Tag: அவ்வைமகள்

  • இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 12

    இறையியல் சிந்தனைகள் – ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும் – 12

    அவ்வைமகள்

    (பேராகிப் பேருக்கோர் பொருத்தமாகி)

    சமயம் எனும் உயர் அறிவியலை விவாதித்த பின், சமயத்திலும், அறிவியலிலும் புரட்சிகள் முளைப்பதன் தன்மையைக் காணுதல் பொருத்தமானதாகும்.

    சமுதாயத்தில் புரட்சிகள் உருவாகுவதற்கு, பல்வேறு காரணங்கள் உண்டு என்பது அறிஞர்களின் பொதுக்கூற்று [1]. இத்தகு காரணங்களை, பொதுவாக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்கள் என்று இருவகையாகக்  கூறு படுத்தி, அவர்கள் அலசுவது வழக்கம். எனினும், பொருளாதார, அரசியல் காரணங்களைக் காட்டிலும், ஒரு புரட்சிக்கு, சமூகத் தீர்மானிகள்  (Social Determinants) தாம் மிகுந்த வலிமையான காரணங்களாக இருக்கின்றன என்பது ஒரு சார் அறிஞர்களின் கோட்பாடு (Theory).  அதே நேரத்தில், அறிஞர்களில் மற்றொரு சாரார் முன்வைப்பது, யாதெனில். பொருளாதார, அரசியல், மற்றும் சமூகத் தீர்மானிகள் ஆகிய இவை மூன்றையும் தாண்டி, தேசத்திற்கு வெளியே இருந்து வரும் புறக்காரணிகள் (External Factors)  தாம் ஒரு புரட்சியை உருவாக்குகின்றன என்பதே.

    இவ்வாறு வகுத்தும் பகுத்தும் பற்பல அறிஞர்கள் காட்டியுள்ள புரட்சிக்கான பல்வேறு காரணங்களை அலசி ஆராய்ந்துவிட்டு, அவற்றைச் சற்றே நெறிப்படுத்தி, புரட்சியின் முதன்மைக் காரணங்கள் இவைதாம் என  அறிஞர்கள் கீழ்க்கண்டவற்றைப் பட்டியலிடுகிறார்கள்:

    • வீரியம் குறைந்த பொருளாதார வளர்ச்சி (Mid-level Economic Development)
    • சுயமான குடியாட்சி அல்லாமல் வாழுதல் (Nondemocratic Regime)
    • அரசின் திறனற்ற தன்மை (State Ineffectiveness)

    தேசத்திற்கு அப்பாலிருந்து வருகிற புறக்காரணிகள் பற்றி அறிஞர்கள் பேசுவது யாதெனில், அவை புரட்சிக்கு முதன்மைக் காரணிகளாக அமைவதில்லை என்றாலும் புரட்சியைத் தூண்டுவதில் வெகுவலிமையான துருப்பாய் – பொறியாய் விளங்குகின்றன என்பதே.

    சமூகப் புரட்சிகள் பற்றி ஆய்வு செய்யும் அறிஞர்கள் இவ்வாறு வழங்கியிருக்கிற சாராம்சத்தை நம் மொழியில், எளிமையாக, நமக்கு நாமே ஒரு விளக்கமாக அளிப்போமேயானால்,

    தாம் வாழும் தேசத்துக்கு அப்பாலிருந்து வரும் புறக்காரணிகள், மனித சிந்தனையைத் தூண்டிவிட, அத்தூண்டுதல் தரும் உத்வேகத்தில், புதியதோர் வெளிச்சம் பிறக்க, அவ்வெளிச்சத்தில், தன் சமூகத்தை பீடித்துள்ள வீரியம் குறைந்த பொருளாதார வளர்ச்சியும், தம் மக்கள், சுயமான குடியாட்சி அல்லாமல் வாழும் அவதியும், தம்மை ஆளுகின்றவனின் ஆட்சியின் திறனற்ற போக்கும், ஒருவருக்கு அறிவுப் பூர்வமாயும், உணர்வுப் பூர்வமாயும் புலப்படும்போது, அங்கே  புரட்சி உருவாகிறது.

    என்று கொள்ளலாம்.

    வள்ளலாரை, ஒரு புரட்சியாளர் என்று நம்மில் அனைவரும் கருதுகிற வேளையில், வள்ளலார், புரட்சியை வித்திடுவதற்கு ஏதுவாக மேற்கண்ட சூழல்கள் ஏதேனும் இருந்தனவா என்று இப்போது கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

    இதுபற்றி சிந்திப்போம்:

    வள்ளலார் வாழ்ந்த காலம்: அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874

    நமது வரலாற்றை ஒரு பின் நோக்குப் பார்வையாகப் பார்க்கிறபோது, வள்ளளார் பிறந்த ஆண்டே ஒரு பிரிட்டிஷ் இந்தியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு என அறிகிறோம் [2]. அதையடுத்து, அவர் ஐம்பத்தியொரு ஆண்டுகள் வாழ்ந்த முழு வாழ்க்கையின்  காலமானது, இந்தியாவின் வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம் என்பதும் புலனாகிறது [3]. அக்ககாலக் கட்டத்தின் நிகழ்வுகளை (குறிப்பாக அவர் சென்னையை விட்டு வெளியேறிய காலகட்டம் – 1858 – வரை) இங்கே கீழே பட்டியலிடுகிறேன்:

    • அனுபவமின்மைக்கும் தற்குறித்தன்மைக்கும் பெயர்போன பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக, ஆம்ஹெர்ஸ்ட், 1823 ஆகஸ்ட் 1 அன்று பதவியேற்று, முதல் பர்மியப்போர் எனப்படும் முதலாவது பர்மாச் சண்டைக்கு வித்திடுகிறார்.
    • 1824 நவம்பர் 1, 2 தேதிகளில் பாரக்பூர் கிளர்ச்சி வெடிக்கிறது.

    முதலாம் பர்மாச் சண்டையில் சென்று போரிடுமாறு இந்திய சிப்பாய்கள் பணிக்கப்பட்டு, போர்க்கப்பல்களில் ஏறிப்போய் பர்மா சென்று போர்புரிய உத்தரவிடப்படுகிறது. “இது அதர்மம்” என்று இந்தியச் சிப்பாய்கள் மறுக்க, அவர்களது மறுப்பினை  ஏற்க மறுத்த ப்ரிட்டிஷ் இராணுவ அதிகாரிகள், இந்தியச் சிப்பாய்கள், கட்டாயம் பர்மா சென்று போர் புரிந்துதான் ஆக வேண்டும் என்று கட்டளையிடுகிறது.  இதன் விளைவாக எழுந்தது தான், இந்திய சிப்பாய்களின் பாரக்பூர் கிளர்ச்சி. பிரிட்டிஷ் இராணுவம், கிளர்ச்சியாளர்கள்  மீது பீரங்கி தாக்குதல் நிகழ்த்த, அதில் 180 இந்தியச் சிப்பாய்கள் சுட்டுப்பொசுக்கப்பட்டார்கள். அடுத்து, 12 பேர் தூக்கிலடப்பட்டனர். சிப்பாய்த் தலைமையில் இருத்த அனைத்து இந்தியர்களையும் நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக ஆங்கிலேயர்களே நியமிக்கப்படுகிறார்கள்.

    • பிரிட்டிஷ் இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட காலம் நடந்த சண்டை முதல் பர்மியப்போர். வீரர்கள், போர்க்கருவிகள் என மனித இழப்பும் பொருள் இழப்புமாக மிகப்பெரிய அளவு நட்டத்தை இரு நாடுகளுமே சந்தித்தன. முதல் பர்மியப் போரின் இறுதியிலே மிகபெரிய பொருளாதார வீழ்ச்சியை பிரிட்டிஷ் இந்தியா சந்தித்து அதனால் அக்காலக் கட்டத்தில், பஞ்சம், பட்டினி, நோய்கள், என்  இந்திய மக்கள் அவதிப்பட்டதை நாம் அறிகிறோம்.
    • பணம் சம்பாதிப்பதுதான் எம் கொள்கை, என்கிறதான் கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை, ஆம்ஹெர்ஸ்ட் ஏற்படுத்திய மனித நட்டம், பொருள் நட்டம், போராயுத நட்டம், பண நட்டம் என எல்லா நட்டத்தையும்  கூட்டிப்பார்த்துவிட்டு, “தலைமைப் பொறுப்புக்கு லாயக்கற்றவன்” என்று முடிவு கட்டி, அவரை, 1828 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 13,ஆம் நாள் பதவியிலிருந்து விலக்க, அவர், பிரிட்டனுக்குத் திரும்பிபோக ஆணையிடப்பட்டு வெளியேற்றப்படுகிறார்.
    • 1835 ல், மெக்காலேவின் பரிந்துரையின் பேரில் ஆங்கிலக் கல்விச் சட்டம் அமுலுக்கு வருகிறது. இந்தியாவின் பாரம்பரிய கல்வி முறைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மேற்கத்தியப் பாடங்களை, இந்தியர்கள் ஆங்கிலத்தின் மூலம் படிக்க ஏற்பாடாகிறது. இந்தியமொழிகளின் வாயிலாகக் கல்வி பயிலுவதற்கு மானியங்கள் வெகுவாகக் குறைக்கப்படுகின்றன அல்லது மறுக்கப்படுகின்றன. இந்தியப்பாரம்பரிய முறையில், நடந்து வந்த கல்விக்கூடங்கள் (ஒரு சிலவற்றைத் தவிர) இனி இயங்கலாகாது என்று அறிவிக்கப்படுகிறது. வெளி நாட்டிலிருந்து கிறித்துவ மத அமைப்புகள இந்தியாவில் கல்வி கூடங்கள் அமைக்க, ஊக்கம் அளிக்கப்படுகிறது (இதில் நம்மவரான ராஜா ராம் மோகன் ராய்க்கு பெரும் பங்கு உண்டு) [4].
    • டல்ஹசி பிரபுவின் அவகாசியிலிக் கொள்கை (1848 லிருந்து

    1856 வரை) அமுலுக்கு வந்து சதாரா, ஜெய்பூர், சம்பல்பூர், நாக்பூர், சான்சி, தஞ்சாவூர், உதய்பூர் ஆகிய மன்னர் சமஸ்தானங்களை பிரிட்டிஷ் அரசு அபகரித்துக் கொண்டது

    • முடிந்ததது போல் தெரிந்த பர்மாச் சண்டை, இரண்டாம் பர்மாச் சண்டையாக வெடிக்கிறது (Apr 5, 1852 – Jan 20, 1853).
    • 1857 ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 29, மங்கள் பாண்டே எனும் இந்தியச் சிப்பாய், பாரக்பூரில் நிகழ்த்தியதோர் துணிச்சலான களேபரத்தால், அதனைத் தொடர்ந்து அவன் ஏப்ரல் 8, 1887ல் தூக்கிலடப்பட்டுக் கொல்லப்பட்டதும், நாடு முழுவதும் அதிர்ச்சியும் கலக்கமும் ஏற்படுகின்றன.
    • 1857 மே மாதம் 10 ஆம் நாள் வெடித்த சிப்பாய்க் கலகம் – நாடு முழுவதும் பரவுகிறது.
    • மே 31, 1857 ல்,சென்னை திருவல்லிக்கேணியில் முஸ்லிம்கள் கூடி, ஹைதராபாத் நிஜாமின் அழைப்பை ஏற்று,  பிரிட்டிஷுக்கு எதிராக, புனிதப்போர் நடத்த அறைகூவல் விடுக்கிறார்கள்.
    • 1858 ஜூன் 20 ஆம் நாள் சிப்பாய்க் கலகத்தை, குவாலியரில். பிரிட்டிஷ் இராணுவம் வெற்றிகொள்ள அதனால் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட தோல்வி, அவமானம், கெடுபிடிகள், கொடூரச்செயல்கள் என இந்திய தேசம் படாத பாடுபடுகிறது.
    • 1858 ஆகஸ்ட் 2 ஆம் நாள், இந்திய அரசாங்கச் சட்டம் (Government of India Act) அரங்கேறுகிறது இதன் படி, இந்தியா, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகையிலிருந்து நீக்கப்பட்டு, இங்கிலாந்தில் உள்ள British Crown எனப்படும் உச்சபட்ச ஆட்சி அமைப்பின் நேரடிப் பொறுப்பில் கொண்டுவரப்படுகிறது. சிப்பாய்க் கல்கத்தால் ஏற்பட்ட பின்விளைவு இது. இந்தியாவில், இன்னமும் கெடுபிடித்தன்மையின் கடினத்தை அதிகரிப்பதற்கான முதன்மை ஏற்பாடு இது.

    இந்நிலையில் தான் வள்ளலார், சென்னையிலிருந்து இடமாற்றம் செய்துகொண்டு சிதம்பரம் சென்று, அங்கிருந்து கருங்குழிக்குச் சென்று அங்கு 9 ஆண்டுகள் வாழ்ந்திருந்தாவாறு  இருந்த நிலையில், அவரது சமரச வேத சன்மார்க்க சங்கம் முதலான பணிகள் தொடர்கின்றன.

    மேலே வரிசைப்படுத்தியிருக்கிற 12 இத்யாதிகளையும் உற்று நோக்கினால், வள்ளலாரின் புரட்சிக்கு, அரசியல், பொருளாதாரக் காரணங்களோடு சமூகத் தீர்மானிகளும், புறக் காரணிகளும்  அமையப்பெற்றன என்பது புலனாகின்றது. (வெளிப்படையாக இருப்பதால், எந்தெந்த இத்யாதிகள் எவ்வெவை என வகைப்படுத்தத் தேவையில்லை).

    புரட்சிக்கு வித்தாக அமைவதான அனைத்து அம்சங்களும் ஒருவரது சிந்தையிலே, இறங்கி, அங்கே அவை ஒன்றுடன் ஒன்று உறவு கொண்டு சங்கமித்து  புதியதோர் பரிணாமத்துடன் முளையாய் வீறிடும் தருணம்,  அந்தப் புரட்சி எவ்வகையான புரட்சியாய் அமையும் என்பது புரட்சியாளனின் தனித்துவ குணாதிசயங்களைப் பொறுத்தது என்பதோடு அவன(ள)து இலக்கு எது என்பதையும் அவன(ள)து தீர்க்கதரிசனத் திறனையும் பொறுத்தே  அமைகிறது.

    புரட்சியாளனின் குணாதிசயங்களைப் பற்றிப் பேசுகிறவர்கள், பொதுவாக, கீழ்க்காணுபவற்றைக் குறிப்பிடுவார்கள்:

    • சுயநம்பிக்கை
    • விடாப்பிடித்தனம்
    • கொள்கை வெறி
    • சினம்
    • அச்சமின்மை
    • தீவிரம்

    ஆனால், வெறும் முப்பத்தி ஒன்பது ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து போயின, (சுட்டுக் கொல்லப்பட்ட) கொரில்லாப் போராளியும், ஆர்ஜன்டின மார்க்சிஸ்ட் தீவிரனும். கியூபப் புரட்சியின் வேந்தனுமான ஏர்நெசஸ்டோ கேவேரா (Ernesto Guevera) [5] சொல்லுவான்: “ஒரு புரட்சியாளனுக்கு வேண்டிய  ஒன்றே ஒன்று அன்பு எனும் உணர்வு தான். இந்தப்பண்பு இல்லாத எவரையும் ஒரு உண்மையான புரட்சியாளனாக எண்ணவும் முடியாது!” என்று. (“At the risk of seeming ridiculous, let me say that the true revolutionary is guided by a great feeling of love. It is impossible to think of a true revolutionary lacking in this quality”)  [6].

    கேவேரா சும்மா அல்பசொல்பமானவன் அல்லன். “கொரில்லாத் தலைவன் தானே!” என்று எவரும் அவனை மூர்க்கன் என்று மட்டமாய் எடை போட்டுவிட முடியாது – அவன் மெத்தப் படித்தவன் – ஒரு மருத்துவன் – ஒரு எழுத்தாளன் – ஒரு ராஜதந்திரி – ராணுவக் கோட்பாளன் (Military Theorist).

    சரி, உண்மையான புரட்சியாளனுக்கு, அன்பு உணர்வு எனும் பண்பு  இருக்கவேண்டும் என்பது இன்றியமையாதது என்றால், வள்ளலாருக்கு, இந்தப் பண்பு இருந்ததா என்ற வினாவை நாம் எழுப்பத் தேவையில்லை ஏனெனில் அவரது, ஜீவகாருண்யத்தினை  உலகே அறியும். சென்னையை விட்டுத்  தான் ஏன் வெளியேறினார் என்று வெளிப்படுத்தும்  வள்ளலாரின்  “பிள்ளைப் பெரு விண்ணப்பம்” (ஆறாம் திருமுறை) இப்புரட்சியாளனினின் புரட்சியை உருவாக்கி, வழிநடத்தியது அவனுக்குள் ஊறி விளைந்திருந்த அன்பு உணர்வு என்னும் பண்பு மட்டுமே எனபதை எவருக்குமே வெளிப்படையாகத் தெரிவிக்கிறது. இப்பாடல் வரிகளைக் இக்கட்டுரைக்குக் கீழே காண்க:

    அன்பு என்றால் உலப்பிலா அன்பு கொண்டவர் சிதம்பரம் ராமலிங்கம். எல்லா உயிருமாய்த் தழைத்து, பிழைத்தவையல்லையாய்  நிற்கும் அனைத்தின் மீதும் இராமலிங்கன்  கொண்ட அந்த உலப்பிலா அன்பினால் தான், “அடிகளார்” என்றதான  அந்த சிறு வித்து “வள்ளலார்” என்கிற ஆன்மீகப் புரட்சியாளனாக வெகு இயல்பாய் வீறிட்டது.

    புரட்சி இயல் அறிஞர்கள், புரட்சிகளின் தன்மையை இரண்டு விதமாகப் பிரிக்கிறார்கள் [1]: துரிதப் புரட்சி, திட்டமிட்ட புரட்சி என்று.

    துரிதப் புரட்சிகள் – அவ்வப்போது அடிக்கடி நிகழ்பவை. திட்டமிட்ட புரட்சிகள் எப்போதோ நடப்பவை. துரிதப் புரட்சிகள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும்  மூலதனமாய் வைத்து எழுபவை – இவற்றிற்கு அறிவும் விவேகமும் தேவை என்றாலும், பெரும்பாலும், உணர்ச்சிக் கொந்தளிப்பில் வேகவேகமாக நடத்தப்படுவதால், அறிவும் விவேகமும் முழுமையாகப் பயன்படுத்தப் படாததாலும், பின்விளைவுகளைப் பற்றிய போதிய அனுமானமும் அளவீடும் இல்லாது போவதால் – பெரும்பாலும் அவை, தோல்வியையேத் தழுவுவன. சொல்லப்போனால், துரிதப் புரட்சிகளை நடத்துவது சுலபம்.

    வள்ளளார் பிறப்பதற்குக் கொஞ்சம் முன் (1802) நடந்த வேலூர்க் கலகம், அவர் பிறந்த பின் நடந்த பாரக்பூர் கலகங்கள், சிப்பாய்க் கலகம் ஆகியனவெல்லாம் வெகு சிறப்பாகத் திட்டமிட இயலாத காரணத்தால் எதிர்ப்பார்த்த வெற்றியைத் தராமல் தோற்றுப் போயின. அது போன்றே ராஜா ராம் மோகன் ராயின் புரட்சிகரமான நடவடிக்கைகள், குறுகிய கால நோக்கில், முழுமையான ஆலோசனையின்றி, உடனடி சுயலாப நோக்கினைக் குறிவைத்து – செய்யப்பட்டதால், நாட்டிற்கு, இடர்பாடாகவே முடிந்திருந்த  நிலையினையும் அன்று வள்ளலார் தனது சிந்தையில் ஆய்வு செய்திருக்க  வேண்டும் என்றே நினைக்கத் தோன்றுகிறது. எனவே தான், வள்ளலார், நீண்ட நெடிய கால அவகாசம் எடுத்துக் கொண்டு,  சரியான காலம் கனியும் வரைக் காத்திருந்து பருவத்தே புரட்சிப் பயிர் விளைக்கவேண்டியதாயிற்று என்பதாக உணர்கிறோம்.

    வேலூர்க் கலகம், பாரக்பூர் கலகங்கள், சிப்பாய்க் கலகம், இவையாவற்றிலுமே இருந்தது ஒரே ஒரு அடிப்படைக் காரணம் தான். இந்தியமண்ணில் அன்று வாழ்ந்து கொண்டிருந்த இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத உணர்வைக் கொச்சைப் படுத்தியும், புண்படுத்தியும், மதத்திற்குப் புறம்பான நடவடிகைகளில் இந்தியச் சிப்பாய்கள் ஈடுபடுமாறு அவர்களை வற்புறுத்தியும் ப்ரிட்டிஷார் நடந்து வந்தனர் என்பதாலும், கிறித்துவ மதத்தைப் பரப்புமுகமான செயல்களில் அவர்கள ஈடுபட்டனர் என்பதாலும் தான் இக்கலகங்கள் எழுந்தவையே.

    இக்கலகங்களை உற்று நோக்குங்கால், மதம் என்கிற அதி அற்புதமான நுண்மை, ஒரு சமூகக் கலாச்சாரப் பெட்டகம் என்பதை அறியா அதிகாரப் போக்கு அங்கே தெரிந்தது.

    மதத்திலே, தெய்வம் மட்டுமில்லை, தேசமும், மொழியும், இலக்கியங்களும், ஆடல்-பாடல்-ஓவியம் – சிற்பம் முதலான கலைகளும், மனிதர்களின் பழக்கவழக்கங்களும், மண்ணும், நதிகளும், காடும், மலையும், ஆகாயமும், காற்றும், மூச்சும், நம்பிக்கையும், உறவும், சுற்றமும், நட்பும், உடையும் உணவும், அணிகலன்களும், அணியாகக் கலன்களும், அலங்காரமும், புழக்கும் பொருட்களும் கூட உண்டு என்கிற உண்மையை அறியாத அல்லது ஏற்றுகொள்ள மறுத்த எஜமானத்தனம் தெரிந்தது. ஆனால் அந்த எஜமானனுக்கு, பராக்ரம பலம் இருந்தது, சேனை இருந்தது, துப்பாக்கித் தோட்டாக்கள் இருந்தன, ஆட்சி அதிகாரம் இருந்தது.

    “நான் நினைப்பதை நான்  நடத்தியாக வேண்டும் – நீ வெறும்  அடிமைதானே – சொல்வதைச் செய் – அன்றேல்  உன் வாழ்வு என் வசம் தானே – செத்துத் தொலை!” என்கிற ராட்சதம் இருந்தது. சொல்லொணாக் கொடூர நிலையில் இருந்தது இந்தியா. இத்தகைய நிலையில், இடம், பொருள், ஏவல் என எல்லாவற்றையும் சரிவரத் தயார் செய்து கொள்ளாமல் எதனையும் செய்யமுடியாது என்கிற சூழல்.

    இடனறிதலில் வள்ளுவர் கூறுவார்:

    முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும்  அரண்சேர்ந்தாம்
    ஆக்கம் பலவுந் தரும்

    பகைவர்களிடையே வாழும்போது, நாம் நினைத்த காரியத்தை வெற்றிகரமாகச் செய்யவேண்டுமென்றால் அதற்குச் சரியான, பாதுகாப்பான, இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது இக்குறளின் எளிமையான பொருள்.

    1858 ல், பிரிட்டிஷ் மகுடம் (British Crown) என்ற உச்ச பட்ச பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ், இந்தியா வரவும், விக்டோரியா மகாராணியின் ஆட்சி தொடங்கவும், சென்னையின் புனித ஜார்ஜ் கோட்டை வெகு மும்முரமாகிறது. கூடுதல் இராணுவப் பொறுப்புக்களை இக்கோட்டையில் வைத்து நடத்தும்படியாகிறது. சென்னையில், சாலைகள், பாலங்கள், குடியிருப்புகள் உள்ளிட்டப்  பல்வேறு நிலைகளில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றன. 1852-53ன், இரண்டாவது பர்மியப்போரின் அனுபவத்தின் அடிப்படையில், சென்னைத் துறைமுகம் விரிவாக்கத் திட்டம் தீட்டப்பட்டு, பணிகள் துவங்குகின்றன. பிரிட்டிஷ் மகுடத்தின் நேரடிப் பார்வையில் வந்த பிறகு, ப்ரிட்டிஷரரின் மிகமுக்கியமான தலைமைப் பீடங்களுள் ஒன்றானது சென்னை என்பதால், மிக அதிகமான அளவு இராணுவப் படைகள் சென்னையில் நிறுத்தப்படுகின்றன. அத்தனை இராணுவ வீரர்களுக்கும், இராணுவ அதிகாரிகளுக்குமான குடியிருப்பு, அவர்களது உல்லாச நடவடிக்கைகளுக்கான தலங்கள் என புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றியும், துறைமுகத்தைச் சுற்றியும் உள்ள இடங்களும், முதல் கடற்கரைச் சாலை  (First Line Beach) மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களும் வெகு அளவில் பிரிட்டிஷாரின் நடமாட்டப் பகுதிகளாகின்றன.

    வள்ளலார் அப்போது சென்னையில் வாழ்ந்துவந்த ஏழு கிணறு, வீராசாமி பிள்ளைத் தெரு இருந்தது (இருப்பது) இந்தப் பகுதியில்தான். கந்த கோட்டம் இருந்ததும் (இருப்பதும்) இப்பகுதியில் தான்.

    சிப்பாய்க் கலகத்தின் போதுகூட அமைதியாகவே காணப்பட்டது சென்னை என்று வரலாற்று ஏடுகளிலே அறிகிறோம். “தருமமிகு சென்னை” என்று வள்ளலாரே வாயரப்புகழ்ந்த சென்னை தானே!. ஆனால், பிரிட்டிஷ் மகுடத்தின் நேரடிப் பார்வையில் வந்த வகையில்,  இப்போது, சென்னை, அளப்பிலா அந்நிய ஆரவாரத்தோடும், ஒருவித கெடுடுபிடியோடும் மாறிவிட்டதை  அறிகிறோம்.

    எனவே தான், தனது திட்டமிட்டப் புரட்சிக்கு, சரியான இடத்தை தேர்ந்தெடுத்து நடத்தவேண்டிய தேவை இருப்பதை உணர்ந்தவராக. அன்றைய நிலையில், பிரிட்டிஷாரின் ஓயாதத் தொந்தரவுகள் நிரம்பி வழிந்த சென்னையைக் காட்டிலும், வேறு இடத்தில் தனது  புரட்சியை விளைவிக்க. வள்ளலார் புறப்பட்டிருக்கவேண்டும்  என்றே நம்மால் காணமுடிகிறது.

                                                                                  (மேலும் பேசுவோம்)

    குறிப்புகள்

    “பிள்ளைப் பெரு விண்ணப்பம்” (ஆறாம் திருமுறை).

    http://www.thiruarutpa.org/thirumurai/v/T248/tm/pillaip_peru_vinnappam

    1. உரத்தொரு வருக்கங் கொருவர் பேசியபோ துள்ளகம் நடுங்கினேன் பலகால்
      கரத்தினால் உரத்துக் கதவுதட் டியபோ தையவோ கலங்கினேன் கருத்தில்
      புரத்திலே அம்மா அப்பனே ஐயோ எனப்பிறர் புகன்றசொல் புகுந்தே
      தரத்தில்என் உளத்தைக் கலக்கிய கலக்கம் தந்தைநீ அறிந்தது தானே.
    2. மண்ணினீள் நடையில் வந்தவெந் துயரை மதித்துளம் வருந்திய பிறர்தம்
      கண்ணினீர் விடக்கண் டையவோ நானும் கண்ணினீர் விட்டுளங் கவன்றேன்
      நண்ணிநின் றொருவர் அசப்பிலேஎன்னை அழைத்தபோ தடியனேன் எண்ணா
      தெண்ணியா துற்ற தோஎனக் கலங்கி ஏன்எனல் மறந்தனன் எந்தாய்.
    3. தேட்டிலே மிகுந்த சென்னையில் இருந்தால் சிலுகுறும்219 என்றுளம் பயந்தே
      நாட்டிலே சிறிய ஊர்ப்புறங் களிலே நண்ணினேன் ஊர்ப்புறம் அடுத்த
      காட்டிலே பருக்கைக் கல்லிலே புன்செய்க் களத்திலே திரிந்துற்ற இளைப்பை
      ஏட்டிலே எழுத முடியுமோ இவைகள் எந்தைநீ அறிந்தது தானே.
    4. என்புடை வந்தார் தம்முகம் நோக்கி என்கொலோ என்கொலோ இவர்தாம்
      துன்புடை யவரோ இன்புடை யவரோ சொல்லுவ தென்னையோ என்றே
      வன்புடை மனது கலங்கிஅங் கவரை வாஎனல் மறந்தனன் எந்தாய்
      அன்புடையவரைக் கண்டபோ தெல்லாம் என்கொலோ என்றயர்ந் தேனே.
    5. காணுறு பசுக்கள் கன்றுக ளாதி கதறிய போதெலாம் பயந்தேன்
      ஏணுறு மாடு முதல்பல விருகம்221 இளைத்தவை கண்டுளம் இளைத்தேன்
      கோணுறு கோழி முதல்பல பறவை கூவுதல் கேட்டுளங் குலைந்தேன்
      வீணுறு கொடியர் கையிலே வாளை விதிர்த்தல்கண் டென்என வெருண்டேன்.
    6. பிதிர்ந்தமண் உடம்பை மறைத்திட வலியார் பின்முன்நோக் காதுமேல் நோக்கி
      அதிர்ந்திட நடந்த போதெலாம் பயந்தேன் அவர்புகன் றிட்டதீ மொழிகள்
      பொதிந்திரு செவியில் புகுந்தொறும் பயந்தேன் புண்ணியா நின்துதி எனும்ஓர்
      முதிர்ந்ததீங் கனியைக் கண்டிலேன் வேர்த்து முறிந்தகாய் கண்டுளம் தளர்ந்தேன்.
    7. வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
      வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
      நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்
      ஈடின்மானிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

    [1] Gizachew Tiruneh (2014). Social Revolutions: Their Causes, Patterns, and Phases   https://doi.org/10.1177/2158244014548845

    [2] Ernest Guevara https://en.wikipedia.org/wiki/Che_Guevara

    [3] P.N. Chopra, B.N. Puri, M.N, Das, and A.C. Pradan (2003). A Comprehensive History of India; Sterling Publishers.

    [4] Poonam Upadhyaya Social, Political, Economic, and Educational Ideas of Raja Rammohun Roy

    [5]  “Socialism and Man in Cuba” Archived 2008-03-23 at the Wayback Machine A letter to Carlos Quijano, editor of Marcha, a weekly newspaper published in Montevideo, Uruguay; published as “From Algiers, for Marcha: The Cuban Revolution Today” by Che Guevara on March 12, 1965

    [6] Guevara, Che. “Socialism and man in Cuba”. www.marxists.org. Archived from the original on 10 August 2017. Retrieved 6 May2018.

    Share
  • எழுவகைப் பெண்கள்: 10

    அவ்வைமகள்

    துவாரபாலகர்களும் துளைநிலை ஒழுக்கமும்

    அமுத நிலையம் ஆதித்தன் இயக்கமும் என்ற உங்கள் அவ்வையைப் இவ்வுலகின் தலைசிறந்த பெண்மைப் பாதுகாவலர் என்றே சொல்லத் தோன்றுகிறது என்றார் அந்த இராணுவ அதிகாரி.

    “நான்கு மனைவிகள் – எத்தனையையோ பெண் தோழிகள் என்று என் காலம் இதுகால் ஓடியிருக்கிறது. பெண்ணின் உடம்பை – புணர்ந்திருக்கிறேனே தவிர உணர்ந்தவன் இல்லை. நான் சொல்கிறேன் எனத் தப்பாக நினைக்காதீர்கள – ஆண்மை மிதர்ப்புக்குக் கண்ணும் தெரியாது – காதும் கேட்காது – மூளையும் விளங்காது – துவாரம் மட்டுமே இலக்கெனக்கொண்டு எப்படியாகிலும் அவளை வீழ்த்தி ஜெயிக்கும் கொடூர குணம் கொண்டது ஆண் எழுச்சி, அந்த எழுச்சியால் பெண்மையின் மேன்மைகளை உணர்வது கடினம் – நான் கடந்து வந்த பாதையைப் பார்க்கிறேன். பெண்கள் பற்றிய புரிந்து கொள்ளல் கொஞ்சம் இருந்தது என்றாலும் – அவர்களைப் பற்றிய சரியான ஞானம் இல்லாமலேயே என் வாழ்நாளைக் கழித்திருக்கிறேனே என்று இப்போது உணர்கிறேன் – ஒருவேளை உங்கள் கலாச்சாரம் போன்று எங்கள் கலாச்சாரத்திலும் பெண்களின் நலன் என்பது முத்தாய்ப்பான விஷயமாக இருந்திருக்குமேயானால் நான் உங்கள் ஆடவர்களைப் போல ஒரே ஒரு மனைவியோடு நல்விதமாய் வாழ்ந்து – இப்படி அழிந்தொழியாமல் – அலைந்துகெடாமல் ஒழுங்காய் இருந்திருப்பேன் என்றே எண்ணுகிறேன்.” என்கிறார்.

    அந்த வெளிப்படையான நேர்மையைப் பாராட்டி விட்டுச் சொன்னேன், உங்கள் வாக்கின் சாட்சியாக எங்கள் ஆடவர்களை மீண்டும் நிலைக்கழைக்கும் பணி எங்களுக்கு இருக்கிறது என்பதை நான் எனக்கு மீண்டும் நினைவூட்டிக்கொண்டேன். சொல்லப்போனால், ஆண்களால் தான் ஒரு நாடு தாழ்வுறுகிறது என்பதை அவ்வையே சுட்டிக் காட்டியிருக்கிறார். நாடு எதுவாகினும், அது எத்தகைய நிலத் தன்மையைக் கொண்டதாகினும், அந்நிலத்தில் உள்ள ஆடவரின் தராதரத்தைக் கொண்டே அந்நிலத்த்தின் தராதரமும் அமையும் என்கிறார் அவ்வை என்றவள் தொடர்ந்து.

    அவ்வையின்

    “நாடா கொன்றோ காடா கொன்றோ
    அவலா கொன்றோ மிசையா கொன்றோ
    எவ்வழி நல்லவ ராடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே.”

    என்ற பாடலை மொழிபெயர்த்துச் சொன்னேன். அந்நொடி, “அப்படியா – அப்படியா – அப்படியா?” என்று தொடர்ந்து கூவி வியந்தார் – மேலும் தொடர்ந்தார்.

    “இது எத்தனைப் பெரிய சமூகப் பொருளாதாரத் தத்துவம் தெரியுமா? ஆடவனின் நடத்தை – அவனது பழக்க வழக்கங்கள் – அவனது பெண்ணறம் பேணும் பாங்கு ஆகியன உண்மையிலேயே ஒரு சமூகத்தை அழிக்கும் அல்லது வாழவைக்கும். ஆடவனின் இளமை ஆற்றல் வெகுபெரும்பாலும் விரயமாகிறது – ஆனால் பெண்ணோ துடித்தெழுகிறாள் – காவல் தெய்வமாய் அவதாரம் எடுக்கிறாள். தன் வீட்டை – தனது சமூகத்தைக் காக்க – பெண் எத்தனைப் பாடுபடுகிறாள் என்பதை நான் அறிவேன் – சொல்லப்போனால் உங்கள் அவ்வையின் வாசகம் எனக்கு மிகவும் பொருந்தும் – என்னை வழிநடத்திச் செல்ல என்வாழ்வில் பங்கேற்ற ஒவ்வொரு பெண்ணும் முயன்றாள் – என் தாயிலிருந்து – நான் பழகி விலகிய அனைத்துப் பெண்கள் வரை! ஆனால் நான்? உதாசீனம் செய்தேன் – புறக்கணித்தேன் – அவர்கள் யாவரையும் உடுப்பாய்ப் பயன்படுத்தி, என் வாழ்விலிருந்து கழற்றி எறிந்தேன். உண்மையில் சொல்கிறேன் மோசமான ஆடவர்கள் எந்த சமூகத்துக்கும் அடுக்காது. உங்கள் அவ்வை, ஆடவர்கள் பற்றி நூற்றுக்கு நூறு சரியாய்ச் சொல்லியிருக்கிறாள்.” என்றார். அவரது களங்கமற்ற உண்மையின் வெளிப்பாட்டை மீண்டும் பாராட்டித் தொடர்ந்தேன்.

    “துவாரம் மட்டுமே இலக்கெனக்கொண்டு எப்படியாகிலும் அவளை வீழ்த்தி ஜெயிக்கும் கொடூர குணம் கொண்டது ஆண் எழுச்சி, அந்த எழுச்சியால் பெண்மையின் மேன்மைகளை உணர்வது கடினம்” என்றீர்களே அந்த வாசகம் என் சிந்தனையைக் கிளறியது. துவார பாலகர்களின் – Hole Guards நினைவு வந்தது என்றேன்.

    “அப்படியா அவர்கள் யார்?” என்றார்.

    “எங்கள் கோயிலில் மூலவர் எனப்படும் பிரதானக் கடவுள் கருவறையில் இருப்பார் என்று முன்னம் சொன்னேன் அல்லவா? எங்கள் கோயில்களில் கருவறையின் பிரதான துவாரத்தில் – அதாவது நுழைவாயிலில் – இருபுறமும் துவார பாலகர்கள் எனும் காவல் தெய்வங்கள் இருவர் இருப்பர் -இவர்கள் கர்ப்பக்கிரகத்தின் தலைமை துவாரத்தில் பக்கத்திற்கு ஒருவராக நிற்பர். பாலகன் என்றால் ஆண்பிள்ளை என்பது பொருள்.

    நெடிய தோற்றமும், ஊடுருவி வினவும் வியப்புக் கண்ளும் – கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி நிற்பர் துவார பாலகர்கள். இதில் குறிப்பிடத்தக்க விசேஷம் என்றால் – துவார பாலகரின் இருகால்களில் ஒரு கால் மட்டுமே கீழே பதிந்திருக்கும் – இரண்டாவதுகாலைத்தூக்கி – தூக்கிய அக்காலை மாறுகோணமாய்ச் செலுத்தி – அக்காலைக் கொண்டு – எழுச்சியுடன் கர்ச்சிக்கும் ஒரு ஆண் சிங்கத்தை அடங்குவார் துவாரபாலகர். அந்த காட்சியைக் கொஞ்சம் உற்று கவனிக்க வேண்டும். துவாரபாலகரின் கோணத்தில் தூக்கிய காலானது, ஒரு ஆண்சிங்கத்தின் தலைமீது நன்கு அழுத்திக்கொண்டிருக்கும்- அந்த சிங்கமோ “ஏய் நான் ஒரு சிங்கராஜா! என்னை நீ இப்படிச் செய்கிறாயே” என்று மிதர்ப்போடு அச்சிங்கம் அலறுவதுபோல் காட்சி இருக்கும்.

    அதற்கு துவாரபாலகர், “ஏய்! நீ சிங்க ராஜாவானால் எனக்கென்ன? உன் ஆம்பளைத் திமிரோடு இங்கே நுழைந்தாய் என்றால் அசிங்கப்படுவாய் ஜாக்கிரதை!” என்றபடியாக பதிலிருப்பார். ஒருவித அசாத்திய புன்னகையோடு – அச்சிங்கத்தை – அதாவது ஆண் செய்யக்கூடிய அசிங்கத்தைத் தரையோடு தரையாக அமுக்கி – அதனை எழும்பாமல் – மிதித்தபடி நிற்கிறார் எங்கள் துவாரபாலகர்.

    உண்மையில், எங்கள் துவாரபாலகர்களின் ஒய்யாரத்தையும் கம்பீரத்தையும் உடல்முத்திரை இலக்கணத்தையும் சொல்ல வார்த்தைகள் போதா. சொல்லப்போனால், இந்த துவார பாலகர்கள் ஏன் இங்கு கருவறை வாயிலில் நிற்கிறார்கள் – இவர்கள் கூறுவது என்ன என்று சிறுவயது முதல் நான் யோசித்ததுண்டு. அப்போதெல்லாம் புரியாதது – நவீன மருத்துவ அறிவியலில் கல்வி பெற்று – தொழில் மேற்கொண்டதால் – பின்னாளில் புரிந்தது. எங்கள் பாட்டியின் அம்மா ஓயாமல் சொல்லுவாள் “பலகாரமும் பலதாரமும் பாடைக்குப் பக்கம்” என்று அதுவும் கூட இந்த மருத்துவ அறிவியல் ஞானத்திற்குப் பின்பு மட்டுமே புரிந்தது. பலகாரம் -snack சாப்பிடுவதுபோல் பலபெண்களுடன் உறவு கொள்ளுவதா என்பதே அவள் கூறிய பழமொழியின் பொருள்.

    மருத்துவ அறிவியலில், பலதாரம் கொள்பவனுக்கு இதயக் கோளாறுகள் டக்கென வருகின்றன என்பது கண்டு ஆச்சரியப்பட்டேன் – பல பெண்களோடு உறவு கொள்ளும் ஆணுக்கு உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறைகிறது அவனுடலில் – T helper செல்கள் பாதிக்கப்படுகின்றனவே என்று வியந்தேன். இந்த வாழ்வியல் அனுபவங்களின் விளைவால் எங்கள் கலாச்சாரத்தின் உன்னதத் தன்மையும் – எங்கள் மூதாதையர்கள் நாட்டியிருக்கிற மூலவேர்களையும் கொஞ்சம் கூடுதல் தெளிவுடன் பார்க்கும் சிந்தையும் என்னுள் வளர்ந்தது.

    ஆக, ஆண்களுக்கு இருக்கின்ற துவாரம் தேடும் எழுச்சியின் கடும் விளைவுகளின் விளக்கம் தான் துவாரபாலகர்கள் என்பேன். இளமையின் எழுச்சியால் உந்தப்பட்டு – பெண்ணின் கருவறையின் முகப்பான பெரினிய துவாரத்துக்குள் நுழையும் ஆண்மை எழுச்சிக்கு துவாரபாலகர்கள் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார்கள் என்பேன்: “மறையுறுப்புக்கள் ஆயுதம் போன்றவை – நெறிபிறழும்போது பதம் பார்த்துவிடுபவை – மனிதா நீ இதை புரிந்து கொள்! இந்தத் துவாரத்துக்குள் புனித அக்கினிக் கனல் இருக்கிறது – இந்த துவாரத்துக்குள் நுழையும் ஆண்மை எழுச்சி தூய்மையானதென்றால் – நியாமானதென்றால் – இங்குள்ள அக்கினி அந்த எழுச்சியைப் புடம்போட்டுத் தங்கமாக்கும் – நுழைந்த நல் எழுச்சியின் பிரதி பலனாய் – எழுச்சிமிக்கப் பரிசாய் நல்ல உறவு தரும் – நல்ல பிணைப்பு  தரும் – நல்ல ஆரோக்யம் தரும் – தங்கமான வாரிசு தரும். அன்றேல், இந்த துவாரத்தில் உள்ள அக்கினி உன் தீய எழுச்சியைக் கொய்து உன்னையே பொசுக்கிவிடும் ஜாக்கிரதை!” என்று துவாரபாலகர்கள் சொல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது!” என்றேன்.

    பார்க்கப்போனால், பெரினியத் துவாரத்துக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு ஆணும் துளைநிலை ஒழுக்கத்தோடு மட்டுமே நுழையமுடியும் என்னும் எங்கள் ஆன்மீக விளக்கங்கள் இன்றைய மருத்துவச் சான்றுகளின் கருத்தையே என்றோ அனாயாசமாய்ச் சொல்லிப்போயின என்பேன். சொல்லப்போனால் கற்பு என்கிற ஒரு கோட்பாட்டை எங்கள் கலாச்சாரம் நேரிடையாகவும் – மறைமுகமாகவும் வாழ்க்கைக் கோட்பாடாகவே முன்வைக்கிறது எனலாம்” என்றேன்.

    “What you said really makes sense” என்றார். “Chastity” அதாவது கற்பு என்பது ஆணுக்கு மிகவும் முக்கியம் – அதனை நான் இந்நிலையில் வெகு ஆணித்தரமாகச் சொல்லமுடியும் – என் தனிமனித வாழ்வின் பலாபலன்கள் அடிப்படையில் என்றார். கற்பை உலகின் பல கலாச்சாரங்கள் கோடிட்டேனும் காட்டுகின்றன – ஆனால்  உங்கள் கலாச்சாரம் பல்லாயிரம் படிகள் மேலே போய் அதனை வாழ்வின் இன்றியமையாக் கூறாகக் காட்டுவது உண்மையில் மிகப்பெரிய சாதனை!” என்றவர் நான் இன்னொன்றையும் சொல்லவேண்டும் என்று தொடர்ந்தார்.

    “ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் ஆயுசு பரியந்தமும் வாழமுடியும் என்று உங்களைப்போலவே இங்கு சில வெள்ளையர்களும் காட்டிவருகிறார்கள். ஏகபத்தினி விரதத்தோடு வாழும் பாக்கியம் எனக்கு இல்லை என்றாலும் – அப்படி இருந்திருக்கலாமே என என் எண்ணம் இப்போது ஏங்குகிறது. ஏனெனில் – எனக்குத் தெரிந்து ஏகபத்தினி விரதம் கடைபிடிக்கும் நபர்களின் குடும்பங்கள் உண்மையிலேயே, ஸ்திரமாய் – சவுக்கியமாய் – வளமுடன் ஆரோக்கியத்துடன் வாழ்கின்றன. கிளைபட்டு – கிளைபட்டு branching செய்பவன் உண்மையிலேயே சீக்கிரம் ரோகியாகிறான் – இதில் நானும் அடக்கம் என்றார். ஒரு பெண்ணைத் தாண்டி இன்னொரு பெண்ணைப் புணரும்போது உண்மையிலேயே – அது கொடூர எண்ணம் தான் என நான் எங்கும் கூறுவேன்” என்றார்.

    சரி, மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் அவ்வையின் கருத்து என்ன என்று சொல்வதாகச் சொன்னீர்களே என்று தொடர்ந்து வினவினார் – என் உரையாடல் தொடர்ந்தது.

    Share
  • 6. பெண்ணியலும் பெண்ணறமும்

    அவ்வைமகள்

    உடலுக்கும் உள்ளத்துக்கும் ஒவ்வாத பணியில் பெண்கள் படும் அவதி என்கிற வகையில், பென்னி ஹாரிங்டனின் கதை வெளி உலகிற்குத் தெரிந்திருக்கிற ஒன்று. தெரியாத சரிதங்கள் எத்தனையோ! இன்றைய கால கட்டத்தில், பொதுவாக, அமெரிக்காவில், காவல் துறையில் அதிமேல் பதவிகளுக்குப் பெண்கள் முயற்சி செய்யும் எண்ணமும் கூட இல்லாதவர்களாக இருப்பதாக, நான் சந்தித்த பல பெண் காவல் அதிகாரிகள் கூறினார்கள்.

    இந்நிலையில், ஒரு ஆண் காவல் தலைமை அதிகாரியிடம் பேசினேன். அவர் சொன்ன விவரங்களைப் பற்றி பேசும் முன் அமெரிக்க இராணுவத்தில் பெண்கள் நிலைமை பற்றி அறிவது நல்லது. எனவே இவ்விஷயத்திற்குப் பிறகு வருவோம்.

    அமெரிக்க இராணுவத்தில், பெண்கள் 1775 லிருந்து பணி புரிந்து வருகிறார்கள். 240 ஆண்டுகள் பெண்மை கண்ட பராம்பரியம் இது. இதில் நாம் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால் இவ்வாறு இராணுவப் பணிக்கு வந்த பெண்களில் மிகப் பெரும்பாலோர் செவிலியர்களாக, துணி துவைப்பவர்களாக, துணியை மடித்து இஸ்திரி போடுபவர்களாக, இருப்பிடங்களைத் தூய்மைப் படுத்தி ஒழுங்கு செய்பவர்களாக, சமையல்காரர்களாக, சில பேர் எழுத்தர்களாக என்று மட்டுமே பணியாற்றி வந்தனர். அதற்கடுத்த கட்டத்தில், தொழிநுட்ப உதவிக்கென கணினி, ஆய்வகம், அளவீடுகள் போன்ற பணிகளில் பெண்கள் வந்தமர்ந்தார்கள். இவ்வாறான உபரிப் பணிகள் மட்டுமே இராணுவப் பணிகளில் 67 விழுக்காடாகும். மற்ற 33 விழுக்காடு பணிகள் “Combat” எனப்படும் சண்டையில் இறங்கும் பணியைச் சார்ந்தவை. அப்பணிகளில் பெண்களை அமெரிக்கா அனுமதிக்கவில்லை – 1993ல் பெண்களை “Combat” பணியில் பணியமர்த்தக்கூடாது என்று தடைச் சட்டமே கூட வந்தது. ஆனால், ஆண்-பெண் சமத்துவம் பரவலாக்கப் பேசப்பட்ட நிலையில், 1970 வாக்கில் இராணுவ நிலைமையில் கொஞ்சம் மாற்றம் ஏற்பட்டு சண்டையின் சற்றே உட்புறமான பணிகளில் பெண்கள் அனுமதிக்கப் படலாயினர். இதையும் சேர்த்தால் மொத்தம் 78 விழுக்காடு இராணுவப்பணிகளில் பெண்கள் பங்கேற்கும் வாய்ப்பு உருவானது. இருப்பினும், முந்தைய 67 விழுக்காட்டுப்பணிகளுக்கு அளித்த முன் உரிமையைப் பெண்கள், பிந்தைய 11 விழுக்காட்டுப் பணிகளுக்கு அளிக்கவில்லை. இந்நிலையில், 2013ல் புரட்சிகரமாக, “Combat” பணிகளிலும் பெண்களை அனுமதிக்கலாம் என் ஆணை பிறப்பிக்கப்பட்டது. அவ்வாணையின்படி பெண் இராணுவ அதிகாரிகள் போர் முனையில் நேரடியாக நின்று போரிடும் ஆற்றல் பெற சிறப்புப் பயிற்சி (இரண்டரை ஆண்டு காலம்) வழங்க ஏற்பாடானதோடு 2016 ஜனவரி முதல் பெண்கள் “Combat” பணியில் பணியமர்த்தப் படுவர் என்றும் ஆனது. பரபரப்பான மீடியா கவனமும், பெண்ணிய வெற்றியாளர்களின் உற்சாகமும் இணைந்து கொப்புளிக்க, அமெரிக்க இராணுவத்தில் ஒரு புதிய சகாப்தம் பிறந்தது. உலகின் மகோன்னத வரலாறு எனும்படியாக அது பதிவு செய்யப்பட்டது. இந்த முடிவு வெளியான உடனே, “பெண்களை “combat” பணியில் அமர்த்தக் கூடாது!” என மில்லியன் கணக்கில் கூக்குரல்கள் எழுந்தன – அந்தக் கூக்குரல்களில் நியாய தர்மமும் கரிசனமும் இருப்பதை அமெரிக்க இராணுவக் கழகம் கவனிக்கத் தவறவில்லை.

