Tag: நிர்மலா ராகவன்

  • போனேன் Phu Quok

    போனேன் Phu Quok

    நிர்மலா ராகவன்

    ‘செழிப்பான நாடு’  என்ற அர்த்தம்கொண்டது Phu Quok. இயற்கை, கடல் என்ற ஆர்வம்கொண்ட உல்லாசப்பயணிகளின் சொர்க்கம் இது.

    கம்போடியா, வியட்நாம் ஆகிய இரு நாடுகளும் ப்ரெஞ்சு நாட்டின் அதிகாரத்தில் இருந்தனவாம். முதலில் கம்போடியா நாட்டுக்குச் சொந்தமாக இருந்த இத்தீவு ஒரு போரின் விளைவாக வியட்நாமின் கைக்கு வந்தது.

    கோலாலம்பூரிலிருந்து ஒன்றரை மணி நேர விமானப்பயணம் என்பதால், பலருக்கும் தெரிந்திராத இத்தீவிற்கு போய்த்தான் பார்ப்போமே என்று நானும் என் மகள் சித்ராவும் திட்டம் போட்டோம்.

    நாங்கள் தங்கிய Ocean Bay Resort என்ற இடத்தை இயற்கையைக் காக்கவேண்டும் என்ற முனைப்புடன் அமைத்திருக்கிறார்கள். தெருவுக்கு இருபுறங்கிலும் காட்டையொத்த அடர்ந்த மரங்கள். மரங்களாலான இருப்பிடங்கள். குளியலறையில் நீர்யானை குளிக்க ஏற்ற, நீளமும் அகலமுமான குளியல் தொட்டி (bath tub). முழுவதும் கருங்கல்லால் ஆனது. எல்லாச் சுவர்களும் மூங்கிலால் அமைக்கப்பட்டிருந்தன.

    இங்கு வந்திருந்தவர்கள் சீனா, ரஷ்ஷியா மற்றும் 1,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்த வியட்நாமிலிருந்து வந்தவர்கள். ஆங்கிலத்தைத்தவிர, அம்மொழிகளில்தாம் எல்லா இடங்களிலும் அறிவிப்புகள் காணப்பட்டன.

    நாங்கள் கால்வைத்த நேரம் மழை கொட்டொ கொட்டென்று கொட்டியது. `நல்லவர் ஒருவர் உளரேல்,’ என்று நான் பெருமைப்பட முடியவில்லை. இது மழைக்காலம். இடியோ, மின்னலோ இல்லாது, காற்று பலக்க மழை. பேய்க்காற்றில் மரங்களின் கிளைகள் அசைய, அருகிலிருந்த கடல் அலைகள் ஆர்ப்பரிக்க, மிக இனிய அனுபவம். வராந்தாவைத்  தாண்டி, படுக்கையறைக்குள்ளும் சாரல் அடித்து, எங்களைச் சிரிக்கவைத்தது.

    `மழை சற்று விட்டு விட்டதே!’ என்று நாங்கள் தங்கிய இடத்திலிருந்து ஹோட்டலுக்கு நடக்க ஆரம்பித்தவுடன் மழை பலத்துவிடும். முதல்நாள் என் புடவை முழுக்க தொப்பலாக நனைய, மறுநாளிலிருந்து உடையை ஷார்ட்ஸ், முருநீளக் கால்சட்டை என்று மாற்றினேன். எங்கள் அறையிலிருந்து வெளியே பார்த்தால், கூப்பிடு தூரத்தில் கடல். அலையோசையை ரசித்தபடி முதல் நாளைக் கழித்தேன். அவ்வளவு நனைந்தும், உடலுக்கு எந்த பாதிப்பும் நேரவில்லை என்பது விசேஷம். அரிதான, மிகத் தூய்மையான காற்றின் மகிமை.

    மறுநாளிலிருந்து, டுக் டுக் (tuk tuk) என்ற வாகனத்தை வரவழைத்தோம். ஆறுபேர் உட்காரலாம். அதில் ஏறமுடியாது திணற, அதை ஓட்டிய இளம் வாலிபன் என்னைத் துக்கி ஏற்றிவிட்டான்.

    இங்கு என்ன சிறப்பு என்றால், வாடகைக்காரில் எங்காவது போகும்போதும், என் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் செல்கிறார்கள். `என்னால் நடக்க முடியும்,’ என்று கையை உதறினாலும் விடமாட்டார்கள்.

    சாப்பாட்டுக்கூடத்தில் வேலை பார்த்த இளைஞன், “உங்களுக்கென்று, முட்டை போடாமல் pan cake பண்ணிக்கொண்டு வந்திருக்கிறேன்!’ என்று, தன் வேலையை விட்டுவிட்டு, என் மேசையில் கொண்டுவைத்தான். தோசைக்கல்லில் மாவு ஊற்றி, அதன்மேல் வெண்ணை, பலவித ஜாம், தேன் என்ற இனிப்பு வகை அது.

    தென்கிழக்கு ஆசியாவின் பிரத்தியேகமான குணம் — முதியவர்களுக்கு உதவி செய்வது பெரும்பாக்கியம் என்பதுபோல் புன்னகையுடன் செய்வது.

    பார்க்கவேண்டிய இடங்கள் இரண்டு: Pearl Farm (முத்துப்பண்ணை) மற்றும் பட்டுப்பண்ணை.

    முத்துப்பண்ணை

    ஒரு மீனவர் முத்துக்குளிக்க இப்பகுதிக்கு வந்தபோது, பல நூற்றாண்டுகளுக்குமுன் கடலில் மூழ்கிவிட்ட கப்பலைக் கண்டார். அதில் காணப்பட்ட சாமான்களை எடுத்துவந்தார். பன்முறை இப்படியே செய்து, அவர் சேர்த்துவைத்தவை இங்கு காட்சிப்பொருட்களாக வைக்கப்பட்டிருந்தன. பதினைந்தாம் நூற்றாண்டில் கிடைத்த பீங்கான் சாமான்களோடு, பெரிய பெரிய முத்துச்சிப்பிகளும் இருந்தன. நூற்றுக்கணக்கான கோப்பைகள் உடையாது இருந்தது ஆச்சரியம். கொலுவைப்போல் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.

    கடலிலிருந்து எடுக்கப்படும் முத்து விலை உயர்ந்தது. ஆற்றிலிருந்து மனிதனால் உற்பத்தி செய்யப்படுவது சற்றே மலிவு. பளபளப்பு குறைவு. இரு முத்துக்களை ஒன்றோடொன்று உரசினால் வெள்ளை மாவுபோல் கையில் ஒட்டுகிறது. பிறப்பிடம் ஆறோ, கடலோ, அவைதாம் நல்ல முத்துக்கள்.  எத்தனை காலம் ஆற்றில் விட்டுவைக்கிறார்கள் என்பதைப் பொறுத்து நிறம், அளவு ஆகியவை மாறும் என்றெல்லாம் ஒருவர் விளக்கினார் – முத்துச்சிப்பிகளின் உள்ளே கீறி.

