Month: November 2021

  • விண்ணோர் தொழும் திரு அண்ணாமலை

    விண்ணோர் தொழும் திரு அண்ணாமலை

    ‘விண்ணோர் தொழும் திரு அண்ணாமலை’ என்ற பாடலை இசைஞானி இளையராஜா இயற்றி இசையமைத்துள்ளார். “ராஜாவின் ரமண மாலை” என்ற இசைத் தொகுப்பில் இருந்து இதைக் கற்றுக்கொண்டு நாகி நாராயணன் பாடுகிறார். இந்தத் திருக்கார்த்திகைத் திருநாளில், திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்ட இந்த நன்னாளில் இதை வெளியிடுகிறோம். கேட்டு மகிழுங்கள். திருக்கார்த்திகை தின நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்!

    கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    ஆஸ்திரேலியா 

    கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்
    கந்தனை நினைந்து போற்றுவோம் வாரீர்
    வீட்டிலும் வெளியிலும் ஏற்றுவோம் வாரீர்
    வேலவன் திருவடி பற்றுவோம் வாரீர்

    அகமதில் உறைந்திடும் ஆணவ இருளை
    அகற்றிடத் தீபம் ஏற்றுவோம் வாரீர்
    சிவனது மைந்தனைச் சிந்தையில் இருத்தி
    சிறப்புடன் தீபம் ஏற்றுவோம் வாரீர்

    கார்த்திகைப் பெண்களால் ஏந்திய குழந்தை
    கந்தனாய் வந்தனன் கலியுகம் காக்க
    கந்தனைச் சொந்தமாய் கொண்டிடும் பக்தர்
    கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்

    மாலயன் அடிமுடி தேடிய நிலையில்
    மாபெரும் சோதியாய் வந்தனன் சிவனும்
    பேரொளிப் பிழம்பு தோன்றிய நாளை
    யாவரும் கார்த்திகைத் தீபமாய் கண்டனர்

    அக்கினித் தலமாய் ஆகிய தலத்தில்
    அகண்ட தீபம் ஏற்றுவார் அடியார்
    கார்த்திகை நாளில் ஏற்றிடும் தீபம்
    கந்தனை. தந்தையை இணைத்திடும் தீபம்

    சோதியாய் சுடராய் ஆகிடும் தெய்வம்
    ஆதியாய் அந்தமாய் ஆகிடும் தெய்வம்
    அப்பனாய் பிள்ளையாய் அமைந்திடும் தெய்வம்
    அனைத்துமே கார்த்திகைத் தீபத்துள் அடங்கும்

    காணுகின்ற பேரொளியே கடவுளாய் தெரிகிறது
    கார்த்திகையில் தீபமதில் காணுகிறோம் கடவுளையே
    கண்காணாத் தெய்வமதை ஒளியாக நம்புகிறோம்
    கார்த்திகையில் தீபமேற்றி கடவுளருள் பெறுவோமே

    Share
  • மழை முத்துகள்

    எங்கள் மாடித் தோட்டத்து மலர்களை இன்று அலங்கரித்த மழை முத்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 39

    கம்பனில் கண்டெடுத்த முத்துக்கள் – 39

    -மேகலா இராமமூர்த்தி

    ”இராமதூதன் நான்” என்று தன்னைச் சீதையிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு இராமனின் திருவாழியை அனுமன் காட்டவும், அதனைக் கண்டு இழந்த உயிரை மீண்டும் பெற்றாற்போல் மகிழ்ந்த சீதை, ”இன்றுபோல் என்றும் வாழ்க”வென அனுமனை வாழ்த்தினாள். ”இராமனும் இளவலும் யாங்குளர்? நீ அவர்களை அறிந்தது எவ்வாறு?” என்று அனுமனை வினவினாள்.

    அவனும் சீதை இராவணனால் கடத்திக்கொண்டு போகப்பட்ட நிகழ்வு தொடங்கி இராமனுக்கும் சுக்கிரீவனும் நட்பு ஏற்பட்டமை, இராமன் வாலியை வீழ்த்திச் சுக்கிரீவனுக்கு அரசளித்தமை, மாரிக்காலம் முடிந்தபின் சீதையைத் தேடுதற்குப் படையோடு வருக என்று இராமன் சுக்கீரிவனைப் பணித்தமை, சுக்கிரீவன் வழிகாட்டுதலின்படித் தென்திசையில் தேடிக்கொண்டு வந்த தான் சீதையைக் கண்டமை ஆகிய அனைத்தையும் விரித்துரைத்தான்.

    அவற்றைச் செவிமடுத்த சீதை, “நீ இப்பெருங்கடலைக் கடந்து இலங்கையை அடைந்தது எப்படி?” என்று அனுமனை வியப்போடு வினவ,

    ”அன்னையே! உன் ஒப்பற்ற தலைவனின் தூய திருவடிகளில் மனத்தை ஒன்றுபடுத்திப் பேரறிவடைந்த ஞானியர், ஓய்வில்லாத மாயை எனும் பெருங்கடலைக் கடப்பதுபோல் அடியேன் இக் கருங்கடலைக் கால்களால் கடந்துவந்தேன்” என்றான் அனுமன். கால் என்பதைக் காற்று எனக்கொண்டால் காற்றின் துணையோடு வான்வழியே இக்கருங்கடலைத் தாண்டி வந்தேன் என்றும் பொருள் கொள்ளலாம்.

    சுருங்குஇடை உன்ஒரு துணைவன் தூயதாள்
    ஒருங்குடை உணர்வினோர் ஓய்வுஇல் மாயையின்
    பெருங்கடல் கடந்தனர் பெயரும் பெற்றிபோல்
    கருங்கடல் கடந்தனென் காலினால் என்றான்.
    (கம்ப: உருக்காட்டு படலம் – 5432)

    பிறவி எனும் பெருங்கடலைக் கடக்க இறைவனின் திருவடிகளே துணைசெய்வன என்று திருக்குறளும் சாற்றியிருப்பது நினைவுகூர்தலுக்கு உரியது.

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்.
    (குறள்: 10)

    அவன் பதிலால் மேலும் வியப்படைந்த முத்துநகை முறுவலாள் சீதை, “இத்துணைச் சிறிய யாக்கையை உடைய நீ, பெருங்கடலைக் கடந்தது தவத்தின் பயனாலா? சித்தியினாலா?” என்று கேட்டாள்.

    ”இரண்டும் இல்லை” என்று மறுத்த அஞ்சனை மைந்தன், தன் ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் பேருருவெடுத்து (விசுவரூபம்) வானளாவ உயர்ந்து நின்றான். அப்போது எட்டுத் திசைகளின் எல்லையிலும் எல்லா உலகங்களிலும் இடம்விட்டுப் பெயராத உயிர்க்கூட்டங்கள் எல்லாம் அனுமனைப் பார்த்தன; அனுமனும் மேலுலகம் எனப்படுவதில் வாழும் எல்லாத் தேவர்களையும் தன் தாமரைக் கண்களால் கண்டான்.

    எண்திசை மருங்கினும் உலகம் யாவினும்
    தண்டல்இல் உயிர்எலாம் தன்னை நோக்கின
    அண்டம் என்றதின் உறைஅமரர் யாரையும்
    கண்டனன் தானும்தன் கமலக் கண்களால்.
    (கம்ப: உருக்காட்டு படலம் – 5439)

    அனுமன் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தமையால் உயிர்கள்
    அவனைக் கண்டன. உயர்ந்து இருந்தமையால் அவன் தேவரைக் கண்டான்.
    இதனால் அவன் தோற்றத்தின் பெருக்கமும் உயரமும் பேசப்பட்டன.

    உலகெலாம் அளந்துநின்ற அனுமனின் பேருருத் தோற்றத்தையும் ஆற்றலையும் கண்கூடாய்க் கண்ட சீதை நனிமகிழ்வெய்தி, தனக்கு இச் சிறைவாழ்விலிருந்து விடுதலை கிடைத்துவிடும் எனும் நம்பிக்கை கொண்டவளாய் அவன் உருவத்தைச் சுருக்கிக் கொள்ளப் பணித்தாள்.

    அவ்வாறே தன் உருவைப் பழையபடிச் சுருக்கிக்கொண்ட அனுமனைப் பார்த்து, “இந்த ஒரு கடலென்ன, ஏழு கடல்களைக் கடக்கும் வல்லமை பெற்றவன் நீ” என்று புகழ்ந்துரைத்த சீதை, ”நீ இராமனுக்கு உற்றதோர் நற்றுணை ஆவாய்!” என்றாள். அவள் திருவடிகளை வணங்கிய அனுமன், ”தாயே! எண்ணிறந்த வானர வீரர்கள் இராமனுக்குப் பணிசெய்யக் காத்துக்கிடக்கிறார்கள். அவர்களுள் நானும் ஒரு பணியாளன். ஏவும் கூவும் பணிகளைச் செய்வேன்” என்று அடக்கத்துடன் மறுமொழி அளித்தான்.

    திருமகளை ஒத்த சீதை அரக்கியரிடை இருந்து படும் இன்னல்களையும் அவளின் இரங்கத்தக்க நிலையையும் சிந்தித்துப்பார்த்த அனுமன், இவளை நான் என் முதுகில் சுமந்துசென்று இராமனிடம் ஒப்படைப்பதே இப்பெண்ணரசியின் துயரத்தை உடனடியாய் மாற்றுதற்கு ஏற்றவழி எனும் எண்ணங்கொண்டான்.

    தன் கருத்தைச் சீதைக்குத் தெரிவிக்க விரும்பியவன், “அன்னையே நான் சொல்வதைக் கோபியாமல் கேட்பீராக! என் தோள்மீது ஏறிக்கொள்ளுங்கள்! கண்ணிமைக்கும் நேரத்தில் உங்களை அண்ணல் இராமனிடம் கொண்டு சேர்ப்பேன்; நான் தங்களைச் சுமந்துசெல்வதை அறிந்து அரக்கர்கள் பின்தொடர்வரேல் அவர்களைச் சிதைத்து என் சீற்றத்தைத் தணித்துக் கொள்வேன். தங்களின் துன்பநிலை கண்டும் அதற்குக் கழுவாய் தேடாமல் வெறுங்கையுடன் பெயரேன்!” என்றவன், ”இமைப்பதற்குள் இந்த இலங்கையை உருக்கியழித்து, இராவணனையும் அவனுடைய நிருதர் கூட்டத்தையும் ஒழித்துவிட்டு வா என்று நீங்கள் செப்பினாலும் அப்படியே செய்கின்றேன்” என்றான் தீர்மானமாக.

    ”நீ சொல்லும் யோசனை இராமனின் வில்லுக்குக் களங்கமுண்டாக்கக் கூடியது. அத்தோடு, இராவணன் என்னை வஞ்சகமாய்க் கவர்ந்துவந்ததுபோல் நீயும் அவனுக்குத் தெரியாமல் என்னை வஞ்சகமாய்த் தூக்கிச் செல்லக் கருதுதல் முறையன்று. வஞ்சத்தை வஞ்சத்தால் வெல்வதென்பது சான்றோர்க்கு அழகன்று” என்று அந்த யோசனையை ஏற்கமறுத்த சீதை,

    ”துன்பத்தைத் தரக்கூடிய இந்த இலங்கைவாழ் விலங்கு போல்வாரை மட்டுமல்லாது, எல்லையில்லாமல் இருக்கக்கூடிய அனைத்து உலகங்களையும் என் சொல்லினாலேயே சுட்டெரித்துவிடுவேன்; அது, தூயவனாகிய இராமனின் வில்லுக்கு மாசு என்பதனாலேயே அவ்வெண்ணத்தைச் செயற்படுத்தாது வீசினேன்” என்றாள்.

    அல்லல் மாக்கள் இலங்கையது ஆகுமோ
    எல்லைநீத்த உலகங்கள் யாவும் என்
    சொல்லினால் சுடுவேன் அது தூயவன்
    வில்லின் ஆற்றற்கு மாசுஎன்று வீசினேன்.
    (கம்ப: சூடாமணிப் படலம் – 5470)

    அசோகவனச் சிறைவாசத்திலிருந்து தன்னைப் பிறர் துணையின்றித் தானே விடுவித்துக்கொள்ளக் கூடிய ஆற்றலைச் சீதை பெற்றிருந்தும், அதனைப் பயன்படுத்தாமல், தன் கணவன் இராமன் தன்னைவந்து மீட்கவேண்டும்; அவனே வெற்றிவீரனாய்த் திகழவேண்டும் என்று சீதை கருதியிருந்தமையை இதன்மூலம் நாம் தெளிவாய்த் தெரிந்துகொள்கின்றோம்.

    சீதையின் இவ்வெண்ணங்கள் பெண்ணடிமைத்தனத்துக்கே உரம் சேர்ப்பனவாய் இருக்கின்றன. கணவனைச் சார்ந்திருப்பதும் அவன் புகழுக்குப் பாடுபடுவதுமே மனைவியின் மாண்பு என விதிவகுத்துப் பெண்களைச் செயல்திறன் முடக்கப்பட்ட கோழைகளாய் வைத்திருந்த அன்றைய ஆணாதிக்கச் சமூகத்தை ஒரு பண்பட்ட நாகரிகச் சமூகமாய்க் கருதமுடியவில்லை.

    அன்றைய இலக்கியப் படைப்புகளில் வெளிப்பட்ட சிந்தனைகள்தாம் இவ்வாறிருந்தனவென்றால் இன்றும்கூடப் பெரும்பான்மையான இலக்கியப் படைப்புகளும் வெள்ளித்திரைப் படைப்புகளும் (திரைப்படங்கள்) நாயகனை தகுதிக்குமீறி உயர்த்திப் பிடிப்பனவாகவும், நாயகியரை அவன் உதவியின்றித் தம் துன்பங்களிலிருந்து விடுபட இயலாதவர்களாகவுமே சித்திரிப்பது, காலங்கள் மாறினும் ஆணாதிக்கச் சிந்தனைப் போக்கிலிருந்து நாம் இன்னமும் விடுபடவில்லை என்பதன் வெளிப்பாடுகளே!

    சீதையின் மொழிகளை நன்று என்று நவின்ற அனுமன், ”நான் இராமனிடம் தங்கள் சார்பாய்க் கூறவேண்டியது யாது?” என்று கேட்டான் அவளிடம்.

    ”ஒருமாத கால எல்லையில் என்னுடைய தவம் நிறைவேறுகின்ற படியால் அதற்குள் இராமன் இங்கு வந்திலனேல் புதிய நீர்ப்பெருக்கை உடைய கங்கையாற்றங்கரையில் தன்னுடைய சிவந்த கரங்களால் எனக்கும் இறுதிச் சடங்கைச் செய்யச் சொல்!” என்றாள் சீதை விரக்தியோடு!

    திங்கள் ஒன்றின் என் செய்தவம் தீர்ந்ததால்
    இங்குவந்திலனே எனின் யாணர் நீர்க்
    கங்கையாற்றங்கரை அடியேற்கும் தன்
    செங் கையால்கடன் செய்க என்று செப்புவாய்.
    (கம்ப: சூடாமணிப் படலம் – 5484)

    தன் கருத்துக்களைத் தொடர்ந்து வெளிப்படுத்திய சீதை, ”மிதிலையில் என்னைக் கரம்பற்றி உடனுறை காலத்தில், இந்தப் பிறவியில் இன்னொரு பெண்ணைச் சிந்தையாலும் தொடமாட்டேன் என்று இராமன் எனக்குரைத்த உறுதிமொழியை அவர் செவியில் இரகசியமாய்ச் செப்புக” என்றாள்.

    வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய்
    இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச்
    சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்
    தந்த வார்த்தைதிருச் செவி சாற்றுவாய்.
    (கம்ப: சூடாமணிப் படலம் – 5486)

    சீதை சொன்னவற்றைக் கவனத்தோடு கேட்ட அனுமன், ”அன்னையே! நீங்கள் ஒரு மாதம் வரைக்கும் இந்த இலங்கையில் துன்பத்துடன் காத்திருக்க வேண்டியதில்லை. நான் விரைவில் இராமனைப் பார்ப்பதுதான் எஞ்சியுள்ள செயல். அதன்பிறகு(ம்) ஆண்தகையான அவன் இங்குவர நல்லகாலம் பார்த்துக்கொண்டிருப்பானா? ஒரு கணமும் பொறுத்திரான்!” என்றான் உறுதிபட.

    ஈண்டு ஒருதிங்கள் இவ்இடரி்ன் வைகுதல்
    வேண்டுவது அன்றுயான் விரைவின் வீரனைக்
    காண்டலே குறைபினும் காலம் வேண்டுமோ
    ஆண்தகை இனிஒரு பொழுதும் ஆற்றுமோ.
    (கம்ப: சூடாமணிப் படலம் – 5518)

    புறப்படுவதற்கு நல்ல காலம் பார்ப்பதை ‘மீன மேஷம் பார்த்தல்’ என்பர் கிராமப்புறங்களில்; அவ்வாறு பார்த்துக்கொண்டிருக்க மாட்டான் இராமன்; சீதை இருக்குமிடம் தெரிந்தவுடனே புறப்பட்டுவிடுவான் அவளை மீட்க என்பது அனுமன் சீதைக்குத் தெரிவிக்கும் செய்தி.

    அதனைக் கேட்டு உவந்த சீதை, மேலும் சில செய்திகளை இராமனிடம் சொல்லுமாறு அனுமனிடம் கூறியபின், தன் ஆடையில் முடிந்து வைத்திருந்த, சூரியனைவிட அதிகமாய்ச் சுடர்விடும், சூளாமணியை (தலையணி/நெற்றிச்சுட்டி) தன் மலர்க்கையால் எடுத்து அதனை அனுமனிடம் அடையாளமாய்க் கொடுத்தாள். அதனை வாங்கித் தன் ஆடையில் பத்திரமாய் முடிந்த அனுமன், அழுத கண்களோடு அவளைத் தொழுது புறப்பட்டான்.

    திரும்பி நடக்கும்வழியில் சில சிந்தனைகள் அனுமனுக்குள் எழுந்தன. ”இந்த இலங்கை நகரை அழித்து நிருதர்களை ஒழிக்காமல் போவேனேல் நான் இராமனின் அடியவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையுண்டா?”

    ”இந்த அசோக வனம் மிக்க அழகுடையதாயும் இராவணனின் விருப்பத்துக்கு உகந்ததாயும் இருக்கின்றது. இதனை நான் அழித்தால் அரக்கர்கள் என்னோடு போருக்கு வருவார்கள்; அவர்களை நான் கொன்றால் இராவணன் என்னோடு போருக்கு வருவான்; அவ்வாறு வருவானேல் அவன் கதையை முடித்துவிட்டு மகிழ்வோடு செல்வேன்” என்று எண்ணமிட்டான்.

    நினைத்ததைச் செயற்படுத்தும் வண்ணம், அவ்வெழிலார் பொழிலை அழிக்கத் தொடங்கினான்.

    [தொடரும்]

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. கம்பராமாயணம் – கோவை கம்பன் அறநிலை விளக்க உரைக்குழு.

    2. கம்பரும் வால்மீகியும் – பேரா. அ. பாண்டுரங்கன், எம்.ஏ., பிஎச்.டி., டிப் (மொழி), தமிழரங்கம் பதிப்பு, புதுவை – 605 008.

    3. கம்பர் கருவூலம் – தொகுப்பாசிரியர், பேரா. மு. சாயபு மரைக்காயர், கங்கை புத்தக நிலையம், சென்னை – 600 017.

    4. கம்பனில் மக்கள்குரல் – பேரா. ந. சுப்புரெட்டியார், வானதி பதிப்பகம், சென்னை – 17.

     

    Share
  • இங்கிலாந்தில் ஒரு புதுமையான ராட்டினம்

    இங்கிலாந்தில் ஒரு புதுமையான ராட்டினம்

    AXIS ride in Adventure Island Fun Park; This is U.K’s No.1 FREE ADMISSION Fun Park. Situated on Southend-on-Sea’s famous seafront.

    Video by Navya

    இங்கிலாந்தின் சவுத் எண்டு பகுதியில் அமைந்துள்ள அட்வென்சர் ஐலேண்டு என்ற கேளிக்கைப் பூங்காவில், ஒரு புதுமையான ரங்க ராட்டினம் (AXIS ride). பார்த்து மகிழுங்கள்.

    படப்பதிவு – நவ்யா

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சேக்கிழார் பாடல் நயம் – 150 (நல்ல)

    சேக்கிழார் பாடல் நயம் – 150 (நல்ல)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    வரலாறு 

    அடியார்க்கு  உணவூட்டும்  அரிய செயலை  தாயனார் வறுமையுற்ற  காலத்திலும் , அச்செயலை  நீக்காத மனவுறுதி யுடையவர் என்பதை உலகோர் அறிய அவர்பால்  வந்த செல்வத்தை  அவரறியாமல்  மாற்றினார். தம்  செல்வம் வேழமுண்ட விளங்கனிபோல் உள்ளீடற்று அழிந்தமையால், சற்றும் தளராத தாயனார், சிவபிரானுக்கே உணவளிக்கும் சிவத்தொண்டி லிருந்து விலகாது வாழ்ந்தார். அவ்வகையில் வறுமை வந்த போதிலும் தாம் கூலிக்கு நெல்லறுத்து வரும் ஊதியத்தால் பெருமானுக்கு  அமுதூட்டினார். அந்த நிலையில்  அடியாரின் புண்ணியத்தால் வயல்களில் எல்லாமே இறைவன் அமுதுக்கு உரிய செஞ்சாலி நெல்லாக விளைந்தன! இது தாம் செய்த புண்ணியத்தால் வந்த பயன் என்று  அந்தக் கூலியைக் கொண்டு சிவனாருக்கு அமுதூட்டினார். இறையமுதுக்கு  உரிய நெல்லைக் கூலியாகப் பெற்றவர்தம் இல்லத்துணைவி, வீட்டுக்கொல்லையில் தாமாக வளர்ந்த இலைக்கறியினை உணவாக்கி அளித்து இறைப்பணிக்கு உதவினார்.

    அந்நிலையில் இல்லத்தின் பின் வளர்ந்த இலைக்கறி அற்றுப்போக, அப்போதும் மனம் வாடாமல் பருகும் நீரையே உண்ணும் உணவாகக் கணவனுக்கு இட்டார். அதனை உண்டு தம் சிவத்தொண்டைத் தொடர்ந்து செய்தார். அப்போது ஒருநாள் அடியார், மிகமுயன்று சேர்த்த செந்நெல், மாவடு, கீரை ஆகியவற்றைச் சுமந்து சென்றார். அவர் பின் அவர் மனைவியாரும் ஆனைந்தாகிய  பஞ்ச கவ்யத்தை எடுத்துக் கொண்டு போய் திருப்பணி புரிந்தார்.

    அப்போது தாயனார்  தரையில் தடுக்கி விழப்போனார். அவர் மனைவியார் தாம் ஏந்திவந்த  ஆனைந்தை மூடிய கையால்  கணவரை விழாமல் பற்றினார். உடனே அடியார் ஏந்தி வந்த கூடையும், மனைவியார் ஏந்தி வந்த மட்கலமும் தரைவெடிப்பினுள் கவிழ்ந்து விட்டன!  அதனால் அடியார் திருக்கோயிலுக்குப் போவதை நிறுத்திக் கொண்டார். அப்பித்து அவர் செய்த அரிய செயலைச் சேக்கிழார் பாடுகிறார்.

    பாடல்

    ‘’நல்ல செங்   கீரை  தூய   மாவடு   அரிசி சிந்த
    `அல்லல் தீர்த்து ஆள வல்லார் அமுது செய்து அருளும் அப்பேறு
    எல்லை இல் தீமையேன் இங்கு எய்திடப் பெற்றிலேன்’ என்று
    ஒல்லை இல் அரிவாள் பூட்டி ஊட்டியை அரியல் உற்றார்.

    பொருள்

    தூய்மையான செங்கீரை, செந்நெல், மாவடு ஆகியவை தரைக்குள் மறைந்தமையால் ‘’எல்லையற்ற தீமை யாகிய பாவம் புரிந்தேன்; அதனால்  துன்பம் தீர்த்து உதவ வல்ல இறைவனுக்கு அமுது செய்யும் நற்பேற்றை இழந்தேன்“ என்று மனம் வருந்தித் தம்  கழுத்தை வாளால் அரிந்து கொள்ள ஆரம்பித்தார்.

    விளக்கம்

    இப்பாடலில் நல்ல  என்ற சொல் – புழுக்கடி, வாடல், முற்றல், பழுப்புமுதலிய கேடு இன்றி என்பதை குறித்தது . மென்கீரை  என்றது காண்க. நல்ல – நன்மை செய்யும் என்று இயற்கை யடைமொழியாகக்கொண் டுரைப்பினும்  ஆகும்.

    தூய, என்ற சொல்  மேல், கீரைக்கு நல்ல என்றதற் குரைத்தவாறே, மாவடுவுக்கும் பொருந்த உரைத்துக்கொள்க. ‘மன்னு பைந்துணர் மாவடு’ என இதன் இயற்கையினை முன்னர் உணர்த்தியதனால் இங்கு அதன் தன்மைகள் பொருந்தக் கொள்க.

    அரிசி  என்ற சொல், செந்நெல் இன்னமுது, தூய செந்நெல் அரிசி என இதன் இயல்பும் தன்மையும் முன்னரே கூறினாராதலின், முதன்மையாயின.  அதனால் இதனை இங்கு அடைமொழியின்றி அரிசி என வாளா கூறினார்.

    அல்லல்தீர்த்து ஆளவல்லார் என்ற தொடர், அல்லல் – பிறவித் துன்பமும் அதற்கேதுவாகிய இருவினைகளும். தீர்த்தல் – நுகர்வித்துக் கழிப்பித்தல். அல்லல் தீர்த்து என்றதனாற் பாசநீக்கமும், ஆள என்றதனாற் சிவப்பேறும் ஆகிய இருபயனும் குறித்தார். வல்லார் என்றது அவ்வன்மை இவர்க்கே எளிதின் அமைவதென்றும் வேறெவர்க்கும் இன்றென்றும் குறித்தபடியாம்.

    “தீரா நோய் தீர்த்தருள வல்லான் றன்னை” என்ற புள்ளிருக்கு வேளூர்த்  திருத்தாண்டகமும், இவ்வாறு வரும் திருவாக்குக்களும் காண்க. திருத்தொண்டாற் பெறும்பேறு நிறைவுறும் இடமாதலின் இங்கு இவ்வாறு கூறினார்.

    அமுதுசெய்து (அதற்கு) அருளும் என்க. அமுதுசெய்து என்பது நியதியாகிய திருத்தொண்டினை ஏற்றுக்கொள்ளுதலையும், அருளும் அப்பேறு என்றது அதற்கு இறைவன் அருள் புரிதலினையும் குறிப்பன. அருளும் அப்பேறு – அருள்செய்யும் அந்த – அருளினைப் பெறுகின்ற அந்தப்பேறு.

    எல்லையில் தீமையேன் ஆதலின் பெற்றிலேன் என்று, பெற்றிலாமைக்குக் காரணம் கூறியவாறு.

    இங்கு – இவ்விடத்தே. இந்தவெடிப்பினுள். “போவது அங்கு இனியேன்?” என்ற முன்பாட்டுக் காண்க. இன்று என்ற பொருளில் வந்ததென்றலுமாம்.

    ஊட்டி – மிடறு. கழுத்தின் முன்பாகம். அரியலுற்றாராய் – அரியா நின்றார்!

    இப்பாடலால்  இறைத்தொண்டுக்குச் சிறிய ஊறு நேர்ந்தபோதும், அதனைத் தாங்க மாட்டாத அடியார் மனமும், உடனே அதற்குரிய தண்டனையைத் தமக்குத் தாமே  அளித்துக்கொண்ட  செயலும் விளங்குகிறது!

    Share
  • பழகத் தெரிய வேணும் – 92

    பழகத் தெரிய வேணும் – 92

    நிர்மலா ராகவன்

    புகழ் என்னும் போதை

    இணையம் புழக்கத்திற்கு வருமுன், ஒரு சினிமா பத்திரிகையில் பிரபல நடிகைகளின் பேட்டி எடுக்கப்பட்டது.

    கேள்வி: உங்களுக்குப் பிடித்தது எவை?

    சொல்லிவைத்தாற்போல், எல்லாரும் ஒரே பதிலைத்தான் கூறினார்கள்.

    அது என்ன தெரியுமா?

    “பணம், புகழ்!”

    இரண்டுமே நிலைப்பது மிகக் கடினம். அப்படியே கிடைத்தாலும், ஒருவர் வாழ்வில் வெற்றிபெற்றுவிட்டதாக ஆகிவிடாது. மிகச் சிலர்தான் பிறரது பாராட்டைத் தக்கவைத்துக்கொள்ளும் திறமையைப் பெற்றிருக்கிறார்கள்.

    புகழ் வரும்போதே, வேண்டாத விமரிசனங்கள் – ஒருவரது படைப்பைப் பற்றியோ, குணாதிசயங்களைப் பற்றியோ, சொந்த வாழ்க்கையைப் பற்றியோ – எழுவதைத் தவிர்க்க முடியாது.

    கதை

    ஒரு தமிழ் எழுத்தாளரின் புதிய பாணியிலான நடை, கரு இரண்டும் வாசகர்களை ஈர்க்க, குறுகிய காலத்திலேயே மிகுந்த புகழை அடைந்தார்.

    சிலர் புகழ, பலர் அவரைக் கேட்டார்கள் முகத்திற்கு நேராகவே: “ஏன் ஆபாசமாகவே எழுதுகிறீர்கள்?”

    தடுமாற்றத்தைச் சமாளிக்க தலையைத் தடவியபடி, “எதை ஆபாசம் என்கிறீர்கள்?” என்று கேட்டாராம் அந்த எழுத்தாளர்.

    `உன் கையை உடைத்துவிடுவேன்!’ என்ற மிரட்டல்கூட அவருக்கு வந்திருக்கிறது.

    புகழ் பெற்றவர்களின் ஒவ்வொரு சொல்லும், செயலும் விமரிசனத்துக்கு ஆளாகிவிடுகிறது.

    அவற்றில் எல்லாமே உண்மை என்பதில்லை. இருந்தாலும், அவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க நேரிடுகிறது.

    இது புரிந்து, பிறர் சொல்வதை அலட்சியம் செய்தால்தான் ஒருவர் தான் தேர்ந்தெடுத்த துறையில் தொடரமுடியும்.

    நடிகர்களைக் காப்பியடிப்பது

    பிரபலமடைந்த நடிக, நடிகையரைப்போல் தமக்கும் திறமையோ, அதிர்ஷ்டமோ இருக்கிறதா என்று எவரும் யோசித்துப்பார்ப்பதில்லை. கண்ணை மூடிக்கொண்டு, அவர்கள் செய்வதைப் பின்பற்றுகிறார்கள்.

    வேஷ்டி தயாரிப்பாளர்கள் முன்னணி கதாநாயகர் ஒருவரிடம், `படம் முழுவதிலும் வேட்டி அணிந்தபடி காட்சி கொடுங்கள். எங்களுக்கு அமோகமான விற்பனை ஆகும்,’ என்று வேண்ட, அவரும் இணைந்தார்.  படம் வெளியானதும், ரசிகர்கள் அவர் `விரும்பிய’ ஆடையைத் தாமும் அணிந்து மகிழ்ந்தார்களாம்.

    தாம் என்ன செய்தாலும், அதைப் பின்பற்ற பலர் காத்திருக்கிறார்கள் என்ற நடப்பு புகழைப் பெற்றவர்களுக்கு முதலில் பெருமையாக இருக்கும். பக்கவிளைவாக, இன்னும் சிறக்கவேண்டும் என்று அவர்களுடைய பிரயாசை அதிகரித்துக்கொண்டேபோகும். அந்த முயற்சி மன இறுக்கத்தில்தான் கொண்டுவிடும்.

    திறமை என்பது கடவுள் அளிப்பது. புகழ் – மனிதன் கொடுப்பது. கர்வமோ தனக்குத்தானே அளித்துக்கொள்வது என்பதால் கவனமாக இருக்கவேண்டும் என்கிறார் ஓர் அனுபவசாலி.

    ராமாவதாரமா?!

    ராமாயணக் கதாநாயகன் ஸ்ரீராமசந்திரமூர்த்தியாக ஒரு படத்தில் நடித்து, பெரும்புகழ் பெற்றவர் அந்த ஆந்திர நடிகர். மக்கள் அவரைக் கடவுளாகவே பாவித்தனர்.

    தினமும், குறிப்பிட்ட வேளையில், அயோத்தி ராமரைப்போன்ற ஆடையணிகள் பூண்டு, தன் வீட்டு மாடி பால்கனியிலிருந்து `தரிசனம்’ கொடுப்பாராம். அதைப் பார்க்க, பல ஊர்களிலிருந்து வந்த மக்கள் கூடுவார்களாம்!

    ஒருவர் தன்னைக் கடவுளாகவே பாவித்துக்கொண்டால், மற்ற அனைவரும் தனக்குக் கீழே இருப்பவர்கள்தாம் என்ற கர்வம் வந்துவிடாதா! நாளடைவில், தான் யார் என்பதே புரியாது போய்விடும்.  இதுவும் ஒருவித மனநோய்தான்.

    பிறருக்கு என்ன பிடிக்கும், அதனால் தன் புகழ் கூடுமே என்று யோசித்தபடி இருந்தால், தனக்கென்று சிறிது நேரத்தையாவது ஒதுக்க முடியுமா? பின், நிம்மதி எப்படிக் கிட்டும்?

    புகழையே துரத்திப் போகும்போது, உணர்ச்சிபூர்வமான தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ள ஏது நேரம்!

    உண்மையான நண்பர்களும், உறவினர்களும் இல்லாத வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டும் இருக்குமா?

    புகழுடன் பணமும் சேர்ந்தாலும், ஏன் மகிழ்ச்சி கிட்டாததாக இருக்கிறது என்று புகழ் போதை கொண்டவர்களுக்குப் புரிவதில்லை. திறமை வாய்ந்தவர்கள் குறுகிய காலத்திலேயே காணாமல் போய்விடுவது இதனால்தான்.

    வினா: புகழை ஏன் போதை என்கிறார்கள்?

    விடை: எவ்வளவு கிடைத்தாலும், நிறைவு கிட்டாது.

    சமயம் பார்த்து, இவர்களைத் தீய வழிகளில் ஈடுபடுத்த முன்வருவார்கள் பல `நண்பர்கள்’. அந்நிலையில், பணத்துடன் புகழும் கரைந்துபோகும். மிஞ்சுவது கசப்பும், ஆரோக்கியக்குறைவும்தான்.

    பணம், புகழ், திறமைக்காக அளிக்கப்படும் பட்டங்கள் ஆகிய எதையுமே பெரிதாகக் கருதாது, எடுத்த காரியத்தில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு, திருப்தி அடைகிறவர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

    “வெற்றி நிலைக்க பணிவு முக்கியம். பணம், புகழ் ஆகியவை தலைக்குமேல் ஏறக்கூடாது”. இப்படிக் கூறியிருப்பவர் A.R. ரஹ்மான்.

    `இன்னும் என்னதான் வாங்கமுடியும்!’ என்ற அலுப்பை ஏற்படுத்திவிடுகிறதாம் அளவுகடந்த செல்வம்.

    சிலர் இது புரிந்து, பிறருக்கு உதவுவதில் மகிழ்ச்சி காண்கிறார்கள். மிகச் சிலர்தான்!

    புகழின் உச்சியைத் தொட்ட குழந்தைகள்

    ஒரு குழந்தை வயதுக்குமீறி பேசினால், அது சுட்டித்தனம் என்று தப்புக்கணக்கு போடுகிறார்கள்.

    தமிழ் திரைப்படங்களிலோ, அல்லது முகநூலிலோ, குழந்தைகளைக் கண்டபடி பேசவைக்கிறார்கள். அப்பாவையும் தாத்தாவையும், `டேய்!’ என்றழைக்கும் குழந்தை புத்திசாலியாம்!

    இயக்குனர் அல்லது பெற்றோர் கூறுவதுபோல் செய்து காட்டுகிறார்கள் குழந்தைகளும், தாம் என்ன செய்கிறோம் என்று புரியாமலேயே. பிறர் புகழ, எப்போதும் அப்படியே நடக்கத் தலைப்படுகிறார்கள்.

    பல மணி நேரம் நடிக்க வேண்டியிருப்பதால், பிற குழந்தைகளுடன் இணைந்து விளையாட முடியாது. வயதுக்குரிய கல்வியையும் பெறுகிறார்களா என்பதும் சந்தேகம்தான்.

    தம் வயதுக்குரிய அப்பாவித்தனத்தை இழந்து, வளர்ச்சிக்கு எது ஏற்றது என்று புரியாது வளர்வதால், மனஇறுக்கத்தைத் தவிர்க்க முடிவதில்லை. அதைப் போக்க, மது, போதைப்பொருட்களை நாடுவது பெரும்பாலரது பழக்கமாகிவிடுகிறது.

    மைக்கல் ஜாக்சன்

    இசைத்துறையில் உலகிலேயே அதிகமான விருதுகள் பெற்றவர், ஓராண்டில் மிக அதிகமான வருமானம் பெற்றவர் என்றெல்லாம் பெரும்புகழ்பெற்ற மைக்கல் ஜாக்சனுக்கு போதை மருந்து இல்லாவிட்டால் உறங்கமுடியாது என்ற நிலை ஏற்பட, ஒரு மருத்துவரை கூடவே வைத்துக்கொண்டார்.

    அளவுக்கு அதிகமாகிப்போன அப்பழக்கமே அவருக்கு யமனாக அமைந்தது.

    எந்தத் துறையானாலும், புகழ் போதை பிற போதை வழிகளில் கொண்டுவிடுகிறது.

    பிரபல HARRY POTTER ஆங்கில திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த டானியல் (Daniel Radcliffe) கூறுகிறார்: “நான் நடிக்கப் போகும்போது, ஒவ்வொரு முறையும் கண்மண் தெரியாது குடித்துவிட்டுத்தான் போவேன். எப்போதும், இனிமையாக நடந்துகொள்ளவேண்டுமே! சிறந்த நடிகன் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று தோன்றியது”.

    குழந்தை நட்சத்திரங்களாகப் புகழ் பெற்றவர்கள் இருபது வயது ஆனபோது புகழின் பாதிப்பை உணர்கிறார்கள். தம் வயதையொத்த பிறரது எதிர்பார்ப்பையும் தாளமுடியாது போய்விடுகிறது.

    மது அருந்திவிட்டுக் காரோட்டியது, திருடுவது போன்ற சட்டவிரோதமான காரியங்களில் ஈடுபட்டு, சிறைத்தண்டனை அனுபவித்த இளம் நடிகர்களும் உண்டு. இவர்களால் மது, போதைப்பழக்கம் இரண்டையும் விடமுடியாது போக, வாழ்க்கையின் அடிமட்டத்திற்கே போய்விட்டார்கள்.

    கதை

    டெமி லோவாடோ (Demi Lovato) சிறுவயதிலேயே புகழ்பெற்ற பாடகியாகவும், நடிகையாகவும் விளங்கினாள்.

    `ரசிகர்களுக்கு இதுதான் பிடிக்கும்’ என்று அறிவுரை வழங்கப்பட்டதில், அவளுக்குப் பிடித்ததுபோல் பாட முடியவில்லை. மன இறுக்கம் வந்தது.

    தந்தையைப்போல் தானும் குடித்தால் நிம்மதி அடையலாம் என்று ஆரம்பித்த பழக்கம் மிக மோசமாகி, பல வருடங்கள் மறுவாழ்வு மையம் ஒன்றில் கழிக்க நேர்ந்தது.

    பத்து வயதிற்குள் கிட்டவேண்டும் என்று தாம் அடைய ஆசைப்பட்ட புகழ் தம் பிள்ளைகளுக்காகவாவது கிடைக்கவேண்டும் என்று பல பெற்றோர் விரும்புகின்றனர். மகனும் ஒரு தனிப்பிறவி, அவனுக்கென்று விருப்பு வெறுப்புகள் இருக்கலாம் என்று யோசிப்பதில்லை.

    கதை

    Home Alone என்ற தொடர் திரைப்படங்களின் கதாநாயகன் மெக்காலே (Macaulay Culkin) என்ற சிறுவன்.

    அவனுக்குக் கிடைத்த புகழும் அத்துடன் வந்த பணமும் நிலைக்க, தந்தை அவனைப் பலவிதமாகக் கொடுமை செய்தாராம்.

    தாளமுடியாது, அவன் பெற்றோரின்மேல் வழக்குப் போட்டு, அவர்களிடமிருந்து `ரத்து’ வாங்கினான். அவனுடைய கோடிக்கணக்கான சொத்தை அவர்களால் தீண்டவும் முடியாதுபோயிற்று.

    தான் அழிவுப்பாதையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறோம் என்று அவனுக்கே புரிந்து, தப்பித்தவறிக்கூட மது அருந்துவதில்லை என்று உறுதி பூண்டிருக்கிறான்.

    தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு புகழ்வாய்ந்தவர்களின் வாழ்க்கை பிரமிப்பை உண்டுபண்ணும். `எவ்வளவு பெரிய வீடு! வண்ணவண்ணமாக எத்தனை ஆடைகள்! எத்தனை கோடி ரசிகர்கள்! நினைத்ததை எல்லாம் வாங்க முடியும்!’ என்று, தமக்கும் அப்படி ஓர் அதிர்ஷ்டம் இல்லையே என்று ஏங்கலாம்.

    அவர்களுக்குப் புரிவதில்லை, மிகக் கவனமாக இல்லாவிட்டால், புகழ் சறுக்கி, மகிழ்ச்சியை அறவே பறித்துவிடும் என்பது.

    Share
  • ஊர்வசி- சயந்தன் கதை உணர்த்தும் பாடம்!

    ஊர்வசி- சயந்தன் கதை உணர்த்தும் பாடம்!

    முனைவர் அரங்கன் மணிமாறன்

    ஒரு முறை தேவாதிபதியான இந்திரனின் சபைக்கு அகத்திய மாமுனிவர் செல்கிறார். இந்திரன் மகிழ்ந்து பணிந்து மிகச்சிறப்பான வரவேற்பும் உபசரிப்பும் செய்கிறான். இந்திரன் சபை கலைகளின் உறைவிடமாயிற்றே! இரம்பை, ஊர்வசி, மேனகை, திலோத்தமை முதலிய தேவ அரம்பையர் சூழ இருந்து கலைகளின் உச்சத்தைத் தொட்ட அரசவை அல்லவா?!

    அவ்வழியே தம் அரசவைக்கு வருகைப்புரிந்த தமிழ்முனி குறுமுனி குடமுனி கும்பமுனி அகத்திய  பெருமானுக்கு கலைவிருந்து அளிக்க விரும்பி ஊர்வசியின் நாட்டிய கலைவிருந்து ஏற்பாடு செய்கிறான் இந்திரன். தேவாதிபதியின் தேவசபை புதுப்பொலிவு பெற்றது. கலைநயத்தியத்தின் உறைவிடமான இந்திரனின் சபை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டது. கலைநயமும் ஒளிநயமும் நறுமணமும் மிக்கு விளங்கிய சபை ஊர்வசியின் கலைத்திறனைக் கண்டு ரசிக்க கூடியது. “ஊர்வசி! உன் கலைத்திறனை தமிழ்முனி அகத்தியர் கண்டு வியக்கும்படி நிகழ்த்திக்காட்டு!” என ஆணையிட்டான் இந்திரன்.

    சபையில் இந்திரனின் மைந்தனான சயந்தனும் அமர்ந்திருந்தான். ஊர்வசியின் காதலனாக அவன் அவள் இதயத்தில் இடம்பிடித்திருந்தான் என்பது பலரும் அறியா உண்மை.

    நாட்டியம் தொடங்கியது. ஆனால் ஊர்வசியின் மனமும் விழிகளும் சயந்தனையே நாடிநின்றது. ஆடலின் இடையே கண்கள் வழியே நயன காதல் சரசத்தில் ஈடுபட்டாள் ஊர்வசி. நாட்டியத்தை ஒப்புக்கு ஆடினாள். கடமைக்கு ஆடினாள். உப்புசப்பு இன்றி ஆடினாள். அந்த கலை அர்ப்பணம் அகத்தியருக்கன்றி சயந்தனை மகிழ்விப்பதாகவே இருந்தது.

    இந்திரன் தன்னை அழைத்து கலைவிருந்து கொடுப்பதாய் அவமானப்படுத்திவிட்டான் என கொதித்தெழுந்தார். கோபங்கொண்ட அகத்தியர் ‘ஊர்வசி! நிறுத்து உன் கலை கொலையை! நீ நிகழ்த்தியது நாட்டிய விருந்தா? அல்லது உன் உள்ளங்கவர் கள்வன் சயந்தனுடனான நயன சல்லாபமா? காதல் மயக்கத்தில் கலையை மறந்து என்னையும் அவமானப்படுத்திவிட்டீர்கள்!

    இனி உனக்கும் சயந்தனுக்கும் தேவ லோகத்தில் இடம் இல்லை. நீ பூமியில் மாதவி எனும் கணிக்கைக்குலப் பெண்ணாக அவதரிப்பாய்.நீ காதல் மயக்கத்தில் மறந்த ஆடற்கலையை முழு ஈடுபாட்டுடனும் அக்கறையுடனும் கற்று,  சோழன்  அரசவையில் அரங்கேற்றுவாய்! அங்கு மூங்கிலாக மாறப்போகும் சயந்தன் தலைக்கோல் எனும் பட்டமாகச் சூட்டப்பெற்று நீ அவனை அடைவாய்! இதுவே காமத்தில் கலையை மறந்து இழிவுப்படுத்திய உங்கள் இருவருக்கும் நான் கொடுக்கும் சாபம்! அகத்தியனின் வாக்கு அகிலத்தில் பொய்க்காது!நான் வருகிறேன்.

    ஊர்வசி மாதவியாக மண்ணில் பிறப்பெடுக்கிறாள். ஐந்தாம் வயது முதலே நாட்டியம் கற்கிறாள். தம் பனிரெண்டாம் வயதில் சோழ மன்னன் அரசவையில் தன் நாட்டிய அரங்கேற்றத்தை நிகழ்த்துகிறாள். கலையை முழுதாகக் கற்றுத்தேர்ந்த அவள் தன் திறன் முழுதும் வெளிப்படும்படியாக அரங்கேற்றியதைப் பாராட்டிய சோழன், நெறிப்படி பகைவரின் வெண்கொற்ற குடை காம்பை இழைத்து நவரத்தினங்களை பதித்து இடைஇடையே தங்க இழையால் சுற்றி அதை புனித நீராட்டி பூமாலைச் சூட்டி பட்டத்துயானையின் மீது இசை முழக்கத்தோடு அரசவை பெரியோர்கள் சூழ வலம்வரச்செய்து நாட்டிய அரங்கில் இருத்தினான். அத்தலைக்கோல் எனும் பட்டத்தையே மாதவியின் ஆடற்கலை திறனுக்கு உயரிய விருதாக அளித்தான். ஊர்வசி தலைக்கோலாம் சயந்தனைச் சூடினாள். இதனை சிலப்பதிகாரம் புகார்காண்டம் அரங்கேற்றுக்காதையில் “காவல் வெண்குடை மன்னவன் கோயில் இந்திர சிறுவன் சயந்தன் என வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்!”

    எனவும்

    ‘இலைப் பூங்கோதை இயல்பினில் வழாமைத் தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி’ எனவும் குறிக்கப்பெற்றுள்ளது.

    இதன் மூலம் இன்றைய மாணவர்களும் இளைஞர்களும் அறிந்து கொள்ளும் பாடம் என்னவெனில் நம்முன் கடமைகள் இருக்கும்போது அதை மறந்து  பொழுதுபோக்கு, விளையாட்டு, கேளிக்கை, காதல் போன்ற தேவையற்ற செயல்களிலேயே மூழ்கி, கல்விகற்றல், திறன்களை வளர்த்தல், எதிர்கால வாழ்வுக்கான திட்டப்பணிகளில் ஈடுபடுதலை மறக்கிறோம்.

    நாம் யார்? எந்த பருவத்தில் இருக்கிறோம்? நம் இன்றைய பணிகள் என்னென்ன? என்னென்ன திறன்களை நாம் பெற வேண்டியுள்ளது. உலகிலுள்ள மற்ற நாட்டின் இளைஞர்களில் சிலர் எந்த முன்னேற்றத்தை நோக்கி உயர்ந்துகொண்டிருக்கின்றனர் என்பதை உணர வேண்டும். மொழியறிவு, தொழில் நுட்ப அறிவு, விஞ்ஞான அறிவு ஆகியவற்றில் எத்தனை விரைவான முன்னேற்றம் கண்டுள்ளனர் என்பதை உணர்ந்து நாமும் அத்தகை அறிவுலகின் பந்தயத்தில் பங்கேற்று வெல்வதற்கான சூழல்களைப் பெற வேண்டும். ஆனால் எதிர்கால திட்டங்களோ இலட்சியங்களோ இன்றி அரசியல், சினிமா, விளையாட்டு,  பொழுதுபோக்கு போன்றவற்றில் மூழ்கி குறிக்கோளற்ற பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கிறோம். சிறந்த உடற்திறனும் அறிவுத்திறனும் கொண்டு   முன்னேற வேண்டும். அதைவிடுத்து தவம் செய்யும் காலத்து சுகங்களில் திளைத்தால் வரம் வாய்க்காது என்பதை உணரவேண்டும். காதல் மயக்கத்தில் கலையை மறந்தவள் கதை உணர்த்தும் நீதி மனம் ஒன்றிலும் செயல் வேறொன்றிலும் இருந்தால் வரத்திற்கு பதிலாக சாபமே கிடைக்கும்.

    மனம், சொல், செயல் ஆகிய மூன்றும் ஒன்றிய கடமைகள் செய்து முன்னேற்றம் காண்போம்!

    Share
  • அமரர் பாரதி மணி

    அமரர் பாரதி மணி

    அண்ணாகண்ணன்

    அண்மையில் காலமான பாரதி மணி அவர்களைப் பல்லாண்டுகளாக அறிவேன். சென்னையில் பல நிகழ்ச்சிகளில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். புகையிலை பிடிப்பது பற்றி, ஒரே புத்தகம்தான் எழுதுவேன் என்றது பற்றி, இன்னும் பலவற்றைக் குறித்து அவருடன் விவாதித்தது உண்டு. அனைத்தையும் சுவாரசியமாக விளக்குவார். செய்வதை ரசித்துச் செய்வார்.

    அவருடைய தில்லி சாகசங்களைப் படித்துவிட்டு, சென்னையில் அவர் வீட்டுக்குச் சென்றேன். அருமையாகக் காப்பி போட்டுக் கொடுத்தார். உங்கள் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்கலாமே. உங்கள் நட்பு வட்டத்தில் உள்ள இயக்குநர்களிடம் சொல்லுங்கள். நான் வேண்டுமானால், திரைக்கதை எழுதித் தருகிறேன் என்றேன். வேறு டைரக்டர் எதற்கு? நீங்களே டைரக்ட் செய்யலாம் என்றார். அதன் பிறகு அந்த முயற்சியை நான் தொடரவில்லை.

    பெங்களூருக்கு அவர் பெயர்ந்த பிறகும் தொலைபேசியில் பேசி வந்தேன். 30.01.2018 அன்று பெங்களூர் வீட்டைக் காலி செய்துவிட்டு நான் புறப்பட்ட நாளில், ரயிலைப் பிடிப்பதற்கு முன்னால், அவசர அவசரமாக அவரைப் பார்த்துவிட்டு வந்தேன். அவர் வீட்டிலிருந்து புறப்பட்டு, போக்குவரத்து நெரிசலைக் கடந்து, கே.ஆர். புரம் ரெயில் நிலையத்தை அடைந்தபோது, நான் ஏற வேண்டிய வண்டி, நிலையத்தில் நின்றிருந்தது. நான் என் பொதிகளை எடுத்துக்கொண்டு, வியர்க்க, விறுவிறுக்க, அந்த நடைமேடையை நெருங்குவதற்குள் அது புறப்பட்டுவிட்டது. அதில் முன்பதிவு செய்திருந்தேன். அதை விட்டுவிட்டு, அடுத்து வந்த வண்டியில், முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்துச் சென்னை வந்தேன். அப்போது பெரிய குழப்பம், எனக்குள் இருந்தது. பாரதி மணியைப் பார்க்காமல் நேராக ரெயில் நிலையம் வந்திருந்தால், அந்த ரெயிலைப் பிடித்திருக்கலாம் என ஒரு மனம். அப்படிப் போனால், பாரதி மணியை அதன் பிறகு பார்க்க முடியாமல் போயிருக்கும். எனவே, பார்த்து வந்தது சரிதான் என ஒரு மனம். பார்த்து வந்ததுதான் சரி என இப்போது நினைக்கிறேன்.

    அவருடைய வாழ்க்கையை, அதிலும் குறிப்பாக அவரது சாகசங்களை, திரைப்படமாக எடுக்கலாம். நிச்சயம் சுவாரசியமாக இருக்கும்.

    அவர் என்றும் நம் நினைவுகளில் வாழ்வார்.

    Share
  • மூலிகை வணிகர் ஆறுமுகம்

    மூலிகை வணிகர் ஆறுமுகம்

    தாம்பரம், தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் வாசலில், நடைபாதையில் அமர்ந்து மூலிகைகளை விற்கும் ஆறுமுகத்துடன் ஒரு நேர்காணல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பதினெண் சித்தர்கள்

    பதினெண் சித்தர்கள்

    தாம்பரத்தில் அமைந்துள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தை, பதினெண் சித்தர்களின் திருவுருவப் படங்கள் அலங்கரிக்கின்றன. இவர்கள், செயற்கரிய செய்த மாமுனிகள், தமிழரின் பெருமைக்குரிய மாமணிகள். இவர்களைக் கண்டு வணங்கி, கருத்தில் இருத்தி, இவர்தம் தடத்தில் நடப்போம் வாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மூக்குத்தி அவரை அறுவடை

    மூக்குத்தி அவரை அறுவடை

    நம் மாடித் தோட்டத்தில் மூக்குத்தி அவரை அறுவடை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • Safety Tips During the Seasonal Rains

    Safety Tips During the Seasonal Rains

    Baskar Seshadri 

    Please ensure dry hands before switching on any gadgets particularly Lights and Fans

    Please wear rubber slippers when you switch on Geysers.

    Avoid Ironing in the House during this period

    Inverter users have to restrict usage only to Lights as Power Disruption may get extended sometimes in some Areas as the reason is Regional Specific.

    Store Potable water

    Please avoid jogging and walking for few Days

    Let children wear Thick Dresses and socks if needed be.

    Please Ensure that rain water do not get stagnated on the Terrace.

    Frequently remove the water from the plant pots as it may lead to seepage at a later stage.

    Please stay in Touch With Family whenever and wherever you are since they may not be able to Get Connected with you.

    Pregnant Women – Please be careful and watch your Movements and be very slow in actions .Engage Assistance if needed be wherever you Move.

    Charge Mobile Regularly and if needed have a spare Battery.

    Keep candles and Matchsticks handy

    Rains are the boon for our life and plants. Let’s Welcome it now and always

    Share
  • காலங்களில் அவன் வசந்தம் – 72ஆவது நிகழ்ச்சி

    காலங்களில் அவன் வசந்தம் – 72ஆவது நிகழ்ச்சி

    இசைக்கவி ரமணன் வழங்கும் காலங்களில் அவன் வசந்தம் – 72ஆவது நிகழ்ச்சி.

    சிறப்பு விருந்தினர் – முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் (சிங்கை)

    Share
  • மூத்த குடிமக்களுக்கான தொடர் வருவாய்த் திட்டங்கள்

    மூத்த குடிமக்களுக்கான தொடர் வருவாய்த் திட்டங்கள்

    மூத்த குடிமக்கள் முதலீடு செய்ய, இவ்வளவு வாய்ப்புகளா? இவ்வளவு திட்டங்களா? இந்த அளவுக்குத் தொடர் வருவாய் கிடைக்குமா? இவ்வளவு பாதுகாப்பானதா? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக், விரிவான விவரங்களைத் தருகிறார். பார்த்துப் பயன்பெறுங்கள். நண்பர்களுக்கும் பெரியவர்களுக்கும் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share