Author: கனவு திறவோன்

  • ஜன்னல் நிழல்

     

    -கனவு திறவோன்

     

    மீண்டும் மீண்டும்
    கேமராவைப் பாருங்கள்
    என்று போட்டோகிராபர்
    கூறிக் கொண்டிருக்க
    நான்
    ஜன்னலில் ஆடிய
    அவளது நிழலைப்
    பார்த்துக் கொண்டிருந்தேன்.
    போட்டோ பிரிண்ட்
    பார்த்தவர்கள் பார்வை
    ஜன்னலை நோக்கித் திரும்பியது
    சுவாதினமில்லாமல்

     

     

    Share
  • மணல் – மழை – அவன்

    கனவு திறவோன்

     

    மணல் கொள்ளை

    நதியை உலர்த்தி
    லாரியில்
    கடத்துகிறார்கள்
    வழியெங்கும் வெள்ளம்

    *

    மழை

    மேகத்தைச் சுமந்து
    களைத்த
    வானத்துக்கு
    வியர்த்தது

    *

    அகல்

    விளக்கைத் தேடி வந்து
    விட்டில்கள் விழுவது
    இயல்புதானே?
    ‘அகல்’ என்கிறாய்
    எங்கே போவேன்?

    *

    அவன்

    வாசிப்பதற்கு
    வரமாக வாங்கி
    வாசிக்காமல்
    மறந்து விட்ட
    சாபக்கவிதை

    – கனவு திறவோன்

    Share
  • எனக்கான நேரமில்லை!

    -கனவு திறவோன்

    என் நேரத்தைக் கேட்கிறாயே
    என்ன செய்வேன்?
    கவிதையைக் கேட்டிருந்தால்
    தந்திருப்பேன்!

    நீ வாழும் என் சரிதம்
    அது மட்டும்தான் என்பதால்
    ஊருக்கே காட்டுகிறேன்
    உனக்குத் தர மாட்டேனா?

    என் மன வானத்தைக் கேட்டிருந்தால்
    தந்திருப்பேன்
    கற்பனையில் வாழ்ந்து களைத்துப்
    போயிருக்கிறேன்!

    உடல் உந்தி வாழுதல்
    உவப்பில்லை
    சிறகாய் இணைந்திட வா
    சேர்ந்தே பறப்போமே!

    சுவாசத்தைக் கேட்டிருந்தால்
    தந்திருப்பேன்
    நீ இருக்கிறாய் என்பதின்
    சாட்சியமே அதுதான்!

    நற்சாட்சிகள் இருந்து என்ன பயன்?
    கணக்குப் பிழைகள் தானே
    வழக்கை முடிக்கின்றன!

    என் நேரத்தைக் கேட்டால்
    எப்படித் தருவேன்?
    அஃது எனதல்ல…

    நீயே என் நேரத்தை
    நிர்ணயிக்கிறாய்
    சில நாட்களை
    நிமிடங்களில் முடிக்கிறேன்
    சில நாட்களை
    மாமாங்கமாய்க் கடக்கிறேன்
    நீட்டிப்பதும் சுருக்குவதும்
    உன் செயல் தான்!
    உனக்கான என் நேரத்தை
    கேட்பது மரபோ?

    என் நேரத்தைச் சபிப்பதும்
    ஆசிர்வதிப்பதும்
    நீ தான்!
    வரம் தந்தவளே
    கரம் ஏந்தலாமா?

    என் நேரத்தைக் கேட்கிறாயே
    என்ன செய்வேன்?

     

    Share
  • ஞானம் தேடுகிறேன்

    -கனவு திறவோன்

    புத்தருக்கு ஞானம் தந்த
    போதி மரம்
    எனக்கு
    ஜன்னல் தந்தது
    கதவு தந்தது
    கட்டில் தந்தது
    கோவில் கூரை தந்தது
    புத்தரின் சிலையும் தந்தது
    எல்லாவற்றையும்
    வைத்துக் கொண்டு
    ஞானம் தேடுகிறேன்.

    Share
  • துரத்தியடிக்கும் நாள் !

    -கனவு திறவோன்

    என் உடல் சலனமற்றுக்
    கிடப்பது கண்டு
    புதைத்து விடாதீர்கள்!
    புதைப்பது எங்கள் குல வழக்கமல்ல!

    எரித்து விடாதீர்கள்!
    சடலத்தை எரிப்பது
    என் மதக் கொள்கைக்கு முரணானது!

    ஆற்றில் போட்டு விடாதீர்கள்!
    சுற்றுச் சூழலைப்
    பேணியவன் நான்
    என் உடலால்
    அது மாசு பட வேண்டாம்!

    விட்டு வையுங்கள்…
    கூடு மறந்த உயிர்
    என்றேனும் ஒரு நாள் திரும்பும்…
    அது
    அவள் துரத்தியடிக்கும்
    நாளாகக் கூட இருக்கலாம்!

     

    Share
  • சாதனையின் நோக்கம்

    -கனவு திறவோன்

    நான் சாதித்த போது
    எல்லோரும் தட்டினார்கள்…
    பலர் கையைச்
    சிலர் என் முதுகைச்
    சிலர் என் தோளை !

    எல்லோரும் தட்டினார்கள்
    சத்தமாய்…
    நீ மட்டும் கடைசி வரைத் தட்டவேயில்லை..!

    சத்தம் அடங்கியதும்
    நீ மெலிதாய்ப் புன்னகைத்தாய்
    அந்தக் கள்ளச் சிரிப்பின்
    அர்த்தம்
    விலை
    எனக்கு மட்டும் தானே தெரியும்…!

    எல்லோரும்
    நான் சாதித்ததற்காகத் தட்டினார்கள்
    நான் சாதித்ததே
    உன் இதயக் கதவைத் தட்டத்தான்
    என்பதறிந்துதானே
    நீ சிரித்தாய்!

     

    Share
  • அரசியல்

    -கனவு திறவோன்

    யாரோ விதை ஊன்றி
    யாரோ நீர் பாய்ச்சி
    யாரோ உரம் கொட்டிப்
    போனார்கள்
    என்றாலும்
    காத்திருந்தோம்
    முளை விடும்
    விருட்சம் தரும் என்று
    மலட்டு விதையென்று
    அறியாமலே!

    Share
  • “ஜெனி…நீ வருவாயா?”

    —  கனவு திறவோன்.

    டூ வீலரை பார்க் செய்துவிட்டு ஸ்டேசனுக்குள் நுழைந்து முதல் பார்வையில் ஜெனிஃபரைத் தேடினேன்.

    அவள் இடம் வெறுமையாக இருந்தது. இன்னும் அவள் வரவில்லை.

    ‘ப்ச்’ எத்தனை நாள் தான் இப்படி டபாய்ப்பாள்?

    ரஜினியின் அடுத்தப் பட அறிவிப்பு போல சஸ்பென்ஸ் எகிறுகிறதே? இன்றாவது வருவாளா வரமாட்டாளா?

    எங்காவது களவு, கொலை நடந்தால் எனக்கும் ஜெனிபருக்கும் தான் முதல் சம்மன் அனுப்புவார் இன்ஸ்பெக்டர். நான்கு நாட்களாய் ஜெனிஃபர் டூட்டிக்கு வரவில்லை. அதனால் வேலையில்லாமல் ஸ்டேசனில் முடங்கிக் கிடந்தால் வெறும் டீ பாய் வேலைதான் மிஞ்சுகிறது.

    இந்த மகளிர் போலீஸ் ஸ்டேசன் வந்த பிறகு எங்கள் ஸ்டேசனில் வேலை பார்த்த அழகிகளை அங்கே மாற்றி விட்டார்கள். கண்ணுக்கு அளர்ச்சியாக இருக்கிறது.

    என்ன செய்யலாம்? எதற்கும் மணியிடம் கேட்டுவிடலாம்…

    ஆண்ட்ராய்ட் போனில் மணியைக் கூப்பிட்டேன்… மணியிடம் நிச்சயம் காரணம் இருக்கும். ஆஃபிசுக்கு வராமல் மட்டம் போடும் அத்தனை பேரின் உண்மை முகத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டி விடுவான்.