    பட்டுப்பண்ணை

    பட்டுப்பூச்சி மற்றும் மூங்கிலால் செய்யப்படும் பட்டு வகைகளை இங்கு பார்க்கலாம். மிக அழகான, மெலிதான பட்டின் விலை அதிகம் என்று, வழவழப்பாக இருக்கும் மூங்கில் பட்டாலான ஆடைகள், காலுறை, மேசையிலும், தரையிலும் படிந்த கறைகளை நன்றாகத் துடைக்க துண்டுகள் ஆகியவற்றை மகிழ்வுடன் வாங்கினோம்.

    `பார்க்க வேறென்ன இருக்கிறது?’ என்று கேட்பவர்களுக்கு: இது ஒரு சிற்றூர். பேரங்காடிகள் கிடையாது. பலரும் ஸ்கூட்டரில்தான் போகிறார்கள். ஆனால், ஏழ்மையான தோற்றமில்லாது, ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

    `நாகரிகம்’ என்ற பெயரில் கரடுமுரடாக நாம் செய்துவிட்ட வாழ்க்கையில் இம்மாதிரியான இயற்கைச்சூழலும், மனிதத்தன்மையுடன் வலம் வரும் மனிதர்களும் அருமருந்து.

    Share
  • காதல் எதுவரை?

    காதல் எதுவரை?

    நிர்மலா ராகவன்

    நீடிக்கும் உறவுகள்

    அன்பு என்பது ஒருவரை அவர் உள்ளபடியே ஏற்பது. மற்றவரிடம் எதை எதையோ எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் உண்டாகும்.

    திரைப்படங்களில் நாம் காண்பது – கணவர் அலுவலகத்திற்குப் புறப்படுமுன் மனைவி வாசலுக்கு வந்து அவருக்குத் தேவையானவற்றைக் கையில் கொண்டுவந்து கொடுக்கிறாள். அவருக்குச் சுயமாக எடுத்துக்கொள்ளத் தெரியாதா?

    இப்படிப் பழக்கப்பட்ட ஆண் தன் மனைவி ஒரு தனி நபர், ஒரு பெண்ணுக்கும் எதிர்பார்ப்புகள் இருக்கலாம் என்பதை உணர்வதில்லை.

    அவள் தன்னையும் கவனித்துக்கொண்டால், அது சுயநலமாகாது. அவளுக்கென்று ஆசைகள், தனிப்பட்ட கருத்துகள் இருக்காதா, இருக்கக்கூடாதா?

    `எனக்குத் திரைப்படங்கள் பார்க்கப் பிடிக்காது. அதனால் நீயும் பார்க்கக்கூடாது!’ என்றானாம் என் சக ஆசிரியையின் கணவன்.

    தம்மிடமிருந்து, தாம் நம்புவதிலிருந்து, மாறுபட்டவர்களைக் கண்டால் இவனைப்போன்ற பலருக்கும் ஏதோ பயம். அது கோபமாக மாறுகிறது. அது புரிந்து, மனைவியும் விட்டுக்கொடுத்துக்கொண்டே போகிறாள். அவளால் முடிந்தது – தன் தோழிகளிடம் சொல்லி வருந்துவதுதான்.

    பெண் அழகாக இருந்தாலும் ஆபத்துதான்.

    ஒரே பார்வையில், `அழகாக இருக்கிறாள்!’ என்று எடைபோட்டு ஒரு பெண்ணை மணக்கச் சம்மதித்துவிட்டு, மணமானதும் பிற ஆண்களும் அப்படித்தானே மயங்கிவிடுவார்கள் என்ற சந்தேகமும் பொறாமையும் எழ, அவளை ஒரேயடியாக அடக்குவார்கள் பல கணவன்மார்கள்.

    திருமணமானதும் பழக்கவழக்கங்கள் மாறிவிடும். அனேகமாக, பெண்கள்தாம் ஐந்திலிருந்து பத்து கிலோவரை எடை கூடுகிறார்கள் என்கிறது ஓர் ஆராய்ச்சி.

    பதினெட்டு வயதுவரை உடல் வளர்வதால் சாப்பிடும் அளவும் அதிகரிக்கும். அதன்பின் குறைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    அழகாக இருந்தால் ஆண்களை வசீகரிக்கலாம் என்று கவனமாக உடலைப் பார்த்துக்கொள்ளும் பெண்கள் திருமணம் நிச்சயம் ஆனதுமே வழக்கத்திற்கு விரோதமாக நிறைய சாப்பிட ஆரம்பிக்கிறார்கள். மகிழ்ச்சியால் பூரிக்கிறார்களாம்!

    பிள்ளை பெற்றதும், `வீட்டு வேலை, குழந்தைகளைக் கவனிப்பதற்கே நேரம் போதவில்லை! உடற்பயிற்சி வேறா!’ என்ற சாக்கு. சமையலுக்குப் பலவிதமான இயந்திரங்கள்வேறு. இதனால் உடல் பருத்துக்கொண்டேபோகிறது.

    நாற்பது வயதுக்குமேல் அழகு குறைந்துபோக, எப்போதும் தனக்கு அடங்கி நடக்கும் மனைவியைக் கண்டால் எரிச்சல் எழுகிறது. அவளைப்போல் இல்லாது, இளமையுடன் கலகலப்பாகவும் இருக்கும் பெண்களிடம் மனம் போகும். மனைவிக்கோ, தன்னம்பிக்கை குறைந்துகொண்டே போக, சற்றே கூனல் விழுகிறது.

    கதை

    என்னுடன் ஒரே மாதம் வேலைபார்த்த கணபதி, “நீங்கள் வெஜிடேரியனா?” என்று கேட்டபோது, “ஆமாம்,” என்றேன்.

    உடனே கோபமாக, “எத்தனை பிராமணர்கள் `எல்லாவற்றையும்’ சாப்பிடுகிறார்கள், தெரியுமா?” என்று கத்தினார்.

    நான் அமைதியாக, “நீங்கள் என்னைப்பற்றிக் கேட்டீர்கள். அதற்கு நான் பதில் சொன்னேன். `எல்லா பிராமணர்களும்’ என்று கேட்டிருந்தால், வேறு விதமாக பதில் அளித்திருப்பேன்,” என்றேன்.

    அவருடைய முகம் சுருங்கிப்போயிற்று.

    மனைவி என்றால் தனது அதிகாரத்தை ஏற்கவிருப்பவள் என்று எண்ணுவதுபோல் நடப்பவர் பேசும் சுதந்திரத்தைக்கூட தன் மனைவிக்கு அளித்திருக்கமாட்டார்.

    ஏன் தன் மனைவி கலகலப்பாக இல்லை என்ற குழப்பம் எழ, “என் மனைவி படித்தவள். (இதை இருமுறை அழுத்தமாகக் கூறினார்). ஆனால், உங்களைப்போல் இல்லையே!” என்று என்னிடம் குறைப்பட்டார் கணபதி.

    என் பதில்: “நீங்கள் நினைப்பதை, சொல்வதை, பிறர் அப்படியே ஏற்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். அப்படி இல்லாவிட்டால் கோபம் வருகிறது. உங்களுக்கு என்னைப்போன்ற மனைவி சரிப்படமாட்டாள்”.

    கணவன் மனைவியருக்குள் போட்டி எதற்கு? தான் மனைவியைவிட ஏதோ ஒரு வகையில் தாழ்ந்தவன் என்ற மனப்பான்மை கொண்டவன்தான் பிறர் முன்னிலையிலும் அவளைக் கட்டுப்படுத்துகிறான். குறையைத் தன்னிடம் வைத்துக்கொண்டு, மனைவி தான் எதிர்பார்த்தபடி இல்லையே என்று வருந்தி என்ன பயன்?

    துணுக்கு

    ஓர் இளைஞன் தன் தாயிடம் பெருமையாகச் சொன்னான்: என் காதலி நான் வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று சொல்கிறாள்.

    தாய் கேட்டாள்: உனக்கு அவளிடம் என்ன பிடிக்கும்?

    பதில்: அவள் என்னை வேடிக்கையாகப் பேசுபவன், ஆணழகன், புத்திசாலி என்று புகழ்வது.

    கதை

    திருமண வாழ்க்கையில் பெண்ணாலும் மகிழ்ச்சி குன்றுவிடக்கூடும்.

    புதுமணத் தம்பதிகளான பிரபாவும் பார்த்திபனும் ஈராண்டுகள் மகிழ்ச்சியாகக் கழித்தனர். அப்போது மனைவியின் முகம் சிறிது கோணினாலும், உடனே மன்னிப்பு கேட்டுவிடுவான் பார்த்திபன். தான் தவறு செய்திருக்கலாமோ என்ற சந்தேகத்தால் அல்ல. உடல் நெருக்கம் மட்டுமே முக்கியமாக இருந்த காலம் அது.

    அழகு, கல்வி, பொருளாதாரம் எல்லாவற்றிலும் கணவனைவிடச் சிறந்திருந்ததால் பிரபாவின் கை ஓங்கியது. அதன்பின், அறிவு முதிர்ச்சி இன்றி, எந்த வாய்ச்சண்டையிலும் தான்தான் வெல்லவேண்டும் என்று நினைப்பவளாக ஆனாள்.

    `என்ன பேச ஆரம்பித்தாலும், ஏனோ வாக்குவாதத்தில் முடிகிறதே!’ என்று பார்த்திபன் அவளிடமிருந்து லேசாக விலகலானான்.

    மனைவி தன்னை எப்போதும் சாடுகிறாளே என்று வருந்தியவனின் குமுறல்: “நான் அவளுக்குப் பூரண சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். அவள் பணக்கார குடும்பத்திலிருந்து வந்தவள், வீட்டு வேலை செய்யப் பிடிக்காது என்று வீட்டில் சமையலுக்குக்கூட ஆள் போட்டிருக்கிறேன். அவளுடைய சொந்த உபயோகத்திற்கு கார். இன்னும் என்ன வேண்டும்?”

    கணவனுக்குப் பெரிய வேலை, அதனால் பொறுப்புகள் நிறைய இருக்கும் என்பதெல்லாம் அவளுக்கும் புரியாமலில்லை.

    வேலை நிமித்தம் வெளிநாட்டுக்குப் போய்வரும்போதெல்லாம் பரிசுப்பொருட்கள் வாங்கி வருகிறான். இருந்தாலும், தனக்காக அவ்வளவு நேரத்தைச் செலவழிப்பதில்லை என்ற வருத்தம் கோபமாக மாறிவிட்டது.

    காதலனாக இருந்தபோது இப்படியா இருந்தான்! எவ்வளவு எதிர்பார்ப்புடன், குடும்பத்தை எதிர்த்து அவனை மணந்தாள்!

    இப்போது அவளுக்கு வேண்டியது அவனுடைய அன்பான கவனிப்பு. வேறு எதுவும் அதற்கு ஈடாகாது.

    வெளிப்படையாகக் குறைகூறாது அனுசரித்து நடந்தால், இருவரில் ஒருவர் தானாக மாறலாம். இல்லை, மாற்ற முடியாததை ஏற்க வேண்டும்.

    ஐம்பது வருடங்களுக்குமேல் தாம்பத்தியத்தில் இணைந்திருப்பவர்களைப் பார்த்தால், அவர்களுக்குள் சண்டையே வந்திருக்காதா, எப்படி மனம் ஒத்துப்போயிற்று என்றெல்லாம் அதிசயமாக இருக்கும்.

    நெருக்கமான உறவில் மட்டும் அடுத்தவருக்குப் பிடிக்காத குணங்கள் இருக்காதா, என்ன! வருத்தமும் ஆத்திரமும் ஏற்படுத்திய சம்பவங்களும் நடந்திருக்கலாம். இருப்பினும், அவைகளைக் கடந்தால்தான் உறவு நீடிக்கும் என்று புரிந்தவர்கள் அவர்கள்.

    பொதுவாக, எல்லாத் தம்பதிகளையும்போல் பிரபாவின் பெற்றோரும் அவ்வப்போது வாக்குவாதம் செய்வதுண்டு. மௌனமாக இருப்பதற்கு அது மேல் என்று புரிந்தவர்கள்.

    பிரபா தாயிடம் கலந்து ஆலோசித்தாள். “அது எப்படி, நீயும் அப்பாவும் இத்தனை வருடங்களாக ஒருவரையொருவர் பொறுத்துப்போனீர்கள்?”

    “யாரிடம்தான் குறையில்லை? அடி, உதையில் இறங்காதவரை, பொறுத்துப்போக வேண்டியதுதான்,” என்று வாழ்க்கைத் தத்துவத்தை விளக்கினாள் தாய். “அப்பா சிறு தவற்றைச் செய்யும்போது, அதை கவனிக்காததுபோல் இருந்துவிடுவேன். அவரைப்பற்றிப் பிறரிடம் புகார் செய்வதும் கிடையாது”.

    அமைதியாகப் பேசினால் பயன் கிடைக்கும். மௌனம் சாதித்தால், ஒருவர் மனதில் இருப்பதை மற்றவர் எப்படிப் புரிந்துகொள்ள இயலும்?

    “குறையே இல்லாதவராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தால் நடக்கிற காரியமா? நான் மட்டும் என்ன, தப்பே செய்யமாட்டேனா? விட்டுப்பிடி,” என்று முடித்தாள் பிரபாவின் தாய்.

    கதை

    அமெரிக்கப் பெண்மணி காதரின் கலகலப்பானவள். அவளுடைய கணவரோ நேர்எதிர். அழுமூஞ்சி என்று சொல்லத்தக்கவர்.

