நிர்மலா ராகவன்

கற்பனையால் நனவாக்கலாம்

உலகப்புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் ஒரு பயிற்சியைத் தொடங்குமுன், அதை எவ்வளவு சிறப்பாகச் செய்யப்போகிறோம் என்று மனக்கண்ணால் பார்க்கிறார்கள்.

குறிப்பிட்ட சூழ்நிலையில், எந்தத் தருணத்தில் எப்படி விளையாடலாம் என்று மெதுவாக – அது அப்போதே நடப்பதுபோல் — மனக்கண்ணால் பார்க்கிறார்கள்.

ஆனால், வெறும் கனவுடன் நிற்காமல், அதைச் செயலில் காட்டுகிறார்கள். செயல் முக்கியம்.

அதன்பின் சிறுகச் சிறுக தம் எதிர்பார்ப்பை உயர்த்திக்கொண்டே போய்த்தான் வெற்றி அடைகிறார்கள்.

“விளையாட்டு என்பது 10% உடலுழைப்பு, மீதி 90% மனத்தளவில்”.

அவர்களுக்கு நாம் சளைத்தவர்களா! எதை அடைய ஆசைப்படுகிறோம் என்பதை மனக்கண்ணால் பார்த்தால், அப்படியே நடக்கும்.

சாதாரணமான கல்லெனப் பிறர் காண்பதில், சிற்பிகள் உருவம் அமைக்கிறார்களே, எப்படி?

ஒன்றைக் கற்பனை செய்து பார்க்கையில், அது எதிரில் இருப்பதுபோன்றே வண்ணம், உரு எல்லாம் அவர்களுக்குக் காணப்படுகிறது.

சில பொருட்களோ, மனிதர்களோ நம் எதிரே இல்லாது, அவற்றை நாம் உணரமுடியாதபோதும், அவை இருப்பதாகக் கற்பனை செய்வது முதல் படி.

அதன்பின்னர், நமக்கு உகந்தவாறு, நன்மை பயக்குமாறு ஆழ்ந்த கற்பனையில் ஈடுபட்டு, மனக்கண்ணால் இப்போது நடப்பதைப்போல் பார்ப்பது அப்படியே பலிக்கும்.

கதை

என் மகன் சிறு குழந்தையாக இருந்தபோது, நான் அரங்கில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்போது, தன்னிச்சையாக இரு கை முழங்கைகளும் ஒன்றை ஒன்று பிடித்து லேசாக ஆட்ட, முதலில் ஆச்சரியம். பிறகு புரிந்தது: `குழந்தை அழுகிறது!’

இடது கரத்தை லேசாகத் தடவிவிட்டுத் தட்டிக்கொண்டேன். `தூங்கு. தூங்கு!’

அதன்பின், என் மனம் சமாதானம் அடைய, அழுகை நின்றுவிட்டது என்று தோன்றிப்போயிற்று.

வீட்டுக்குள் நுழைந்தபோதே, “அம்மா! குழந்தை ஓயாம அழுதது. என்ன பண்ணினாலும், அழுகை நிக்கவே இல்லே. திடீருன்னு, மேஜிக் போட்டமாதிரி, தூங்கிப்போயிடுத்து!” என்று, மாறி, மாறி விவரித்தார்கள் என் பெண்கள்.

நோய்வாய்ப்படும்போது

நோயைப் பற்றிச் சிந்திக்காது, பிடித்த விஷயங்கள் நடப்பதுபோல் மனக்கண்ணால் பார்த்தால், நோயின் கடுமை நம்மை பாதிக்கவிடாது, நல்ல உணர்வுகளை எழுப்பலாம்.

ஒரு முறை, நான் மருத்துவ மனையில் நான்கு தினங்களைக் கழிக்க வேண்டியிருந்தபோது, என்னைச் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை ஆர்வத்துடன் கவனித்தேன். நல்ல கதைக்கான கரு ஒன்று கிடைத்தது.

பூனைகளுக்குத் தகவல்

அப்போது, `தினமும் காலையில், நாம் வளர்க்கும் பூனைகளுக்கு ஆகாரம் போடுவோமே!’ என்ற எண்ணம் எழ, அவை இப்போது எப்படி இருக்கின்றனவோ என்ற உணர்வு எழுந்தது.

வேறு யாராவது ஆகாரம் போட்டிருப்பார்கள். ஆனால், அவை விசுவாசம் நிறைந்தவை என்பதால் கவலை.

நான் நினைத்தபடியே ஆயிற்று.

ஒரு பூனை நான் எப்போதும் உட்கார்ந்து புத்தகம் படிக்கும் நாற்காலியைவிட்டு எழுந்திருக்கவே இல்லை; ஊர் சுற்றிவிட்டு, சாப்பிடும் நேரத்துக்கு மட்டும் திரும்பும் இன்னொன்றோ, வீட்டைவிட்டு நகரவே இல்லை என்று பிறர் சொல்லக் கேட்டேன்.

பிராணிகளுக்குக் கடிதமா போடமுடியும்!

“நான் சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடுவேன். எப்போதும்போல் இருங்கள்!” என்று அவற்றிற்குத் தகவல் அனுப்பினேன் – மானசீகமாக.

அவர்களுக்கு அது கேட்டிருக்கவேண்டும். பழையபடி நடந்துகொண்டதாம்.

வெளியூர்களுக்குப் போக வழியின்றி, உற்றவர்களையும் பார்க்கமுடியாது பலரும் தவிக்கும் இக்காலத்தில் மன இறுக்கத்தால் தவிக்காது இருக்க ஒரு நல்ல வழி: ஒரு தோட்டத்தில் இருக்கிறோம். மலர்களின் மணம், வண்ணம், வண்டுகளின் ரீங்காரம் போன்றவற்றை கற்பனையில் அனுபவித்தால், வாழ்க்கை இனிமையாகவே இருக்கும்.

ருசி

ஒரு கதைமாந்தர் உண்ணும்போது ஏற்படும் ருசியை ஆசிரியர் வர்ணித்திருந்தால், ஆழ்ந்து படிப்பவர்களுக்கும் தாமே ருசிப்பதுபோல் இருக்கும். நாவில் நீர் சுரக்கும்.

சமையல் குறிப்புகளைப் படிக்கும்போதோ, கணினித் திரையில் பார்க்கும்போதோ ஆர்வம் எழுந்து, நாமும் அந்தப் பலகாரத்தை செய்ய ஊக்கம் எழுவது இதனால்தான்.

துணுக்கு

ஒட்டகம் வேப்பிலையைத் துண்ணுமாம்.

ஐயோ! கஸ்க்குமே!

அதுக்கு நீ ஏன் மூஞ்சியை அப்படி வெச்சுக்கறே? நீயா துண்ணப்போறே?

கதைக் கரு

சில வரிகளே கொண்ட செய்தியைப் படிக்கும்போது, அது தம் எதிரில் அப்போதுதான் நடப்பதுபோன்ற உணர்வு எழும். அதைக் கதையாக விரிவாக்குகிறார்கள் எழுத்தாளர்கள்.

இம்மாதிரியான கற்பனைகளால் நினைவாற்றல் அதிகரிப்பதும், நிம்மதி கிடைப்பதும் உபரிப் பயன்.

ஒரு விலாசத்தையோ, தொலைபேசி எண்ணையோ நினைவில் பதித்துக்கொள்ள திரும்பத் திரும்பச் சொல்லிப்பார்த்துக்கொள்ள வேண்டியதில்லை. அவற்றை ஒரு கரும்பலகையில் எழுதியிருப்பதுபோல் கற்பனை செய்தால், அது மனதில் பதிந்துவிடும்.

நான் கல்பனாஸ்வரம் போட ஆரம்பித்த கதை

எனது இசை ஆசிரியர் முதன் முறையாக, ஒரு பாட்டிற்கு ஸ்வரம் அமைக்க ஊக்குவித்தார். நான் எவ்வளவோ முயன்றும், முடியவில்லை.

அவர் கோபிக்கவோ, கேலி செய்யவோ இல்லையாயினும், எனக்கு ஏமாற்றமாகிவிட்டது.

இரவு தூங்குமுன், நம்மைக் குழப்பும் ஏதாவதொரு கேள்வியை மனதில் எழுப்பினால், காலையில் பதில் தெரிந்துவிடும்.

