Month: February 2017

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    பீதாம் பரமாட பீலி மயிலாட
    தோதான தோழர்கள் தோளிலுறி-மீதேறி
    வெண்ணையை வாரி வழங்கிடும் வாசுதேவக்
    கண்ணனை நெஞ்சே கருது….

    வாய்ப்பூதான் வாடிடுமோ,! வாழ்விலாழ் வாராகும்
    வாய்ப்பெனெக்குத் தந்திட வாசுதேவா, -நோய்ப்பாயில்
    கூற்றன்கைப் பாவையாய் தோற்றுக் கிடப்பேனோ
    ஏற்றம் தரவா எனக்கு….கிரேசி மோகன்….!

    Share
  • துறட்டுக்கோல்!

    -கவியோகி வேதம்

    தடைகள் இன்றி நடக்கத் தெரிந்தும்
    –தாத்தா கையில் துறட்டுக்கோல்!
    முடவ னாய்யா என்றே கேட்டால்
    –முறுவல் தானே! பதில்சொல்லார்;
    யார்க்கும் உதவும் எண்ணத் தோடே
    –இன்றும் கிளம்புவார் காட்டுக்கு!
    வேர்க்க வேர்க்கத் தழைகள் பறித்தே
    –வெட்டிப் போடுவார் ஆட்டுக்கு!

    பத்தடி உயரம் துறட்டிக் கோலாம்
    –பதமாய்த் தாத்தா ஏந்திடுவார்!
    கொத்தாய் மாங்காய் தந்தே பாலரைக்
    –கொஞ்சி அழகை மாந்திடுவார்
    கம்பியில் சிக்கிய பட்டம் எடுத்துக்
    –கனிவாய் அவர்க்கே உதவிடுவார்
    எம்பிக் குத்துவார் புளியங் காய்கள்
    –இவரின் கைவரச் சிரித்திடுவார்!

    ஆ! இப்போ!
    படப்பில் சிக்கிய வேலிமுள் அய்யோ
    –பாதை முழுக்கக் கிடக்கிறதே!
    முடங்கிக் கிடக்குதே துறட்டிக் கோலும்
    –மூலையில் தாத்தா படுத்ததுமே…!

     

     

    Share
  • இந்தியாவின் மொழிகள் நிலை

    பவள சங்கரி 

    1961ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை 1,652 என்று கண்டறியப்பட்டுள்ளன.

    1971ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில், 10,000 மக்களுக்கும் குறைவாகப் பேசப்படும் மொழிகளைத் தவிர்த்து 108 மொழிகளை மட்டும் பட்டியலிட்டிருக்கிறார்கள். மற்ற மொழிகள் “மற்றவைகள்” என்று பட்டியலிடப்பட்டுள்ளன.

    1991ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தனிப்பட்ட இலக்கண அமைப்புகளுடன் கூடிய மொழிகளாக 1,576 மொழிகளைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளது.

    2001ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை 1,721. அதில் 122 முக்கியமான மொழிகள் மட்டுமே பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகிறார்கள். மற்ற 1,599 மொழிகள் சிறுபான்மை சமூகத்தினர், உள்ளூர் குழுக்கள், பழங்குடிகள் போன்றவர்கள் பயன்படுத்தக்கூடியவைகள்.

    முக்கியமான 122 மொழிகள் 10,000 ற்கும் அதிகமான பயனாளிகள் உள்ளனர். இதில் 29 மொழிகள் மட்டுமே 1 மில்லியன் மக்களின் புழக்கத்தில் உள்ளன.

    2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 122 மொழிகள் மட்டுமே 10,000 ற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துவதாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    கடந்த 50 ஆண்டுகளில் இந்தியா 250 மொழிகளை இழந்துள்ளது.  இன்று 880 மொழிகள் வழக்கில் உள்ளன. 29 மொழிகள் 1 மில்லியன் மக்களுக்கும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அருணாசலப் பிரதேசத்தில் மட்டும் அதிகபட்சமாக 90 மொழிகள் வழக்கில் உள்ளன!

    Share
  • சர்வதேச தாய்மொழி தினம்!

    பவள சங்கரி

    என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
    தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே!

    553997_10152582888510198_2088060395_n[1]

    இன்று சர்வதேச தாய்மொழி தினம். உறவு, உணவு, உணர்வு என அனைத்தையும் கற்றுத் தரும் தாயின் மொழியே ஒருவரின் முக்கியமான மொழி. ஒருவர் எத்தனைதான் அந்நிய மொழிகள் கற்றிருந்தாலும் வேதனை, ஆபத்து, உணர்வினால் சூழப்பட்ட தருணம் போன்ற காலங்களில் தாய்மொழி மட்டுமே உள்ளத்திலிருந்து வார்த்தைகளாகி வெளிவரும். அப்படி வருவதற்கான வாய்ப்பு அமையப் பெறாதவர்கள் எதையோ இழந்தது போன்றதொரு நிலையில் இருப்பதை உணர்வார்கள். அந்த நிலையில் இதனால் மனக் குழப்பம் மேலும் அதிகரிக்கவும் வழிவகுக்கும்.

    ஒரு தாயின் கருவறையில் உருவாகும் உயிர் சில மாதங்களுக்குப் பிறகு அத்தாயின் குரல் மட்டுமின்றி, சூழ்ந்திருக்கும் நெருங்கிய ஒலிகளையும் கூர்ந்து கவனித்தவண்ணம் இருப்பதாகவே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இதன் பொருட்டே கருவுற்றிருக்கும் தாய்மார்களை நல்ல சிந்தைகளை ஊக்குவிக்கும் படைப்புகள், அதிர்வற்ற மெல்லிய இசைகள் போன்றவற்றை அதிகமாக செவிமடுக்கும்படி அக்காலந்தொட்டே அறிவுறுத்தப்பட்டு வந்ததோடு நம் முன்னோர்கள் வழி இன்றும் தொடர்ந்து வருவதும் கண்கூடு. அந்த வகையில் தாய் வழி வந்த மொழி என்பது ஒவ்வொருவருக்கும் எத்துணை இன்றியமையாததொன்று என்பதைச் சொல்லத் தேவையில்லை.

    சர்வதேச தாய்மொழி தினம், 1999ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 21ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

    பாகிசுதான் நாடு நம் இந்திய நாட்டிலிருந்து சுதந்திரம் பெற்றபின் அங்கு உருது மொழி அங்கீகரிக்கப்பட்ட மொழியாக இருந்தது. 1952ஆம் ஆண்டு, தற்போதைய வங்க தேசமான, அன்றைய கிழக்கு பாகிசுதானில் உருது மொழிக்குப் பதிலாக வங்க மொழியை ஆட்சி மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை விடுத்தபோதும் அது நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்தது. அதே ஆண்டில் பிப்., 21ஆம் நாள் தாகா பல்கலைக்கழக மாணவர்கள் ஊரடங்கு உத்தரவையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் 4 மாணவர்கள் உள்பட பலர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிர் நீத்த மாணவர்களின் நினைவாகவே இத்தினத்தை யுனெசுகோ அமைப்பு சர்வதேச தாய்மொழி தினமாக அறிவித்துள்ளார்கள்.

    தாய்மொழி, தேசிய மொழி, தொடர்பு மொழி என்ற மூன்று விதமான மொழிகளின் வல்லமை பெற்றவர்கள் வாழ்வில் பல வகையான வெற்றிகளை எளிதாகப் பெறக்கூடியவர்கள் என்ற கருத்தின் அடிப்படையில், பேச்சு வழக்கில் மட்டுமின்றி கல்வித் திட்டங்களிலும் இந்த மும்மொழிகள் சேர்க்கப்பட வேண்டும் என யுனெசுகோ வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது. உலகில் பேச்சு வழக்கில் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளதும், இது கண்டம், நாடு, மாநிலம், மாவட்டம், கிராமம் என பல்வகையில் வேறுபடுகிறது. ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் உள்ள தனிப்பட்ட தாய்மொழியின் தனித்தன்மை, அப்பகுதி மக்களின் பண்பாட்டையும், பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கக்கூடியது. அந்த வகையில் ஒரு இனத்தின் அடையாளம் மொழி என்றாகிறது. இனப்பாகுபாடு என்ற பேதங்களின்றி அனைத்து உலக மக்களும் ஒற்றுமையாக வாழ வழி காண்பதே இந்த நாளின் முக்கியத்துவமாகும்.

    “தாய்மொழி ஒருவருக்கு கண் போன்றது; மற்ற பிற மொழிகளனைத்தும் கண்ணாடி போன்றது” என்பார்கள். கண் போன்று தாய்மொழியைக் காக்கவேண்டியது ஒவ்வொருவரின் முக்கிய கடமை. தாய்மொழியின் மூலம் சிந்திக்கும்போதே ஒருவரின் சிந்தனா சக்தி பெரிதும் விரிவடைகிறது என்கின்றனர் அறிஞர்கள். குழந்தைகளிடம் மூன்று வயதுவரை ஒரு மொழியில் மட்டுமே, குறிப்பாக தாய்மொழியில் மட்டுமே உரையாடுவது அவர்களின் பேச்சுத் திறனையும், சிந்திக்கும் திறனையும் வளர்க்கச் செய்கிறது என்கின்றனர் வல்லுநர்கள்.

    ஒரு ஆய்வு நிறுவனம், தமிழில், எளிதாக வாசிக்கக்கூடிய, 8 வரிகள் கொண்ட ஒரு சிறு பத்தியை தமிழகத்தில் உள்ள 28 மாவட்டங்களில் பள்ளி மாணவர்களிடம் கொடுத்து வாசிக்கச் செய்தனர். இந்த ஆய்வின் முடிவில், ஐந்து வயதான, முதல் வகுப்பில் படிக்கும், 43.4 சதவிகித குழந்தைகளால் மட்டுமே தமிழ் எழுத்துக்களை அடையாளம் காண முடிகிறது என்ற அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர். 2ஆம் வகுப்பு படிக்கும் ஆறு வயது குழந்தைகளில் 43.6 சதவிகித குழந்தைகளால் மட்டுமே வார்த்தைகளைப் புரிந்து வாசிக்க முடிகிறது என்றும் 5ஆம் வகுப்பு படிக்கும், 29.9 சதவிகித குழந்தைகளால் மட்டுமே 2ஆம் வகுப்பு கதைகளை வாசிக்க முடிகிறது என்றும் வெளியிட்டனர். தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழகத்தில் இப்படியொரு நிலை என்றால் புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளின் நிலை எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. எதிர் காலத்தில் தமிழ் மொழியின் நிலை என்னவாகும் என்று நினைத்து அச்சம் கொள்வதையும் தவிர்க்க முடியவில்லை. இன்னும் 100 ஆண்டுகளில் அழியப் போகிற மொழி என்று சர்வதேச அமைப்பு ஒன்றின் பட்டியலில் உள்ள 25 மொழிகளில் பழம்பெருமை வாய்ந்த நம் தமிழ் மொழி 8வது இடத்தில் உள்ளது என்பதும் அதிர்ச்சியான தகவல். அந்த வகையில் உலகின் மொழிகள் அனைத்தும் அழிவிலிருந்து காக்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கம் கொண்ட இந்நாள் போற்றுதலுக்குரியது.

    பல மொழிகள் பேசக்கூடிய நம் இந்திய நாட்டில் 74 சதவிகித மக்கள் இந்திய, ஐரோப்பிய மொழிகளையும், 23 சதவிகித மக்கள் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளையும் பேசினாலும் இந்திய அரசு 22 மொழிகளையும் அங்கீகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. ஒரு இனத்தின் மொழி அழிதல் என்பது அந்த பண்பாடு, பாரம்பரியம், மற்றுமந்த இனமே அழிவதாகத்தான் அர்த்தம்.

    இந்தியாவில் மொத்த மொழிகள் 1652 (1961ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி) என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    இதில் 5வது இடத்தில் தமிழ் உள்ளது.  216 மொழிகளை 10,000க்கும் குறைவானவர்களே பேசுகின்றனர். இவற்றில் 18 மொழிகள் அரசின் அதிகாரப்பூர்வ மொழிகள். மீதமுள்ள பெரும்பாலான மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. பேச்சு வழக்கில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது.

    இந்தியாவில் இந்தி பேசும் அதிக மக்கள் தொகையாக 41% உள்ளனர். இரண்டாவது இடத்தில் பெங்காலி (6,95,0738). மூன்றாவது இடத்தில் தெலுங்கு மொழி (6,60,17,615). நான்காவது இடத்தில் மராத்தி (6,24,81,681).
    5வது இடத்தில் தமிழ் மொழி பேசுபவர்கள். (5,30,06,368). இந்தியாவில் தமிழ் பேசுபவர்கள் 6.32% புதுவையில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் 89.2%. தமிழகத்தில் 86.7%. கேரளாவில் தமிழ் பேசுவோர் எண்ணிக்கை 2.1% கர்நாடகத்தில் 4வது இடத்தில் தமிழ் பேசுவோர் உள்ளனர்.

    நம் தமிழ் மொழி பல்வேறு நாட்டு மக்களின் மொழிகளுடன் பின்னிப்பிணைந்து இருப்பதே நம் மொழியின் பழமைக்கு சான்றாக உள்ளது. உதாரணமாக:
    கொரியா – 6,500
    சப்பான் – 1400
    சீனா – 700
    மலேசியா – 1600
    தாய்லாந்து – 850

    dc-Cover-92atcjrblbo92flf9lnk9vcpp7-20160911071508.Mediஉலகளவில் 136 மொழிகளின் வேர்ச்சொற்களுடன் தமிழ் மொழி கலந்துள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளதாக கடல் ஆய்வறிஞர் திரு ஒரிசா பாலு அவர்கள் கூறுகிறார்கள். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் பல நாடுகளிலும் உள்ள 600 இளைஞர்களுடன் தொடர்பு கொண்டு இதற்கான ஆதாரங்களை சேமித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலக மொழிகளின் தர வரிசைப்பட்டியலில் நம் தமிழ் மொழி இன்று 14வது இடத்தில் உள்ளதையும், இதனை 6வது இடத்திற்குக் கொண்டு வருவதற்கான ஆதாரங்கள் உள்ளதாகவும் வருகிற 2018 ஆம் ஆண்டின் சர்வதேச அறிக்கையில் நம் தமிழ் மொழி ஆறாவது இடத்தில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாகவும் கூறுகிறார். நீர் மேலாண்மை, காடுகள் மேலாண்மை, மரபுசார் அறிவியல், உழவில்மொழிகள், பண்பாடு ஒப்பீட்டுவியல் போன்றவைகளில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருபவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலும் 19,000ற்கும் மேற்பட்ட ஊர்கள் தமிழ் பெயர்களில் உள்ளன என்பதையும் குறிப்பிடுகிறார்.

    தமிழ்மொழியில் உள்ள பலதரப்பட்ட உச்சரிப்புகள் கொண்ட எழுத்துக்களால் குழந்தைகளுக்கு நாக்கு நன்கு சுழற்சி அடைவதன் மூலம் அவர்களின் அடிப்படைப் பேச்சுத் திறன் எளிதாக வளர்ச்சியடைகிறது. வாயை நன்றாக திறந்து பேசுவதற்கும் வழிவகுக்கிறது நம் தமிழ்மொழி. அதாவது நாக்கு வாயின் எல்லாப் பகுதிகளைத் தொட்டும், வளைந்தும் நன்கு பேச வழியமைப்பதும் தமிழ்மொழியில் தான். அதாவது பேச்சின் தெளிவு வருவதற்கு தமிழ்மொழி உதவும் என்பதே நிதர்சனம். பல மொழிகள் அறிந்த பெற்றோராக இருந்தாலும், அவர்கள் வெளியில் எந்த மொழியில் பேசினாலும், வீட்டில் குழந்தைகளுடன் தாய்மொழியில் மட்டும்தான் பேசவேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டிருக்கவேண்டும். அப்போது தான் குழந்தைகள் எளிதாக, சொல் வழக்கைப் புரிந்து கொள்வதோடு, தாய்மொழியை மறந்துவிடாமல் பாதுகாக்கவும் வழியமைக்க முடியும். 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த நம் தமிழ் மொழியின் பெருமை பற்றி நம் குழந்தைகளுக்கு ஓரளவேனும் தெளிவுபடுத்த வேண்டியது இன்றைய பெற்றோரின் முக்கிய சவாலாகவே உள்ளது என்பதும் சத்தியம். அறிவியல், வானவியல் சாத்திரம், கணிதம் குறித்த சொற்கள் நம் பழந்தமிழில் இருந்தன என்பதை இலக்கியச் சான்றுகள் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. பள்ளியில் குழந்தைகளுக்கு இரண்டாம் மொழியாக தமிழைத் தேர்ந்தெடுக்காமல் பிறமொழிகளைத் தேர்ந்தெடுப்பது நம் தமிழ் மொழிக்கு நாம் செய்யும் துரோகம் எனலாம். தாய்மொழியில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரிந்திருப்பவர்களுக்கு வேறு எந்த மொழியையும் எளிதாகக் கற்க முடியும் என்பதே உண்மை. கற்பனைத் திறன் அதிகரிப்பதோடு படைப்பாற்றலும், எதையும் எதிர்கொள்ளும் துணிவும் பெருகும். அதாவது தாய் மொழியில் எழுதவும், படிக்கவும் தெரியாமல் பிற மொழிகள் பலப்பல கற்றிருந்தாலும் அது ஏட்டுக் கல்வி என்ற அளவிலேயே இருக்குமே தவிர வாழ்வின் முழுமையான பயன்பாட்டில் இருக்காது என்பதும் சத்தியம். ஆக அப்படிப்பட்டவர்கள் எந்த மொழியிலும் சரளமாக பேசவோ, எழுதவோ முடியாமல் ஏட்டுச் சுரைக்காயாக, பல மொழிகளைக் கற்றதிற்கான சான்றிதழ்களை மட்டுமே வைத்திருப்பார்கள். ஆனால் தாய்மொழியை நேசிப்பவர்கள், அவர்கள் கற்றறிந்த ஏனைய மொழிகளிலும் சரளமாக பேசவும், எழுதவும் தெரிந்தவர்களாக இருக்கின்றனர்.

    தம் தாய்மொழியில் புலமை பெரும் ஒருவருக்கு மற்ற மொழிகளைக் கற்கத் தேவையான புரிதல் கிடைப்பதோடு அதன் மூலம் ஒப்பீடு செய்தும், கற்பனை செய்தும் மேலும் கற்றுக் கொள்ளும் ஆற்றலையும் அளிக்கிறது. அந்தந்த மொழிகளுக்கான இலக்கணங்களிலும் ஆழ்ந்த புலமை பெற வழியமைக்கிறது.

    உலகில் மொத்த மொழிகள் 6200 . இதில் 1,500 மொழிகள் ஆயிரம் பேருக்கு கீழ் பேசுகிறார்கள். 3000 மொழிகள் பத்தாயிரத்திற்கும் குறைவானோர் மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் நம் தமிழ் மொழியைப் பேசுவோர்களின் எண்ணிக்கை 7 கோடிக்கும் அதிகம். உலகளவில், 94 நாடுகளில் தமிழ்பேசும் மக்கள் உள்ளனர். அந்த வகையில் நாம் அனைவரும் நம் மொழியைக் காக்கும் உறுதிமொழி எடுத்தோமானால் இந்தப் பிரபஞ்சம் உள்ளமட்டும் நம் தமிழ் மொழி நீடு வாழும் என்பதில் ஐயமில்லை. நம் தமிழ் மொழியைக் காப்போம். வையம் தலைமை கொள்வோம்!

    தாய்மொழியோடு வாழ்ந்து, பிற மொழிகளோடு பயணிப்பதன் மூலம் வாழ்க்கையை வெற்றி கொள்வோம்!

    யாதும் ஊரே யாவரும் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா
    நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
    சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
    இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
    இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
    வானம் தண்துளி தலைஇ யானாது
    கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
    நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
    முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
    காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
    பெரியோரை வியத்தலும் இலமே,
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

    (புறம்: 192)
    கணியன் பூங்குன்றனார்.

    வாழ்க தமிழ்!

    வெல்க தமிழகம்!!

    Share
  • வைரமணிக் கதைகள்

    bre

    வாக்கிய அமைப்பில் எளிமையையும் ஏற்படுத்துகிற தாக்கத்தில் இமயத்தையும் தொடுபவர் எழுத்தாளர் வையவன்.வைரமணிக்கதைகள் என்ற பெயரில் வெளிவந்திருக்கும் அவரது 497 பக்க சிறுகதைத்தொகுப்பின் ஒவ்வொரு கதையிலும் புரியும் உண்மை இது . தன்னைச் சுற்றிலும் நடக்கும் நிகழ்வுகள் குறித்த கூர்ந்த கவனிப்பு, இது சரி-இது தவறு என்பது குறித்த தெளிவான நிலைப்பாடு , சிறுகதையின் கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த தெளிவான இலக்கியப் புரிதல் , சிறந்த சொல்லாடல் என வையவனின் எழுத்துச் சிறப்பைச் சொல்லிக்கொண்டே போகலாம். தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்களின் ஒருவர் என்று சொல்ல வைக்கும் கதைகளை வழங்கினாலும் மிகுந்த தன்னடக்கத்தை வெளிப்படுத்துபவர்.எழுத்தாளர் வையவன். 58 ஆண்டுகளாக இலக்கியப்பங்காற்றிவரும் வையவனின் செழுமையின் தொகுப்பாகவே இந்த 80 கதைகளின் தொகுப்பு அமைந்துள்ளது. கதை பேசும் இடங்களின் -நபர்களின் சித்தரிப்பு , மனக்கண்ணில் கதையை ஓடவிடும் எழுத்தாளுமை , புத்தகத்தை கீழே வைக்கவிடாத அளவு ஈர்க்கும் கதைகள் என இது ஒரு தவறவிடக்கூடாத தொகுப்பு .

    சிறிய கதைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவர் இவர். நல்ல இலக்கியம் கால வித்தியாசமின்றி , தலைமுறைகளைத் தாண்டி வசீகரிக்கும் என்பார்கள். அவ்வாறு ட்விட்டரின் குறள் அளவு கமெண்ட்களின் யுகத்திலும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தும் சிறந்த எழுத்தாளர் வையவன்.

    ———————–

    மதிப்புரை வழங்கியவர் : பெமினா இதழில் எஸ். செந்தில் குமார்

    வெளியிட்டோர்: தாரிணி பதிப்பகம், 4A , ரம்யா பிளாட்ஸ், 32 /79 ,காந்தி நகர் நகர் நான்காவது பிரதான சாலை, அடையாறு, சென்னை-20
    [இந்த மதிப்புரையின் யூட்யூப் வடிவினை[http://vaiyavanvideos.blogspot.in/] காணலாம்]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ’’சிந்தை வெளிகடந்து மந்தை வெளிபுகுந்து
    கந்தல் உடையணிந்து கன்றுகளைத் -தந்தையாய்,
    மாதாவாய் காத்து, மடியளிக்கும் நித்திய
    நூதனரை நெஞ்சே நினை’’….கிரேசி மோகன்….!

    Share
  • உலகத் தாய்மொழித் திருநாள்

    aui

    அன்னை ஊட்டிய பிள்ளைத்தமிழே
    ஆசான் பயிற்றுவித்த முத்தமிழே
    இல்லை உன் போன்ற செம்மொழியே
    ஈடில்லாப் புகழ் கொண்ட தாய்மொழியே
    உன்னில் தானே உயிர்மெய் அடக்கம்
    ஊர் பல கடந்துமே நின் புகழ் சிறக்கும்
    எளிய நடையிலும் உனைப் பயில்வோமே
    ஏட்டுச் சுரைக்காயாய் நாங்கள் இரோமே
    ஐ! எங்கள் தமிழே ஆரத்தியும் உனக்கு எடுத்து
    ஒன்றா இரண்டா பலகோடி பாமாலை தொடுத்து
    ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா என்ற
    ஔவை மூதாட்டி அவர்தம் நல்வழி நின்று
    இஃதே எம் தாய்மொழியின் தனிச் சிறப்பென்று
    இறுமாப்புடனே மார்தட்டி யாவரும் முன்னின்று
    தப்பாது தானே நின் புகழ் பலவும் தன்னையே
    தரணிக்கே உரக்கச் சொல்வோம் தமிழன்னையே
    தாய்மொழித் திருநாள் நல்வாழ்த்துகள்!

    – சித்ரப்ரியங்கா ராஜா,
    திருவண்ணாமலை.

    Share
  • ஸ்ரீ அன்னை பிறந்தநாள்

    Mother

     

    வேலை இருக்குது நிரம்ப -என்னை
    வேகப் படுத்திடு தாயே –
    பாலை சுரந்திடு தளும்ப -உந்தன்
    பாதம் பணிந்திடும் சேய்நான்
    ஆலை கரும்பெனெப் பிழிந்து-எந்தன்
    ஆவி பிரிந்திடும் முன்னே
    சோலை நகச்சுவைக் காற்றை – இவன்
    நாளும் நுகர்ந்திட அருள்வாய்….

    அன்னை பிறந்த நாள்
    —————————-

    கண்ணை இமைகாக்கும், தென்னை குலம்காக்கும்
    அன்னை நமைகாக்கும் அற்புதம் -விண்ணை
    இறங்கவைத்து மண்ணில் இருத்திய தாயின்
    பிறந்தநாள் இன்று போற்று….கிரேசி மோகன்….!

    Share
  • எழிலரசி கிளியோபாத்ரா [பேரங்க நாடகம்]

    aj
    மூலம்: ஷேக்ஸ்பியர் & பெர்னாட்ஷா
    தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++++++++

    அங்கம் -1 பாகம் -3

    அவளது கண்கள் தீவிர சக்தி வாய்ந்தவை!
    அணங்கின் வனப்பிற்கும் அப்பாற் பட்டவை!
    வான்வெளி நிலவையும் வசீகரம் செய்பவை!
    வாக்கு வன்மையில் நெகிழ வைப்பவள்!

    ஜான் டிரைடென் [John Dryden, Drama: All for Love]

    “வாழ்க்கையில் நடந்த தொடர் நிகழ்ச்சிகள் யாவும் தானாக நேர்ந்த விளைவுகள் அல்ல! அவை ஒவ்வொன்றும் உள்ளத் தூண்டலின் தேவையால்தான் ஏற்பட்டது!”

    ஹன்னா ஸெனிஷ், யூதப் பெண் கவிஞர் [Hanna Senesh (1921-1944)]

    நாடகப் பாத்திரங்கள்:

    ஜூலியஸ் சீஸர்: ரோமானியப் போர்த் தளபதி [52 வயது]
    கிளியோபாத்ரா: எகிப்தின் பட்டத்தரசி [20 வயது]
    டாலமி XIV: கிளியோபாத்ராவின் தனயன் (கணவன்), எகிப்தின் மன்னன் [15 வயது]
    ·பிதாதீதா: கியோபாத்ராவின் ஆயா [45 வயது]
    போதினஸ்: டாலமியின் பாதுகாப்பாளன் [40 வயது]
    தியோடோடஸ்: டாலமியின் ஆசிரியர் [50 வயது]
    அக்கில்லாஸ்: டாலமியின் போர்த் தளபதி [35 வயது]
    பிரிட்டானஸ்: சீசரின் அரசாங்கச் செயலாளர் [40 வயது]
    ரூஃபியோ: சீஸரின் லெ·ப்டினன்ட் [40 வயது]
    லூசியஸ் செப்டிமியஸ்: ரோமானிய இராணுவ அதிகாரி [50 வயது]
    அபெல்லோடோரஸ்: ஸிசிலியன்

    மற்றும்:

    பெல்ஸானர்: கிளியோபாத்ராவின் காவலர் காப்டன் [35 வயது]
    பெல் அ·ப்பிரிஸ்: மெம்·பிஸ் “ரா” தேவாலயத்தின் மதாதிபதி.
    ரோமானியப் படையாளிகள்.
    கிளியோபாத்ராவின் அடிமைச் சேடிகள்.
    எகிப்தின் படையாளிகள்

    காலம், நேரம், இடம்:

    கி.மு. 48. எகிப்தின் நீள நைல் நதிக்கருகில் உள்ள பாலைவனம். ஒளிமிக்க பௌர்ணமி முழுநிலவு பொங்கி எழுகிறது. நீல நிற வானில் காளான்கள் முளைப்பது போல் விண்மீன்கள் விழித்தெழுகின்றன. பிரமிட் பின்னால் நிற்க, முன்னால் பிரம்மாண்டமான மனிதத் தலைச் சிங்கம் படுத்திருக்கிறது!

    நாடகப் பாத்திரங்கள்:

    ஜூலியஸ் சீஸர், அவரது லெஃப்டினன்ட் ரூஃபியோ, ரோமானியக் காவலர் சிலர், கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன், எகிப்திய காவலர் சிலர் சிங்கச் சிற்பத்தின் அருகே நடமாடி வருகிறார்கள். திடகாத்திரமும், உடல் உறுதியும் படைத்த பெல்ஸானர் தூரத்தில் வரும் ரோமானியப் படைவீரர் கூட்டத்தைக் கண்டு வியப்புற்று நிற்கிறான்.

    aj1

    ஜூலியஸ் சீஸர்: [பிரம்மாண்டமாக வீற்றிருக்கும் மனிதச் சிங்கச் சிற்பத்தை (Sphinx) நோக்கி] மனிதச் சிங்கமே! கால வெள்ளம் அடித்துச் செல்லாத சிற்பமே! பாலை வனத்தில் மண்புயல் இழுத்துச் செல்லாத மகத்தான படைப்புச் சிற்பமே! வெற்றி மமதையுடன் நீ வீற்றிருக்கிறாய்! உனக்கு ஜூலியஸ் சீஸர் வணக்கம் செய்கிறார்! ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எகிப்தின் பாலைவனக் காவலனாகக் கண்மூடாது நிமிர்ந்து படுத்திருக்கிறாய்! நீயும் நானும் ஒரே குறிக்கோள் உடையவர்! உன்னைப் புரிந்து கொள்வது எப்படிச் சிரமமானதோ, அப்படிக் கடினமானது என்னை அறிந்து கொள்வதும்! சிறுவனாக உள்ள போது நஉன்னைப் பற்றி அறிவேன்! உன் நிழலில் எனது பராக்கிரமும் வல்லமையும் வளர வேண்டும் என்று சிறு வயதில் கனவு கண்டதுண்டு! அக்கனவு மெய்யானது! உங்கள் எகிப்து நாட்டுக்கும் நான் ஓர் அதிபதி! ரோம் பைத்தியகாரின் விளையாட்டுத் தளமாகி விட்டது! ஆனால் எகிப்து நாடு பொன்னும், பொருளும் குவிந்த நாடு! உங்களது நாட்டால் ரோம் செல்வ நாடாகச் செழித்திருக்கிறது! ரோம சாம்ராஜியத்தைத் தாங்கி நிற்கும் பிரதான தூண்களில் எகிப்தும் ஒன்று! உன் மகத்துவம், உன்னதம் வாழ்க! உனது நாட்டுக்கு இரண்டு மன்னர்! ஆண் மன்னர் டாலமி! பெண் மன்னர் கிளியோபாத்ரா! அவர்களிருவரும் ஒருவர் முகம் ஒருவர் பாராமல், ஒருவரை ஒருவர் ஒழித்துக் கட்டத் துணிந்து விட்டார்! யார் தலை விழப் போகிற தென்று தெரிய வில்லை! அவரது சண்டையை நிறுத்த நான் வந்திருக்கிறேன். மன்னர் டாலமிக்கு பதினைந்து வயதாமே! அந்த பாலகன் இந்த நாட்டு வேந்தனா? விளையாட்டுப் பிள்ளை எப்படி வேந்தனாக ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான்? கிளியோபாத்ராக்கு வாலிப வயதாமே! கவர்ச்சி நங்கையை நான் சந்திக்க வேண்டும். எங்கே ஓடிவிட்டாள் உங்கள் ராணி?

    [கிளியோபாத்ராவின் காப்டன் பெல்ஸானர், உதவிக் காப்டன் மற்றும் எகிப்த் காவலர் ரோமானியரை நெருங்கி ஜூலியஸ் சீஸருக்கு ராவணுவ முறையில் வணக்கம் செய்கிறார்கள்]

    பெல்ஸானர்: [சீஸர் கையைக் குலுக்கி] வருக, வருக ரோமாபுரித் தளபதி அவர்களே! எகிப்து அரசு உங்களைக் கனிவுடன் வரவேற்கிறது! நான்தான் காப்டன் பெல்ஸானர். அரசி கிளியோபாத்ராவின் காப்டன். இவர்தான் உதவிக் காப்டன்.

    ஜூலியஸ் சீஸர்: [புன்னகையுடன்] கனிந்த வரவேற்புக்கு மகிழ்ச்சி. இவர்தான் ரூஃபியோ, லெஃப்டினென்ட் ரூஃபியோ. அரசி கிளியோபாத்ராவின் காப்டன் என்றால், அரசர் டாலமிக்கு வேறொரு காப்டனா?

    பெல்ஸானர்: ஆமாம் ஜெனரல். அக்கில்லாஸ் என்பவர் டாலமியின் போர்த் தளபதி. அரசர் டாலமிக்கு ஆசிரியர் ஒருவரும் உண்டு. தியோடோடஸ் என்பது அவர் பெயர். டாலமியின் முதல் மந்திரி அவர். அவரே அரசாங்க அதிகாரி. பல மொழிகளைக் கற்றவர். ஆனால் எங்கள் அரசி கிளியோபாத்ராவுக்கு ஏழு மொழிகள் எழுதப் பேசத் தெரியும். எகிப்திய மொழியில் எழுதவும், பேசவும் அறிந்த முதல் கிரேக்க அரசி அவர்.

    ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ரா எங்கே இருக்கிறார்? நான் அலெக்ஸாண்டிரியா போகிறேன். நான் கண்டு பேச வேண்டும் உங்கள் ராணியை. ஏற்பாடு செய்வீரா?

    பெல்ஸானர்: ஜெனரல் அவர்களே! நீங்கள் தேடிப் போக வேண்டாம். அவரே உங்களைக் காணத்தான் முயன்று கொண்டிருக்கிறார். மன்னர் டாலமி எங்கள் அரசியியை நாடு கடத்தி விட்டார்! சிரியா நாட்டில் வசித்து வருகிறார் தற்போது. ஆனால் அவர் சிரியாவில் எங்கே யிருக்கிறார் என்பதை அறிய முடியாது. அவருக்குச் சேதி அனுப்பவும் முடியாது! டாலமியின் ஒற்றர் அவர் ஒளிந்திருக்கு மிடத்தைக் கண்டால், அவரது உயிருக்கே ஆபத்து! அவரைத் தேடிக் காண்பதும் அத்தனை எளிதன்று. டாலமியின் ஓநாய்கள் எங்கள் அரசியைத் தேடி அலைகின்றன!

    ஜூலியஸ் சீஸர்: ஏனிப்படி உமது ராணியார் ஒளிந்து, ஒளிந்து உயிர் வாழ்கிறார்? யாரிடம் அத்தனை பயம்! டாலமிக்கு கிளியோபாத்ரா மீது ஏனிந்த வெறுப்பு? அவள் டாலமியின் ச்கோதரி அல்லவா?

    பெல்ஸானர்: டாலமியிடம்தான் பயம்! நாடு கடத்திய பிறகும் டாலமி தமக்கையை நசுக்கத்தான் காத்திருக்கிறார். பாலைவனத்தில் அலைய விட்ட பாவை நாளை அவர் உயிரைப் பறிக்க வரலாம் என்று டாலமி அஞ்சுகிறார்.

    ஜூலியஸ் சீஸர்: ஆச்சரியமா யிருக்கிறது. டாலமிக்கு அஞ்சுபவர் அரசி கிளியோபாத்ராவா? கிளியோபாத்ராவுக்கு அஞ்சுபவர் அரசர் டாலமியா? எகிப்தின் பால மன்னர்கள் ஒருவரை ஒருவர் பிடிக்கக் கண்ணாமூச்சி விளையாடுகிறாரா? யார் யாரை பிடித்துக் கவிழ்த்தப் போகிறாரோ? …. நான் எகிப்துக்கு வந்திருப்பதின் காரணம் டாலமி கிளியோபாத்ரா இருவரையும் ஒன்று சேர்ப்பதற்கே! ஒரு தந்தைக்குப் பிறந்த இருவரும் கைகோர்த்து எகிப்தை ஆள வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். அவ்விதமே ரோமா புரியும் ஆசைப் படுகிறது.

    பெல்ஸானர்: மதிப்புக் குரிய தளபதி அவர்களே! இருவரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்தவர்தான்! கணவன் மனைவியாக எகிப்தின் விதிப்படித் திருமணம் புரிந்து கொண்டவர்தான்! ஆனால் இது மிகவும் சிக்கலான ஆட்சி! பிரச்சனை மிக்கது! ஆண் அரசர் போடும் ஒரு சட்டத்தைப் பெண்ணரசர் பிடிக்காமல் நிராகரிக்கிறார்! பெண்ணரசி போடும் சட்டத்தை டாலமி ஏற்றுக் கொள்வதில்லை! இருவருக்கும் இடையில் மக்கள் வேதனைப் படுகிறார்! இருவர் ஒரு நாட்டை ஆள முடியாது! ஒருவர் ஆள ஒருவர் மேற்பார்வை யிடலாம்! ஒருவர் ஆள ஒருவர் ஓய்வெடுத்துக் கொள்ளலாம்! ஆனால் ஒரு நாட்டுக்கிரு மன்னர் கூட்டாட்சி நடத்த முடியாது! யாராவது ஒருவர் ஆள்வதுதான் மதியுடைமை. வயதில் மூத்த, கல்வி ஞானமுள்ள, கலைப் பேறுள்ள எங்கள் அரசி கிளியோபாத்ராதான் நாட்டை ஆளத் தகுதி பெற்றவர்! டாலமி அடுத்தவர் ஆட்டி வைக்கும் கைப்பொம்மை ஆடி வருகிறார்! அவருக்கு வயது பதினைந்து! முகத்தில் இன்னும் பால் வடிகிறது! கல்வி அறிவு, உலக அனுபவம் டாலமிக்குப் போதாது! அவருக்கு எகிப்தைப் பற்றியும் அறிவு போதாது! ரோமைப் பற்றி எதுவும் அறியதவர்!

    ஜூலியஸ் சீஸர்: கிளியோபாத்ராவும் வாலிப மங்கை என்று கேள்விப் பட்டேன். பெண்ணரசி நாட்டை ஆள முடியுமா? கண்ணுக்கு மையிடும் மாதரசி, கட்டளை யிட்டுப் படைகளை நடத்த முடியுமா? மென்மை மிகுந்த பெண்ணரசி குதிரை ஏறி, வாள் வீசிப் போரிட முடியுமா? ஆயிரம் ஆயிரம் சேனைகளை ஆணையிட்டு நாட்டைப் பிடிக்க ஆசை உள்ளதா?

    aj2

    பெல்ஸானர்: எமது அரசி மகா வீரர் அலெக்ஸாண்டர் வம்சா வழியில் பிறந்தவர்! மீன் குஞ்சுக்கு நீந்தத் தெரியுமா என்று கேட்கிறீர்! இருபது வயது அரசி கிளியோபாத்ராவுக்கு உள்ள திறமை நாற்பது வயது ரோமானியத் தளபதிக்குக் கூடக் கிடையாது! கணித அறிவு மிக்கவர். விஞ்ஞான அறிவு மிக்கவர். வானியல் ஞானம் உள்ளவர்! தினமும் படிக்கிறார். புதுப்புது மொழிகளைக் கற்கிறார். பூகோள ஞானம் மிக்கவர்! போர் புரியும் வல்லமை உடையவர். அலெக்ஸாண்டர் இந்தியா மீது படையெடுத்துச் சென்று வென்றதைப் படித்தவர்! இந்தியாவுக்குப் பயணம் செய்யும் பாதைகளைக் கூடத் தெளிவாகத் தெரிந்தவர்!

    ஜூலியஸ் சீஸர்: ஆச்சரியப் படுகிறேன்! வாலிபத்தின் வாசலில் கால் வைத்த ஒரு பால்ய மங்கைக்கு இத்தனை ஆழ்ந்த அறிவா? மெச்சுகிறேன்! மகா வீரர் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்குப் போன பாதையை அறிந்தவர், நிச்சயம் மகா அறிவாளியாக இருக்க வேண்டும். கிளியோபத்ராவை நான் நேராகக் காண வேண்டும். உடனே ஏற்பாடு செய்வீரா?

    பெல்ஸானர்: ஜெனரல் அவர்களே! கிளியோபாத்ரா எங்கு ஒளிந்துள்ளார் என்று எனக்கே தெரியாது! எங்கள் அரசியைத் தனியாகக் காண்பது அத்தனை எளிய காரிய மில்லை! அவர் ஓரிடத்தில் இரண்டு நாள் தங்குவதில்லை! கொஞ்சம் பொறுங்கள். அவரிடத்தை முதலில் நான் தெரிந்தாக வேண்டும். தெரிந்த பின் உங்களுக்குத் தகவல் அனுப்புவேன்.

    *********************

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”சென்ற வருடம் என்று நினைக்கிறேன்….திருவல்லிக்கேணி ஸ்ரீபிரியா நினைவூட்டியும், பாழும் தூக்கத்தால் பெருமாள் கருட வாகனம் பாராது பாழானேன்…இன்று ”கேசவ்” உபயத்தால் வினதை மகன் முதுகேறி வரும் புள்ளமர்ந்த(கருட வாகனன்) புருஷோத்தமனை தரிசிக்கும் வாய்ப்பு….!

    பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனம்….
    ——————————————————–

    kesav
    கொள்ளும்புண் ணாக்கும் குதிரைக்(கு) அளித்தன்று
    வில்விஜயன் தேரை விரட்டியவன் -புள்ளமர்ந்து
    வல்லிக் குளத்தை வலம்வருதல் காணாது
    பள்ளிக் கிடந்தொழிந்தேன் பாழ்….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    ‘’மனப்பால் அபிஷேகம் மாதவர்க்கு, மாடு
    தினப்பால் கறக்காமல் தூக்கம் : -வனப்பிதை,
    தந்தகேசவ் வாழ்க, தினம்மடி மோட்சமிடும்
    கந்தவேளின் மாமன்வாழ் க’’….கிரேசி மோகன்….!

    Share
  • கட்டன்ஹாவும் மனைவியும்

    (அங்கோலா நாட்டுச் சிறுகதை
    எழுதியவர் – ராஉல் டேவிட்)

    ராஉல் டேவிட் (Raúl David) பற்றிய சிறுகுறிப்பு:

    ராஉல் மாத்யூ டேவிட் எனும் முழுப் பெயர் கொண்ட எழுத்தாளர் ராஉல் டேவிட் 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி அங்கோலா நாட்டிலுள்ள பெங்குஎலா மாகாணத்தில் காண்டா எனும் பிரதேசத்தில் பிறந்தார். தனது கிராமத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்ற அவர் மேற்படிப்புக்காக கலாங்கு எனும் நகரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயர்கல்வியைப் பூர்த்தி செய்ததும் அரச சேவையில் இணைந்து பல தரங்களிலும் பணியாற்றியுள்ளார்.

    பணி நிமித்தம் நாட்டின் பல பிரதேசங்களுக்கும் பயணிக்க வேண்டியிருந்த காரணத்தால் பல மொழிகளைக் கற்றுக் கொள்ளவும் கிராமப்புறப் பண்ணைத் தொழிலாளர்களுடன் நெருங்கிப் பழகவும், அவர்களது பிரச்சினைகளை அறிந்து கொள்ளவும் அவருக்கு சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவற்றை கட்டுரைகளாகவும் இலக்கியப் படைப்புக்களாகவும் எழுதி வந்தார். அவை பின்னாட்களில் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

    அங்கோலா எழுத்தாளர்கள் சங்கம் (UEA) உருவாகுவதற்கான பிரதான  காரணகர்த்தாவான இவர், பல்வேறு கலாசார, இலக்கிய செயற்பாடுகளிலும், ஆப்பிரிக்க – ஆசிய எழுத்தாளர்களின் ஒன்றுகூடலிலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

    இவரது தொகுப்புக்கள்:

    Colonized and settlers (1974), Poems (1977), Traditional Tales of Our Land (I) (1978); Narratives at random (1979), Traditional Tales of Our Land (II) ( 1981), Against the law and the flock (1988), Song of Our People, written versions of songs and poems in language Umbundu (1988), Song of Yesterday to Listen and Tell (1989), From Traditional Justice of Umbundus (1997), Benguela in time and space (2000) and Old Owl history.

    ***

     தமிழில்  -எம்.ரிஷான் ஷெரீப்

                அந்தச் சம்பவம் நடைபெறும்போது கட்டன்ஹா – டொம்பூலா தம்பதி, இஸாக் ஆற்றுக்கும், உலம்பு மலைக்குமிடைப்பட்ட செழிப்பான நிலப் பகுதியில் எழில் வாய்ந்த கிராமமான ‘டுங்கா’வில் வசித்து வந்தனர். நரைத்த தலைமயிரையும் நீண்ட அனுபவங்களையும் கொண்ட, அப் பிரதேசத்தில் பிரசவம் பார்க்கும் முதியவளான நெகும்மின் உதவியோடு அந்தக் குடும்பத்துக்கு குழந்தைகள் மூவர் இணைந்தனர்.

                அவர்களுக்கு வேண்டிய அனைத்துமே பரிபூரணமாக இருந்ததால், கட்டன்ஹாவோ டொம்பூலாவோ குடும்ப வாழ்க்கையின் சிக்கல்கள் குறித்து அறிந்திருக்கவில்லை. அவர்களுக்குச் சொந்தமான பல ஹெக்ரயர்கள் விசாலமான விவசாய நிலத்தில் நல்ல அறுவடையைப் பெற்றுக் கொள்ள முடிந்தது. விலங்குப் பண்ணையிலிருந்தும் நல்லதொரு வருமானம் கிடைத்தது.