    இருப்பினும், திட்டமிட்டபடி, பெண் போர் வீரர்களுக்கான பயற்சிப் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக, ஆண் போர் வீரர்களுக்கு என்னென்ன பயிற்சிகள் எத்தனைத் தீவிரமாக – எத்தனைக் கடுமையாக வழங்கப் படுமோ அவ்வாறே பாரபட்சம் இல்லாமல்போர்முனைப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

    “Army Rangers” பயிற்சிப் பள்ளியில் போர்முனைப் பயிற்சிக்காக 19 பெண்கள் சேருகிறார்கள். பயிற்சிக்குச் சேர்ந்த இந்த 19 பெண்களில் 11 பேர் நான்காவது நாளே பயிற்சியில் இருந்து விலகினர். இருந்த மீதம் எட்டு பேரும் முதல் டெஸ்டில் தேர்ச்சியுறவில்லை. அதில் தேவாலம் என்றிருந்த மூன்று பேரை வைத்துக்கொண்டு பாக்கி ஐந்து பேரை பயிற்சியை விட்டு விலக்க வேண்டியிருந்தது. இரண்டரை ஆண்டு காலம் சென்று. பயிற்சி முடிந்து பார்த்தால், அந்த மூன்று பேரில் இருவர் மட்டுமே பயிற்சியை வெற்றிகரமாக முடித்து “பாஸ்” ஆகிறார்கள். மூன்றாவது ஆள் இரண்டாம் தவணையாக “பாஸ்” ஆகிறார்.

    “Marine Corps” நிறுவனத்தின் காலாட்படைப் போர்முனைப்பயிற்சிப் பள்ளியில் ஆண்களுக்கே என்ற நிலைமையை மாற்றி 2013 ல் பெண்களையும் சேர்த்துக்கொண்டார்கள் – இருவர்க்கும் ஒரே பயிற்சி வழங்கப்பட்டது – ஆனால் வந்த பெண்டிர் யாவரும் பயிற்சியைத் தாக்குப்பிடிக்க முடியாமல் போயினர் – ஒரே ஒரு பெண் மட்டுமே பயிற்சியில் “pass” ஆகிறார். இங்கு, ஆண்-பெண் இருவரையும் ஒரே இடத்தில் ஒரே சமயத்தில் நிறுத்தி ஒரே பயிற்சி வழங்கப் பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. கப்பற்படைப் பயிற்சிப் பள்ளியில் இதே போன்ற கதைதான். போனது போக எஞ்சிய இரண்டு பெண்களும், பயிற்சியின் இறுதிப் பரிட்சையில் தோற்றுப் போகிறார்கள். ஆக மொத்தம், பூஜ்ஜியம் பெண்களே பயிற்சியில் வென்றது என்றானது.

    பெண்களைப் போர்முனைக்கு combat பணிக்கென அனுப்புவது குறித்த அமெரிக்கர்களின் ஏகோபித்த கரிசனக் கூக்குரல் இராணுவக் கழகத்தால் கவனிக்கப்பட்டது என்று கூறினேன் அல்லவா அதன் விளைவாக ஒரு முக்கியமான பணியை அமெரிக்க இராணுவக் கழகம் செய்தது. அது என்னவென்றால், இந்த இரண்டரை ஆண்டு காலம் நிகழ்ந்த போர் முனைப் பயிற்சியில் – ஆண்-பெண் இரு பாலருடைய செயல் திறன் எவ்வாறு அமைந்தது என்று மிக விரிவானதும் ஆழ்ந்த நுணுக்கங்களை உடையதுமான நேரடி ஆய்வு நிகழ்த்தப்பட்டு, அந்த ஆய்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முடிவுகளை கண்டு இந்த உலகமே ஒரு அதிர்ச்சியான நிலை கண்டது எனலாம். அவர்கள் வெளியிட்டுள்ள விவரங்கள் வருமாறு:

    பெண் போர் முனை வீரர்கள் ஆண் போர் முனை வீரர்களை விட மிக மிக அதிகமாக காயப்படுகிறார்கள். தோலும், காரமும், கால்களும் அப்படியே பட்டென்று ஓடிகின்றன.
    போர்முனை ஆயுதங்களைக் கையாளும்போது குறி தவறும் பிழை பெண்களுக்கு மிக மிக அதிகமாய் ஏற்படுகிறது.

    பெண் போர்வீரர்கள் ஆண் போர் வீரர்களைப் போல வேகமாக ஓடுவதில்லை.

    சக போர் வீரர் அடிபட்டு வீழ்ந்தால், அவரைத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்தும் அடிப்படை வேலையைப் பெண்வீரர்களால் செய்யமுடியவில்லை ஏனெனில் இன்னொரு ஆளைத் தூக்கும் திறன் அவர்களுக்கு இல்லை. மிக பலசாலியானவர் என்று பேர் பெற்ற ஒரு பெண் வீரர் ஒரு ஆளைத் தூக்கினார் ஆனால் அதிக நேரம் எடுத்துக் கொண்டார். இது மிகப் பெரிய ஆபத்து கண்மூடிக் கண் திறக்கும் நேரம் எனும்படியாக வீழ்ந்த ஆளைத் தூக்கிச் சென்று அப்புறப்படுத்த வேண்டும் இல்லையேல் மிகப்பபெரிய விளைவுகளை நிகழும். கணநேரத்தில், ஆளைத் தூக்கி அப்புறப்படுத்த இயலவில்லை என்றால் அது போர்முனையில் மிகப்பெரிய தடை – இழிவு! பளுதூக்குவதில் பெண்களின் உடல் எத்தனை பலவீனமாக இருக்கிறது என்றால் – போர்முனைப் பயிற்சியே இல்லாத சாதாரண ஒரு ஆண் கூட, போர் முனைப் பயிற்சி பெற்ற இராணுவப் பெண்வீரரை விட அதிக ஆற்றலுடன் அதிக சீக்கிரமாக இன்னொரு ஆளைத் தூக்க முடிகிறது.

    சக பெண் போராளி அடிபட்டு விழும்போது ஆண் போர்வீருக்கு கவனக் குறைவு ஏற்பட்டு அவரது செயல்திறன் வெகுவாகக் குறைகிறது.

    இன்னும் சிலபல முடிவுகள் இருப்பினும் மேற்கண்ட அம்சங்கள் மிகவும் முக்கியமானவை.

    இந்நிலையில் இந்நாட்டு மக்கள் ஏன் பெண்கள் போர்முனையில் combat பணிக்கு வரக்கூடாது என்று கூறும் கருத்துக்கள் இதோ:

    அதிகமாகவும் சுலபமாகவும் அடிபடும் உடம்பு பெண் உடம்பு என்பதால், பெண் வீரர்களை ஸ்திரமான ஒரு “படை பலம்” என்று நம்பி எந்தப் போர்க் களத்திலும் இறங்கி விட முடியாது.

    போர் முனையில் பொத்து பொத்தென சுலபமாய் விழும் பெண் வீரர்களைக் காப்பாற்றுவதும், மருத்துவ உதவி அளிப்பதுமே முதன்மைப் பணியாகப் போகுமென்பதால், “Mission” ஐ (போர்ப்பணியை) முடிக்க அதிக ஆள் பலம், சிலவு ஆகியனவற்றை சந்திக்க வேண்டி இருக்கும்.

    போர் முனையில் தங்குமிடங்களில் பெண்களுக்கென பிரத்யேக வசதிகளை ஏற்படுத்துவது சில அசவுகரியங்களை ஏற்படுத்தும்.

    முகாம்களில் பெண் போர்வீரர்கள் ஆண்வீரர்களின் சிலபல தனிவகை சுதந்திரத்துக்கு இடைஞ்சலாய் இருப்பார்கள்.

    ஏற்கனவே பாலியல் பிரச்சனைகள், அவைதொடர்பான மிரட்டல்கள், அடக்குமுறை என்று இராணுவப் பெண்கள் அச்சத்தில் வெளியே சொல்லமுடியாமலும் சொல்லாமலும் இருக்க முடியாமலும் இருக்கும் நிலையை போர்முனைப் பயிற்சியும். போர்முனைப் பணியும் மேலும் சிக்கலாக்கும். பெண் போர் வீரர்களுக்கு உகந்த பாதுகாப்பு இல்லை ஏனெனில் அங்கே வேலியே பயிரை மேயும் கதையாகும்.

    நம் படையில் பெண்கள் என்றால் எதிர்ப்படைக்கு மிகவும் லாபம். அவர்களுக்கு வெற்றி எளிதாகவும் கிடைத்து விடும். அது மட்டுமல்ல, பெண் போர் வீரர் கடத்தப்படுவதும், கற்பழிக்கப்படுவதும் வெகு சுலபமாக நிகழும். போர் முனையில் வெளிநாட்டுப் படைகளால் களவாடப்படும் பெண் போர்வீரர்கள் எதிர்ப்படையினரால் கற்பழித்துக் கொல்லப்படலாம் அல்லது அவர்களின் வாழ்க்கைத் துணைவிகளாகவும் மாற்றப்படலாம்.

    இவ்வாறான கருத்துக்களும் கண்டுபிடிப்புகளும் உள்ள நிலையில், இராணுவத்தின் நிலை என்னவாயிருக்கும் என்று வினவினேன். முத்தாய்ப்பான பதில் கிடைத்த்து: இராணுவப் போர்முனை வீரர் எனும் பணி சுலபமான வேலை இல்லை – இது உடல் திறனையும் – துரிதமாக இயங்கும் ஆற்றலையும், ஒரு துளி பிசகும் ஏற்படாதவாறு – எதிரியைக் குறிவைத்து அழிக்கும் திட மனதையும் கொண்டவர் செயுயும் வேலை. இராணுவத்தில் ஆண் – பெண் என்கிற பாகுபாடு கிடையாது. இரண்டு பேரும் ஒரே விதமான திறமை காட்டவேண்டும் என்பது அடிப்படையான விதி. எனவே பெண்களுக்கு, பயிற்சியில் எவ்வித சலுகையும் காட்டமுடியாது. இது நாட்டின் பாதுகாப்பு குறித்த விஷயம்.

    உடல் ரீதியாக பெரும்பாலான பெண்கள் இப்பணிகளுக்கு நுழைவுத்தகுதி கூட பெறுவதில்லை. ஆனால் உடல் பலம் பொருத்தமாய் இருக்கிற பெண்களை இங்கு வரவேற்க நாங்கள் தயாராய் இருக்கிறோம். ஆணும் பெண்ணும் சமம் இல்லை என்கிற உண்மையைப் பேசியாகவேண்டும். எனவேதான், Special Tactics Officer, Combat Control, Special Operations Weather Technician, Combat Rescue Officer, Pararescue and Tactical Air Control Party ஆகிய பணிகளை ஆண்கள் மட்டுமே செய்யும் பணிகளாக இன்றும் வைத்திருக்கிறோம். என்றும் இது இவ்வாறே இருக்கவும் கூடும். பெண்கள் பிற இராணுவப் பணிகளை முயலத் தடையில்லை. எடுத்துக் காட்டாக விமானப்படையில் போர் விமானப் பைலட்டுகளாகப் பெண்கள் இருக்கிறார்கள். அமரிக்காவில் இது வெகு நாட்களாக சாத்தியமாகி இருக்கிறது. இது போன்று, இராணுவத்தில் அவர்களுடைய உடலுக்கு ஏற்ற வேலையை அவர்கள் ஏற்றுக்கொள்வதில் நாங்கள் குறுக்கே நிற்கப் போவதில்லை. இது பெண்கள், அவரவர் உடல்நிலையைக் கருத்தில் வைத்து, பணியின் கஷ்டநஷ்டங்களை ஆலோசித்து, அவர்களது சொந்த வாழ்க்கையின் அகல நீளங்களையும் கணக்கில் வைத்து. அவர்களே சுயமாக எடுக்கவேண்டிய முடிவு. ஆண்-பெண் என்ற சமத்துவம் உடம்புக்கு இல்லை. என்பதை அவர்கள் புரிந்து கொண்டால் – நாம் புரிந்து கொண்டால் எல்லா விஷயங்களுமே எளிமையாகிவிடும். பெண்ணியம் என்பதை விட பெண்ணியலும் பெண்ணறமும் தான் மிகவும் முக்கியம். “

    மேலும் பேசுவோம்

    Share
  • எழுவகைப் பெண்கள்: 4. முரடாய்ப் போன இந்தப் பெண்ணின் உடம்பு

    அவ்வை மகள்

    ரேணுகா ராஜசேகரன்

    விளையாட்டுத் துறையைப்போலவே காவல் துறை மற்றும் இராணுவத்திலும் பெண்களின் பணிப்பங்களிப்பு பற்றிய கரிசனங்கள் உலகெங்கிலும் எழுந்தவாறு உள்ளன. ஆண்-பெண் சமான அங்கீகாரத்திற்குப் பெயர் போனது அமெரிக்காவின் காவல் துறை. பெண்கள், காவல் துறையில் நுழைந்த 110 ஆவது ஆண்டைக் கொண்டாடி முடித்திருக்கிறார்கள். இத்தருணத்தில் அமெரிக்கக் காவல் துறையில் பெண் காவலர்கள் (அதிகாரிகளையும் உள்ளடக்கி) 15 விழுக்காடு மட்டுமே! இத்தருணத்தில், இங்கு, அமெரிக்கப் பெண்காவலர்களின் வரலாற்றைக் கொஞ்சம் மீள்பார்வை செய்வது பொருத்தமாய் இருக்கும்.

    1908ல் முதல் காவல்துறைப் பெண் அதிகாரி பதவிப்பிரமாணம் எடுக்கிறார். 1912ல் முதல் பெண் ஷெரிப் பதவியேற்கிறார். 1968ல் இன்டியானாபோலிஸ் நகரில் முழுவதும் பெண்களாலான ரோந்துப்படை ஏற்படுத்தப்படுகின்றது . அதன் தலைமையும் அனைத்து அதிகாரிகளும் பெண்களே எனவும் ஆகிறது. 1970 களில் பெண்களைக் காவல்துறையில் கவர்ந்திழுக்கும்படியாய் எல்லாவகையான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பொது ஊடகங்களையும் கூடப் பயன்படுத்துகிறார்கள். தொலைக்காட்சியில் – சுவாரசியமான நாடகங்கள் கூட வருகின்றன. (விமன் போலிஸ் மற்றும் கெட் கிறிஸ்டி லவ் ஆகிய இரு நிகழ்ச்சிகளும் இவ்வகையில் பிரசித்தியானவை.) 1972ல் சிவில் உரிமைச் சட்டம் வெகு காட்டமாகத் தழுவப்படுகிறது. அதே ஆண்டில், ஜோயன் மிஸ்கோவும் சோசன் மலோனும் எப்.பி.ஐ அதிகாரிகளாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.

    இத்தனை ஊக்கத்திற்கும் ஒரு முத்தாய்ப்பாக 1980ல் கண்ணாடிக்கூரை (glass ceiling) என்று சொல்வதான – பெண்ணுக்கு உள்ள பதவி உயர்வுத்தடையை உடைத்தெறிந்து காவல் துறையில் பெண்கள் அதிமேல் பதவிகளில் அமர்ந்தார்கள். 1985ல் போர்ட் லேண்ட் நகரில் போலிஸ் பியூரோவின் தலைமையில் அமர்ந்த பென்னி ஹாரிங்டன் மற்றும் 1994ல் காவல் தலைவராக அமர்ந்த முதல் கறுப்பினப் பெண்ணான அட்லாண்டாவின் பெவர்லி ஹார்வர்ட் ஆகியோர் காவல் பெண் முன்னோடிகளாக நின்று, பெண் குலத்தாருக்கு மிகப்பெரிய உந்து சக்தியாய் விளங்கினார்கள். பெண்கள் காவல்துறையில் அதிக எண்ணிக்கையில் பணிக்கு வருவதற்காக, பற்பல உத்வேக ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்தனர். பெண் காவலர் நலனுக்காகப் புதிய பணிசார் சட்டங்கள் மற்றும் புதிய சில அமைப்புக்களும் கூட உருவாகின. சட்டங்களை அமுல்படுத்துவதிலும் – பின்பற்றுவதிலும் – பின்பற்றாதோரைத்தண்டிப்பதிலும் – ஐக்கிய அமெரிக்கநாடு வெகு கறாரான நாடு என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே எல்லாம் ஏட்டளவில் இல்லாமல் நடைமுறையாகவே நடந்தன என்பதை நாம் கொஞ்சமாவது நம்பவேண்டும்.

    இவ்வமைப்புகளுக்கு, காவல் துறையில் பெண் காவலர்களுக்குள்ள பணிசார் பிரச்சனைகள் என்ன என்பதைக் கண்டறிவதும் – அவ்வாறானப் பிரச்சனைகளில் தவிக்கும் பெண் காவலர்களுக்கு, சார்பும் உதவியும் வழங்குவதும் குறிக்கோளானது. உயர்நிலை அதிகாரிகளாகப் பெண்கள் வரத் தடையாக நிற்கும் முட்டுக்கட்டைகள் எவை எனக் கண்டறியவும் இவ்வமைப்புகள் முனைந்தன .

    பட்டியலிட்டுப் பார்த்ததில் பிரமித்துப் போகிறோம்! காவல் துறையில் பெண்களை நுழைக்கவும் தக்கவைக்கவும் அமெரிக்கா செய்திருக்கிற முயற்சிகள் ஒன்றா இரண்டா? என்று!!

    ஆனால், ஐயகோ! இந்த பகீரத முயற்சிகள் ஒன்றும் பட்டென்று எந்தப் பலனையும் என்றும் அளிக்கவில்லையே! மாறாக அங்குலம் அங்குலம் என்னும் அளவாய் நத்தை வேகத்தில் தான் இங்கே பெண்காவலர்களின் எண்ணிக்கை கூடலானது. இன்று 15 விழுக்காடு பெண் காவலர்கள்’ எனும் அளவை எட்ட 110 ஆண்டுகளாக, இந்நாடு படாத பாடு பட்டிருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

    இங்கு இனிமேலும் காவல் துறையில் பெண்களின் அளவை உயர்த்த முடியுமா என்றால் “இயலாது” என்றே பதில் வருகின்றது பெண் காவல் தலைமைகளிடமிருந்து. “இருக்கும் இந்த எண்ணிக்கையும் தக்கவைக்க இயலுமா என்பதே கூட சந்தேகம் தான்” எனும் கூடுதல் பதிலும் வழங்கப்படுகிறது. 1905-லேயே காவல் துறையில் காவல்பணிக்காகப் பெண்ணை நியமித்த ஒரு நாட்டில் – உலகின் தலைமை எனும்படியாக மனிதவளக் குறியீட்டில் முதலிடத்தை வகிக்கும் ஒருநாட்டில் இந்நிலையா எனப் பலர் அதிர்ச்சியடையவும் கூடும். அதுவும் அமெரிக்கப் பெண்கள் அசாத்தியமானவர்கள். ஆண் -பெண் எனும் பாகுபாட்டு உணர்வு கூட இல்லாதவர்கள். தைரியத்திற்கும், ஆஜானுபாகுவானத் தோற்றத்திற்கும், கம்பீரக்குரலுக்கும் பேர் போனவர்கள். இவர்கள் நடந்தால் தரையே நடுங்கும். “என்னால் முடியாதது எதுவும் இல்லை!” என இயல்பான இறுமாப்பு உடையவர்கள். இவர்களா காவல்துறைக்கு வந்து பணிசெய்ய யோசிப்பது அல்லது மறுப்பது எனச் சற்றே நடுக்கம் கொள்பவர்களும் கூட உண்டு.

    அமெரிக்கக் காவல் துறையில் உள்ள உண்மையான நிலைமை இப்படியென்றால் எங்கே பிசகு தட்டியது? – எங்கே திட்டக் கோளாறுகள் நிகழ்ந்தன? என்ன தவறு நிகழ்ந்தது? தொடர் கேள்விகள் எழுகின்றன.

    அதுவும் காவல் சீருடையுடன், துப்பாக்கி இத்யாதிகளுடன் – குண்டுதுளைக்காத கவசத்தையும் மாட்டிக்கொண்டு அமெரிக்கப் பெண் போலிஸ் அதிகாரிகள் விருட்டென அமர்க்களமாய் நடப்பதைப் பார்த்தால் ஒரு கணம் நம் குலையே நடுங்கும் – அடுத்த கணம், . இத்தனை தைரிய சாலியாய் நாம் இருக்கக் கூடாதா என நம்மை நாமே கொஞ்சம் இடித்துக் கொள்வோம்.

    அப்படிப்பட்ட, இந்தப் பலசாலிப் பெண்களுக்கு காவல் வேலையில் என்ன பிரச்சனை என்று கேட்கத் தோன்றியது.

    படக்கென்று பதில் வந்தது ஒரு பெண் காவல் அதிகாரியிடமிருந்து, “இன்றைய போலீசில் பெண்களுக்குள்ள பிரச்சனை இந்தப் பெண்ணின் உடம்பும் மனதும் தான்!” என்று.

    “போலிஸ் அதிகாரியாக நாடகங்களில் – சினிமாக்களில் நடிப்பது வேறு அன்றாடம் அதிகாரியாக வாழ்வது வேறு.” என்றார்.

    “கத்தியையும், எக்குக் குழாயையும், துப்பாக்கியையும், குண்டு ரவைகளையும், மிளகுக் குழம்பு புட்டியையும் – இடுப்பில் மாட்டிகொண்டு – இந்தப் பிசாசுக்கவசத்தையும் – பூட்ஸையும் சுமந்து செல்லும் வேலையை முரடாய்ப் போன இந்தப் பெண்ணின் உடம்பு ஒருவேளை தற்காலிகமாக ஏற்றுக்கொண்டாலும் கூட – அவள் மனது – அதை ஏற்றுக்கொள்ள வில்லையே!”

    “நான் ஒரு தாயல்லவா? இன்னொரு உயிரைக் கொல்ல என்னால் ஆகுமா? என் இடுப்பின் பாரத்தைப் போல் என் மனதிலும் தானே பாரம்? அதுவும் பெண்ணாயிருந்து கொண்டு நான் ஆண் என ஒவ்வொரு நாளும் – ஒவ்வொரு நொடியும் – நிரூபிக்க வேண்டுமே! இது எத்தனைக் கொடுமை தெரியுமா?”

    கண்ணில் பனித்த நீரைத் துடைத்தபடி, “துப்பாக்கியைத் தூக்கும் ஒவ்வொரு நொடியும் என் தோளும் தொடையும் நடுங்குகின்றன!” நான் பெண்ணா – போலிஸ் அதிகாரியா என்பது இங்கே பெரிய கேள்வி!” – மார்பைத் தடவிக் காட்டுகிறார்.

    “நீங்களே சொல்லுங்கள் இந்த வேலை, பெண்ணுக்கு எத்தனை நாள் தாங்கும்?” எதிர் கேள்வி கேட்கிறார்.

    மேலும் பேசுவோம்!

    Share
  • எழுவகைப்பெண்கள்: 3. ஐயகோ! ஆணுடன் ஒப்பிடும்போது பெண்ணின் நடைவேகம் குறைவே

    அவ்வை மகள்

    3. ஐயகோ! ஆணுடன் ஒப்பிடும்போது பெண்ணின் நடைவேகம் குறைவே

    ஆண் -பெண் வேறுபாட்டில் இடுப்பெலும்பைபற்றிக் குறிப்பிட்டாக வேண்டும் என்றேன். உயரத்தில் குறைந்தும், அகலத்தில் மிகுத்து சற்றேறக்குறைய வட்ட வடிவத்தில் இருப்பது பெண்ணின் இடுப்பெலும்பு (காண்க படம் – 1). மேலும், பெண்ணின் இடுப்பெலும்பானது சற்று முன்னோக்கித். தள்ளப்பட்டிருக்கும். சற்றே பின்புறம் சாய்ந்தார்ப் போன்ற நடுமுதுகும் , சிறிதேனுமாவது வயிறு கொஞ்சம் முந்தித் தள்ளப்பட்டிருக்கும் தன்மையும் பெண்ணுக்கு இயல்பாய் அமையும் காரணம் பெண்ணின் இடுப்பெலும்பின் தன்மைதான்.

    இடுப்பெலும்பின் மைய எலும்பு, திருவெலும்பு (sacrum) எனப்படும். திருவெலும்பு இடுப்பெலும்பின் மிகமுக்கியமான பகுதியாகும். இடுப்பெலும்பின் பின் மேற்பகுதியில், முதுகெலும்பின் தொடர்ச்சியாக அமைவதே திருவெலும்பு. ஆணின் திருவெலும்புடன் ஒப்பிடும்போது, பெண்ணின் திருவெலும்பு அகலமாகவும் அரைகுறையாய் முடிந்தாற்போன்றும் இருக்கும்.

    இடுப்பெலும்பின் இருபுறமும் கீழ்ப்பக்கவாட்டில் இருக்கும் கிண்ணக் குழிகள் (acetabula) தொடை இடுப்புடன் சேரும் இணைப்புக்கானவை. இக்குழிகளுக்கு இடையே உள்ள தூரம், ஆணுக்குக் குறைவாகவும், பெண்ணுக்கு அதிகமாகவும் உள்ளது. பொதுவாக, பெண்களின் மறையுறுப்புச் சந்தி ஆணின் மறையுறுப்புச் சந்தியைக் காட்டிலும் அகலமாக இருப்பதன் காரணம் இதுதான் (விவரங்களை, படம்-2 ல் காண்க).

    pasted image 0

    படம் 1 – பெண் மற்றும் ஆணின் இடுப்பெலும்பு; விற்பனையல்லா பொது அறிவுப்பயன்பாட்டுக்காக அனுமதியுடன் வெளியிடப்படுகிறது; படத்தின் மூலம்: https://cnx.org/contents/U6HolX6c@3/The-Pelvic-Girdle-and-Pelvis

    இடுப்பின் அமைப்பு

    920e2cbe-fb3b-49a6-acb3-0dd3505708b9

    படம் 2- பெண்ணுக்கும் ஆணுக்கும் இடுப்பின் அமைப்பில் உள்ள வேறுபாடுகள்

    ஆண் -பெண் வித்தியாசம் இடையோடு நின்று விடுவதில்லை. தொடை- இடையுடன் சேரும் வாகில் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் வேறுபாடு உள்ளது என்பதை நாம் உற்று நோக்கலாகிறோம். பெண்ணின் உடலில், இடுப்பெலும்புடன் வந்து சேரும் தொடை எலும்பு (femur) நெட்டுக்குத்திலிருந்து கிடை மடையாய் அகன்று விரிநதவாறு இடையை வந்தடைகின்றது. இதனால், பெண்ணின் இடை -தொடை- சந்திக்கோணம் ஆணுக்கு இருப்பதைக்காட்டிலும் மிகவும் அகன்ற கோணமாக இருக்கிறது (படம் – 2). தொடையின் பிட்ட வெளிவிளிம்புகள் பெண்ணுக்கு விரிந்தவாகில் இருப்பதும் இந்தகாரணத்தால் தான். சொல்லப்போனால் பெண்ணின் தொடை-இடைச்சந்தி, கீல் வைத்த பெட்டகக் கதவுகள் போல் இலகுவாக அகலவாட்டில் விரியும் தன்மையதாய் இருக்கின்றது. முதுகால் மல்லாந்து படுக்கும்போதும், நின்ற நிலையிலிருந்து குனியும்போதும் இந்தக் கீல் அமைப்பின் சௌகரியத்தை அனுபவிக்க முடியும். இவ்வமைப்பு உடலுறவிலும், வளரும் கருவைத் தாங்குவதிலும், குழந்தையைப் பிரசவிப்பதிலும் பெண்ணுக்கு ஒத்தாசை செய்வதற்காக இயற்கை செய்துள்ள ஏற்பாடாகும் .

    ஆனால் இத்தனை சௌகரியமாய் அமைந்ததான அகன்ற இடையும் விரிந்த தொடையும், பெண்ணுக்கு, காலெடுத்து நடக்கும், ஓடும் திறனைக் குறைக்கின்றன. ஐயகோ! ஆணுடன் ஒப்பிடும்போது பெண்ணின் நடைவேகம் குறைவே.

    சொல்லப்போனால், இயற்கை அமைப்பிலேயே பெண்ணுக்கு நடை என்பது விருப்பமான, எளிதான செயலாக அமைக்கப்படவில்லை. ஏனெனில், நடையை இலகுவாக்கும் தொடையும் இடையும் அவளுக்கு இல்லை. ஆனால் ஆணுக்கு அந்த பாக்கியம் உண்டு. கருத்தரித்து, கருவைத்தாங்கி வளர்த்து, சிசுவைப் பிரசவிக்கும் சிறப்புப் பணிக்காக, உரியமுறையில் வடிவமைக்கப் பட்டிருக்கிற பெண்ணின் சௌகரிய இடுப்பு, அவளது நடைக்கும் ஓட்டத்திற்கும் ஒத்தாசை செய்ய மறுத்து கொஞ்சம் மக்கர் பண்ணுகின்றது. இது இயற்கைப் பிறழ்வு அல்ல, ஒரு அனுசரிப்பு விதி (Law of Compensation). ஒன்று மிகும்போது ஒன்று குறைவுபடுவது இயல்பல்லவா? அது போன்றதே இதுவும். பல பெண் விலங்குகளில் இவ்வாறான அனுசரிப்பு விதியைக் காணமுடியும். மனிதப்பெண் இவ்விதிக்கு விலக்கல்லவே . ஆனால், மனித இனத்திலே தான், ஆணின் நடை அல்லது ஓட்ட வேகத்திற்கும் பெண்ணின் நடை அல்லது ஓட்ட வேகத்திற்கும் மிக அதிக வித்தியாசம் இருக்கிறது. இருகால் உயிரியாக, தரையில் நடக்கவேண்டிய விலங்காக இருப்பதாலும் பன்னெடுங்காலமாக பால்-சார் (gender-specific) பணிகளுக்க்கெனவே மனித உடல் உருவாக்கப் பட்டிருப்பதாலும் நடை மற்றும் ஓட்டத்தில் மற்ற விலங்குகளைக் காட்டிலும் அதிக ஆண் -பெண் வித்தியாசத்தைப் பார்க்கலாகிறது. ஆக, பெண் நடக்கச் சிரமப்படுவதன் உண்மைக் காரணம் பெண்ணால் இயற்கையாகவே வேகமாக நடக்க முடியாது என்பது தான் என்பது புரிகின்றது அல்லவா?.

    ஆனானப்பட்ட விளையாட்டுப் போட்டிகளிலே கூட ஆண் -பெண் பாகுபாடு வைத்தே போட்டிகள் நடைபெறும்போது நம் வீட்டுப் பெண்கள் ஓட மறுப்பதும் – நடக்க மறுப்பதும் ஒன்றும் புதிதல்ல. உங்கள் வீட்டுப் பெண்மணி நடக்கப் பால்மாறினால் அதற்காய் நீங்கள் இனியும் கொதிக்க மாட்டீர்கள் அல்லவா?

    இது நிற்க.

    எந்த ஒரு உறுப்பும் இரு இயந்திரம் போன்றது. எனவே பெண்ணின் நடை சிரமத்தைப் பொறியியல் ரீதியாக விளக்குவது சிறப்பு. பெண்ணின் வட்ட இடை வடிவுமும் அகன்ற கோணத்துடன் உள்ள தொடையும், அவளது கால்கள் இலகுவாக இயங்குவதில் இடையூறு செய்கின்றன என்றோம். இவ்வாறு நிகழ்வது ஏனெனில், இடை-தொடையால் அவளது கால் முட்டிக்கு மேலே ஒவ்வா விசை யையும் பாரமும் உண்டாகின்றன. இதனால் முட்டியின் இயக்கத்தை எதிர்க்கும்படியான ஒரு சுழ்ற்சிவிசை பெண்ணின் முட்டிக்கு மேலே உருவாகி நிலைக்கின்றது. ஒவ்வொருமுறை காலை எடுத்துவைக்கும்போதும் – பெண்ணின் விரிந்த தொடையானது அவளது முட்டியை உள்புற மாகத்த்திருப்புகிறது. இயந்திர இயங்கு சக்தியில் இது ஒரு விரயமே, தடையே!

    இருகால் நடைப் பிராணியான மனிதரது உடலில், தசைநார் மற்றும் எலும்பிழைகள் முட்டியில் சங்கமித்திருப்பதைப்போல வேறு எந்த உறுப்பிலும் சங்கமிக்கவில்லை. பெண்ணுக்கு பலவீனமான தசைநார் மற்றும் பலவீனமான எலும்பிழைகள் உள்ளன என ஏற்கனவே கண்டோம். இந்த பலவீனம், இடை-தொடை சுழல் விசையோடு கைகோர்த்துக் கொள்கின்றது – பெண்ணின் கால் முட்டியின் இயக்கத்தை அது வலுவாய் எதிர்க்கிறது. ஒட்டுமொத்தத்தில், ஆற்றலின் பீடமான பெண்ணுக்குப் பீடமே பலவீனம் எனவானது. என்னதான் முட்டினாலும் பெண் முட்டி ஆணின் முட்டியைவிட மட்டம்தான் என்பது இயற்கை விதித்த விதி! பெண்களுக்கு இயற்கையிலேயே உள்ள இந்த முட்டியின் மட்டத்தை நம் முன்னோர்கள் அறியாதவர்கள் இல்லை. எனவே பெண்களுக்கென அன்று அவர்கள் ஏற்பாடு செய்திருந்த விளையாட்டுக்கள் எல்லாம் பெண்களுக்கு ஏற்ற விளயாட்டுக்களாக மட்டுமே இருந்தன.

    பெண்ணின் இடை -தொடை-முட்டி அமைப்பின் இடைஞ்சலைக் கருத்தில் கொண்டு இந்த உறுப்புக்களில் அல்லது இந்த உறுப்புக்களின் பலவீனத்தால் உடலில் வேறெந்த இடத்திலும் எவ்விதக் காயமும் பெண்களுக்கு ஏற்படாதவாறு அன்றைய விளையாட்டுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஆண்கள் விளையாடும் எல்லா விளையாட்டுக்களையும் பெண்களால் விளையாடமுடியாது என்கிற தெளிவான விவேகம் அன்றைய மக்கட்பிரதிநிதிகளுக்கு இருந்தது. ஆனால், 1970-71ல் விளையாட்டில் ஆணுக்கு நிகராய்ப் பெண்களை இறக்குவது – உத்வேகிப்பது என்ற புரட்சி உலகெங்கும் பிறந்தது. இதனால் எண்ணிறந்த பெண் விளையாட்டு வீராங்கணைகள் களத்தில் இறங்கினார்கள் – இறக்கப் பட்டார்கள். ஆனால், இவர்களில் விளையாட்டில் தொடர்ந்து தங்கியவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு அல்லது இல்லை என்றே ஆனது. விட்டில் பூச்சியைப்போல பெண்கள் விளையாட்டில் வந்து போயினர். காரணம்? அவர்களுக்கு ஏற்பட்ட (ஏற்பட்டு வரும்) வரும் மிகவும் மோசமான முட்டி மற்றும் கால் தொடர்பான காயங்கள்! இதிலே மிக-மிக மோசமாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டைப்பந்து, கூடைப்பந்து, காற்பந்து, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்ட மாதர் திலகங்கள். விளையாட்டுப்போட்டிகளில் பெண்ணின் இடை-தொடை-முட்டி கட்டமைப்பு மட்டுமல்ல – மாதவிடாய்த் தொடர்பாய் எழும் உடலின் இரசாயன மாற்றங்களும் அவளுக்கு எதிராய் செயல்பட்டு அவளை விளையாட்டுகளில் மிக மோசமாக வீழ்த்துவதையும் விளையாட்டு மருத்துவ உலகம் தொடர்ந்து பதிவு செய்துவருகிறது

    (ஒரு எளிய கட்டுரையை இங்கே காணலாம்:

    http://www.pharmacytimes.com/publications/issue/2014/june2014/sports-injuries-are-women-more-at-risk).

    இவ்வகையில் அன்றைய தமிழ்ச்சமுதாயம் பெண்களின் இடை-தொடை-முட்டி அவதியைப் புரிந்துகொண்து அவர்களை அரவணைத்து அவர்கள் நலனுக்கான ஏற்பாடுகளைச் செய்த பாங்கு நம்மை வியக்கவைக்கிறது.

    தொடருவோம்

    Share
  • எழுவகைப் பெண்கள்: “பெண்ணின் உடல்” எனும் சித்தாந்தம்

    அவ்வைமகள்

    1600x735_19412_Lea_3d_cartoon_girl_woman_character_picture_image_digital_art

    பெண் எனும் மனித உயிரி அலாதியானவள். மனிதப் பெண், பிற பெண் உயிரிகளிலிருந்து பெரிதும் வேறுபடுபவள் – அதிசயமானவள் – அற்புதமானவள். அவளைப்புதிரென்பர் – வியப்பென்பர் – தீர்வுகாணாக் கணக்கெனக் கொண்டு தீரா முயற்சியுடன் அவளை அறிந்தறிய விழைவர். பாடிப்புகழ்வர் – பரவசப்படுவர் – சாடி இகழ்ந்தும் சளையாமல் நினைந்தலைவர். பாட்டியாய், தாயாய், மனைவியாய், சகோதரியாய், மகளாய் என நிதம் அவளுடன் கூட வாழ்ந்தாலும்கூட அவளை அறியாதும் புரியாதுமே நாள் கழியும் உண்மையே நம் நிலையெனில் இந்தப் பெண் எனும் ஜீவி எத்தனை நுணுக்கமானவள் என்பதை நாம் சற்றேனும் உணர முடிகிறது அல்லவா?

    இவ்வாறாக, எவர் நினைவுக்கும் சிந்தனைக்கும் என்றுமே புதுப் புது பொருள் தரும் – சவால் விடும் ஜீவியாக விளங்கும் பெண்ணே, “நீ யார்?” என நம் உள்ளம் கேளாமல் கேட்கும். இக்கேள்வி ஆணுக்குள் மட்டுமல்ல பெண்ணுக்குள்ளும் எழுகிறது என்பது தான் புதிரினும் புதிர்.

    பெண் பற்றிய எந்த ஒன்று நம்மை அவள் பால் ஈடுபட வைக்கின்றது? பெண் பற்றிய எந்த ஒன்று அவள்பால் அவளையே லயிக்க வைக்கிறது? பெண் பற்றிய எந்த ஒன்று கவிகளையும் ஓவியர்களையும், இச்சா சக்தி, ஞான சக்தி, க்ரியா சக்திப் பிரவாகங்களாய் உருமாற்றம் செய்கிறது? என வியந்தவாறு வியந்தவாறு மனிதகுலம் பயணித்துக்கொண்டிருக்கிறது.

    உடல், உள்ளம், ஆன்மா என முத்தளப் பேழையில் உயிரிகள் வாழும் என்பர். இம்மூன்றில் எது உயர்ந்தது என்பது ஒரு பிரம்மாண்ட வினா. இந்த வினாவையும் அதற்கான விடையையம் தமிழிலக்கியம் விரிந்தும் சுருக்கியும் காட்டும் பாங்கு பிரமிக்கத்தக்கது. ஆன்மாவும், உள்ளமும் உடல் எனும் உறையுளின் வாசிகள் எனக்கொண்டு உடலே மூன்றில் முதன்மை என்பதனைப் பகராத சமயங்கள் இல்லை. தமிழ்த் திருப்புலவர் திருமூலர், “உடம்பாரழியின், உயிராலழிவர், திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்!’ என வெகு திறத்துடன் எளிமையாய் மொழிந்திருக்கிறார். திருமூலர் வாக்கில், உடலின் மேன்மையை உணர்ந்தவாறு நாம் நிமிர்கையில், ஒன்று நமக்குத்தெரிகிறது: அது என்னவென்றால் உடலின் மகத்துவம் எத்தகையது என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருக்கிறோம் என்பதே. . சொல்லப்போனால், உடல் பற்றிய சிந்தனை நம்மை எப்போதுமே வியாபித்திருக்கிறது; அதுமட்டுமல்ல, முன்னேப்போதுமில்லாத வீரியத்தோடு இன்று உடல் பற்றிய வியாக்கியானங்களில், நடவடிக்கைகளில் நாம் ஈடுபடுவதும் நமக்குப் புரிகிறது.

    உடல் வனப்பு, உடல், வசீகரம், உடல் நலம், என்கிற விடயங்களினோடு உடல் மொழி (body language) என்கிற ஒரு ஆளுமைக் கூற்றையும் கையாளுங்கின்ற கால கட்டத்தில் வாழும் நாம் நம்மை நல்ல உடல் ஞானிகளே என சொல்லிக்கொள்ளவும் முனையலாம். ஏனெனில், மெய் ஞானம் என்பது, மெய் எனப்படும் உடலினை முற்றும் முழுவதும் அறிந்து கொள்ளும் உண்மை ஞானமாக இருக்கும்படியாக அறிவார்ந்த விவா எழும்பியுள்ள கால நிலையில் நாம் இருக்கிறோம். இந்த விவா இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாக உள்ளது. இன்று, உடலின் அவஸ்தையும், உடலின் எழிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஒரு புதுக் கவனத்தை, எழுச்சியை அடைந்திருக்கிற வேடிக்கை நிலவுகின்றது. காட்சி, கவர்ச்சி, பாலியல் சுதந்திரம், உடலுறவு மற்றும் வயோதிகம் பற்றிய மாற்றுச் சிந்தனைகள், புதுவித நோய்கள் எனப் புதியதொரு கால மாறுபாட்டில் நாம் நுழைந்திருக்கிற நெருக்கடியும் கூட நமக்குப் புலப்படுகிறது.

    அதே நேரத்த்தில், யோகமும்,கலைகளும், இறையியலும் ஒன்றை ஒன்று சார்பவையாய், நுண்ணிய உடற்கூற்றுத் தத்துவங்களையும் மருத்துவ சித்தாத்தங்களையும் உள்ளடக்கியவையாக மிளிரும் பாங்கையும் நாம் காண்கிறோம். இக்காட்சி, எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும், நம்மை மெய் சிலிர்க்கவைக்கிறது. மெய் எனும் இவ்வுடல் உண்மையிலேயே எத்தகையது, இது எக்குணம் கொண்டது, இதனைச் செவ்வனே காப்பது எங்ஙனம் என சீரிய சிந்தனயில் நாம் நம்மைத் தொலைத்தவாறு இருக்கிறோம்! இச்சிந்தனையில் இன்று பெண்ணின் உடலின்பால் நமக்கிருக்கும் கவர்ச்சியும் கிளர்ச்சியும் சொற்பதம் கடந்தவை.

    மறைக்கப்படுவதாலும், குறைக்கப்படுவதாலும், இட்டுரைக்கப்படுவதாலும், உண்மைகளின் சாரம் நீர்த்துப்போவது இயல்பே. பெண்களின் உடல் பற்றிய ஞானம் இவ்வாறே அரைகுறையாய் நின்றுவிட்டது. இந்த அரைகுறைத்தன்மை பெண்கள் தம்மைத்தாமே அறிந்துகொண்டுள்ள நிலையிலும் கூடத்தான் என்பதனை மீண்டும் சுட்டிக்காட்டவேண்டும்.

    இந்நிலையில், பெண் என்பவள் புனிதமானவள் – தனித்துவத் தன்மை உடையவள் என்கிற போதனையின் முழுச்சாரம் நம்மைச் சாராத நிலை நம்முள் இருப்பது வியப்பல்ல.

    மனித குலத்தின் வித்தாய், வேராய், விழுதாய் விளங்குபவர் பெண்களே. ஆனால் அவர்களது உடல் இன்று ஒரு காட்சிப்பொருளாய் – கவர்ச்சிப் பொருளாய் – கேலிப் பொருளாய் – வர்த்தகப்பொருளாய் மாறிவிட்ட ஒரு நிலையில், மனித குலத்தில் முக்கியமானவர்களான பெண்களது உடல் போகப்பொருளல்ல, அது ஒரு பொக்கிஷக் கருவூலம், புரிந்து அணுகவேண்டிய நுண்ணியக் களஞ்சியம், தொழுதேத்த வேண்டிய அற்புதப் பெட்டகம் எனும் அறிவார்ந்த நிலை நம்மைச் சேருமெனில் ஒரு மேம்பட்ட சமுதாயத்தை நம்மால் தொடர்ந்து நிலை நிறுத்த முடியும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், பண்டைய தமிழ்ச்சமுதாயம், பெண்களின் நலனை மையமாகவே வைத்து மட்டுமே எழுப்பப்பட்டது – இயங்கியது.

    ஆனால், இடைக்காலத்தில் ஏற்பட்ட சிலபல தடைகளால் நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, பெண்களின் உடல் பற்றி ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் கூடப் பற்றாக்குறையான புரிதல் நிலையே ஏற்பட்டுப் போனது. உடலதனை மதிக்காது – பிறழ்வு பேணும் பேதமையும், உடற்கூறு அறியாது, நவீனம் என்ற பெயரில், பெண்கள் தங்கள் உடலைத் தாமே உதாசீனப்படுத்தும் போக்கும், ஆண்கள் பெண்களை உடல்சார் வகையில் செய்கைகளாலும் மொழிவழக்கிலும் மிக இழிவுடன் நடத்தும் போக்கும் மிகலானது.

    பெண் என்றால் புற அழகு என்பது ஒரு கட்டாய எதிர்ப்பார்ப்பாக மாறிபோனது மட்டுமல்ல, அழகு என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவகையிலான அளவீடு என்பதை அறியாதவர்களாக, மக்கள் தோற்றத்தின் அடிப்படையில் மாதர்களை உயர்த்தியும் தாழ்த்தியும் தாழ்ச்சி செய்யும் இழிநிலையும் தொடர்ந்தவாறுள்ளது. இது சரியான போக்கு அல்ல.

    ஆரோக்கியமான சமூகங்கள் பெண்களின் உடல் மற்றும் மன பலத்தை ஆதாரமாகக் கொண்டு எழுப்பப்படுபவை. அழகு அங்கே இன்றியமையாத்தேவையாக எதிர்பார்க்கப்படுவதில்லை. எனவே, பெண்களைப் பற்றிய நம் புரிந்து கொள்ளல் சீர்பட்டாலொழிய, பெண்கள் மதிப்புடன் நடத்தப்பட்டாலொழிய, பலமான சமுதாயம் நிலைபெறவியலாது.

    பெண்ணியமும் பெண் முன்னேற்றமும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக நாம் பிரபலப் படுத்திகொண்டிருக்கிற இன்றைய நாளில் “பெண் உடல்” எனும் விடயம் ஒளிவாகவும் மறைவாகவும், சொல்லாலும், சித்தரிப்பாலும், நடவடிக்கையாலும் ஒழுங்கீனப்படுகிறது; இந்த செய்கைகள், பெண்ணை எவ்வாறு பதம் பார்க்கின்றன என்பதை நாமறிவோம். “பெண் உடல்” எனும் விடயம் அத்தனைக் கூர்மையுடையது என்பதால் பெண் பற்றிய உடல் நலவியல் மற்றும் மருத்துவ இயல் கூறுகளை விரிவாகவும் ஆழமாகவும் பேசும் கடப்பாடு நம்மிடம் உள்ளது. இக்கடப்பாட்டை நிறைவேற்றுமுகமாக, இத்தொடரின் நோக்கமும் நடையும், பெண்ணின் உடலைத் தழுவிச் செல்வதாய் அமையப் பெற்றுள்ளன.

    இவ்வகையில் நம்முள் முதலில் எழும் தலையாய கேள்வி, பெண்ணின் உடல் ஏன் இத்தனைத் தனிக்கவனம் பெறுகிறது என்பதே. சுருங்கச்சொன்னால், பெண் எவளாயினும்அவள் ஒரு தனிப்பிறவியே! உயிரிகள் ஆண் எனவும் பெண் எனவும் பாகுபாடடைந்து இயக்கம் கொள்வது இயற்கையின் ஒப்பற்ற ஏற்பாடு. பரிணாம வளர்ச்சியின் முத்தாய்ப்பான இந்த ஏற்பாட்டினை உற்று நோக்கி, அதனைச் சரியாகப் புரிந்துகொண்டோமென்றால் ஆண் -பெண் பாகுபாட்டின் நோக்கமும் பயனும் ஒழுங்காய்ப் புரியும். உடல் அமைப்பிலும் உடலியக்கத்திலும் பெண் ஆணிலிருந்து மிகவும் வேறுபட்டவள் என்கிற சத்தியத்தைப் புரிந்துகொண்டியங்கும் வாழ் நிலை ஒரு ஒப்பற்ற தெளிவை ஆணிடமும் பெண்ணிடமும் உருவாக்கும், பெண்களின் பால் மதிப்பு மிகும், என்பதில் ஐயமில்லை.

    தொடரும்

    கூகில் படத்திற்கு நன்றி

    Share