அவ்வைமகள்

துவாரபாலகர்களும் துளைநிலை ஒழுக்கமும்

அமுத நிலையம் ஆதித்தன் இயக்கமும் என்ற உங்கள் அவ்வையைப் இவ்வுலகின் தலைசிறந்த பெண்மைப் பாதுகாவலர் என்றே சொல்லத் தோன்றுகிறது என்றார் அந்த இராணுவ அதிகாரி.

“நான்கு மனைவிகள் – எத்தனையையோ பெண் தோழிகள் என்று என் காலம் இதுகால் ஓடியிருக்கிறது. பெண்ணின் உடம்பை – புணர்ந்திருக்கிறேனே தவிர உணர்ந்தவன் இல்லை. நான் சொல்கிறேன் எனத் தப்பாக நினைக்காதீர்கள – ஆண்மை மிதர்ப்புக்குக் கண்ணும் தெரியாது – காதும் கேட்காது – மூளையும் விளங்காது – துவாரம் மட்டுமே இலக்கெனக்கொண்டு எப்படியாகிலும் அவளை வீழ்த்தி ஜெயிக்கும் கொடூர குணம் கொண்டது ஆண் எழுச்சி, அந்த எழுச்சியால் பெண்மையின் மேன்மைகளை உணர்வது கடினம் – நான் கடந்து வந்த பாதையைப் பார்க்கிறேன். பெண்கள் பற்றிய புரிந்து கொள்ளல் கொஞ்சம் இருந்தது என்றாலும் – அவர்களைப் பற்றிய சரியான ஞானம் இல்லாமலேயே என் வாழ்நாளைக் கழித்திருக்கிறேனே என்று இப்போது உணர்கிறேன் – ஒருவேளை உங்கள் கலாச்சாரம் போன்று எங்கள் கலாச்சாரத்திலும் பெண்களின் நலன் என்பது முத்தாய்ப்பான விஷயமாக இருந்திருக்குமேயானால் நான் உங்கள் ஆடவர்களைப் போல ஒரே ஒரு மனைவியோடு நல்விதமாய் வாழ்ந்து – இப்படி அழிந்தொழியாமல் – அலைந்துகெடாமல் ஒழுங்காய் இருந்திருப்பேன் என்றே எண்ணுகிறேன்.” என்கிறார்.

அந்த வெளிப்படையான நேர்மையைப் பாராட்டி விட்டுச் சொன்னேன், உங்கள் வாக்கின் சாட்சியாக எங்கள் ஆடவர்களை மீண்டும் நிலைக்கழைக்கும் பணி எங்களுக்கு இருக்கிறது என்பதை நான் எனக்கு மீண்டும் நினைவூட்டிக்கொண்டேன். சொல்லப்போனால், ஆண்களால் தான் ஒரு நாடு தாழ்வுறுகிறது என்பதை அவ்வையே சுட்டிக் காட்டியிருக்கிறார். நாடு எதுவாகினும், அது எத்தகைய நிலத் தன்மையைக் கொண்டதாகினும், அந்நிலத்தில் உள்ள ஆடவரின் தராதரத்தைக் கொண்டே அந்நிலத்த்தின் தராதரமும் அமையும் என்கிறார் அவ்வை என்றவள் தொடர்ந்து.

அவ்வையின்

“நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவ ராடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே.”

என்ற பாடலை மொழிபெயர்த்துச் சொன்னேன். அந்நொடி, “அப்படியா – அப்படியா – அப்படியா?” என்று தொடர்ந்து கூவி வியந்தார் – மேலும் தொடர்ந்தார்.

