உலகத் தாய்மொழித் திருநாள்
அன்னை ஊட்டிய பிள்ளைத்தமிழே
ஆசான் பயிற்றுவித்த முத்தமிழே
இல்லை உன் போன்ற செம்மொழியே
ஈடில்லாப் புகழ் கொண்ட தாய்மொழியே
உன்னில் தானே உயிர்மெய் அடக்கம்
ஊர் பல கடந்துமே நின் புகழ் சிறக்கும்
எளிய நடையிலும் உனைப் பயில்வோமே
ஏட்டுச் சுரைக்காயாய் நாங்கள் இரோமே
ஐ! எங்கள் தமிழே ஆரத்தியும் உனக்கு எடுத்து
ஒன்றா இரண்டா பலகோடி பாமாலை தொடுத்து
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டா என்ற
ஔவை மூதாட்டி அவர்தம் நல்வழி நின்று
இஃதே எம் தாய்மொழியின் தனிச் சிறப்பென்று
இறுமாப்புடனே மார்தட்டி யாவரும் முன்னின்று
தப்பாது தானே நின் புகழ் பலவும் தன்னையே
தரணிக்கே உரக்கச் சொல்வோம் தமிழன்னையே
தாய்மொழித் திருநாள் நல்வாழ்த்துகள்!
– சித்ரப்ரியங்கா ராஜா,
திருவண்ணாமலை.