கருத்து கொண்டவர்களாக இருக்கவேண்டும்.

    மகிழ்ச்சியான குடும்பத்திலிருந்து வந்தவரின் வழிகாட்டலைப் பின்பற்றுவது புத்திசாலித்தனம்.

    எந்தக் குழந்தை புத்திசாலி?

    இப்போதெல்லாம், சினிமாத்தனமாக, வயதுக்குமீறி பேசும் குழந்தைகளை `smart” என்று கொண்டாடுகிறார்கள்.

    அவர்கள் வளர்ந்தபின், `மரியாதை இல்லாமல் நடக்கிறாள்!’ என்று பிறர் பழிக்கும்போது, வருந்துவது என்னவோ பெற்றோர்தாம்.

    ஏன் மரியாதை இல்லை?

    கதை

    சாதாரணமாக, நல்ல குடும்பத்திலிருந்து வந்த மலாய் மாணவிகள் மிகவும் பணிவாக இருப்பார்கள். ஆசிரியை திட்டினால், அழுகை வரும் — அவ்வளவு மென்மையானவர்கள்.

    ஆனால், கமாரியா எப்போதுமே என்னிடம் மரியாதையின்றி பேசுவாள்.

    எங்கள் பள்ளியிலேயே ஆசிரியையாகப் பணிபுரிபவள்தான் அவளுடைய தாய் என்று அறிந்தபோது, ஆச்சரியமாக இருந்தது.

    “உன் மகள் ஏன் இப்படி இருக்கிறாள்?” என்று எங்களில் பலரும் அவளைச் சாட, “என் காலத்தில் மிக அடக்கி வளர்க்கப்பட்டோம். மூத்தவர்களுடன் பேசவே பயமாக இருக்கும். மகளும் அப்படி பயந்து வளரக்கூடாது என்று அவள் போக்கில் விட்டேன்,” என்றாள், வருத்தத்துடன்.

    பதினைந்து வயதில் எந்தப் பெண்ணும் சற்றுத் திமிறுவாள். இப்படிப்பட்ட மகளை இனி எப்படி அடக்குவது!

    ஓயாது சண்டைபோடும் பெற்றோர்

    கதை

    தாய் தந்தையருக்குள் எப்போதுமே வாக்குவாதம் நடந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், மெல்வின் தனித்து உணர்ந்தான். புத்தகங்களில் ஆழ்ந்து, நிகழ்காலத்தை மறக்க எண்ணினான். ஆனாலும், அவனுடைய உடல்நிலை கெட்டது. படிப்பிலும் சோடை.

    “உங்களால்தான் அவனைத் திருத்தமுடியும்!” என்று, என்னிடம் படிக்க அனுப்பினார்கள்.

    நான் எவ்வளவோ முனைந்தும், மெல்வின் படிப்பில் முன்னேறவில்லை. அவன் வந்துவிட்டுப் போகும்போதெல்லாம் வருத்தத்தில் ஆழ்ந்திருப்பேன்.

    “குழந்தைக்கு உங்களிடம் வருவதற்கு மிக்க மகிழ்ச்சி. துள்ளிக்கொண்டு வருகிறான்!” என்று தந்தை தெரிவித்தபோது, வியப்பாகத்தான் இருந்தது.

    அவன் நல்லபடியாகத் தேறியது எனக்கே ஆச்சரியம் அளித்தது.

    அவனுடைய தங்கையோ, மரியாதையில்லாமல், ஆசிரியைகளையும் எதிர்த்துப் பேசுவாள்.

    இன்னொருவருடன் ஒத்து வாழமுடியாது, திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து வாங்கினர்.

    பெற்றோருக்குக் காலம் கடந்தபின்தான் புரிந்தது தாங்கள் எங்கு தவறிழைத்தோம் என்று. (நான் குழந்தை வளர்ப்பைப்பற்றித் தொடராக எழுதியதைப் படித்துவிட்டு, அவர்கள் கூறியது).

    கொடுமை செய்யும் பெற்றோரை உடைய குடும்பங்களிலோ, மகள் தந்தையைப் போன்றவனைக் கணவனாகத் தேர்ந்தெடுப்பாள்

    மகன் தந்தையை முன்னுதாரணமாக நினைத்து நடப்பான்.

    பணிப்பெண்களால் வளர்க்கப்படும் குழந்தைகள்

    கதை

    சாயங்கால வேளைகளில், பெற்றோர், பாட்டிகள் சகிதம் குழந்தைகள் எங்கள் வீட்டருகே இருந்த மைதானத்தில் விளையாட வருவார்கள். ஆனால், நோர்மாவின் பெற்றோரை நாங்கள் யாரும் பார்த்ததில்லை.

    அவளை எந்நேரமும் பார்த்துக்கொண்ட பணிப்பெண் மஸ்னாவிடம் (MAZNAH) அடியும், திட்டும் வாங்கினாள் நோர்மா. `அடி’ என்றால், பெயருக்கு முதுகில் ஒரு தட்டு இல்லை.

    “ஒருவயதுக் குழந்தையை எதற்கு இப்படி அடிக்கிறாய்?” என்று, நானே மஸ்னாவைக் கண்டித்திருக்கிறேன்.

    “உங்களுக்குத் தெரியாது, ஆன்ட்டி. இவள் ரொம்ப நாட்டி!” என்பாள்.

    நோர்மாவுக்குப் பத்து வயதானபோது, எல்லாக் குழந்தைகளும் விளையாடிக்கொண்டிருக்க, “வீட்டுக்குப் போகலாம்,” என்று உத்தரவு பிறப்பித்துவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து இழுத்தாள் பணிப்பெண் மஸ்னா.

    அவள் மறுக்க, தலைமுடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்தாள். சிறுமி கதற, அதைப் பார்த்த ஒரு சிறுவன் பெரிதாக அழ ஆரம்பித்தான்.

    தூரத்தில் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருந்த என்னால் பொறுக்க முடியவில்லை. அங்கு விரைந்து, “விடு அவளை!” என்று இரைந்தேன்.

    அவளுடைய வீட்டிற்குச் சென்று, நோர்மாவின் தாயிடம் வருடக்கணக்கான வதையை விரிவாகக் கூற, அவள் அதிர்ந்தாள்.

    சற்று வளர்ந்தபின்னரும், நோர்மா பலியாடுபோல் இன்னொரு பணிப்பெண்ணைத் தொடர்வதைப் பார்த்தேன்.

    `இவளுக்குக் குழந்தைகள் பிறந்தால், அவர்களிடம் இவளால் அன்பு செலுத்த முடியுமா?’ என்று என் யோசனை போயிற்று.

    என்னதான் தத்து எடுத்த பெண்ணானாலும், நிலைமை அவ்வளவு மோசமாகும்வரை வளர்ப்புப்பெற்றோர் விட்டிருக்கலாமா?

    Share
  • பழகத் தெரிய வேணும் – 79

    பழகத் தெரிய வேணும் – 79

    நிர்மலா ராகவன்

    யார் விவேகி?

    “எனக்கு நிறைய நண்பர்கள்!” என்று சிலர் மகிழ்ச்சியும் பெருமையும் பொங்கக் கூறுவார்கள்.

    `நண்பர்கள்’ என்று நாம் நினைப்பவர்களில் எத்தனைபேருக்கு நம்மை நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது?

    ஒன்றாக வாழும் தம்பதியருக்கே அத்தகைய புரிந்துணர்வு பெற இருபது ஆண்டுகள்கூடப் பிடிக்கலாம். ஏனெனில், தான் நினைப்பதுபோல் மற்றொருவரும் நினைக்கவேண்டும், தனக்குப் பிடித்ததைச் செய்யவேண்டும் என்று இருவரும் நினைத்துக்கொண்டிருப்பார்கள்.

    `நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேசவேண்டும்’ என்பது கைகூடாத ஆசையாக முடிந்துவிடும். பாட்டில் கேட்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா?

    ஒரே குடும்பத்தினர் ஆனாலும், சகோதர சகோதரியர்கூட குணத்தால், அனுபவத்தால் ஒன்றுபட்டிருப்பார்களா?

    கதை

    மூத்த மகளை அவளுடைய தாய் ஓயாமல் திட்டுவாள். தந்தை அவளிடம் பாசமாக இருந்தது அவள் பொறாமையைத் தூண்டிவிட்டதோ, இல்லை, எல்லாவற்றிற்கும் மகள் தன்னை நாடவில்லையே என்ற ஆற்றாமையோ!

    தாயின் வசவுக்குப் பயந்த இளையவள் சாரதாவோ, அம்மாவின் நிழலாக நடந்தாள். தாய் சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதுபோல் நடந்துகொண்டாள்.

    பெரியவளாகப் போனதும், தன்னைச் சுந்திரமாக நடக்கவிடாமல் செய்துவிட்ட தாயின்மேல் வெறுப்பு எழுந்தது.

    தாய் இறந்தபின், அக்காளைப் பார்த்து சாரதாவுக்கு ஆச்சரியம். “நீ எப்படி அம்மாமேல் ஆத்திரப்படாமல் இருக்கிறாய்? நீ திட்டு வாங்கும்போதெல்லாம், மாற்றாந்தாய் குழந்தையோ என்றுகூட நினைப்பேன்!”

    “அப்பா நிறைய செல்லம் கொடுத்தார். அம்மாவும் அப்படி இருந்திருந்தால், நான் கெட்டுப்போயிருப்பேனோ, என்னவோ! இப்போது, யார் என்னைத் திட்டினாலும், அவர்கள் ஏன் அப்படி நடக்கிறார்கள் என்று என் யோசனை போகிறது”.

    ஒரே அனுபவம்தான். ஆனால், சகோதரியர் இருவரும் அதைப் புரிந்துகொள்ளும் விதம் வித்தியாசமாக இருந்தது.

    பிறர் நம்மைக் காயப்படுத்தினாலும், அவர்கள் ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று ஆராய்வதுதான் விவேகம். அப்போதுதான் நாமும் அதேபோல் நடந்து, அவர்களைத் துன்புறுத்தமாட்டோம். அவர்கள் நம்மிடம் காட்டாத பொறுமையையும் மென்மையையும் பதிலாக அளிக்கமுடியும்.

    எச்சரிக்கை: கணவன்மாரிடம் வதைபடும் பெண்கள் பொறுமையாக நடந்தால், வதை அதிகரிக்கும்.

    சிறுவயதில் ஒருவர் எத்தனை கஷ்டங்களை அனுபவித்திருந்தாலும், மனைவியையும் அதேபோல் பாடுபடுத்த வேண்டும் என்று எண்ணுவது இயற்கை. இருந்தாலும், தவறுதான்.

    ஒரு பெண் எவ்வளவுதான் உறுதுணையாக இருந்தாலும், அவள் உதவியை நாடும் சிலர் அதைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு உதவி செய்துகொண்டே இருப்பது வீண்.

    கதை

    கணவரிடம் உடல்ரீதியாக வதைபட்ட பெண்கள் காவல்துறையினரால் அனுப்பப்பட்ட இல்லம் அது. கோலாலம்பூரில் உள்ளது. அவர்களுக்கு சட்ட ரீதியான ஆலோசனை, அவரவர் மத வழிபாடு எல்லா வசதிகளும் உண்டு.

    கிட்டத்தட்ட உயிர்போகும் நிலைக்கு வந்தவர்கள் சிலர் மீண்டும் கணவருடன் போய்விடுவார்கள்.

    “அழுவறாருங்க. பாவமா இருக்கு!” இருபத்தேழு ஆண்டுகள் வதைபட்ட பெண்மணி என்னிடம் கூறியது.

    அவள் பக்கத்தில் இருந்தவள் லேசாகச் சிரித்தபடி, முட்டியை இறுக்கி, அவள் முகத்தில் குத்துவதுபோல் பாவனை செய்தாள்.

    இவ்வாறு, மூன்று முறை தம் வீட்டுக்கே சென்றுவிட்டபின், திரும்பவும் பாதுகாப்பான அந்த இல்லத்திற்கு வர அனுமதி கிடையாது.

    பெண்களுக்கு இரக்க சுபாவம் இருக்கலாம். ஆனால், சற்று விவேகம் வேண்டாமா?

    நான்தான் விவேகமானவன்

    என்னைப்போல் இல்லாதவர்கள் முட்டாள்கள்!

    கதை

    ஒரு விமரிசகர் இசைத்துறையில் முன்னணியில் இருந்த பாடகியை விமரிசனம் செய்தார்: `தனக்கென ஒரு பாணியை வகுத்துக்கொண்டு, அதிலிருந்து சற்றும் விலகமாட்டார்!” என்று, அது ஒரு பெரிய குறைபாடு என்பதுபோல் எழுதியிருந்தார்.