                1937 வரைக்கும் அவர்கள் மிகவும் மகிழ்வாக வாழ்ந்தனர். 1937இல் திடீரென நடந்த ஒரு சம்பவத்தின் பலனாக அவர்களது அமைதியும் சந்தோஷமும் நிறைந்த உலகம் சிதறிப் போனது. அடிமைகளாக வேலை செய்விக்க மனிதர்களைப் பிடித்துப் போகும் சமயத்தில் கட்டன்ஹாவும் சிக்கிக் கொண்டான்.

    இவ்வாறாக மனிதர்களைப் பிடித்து அடிமை வேலைகளுக்காகக் கொண்டு செல்வதென்பது தேச மக்களுக்கு பெருந் துயரத்தைத் தருமொன்றாக இருந்ததோடு, ஓரோர் குடும்பத்தின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது. வரிகளைக் கட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு மாற்றம் செய்வது ஆகியன மக்களை இவ்வாறு பிடித்துச் செல்வதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. எனினும் உண்மையில் இவ்வாறான ஆட்கடத்தல்கள் மேற்கொள்ளப்படுவது சாந்தோம், ப்ரின்ஸஸ் தீவுகளில் அடிமை வேலைகளுக்காக ஆட்களைப் பெற்றுக் கொள்வதற்கேயாகும்.

                பிடித்துக் கொள்ளப்பட்டிருந்த மற்றவர்களோடு கட்டன்ஹாவும் ஆட்சியாளர் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டான். இவ்வாறு பிடித்துக் கொண்டு வரப்பட, தான் என்ன தவறு செய்தோமென கட்டன்ஹாவுக்குத் தெரியவில்லை. கையில் ஊசி மருந்து ஏற்றப்பட்டதன் பிற்பாடு அவனுக்கு ‘சாந்தோம்’ நோக்கிச் செல்லும் கப்பலில் ஏற நேர்ந்தது.

                எல்லோரும் சாந்தோமில் இறக்கி விடப்பட்டனர். கட்டன்ஹா, கோப்பி மற்றும் கொக்கோ தோட்டமொன்றில் வேலையில் ஈடுபடுத்தப்பட்டான். அது மிகவும் கடினமானதொன்றாக இருந்தது. இரவில் திரும்ப முகாமுக்கு வருகையில் அவனுக்கு எவ்வளவு களைப்பாக இருப்பினும், அதையெல்லாம் மறந்து அவனது பிறந்த பூமியான டுங்கா பற்றி நினைத்துக் கொண்டிருப்பான். அவனது உடல் சாந்தோமில் இருந்த போதிலும், அவனது இதயமும், எண்ணங்களும் முழுமையாக அவனது மனைவியிடமும், மூன்று குழந்தைகளிடமுமே வசித்தன. அவன் தனிமையை உணர்ந்தான். எப்பொழுதாவது விடுதலை கிடைத்து திரும்பிச் செல்லும் இலக்கோடு அவன் தைரியமாக வேலை செய்தான். அவனது தைரியம் உறுதிப்பட்டுக் கொண்டு வந்ததோடு, அவன் ஐந்து வருடங்கள் சாந்தோமில் வேலை செய்திருந்தான்.

               ஐந்து வருடங்கள் மட்டுமே கழிந்து போயிருந்தன.  தனித்திருந்ததன் காரணத்தால் அவன் அந்த வருடங்களைப் பத்தாக உணர்ந்திருந்தான். இதற்கிடையில் அவனது மனைவி டொம்பூலா பற்றி எந்தத் தகவலையும் அவனால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் தனது குழந்தைகள் மூவருடனும் இன்னொருவனுடன் வாழத் தொடங்கியிருந்தாள்.

                டொம்பூலா மனம் கவரும் அழகுடன் கூடிய இளம் யுவதியாக இருந்தாள். செழிப்பாக வளர்ந்த மேனியைக் கொண்ட அவள் அப்பாவித் தோற்றமுடையவளாக இருந்தாள். அதனால் இம்மனிதன் அவள் பின்னால் சென்றது ஆச்சரியப்படத்தக்க விடயமொன்றல்ல. தனது மனதைச் சரிப்படுத்திக் கொள்ள வேண்டுமென அவள் ஆரம்பத்தில் சொல்லிக் கொண்டிருந்த போதிலும், பிறகு அவனது யோசனையை ஏற்றுக் கொண்டாள். அன்பானவனாக இருந்த அவன், அவளையும் மூன்று குழந்தைகளையும் நன்றாகக் கவனித்துக் கொண்டான்.

                சாந்தோமில் கட்டன்ஹா ஆறு நாட்களும் தொடர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமைகளில் அவன் ஓய்வெடுத்தான். வீடு குறித்த வருத்தம் இருந்தபோதிலும் அவன் சுற்றுச் சூழலுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளப் பழகிக் கொண்டான். கௌரவமான குடும்பமொன்றிலிருந்து வந்த அவனுக்கு அது இலகுவாகவும் இருந்தது.

                காலங்கள் கழிந்தன. வழமை போல ஓர் தினம், விடியலுக்கு முன்பு அவன் வரிசையில் இணைந்திருந்தான். கொக்கோ பழங்களைச் சேகரிக்கும் பை அவனது தோளைச் சுற்றித் தொங்கிக் கொண்டிருந்தது. கை விளக்கொன்றை வைத்திருந்த மேற்பார்வையாளர், தோட்டத்தில் வேலை செய்யும் எல்லாத் தொழிலாளர்களையும் முகாமையாளர் அழைத்துவரச் சொல்லியிருப்பதாக அறிவித்தார். எதிர்பார்த்திராத இந்த அழைப்பு குறித்து அம் மனிதர்கள் அச்சமுற்றனர். இதற்கு முன்பு நிகழ்ந்தது போல இதுவும் அவர்களுக்கு துயரம் விளைவிக்கும் நோக்கோடு அழைக்கப்படும் அழைப்பாக இருக்கக் கூடும்.

                முகாமையாளரின் அலுவலகத்துக்கு அருகில் வரும்போது மற்றத் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களும் அங்கு கூடியிருப்பதை அவர்கள் கண்டனர். ஒருவருக்கொருவர் கதைத்துக் கொள்வது தடை செய்யப்பட்டிருந்ததால், அவர்கள் அச்சத்தோடு அமைதியாக இருந்தனர்.

                அவர்கள் மீண்டும் வரிசையில் ஒன்று கூடினர். நீண்ட நேரத்துக்குப் பிறகு அலுவலகத்தின் கீழ் மாடி யன்னலில் முகாமையாளர் தோன்றினார். அவர் கண்களைக் கசக்கி முற்றத்தில் கூடியிருந்த மக்களைப் பார்த்து விட்டு அலுவலகத்தின் உள்ளே சென்றார்.

                அரை மணித்தியாலமளவில் கழிந்த பிறகு திரும்பவும் அவர் யன்னலின் முன்னால் தோன்றினார். அவரது மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றிய மேற்பார்வையாளரும் அவரது அருகிலேயே நின்றார். மேற்பார்வையாளரின் கரங்களில் கடதாசித் தாள்களின் கட்டொன்று இருந்ததோடு, அவர் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லிக் கூப்பிடத் தொடங்கினார். அவரது பெயர் சொல்லி அழைக்கும் ஓசையோடு அங்கிருந்த அமைதி சிதறிப் போனது.

                டொங்குவா – இருக்கிறேன்
    மெகிண்டோ – இருக்கிறேன்
    நயீம் – இருக்கிறேன்
    உகம்பா – இருக்கிறேன்
    டுன்கோ – இருக்கிறேன்
    கொரன்கா – இருக்கிறேன்
    உலொம்பா – இருக்கிறேன்
    கலொன்கா – இருக்கிறேன்

              அநேகமாக நூறு பெயர்கள் தாண்டிய பின்பு கட்டன்ஹாவின் பெயரும் அழைக்கப்பட்டது. நீண்ட நேரமாக பெயர் கூப்பிட்டு முடிந்ததன் பிற்பாடு முகாமையாளர் உரையாற்றினார். அவர் ஒவ்வொரு வசனமாக தெளிவாக உச்சரித்து அறிவிப்பொன்றை நிகழ்த்தினார். வரிசையில் நின்றிருந்த மக்கள் தங்கள் கழுத்துக்களை நீட்டி முகாமையாளர் சொல்வதை மொழிபெயர்த்துச் சொல்லும் மொழிபெயர்ப்பாளருக்கு செவிமடுத்தனர்.

                “இப்பொழுது உங்களால் அங்கோலாவுக்குத் திரும்பிச் செல்ல முடியும். நீங்கள் இங்கு இருக்க வேண்டிய காலம் நிறைவடைந்து விட்டது. உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணத்தொகை இப்பொழுது கிடைக்கும். அதன் பிறகு உங்களால் கப்பலேற முடியும். புரிந்ததா?”

               மேற்பார்வையாளரின் மொழிபெயர்ப்பு முடிவதற்கும் முன்பு, மக்களிடையே தவழ்ந்த அமைதி உடைந்து போயிற்று. அவர்களது உடனடி ஆரவாரத்தை, நீண்ட காலம் சிறையிலிருந்து விடுதலையாகும் ஒருவராலேயே புரிந்துகொள்ள முடியும். கட்டன்ஹாவின் விழிகளிலிருந்து வழிந்த கண்ணீர் நிலத்தோடு கலந்தது. இப்பொழுது அவர்கள் மீண்டும் பயணத்துக்குத் தயாராக வேண்டும். அவர்களுக்கு பணத்தின் ஒரு பகுதி கிடைத்ததோடு, நகரத்துக்குச் சென்று அப் பணத்தால் ஏதாவது விலைக்கு வாங்கிக் கொள்ளவும் முடியுமாக இருந்தது. மீண்டுமொரு முறை பெயர் கூப்பிடப்பட்டு, அவர்களுக்கு கடற்பிரயாண அனுமதிப் பத்திரமும் வழங்கப்பட்டது.

                பணமும், அனுமதிப் பத்திரமும் கிடைத்ததன் பிற்பாடு ‘லுஸிலா’ எனும் கப்பலில் பயணிக்கும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைத்தது. ‘லுஸிலா’ கப்பலானது நிறைய துறைமுகங்களில் பொருட்களை இறக்குவதற்காகவும், ஏற்றுவதற்காகவும் தரித்திருந்ததன் காரணத்தால், அதற்கு ‘லெபிடோ’ துறைமுகத்துக்கு வந்து சேர மூன்று வாரங்கள் பிடித்தது.

                கப்பலிலேறிய இருபத்தோராவது நாளின் மாலை ஆறு மணிக்கு ‘லுஸிலா’ கப்பலானது, அங்கோலாவுக்கு வந்து ‘லெபிடோ’ துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சியது. அதன்பிறகு அம் மக்களுக்கு துறைமுகத்தின் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டது. சுங்கப் பரிசோதனைகளின் பிற்பாடு அவர்கள் வெளியே திறந்து விடப்பட்டார்கள்.

                கட்டன்ஹாவும் இன்னும் சிலரும் பேருந்தொன்றில் ‘பொகோய்’ நகருக்குச் சென்று, அவர்களது வருகை குறித்து அங்கிருந்த குடியுரிமை நிலையத்தில் தெரிவித்தார்கள். அதன் பிறகு அவர்கள் அங்கிருந்து கடைத் தெருவுக்குச் சென்றார்கள். அங்கு கட்டன்ஹாவுக்கு அவனது பழைய நண்பர்கள் சிலரையும், நெருங்கிய உறவினர்கள் சிலரையும் சந்திக்கக் கிடைத்தது. கட்டன்ஹாவின் பிறந்த ஊரான ‘டுங்கா’ கிராமத்திலிருந்து வியாபார நிமித்தம் பொகோய் நகரத்துக்கு வந்திருந்த கட்டன்ஹாவின் மிக நெருங்கிய உறவினரொருவனும் இவர்களிலொருவன்.

                வியப்போடு ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்ட கட்டன்ஹாவும், அவனது உறவினனும் கதைப்பதற்கு நிறைய விடயங்கள் இருந்தமையால் அருகிலிருந்த மதுபானச்சாலைக்குச் செல்லத் தீர்மானித்தனர். அங்கு அவர்கள் காலமானவர்கள் குறித்தும், காணாமல் போனவர்கள் குறித்தும் கதைத்ததோடு, இறுதியில் அவனது மனைவி குறித்தும் கதைத்தனர். நன்றாக மதுவெறியிலிருந்த கட்டன்ஹாவின் உறவினன் உளறத் தொடங்கினான்.

                “டொம்பூலா இப்பொழுது பெங்குலாவின் மனைவி. அவள் இப்பொழுது மூன்று பிள்ளைகளோடும் பெங்குலாவுடன்தான் இருக்கிறாள். அவர்களுக்கும் இப்பொழுது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.”

       கட்டன்ஹாவின் முள்ளந்தண்டினூடு வேதனையொன்று பெருக்கெடுத்துச் சென்றது. மின்சாரம் தாக்கியது போல அவன் உணர்ந்தான். மது அருந்தியிருந்ததால் அவனால் கதைக்க முடியவில்லை. கட்டன்ஹா அதியுச்ச தைரியத்தை வரவழைத்துக் கொண்டு இந்த அசுபத் தகவல் குறித்து கதைக்க முயற்சித்தான்.

                “அதற்குப் பரவாயில்லை. நான் இதனை மிக நல்ல முறையில் தீர்த்து வைக்கிறேன். எப்படியிருப்பினும் அவள் எனது பிள்ளைகளின் தாய் அல்லவா!”

               அவனது உறவினன் தனது முட்டாள்தனம் குறித்து கவலையுற்றதோடு அது பற்றித் தொடர்ந்தும் கதைப்பதைத் தவிர்க்க முயற்சித்தான். கட்டன்ஹாவின் பொறுப்புணர்வு அவனை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. டொம்பூலா, தான் முகம் கொடுக்க நேர்ந்திருக்கும் விதிக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முயற்சித்தாள். அவள் தனது வாழ்வில் மிகத் துன்பகரமான நிலைமைக்கு முகம் கொடுத்திருந்தாள்.

                பெங்குலாவும் இந் நிலைமைக்கு முகம் கொடுக்கத் தயாராகவேயிருந்தான். குழாயை உறிஞ்சியபடியிருந்த அவனது மனதில் பல வித எண்ணங்கள் நிரம்பி வழிந்தன. கட்டன்ஹாவின் மீள்வருகை குறித்து அறியக் கிடைத்ததன் பிற்பாடு அவன் மோசமான செயல்களுக்குக் கூடத் தயாராக இருந்தான். கட்டன்ஹாவுக்கு நஷ்ட ஈடு கொடுக்கவும், தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்லவும் அவன் தீர்மானித்திருந்தான்.

           தனக்கு தகவலைச் சொன்ன உறவினனுக்கு விடைகொடுத்த பிறகு, கட்டன்ஹா நடந்தே டுங்கா நோக்கி வந்தான். அவன் தனது குலத்தில் பெரியவரான ‘க்விடபோ’விடம் வரும்போது இருள் சூழ்ந்திருந்தது. நாய்கள் குரைக்க ஆரம்பித்ததோடு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஆண்பிள்ளைகள் இருவர் யாரென்று பார்க்க வெளியே வந்தனர். கட்டன்ஹாவை வரவேற்க பெரியவர்கள் முன்னே வந்தனர். அவர்கள் மிக மகிழ்வோடு கட்டன்ஹாவை வரவேற்றனர்.

             மறுநாட்காலையில் அதிகளவு மக்கள் அங்கு கூடினர். அபாயங்களுக்கு முகங்கொடுக்காமல் பத்திரமாகத் திரும்பி வர முடிந்ததையிட்டு அவர்கள் கட்டன்ஹாவை வாழ்த்தினர். சில தினங்கள் கட்டன்ஹாவுக்கு உறவினர்களிடமிருந்து பரிசுப் பொருட்கள் கிடைத்தன. அவனால் தனது வீட்டுக்குச் செல்வதை அதற்கு மேலும் தாமதப்படுத்த முடியவில்லை.

                அவன் பயணித்த ஒற்றையடிப் பாதையானது மேடுபள்ளங்களால் நிறைந்தது. மலையுச்சிக்குச் சென்ற பொழுது கீழுள்ள பிரதேசம் மிக அழகாகக் காட்சியளித்தது. எதுவும் மாறியிருக்கவில்லை. வெள்ளத்திலிருந்து பாதுகாக்கப்பட அவன் வெட்டியிருந்த வாய்க்கால்கள் அப்படியே இருந்தன. அவன் தனது வீட்டுக்குச் செல்லும் பாதையில் திரும்பினான். உண்மையில் அங்கு வீடொன்று இருக்கவில்லை. அங்கிருந்தது, அவனது அழிவுற்ற பழைய வீட்டின் சேதாரங்கள் மட்டுமே. அவனது உடைமைகள் அனைத்தும் சேதமுற்றிருந்தன.

              வேலி உடைந்து வீழ்ந்திருந்தது. வாசலருகே இருந்த கற்தொடர்களைக் கொண்டுதான், வீடு இருந்த இடத்தை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. வீட்டின் கூரை, நிலத்தில் வீழ்ந்து கிடந்தது. அவன் தனது கரங்களால் நீண்ட காலத்துக்கு முன்பு கட்டிய வீடு, அழிவுற்ற சேதாரங்களின் குவியலாக இருந்தது. அவனது கண்களில் கண்ணீர் நிறைந்தது. முன்பிருந்தவாறே வீட்டைக் கட்டியெழுப்ப அவன் தீர்மானித்தான்.

                ஆனால் எல்லாவற்றும் முன்பு, அவன் டொம்பூலாவைக் காண வேண்டும். அவளும், அவளது பிள்ளைகளும் அவன் உயிர்வாழ்வதைக் காணும் மகிழ்வை அனுபவிக்க வேண்டும். அவர்கள் முன்பு போலவே மகிழ்வோடு இருக்க வேண்டும். அவனால் இன்னும் பார்த்திருக்க முடியாது. அவசரமான தீர்வொன்றை எடுக்க வேண்டும்.

                அவனது மனைவி சம்பந்தமாக எடுக்கக் கூடிய மிகச் சிறந்த தீர்வு குறித்து அவன் மிக ஆழமாகச் சிந்தித்தான். அவனுக்கு இப் பிரச்சினையை தனது மனைவியுடன் அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ள முடியுமெனினும், அவளது புதிய கணவனின் எதிர்வினை எவ்வாறானதாக இருக்கும்? இப் பிரச்சனையைச் சட்டத்தின் முன் வைக்குமிடத்து அங்கு எழும் தர்க்கங்களுக்கும், வேண்டுகோள்களுக்கும் முடிவற்றுப் போகும். உண்மையில் இரு சாராருக்கும் சாட்சிகள் இருக்கிறார்கள். எனினும் இறுதியில் ஒரு சாரார் தோற்றுப் போவர்.

                பைத்தியக்காரனொருவனைப் போலத் தனது மனைவியையும், பிள்ளைகளையும் கட்டன்ஹா நேசித்தான். அவர்கள் எப்பொழுதும் தனக்காகவே இருப்பார்களென அவன் நம்பினான். தான் வழக்கில் வெல்வதென்பது நிச்சயமென அவனுக்குத் தோன்றியது.

                அடுத்தநாள் காலை அவன் பணத்தையும் எடுத்துக் கொண்டு பொனோய் நகருக்குச் சென்று குடியுரிமை நிலையத்துக்குள் நுழைந்தான். அன்றைய தினமே மாலையில் அவன் நீதிமன்றத்தில் மொழிபெயர்த்துச் சொல்பவரைச் சந்தித்தான். கட்டன்ஹா, தான் வந்திருக்கும் காரணத்தை முழுமையாக அவரிடம் கூறினான். கட்டன்ஹாவுக்குத் தேவை, அவனது மனைவியையும் பிள்ளைகளையும் அவனிடமே பெற்றுக் கொள்வதுதான்.

                மறுநாட்காலை கட்டன்ஹா குடியுரிமை நிலையத்தின் வாயிலருகிலிருந்த வரிசையில் இணைந்து தனது முறை வரும்வரை காத்திருந்தான். மொழிபெயர்த்துச் சொல்பவருடன் கலந்துரையாடியதன் பிற்பாடு கட்டன்ஹாவின் வழக்கு முன்னிறுத்தப்பட்டது. பெங்குலாவுக்கும், டொம்பூலாவுக்கும் நீதவான் மூலம் அழைப்பாணைக் கடிதத்தை அனுப்புவதற்கு குடியுரிமை நிலைய அதிகாரி கட்டளையிட்டார்.

                அவர்களிடம் அழைப்பாணைக் கடிதத்தை கொண்டு சேர்ப்பதற்கு நீண்ட தூரம் செல்லவேண்டியிருந்ததால் அதற்காகவே ஒரு நாள் செலவழிந்தது. அழைப்பாணைக் கடிதமானது, பெங்குலா எதிர்பார்த்திருந்த ஒன்றே. என்ற போதிலும் அவன் இதற்குச் சற்றுப் பயந்தான். ஏனெனில் நீதி நிலைநாட்டப்படுவது மிகவும் அபூர்வமானது என்பதனால்தான். டொம்பூலா, பெங்குலாவின் எதிர்வினையை அறிந்துகொள்ள விரும்பினாள் எனினும் அவனிடம் செல்லும் வழிமுறை அவளுக்குத் தெரியவில்லை.

                அவர்கள் இருவருக்கும் பொனோய் நகருக்குச் செல்ல ஒரு தினம் எடுத்தது. முதலாவதாக அவர்கள் மொழிபெயர்ப்பாளரைச் சந்தித்து, வழக்கை விசாரிப்பதற்கான தினமொன்றைக் குறித்துக் கொண்டனர். குடியுரிமை நிலையத்தின் அதிகாரி விசாரிப்பதெல்லாம் அவசர வழக்குகளை மாத்திரமே. கிடைக்கும் முறைப்பாடுகளைப் பரிசீலிப்பதிலேயே அவரது காலம் கழிந்தது.

                பெங்குலாவும் டொம்பூலாவும் மூன்று நாட்கள் அங்கு இருந்ததோடு இறுதியில் அவர்களது வழக்கு விசாரிக்கப்பட்டது. முதலில் கட்டன்ஹாவும் அடுத்தது பெங்குலா, டொம்பூலா மற்றும் ஐந்து பிள்ளைகள் என முறைப்படி விசாரிக்கப்பட்டனர். முறைப்பாட்டையும் சித்தாஸியையும் வாசித்துப் பார்த்த நீதவான் எல்லோரையும் நோக்கினார்.

                ” இங்கு கட்டன்ஹா என்பது யார்?”

                ” நான்”

                “அவ்வாறெனில் உனது கதையைச் சொல்.”

                கட்டன்ஹா அவனது கதையை விவரித்தான். தான் சாந்தோமுக்கு அனுப்பப்பட்ட விதத்தையும், அங்கு ஐந்து வருடங்களைக் கழிக்க நேர்ந்த விதத்தையும் அவன் விவரித்தான். அவன் வீட்டைவிட்டு வெளியே இருந்த காலத்தில் வீட்டிலிருந்து எந்தத் தகவலும் அவனுக்குக் கிடைக்கவில்லை. அவன் திரும்பவும் வந்தபோது அவனது மனைவி இன்னுமொருவனைத் திருமணம் செய்திருப்பதை அறியக் கிடைத்தது.

               நீதவான் அவனது உரையின் மொழிபெயர்ப்பைக் கேட்டுக் கொண்டிருந்தார். இது மற்ற வழக்குகளைப் போலவே அவருக்குச் சாதாரணமான ஒன்று. அவரது முப்பது வருட சேவை அனுபவத்தில் இவ்வாறான சம்பவங்கள் இத்தேச மக்களிடத்தில் சாதாரணம்.

              ” உனக்கு உனது முதல் மனைவி அவசியமாக இருப்பது ஏன்?” அவர் வினவினார்.

               “எனக்கு அவள் அவசியமானவள். அவளை எனது வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.” தயங்காது கட்டன்ஹா பதில் கூறினான். கட்டன்ஹாவின் பதிலிலிருந்து அவனுக்குள்ளிருந்த குருட்டுத்தனமான நம்பிக்கை தெளிவாக வெளிப்பட்டது.

      “எதிராளியிடமிருந்து நஷ்ட ஈடாக என்ன பெற்றுக்கொள்ள விரும்புகிறாய்?”

               “எனக்கு அவனிடமிருந்து எதுவுமே தேவையில்லை. நான் சாந்தோமிலிருந்த ஐந்து வருடங்களிலும் எனது குழந்தைகளை அவன் பராமரித்ததற்கு நான் அவனுக்கு நன்றி செலுத்துகிறேன்” கட்டன்ஹா பதிலளித்தான்.

          எதிர்பாராத இப் பதிலால் எல்லோருமே ஆச்சரியத்துக்குள்ளானார்கள். ஒரு கணம் அமைதி நிலவியது. நீதவான் விழிகளைச் சுழற்றி ஆச்சரியத்தோடு பார்த்தார்.

                “டொம்பூலா நீயா?”

                “ஆமாம்”

                ” நீ என்ன சொல்ல விரும்புகிறாய்? இவர்களில் யாரை நீ கணவனாகத் தேர்ந்தெடுக்க விரும்புகிறாய்? கட்டன்ஹாவையா? மற்றவனையா?”

             “நான் முதல் கணவனைத் தேர்ந்தெடுக்கிறேன். அவர் எனது மூத்த குழந்தைகளின் தந்தை” டொம்பூலா தயங்காது பதிலளித்தாள்.

                அந்தக் கணத்திலேயே கட்டன்ஹாவின் பிள்ளைகள் மூவரும் தமது தந்தையின் பக்கம் சென்றனர்.

                “சரி. உனக்கு, உனது இரண்டாவது திருமணத்தின் மூலமும் இன்னும் குழந்தைகள் இருக்கிறார்கள் அல்லவா?” டொம்பூலாவின் எதிர்வினையைப் பார்த்தவாறு நீதவான் வினவினார்.

                “ஆமாம். இன்னும் இருவர் இருக்கின்றனர். ஆனால் அவர்கள் எனது மூத்த குழந்தைகளின் சகோதரர்கள்தானே”

                வழக்கு வேறோர் திசைக்கு திரும்புவதைப் போலத் தோன்றியது. இதனால் எதிராளியை அழைப்பதற்கு நீதவான் தீர்மானித்தார்.

               “இப்பொழுது உனது தீர்மானம் என்ன?”

            “நான் தீர்மானமொன்றை எடுப்பதில்லை. நான் இப் பெண்ணைத் திருமணம் முடித்தது அவள் தனியாக இருந்த காலத்திலேயே. இப்பொழுது அவளது சட்டபூர்வமான கணவன் வந்திருப்பதால் என்னால் எதுவும் சொல்ல இயலாது. உங்களது முடிவை வேண்டுகிறேன்.”

                குழம்பிப் போன நீதவான் மீண்டும் கட்டன்ஹாவை அழைத்தார்.

         “கட்டன்ஹா, இதற்குப் பிறகு எதிராளியின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது யார்?”

              “நான் அந்தப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்கிறேன். அப் பிள்ளைகள் எனது மனைவி பெற்ற பிள்ளைகள். ஆகவே அந்தப் பிள்ளைகளின் உரிமை எனக்குத்தான். அவனுக்கு எந்த நேரத்திலும் வந்து அப் பிள்ளைகளைப் பார்த்துச் செல்லலாம்.”

               நீதவான் தலையசைத்தார். அமைதி மீண்டும் அரசாண்டது. இப்பொழுது நீதவான் புத்திசாலித்தனமான, கருணை மிக்க  முடிவொன்றை எடுக்கவேண்டிய நிலையிலிருந்தார். அவர் சிறிது நேரம் சிந்தித்தார்.

              “சிலவேளை நீ இதன்பிறகு எதிராளியுடன் பிரச்சனை ஏற்படுத்திக் கொள்வாயா?”

              “எதற்காக? எனது பிள்ளைகளை வளர்த்தெடுத்ததற்கு நான் அவனுக்குக் கடன்பட்டிருக்கிறேன். நான் அவனை எனது நண்பனொருவனாகத்தான் உபசரிப்பேன். அவனும் அப்படியே எண்ணுவானென நான் நினைக்கிறேன்.”

                “பெண்ணே, நீ பெங்குலாவிடம் பராமரிப்புப் பணம் ஏதாவது கேட்கவில்லையா?”

                “இல்லை. ஏனெனில் அவர் இன்றிலிருந்து எனது மூத்த பிள்ளைகளின் சகோதரர்களுடைய தந்தை.”

                “ம்ம்”

                எல்லோருக்குமே ஒற்றுமையாக வீட்டுக்குச் செல்ல அனுமதி கிடைத்ததோடு எவரிடமிருந்தும் எந்தக் கட்டணமும் அறவிடப்படவுமில்லை.

    Share
  • உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

     

     

    aj

    பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்

    ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

    ++++++++++++++++++

     

    28] முதிய கயாமுடன் வா, ஞானிகள் பேசட்டும்.

    ஒன்று மட்டும் உறுதி, ஓடுகிறது வாழ்க்கை

    மற்றவை பொய்யாகும் என்பதும் உறுதியே

    ஒருமுறை உதிர்ந்த பூ நிரந்தரச் சருகு !

    XXVIII. [28]
    Oh, come with old Khayyam, and leave the Wise
    To talk; one thing is certain, that Life flies;
    One thing is certain, and the Rest is Lies;
    The Flower that once has blown forever dies.

    +++++++++++++++

    [29] அடிக்கடி வாலிபத்தில் ஆர்வமாய் வாதிப்பேன்

    அதைப் பற்றித்தான் மேதையர், புனித ரோடு;

    தருக்கம் மீண்டும் மீண்டும் புரிந்தும் என்றும்

    திரும்பத் திரும்ப வந்தேன் புகுந்த வாசல் வழி !

    XXIX. [29]
    Myself when young did eagerly frequent
    Doctor and Saint, and heard great Argument
    About it and about; but evermore
    Came out by the same Door as in I went.

    ++++++++++++

    [30] ஞான விதைகளை விதைத்தேன் அவருடன்,

    மெய்வருந்தி உழைத்து அவற்றை வளர்த்தேன்;

    கிடைத்த அறுவடை எனக்கிது மட்டுமே:

    நீராக வந்தது, காற்றாகப் பறந்தது.

    XXX. [30]
    With them the Seed of Wisdom did I sow,
    And with my own hand labour’d it to grow:
    And this was all the Harvest that I reap’d –
    ‘I came like Water and like Wind I go.’

     

    +++++++++++++++

    Share
  • படக்கவிதைப் போட்டி – 100

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

    16831666_1240788995975297_1240254648_n

    112795645@N05_rஷாமினி எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (25.02.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும், தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி. மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்.

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (44)

    நிர்மலா ராகவன்

    கோபம் பொல்லாத வியாதி

    நலம்-2-1
    கோபம் மனித இயற்கை. சிறு குழந்தைகூட பசி வரும்போது, அழுது, தன் தேவையை வெளிப்படுத்தும். உடனே பால் கிடைக்காவிட்டால், கோபம் அதிகரிக்க, அழுகையும் பலக்கும்.

    `நான் கோபக்காரன். அதற்கு என்ன செய்வது? கோபம் இயற்கைதானே!’ என்று, கோபத்தை அடக்கத் தெரியாது, வன்முறையில் இறங்குபவர்களும் உண்டு.

    இது எந்த விதத்தில் சரி? கோபம் ஆத்திரமாக மாறும்போது, பிறரும் அதனால் பாதிக்கப்படுகிறார்களே!

    தார்மிக கோபம்

    தீயது என்று தெரிந்தே சிலர் செய்யும் காரியங்களால் நாம் அடையும் கோபம் இது.

    `ஒன் வே’ (One Way) என்று போட்டிருந்தாலும், எல்லாரும் தவறான வழியில் அத்தெருவில் காரோட்டிப் போகும்போது, `நான்தானே சரியாகப் போகிறேன்!’ என்ற மிதப்புடன் ஒருவன் சென்றால் யாருக்குக் கெடுதல் விளையும்? அவர்களைப் பின்தொடராது, வேறு வழியைப் பார்த்துக்கொண்டு போக வேண்டியதுதான்.

    பதின்ம வயதினல் பலரும் உலகம் எப்படியெல்லாம் சிறந்திருக்க வேண்டும் என்று கற்பனை செய்திருப்பார்கள். அது பொய்த்து, `உலகம் இவ்வளவுதானா!’ என்று தோன்றிப்போவதை ஏற்க முடியாதபோது, கோபம் வருவது இயல்பு.

    ஆனால், அதை மாற்ற முடியாது என்கிற உண்மை புரியும்போதும் அந்தக் கோபத்தை விடாமல் பிடித்துக்கொண்டிருப்பதால் யாருக்கு நன்மை? கோபத்தை ஒத்திப்போட்டால், அதன் தீவிரம் குறையும். மாற்று வழியும் புலப்படும்.

    கதை

    ஒரு முறை நாங்கள் குடும்பத்துடன் மிருகக்காட்சி சாலைக்குப் போயிருந்தபோது, மலாய் இளைஞன் ஒருவன் தன் கைநிறைய சிறு சிறு கற்களை வைத்துக்கொண்டு, கூண்டுக்குள் இருந்த குரங்குக்குட்டிமேல் எறிந்து கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் அது வலியில் துடித்துக் கத்தியபடி வேறு இடத்துக்குத் தாவியபோது, உரக்கச் சிரித்தான். பக்கத்திலிருந்த காதலியைப் பார்த்துப் பெருமிதத்துடன் பார்த்தான் — என்னமோ தன் வீரத்தால் அவளை அசத்த நினைத்தவன்போல்.

    எங்களால் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை.

    அவன் காதில் படும்படி, “மிருகங்களைப் பிடிக்காதவர்கள் இங்கு (Zoo) வந்திருக்கவே கூடாது!” என்று ஆங்கிலத்தில் கடுமையாகச் சொன்னாள் என் மகள்.

    முகம் சிறுத்துப்போக, அவன் அங்கிருந்து விரைந்தான்.

    நிராசையே கோபம்

    ஒன்றரை வயதுக் குழந்தையான பாலன் ஓயாது ஏதேதோ பேசினான். மழலையில் அவன் கூறியது தாய்க்கு விளங்கவில்லையே என்று அழுதும் பார்த்தான். அப்படியும் பலனில்லாது போகவே, நிராசை கோபமாக மாறியது.

    அம்மாவைக் கோபித்துக்கொள்ள முடியுமா?

    தன்மேலேயே கோபம் வர, நெற்றியைச் சுவற்றில் முட்டிக்கொள்ள ஆரம்பித்தான். நெற்றி புடைத்துப்போயிற்று. ஆனாலும் அம்மாவுக்கு அவன் மொழி புரியவில்லை. `அப்படிச் செய்யாதே!’ என்று அவள் மன்றாடியும், அவனால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை.

    அதனால், அவன் சுவற்றருகே போகும்போதெல்லாம் தன் கையை அதன்மேல் வைத்து, அவனுடைய நெற்றியைப் பாதுகாப்பாள் தாய்!

    தெருவில் நெரிசல் அதிகமாக இருக்கும்போது, எல்லா வாகன ஓட்டிகளும் பல்வேறு ஒலிகளை எழுப்புவார்கள். இதனால் முன்னாலிருப்பவர்கள் வேகமாகப் போய்விடுவார்களா, என்ன? பிறர் தான் நினைத்தபடி நடக்கவில்லையே என்ற ஆத்திரத்தை வெளிப்படுத்த ஏதோ ஒரு வழி!

    இதேபோல், பதவியிலிருக்கும் சிலர் செய்யும் அக்கிரமங்களை பார்ப்போரிடமெல்லாம் கூறிக் கூறி அங்கலாய்ப்பார்கள் சிலர். இதற்கென்றே டீக்கடைகளுக்குப் போகிறவர்களும் உண்டு!

    ஒருவர் அடையும் கோபத்தால் பிறரை மாற்றிவிடுவது நடக்காத காரியம்.

    கதை

    எவ்வளவோ எதிர்பார்ப்புகளுடன் இல்லற வாழ்வில் அடியெடுத்து வைத்திருந்தாள் துர்கா. ஆனால், அவள் கணவன் ஈச்வரனோ, எப்போதும்போல் தன் நண்பர்களுடனேயே பெரும்பொழுதைக் கழித்தான்.

    இரவில் நேரங்கழித்து அவன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் துர்கா தன் கோபத்தில் உழன்று கொண்டிருப்பாள். அவர்களுக்குடையே விவாதம் முற்றும். அவளைத் தவிர்க்க, இன்னும் அதிக நேரத்தை வெளியில் செலவிட்டான் ஈச்வரன்.

    துர்காவின் ஆரோக்கியம் கெட்டது. மன இறுக்கம் தலைவலி, வயிற்றுக்கோளாறு, இளைப்பு என்று பல உபாதைகள்.

    சில வருடங்களுக்குப் பிறகு, கணவனை மாற்ற முடியாது என்று புரிந்துகொண்டாள். செய்ய முடியாத காரியத்திற்காகத் தன் உடலை எதற்காகக் கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஞானோதயம் பிறக்க, தோழிகளுடன் நேரத்தைச் செலவிட ஆரம்பித்தாள்.

    `விவாகரத்து,’ என்று வழிகாட்டினர் சிலர். துர்கா ஒப்பவில்லை.

    எந்த எதிர்பார்ப்பையும் விடுத்து, தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபட்டாள். மனமும் தெளிந்தது.

    இவள் சுமுகமாக, ஈச்வரனும் அதிகப் பொழுதை வீட்டில் கழிக்க ஆரம்பித்தான். (இது நடக்க பல வருடங்கள் ஆயின).

    நினைத்ததெல்லாம் நடக்காவிட்டால்

    போட்டியில் பரிசு பெறாதவன் நீதிபதிகளைக் குற்றம் சாட்டுவதும், உற்றவர் இறந்துவிட்டால், மருத்துவர்மேல் கோபம் கொள்வதும் இயற்கை. ஆனால் அந்தக் கோபம் நீண்ட காலம் நம்மைப் பாதிக்க விடுவது அபாயம். பரிசும் கிடைக்கப் போவதில்லை, இறந்தவர் மீண்டு வரப்போவதுமில்லை.

    கையாலாகாத்தனத்தால் வரும் கோபம்

    கதை

    “தெருவில நடக்கும்போது மனைவி என் கையைப் பிடித்து அழைச்சுட்டுப்போறா! எப்படிங்க!”
    “இவரு தன்பாட்டில நடுரோட்டில நடக்கிறாருங்க! பயமா இருக்கே!”
    அத்தம்பதிகள் இருவரும், மாறி, மாறி, என்னிடம் முறையிட்டார்கள்.

    கணவருக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் இருதயத்தில் அறுவைச் சிகிச்சை நடந்திருந்தது. `இனிமே நீ என்கூட வராதே!’ என்று கோபமாகச் சொல்லிவிட்டு, தனியாகப் போக ஆரம்பித்திருந்தார்.

    மனைவியின் பயம் நியாயமானதுதான் என்றாலும், எந்த ஆணுக்குத்தான் மனைவி தன்னைக் குழந்தைபோல் நடத்துவதை ஏற்க முடியும்?

    “சின்னக் குழந்தைக்குச் சொல்றதுமாதிரி ஒவ்வொண்ணையும் அவருக்குச் சொல்லிக் குடுக்காதீங்க! ஃப்ரீயா விடுங்க!” என்று நான் எடுத்துச் சொன்னேன்.

    “அவங்க ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க,” என்று அவர் மனைவிக்குப் பரிந்தார்!

    கணவனும், மனைவியும் இப்படி ஒருவருக்காக மற்றவர் கவலைப்படுவதைப் பார்க்க நிறைவாக இருந்தது. சிரிப்பும் வந்தது. எங்கள் வாழ்வில் இல்லாத பூசல்களா!

    ஏமாற்றமே கோபமாக

    எல்லாருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் கோபம் வரத்தான் செய்யும். அத்தருணங்களில் ஒருவர் எப்படி நடந்துகொள்கிறார் என்பதைப் பொறுத்துத்தான் அவரது குணத்தை எடைபோட முடியும்.

    எங்கள் வீட்டருகே இருந்த கடையில் ஒரு கிலோ உருளைக்கிழங்கை ஒவ்வொன்றாகப் பொறுக்கி வாங்கினேன்.

    `கொஞ்சம் குறைகிறதே!’ என்று கடைக்காரர் கரிசனமாக தானே ஒரு கிழங்கை எடுத்துப்போட்டார்.
    வீட்டுக்கு வந்து பார்த்தால், அந்தக் கிழங்கு அழுகல்!

    கடைக்காரர் தான் மிகவும் பக்திமான் என்று சொல்லிக்கொள்வார். ஒரு பள்ளிக்கூடத்தில் மதபோதகர் வேறு!

    எதிலிருக்கும்போதே ஏமாற்றப்பட்டுவிட்டோமே என்ற கோபம் என்னுள் வினாடிக்கு வினாடி அதிகரித்தது. திரும்பக்கொடுப்பது என்று முடிவெடுத்ததும் மனம் சமாதானமாக, வேறு காரியங்களைக் கவனித்தேன்.

    ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் கடைக்குப் போய், “நீங்கள் போட்ட கிழங்கைப் பாருங்கள்,” என்று காட்டினேன், கடுமையாக.
    “நீங்கள்தானே எடுத்துக்கொண்டீர்கள்?” என்றார், பதிலுக்கு.

    விடாப்பிடியாக, “நீங்கள் இப்படிச் செய்தது நன்றாகவேயில்லை,” என்றதும், “சரி, சரி. வேறு எடுத்துக்கொண்டு போங்கள்!” என்றார் அசுவாரசியமாக.

    சிறு விஷயம்தான் என்றாலும், என் கோபம் வெற்றிச் சிரிப்பாக மாறியது.

    கோபம் என்பது ஒருவர் அடையும் பயத்தால், வருத்தத்தால் வருவது.

    கதை

    பதினேழு வயதான மாலினியை அவளுடைய பாட்டு வாத்தியாரே கெடுக்க முயற்சித்தார். அவள் தப்பித்துவிட்டாலும், தான் பெரிதும் மதித்த ஒருவர் இப்படிச் செய்துவிட்டாரே என்ற வருத்தம் நாளடைவில் கோபமாக மாறியது.

    நடந்த சம்பவத்தைப் பிறரிடம் பகிர்ந்து, ஆறுதல் தேடவும் பயம். `அவருடைய நடத்தைக்கு நீதான் காரணம்!’ என்று பழியைத் தன்மீதே போட்டுவிட்டால் என்ன செய்வது? இதனால் பார்க்கும், பழகும் ஆண்களையெல்லாம் சந்தேகப்பட ஆரம்பித்தாள்.

    (முன்னெச்சரிக்கையாக, மாலினி ஒரு தோழியுடன்தான் சென்றிருந்தாள். `அவளையும் ஏன் அழைச்சுண்டு வந்தே?’ என்று அவர் ஆத்திரப்பட்டபோதே அவளுக்குச் சந்தேகம் எழுந்திருந்ததால் தப்பிக்க முடிந்தது).

    பல வருடங்கள் கழித்து, மாலினி தன் துயரக்கதையை என்னிடம் பகிர்ந்துகொண்டாள், `யாரிடமும் சொல்லிவிடாதே!’ என்ற கெஞ்சலுடன்.

    `இதில் உன் தவறு எதுவுமில்லை,’ என்று சுட்டிக்காட்டினேன். ஓர் அறியாப்பெண்ணைத் தனியாகத் தன் வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டு, அவளை பலாத்காரம் செய்ய முயன்றவர்தான் — அதிலும், அவளைவிட இருபது வயது மூத்தவர் _ குற்றமிழைத்தவர்.

    `பாடவே பிடிக்காமல் போய்விட்டது!’ என்று ஒப்புக்கொண்டாள். பல பிரபலமான ஆசிரியர்களிடம் இசை பயின்று, நல்ல பாண்டித்தியம் கொண்டவள்.

    `வாத்தியார் கெட்டவராக இருந்தால், அதுக்கு (கர்னாடக சங்கீத மாமேதைகள்) தியாகராஜரும், தீக்ஷிதரும் என்ன செய்வார்கள்? அவர்கள்மேல் உனக்கு என்ன கோபம்?’ என்று எடுத்துரைத்தேன்.

    சற்றுத் தெளிந்து, `அதுவும் சரிதான்,’ என்று மீண்டும் பாட ஆரம்பித்தாள். கோயில்களில் மட்டும் மனமுருகிப் பாடுவாள்.

    நமக்கு ஆத்திரம் விளைவித்தவரின்மீது நாம் எவ்வளவுதான் கோபப்பட்டாலும், அவருக்கு அதனால் ஒரு பாதிப்பும் கிடையாது.

    கெடுவது என்னவோ கோபத்தைத் தமக்குள்ளேயே அடக்கிவைத்தவர்களின் உடலும், மனமும்தான். திறமைகளும் வெளிப்படாமலேயே போய்விடும்.

    என்றோ நடந்தது

    `சிறு வயதில் அப்பா காரணமின்றி அடித்தார், ஆசிரியை திட்டினாள்,’ என்று நடந்து முடிந்தவைகளை (அவை நடந்தபோது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும்) பெரியவர்களானபோதும் ஓயாது அசைபோட்டு வாடுவார்கள் சிலர். இவர்களது நிகழ்காலம் மட்டுமன்றி எதிர்காலமும் வீணாகாதா!
    “கோபம் அடைவதால், பிறர் நம்மைத் தண்டிக்கப்போவதில்லை. கோபமே நம்மைத் தண்டித்துவிடும்” (யாரோ).

    தொடருவோம்

    Share