எனக்காக மரித்தவன்

கனவு திறவோன்.

‘அப்பா அப்பா எழுந்திருங்கப்பா என்னப்பா ஆச்சு… ஐயோ அசையவே மாட்டேங்குறாரே’ என்று ஓலமிட்டு அழுகிறாள் என் மனைவி. கல்யாணம் கட்டியது முதல் ‘மாமா’ என்று தான் அவள் என்னைக் கூப்பிடுவாள். ஆனால், அவள் அப்பா போன வருடம் இறந்ததிலிருந்து என்னை ‘அப்பா’ என்று கூப்பிட ஆரம்பித்தாள். நான் ஓரமாக அந்த அறையின் மூலையில் பீரோவுக்கு அருகில் நிழலாய் நின்று கொண்டிருகிறேன். என் பிள்ளைகள் கட்டிலில் மல்லாந்து கிடக்கும் என் உடலையும் என் மனைவியையும் மாறி மாறி அதிர்ச்சியாய்ப் பார்க்கிறார்கள்.

‘குமுதன் பக்கத்து வீட்டு அங்கிள கூப்பிடேன்…’

என் முதல் மகன், குமுதன் வாசலை நோக்கி ஓடுகிறான். நான் அவனைத் தடுக்க நினைக்கிறேன். அஃது இப்போது முடியாதல்லவா. கையாலாகாதவனாய் கடிவாளம் போட்டுக் கொண்டேன்.

பக்கத்து வீட்டு நண்பர் சாமிநாதன் பதட்டத்துடன் குமுதனுக்கு முன்னால் ஓடி வருகிறார்.

ஆர்வமாக எட்டிப் பார்க்கிறேன். என்ன நடக்கப் போகிறது?

‘கட்… ராஜன் ஸார்… நீங்க பிரேமுக்குள்ள வர்றீங்க… கொஞ்சம் பின்னாலப் போங்க அல்லது இங்க வந்திடுங்க…’

டைரெக்டர் மைக்கில் கத்தினார்.

நிகழ்வில் ஒன்றி இரண்டு எட்டு முன்னால் வந்திருந்ததை அப்போது தான் உணர்ந்தேன்.

‘இன்னொரு ஷாட் போகணுமா?’

‘இல்ல ஸார் சீன் சூப்பரா வந்திருக்கு… நீங்களே நடிச்சிருக்கலாம்… டூப் போட்டதால… ஒர் ஆங்கிள்ல தான் கேமரா வைக்க முடிஞ்சுது அதுவும் லாங் ஷாட்டுல…’ என்று அலுத்துக் கொண்டார் டைரக்டர்.

இப்படித்தான் பல நேரங்களில் டூப்பாய் மனிதர்கள் மரிக்கிறார்கள்.

Share

Comments

One response to “எனக்காக மரித்தவன்”

  1. மாதவன்ஸ்ரீரங்கம்

    அருமை தோழர். அழகான ட்விஸ்ட்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *