Tag: நிர்மலா ராகவன்

  • செல்லமா? கண்டிப்பா? | குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

    செல்லமா? கண்டிப்பா? | குழந்தைகளை வளர்ப்பது எப்படி?

    குழந்தைகளை வளர்ப்பது எப்படி? செல்லம் கொடுப்பதா? கண்டிப்பு காட்டுவதா? எந்த அளவுக்குச் செல்லம்? எந்த அளவுக்குக் கண்டிப்பு? கண்டித்துச் சொன்னால் கேட்காத பிள்ளைகளை அடித்துத் திருத்த முடியுமா? பிள்ளைகளை எப்படி வழிக்குக் கொண்டு வருவது? நிர்மலா ராகவன் வழங்கும் பயனுள்ள ஆலோசனைகளைக் கேளுங்கள். இதுகுறித்து உங்களுக்கு ஏதும் ஐயம் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குழந்தைகளைச் சாப்பிட வைப்பது எப்படி?

    சந்திப்பு – அண்ணாகண்ணன்

    குழந்தைகளைச் சாப்பிட வைப்பது எப்படி? நிர்மலா ராகவன் உடன் ஓர் உரையாடல். பார்த்துப் பயன்பெறுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கல்யாண வைபோகமே | நிர்மலா ராகவன்

    கல்யாண வைபோகமே | நிர்மலா ராகவன்

    காதலர் தினம், இளைஞர்களுக்கு மட்டுமா? வயது கூடினாலும் காதல் குறைவதில்லை, மறைவதில்லை, மாறுவதில்லை. இதோ இந்தப் பதிவில், தன்னைப் பெண் பார்த்த அனுபவங்கள், ஒரே வாரத்தில் நடந்த திடீர்க் கல்யாணம், 55 ஆண்டுக்கால திருமண வாழ்க்கை எனப் பலவற்றையும் சுவையாக விவரிக்கிறார் நிர்மலா ராகவன். பார்த்து மகிழுங்கள். காதலர் தின நல்வாழ்த்துகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பீட்சா ஏன் பிடிச்சிருக்கு? தோசை ஏன் பிடிக்கவில்லை?

    வீட்டு உணவு சலிப்பதற்கும் அயல் உணவு பிடிப்பதற்கும் காரணம் என்ன? சுதா மாதவன் கேள்விக்கு நிர்மலா ராகவன் பதில் அளிக்கிறார். இந்தச் சுவையான கலந்துரையாடலைப் பார்த்து மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • கணவனை டா போட்டு அழைக்கலாமா?

    கணவனை, காதலனை ‘டா’ போட்டு அழைக்கும் வழக்கம் அதிகரித்து வருகிறது. பெயர் சொல்லியும் அழைக்கிறார்கள். இப்படி அழைக்கலாமா? நிர்மலா ராகவன் அவர்களின் பதில் இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குழந்தைகளை வாங்க போங்க என்று அழைக்கணுமா?

    குழந்தைகளை வாங்க போங்க என்று அழைக்கணுமா?

    குழந்தைகளை வாங்க போங்க என்று அழைக்க வேண்டுமா? அப்படி அழைத்தால்தான் குழந்தைகள் மரியாதை கற்றுக்கொள்வார்களா? சுதா மாதவன் கேள்விக்குப் பதில் அளிக்கிறார் நிர்மலா ராகவன். பார்த்துப் பயன்பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். உங்களுக்கு வேறு கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • தொலைக்காட்சியின் பிடியிலிருந்து பிள்ளைகளை மீட்பது எப்படி?

    தொலைக்காட்சியின் பிடியிலிருந்து பிள்ளைகளை மீட்பது எப்படி?

    செல்பேசிக்கு அடுத்தபடியாக, தொலைக்காட்சியின் பிடிக்குள் குழந்தைகளும் பெரியவர்களும் சிக்கியுள்ளனர். இதிலிருந்து நம் பிள்ளைகளை மீட்பது எப்படி? நிர்மலா ராகவன் தரும் ஆலோசனைகள் இதோ. பார்த்துப் பயன்பெறுங்கள். உங்களுக்குத் தெரிந்த பெற்றோர்களுக்குப் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தைப்பூசத்துக்குப் போகணும் (சிறுகதை)

    தைப்பூசத்துக்குப் போகணும் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    போன வருடமே பத்துமலைக்குப் போய் முருகனைத் தரிசிக்க முடியவில்லையே என்று பெரிய குறை சின்னசாமிக்கு.

    பல ஆண்டுகளுக்குமுன்பு ரப்பர் தோட்டப்புறத்தில் வாழ்ந்தபோது லோரிக்காரனுக்கு முப்பது வெள்ளி கொடுத்து, `கோலும்பூ’ருக்கு வந்து தரிசனம் செய்ததுடன் சரி. அப்போது, கடவுளையே நேரில் பார்த்ததுபோன்று அடைந்த மகிழ்ச்சியை இந்த ஜன்மத்தில் மறக்க முடியுமா!

    ஏனோ, அதன்பின் அந்த பாக்கியம் கைகூடவில்லை.

    செல்வம் தன்னுடன் வரும்படி அழைத்தபோது, மனைவி போனால் என்ன, நினைத்தபோதெல்லாம் பத்துமலை தரிசனம் கிடைக்குமே என்ற நப்பாசையுடன் மகன் வீட்டில் தங்க ஒத்துக்கொண்டார்.

    தொற்றுநோய் அவருடைய ஆசையில் மண்ணை அள்ளிப்போட்டது.

    ஏதோ ஊசியாம், குத்திக்கொண்டால் நோய் அண்டாதாம் என்று பலருடன் உட்கார்ந்து, ஊசி போட்டுக்கொண்டார்.

    அன்று இரவெல்லாம் தலைவலியும், காய்ச்சலும் அவரைப் படுத்த, `சாமி குத்தம்! இதோ இருக்கு பத்துமலை! ஆனா, போக முடியல்லியே!’ என்று காரணம் கற்பித்துக்கொண்டார்.

    இந்தப் புது வருடத்தில், `பக்தர்கள் போகலாம்!’ என்று அரசாங்கமே அனுமதித்தது.

    சின்னசாமியின் குதூகலம் அதிக நேரம் நீடிக்கவில்லை.

    “ரெண்டுவாட்டி ஊசி குத்திக்கிட்டவங்கதான் போக முடியும்பா,” என்று செல்வம் விளக்கினான், முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு.

    இரண்டாவது வாய்ப்பு வந்தபோது, “நல்லா இருக்கிறபோதே ஊசி குத்தினா, திரும்பவும் காய்ச்சலும், தலைவலியும் வந்து தொலைக்கும். எதுக்குடா வீண் வம்பு!” என்று போக மறுத்துவிட்டார்.

    அவரைப்போல் வயதானவர்களிடம் பேசிப் பயனில்லை என்று மகனும் வற்புறுத்தவில்லை.

    ஆனால், கடந்த இரு வாரங்களாக, எதையோ பறிகொடுத்தவர்போல் காணப்பட்ட தந்தையைப் பார்க்க அவனுக்குப் பரிதாபமாக இருந்தது.

    காலமெல்லாம் ஓடாக உழைத்து, குடும்பத்தைப் பொறுப்பாகக் கவனித்துக்கொண்டவர்! அவருடைய இந்த சின்ன ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாவிட்டால், தான் என்ன மகன்!

    “வா, செல்வம்! ஒடம்புக்கு என்ன?” என்று வரவேற்றான் மணிவண்ணன்.

    “நல்லாத்தான் இருக்கேன். அப்பா தைப்பூசத்துக்குப் போகணும்னு ரொம்ப ஆசைப்படறாருடா,” என்று இழுத்தான் செல்வம்.

    “கூட்டிட்டுப் போறது!” என்றான் பால்ய நண்பன்.

    “அதுக்குத்தான் ஒன்னைப் பாக்க வந்தேன்”.

    “பத்துமலைக்கு எப்பவும் லட்சக்கணக்கானபேர் வருவாங்க. இந்த வருசம், ஒரே சமயத்திலே ஆறாயிரம் பேர்தான் உள்ளே போகலாமாம். எனக்கோ கும்பலே ஆகாது. ஒனக்குத் தெரியாதா!” என்று கழன்றுகொள்ளப்பார்த்தான் மணி.

    “அதில்லேடா..,” என்று இழுத்த செல்வம், “நீ டாக்டர்தானே! இரண்டாவது ஊசியும் போட்டாச்சு அப்படின்னு ஒரு சர்டிபிகேட் குடுத்தா..!”

    முதலில் அதிர்ந்த நண்பன், ஒரு புண்ணிய காரியத்துக்காகத்தானே செய்யப்போகிறோம் என்று தன்னையே சமாதானப்படுத்திக்கொண்டான்.

    “எத்தனை?” என்று செல்வம் கேட்டபோது, “சரிதான் போடா,” என்று செல்லமாக விரட்டினாலும், `காசு பாக்க இது சின்னாங்கான (சுலபமான) வழியா இருக்கே!’ என்ற எண்ணமும் எழாமலில்லை.

    ஒரே மாதத்தில் லட்சக்கணக்கில் சம்பாதித்துவிடலாமே!

    குறுக்கு வழியில் போக மனிதர்களுக்கா பஞ்சம்!

    ஆளுக்கு நானூறோ, ஐநூறோ விதித்தால், ஒரே மாதத்தில்.. என்று அவன் மூளை கணக்குப்போட ஆரம்பித்தது.

    தைப்பூசத்திற்கு முதல் நாள்.

    எல்லா தினசரிகளின் முதல் பக்கத்திலும், `டாக்டரின் மோசடி’ என்ற பெரிய தலைப்பு. முகத்தைச் சட்டையால் மூடியபடி டாக்டர் மணிவண்ணன். இருபுறமும் காவல்துறை அதிகாரிகள்.

    முருகனைத் தரிசித்துவிட்ட பெருமகிழ்ச்சியிலிருந்தார் சின்னசாமி.

    “என்னப்பா? இப்படி தொண்டைக்கட்டும், இருமலுமா இருக்கீங்களே! டாக்டர்கிட்ட கூட்டிப்போறேன், வாங்க,” என்ற மகனிடம், “எனக்கு ஒண்ணுமில்லேடா,” என்று மறுத்தார்.

    அப்போது அவருக்குத் தெரியவில்லை, தான் யாரிடமிருந்தோ ஒட்டிக்கொண்டு வந்துவிட்ட நோயைத் தானும் பரப்பிவிட்டோம் என்கின்ற உண்மை.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 100

    பழகத் தெரிய வேணும் – 100

    நிர்மலா ராகவன்

    எல்லாரும் முட்டாள்கள் – என்னைத் தவிர

    நமக்குப் பலரைத் தெரிந்திருக்கலாம். அவர்களில் எத்தனைப் பேர் நம்மைப் புரிந்துகொள்கிறார்கள்?

    நாம்தான் அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்கிறோமா?

    அனேகமாக எல்லா மனிதர்களும் தம்மை ஒத்தவர்களை மட்டும்தான் ஏற்பார்கள். மற்றவர்களெல்லாம் முட்டாள், அல்லது அசடு என்று நம்புவார்கள்.

    மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்துவிடுவார்களோ என்று அஞ்சி, முந்திக்கொள்கிறார்கள். அவ்வளவுதான்.

    சில நிமிடங்களோ, வாரங்களோ மட்டுமே ஒருவருடன் பழகினால் அவரைப் புரிந்துகொள்ள முடியுமா?

    புரிந்துகொள்ள முடியாததால்தான் ஏளனம்.

    கதை

    என் சக ஆசிரியை ரொஜிதா (ROZITA) பதின்ம வயது மாணவர்களை, `இந்தக் குரங்குகள்’ என்றுதான் குறிப்பிடுவாள்.

    பொறுக்க முடியாது, ஒருமுறை, “உன் குழந்தைகளை `குரங்கு’ என்று சொல்வாயோ?” என்று கேட்டுவிட்டேன்.

    “சேச்சே!” என்றாள், சிரித்தபடி.

    அவளைப்போல், `நான்’, `எனது’ என்றே யோசித்தால், `நம்’ என்பது புரியாமல் போய்விடும்.

    பிறர் நிலையில் நம்மைப் பொருத்திக்கொள்வது

    பிறரைக் குறை கூறுவதற்கு முன், நமக்கு வாய்த்த நல்வாழ்க்கை அவர்களுக்கும் அமைந்திருக்குமா என்று சற்று யோசித்தால் அவர்களது நடத்தைக்குக் காரணம் புரியும்.

    பதின்ம வயதிற்கே உரிய குணம் எல்லாவற்றிற்கும் சிரிப்பது.

    வசதி குறைந்த குடும்பங்களிலிருந்து வந்த மாணவர்கள், வீட்டில் அன்பு கிடைக்காதபோது, தம்மையொத்த பிற மாணவர்களுடன் பழக நேர்ந்தால் அவர்களுக்குக் கூடுதலான மகிழ்ச்சி.

    ரொஜிதாவுக்கு அது புரியவில்லை.

    கதை

    ஒரு மாணவன் எதற்கும் அடங்கவில்லை.

    அவன் தாயைச் சந்தித்தபோது, “கொஞ்சங்கூட மரியாதை இல்லாமல் பேசுகிறான்,” என்று புகார் செய்தேன்.

    அவள் பெருமூச்சுடன், “வீட்டிலும் அப்படித்தான்!” என்றாள்.

    எங்கு, எப்போது தவறு நேர்ந்திருக்கும்?

    இத்தகைய பெற்றொர், சிறு குழந்தைகளைத் திட்டக் கூடாது, அவர்கள் மனம் நோக எதையும் செய்யவும் கூடாது, அவமானம் அடைந்துவிடுவார்கள் என்று நம்பி வளர்க்கிறார்கள்.

    நினைவு தெரிந்த நாளிலிருந்து தான்தோன்றித்தனமாக எதையும் செய்து பழகியவன், திடீரென்று பதின்ம வயதில் கண்டிப்பை ஏற்பானா?

    இன்னொரு கதை

    வகுப்பில் கீழ்ப்படியாமல், படிப்பிலும் கவனம் செலுத்தாது இருந்த மாணவர்களுள் ஆதாமும் ஒருவன்.  ஆனால் பரீட்சையில் பௌதிகப் பாடத்திலிருந்த, கஷ்டமான கணக்குகளைச் சரியாகப் போட்டிருந்தான்.

    எனக்குச் சந்தேகம் வந்தது. “என்னெதிரில் இப்போது போட்டுக் காண்பி!” என்றேன்.

    சற்றும் யோசியாது, சில வினாடிகளிலேயே முடித்தான்.

    மகா புத்திசாலி. ஏதோ குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறான் என்று புரிந்தது.

    வகுப்பு முடிந்ததும் என்னுடைய அறையில், சில நண்பர்களுடன் வந்து, என்னைச் சந்திக்குமாறு ஆதாமிடம் கூறினேன்.

    எடுத்த எடுப்பிலேயே, “உன் அப்பா உங்களுடன் இருக்கிறாரா?” என்று கேட்டேன்.

    “அப்பப்போ,” என்றான், அடக்கிய குரலில்.

    “உன் நண்பர்கள் எதிரில் இதைப் பற்றிப் பேசலாமா?” என்று கேட்டுக்கொண்டேன்.

    `அதனால் என்ன! நாங்கள் பார்க்காததா!’ என்பதுபோல் அவர்கள் கையை மேலும் கீழும் ஆட்டினார்கள், அலட்சியமாக.

    தந்தை வேறு பெண் துணைகளுடன் இருக்கும்போது ஆண்குழந்தைகள்தாம் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    தாயின் தனிமையை, வருத்தத்தை நம்மால் போக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சி வேறு.

    இவனைப்போல் எத்தனை மாணவர்களைப் பார்த்திருப்பேன்!

    அவர்களிடம், “உன் அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இடையே இருக்கும் பிரச்னை இது. நீ வீணாகக் குழம்பாமல், உன் எதிர்காலத்தைப் பற்றி யோசி,” என்று பலவாறாக எடுத்துக் கூறுவேன்.

    அதற்குப் பின், நான் `எள்’ என்றால் எண்ணெய்தான்!

    ஆசிரியர்களும் பிறரைப் புரிந்துகொள்ளும் தன்மையும்

    பயிற்சிக் காலத்தில், ஆசிரியர்கள் உளவியல், சமூக இயல் ஆகியவற்றையும் கற்கிறார்கள்.

    உதாரணம்: வசதி நிறைந்த குடும்பத்திலிருந்து வந்த மாணவன், சுய முன்னேற்றத்தில் ஆர்வம் கொண்டு, நல்ல விதமாக நடப்பான்.

    படிப்பறிவற்ற பெற்றோர்களின் குழந்தைகளுக்கு எவ்வாறு கல்வியில் நாட்டம் பிறக்கும்? அதற்காக, அவர்களைத் துச்சமாக நினைத்துவிடலாமா?

    பரீட்சையில் தேர்ச்சி பெறும் அளவுக்கு இவை புரிந்தால் போதும் என்ற மனப்பான்மை பெரும்பாலான, எதிர்கால ஆசிரியர்களுக்கு. ஆகையால், செயலில் கொண்டுவர முனைவதில்லை. அவர்களுடைய பின்னணி, கல்விக்கூடங்கள் ஆகியவையும் குறுக்கே வர, கற்றது வெறும் ஏட்டுச் சுரைக்காயாகப் போய்விடுகிறது.

    அப்படியிருக்க, மாணவர்களை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்?

    தத்தம் கண்ணோட்டத்திலிருந்து பிறரை எடைபோடுவது அநேகமாக தவறான முடிவாகத்தான் இருக்கும்.

    கதை

    “அந்தப் பெண்ணை விரும்பி மணந்தானா! அவன் எவ்வளவு புத்திசாலி! அவளோ, மக்காக இருக்கிறாளே!”

    கல்வித் திறனிலும், உத்தியோகத்திலும் உயர்ந்தவன் அவன்.

    `நான் நிறையப் படித்து, பெரிய உத்தியோகத்திலும் அமர்ந்து, சாதித்துக்கொண்டே இருக்கவேண்டும்!’ என்ற கொள்கை கொண்ட பெண்கள் தனக்குச் சரிப்படாது என்று அவனுக்குத் தோன்றியது. அவர்களால் தனது பெரிய குடும்பத்தை நிர்வகிக்க முடியுமா என்ற கேள்வி எழ, குடும்பப் பாங்கான பெண்ணை மணந்தான்.

    மணவாழ்க்கையும் சுமுகமாக இருந்தது.

    அவனுக்குத் தன் மனம் புரிந்திருந்தது. அதனால் பிறரையும் புரிந்துகொள்ள முடிந்தது.

    ஏன் சிலரைப் பிடித்துப் போகிறது?

    `அவர் என்னைப் புரிந்துகொள்கிறார்!’ என்ற உணர்வு எழும்போது நிறைவாக இருக்கும்.

    அப்படிப்பட்டவர் குறைகளே இல்லாதவர் என்று அர்த்தமில்லை. ஆனால், குறைநிறைகளுடன் தன்னை ஏற்றுக்கொண்டவர். அதனால், பிறருடைய குறைகளையும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. பிறருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளிக்கும் முதிர்ச்சியை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

    அவர்களைப்போல் அல்லாதவர்கள் அவர்கள் மனத்தை நோகடித்தாலும், ஏன் அப்படிச் செய்கிறார்கள் என்று புரியும். `பழிக்குப் பழி’ என்று வீம்பு இருக்காது.

    எப்படிப் புரிந்துகொள்வது?

    பொதுவாக, பிறர் பேசும்போது, தான் எங்கு, எப்படி குறுக்கிடலாம் என்று காத்திருப்பதுதான் பலருக்கு வழக்கம். இது இயற்கை.

    அப்படியின்றி, ஒருவர் பேசுவதை உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டால், ஓரளவு புரிந்துகொள்ள முடியும். சிலரது புன்னகைக்குப் பின்னால் வருத்தம் இருக்கலாம். அன்பு கோபமாக வெளிப்படலாம்.

    பலபேர் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், ஒருவர் மட்டும் மற்றவரது முகபாவம், பயன்படுத்தும் வார்த்தைகள் போன்றவற்றை மௌனமாகக் கவனித்துக்கொண்டிருப்பார். இவர் பிறரைப் புரிந்துகொள்ளும் அறிவாளி.

    அது புரியாது, `கர்வி,’ அல்லது, `பழகத் தெரியாதவன்’ என்று பட்டம் சூட்டிவிடுவார்கள்.

    தம்பதியருக்கு ஒரே மனமா?

    புதிதாக மணமானவர்கள் முதலில் பேசிக்கொள்வது: `நமக்குள் ரகசியமே இருக்கக் கூடாது. அப்போதுதான் நாம் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்”.

    இரண்டுமே தவறான எதிர்பார்ப்புகள்.

    `நான் திருமணத்திற்கு முன்பே பலருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன்!’ என்று அவர்களுள் ஒருவர் கூறினாலும், மற்றவரின் பொறாமையையும், `இப்போது மட்டும் ஒழுக்கமாக இருந்துவிடுவாயோ?’ என்ற சந்தேகத்தையும்தான் தூண்டிவிடுகிறார்.

    நம்மைப் பற்றி நாமே எவ்வளவுதான் விளக்கினாலும், பிறர் நம்மைப் புரிந்துகொள்ள முடியாது.

    பிறர் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று யோசித்தே நடப்பதால், பலரும் உண்மையாக நடப்பதுமில்லை.

    கதை

    நீண்ட காலம் தாம்பத்தியத்தில் ஈடுபட்டிருந்த முதியவர்களைக் கண்டு, அதிசயப்பட்டுக் கேட்டார்கள்: “உங்களுக்குள் சண்டையே வந்தது கிடையாதா? அப்படி ஒரு புரிந்துணர்வா!”

    அதற்கான பதில்: “என்னிடம் மட்டும் குறையே கிடையாதா, என்ன! கணவருடைய (மனைவியின்) குறைகளைப் பெரிதுபடுத்துவானேன்! ஏதாவது கெட்டுப் போயிருந்தால், அதைச் சரிசெய்து, பயன்படுத்தும் தலைமுறை எங்களுடையது!”

    (நிறைவு)

    Share
  • மொபைல்போனில் மூழ்கும் குழந்தைகளை மீட்பது எப்படி?

    மொபைல்போனில் மூழ்கும் குழந்தைகளை மீட்பது எப்படி?

    நாளும் பொழுதும் செல்பேசியே கதி எனக் கிடக்கின்றனர் இளையோர். அதிலிருந்து கண்ணை அகற்றாமல் அதிலேயே மூழ்கி வருகின்றனர். இதனால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த மொபைல் போதையிலிருந்து குழந்தைகளை, சிறுவர்களை, வளரிளம் பருவத்தினரை மீட்பது எப்படி? நிர்மலா ராகவனின் அற்புதமான யோசனைகளைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பழகத் தெரிய வேணும் – 99

    பழகத் தெரிய வேணும் – 99

    நிர்மலா ராகவன்

    தானே வராது வாய்ப்பு

    “எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!” பலரும் முனகுவார்கள்.

    நாம்தான் அதைத் தேடிப் போகவேண்டும் என்று அவர்களுக்குப் புரிவதில்லை.

    அதிர்ஷ்டம் எப்படிக் கிடைக்கும்?

    முதலில் உழைப்பு. அதன்பின், உழைப்பைப் பாராட்டி புதிய வாய்ப்புகள் கிடைக்கும்போது அவற்றை நழுவ விடாதிருப்பது.

    கதை

    இசைத் துறையில் பட்டம் பெற்ற இளைஞர் குருசாமி.

    திரையுலகில் சேர்ந்தால், புகழுடன் நிறைய பணமும் கிடைக்குமே என்ற பேரவா அவருக்கு.

    தான் மெட்டமைத்த பாடல்களைப் பதிவு செய்து, ஓர் இயக்குநருக்கு அனுப்பினார்.

    “உடனே வாருங்கள்,” என்ற அழைப்பு வந்தது.

    இப்போது குருசாமிக்குத் தயக்கம் ஏற்பட்டது. திரையுலகைப் பற்றித் தாறுமாறாகப் பேசுகிறார்களே! அங்கு போய், தான் மாறிவிட்டால்?

    “நான் அங்கு சென்றால், எப்போதும்போல் நல்லவனாகவே இருக்க முடியுமோ என்ற பயம் வந்துவிட்டது,” என்று என்னிடம் தெரிவித்தார்.

    இதை முதலிலேயே யோசித்திருக்க வேண்டாமா?

    போதாக்குறைக்கு, `கல்யாணமானா, நிச்சயம் குழந்தை இருக்கணும்,’ என்று எவளோ கூறியிருக்கிறாள். அப்படித் தன் மனத்தைக் கலைத்தது அவள் தவறு என்பதுபோல், அதையே பலமுறை ஆத்திரத்துடன் கூறினார்.

    ஆரம்பிக்கும் முன்னரே அச்சமும் தயக்கமும் அடைந்தால் வாய்ப்பு நழுவிவிடாதா!

    எந்த வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்ளுமுன், அதனால் நன்மையும், நீடித்த மகிழ்ச்சியும் கிடைக்குமா என்று யோசிக்க வேண்டுவது அவசியம். அதற்கு ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

    அதன்பின், குருசாமி போயிருக்க வேண்டிய இடத்திற்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டு, பெரும் புகழை அடைந்தார்.

    கிடைத்த நல்ல சந்தர்ப்பத்தை உரிய காலத்தில் பற்றிக்கொள்ளாத வருத்தம்தான் குருசாமிக்கு நிலைத்தது.

    இலக்கு சரியாக இருந்து, அதற்கான ஆராய்ச்சியைச் செய்து, திறமைகளையும் வளர்த்துக்கொண்டால் தோல்வி வராது.

    ஊக்கமளிக்கும் உறவினர்களும், ஓரிரண்டு நண்பர்களும் இருந்தால் கூடுதல் நன்மை.

    ஏன் தோல்விக்கு மேல் தோல்வி?

    “நான் என்னென்னவோ செய்து பார்த்துவிட்டேன். எல்லாவற்றிலும் தோல்விதான்!” என்று புலம்புகிறவர் தன்னால் என்ன முடியும் என்பதை உணராதவர். தன் மனத்தின் குரலைவிடப் பிறருடையதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பவர். நம் முன்னேற்றத்தில் நம்மைவிட யாருக்கு அதிக அக்கறை?

    சவால்கள், அவமதிப்பு போன்றவற்றைப் பொறுத்துக்கொண்டு அலட்சியப்படுத்தினால்தான் முன்னேற முடியும்.

    எந்த வாய்ப்பும் பிரச்னையாகத்தான் ஆரம்பிக்கும்.

    கதை

    எங்கள் பள்ளியில், கேள்வித்தாள்களை ஆசிரியர்களே கணினியில் தட்டச்சு செய்துவிடவேண்டும் என்று புதிய விதிமுறையைக் கொண்டுவந்தனர்.

    உணர்ச்சிவசப்பட்டு, `எப்போதும் நான் என் கைப்படத்தான் எழுதுவேன்!’ என்று பிடிவாதம் பிடித்தால் புதியனவற்றைக் கற்று முன்னேறும் வாய்ப்பு கிடைக்குமா?

    ஒரு கணினி வாங்கிப் பழகத் தொடங்கினேன். நாற்பது வயதுக்குமேல் எதையும் கற்பது எளிதல்ல. எரிச்சலாக இருந்தது.

    அதை மாற்றி, உற்சாகம் அளித்துக்கொள்ளும் வகையில், தினசரியின் முதல் பக்கத்திலிருந்த செய்திகளிலிருந்து முதலிரண்டு வார்த்தைகளை ஒன்றாக இணைத்து ஒரு வாக்கியம் அமைத்தேன்.

    அது இப்படி இருக்கும்: மந்திரி – மரண தண்டனை – கற்பழிப்பு, கொலைக் குற்றத்திற்காக …

    எனக்கே சிரிப்பு வர, அலுப்பு மறைந்தது.

    சுமாராகத் தட்டச்சு செய்ய வந்தபின், உட்கார்ந்திருந்த போதெல்லாம் விரல்கள் நர்த்தனம் ஆடிக்கொண்டே இருக்கும், மனக்கண்ணால் இசைப்பலகையை இயக்குவது போல்.

    “டீச்சர்களுக்கெல்லாம் கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தெரியுமா?” என்று ஒரு மாணவன் அதிசயப்பட்டுக் கேட்க, பெருமையாகிவிட்டது.

    முதலில் ஆங்கிலம், அதன்பின், தமிழ்.

    கட்டாயம் என்பதால் கற்றது இப்போது பல வகைகளிலும் பயனுள்ளதாக இருக்கிறது.

    கிடைக்கும் சந்தர்ப்பங்களால் நமக்கு என்ன நன்மை விளையும் என்று எப்போதும் அலசுவது சரிதானா?

    கோலாலம்பூரில் பெருவெள்ளம்

    கடற்கரைப் பகுதியில் இல்லாத தீபகற்ப மலேசியத் தலைநகரில் நூறு வருடங்களாக வெள்ளம் கிடையாது.

    இப்போதோ, பாதுகாப்பு வேண்டி, மக்கள் கூரைமேல் ஏறினார்கள்.

    ஒருவர் தாம் வைத்திருந்த படகால் அவர்களுக்கு உதவி செய்யலாமே என்று தோன்ற, காரின்மேல் படகுடன் சென்றார் – பலமுறை.

    நல்லது செய்தாலும், சந்தேகப்படவென்று சிலர் இருப்பார்களே!

    குருத்வாரா

    சீக்கியர்கள் ஒன்றுகூடவும் வழிபடவும் அமைக்கப்பட்ட இடங்கள், குருத்வாரா.

    சேவை மனப்பான்மை கொண்ட பிற இனத்தவரும் இணைந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கினர்.

    “சீக்கியர்கள் தயாரிக்கும் உணவை நாம் சாப்பிடலாமா? ஹலாலாக (halal) இருக்குமா?” என்ற கேள்விகள் எழுந்தன, மலாய்க்காரர்களிடமிருந்து.

    அது என்ன, ஹலால்?

    ஆடு, மாடு, கோழி போன்றவற்றை இஸ்லாமியரே பூசை செய்தபின் கொல்வதாம். இதற்கு விலக்கு மீன், முட்டை.

    “மத, இன வித்தியாசம் பாராது, பிறருடைய கொள்கைகளை மதித்து, தன்னலமின்றி சேவை செய்பவர்களை அவமதிப்பதா?” என்று ஒரு மலாய்ப் பெண்மணி காரசாரமாக இணையத்தில் கேட்டிருந்தார்.

    சுற்றிலும் தண்ணீர் இருந்தாலும், குடிநீர்ப் பற்றாக்குறை.

    உணவு மட்டுமின்றி, ஆடை, குடிநீர், சிசுக்களுக்கான டயாபர் போன்றவற்றையும் பொதுமக்கள் அளித்தனர். பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்ய முன்வந்தனர்.

    `இதனால் நமக்கு என்ன நன்மை?’ என்று யோசிக்க அவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். `பிறரது துன்பத்தில் பங்குபெற முடிந்ததே!’ என்ற நிறைவு போதும் அவர்களுக்கு. அவர்களே வெள்ளத்தில் மாட்டிக்கொண்டும் இருக்கலாம். அந்த அனுபவத்தையும் சவாலாக எடுத்துக்கொண்டிருப்பார்கள்.

    `நம்மால் இவ்வளவு செய்ய முடியுமா!’ என்ற அதிசயம் எழ, அதனால் நிறைவும் ஏற்பட்டிருக்கும்.

    கதை

    குமரன், பத்து வயதுப் பையன். பொருளாதார வசதி குறைந்த விதவைத் தாய் மறுமணம் செய்துகொண்டதும், எங்கள் உறவினர் வீட்டில் வேலையாளாகச் சேர்ந்தான். படிப்பைத் தொடர்ந்தாலும், தேர்ச்சி பெற முடியவில்லை.

    வீட்டு வேலை முடிந்ததும், ஓயாது தொலைக்காட்சிதான் துணை.