    சற்று பழகியதும், நான் அவளிடம் கேட்டேன்: “உனக்கும் உன் கணவருக்கும் பொருத்தமே இல்லையே! எப்படி அவருடன் இருக்கிறாய்?”

    உடனே, “அப்படிப் பார்த்துக்கொண்டே இருந்தால், முடிவே கிடையாது,” என்று பதிலளித்தாள். சற்றுப் பொறுத்து, “என் கணவர் விவாகரத்து ஆனவர். அவருடைய முதல் மனைவியை ஒருமுறை சந்தித்தேன். என்னைப்போலவே இருந்தாள்,’ என்று தெரிவித்தாள்.

    வெளிப்படையாகக் கட்டுப்படுத்தாது, அவருடைய குறைகளைப் புரிந்து, அவற்றுடன் அவரை ஏற்கும் விவேகம் நிறைந்தவள் அவள். அதனால் அவர்களுடைய தாம்பத்தியம் குறுகிய காலத்தில் முடிந்துவிடவில்லை. தன் குறைகளை உணர்ந்த கணவரும் அவளிடம் நன்றி செலுத்தும் விதமாக மிக்க அன்புடன் நடந்துகொண்டார்.

    காதலர்களாக இருக்கும்போது, உல்லாசமாக ஊர்சுற்றி, செலவைப் பார்க்காமல் ஒருவர் மற்றவருக்கு ஏதாவது வாங்கிக்கொடுத்து, சிரிப்பும் களிப்புமாக இருந்திருக்கலாம். ஆனால், வாழ்க்கை நம்மைப் புரட்டிப் போடும்போது ஒருவருக்கொருவர் ஆதரவாக நடக்க வேண்டியதும் அவசியம்.

    Share
  • முயற்சி பண்ணுகிறேன்

    நிர்மலா ராகவன்

    உத்தியோகத்திற்கான பேட்டியில்:

    “இந்த வேலையில் சேர்ந்தால், நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்குமே!”

    “கடுமையான உழைப்பு யாரையும் சாகடித்தது கிடையாது!” இப்படிச் சொன்னவருக்கு வேலை கிடைத்தது.

    `முயற்சி செய்கிறேன்,’ என்று சொல்லியிருந்தால், அது அரைமனதான பதிலாக இருந்திருக்கும் — `பார்க்கலாம்,’ என்று தட்டிக்கழிப்பதுபோல்.

    ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்ய ஒத்துக்கொள்பவர், `சரி,’ அல்லது `இப்போது முடியாது,’ என்று கூறினால், அவர் முழுமனதுடன் அதில் ஈடுபடுவார் என்ற நம்பிக்கையாவது எழும்.

    `எனக்கு அவனைவிடத் திறமை அதிகம். படிப்பிலும் நான் அவனை மிஞ்சியவன்! அவனுக்கு என்னமோ அதிர்ஷ்டம்!’ என்று தன்னை மிஞ்சிவிட்ட ஒரு நண்பனைப் பார்த்துப் பொருமுகிறவர்களைப் பார்த்திருப்பீர்கள்.

    அறிவும் திறமையும் முக்கியம்தான். ஆனால், அவற்றை முழுமையாக வெளிக்காட்ட கடும் உழைப்பு வேண்டாமா?

    சிலர் ஒரு காரியத்தை ஆரம்பிப்பார்கள். ஆரம்பித்த வேலை நீண்டுகொண்டே போனால், `இதற்கு என்னதான் முடிவு!’ என்ற அலுப்பு ஏற்படும். அப்போது அரைகுறையாக, எப்படியோ செய்து முடிக்கத் தோன்றிவிடும்.

    வேலை செய்யும் தருணங்களை ரசித்தால், செய்பவருக்கு மகிழ்ச்சி கிட்டும். எடுத்த காரியமும் சிறப்பாக அமையும்.

    பிடிக்கிறதோ, இல்லையோ, செய்துதான் ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது, முழுமனதுடன் ஈடுபட்டால் செவ்வனே செய்து முடிக்க முடியும்.

    எதுவாக இருந்தாலும், படைப்பவர் ரசித்துச் செய்தால்தான் பிறருக்கு மகிழ்ச்சி ஏற்படும். சமையல், இசை, எழுத்து – எதுவாக இருந்தார் என்ன!

    “சமைப்பது என்றால் எனக்கு வெறுப்பு! மிளகாய் நெடியால் தும்மிக்கொண்டே, எதற்கு அந்த வேலை!” என்று அலுத்துக்கொள்வாள் என் தோழி ஒருத்தி.

    அவள் சமைத்ததை அன்றாடம் சாப்பிட வேண்டியிருக்கும் குடும்பத்தினரிடம் பரிதாபம்தான் எழுந்தது எனக்கு.

    “நான் எத்தனை வருடங்களாக எழுதுகிறேன்! எனக்கு ஒரு பட்டம்கூடக் கிடைக்கவில்லை,” என்று என்னிடம் குறைப்பட்டார் ஒரு பத்திரிகை ஆசிரியர்.

    பரிசுகளும், பட்டங்களும் பெறலாம் என்ற நோக்கத்துடன் எழுத ஆரம்பித்தால் அந்த இலக்கே சரியில்லை. எத்தனை கால அனுபவம் இருந்தாலும், புதிய விஷயங்களைக் கற்று, காலத்திற்கேற்ப எழுதுவது ஒருபுறமிருக்க, எழுதும்போதே மகிழ்ச்சியாக உணர்ந்தால்தான் ஒருவரது படைப்பு சிறப்பாக அமையும். எழுதுபவரது மகிழ்ச்சி பிறரை போய்ச்சேரும்.

    எந்தக் காரியமானாலும் அதை ஒரு சவாலாக ஏற்று, விடாமுயற்சியுடன் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும்.

    வாழ்க்கைத்துணையைத் தேர்ந்தெடுப்பது ஒரு சவால் என்று நினைத்து, அதன்படி செயல்படுகிறார்கள் சிலர்.

    இது அறிவுடைமையா, முட்டாள்தனமா?

    கதை

    சரவணன் ஒரு பெண்ணை மணந்தான். காதல் வயப்பட்டு அல்ல. அவள்மேல் பரிதாபப்பட்டு. அவளுக்கு ஏதோ வியாதி. `நம்மை விட்டால் வேறு யார் இவளை மணக்கப்போகிறார்கள், பாவம்!’ என்று எண்ணினான்.

    மணந்தபின், நோஞ்சானான அவளுடைய உருவத்துக்கும் மனதிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று.

    கணவனை வார்த்தைகளாலேயே துளைத்தாள் — தான் கிடைத்தற்கரிய பிறவி, அதனால்தான் இந்த முட்டாள் தேடிவந்து மணந்தான் என்றெண்ணியவளாக. `எந்த விஷயத்திலும்’ ஒத்துழைக்கவில்லை.

    மிகவும் குழப்பத்திற்கும் வருத்தத்திற்கும் ஆளான சரவணன் என்னிடம் ஆலோசனை கேட்டபோது, “மனைவியாகத் தன் கடமையைச் செய்ய மறுப்பவளுடன் எதற்குச் சேர்ந்து வாழவேண்டும்? இவளை விவாகரத்து செய்ய வேண்டியதுதான்!” என்றேன்.

    “அது பாவமில்ல?” என்று குழம்பியவனிடம், “உங்கள் சந்தோஷம் மட்டும் முக்கியமில்லையா? உங்களுக்கு இன்னும் இளமை இருக்கிறது. ஒரு நல்ல பெண்ணாகப் பார்த்து, இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளுங்கள். எத்தனை காலம் இப்படியே நொந்துபோய் இருப்பீர்கள்?” என்றேன் வற்புறுத்தலாக. வேறு வழி தெரியவில்லை.

    அப்படியே செய்தான். சில மாதங்களுக்குப்பின், “நீங்க சொன்னபடி செய்தேன். இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன், ஆன்ட்டி,” என்று தெரிவித்தான்.

    பெண்கள் இவ்வளவு சீக்கிரம் திருமண வாழ்வை முறித்துக்கொள்ள மாட்டார்கள்.

    உயிர் போகும் நிலையில் காப்பாற்றப்பட்டு, அந்த மாது மறுவாழ்வு நிலையத்தில் இருந்தபோது சந்தித்தேன்.

    சுமார் முப்பது வருடங்கள் கணவரிடம் வன்முறையைத் தவிர வேறு எதையும் அனுபவித்திராதவள், “அவர் மாறுவாருன்னு பொறுமையா இருந்தேங்க,” என்றாள். அப்போதும் அவளுக்கு அடுத்து என்ன செய்வது என்ற தெளிவு இருக்கவில்லை.

    தன்னம்பிக்கையை இழந்தவர்களிடம் எந்த ஆற்றலையும் எதிர்பார்க்க முடியாது.

    கெண்டகி fried சிக்கன் நிறுவனத்தை ஆரம்பித்தபோது, கர்னல் ஸாண்டர்ஸ் என்பவருக்கு 67 வயது. அதற்குமுன், தெரு ஓரத்தில் ஒரு சிறிய உணவுக்கடை வைத்திருந்தார். வேறு ஒருவர் அப்பண்டத்தை விற்றபோது, அதில் குறை கண்டுபிடித்து, அதைவிடச் சிறப்பாகத் தயாரித்து, பெரும் வெற்றி பெற்றார்.

    இளம்வயதில் பண்ணையாளாக, பஸ் கண்டக்டராகப் பணி புரிந்திருந்த ஒருவர் தனது 88-வது வயதில், உலகிலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்த துரித உணவுச் சங்கிலியின் (fast food chain) நிறுவனராக எப்படி ஆனார்?

    தன் திறமையில் அவருக்கு நம்பிக்கை இருந்தது. பிறர் பாராட்டாவிட்டாலும், பின்வாங்காது தன் இலக்கைக் குறிவைத்துச் சென்றார். கடுமையாக உழைக்கப் பயந்து, பின் வருத்தப்படுவது எதற்காக?

    வழியில் எத்தனையோ தவறுகள் வந்திருக்கலாம். அவைகளிலிருந்து சரியான வழி எது என்று கற்றிருப்பார்.

    பிறர் பொறாமைப்படுவதற்காகப் பெருமைப்படவேண்டுமே அல்லாது, பயந்துவிடக்கூடாது என்று புரிந்திருப்பார்.

    `கிட்டத்தட்ட தொண்ணூறு வயதிலும் தன் அனுபவங்களையும், திறமையையும் கொண்டு சாதித்திருக்கிறாரே, இவருக்கெல்லாம் உடலில் அப்படி ஒரு பலமா!’ என்ற பெருவியப்பு எழுகிறதா?

    மனிதனோ, மிருகமோ, என்றென்றும் ஆரோக்கியமாக இருப்பது என்பது நடக்காத காரியம். இது புரியாது, உடல்நலம் பாதிக்கப்பட்டால், தன்னைப் பார்த்துத் தானே பரிதாபப்பட்டுக்கொண்டு இருந்தால் யாருக்கு நஷ்டம்?

    ஒருவருக்கு இடுப்புவலி. மருத்துவர் slip disc என்று ஏதோ பெரிய பெயர் சொல்ல. மனிதர் பயந்துவிட்டார். அதன்பின், உடல்நிலை சரியானபோதும், மாடிப்படிகளில் ஏற பயம். மிகக் கனமான சாமான்களைத் தூக்க முடியாது என்றால் நியாயம். நடக்கவே பயந்தால்?

    இப்போதெல்லாம் வியாதியைப்பற்றிப் பேசுவது நாகரிகமாக ஆகிவிட்டது.

    முன்பெல்லாம், வயது முதிர்ந்த பெண்கள் சந்தித்துக்கொள்ளும்போது, “சௌக்கியமா?” என்று விசாரிப்பார்கள். இப்போது அந்த முகமன், “என்னென்ன மருந்து சாப்பிடுகிறீர்கள்?” என்று மாறிவிட்டது. ஒருவர் தன் உடல் உபாதையைப்பற்றி விவரிக்க, அடுத்தவர் அனுதாபம் காட்டவேண்டும். அதனால், உடல்நிலை சீராகிவிடுமா என்றெல்லாம் கேட்கக்கூடாது.

    நாம் ஒவ்வொரு முறையும் நமக்கு வந்த, ஆனால் இப்போது சரியாகிவிட்ட, நோயைப்பற்றி ரசனையுடன் விவரித்தால் கேட்பவர்களுக்கு எப்படி இருக்குமோ, நம் உல்லாசம் பறிபோய்விடும்.

    ஒரு சிலர், தாம் ஆரோக்கியமாக இருந்தாலும், தமக்குத் தெரிந்தவர்கள், உறவினர்கள் ஆகியோரின் உடல்நிலைக் குறைபற்றி விவரிப்பார்கள்.

    `நமக்கு இப்படியெல்லாம் நேரவில்லேயே!’ என்ற நிம்மதியாலா? அல்லது, தம் ஆரோக்கியக்குறைவை சில நொடிகளாவது மறப்பதற்காகவா? எனக்குப் புரியத்தானில்லை.

    Share
  • ஆண்பார்க்க வந்தவள் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    அன்று பொது விடுமுறை. நண்பர்கள் இருவரும் வழக்கம்போல், ஒரு சினிமா தியேட்டருக்கு வந்திருந்தனர். அவர்களுக்குப் பிடித்த நடிகர், கவர்ச்சியைக் காட்ட அஞ்சாத நடிகை. வேறென்ன வேண்டும்!

    “எப்போ இந்தப் பொண்ணுங்க பிரதம மந்திரி, ஜனாதிபதின்னு ஆக ஆரம்பிச்சாங்களோ, அப்பவே நமக்கு கெட்ட காலம் ஆரம்பிச்சுடுச்சு!”