    “என்ன மணி? இன்னைக்கும் ஜெனிஃபர் வரல…”

    “திருமல…, ஜெனிக்கு பேதி சரியாகல… அதனால மூடும் சரியில்ல… இன்னிக்கு வர்றது டவுட்டு தான்…” என்று ஸ்னிஃபர் டாக் ஜெனிஃபர் வர இயலாத காரணத்தை விளக்கினார் அதன் டிரைனர் மணி.

    Share
  • எப்படிச் சாத்தியம்?

    -கனவு திறவோன்

    சிரித்துப் பேசியிருக்கிறோம்
    அழுது பேசியிருக்கிறோம்
    கடிந்து பேசியிருக்கிறோம்
    அடித்துப் பேசியிருக்கிறோம்

    அணைத்துப் பேசியிருக்கிறோம்
    பிணைந்து பேசியிருக்கிறோம்
    ஃபோனில் பேசியிருக்கிறோம்
    வாட்ஸ் அப்பில் பேசியிருக்கிறோம்

    ஃபேஸ்புக்கில் பேசியிருக்கிறோம்
    கண்களால் பேசியிருக்கிறோம்
    பார்த்துப் பேசியிருக்கிறோம்
    பார்க்காமல் பேசியிருக்கிறோம்

    பார்க்கில் பேசியிருக்கிறோம்
    பீச்சில் பேசியிருக்கிறோம்
    ஆடிப் பேசியிருக்கிறோம்
    பாடிப் பேசியிருக்கிறோம்

    நடந்து பேசியிருக்கிறோம்
    கடந்து பேசியிருக்கிறோம்
    போகிற போக்கில் பேசியிருக்கிறோம்
    மௌனமாய்ப் பேசியிருக்கிறோம்

    செய்கையில் பேசியிருக்கிறோம்
    ஏன்?
    பேசாமலும் பேசியிருக்கிறோம்
    இப்போது
    “பேசாமல் போ!” என்கிறாய்
    எப்படிப் போவேன்?

     

    Share
  • மகன் தினம்!

    -கனவு திறவோன்

    அடிக்கடி வருகிறார்கள்
    டாக்டரும்
    வக்கீலும்
    மத்தியஸ்தரும்
    அக்காக் குருவியும்
    மழையும்
    வெயிலும்
    காற்றும்
    காப்பகத்தில் இருக்கும்
    அம்மாவைப் பார்க்க!

    மாதத்திற்கு ஒருமுறை
    மணியார்டர் தரும்
    தபால்காரரும்
    வருகிறார்
    கடைசி வரை
    மகன் மட்டும் வரவில்லை!

    *******

    அம்மா உயிரோடு இருக்கும் போது
    ஆதரவற்றோர் விடுதியிலும்
    செத்தபிறகு
    கங்கைக் கரையிலும்
    அன்னையர் தினம்
    அனுசரிக்கும் மகன்!

    **************

    ஆ சிரமத்தில்
    இருந்த தாயைப்
    பார்க்கத் தனயன் வந்தான்
    கைகளைப் பிடித்துக் கன்னத்தில் ஒற்றியவள்
    கண்களிலிருந்து வழிந்த நீர்
    ப்ரைலி மொழியில் எழுதியது…
    ‘மகன் தினம்’ என்று ஒன்றிருந்தால்
    அன்றாவது ஒரு நாள்
    உன்னைப் பார்க்க
    உன் வீட்டிற்கு வரலாமே?!

     

    Share
  • எனக்காக மரித்தவன்

    கனவு திறவோன்.

    ‘அப்பா அப்பா எழுந்திருங்கப்பா என்னப்பா ஆச்சு… ஐயோ அசையவே மாட்டேங்குறாரே’ என்று ஓலமிட்டு அழுகிறாள் என் மனைவி. கல்யாணம் கட்டியது முதல் ‘மாமா’ என்று தான் அவள் என்னைக் கூப்பிடுவாள். ஆனால், அவள் அப்பா போன வருடம் இறந்ததிலிருந்து என்னை ‘அப்பா’ என்று கூப்பிட ஆரம்பித்தாள். நான் ஓரமாக அந்த அறையின் மூலையில் பீரோவுக்கு அருகில் நிழலாய் நின்று கொண்டிருகிறேன். என் பிள்ளைகள் கட்டிலில் மல்லாந்து கிடக்கும் என் உடலையும் என் மனைவியையும் மாறி மாறி அதிர்ச்சியாய்ப் பார்க்கிறார்கள்.

    ‘குமுதன் பக்கத்து வீட்டு அங்கிள கூப்பிடேன்…’

    என் முதல் மகன், குமுதன் வாசலை நோக்கி ஓடுகிறான். நான் அவனைத் தடுக்க நினைக்கிறேன். அஃது இப்போது முடியாதல்லவா. கையாலாகாதவனாய் கடிவாளம் போட்டுக் கொண்டேன்.

    பக்கத்து வீட்டு நண்பர் சாமிநாதன் பதட்டத்துடன் குமுதனுக்கு முன்னால் ஓடி வருகிறார்.

    ஆர்வமாக எட்டிப் பார்க்கிறேன். என்ன நடக்கப் போகிறது?

    ‘கட்… ராஜன் ஸார்… நீங்க பிரேமுக்குள்ள வர்றீங்க… கொஞ்சம் பின்னாலப் போங்க அல்லது இங்க வந்திடுங்க…’

    டைரெக்டர் மைக்கில் கத்தினார்.

    நிகழ்வில் ஒன்றி இரண்டு எட்டு முன்னால் வந்திருந்ததை அப்போது தான் உணர்ந்தேன்.

    ‘இன்னொரு ஷாட் போகணுமா?’

    ‘இல்ல ஸார் சீன் சூப்பரா வந்திருக்கு… நீங்களே நடிச்சிருக்கலாம்… டூப் போட்டதால… ஒர் ஆங்கிள்ல தான் கேமரா வைக்க முடிஞ்சுது அதுவும் லாங் ஷாட்டுல…’ என்று அலுத்துக் கொண்டார் டைரக்டர்.

    இப்படித்தான் பல நேரங்களில் டூப்பாய் மனிதர்கள் மரிக்கிறார்கள்.

    Share
  • அப்படித்தானிருக்கிறாயா?

    கனவு திறவோன்

    பெண்ணே நீ எப்படி இருக்கிறாய்?
    இன்னமும் அப்படித்தானிருக்கிறாயா?
    அப்படித்தான்
    குனிந்து நிமிராமல்
    தரையைப் பாராமல்
    தெருவைக் கடக்கிறாயா?

    நீ கடந்த பின்னும்
    அங்கேயே அலைபவர்கள்
    இன்னும் எத்தனை பேர்?

    அப்படித்தான்
    சத்தம் காட்டாமல்
    கன்னம் அமுங்கச்
    சிரித்துக் கொண்டிருக்கிறாயா?

    அந்த ஒளிச்சிதறலில்
    சவுலாகப் பார்வை இழந்து
    பவுலாக உலகைப் பார்ப்பவர்
    இன்னும் எத்தனை பேர்?

    அப்படித்தான்
    படிக்காமல்
    பாஸாகிக் கொண்டிருக்கிறாயா?

    நீ பாஸாகப் படித்தவர்கள்
    இன்னமும்
    அரியர் எழுதிக் கொண்டிருக்கிறார்களா?
    அதை அறியாதவர்கள்
    இன்னும் எத்தனை பேர்?

    அப்படித்தான்
    பவுடர் பூசாமல்
    மினுமினுக்கிறாயா?

    உன் முன் பிரகாசிக்க
    பவுடர் அப்பிப் கொண்டு
    வந்தவர்கள்
    மூஞ்சியில் கரிபூசிப் போனவர்கள்
    இன்னும் எத்தனை பேர்?

    பெண்ணே நீ எப்படி இருக்கிறாய்?
    இன்னமும் அப்படித்தானிருக்கிறாயா?

    நீ அப்படித்தான் இருப்பாய்…
    நாங்கள்தான் மாறிக் கொண்டிருக்கிறோம்…
    நண்பனாக வந்து
    காதலனாகி
    நீ அண்ணன் என்றதும்
    தேவதாஸாகிக்
    கவிஞனாகி…
    நாங்கள்தான் மாறிக் கொண்டிருக்கிறோம்!

     

    Share