    பாடகியின் முழுத்திறனையும் புரிந்துகொள்ளும் இசைஞானம் அவருக்கு இருக்கவில்லை. குறையைத் தன்னிடம் வைத்துக்கொண்டு, பிறரைக் குறைகூறினார்.

    இன்னொருவரிடம் குற்றம் கண்டுபிடிப்பதால் தான் மிகப் புத்திசாலி என்று நினைப்பவர்கள் பிறரிடமிருந்து விலகிவிடுகிறார்கள்.

    இவர்களது குணம் புரிந்து, `திருத்தி’க்கொள்ள முயற்சிக்காமல் இருப்பதுதான் விவேகம்.

    “பிறரைப் புரிந்துகொள்வது அறிவு. தன்னையே புரிந்துகொள்வது விவேகம்” (சீனத் தத்துவஞானி, லாவோஜி, LAOZI).

    எனக்குப் புரிகிறது

    இந்த இரு வார்த்தைகளுக்கும் நல்ல சக்தி உண்டு.

    ஒருவர் நம்மைத் தாக்கும்போது, “உங்கள் உணர்ச்சி எனக்குப் புரிகிறது,” என்று சொல்லிவைத்தால், அவர் அடங்கிவிடுவார். உண்மையில் அது நமக்குப் புரிகிறதா, இல்லையா என்பது வேறு விஷயம்.

    உற்றவரை இழந்து தவிப்பவர்களிடம் ஆறுதலாக எல்லாரும் சொல்வார்கள்: “உங்கள் துக்கம் எனக்குப் புரிகிறது”.

    இந்தப் போலித்தன்மையால் துக்கப்பட்டிருப்பவர்களின் மனதை ஆற்ற இயலுமா?

    ஒருவர் தானே அனுபவித்தால்தான் துன்பமோ, துயரமோ புரியும். பிறரும் அதே நிலையில் இருக்கும்போது, உண்மையாக ஆறுதல் கூறமுடியும்.

    “இறைவன் நமக்குக் கஷ்டங்களைக் கொடுப்பது நாம் பிறரது கஷ்டங்களைப் புரிந்துகொள்வதற்குத்தான்!” (மகாத்மா காந்தி).

    இதற்கு விதிவிலக்கானவர்களும் உண்டு.

    ஒரு கவுன்சிலர் பிறரது மனநிலையில் தன்னைப் பொருத்திக்கொண்டு, அவர்கள் மனம்விட்டுச் சொல்வதை உள்ளபடி புரிந்துகொள்கிறார். அதாவது, அவரது எதிர்பார்ப்போ, பின்னணியோ குறுக்கிடுவதில்லை.

    அவருக்கு அதே அனுபவம் கிடைத்திருக்காவிட்டாலும், பிறருடைய மனதைப் புரிந்துகொள்ள முடிகிறது. வெகு சிலரால்தான் இப்படி நடக்கமுடியும்.

    அவரிடம் தம் குறைகளைச் சொல்ல வருகிறவர்கள் அவரது புரிந்துணர்வால் நெகிழ்ந்து போய்விடுகிறார்கள். `காதல்’ என்று அதை எண்ணிவிடுவார்கள்!

    அறிவான பிராணிகள்

    பேசத் தெரியாவிட்டாலும், தன்னை வளர்ப்பவர்களின் உணர்ச்சியைப் புரிந்துகொள்கின்றன இல்லத்தில் வளையவரும் பிராணிகள்.

    எங்கள் வீட்டுப் பூனை, நாள் முழுவதும், என் காலைத் தடுக்காத குறையாக என்கூடவே நடக்கும். சிறு வயதிலேயே தாயிடமிருந்து பிரிந்துவிட்டதால், நான்தான் அதன் அம்மா.

    ஒரு காலைப்பொழுதில், “குறுக்கே, குறுக்கே நடக்காதே! தூக்கக்கலக்கத்தில் நான் விழுந்து வைக்கப்போறேன். ஒரு ஓரமா ஒக்காரு!” என்று கண்டித்தேன்.

    உடனே புரிந்துகொண்டு, சுவரில் சாய்ந்து உட்கார்ந்துகொண்டது. எனக்கே பரிதாபமாகிவிட்டது.

    மறுநாள் சொல்லிவைத்தாற்போல், தானே அந்த இடத்தில் உட்கார்ந்துகொண்டது, நான் அங்கும் இங்கும் நடக்க சௌகரியமாக.

    எத்தனை மனிதர்களுக்குப் பிறர் உணர்ச்சிகளைப் புரிந்து நடக்கும் திறமை இருக்கிறது?

    அடுக்கடுக்காகக் கேள்வி கேட்பது

    சிலர் கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். எதிராளியின் பதிலைக் காதில் வாங்கிக்கொள்ளுமுன், அடுத்த கேள்வி வந்துவிடும்.

    கேள்வி கேட்பது புத்திசாலித்தனம் என்று நினைத்திருப்பார்கள்! ஒருவர் கேட்கும் கேள்விகளாலேயே அவரது அறிவுகூர்மை வெளிப்பட்டுவிடும்.

    எத்தகைய கேள்விகள் கேட்கிறோம், அதனால் யாருக்காவது பயன் இருக்கிறதா என்பது முக்கியம்.

    நிதானம் தவறாதே!

    “உங்கள் மகன் இறந்துவிட்டான் என்பது உறுதியானதும், என்ன செய்தீர்கள்?” என்று என் நெருங்கிய தோழி ஒரு கேள்வி கேட்டாள்.

    “`அவன் கண்களைத் தானம் கொடுத்துவிடலாமா?’ என்று என் கணவரைக் கேட்டேன்,” என்று நான் பதிலளித்ததும், “ஐயோ!” என்று அதிர்ந்தாள்.

    எந்த சூழ்நிலையிலும் நிதானம் தவறாது இருப்பவர்கள் பிறரது அச்சத்திற்கு – பாராட்டுக்கல்ல – ஆளாகிறார்கள். அதற்காக நிதானம் இழக்கலாமா?

    வெற்றி கிடைக்க

    `எனக்கு வெற்றி கிட்டுவதேயில்லை. யாரும் ஊக்குவிப்பதில்லை’. பலரின் புலம்பல் இது.

    வெற்றியும் தோல்வியும் அவரவர் கையில்தான் இருக்கிறது.

    நாம் நன்றாக இருக்கவேண்டும் என்பதில் நம்மைவிட யாருக்கு அதிக அக்கறை இருக்கமுடியும்?

    பிறரது பாராட்டையோ, புகழையோ எதிர்பார்த்து ஒரு காரியம் செய்து அடையும் மகிழ்ச்சி நீடிக்காது.

    நாம் எதை அடையவேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அதை நோக்கிப் பயணிப்போம், நம்மையும் அறியாமல். ஆனால், அது நம் திறமைக்குட்பட்டதாக, நியாயமான வழிகளில் இருக்கவேண்டும்.

    கதை

    பதின்ம வயதினனான அவன் ஒரு குண்டர் கும்பலில் இணைந்திருந்தவன்.

    மிகுந்த பிரயாசைக்குப்பிறகு நான் அவனைப் பேட்டி கண்டேன்.

    சிரித்தபடி, இக்கருத்தை என்னிடம் வெளியிட்டான் மூன்று கொலைகள் புரிந்திருந்த அப்பையன்: “சாகப்போகிறோம் என்று புரிந்ததும், ஒருவர் கண்ணில் தோன்றும் பயம் இருக்கிறதே, அப்போது எனக்குக் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு ஈடே கிடையாது!”

    சொல்லும்போதே அவன் கண்கள் கிறங்கியிருந்தன. நான் அதிர்ந்தே போனேன்.

    மகிழ்ச்சி தரும் காரியமெல்லாம் வெற்றி என்பதல்ல, தான் தேர்ந்தெடுத்த பாதை தவறானது என்று உணர்ந்தபின், அதிலிருந்து விலகும் விவேகம் அவனுக்கு இருந்தது.

    அவனுக்குள் இருந்த முரட்டுத்தனத்தை விளையாட்டுகளின்மூலம் வெளியிடக் கற்றான்.

    பிறரைப் பயமுறுத்துகிறவர்கள் பயந்தவர்கள் என்று புரிந்தால், பலரும் அநாவசியமாக அஞ்சத் தேவையில்லை.

    Share