“இது எத்தனைப் பெரிய சமூகப் பொருளாதாரத் தத்துவம் தெரியுமா? ஆடவனின் நடத்தை – அவனது பழக்க வழக்கங்கள் – அவனது பெண்ணறம் பேணும் பாங்கு ஆகியன உண்மையிலேயே ஒரு சமூகத்தை அழிக்கும் அல்லது வாழவைக்கும். ஆடவனின் இளமை ஆற்றல் வெகுபெரும்பாலும் விரயமாகிறது – ஆனால் பெண்ணோ துடித்தெழுகிறாள் – காவல் தெய்வமாய் அவதாரம் எடுக்கிறாள். தன் வீட்டை – தனது சமூகத்தைக் காக்க – பெண் எத்தனைப் பாடுபடுகிறாள் என்பதை நான் அறிவேன் – சொல்லப்போனால் உங்கள் அவ்வையின் வாசகம் எனக்கு மிகவும் பொருந்தும் – என்னை வழிநடத்திச் செல்ல என்வாழ்வில் பங்கேற்ற ஒவ்வொரு பெண்ணும் முயன்றாள் – என் தாயிலிருந்து – நான் பழகி விலகிய அனைத்துப் பெண்கள் வரை! ஆனால் நான்? உதாசீனம் செய்தேன் – புறக்கணித்தேன் – அவர்கள் யாவரையும் உடுப்பாய்ப் பயன்படுத்தி, என் வாழ்விலிருந்து கழற்றி எறிந்தேன். உண்மையில் சொல்கிறேன் மோசமான ஆடவர்கள் எந்த சமூகத்துக்கும் அடுக்காது. உங்கள் அவ்வை, ஆடவர்கள் பற்றி நூற்றுக்கு நூறு சரியாய்ச் சொல்லியிருக்கிறாள்.” என்றார். அவரது களங்கமற்ற உண்மையின் வெளிப்பாட்டை மீண்டும் பாராட்டித் தொடர்ந்தேன்.

“துவாரம் மட்டுமே இலக்கெனக்கொண்டு எப்படியாகிலும் அவளை வீழ்த்தி ஜெயிக்கும் கொடூர குணம் கொண்டது ஆண் எழுச்சி, அந்த எழுச்சியால் பெண்மையின் மேன்மைகளை உணர்வது கடினம்” என்றீர்களே அந்த வாசகம் என் சிந்தனையைக் கிளறியது. துவார பாலகர்களின் – Hole Guards நினைவு வந்தது என்றேன்.

“அப்படியா அவர்கள் யார்?” என்றார்.

“எங்கள் கோயிலில் மூலவர் எனப்படும் பிரதானக் கடவுள் கருவறையில் இருப்பார் என்று முன்னம் சொன்னேன் அல்லவா? எங்கள் கோயில்களில் கருவறையின் பிரதான துவாரத்தில் – அதாவது நுழைவாயிலில் – இருபுறமும் துவார பாலகர்கள் எனும் காவல் தெய்வங்கள் இருவர் இருப்பர் -இவர்கள் கர்ப்பக்கிரகத்தின் தலைமை துவாரத்தில் பக்கத்திற்கு ஒருவராக நிற்பர். பாலகன் என்றால் ஆண்பிள்ளை என்பது பொருள்.

நெடிய தோற்றமும், ஊடுருவி வினவும் வியப்புக் கண்ளும் – கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி நிற்பர் துவார பாலகர்கள். இதில் குறிப்பிடத்தக்க விசேஷம் என்றால் – துவார பாலகரின் இருகால்களில் ஒரு கால் மட்டுமே கீழே பதிந்திருக்கும் – இரண்டாவதுகாலைத்தூக்கி – தூக்கிய அக்காலை மாறுகோணமாய்ச் செலுத்தி – அக்காலைக் கொண்டு – எழுச்சியுடன் கர்ச்சிக்கும் ஒரு ஆண் சிங்கத்தை அடங்குவார் துவாரபாலகர். அந்த காட்சியைக் கொஞ்சம் உற்று கவனிக்க வேண்டும். துவாரபாலகரின் கோணத்தில் தூக்கிய காலானது, ஒரு ஆண்சிங்கத்தின் தலைமீது நன்கு அழுத்திக்கொண்டிருக்கும்- அந்த சிங்கமோ “ஏய் நான் ஒரு சிங்கராஜா! என்னை நீ இப்படிச் செய்கிறாயே” என்று மிதர்ப்போடு அச்சிங்கம் அலறுவதுபோல் காட்சி இருக்கும்.