அன்றிரவு, நான் கேட்ட ஒரு சில பிரபல பாடகர்கள் எப்படிப் பாடினார்கள் என்று நினைவில் கொண்டுவந்து, அதேபோல் நானும் பாடுவதாகக் கற்பனை செய்தேன்.

மறுநாள் வகுப்பில் ஸ்வரங்கள் பொழிய, “ராத்திரி பூராவும் இதையே நினைச்சுண்டு இருந்தியாம்மா?” என்று அதிசயப்பட்டுக்கேட்டார் ஆசிரியர்.

பெருமையுடன் தலையாட்டினேன்.

நம் எண்ணங்களும், வார்த்தைகளும் பலித்துவிடும். ஆதலால், நல்லதையே நினைக்கவேண்டுவது அவசியம்.

ஒரு காரியத்தை ஆரம்பித்துவிட்டு, அதை எப்படி முடிப்பது என்று தெரியாமல் திணறும்போது, நல்லதொரு முடிவைக் கற்பனையால் கண்டால், அது நனவாகும்.

கதை

சுமார் நாற்பது ஆண்டுகளுக்குமுன், நாடு தழுவிய ஆங்கிலச் சிறுகதைப்போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கு முந்தைய வருடம், “அடுத்த வருடம் எனக்கு ஒரு பெரிய பரிசு கிடைக்கப்போகிறது!” என்று என் கணவரிடம் சொன்னேன்.

அப்போது ஆங்கிலத்தில் பெரிதாக எதுவும் எழுதும் துணிச்சலும் இருக்கவில்லை.

எப்படிப்பட்ட கதைகள் எழுதுவது என்ற கேள்விகள் எழ, ஒரு வருடம் முழுவதும், வாரத்தில் மூன்று நாட்கள் கோலாலம்பூரில் இருந்த அமெரிக்க வாசகசாலைக்குப் போய் ஆராய்ச்சி செய்தேன்.

அடுத்த வருடம், போட்டி அறிவிக்கப்பட்டதும், பரிசுப்பொருளான கடிகாரம் என் கவனத்தை ஈர்க்க, அப்படத்தைத் தொட்டேன். எனக்குள் உறுதி: `நான் இதை வாங்குவேன்!’

அதன்பின், அரைமணியில் ஒரு கதை எழுதினேன். கரு பரவாயில்லை. நடை சுமார்தான் என்று தோன்ற, ஒரு வாரம் கழித்து, யாருடைய கதையையோ படிப்பதுபோல், திருத்த ஆரம்பித்தேன். பல முறை திருத்தினேன்.

நான் விரும்பிய அதே பரிசு என் கைக்கு வந்தது.

அந்தக் கடிகாரம் இரண்டாவது பரிசுக்கு, முற்றிலும் தங்கத்தால் ஆனது என்பதையெல்லாம் நான் கவனிக்கவில்லை. அணிவதில் ஆர்வமும் இருக்கவில்லை.

`என்னால் ஆங்கிலத்திலும் எழுத முடியும்!’ என்ற நம்பிக்கைதான் மகிழ்ச்சி அளித்தது.

மனம் செய்யும் மாயம்

அண்மையில், தொற்றுநோய்க்காக இரண்டாவது முறைக்கான தடுப்பூசி போட்டுக்கொண்டாள் என் பேத்தி. இரண்டு நாட்களுக்குப்பின், கல்லூரியில் ஒரு முழுப்பரீட்சை.

முதன்முறை, ஏதேதோ பக்கவிளைவுகள்.

ஒரு மாதத்திற்குமுன்னரே நான் கூறினேன், “தினமும் தூங்கப்போறதுக்குமுன்னாடி, `எனக்கு இந்தத் தடவை ஒரு பக்கவிளைவும் இருக்காது. சுலபமாக, நன்றாகப் பரீட்சை எழுதுவேன்!’னு மனசுக்குள்ளே நினைச்சுக்கோ,” என்றேன்.

அவள் எண்ணியபடியே நடந்தது அவளுக்குப் பெரும் மகிழ்ச்சி.

`நமக்கு நல்லது நடக்கும்!’ என்ற நம்பிக்கையுடன் கற்பனை செய்தால், கண்டிப்பாக நாம் விரும்பியது நடக்கும்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *