Tag: எம். ஜெயராம சர்மா

  • இறைவனாய் வாழுகின்றார் !

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா

     

    தப்பாகப் போகாமல் தடுத்திடுவார் எங்களப்பா

    எப்போதும் எம்நினைப்பாய் இருந்திடுவார் எங்களப்பா

    அப்பாவி போலவர் அயலார்க்குத் தோன்றிடினும்

    அப்பாவின் அறிவுத்திறன் ஆருக்கும் இல்லையென்போம் !

     

    ஆங்கிலத்தைப் பேசுகின்ற ஆற்றலில்லா எங்களப்பா

    அழகுதமிழ் பேசிநின்றால் அனைவருமே அசந்திடுவர்

    பட்டிமன்றம் கவியரங்கம் ஏறிநிற்பார் எங்களப்பா

    பரவசமாய் அவர்படையல் பாங்குடனே வந்துநிற்கும் !

     

    ஆடம்பரம் அறியாமல் வளர்ந்துவிட்டார் எங்களப்பா

    அறிவுடனே ஆராயும் ஆற்றலுள்ளார் எங்களப்பா

    வீணான வார்த்தைகளை விரும்பாதார் எங்களப்பா

    விருப்புடனே தேர்ந்தெடுத்து விளம்பிடுவார் வார்த்தைதனை !

     

    ஓடியாடி நின்றிடுவார் ஓயாமல் உழைத்திடுவார்

    ஓய்வெடுப்பு எனும்வார்த்தை உள்ளமதில் அவர்க்கில்லை

    வாடிநிற்பார் முகங்காணின் மனமார உதவிநிற்பார்

    மாமனிதர் எங்களப்பா வாழ்வாங்கு வாழவேணும் !

     

    வடமொழியில் வல்லுனராய் எங்களப்பா இருப்பதனால்

    வாத்தியார் எனும்பெயரால் வரவேற்பார் யாவருமே

    உபநிடதம் விளக்கமெல்லாம் ஒழுக்காக விளக்கிநிற்பார்

    அவர்மீது எம்மதிப்பு அதிகரித்தே வருகிறது !

     

    வெள்ளைவேட்டி சால்வையுடன் வெளியிலவர் போய்வருவார்

    உள்ளமதில் கள்ளமதை உதறியே எறிந்துநிற்பார்

    பள்ளமதில் வெள்ளம்போல் பாய்ந்துவரும் கருணையினால்

    பலபேரின் துயர்துடைக்கப் பாடுபட்டார் எங்களப்பா !

     

    குங்குமப் பொட்டுடனே குதூகலிக்கும் அவர்முகத்தில்

    மங்காத காந்தசக்தி மலர்ந்தபடி அமைந்திருக்கும்

    பொங்கிவரும் பக்திதனை இங்கிதமாய் உரைத்துநிற்கும்

    எங்களது அப்பாவை என்னாளும் வியந்துநிற்போம் !

     

    கோவில்சென்று கும்பிடுவார் குறைசொல்லல் தவிர்த்திடுவார்

    யார்மனமும் நோகாமல் நல்லதெல்லாம் எடுத்துரைப்பார்

    கூர்மைநிறை கருத்தையெல்லாம் கொண்டுவந்து அளித்திடுவார்

    வாய்மைதனை வாழ்வியலாய் வாழ்ந்துநின்ற எங்களப்பா !

     

    கடவுளில்லை என்பார்க்கு கவனமாய் பதிலுரைப்பார்

    கடவுளினைக் காணுதற்கு கண்ணியமே தேவையென்பார்

    கண்ணியத்தை உணராதார் கடவுள்பற்றி உணரார்கள்

    கண்ணியத்தை வளர்த்துவிட்டு கடவுளையே தேடுஎன்பார் !

     

    சித்தரது தத்துவத்தை சிரசின்மேல் வைத்திடுவார்

    அத்தனையும் தமிழினத்தின் சொத்தெனவே சொல்லிநிற்பார்

    நாத்திகம் முழங்கிடுவார் நம்சித்தர் வழிபார்க்கின்

    ஆத்தீகம் எனும்வழியே அவர்க்கு நட்பாகுமென்பார் !

     

    வள்ளுவத்தை வாழ்வாக்கி வாழ்ந்துபார் எனச்சொல்வார்

    தெள்ளுதமிழ் நூல்களுள்ளே திருக்குறளே சிறந்ததென்பார்

    உள்ளத்தால் பொய்யாது ஒழுகுதலே மேன்மையென்பார்

    ஒருதீங்கும் நினைக்காதே என்றுரைப்பார் எங்களப்பா !

     

    எங்களப்பா எண்ணம்போல் எல்லோர்க்கும் இருந்துவிடின்

    சங்கடங்கள் சண்டைகள் தமைமறந்தே ஓடிவிடும்

    இங்கிதமாய் வாழுஎன்று எங்களப்பா எடுத்துரைப்பார்

    இதயமதில் எங்களப்பா இறைவனாய் வாழுகின்றார் !

    Share
  •  வாழ்வினையே நடு !

    எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

     

    அன்பைநடு அறிவைநடு

    ஆணவத்தை அகற்று

    இன்பைநடு ஈகையைநடு

    எண்ணமதை திருத்து

    உண்மைநடு உழைப்புநடு

    ஊழலினை விரட்டு

    உன்மனதில் இலட்சியத்தை

    ஊன்றிநின்று நடு !

     

    இலக்கியத்தை என்னாளும்

    இங்கிதமாய் நடு

    நிலத்திலுள்ள மாந்தரிடம்

    நிம்மதியை நடு

    உனக்குதவி செய்வாரை

    உள்ளமதில் நடு

    உண்மையது யாவருக்கும்

    உதவுமென்று நடு !

     

    களவுதனைக் கழைந்துவிட்டு

    கண்ணியத்தை நடு

    காதலுடன் வாழ்வெலாம்

    கல்விதனை நடு

    கடவுள்பற்றி நினைக்கின்ற

    கருத்தினையும் நடு

    கண்களிலே என்னாளும்

    கருணையையும் நடு !

     

    பிறர்தம்மை நோகாவிடா

    பெருமனதை நடு

    குறைசொல்லா வகையினிலே

    குணங்களையும் நடு

    நிறைவான வாழ்வுவர

    நிம்மதியை நடு

    மறைவான எண்ணங்களை

    மனத்தைவிட்டே எடு !

     

    வள்ளுவத்தைப் படிக்கின்ற

    எண்ணமதை நடு

    வாழ்வினிலே பெற்றோரை

    மனமதிலே நடு

    கண்ணியத்தில் உயர்ந்தோரை

    கருத்தினிலே நடு

    காலமெலாம் நினைக்கும்படி

    வாழ்வினையே நடு !

    Share
  • வாழ்த்துவோம் வாழுவோம்!

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா  

    சிரித்து மகிழ்கின்ற நிலையானது மனிதனுக்கு மட்டுமே சிறப்பான ஒன்றாகும். விலங்குகளுக்குச் சிரிக்கத் தெரியாது.மனிதனைப்போன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தவோ அதனை அனுபவிக்கவோ தெரியாது. அதுபற்றி எதுவுமே புரிந்து கொள்ளும்நிலையிலும் அவைகள் இருப்பதில்லை. ஆனால் மனிதர்களில் பலர் தமக்கு கிடைத்த இந்த அருமையான பண்பினை உணருவதே இல்லை.

    ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற வேளையில் முதலில் அவரைப்பார்த்து ஒரு புன்முறுவலையாவது செய்யவேண்டும். நலமாக இருக்கிறீர்களா என்று ஒரு வார்த்தையாவது பேசமுயலுதல் வேண்டும். இப்படிச் செய்கின்றவர்கள் இன்று குறைந்து கொண்டே வருகிறார்கள். அவரைப் பார்த்து நாம்  ஏன் சிரிக்க வேண்டும்? அவரிடம் ஏன் நலன்விசாரிக்க வேண்டும்? இதனால் பெரிதாக என்னதான் வந்துவிடப் போகிறது என்று எண்ணுகின்ற மனப்பாங்கே அதிகம் இருப்பதைக் காண்கின்றோம்.

    நண்பர் ஒருவரைச் சந்திக்கின்றோம் என வைத்துக் கொள்வோம். நீண்ட நாட்களுக்குப் பின்னர்அவர்எதிர்படுகின்றார். கண்டவுடன் முதலில் சிரித்தால் அவர் மகிழ்ச்சிப் படுவார் அல்லவா? அவரைப் பற்றி அக்கறையுடன் அன்பாக நாலு வார்த்தை விசாரித்தால் மேலும் மனமகிழ்வார் அல்லவா? அவர் சொல்லுவதை அக்கறையுடன் கேட்டு அதற்கு இயைபாக நாமும்  பேசினால் குறைந்தா போய்விடுவோம்! நாம் பேசும் வார்த்தைகள் நண்பரின் மனத்துக்கு இதமாக அமையுமானால் அவரின் முகமும் மலரும். அதே வேளை அவரது அகமும் மலரலாம் அல்லவா!

    அதைவிடுத்து அவரைக் கண்டும் காணாமல் போவதும், கண்டு அவர் பேச்சுக் கொடுத்த போதும் அதனைக் கருத்தில் கொள்ளாமல் புறக்கணிக்கும் நிலையில் இருப்பதும், அவர் புன்முறுவல் காட்டிய போதிலும்  வெடுக்கென முகத்தைத் திருப்பிக் கொள்ளலும், பண்பாகுமா அல்லது மனிதனுக்கு அடுக்குமா

    அவர் நமக்கு முன்னர் ஏதாவது மனம்நோகச் செய்தவராகக் கூட இருக்கலாம். ஆனால் அவர் நண்பராக இருந்திருக்கிறார். நீண்ட நாளின் பின்னர் சந்திக்கின்றார். அப்பொழுது பழைய விஷயங்களை மனதில் ஏற்றிக்கொண்டு பாராமுகமாக, பண்பில்லாமல் நடப்பது என்பது சரியானதா என்பதை சற்று நின்று நிதானித்துப் பார்ப்பது அவசியமாகிறது அல்லவா?

    ஒருவருடைய வீட்டுக்குப் போகின்றோம். அங்கு சிலவேளை நமக்கு பிடித்தமில்லாத சாப்பாடுகள் தரப்படலாம். நமக்கு பிடிக்காத சூழல்கூடக் காணப்படலாம்.ஆனால் நாம் சிரித்து மகிழ்ந்து அங்கே அவர்களுடன் உறவாடும்பொழுது அவர்களும் மகிழ்வார்கள். அங்கே நல்லதொரு சூழலும் உருவாகியிருக்கும்.

    அதை விடுத்து யாவற்றையும் விமர்சனம் செய்து அவர்களை அசெளகரியத்துக்கு ஆளாக்குவோமேயானால் நமக்கு கிடைக்கும் இலாபம் தான் என்ன? நாம் உயர்ந்தவர்கள் ஆகிவிடுவோமா ? மற்றவர்களை வாழ்த்த வேண்டுமே அன்றி அவர்களை வீழ்த்தும் வகையில் நடந்து கொள்ளுதலை விட்டுவிடுதல் தான் சிறந்த பண்பு எனலாம்.

    ஒருவரை சந்திக்கின்றோம். சில வேளை அடுத்த விநாடியோ அல்லது அடுத்த ஒரு மணி நேரத்திலோ அல்லது அடுத்த நாளோ கூட அவர் இந்த உலகத்தை விட்டு இல்லாமலும் போகலாம். சந்திக்கும் நமக்கும் அந்தநிலை  வந்தாலும் வந்திடலாம்.

    இதனால் முதல் சந்திப்பு இருவருக்குமே முடிவான சந்திப்பாகவும் அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆதலால் கிடைக்கும் பொழுதை நல்லதாக்க  செய்வதுதான்  மிகவும் உயர்ந்த வாழ்க்கை முறை எனலாம்.

    எதனை நாம் மற்றவர்களுக்கு வழங்குகின்றோமோ அதுவே நமக்கும் வந்து சேரும். அன்பையும், பாசத்தையும், ஆதரவையும், கருணையையும், மகிழ்ச்சியையும், புன்சிரிப்பையும்ஆறுதலான இனிமையான வார்த்தைகளையும்,  பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் வழங்கிப் பாருங்கள் கிடைத்தவர்களும் திருப்தி அடைவார்கள். கொடுத்த நாமும் பெருந் திருப்தியைப் பெற்று விடுவோம்.இது பெரிய தத்துவமாக இருக்கிறது அல்லவா?

    சமயங்களும், சமயப் பெரியவர்களும் இதனையே நாளும் பொழுதும் நமக்கு சொல்லுகிறார்கள். அவர்கள் சொல்லும் விதங்கள் வித்தியாசமானதாக இருக்கலாம். ஆனால் அவர்களின் உள்ளார்ந்த தத்துவங்கள் இவையாகத் தான் இருக்கின்றன. 

    மனிதர்களிடயே மகிழ்ச்சியைக் காண்பது அரிதாகவே இருக்கிறது. மகிழ்ச்சியைத் தொலைத்து விட்டவர்கள் தான் அநேகம் பேராவர். மகிழ்ச்சியத் தேடி அதற்காகப் பல மருத்துவ முறைகளையும்  மருந்துகளையும் நாடுவதை நடைமுறையில்  நாளும் காணக்கூடியதாக இருக்கிறது.

    இதற்கெல்லாம் அடிப்படை ஒவ்வொருவர் மனங்களிலும் நல்ல பண்புகள் உதயமாகாமையும் , அதைப் பற்றி அக்கறை கொள்ளாமையுமேயாகும். சிரிப்பது நமக்குக் கிடைத்திருக்கும் பெருவரமாகும். முகமலர்ச்சியுடன் இருந்தாலே முயற்சியெல்லாம் சிறப்பாகும். மற்றவராலும் மதிக்கப்படுவோம். மற்றவர்களது விருப்பமும் நம் மேல் வந்துகுவியும்.

    புறக்கணிப்பு என்பதை எவருமே பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். புறக்கணித்தல்  எனும் குணத்தை புறந்தள்ளல் அவசியமே. விமர்சனம் எனும்பெயரால் வீண்வாதம் எழுகிறது. வீண்வாதம் முற்றிவிடின் விபரீதம் விளைந்துநிற்கும். இலக்கியத்தை விமர்சியுங்கள். எழுதுக்களை விமர்சியுங்கள். எழுதிநிற்கும் மனிதர்களை விமர்சிக்க முயலவேண்டாம்.

    பலவீனமுடையாரை பலவீனமாக்கல் நல்லதல்ல. பலவீனமாக்க முயன்றால்   நம்மையும்  பலவீனம் பிடித்துக் கொள்ளலாம். விமர்சனம் செய்வது இலகுவானது. அதனை எதிர்கொள்வது அவ்வளவு இலகுவானதல்ல.ஆகவே விமர்சனத்தை எல்லாருக்கும் , எல்லாவற்றுக்கும், எல்லா இடத்தும் செய்வது உகந்த செயலும் அல்ல.

    செய்யக்கூடாது என்றவுடன் செய்ய வேண்டும் என்னும் எண்ணம் வரும். தொடக்கூடாது.  பார்க்கக்கூடாது, பேசக்கூடாது, என்றெல்லாம் சொல்லும்பொழுது – சொல்லுவதற்கு எதிராகவே செய்யவேண்டும் என்னும் எண்ணம் உருவாவதையும்

    நாளாந்த வாழ்க்கையில் காணுகின்றோம். சொன்னவை சரியானதாக இருந்தாலும் இங்கே சொல்லும் முறைதான் சிக்கலுக்கு வழியாகி நிற்கிறது. 

    ஆகவே சொல்லும் வழியை கட்டாயம் மாற்றவேண்டும். செய்யக்கூடாது என்னும் வார்த்தையினை எடுத்துவிட்டு – இப்படிச்செய்தால் நன்மையாஇருக்கும். செய்துதான் பாருங்களேன் என நயமாக – கட்டளையாக இல்லாமல் சொன்னால் நிச்சயம் நினைத்த கருமம் நிறைவேறுவது இலகுவாகிவிடும். அதைவிடுத்து செய் அல்லது செத்துமடி என சர்வாதிகார தோரணையில் சொன்னால் இருப்பதுகூட இல்லாமலேயே போனாலும் போய்விடலாம். சொல்லும் விதம்தான் மிகவும் முக்கியம் என்பதை எல்லோரும் மனத்தில் இருத்துவது மிகமிக அவசியமானதாகும்.

    இருண்ட மனமும், இருண்ட வார்த்தைகளும், இடருக்கு வழியாக அமைந்தே விடுகின்றன. தெளிந்த மனமும், திறந்த வார்த்தைகளும், செம்மைக்கு வழிசமைத்து விடுகின்றன. விற்பனை நிலையங்களிலே வேலைபார்க்கின்றவர்கள் – தங்களுக்கு எவ்வளவு வருத்தங்கள் இருந்தாலும் வருகின்ற மக்களை இன்முகத்துடன் வாருங்கள் !

    உங்களுக்கு என்ன தேவை என்று புன்முறுவலுடன் தான் வரவேற்று நிற்கிறார்கள்! வருகிறவர்கள் அவர்களுக்குத் தெரிந்தவராகவோ அல்லது உறவினராகவோ இருக்க மாட்டார்கள்,  என்றாலும் முகமலர்ச்சியுடன் வரவேற்பது அங்கு போகும் அனைவருக்கும் அகமகிழ்வை ஏற்படுத்துவதாக அமைகிறதல்லவா ? இது நமக்கு நல்லதொரு பாடமாக இருக்கிறதல்லவா?

    பலபட்டங்கள் பெற்று உயர்பதவிகளில் இருந்தாலும்  முகமலர்ச்சியுடன் இருக்க முடியாவிட்டால் படித்த படிப்பும்,பார்க்கும் பதவிகளும், பயனற்றதாகிவிடாதா?

    அகத்தின் அழகு முகத்திற் தெரியும்” என்பதை அனைவரும்   அறிந்திருக்கிறோம். ஆனால் அகத்தை மட்டும் அசையாமல் வைத்தும் இருக்கின்றோம். எனவேதான் நம் அகத்தின் இயலாமையை மற்றவரிடம் பிரதிபலித்து நின்று விடுகின்றோம். படிப்பு, பதவி, பணம், அந்தஸ்தத்து  இருந்தாலும்  சிரிப்பையும் மகிழ்ச்சியையும் வாங்கிவிட முடியுமா? இவைகள் அனைத்தும் நிறைந்தவர்களிடம்  சிரிப்பையும் மகிழ்ச்சியையும் பற்றிப் பேசினாலே அதற்கும்  சேர்த்து விலைபேசும் நிலையிலேதான் அவர்கள் காணப்படுகிறார்கள்.

    வாழ்க்கையிலே கிடைக்கவேண்டியது அனைவருக்கும் மகிழ்ச்சியும் நல்ல முகமலர்ச்சியுந்தான். இதனைக் கொடுத்தால் தான் பெற்றுக்கொள்ள முடியும். தேடியெங்கும் ஓடவேண்டாம். பணம் கொடுத்தும் வாங்கவும் வேண்டாம். யாவும் உங்களிடம்தான் இருக்கிறது. வெளியில் கொண்டு வருவதுதான் கஷ்டமாக இருக்கிறது.

    எனவே சிரித்து வாழுவோம். சிரிக்க வாழ்ந்திடாமல் சிறக்க வாழுவோம் !

    காணும் பொழுதெல்லாம் கைகுலுக்கி , கண்களால் மகிழ்வைக்காட்டி அன்றலர்ந்த  தாமரையாய் அகமும் முகமும் மலர இன்று  முதல் செய்து பாருங்கள் எல்லாமே இனிப்பாயும் இன்பமாயும் தெரியும் !

    Share
  • நாம் உணர்ந்து செயற்படுவோம் !

             [ எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா ]

     

    பழைமையினை பார்ப்பதற்குப் பலருக்கும் பிடிப்பதில்லை

    பழமையது அருமையினைப் பலருமே அறிவதில்லை

    பழமையினை எதிரியாய் பார்க்கின்ற காரணத்தால்

    பலபயன்கள் இழந்துநிற்கும் பாங்கினையும் பார்க்கின்றோம் !

     

    இயற்கையினை வாழ்வாக்கி இயங்கியது பழமையது

    இதனாலே ஆரோக்கியம் எழிலுடனே விளங்கியது

    நாட்டுப்புறம் என்றெண்ணி நல்லவற்றை ஒதுக்கியதால்

    நம்வாழ்வில் நட்டம்பல நாளுமே வளர்கிறதே !

     

    விஞ்ஞானம் எனச்சொல்லி விபரீதம் வந்திருக்கு

    விளைச்சலினைப் பெருக்குதற்கு விதைக்கின்றோம் விஷமருந்தை

    பொய்யில்லா வகையினிலே விளைச்சல்கண்ட பூமியெலாம்

    பொல்லாத மருந்துடனே போராடி மாய்கிறதே !

     

    காய்கறியைப் பெருக்குதற்கு கண்டுவிட்ட விஞ்ஞானம்

    காய்பெருக்க வைத்துவிட்டு கால்பறித்து நிற்கிறதே

    நோய்நொடிகள் பலதந்து நொய்யும்படி செய்யுமிந்த

    வேதனைகள் பார்த்தபடி வெந்துநின்று வெதும்புகின்றோம் !

     

    நாகரிகம் எனும்பெயரால் நம்வீட்டில் புகுந்துவிட்ட

    நாமறியா உணவுவெல்லாம் நம்முள்ளே செல்கிறது

    சென்றுவிட்ட உணவெல்லாம் சீரிழக்கச் செய்துநின்று

    குன்றிவிடச் செய்வதனை என்றுதான் உணருவதோ !

     

    பலகடைகள் பலவுணவு பல்வேறு வடிவங்களில்

    பாங்காக வலம்வந்து பலரையுமே மயக்கிறதே

    நலன்பற்றி நினையாமல் நயம்பற்றி எண்ணுவதால்

    நலன்கெட்டு போவதற்கு நாமுடந்தை ஆகுகின்றோம் !

     

    பண்டிகைகள் வந்துவிட்டால் பட்சணங்கள் செய்திடுவார்

    பட்சணங்கள் அத்தனையும் பக்குவமாய் அமைந்திருக்கும்

    இப்போது பட்சணங்கள் எத்தனையோ வருகிறது

    அத்தனையும் ரசாயான கலவையாய் அமைகிறதே !

     

    கூழ்குடித்தோம் மோர்குடித்தோம் குடல்நோய்கள் வரவில்லை

    பழஞ்சோற்றை உண்டாலும் பழுதெம்மை அண்டவில்லை

    விலைகொடுத்து பலவற்றை விருந்தெனவே உண்ணுகின்றோம்

    மறுநாளே வைத்தியரை வலம்வந்து நிற்கின்றோம் !

     

    நெல்லரிசிச் சோறுண்ண நிம்மதியே இல்லையென்று

    வெள்ளைநிற உணவெல்லாம் வீட்டில்வாங்கி வைக்கின்றோம்

    நல்லதெல்லாம் மாட்டுக்கு நாம்கொடுத்து விட்டுநிதம்

    பொல்லாத உணவையெல்லாம் பொறுக்கிவைத்து உண்ணுகின்றோம் !

     

    உயிர்ச்சத்து அத்தனையும் உதறிவிட்ட உணவுகளை

    உயர்வாக எண்ணிநிதம் ஒழுங்காக உண்ணுகின்றோம்

    நோய்வந்த பின்னாலே நூறுமுறை அழுகின்றோம்

    யார்வந்து சொன்னாலும் நம்குணமோ மாறவில்லை !

     

    பாட்டிதந்த உணவெல்லாம் பறக்கவிட்டு விட்டதனால்

    பருவம்வரும் முன்னாலே பலநோய்கள் வருகிறதே

    நாட்டார்கள் காட்டார்கள் காட்டிவைத்தs முறையாவும்

    நம்வாழ்வை வளம்படுத்தும் என்பதனை மறந்துவிட்டோம் !

     

    பழமையென்னும் அத்திவாரம் பலமளிக்கும் என்பதனை

    உணருகின்ற நிலையெம்முள் உருவாகி வரவேண்டும்

    விஞ்ஞானம் நாகரிகம் விந்தைபல செய்தாலும்

    நம்வாழ்வில் அதன்பெருக்கை நாமுணர்ந்து செயற்படுவோம் !

    Share
  • வழிசமைப்போம் வாருங்கள் !

     

    எம் . ஜெயராமசர்மாமெல்பேண்அவுஸ்திரேலியா

     

    ஆட்சிதனில் அமர்ந்திருந்தும்

    அதியுயர்ந்த பதிவிபெற்றும்

    மாட்சியுடை மணிமகுடம்

    தான்சூடிக் கொண்டிருந்தும் 

    நாட்டிலிப்போ பெண்கள்தமை

    நலிவடையச் செய்யும்நிலை 

    நாளுமே பெருகுவதை

    நாம் தினமும் பார்க்கின்றோம் !

     

    வீட்டுக்குள் இருந்தவளை 

    வெளிவரவே செய்திருந்தும்

    நாட்டுக்குள் நடமாட

    நரகாசுரர் விடவில்லை 

    கல்விகற்கும் பெண்கள்கூட

    கண்கலங்கி நிற்கின்றார்

    கயமைநிறை மனமுடையார்

    கதிகலங்கச் செய்கின்றார் !

     

    பட்டம்பல பெறுகின்றார்

    சட்டம்பல பயிலுகின்றார்

    நட்டம்பல வாழ்க்கையிலே

    நாளுமவர் காணுகிறார்

    கெட்டவரின் கண்பார்வை

    பட்டுவிடும் போதெல்லாம்

    பட்டுவிடும் பாடதனை 

    பார்க்கின்றோம் ஏக்கமுடன் !

     

    படிக்கின்ற இடத்திலெல்லாம்

    பலதுன்பம் காணுகிறார்

    படிப்பிக்கும் ஆசானே 

    பாதகனாய் மாறுகிறார் 

    அரவணைக்கும் காவலரோ

    அரக்கராய் மாறுகிறார் 

    அவதியுறும் பெண்கள்தமை

    அன்றாடம் காணுகின்றோம் !

     

    வள்ளுவனார் குறள்படித்தும்

    மனமாற்றம் வரவுமில்லை

    துள்ளுதமிழ் பாரதியின்

    சொல்கூட ஏறவில்லை 

    பலமதங்கள் தத்துவமும்

    பயனற்றுப் போயினவோ

    பரிதவிக்கும் பெண்கள்நிலை

    பரிதாபம் ஆகிறதே !

     

    திருமணத்தின் பெயராலே

    தினமும்பெண்கள் வதைபட்டு

    திடீர்மரணம் தேடுவதை

    தினசரியால் அறிகின்றோம் 

    தெருவிலவர் நடமாட

    தினமுமே அஞ்சுகிறார்

    அனுதினமும்  அவர்வாழ்வு

    அச்சமுடன் விடிகிறதே  !

     

    பெண்களெங்கள் கண்களென

    பெருமையுடன் பேசிவிட்டு

    பெண்களது பெருமைதனை

    பிய்த்தெறிந்து வீசுகிறோம் 

    மங்கலங்கள் தரும்பெண்கள் 

    வாழ்வினுக்கே விளக்காவார்

    வாழ்வாங்கு வாழ்வதற்கு 

    வழிசமைப்போம் வாருங்கள் !

    Share
  • வாய்த்துள்ளாய் குலவிளக்காய் !

     

          

                    ( எம் .ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்த்திரேலியா) 

     

            செம்பவள வாய்திறந்து 

            சிரித்துநிற்கும் உன்முகத்தை

            தினமுமே பார்த்திருந்தால் 

            சிந்தனையே தெளிந்துவிடும்

            வந்தநோவும் ஓடிவிடும்

            வலியனைத்தும் மறைந்துவிடும்

            எந்திருவே உனையணைத்து

            என்னாளும் இன்புறுவேன் !

     

            முழுநிலவு வடிவான

            அழகுநிறை உன்முகத்தை

            முத்தமிட்டு முத்தமிட்டு

            மூழ்கிடுவேன் மகிழ்ச்சியிலே

            கொழுகொழுத்த கையாலே

            குறும்புநீ செய்கையிலே

            ஒழுகிவரும் இன்பமதை

            உள்ளமெலாம்  நிரப்பிடுவேன் !

     

            பொட்டுவைத்து தலைசீவி

            புதுச்சட்டை போட்டுனக்கு

            மெத்தையென என்மடியில்

            விரல்சூப்ப விட்டிருப்பேன்

            சூப்பிவிட்டு துப்புகின்ற

            எச்சிலெனை நனைக்கையிலே

            பார்க்கின்ற அத்தனையும்

            பரவசமாய் தெரியுமப்போ !

     

            மழலை  மொழிபேசி

            மயக்குவாய் எனைநீயும்

            மாமருந்தாய் வந்தமைந்த

            மாமணியே நீயெனக்கு 

            மாதவத்தால் உனப்பெற்றேன்

            வாழ்வெல்லாம் மகிழுகின்றேன்

            வையகத்தில் நான்வாழ

            வாய்த்துள்ளாய் குலவிளக்காய் !

     

    Share
  • அகத்தில் கொண்டு வாழு !

    எம் . ஜெயராமசர்மா.. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    நாடுபோற்ற வாழு

    நன்மைநினைத்து வாழு

    ஊடலொழித்து வாழு

    உண்மையோடு வாழு

    வாழவேண்டும் எண்ணம்

    மனதில்கொண்டு வாழு

    மனம்முழுக்கத் தூய்மை

    நிறைத்துக்கொண்டு வாழு !

     

    அன்னைதந்தை உந்தன்

    அகத்தில்கொண்டு வாழு

    அறிவைநல்கும் ஆசான்

    ஆசீபெற்று வாழு

    உன்னைவிரும்பும் வண்ணம்

    உயர்ந்துநிற்கும் பெரியோர்

    உன்னைவாழ்த்தி நிற்க

    உளத்தாலுயர்ந்து வாழு !

     

    கற்றவற்றை நாளும்

    கருத்தில்கொண்டு வாழு

    கற்கும்நூல்கள் தன்னை

    கவனங்கொண்டு பாரு

    கஞ்சிகுடிக்கும் வாழ்வு

    வந்தமையும் போதும்

    கற்கும்நிலைய நாளும்

    கடமையாக்கி வாழு !

     

    உண்மையுந்தன் வாழ்வில்

    உயர்வுஎன்று வாழு

    உலகுபழிக்கும் யாவும்

    உதறிவிட்டு வாழு

    அன்புதன்னை உந்தன்

    அறமாய்கொண்டு வாழு

    அரவணைக்கும் பாங்கை

    அகத்தில்கொண்டு வாழு !

     

    தெய்வமுண்டு என்று

    தினமுமெண்ணி வாழு

    பொய்மையுந்தன் வாழ்வை

    பொசுக்குமென்று வாழு

    கோபம்கொண்டு வாழ்ந்தால்

    குணமிழந்து போவாய்

    ஆதலாலே நீயும்

    அகிம்சையேற்று வாழு !

     

    Share
  • விதைத்ததை நாம் காத்துநிற்போம் !

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்த்திரேலியா

    vivekananda-1

     

     

     

     

     

     

     

    ஆங்கிலத்தில் கற்றாலும்
    ஆன்மீகம் அகம்நிறைத்தார்
    அறிவுடனே ஆன்மீகம்
    அவருரைத்து நின்றாரே
    தன்குருவை சோதித்து
    தன்னுணர்வை அவர்வளர்த்தார்
    தன்குருவின் ஆசியினால்
    தரணியெங்கும் ஒளியானார் !

    ஈரமதைக் கொண்டிருந்தும்
    வீரமுடன் செயற்பட்டார்
    ஊரெல்லாம் அவர்வார்த்தை
    உத்வேகம் ஊட்டியதே
    பாரினிலே புரட்சியுடன்
    பலகருத்தை அவர்பகர்ந்தார்
    பார்வையெலாம் பலநோக்கில்
    பாய்ந்துமே சென்றதுவே !

    சமயத்தின் தத்துவத்தை
    தாமுணர்ந்தே போதித்தார்
    சரியான பாதைசெல்ல
    தன்கருத்தை அவர்தந்தார்
    மனிதமன நிலையாய்ந்து
    மருந்தாகப் பலசொன்னார்
    நிலையான கருத்தெனவே
    நிறுத்திவிட்டு அவர்சென்றார் !

    விளக்கமில்லா நின்றவர்க்கு
    விவேகமாய் விரித்துரைத்தார்
    வேதனையில் இருப்பாரை
    வெளியேற்றல் கடமையென்றார்
    போதனையைச் சொன்னாலும்
    பொறுப்புடனே அவர்செய்தார்
    சாதனையின் சிகரமென
    சகலருமே போற்றுகின்றார் !

    காவிகட்டி வந்தபலர்
    கண்மூடிப் பலசொன்னார்
    மூடிநிற்கும் பலவற்றை
    மூடியே வைத்துநின்றார்
    வாடிநிற்கும் மக்கள்தமை
    மனங்களிலே கொள்ளாமல்
    மூடிநிற்கும் தத்துவத்தை
    முணுமுணுத்தே நின்றார்கள் !

    காவிகட்டி நின்றாலும்
    கண்மூடிக் கொள்கைகளை
    களைந்திடுங்கள் எனச்சொன்னார்
    களத்தில்நின்று விவேகாநந்தர்
    கண்மூடி நில்லாமல்
    கண்திறக்க வைத்தவர்தான்
    காலமெல்லாம் நாம்நினைக்கும்
    கனிவுநிறை விவேகாநந்தர் !

    வாய்மையினை யாவருமே
    வாழ்வியலாய் ஆக்கிடுங்கள்
    வைரமுடை உடலுடனே
    வரநீங்கள் முயன்றிடுங்கள்
    பொறாமைதனைப் புறந்தள்ளி
    புதுத்தெம்பு பெற்றிடுங்கள்
    புதுவாழ்வு உங்களுக்குப்
    பொலிவாக அமையுமென்றார் !

    தேசமதை நேசித்த
    திறலான துறவியவர்
    பாதகங்கள் தனையெதிர்த்த
    பாரதத்தின் துறவியவர்
    வீரமுள்ள உணர்வுதனை
    ஊட்டிநின்ற துறவியவர்
    விவேகநிறை விவேகாநந்தர்
    விதைத்ததைநாம் காத்துநிற்போம் !

    Share
  • மலர்ந்துவிடச் செய்துநிற்போம் !

    எம் . ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்திரேலியா

    கடவுளில் காதல்  கொள்ளு 

    கல்வியில் காதல்  கொள்ளு

    கடமையில் காதல் கொள்ளு 

    காதலில் காதல்   கொள்ளு

    இடர்தரும் விதத்தில் காதல்

    ஏற்படும் பொழுது ஆங்கே 

    குறையுனை வந்தே சேரும்

    குழப்பத்தில் இருப்பாய் நாளும் !

     

    ஒருதலைக் காதல் செய்தால்

    உளமெலாம் வருத்தம் சேரும்

    நிலவதைப் பார்க்கும் போதும்

    நெருப்பென நினைக்கத் தோன்றும்

    அளவிலா துன்பம் அங்கே 

    அகத்தினை உடைத்தே நிற்கும்

    ஒருதலைக் காதல் என்றும்

    உயிருக்கே ஊறாய் நிற்கும் ! 

     

    கதைகளில் காதல் வந்தால்

    கற்பனை என்று சொல்வோம்

    கம்பனின் காதல் பார்த்து

    கவிநயம் என்றே சொல்வோம்

    கன்னியின் காதல் யாவும்

    காளையர் காதல் யாவும்

    எண்ணிடும் போது நெஞ்சில்

    ஏக்கமாய் இருக்கு திப்போ !

     

    கயவரிடம் காதல் போனால்

    கண்ணியத்தை இழந்து நிற்கும்

    காதல் என்னும் பெயராலே

    மோதலங்கே வெடித்து நிற்கும் 

    பேதலித்து நிற்கும் அவர்

    பேய் எனவே மாறிடுவர்

    காதலினால் கொலை செய்து

    கருணையினை ஒழித்து நிற்பார் !

     

    ஒருதலைக் காதலால் உருக்குலைந்து போகாதீர்

    அழித்தலைச் செய்கின்ற அரக்கராய் மாறாதீர்

    காதலென்னும் புனிதத்தை களங்கமெலாம் ஆக்காதீர்

    காதலினை போற்றுங்கள் கண்ணியமாய் பார்த்திடுங்கள் !

     

    மனிதனது வாழ்வினுக்கு மாமருந்தாய் வந்ததுதான்

    மாண்புடைய காதலென மனங்களிலே கொண்டிடுவோம்

    மரணமதைத் தருகின்ற வழியிலதை ஆக்காதீர்

    மனமெல்லாம் நற்காதல் மலர்ந்துவிடச் செய்துநிற்போம் !

     

    Share
  • இன்பமுடன் வாழ்த்துகிறோம் (கவியரசர் பிறந்தநாளுக்கான கவிதை)

    எம். ஜெயராமசர்மா.. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா 

     

    kannadashan

    திரையுலகில் புகுந்தாலும் திறலுடைய சொற்கொண்டு 

           பலருடைய மனமுறையப் பாடியவர் நின்றாரே

           நிலைநிற்கும் பலகருத்தை சுமந்துவந்த அவர்பாட்டு

           நெஞ்சமதில் எப்போதும் நிலைத்துமே நிற்கிறது !

          காதலவர் கைபட்டால் காமனுமே கலங்கிடுவான்

          தேவர்கூட அவர்பாட்டை திறமென்றே பகர்ந்திடுவார்

          சாதிமதம் காதலுக்கு தடையாதல் தகாதென்று

          சேதிசொன்ன பாடலைநாம் தினமுமே ரசித்துநிற்போம் !

          பட்டினத்தார் தத்துவத்தைப் பலபேரும் அறிவதற்குப்

          பலபாட்டில் தந்துநின்ற பாவேந்தன் கண்ணதாசன்

          இஷ்டமுடன் தமிழ்தந்தான் எமையென்றும் மகிழ்வித்தான்

          கஷ்டம்பல பெற்றிடினும் காலமெலாம் வாழுகிறான் !

          கருவிலே கற்பனையை காவிவந்த கண்ணதாசன்

          உருவிலே கம்பனாய் காளிதாசன் போலானான்

          துருவியே தமிழ்கற்றான் துணிவுடனே கவிதந்தான்

          அருமைமிகு கண்ணதாசன் அகமெங்கும் வாழுகிறான்!

          வேதக்கருத்தை எல்லாம் மிகச்சிறப்பாய் தமிழாக்கி

          காதினுக்குள் செலுத்துதற்கு காரணமாய் இருந்தானே 

          கீதைதனைப் படிப்பதற்கும் பாதைதனை அமைப்பதற்கும்

          போதனையாய் பாவெழுதி போதித்தான் கண்ணதாசன் !

          இந்துமதம் இதயத்தில் யேசுமதம் கவனத்தில் 

          எல்லோர்க்கும் ஏற்கும்படி இயற்றினான் நூலிரண்டை 

          எவர்மனமும் நோகாமல் இறைகருத்தைப் பகர்ந்ததனால்

          எல்லோரும் போற்றுகின்றார் என்றும் கண்ணதாசனையே !

          காலத்தால் அழியாத கவிதந்த கண்ணதாச

          உன்பிறந்த நாளதனை உயர்வுடனே பார்க்கின்றோம்

          அன்புநிறை உள்ளமுடன் அகம்நிறைந்த தமிழ்கொண்டாய்

          இன்பமுடன் வாழ்த்துகிறோம் என்றும்நீ எம்கவியே !

    கவியரசர் கண்ணதாசன் பற்றிய விவரங்கள்:

    கண்ணதாசன் (நன்றி: விக்கிபீடியா)

    Share
  • வாழ்ந்திடுவோம் வளத்துடனே (சர்வதேச யோகா தினத்துக்கான கவிதை)

    எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா

    traditional-yoga

    இளமையாய் வாழவேண்டும் 

    இன்பமாய் வாழவேண்டும்

    நெடுதுநாள் வாழவேண்டும் 

    நிறைந்திடும் மகிழ்ச்சிவேண்டும்

    அளவிலா செல்வம்சேர்த்து

    ஆனந்தம் பெருக்கிநின்று

    மனையொடு மக்களாக

    வாழ்வதை விரும்புகின்றோம் !

    மண்ணிலே நல்லவண்ணம்

    வாழ்ந்திட விரும்பும்போது

    எம்மன எண்ணம்யாவும்

    இழுக்கிலா இருத்தல்வேண்டும்

    தன்னிலை உணர்தல்வேண்டும்

    தன்னுடல் பேணவேண்டும்

    உண்ணும் நம்உணவுயாவும்

    உடலுளம் காக்கவேண்டும் !

    உடலினைக் காக்கவேண்டில்

    உளமதைப் பேணல்வேண்டும்

    உளமது செம்மையானால்

    உடலுமே உறுதிகொள்ளும்

    உடலுளம் சிறக்கவேண்டில்

    உயர்வுடை யோகம்தன்னை 

    அயர்விலா செய்வோமாயின்

    ஆனந்தம் பெருகுமன்றோ !

    காமத்தைப் போக்கவேண்டும்

    கோபத்தை ஒழிக்கவேண்டும்

    காப்பி ரீஅத்தனையும்

    கைவிட்டு விடவும்வேண்டும்

    தினமுமே தவறிடாமல் 

    தியானமுடன் தொடங்கிநாம்

    உயர்யோகம் தனைச்செய்தால்

    உயர்ந்துவிடும் எம்வாழ்வு !

    யோகக்கலை தனைப்பயின்றால்

    யோகமுடன் வாழ்ந்திடலாம்

    சாகாத கலையாக

    யோகக்கலை மிளிர்கிறது 

    முற்கால ஞானிகளால்

    முதுசொமாய் வந்திருக்கும்

    எக்காலும் பயனைத்தரும்

    இக்கலையை ஏற்றுநிற்போம் !

    போதைதரும் குடிவகைகள்

    புகைத்துநிற்கும் சுருட்டுவகை 

    யாவுமெங்கள் வாழ்வினிலே

    நலங்கெடுக்கும் நஞ்சாகும் 

    யாமிவற்றை அகற்றிவிட்டு

    நல்லயோகம் தனைக்கொண்டால்

    நாளுமெங்கள் வாழ்வினிலே

    நல்லயோகம் விளையுமன்றோ !

    உடலுரத்தைத் தரும்பயிற்சி

    உளவுரத்தைத் தருவதில்லை

    உளமடங்கி வந்துவிடின்

    உயர்வாழ்வு அமைந்துவிடும்

    உளமடங்கா நிலையினிலே

    உடல்கூட உருக்குலையும்

    உடலுளத்தைக் காப்பதற்கு

    உயர்மருந்து யோகமன்றோ !

    நோயற்று வாழ்வதற்கும்

    நோயணுகா இருப்பதற்கும்

    தாய்போன்று வாய்த்ததுவே 

    யோகக்கலை ஒன்றேதான்

    வாழ்வதற்கு யோகக்கலை

    வரமாக அமைந்திருக்கு

    வாஞ்சையுடன் நாம்பயின்று

    வாழ்ந்திடுவோம் வளத்துடனே !

    யோகா (நன்றி: விக்கிபீடியா)

    Share
  • பயன்மிகுந்து நிற்குதன்றோ !

    எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா

    Valluvar

    வள்ளுவத்தைப் படித்துவிடின் வாழ்க்கைபற்றி அறிந்திடலாம்

    தெள்ளுதமிழ் நூல்களிலே சிறந்தநூலாய் இருக்கிறது

    அள்ளவள்ளக் குறையாமல் அறிவுரைகள் தருவதனால் 

    நல்லதெனப் போற்றுகின்றார் நாட்டிலுள்ள மக்களெல்லாம் 

    கள்ளமெலாம் அகல்வதற்கும் கயமைவிட்டு ஓடுதற்கும்

    நல்லதொரு மருந்தாக நம்குறளும் இருக்கிறது 

    உள்ளமதில் குறள்கருத்தை உருவேற்றி விட்டுவிடின்

    இவ்வுலகில் நல்வாழ்வு எல்லோர்க்கும் அமையுமன்றோ !

     

    பலநூல்கள் வந்தாலும் பாரில்நிலை நிற்கின்ற 

    பக்குவத்தைப் பெறுவதற்கு பக்குவமும் வேண்டுமன்றோ

    குறள்வந்த காலம்முதல் தலைநிமிர்ந்து நிற்குதென்றால்

    அதுகூறும் அத்தனையும் அனைவருக்கும் பொருந்துவதே 

    நிலையான அத்தனையும் குலையாமல் கூறுவதால் 

    தலையாய நூலாகக் குறளொன்றே திகழ்கிறது

    தொலைநோக்குப் பார்வையுடன் சொல்லிநிற்கும் கருத்தாலே

    நிலையாக நிற்கும்குறள் நெஞ்சமெலாம் நிறைந்திருக்கு !

     

    ஈரடியால் பலகருத்தை இலகுவாய் சொன்னகுறள் 

    எல்லோரின் வாழ்க்கைக்கும் ஏற்றதாய் இருக்குதன்றோ 

    பாரிலுள்ள பலபுலவர் பலகருத்தைப் பகர்ந்திடினும்

    சீரான நூலாகத் திருக்குறளே திகழுதன்றோ 

    கார்கொண்ட மேகமெனக் கருத்துமழை பொழியும்குறள்

    யார்மனதும் நோகாமல் நற்கருத்தைப் பாய்ச்சுதன்றோ 

    வேருக்கு   நீராக  வீரியமாய் நிற்கும்குறள் 

    பாருக்கு வந்ததனால் பயன்மிகுந்து  நிற்குதன்றோ !

     

    Share
  • மாநிலத்தில் ஊனமுற்றோர் !

     

    எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

    jey

    பார்வையற்றோர் குறையெதையும் பார்க்காது இருந்திடுவர்
    செவிப்புலனை இழந்தவரோ குறைகேட்கா இருந்திடுவார்
    கையற்றோர் தீயவற்றை தொட்டுவிடா திருந்திடுவார்
    இத்தனைகள் குறையிருந்தும் இவர்நிறைவா யிருப்பார்கள் !

    அழகான கண்ணிருக்கும் அகன்றபெரும் செவியிருக்கும்
    திடமான கையிருக்கும் திரண்டபெரும் உடலிருக்கும்
    வரமாக இவையிருந்தும் வண்ணமுற இருக்காது
    வசைபாடிக் குறைசொல்லி வாழ்நாளைக் கழித்திடுவார் !

    ஆண்டவனின் படைப்பினிலே அரும்படைப்பு எம்படைப்பே
    பகுத்தறியும் பேரறிவை படைக்கையிலே புகுத்திவிட்டான்
    குறையற்ற உடல்கிடைத்தும் குறைசொல்லி இருந்துவிடின்
    எமைப்படைத்த இறைவனுக்கே ஏற்குமா எண்ணிடுங்கள் !

    குறைகள்பல கொண்டிருப்போர் குறைபற்றி நினைக்கவில்லை
    குறையற்ற உடலுடையோர் குறைகளிலே உறைந்துவிட்டார்
    கறையற்ற வாழ்வினைநாம் காணவேண்டு மெனநினைத்தால்
    நிறைவாக நினைப்பதற்கு எமைமாற்றல் வேண்டாமோ !

    வெள்ளத்தின் நிலையுயர மெள்ளமெள்ளப் பூவுயரும்
    உள்ளமது உயர்வுபெறின் கள்ளமுடை நிலையகலும்
    நல்லதென பார்க்கின்ற நற்பார்வை வளர்ந்துவிட்டால்
    கள்ளமது கழன்றகன்று கண்ணியமே வந்துநிற்கும் !

    ஊனமுற்றோர் என்றுசொல்லி ஒதுக்கிவிட முயலுகின்றோம்
    உடலினால் ஊனமுற்றோர் ஊனமுற்றோர் ஆகார்கள்
    ஆணவத்தின் வசமாகி அறம்தவறி நடப்பவரே
    மாநிலத்தில் ஊனமுற்றோர் ஆகிடுவார் வாழ்வினிலே !

    Share
  • இனித்தொடங்கப் போகிறது !

     

     

    எம். ஜெயராமசர்மா.. மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

     
    கருங்கூந்தல் நிறைந்திருக்க
    கன்னமதில் குழிகள்விழ
    விளியிரண்டும் மீனெனவே
    வெண்மைநிற முகத்தினிலே
    மருண்டோடி பார்த்திருக்க
    வட்டநிலா வருவதுபோல்
    இடைஇருந்தும் தெரியாமல்
    அவள்வருவாள் நடைபயின்று
    அதைக்காண ஆவலுடன்
    அனுதினமும் காத்திருப்பேன் !

    பலபேர்கள் வந்தாலும்
    பார்த்துவிடா என்பார்வை
    இவள்மட்டும் வந்தவுடன்
    எனைமீறிச் சென்றுவிடும்
    நினைவெல்லாம் அவளாக
    நிறைந்திருக்கும் காரணத்தால்
    அவள்வருகை மட்டுமெந்தன்
    அகத்தினுள்ளே புகுந்துவிடும் !

    சிலவேளை அவள்பார்ப்பாள்
    பலவேளை நான்பார்ப்பேன்
    மின்சாரம் பாய்வதுபோல்
    வேகமுள்ளே பரவிநிற்கும்
    என்பார்வை அவள்பார்வை
    இரண்டுமொன்றாய் இணைந்திடவே
    கண்களிலே பேசியவர்கள்
    கைபிடிக்க எண்ணிவிட்டோம் !

    இல்லறத்தில் நாமிணைந்தோம்
    இன்பவுலா சென்றுவந்தோம்
    அன்புநிறை காதலொடு
    அகமகிழ நாமிருந்தோம்
    ஈருடலாய் இருந்தாலும்
    ஓருயிரே என்றிருந்தோம்
    எங்களது காதலது
    இணையின்றி வளர்ந்ததுவே !

    பிள்ளைகள் பிறந்தார்கள்
    பேரின்பம் தந்தார்கள்
    உள்ளூர நாம்மகிழ்ந்தோம்
    உவகையுடன் கொஞ்சிநின்றோம்
    கைநிறைய பொருள்வந்து
    கண்ணியமாய் நாம்வாழ்ந்தோம்
    கடவுளது கிருபையினால்
    காதல்மேலும் வளர்ந்ததுவே !

    வளர்ந்துவிட்ட பிள்ளைகளும்
    இணைந்துவிட்டார் இல்லறத்தில்
    முதுமை வந்துவிட்டதனால்
    முடங்கிவிட்டோம் இருவருமே
    தனிமையெனும் நிலையெம்மை
    தவிக்கவைத்து நிற்கிறது
    இனிமைதனை நினைத்தேங்கி
    இருக்கின்றோம் இருவருமே !

    கட்டழகுக் கருங்கூந்தல்
    காந்தநிறை கண்மணிகள்
    மொட்டவிழ்த்த புன்சிரிப்பு
    முழுநிலவு பொலிவுமுகம்
    அத்தனையும் அவழிழந்து
    அயர்ந்திப்போ இருக்கின்றாள்
    அவள்கோலம் தனைநினத்து
    அலமந்து நானிருக்கேன் !

    நான்ழுதால் தானழுவாள்
    நான்சிரித்தால் தான்சிரிப்பாள்
    தேனாகாப் பேசியவள்
    திக்திக்கிப் பேசுகிறாள்
    மான்விழிகள் கொண்டஅவள்
    மயக்கமுடன் விழிக்கின்றாள்
    மயக்கம்தந்த மங்கையிப்போ
    தயக்கமுடன் தவிக்கின்றாள் !

    என்றாலும் அவளிடத்தில்
    என்சுகமே தெரிகிறது
    தன்தோழில் எனயணைத்து
    தான்வருடி நிற்கின்றாள்
    நான்வீழ்ந்து போகாமல்
    தான்வேராய் தாங்குகிறாள்
    என்னுயிரைத் தன்னுயிராய்
    எண்ணுகின்ற என்தலைவி !

    கூன்விழுந்து விட்டாலும்
    நான்விழுந்து போகாமல்
    தானெழுந்து எனைத்தாங்கி
    தாயெனவே நிற்கின்றாள்
    என்காதல் வாழ்வினிலே
    இப்போதே இனிக்கிறது
    என்வாழ்வில் இன்பவுலா
    இனித்தொடங்கப் போகிறது !

    Share
  • எல்லோர்க்கும் நன்மையன்றோ!

    -எம் . ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

    தேர்தல்தனில் வெற்றிபெற்றால் தெளிந்தமனம் வரவேண்டும்
    வாக்களித்த மக்களது மனங்கோணா திருத்தல்வேண்டும்
    நோக்கமின்றிச் செயல்பட்டு நோகடிக்கா திருந்துவிடின்
    வாக்களித்த மக்களென்றும் வாய்ப்பளிக்க வந்திடுவார்!

    சொல்லுகின்ற திட்டமெல்லாம் தொய்வின்றிச் செய்துவிடின்
    நல்லாட்சி  எனும்சான்றை நாட்டுமக்கள் வழங்கிடுவார்
    வல்லமையால் வென்றுவிட்டோம் என்றெண்ணம் வந்துவிடின்
    வாக்களித்த மக்களெலாம் மனம்நொந்தே போயிடுவார்!

    வாக்குப் பெற்றுவிட்டதனால் வாய்ப்புவந்து விட்டதென
    நாற்காலி தனைப்பிடித்து நல்லதெல்லாம் தாம்சுருட்டிச்
    சாக்குப்போக்கு தனைச்சொல்லிச்  சதிராட்டம் போட்டுநின்றால்
    வாக்களித்த மக்களெலாம் வசைபாடி நின்றிடுவார்!

    தேர்தல்தனில் செலவுசெய்த காசதனைத் தேடுதற்குத்
    தேர்ந்தெடுத்த தேர்தல்தனைத் தீர்வாக்கல் முறையாமோ?
    ஊர்திரிந்து சேகரித்த வாக்கினினால் வந்தவுயர்
    பேருடைந்து போகாமல் காப்பதுதான் பெரும்பொறுப்பு!

    காரும்வரும் வீடும்வரும்  கணக்கின்றிப் பணமும்வரும்
    ஆருமென்ன சொன்னாலும் அதைக்கேட்கா மனமும்வரும்
    ஆனாலும் அவற்றையெல்லாம் அரவணைத்து நில்லாமல்
    ஆனமட்டும் அனைவரையும் அணைத்துநிற்றல் அறமாகும்!

    வள்ளுவத்தைப் படித்தொழுகி வாய்மையினை வாழ்வாக்கி
    உள்ளமெலாம் நல்லஎண்ணம் உறைந்துவிடச் செய்துவிடின்
    நல்லபடி ஆட்சிசெய்யும் நல்வழியில் சென்றிடலாம்
    நாட்டிலுள்ள மக்களெலாம் நல்வாழ்த்துக் கூறிநிற்பார்!

    அறமதனை அச்சாணி ஆக்கிவிடும் ஆட்சிதனை
    ஆட்சிபீடம் அமர்ந்தவர்கள் அனுசரித்தல் அவசியமே
    இனவாதம் மதவாதம் எதையும்மனம் கொள்ளாமல்
    இணக்கமுற ஆட்சிசெய்தால் எல்லோர்க்கும் நன்மையன்றோ!

     

     

    Share