மலர்ந்துவிடச் செய்துநிற்போம் !

0

எம் . ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்திரேலியா

கடவுளில் காதல்  கொள்ளு 

கல்வியில் காதல்  கொள்ளு

கடமையில் காதல் கொள்ளு 

காதலில் காதல்   கொள்ளு

இடர்தரும் விதத்தில் காதல்

ஏற்படும் பொழுது ஆங்கே 

குறையுனை வந்தே சேரும்

குழப்பத்தில் இருப்பாய் நாளும் !

 

ஒருதலைக் காதல் செய்தால்

உளமெலாம் வருத்தம் சேரும்

நிலவதைப் பார்க்கும் போதும்

நெருப்பென நினைக்கத் தோன்றும்

அளவிலா துன்பம் அங்கே 

அகத்தினை உடைத்தே நிற்கும்

ஒருதலைக் காதல் என்றும்

உயிருக்கே ஊறாய் நிற்கும் ! 

 

கதைகளில் காதல் வந்தால்

கற்பனை என்று சொல்வோம்

கம்பனின் காதல் பார்த்து

கவிநயம் என்றே சொல்வோம்

கன்னியின் காதல் யாவும்

காளையர் காதல் யாவும்

எண்ணிடும் போது நெஞ்சில்

ஏக்கமாய் இருக்கு திப்போ !

 

கயவரிடம் காதல் போனால்

கண்ணியத்தை இழந்து நிற்கும்

காதல் என்னும் பெயராலே

மோதலங்கே வெடித்து நிற்கும் 

பேதலித்து நிற்கும் அவர்

பேய் எனவே மாறிடுவர்

காதலினால் கொலை செய்து

கருணையினை ஒழித்து நிற்பார் !

 

ஒருதலைக் காதலால் உருக்குலைந்து போகாதீர்

அழித்தலைச் செய்கின்ற அரக்கராய் மாறாதீர்

காதலென்னும் புனிதத்தை களங்கமெலாம் ஆக்காதீர்

காதலினை போற்றுங்கள் கண்ணியமாய் பார்த்திடுங்கள் !

 

மனிதனது வாழ்வினுக்கு மாமருந்தாய் வந்ததுதான்

மாண்புடைய காதலென மனங்களிலே கொண்டிடுவோம்

மரணமதைத் தருகின்ற வழியிலதை ஆக்காதீர்

மனமெல்லாம் நற்காதல் மலர்ந்துவிடச் செய்துநிற்போம் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.