    கலகலப்பாகவே பார்த்துப் பழகிய நண்பன் இப்படி அலுத்துக்கொள்வதைப் பார்த்த வாசுவுக்கு அதிசயமாக இருந்தது. எதுவும் பேசாது, கோபியையே பார்த்தான்.

    “எங்கம்மா காலத்திலே `கல்யாணம்’னா, பொண்ணுபாக்கறதில ஆரம்பிக்கும். இல்லியா?”

    “இப்போ மட்டும் என்னவாம்? என் தங்கைக்கும் அப்படித்தான் நடந்திச்சு. அவ குட்டைப்பின்னலை மறைக்க நீளமா ஒரு சவுரி வெச்சு.. ஏதேதோ பித்தலாட்டம்! `சாதாரணமா நட. ரொம்ப மெதுவா வேணாம். கால் நொண்டியான்னு பாப்பாங்க’, அப்படி, இப்படின்னு!”

    அவன் அங்கலாய்ப்பைக் காதில் வாங்கிக்கொள்ளாது, “எனக்குப் பாத்திருக்கிற பொண்ணு வெளிநாட்டில படிச்சு, அங்கேயே கொஞ்ச காலம் வேலையும் பாத்ததில நம்ப கலாசாரத்துக்கு ஒத்து வரமாட்டேங்குது!” என்று அங்கலாய்த்தான் கோபி.

    “மினிஸ்கர்ட்தான் போடுவாங்களா?”

    “அதில்லே. `இது என்ன கெட்ட வழக்கம், பொண்ணு பாக்கறதுன்னு? நான் என்ன, சந்தையில் விக்கற மாடா? நான் ஒத்துக்க மாட்டேன். நான் ஆண்பாக்கப்போறேன்’, அப்படின்னு வாய்க்கு வந்தபடி..,” என்று பொரிந்தான். “இவ ஆண்பாக்க நான்தான் மாட்டிக்கிட்டேன். அம்மாவோ, `நம்ப தகுதிக்கு இது பெரிய எடம்டா. நாம்பதான் கொஞ்சம் விட்டுக்குடுத்துப்போகணும்,’ அப்படின்னு எனக்கு வேப்பிலை அடிக்கறாங்க”.

    வாசு சிரிப்பை அடக்கிக்கொண்டான். “எப்படியோ, கல்யாணம் ஆனா சரி. நல்லா சம்பாதிக்கிற பொண்ணு. வாழ்க்கை ஈசியா இருக்கும். விட்டுடாதே!”

    “இப்போ நான் என்ன செய்யணும்? ஆடத் தெரியுமா, பாடத் தெரியுமான்னு கேட்டா?”

    “ஏதாவது மந்திரத்தைச் சொல்லு. `நான் என்ன, மைக்கல் ஜாக்சனா?’ அப்படின்னு நைசா நழுவிடு. பெண்டாட்டியைப்  பறிகுடுத்தவன்மாதிரி, இப்படி சவரம் பண்ணாம போய் நிக்காதே. பளிச்சுனு டிரெஸ் பண்ணிக்கிட்டு, குனிஞ்ச தலை நிமிராம..”.

    “ஒன்கிட்டப்போய் பேசறேனே!”

    அதற்குள் படம் ஆரம்பிக்கவே, இருவரும் தியேட்டருக்குள் நுழைந்தனர். இருட்டில் எவரெவர் காலையோ மிதிக்க, `குடிகாரனுங்க!’ என்ற வசவு கிடைத்தது.

    கோபியின் தாய் ஜானகி அவனை ஏற இறங்கப் பார்த்தாள். பட்டு குர்த்தாவில் ஜொலித்த இவனை எந்தப் பெண்ணுக்குத்தான் பிடிக்காமல் போகும் என்று அவளது எண்ணம் போயிற்று.

    வாசலில் கார் நின்ற ஒலி. “வாங்க, வாங்க,” என்று கூவியபடி அவள் ஓட, கோபி எட்டிப்பார்த்தான்.

    ஜீன்ஸ் அணிந்த பெண். வயிறு தெரிய ஒரு குட்டைச்சட்டை.

    “அம்மா வரலியா?”

    “பொண்ணு பாக்கத்தான் அப்படி அக்கா, பெரியம்மா, மாமா, அத்தைன்னு பத்துப்பேர் பையன்கூட வருவாங்க. பாவம், அந்தப் பொண்ணு பயந்தேபோயிடும். ஒங்க மகனும் அப்படி பயந்துடக் கூடாது, பாருங்க! அதான் நான் மட்டும் வந்தேன்”.

    தான் ஒதுங்கிக்கொள்வதுதான் மரியாதை என்று முடிவெடுத்த ஜானகி, “கோபி! வடை, கேசரி எல்லாம் எடுத்துட்டு வாப்பா,” என்று அருமையாகக் குரல்கொடுத்தாள்.

    உள்ளேயிருந்து வந்தவன், “மேசைமேலதானே இருக்கு. அவங்களே எடுத்துச் சாப்பிடட்டுமே!  கையிலே கொண்டு குடுக்க நான் என்ன, ஹோட்டல் சர்வரா?” என்று இரைந்தான்.

    அவன் சொற்களைவிட தோற்றம் தாயை இன்னும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பளபளப்பான குர்த்தா இருந்த இடத்தில் இப்போது கசங்கிய டி-ஷர்ட்!

    “கலிகாலம்! மாடர்ன்ங்கிற பேர்ல எப்படி எப்படியோ நடக்கிறாங்க! நாம்ப ஏதாவது சொல்லப்போனா, `பழங்காலம்’னு கேலி!” என்று முணுமுணுத்தபடி உள்ளே விரைந்தாள்.

    “என் பேர் விஜ்லா (VIZLA),” என்று அறிமுகப்படுத்திக்கொண்டாள் அப்பெண். “நீங்க எப்போ பட்டம் வாங்கினீங்க?” என்று நேரிடையாக விஷயத்துக்கு வந்தாள்.

    “அதுவா? அது வந்து..,  நான் நாலாவது படிக்கிறப்போ வாங்கினேன். நீலக்கலர். ஜோரா பறக்கும்”.

    அவள் சிரித்தாள். “நகைச்சுவையா பேசறீங்க. எனக்குப் பிடிச்சிருக்கு”.

    “எதைப் பிடிச்சிருக்கு? என்னையா, என் பேச்சையா?”

    அவள் முகம் சிவந்தது.

    ஹை! இவளுக்கு வெட்கப்படக்கூடத் தெரியுமா? தேவலியே!

    “நான் எதுக்கு ஒங்களை ஆண்பாக்க வந்தேன், தெரியுமா?”

    “சொன்னாத்தானே தெரியும்?”

