எல்லோர்க்கும் நன்மையன்றோ!

0

-எம் . ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

தேர்தல்தனில் வெற்றிபெற்றால் தெளிந்தமனம் வரவேண்டும்
வாக்களித்த மக்களது மனங்கோணா திருத்தல்வேண்டும்
நோக்கமின்றிச் செயல்பட்டு நோகடிக்கா திருந்துவிடின்
வாக்களித்த மக்களென்றும் வாய்ப்பளிக்க வந்திடுவார்!

சொல்லுகின்ற திட்டமெல்லாம் தொய்வின்றிச் செய்துவிடின்
நல்லாட்சி  எனும்சான்றை நாட்டுமக்கள் வழங்கிடுவார்
வல்லமையால் வென்றுவிட்டோம் என்றெண்ணம் வந்துவிடின்
வாக்களித்த மக்களெலாம் மனம்நொந்தே போயிடுவார்!

வாக்குப் பெற்றுவிட்டதனால் வாய்ப்புவந்து விட்டதென
நாற்காலி தனைப்பிடித்து நல்லதெல்லாம் தாம்சுருட்டிச்
சாக்குப்போக்கு தனைச்சொல்லிச்  சதிராட்டம் போட்டுநின்றால்
வாக்களித்த மக்களெலாம் வசைபாடி நின்றிடுவார்!

தேர்தல்தனில் செலவுசெய்த காசதனைத் தேடுதற்குத்
தேர்ந்தெடுத்த தேர்தல்தனைத் தீர்வாக்கல் முறையாமோ?
ஊர்திரிந்து சேகரித்த வாக்கினினால் வந்தவுயர்
பேருடைந்து போகாமல் காப்பதுதான் பெரும்பொறுப்பு!

காரும்வரும் வீடும்வரும்  கணக்கின்றிப் பணமும்வரும்
ஆருமென்ன சொன்னாலும் அதைக்கேட்கா மனமும்வரும்
ஆனாலும் அவற்றையெல்லாம் அரவணைத்து நில்லாமல்
ஆனமட்டும் அனைவரையும் அணைத்துநிற்றல் அறமாகும்!

வள்ளுவத்தைப் படித்தொழுகி வாய்மையினை வாழ்வாக்கி
உள்ளமெலாம் நல்லஎண்ணம் உறைந்துவிடச் செய்துவிடின்
நல்லபடி ஆட்சிசெய்யும் நல்வழியில் சென்றிடலாம்
நாட்டிலுள்ள மக்களெலாம் நல்வாழ்த்துக் கூறிநிற்பார்!

அறமதனை அச்சாணி ஆக்கிவிடும் ஆட்சிதனை
ஆட்சிபீடம் அமர்ந்தவர்கள் அனுசரித்தல் அவசியமே
இனவாதம் மதவாதம் எதையும்மனம் கொள்ளாமல்
இணக்கமுற ஆட்சிசெய்தால் எல்லோர்க்கும் நன்மையன்றோ!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.