அதற்கு துவாரபாலகர், “ஏய்! நீ சிங்க ராஜாவானால் எனக்கென்ன? உன் ஆம்பளைத் திமிரோடு இங்கே நுழைந்தாய் என்றால் அசிங்கப்படுவாய் ஜாக்கிரதை!” என்றபடியாக பதிலிருப்பார். ஒருவித அசாத்திய புன்னகையோடு – அச்சிங்கத்தை – அதாவது ஆண் செய்யக்கூடிய அசிங்கத்தைத் தரையோடு தரையாக அமுக்கி – அதனை எழும்பாமல் – மிதித்தபடி நிற்கிறார் எங்கள் துவாரபாலகர்.

உண்மையில், எங்கள் துவாரபாலகர்களின் ஒய்யாரத்தையும் கம்பீரத்தையும் உடல்முத்திரை இலக்கணத்தையும் சொல்ல வார்த்தைகள் போதா. சொல்லப்போனால், இந்த துவார பாலகர்கள் ஏன் இங்கு கருவறை வாயிலில் நிற்கிறார்கள் – இவர்கள் கூறுவது என்ன என்று சிறுவயது முதல் நான் யோசித்ததுண்டு. அப்போதெல்லாம் புரியாதது – நவீன மருத்துவ அறிவியலில் கல்வி பெற்று – தொழில் மேற்கொண்டதால் – பின்னாளில் புரிந்தது. எங்கள் பாட்டியின் அம்மா ஓயாமல் சொல்லுவாள் “பலகாரமும் பலதாரமும் பாடைக்குப் பக்கம்” என்று அதுவும் கூட இந்த மருத்துவ அறிவியல் ஞானத்திற்குப் பின்பு மட்டுமே புரிந்தது. பலகாரம் -snack சாப்பிடுவதுபோல் பலபெண்களுடன் உறவு கொள்ளுவதா என்பதே அவள் கூறிய பழமொழியின் பொருள்.

மருத்துவ அறிவியலில், பலதாரம் கொள்பவனுக்கு இதயக் கோளாறுகள் டக்கென வருகின்றன என்பது கண்டு ஆச்சரியப்பட்டேன் – பல பெண்களோடு உறவு கொள்ளும் ஆணுக்கு உடலின் நோய் எதிர்ப்புத் திறன் குறைகிறது அவனுடலில் – T helper செல்கள் பாதிக்கப்படுகின்றனவே என்று வியந்தேன். இந்த வாழ்வியல் அனுபவங்களின் விளைவால் எங்கள் கலாச்சாரத்தின் உன்னதத் தன்மையும் – எங்கள் மூதாதையர்கள் நாட்டியிருக்கிற மூலவேர்களையும் கொஞ்சம் கூடுதல் தெளிவுடன் பார்க்கும் சிந்தையும் என்னுள் வளர்ந்தது.

ஆக, ஆண்களுக்கு இருக்கின்ற துவாரம் தேடும் எழுச்சியின் கடும் விளைவுகளின் விளக்கம் தான் துவாரபாலகர்கள் என்பேன். இளமையின் எழுச்சியால் உந்தப்பட்டு – பெண்ணின் கருவறையின் முகப்பான பெரினிய துவாரத்துக்குள் நுழையும் ஆண்மை எழுச்சிக்கு துவாரபாலகர்கள் ஒரு எச்சரிக்கை விடுக்கிறார்கள் என்பேன்: “மறையுறுப்புக்கள் ஆயுதம் போன்றவை – நெறிபிறழும்போது பதம் பார்த்துவிடுபவை – மனிதா நீ இதை புரிந்து கொள்! இந்தத் துவாரத்துக்குள் புனித அக்கினிக் கனல் இருக்கிறது – இந்த துவாரத்துக்குள் நுழையும் ஆண்மை எழுச்சி தூய்மையானதென்றால் – நியாமானதென்றால் – இங்குள்ள அக்கினி அந்த எழுச்சியைப் புடம்போட்டுத் தங்கமாக்கும் – நுழைந்த நல் எழுச்சியின் பிரதி பலனாய் – எழுச்சிமிக்கப் பரிசாய் நல்ல உறவு தரும் – நல்ல பிணைப்பு  தரும் – நல்ல ஆரோக்யம் தரும் – தங்கமான வாரிசு தரும். அன்றேல், இந்த துவாரத்தில் உள்ள அக்கினி உன் தீய எழுச்சியைக் கொய்து உன்னையே பொசுக்கிவிடும் ஜாக்கிரதை!” என்று துவாரபாலகர்கள் சொல்வதாகவே எனக்குத் தோன்றுகிறது!” என்றேன்.

