Tag: தஞ்சை வெ.கோபாலன்

  • காவேரி

    தஞ்சை வெ.கோபாலன்.

    cauvery mapதஞ்சை மாவட்டத்துக்கு உயிர் கொடுப்பது காவேரி ஆறு. பாரத நாட்டுப் புராதன நதிகளில் ஒன்று காவேரி. பெண்கள் பெயரால் அழைக்கப்படும் நம் நாட்டு நதிகளில் கங்கையைப் போன்று புனிதமுடையது காவேரி. பல காப்பியங்களின் உயிரோட்டமாக இருந்திருப்பது காவேரி. இன்றைய அரசியலில் காவேரி பிரச்சினை என்பது மிக முக்கியமான பிரச்சினையாக இருந்து வருகிறது. காவேரி நதி வரண்டு போனால் தஞ்சை மாவட்டம் பாலைவனமாக மாறுவது உறுதி. அப்படிப்பட்ட ஜீவனுள்ள, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, மக்களுடைய வாழ்வோடு பின்னிப் பிணைந்த இந்த காவேரி நதியைப் பற்றி சில விவரங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

    தென் இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியை யொட்டி மேற்குத் தொடர்ச்சி மலையில் குடகு நாட்டில் தலைக்காவேரி எனுமிடத்தில் உற்பத்தியாவது காவேரி. இந்தப் பகுதி கர்நாடக மாநிலத்து எல்லையில் கேரளத்தை யொட்டி அமைந்திருக்கிறது. குடகில் உற்பத்தியாகும் இந்த நதி, கர்நாடக மாநிலத்தில் பாய்ந்து, தமிழகத்தில் ஹொகனக்கல் எனுமிடத்தில் நுழைந்து சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை எனப் பாய்ந்து காவிரிப்பூம்பட்டினத்தில் கடலில் கலக்கிறது.

    காவிரி நதியோடு வந்து இணையும் பல உபநதிகள் உண்டு. அவற்றில் குறிப்பாக ஹேமாவதி, அமராவதி, கபினி, பவானி, நொய்யல் ஆகிய ஆறுகளை முக்கியமாகச் சொல்லலாம். காவேரி நதியால் பயன் அனுபவிக்கும் மாநிலங்களின் பகுதிகள் நான்கு. அவை கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகியவை. இது கர்நாடகாவில் சிவசமுத்திரம் எனுமிடத்திலும், தமிழ்நாடு கர்நாடகா எல்லையில் ஹொகனகல் எனுமிடத்திலும் அருவியாகக் கொட்டி மனங்களை மகிழ வைக்கிறது. இதில் சிவசமுத்திரம் நீர்வீழ்ச்சி சுமார் 320 அடி உயரத்திலிருந்து கொட்டுகின்ற அழகை நன்கு ரசிக்கலாம். ஹொகனக்கல் நீர்வீழ்ச்சி அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகளை கவருகின்ற இடம்.

    காவிரி நதி நீரிலிருந்து மின்சாரம் எடுப்பது தவிர டெல்டா மாவட்டங்களில் பாசன வசதிக்கு முக்கியமாகப் பயன்படுகின்றது. இந்த காவேரி நதிக்குப் புராண கதைகளின் படி பல்வேறு செய்திகள் சொல்லப்படுகின்றன. பிரம்மனின் புதல்வி லோபாமுத்திரை எனப்படுபவர். இவர் அகத்திய முனியின் பத்தினி என்று சொல்லப் படுகிறது. இந்த புராண வரலாற்றையொட்டி திருவையாறு அறம்வளர்த்தநாயகியின் புகழ்பாடும் “தர்மாம்பாள் குறம்” எனும் நாட்டுப்புற இலக்கியமும் பேசப்படுகிறது. தமிழில் கா என்றால் சோலை, விரி என்றால் இந்த ஆறு ஓடுமிடங்களில் இருபுறமும் பசுமையான சோலைகளை வளர்த்துக் கொண்டு போவதால் இதனை காவிரி என்றனர் என்று விளக்கம் கூறப் படுகின்றது.

    குடகில் இந்த நதி உற்பத்தியாகுமிடம் ஒரு குளம் போன்ற பகுதியில் ஒரு மூலையில் சிறு கிணறு போல் அமைந்த காவிரிமாதா சந்நிதிக்கு எதிரில் ஒரு ஊற்றிலிருந்து பெருக்கெடுத்து பாதாளம் வழியாகப் பாய்ந்து செல்கிறது. நீராக ஓடிவரும் காவேரி சிவசமுத்திரம் எனுமிடத்தில் மின் உற்பத்தியாகி பெங்களூர் நகரத்தை ஒளிமயமாக்குகிறது. கர்நாடகத்தின் ஸ்ரீரங்கப்பட்டினத்தை ஒரு தீவாக ஆக்கி அங்கு பள்ளி கொண்ட ரங்கநாதரை வழிபட்டு ஓடிவருகிறது. கர்நாடக மாநிலத்தில் காவேரி ஓடிவரும் பாதையெல்லாம் விவசாயத்துக்கு மட்டுமல்ல மக்களுக்குக் குடிக்கவும் குடிநீரைத் தந்து கொண்டு ஓடிவருகிறது. கிராமங்கள் மட்டுமல்லாமல் மண்டியா, மைசூர், பெங்களூர் போன்ற நகரங்களுக்கும் காவேரியின் குடிநீர் கிடைக்கிறது. இந்த நாட்டில் பல நதிகள் ஜீவ நதிகளாம். காவேரியும் ஜீவநதி என்கிறார்கள். தஞ்சை டெல்டா பிரதேசத்தைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் காவேரி ஜீவநதியா என்று.

    கர்நாடகம் முடிந்த மட்டும் காவிரியின் பயன்பாட்டை அனுபவித்தபின், தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது. அது நுழையும் பகுதி தமிழகத்தின் தர்மபுரி மாவட்டம். அங்கு நதி நுழையுமிடம்தான் ஹொகனக்கல். காவேரி சேலம் மாவட்டத்துள் நுழையும்போது மேட்டூரில் ஸ்டான்லி ரிசர்வாயர் என அழைக்கப்படும் மேட்டூர் அணையில் நீரைத் தேக்கி தேவைப்படும் போது அளவோடு நீரை திறந்து காவிரி பாசன டெல்டா பகுதிகள் பயனடையும் விதமாகக் சுமார் 90 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு தண்ணீர் தேக்கப்படுவதோடு, மின்சாரமும் உற்பத்தி செய்யப் படுகிறது.

    மேட்டூர் அணையிலிருந்து வெளியேறும் காவேரி ஈரோடு பகுதிக்கு வரும்போது அகண்ட காவேரியாக பெருகி வளர்ந்து வரும் கம்பீரம் பார்த்து ரசிக்கத்தக்கது. அங்கு பவானி நதி காவிரியோடு சேர்ந்து கொள்கிறது. பவானி நதி காவேரியில் வந்து சேரும் இடத்தில் பவானி எனும் ஊரில் கூடுதுறை என்று போற்றி அந்த சங்கத்தில் மக்கள் புனித நீராடுகின்றனர். திருமணி முத்தாறு, நொய்யல் ஆறுகளும் காவிரியில் வந்து கலக்கிறது. கரூரை அடுத்த நெரூரில் ஆம்பிராவதி என்று பெரியபுராணம் குறிப்பிடும் அமராவதி நதி காவிரியில் வந்து கலக்கிறது. ஈரோடு, கொடுமுடி, ஊஞ்சலூர், மாயனூர் என்று பல ஊர்களைக் கடந்து வந்து அங்காங்கே சில தடுப்பணைகளைத் தாண்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை வந்து அடைகிறது.

    மேற்கிலிருந்து கிழக்காக ஓடுகின்ற காவிரி நதி ஊஞ்சலூர் கொடுமுடி அருகில் வடக்கு தெற்காக சிறிது தூரம் ஓடுகிறது. அப்படி ஓடுகின்ற நதி புனிதமானது என்று மக்கள் அங்கு நீராடுவது வழக்கம். ஈரோடு தொடங்கி திருச்சிராப்பள்ளி வரும் வரை காவிரி அகண்ட காவேரியாகக் காணப்படுகிறாள். மாயனூரில் காவிரியிலிருந்து நீர்ப்பாசனத்துக்காக கட்டளைக் கால்வாய் வெட்டப்பட்டு விவசாயத்துக்குக் கொண்டு செல்லப் படுகிறது. கட்டளை மேல்கரை வாய்க்கால், கீழ்கரை வாய்க்கால் என இவை அழைக்கப்படுகின்றன.

    குளித்தலை தாண்டி காவிரி மேலணை எனப்படும் இடம் வந்ததும் அங்கொரு தடுப்பணையில் காவிரி இரண்டாகப் பிரிகிறது. இந்த இடம் திருச்சிக்கும் மேற்கில் சுமார் 15 கி.மீ.தூரத்தில் உள்ளது. இங்கு காவிரி இரண்டாகப் பிரிகிறது அல்லவா, அதன் வடக்குப் பகுதி ஆற்றுக்கு கொள்ளிடம் என்றும், தென்பகுதி ஆற்றுக்கு காவேரி என்றும் பெயரிட்டு அழைக்கின்றனர். மேலணையில் பிரியும் காவேரி திருவரங்கப் பெருநகரம் வந்ததும் மீண்டும் ஒன்று சேருகின்றன. இந்த இடைப்பட்ட பகுதி ஒரு தீவாகக் காணப்படும். இங்குதான் திருவரங்கத்தில் அரங்கநாதப் பெருமான் பள்ளிகொண்டு காட்சி அளிக்கிறார்.

    குடகில் காவேரி உற்பத்தியாகி வரும் வழியில் அதனோடு இணைந்து கொள்ளும் உபநதிகளாவன, ஹைமாவதி, ஷிம்ஷா, ஆர்க்காவதி, கபினி, ஹாரங்கி, பவானி, நொய்யல், அமராவதி ஆகியவை.

    திருச்சிக்கு அருகில் ஸ்ரீரங்கத்திலிருந்து கிழக்கே ஓடும் காவிரியாற்றில் கரிகால் சோழன் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அணையைக் கட்டி காவிரி நீர்ப்பாசனத்துக்கு வழிவகுத்தான். கல்லணையிலிருந்து கிழக்கே காவேரி காவிரிப்பூம்பட்டினம் செல்லும் வரை புனிதமான அம்மனாகக் காவேரி போற்றப் படுகிறாள். காவிரியிலிருந்து கல்லணை திறக்கப்பட்டு தண்ணீர் விடப்படும்போது வழி நெடுக மக்கள், காவேரி அம்மனை வழிபட்டு வெற்றிலை தேங்காய் பூ இவற்றை வைத்து வணங்கி கற்பூரம் காட்டி ஆற்று மணலில் இறங்கி நமஸ்கரித்து வழிபடும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. இரு கரைகளிலும் உள்ள ஊர்களில் காவிரி புனிதநதி என்பதால் அதன் மணலில் காலில் செருப்போடு கூட நடக்க மாட்டார்கள். காவிரி நதியின் கரைகளில் ரிவிட்மெண்ட் எனும் சுவர் எழுப்பி உடைப்பு எடுக்காமலும், தண்ணீர் வீணாகாமலும் பாதுகாத்து சிறு சிறு ஓடைகள் வாய்க்கால்கள் மூலம் விவசாய நிலங்களுக்குக் கொண்டு சென்று விவசாயத் தொழில் புரிந்தனர்.

    கல்லணையில் பிரியும் கொள்ளிடம் வடகிழக்கு திசையாக ஓடி பரங்கிப் பேட்டைக்கு தெற்கே தேவிபட்டணம் எனும் இடத்தில் கடலில் கலக்கிறது. இந்த கொள்ளிடம் கும்பகோணத்துக்கு வடக்கே வரும்போது அங்கு கீழணை எனும் ஒரு அணையில் நீரைத் தேக்கி அங்கிருந்து மண்ணியாறு, உப்பனாறு போன்ற ஆறுகளாகப் பிரிந்து கிழக்குப் பகுதி விவசாயத்துக்குப் பயன்படுகின்றன.

    கல்லணையைத் தாண்டியதும் காவிரி பிள்ளைக்குட்டிக்காரியாக ஆகிவிடுகிறாள். ஏராளமான கிளை நதிகள் இங்கிருந்து பிரிந்து பல பகுதிகளுக்கும் விவசாயத்துக்குப் பயன்பட்டு வருகின்றது. வெண்ணாறு, வடவாறு, வெட்டாறு, குடமுருட்டி, திருமலைராயனாறு, வீரசோழனாறு இப்படிப் பலப்பல. போதாதற்கு கல்லணைக் கால்வாய் என்று செயற்கையாக வெட்டி பாசனத்துக்காக பட்டுக்கோட்டை போன்ற மேட்டுப் பகுதிகளுக்கும் நீர்ப்பாசனத்துக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு வெட்டப்பட்டிருக்கிறது.

    குடகில் உருவாகி, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் பிரம்மாண்டமாக ஓடி, கடைசியில் மாயூரம் எனும் ஊரைத் தாண்டியவுடன் சின்னஞ்சிறு வாய்க்காலாக மாறி, காவிரிப்பூம்பட்டினத்தில் கடலில் கலக்கிறாள் காவேரி.

    [மறுபதிவு: நன்றி…”தி தமிழ் இந்து”  ‘ஆடிமலர்’]

    படம் உதவிக்கு நன்றி: http://pagalavantamil.blogspot.com/2009/12/blog-post_984.html

    Share
  • வினைப் பயன்

    தஞ்சை வெ.கோபாலன்                               ’

    கோயிலில் புராணிகர் கதை சொல்லிக் கொண்டிருந்தார். கூட்டம் ஒன்றும் அதிகமில்லையென்றாலும், கதையைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் அக்கறையோடு கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். நான் அந்த வழியாகப் போகும்போது ஒலிபெருக்கியில் அவர் பேச்சு காதில் விழுந்தது. அவர் பேசிக் கொண்ர்ருக்கும் விஷயம் பூர்வ ஜன்ம வினைப் பயன் மறுபிறவியிலும் வந்து உறுத்தும் என்பது. ‘சிலப்பதிகாரம்’ காப்பிய நோக்கத்திலும் இதைத்தான் சொல்லுகிறது என்பதால் நான் சற்று கோயில் வாயிலில் நின்று புராணிகரின் பேச்சைக் கவனிக்கத் தொடங்கினேன்.

    அவர் சொன்னார் முந்தைய பிறவியின் கர்ம பலன்கள் அடுத்தடுத்தப் பிறவியிலும் அவனையே வந்து சேருவதோடு, இந்தப் பிறவியிலும் செய்தவைகளும் சேர்ந்து கொள்ளும். பழைய பாக்கியைத் தீர்ப்பதற்கான வழிகளைத் தேடுவதோடு, இந்தப் பிறவியிலும் புதிதாக அவனுக்கு கர்ம வினைகள் வந்து சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். எத்தனைதான் உயர்ந்தவன், மேலானவன், நல்லவன் இப்படி எல்லாம் இருந்தபோதும் அவனுக்கும் ஒரு தீங்கு வருகிறது என்று சொன்னால் அது வினையின் பயன் என்றார். அவர் பேச்சில் ஒரு சித்தரைப் பற்றி குறிப்பிட்டார். அவர் காலில் ஒரு புண், ஆறாத புண் அதில் ஏராளமான சின்னஞ்சிறு புழுக்கள். அவர் அவற்றைப் பார்த்து ஊம் தின்னுங்கள், சண்டைபோடாமல் அவரவருக்குத் தேவையானதைத் தின்னுங்கள் என்று தன் உடம்பைத் தின்ன அந்த புழுக்களுக்கு அன்போடு உபசரிப்பாராம். தான் அனுபவிப்பது கர்ம வினை என்பதால் அதை அனுபவித்தே ஆகவேண்டுமென்பது அவருக்குத் தெரியும் என்றார்.

    downloadஅப்போது மற்றொரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வந்தது. ஒரு முறை காஞ்சிப் பெரியவர் கண் பொறைக்காக சென்னையின் பிரபல கண் மருத்துவரிடம் அறுவை சிகிச்சை மடத்திலேயே செய்து கொண்டாராம். அப்போது சீடர்களில் ஒருவர் தாங்கள் நினைத்தால் அறுவை சிகிச்சை இல்லாமல் செய்து கொள்ள முடியாதா என்று வெகுளித்தனமாகக் கேட்டிருக்கிறார். அதற்கு சுவாமி சொன்னாராம், “ஏண்டா, நான் மறுபடியும் வந்து பிறந்து அவஸ்தை படணும்கிறியா?” என்றாராம். தனக்கு விதிக்கப்பட்ட கர்ம வினையைத் தான் அனுபவிக்காவிட்டால் அது மீண்டும் தொடராதோ என்பது அவரது வினா.

    அந்த கதையில் அந்த புராணிகர் சொன்ன செய்திகள் எனக்குப் புதுமையாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. இப்படியும் இருக்க முடியுமா? அல்லது இவைகள் எல்லாம் இவருடைய கற்பனைகளா? இவர் சொல்வதற்கு ஏதேனும் ஆதாரங்களை இவர் காட்டுவாரா, எந்த புராணத்திலாவது அவர் சொன்ன அந்த கற்பனைக் கதைகள் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது.

    என் மனவோட்டத்திற்கு பதில் சொல்வதைப் போல புராணிகர் தொடர்ந்து கதை சொல்லலானார். மகாபாரதக் கதையில் கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. கர்ணன் மகாவீரன், அர்ஜுனனும் அவனுக்குச் சற்றும் குறைந்தவனல்ல. இவ்விருவருக்கும் நடக்கும் யுத்தத்தில் யார் வெற்றி பெறுவார் என்பதைக் காண அனைவருக்கும் ஆவல். கர்ணனின் கடுமையான தாக்குதல்களில் அர்ஜுனன் திணறுகிறான்.

    பீஷ்மர் படைத்தலைமை ஏற்றிருந்தவரை போர் புரியாமல் ஒதுங்கியிருந்த கர்ணன் துரோணரும் மாண்டபின் 16ஆம் நாள் யுத்தத்தில்தான் தலைமை ஏற்கிறான். போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த வரையில் அர்ஜுனனின் தேரை கர்ணன் இருந்த இடத்துக்கு ஓட்டிக்கொண்டு வராமல் கிருஷ்ணன் தவிர்த்து வந்தார். இவர் ஏன் இப்படிச் செய்கிறார் என்று அர்ஜுனனுக்குக் கவலை. அர்ஜுனனுடைய கவலையைப் புரிந்து கொண்டு கிருஷ்ணன் சொல்கிறார் கர்ணன் இப்போது உச்சகட்ட வீரத்துடன் போர் புரிகிறான். அவனுக்குச் சில சாபங்கள் உண்டு. அவை அவனை சரியான தருணத்தில் பாதித்து அவனுடைய வீரத்துக்குப் பின்னடைவு ஏற்படும் அப்போது போய் அவனோடு நீ மொதினால் உனக்கு ஜெயம் கிட்டும் என்று கிருஷ்ணன் சொன்னதை அர்ஜுனனும் ஏற்றுக் கொண்டானாம்.

    கர்ணன் பரசுராமரிடம் அஸ்திர வித்தைகளைக் கற்றானாம். ஒரு சமயம் பரசுராமர் தன்னிடம் இந்த அஸ்திர வித்தைகளைக் கற்றுக் கொள்ளும் கர்ணன் ஒரு தேரோட்டி மகன் என்பதைத் தெரிந்து கொண்டு, தன்னை ஒரு க்ஷத்திரியன் என்று சொல்லியல்லவா போர்க்கலையைப் பயின்றாய், நீ பொய் சொல்லி என்னை ஏமாற்றி கற்றுக் கொண்டதால், இந்த வித்தைகள் உனக்கு ஆபத்து ஏற்படுகின்ற சமயத்தில் உன்னை கைவிட்டுவிடும். அஸ்திர வித்தைகள் மந்திரங்கள் உனக்கு நினைவுக்கு வராது என்று சாபம் இட்டுவிட்டாராம் பரசுராமர். அப்படியொரு நிலை அவனுக்கு இப்போது போர்க்களத்தில் உண்டான நேரத்தில் அர்ஜுனன், கர்ணனுடைய தேர் சக்கரம் மண்ணில் புதைந்தபோது அதை எடுக்க முயன்ற நேரத்தில் அவனை அம்பு எய்து கொல்கிறான்.

    இந்த அதர்மமான முறையில் அர்ஜுனன் கர்ணனைக் கொன்றது சரியா என்ற கேள்வியை புராணிகர் எழுப்பினார். அர்ஜுனனுடைய குமாரன் அபிமன்யுவையும் கர்ணன் உள்ளிட்ட துரியோதனாதியர்கள் அதர்மமான முறையில் அல்லவா கொன்றார்கள். சகல சாஸ்திரங்கள், தர்மங்கள் அனைத்தையும் அறிந்த பீஷ்மரும், துரோணரும், கிருபாச்சாரியாரும் அல்லவா அவனைக் கூடி நின்று கொன்றார்கள். அதுபோலவே கர்ணன் கொல்லப்பட்ட முறையும் தர்மத்துக்கு மாறானதுதான் என்று சொல்லிவிட்டு அப்படி ஏன் ஒரு நிலைமை அவனுக்கு நேர்ந்தது தெரியுமா? அது அவனது கர்ம வினை என்றார். அது என்ன விவரம் என்று தெரிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது.

    இதற்கு புராணிகர் அளித்த விவரம் சற்று புதிதாக இருந்தது. அப்படியொரு விளக்கம் நான் கேள்விப் பட்டதில்லை. அவர் சொன்னார், இராமாவதாரத்தில் தேவர்கள் இந்த பூமியில் பல்வேறு பாத்திரங்களாக வந்து அவதரித்தார்கள். நாராயணன் இராமனாகவும், இலக்குமி சீதையாகவும் வந்து அவதரித்தார்கள். இந்திரன் வாலியாகவும், சூரியன் அம்சமாக சுக்ரீவன், வாயுவின் அம்சம் அனுமன் இப்படி பலரும் பலவிதங்களில் இராம கைங்கர்யத்தை நிறைவேற்ற பூமியில் அவதரித்தார்கள்.

    இராமவதாரத்தில் சூரியனுடைய குமாரனான சுக்ரீவன் இராமபிரான் மூலமாக இந்திரன் மகனான வாலியைக் கொன்றான். இந்த செயலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்தப் பிறவியில் இந்திரன் மகனான அர்ஜுனன் மகாவிஷ்ணு அவதாரமான ஸ்ரீகிருஷ்ணன் உதவியால் சூரியகுமாரனான கர்ணனைப் போரில் வஞ்சமாகக் கொல்கிறான், இது பழிக்குப் பழியாக பூர்வ ஜன்ம வினையால் செய்யப்பட்டது என்றார்.

    கதை என்னவோ சரிதான், ஆனால் அவர் சொன்ன லாஜிக் எனக்கு அதிசயமாக இருந்தது. நம் பண்டைய புராணங்கள் எத்தனை ஆழமாக தெளிவாக தர்மங்களையும், வினைப் பயன்களையும் அழகாக எடுத்துரைக்கின்றன, அவைகள் வெறும் கற்பனைக் கதைகள் அல்ல, வரலாறும் அல்ல, ஆனால் தர்மங்களை மக்கள் மனங்களில் ஆழப் பதிய வைக்கும் பொக்கிஷங்கள் என்பதை என் மனம் உறுதியாக ஏற்றுக் கொண்டது.

    Share
  • எத்தனை முகங்கள்?

    தஞ்சை வெ. கோபாலன்

    அன்று சம்பள நாள். இப்போது போல் அப்போதெல்லாம் வங்கியில் செலுத்திவிட்டு அங்கு போய் பணம் பெற்றுக் கொள்ளும் நடைமுறை வரவில்லை. அலுவலக கணக்குப் பிரிவில் கணக்காயர் மேஜைக்குச் சென்று அங்குள்ள சம்பளப் பட்டியலில் ரெவின்யூ ஸ்டாம்பில் கையெழுத்திட்டுவிட்டு அவர் கொடுக்கும் சம்பள உறையை வாங்கிக் கொள்ள வேண்டும். அப்படி தன்னுடைய சம்பளத்தை வாங்கிக் கொண்டு கவரில் இருக்கும் பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தான் சரவணன். அதில் மூன்று நூறு ரூபாய் நோட்டுக்களும் அறுபது பத்து ரூபாய் நோட்டுக்களும் இருந்தன. அப்பாடா, இன்றே கொடுக்க வேண்டியவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். வாடிக்கை வைத்துக் கொண்டிருக்கும் மளிகைக் கடைக்கு முதலில் நூற்றி முப்பது ரூபாயை வீட்டுக்குப் போகும் வழியிலேயே கொடுத்தால்தான் நாளைக்கு அடுத்த மாத சாமான்களை வாங்க முடியும். இதென்ன வெறும் முன்னூற்று சொச்சம் ரூபாய் சம்பளம் என்று திகைக்காதீர்கள். இது நடந்தது முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு. அப்போது ஊதியம் அவ்வளவுதான்.

    சம்பள உறையை வாங்கி தன் சட்டைப் பையில் மடித்து வைத்துக் கொண்டான். பின்னர் தன் இடத்தில் போய் முடிக்க வேண்டிய அன்றைய வேலைகள் சிலவற்றை முடித்துவிட்டுத் தன் பை, டிபன் கேரியர், குடை இவை சகிதம் வீட்டுக்குப் புறப்பட்டான். அப்போதே மாலை மங்கி இரவு படரத் தொடங்கிவிட்டது. மெல்லிய இருட்டு எங்கும் பரவிய போது ஆங்காங்கே விளக்குகளும் எரியத் தொடங்கின. வீதியில் இறங்கி வீடு நோக்கிக் கிளம்பினான்.

    வழக்கம் போல சம்பள தினத்தில் மனைவிக்கு பம்பாய் இனிப்புக் கடையில் ஏதாவது இனிப்பும், வாசலில் உட்கார்ந்து கூடையில் வைத்துக் கொண்டு பூ விற்கும் பெண்மணியிடம் ஒரு முழம் மல்லிகைப் பூவையும் வாங்கிக் கொண்டான். தன் பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டான், பணக் கவர் பத்திரமாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள, அது அங்கு இருந்தது.

    வழியில் ரயில்வே லெவல் கிராசிங். அப்போது எந்த ரயிலும் வரும் நேரமில்லை என்பதால் கேட் திறந்தே இருந்தது. சாலையில் நடந்து போவோர் அதிகம் இருந்தனர். சில வாகனங்களும் கேட்டைக் கடந்து போய்க்கொண்டிருந்தது. வீட்டுக்குப் போகும் அவசரம் ஒரு புறம் இருந்தாலும் சரவணனுக்கு வழியில் இருக்கும் அண்ணாச்சி மளிகைக் கடைக்குச் சென்று போன மாதம் வாங்கிய சாமான்களின் பில் பணத்தைக் கொடுத்து விட்டுப் போய்விட வேண்டும். சரவணனுடைய நாணயத்தில் முழு நம்பிக்கை வைத்திருப்பவர் அண்ணாச்சி. அவரிடம் தன் கணக்கில் அவ்வப்போது தேவைப்படும் சாமான்களை வாங்கிக் கொண்டு கணக்கில் எழுதிக் கொள்ளச் சொல்லிவிட்டுப் போவான், அந்த மாதம் முடிந்து சம்பளம் வாங்கிய அடுத்த கணம் கடைக்குப் பணம் வந்து சேர்ந்துவிடும். ஆகையால் சரவணன் எந்த பொருள் எப்போது கேட்டாலும் அண்ணாச்சி கடையில் கிடைத்துவிடும் அதனால் அவன் சொற்ப சம்பளத்தில் குடும்பம் நடத்துவதும் சிரமம் இல்லாமல் போய்க்கொண்டிருந்தது.

    சரவணனுக்கு வயது ஐம்பதை நெருங்கிக் கொண்டிருந்தது. மனைவி தவிர அவனுடைய இரண்டு குழந்தைகள் வயதான விதவைத்தாயார் ஆகியோர் அவன் வீட்டில் இருந்தனர். குழந்தைகளில் முதல் பையன் கல்லூரியிலும், அடுத்த பெண் பள்ளிக் கூடத்திலும் படித்து வந்தனர். இவர்கள் படிப்புக்கும் சரவணன் செலவு செய்ய வேண்டியிருந்ததால் குடும்பம் சிரமமாகத்தான் நடந்து கொண்டிருந்தது.

    அலுவலக வேலைக்கிடையே அவன் காலை மாலை வேளைகளில் பூஜைகளும் செய்து வந்தான். அது தவிர கைரேகை, நியுமராலஜி எனும் எண்கணிதம் ஆகியவற்றிலும் தேர்ந்தவனாக இருந்தான். இவனிடம் ஆரூடம் பார்க்கவும், கைரேகை சாஸ்திரம் பார்க்கவும், நாள் குறித்துக் கொடுக்கவும் அடிக்கடி பலர் வந்து விடுவார்கள். அவன் குறித்துக் கொடுத்த நாள் மிகவும் அதிர்ஷ்டத்தைக் கொண்டு வந்து கொடுக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு இருந்தது. அவன் தோற்றமே அவனை ஒரு நல்ல ஆத்திகனாகவும், தவறிழைக்காத நல்ல மனிதன் என்பதையும் காட்டியது.

    வரும் மாதத்தை எப்படிக் கழிப்பது எந்தெந்த செலவுகளைச் சரிக்கட்டுவது என்ற கவலையில் வீட்டை நோக்கி நடந்த போது ரயில்வே கேட்டில் தண்டவாளத்தைக் கடக்கும் போது எதிரில் வந்த யாரோ ஒருவன் அவன் மீது இடித்துவிட்டுச் சென்றான். இடது தோளில் சிறிது வலித்தது. தடவி விட்டுக் கொண்டு, இத்தனை வெளிச்சத்திலேயே இப்படி இடிக்கிறானே, கும்மிருட்டாக இருந்தால் நம்மைக் கீழே தள்ளிவிட்டே போய்விடுவான் போல் இருக்கிறதே என்று எண்ணியபடியே மேலே போய்க்கொண்டிருந்தான்.

    அண்ணாச்சியின் கடை வந்துவிட்டது. கடையில் விளக்கு ஏற்றியாகிவிட்டது. கடையிலும் அதிகக் கூட்டம் இல்லை. அண்ணாச்சியின் முன்பு வந்து நின்றுகொண்டு இந்த மாதம் என்ன ஆயிருக்கிறது பார்த்துச் சொல்லுங்கள், சம்பளம் வந்து விட்டது, கொடுத்துவிட்டுப் போகிறேன் என்றான் சரவணன்.

    அண்ணாச்சி கணக்கு புத்தகத்தை எடுத்துப் பார்த்துவிட்டு நூற்று முப்பது என்றார். சரி என்று சொல்லிவிட்டு பைக்குள் கைவிட்ட சரவணன் அதிர்ச்சியில் துள்ளினான். என்ன ஆயிற்று என்றார் கடைக்காரர். என்ன சொல்வதென்று புரியாமல் சரவணன் திணறினான். பையில் இருந்த பணக் கவர் .. என்று இழுத்ததைத் தொடர்ந்து கடைக்காரர், “என்ன சாமி, கவர் காணலியா, எங்கே வச்சீங்க நல்லா கவனப்படுத்தி பாருங்க” என்றார்.

    “இல்லை அண்ணாச்சி, பணக் கவரை பையில்தான் வைத்துக் கொண்டேன். வழியில் பூக்காரியிடம் பூ வாங்கும் போதுகூட பையில் இருந்ததே, இப்போது காணோமே” என்றான்.

    “ஓகோ, வழியிலே ரயில்வே கேட் கிட்டே கூட்டமா இருந்திச்சா, அதில யாரும் உங்க மேல வந்து மோதினாங்களா?” என்றார் அண்ணாச்சி.

    “ஆமாம், ஒரு ஆள் வந்து இடித்துவிட்டு நிற்காமல் போய்விட்டான்” என்றான் சரவணன்.

    “அதுதான், அங்கே இதே வேலைதான். சாயங்காலம் ஆயிடுச்சின்னா கூட்டமா வந்து நின்னுகிடுவானுங்க. போற வர ஆளுங்களை நோட்டம் விட்டு யார் மடியில என்ன இருக்கும்னு தெரிஞ்சுகிட்டு சாமர்த்தியமா அடிச்சிட்டுப் போயிடுவானுங்க. அது சரி, போனது இனி திரும்ப வரவா போவுது. இந்நேரம் பணத்தை அடிச்சவன் எங்கேயாவது சாரயக் கடைக்குப் போயிருப்பான். போங்க சாமி, எனக்கு அடுத்த மாசம் சேர்த்து கொடுத்தா போதும், நான் உங்களை நெருக்க மாட்டேன்” என்றார் அண்ணாச்சி.

    “நல்லதுங்க, எல்லாம் என் தலைவிதி, இந்த மாதம் எப்படி போகுமோ, அந்த பகவானுக்குத்தான் வெளிச்சம்” என்று முணுமுணுத்துக் கொண்டே சரவணன் வீட்டுக்கு நடந்தான்.

    வீடு போய்ச் சேர்ந்ததும், ஆவலோடு எதிர்பார்த்திருந்த மனைவி இவனுக்கு அன்று அதிகப்படி உபசாரம் செய்தாள். “சூடா காப்பி கொண்டு வரவா” என்றும் கேட்டாள். “ஏன் இன்னிக்கு முகம் வாடியிருக்கு, வேலை அதிகமா?” என்று விசாரித்துவிட்டு அவன் சம்பள கவரை எடுத்துத் தருவான் என்று எதிர்பார்ப்போடு நின்று கொண்டிருந்தாள்.

    சரவணன் பதில் சொல்ல முடியாமல் மென்று விழுங்கினான். “அம்மா எங்கே?” என்றான்.

    “அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க, இன்னும் வரலை” என்றாள் அவன் மனைவி.

    “சரி, சரி, அம்மாவுக்குத் தெரியவேண்டாம், தெரிஞ்சா பெரிசா ரகளை செய்துடுவா. இந்த மாச சம்பள கவர் வீட்டுக்கு வரும்போது யாரோ பிக் பாக்கெட் அடிச்சுட்டான், போயிடுத்து” என்றான் சரவணன்.

    “அடக் கடவுளே. என்ன கொடுமை இது. இந்த மாதம் என்ன பண்றது. நாளைக்கு பொழுது விடிஞ்சா அத்தனை பேரும் பாக்கிக்கு வந்து நிற்பாங்களே, எப்படிப் போச்சு, எங்கே போச்சு?” என்று பதறினாள்.

    “கொஞ்சம் பேசாம இரு, என்னைக் கொஞ்சம் அமைதியா இருக்கவிடு, அப்புறமா பேசிக்கலாம். அம்மா வந்தா மூச்சு விடாதே, அவளுக்கு எதுவும் தெரியவேண்டாம். நாளைக்கு என் நண்பன் முத்துகிருஷ்ணன் கிட்ட போய் கொஞ்சம் பணம் கடன் வாங்கிட்டு வந்துடறேன். கவலைப் படாதே போ, போய் உன் வேலையைப் பாரு” என்றான் சரவணன்.

    கவலை தோய்ந்த முகத்துடன் அவன் மனைவியும் சமயலறை நோக்கிப் போனாள். அப்போது வாயிலில் சைக்கிள் மணி அடிக்கும் ஓசை கேட்டது. சரவணன் போய் யார் என்று பார்த்தான். அங்கு அவனுக்கு ஏற்கனவே கடைத்தெருவில் அறிமுகமான சண்முகம் என்பவன் சைக்கிளில் வந்து காலை ஊன்றிக் கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்தான்.

    “என்ன சண்முகம்? என்ன இந்த நேரத்துல” என்றான் சரவணன்.

    “ஒண்ணுமில்ல சாமி, உங்ககிட்ட ஒரு வேலையா வந்தேன். இப்போ கொஞ்சம் பேசமுடியும்னா வரேன்” என்றான்.

    “வா, வா எனக்கு ஒண்ணும் அவசர வேலை எதுவும் இல்லை” என்றான் சரவணன்.

    இந்த சண்முகம் ஒரு மாதிரியான பேர்வழி. கடைத்தெருவில் இவனை ஒரு போக்கிரி என்பார்கள். இவனைக் கண்டு பலரும் அஞ்சிக் கொண்டிருப்பார்கள். ஆனால் எந்த விவரமும் சரவணனுக்குத் தெரியவில்லை. இவனுக்கு ஒரு தையல் கடை இருந்தது. அதில் ஐந்தாறு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். ஊரில் பலரும் அந்தக் கடையில்தான் பேண்ட் சட்டை தைத்துக் கொள்வார்கள். கொஞ்சம் நாகரிகமாக இருக்க இவன் கடையில் தைத்துக் கொள்வது என்பது பல இளைஞர்களும் விரும்பிய ஒன்று. இவனை ஒரு டைலர் என்ற முறையில் சரவணன் அறிந்து வைத்திருந்தான்.

    ஒரு சில முறை நாள் குறித்துக் கொள்ளவும், பெயர் வைக்கவும் இவனிடம் வந்து நியுமராலஜிப்படி கேட்டுத் தெரிந்து கொண்டு சென்றிருக்கிறான். சரவணன் முன்பு அவன் உட்கார்வதில்லை, பவ்யமாக நின்று கொண்டுதான் பேசுவான். சாமி சாமி என்று இவனை மரியாதையோடு அழைப்பான். சரவணனுடைய திருநீறணிந்த நெற்றியும் வம்பு தும்புக்குப் போகாத குணமும் அந்த சண்முகத்தை இவனிடம் அப்படி பணிவாக இருக்கும்படி செய்திருக்கிறது போலும்.

    “சாமி முகம் ஏதோ வாடின மாதிரி இருக்கே. என் வேலைய வேணும்னா அப்புறமா பார்த்துக்கலாம். உங்க பிரச்சினை என்னன்னு சொன்னீங்கன்னா என்னால முடிஞ்சத செய்யறேன், என் வேலைய அப்புறமா நாளைக்குக்கூட பார்த்துக்கலாம்” என்றான் சண்முகம்.

    “ஒண்ணுமில்லை சண்முகம், ஆபீஸ்ல இன்னிக்கு சம்பளம். அந்த சம்பளப் பணத்தை வாங்கி சட்டைப் பாக்கெட்ல வச்சுகிட்டு வந்திகிட்டிருக்கும்போது எங்கோ காணாம போயிடுச்சி. எங்கேன்னு தெரியல” என்றான் சரவணன்.

    “அட! அப்படியா? ரயில்வே கேட் வழியா வந்தீங்களா? என்றான் சண்முகம்.

    “ஆமாம்பா, அந்த வழிலதான் வந்தேன்”

    “அப்படின்னா கொஞ்சம் இருங்க, இதோ வரேன்” என்று சொல்லிவிட்டு சண்முகம் அவசரமாகத் தன் சைக்கிளை மிதித்துக் கொண்டு போய்விட்டான்.

    என்ன இது? இவன் போய் என்ன செய்யப் போகிறான், வைத்ததை எடுப்பது போல போகிறானே, என் பணத்தை ஏதாவது மீட்டுக் கொண்டு கொடுப்பானோ? அட, அப்படி செய்துவிட்டால் என் இந்த மாதக் கவலை போயிடுமே, கடவுளே அப்படி ஏதாவது நடக்கக் கூடாதா என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டான் சரவணன்.

    அரை மணி கழித்து சண்முகம் இன்னொரு இளம் வயது பையனையும் கூட்டிக் கொண்டு வந்து சேர்ந்தான். சரவணன் வாசலுக்கு வந்து நின்றதும், சண்முகம் அந்தப் பையனைக் கழுத்தில் கையை வைத்துத் தள்ளி, “போடா, போயி ஐயா காலில் விழுந்து மன்னிப்புக் கேளு, அதையும் அவர்கிட்ட கொடு” என்றான்.

    அந்தப் பையனும் சரவணன் அருகில் வந்து காலைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டு சரவணனுடைய காணாமல் போன சம்பளக் கவரை அவன் கையில் கொடுத்துவிட்டு, “மன்னிச்சுடுங்க சாமி, உங்களைப் பற்றி தெரியாம உங்க பாக்கெட்ல கைய வச்சுட்டேன். இனிமே உங்ககிட்ட இப்படி நடந்துக்க மாட்டேன் என்றான்.”

    பையன் பார்க்க லட்சணமாக, நாகரிகமாக இருந்தான், இருந்தாலும் இப்படியொரு காரியத்தை இவன் எப்படி செய்தான், யார் இவன், இவனுக்கும் இந்த சண்முகத்துக்கும் என்ன சம்பந்தம், என் பணத்தை இவந்தான் எடுத்திருப்பான் என்று எப்படி இவனுக்குத் தெரிந்து அவனை இங்கு இழுத்து வந்திருக்கிறான் என்று மனம் குழம்பிக் கிடக்க சண்முகத்தை நோக்கினான்.

    அப்போது சண்முகம் பேசினான். “ஐயா ஒண்ணும் நெனச்சுக்காதீங்க. இவன் நம்ம ஆளுதான். இவனைப் போல பல பசங்க நம்மகிட்ட வேலை பண்றானுங்க. நீங்க ரயில்வே கேட் வழியா வந்தபோது பணத்தைக் காணோம்னு சொன்னதுமே அந்த ஏரியாவுல நம்ம பசங்கதானே இருக்காங்கன்னுதான் ஓடிப்போய் விசாரிச்சேன். இந்தப் பயதான் எடுத்திருக்கான். எலே, யார் மடிலடா கை வச்சே, அவரு சாபம் கொடுத்தா நீ நாசமா போயிடுவேடா, ஓடிப்போய் பணத்தை அவர்கிட்டே கொடுன்னு சொல்லி அழைச்சிட்டு வந்துட்டேன்” என்றான் சண்முகம்.

    இதென்ன கூத்து. இவனோ டைலர். அந்த பையனோ பிக்பாகெட். அவனுக்கும் இவனுக்கும் என்ன சம்பந்தம்?

    சரவணன் விழிப்பதைப் பார்த்துவிட்டு சண்முகமே பேசினான். “ஐயா, உங்க குழப்பம் புரியுது. நான் செய்யற வேலை டைலர் வேலைதான். என் உள்வேலையை மறைக்க டைலர் ஷாப் எல்லாம் வச்சு அஞ்சாறு பேரை வேலைக்கு வச்சு நல்லபடியா கடையை நடத்தறேன். ஆனா எனக்கு பின்னால ஒரு கதை இருக்கு சாமி. என் தொழிலே இந்தப் பய செய்யற தொழில்தான். அதுலேர்ந்துதான் முன்னேறி இப்போ கொஞ்சம் கெளரவமா இருக்கத் தொடங்கிருக்கேன். நான் நேரடியா இதுல ஈடுபடலைன்னாலும், இவனைப் போல ஒரு பத்து பதினஞ்சு பேரைத் தயார் பண்ணி அவங்களுக்கு ஏரியாவ பிரிச்சுக் கொடுத்து இப்படி கொண்டு வரச் சொல்லிருக்கேன். அதுல மாசம் இத்தனைன்னு ஒவ்வொருவருக்கும் கொடுத்துட்டு, மிச்சத்தை நான் வச்சுக்குவேன்.”

    சண்முகம் சொல்லச் சொல்ல சரவணனுக்குத் தலை சுற்றியது. ஒருவனுக்கு எத்தனை முகங்கள். இவன் நல்லவனா, கெட்டவனா? ஒரு பக்கம் நல்லவனாகவும், சிலருக்குக் கெட்டவனாகவும் இருக்கும் இவனது குணம்தான் என்ன?

    சண்முகம் மேலும் பேசினான். “ஐயா, ஒண்ணுமே இல்லாத பிளாட்பாரமா இருந்தபோது பிழைக்க இப்படியெல்லாம் நடந்துக்க வேண்டியிருந்திச்சு. அப்புறம் கொஞ்சம் நிலைமை மாறினபிறகு, நானே நேரடியாகச் செய்யாம இவனைப் போல பசங்களை வச்சு செஞ்சிட்டிருந்தேன். இனிமே இதுவும் நான் நிறுத்திவுட்டு கெளரவமா நடந்துக்கப் போறேன். இவனுங்க இனிமே தனியா அவங்களே வேலையைப் பார்த்து முன்னேறிக்குவாங்க”

    “அது சரி சண்முகம். நீ டைலர் என்பது மட்டும்தான் எனக்குத் தெரியும். இப்படியொரு வாழ்க்கை உன் பின்னால் இருக்குங்கறது எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. அது போகட்டும் இன்னைக்கு என்னைத் தேடி வந்த காரணம் என்ன” என்றான் சரவணன்.

    “அது சாமி! நாந்தான் சொன்னேனில்ல. இனிமே திருந்தி நல்லபடியா கெளரவமா வாழப்போறேன்னு. அதுக்காக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பிக்க எல்லா வேைலைகளும் செஞ்சு முடிச்சுட்டேன். இடம் எல்லாம் தயார். முதல்ல சின்ன புள்ளைங்களுக்கு வகுப்புங்க நடத்த பர்மிஷன் எல்லாம் வாங்கியாச்சி, டீச்சர் எல்லாம் கூட போட்டாச்சு. இந்த பள்ளிக்கூடத்தை நல்லபடியா நடத்தி, கொஞ்சம் கொஞ்சமா இதைப் பெரிசா ஆக்கிடணும். சமூகத்துல என்னையும் எல்லாரும் மதிக்கும்படியா நடந்துக்கணும். அதுக்காகத்தான் அந்தப் பள்ளிக்கூடத்துக்கு நல்ல பேரு வைக்கணும், ஆரம்பிக்க நாள் பார்க்கணும்னுதான் உங்ககிட்ட வந்தேன். நீங்க பணத்தைப் பறிகொடுத்திட்டு வந்து நிக்கறதைப் பார்த்து, அதை மீட்டுக் கொண்டு வந்து கொடுக்கணும்னு இவனைப் பிடிச்சு கொண்டுவந்தேன்.” என்றான் சண்முகம்.

    அடடா, ஒரே ஆளுக்கு எத்தனை முகங்கள் என்று திகப்போடு சண்முகத்துக்கு பள்ளிக்கூடப் பெயரும், ஆரம்பத்துக்கு நாளும் குறித்துக் கொடுத்தான் சரவணன்.

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 8

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    தில்லும் திவானாவும் நெற்குன்றத்திலிருந்து புறப்பட்டு சைதாப்பேட்டையிலிருந்த தங்கள் மகள் வீட்டுக்குச் சென்றார்கள் அல்லவா? அங்கு மகள் வீட்டில் மாடி போர்ஷனில் இவர்கள் இருவரும் தனிக் குடித்தனம் செய்து கொண்டிருந்தார்கள். அந்த வீடு மகளுக்குச் சொந்தமானது. மாடி போர்ஷன் கட்டுவதற்கு தில் பணம் கொடுத்திருந்தார் போலிருக்கிறது. ஆகவே அவர்களே அங்கு குடிபோய்விட்டார்கள். மாடியில் பெற்றோர்களும், கீழ் வீட்டில் மகள் குடும்பமும் இருந்தன. மகளுக்கு மாமனார் மாமியார் ஆகியோரும் இருந்ததால் இவர்கள் தனியாக இருக்க வேண்டியதாக போயிற்று. எனினும் அனேகமாக இரண்டு குடும்பத்துக்கும் மகள் வீட்டில்தான் சாப்பாடு நடக்கும்.

    தில் திவானா இருவரும் மகனையும் மருமகளையும் பார்ப்பதற்காக நெற்குன்றம் வருவதில்லை. இந்த நிலையில் மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்காக ஒரு பயிற்சி வகுப்பில் சேர்ந்து ஓராண்டு காலம் படிக்க வேண்டியிருந்தது. அந்த ஒரு வருஷமும் சாமிநாதனின் மகள் நல்ல காலமாக வேலப்பன்சாவடியில் ஒரு கல்லூரியில் வேலை செய்து வந்ததால் குடும்பத்தை ஓரளவு நன்றாக நடத்த முடிந்தது. மேலும் அவளுக்கு நிறைய டியூஷன் படிக்க மாணவ மாணவியர் வந்தனர். அது ஏதோ ஒரு குருகுலம் போல சதாகாலமும் மாணவர்கள் கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கும். அதனால் அவசரமாக கடைக்குப் போகவேண்டுமென்றாலோ, அல்லது யாராவது விருந்தினர் வருவது, பேருந்துக்குக் கொண்டு விடுவது போன்றவற்றுக்கு இவர்கள் உதவிகரமாக இருந்தனர்.

    பயிற்சி முடிந்து தில்லின் மகன் அமெரிக்காவுக்குச் செல்லத் தயாரானார். மனைவி வேலையில் இருந்ததால் அவளுக்குத் துணையாக சைதாப்பேட்டையிலிருந்த பெற்றோர்களை வந்து பார்த்துக் கொள்ள முடியுமா என்று கேட்டார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். சைதாப்பேட்டைதான் எங்களுக்குச் சரியாக இருக்கும். நெற்குன்றத்துக்கு வருவது என்றால் வெளியூர் பயணம் போல இருக்கிறது என்று மறுத்துவிட்டனர். சரி இவர்களை எதிர்பார்த்தால் உதவ மாட்டார்கள், நான் மட்டும் முதலில் போய் அங்கு வீடு பார்த்துக் கொண்டு உன்னையும் வரவழைத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு தில்லின் மகன் புறப்பட்டு விட்டார்.

    சாமிநாதனும் அவன் மனைவி, மகன் ஆகியோர் அடிக்கடி சென்று மகளைப் பார்த்துக் கொண்டனர். அமெரிக்காவில் நியு ஜெர்சி மாகாணத்தில் வேலையில் அமர்ந்த மகன் ஆறு மாத காலத்துக்குள் மனைவியையும் அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று விட்டார். அவர்கள் அமெரிக்கா போனதும் நெற்குன்றம் வீடு காலியாக இருக்கிறது, நீங்கள் இங்கு வந்து தங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டதற்கும் தில் திவானா மறுத்து விட்டனர். சில காலம் வீட்டை வாடகைக்கு விட்டு வைத்திருந்தனர். ஆனால் வீட்டை அவர்கள் சரியாக வைத்துக் கொள்ளவில்லை. ஆகையால் வீட்டை விலைபேசி விற்றுவிட்டனர். எதிர் வீட்டில் இருந்த மகாலக்ஷ்மியின் உறவினர் அந்த வீட்டை வாங்கிக் கொண்டனர்.

    அமெரிக்கா சென்ற சில காலத்துக்குள் அவர்கள் சாமிநாதனையும் அவன் மனைவியையும் நியு ஜெர்சிக்கு வரும்படி கேட்டுக் கொண்டனர். இவனும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு அமெரிக்காவுக்கு மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்றான். இரண்டு மாதம் அங்கு தங்கியிருந்த போது இவர்கள் இருவரையும் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று காட்டினார்கள். வட அமெரிக்காவில் கனடா எல்லையில் இருந்த நயாகரா நீர்வீழ்ச்சிக்குச் சென்றது இவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. தன் மகன் அவனுடைய மாமனார் மாமியாரை மட்டும் அமெரிக்காவுக்குக் கூட்டிச் சென்று பல இடங்களுக்கும் அழைத்துப் போனது தில்லுக்கும் திவானாவுக்கும் வயிற்றில் தீயை மூட்டிவிட்டது.

    தாங்களும் அமெரிக்காவுக்கு வரவேண்டும் தங்கள் இரண்டு பேருக்கும் டிக்கெட்டுகள் வாங்கி அனுப்பச் சொல்லி கேட்டுவிட்டு, சென்னை அமெரிக்கன் கான்சலேட் அலுவலகத்துக்குப் போய் தங்களுக்கு விசாவுக்கும் ஏற்பாடு செய்து கொண்டார்கள். விசாவுக்காக அவர்கள் மகனுடைய கடிதம், வங்கி பாஸ் புத்தகத்தின் நகல் ஆகியவற்றைக் கொண்டு போய் கொடுத்து அலைந்து திரிந்து விசாவை வாங்கிவிட்டார்கள். ஒரு நல்ல நாளில் தில்லும் திவானாவும் முதன் முறையாக வான ஊர்தியில் அமெரிக்காவுக்குப் பயணமானார்கள்.

    அமெரிக்கா சென்றடைந்த இருவருக்கும் அவ்வூரின் குளிர் பொறுக்கவில்லை. மேலும் தில் தனக்கு சந்தி, ஜபம் இவையெல்லாம் செய்வதற்கு இங்கு போதிய வசதி இல்லை. இங்கெல்லாம் மடி தீட்டு ஒருவரும் பார்ப்பதில்லை. இப்படி பல குறைகளைச் சொல்லி ஒரு மாதத்தில் தான் ஊர் திரும்புவதாகச் சொல்லி இருவரும் இந்தியா திரும்பி விட்டனர். இவர்களுக்குத் தெரியும் அங்கு இவர்களுக்குச் சரிவராது என்று, என்றாலும் கூட தன் பிள்ளை மாமனாரை வரவழைத்து விருந்தினராக உபசரித்தது இவர்கள் இருவருக்கும் பொறுக்க வில்லை. வீம்புக்குச் சென்று திரும்பி விட்டனர். பாவம், மகனுக்கு அனாவசியமான செலவு. ஆனாலும் தில் சென்னைக்கு விரைவில் திரும்புவதற்கு வேறொரு காரணமும் இருந்திருக்கிறது. அது மற்றவர்களுக்கு அப்போது புரியவில்லை.

    தில் சென்னையில் ஒரு பெரிய கம்பெனியில் வேலையில் இருந்த போது தனது தூரத்து உறவுப் பெண்மணி ஒருவருக்கு அதே கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்திருந்தார். அப்படி அந்தப் பெண் தன் கூட வேலை செய்து வந்த நாளில் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து ஒரு நல்ல நாளில் திருநீர்மலைக்குச் சென்று அவளுக்கும் தில்லுக்கும் பொதுவான சில உறவினர்களை அழைத்துச்சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டு விட்டனர். இது மிகவும் ரகசியமாக நடந்ததால் அவரது முதல் மனைவியான திவானாவுக்கு இந்த விவரங்கள் தெரிந்திருக்க வில்லை. பொதுவான உறவினர்களும் தங்களுக்கு எதுவும் தெரியாதது போல கடப்பரையை விழுங்கியவர்களைப் போல வாயைத் திறக்காமல் இருந்து விட்டனர். புது திருமணமான பெண்ணுக்குப் போரூரில் தனியாக இடம் பார்த்து குடிவைத்து விட்டார் தில். வாரத்தில் சில நாட்கள் அங்கும் சில நாட்கள் திவானாவுடனும் குடித்தனம் செய்யத் தொடங்கியிருந்தார்.

    இரண்டு பெண்களும், ஒரு மகனும் இருந்த நிலையில் தில் இப்படியொரு செயலைச் செய்திருந்தது பிள்ளைகளுக்கு பலகாலம் கழித்துத்தான் தெரிய வந்தது. இதன் காரணமாக தில்லோடு அவரது மகள், மகன் ஆகியோர் கடுமையாக சண்டையிட்டாலும், திவானா மட்டும் அதீதமான பதிபக்தி காரணமாக அதை அவ்வளவு தீவிரமாக எதிர்க்கவில்லை. மேலும் இதனால் திவானா தன் பதி மீது வைத்திருந்த அன்பு, இல்லை இல்லை அப்படிச் சொல்லக்கூடாது, பக்தி எல்லை கடந்திருந்தது. எனவே அவர் செய்யும் தவறுகளைக் கூட தன் மக்களிடம் ஏதாவது சப்பைக்கட்டுக் கட்டி சமாதானம் செய்துவிடுவதோடு, தானும் சமாதானமாகிவிட்டாள். இப்படி இரு பெண்டாட்டிக்காரராக தில் இருப்பது மெல்ல மெல்ல மற்ற உறவினர்களுக்கும் பரவியிருந்தாலும், அவர்கள் இரண்டு கட்சியாகப் பிரிந்து தில் சார்பில் பரிவு காட்டுபவர்களாகச் சிலரும், அதை எதிர்க்க திராணியின்றி சிலரும் இருந்தனர். ஆனாலும் சாமிநாதனின் மாப்பிள்ளையும், அவரது இரு சகோதரிகளும் இதில் மிகவும் உறுதியாக இருந்து தில்லின் இரண்டாவது திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்கள் சம்மதம் இருக்கிறதோ இல்லையோ, பல ஆண்டுகள் தில் தனது இரண்டாவது மனைவியோடு அன்போடு வாழ்க்கை நடத்தி அங்கும் ஒரு மகனை ஈன்றெடுத்து அவர்களுக்குச் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கிக் கொடுத்து திறம்பட இரண்டு வீட்டையும் பாலன்ஸ்டாக நடத்தி வந்ததைப் பாராட்டியே ஆக வேண்டும்.

    இப்போது தில் ஏன் அப்படி அடித்துப் பிடித்துக் கொண்டு அமெரிக்காவிலிருந்து திரும்பினார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறதல்லவா. இந்த நிலையில் தில் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அவருக்கு சஷ்டியப்த பூர்த்தி நடைபெறுவதாக இருந்தது. முதல் மனைவியின் மகனுடன் உறவு கெட்டிருந்த நிலையில் தன் இரண்டாம் மனைவியின் மகனை விட்டு ஒரு பத்திரிகை அடித்து தனக்கு மணிவிழா கொண்டாட ஏற்பாடு செய்தார். இதனை அறிந்து அப்போது நெற்குன்றம் வீட்டிலிருந்த சாமினாதனின் மருமகன் ஒரு வழக்கறிஞரை விட்டு நோட்டீஸ் விட்டு இரண்டாம் திருமணம் செல்லுபடியாகாது. அந்த மகனுக்கு எந்த சட்டப்படியான உரிமையும் கிடையாது. அவன் தில்லின் சஷ்டியப்த பூர்த்தி விழாவைக் கொண்டாட அனுமதிக்கக்கூடாது என்று நோட்டீஸ் விட்டுவிட்டார். அவர்கள் தங்களுடைய வக்கீலை கலந்து ஆலோசித்துவிட்டு அந்த விழாவை நிறுத்தி வைத்து விட்டனர்.

    இப்போது அமெரிக்காவில் இருக்கும் தில்லின் மகனும் மருமகளும் பல ஆண்டுகளுக்கு முன்பு தில் தனது சஷ்டியப்த பூர்த்தியைக் கொண்டாட முடியாமல் போய்விட்டது; அதற்குத் தனது வக்கீல் நோட்டீஸ்தான் காரணம் என்பதால் இப்போது தங்கள் செலவில் அவருக்கும் திவானாவுக்கும் தில்லுக்கும் சதாபிஷேகம் எனும் எண்பதாவது ஆண்டு பூர்த்தியைக் கொண்டாடலாம் என்று முடிவு செய்தார்கள். அது குறித்து தில்லுக்கு செய்தி கொடுத்து அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளை சென்னையில் தானே செய்துவிடுவதாகவும், அதற்கான பணத்தைத் தனக்கு அனுப்பி விடுமாறும் தில் கேட்டுக் கொண்டார். தில்லின் மனைவி அதற்குள் விழாவுக்கான பட்ஜெட்டையும் போட்டுவிட்டாள். உறவினர்கள் எல்லோருக்கும் துணிமணிகள், மண்டபம், சாப்பாடு போன்ற செலவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை முன்னதாக அனுப்பும்படி மகனுக்கு திவானா கேட்டாள். மகன் அவர்கள் சொல்லும் திட்டத்தைப் பார்த்து பயந்து போனார்.

    மாப்பிள்ளை தன் மாமனாரான என் நண்பன் சாமிநாதனிடம் கேட்டார் என்ன செய்யலாம் என்று. சாமிநாதன் சொன்னார் அவர்கள் பட்ஜெட்டில் கால்பகுதிக்குள் இந்த விழாவை மிகவும் சிறப்பாகச் செய்ய முடியும் என்றும், அதை சென்னையில் இல்லாமல் ​வேறொரு சிறப்பு வாய்ந்த நகருக்கு வெளியேயுள்ள ஆலயத்தில் தனது நண்பர்கள் மூலம் செய்து விட முடியும் என்று சொல்லவே, தில்லின் மகன் அப்படியே ஏற்பாடுகளைச் செய்யலானார். தில்லுக்கு போன் செய்து நான் எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்து விடுகிறேன். நான் சொல்லுமிடத்துக்கு நீங்கள் வந்து விழாவை ஏற்றுக் கொண்டு போனால் போதும் என்று சொல்லிவிட்டார். இதனால் தில்லுக்கும் திவானாவுக்கும் அதிர்ச்சி, மகன் மீது அளவிடமுடியாத கோபம். இதற்கெல்லாம் சாமிநாதனின் மகள்தான் காரணம் என்று அவள் மீது அவர்களுக்கு தீராத ஆத்திரம் ஏற்பட்டது.

    தாங்கள் கேட்டபடி தில்லின் மகன் பணம் கொடுக்காததல் திவானா அடிக்கடி தன் மருமகளுக்குப் போன் செய்து இதுபோன்ற விசேஷங்கள் என்றால் எல்லா உறவுக்காரர்களும் வருவார்கள், அத்தனை பேருக்கும் ஆண்களுக்கு வேஷ்டி துண்டும், பெண்களுக்குப் புடவையும் வாங்கித் தருவதோடு தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் புதிய உடைகள் வாங்க வேண்டும். அதற்காக தேவையான அளவு பணம் கொடுத்தால்தான் சதாபிஷேகம் சிறப்பாக அமையும் என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்தினாள். மருமகள் தன் மாமியாரிடம் இதையெல்லாம் உங்கள் மகனிடம் பேசிக்கொள்ளுங்கள் அவர்தான் இவற்றைக் கவனித்துக் கொள்ளவும் பணம் செலவு செய்யவும் செய்கிறார், தனக்கு இதில் ஒரு பங்கும் இல்லை. அவர் சொல்வதைச் செய்வதுதான் தன் கடமை என்று அவர்களுக்கும் தனது பதிபக்தியைத் தெளிவாக எடுத்துக் கூறினாள். இது என்ன, இவள் தன்னைக் காட்டிலும் பதிபக்தியோடு இருக்கிறாளே, நிஜமாகவேதானா அல்லது தனக்கு ஏட்டிக்குப் போட்டியாக இப்படிப் பேசுகிறாளா என்று திவானாவுக்குக் குழப்பம்.

    இறுதியாக தில்லும் திவானாவும் தலைகீழாக நின்று தண்ணீர் குடித்த போதும் அவர்கள் விரும்பியபடி எதுவும் நடக்கவில்லை. நண்பன் சாமிநாதன் என்னுடைய உதவியை நாடினான். எனக்குப் பழக்கமான என்னுடைய ஊரையடுத்த மிகப் பிரபலமான ஓர் சிவத் தலத்தில் அவ்வூர் ஆலய விழா மண்டபத்தில் ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தேன். அங்கு எனக்கு நிறைய நண்பர்கள் இருந்ததால் எல்லா ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்தது. அவ்வூர் ஆலயத்தில் சதாபிஷேகம் செய்துகொள்ள ஏற்ற இடம் என்று அவ்வூர் தலபுராணம் கூறுவதையும் எடுத்துச் சொல்லி, அது குறித்த ஒரு சிறு புத்தகத்தையும் வெளியிட ஏற்பாடுகள் நடந்தன. இவை பற்றிய எந்த செய்தியையும் தில் போன் மூலமாகக் கூட சாமிநாதனிடம் கேட்கவில்லை; சாமிநாதனும் என்ன ஏற்பாடுகள் செய்கிறோம் என்று அவரோடு பேசவில்லை. பேச்சு வார்த்தை முழுவதும் சாமிநாதனுக்கும் மருமகனுக்கும் இடையேதான் நடந்தது. நீங்கள் யார் ஆலோசனைகளையும் கேட்க வேண்டாம். நீங்கள் விழாவைச் சிறப்பாக நடத்தக் கூடியவர், உங்கள் நண்பரும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்று எனக்குத் தெரியும். ஆகவே இந்த விழாவை நான் சிறப்பாக நடத்தி முடித்து விட்டால் என் கடமை முடிந்து விடும். அவர்கள் அதற்கு மேல் என்னிடம் எதையும் எதிர் பார்க்கமுடியாது. ஏனென்றால், பல லட்சம் பெறுமான அவர்களது மாம்பலம் வீட்டை விற்ற போது என்னிடம் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. விற்ற பணத்தில் ஒரு பைசா கூட என் கண்களில் காட்டவில்லை. அவர் மனமுவந்து கொண்டு வந்து கொடுத்த சிறு தொகைக்கான முதலீட்டுப் பத்திரத்தைத் தூக்கி எறிந்து விட்டேன், என் கடமை முடிந்தது என்றார் அவர்.

    சாமிநாதனின் மனச்சாந்திக்காகவும், அவன் மருமகனின் நோக்கம் நிறைவேற வேண்டியும் நான் இந்த விழா குறித்து சிறப்பு கவனம் செலுத்தி மிக அற்புதமாக ஏற்பாடுகளைச் செய்தேன். இதில் ஏதாவது குறை காண வேண்டுமென்று விடாப்பிடியாக தில்லும், திவானாவும், அவரது நெருங்கிய உறவினர்கள் சிலரும் காத்துக் கொண்டிருந்தனர். நகரத்தை விட்டு வெகு தூரத்தில் ஒரு கிராமக் கோயிலில் நடந்தால் அங்கு யார் வருவார்கள்? என்றார்கள். அப்படி வந்தாலும் அவர்கள் தங்குவதற்கு அங்கு வசதியான இடம் இருக்கிறதா. குளிக்கவும் மற்ற தேவைகளுக்கும் அங்கு வசதிகள் எப்படி? என்றெல்லாம் கேள்விக் கணைகள் பிறந்தன. எல்லாம் இருக்கும் வசதிக்குள் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். அங்கு ஒருநாள் தங்க இத்தனை கேள்விகளா, என்னவோ வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருக்கப்போகிறோம் என்கிற மாதிரி என்று அவர்களுக்குப் பதில் சொல்லியாயிற்று.

    இருந்தாலும் அவர்களுக்கு எந்த விவரங்களையும் தெரியாமலே அவர்கள் எல்லாம் தங்குவதற்கு ஒரு திருமண மண்டபம், அங்கேயே இரண்டு நாட்கள் டிபன், காபி, சாப்பாடு எல்லாவற்றுக்கும் சமையல்காரர்களை நியமித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமண மண்டபத்தில் நிறைய பேர் தங்க முடியுமா. எங்கள் கம்பெனியிலிருந்து பெரிய உத்தியோகஸ்தர்கள் எல்லாரும் காரில் வருவார்கள். அவர்களுக்கு எப்படி ஏற்பாடு என்றெல்லாம் கேள்வி பிறந்தது. அவர்கள் விழாவன்று காலையில் வந்துவிட்டு பகல் உணவுக்குப் பிறகு போய்விடுவார்கள். இங்கேயேவா தங்கப் போகிறார்கள். அப்படி அவர்கள் ஓரிரு நாட்கள் தங்குவதாயிருந்தால் அதற்கும் நாங்கள் ஏற்பாடு செய்து விடுவோம் என்று சாமிநாதன் கூறிவிட்டான்.

    விழாவுக்கு முதல் வாரம் சாமிநாதனின் மகள் அமெரிக்காவிலிருந்து வந்து சேர்ந்தாள். நேராக அவள் சாமிநாதன் வீட்டுக்கு வந்து விட்டாள். பின்னர் அங்கிருந்து சைதாப்பேட்டை போய் மாமனார் மாமியாரைப் பார்த்துவிட்டு திரும்ப வந்து விட்டாள். அவளிடம் செய்யப்பட்டிருக்கிற ஏற்பாடுகள் குறித்து சொல்லப்பட்டது. அவளுக்கும் அவள் கணவருக்குத் தெரிவித்த போது அவருக்கும் இதில் முழு திருப்தி ஏற்பட்டது. திங்கட்கிழமை சதாபிஷேகம். முதல்நாள் ஞாயிறன்று ருத்ர ஏகாதசி எனும் ஜபம் முதலானவை. இருந்தது. இவர்கள் வெள்ளிக்கிழமையே அவ்வூருக்கு வந்து விட்டார்கள். அவர்களை திருமண மண்டபத்தில் தங்க வைத்தோம். அங்கு சாப்பாடு முதலான ஏற்பாடுகள் மிக அருமையாக இருந்தது. குறை ஒன்றும் சொல்ல முடியவில்லை. ஆனால் திவானாவின் வழக்கம் போல சமையல் காரர்களிடம் சென்று தனக்கும் தில்லுக்கும் வெங்காயம், புடலங்காய் சேர்க்கக்கூடாது சாப்பட்டில் அவைகளை நீக்கிவிடுங்கள் என்று சொன்னாள். நான் சென்று, நீங்கள் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ள வேண்டாம். அவர்களுக்கு வேண்டுமானால் அவைகளை பரிமாற வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

    ஞாயிறன்று ருத்ர ஏகாதசி தொடங்கியது. தான் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதால் தன்னால் மணையில் கீழே அமர முடியாது, நாற்காலியில்தான் உட்காருவேன், கொண்டுவா நாற்காலிகளை என்றார் தில். உடனே எங்கள் நண்பர்கள் ஓடிப்போய் சில நாற்காலிகளை வாடகைக்கு வாங்கி வந்து கோயில் மண்டபத்தில் போட்டார்கள். மண்டபம் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு தூணிலும் குழல் விழக்குகள் எரிந்தன. கோயில் பதாகைகள் வாயிலிலும் மண்டபத்தின் நுழைவுப் பாதையிலும் கட்டப்பட்டிருந்தன. இதையெல்லாம் பார்க்கப் பார்க்க இது ஏது குறையொன்றும் சொல்லமுடியாது போல இருக்கிறதே என்று தில்லும் திவானாவும் கவலைப் பட்டனர்.

    மறுநாள் நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடந்தேறின. கஜ பூஜை, கோ பூஜை என்று யானைக்கும், பசுவுக்கும் பூஜைகள் மிகச் சிறப்பாக நடைபெற்றன. ஆலய மரியாதைகள் இவர்களுக்குக் கொடுக்கப்பட்டன. கோயில் நாதஸ்வர வித்வான்கள் வந்திருந்து நாதஸ்வர இசை எழுப்பினார்கள். புகைப்படங்களும், வீடியோ படங்களும் எடுக்கப்பட்டன. இவர்கள் உறவினர்கள் ஐம்பது பேர் இருக்குமென்றால், எங்கள் நண்பர்கள் வகையில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் இருந்தனர். எங்கள் நண்பர்கள் வீட்டில் குளிர்சாதன வசதி இருந்த விடங்களில் உறவினர்கள் சிலர் படுக்க வைக்கப்பட்டனர். கல்யாண மண்டபத்துக்கு அருகில் ஒரு சங்கத்தின் கட்டடம், அதையும் திறக்கச்சொல்லி அங்கும் சிலர் தங்க வைக்கப்பட்டனர். அப்படி அங்கெல்லாம் தங்கியவர்கள் என்னிடமும் சாமிநாதனிடமும் ஏகமாகப் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்தனர். இதையெல்லாம் பார்த்து தில் திவானா வாயடைத்துப் போய்விட்டனர்.

    அந்த மாவட்டத்திலேயே சிறந்த வேத பண்டிதர்கள் வந்து விழாவை நடத்தி வைத்தனர். மிகச் சிறந்த சமையல்காரர்கள் முதல் நாள் தொடங்கி விழாவின் மதியம் வரை சுவையான சாப்பாட்டை பரிமாறி அசர வைத்துவிட்டனர். இப்படி அவர்கள் எதிர்பார்ப்பையும் மீறி, இப்படியும் நடத்த முடியுமா என்று அதிசயிக்கத் தக்க வகையில் சதாபிஷேகத்தை சாமிநாதன் முடித்து வைத்தார். எல்லோரும் ஊருக்குத் திரும்பி விட்டனர். தில் திவானா இருவரும் மட்டும் விழாவில் தங்களுக்கு பரிசாக வந்த வேஷ்டிகள், புடவைகள் இவற்றைப் பிரித்து பெட்டிக்குள் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தனர். அவர்கள் கொண்டு வந்த பெட்டிகளில் இடம் போதாததால் சாமிநாதனிடம் கேட்டுப் பெட்டி, பை முதலானவற்றை வாங்கி அதிலும் நிரப்பிக் கொண்டனர். அவர்கள் தனி அறையில் இதையெல்லாம் பெட்டிக்குள் அடைத்துக் கொண்டிருக்கும் போது சாமிநாதன் எதேச்சையாக அந்த அறைக்குள் சென்று விட்டான்.

    அப்போதுதான் தில் மனம் குளிர்ந்து, சம்பந்தி, விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தி விட்டீர்கள். இவ்வளவு அருமையாக நகரத்தில் எங்களால் ஏற்பாடு செய்ய முடியாது. என் மைத்துனன் மகன் கூட சொன்னான், கஜ பூஜைக்கும், கோ பூஜைக்கும் சென்னையில் எங்கே போவது, இங்கு இதையெல்லாம் கண்குளிர பார்க்கும் வாய்ப்பும், கோயிலில் தரிசிக்கும் வாய்ப்பும் ஒருசேர கிடைத்ததற்கு பாக்கியம் செய்திருக்கிறோம் என்றான். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை என்று சொல்லிவிட்டு, திவானாவை நோக்கி, ஏய்! அந்த வேஷ்டி துண்டை எடு என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாமிநாதன் காதில் வாங்காதது போல வெளியே வந்து விட்டான். அங்கு திவானா என்ன ஜாடை காண்பித்தாளோ தெரியவில்லை தில்லும் அதன் பிறகு வேஷ்டி துண்டு சாமிநாதனுக்குக் கொடுப்பது பற்றி வாயையே திறக்கவில்லை. இவனுக்கும் கவலையில்லை. அவர்கள் கொடுக்கக்கூடாதே என்றுதான் வேண்டிக் கொண்டிருந்தான்.

    எல்லாம் முடிந்து அவரவர் வீடுகளுக்குச் சென்று விட்டனர். தில் தன் மகனிடம் கேட்டார். நீ எங்களை கவனிப்பதில்லை. மாதாமாதம் எங்களுக்குப் பணம் அனுப்ப வேண்டும் என்றார். திவானா மகனிடமும் மருமகளிடமும், தங்களுக்கு வயது ஆகிவிட்டதால் இனி எங்களால் தனியாக இருக்க முடியாது. ஆகையால் நீ மட்டும் அமெரிக்காவுக்குப் போ, உன் மனைவியை இங்கு விட்டுவிட்டுப் போ. எங்களைப் பார்த்துக் கொள்ள வேறு யார் இருக்கிறார்கள். இவள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூசாமல் கேட்டார்கள்.

    மகனுக்கு அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் வெடித்து வெளிவந்தது. ஆதிமுதல் அவர்கள் நடத்தைகளையெல்லாம் சுட்டிக் காட்டிப் பேசினார். மாம்பலம் வீட்டை பல லட்சம் ரூபாய்க்கு விற்ற பணம் என்ன ஆகியது. அது விற்பது குறித்து எனக்கு ஏதாவது தகவலாவது கொடுத்தீர்களா. உங்கள் பணமெல்லாம் என்ன ஆயிற்று. அதற்கெல்லாம் கணக்கு எங்கே. உங்கள் பணமெல்லாம், வீடு விற்ற பணமெல்லாம் செலவாகி யிருந்தால் எந்த வகையில் செலவு ஆனது எல்லாவற்றையும் எழுதிக் கொடுங்கள். உங்களுக்குத் தேவையென்றால் நான் மாதாமாதம் அனுப்புகிறேன். என் மனைவியை இங்கே உங்களுக்கு சேவை செய்ய விட்டுவிட்டுப் போ என்கிறீர்களே, அங்கு வெளிநாட்டில் நான் சாப்பாடுக்கு என்ன செய்வேன். இங்கு உங்களுக்கு அண்ணன் பிள்ளை, அண்ணன் பெண், அத்தான், அம்மாஞ்சி என்று ஊர் முழுவதும் உறவுக் காரர்கள். அங்கு எனக்கு தலைவலி என்றால்கூட கவனிக்க யார் இருக்கிறார்கள். இதுவரை அவளா உங்களைப் பார்த்துக் கொண்டாள். இனி அந்தப் பேச்சையே எடுக்காதீர்கள். அவளுக்கும்தான் உடல்நலம் இல்லை. அவள் தன்னைப் பார்த்துக் கொள்வாளா உங்களுக்கு சேவை செய்வாளா என்றார்.

    நீ செய்வது பாவமில்லையா என்றார் தில். ஆம் பாவம் தான். ஆனால் அந்த பாவம் தீருவதற்காக நான் பல தர்ம காரியங்களைச் செய்து கொண்டு வருகிறேன். நீங்கள் நான் செய்ய வேண்டிய உதவிகளுக்கு அருகதை உள்ளவர்களாக இருந்திருந்தால் உங்களுக்குச் செய்திருக்கலாம். நீங்கள் அந்த அருகதையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. உங்களுக்கு நான் உதவி செய்வது என்பது தேவையில்லாதது. அது பாவம் என்றால் அந்தப் பாவம் தீர நான் பல தான தர்மங்களைச் செய்து கொண்டுதான் இருக்கிறேன். அதுவே போதும் என்றார். தில்லுக்கும் திவானாவுக்கும் பேசுவதற்கு வாய் இல்லை. அதுவரை அவர் பக்கம் நின்று மகன் மருமகளை கரித்துக் கொட்டியவர்கள் மெதுவாக ஒதுங்கிக் கொண்டனர். ஒருவருக்கும் பேச வாய் இல்லை. ஒரு வழியாகத் தங்கள் கடமைகளைச் செவ்வனே செய்து விட்டு ஊருக்குப் புறப்பட மகனும் மருமகளும் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர்.

    அவர்கள் புறப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பிருந்து தில் வீட்டில் காணப்படவில்லை. திவானாவிடம் கேட்டதற்கு அவர் அங்கே போயிருப்பார் என்றாள். எங்கே என்று சொல்லவில்லை. மகனும் புரிந்து கொண்டு கேட்கவில்லை. இருவரும் விமான நிலையத்துக்குக் கிளம்பும் வரையில் தில் வீடு திரும்பவில்லை. ஒரு வழியாக இங்கு விழாவுக்காகச் செலவழித்த ஒரு வார காலத்தை ஈடுகட்டும் வகையில் போரூரில் தன் துணைவி வீட்டில் கழித்துவிட்டு வீடு திரும்பியதாக அமெரிக்கா திரும்பிய மகனுக்குத் தகவல் கிடைத்தது. அப்பாடா! இனி தில்லின் தொல்லையும் , திவானாவின் தொந்தரவும் இருக்காது என்று அமைதி அடைந்தனர்.

    முற்றும்

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 4

    தஞ்​சை ​வெ. ​கோபாலன்

    ரெட்டை மண்டை ‘பீஷ்மாச்சாரியார்’   கல்யாணம் முடிந்து மறுநாள் அதாவது செவ்வாய்க்கிழமை கட்டுச்சாத கூடை வைத்து ஊருக்குப் புறப்படும் வரை அதிலிருந்து எழுந்திருக்கவேயில்லை. தானே ஒரு ஆட்டோ கொண்டு வரச் செய்து அதில் ஏறிக்கொண்டு ரயில் நிலையம் போய்விட்டார். அவரைப் பற்றி பிறகு சொல்கிறேன். இப்போது திருமண நாளன்று நடந்தவற்றைப் பார்ப்போம்.

    மாப்பிள்ளை அழைப்புக்கு எல்லாம் தயாராக இருந்தது. மகாமகக் குளத்துக்கு மிக அருகில் இருந்த ஒரு விநாயகர் ஆலயத்திலிருந்து மாப்பிள்ளை அழைப்பு. மிக அழகான மாப்பிள்ளை அழைப்புக் கார் ஒன்றுக்கு சாமிநாதன் ஏற்பாடு செய்திருந்தான். அந்தக் காரில் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் கொடுத்து மின் பல்புகளாலும், மலர்ச்சரங்களாலும் அழகாக அலங்கரிக்கப்பட்ட ஆசனத்தில் மாப்பிள்ளையை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு வர ஏற்பாடாகி யிருந்தது. கடைசி நேரத்தில் மாப்பிள்ளை இதெல்லாம் அனாவசியம். நான் ஊர்வலம் எல்லாம் உட்கார்ந்து வரமாட்டேன். பிள்ளையார் கோயிலுக்குப் போய் புத்தாடை அணிந்து கொண்டு, அங்கு ஓர் அர்ச்சனை செய்துவிட்டு நடந்தே மண்டபத்துக்கு வந்து விடுகிறேன். இதெல்லாம் எதற்கு வீணான ஆடம்பரச் செலவு. இதையெல்லாம் நீங்கள் குறைத்திருக்கலாமல்லவா என்று பெருந்தன்மையாகக் கூறிவிட்டார். நாங்கள் இதைச் சற்றும் எதிர் பார்க்கவில்லை.

    எல்லோரும் விநாயகர் கோயிலுக்குக் கிளம்பினார்கள். பித்தளைத் தட்டுகளில் பழங்கள், மலர், புத்தாடைகள், மாலை வகையறாக்களை எடுத்துக் கொண்டு பெண்கள் கோயிலை நோக்கிப் போனார்கள். இரண்டு பக்கத்து உறவினர்களும் அவரவர்களுக்கு நெருக்கமானவர்களோடு பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் கோயிலுக்குப் போனார்கள். சாமிநாதனின் இளைய மகன் ஓடிவந்து அப்பாவிடம், அப்பா மாப்பிள்ளைக்கு சூட் கோட் கொடுக்கும்போது ஷூஸ் கொடுக்க வேண்டுமே, ஷூ பெட்டியைக் கொண்டு வரட்டுமா என்றான். அப்போது அருகிலிருந்த மாப்பிள்ளை அதெல்லாம் வேண்டாம், இதோ இருக்கற கோயிலுக்கு ஷூ போட வேண்டாம். அப்படியே உள்ளே இருக்கட்டும் என்றார், பையனும் போய்விட்டான்.

    விநாயகர் கோயிலில் அர்ச்சனை நடந்தது. மாப்பிள்ளையை உட்கார வைத்து புது சூட் கொடுத்தார்கள். அவரும் கோயிலின் பின்புறம் போய் உடைகளை மாற்றிக்கொண்டு மாப்பிள்ளை உடையில் வந்தார். அப்போது அவசர அவசரமாக ‘திவானா’ சாமிநாதனிடம் ஓடிவந்து, ஷூ எங்கே, சூட் போட்டுண்டு மாப்பிள்ளை ரெடியாயிட்டார். ஷூவைக் கொண்டு வந்து தர வேண்டாமா. இதையெல்லாம் கவனமாகச் செய்ய மாட்டீங்களா என்று பதறிக்கொண்டு பேசினாள். அருகிலிருந்த யாரோ சாமிநாதனின் மகனைப் பார்த்து, போப்பா, ஓடிப்போய் ஷூவைக் கொண்டு வந்து கொடு என்றார். அவனும் சரியென்று மண்டபத்துக்கு ஓடினான்.

    சாமிநாதன் என்னைப் பார்த்தான். நான் சொன்னேன் என்னப்பா இது. ஆளாளுக்கு ஒரு உத்தரவு போடறாங்க என்று சொல்லிவிட்டு அந்த அம்மாளிடம், அம்மா உங்க பிள்ளைதான் ஷூ வேண்டாம் என்று சொன்னார். நீங்கள் வந்து இப்போ பதறறீங்க. நாங்க யார் பேச்சை எடுத்துக்கறதுன்னு மட்டும் சொல்லுங்க. அப்பத்தான் இனி நடக்க வேண்டிய காரியங்களையும் யாரையாவது ஒருத்தரைக் கேட்டுச் செய்ய முடியும் என்றேன்.

    அதற்கு அந்த அம்மாள், அவன் அப்படியெல்லாம் சொல்லலை. டிரஸ் கொடுத்தா கூடவே ஷூவையும் கொடுக்கணுமா இல்லையா, அதை விட்டுட்டு ஏதேதோ பேசிண்டு நிக்கறேளே. போங்கோ, போயி ஷூவைக் கொண்டு வாங்கோ என்றாள். அதற்குள் சாமிநாதனின் மகன் ஷூவைக் கொண்டு வந்து அந்த அம்மாளிடம் கொடுத்தான். அதை அந்த அம்மாள் தன் பிள்ளையிடம் கொண்டு போய் கொடுத்துப் போட்டுக்கோ என்றாள். அதற்கு மாப்பிள்ளை நான் தான் ஷூ வேண்டாம்னு சொன்னேனே, கோயில்லே யாராவது ஷூவைப் போட்டுப்பாங்களா, இதோ இருக்கற மண்டபத்துக்கு ஷூவைப் போட்டுண்டா நடக்கணும், நான் சப்பல் போட்டுண்டே வரேன், போங்க, என்றார். அம்மாள் முகத்தில் ஏதோ வழிந்தது.

    மாப்பிள்ளை மண்டபத்துக்கு நடந்தே ஊர்வலமாக வந்தார். கார் உபயோகிக்கப்படவில்லை. அதற்கு எத்தனை ஆயிரமோ செலவு! போகட்டும். சாப்பாட்டுக்கு இன்னும் நேரம் இருந்தது. அந்த நேரம் எல்லோரும் மண்டபத்தில் மேடை மீது உட்கார்ந்து கொண்டார்கள். ‘தில்’ மற்றும் அவரது பல உறவினர்கள் உட்கார்ந்து கொண்டு சீர் சாமான்களையெல்லாம் கொண்டு வாங்கோ, எல்லோரும் பார்க்கட்டும் என்றனர். பீஷ்மர் மட்டும் படுத்த படுக்கையாக இருந்ததால், எல்லோரும் அங்கேயே போய்விடலாம் வாருங்கள் என்று எழுந்து பீஷ்மர் படுத்திருந்த பெஞ்சுக்கு அருகில் அமர்ந்து கொண்டார்கள்.

    சாமிநாதனும் அவன் மனைவியும் சீர் சாமான்கள், நகை முதலானவற்றைக் கொண்டு வந்து வைத்தார்கள். நகைகளை மிக கவனமாக ‘தில்’ பார்த்துவிட்டு அண்ணாவிடம் கொடுக்க, அவரும் அதனை கையில் தூக்கிப் போட்டு உத்தேசமாக எடை போட்டார். வெள்ளித்தட்டை எடுத்து உள்ளங்கையில் வைத்துத் தூக்கிப் போட்டு எடை பார்த்தார். இதனைக் கவனித்துக் கொண்டிருந்த எனக்கு ரத்தம் தலைக்கேறிவிட்டது. கடையில் எடை பார்ப்பது போல சீர் கொடுத்த சாமானை இவர் எடை போட்டது அவமானப்படுத்துவது போல என்று நான் நினைத்தேன். சபையில் அத்தனை பேர் இருக்கிறார்கள், அவர்களில் அனேகர் சம்பந்தி வீட்டார் என்பதெல்லாம் எனக்கு மறந்து போய்விட்டது.

    “ஓய்! என்னய்யா எடை போட்டுப் பார்க்கிறீர், தராசு கொண்டு வந்து தரச்சொல்லட்டுமா? அந்த தட்டு எடை 900 கிராம். அதான் அப்போதே சொன்னேனே. சரியா இருக்கா இல்லையான்னு டெஸ்ட் பண்றீரா?” என்றேன்.

    அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு நல்லவர், அடடா, அப்படியெல்லாம் இல்லை. சும்மா அவர் தட்டைத் தூக்கிப் பார்த்தார். எடையெல்லாம் போடலை. நீங்க கோபப்படாதீங்கோ என்றார். அப்போதும் எனக்குக் கோபம் அடங்கவில்லை. சரி எக்கேடு கெட்டுத் தொலைக்கட்டும் என்று நான் அவ்விடம் விட்டு அகன்றேன்.

    அப்போது ஃபுட் கார்ப்பொரேஷன் மணி வந்து, என்ன சார், நீங்க பாட்டுக்கு சண்டைக்குப் போயிட்டேளே, சம்பந்திக்காரா கோபிச்சுண்டா என்ன செய்யறது அப்படியென்றார்.

    என்ன சார்  இது, நாகரீகமில்லாம இப்படியெல்லாம் நடந்துண்டா, தூக்கிப்போட்டு மிதிக்கணும்னு ஆத்திரம் வருது. எப்படி பொறுத்துக்கச் சொல்றீங்க என்றேன்.

    சரி சரி தாலி கட்டற வரைக்கும் உங்க கோபத்தை அடக்கிக்குங்க என்று அவர் சொல்ல, கூட இருந்த மற்றவர்களும் அதனை ஆமோதித்தனர். எனக்கு இனி அங்கு இருந்தால் ஒவ்வொரு காரியத்திலும் கோபப்படத் தோன்றும் என்று தோன்றியதால், தாலி கட்டிய மறு கணம் வெளியேறி, கும்பேஸ்வரன் கோயிலுக்குச் சென்று பிரகாரத்தில் உட்கார்ந்து விட்டேன். மண்டபத்தில் சாப்பாட்டுக் கடையெல்லாம் முடிந்த பின் போகலாம் என்று அங்கிருந்த மண்டபமொன்றில் தலைக்குக் கையை வைத்துக் கொண்டு படுத்துவிட்டேன். அப்போது கோயிலுக்கு வந்த கல்யாண பார்ட்டி ஒருவர் என்ன சார் இங்க வந்து படுத்துட்டீங்க, அங்க உங்களைக் காணும்னு சாமிநாதன் தேடிண்டு இருக்கார். வாங்கோ சாப்பிடப் போகலாம் என்று என்னையும் அழைத்துக் கொண்டு வந்தார். அதன் பின் சாவி கொடுக்கப்பட்ட பொம்மை போல இருந்துவிட்டேன்.

    மறுநாள் கட்டுச்சாதக் கூடை கட்டிவைத்து சம்பந்திமார்களையெல்லாம் காரிலும், வேனிலும் ஏற்றி ஸ்டேஷனுக்கு அனுப்பினோம். பீஷ்மர் மட்டும் தானே ஒரு ஆட்டோவை அழைத்து அதில் ஏறிக்கொண்டு எங்கள் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டார். அவர்களை ரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டு அப்பாடா என்று வந்து படுத்ததுதான் தெரியும், தூங்கிவிட்டோம்.

    மறுநாள் காலை பத்து மணி இருக்கும் சென்னையிலிருந்து ஒரு போன் கால். சம்பந்தி ‘தில்’தான் பேசினார். அங்கே சாமிநாதன் இருக்காரா என்றார். சாமிநாதன் வெளியே போயிருக்கிறார், நான் அவர் நண்பன், என்ன வேண்டும் சொல்லுங்கள் என்றேன். அவர் சொன்னார், நீங்கள் கட்டிக்கொடுத்த சாமானில் கல்யாணப் பாய், கைத்தடி எல்லாம் இருக்கு ஆனால் காசியாத்திரை குடை மட்டும் காணும். அது அங்கேயே இருக்கு போல இருக்கு. அதனால நீங்க வேற ஒரு குடை வாங்கி இங்க ஆத்துல வந்து கொடுத்துடுங்கோ என்றார்.

    இங்கு எங்கு தேடியும் குடை கிடைக்கவில்லை. அப்போது சாமிநாதனின் பிள்ளை வந்து சொன்னான். பாய்க்குள் குடையையும் வைத்துத்தான் சுருட்டிக் கட்டிக் கொடுத்தேன். பாயைப் பிரித்துப் பார்க்கச் சொல்லுங்க. அதுக்குள்ள குடை இருக்கும் என்றான். நானும் போன் செய்து ‘தில்’லிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் பாயைப் பிரித்துப் பார்த்துவிட்டு, அடடே, ஆமாம் குடை இங்கே பாய்க்குள்ளதான் இருக்கு என்று ஒன்றுமே நடக்காதது போல பேச்சை முடித்துக் கொண்டார். நான் தலையில் அடித்துக் கொண்டேன்.

    (​தொடரும்)

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 3

    தஞ்​சை ​வெ.​கோபாலன்

    நான் முன்பே சொல்லியிருந்தபடி என் நண்பன் சாமிநாதனின் மகள் திருமணம் கும்பகோணம் மகாமகக் குளக்கைரையில் அமைந்துள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. சாமிநாதன் குடும்பத்தோடு நானும் என் குடும்பத்தாரும் ஒரு வாரம் முந்தியே கும்பகோணம் வந்து விட்டோம். அங்கு சாமிநாதனின் அப்பாவுக்கு ரெட்டி ராயர் குளம் வீதியில் ஒரு வீடு இருந்தது. அது பெரிய வீடு. எங்கள் குடும்பத்தாரும் அவர்களோடு தங்கிக் கொண்டு கல்யாண ஏற்பாடுகளைச் செய்து வந்தோம்.

    திருமணத்துக்கு இரண்டு  நாள் முந்தைய  நாள்தான் மண்டபத்தை எங்களுக்குக் கொடுத்தார்கள். அங்கு போய் மண்டபத்தைச் சுத்தம் செய்து, சாமான்களைக் கொண்டு போய் அங்கு இறக்கிவிட்டு, சமையல்காரர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொடுத்துவிட்டு அங்கேயே இரவு தங்கி விட்டோம். திங்கட்கிழமை முகூர்த்தம். நாங்கள் வெள்ளிக்கிழமை மாலை அங்கு போய்விட்டோம். அன்று இரவே சாட்டை வெங்கட்டராமன் குழுவினர் சமையலுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள் வந்ததுதான் தெரியும், மளமள வென்று அவர்கள் வேலையைத் தொடங்கிய வேகத்தை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தப் பக்கத்தில் மிகவும் பிரபலமானவர் சாட்டை வெங்கட்டராமன். உட்கார்ந்த இடத்தில் இன்ன சமையலுக்கு இத்தனை பேருக்கு இவ்வளவு சாமான் என்று அவர் இட்ட உத்தரவை ஏற்று பணியாளர்கள் வேலை செய்தார்கள். கல்யாண இனிப்பு, பருப்புத் தேங்காய் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளை அவர் செய்து கொண்டிருந்தார்.

    அன்று இரவு நானும் சாமிநாதனும் மறுநாள் காலையில் ரயிலில் வந்து சேரும் சம்பந்திகளை எப்படி வரவேற்பது, தங்கவைப்பது, அவர்கள் செளகரியங்களை யார் யார் கவனித்துக் கொள்வது என்பதையெல்லாம் பேசி முடிவு செய்தோம். சாமிநாதனின் மைத்துனர்கள் இரண்டு பேர் முதல் நாளே மாயூரம் சென்று அங்கு மயூரா லாட்ஜ் சேகரைப் பார்த்து சனிக்கிழமை காலை சென்னையிலிருந்து வரும் ரயிலில் வரும் நபர்களுக்கு இட்லி, பொங்கல், வடை, காபி சப்ளை செய்ய ஏற்பாடு செய்தோம். சேகர் மிகவும் உத்சாகமான பேர்வழி. ஊம், ஜமாய்த்துடுவோம், கவலையை விடுங்க என்று சொல்லி அதே போல சிறப்பாக ஏற்பாடு செய்து விட்டார். எங்களிடம் அறுபது எழுபது பேர் வருவோம் என்று சொல்லியிருந்த சம்பந்தி வீட்டார் நாங்கள் ரயில் செலவை ஏற்றுக் கொள்கிறோம் என்றதும், ஆன மட்டும் அந்த அறுபது எழுபது பேரை அழைத்து வர முயன்றார்கள். ஆனால் அது அவர்களால் முடியவில்லை. முடிவில் இருபத்தி எட்டு பேர்தான் தேறினார்களாம். அவர்களுக்கு சென்னையிலிருந்து கும்பகோணத்துக்கும், திரும்ப திருமணத்துக்கு மறுநாள் இரவு ரயிலிலும் டிக்கெட் பதிவு செய்து அனுப்பினோம். அதன் பிறகு பல முறை டெலிபோன் செய்து அவர்கள் பயணத்தில் சிலருக்குப் பதில் வேறு நபர்களையும், திரும்ப வருவதற்கு இருவருக்கு சென்னைக்குப் பதிலாக பெங்களூருக்கும் டிக்கெட் வாங்கச் சொன்னார்கள். நாங்களும் சிரமத்தைப் பார்க்காமல் அவர்கள் முகம் கோணாமல் எல்லாவற்றையும் செய்து முடித்தோம்.

    மறுநாள் காலை ஐந்து மணிக்கு சென்னை ரயில் வருகிறது. மாயூரத்திலிருந்து சாமிநாதன் மைத்துனன் பேசினான். அவர்களுக்கு மாயூரம் ரயில் நிலையத்தில் டிபன் காப்பி கொடுத்தாயிற்று. சிலர் பல் தேய்க்க வேண்டுமென்று தாமதப்படுத்தியதால், இரண்டு பையன்கள் டிபன் வகையறாவுடன் ரயிலில் கும்பகோணம் வந்து கொண்டிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களுக்கும் அவர்கள் டிபன் பரிமாறிவிட்டு கும்பகோணத்திலிருந்து கிளம்பும் பாசஞ்சர் வண்டியில் மாயூரம் திரும்பி விடுவார்கள் என்றும் சொன்னான். மயூரா லாட்ஜுக்கு எவ்வளவு பில் என்று கேட்டேன். அவன் சொன்னான், சேகர் கோபப்படுகிறார். உங்களுக்கு பணத்துக்காகவா இதைச் செய்தேன், சாமிநாதன் பல வருஷப் பழக்கம் அதனால் செய்தேன். போய் பணத்தை அவனிடமே கொடுத்து விடு என்று சொல்லிவிட்டார். அவரும் இன்றே கல்யாணத்துக்கு வந்து சேர்வதாகச் சொன்னார் என்றான். இப்படியும் மனிதர்களா என்று ஆச்சரியத்தில் மூழ்கிப் போனேன். சென்னையில் இப்படி யாராவது சொல்வார்களா? இது மாயவரம், இந்த மண்ணின் பாரம்பரிய விருந்தோம்பல் இன்னும் மறைந்துவிடவில்லை. வாழ்க சேகர் என்று வாழ்த்தினேன்.

    நாங்கள் ஐந்து மணிக்கு வரும் ரயிலுக்காக நான்கு மணிக்கே ஸ்டேஷனுக்கு வந்து உட்கார்ந்திருந்தோம். அங்குள்ள ஐ.ஆர்.ஆர்.இல் நல்ல காப்பி கிடைக்கும். கும்பகோணம் காப்பி என்பது இதுதானோ? நல்ல மணமுள்ள காப்பி, நாங்கள் சாப்பிட்டோம். ரயில் வருவதற்கான பரபரப்பு ஏற்பட்டது. நாங்கள் எழுந்து கொண்டோம். அவர்கள் எந்த பெட்டியில் வருகிறார்கள் என்றேன். எஸ் 2 என்றான் சாமிநாதன். அந்த வண்டி நிற்குமிடம் பார்த்துப் போய் நின்று கொண்டோம். வண்டி வந்து நின்றது. பிளாட்பாரம் அல்லோலப் பட்டது. எஸ் 2 விலிருந்து கூட்டம் இறங்கியது. ஆண், பெண் குழந்தைகள் என்று இருபத்தெட்டு பேர். அவர்கள் ஒவ்வொருவரும் இரண்டு மூன்று லக்கேஜ் எடுத்துக் கொண்டு இறங்கினர். கடைசியாக ரெட்டை மண்டை இறங்கினார். அவரை இரண்டு பேர் கைத்தாங்கலாக இறக்கி விட்டனர். அவர்கள் அவருடைய மகன்களாம். பிற்பாடு அறிமுகம் ஆனது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வாங்கோ, வாங்கோ என்று அழைத்தோம். அப்படி யாரையாவது அழைக்க விட்டுவிட்டால் அதுவே பிறகு பெரிய குற்றமாக ஆகிவிடும். சம்பந்தி வீட்டாரை வாங்கோன்னு கூப்பிட வேண்டாமோ, வந்து கொடிமரம் மாதிரி நின்னா போதுமா என்பார்கள். நாங்களும் நாணல் புல் போல வளைந்து குனிந்து வணங்கி வரவேற்றோம். சம்பந்தி விரோதம் கூடாதல்லவா?

    இவர்களையெல்லாம் மண்டபத்துக்கு அழைத்துச் செல்ல ஒரு வேன், ஒரு அம்பாசிடர் கார் ஏற்பாடு செய்திருந்தோம். இரண்டு முறை வேன் ஆட்களை ஏற்றிக் கொண்டு மண்டபத்தில் விட்டுவிட்டு வந்தது. காரில் மாப்பிள்ளை பையன், அவன் அப்பா, அம்மா, ரெட்டை மண்டை இவர்கள் உட்கார்ந்தார்கள். எல்லோரும் போன பிறகு சாமிநாதனும் நானும் நாங்கள் வந்திருந்த ஆட்டோவில் பின்னாலேயே பயணித்து மண்டபத்தை அடைந்தோம்.

    அங்கு சம்பந்திகள் அவர்களுக்கு ஒதுக்கியிருந்த அறைகளில் கொண்டு போய் சாமான்களை வைத்துவிட்டு மைய ஹாலுக்கு வந்தனர். சம்பந்தி ‘தில்’ சொன்னார், இடம் போறாது. சாமான்கள் வைக்கவே இடமில்லை. இதுல எப்படி படுத்துக்கறது. இங்கே பக்கத்தில ஏதாவது நல்ல லாட்ஜ் இருந்தா நாலைந்து ரூம் போட்டுடுங்க. எங்க ஆபீசிலிருந்து பெரிய ஆபீசர்கள் எல்லாம் நாளைக்குக் காலைல வரா, அவாளுக்கு இங்கே தங்க முடியாது என்றார். சாமிநாதன் முழித்தான். நான் ஓடிப்போய் ஏ.ஆர்.ஆர். லாட்ஜில் நான்கு ஏ.சி. ரூம் புக் பண்ணிவிட்டு வந்தேன். இன்னிக்கு வேண்டுமானால் உங்களில் சிலர் அங்கு போய் தங்கிக் கொள்ளுங்கள். இரண்டு நாட்களுக்கு புக் பண்ணியிருக்கேன் என்றேன். சம்பந்தி ‘தில்’ சரி பார்க்கிறேன், நாலு ரூம்தானா, ஊம் பார்ப்போம், எங்களுக்குன்னு ஒரு காரை ஏற்பாடு செஞ்சுடுங்கோ, நாங்க போக வர தேவைப்படும் என்றவாறு உட்கார்ந்தார்.

    அப்போது ரெட்டை மண்டை அங்கு வந்தார். சாமிநாதன் சார்! இதோ பாருங்கோ எனக்கு டயபடீஸ், காப்பில சக்கரை கூடாது என்றார். அதுக்கென்ன சமையல்காரர் கிட்டே சொல்லிடறேன். உங்க காப்பில சர்க்கரை வேண்டாம்னு என்றான் சாமிநாதன். ஊகூம். இங்க வந்திருக்கிற நாலைந்து பேருக்கும் டயபடீஸ், அதனால கேட்டுக் கொடுங்கோ என்றார். ஆகா, அப்படியே ஆகட்டும் என்று சமாளித்தோம்.

    ஊம் இன்னொரு விஷயம். எனக்கு காலம்பற ஒம்பது மணிக்குச் சாப்பிடணும். இல்லைன்னா பி.பி. ஏறிடும். அதனால நீங்க பாட்டுக்கு பத்து மணிவரை டிபன் போடறேன்னுட்டு இட்லி போட்டுண்டிருந்தா எனக்குச் சரிவராது. எனக்கு மட்டுமாவது கொஞ்சம் சாதம், மிளகு ஜீரகம் தட்டிப் போட்டு கொஞ்சம் ரசம், மனத்தக்காளி வத்தல் குழம்பு இதைத் தயார் செஞ்சுடச் சொல்லுங்கோ. நான் போய் ஸ்நானம் பண்ணிட்டு வரேன். சரி! இங்கேருந்து காவேரி எத்தனை தூரம் என்றார்.

    எனக்குக் கடுப்பு வந்தது. இதோ ஐந்து தப்படி வைத்தா காவேரிதான் சொல்லத் துடித்தேன். ஆனால் பாவம்! சாமிநாதன், அவனால் சொல்ல முடியுமா? ரெண்டு கிலோ மீட்டர் இருக்கும், மடத்துத் தெரு வழியா போனா, காவேரி பழைய பாலத்துக்கிட்டே படித்துறை இல்லைன்னா மேலக்காவேரிக்குப் போகணும் அப்படி என்றான். சரி சரி அது எனக்குச் சரிப்பட்டு வராது நான் இங்கேயே பாத் ரூமிலே ஸ்நானம் பண்றேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். இவ்வளவையும் பார்த்து புன்னைகை மன்னனாக நின்று கொண்டிருந்த ‘தில்’ எதுவும் பேசவில்லை. அவருடைய செளகரியங்களை ‘திவானா’ கச்சிதமாகக் கவனித்துக் கொண்டாள். ஒரு டம்ளரில் காப்பி கொண்டு வந்து டபராவில் ஆற்றி ஆற்றி தில்லிடம் கொடுத்தாள். மாத்திரைகளைக் கொண்டு வந்து கொடுத்து, சாப்பிடுங்கோ, மறந்து போயிட்டா அப்புறம் கஷ்டப்படறது யாரு என்று ஆதங்கப்பட்டாள். நல்ல பதி, நல்ல பத்தினி என்று நினைத்துக் கொண்டேன்.

    ரெட்டை மண்டை ஸ்நானம் முடித்து வந்தார். நெற்றியில் சுண்ணாம்பு அடிப்பது போல பட்டையாக விபூதி. சாப்பாட்டுப் பகுதியில் பலர் அப்போதுதான் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ரெட்டை மண்டை ஓர் ஓரத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். சர்வர் ஒருவன் ஒரு வாழை ஏட்டைக் கொண்டு வந்து அவர் முன் வைத்தான். அவருக்கு வந்ததே கோபம். என்னடா மரியாதை இது. சம்பந்தின்னா ஒரு நுனி வாழை இலை கிடையாதா, இப்படித்தான் மரியாதை செய்யறதா என்று கத்தினார்.

    சாமிநாதன் அலறி அடித்துக் கொண்டு ஓடிப்போய் அவருக்கு ஒரு நுனிவாழை இலையைக் கொண்டு வந்து போட்டான். சாட்டையிடம் போய் சுவாமி, இவருக்கு ஆனவரை சாதம் ரசம் போட்டு எழுப்பிவிடுங்கள், இல்லைன்னா நம்மை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார் என்று கெஞ்சினான். அதற்கு சாட்டை வெங்கட்டராமன், நீ போ சாமிநாதா நான் பார்த்துக்கறேன். என் சர்வீசிலே இவரைப் போல ஆயிரம் பேரைப் பார்த்துட்டேன் என்றார் குறும்புச் சிரிப்போடு. எனக்கு என்னவோ பயமாக இருந்தது. சாட்டை ஏதாவது குறும்பு பண்ணி ரெட்டை மண்டையை ஒரு வழி பண்ணிடுவார்னு எனக்குத் தோன்றியது.

    நீ வா சாமிநாதா, நாம போய் வந்திருப்பவங்களை கவனிக்கலாம் என்று அழைத்துக் கொண்டு போனேன். அங்கு ஏ.சி.டி.ஓ. கிருஷ்ணன், ஐ.ஓ.பி. மணி, எஃப்.சி.ஐ. மணி இவர்களெல்லாம் வந்திருந்தனர். அவர்களை நாங்கள் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் டைனிங் ஹால் பக்கத்திலிருந்து ஒரு புயல் உருவாகி அது மேலும் வலுப்பெற்று முன் மண்டபம் வரை வந்து சேர்ந்தது. என்னப்பா அங்கே ஒரு புயல் என்றேன் நான். சாமிநாதன் ஆடிப்போய்விட்டான். அந்த ரெட்டை மண்டைதாம்பா இப்போ என்ன ஆச்சோ தெரியலையே என்று அங்கு ஓடினான். நான் போகவில்லை. அங்கேயே உட்கார்ந்து விட்டேன்.

    சிறிது நேரத்தில் முகமெல்லாம் வியர்வையோடு சாமிநாதன் வந்தான். என்ன நடந்தது என்றேன். ரெட்டை மண்டைக்கு மோர் போடும்போது மோர் பாத்திரத்தில் சர்க்கரை இருந்ததாம். மோர் சாதம் இனிக்கிறதாம். தனக்கு டயபடீஸ்ன்னு சொல்லியும் மோர்ல சர்க்கரை போட்டு கொடுத்துவிட்டான். எனக்கு மட்டும் கொடுத்து விட்டால் பரவாயில்லை. அதோ, அவாளும் டயபடீஸ். இப்படிப் பண்றதுதான் மரியாதையா. யோவ், சாமிநாத ஐயர் இங்கே வாரும், என்னய்யா இது, இப்படித்தான் நடந்துக்கறதா என்று கத்தினாராம்.

    பயந்துகொண்டு ஓடிவந்து விட்டான் சாமிநாதன். நீ அங்கே போகாதே. அவரே இங்கு வரட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேன். அவன் பயந்தது போலவே மோர் சாதத்தைச் சாப்பிடாமல் கை கழுவிக்கொண்டு ரெட்டை மண்டை அங்கு வந்து சேர்ந்தார். எங்களையெல்லாம் பார்த்ததும் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது போல இருக்கிறது. ஆஹா ஓஹோ என்று முழக்கமிட்டார். நான் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே, சாமிநாதனை அங்கிருந்து போய்விடும்படி ஜாடை காட்டினேன். அவனும் புரிந்து கொண்டு நகர்ந்து விட்டான்.

    “என்ன சுவாமி! எல்லாம் நல்லபடியாத்தனே நடந்துண்டுருக்கு. எதுக்கு இப்போ இப்படிக் கூச்சல்” என்றேன்.

    “என்னய்யா நீ பிரண்டு. மோர்ல சர்க்கரையைப் போட்டு பரிமாறறான்” என்றார்.

    “என்ன சுவாமி அதிசயமாயிருக்கு, உப்புதானே போடுவா, அதுதான் உமக்கு ஒத்துக்காதே, ரத்த அழுத்தம் இருக்கறதால, பின்னே எப்படி சர்க்கரை போடுவா” என்றேன்.

    “என்னய்யா விளையாடுறீரா? நான் போட்டான்னு சொல்றேன், நீர் என்னவோ எகத்தாளமா பேசறீரே!” என்றார்.

    ஒரு சினிமாவில் ரஜனி காந்திடம் குள்ள மனிதன் ஒருவர் வந்து, நான் இப்போ நெனச்சாலும் கல்யாணத்தை நிறுத்திடுவேன் என்று அலம்பல் பண்ண, ரஜினி தன் சட்டைக்குள் கைவிட்டு பாம்பையும், பேண்ட் பாக்கெட்டிலிருந்து தேளையும் எடுத்து அவர் முன் போட்டு, முளைச்சு இன்னும் மூணு இலை விடலை, நீ என்னை பயமுறுத்திறியா, ஏதாவது பேசினா இதையெல்லாம் எடுத்து உன் வேஷ்டிக்குள் விட்டுடுவேன்” என்பார். எனக்கு அந்தக் காட்சி நினைவுக்கு வந்தது. ஆகா, அதுதான் சரியான வழி என்று ஒரு முடிவுக்கு வந்தேன்.

    “ஓய் ஸ்வாமி! இதுவரை நான் சாமிநாதனுக்காக பொறுத்துண்டிருந்தேன். வந்ததும் வராததுமா நீர் இப்படி கலாட்டா செஞ்சா நாங்க சும்மா பார்த்துண்டிருக்க மாட்டோம். இது சென்னை இல்லை. இது கும்பகோணம். இது எங்க இடம். நீர் முன்னே பின்னே கல்யாணம் செஞ்சு பார்த்திருந்தா இப்படி ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் கூத்தடிக்க மாட்டீர். என்னய்யா குடிமுழுகிப் போச்சு இப்போ. சர்க்கரை போட்டிருந்தா சாதத்தை ஒதுக்கிட்டு, புதுசா போடச்சொல்லி, சர்க்கரை இல்லாத மோரைப் போட்டுச் சாப்பிட வேண்டியதுதானே. சம்பந்தி பந்தா பண்ணி கலாட்டா பண்ணலாம்னு நினைச்சீரா, இங்கு கொத்தோடு அறுத்துடுவாங்க, இவங்கல்லாம் இந்த ஊர்க்காரங்கதான். அதனால இடம் பொருள் ஏவல் பார்த்து நடந்துக்கும், அதுதான் உமக்கு நல்லது” என்று கடுமையாக அவரை எச்சரித்தேன். நண்பர்கள் அனைவரும் அதை ஆமோதித்தது போல தலையை ஆட்டினார்கள். இரட்டை மண்டைக்கு இப்போதுதான் உரைத்திருக்கும் போலிருக்கிறது. எழுந்து போய்விட்டது. அதன் பிறகு குரலைக் காணோம்.

    சுமார் பதினோரு மணியிருக்கும். என்னப்பா சாமிநாதா ரெட்டை மண்டை சங்காத்தியத்தையே காணுமே எங்கே? என்றேன். இங்கே வா என்று என்னை அழைத்துக் கொண்டு போய் காட்டினான். மண்டபத்தின் ஒரு ஓரத்தில் ஒரு கட்டிலைப் போட்டுக் கொண்டு தலையணை வைத்து அருகில் ஒரு மாமி விசிறி கொண்டு விசிற அனந்த சயனம் செய்து கொண்டிருந்தார் ரெட்டை மண்டை. சுற்றிலும் நாலைந்து பேர் அவர் உடம்புக்கு என்ன என்று குசலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். கிடக்கட்டும் விடு, தொல்லை விட்டது என்று சாமிநாதனை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

    சிறிது நேரம் கழித்து ரெட்டை மண்டையின் புதல்வன் ஒருவர் என்னிடம் வந்தார். எங்க அப்பா கல்யாணத்துக்கு வந்திருக்கார் தெரியுமோல்யோ? என்றார். ஆமாம், நான் தானே ரயிலடியிலிருந்து அழைச்சிண்டு வந்தேன். அதற்கு என்ன இப்போ என்றேன்.

    இப்போ அவருக்கு உடம்பு சரியில்லை. எங்கே இருக்கார்னாவது ஒங்களுக்குத் தெரியுமா? என்றார்.

    ஓ தெரியுமே! அதோ, கட்டிலில் அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மாச்சாரியார் போல படுத்திருக்கிறாரே, அவர்தானே, தெரியும் தெரியும், அவர் உடம்புக்கு ஒண்ணும் இல்லை, மோர்ல சர்க்கரைப் போட்டுச் சாப்பிட்டுடார், அவருக்கு டயபடீஸ் இல்லையா, அதனால உடம்பு சரியில்லாம போயிருக்கும், சரியா போயிடும், கவலைப் படாதேயுங்கோ, என்றேன்.

    அவர் என்னை ஒரு முறை முறைத்துவிட்டுப் போய்விட்டார்.

    (​தொடரும்)

    Share
  • பட்டினத்தடிகளின் பாடல்கள்

    தஞ்சை வெ.கோபாலன்

    கோயிற்றிருவகவல்

    pattinatharநினைமின் மனனே! நினைமின் மனனே
    சிவபெருமானைச் செம்பொனம் பலவனை
    நினைமின் மனனே நினைமின் மனனே
    அலகைத் தேரின் அலமரு காலின்
    உலகப் பொய் வாழ்க்கையை உடலை யோம்பற்க

    பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்
    தோன்றிய மறையும் மறைந்தன தோன்றும்
    பெருத்தன சிறுக்குஞ் சிறுத்தன பெருக்கும்
    உணர்ந்தன மறக்கும் மறந்தன உணரும்
    புணர்ந்தன பிரியும் பிரிந்தன புணரும்

    அருந்தின மலமாம் புனைந்தன அழுக்காம்
    உவப்பன வெறுப்பாம் வெறுப்பன உவப்பாம்
    என்றிவை யனைத்தும் உணர்ந்தனை யன்றியும்
    பிறந்தன பிறந்த பிறவிகள் தோறும்
    கொன்றனை யனைத்தும் அனைத்து நினைக்கொன்றன

    தின்றனை யனைத்தும் அனைத்து நினைத் தின்றன
    பெற்றனை யனைத்தும் அனைத்து நினைப் பெற்றன
    ஓம்பினை யனைத்தும் அனைத்து நினை யோம்பின
    செல்வத்துக் களித்தனை தரித்திரத் தழுங்கினை
    சுவர்க்கத் திருந்தனை நரகிற் கிடந்தனை

    இன்பமுந் துன்பமும் இருநிலத் தருந்தினை
    ஒன்றொன் றொழியாது உற்றனை யன்றியும்
    புற்புதக் குரம்பைத் துச்சில் ஒதுக்கிடம்
    என்னநின் றியங்கும் இருவினைக் கூட்டைக்
    கல்லினும் வலிதாக் கருதினை யிதனுள்

    பீளையும் நீரும் புலப்படும் ஒரு பொறி
    மீளுங் குறும்பி வெளிப்படும் ஒரு பொறி
    சளியும் நீருந் தவழும் ஒரு பொறி
    உமிழ்நீர் கோழை ஒழுகும் ஒரு பொறி
    வளியும் மலமும் வழங்கும் ஒரு வழி

    சலமுஞ் சீழும் சரியும் ஒருவழி
    உள்ளுறத் தொடங்கி வெளிப்பட நாறும்
    சட்டகம் முடிவிற் சுட்டெலும் பாகும்
    உடலுறு வாழ்க்கையை உள்ளுறத் தேர்ந்து
    கடிமலர் கொன்றை சடைமுடிக் கடவுளை

    ஒழிவருஞ் சிவபெரும் போக இன்பத்தை
    நிழலெனக் கடவா நீர்மையொடு பொருந்தி
    எனதற நினைவற இருவினை மலமற
    வரவொடு செலவற மருளற இருளற
    இரவொடு பகலர இகபரம் அறவொரு

    முதல்வனைத் தில்லையுள் முளைத்தெழுஞ் சோதியை
    அம்பலத் தரசனை ஆனந்தக் கூத்தனை
    நெருப்பினில் அரக்கென நெக்கு நெக்குருகித்
    திருச்சிற்றம்பலத் தொளிருஞ் சிவனை
    நினைமின் மனனே நினைமின் மனனே
    சிவபெருமானைச் செம்பொனம் பலவனை
    நினைமின் மனனே நினைமின் மனனே.

    இந்தப் பாடலில் அடிகளார் சொல்ல வந்த கருத்து நமது வேத வேதாங்கங்கள் சொல்லுகின்ற பழம்பெரும் கருத்துதான். ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ எனும் சொல் வழக்கு நம்மிடையே உண்டு. இந்த உலகம் எப்போதும் இயங்கிக் கொண்டே யிருக்கிறது. இயக்கம்தான் சக்தி. ஓர் ஆற்றங்கரையில் அமர்ந்து கொண்டு அந்த ஆற்றில் ஓடும் தண்ணீரைப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். இந்த விநாடி அவ்விடத்தைக் கடந்த நீர் அடுத்த விநாடி எங்கே இருக்கும் தெரியாது நமக்கு. ஆனால் தொடர்ந்து ஆற்றில் நீர் ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம், அந்த நிலையில் இப்போது பார்த்த நீர் எங்கே செல்கிறது என்பதை நாம் கவனிப்பதில்லை.

    உயிர்கள் தோன்றுகின்றன, வளர்கின்றன, தோன்றியதன் நோக்கம் நிறைவேறுகிறதோ இல்லையோ, காலம் வந்ததும் அது மறைந்து விடுகிறது. ஒன்று மறைந்தது உணராமல் மற்றொன்று அங்கு தோன்றுகிறது. எட்ட இருந்த இந்த இயற்கையில் விளையாட்டைப் பார்ப்பவர்களுக்கு இங்கு ஏற்படுகின்ற இந்த மாற்றங்கள் அத்தனை இலகுவில் தெரிய வாய்ப்பில்லை. அந்த இயற்கையின் மர்மத்தை பாமரர்களும் உணரும்படியாக அடிகளார் இந்தப் பாடலில் கருத்துக்களை உதிர்த்திருக்கிறார். அவர் என்ன சொல்ல வருகிறார்.

    ஓ! மனிதர்களே! இந்த இயற்கையின் விளையாட்டில் தன்னை மறந்து ஈடுபட்டிருக்கும் மானுட ஜன்மங்களே, சற்று நினைத்துப் பாருங்கள். உலகில் பிறப்பு எடுத்து பேய் போன்று உடல் படைத்து சோதனைகள் எனும் பேய்க்காற்று சுற்றிச் சுழற்றி ஆட்டுவிக்கும் போதில், சிவனை நினை, அந்த பொன்னம்பலத்தில் ஆடுகின்ற சிதம்பரநாதனை, நடராசப் பெருமானை மனத்தில் நினை.

    பாரதி சொன்னது போல “உலகெலாம் பெரும் கனவு, அஃதுளே, உண்டு, உறங்கி, இடர்செய்து செத்திடும் கலக மானுடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவாகும்” என்றானே, அந்தக் கருத்துக்கு மூலம் இந்த பட்டினத்தார் வாக்குதான். எப்படி எனக் கேட்கலாம்?

    தனது சுயசரிதையை “கனவு” எனும் தலைப்பில் எழுதத் துவங்கிய பாரதி முதலில் பட்டினத்துப் பிள்ளையின் இந்த வரிகளோடுதான் துவக்குகிறான். ஆகவே மேற்சொன்ன கருத்துக்கு ஊக்கமளித்தது கீழ்கண்ட இந்த வரிகள்தான்: அது

    “பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்
    மெல்லப் போனதுவே”

    கனவின் முதலடிகள் “வாழ்வு முற்றும் கனவு எனக் கூறிய மறைவலோர்தம் உரை பிழையன்று காண்” என்பதுதான். இந்த கனவின் கருத்தும் பட்டினத்தடிகளின் இந்த ‘யாக்கை நிலையாமை’ குறித்ததுதான்.

    இந்தக் கோயிற்றிருவகவல் பாடலில் அடிகள் சொல்ல வந்த கருத்து பல்வேறு செயல்கள் எப்படி முன்பு இருந்ததென்பதையும், அது பின்னர் எங்ஙனம் மாறுகிறது, மேல் கீழாகவும், கீழ் மேலாகவும் மாறுகிறது என்பதை பலசொல்லி விளக்க முயல்கிறார்.

    இவ்வுலகில் பிறந்த அனைத்தும் ஓர் நாள் அழிந்தே தீரும், அப்படி அழிந்த அனைத்தும் மீண்டும் இங்கு வந்து பிறந்தே தீரும். இறைவன் படைப்பின் இரகசியமே இதுதான். இன்று தோன்றியது நாளை மறைகிறது. நாளை மறந்தது மற்றொரு நாள் மீண்டும் தோன்றுகிறது.

    இன்று இந்த பூமியைக் கட்டியாளும் பார்போற்றும் சீமானாக விளங்குபவன், காலவோட்டத்தால் கீழ்நிலை அடைந்து வறுமையின் கோரப்பிடியில் சிக்குண்டு தவிக்கலாம். காலத்தின் கோலத்தால் தெருவோரம் கிடந்து வருத்தப்படுபவன் நாளையே தலையெடுத்து பாராளும் வேந்தனாக ஆகலாம். எவன் எப்போது எப்படி ஆவான் என்பதை அவனைத்(பரம்பொருள்) தவிர வேறு யாரறிவார் என்பது அடிகளின் கூற்று. இன்று உறவு நட்பு என்று கூடி மகிழ்ந்து வாழுவோர் நாளை விதியின் வசத்தால், காலவோட்டத்தின் கட்டாயத்தால் பிரிந்து வருந்தி வாழ நேரலாம். மகிழ்ந்து கூடி திருமண பந்தத்தால் கட்டுப்பட்டவர்கள் கூட குறுகிய காலத்தில் பிரிந்து நீ யாரோ, நான் யாரோ என்று வாழ்வதில்லையா?

    இன்று தலைவாழை இலைபோட்டு பஞ்ச பரமான்னம் அருந்தினாலும், நாளையும் அவை உண்டவனிடம் அப்படியேவா இருக்கப் போகிறது. மறுநாள் அது கழிவுப் பொருள். அதை யார் சீண்டுவார்கள். புத்தம்புது பட்டாடை விரும்பி இன்று அணிந்தாலும் நாளை அது தூய்மை செய்யப்பட வேண்டிய அழுக்கு அல்லவா? இன்று விரும்பியது நாளை வெறுக்கத்தக்கதாக ஆகும். சேர்ந்தவர் பிரிவர், பிரிந்தவர் சேர்ந்து கொள்வர். ஆசையோடு விரும்பியது வெறுக்கத்தக்கதாகும், வெறுத்து ஒதுக்கியது விரும்பத்தக்கதாகும்.

    பிறக்கும் உயிர்கள் யாவும் இறந்து போகும், இறந்தவை அனைத்தும் மீண்டும் புனர்ஜென்மம் எடுத்து வரும். ‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’ என்று ஆதி சங்கரர் சொல்லவில்லையா? பரம்பொருளில் இருந்து ஜீவாத்மாக்கள் உதிக்கின்றன, வெட்ட வெளியில் அந்த ஜீவ ஒளிகள் சுற்றிச் சுழன்று ஓய்ந்து மீண்டும் அந்த பேரொளியில் சென்று ஐக்கியமாகிவிடுகின்றன. இதை உணர்ந்தவனே ஞானி.

    வாழ்க்கை என்பதில் ஏற்றமும் உண்டு, இறக்கமும் உண்டு. சுவர்க்கமும் உண்டு, நரகமும் உண்டு. வருத்தமும் உண்டு, மகிழ்ச்சியும் உண்டு. எது எப்போது வரும், யாருக்குத் தெரியும்? பிறப்பு எடுத்தோம், பட்டுடைகள் எட்டு வகை அணிந்து கொண்டோம், அவை நிரந்தரம் என்று இறுமாந்திருந்தோம். கல்லினும் இது வலியது என்று ஆணவம் கொண்டிருந்தோம். எனக்கு நிகராக எவர் இங்கு என்று இரும்பூது கொண்டிருந்தோம். அப்படிப்பட்டதா இந்த உடல். கல்லினும் வலியதோ இது? நீர்க்குமிழி போன்ற இவ்வுடல் சிலநாட்கள் ஒதுங்கும் ஒரு குடிசை என்பதை உணர். (புற்பதம்=நீர்க்குமிழி. குரம்பை=குடிசை துச்சில்=தங்குமிடம்)

    உடலில் எத்தனை அங்கங்கள். அழுக்குப் பீளையும், நீரும் கசியும் ஓர் அங்கம். அழுக்கும் குறும்பியும் வெளிப்படும் ஓர் அங்கம், சளியும் நீரும் பொழியும் ஓர் அங்கம், உமிழ்நீர் கோழை ஒழுகும் ஓர் அங்கம், வளியும் (வாயு) மலமும் வெளிப்படும் ஓர் அங்கம், நீரும் சளியும் சரியும் ஓர் வழி, இன்று இன்பங்களைத் துய்க்கும் உடல் நாளை வெந்து சாம்பலாகும். இன்பத்தை உடல் துய்க்கிறதா, உள்ளம் துய்க்கிறதா? முடிவில் இரண்டுமே காலத்தோடு கரைந்து போகிறது. கானல் நீர் போன்ற தோன்றி மறையும் இன்பத்தை வேண்டி, நிரந்தர நன்மையைப் புறந்தள்ள முடியுமா?

    நினை! சிவபெருமானை நினை. மாய நினைவுகளை நீக்கிவிடு. இன்பமென நினைத்துத் துன்பங்களை தழுவும் எண்ணத்தைக் கைவிடு! இகத்துக்கும் பரத்துக்கும், அறத்துக்கும் முதல்வனான தில்லையில் எழுகின்ற ஜோதியாம் நடராசப் பெருமானை நினை. ஆனந்தக் கூத்தனை நினை. தீயிலிட்ட அரக்கு உருகுவது போல நெஞ்சம் நெக்குருகி திருச்சிற்றம்பலத்தானை, அவன் இருதாளை நினை. ஏ மனமே, அவனை நினை. சிவபெருமானை, பொன்னம்பலமாடும் திருவருட் செல்வனை எப்போதும் நினை. நிரந்தரப் பொருள் அவன், மற்றெல்லாம் தோன்றி அழிவன. நிரந்தப் பொருளை எப்போதும் நினை மனமே!

    படத்திற்கு நன்றி: http://www.oocities.org/shivaperuman/pattinathar.html

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 2

    தஞ்​சை ​வெ.கோபாலன்

    என்னுடைய நெருங்கிய நண்பன் சாமிநாதனுடைய மகளுக்குத் திருமண நிச்சயதார்த்தம். ஞாயிற்றுக் கிழமை பகல் 3 மணிக்கு நாமெல்லாம் மாப்பிள்ளை வீட்டுக்குப் போகிறோம்; அங்கே நிச்சயதார்த்தம் நடக்கிறது, நீயும் எங்களோடு வந்துவிடு என்றான் சாமிநாதன். என்னால் தட்டமுடியவில்லை. எனக்குப் பல வழிகளிலும் உதவிகள் செய்திருக்கிறான். அவன் மகள் கல்யாணத்தை நான் முனைந்து செய்ய வேண்டாமா? சரியென்று ஒப்புக் கொண்டேன். ஞாயிறு பகல் உணவுக்கே அவன் வீட்டுக்குப் போய்விட்டேன். உணவுக்குப் பிறகு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டபின் எல்லோரும் நிச்சயதார்த்தத்துக்கு மாப்பிள்ளை வீட்டுக்குப் புறப்பட்டோம். உறவினர்கள் எல்லோரும் ஒரு வேனிலும், நாங்கள் சிலபேர் சாமிநாதன், அவன் மனைவி ஆகியோர் ஒரு காரிலும் புறப்பட்டு நிச்சயதார்த்தம் நடக்கும் வீட்டுக்குச் சென்றோம்.

    அந்த வீடு மாம்பலத்தில் ஒரு குறுகிய தெருவில் இருந்தது. காரிலிருந்து இறங்கி உள்ளே சென்றோம். வாயிற்படியில் மாப்பிள்ளை வீட்டார் நின்றிருந்தனர். அவர்களில் பையனின் அம்மா யார் என்று கேட்டேன். அதோ கருப்பா தலையை ஆட்டி ஆட்டிப் பேசிக்கொண்டிருக்காளே ஒரு மாமி அவள்தான் அம்மா. பக்கத்தில் இருக்காரே அவர்தான் அப்பா என்றாள். பார்த்தால், அட! இவர்கள் நம்ம தில் திவானா ஆயிற்றே என்று எனக்கு ஆச்சரியம்.

    என்னை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் சாமிநாதன். மாமி வழக்கப்படி தலையை ஆட்டி ஆட்டி ‘வாங்கோ, வாங்கோ’ என்றாள். அனைவரும் உள்ளே போய் விரித்திருந்த ஜமக்காளத்தில் உட்கார்ந்தோம். நடுவில் தட்டுக்கள் நிறைய பழங்கள், சர்க்கரை, கல்கண்டு, ஒரு தாம்பாளத்தில் பருப்புத்தேங்காய், மற்றொன்றில், புதிய ஜரிகை வேட்டி, காஞ்சிபுரம் பட்டுப்புடவை, ஒரு கண்டு மல்லிகைப் பூ இவையெல்லாம் வைக்கப்பட்டிருந்தன. அருகில் சந்தனப் பேலா, குங்குமச் சிமிழ் இவைகளும் இருந்தன.

    எல்லோரும் வந்து அமர்ந்தாகிவிட்டது. சாமிநாதனே பேச்சை ஆரம்பித்தார். தனது வருங்கால சம்பந்தியைக் காண்பித்து “இவர் ஆர்.அண்டு எஸ். கம்பெனியில் மேனேஜிங் டைரக்டர் கிட்டே பி.ஏ.வா இருக்கார். இவர் பையனும் அங்கே அக்கவுண்ட்ஸ் ஆபீசர். பி.காம், சி.ஏ. படிச்சிருக்கார். ரொம்ப நல்ல பையன். யார் கிட்டேயும் அதிர்ந்துகூட பேச மாட்டார். மாமா ரொம்ப பிரபலம். இவாத்துல ஒரு விசேஷம்னா இவா சொந்தக்காரா அத்தனை பேரும் வந்து சேர்ந்துடுவா” என்று சொல்லிக்கொண்டே போனார்.

    சம்பந்தி உடனே குறுக்கிட்டு, அருகில் இருந்த இரட்டை மண்டை கிழவனார் ஒருவரைக் காட்டி, இவர் என்னோட அண்ணா. இவர்தான் எங்க குடும்பத்துக்கு எல்லாம். இவர் என்ன சொல்றாறோ அதுக்கு எங்ககிட்டே மறுபேச்சே கிடையாது என்றார்.

    அந்த இரட்டை மண்டையும் தலையை இருமுறை ஆட்டிவிட்டு நின்றது. எனக்கு விசித்திரமாக இருந்தது; அவரது தலை. அவர் கொஞ்சம் மிதப்பாக, கர்வத்தோடு இருப்பதாகத் தெரிந்தது.

    ‘எங்க அண்ணா இருக்காரே, அவருக்கு மூணு பிள்ளைகள், ஒரு பொண்ணு. பொண்ணும் மாப்பிள்ளையும் ஆத்தோடதான் இருக்கா. புள்ளைகள் ஆளுக்கு ஒரு இடம். பெரியவன் சுந்தரம் பெரிய கண்ட்ராக்டர். அடையாறிலே பெரிய பங்களா, அவன் பிள்ளை அமெரிக்காவுல இருக்கான். நல்ல சம்பளம். ரெண்டாவது புள்ளை ஆவடிலே பீரங்கியெல்லாம் பண்றாளே அதுல ஆபீசரா இருக்கான். அவனுக்கு ஒரு பெண். அவ கல்யாணம் ஆயி பம்பாயிலே இருக்கா. இவர் அக்கா ஒருத்தி, டெல்லில இருக்கா. அத்திம்பேர் பெரிய ஆபீசர்”,இ ப்படி அவர்கள் பெருமையை அவர் பறை சாற்றிக் கொண்டிருந்தார்.

    “சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்” என்றார் ரெட்டை மண்டை. சாமிநாதன் என்னைப் பேசுமாறு கண்ஜாடை காண்பித்தான்.

    ” மாமா! உங்க சம்பந்தம் கிடைச்சது எங்களுக்கெல்லாம் ரொம்ப சந்தோஷம். நான் சாமினாதனோட நெருங்கிய சிநேகிதன். அவாத்துல எந்த விசேஷமும் என் பங்கு இல்லாம நடக்காது. பாருங்கோ! இந்த நிச்சயதார்த்தத்துக்கும் என்னை வந்து நடத்தும்படி கேட்டுண்டான். இவனும் சரி, இவாத்துல எல்லாரும் ரொம்ப நல்லவா சாது. பொண்ணைப் பத்திதான் உங்ககிட்டே எல்லாம் சொல்லியிருப்பா. தங்கமான பொண்ணு. அடக்கம், புத்திசாலி, நல்ல அழகு, குடும்பத்தை நன்னா அரவணைச்சுக் கொண்டு போவா” என்றேன்.

    உடனே ரெட்டை மண்டை என்னைப் பார்த்து “அதெல்லாம் சரிதான் சுவாமி, பெண்ணுக்கு என்ன போடப்போறேள், எவ்வளவு நகை, என்னென்ன சாமான்கள் வாங்கித்தரப் போறேள், அதைச் சொல்லுங்கோ” என்றார்.

    “அதெல்லாம் சாமிநாதன் உங்ககிட்டே பேசியிருப்பாரே” என்றேன்.

    “அவர் பேசினார் சரிதான், சபையிலே நாலு பேர் முன்னாடி இன்ன இன்ன செய்யப்போறோம், கல்யாணம் இப்படியிப்படி செய்யப் போறோம்னு தெரிவிக்க வேண்டாமா. வெத்திலை பாக்கு மாத்திக்கறத்துக்கு முன்னாடி, இதையெல்லாம் நன்னா தெளிவா பேசிட வேண்டாமா? நீங்களே சொல்லுங்கோ. அவா செளகரியம் எப்படின்னு” என்றார்.

    சாமிநாதன் என்னை சமிக்ஞை மூலம் சொல்லச் சொன்னதும் நான் சொன்னேன். “மாமா கேட்டபடிக்கு முப்பது பவுன் நகை போடறோம். ஐம்பதாயிரம் ரொக்கம், வெள்ளி, பித்தளை பாத்திரங்கள் முன்னாலயே ஒரு லிஸ்ட் கொடுத்தபடி செஞ்சுடறோம்” என நான் தொடங்கியவுடனே, ரெட்டை மண்டை மறுபடி குறுக்கிட்டு, “பொத்தாம் பொதுவா வெள்ளிப் பாத்திரம்னு சொன்னா எப்பிடி, தட்டு என்ன எடை, சொம்பு, கிண்ணம், பஞ்சபாத்திரம், பன்னீர் சொம்பு, சந்தனப் பேலா, இதெல்லாம் என்ன எடை அப்படின்னு சொல்ல வேண்டாமா? அதோட வரலக்ஷ்மி நோம்புக்கு சொம்பு, அம்பாள் முகம், வெள்ளில மாவிலை தேங்கா இதெல்லாம் பண்ணிடணும்னு சொன்னேனே, அவர் சொல்லலியா?” என்றார்.

    “ஊம் ஊம், சொன்னார் சொன்னார். வரேன். ஒண்ணொண்ணாதானே சொல்லணும், மாமா ரொம்ப அவசரப்படறேளே” என்றேன்.

    உடனே சம்பந்தித் தாத்தா குறுக்கிட்டு, “அண்ணாவைப் பாத்து அப்படியெல்லாம் பேசக்கூடாது. எங்காத்துல அவர் சொல்றதுதான் ஃபைனல். அவர் கேட்கற விவரங்களை இப்பவே டிஸ்கஸ் பண்ணிடறதுதான் நல்லது. சொல்லுங்கோ” என்றார்.

    நான் சொன்னேன், “சார்! வெள்ளி தட்டு மட்டும் 900 கிராம் வாங்கிட்டோம். சொம்பும் 600 கிராம். மொத்தமா எல்லாம் அஞ்சு கிலோ. நகை முப்பது பவுனுக்கு என்னென்னன்னு லிஸ்ட் போட்டுத் தந்துடறோம். பித்தளைப் பாத்திரம், நம்ம சம்பிரதாயப்படி என்னென்ன வேணுமோ அதெல்லாம் வாங்கித்தந்துடறோம். பின்னால வரலக்ஷ்மி விரதம், பொங்கல், ஆடின்னு எல்லா சீரும் சரியா வந்துடும் சரியா?” என்றேன்.

    உடனே ரெட்டை மண்டை, “வாட்டர் பியூரிவையர் ஒண்ணு வாங்கிடணும், இவாத்துல வெந்நீருக்கு கெய்ஸர் இல்லை. அது ஒண்ணு வேணும். மொதல்லேயே பேசினபடி ஹீரோ ஹோண்டா பைக் ஒண்ணு கல்யாணத்துக்கு முன்னாலயே வாங்கித் தந்துடணும்” என்றார்.

    சாமிநாதன் ‘சரி சரி அதுதான் வாங்கிடறேன்னு முன்னமேயே சொல்லிட்டேனே” என்றான்.

    ‘உங்க பொண்ணு வேலைக்குப் போறதுல எங்களுக்கு ஒண்ணும் தடையில்லை. ஆனா குடும்பத்து வேலைகளை அனுசரிச்சு நடந்துக்கணும். , காலைல ஸ்நானம் பண்ணி, சந்தி, ஜபம் எல்லாம் முடிச்சு சாப்பிட வரத்துக்கு பத்து மணியாயிடும். நேவேத்தியம் ஆனபிறகுதான் யாரும் சாப்பிடமுடியும். அவளுக்கு வேலைக்குப் போறதுன்னா ஆத்துல சாப்பிட்டுட்டு போக முடியாது. வெளிலதான் சாப்பிட்டுக்கணும். நாங்கள்ளாம் ஓட்டல்ல சாப்பிடற வழக்கம் கிடையாது. அதனால சவுகரியம் எப்படின்னு பாத்துக்குங்கோங்கோ” என்றார் ரெட்டை மண்டை.

    “சரி வேண்டாம்னா, அவ வேலைக்குப் போக வேணாம். அதெல்லாம் அவ அட்ஜஸ்ட் பண்ணிக்குவா. எங்க குடும்பம் பெரிசு. எல்லாரும் ஒருத்தொருக் கொருத்தர் விட்டுக்கொடுத்துப் போயிடுவா. அதிலேயும் எங்க பொண்ணு ரொம்ப அட்ஜஸ்டபிள். பார்த்துக்கலாம்” என்றார் சாமிநாதன்.

    “கல்யாணத்தை இங்கேயே வச்சுக்கப் ​போறேளா, உங்க ஊர் கும்பகோணத்துலயா?” என்றார் ரெட்டை மண்டை.

    “கும்பகோணம்தான் எங்களுக்குச் சவுகரியம். அங்கே எங்க மனுஷா எல்லாம் நிறைய இருக்கா. காய் கறி, இலை, வாழைப் பழம், தேங்காய் எல்லாம் எங்க நிலத்திலேயே விளையறது. இங்கே கோயம்பேட்டிலே வாங்கி கட்டுப்படியாகுமா?” என்றான் சாமிநாதன்.

    “அப்படின்னா, ஒண்ணு செய்யுங்கோ. நாங்க ஒரு அறுபது, எழுபது பேர் வருவோம். எல்லாருக்கும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்ல டிக்கட் புக் பண்ணிடுங்கோ, டூ அண்டு ஃப்ரோ” என்றது ரெட்டை மண்டை.

    “அறுபது எழுபதா?” என்று சற்று யோசித்துவிட்டு சாமிநாதன், தயக்கத்தோடு “சரி, செஞ்சுடலாம்” என்றான்.

    “அதுல பாருங்கோ, எங்களுக்கெல்லாம், காலைல கண் முழித்தா உடனே காப்பி குடிச்சாகணும். காப்பி ஆனவுடனே பசிக்கும். இட்லி பூரி சாப்பிடணும், அதனாலே, சிதம்பரம் இல்லைன்னா மாயவரம் ஸ்டேஷன்ல எங்களுக்கு டிபன் காப்பி சப்ளை பண்ண ஏற்பாடு பண்ணிடுங்கோ” என்றார் ரெட்டை மண்டை.

    இது என்னடா இது, புது அதிர்வேட்டு. மாயவரத்துல டிபன் காபி அறுபது எழுபது பேருக்கு எப்பிடிக் கொடுக்கிறது. நான் ஜாடை காட்டி சாமிநாதனை வெளியில் அழைத்தேன். அவனும் வந்தான். “என்னடா இது, இவங்க போற போக்குல, ரயிலிலேயே கல்யாணத்தையும் முடிச்சுடும்மாங்க போல இருக்கே, விட்டா இவா ஊரையே தானமா கொடும்பா போல இருக்கே, நீயும் அவர் கேட்கறத்துக்கெல்லாம் தலையை ஆட்டிண்டு  இருக்கே பிரம்மா மாடு போல. கொஞ்சம் கடிஞ்சு பேசுடா” என்றேன்.

    சாமிநாதனுக்கு கண்களில் நீர் துளிர்த்தது. “என்னடா செய்யச் சொல்றே. பையன் தங்கமான பையன். ஒரு குறை சொல்ல முடியாது. இந்த ரெட்டை மண்டை உள்ளே புகுந்து ரொம்ப விளையாடறது. வா,  சமாளிக்கலாம்” என்றான்.

    மறுபடி உள்ளே போய் அவரது டிமாண்ட் எல்லாவற்றுக்கும் தலையை ஆட்டிவிட்டு தட்டை மாற்றிக்கொண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டோம். முகூர்த்தம் கும்பகோணத்தில் ஆவணி மாதத்தில் வைத்துக் கொள்வதாக ஏற்பாடு. அப்போது காவிரியில் தண்ணீரும் இருக்கும். மகாமகக் குளக் கரையில் மண்டபம். அங்கும் குளிக்கலாம். இதையெல்லாம் உத்தேசித்து திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

    (​தொடரும்)

    Share
  • “தர்மாம்பாள் குறம்”

    தஞ்சை வெ.கோபாலன்

     

    குறவஞ்சி இலக்கியம் நமக்கெல்லாம் புதியது அல்ல. அவற்றில் மிகப் பிரபலமானது “திருக்குற்றாலக் குறவஞ்சி”. தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர் சரபோஜி மீது பாடப்பட்ட “சரபோஜி பூபால குறவஞ்சி” இன்னொன்று. இவைகள் எல்லாம் காலத்தால் பிற்பட்டவை. மொழி நடையும் சற்று கொச்சையாக நாட்டுப் புற வாடையுடன் இருக்கும். இந்த வகையில் இன்னொரு குறவஞ்சியும் திருவையாற்றில் கோயில் கொண்டுள்ள தர்மசம்வர்த்தினி எனப்படும் அறம்வளர்த்த நாயகி மீதான குறவஞ்சி ஒன்று உண்டு.

    இந்த குறவஞ்சிக்கு “தர்மாம்பாள் குறம்” என்று பெயர். தர்மசம்வர்த்தினியைத்தான் தர்மாம்பாள் என்பார்கள். திருவையாற்றுப் பகுதியில் பிறந்த பல பெண்களுக்கு இந்தப் பெயர் வைப்பார்கள். இந்த குறம் பற்றி திருவையாறு இசைக் கல்லூரி முதல்வராக இருந்த முனைவர் இராம கெளசல்யா அவர்கள் ஒரு தீபாவளி மலரில் கட்டுரையொன்று எழுதியிருந்தார். திருவையாற்றை அடுத்த தில்லைஸ்தானம் தான் அவருடைய ஊர். அவரிடம் கேட்டபோது தன்னுடைய இளம் வயதில் அந்த ஊரில் சில பெண்மணிகள் இந்த குறம் பாடல்களைப் பாடிக் கேட்டிருப்பதாகவும், அது சுமார் 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகமாகவும் வெளியிடப்பட்டது என்றும் சொன்னார். அதைத் தேடிக் கண்டுபிடித்து திருவையாறு அருள்மிகு ஐயாறப்பர் – தர்மசம்வர்த்தினி அம்பாள் ஆலய குடமுழுக்கு விழாவையொட்டி மறுபதிப்பு செய்தால் என்ன என்று ஆலயத்தின் கட்டளை விசாரணை முனைவர் குமாரசாமி தம்பிரான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, முனைவர் கெளசல்யா அவர்கள் பல இடங்களில் தேடி பழைய பிரதியொன்றைக் கண்டுபிடித்து அதை புதிதாக மறுபதிப்பு செய்ய ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்த நூலை அவர் ஆர்வமுள்ளவர்களுக்கு விலையில்லாமல் கொடுக்கவும் முடிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது. முனைவர் இராம கெளசல்யா அவர்கள் தில்லைஸ்தானத்தில் “மரபு ஃபவுண்டேஷன்” எனும் பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அதற்காக அதே ஊரில் ஒரு வீட்டையும் வாங்கி அங்கு சிறுவர் சிறுமியருக்கு நமது பாரம்பரியக் கலைகள், இலக்கியங்கள், இசை, நாடகம், நடனம் போன்றவற்றைக் கற்பித்து வருகிறார்கள். தேவார வகுப்புகளும், வெளிவராத பல அரிய இசை நூல்களையும் வெளிக்கொணர முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார். ஊத்துக்காடு வேங்கடகவியின் பல அரிய வெளிவராத பாடல்களை ஒருவார காலம் பயிற்சி வகுப்பு எடுத்து இசை ஆசிரியர்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். இளம் குழந்தைகளுக்கு கோலாட்டம், கும்மி, பூத்தொடுத்தல், கையால் துணி தைத்தல், சமையல் செய்தல், கோலம் போடுதல், அகராதி பார்க்கும் முறை, ஆங்கிலப் பயிற்சி, தமிழில் பிழையின்றி பேசுதல் போன்ற பல தலைப்பில் வகுப்புகள் இங்கே எடுக்கப்படுகின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்கள் பயிற்சிகளுக்கு தங்கவும், உணவும் இங்கேயே தந்து விடுகிறார். இவை அனைத்தும் அவருடைய சொந்த செலவில் நடைபெறுவதுதான் முக்கிய அம்சம். இவருடைய தாயார் ருக்மிணி அம்மாள், தங்கை மீனாட்சி, மீனாட்சியின் மகள் ஆகியோர் இந்தப் பணியில் உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

    இப்போது அந்த “தர்மாம்பாள் குறம்” பற்றி சிறிது பார்க்கலாம். காவிரி நதியானது சமுத்திர ராஜனைத் தேடி கிழக்காக ஓடிவரும் சமயம் திருவையாற்றை அடைந்த போது அங்கு கோயில் கொண்ட தர்மசம்வர்த்தினி அவளைத் தடுத்து நிறுத்தி அங்கேயே இருக்கும்படியும் சமுத்திரராஜனை இங்கே வரவழைப்பதாகவும் குறத்தியாக வந்து குறி சொல்வதாக அமைந்தது இந்த இலக்கியம்.

     

    தர்மாம்பாள் குறம்

    கடவுள் வணக்கம்

    (கண்ணிகள்)

    1. சரணமய்யா கணபதியே சரஸ்வதியே முன்னடவாய்
    ஆறுமுக வேலவனே அன்புடனே துணை வருவாய்
    2. பார்வதியாள் குறவடிவை பக்தியுடன் நான்பாட
    அறம் வளர்த்த நாயகியின் அழகான குறம்பாட
    3. காவேரிக்குக் குறிகள்சொன்ன கதையைநானும் எடுத்துரைக்க
    விக்கினங்களில்லாதே விநாயகரே முன்வருவீர்!

    லோபாமுத்திரை காவேரி நதியாக வருதல்

    4. ஸஹ்யமலை தனில்பிறந்து சமுத்திரரை மாலையிட
    அகஸ்தியரை பிரிந்துமவள் அரியபெரும் நதியாகி
    5. தட்சணத்தின் கங்கையென்னும் ஜலரூபந் தனையடைந்து
    ஜலமரூபியாய் காவேரி யென்னும் திருநாமத்துடனே வந்தாள்
    6. குடகுமலை தன்னைவிட்டு காடுசெடி மலைதாண்டி
    பர்வதத்தைப் பிளந்துகொண்டு பாம்புகளைச் சேர்த்துக் கொண்டு
    7. மலையைப் பிளந்துகொண்டு மரங்களெல்லாம் பேர்த்துக் கொண்டு
    செடிகொடியைப் பிடுங்கிக் கொண்டு தோழிமாரைக் கூட்டிக் கொண்டு
    8. ஆப்தமான தோழிமார்கள் ஐந்துபேரைச் சேர்த்துக் கொண்டு
    அமராவதி யென்னுமொரு அன்புடைய தோழியையும்
    9. பவானி யென்னுமொரு பிரசித்தமான தோழியையும்
    லக்ஷுமணா நதியான லக்ஷணமாந் தோழியையும்
    10. ஹேமவதி யென்னுமொரு இஷ்டமான தோழியையும்
    காஞ்சனா நதியென்னுமொரு களிப்புடைய தோழியையும்
    11. தோழிமாரைக் காவேரியம்மன் துணையாகச் சேர்த்துக் கொண்டு
    பரவியெங்கும் நிறைந்துகொண்டு பார்வையாக வந்துவிட்டாள்
    12. உயர்ந்து வரும் நுரையழகும் உத்ஸாக கொந்தளிப்பும்
    பெருகியந்தக் காவேரிநதி அலைமோத வந்துவிட்டாள்
    13. குயில்கூவி குதூகலிக்க குள்ர்ந்தகாற்று வீசிவர
    சோனைதூரத் தென்றல்வீச சிறந்த நதியாக வந்தாள்
    14. கனத்தசெடி குடிசைகளும் காட்டுமிருகம் பலவகையும்
    வாழையுடன் கமுகுதென்னை வாரிக்கொண்டு வந்துவிட்டாள்
    15. சாமுண்டி மலையருகில் ஸ்தலங்களெல்லாம் சுற்றிக் கொண்டு
    மைசூரு ராஜ்ஜியத்தில் வைபோகமாய் நிறைந்து கொண்டு
    16. சிவசமுத்திரந் தன்னில் வந்து சிலபிரிவாய்க் கீழிறங்கி
    ஸ்ரீரங்கப் பட்டணத்தில் ரங்கருக்கு மாலையாகி
    17. ஈரோடு கொடுமுடியின் எல்லைவழி யாக வந்து
    அகண்டமென்னும் காவேரியாய் அழகுடனே பரவிவந்தாள்
    18. ஜம்புநாதர் ஸ்ரீரங்கர்க்கு திருமாலையாக வந்தாள்
    பாற்கடல்போல் அலைமோத படுகையெங்கும் நிறைந்துவந்தாள்
    19. வயல்களெல்லாம் நிரப்பிக் கொண்டு வேகமாக வந்துவிட்டாள்
    அறம்வளர்த்தாள் படித்துறைக்கு ஐந்துமுகத் தோடு வந்தாள்
    20. பஞ்சநத க்ஷேத்திரத்தில் காவேரியும் வந்தவுடன்
    ஆள்கொண்ட சுவாமிசென்று அறம்வளர்த்தாளுக்கு அறிக்கையிட்டார்
    21. அம்பிகையாள் தானெழுந்து ஆபரணஞ் சோதிவிட
    பாக்குடனே வெற்றிலையும் பழத்துடனே தேங்காயும்
    22. மஞ்சளுடன் குங்குமமும் மணமுடைய சந்தனமும்
    புஷ்பவகை யுள்ளதெல்லாம் தட்டினிலே எடுத்துக் கொண்டு
    23. காவேரியை வரவேற்று காணிக்கையும் தான்கொடுத்தாள்
    வாங்கிக் கொண்டு காவேரி வணங்கி நமஸ்கரித்தாள்
    24. வாழ்த்தியப்போ அம்பிகையும் நதியைக் கண்டு மனமகிழ்ந்தாள்
    சமுத்திரரை நானடைய சந்தோஷமா யனுப்புமென்று
    25. காவேரி கேட்கலுமே கல்யாணிதேவி சொல்வாள்
    சமுத்திரரை இங்கழைப்பேன் சந்தோஷமா யிருப்பாயென்றாள்
    26. காவேரி கேட்டுமதைக் கலங்கியவள் தன்மனதில்
    சரீரமெல்லாம் அங்கேவைத்து சாக்ஷியாக ஒருரூபம்
    27. சாக்ஷியான காவேரி சாகரத்தை நோக்கிச் சென்றாள்
    அம்மனுட ஆக்ஞையினால் சமுத்திரரும் அக்ஷணமே
    28. உத்ஸாகத் துடனேவந்தால் உலகமெல்லாம் முழுகுமென்று
    பாதாளத்தில் மறைந்துகொண்டு பட்டணத்தின் நடுவேவந்தார்
    29. ஸ்தலத்தினுட மகிமைதன்னை சமுத்திரருந் தான்பார்த்தார்
    ஸப்தஸ்தல சுவாமிகளும் சமுத்திரரை வரவேற்று
    30. பழங்களுடன் தாம்பூலம் பிரஸாதங்களும் தான்கொடுத்தார்
    வாங்கிக்கொண்டு சந்தோஷமாய் சமுத்திரரும் போய்மறைந்தார்
    31. சாக்ஷியென்னும் காவேரிநதி சாகரத்தில் தேடிவிட்டு
    திரும்பிவந்து காவேரி தயங்கி மனந்தளர்ந்து
    32. சமுத்திரரை யடையவென்று தர்மாம்பாளை நினைந்து
    கன்னிகையாய் திருவையாற்றில் காவேரி தவமிருந்தாள்
    33. பார்வதியாள் காவேரியை பரிஹாஸம் பண்ணவென்று
    அறம்வளர்த்தாள் குறவடிவை அழகாகத் தானடைந்தாள்.

    தர்மாம்பிகை குறத்தி வடிவெடுத்தல்
    (2ஆவது வேறு மெட்டு)

    1. பாடகந் தண்டையும் பாதஸரமும்
    பத்து விரலுக்குப் பீலிமெட்டியும்
    அடுக்குமோதிரம் சங்குவளையும்
    அஸ்தகடகமும் தோள்வளையும்
    2. குண்டும் பவழமும் குடமணித் தாழ்வடம்
    கோத்தமுத்துடன் வஜ்ஜிரமாலையும்
    சங்கு மணியும் பச்சை மணியும்
    சரப்பளி உத்தண்டா மோகனமாலையும்
    3. கொப்புடன் நல்ல முத்துவாளியும்
    குந்தளஓலையும் குடைக்கடுக்கனும்
    மின்னல் ஒளிபோல மூக்குத்தியும்
    முத்துக்கட்டின வஜ்ஜிரக்கல்லும்
    4. பல்லொளியும் புன் சிரிப்பும்
    பவழம்போல சிவந்த வாயும்
    கண் மலரும் மையழகும் இரு
    கண்ணிடையில் பச்சிலைப்பொட்டும்
    5. கஸ்தூரிப்பொட்டும் நெற்றியின் பட்டமும்
    கல்லிழைத்த சுட்டியாழ்வானும்
    மல்லிகை முல்லை மலர்கள்சூடி
    மயிரைவாரி முடிந்த அழகும்
    6. கறுப்பு ரவிக்கையும் பட்டுப்புடவையும்
    கச்சிதமாகவே உடுத்தவழகும்
    பாலகனை மார்புடனே
    பட்டுத் தலைப்பாலே அரவணைத்து
    7. குஞ்சுகளைக் குறத்தியம்மை
    கூடத்தன்னுடன் கூட்டிக்கொண்டு
    கொடிபோல இடையும் துவளக்
    கூடையெடுத்து இடுப்பினில் வைத்து
    8. பாக்குப்பையும் இடுப்பில் சொருகி
    பாவனையாகவே சாய்ந்துநடந்தாள்
    காதுவரையில் நீண்ட கண்ணும்
    கனிவாயும் புன்சிரிப்பும்
    9. செண்பகம் போல் மேனிவர்ணமும்
    செந்தாமரை போல் முகமும்
    தாழைமடல் போன்ற காதுகளும்
    சந்திரன்போல வளைந்த நெற்றியும்
    10. பஞ்சநதி திருவையாற்றின்
    பெரியதொரு வீதியிலே
    தையலந்த வண்ணக் குறத்தி
    தானும் வந்தாள் குறிபார்க்க.

    ஸ்திரி ஜனங்கள் குறத்தியிடம் குறிகேட்டல்

    11. செம்பொன் கொடிபோல் மெல்லநடந்து
    தெருவீதி சுற்றி வந்தாள்
    தேர்மூட்டியினருகே நின்று
    சிவதெரிசனம் பண்ணிக்கொண்டு
    12. சிங்காரமாகவே வண்ணக் குறத்தி
    தென்னண்டைவீதித் தெருவில் வந்தாள்
    அம்பிகையென்னுங் குறத்தியிடத்தில்
    ஆதரவாய் வந்து மாந்தரெல்லாம்
    13. கூட்டமாய்க் கூடியே கொம்பனைமாரெல்லாம்
    குறத்தியைப்பார்த்து கேட்கத் துவங்கினார்
    பெண்களிரண்டுபேர் புத்தியறியல்லை
    இங்கழைத்துவந்தேன் பாராய் குறத்தி
    14. மூத்தபிள்ளைக்கு வேட்க வகையில்லை
    சாஸ்திரம் பாரென்று சொன்னாளொருத்தி
    இளையபிள்ளையும் என்னுடன் பேசவில்லை
    எனக்குச் சொல்லென்று கேட்டாளொருத்தி
    15. கைக்குழந்தைக்கு காச்சலடிக்குது
    காட்டவந்தேனென்று சொன்னாளொருத்தி
    நாத்தானாருக்கு ஆத்துப் புருஷன்
    நலமில்லையென்று கேட்டாளொருத்தி
    16. கொழுந்தனாரொத்தன் கூத்தியார் வீட்டிலே
    குடியாய்க் கிடக்கின்றான் என்றாளொருத்தி
    தோழியொருத்தி துர்க்கனா காண்கிறாள்
    திருநீறுதாவென்று கேட்டாளொருத்தி
    17. மாமனாருக்கு மண்டையிடிக்குது
    மாத்திரை தாவென்று கேட்டாளொருத்தி
    நாட்டுப் பெண்ணுக்கு பேய்பிடித் தாட்டுது
    நல்ல மருந்துதா வென்றாளொருத்தி
    18. இப்படிப் பெண்டுகள் எல்லாருங் கேட்கவே
    இங்கிதமாகக் குறிகளுஞ் சொல்லி
    கலாஸநாதரை ஆலயஞ் சென்று
    கண்டுபின் வந்து குறிகளுஞ் சொல்வேன்
    19. என்று சொல்லியந்தப் பெண்டுகளுடனே
    ஈச்வரியாகிய வண்ணக்குறத்தி
    அம்பிகை என்னும் வண்ணக்குறத்தி
    ஆள்கொண்டார் கோவிலைக் கண்டுதொழுது
    20. ஆள்கொண்ட சுவாமியின் கோயிலைவிட்டு
    அய்யாரப்பரின் சந்நதிவந்தாள்
    சூர்யபுஷ்கரணி ஜலத்தை யெடுத்து
    ஸிரஸின் மேலே தெளித்துக் கொண்டாள்
    21. தென்கைலாஸம் வடகைலாஸம்
    சுற்றிப்ரதக்ஷணம் பண்ணிவந்தாள்
    சுவாமியுடைய சந்நதித் தூணில்
    சாய்ந்திருந்தாள் வண்ணக்குறத்தி
    22. சந்நதியிலே யிருந்த குறத்தி
    வடிவைக்கண்டு சங்கரரும்
    கயல்மீன் போன்ற கண்ணழகும்
    கஸ்தூரிப்பொட்டும் முகஒளியும்
    23. புன்சிரிப்பும் பல்லொளியும்
    புவனேச்வரி வடவழகும்
    ராஜேச்வரி அழகைக் கண்டு
    நாலுநாழி பிரமித்திருந்தார்
    24. இந்நெடு நாளிதுவரைக்கும்
    இந்த வடிவை நாம் கண்டதில்லை
    மன்மதனை யெரித்த சிவன்
    மயங்கியே தன் மனதிற்குள்ளே
    25. காமனைநீறா யெரித்த சிவன்
    கலங்கியே தன் மனதிற்குள்ளே
    அந்தக் குறத்தி வடிவைக்கண்டு
    ஆசையுடன் மோகங் கொண்டார்.

    பஞ்சநதீசர் சுந்தரவடிவுடன் குறத்தியிடம் வந்து
    சம்பாஷித்தல். (3ஆவது வேறு மெட்டு)

    1. கைவளையும் சங்கிலியும் கணையாழி மோதிரமும் (சுவாமி)
    கடுக்கனுடன் பதக்கம்கண்டி சரப்பளியும் தரித்தார்
    2. சாயக்கம்பி வேஷ்டிகட்டி சரிகைச்சால்வை யணிந்து
    தலைப்பாகையும் உருமாலை சங்கரரு மணிந்தார்
    3. சந்தனக் குறுக்குமிட்டு ஜவ்வாதுப் பொட்டுமிட்டு
    தங்கரைஞாண் தாழித்தும் கந்தம் புனுகணிந்தார்
    4. கொழுந்து வெட்டிவேர் மல்லிகை குடமல்லிகைப் புஷ்பம்
    குமுகுமுன்னு பரிமளிக்க குடுமியிலே அணிந்தார்
    5. வாயிலே பாக்கடக்கி வெண்பட்டுப் பைபிடித்து
    மடித்ததொரு வெற்றிலையை விரல்நடுவி லிடுக்கி
    6. கந்தர்வ வேஷத்துடன் குறத்தியிடம் வரவே (சுமாமி)
    கூர்விழியால் மயக்கியந்தக் குறத்தி மெள்ளச் சிரித்தாள்
    7. ஈச்வரரைக் கண்டவுடன் எழுந்திருந்து குறத்தி (அம்மை)
    இருகையினா லுங்கூப்பி அடிவணங்கி நின்றாள்
    8. வாரும்பெண்ணே குறத்தியேயுன் வடிவைக்கண்டு வந்தேன்
    மாலையிட்ட உன்கணவன் வந்தானோகூட
    9. தாய்தகப்பன் உனக்குமுண்டோ சகோதரர்கள் உண்டோ
    ஜாதிகுலம் நாமந்தன்னை தனித்தனியாய் சொல்வாய்
    10. எந்தநாடு எந்ததேசம் எங்கேவந்தாய் குறத்தி
    இந்நெடுநாள் உன்போல் வடிவைக்கண்டது நானில்லை
    11. சித்திரைத் திருநாளுக்கு ஜனங்கள் மெத்த வருவார் (ஆனால்)
    சுந்தரிஉன் வடிவைப்போல கண்டது நானில்லை
    12. வைகாசி வஸந்தனுக்கு மனுஷ்யாள் இங்கு வருவார் (ஆனால்)
    வையகத்தில் உன்னைப்போன்ற வடிவைக் கண்டதில்லை
    13. செல்லத்துடன் சிவனாரும் சுந்தரியைக் கேட்க
    வண்ணக் குறத்திகேட்டு மயக்கியவ ளுரைப்பாள்
    14. ஜாதிகுலங் கேட்டீரே சுவாமியென்னை யிப்போ – நான்
    தனித்தனியா யெடுத்துச் சொல்வேன் சலியாமல் கேளும்
    15. ஜாதியும் நான் குறச்சாதி தனிவழியும் வருவோம் – நாங்கள்
    சாம்பபர மேசருக்கும் சம்பந்தங்களுண்டு
    16. அப்பன் ஆயி என்னை அம்பிகையென் றழைப்பார்
    என் அண்ணன் பெயர் சக்ரபாணி ஆறுமுகனென் பிள்ளை
    17. குச்சுக்கு காவலாயென் கிழவனாரும் இருப்பார்
    கூடைமுறங் கட்டிநாங்கள் குறிபார்த்துச் சொல்வோம்
    18. குஞ்சுகளின் பசியார அன்னமது கொடுத்து
    கொழித்தமுத்தும் முறத்தில் வைத்தால் குறிபார்த்துச் சொல்வேன்
    19. வண்ணக் குறத்தியிந்த வக்கணைகள் படிக்க
    கேட்டுமந்தப் பரமேசருங் கம்பீரமாய்ச் சொல்வர்
    20. பட்டுச்சீலை படியரிசி பாக்குடன் வெற்றிலையும்
    பசியடங்கப் பட்டைசாதம் பணமுங்காசுந் தருவேன்
    21. உன்கணவன் கிழவனென்று சொன்னாயேநீ பெண்ணே
    கந்தருவன் போன்றநானே உன்னழகுக் கேர்வை
    22. செல்லத்துடன் சிவனாரும் சிரித்துக்கொண்டே சொல்ல
    வண்ணக்குறத்தி சினந்து மறுத்திதனைச் சொல்வாள்
    23. என்கணவன் குறவனெங்கள் கிழவனிதைக் கேட்டால்
    ஈட்டியினாலே குத்தி என்னை இழுத்தெறிவார்
    24. ஆசைபெரிதென்று சொல்லி உம்மை நானுமடைந்தால்
    அறம்வளர்த்த நாயகியும் அக்கினியால் தகிப்பள்
    25. வேலைசெய்யத் தாதியுண்டு பாக்கியமெனக் குண்டு
    விதம்விதமாய் பட்டுமுண்டு வெகுபணதி யுண்டு
    26. கட்டிலுண்டு மெத்தையுண்டு கிழவனரு கிருப்பேன்
    களஞ்சியத்தில் அரிசியுண்டு கவலை கெடயிருப்பேன்.

    குறத்தி ஈசருக்குதன் பெருமையுரைத்தல்
    (2ஆவது மெட்டுப்போல் பாடலாம்)

    1. கோத்தமுத்து மாலையுடன் கொப்புடனே வாளிமின்ன
    ஏற்றமுள்ள ஈச்வரியாள் எடுத்துச்சொல்வள் தன் பெருமை
    2. பூத்திருக்கும் சோலைகளும் புஷ்கரணி தீர்த்தங்களும்
    காஞ்சனத்தால் ஆலயமும் கடைத்தெருவும் வீதிகளும்
    3. பார்வையுள்ள வீதிகளும் படித்துறையும் காவேரியும்
    ஏழுநிலைக் கோபுரமும் எட்டவொண்ணாத் திருமதிலும்
    4. பத்துநிலைக் கோபுரமும் என் பள்ளியரை சேர்வைகளும்
    யாகம்வேள்வி செய்யும் நல்ல அந்தணர்கள் கூட்டங்களும்
    5. வேத பாராயணத்தழகும் நான் வீதிவரும் வைபவமும்
    பஞ்சநதி மகத்துவமும் எந்தன் பரிபூர்ண நதியழகும்
    6. இன்னமுண்டு என்பெருமை ஜதீசரேநீர் கேளுமென்று
    தையலந்த உமையவளும் தன்பெருமை பின்னுஞ்சொல்வள்.

    குறத்தி ஈசருக்கு மலைவளமை யுரைத்தல்
    (2வது மெட்டுப்போல் பாடலாம்)

    1. கைலாஸத்தினில் வஹிப்பவரே காளவிஷத்தை புனித்தவரே
    எந்தனுட மலைகள்தன்னை ஈச்வரரே நீர்கேளும்
    2. கொங்குகுடகு சொல்லிமலை வங்கம் மலையாளதேசம்
    கஞ்சிகாள ஹஸ்தியுடன் காசியிலும் நானிருப்பேன்
    3. அங்குமிருப்பேன் சுவாமிமலையில் அடர்ந்தசோலைக் குடைந்தையிலும்
    இங்குமிருப்பேன் பஞ்சநதியிலும் ஏழூஉரும் சுற்றிவருவேன்
    4. வைத்தீச்வரன் கோவிலிலும் மனமகிழ்ந்துநான் வஸித்திடுவேன்
    அறம்வளர்த்தாள் சந்நதியில் அனுதினமும் நானிருப்பேன்
    5. சங்கமுகம் மாயவரமும் சபாநாதரைக் கண்டுவருவேன்
    மங்கள நாயகரே மஹானுபாவா நாடுகேளும்

    குறத்தி ஈசருக்கு நாட்டுவளமுரைத்தல்
    (3ஆவது மெட்டுப் போல பாடலாம்)

    1. எந்தனுட நாடுதன்னை கேளுமையா சுவாமி
    ஏற்றமுள்ள ஈச்வரனார் வாழுமெங்கள் நாடு
    2. பொங்குப் புகழ்காவேரி உள்ளதெங்கள் நாடு
    புண்ணியராம் மானிடர்கள் புகழ்ந்தேற்றும் நாடு
    3. சந்திரரும் சூரியரும் வஸிப்பதெங்கள் நாடு
    சாரங்கபாணியனார் பள்ளிகொண்ட நாடு
    4. அகிலாண்ட ஈச்வரியாள் வாழுமெந்தன் நாடு
    அப்பருக்கு அருள் புரிந்த நாடுமெந்தன் நாடு
    5. அஞ்சுநதியோடி வரும் பஞ்சநதம் நாடு
    அன்னை பரமேச்வரியாள் அறம் வளர்த்தாள் நாடு
    6. மாத்ரு பூதேச்வரனார் மலையுமெந்தன் நாடு
    மலையின் மேலேவாழும் ஒரு மகனுமுண்டு எனக்கு
    7. ஜம்புநாத ஸ்வாமியுடைய தீர்த்தமெந்தன் நாடு
    ஸ்வயம்புவன பிக்ஷாண்டார் கோவிலுமென் நாடு
    8. குத்தாலம் பாபவிநாசம் கோவில்மலை நாடு
    முத்தான திருஅனந்தர் நாடுமெந்தன் நாடு
    9. திருச்செந்தில் திருக்குன்றம் திருத்தணியும் நாடு
    திருப்பதி யென்னும் அந்தத் திருமலை என் நாடு
    10. வண்ணக் குறத்தியும் தன் பெருமையை வர்ணிக்க
    கூட்டங்கூடி தேவரெல்லாம் சுவாமியுடன் கேட்க
    11. சரஸ்வதியும் லக்ஷுமியும் சந்தோஷமாய்க் கேட்டு
    குறத்தியுடமகிமை தன்னைக் காவேரிக்குச் சொன்னார்
    12. காவேரியுங் கேட்டவுடன் தன் கவலைநீங்கி
    சகியைவிட்டுக் குறத்திதன்னை அழைத்துவரச் சொன்னாள்

    குறத்தி காவேரிக்குக் குறிசொல்ல வருகுதல்
    (2ஆவது மெட்டுப் போல் பாடலாம்)

    1. (அடி) கொங்கையழகி குறத்தியம்மே நீ
    குறி சொல்லுகின்ற மகத்துவத்தை
    2. எங்கள் நாயகி காவேரி கேட்டு
    அழைக்கச் சொன்னாள் குறத்தியே யுன்னை
    3. செம்பொன் கொடிபோல் குறத்தியெழுந்து
    திருக்காவேரிக் கரையில் வந்தாள்
    4. வீற்றிருந்து தவம் செய்யுமந்த
    மெல்லி நல்லாள் காவேரி யம்மனும்
    5. கண்டவுடன் குறத்தி வரவைக்
    காவேரி யம்மனுங் கண்ணைவிழித்து
    6. கயல்மீன் போன்ற கண்மலரும்
    கஸ்தூரிப் பொட்டும் முகஒளியும்
    7. நகைத் திடுமந்தப் பல்லொளியும்
    ராஜேச்வரியின் வடிவழகும்
    8. கண்டவுடனே குறத்தி வடிவை
    காவேரி யம்மனும் மனந்திகைத்து
    9. (அடி) ஸஹ்யமலைக்கும் சமுத்திரத்துக்கும்
    சாய்ந்த வண்ணமாய் நானிருப்பேன்
    10. இந்நெடு நாளாய்க் கண்டதில்லை
    உந்தன் வடிவைப்போல குறத்தி
    11. எந்த நாடடி குறத்தி யுனக்கு
    எனக்குச் சொல்வாய் எமக்குறத்தி
    12. என்றவுடன் மந்தஹாஸமாய்
    உமையுமப்போ எடுத்துரைப்பள்
    13. இந்த நாடெல்லாம் எந்தன் நாடுதான்
    இன்னமுண்டெந்தன் நாடுகளும்
    14. பொங்கித் தளும்பும் நாலுகடலும்
    புவனேந்திரக் குறவருடன்
    15. அங்கங்கிருந்து நான் வசிப்பேன்
    அய்யா றப்பன் குறத்தியென்பேர்

    குறத்தி காவேரிக்குக் குறி சொல்லுதல்
    (3ஆவது மெட்டுப்போல் பாடலாம்)

    1. எந்தனுட நாடுகளும் சொல்லித் துலையாது
    ஏற்றமுள்ள ஈச்வரனார் ஆள்வதெங்கள் நாடு
    2. சொல்லுவேண்டி உன் குறையை தயவெனக்குண்டாக
    சொர்ணங்களையுங் கொணர்ந்து வைத்தால் தகுந்த குறிசொல்வேன்
    3. நேர்த்தியான முத்துரத்னம் பவழங்களுங் கொணர்ந்தால்
    (உன்) நெஞ்சிலுள்ள குறைகளை நான் நிவர்த்தியாகச் சொல்வேன்
    4. வஜ்ஜிரமும் பச்சையுடன் வைடூர்யமுங் கொணர்ந்தால்
    (உன்) மனதிலுள்ள குறையை நானும் மாற்றும்படி சொல்வேன்
    5. சந்நியாசி வேஷங்கொண்ட தபஸியுந்தன் கணவன்
    தலைமயிரை ஜடைதரித்து தபஸுபண்ணும் முனிவன்
    6. கெளபீனம் கடுசூத்ரம் கமண்டலமும் தரித்த
    அமைந்த கிருஷ்ணாஜினந்தரித்த அகஸ்தியருமவரே
    7. அகஸ்தியரை மாலையிட்டு லோபாமுத்திரை நீயும்
    அகண்டகாவேரியாகி அவரைவிட்டுப் பிரிந்தாய்
    8. சமுத்திர ராஜனுடன் சங்க முகமாகி
    சமுத்திரத்தப் போயடைய தபஸு பண்ணியிருக்காய்
    9. மார்கழி மாதத்தினில் மணல்மேடு இடுவாய்
    மடுக்களிலும் ஜலம் வற்றி வெகு நாற்றம் நாறும்
    10. ஆற்றின் ஜலம் வற்றிவிட அனைவர்களுந்தவித்து
    ஊற்றின் ஜலந்தனையெடுத்து உலகிலுள்ளோர் உழல்வார்
    11. வைகாசி வஸந்தகாலம் வருவாய் வெள்ளம் பெருகி
    வையகத்து மனிதரெல்லாம் முழுகிக் கதிபெறுவார்
    12. ஆடிமாதம் பெருக்கெடுத்து அணைகரையில் போட்டால்
    அப்போ நீயும் சமுத்திரரை அடைந்து மனமகிழ்வாய்
    13. கொஞ்சுங்கிளிபோல் குறத்தி குறிகள் சொல்லிச்சிரிக்க
    கூட்டங்கூடி சகலபேரும்கூடி நின்று கேட்டார்

    குறத்தி ஈசருடன் சம்பாஷித்தல்
    (4ஆவது வேறு மெட்டு)

    1. குறத்தி முகத்தையும் குறிசொல்லும் நேர்த்தியும்
    குறிப்புடனே பார்த்து
    க்ஷணப் பொழுதாகொலும் கண்ணை மூடாமல்
    சங்கரர் பார்த்திருந்தார்
    2. (அடி) கொங்கையழகி குறப்பெண்ணே நீயும்
    குறிசொன்னது போதும்
    (என்) ஆலயம் புகுந்து அன்னம் புஜித்து
    அணைவாய் நீ என்னையென்றார்
    3. சிறுபிள்ளைப் புத்திபோல் சிவனுமுரைக்கவே
    சிவகாமி தான் கேட்டு
    சித்தத்திற்குள்ளே சிரித்து மகிழ்ந்து
    சீறியே ஏதுசொல்வள்
    4. பஞ்சாப கேசரின் பாததெரிசனம்
    பண்ணவே நானும் வந்தேன்
    ஆசைபெரிதென்று உம்மையும் நானும்
    அணையவும் நீதியுண்டோ
    5. அறம்வளர்த்த உம்மநாயகி யாளுமக்
    கனுக்ஞை கொடுத்தாளோ
    ஆகட்டுமிப்போ தவளுடன் சொல்லியே
    ஆக்கினை பண்ணிவைப்பேன்

    ஈசர் அம்பிகையைக் காணாமல் வருந்துதல்

    6. சிரித்த முகத்தையும் துடுக்கான வார்த்தையும்
    சிவசங்கரர்தான் கேட்டு
    (நம்ம) சுந்தரிதேவியும் வந்தாளோ வென்றவர்
    சுற்று முற்றும் பார்த்தார்
    7. சரஸ்வதி லக்ஷுமி இருவருமாகச்
    சரேலென் றெழுந்திருந்து
    சங்கரியாளை அழைத்திட நாமும்
    அறிவழிந்து போனோம்
    8. ஆலயத்திற்சென்று அம்பிகையைத் தேடி
    ஆராய்ந்து பார்த்துமவாள்
    மூலை முடுக்கெல்லாம் தேடிக்காணாமல்
    விசாரமுந் தானடைந்தார்
    9. சிவசுந்தரியாளைக் காணாமலேயந்தச்
    சங்கரர்தாம் புலம்பி
    நந்திகேசரைவிட்டு எங்குந் தேடச்சொல்லி
    (சிவ)நாதன் தவித்தழுதார்
    10. சித்திவிநாயகா சங்கரியாளைக்
    காணோமே என்னசெய்வேன்
    சுந்தரிதேவியைக் காணாவிட்டால்நான்
    ஜீவனிழப்பேன் என்றார்
    11. சிவசுப்ரமண்யா உன்னுட அன்னையைக்
    காணோமே என்ன செய்வேன்
    அம்பிகையாளை நான் கண்ணிற் காணாவிட்டால்
    ஆவி யிழந்திடுவேன்
    12. கெளரீவல்லபர் என்று பிரபஞ்சத்தில்
    கீர்த்தியாய் சொல்லிடுவர்
    வாமபாகத்தினில் தேவியில்லாவிட்டால்
    வாகன மேறுவரோ
    13. பார்வதி சங்கரர் என்று பிரபஞ்சத்தில்
    பக்தியாய்ச் சொல்லுவார்கள்
    பத்தினியு மில்லாவிட்டால் பத்னிஹீனனுக்கு
    பூஜையும் பண்ணுவாரோ
    14. அம்பிகையாள் வந்து சேராவிட்டலெனக்
    கன்னபானங்கள் வேண்டாம்
    அபிஷேகம் வேண்டாம் அலங்காரம் வேண்டாம்
    அர்ச்சனையும் வேண்டாம்
    15. சுந்தரி சுந்தரி என்று எல்லோருமாய்
    சேர்ந்து அலத்தலுற்றார்
    சிவகாம சுந்தரிதேவியுங் கேட்டு
    சிரித்தாள் மனதிற்குள்ளே
    16. சபையிலுள்ள பேரைக் கடைக்கண்ணாலே பார்த்துச்
    சங்கரி தானிருக்க
    ஸரஸ்வதி லக்ஷுமி குறத்தியுடைய
    சமிபத்திலோடு வந்து
    17. சங்கரியாளைக் குறத்தி நீயும்
    க்ஷணத்தில ழைத்தாயானால்
    செம்பொன்னும் முத்தும் ரத்தினங்க ளெல்லாம்
    சொர்ணத் தட்டிற் கொடுப்போம்
    18. அம்பிகையாளை அழைப்பித்தா லிக்ஷணம்
    யானை சேனை குதிரை
    வெண்கலத் தேருடன் தங்கப் பல்லாக்கும்
    வெகுமானந் தாரோமென்றார்
    19. சேனை பரிவாரம் யானைகளுண்டென்று
    துடுக்காகப் பேசுகின்றீர்
    (என்)சித்தத் தினிலிப்போ கோபம் வந்துதானால்
    தகித்து விடுவேன் நானும்
    20. சினத்துடனே யந்தக் குறத்தியுரைத்திட
    சரஸ்வதி லக்ஷுமியும்
    குறத்தியை நாமும் அதட்டிப் பேசினது
    குற்றமாய் நேர்ந்த திப்போ
    21. குறத்திக்கு கோபம் வந்துவிட்டதானால்
    குத்திவிடுவல் நம்மை
    குறவரெல்லாருமாய் கூட்டமாய்க்கூடி
    கொன்றுவிடுவார் நம்மை
    22. என்று சொல்லிக்கொண்டு தேவியைக் காணாமல்
    ஏக்கமடைந்திருந்தார்
    தையல் குறத்தி சரஸ்வதியை நோக்கி
    சாந்தமாய் தானுரைப்பாள்

    அம்பிகை தன்னை அறிவித்து ஈசருடன் ஆலயம் சேர்தல்

    23. சபையுள்ளோர் ஏக்கமும் சங்கரர் வாட்டமும்
    சங்கரி கண்டிரங்கி
    சந்தோஷமாகச் சபையோர்களைப் பார்த்து
    தயவாகத் தூனுரைப்பாள்
    24. கோடிநவரத்தினம் கொண்டு வந்தாலிப்போ
    குறிபார்த்து நானுமுங்கள்
    அம்பிகையாளை அரைநாழிக்குள்ளாக
    அழைப்பித்துத் தாரேனென்றாள்
    25. முப்பத்து முக்கோடி தேவர் ரிஷிகளும்
    முன்னே நிறைந்திருக்க
    ஆதிசிவனுட அண்டையில் சென்றவள்
    அவர் கரத்தைப் பிடித்தாள்
    26. தையல் குறத்தியும் கையைப் பிடிக்கவே
    சங்கரர் தான் பயந்து
    நெஞ்சந் துடிக்க சரீரம் பறக்கத்
    திடுக்கிட்டுத்தான் திகைத்தார்
    27. குறத்தியைக் கண்டாசைப் பட்டீரே
    கூசாமல் கையை காட்டும்
    வெட்டவெளியான பிரம்மம் உமக்கிந்த
    வெட்கமுந் தானுமுண்டோ
    28. விழுத்து எறிவீர் எடுத்து உடுப்பீர்
    வித்தைகள் செய்திடுவீர்
    சதாசிவப் பிரும்மம் நானென்று சொல்வீர்
    சந்யாசி போலிருப்பீர்
    29. பதிவிரதைமார்களைப் பங்கம் குலைப்பீர்
    பரம்பிரம்ம மூர்த்தி என்பீர்
    ரிஷிபத்தினிமாரண்டை நிர்வாணத்துடனே
    நின்றது வெட்க மன்னோ
    30. அறிவிலியாகிய அஸுரனுக்கு
    அவன் கேட்ட வரங்கொடுத்து
    அண்டம் பதினாலும் ஓடியலைந்து நீர்
    ஐவேலிக்காயினி லொளித்தீர்
    31. மூர்த்தியில் சமர்த்தராம் விஷ்ணுவுமப்போது
    மோஹினி வேஷங்கொண்டு
    அஸுரனைக் கபடத்தால் வதைசெய்த விஷ்ணுவை
    அணைந்தது வெட்கமன்றோ
    32. வண்ணக் குறத்தி பரிஹாஸம் பண்ணவே
    மஹாதேவர் தான் கேட்டு
    குறத்தியைக் கண்டு நாமிச்சையடைந்தது
    குற்றந் தானென் றுணர்ந்தார்
    33. சுவாமி தளர்ந்திடும் மேனியும் சங்கரர்
    வாட்டமும் சங்கரி கண்டிரங்கி
    க்ஷமிக்க வேணுமென்று சங்கரர் பாதத்தில்
    சரண மென்றே பணிந்தாள்
    34. தையல் குறத்தி பணிந்தவுடனே
    சபையோர்கல் தான் பார்த்து
    அம்பிகை தானிவள் என்றறிந்தவுடன்
    ஆனந்த மாயிருந்தார்
    35. ஆதி சிவனாரும் அம்பிகையுடனே
    ஆலயந் தன்னிற் சென்று
    குறத்தி வடிவான அம்பிகையாளைக்
    கூசாமலே யணைந்தார்
    36. அம்பிகையுடனே அபிஷேகமாடி
    அமுதமும் தான் புஜித்து
    வாமபாகத்தினில் தேவியுடன் சிவன்
    மந்தஹாஸமாய் வீற்றிருந்தார்
    37. பக்தியாய் சொன்னவர் சிரத்தையாய்க் கேட்டவர்
    கற்றுக் கொடுத்தவர்க்கும்
    அஷ்டபோகத்துடன் புத்திரபாக்கியமும்
    அறம்வளர்த்தாள் கொடுப்பாள்
    38. அறம் வளர்த்த பரதேவியின் பாதத்தை
    அனுதினமும் ஸ்மரித்தால்
    அம்பிகையும் திருப்பாதார விந்த
    ஐக்கியமுந் தான் கொடுப்பள்
    39. அம்பிகை யருளால் காவேரி பெருகி
    ஆற்றினில் வெள்ளம் வந்து
    சந்தோஷமாகிச் சமுத்திரத் தைக்கண்டு
    சங்க முகமடைந்தாள்
    40. மங்களம் மங்களம் தர்மாம்பிகையுடன்
    பஞ்சநதீச்வரர்க்கும்
    மங்களம் திருக்காவேரி நதிக்கும்
    மண்ணில் வாழும் மாந்தருக்கும்

    ==========

    காவேரியம்மன் கப்பல்
    (விநாயகர்துதி கப்பல்)

    நமோமஹா கணபதியே – சம்போ – நமோமஹா குணநிதியே
    நமோஉமா ஸ்கந்தாய – சம்போ – நமோஹரன் ஆநந்தாய

    (முடுகு)

    விக்நராஜாய வெகு விக்னஹரணாய
    லம்போதராய ஹேரம்பாய மஹதே
    ரம்பாபலகராய அம்பா ஸுதாய
    அபயவர கரதாய ஏகதந்தாய
    சுபமுக வரதாய லம்போதராய
    கபிலமுக வர்ணாய கஜகர்ணிகாய
    விகடதந்தாய ஸுர கணபூஜிதாய
    தூமகேதாய யக்ஷ கணஸேவிதாய
    பாலசந்திராய ஹரஸ்கந்த ஜேஷ்டாய
    சரவண பவாயநம கருணாரஸாய

    ஏலேலோ கணராஜா — ஐயா
    ஏலேலோ சர்வேசா

    மண்டல மெல்லாம் புகழும் – பொன்னி
    மங்களக் காவேரி கப்பல்
    தென்கிழக்காய் காவேரி – அம்மன்
    செல்லுகின்ற ஸ்தலங்கள் சொல்வாம்

    (முடுகு)

    விண்ணவர்கள் புகழும் ஸ்ஹ்யகிரி தனைவிடுத்து
    மின்னொத்த குடகுகிரி காட்டின் வழிவந்து
    உன்னத கிரிகடந்து கண்காணாம லோடி
    தென்னலுடன் சிவசமுத்திர சிகரம்விட்டு இழிந்து
    சேர்த்துவந்த கபிலையுடன் சந்தோஷமாய்ச் சேர்ந்து
    திருமுக்கூ டென்னுமந்தத் திருநகரைத் தாண்டி
    ஸ்ரீரங்க பட்டணத்தில் சடுதியாக வந்து
    ஸ்ரீரங்க நாதருக்குத் திருமாலையாய் வளைந்து’
    சீருடைய கெளமுகியும் சேலம் நகர் சேர்ந்து
    க்ஷேத்திரமாம் பிரம்மகிரி சேர்வைமலை தாண்டி
    அந்தமாய் பவானிநதி அன்புடனே கூட
    ஆனைக்குந்தி மலையைவிட்டு அமராவதி சேர
    சொந்தமாய் ஈரோடு விட்டு கொடுமுடியைச் சேர்ந்து
    திருமூர்த்திகள் வஸிக்குமந்த ஸ்தலத்தைக் கண்டு மகிழ்ந்து
    அந்த முள்ள சேரனுட அரசாட்சியில் அமைந்த
    அழகான ஊர்களெல்லாம் அன்புடனே பரவி
    பாச்சலூர் கருவூர் குழித்தலையும் பார்த்து
    பெருகமணி சிருகமணி (திருப்) பளாத்துறையு மோடி
    அகண்ட காவேரியாகி அடியார்களைக் காத்து
    தலைமகளாய் கொள்ளிடத்தை வடபுரத்தில் செலுத்தி
    திருச்சினாப் பள்ளிமலை ஈசனையும் ஸ்துதித்து
    ஜம்புநாதர் ஸ்ரீரங்கர்க்கு திருமாலையுந் தரித்து
    சிந்தாமணி தன்னைவிட்டுத் திருவானைக்கா நடந்து
    கொண்டல்கண்டு மயிலாடும் கோவிலடி யடைந்து
    கொக்கரசம்பேட்டை திருமழப்பாடி கடந்து
    வண்டலுடன் பெருகி மகராஜபுரம் வந்து
    தில்லைஸ்தானம் திருக்கண்டியூர் திருவையாற்றில் தங்கி
    கணபதி அக்கிரகாரம் கபிஸ்தலமுங் கண்டு
    வளமையான சுவாமிமலை கும்பகோணம் வந்து
    பேரான மருதூரின் பரமரையும் பணிந்து
    பேர்பெற்ற கோவிந்தபுரம் வஞ்சிநாடு புகுந்து
    குத்தாலும் ஆடுதுறை உச்சிதமாய் கடந்து
    கோனேரி ராஜபுரம் நரசிங்கன்பேட்டை வந்து
    கெளரீ மாயூரநாதன் சந்நதியைக் கண்டு
    களிப்புடன் துலாமாதக் கடசீ மட்டுமிருந்து
    கண்டவுடன் ஜீவர்களின் கர்மங்களை யொழித்து
    அன்புடனே கெளரீநாதன் அனுக்கிரக மடைந்து
    சந்தோஷமாய் காவேரி சாயாவனந்தாண்டி
    சங்கமுகத் துறையடைந்து சமுத்திரைச் சேர்ந்தாள்

    அன்புடனே கூடி அலையுடன் போராடி
    கண்கலங்கி வாடி கணவரிடம் ஓடி
    களிக்கக் கடல் கொந்தளிக்க
    முத்தைக் கொழிக்கத் தண்ணி சிவக்கச் சேர்ந்து
    காதலுடன் கடல்மன்னனும்
    காவேரியுங் கலந்துவிட

    ஏலேலோ – ஏலேலோ – காவேரி
    கடலுடனே கலந்த கப்பல்

    காவேரியம்மன் ஊஞ்சல்

    இருபுறமும் சோலைதன்னில் குயில்கள்கூவ
    எத்திசையும் பக்ஷியினம் இசைந்து பாட
    தோழியராம் நதிகூடத் தென்றல் வீச
    திருக்காவேரி கணவருடன் ஆடிலூஞ்சல்.

    ஓம் சுபம்!

     

    Share
  • இப்படியும் சில மனிதர்கள்! – 1

    தஞ்சை வெ.கோபாலன்

    நான் ஒரு கல்யாணத்துக்குப் போயிருந்தேன். அங்கே உட்கார்ந்திருந்த போது ஒரு ஜோடி மண்டபத்துக்குள் வந்து கொண்டிருந்தார்கள். வந்தவரில் ஆணுக்கு வயது எழுபது இருக்கலாம், பக்கத்தில் அவரது மனைவி அறுபது வயதைத் தாண்டியவர். கன்னங்கரேலென்ற நிறம். தேர் அசைவது போல ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும்போதும் பக்கவாட்டில் சாய்ந்து சாய்ந்து நடை. பெரியவருக்கு வயதானதாலோ அல்லது காலில் ஏதாவது ரிப்பேரோ தெரியவில்லை ஒரு கைத்தடியை ஊன்றிக் கொண்டு வந்தார். அவரை கைப்பிடியாகப் பிடித்துக் கொண்டு அந்த அம்மையார் குழந்தையை நடத்தி வருவது போல மெல்ல அழைத்து வந்து கொண்டிருந்தார்.

    ‘மெதுவா வாங்கோ. பார்த்து காலடியை எடுத்து வையுங்கோ. கீழேயெல்லாம் டைல்ஸ், வழவழன்னு இருக்கு. வழுக்கிவிட்டுடப் போறது. இதுல தண்ணியை ஊத்தி வைச்சாக்கூட கண்ணுக்குத் தெரியாது. வழுக்கிவிட்டுட்டா என்ன பண்றது. பாருங்கோ, அங்கே குழந்தைங்க ஓடிப்பிடிச்சு விளையாடறதை. ஓடிவந்து ஒங்க மேல விழுந்துட்டா என்ன பண்றது. மெதுவா, என்னைப் பிடிச்சுண்டு வாங்கோ’ என்று ராஜோபசாரம் செய்தபடி அந்தப் பெண்மணி உள்ளே நுழைந்தாள்.

    ‘வரேன், வரேன், நன்னா கையைப் பிடிச்சுக்கோ! நான் தான் சொன்னேனே, இந்த மாதிரி கல்யாண மண்டபத்துக்கெல்லாம் போறது அவ்வளவு பாதுகாப்பு இல்லைன்னு, நீ கேட்டியா, ஒன்னோடு அத்தங்கா பொண்ணு கல்யாணம்னு என்னையும் இழுத்துண்டு வந்து நிக்கறே’ என்றார்.

    ‘வரலைன்னா, அவா ​கோவிச்சுக்குவா, நாம வந்து பெரியவாளா லட்சணமா கல்யாணத்தைப் பண்ணி வச்சாதான் அவாளுக்குத் திருப்தி. வேற யாரு இருக்கா, பெரியவாளா அவாளுக்கு இதைச்செய் அதைச்செய்னு சொல்றதுக்கு. பேசாம வாங்கோ, வந்து ஒரு இடத்துலே ஒக்காந்துக்கோங்கோ’ என்று அவரைப் பிடித்துக் கொண்டு போய் அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்கார வைத்தாள் அந்தப் பெண்மணி.

    எனக்கும் பொழுது போகவேண்டாமா? இந்த முதிய காதல் ஜோடியின் ராசக்கிரீடையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

    கல்யாண வீட்டுக்காரர்கள் இந்த ஜோடியைப் பார்த்துவிட்டுப் பரவசமாய் ஓடிவந்து, ‘வாங்கோ, வாங்கோ, என்னடாது, இதுவரை மாமா மாமியைக் காணலியேன்னு கவலையா பேசிண்டு இருந்தோம். நீங்க வந்துட்டேள். நீங்கதான் எங்களுக்கு நல்லது கெட்டது எல்லாம் சொல்லித் தரணும். எங்காத்துல இதுதான் மொத கல்யாணம் இல்லியா, எதையும் தவற விடாம நன்னா நடத்தணும். உள்ளே வாங்கோ, டேய்! அங்க யாரப்பா, அந்த பரிசாரகர்கிட்டே சொல்லி ரெண்டு டம்ளர் காப்பி கொண்டு வரச் சொல்லு” என்றார் அதில் ஒருவர்.

    ‘அதெல்லாம் வேண்டாம். அவருக்கு ஷுகர், காப்பியெல்லாம் சாப்பிட மாட்டார், மாத்திரை சாப்பிடணும் கொஞ்சம் வெந்நீர் இருந்தா போட்டுக் கொண்டு வரச் சொல்லுங்கோ, நான் வந்து டிபன் சாப்பிட்டுக்கறேன்’ என்றாள் அந்த அம்மாள்.

    ‘பரவாயில்லே, எனக்கும் ஒரு காப்பி கொண்டு வரச்சொல்லுங்கோ, ஆனா, அதுல சக்கரை போட வேணாம்’ என்றார் அந்தப் பெரியவர்.

    ‘பாத்தேளா! இப்படித்தான் வாயைக் கட்டாம எதையாவது சாப்பிட்டுடறது, பின்னாலே மயக்கம் வரது, தலையைச் சுத்தறது அப்படிம்பேள், சொன்னா கேக்கவா போறேள்’ என்று சொல்லிவிட்டு அந்த கல்யாண வீட்டு அம்மாளிடம், ‘சரி மாமி, அவருக்கும் சக்கரை இல்லாம ஒரு காப்பி கொடுத்துடச் சொல்லுங்கோ’ என்றாள்.

    ‘எங்கே ஒங்க புள்ளை மாட்டுப்பெண் எல்லாம் வரலியா?’ என்றாள் கல்யாண வீட்டு அம்மாள்.

    ‘அவனுக்கு எங்கே ஒழியறது, ஆபீஸ் ஆபீஸ்னு ஆபீசை கட்டிண்டு அழறான். காலைல போனா ராத்திரி பத்தோ பதினொண்ணோ எப்போ வரானோ அப்போதான். மாட்டுப்பெண்ணுக்கு இதுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கு. அவளும் வேலைக்கு போறாளா, வந்து டயர்டா இருக்குன்னு படுத்துண்டுடறா, கல்யாணம் கார்த்தின்னு நாலு இடத்துக்குப் போனாதானே, நம்மாத்துக்கும் மத்தவா வருவான்னு அவாளுக்குப் புரியல. அது கெடக்கு விடுங்கோ, நானும் மாமாவும்தான் வந்துட்டோமே’ என்றாள் மாமி.

    ‘சரி உட்காருங்கோ, காப்பி கொண்டு வரச்சொல்றேன்’ என்று சொல்லிவிட்டு கல்யாண வீட்டு அம்மாள் உள்ளே சென்றாள். உடனே ஜோடிப் பெண்மணி கணவரிடம் “வந்த இடத்திலே ஏன் மானத்தை வாங்கறேள். அவா காபி வேணுமா, டிபன் சாப்பிடறேளான்னு கேட்கத்தான் கேட்பா. வேண்டாம்னு சொல்லிட்டு அப்புறமா சாப்பிட்டாதான் கவுரமா இருக்கும். அல்பம் மாதிரி சரி சரி கொண்டாங்கோம்பாளா, உங்களோட எனக்கு மானம் போறது’ என்றாள்.

    அப்போது கல்யாணப் பெண்ணைக் கூப்பிட்டுக்கொண்டு கல்யாண வீட்டு அம்மாள் வந்து பெண்ணை அந்த வயதான தம்பதியருக்கு நமஸ்காரம் செய்யச் சொன்னாள். அந்தப் பெண்ணும் மிக நளினமாகத் தன் பட்டுப்புடவை கலையாமல் குனிந்து மண்டியிட்டு நமஸ்காரம் செய்து எழுந்தாள்.

    உடனே பெரியவர் கையைத் தூக்கி ‘மகாராஜியா நன்னா இரும்மா’ என்று சொல்லிவிட்டு தன் மனைவியை நோக்கி ‘ஊம், நீயும் குழந்தையை ஆசீர்வாதம் பண்ணு’ என்றார். அந்த அம்மாளும் அந்த மணப்பெண்ணை ஆசீர்வாதம் செய்த பின் அந்தப் பெண்ணும், அவள் அம்மாவும் உள்ளே சென்று விட்டனர். இந்த தம்பதியர் மட்டும் தனித்து விடப்பட்டனர்.

    அப்போது கல்யாண வீட்டுக்காரர் ஒருவர் அந்தப் பக்கம் வந்தார். அவரை இந்தத் தம்பதியருக்குத் தெரியாது என்றாலும் அந்த அம்மாள் அவரை அழைத்தாள். அவரும் ‘என்ன மாமி, என்ன வேணும்’ என்று அருகில் வந்தார்.

    அந்த அம்மா சொன்னாள், ‘மாமாவுக்கு ஒடம்பு சரியில்லே. கொஞ்சம் ஓரமா ரெண்டு பெஞ்சை புடிச்சுப் போட்டுட்டேள்னா, படுத்துப்பார்’ என்றாள்.

    அவரும் அதுக்கென்ன போட்டுடறேன் என்று சொல்லிவிட்டு இரண்டு பெஞ்சுகளைக் கொண்டு வந்து போட்டு அதில் ஜமக்காளம் விரித்து தலையணை வைத்துக் கொடுத்தார். மாமி மறுபடி அவரைக் கூப்பிட்டு, ‘ஒரு பெடஸ்டல் ஃபேன் இருந்தா கொண்டு வந்து வச்சுடுங்கோ, மாமாக்கு காத்து வேணும்’ என்றாள். அதையும் அவர் செய்து கொடுத்தார். இப்போது பெரியவர் மிகவும் செளக்கியமாக பெஞ்சில் படுத்துக் கொண்டு ஓய்வு எடுத்தார். மாமி மெல்ல உள்ளே சென்றாள்.

    மணமகள் வீட்டார் இருக்கும் பகுதிக்குச் செல்லாமல் அந்த அம்மாள் சமையலறை நோக்கிச் சென்றாள். அங்கு சமையலுக்காக ஊழியர்கள் காய் நறுக்கிக் கொண்டும், மாவு அரைத்துக் கொண்டும் தேங்காய் துறுவிக்கொண்டும் இருந்தார்கள். அந்த அம்மாள் அங்கிருந்த ஒருவரை அழைத்து ‘யார் சமையல்?’ என்றாள்.

    அங்கிருந்த ஒருவர், ‘கிடாரங்கொண்டான் கிச்சாதான் சமையல், அதோ சாம்பார் அண்டாண்டே நிக்கறார் பாருங்கோ’ என்றான்.

    மாமி உடனே அவரிடம் சென்றாள். அவரும் இவரை வரவேற்று, ‘என்ன மாமி, என்ன வேணும், ஏதாவது சாப்பிடறேளா?’ என்றார், இந்த அம்மாளை யாரென்று தெரியாவிட்டாலும், மரியாதைக்காக அவர் அப்படிக் கேட்டார். இந்த அம்மாள் வந்த சந்தர்ப்பத்தை விடுவாளா?

    ‘நாங்க வெங்காயம் சேத்துக்க மாட்டோம். நானும் மாமாவும் காசிக்குப் போயிட்டு வந்துட்டோமா, அங்க பொடலங்கா சாப்பிடறதை விட்டுட்டோம், அதனால நீங்க சமையல்ல வெங்காயம் சேக்காதீங்கோ, பொடலங்காயை எதுலேயும் போட்டுடாதீங்கோ’ என்றாள்.

    நளபாகம் கிடாரங்கொண்டான் கிச்சா திகைத்துப் போனார்.

    ‘ஏம்மா! வெங்காயம், புடலங்கா சேக்காம பின்ன நாங்க எதைத்தான் வச்சு சமைக்கறது. கல்யாண வீட்டுல ஆயிரக்கணக்குல சாப்பிடுவா. அவா ஒவ்வொருத்தரும் எனக்கு இது பிடிக்காது, நான் இதை காசில விட்டுட்டேன்னு சொல்லிண்டிருந்தா, எதைச் சமைக்கறதுன்னு கொஞ்சம் கல்யாண வீட்டுக்காராகிட்டே கேட்டுச் சொல்லிடுங்கோ. இன்னொண்ணு மாமி, வீட்டுக்காரா என்ன சொல்றாளோ அதைத்தான் நாங்க செய்யணும், நீங்க அவாளுக்கு என்ன உறவோ தெரியாது. எதுன்னாலும் அவா கிட்டே சொல்லி எங்ககிட்டே இதெல்லாம் பண்ணலாம், இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு சொல்லச் சொல்லிடுங்கோ, அதுபடி செஞ்சுடறோம்’ என்றார் கிச்சா.

    ‘அப்போ நாங்க சாப்பிட வேணாமா, என்ன இப்படி பேசறேள். காசில பொடலங்கா விட்டுட்டோம்னு சொல்றேன், அதைத்தான் பண்ணுவேன்றேளே’ என்றாள் மாமி உரத்த குரலில்.

    அப்போது அங்கே வந்த கல்யாண வீட்டுக்காரர் இவர்கள் பேசுவதைக் கவனித்து விட்டுச் சொன்னார், ‘மாமி, நீங்கா காசில பொடலங்காயைத்தான் விட்டேளோ, வாழைக்காயைத்தான் விட்டேளோ தெரியாது. பொது இடத்துல ஆயிரக்கணக்கான பேருக்குச் சமையல் செய்யற இடத்துல வந்து, எனக்கு அது பிடிக்காது, அதை விட்டுட்டேன் இதை விட்டுட்டேன் அப்பிடின்னெல்லாம் சொல்லக்கூடாது. உங்களுக்குப் பிடிக்கலையா, பேசாம அதை ஒதுக்கிட்டுப் பிடிச்சதை சாப்பிட்டுட்டு போகணும். நீங்க சமையல்காரங்க கிட்டே தனியா உத்தரவு போடறதெல்லாம் நன்னா இல்லை’ என்றார்.

    அந்த மாமிக்கு கோபம், விறுவிறுவென்று ஹாலுக்கு வந்தாள். அனந்த சயனத்திலிருந்த தன் கணவர் பெருமானை எழுப்பினார். ‘வாங்கோன்னா, நாம ஆத்துக்குப் போகலாம். சாப்பாட்டுல வெங்காயம் புடலங்கா சேக்காதீங்கோன்னு சமையல்காரர் கிட்டே சொல்றேன். ஒருத்தர் வந்து உங்களுக்கு வேணும்னா சாப்பிட வேண்டாம். மத்தவாளுக்குப் போடப்படாதுன்னு சொல்றதுக்கு நீங்க யாருங்கறார். வாங்கோ, நாம ஆத்துக்குப் போகலாம்’ என்றாள்.

    அவர் சாவகாசமாக எழுந்து உட்கார்ந்து கொண்டு ‘என்னடீ இப்படிச் சொன்னா ராத்திரி சாப்பாட்டுக்கு என்னடீ பண்றது. அங்கே ஆத்துல உன் அருமை மாட்டுப் பொண்ணு புருஷனைக் கூட்டிண்டு ஓட்டலுக்கு போயிடுவா, நாம போய் என்னத்தைச் சாப்பிடறது. ராத்திரிக்குத்தான் நாம கல்யாணத்துல சாப்பிடப்போறோம், இது மிச்சம் வைக்க வேணாம்னு காலைல பண்ணின வத்தக் குழம்பையும்தான் நீ மத்தியானமே சாப்பிட்டுட்டியே’ என்றார்.

    ‘சரி சரி, நீங்க பேசாம படுத்துக்கோங்க, பந்தி பரிமாறினவுடனே பார்த்துண்டு வந்து உங்களை அழைச்சுண்டு போறேன். முதல்ல சாப்பிட்டுட்டு நாம ஆத்துக்குப் போயிடலாம், என்ன?’ என்று கேட்டுவிட்டு சமையல் கட்டுக்குள் மறுபடியும் நுழைந்து விட்டாள்.

    அவள் அந்த இடத்தை விட்டு அகன்றதும், கல்யாண வீட்டுக்காரர் ஒருவரை அழைத்து அந்த தம்பதி யார் என்று கேட்டேன். அவர் சொன்னார்: ‘அவங்க ஏதோ தூரத்துச் சொந்தம். தெரிஞ்சவங்க வீட்டுக் கல்யாணம்னா தவறாம ஆஜராயிடுவாங்க. இப்படித்தான் அங்கே போயி இவங்க இஷ்டத்துக்கு உத்தரவு போடுவாங்க. சில இடங்கள்ளே செல்லுபடியாகும், சிலபேர் துரத்திவிட்டுடுவாங்க. இவங்க அதுக்கெல்லாம் மான அவமானம் பாக்க மாட்டாங்க” என்றார்.

    அது சரி அவங்க பேர் என்ன? என்று கேட்டேன்.

    அதற்கு அவர் “அவங்களோட உண்மையான பேர் என்னன்னு தெரியலை. ஆனால் எல்லோரும் அவரை ‘தில்’ அப்படின்னும், அந்த அம்மாவை ‘திவானா’ ன்னும் கூப்பிடுவாங்க.

    ‘தில், திவானா’ நல்லா இருக்கே பெயர் என்று சிரித்துக் கொண்டேன்.

    (​தொடரும்)

    Share
  • அமைச்சர் கோவிந்த தீட்சதர்.

    தஞ்சை வெ.கோபாலன்

    Govinda Dikshidarதஞ்சை நாயக்க மன்னர்களின் காலத்தில் சேவப்ப நாயக்கரின் கடைசி நாட்கள் தொடங்கி அச்சுதப்ப நாயக்கர் காலம் முழுவதும் இருந்து பிறகு ரகுநாத நாயக்கர் காலம் வரை அவர்கள் ஆட்சியில் அமைச்சராகவும், ராஜகுருவாகவும் இருந்து வழிகாட்டி, நல்ல பல காரியங்களை மக்கள் நலனுக்காக செய்தவர் கோவிந்த தீட்சதர். சோழ நாட்டின் தஞ்சை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இவர் பெயரை இன்றும் சொல்லக்கூடிய எத்தனை இடங்கள்? ஐயன் கடைத் தெரு, ஐயன்பேட்டை, ஐயன் வாய்க்கால், ஐயன் குளம் இதுபோன்ற இடங்களில் ஐயன் என்பது இவரைக் குறிக்கும் சொல். இவர் அந்த காலத்தில் செய்த செயற்கரிய சாதனைகளின் சரித்திரச் சான்றுகள் இவை.

    ஒரு மன்னன் தன் குடிமக்களுக்கு என்னவெல்லாம் செய்து தரவேண்டும், தான் சுகபோகங்களோடு வாழ்க்கை நடத்துவதும், எதிரிகளோடு போர் புரிந்து ஆயிரக்கணக்கான உயிர்களை பலியிடுவதும், தன் மக்கள், தன் சுற்றம் இவர்களின் நல்வாழ்வை மட்டும் பேணிப் பாதுகாப்பது மட்டும் ஆட்சி அல்ல. பின் என்ன செய்ய வேண்டும்? மக்கள் பயன்பாட்டுக்கான தர்ம காரியங்களைச் செய்வது, கல்விக்காக, உடல்நலத்தைப் பேணிப் பாதுகாப்பதற்காக, ஒரு இடம் விட்டு வேறொரு இடம் பயணம் செய்ய நல்ல சாலைகளை அமைப்பதற்காக, நீர் நிலைகளை நல்ல முறையில் பேணி பாதுகாக்கவும், புதிய நீர் நிலைகளை உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுத்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவது ஒரு அரசின் தலையாய பணி அல்லவா? அவற்றையெல்லாம் ஒன்றுவிடாமல் செய்து தந்தவர் இந்த கன்னடத்து பிராமண அமைச்சர். எழுபத்தைந்து ஆண்டுகள் இவர் அமைச்சராக மூன்று மன்னர்கள் காலத்தில் இருந்து தொண்டாற்றியவர் கோவிந்த தீட்சதர்.

    இதில் என்ன புதுமை இருக்கிறது. வரலாற்றுப் பாடங்களைப் படிக்கும்போது எல்லா மன்னர்களுமே செய்த பணிகள் எவை என்பதைக் குறிப்பிடுகையில், அவர்கள்Mahamaham tank சாலைகளைப் போட்டார், வழிநெடுக மரங்களை நட்டார், குளங்களை வெட்டினார் என்றுதானே எழுதுகிறார்கள் என்று சொல்வதும் புரிகிறது. ஆனால் இவர் சாதனை அவற்றோடு மட்டும் நின்றுவிடவில்லை. காலத்தால் அழிக்கமுடியாத அரிய பல செயல்பாடுகள் இவர் செய்திருக்கும் சாதனை. கும்பகோணம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது மகாமகம். கும்பேஸ்வரன் கோயிலின் இந்த விழா 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். அந்த விழாவில் மக்கள் மூழ்கி எழும் மகாமகக் குளத்தைப் பார்த்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டாவது இருப்பீர்கள். அந்த மாபெரும் குளத்தையும், சுற்றிலும் படிக்கட்டுகளையும், அதனைச் சுற்றி பதினாறு சிவலிங்கங்கள் அதற்குரிய மண்டபங்கள் இவை அத்தனையையும் கட்டிமுடித்தவர் இந்த கோவிந்த தீட்சதர்.

    இவரது இந்த சாதனையைப் பாராட்டி நாயக்க மன்னர் ஒருவர் இவருக்கு துலாபாரம் செய்து தராசில் ஒரு தட்டில் இவரை உட்காரவைத்து மற்றொரு தட்டில் பொன்னை அள்ளிக் கொட்டி இவருக்கு அளித்தாராம். அந்த சிலையை மகாமகக் குளக் கரையிலுள்ள ஒரு மண்டபத்தில் இப்போதும் பார்க்கலாம்.

    Patteeswaram templeகும்பகோணம் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்திருப்பது, குறிப்பாக பெரிய கடைத்தெருவுக்கு மிக அருகில் அமைந்துள்ளது இராமசாமி கோயில். இதனைக் கட்டியவர் கோவிந்த தீட்சதர். இந்த கோயிலின் சிறப்பு என்ன தெரியுமா? இங்கு இராமாயணக் காட்சிகள் அனைத்தையும் பிரகாரச் சுவற்றில் வண்ணத்தில் தீட்டிவைத்தது இவரது சாதனை. கும்பகோணத்தில் மங்களாம்பிகா அம்மன் கோயில், பட்டீஸ்வரம் தேனு புரீஸ்வரர் கோயில், பாபநாசம் அருகிலுள்ள திருப்பாலைத்துறை ஆலயம் இவைகள் அனைத்துமே இவரது அர்ப்பணிப்புகள்.

    புதிதாக உருவாக்கிய கோயில்கள் தவிர, மிகப் பழமையான சில கோயில்களை இவர் புதுப்பித்துக் கட்டியிருக்கிறார். அவை விருத்தாச்சலம், திருவண்ணாமலை, சிதம்பரம், ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் உள்ள புகழ்மிக்க ஆலயங்கள்.

    வரலாற்றில் புகழ்பெற்ற எந்தவொரு நகரமும் ஒரு நதிக்கரையில் அமைந்ததாக இருக்கும். தஞ்சாவூர் பழம்பெரும் நகரமாக இருந்தபோதும், காவிரிக் கரையில் அது இல்லை; வடவாறு எனும் சிறிய ஆற்றின் கரையில் இருக்கிறது. அதனால்தான் நாயக்கர் காலத்திலும், பின்னர் வந்த மராத்தியர் காலத்திலும் தஞ்சை அரசர்களின் ஆளுமைக்குள் இருந்த கலைஞர்கள், வேத விற்பன்னர்கள், இசைக் கலைஞர்கள் போன்றோர் இங்கிருந்து சிறிது தூரத்தில் காவிரிக் கரையில் அமைந்துள்ள திருவையாற்றில் குடியிருந்திருக்கின்றனர். அப்படி தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்வதானால் அவர்கள் வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி என ஐந்து ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆற்றையும் கடந்து செல்ல படகுகளை நம்பியிருக்க முடியுமா? இவற்றின் மீது பாலங்களைக் கட்டியதும் இவர்கள் காலத்தில்தான். இப்பொழுதுதான் இவற்றில் சில பாலங்கள் இடிக்கப்பட்டு புதிதாக கட்டப்பட்டிருக்கின்றன, குறிப்பாக திருவையாறு காவிரிப் பாலம், குடமுருட்டி பாலம், வெண்ணாற்று பாலம், வெட்டாறு பாலம் இவை புதிதாகக் கட்டப்பட்டு விட்டன.

    காவிரி ஒரு புனித நதி. கரையெங்கும் காவிரித்துப் புகழ் பரப்பி ஓடும் ஜீவநதி. அந்த காவிரியின் கரையெங்கும் படித்துறைகள். புனிதத் தலங்களில் புஷ்ய மண்டபங்கள்,Ramasamy koil அவை திருவையாறு, திருவிடைமருதூர், மயிலாடுதுறை என்று இன்றும் மக்கள் பயன்பாட்டுக்குக் காணக்கிடைப்பவை. மயிலாடுதுறையிலும், திருவிடைமருதூரிலும் மகாதானத் தெரு என்ற பெயரில் ஒரு தெரு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். மகாதானம் என்றால் என்ன? வேத விற்பன்னர்களுக்குத் தானமாக வீடுகளைக் கட்டிக் கொடுத்து புகழ்மிக்கத் தலங்களான இந்த ஊர்களில் மக்கள் நன்மைக்காக யாகங்களை செய்துவர வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட வீதிகள் இவை. இசைக் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காக இவர் சில ஊர்களை முழுவதும் தானமாகக் கொடுத்திருந்தார், அவை மூவலூர், தேப்பெருமநல்லூர், சூலமங்கலம், ஊத்துக்காடு, சாலியமங்கலம் முதலியவை.

    தெருக்கள் மட்டுமா இவர் மகா தானமாகக் கொடுத்தவை, அல்ல, சில ஊர்களும் கூட இதில் அடங்கும். குறிப்பாக திருவையாறு கும்பகோணம் சாலையில் உள்ள ஈச்சங்குடி, கண்டியூர் திருக்காட்டுப்பள்ளி சாலையில் உள்ள வரகூர், கந்தமங்கலம் ஆகிய ஊர்கள் இதே காரணங்களுக்காக உருவாக்கப்பட்டு மகா தானமாக அளிக்கப்பட்டவை. இங்கு குறிப்பிடும் ஈச்சங்குடி கிராமத்தில்தான் காஞ்சி பரமாச்சாரியார் என வழங்கப்பட்ட ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமியின் தாயார் அவதரித்தார். எங்கும் எப்போதும் மக்கள் வளத்தோடும், மனமகிழ்ச்சியோடும் வாழ வேதங்கள் ஓதப்படவேண்டும் எனும் எண்ணத்தில் எங்கும் வேத கோஷம் முழங்குவதற்காக இத்தனை ஊர்களை, தெருக்களை தானமாகக் கொடுத்து வந்திருக்கிறார் கோவிந்த தீட்சதர்.

    Ramasamy koil Uthsavar“மக்கள் நலனும் வாழ்வும் அமைதியும் சதாசர்வ காலம் வேதகோஷம் முழங்குவதில்தான் இருக்கிறது” என்கிறது மனுஸ்மிருதி. வேதங்கள் ஓதப்படுவதோடு, இளைய பிரம்மச்சாரிகளுக்கு அதனைக் கொண்டு சேர்க்கவும் வேண்டும். அதற்காக வேத பாடசாலைகளையும் அவர் உருவாக்கிவைத்தார். கும்பகோணம் ராஜா பாடசாலை என்ற அமைப்பு இன்றும் உயிர்ப்போடு இயங்கி வருவதை நாம் அறிவோம். இந்த ராஜா பாடசாலையில் ரிக், யஜுர், சாம வேதங்களோடு, ஆகம சாஸ்திரமும் பயிற்றுவிக்கப் படுகிறது. இதுபோன்றதொரு பாடசாலை இந்தியாவில் வேறெங்கும் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஒரு வேதத்தை அத்யாயனம் செய்து முடிக்க எட்டு ஆண்டுகள் ஆகும். இந்த பாடசாலையில் படித்துப் பின் இசைத் துறையில் பிரபலமடைந்தவருள் ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் முக்கியமானவர்.

    வேதம் படித்த ஸ்ரீ முத்துசாமி தீட்சதர் இசைத் துறையில் கர்நாடக சங்கீத மூவருள் ஒருவராக ஆனாரா என்று வியப்பாக இருக்கும். வியப்படைய வேண்டாம். காரணம் இவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்த கோவிந்த தீட்சதர் இசையிலும் வல்லவர். “அத்வைத வித்யா ஆச்சார்ய” என்ற பட்டப்பெயரோடு விளங்கிய இவர் கர்நாடக சங்கீதத்தில் “சங்கீத சுதாநிதி” எனும் அற்புதமான இசை நூலையும் இயற்றியிருக்கிறார். அதுமட்டுமல்ல “திருவையாறு புராணம்” சம்ஸ்கிருத மொழியில் இருந்ததை ஒரு புலவரைக் கொண்டு இவர் தமிழில் மொழியாக்கம் செய்யச் செய்திருக்கிறார்.

    கோவிந்த தீட்சதருடைய மூத்த மைந்தன் யக்ஞநாராயண தீட்சதர். இவர் வேத சாஸ்திரங்களில் படித்துத் தேர்ந்தவர் என்பதுகூட இவர் பல இலக்கியங்களையும் படைத்திருக்கிறார். அவை ரகுநாத நாயக்கர் மீதான “ரகுநாத பூபால விஜயம்”, “ரகுநாத விலாஸ நாடகம்”, “சாஹித்ய ரத்னாகரம்” ஆகியவை.Tirupalaithurai temple and Granary

    இவருடைய இளைய மைந்தன் வேங்கடமகி என்பார் பல இலக்கியங்களைப் படைத்திருக்கிறார். சம்ஸ்கிருத இலக்கியங்கள் தவிர இசைத் துறையில் “சதுர்தண்டி பிரகாசிகா” எனும் நூலையும் இயற்றியிருக்கிறார். இவருக்கும் பல மகா பண்டிதர்கள் சீடர்களாக இருந்திருக்கின்றனர்.

    காஞ்சி மகாபெரியவருடைய தாயார் பிறந்த ஊர் ஈச்சங்குடி என்று முன்பு குறிப்பிட்டோம் அல்லவா? அது தவிர 1814 முதல்1857 வரை காஞ்சி மடத்து ஆச்சாரியாராக இருந்த மற்றொரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த தீட்சதர் வம்சத்தில் பிறந்தவர். கோவிந்த தீட்சதரின் இளைய மகன் என்று குறிப்பிட்ட வேங்கடமகி என்பவரின் பேரன் இந்த ஆச்சார்யார்.

    இத்தகு பெருமைமிகு அமைச்சர் கோவிந்த தீட்சதரின் சிலை அவருடைய துணைவியார் நாகம்மாள் உருவத்துடன் கல் சிற்பமாக பட்டீஸ்வரம் ஆலயத்தில் பார்க்கலாம். ராமேஸ்வரம் கோயிலிலும் இவர்கள் சிலையை நிறுவியிருக்கிறார்கள். கும்பகோணத்தையடுத்த பட்டீஸ்வரத்தில் மிக எளிய இல்லத்தில் வாழ்ந்த இவர் யோகநித்திரையில் இருக்கும்போதே உயிர் நீத்தார்.

    இத்தகைய மதியூகியாகவும், நிர்வாகத் திறன் கொண்டவராகவும், தர்மத்தின்பால் பற்று கொண்டவராகவும் இருந்து நீண்ட நெடுங்காலம் தஞ்சை நாயக்க மன்னர்களுக்கு அமைச்சராக இருந்து பணியாற்றிய கோவிந்த தீட்சதரால் நாயக்கர் வம்சம் புகழ்பெற்றதா, நாயக்க மன்னர்கள் கொடுத்த வாய்ப்பினால் தீட்சதர் தன் திறமையை வெளிப்படுத்தினாரா என்பது பட்டிமன்றத்துக்குரிய தலைப்பாக இருக்கும்.

    Share