    “நேரத்தை இப்படி வீணடிக்கிறாயே!” என்று அவனைச் செஞ்சிலுவைச் சங்கத்தில் சேர்த்துவிட்டார்கள்.

    அலுவலகம் ஒன்றில் உத்தியோகம் கிடைத்தபோதும், தொடர்ந்து உழைத்தான். பிறருக்கு உதவும் மனப்பான்மை வலுத்தது.

    ஆனால், அதைப் பெருமையாகக் கருதவில்லை.

    தீயணைக்கும்போதோ, வெள்ளம் பெருகியபோதோ தான் அடைந்த அனுபவங்களை ரசித்துக் கூறுவான்.

    அந்த வேலைகளெல்லாம் எளிதாக இருந்திருக்குமா? உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாமே!

    எதையும் எதிர்பார்த்துக் குமரன் பிறருக்கு உதவவில்லை. ஆனாலும், சவால்களை `வாய்ப்பு’ என்று எடுத்துக்கொண்டதால், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிட்டியது குமரனுக்கு.

    “Smooth seas do not make skilful sailors” (கடலில் கொந்தளிப்பு இல்லாவிட்டால், தேர்ந்த மாலுமிகளாக ஆக முடியாது (ஆப்பிரிக்கப் பழமொழி).

    “எனக்குச் சரியான சந்தர்ப்பம் அமையவில்லை!” என்று மூக்கால் அழுபவர்கள் வாய்ப்புகளை நழுவ விடுகிறார்கள், அவை கஷ்டம் என்று.

    `கஷ்டமாக இருந்தால் என்ன!’ என்று துணிகிறவர்களே அந்த சந்தர்ப்பத்தையே நல்ல வாய்ப்பாக ஆக்கிக்கொள்கிறார்கள்.

    யாருக்குத்தான் கஷ்டங்கள் இல்லை?

    அவற்றை நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றி, தோல்வி அடங்கியிருக்கிறது.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 98

    பழகத் தெரிய வேணும் – 98

    நிர்மலா ராகவன்

    உணர்வும் முதிர்ச்சியும்

    “இதை நான் செய்யவில்லை. அவள்தான் இப்படிச் செய்யச்சொன்னாள்”.

    “அவள் குறுக்கிட்டதால்தான் நான் செய்ய ஆரம்பித்த காரியத்தில் தவறு நேர்ந்துவிட்டது”.

    இப்படிக் கூறுகிறவர்கள் சிறுவயதினர் மட்டுமில்லை. வயது ஏறியிருந்தாலும், உணர்ச்சிபூர்வமாக முதிர்ச்சி அடையாதவர்கள் பலர் உண்டு.

    கதை

    யாராவது பேசிக்கொண்டிருக்கும்போது குறுக்கிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள் ஆசிரியை கமலம். அவளைப் பிறர் கவனிக்கவேண்டும் என்ற எண்ணமோ?

    தான் எப்போது குறுக்கிடலாம் என்றே காத்திருப்பாள், தன் பெருமையைப் பறைசாற்றிக்கொள்ள.

    `நீ எப்போது காரோட்டப் பழகினாய்?’

    `நீ எப்போது தலைமயிரைக் குட்டையாக வெட்டிக்கொண்டாய்?’

    கமலத்தை நோக்கிக் கேட்கப்படும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இப்படித்தான் ஆரம்பிக்கும் :“நான் பம்பாயில் M.SC பண்ணிக்கொண்டிருந்தபோது..!”

    இப்படிப்பட்டவர்கள் ஏதோ ஒரு முறையால் வதைக்கப்பட்டிருக்கலாம். தாழ்வு மனப்பான்மையை மறைத்துக்கொள்ள பிறரைச் சாடுவார்கள். அப்போதுதானே தாம் உயர்ந்துவிட்டதைப்போல் தோன்றிவிடும்!

    (ஆங்கிலமோ, மலாயோ, கமலத்தின் உச்சரிப்பு வேற்றுமொழியின் வாடையுடன், வித்தியாசமாக இருக்கும். `அவள் பேசுவது யாருக்குப் புரிகிறது!’ என்று பிறர் கேலி செய்வது அவளுக்குத் தெரியாமல் போயிருக்குமா!)

    அவளைப்போல், உடல் வளர்ந்திருந்தாலும், முதிர்ச்சி இல்லாதவர்களுக்குப் புதியனவற்றை அறியும் ஆர்வம் இருக்காது. அது பிறரைப் பற்றிய வம்பாக இருந்தால் மட்டும் சுவாரசியமாகப் பங்கெடுப்பார்கள்!

    கதை

    என் பள்ளித் தலைமை ஆசிரியை தன்கீழ் இருப்பவர்களைப் பாடாய்ப்படுத்தினாள். பள்ளி முழுவதும் கேட்கும்படி எந்த ஆசிரியர் பெயரையாவது சொல்லி, அவர் செய்த தவற்றையும் பிரகடனப்படுத்துவாள்.

    இதுபோன்ற செய்யக்கூடாத பலவற்றைச் செய்தாள்.

    பொறுக்கமுடியாது, நான் அவள் செய்த அட்டூழியங்களையெல்லாம் பட்டியலிட்டு, தினசரிக்கு அனுப்பினேன். (அவள் பெயரைப் போடவில்லை. ஆசிரியருக்கு மட்டும் எந்தப் பள்ளி என்று குறிப்பு அனுப்பியிருந்தேன்).

    அது வெளியானதும், நானடைந்த பிரபலத்தைப் பொறுக்கமுடியாது, “இதனால் உனக்கு என்னென்ன பிரச்னைகள் வரும் என்று தெரியுமா?” என்றாள் கமலம், சவாலாக.

    “எழுதி அனுப்புமுன்னரே எல்லாவற்றையும் யோசித்துவிட்டேன்,” என்றேன் அலட்சியமாக.

    என்னை அதிர்ச்சி அடையச் செய்யவேண்டும் என்று அவள் கேட்டிருப்பாள். நான் அடையாத அதிர்ச்சி அவளிடமே திரும்பியது.

    உணர்ச்சி முதிர்ச்சி கொண்டவர்கள்

    ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பாராது, எல்லோரையும் ஒரேமாதிரி நடத்துவதால், மதிக்கப்படுகிறார்கள்.

    ஆனால், அவர்களை துச்சமாக நடத்துகிறவர்களிடமிருந்து ஒதுங்கிவிடுவார்கள்.

    கதை

    செடிகளை விற்பனை செய்யும் நர்சரி அது.

    வேறு நாட்டைச் சேர்ந்த இளம் தொழிலாளி செடிகளை விற்றுக்கொண்டிருந்தான், தன் முதலாளியின் சார்பில்.

    “ஏய்! இது என்ன விலை?” என்று அதிகாரமாகக் கேட்டாள் ஒரு பெண்மணி. பெரிய காரில் வந்திருந்தாள். `இவனையெல்லாம் மதிப்பதாவது!’ என்ற அகம்பாவம் அவள் கேள்வியில் தொனித்தது.

    தான் தாழ்த்தப்படுவதை யாரால்தான் பொறுக்கமுடியும்!

    நான் வாங்கியதைப்போல் இரு மடங்கு விலையைச் சொல்லிவிட்டு, அந்த இளைஞன் என்னைப் பார்த்து, ரகசியமாகச் சிரித்தான்.

    தாம்பத்தியத்தில் உணர்ச்சி வேறுபாடு

    கதை

    ராமனுக்கும் சீதாவுக்கும் பெயரில் மட்டும்தான் பொருத்தம்.

    இருவரும் காரில் போகும்போது ஏதாவது தவறு செய்துவிட்டால், “உன்னோடு பேசியதால்தான் இப்படி!” என்று மனைவிமேல் பாய்வான் ராமன்.

    பேசியது அவன். தவறு செய்ததும் அவன். ஆனால், நடந்தது அவள் குற்றம்.

    தன் துணையாகவே இருந்தாலும், மனைவி வெற்றி அடையும்போது சிறுமையாக உணர்வார்கள் சில ஆண்கள். அதை மறைக்க, சமயம் கிட்டியபோதெல்லாம் அவளை மட்டம் தட்டுவார்கள் – பொது இடங்களில்கூட.

    அவர்களது குழப்பம் புரிந்து, அவ்வப்போது புகழ்ந்து, `எனக்கு நீங்களும் முக்கியம்தான்!’ என்பதுபோல் ஆதரவாக நடந்துகொண்டால், நாளடைவில் சற்றே மாறும் சாத்தியக்கூறு உண்டு.

    கதை

    திருமணத்திற்குப்பின் முனைவர் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்தாள் மூர்னி. அவள் படிப்பை ஒட்டி, பெண்ணியத்தைப்பற்றி என்னைப் பேட்டி காண வந்திருந்தாள்.

    மலாய், ஆங்கிலம் இரண்டிலும் சிறந்த தேர்ச்சி இருந்ததால், பிரபலமானவர்கள் சிலரைப் பேட்டி கண்டு, தினசரிகளுக்கு அனுப்பியிருந்தாள்.

    ஆங்கிலத்தில் சிலமுறை வெளியானதும், `இவள் தன்னை மிஞ்சிவிடுவாள் போலிருக்கிறதே!’ என்ற பயம் ஏற்பட்டது அவள் கணவனுக்கு.

    “அதன்பின், மூன்று நாட்கள் என்னுடன் பேசவேயில்லை,” என்று என்னிடம் தெரிவித்தாள். “நீங்கள் கூறிய கருத்துகளை எழுதி அனுப்ப தயக்கமாக இருக்கிறது. என் கணவர் மீண்டும் கோபித்தால் என்ன செய்வது?” என்று குழம்பினாள்.

    பல பெண்கள் திருமணத்திற்குமுன் கதை, கட்டுரை என்றெழுதி, பத்திரிகைகளில் அவை பிரசுரமும் ஆகியிருக்கும்.

    கல்யாணத்திற்குப்பிறகு அவர்களில் பெரும்பாலோர் காணாமல் போய்விடுகிறார்களே, ஏன்?

    `வீட்டு வேலை, குழந்தைகள்,’ என்று ஏதேதோ காரணம் காட்டினாலும், கணவரது பொறாமையைத் தூண்டிவிடுவானேன், இல்லறத்தில் குழப்பம் ஏற்படச் செய்வானேன் என்றுதான் யோசித்திருப்பார்கள்.

    `முன்பெல்லாம் நிறைய எழுவாயே! இப்போது ஏன் விட்டுவிட்டாய்?’ என்று அப்படியொரு மனைவியைக் கேட்கும் கணவன் தன் சொல்லும் செயலும் பிறரைப் பாதிக்கக்கூடும் என்பதை உணராதவன்.

    பிறருக்கும் உணர்ச்சிகள் இருக்கக்கூடும் என்பது அப்படிப்பட்டவர்களுக்குப் புரிவதில்லை. தம் உணர்ச்சிகளுக்கே முக்கியத்துவம் அளிப்பதால், தாக்கப்படும்போது குறுகிவிடுவார்கள்.

    தொடர்ந்து எழுதும் பெண்கள்?

    இரண்டு காரணங்கள் புலப்படுகின்றன.

    ஒன்று, கணவர் ஊக்குவிக்கிறார், இல்லையேல், மனைவி எழுதுவதைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

    (பிறரை ஊக்குவிப்பவர்கள் உணர்வு முதிர்ச்சி கொண்டவர்கள். எவ்விதத்திலும் பிறரைக் கட்டுப்படுத்த மாட்டார்கள். அதேபோல், பிறர் தம்மைக் கட்டுப்படுத்துவதையும் விரும்பாதவர்கள்).

    இரண்டு, எந்த எதிர்ப்பையும் லட்சியம் செய்யாது, எழுத்தே உயிர்மூச்சு என்றிருக்கும் பெண்கள்.

    எத்துறையில் பீடுநடை போடும் பெண்களுக்கும் இவை பொருந்தும்.

    அவர்களது ஆர்வத்தைத் தடைபோடுவதுடன் நில்லாது, கண்டபடி பழிக்கும் கணவன்மார்களைப் பொறுக்க முடியாததால்தான் இரண்டு, மூன்று முறை திருமணம் செய்துகொள்கிறார்கள் நடிகைகள்.

    பழி என்னவோ, பெண்களுக்கு.

    குடும்பத்தில் பாரபட்சம்

    ஒரே குடும்பத்தில் குழந்தைகளிடம் பாரபட்சமாக நடந்துகொண்டால், தாழ்த்தப்பட்ட குழந்தையின் ஆத்திரம் பிறரையும் துன்புறுத்தவேண்டும் என்ற ஆத்திரமாக மாறலாம். அல்லது மன இறுக்கத்தில் கொண்டுவிடும்.

    பிறருடன் நம்மை ஒப்பிட்டுக்கொண்டே இருந்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும்.

    தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுடன் பழகும்போது, உயர்ந்தவர்களாக உணர்வோம். மேலான நிலையில் இருப்பவர்களுடன் பழக நேரும்போதோ, அவர்களுக்குச் சமமாக நடிக்க வேண்டியிருக்கும்.

    இப்பழக்கத்தால், சந்திப்பவர்கள் எல்லாரையும் மதிப்பும் மரியாதையுமாக நடத்தத் தவறிவிடுவோமே!

    குறையை நமக்குள் வைத்துக்கொண்டு, “ஏனோ, யாருமே என்னை மரியாதையாக நடத்துவதில்லை!” என்று வருந்துவதால் என்ன பயன்?

    கதை

    ஆசிரிய மேற்பயிற்சியின்போது, எங்கள் வகுப்பில் ஒருவர் கூறியது: “நான் என்ன செய்தாலும் என் தந்தையின் அன்பைப் பெற முடியவில்லை. என்னிடம் குறை கண்டுகொண்டே இருக்கிறார்!”

    அவர் முகத்தில் தாங்கமுடியாத வருத்தம். தங்கையிடம் மட்டும் அன்பைப் பொழிகிறாரே என்ற குழப்பம்.

    அவருக்குச் சித்திரம் வரைவதில்தான் ஆர்வம் என்று பிறகு கேட்டறிந்தேன். தந்தையோ, `விஞ்ஞானத்தில் பட்டம் வாங்கு,’ என்ற வற்புறுத்தியிருந்தார்.

    பிடிக்காத துறையில் அரைமனதுடன் ஈடுபட்டவர் அதில் சிறக்கவில்லையென்று, தந்தை ஓயாது தம் வார்த்தைகளாலேயே அவரை வதைத்தார் – பிறர் எதிரிலேயே.

    தந்தை அதிகம் படிக்காதவர். நிறைவேறாதுபோன கனவை மகன்மூலம் நிறைவேற்றிக்கொள்ளப் பார்த்திருக்கிறார்.

    மகனுக்கு என்ன பிடிக்கும், எது உகந்தது என்று புரிந்துகொள்ள விரும்பாது, தன் அதிகாரத்தை அவன்மேல் செலுத்த ஆரம்பித்தார். நாளடைவில், அதிகாரமே போதையாக ஏறியது. அதற்குப் பலி மகன்.

    நம்மை வருத்துகிறவர்கள் தம்மைத்தாமே ஏற்க முடியாதவர்கள் என்பதைப் புரிந்துகொண்டால், அவர்கள்மீது கோபம் வராது. பரிதாபம்தான் எழும்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 97

    பழகத் தெரிய வேணும் – 97

    நிர்மலா ராகவன்

    குருட்டுத்தனம் வேண்டாமே!

    கோலாலம்பூரில் உள்ள பத்து மலையில் (BATU CAVES) தைப்பூசத் திருவிழா.

    “எங்கேடா போறோம்?”

    “யாருக்குத் தெரியும்?”

    லட்சக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்களும், வேடிக்கை பார்க்க வந்தவர்களுமாக கும்பல் திரண்டிருந்தது. பலவிதமான ஒலிகளுக்குமேல் அங்கு கேட்ட ஓர் உரையாடல் அது.

    தவிர்க்க முடியாத கும்பலில் சரி. ஆனால், எப்போதும் பிறரைப் பின்தொடர்ந்தால் என்ன ஆகும்?

    `தடம் பதித்தவர்கள்’ என்று சிலரைக் குறிப்பிடுகிறோம்.

    நாமும் அவர்களைப் பின்தொடர்ந்து, அதே தடத்தில் நடந்தால், நமக்கும் மதிப்பும் மரியாதையும் கிடைக்குமே என்ற நப்பாசை பலருக்கு. ஆனால், அவர்கள் காலடி எப்படிப் பிறர் கண்களில் படும்? திருப்திதான் கிட்டுமா?

    அரசாங்க ரீதியில் இப்படிச் செய்யும்போது, ஒரு நாட்டு மக்கள் ஆட்டுமந்தைகளாக அதிகார வர்க்கத்தினரைப் பின்தொடர்கிறார்கள்.

    வாலறுந்த நரி ஒன்று பிற நரிகளைக் கேலி செய்து, அவையும் தம் வாலை வெட்டிக்கொள்ளச் செய்ததாம். தன்னை வித்தியாசமாகக் கருதிவிடப்போகிறார்களே என்ற பயம் அதற்கு.

    சமீபத்தில் மலேசியாவில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளான சமாசாரம் இது.

    மாஜி பிரதமர் ஒருவர், “சீனர்கள் நாட்டுப்பற்று இல்லாதவர்கள். இன்னமும் தங்கள் வழக்கப்படி, உணவு உட்கொள்ள CHOP STICKS (குச்சிகள்) பயன்படுத்துகிறார்கள்! நம்மைப்போல் கையைப் பயன்படுத்துவதில்லை,” என்று பேசியிருந்தார்.

    எல்லா இனத்தவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    `சீனர்கள் தம் உணவை மிகுந்த சூடாக உட்கொள்வார்கள். (குளிர்நாட்டுப் பழக்கம் அது). அத்தனை சூட்டில் கை வைக்கமுடியாது,’ என்று ஒருவர் விளக்க, நாட்டு ஒற்றுமையைக் குலைக்கப்பார்க்கிறார் என்ற பழி கிட்டியது.

    தமக்குச் சரியென்று படுவது எல்லாருக்கும் ஏற்புடையதாக இருக்குமா என்று பலரும் யோசிக்கத் தவறிவிடுகிறார்கள்.

    நம்மில் ஒவ்வொருவருக்கும் மூளை என்ற ஒன்று ஏன் தனித்தனியாக அமைந்திருக்கிறது?

    அதிகாரத்தை விரும்பும் சில அற்பர்கள் பயமுறுத்தியும், கேலி பேசியும் பிறரைப் பணியவைக்க முயல்வார்கள். அவர்கள் தைரியசாலிகளாக இருக்கமாட்டார்கள். அதை மறைக்கத்தான் முரட்டுத்தனம்.

    எல்லாரும் தம்மைப்போலவே நடக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் எதிர்த்திசையில் நடப்பவனுக்கு `கர்வி,’ `ஒற்றுமையாக இருக்காதவன்’ என்று பெயர் சூட்டிவிடுவார்கள்.

    “நீ ஓயாமல் தமிழ் புத்தகங்களைப் படிக்கிறாயே! நன்றாகவா இருக்கும்?” ஒரு மலாய் ஆசிரியை என்னைக் கேட்டாள், முகத்தைக் கோணியபடி.

    அவளுக்குப் புரியாத மொழியில் நான் படித்ததால் அவளுக்கு அச்சமோ?

    “எனக்குப் பிடிக்கும்!” என்றேன் அவள் முகத்தில் அடித்தாற்போல்.

    பழக்கவழக்கங்கள் புரியாது..

    பிற மனிதர்களை மட்டுமின்றி, பண்டைக்கால பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவதும் ஒரு விதத்தில், அறியாமைதான்.

    தீபாவளியன்று எங்கள் வீட்டுக்கு விஜயம் செய்த ஒரு சீனர், “எதற்காக முன்வாசலில் தோரணம் கட்டுகிறீர்கள் என்று நான் பலரைக் கேட்டபோது, எல்லாரும், TRADITION (பாரம்பரிய வழக்கம்) என்றார்கள்,” என்றார், சற்று ஏமாற்றத்துடன். அறிவுப்பசி அவருக்கு.

    நல்லவேளை, நான் அதைப்பற்றிப் படித்திருந்தேன். “பலரும் நம் வீட்டுக்கு வரும்போது, அவர்கள் மூச்சுக்காற்றிலிருந்து வெளியாகும் கரியமல வாயுவை பச்சை மாவிலைகள் உள்வாங்கிக்கொள்கின்றன. இது சுகாதார அடிப்படையில் உண்டான பழக்கம்,” என்று என் `அறிவாற்றலை’ வெளிப்படுத்திக்கொண்டேன்.

    இன்று பலரும் கட்டுவது பச்சை இலைகளால் அல்ல. பிளாஸ்டிக்காலான `மாவிலைத்’ தோரணம்!

    அரிசி மாவானான கோலத்தைப் போடுவது எறும்புபோன்ற சின்னஞ்சிறு பூச்சிகளுக்கு ஆகாரமாக. அழகுக்காக அல்ல.

    இதைப் பலரும் மறந்துவிட்டதால், பிளாஸ்டிக்கின்மேல் போடப்பட்ட வண்ணக்கோலம் அமோகமாக விற்பனையாகிறது.

    பெண்களைக் கிண்டல் செய்வது நகைச்சுவையா?

    பட்டிமன்றங்களில் பெண்களைப்பற்றித் தாறுமாறாகப் பேசுகிறார் ஆண் ஒருவர். `நகைச்சுவை’ என்று ஆண்கள் சிரிக்க, `நாமும் ஒத்துப்போய்விடலாமே!’ என்று பெண்களும் சேர்ந்து சிரிக்கிறார்கள்.

    அவர் சொல்வதில் உண்மை இருக்கிறதா என்று எவரும் யோசிப்பதில்லை.

    கதை

    என் கல்லூரி நாட்களில், பிரபலமான ஒருவர் கோயிலில் கதாகாலட்சேபம் செய்ய வருவார். அவருடைய புகழும் வருமானமும் அதிகரிக்க, தான் எது பேசினாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற தைரியம் பிறந்தது அவருக்கு.

    இந்துப் புராணக்கதைகளின் நடுவே, தற்காலப் பெண்களைப்பற்றி இழிவாகப் பேச ஆரம்பித்தார். `சுவாரசியமாக இருக்கட்டுமே!’ என்று நினைத்திருப்பார். எல்லாரையும் சிரிக்கவைக்கலாம் என்ற அவர் நம்பிக்கை வீண்போகவில்லை.

    அதன்பின், நான் அவருடைய நிகழ்ச்சிக்குப் போக மறுத்துவிட்டேன்.

    “நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இல்லை!” என்று என்மேல் தாயாருக்குக் கோபம்.

    நான் மசியவில்லை.

    சில ஆண்டுகளுக்குப்பின், அம்மாவும் போவதை நிறுத்திவிட்டார், “பொண்களைக் கேவலமா பேசறார்!” என்று முகத்தைச் சுளித்தபடி.

    கூட்டத்தில் ஒருவர் சிரித்தால், சற்றும் யோசியாது, எல்லாரும் அவரைப் பின்பற்றுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும்வரை பெண்களை இழிவுபடுத்தும் பேச்சாளர்களுக்குக் கொண்டாட்டம்தான். `கும்பலோடு கோவிந்தா!’ என்பது இப்படிப்பட்ட நடத்தைக்குத்தானா!

    பெண்கள் ஆண்களிடம் தாம் காணும் குறைகளைப்பற்றிப் பேசினாலோ, எழுதினாலோ, ஆண்கள் கொதித்தெழுவார்கள்.

    எந்த உண்மையையும் நேருக்கு நேர் சந்திக்க தைரியம் வேண்டும். ஆனால், அதைவிடப் பிறரைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றுவது எளிதாயிற்றே!

    திரைப்படங்களைக் காப்பியடிப்பது

    திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், ஆண் எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் அறையலாம், மனம்போனபடி கேலி செய்யலாம் என்று காட்டுகிறார்கள்.

    முட்டாள்களைப் பின்பற்றி நடப்பவனும் முட்டாளாகிறானே! அதையெல்லாம் பார்த்துவிட்டு, அதேபோல் நடக்கிறவர்களும் இருக்கிறார்கள்.

    இயக்குனர் ஒருவர், சிறிதும் மாற்றமின்றி, தான் சொல்லிக்கொடுப்பதுபோலவேதான் நடிகர்களும் பேசி, நடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பாராம். அப்படிச் செய்யாவிட்டால் தண்டனை என்று அவர்கீழ் வேலை பார்த்தவர்கள் பலர் தெரிவித்திருக்கிறார்கள்.

    நடிக்க வந்தவர்களின் மனோதர்மத்துக்கு இடங்கொடுக்காவிட்டால், எல்லாரும் ஒரேமாதிரிதான் நடிப்பார்கள். அதில் இயக்குனரின் கைவரிசை தெரியும். புதுமையோ, சுவாரசியமோ இருக்குமா?

    மதத்தின் பெயரால்

    “மத குரு” என்று தம்மைத் தாமே அறிவித்துக்கொண்டு, பெயரும் புகழுமாக இருக்கிறார்களே சிலர், எப்படி?

    கலை, தர்மம் இரண்டிலும் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள்போல் எதையாவது ஆரம்பித்தால், நல்லவர்கள் பலர் அவருக்கு உதவியாக நடக்க முன்வருவார்கள். இது உலக நியதி.

    பல காலம் கழிந்தபின்னர்தான் அவர் செய்துவந்தது சமூக சேவை இல்லை, சுயநலம் என்பது வெளியாகும்.

    நான் அப்படி ஒருவரைச் சந்தித்திருக்கிறேன் – கலை நிகழ்ச்சிகளில்.

    அவர் நடக்கும்போதே சில பக்தைகள் அவர் காலில் விழுந்து வணங்குவார்கள். மரியாதை என்பது ஒருபுறமிருக்க, ஒருவர் அப்படிக் கும்பிட்டால், அவர் செய்த பாபம் வணங்கப்பட்டவருக்குப் போய்விடுமாம்.

    சில ஆண்டுகளிலேயே, நடக்கக்கூட முடியாது அவர் தள்ளாடியதைக் கண்டு, “அவருக்கு என்ன, கான்சரா?” என்று அவருடைய மருத்துவரைக் கேட்டேன்.

    “அது மட்டும்தான் இல்லை. மற்ற எல்லா வியாதிகளும் இருக்கின்றன,” என்ற பதில் கிடைத்தது.

    பிறர் தன்னைப் பின்பற்றுகிறார்களே என்ற பெருமிதம் அப்போதாவது மறைந்திருக்குமா?

    ஏனென்று கேள்!

    குழந்தைகள் இயற்கையாகவே எதையும் அறியும் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அவர்களது அறிவுப்பசிக்குத் தீனி போடாது, `சும்மா தொணதொணக்காதே!’ என்று விரட்டிவிட்டால், அடங்கிவிடுவார்கள்.

    பதின்ம வயதில், `இப்படி நட!’ என்று அதிகாரம் செய்தால் கேட்பார்களா?

    `ஏன்? ஏன்?’ என்று கேட்கும் பழக்கம் உள்ளவர்கள் பிறர் கூறுவதையோ, செய்வதையோ பின்பற்றமாட்டார்கள். சுயமாகச் சிந்தித்துச் செயல்படுவார்கள். அவர்களைப் பார்த்துப் பிறர் அச்சமடையும் அபாயம் உண்டு!

    ஒரு மருத்துவர் கூறினார்: “தொண்டையில் வலி இருந்தால், கடையில் வாங்கும் மருந்துகளைவிட உப்பு கரைத்த வெந்நீரால் கொப்புளிப்பது சிறந்தது”.

    நான் அதை அப்படியே ஏற்கவில்லை. “ஏன், டாக்டர்?” என்று அவரை மடக்கினேன்.

    என் கேள்வியை எதிர்பாராத அவர் சற்று அயர்ந்துவிட்டார். அவரிடம் வேறு யாரும் அப்படி `எதிர்த்து’ப் பேசியதில்லை போலிருக்கிறது!

    “கூடுதலாக இன்னும் சில மணி நேரம் உப்பின் குணமாக்கும் தன்மை நீடித்திருக்கும்,” என்றார், ஒருவழியாகச் சமாளித்துக்கொண்டு.

    `டாக்டர் சொன்னால், அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். அவருக்குத் தெரியாததா!’ என்பவர்களுக்கு: `அவருக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால், எனக்குத் தெரியாதே!’

    Share
  • பழகத் தெரிய வேணும் – 96

    பழகத் தெரிய வேணும் – 96

    நிர்மலா ராகவன்

    தோல்வியா? அப்படியென்றால்?

    பதினேழு முறை இந்தியாவின்மீது படையெடுத்தார் முகம்மது என்ற பெயர்கொண்ட அரசர். அவருடைய நாட்டின் பெயர் கஜினி. ஆப்கானிஸ்தானில் ஒரு பகுதி.

    `முயற்சி திருவினையாக்கும்!’ என்று புரியவைக்கவோ, என்னவோ, கஜினி முகம்மதுவைப்பற்றி சரித்திர பாடத்தில் நுழைத்திருந்தார்கள். ஒரே முறை முயன்றுவிட்டு, பின் அந்த முயற்சியைக் கைவிட்டிருந்தால், ஆயிரம் ஆண்டுகளுக்குமேலும் அவர் பெயர் நிலைத்திருக்காது.

    ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளும் அனைவருமே வெற்றி பெறுகிறார்களா? இடையில் நின்றுவிடாது, இறுதிவரை போனாலே வெற்றிதான் — முயலை வென்ற ஆமையைப்போல்.

    எந்தக் காரியத்தில் வெற்றி பெற்றவர்களை எடுத்துக்கொண்டாலும், முதல்முறையே வெற்றி கண்டிருக்கமாட்டார்கள். இருப்பினும், தோல்வி என்பதே அவர்கள் வாழ்வில் கிடையாது என்றுதான் கூறுவார்கள்.

    அவர்களைப் பொறுத்தவரை, வெற்றிக்கு எதிர்ப்பதம் அனுபவம். ஏனெனில், அதுதான் இன்னொரு முறை எப்படிச் செய்யக்கூடாது என்பதை உணர்த்தும்.

    கடினமான காரியத்தில் இறங்கினால், பல முறை தவறுகள் நிகழலாம். நீண்டகாலம் பிடிக்கும். அதில் வெற்றி பெற முக்கியமான தன்மை: பொறுமை.

    கதை

    நான் ஒரு குறும்படத்தில் நடித்தேன்.

    மகள் நாட்டியத்தில் முன்னுக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் ஏழை விதவைத்தாய், தன் வருத்தத்தை வெளிக்காட்டத் தெரியாது, அவளை ஓயாது திட்டி, நல்வழிப்படுத்துகிறாள். இதுதான் கதை.

    தாயாக நான் நடித்தேன். நான் பேசவேண்டிய வசனத்தை என்னிடம் விட்டுவிட்டாள் இயக்குனர்.

    மொழி தமிழ். கரு: பரதநாட்டியம். இயக்குனரோ, மிஸ் ஆங் என்ற சீனப்பெண். மொழி, கரு இரண்டுமே அவளுக்குத் தெரியாது. ஆனால், கதை இப்படித்தான் செல்லவேண்டும் என்று கணித்திருந்தாள்.

    சில காட்சிகளில், அவளுடைய எதிர்பார்ப்பைக் கூறுவாள். முகபாவத்திலும், தலையசைவிலும் காட்ட முயற்சித்தேன்.

    ஒவ்வொரு முறையும், “Again!” (திரும்பவும்) என்பாள்.

    இப்படியே, ஒரு காட்சியில் பன்னிரண்டு முறை, அவளுக்குத் திருப்தி ஏற்படும்வரை மாற்றி மாற்றிக் காட்டினேன்.

    அந்தப் பாத்திரம் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டிருக்கும் என்று புரிந்துகொண்டு வெளியே கொண்டுவர அவ்வளவு முயற்சி எடுக்க வேண்டியிருந்தது.

    படம் முடிந்ததும், ஒளிப்பதிவாளர், “உங்கள் பர்சனாலிடிக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத, மிக வித்தியாசமான பாத்திரம் அது! நீங்கள் எந்த கல்லூரியில் நடிப்பு பயின்றீர்கள்?” என்று கேட்டார், மிக மரியாதையுடன்!

    நான் என்ன செய்தேன்! அதில் இயக்குனரின் விடாமுயற்சி, என்னால் முடியும் என்ற அவளது நம்பிக்கை இரண்டும் கலந்திருந்தன.

    “நான் இப்படி ஒரு படம் எடுக்கப்போகிறேன் என்று சொன்னதும், எல்லாரும் கேலியாகச் சிரித்தார்கள்!” என்று திரும்பத் திரும்பக் கூறி மகிழ்ந்தாள்.

    ஆரம்ப சூரத்தனம்!

    கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே?

    சிலர் ஒரு காரியத்தை உற்சாகமாக ஆரம்பித்துவிட்டு, விரைவில் ஆர்வம் குறைய, அதை அரைகுறையாகச் செய்வார்கள். அல்லது, கைவிட்டுவிடுவார்கள்.

    கதை

    தொடர்கதை எழுதும் எண்ணத்துடன் ஒரு பத்திரிகை ஆசிரியர் ஒரு கதையை ஆரம்பித்தார். ஒவ்வொரு பாகமும் அப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஓரிரு வரிகளில் குறிப்பும் எழுதி வைத்துக்கொண்டார்.

    ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருக்க, பல வாசகர்கள் புகழ்ந்து எழுதினர். சீக்கிரமே கதையில் தொய்வு ஏற்பட்டது. `போரடிக்கிறது!’ என்ற ரீதியில் விமரிசனங்கள் வந்தன.

    என்னை ஒரு தொடர்கதை எழுதும்படி வேறொரு பத்திரிகை ஆசிரியர் கேட்டார்.

    `ஆகட்டும், பார்க்கலாம்,’ என்று தப்பித்துக்கொள்ளும் ரகமில்லை நான். நேரமின்மையைக் காரணம் காட்டி மறுத்தேன்.

    (தோல்வி கண்டுவிடுவோமோ என்ற அச்சத்தாலோ, அல்லது சோம்பல் ஏற்பட்டதாலோ, `நாளை பண்ணப்போகிறேன்!’ என்கிறார்களே! அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

    `நீங்கள் கூறுவதைப் பண்ணும் உத்தேசம் எனக்கில்லை!’ என்பதுதான்!)

    அவரோ, விடாக்கண்டன். “ப்ளாட் (PLOT) போட்டு வெச்சுக்குங்க,” என்று வற்புறுத்தினார்.

    எனக்கு அம்முறை சிறந்ததாகப் படவில்லை.

    கதாபாத்திரங்கள் நம் மனதில் சுழன்றுகொண்டிருக்கும்போதே கதையை எழுதிவிட வேண்டும். இது புரிந்து, ஒரே மூச்சில் எழுதினேன். வேறு எதிலும் மனதைச் செலுத்தவில்லை.

    ஓயாத உழைப்பால், கண்பார்வைதான் சற்று மங்கலாகப்போயிற்று!

    தன்னிரக்கம்

    ஒரு காரியத்தில் இறங்கிவிட்டபோது, நம்மைச்சுற்றி என்ன நடக்கிறதென்று பார்வையை ஓடவிடலாமா? கவனம் சிதறிவிடுமே!

    கதை

    அரசாங்க முழுப்பரீட்சை என் மாணவன் ஒருவனுக்கு.

    திடீரென்று ஒருவர் வெளியிலிருந்து, “ஷூக்ரி!” என்று அவன் பெயரைக் கூவி, “தாத்தா இறந்துவிட்டார்!” என்று கத்தினார்.

    அவ்வளவுதான்! கையிலிருந்தவற்றை நழுவவிட்டு, பையன் பதட்டத்துடன் எழுந்தான்.

    நான் அவசரமாக வெளியே சென்று, தந்தையிடம், “பாதிப்பரீட்சையில் வெளியில் போனால், தேர்ச்சி எப்படிப் பெறமுடியும்?” என்று பலவாறாக விளக்கினேன். அவர் அரைமனதுடன் திரும்பிச் சென்றார்.

    “நீ பரீட்சைத்தாளில் கவனம் செலுத்து!” என்றபோதும், பையனால் முடியவில்லை.

    அதன்பின், ஷூக்ரி மிகவும் வருந்தினான் — தாத்தாவுக்காக அல்ல. “இந்த வருடம் நான் ஃபெயில்தான்!” என்று.

    தாத்தாவோ இறந்துவிட்டார். அவரைப் பார்க்க பேரன் போனால், என்ன செய்திருக்கமுடியும்?

    அதைவிட அவனுடைய எதிர்காலம் முக்கியமில்லையா?

    அவனுடைய தந்தை இதையெல்லாம் யோசிக்கவில்லை.

    அப்படிப் போடு பழியை!

    “என்னை யாருமே ஊக்குவிப்பதில்லை. அதனால்தான் நான் முன்னுக்கு வரமுடியவில்லை,” என்று கூறி, தம் கையாலாகாத்தனத்திற்குப் பிறர்மீது பழிபோடுவார்கள்.

    ஊக்கம் என்பது நமக்குள்ளிருந்து வருவது. பிறரை எதிர்பார்த்தால், ஏமாற்றம்தான் மிஞ்சும்.

    அறிவு, திறமை, கல்வி போன்ற குணங்கள் அமையப் பெற்றிருந்தாலும், பலர் வெற்றி பெற முடிவதில்லையே!

    அவர்களுக்கு ஆர்வம் இருக்கலாம். அது மட்டும் போதுமா?

    நமக்குத் திறமை இருக்கிறது, நிறைய சாதிக்கவேண்டும் என்று துடிப்பாக இருப்பவரிடம், “போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து!” என்று அறிவுரை கூறுவார்கள் உற்றவர்கள்.

    “இதெல்லாம் உன்னைப்போன்றவர்களால் முடியாத காரியம்!” என்று தன்னம்பிக்கையைத் தகர்ப்பார்கள்.

    சொல்கிறவர்கள் எப்போதும் பாதுகாப்பை நாடுகிறவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட மனப்பான்மை இருப்பவர்கள் சாதிக்கமுடியாது.

    `என் குடும்பத்தினருக்கு நான் செய்வது பிடிக்கவில்லை!’ என்று விட்டுக்கொடுக்கும் ஒருவர் பிறகு வருந்த நேரிடும்.

    ஆர்வத்துடன் நாம் ஒரு காரியத்தில் ஈடுபடும்போது, நம் திறமையில் நமக்கே சந்தேகம் எழச்செய்கிறவர்களை அலட்சியம் செய்யவேண்டும்.

    நம் செய்கையால் அவர்கள் ஆத்திரப்படலாம் – தம்மை மதிக்கவில்லையே என்று. பிறருடைய உணர்ச்சிகளுக்கு நாம் பொறுப்பல்ல.

    செய்வதற்குமுன், எந்தப் புதிய காரியமும் கடினமாகத்தான் தென்படும். உழைக்க அஞ்சினால் எப்படி! அதையே சவாலாக எடுத்துக்கொண்டால், உற்சாகமாக இருக்கும்.

    “என்ன செய்வது? அதை எப்படிச் செய்வது?” என்று, நம்முடன் ஒத்துழைக்கும் ஒத்த மனத்தினரை நாடினால் வெற்றி பெறலாம். மனநிறைவு கிட்டும்.

    முன்னுக்கு வந்திருப்பவர்கள் நம்மைவிட எத்தனையோ கஷ்டங்களை, எதிர்ப்புகளை, கேலியைச் சந்தித்திருப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொண்டால், தைரியம் எழும்.

    வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள்

    மொழி, கலாசாரம், பொருளாதாரப் பிரச்னை போன்ற பல இன்னல்களையும் கடந்து, தாய்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் சில சமயம், உள்நாட்டவர்களைவிட அதிகமாக எப்படி வெற்றி பெறுகிறார்கள்?

    “என்ன ஆனாலும், மனம் தளராதே. விடாமுயற்சியுடன் போராடு!” என்று அவர்களது தாயோ, தந்தையோ அறிவுறுத்தி அனுப்பி வைப்பார்களாம்.

    விடாமுயற்சி உடையவர்களைத் தோற்கடிப்பது கடினம்.

    Share
  • பழகத் தெரிய வேணும் – 95

    பழகத் தெரிய வேணும் – 95

    நிர்மலா ராகவன்

    சிந்தனையின் விந்தை

    ஒரு மூன்று வயதுக் குழந்தையிடம் கடுமையான வேலையைக் கொடுத்தால், “என்னால் முடியாதே!” என்று தயங்கலாம். தன் ஆற்றல் எவ்வளவு என்று புரிந்ததால் வந்த பதில் அது.

    ஆனால், வயதும் திறமையும் கூடி இருந்தபோதும், அவ்வாறே கூறுவது எதிர்மறைச் சிந்தனை செய்யும் விபரீதம். ஒருவருக்குத் தன் திறமையில் நம்பிக்கை இல்லையென்று காட்டிவிடும்.

    அப்படித் தோன்றும்போது, அதை எதிர்க்க ஓர் உத்தி: `என்னால் முடியும். கண்டிப்பாகச் செய்து முடிப்பேன்!’’ என்று தனக்குத்தானே தைரியம் அளித்துக்கொள்ளலாம்.

    எச்சரிக்கை: இதையே உரக்கக் கூறினால், கர்வம் என்ற பழிக்கு ஆளாக நேரிடும்! தன்னம்பிக்கையை வேறு எப்படித்தான் வளர்த்துக்கொள்வது!

    `முடியாது!’ என்று நினைத்த காரியத்தைச் செவ்வனே செய்து முடித்துவிட்டால், அதனால் ஏற்படும் மகிழ்ச்சியே தனி.

    ஒரே நிகழ்வை வெவ்வேறு நபர்கள் பார்க்கும்போது, அவர்களது கணிப்பும் மாறுபட்டிருக்கும்.

    கதை

    அன்று ஒரு பெண்ணிற்குக் கல்யாணம். அவளுக்கும், அவளைப் பெற்றவர்களுக்கும் பெருமகிழ்ச்சி. ஆனால், உறவினர்கள் அந்த சம்பந்தத்தில் எங்கே குறை என்று தேடினார்கள்.

    “வரதட்சணையே வேண்டாம் என்கிறார்களே! மாப்பிள்ளைப் பையனுக்கு ஏதோ கோளாறு இருக்கவேண்டும்!”

    “அவசர அவசரமாகக் கல்யாணத்தை நடத்திவிட வேண்டும் என்றார்களே! ஏன் அப்படி?”

    பெண்ணின் தாய் இதற்குப் பதிலளித்தாள். “மாப்பிள்ளைக்கு லீவு முடிந்து, உடனே வெளிநாடு திரும்பவேண்டுமாம். விசாவும் காலாவதி ஆகிவிடுகிறது”.

    `இன்னும் எங்கு கோளாறு?’ என்று துடித்தார் ஒரு முதியவர். அவர் ஐந்து பெண்களைப் பெற்றுக்கொண்டு, திண்டாடுபவர். “அந்தப் பையன், அம்மாவுக்குப் பயப்படுகிறான். அவனைப் பேசவிடாமல், அந்த அம்மாவே பேசுகிறாள்!”

    பெண்ணின் தாய்க்குச் சந்தேகம் வந்தது. மணப்பெண்ணிடமே போனாள். “என்னென்னவோ சொல்கிறார்களே!” என்றாள் கவலையுடன்.

    மணப்பெண் சிரித்தாள். “நான் சந்தோஷமா இருந்தா, இவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சியா இருக்குமான்னு ஒன்னையே கேட்டுக்கோ!”

    அம்மாவுக்கும் சிரிப்பு வந்தது.

    பிரச்னைகள் எதுவும் எழாத திருமணத்தைக் கண்டால் பொறாமைப்படுகிறவர்கள்தாம் அதிகம். `குற்றம் எங்கே?’ என்று தேடிப் பிடிக்கக் காத்திருப்பார்கள்.

    ஏன் சிலர் இப்படி நடக்கிறார்கள்?

    எப்போதோ தவறு நிகழ்ந்துவிட்டால், எத்தனை காலமானாலும் அதை மறக்க முடியாது, அதைப் பற்றியே எண்ணிக் குமைந்துகொண்டிருப்பவர்கள் அவர்கள்.

    செய்ய ஆரம்பித்த எல்லாக் காரியங்களிலும் வெற்றி மட்டுமே கிடைக்கவேண்டும் என்று எதிர்பார்த்து, ஏமாந்தவர்கள்.

    கார்டிஸால் (CORTISOL) என்கின்ற வேதியப் பொருள் மூளையில் இருக்கிறதே, அதுதான் அவர்களை அப்படி ஆட்டி வைக்கிறது.

    அதற்கு நேர் எதிரிடை, டோப்அமீன் (DOPAMINE) என்கிற பொருள்.

    நம்மை யாராவது புகழ்ந்தாலோ, நற்செய்தி கிடைத்தாலோ ஏற்படும் இனிய உணர்வு டோப்அமீன் சுரப்பதால் வருவது. போதைபோல் இருக்கும்.

    ஓர் அறுவை சிகிச்சைக்கு முன்னால், மார்ஃபின் என்ற போதைப்பொருளை என் மூக்கில் வைத்தார்கள். அது குறிப்பிட்ட அளவில் மருத்துவர்கள் பயன்படுத்துவது.

    சில வினாடிகளிலேயே, உடலை விட்டுப் பறப்பதுபோன்ற சுகமான உணர்வு ஏற்பட்டது. மயக்க நிலைக்குப் போய்விட்டேன்.

    இதனால்தான், “வாழ்க்கை பொறுக்க முடியாததாக இருக்கிறது!” என்று புலம்புகிறவர்கள் ஏதாவதொரு போதையை நாடுகிறார்கள்.

    துணுக்கு

    “நீ அதிகமாகக் குடித்தால், உன் மனைவி சண்டைபிடிக்க மாட்டாளா?”

    “எனக்குக் கல்யாணமே ஆகவில்லை!”

    “பின் ஏன் குடிக்கிறாய்?”

    தமக்கு ஏன் எதிர்மறைச் சிந்தனைகளே ஓயாமல் எழுந்து வருத்தத்தில் ஆழ்ந்து கிடக்கச் செய்கின்றன என்று புரியாது, பழியை வேறு இடத்தில் போடுகிறவர்கள் இப்படிப்பட்டவர்கள்.

    எதிர்மறைச் சிந்தனை தரும் வேதனையை எப்படி ஒழிப்பது?

    1. அதிகாலையில், முகத்தைக் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும்போது, நாக்கை வெளியில் நீட்டி, சிரிப்பதுபோல் செய்யலாம். புன்னகைத்தால், உதிரமும் பிராண வாயுவும் முகத்திற்கு அனுப்பப்படுவதால் உற்சாகம் எழும்.

    2. எந்தச் சூழ்நிலையிலும் வேடிக்கையான அம்சம் ஏதாவது இருக்குமே!

    கதை

    “இந்த விரிவுரையாளர் இன்னிக்குச் சரியான சிடுமூஞ்சி!” பெண்கள் கல்லூரி மாணவிகள் தமக்குள் பேசிக்கொண்டனர்.

    ஒரு பெண் கூறினாள், “இன்று காலை, மனைவியுடன் சண்டை போட்டிருப்பார்!”

    அவள் தோழி, “அவருக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லையே!” என, முதலாமவள் விடாது, “சவரம் பண்ணிக்கொள்ளும்போது கன்னத்தைக் கீறிக்கொண்டிருப்பார். அந்த எரிச்சலை நம்மிடம் காட்டுகிறார்!”

    எல்லாரும் சிரித்தார்கள்.

    நமக்கு எழும் எதிர்மறை எண்ணங்களையும், அவற்றால் விளையும் ஆத்திரம் அல்லது வருத்தத்தையும் வேடிக்கையான கண்ணோட்டத்துடன் பார்த்தால், சிரிப்பு என்றும் மறையாது.

    3. நம் பிரச்னைகள் நம்மோடு இருக்கட்டும். அவை திரும்பத் திரும்ப மேலே எழுகையில், வருத்தமும் நிலைத்துவிடும்.

    “உனக்கு வேலை போய்விட்டதாமே?”

    “உன் மனைவி உன்னைவிட்டுப் போய்விட்டாளாமே?”

    நாம் மறக்க நினைப்பதைத் தூண்டித் துருவி விசாரிப்பவர்களுக்கு, எதற்காகப் பதில் சொல்லிக்கொண்டிருப்பது?

    இவ்வாறு வீண் வம்புக்கு அலையாது, நம் மனநிலையைப் புரிந்து நடக்க ஓரிருவராவது கிடைக்கமாட்டார்களா?

    4. ஒரே சமயத்தில், இயந்திர கதியில் பல வேலைகளைச் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், அது மன உளைச்சலில்தான் கொண்டுவிடும்.

    ஓயாது, ஒரே வேலையைச் செய்துகொண்டிருந்தால் ஏற்படும் சலிப்பு, மன இறுக்கத்தில் கொண்டுவிடும். இயன்றவரை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும்.

    இதைத்தான் பாரதியார் இப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்: `காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு..” என்று.

    எங்கள் வீட்டருகே காலையும் மாலையும் இளைஞர்களும் முதியவர்களும் மூன்று மூன்று பேராக சைக்கிளில் போவார்கள், கலகலவென்று பேசிக்கொண்டு.

    நோய்த்தொற்றால் வெளியே அதிகம் செல்ல அனுமதி கிடையாது என்ற நிலையில், வருந்தி வீட்டிலேயே உட்கார்ந்து விடுவதில்லை இவர்கள். நண்பர்களுடன் – அவ்வப்போது — பொழுதைக் கழிக்கையில், மனமும் உல்லாசமாக ஆகிவிடும்.

    எதையாவது கழற்றி, பழுது பார்ப்பதும் நல்லதொரு பொழுதுபோக்கு.

    எது செய்யவும் தெம்பில்லையா?

    இருக்கவே இருக்கிறது தொலைக்காட்சி!

    இப்போதெல்லாம் பொழுதைப் போக்க, தொலைக்காட்சியில் திரைப்படங்கள் பார்க்கவென NETFLIX, AMAZON போன்றவற்றிற்குப் பலரும் சந்தா கட்டுவது அதிகரித்துவிட்டதாம்

    5. `முடியாது!’, `கஷ்டம்’ போன்ற வார்த்தைகளை உபயோகித்தால், பிறர் நம்மை மட்டம் தட்ட நாமே வழிவகுத்துக் கொடுத்துவிடுகிறோம்.

    எதிர்மறை எண்ணங்களால்தான் மன இறுக்கம் எழும் என்பது புரியாது, அதற்குரிய தீர்வோ, சிகிச்சையோ பெறாதிருக்கிறார்கள் பலர்.

    இவர்கள் தம் ஆற்றாமையை மனைவியை அடிப்பதன் மூலம் வெளிப்படுத்திக்கொள்வதால், வன்முறையும் விவாகரத்துகளும் பெருகிவிட்டன.

    உதவிபுரியும் எதிர்மறை எண்ணங்கள்

    பலத்த மழையால் மழைத்தண்ணீர் வீட்டுக்குள் புக, புகலிடம் தேடிக் கூரைமேல் உட்காரப்போவது வேண்டாத விளைவுகளை எதிர்நோக்குவதால்தான். அந்த எண்ணம் எதிர்மறையாக இருந்தாலும், பாதுகாப்பை விளைவிக்கிறது.

    இன்னொரு உதாரணம்.

    தெருவைக் கடக்க ஆயத்தமாகிறோம். அப்போது, விரைந்து வரும் வாகனத்தைக் கண்டு, `அபாயம்!’ என்று மூளை எச்சரிக்க, நம்மையும் அறியாது, கால்கள் நம்மைப் பின்னால் இழுக்கின்றன.

    மூன்று வயதுக் குழந்தைக்கு இத்திறமை கிடையாது. எது அபாயம் என்று புரிவதில்லை. ஏதாவது `மாலில்’ (MALL) பார்த்தால், தன் கையைப் பிடித்திருந்த தாயின் கையை உதறிவிட்டு, லிஃப்டில் ஏற ஓடுவான்.

    அப்படிச் செய்த ஒரு சிறுவனை அவன் தாய் கண்டபடி திட்டினாள். அடிக்கப் போனாள்.

    நான் குறுக்கிட்டு, “என் பேரனும் அந்த வயதில் அப்படித்தான் செய்தான்,” என்றேன் புன்முறுவலுடன்.

    “எப்படிச் சமாளித்தீர்கள்?” என்றாள், தன் அலுப்பை மறைக்காது.

    “நான் ஒரு பக்கம், அவன் தாய் ஒரு பக்கம் என்று, அவன் கைகளை இறுகப் பிடித்துக்கொள்வோம், அதன் கதவு திறக்குமுன்”.

    ஒரு முறை எங்களை முந்திக்கொண்டு அவன் ஏற, அந்த இயந்திரம் அவனை மட்டும் ஏற்றிக்கொண்டு மேலே போய்விட்டது. சில நிமிடங்கள் கழித்துத் தனியே திரும்புகையில், அளப்பரிய அச்சம் அவன் முகத்தில். ஆனாலும், அந்த அனுபவத்தால் அவன் பாடம் கற்கவில்லை. வயதுக் கோளாறு!

    குழந்தைகளின் இம்மாதிரியான விஷமம்கூட சில ஆண்டுகளுக்குப்பின் ரசித்துச் சிரிக்கும்படி இருக்கும்.

    Share