-கவியோகி வேதம்

தடைகள் இன்றி நடக்கத் தெரிந்தும்
–தாத்தா கையில் துறட்டுக்கோல்!
முடவ னாய்யா என்றே கேட்டால்
–முறுவல் தானே! பதில்சொல்லார்;
யார்க்கும் உதவும் எண்ணத் தோடே
–இன்றும் கிளம்புவார் காட்டுக்கு!
வேர்க்க வேர்க்கத் தழைகள் பறித்தே
–வெட்டிப் போடுவார் ஆட்டுக்கு!

பத்தடி உயரம் துறட்டிக் கோலாம்
–பதமாய்த் தாத்தா ஏந்திடுவார்!
கொத்தாய் மாங்காய் தந்தே பாலரைக்
–கொஞ்சி அழகை மாந்திடுவார்
கம்பியில் சிக்கிய பட்டம் எடுத்துக்
–கனிவாய் அவர்க்கே உதவிடுவார்
எம்பிக் குத்துவார் புளியங் காய்கள்
–இவரின் கைவரச் சிரித்திடுவார்!

ஆ! இப்போ!
படப்பில் சிக்கிய வேலிமுள் அய்யோ
–பாதை முழுக்கக் கிடக்கிறதே!
முடங்கிக் கிடக்குதே துறட்டிக் கோலும்
–மூலையில் தாத்தா படுத்ததுமே…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *