பவள சங்கரி
தலையங்கம்
செப்டம்பர் 15, அண்ணா பிறந்த நாளில் சுத்தீகரிக்கப்பட்ட நீர் தமிழக விரைவுப் பேருந்துகளிலும், பேருந்து நிலையங்களிலும் கிடைக்கும் என்பது மகிழ்ச்சியான செய்தி. தாது மணல், இயற்கை வளங்கள் அனைத்தும் மக்களுக்கு உரிமையானது என்பதில் மாநில, மத்திய அரசுகளும் உறுதியாக இருக்கின்றது. தூத்துக்குடி மாவட்டங்களில் கிடைக்கக்கூடிய தாது மணல்களை பல லட்சம் டன் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட பிறகு இப்பொழுதாவது விழித்துள்ளோம். இரும்பு தாதுப் பொருட்களும், நிலக்கரிச் சுரங்களும் கொள்ளையடிப்பதைப் பார்த்து மனம் வெதும்பி போராடக்கூடிய சூழலில் இருக்கிறோம். இது போலவே இந்த சுத்தீகரிக்கப்பட்ட நீரும், இயற்கை வளங்கள்தான். இவைகளுக்கு உரிமையுடையவர்கள் மக்களும், மத்திய மாநில அரசுகளும்தானே. முதலில் ஆரம்பிக்கப்பட்டபோது லிட்டர் 10 ரூபாய், 2 லிட்டர் 16 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இப்போது ஒரு லிட்டர் சுத்தீகரிக்கப்பட்ட நீர் 15 முதல் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் விலையை நிர்ணயிப்பவர்கள் யார். இதனையும் அரசாங்கம் ஒழுங்கு முறைப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு கேன் 25 முதல் 30ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அப்படியென்றால் சுத்தீகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் தன்ணீர் அவர்களுடைய லாபத்துடன் சேர்த்து ஒரு ரூபாய்தான் ஆகிறது. அப்படியிருக்க எதற்கு இவ்வளவு விலை. செலவினங்களைச் சேர்த்துக் கொண்டாலும் அதிக பட்சமாக லிட்டர் 5 ரூபாய்க்கு கொடுக்க முடியும் என்னும்போது எதற்கு மக்களை கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்க வேண்டும். நிலத்தினடியிலிருந்து கிடைக்கும் அனைத்தும் அரசிற்கும், பொது மக்களுக்கும் சொந்தமானது. சுத்தீகரிப்பிற்கான செலவும், அதற்குண்டான லாபமும் வழங்க வேண்டியது மட்டுமே நியாயமல்லவா.. ஒன்றுக்கு 1000 சதவிகிதம் லாபம் வாழ்வாதாரமான குடி நீருக்கு விதிப்பது அநியாயம் அல்லவா.. மாதத்திற்கு 20 கிலோ அரிசி இலவசமாக வழங்குவது போல ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி அனைவருக்கும் மாதத்திற்கு குறைந்த பட்சமாக 100 லிட்டர் சுத்தீகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்க வேண்டும் என்று மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். தாது மணல் கொள்ளையை தடுத்தது போல அரசு இதிலும் கவனம் செலுத்துமா? தாது மணலிலிருந்து என்னென்ன பொருட்கள் தயார் செய்ய முடியும் என்பதற்கான ஆய்வரங்கத்தை ஏற்படுத்த வேண்டும். அல்லது புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலமாக வெளிநாடுகளில் அவர்கள் இதனை மூலப் பொருளாகக்கொண்டு என்னென்ன பொருட்கள் தயார் செய்கிறார்களோ அதை நாமும் நம் நாட்டில் தயார் செய்யும்பட்சத்தில் வேலைவாய்ப்பும், நாட்டின் வளமும் பெருகும் இல்லையா?

Leave a Reply