பார்க்கப்போனால், பெரினியத் துவாரத்துக்குள் பிரவேசிக்கும் ஒவ்வொரு ஆணும் துளைநிலை ஒழுக்கத்தோடு மட்டுமே நுழையமுடியும் என்னும் எங்கள் ஆன்மீக விளக்கங்கள் இன்றைய மருத்துவச் சான்றுகளின் கருத்தையே என்றோ அனாயாசமாய்ச் சொல்லிப்போயின என்பேன். சொல்லப்போனால் கற்பு என்கிற ஒரு கோட்பாட்டை எங்கள் கலாச்சாரம் நேரிடையாகவும் – மறைமுகமாகவும் வாழ்க்கைக் கோட்பாடாகவே முன்வைக்கிறது எனலாம்” என்றேன்.

“What you said really makes sense” என்றார். “Chastity” அதாவது கற்பு என்பது ஆணுக்கு மிகவும் முக்கியம் – அதனை நான் இந்நிலையில் வெகு ஆணித்தரமாகச் சொல்லமுடியும் – என் தனிமனித வாழ்வின் பலாபலன்கள் அடிப்படையில் என்றார். கற்பை உலகின் பல கலாச்சாரங்கள் கோடிட்டேனும் காட்டுகின்றன – ஆனால்  உங்கள் கலாச்சாரம் பல்லாயிரம் படிகள் மேலே போய் அதனை வாழ்வின் இன்றியமையாக் கூறாகக் காட்டுவது உண்மையில் மிகப்பெரிய சாதனை!” என்றவர் நான் இன்னொன்றையும் சொல்லவேண்டும் என்று தொடர்ந்தார்.

“ஒரு பெண்ணுடன் ஒரு ஆண் ஆயுசு பரியந்தமும் வாழமுடியும் என்று உங்களைப்போலவே இங்கு சில வெள்ளையர்களும் காட்டிவருகிறார்கள். ஏகபத்தினி விரதத்தோடு வாழும் பாக்கியம் எனக்கு இல்லை என்றாலும் – அப்படி இருந்திருக்கலாமே என என் எண்ணம் இப்போது ஏங்குகிறது. ஏனெனில் – எனக்குத் தெரிந்து ஏகபத்தினி விரதம் கடைபிடிக்கும் நபர்களின் குடும்பங்கள் உண்மையிலேயே, ஸ்திரமாய் – சவுக்கியமாய் – வளமுடன் ஆரோக்கியத்துடன் வாழ்கின்றன. கிளைபட்டு – கிளைபட்டு branching செய்பவன் உண்மையிலேயே சீக்கிரம் ரோகியாகிறான் – இதில் நானும் அடக்கம் என்றார். ஒரு பெண்ணைத் தாண்டி இன்னொரு பெண்ணைப் புணரும்போது உண்மையிலேயே – அது கொடூர எண்ணம் தான் என நான் எங்கும் கூறுவேன்” என்றார்.

சரி, மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்பும் அவ்வையின் கருத்து என்ன என்று சொல்வதாகச் சொன்னீர்களே என்று தொடர்ந்து வினவினார் – என் உரையாடல் தொடர்ந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *