ஒன்று எங்கள் ஜாதியே …
— கவிஞர் காவிரிமைந்தன்.
ஒன்று எங்கள் ஜாதியே …
ஏனைய கவிஞர்களிலிருந்து கண்ணதாசன் வேறுபட்டு தனித்துவமாக தெரிவது ஏன் தெரியுமா? கருப்பொருளை … கதையின் உட்கருத்தை உள்வாங்கி… உரிய வார்த்தைகளை பல்லவியில் தொட்டு… ஒவ்வொரு வரியிலும் அதன் சாரத்தையிட்டு மகத்துவம் காண்பிக்கிறார் பாருங்கள்.
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
சாதிஎனும் நோயால் சமுதாயம் அவதிப்படும் நிலையில்… அனைவரையும் ஒருமிக்க கவிஞர் கையிலெடுக்கும் ஆயுதம் உழைப்பு ஒன்றுதான்… உழைக்கின்ற அனைவருமே ஒருவர் பெற்ற மக்களே என்று நீதி கூறி நிலை நிறுத்துகிறார்.
வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
இரத்தம் எல்லோருக்கும் சிவப்பு என்பது போல… உழைப்பால் வருகின்ற வியர்வையும் ஒன்றுதானே… ஏழ்மை பணக்காரன் என்கிற வர்க்க பேதத்தால் பிரிந்து கிடக்கும் இரண்டு துருவங்களையும் இணைக்கின்ற அருமையான சிந்தனை…
ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னை தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆள போகிறான்
ஒரு திரைப்பாடலாசிரியன் சொல்கின்ற கருத்துக்களா இவை… அல்ல… அல்ல… ஒரு வகுப்பு ஆசிரியர் சொல்லும் கருத்து முத்துக்கள். இவற்றையெல்லாம் கொட்டிவைத்து அறிவியலின் அரிச்சுவடி எழுதிவைக்க… அனைத்து வரிகளுமே அற்புத ரகம்தானே…
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணுகின்றது எங்கள் நெஞ்சமே
எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித்தந்து எங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்தது எங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
முடியாட்சிக்கு முடிவு கட்டி … மக்களாட்சிக்கு வரவேற்பு தந்து இந்தியாவில் ஜனநாயகம் தழைத்தோங்க… நம்மை நாமே ஆள்வது என்கிற சமத்துவ சமுதாய ஆட்சிக்கு அடிகோலும் வரிகள்… இது தவிர… தான் சார்ந்திருந்த அரசியல் கட்சிக்கு … அதன் திட்டங்களை பாடல் வரிமூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் சேவையை எத்தனை நேர்த்தியாக கையாள்கிறார் பாருங்கள்.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் பாடல்களுக்கே உரித்தான அனைத்து அம்சங்களும் கண்ணதாசன் வரிகளில் நிறைக்க… மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைக்க வளமையான தம் குரல்களால் வாரிக்கொடுத்திருக்கிறார்கள்…டி எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி.
கவியரசே உன் பாணியில் சொன்னால் … மானுட இனமெல்லாம் ஒரு ஜாதியே!!
அஹா ஆஆஆஆஆஆஆ அஹா ஆஆஆஆஆஆஆ
ஓஓஓஓஓஓஓ ஓஓஓஓஓஓ
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே
ஒன்று சேரும் கடலிலே
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கிப் பொன்னைத் தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தைத் தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித் தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
ஆஆஆ ஆஆஆ அஹ்ஹா அஹஹா லலலா லலலா லலலா லலலா
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
பாடல்: ஒன்று எங்கள் ஜாதியே
படம்: பணக்காரக் குடும்பம் (1964)
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
காணொளி: https://www.youtube.com/watch?v=XmSJf2NVz5g
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
https://www.youtube.com/watch?v=XmSJf2NVz5g