    “பொண்பாக்க வரப்போ, ஒரு பொண்ணை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்தறீங்க! `இப்படி நடக்கணும், இப்படி உடுத்தணும்’னு எல்லா சொந்தக்காரப் பொண்ணுங்களும் அவளைப் பாடுபடுத்திடுவாங்க. `ரொம்பப் பேசிடாதே. வாயாடின்னு நினைச்சுக்கப்போறாங்க’ன்னு அவ வாய்க்குவேற பூட்டு. ஆம்பளைங்களுக்கும் எங்க கஷ்டம் புரிய வேணாமா? அதான் இந்த ஐடியா எடுத்தேன்”.

    அவளே தொடர்ந்தாள். “நீங்க பரவாயில்ல. ரொம்ப அலட்டிக்காம, நீங்க நீங்களாவே இருந்துட்டீங்க. இந்த டி_ஷர்ட்!” விழிகள் விரிய, அவள் சிரித்தாள்.

    அவளிடம் அவனுக்கு ஒன்றுதான் புரியவில்லை. “இது என்ன பேரு, விஜ்லான்னு?”

    “கல்யாணப் பத்திரிகையிலே போடுவாங்க. அப்போ பாத்துக்குங்க,” என்றாள் விசாலாட்சி.

    Share
  • மன்னித்து ஏற்பதா! (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    மதிய இடைவேளை. அலவலக காண்டீனில் சாப்பிட்டுத் தொலைக்க வேண்டும் என்று நினைக்கும்போதே சுயபரிதாபம் பொங்கி  எழுந்தது வேலுவுக்கு.

    பின் என்ன, அவனவன் மனைவி அருமையாகச் சமைத்துக்கொடுத்ததை அவளே அருகில் இருப்பதுபோல் அனுபவித்துச் சாப்பிட, இவன் மட்டும் உப்பு அதிகமாக, அரைகுறையாக வெந்ததை அள்ளிப் போட்டுக்கொள்ள வேண்டும். சமையலறைப்பக்கமே தலைவைத்துப் படுக்காதவனெல்லாம் அயல்நாட்டுக்கு வந்து சமையல் செய்கிறான், பாவி!

    வேலுவின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்ளவே வந்தவன்போல் அருகில் வந்தான் சாமி.

    “இன்னும் மாமியார் வீட்டிலதான் இருக்காங்களா?” என்று அக்கறையாக விசாரித்தான்.

    அவனை ஒருமுறை சோகமாகப் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டான் நம் கதாநாயகன். `தெரிந்துகொண்டே கிளறுகிறான் தடியன்!’ என்று மனதிற்குள் வைதான்.

    சாமியோ எளிதாக அந்த இடத்தைவிட்டுப் போவதாக இல்லை. “அப்படி என்னதான் சண்டை ஒங்களுக்குள்ளே?” என்று துருவினான்.

    ஒரு பெருமூச்சுடன் சொல்ல ஆரம்பித்தான் வேலு. “நம்ப ஆபிசில எல்லாரும் சேர்ந்து மூணு நாள் கெண்டிங் ஹைலாந்துக்கு பிக்னிக் போனோம், இல்லியா? அப்போ..”என்றவன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு, “எனக்கு குளிர் தாங்கல,” என்று ஏதோ சொல்ல, நண்பன் புரிந்துகொண்டு தலையாட்டினான். “குளிருக்கு அடக்கமா மிஸ் வாங்குடன் ஒண்ணா, ஒரே ரூமில இருந்தியாக்கும்! அதுக்கு எப்பவுமே ஒன்மேல ஒரு கண்ணு!”

    “சேச்சே! போரடிக்குதுன்னு அவதான் என் ரூமுக்குள்ள வந்தா. சும்மா பேசிட்டு இருந்தோம். அவ்வளவுதான்!”

    கேலிச்சிரிப்புடன், “நம்பறேன்,” என்ற நண்பன் சற்று யோசித்து, “எவன் வத்திவெச்சானோ! இதுக்குத்தான் உள்ளூரில மாமியார் வீடு இல்லாத பொண்ணாப்பாத்து கட்டியிருக்கணும்,” என்று காலங்கடந்து முணுமுணுத்தான்.

    “ஆகிற வழியைச் சொல்லுவியா!”

    “நீ போய் கூப்பிடேன்!”

    “ஒடனே வந்துடுவாளா?”

    “லேடீஸ் அவ்வளவு சீக்கிரம் மசியமாட்டாங்க.` நீ இல்லாம வீடு வெறிச்சுனு இருக்கு. சாப்பாடே இறங்க மாட்டேங்குது’ன்னு ஏதாவது வசனம் எடுத்துவிடு”.

    “இதெல்லாம் போன தடவையே சொல்லியாச்சு”.

    “இப்படிச் சொல்லிப்பாரேன். ‘ஒன்னோட சேர்ந்து வாழ ஆரம்பிச்சப்போதான் நான் முழுமையா ஆனமாதிரி இருக்கு’, இப்படி ஒரு இளிச்சவாயன் சொன்னா எந்த மனைவிக்கும் கண் கலங்கிடும்”.

    “நம்பறமாதிரி ஏதாவது ஐடியா குடுப்பா”.

    “அட, சொல்றேன், நம்பமாட்டேங்கிறியே! ஒரு படத்தில இப்படித்தான் மனைவியை வழிக்குக் கொண்டுவர்றான் கதாநாயகன்”. அடித்துச்சொன்னான் சாமி.

    அறிவுரை பலத்தது. “அதோட, ‘ஸாரி, ஸாரி’ன்னு திரும்பத் திரும்பச் சொல்லணும்.  தலையைக் கலைச்சு விட்டுக்கிட்டு, மூஞ்சியைச் சோகமா வெச்சுக்க. ரெண்டு மூணு நாள் சவரம் வேண்டாம்”.

    நண்பன் சொன்னதையெல்லாம் ஒத்திகை பார்த்துக்கொண்டு, மாமியார் வீட்டுக்குப் போனான் வேலு.

    “எங்கே வந்தீங்க?”

    மனைவியின் கட்டைக்குரலும் மிரட்டலும் புதிதல்ல என்றாலும் சற்று பயம் ஏற்பட்டது. பெரிதாக ஒரு மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டான்.  “நீ இல்லாம..,” என்று ஏதோ ஆரம்பித்தான். மற்றதெல்லாம் மறந்துபோயிற்று.

    பேச்சு சப்தம் கேட்டு வெளியே வந்த மாமியார், “உள்ளே வா!” என்று மகளை ரகசியக் குரலில் அழைத்துப்போனாள்.

    “எத்தனை நாள் இங்கேயே தங்கப்போறே? போய், அவர் காலிலே விழுந்து, `என்னை மன்னிச்சு ஏத்துக்குங்க’ன்னு கெஞ்சலாச் சொல்லு”. இணையத்தில் பலரும் பார்த்ததை மாமியாரும் பார்த்திருந்தாள்.

    “யார், யாரை மன்னிக்கிறது? நானா தப்பு பண்ணினேன்?” குரல் கத்தலாக வெளிப்பட்டது. “நானா வீட்டில பெண்டாட்டியை விட்டுட்டு, கண்டவளோட வெளியூரில  ரும் போட்டுத் தங்கினேன்?”

    “என்ன இருந்தாலும், நீ  ஒரு பொண்ணு. விட்டுக்குடுக்கறதுதான் வாழ்க்கை”. மாமியார் தத்துவத்தில் இறங்கினாள். “இந்தமாதிரி சமாசாரத்துக்கெல்லாம் அப்பாவை நான் பிரிஞ்சிருந்தா, நீ பிறந்திருக்கவே முடியாது. ஒங்கப்பா ஆடாத ஆட்டமா!”

    சற்றுநேரம் அங்கே  மௌனம் நிலவியது. ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த வேலு மனைவியின் பதில் என்னவாக இருக்கும் என்று காதைத் தீட்டிக்கொண்டான்.

    “சரிம்மா. நீ இவ்வளவு சொல்றதால போறேன். ஆனா, செய்யாத தப்புக்காக மன்னிப்பெல்லாம் கேக்கமாட்டேன்”.

    தான் ஸாரி சொல்லவேண்டிய அவசியமே இல்லாமல் செய்துவிட்ட மாமியார்மேல் அன்பு சுரந்தது வேலுவுக்கு.

    “நீங்களும் எங்ககூட வாங்களேன், அத்தை!” என்றான் உபசாரமாக. மகளைவிட அனுபவம் அதிகம் இருந்ததால் அவளுடைய சமையல் இன்னும் ருசியாக இருக்கும் என்று சப்புக்கொட்டியது அவன் நாக்கு.

    Share
  • குழந்தையின் பெயர் (சிறுகதை)

    குழந்தையின் பெயர் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “குழந்தைக்கு என்ன பேர் வைக்கலாம்?”

    “நீங்கதான் சொல்லுங்களேன்!” பிரசாத்தை ஒரு முறை பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள் பிரபா. முகத்தில் வெட்கமோ, புன்னகையோ இருக்கவில்லை. எதையோ யோசிப்பதுபோல் இருந்தாள் என்றுதான் பட்டது அவனுக்கு.

    முதலிலேயே யோசித்துவைத்திருந்தது நல்லதாகப்போயிற்று என்ற மகிழ்வுடன், “விட்டல், இல்லாட்டி கோகுல்,” என்று சற்று உரக்கவே சொன்னான்.

    “கிருஷ்ணர் பேரா,” என்று இழுத்தாள்.

    “அதேதான்!”

    “அவருக்கு நிறைய பெண்களோட சகவாசமில்ல?”

    அவனுக்குப் பெருமையாக இருந்தது. பிறக்கப்போகிற மகன் உத்தமபுத்திரனாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறாள். இதில் என்ன தவறு?

    கிருஷ்ணன் இல்லாவிட்டால் ராமன். “ராமசந்திரன்,” என்றான் அழுத்தமாக.

    “MGR வாத்தியாரா?”

    “இல்லே. தசரதகுமாரன். ராமாயணத்திலே..”.

    “எனக்கும் தெரியும்”. சற்று சூடாக வந்தது அவள் பதில்.

    “ராமர்தான் ஏகபத்தினி விரதன்,” என்றான் சமாதானமாக.

    “சுகமா அரண்மனையில இருக்கிறதை விட்டுட்டு, அப்பா சொல்றார்னு காட்டுக்குப்போய் கஷ்டப்பட்டாரே! அதைச் சொல்லமாட்டீங்களே!” என்று சாடினாள். “கொஞ்சம் சொந்த புத்தியை உபயோகிச்சிருக்கவேண்டாம்?”

    மகாபாரதம், ராமாயணம் ஆகிய இரண்டின் நாயகர்களும் சரிப்படவில்லை. வேறு யாரைச் சொல்லலாம்?

    “நடராஜன்?”

    “சிவன் பேரு. ஒங்களுக்கு பஸ்மாசுரன் கதை தெரியுமில்ல?”

    `இவள் எங்கே போகிறாள்?’ என்று சற்று அயர்ந்தான் பிரசாத்.

    அவளே சொன்னாள்: “தன்னோட கையை யார் தலையில வெச்சாலும் அவங்க சாம்பலாகணும்னு வரம் கேட்டானாம் அந்த அசுரன். யார்கிட்டே? சிவன்கிட்டே”.

    சுவாரசியமாக இருந்தது கதை.

    “எவ்வளவு கெட்ட குணம்!” என்று அவளை ஊக்கினான்.

    “ரொம்ப யோசிக்காம, சிவனும் அவன் கேட்டதைக் குடுத்துடரார். நைச்சியமா பேசறவங்களுக்கு ரொம்ப யோசிக்காம எதையாச்சும் குடுத்தா, குடுக்கறவங்களுக்குத்தான் கஷ்டம்”.

    சிவன் அப்படி என்ன கஷ்டத்தை அனுபவித்தார் என்று கேட்கவேண்டும்போல இருந்தது அவனுக்கு. `இதுகூடத் தெரியாதா!’ என்று ஏளனம் செய்துவிடுவாள். வேண்டாம்.

    “முருகன்? சிவகுமார்னு வெச்சா, நாகரிகமா இருக்கும்”. அவன் குரல் பலகீனமாக ஒலித்தது. இதற்கு என்ன ஆட்சேபம் தெரிவிக்கப்போகிறாளோ!

    “சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபிச்சுக்கிட்டு, பெத்தவங்களை விட்டு எங்கேயாவது போயிடுவான். ரெண்டு பொண்டாட்டிவேற!”

    அவன் மௌனமாக இருந்தான்.

    “வேற ஏதாவது பேசலாமா?” என்றாள்.

    அவன் வாயே திறக்கவில்லை.

    அவளே கேட்டாள்: “பிறக்கிறது பெண்குழந்தையா இருந்தா?”

    “சீதா,” என்று சொன்னவன், அவள் முகத்தைப் பார்த்துவிட்டு நாக்கைக் கடித்துக்கொண்டான். பழங்காலப் பெயராக இருக்கிறது என்பாளோ?

    “ஜானகின்னு பேர் வெச்சுட்டு, ஜானுன்னு செல்லமா..,” என்றவனை இடைமறித்தாள். “கட்டினவர் காட்டுக்குப் போனபோது, அவ எதுக்கு அவரோட கல்லிலேயும் முள்ளிலேயும் போய் திண்டாடினா? `நான் எங்கப்பா வீட்டுக்குப் போறேன்’னு போயிருக்க வேண்டியதுதானே?”

    அதற்குமேல் அவனுடைய கற்பனை ஓடவில்லை.

    மறுபடியும் அவளே கைகொடுத்தாள். ”பார்வதி புத்திசாலி. சிவனோட ஒடம்பிலே பாதி அவளுக்கு. சக்தி இல்லாட்டி சிவன். ஒரு பொண்ணு இப்படித்தான் இருக்கணும். துணை இல்லாம நான் இல்லேன்னு ஒவ்வொருத்தனும் தவிக்கணும்”.

    “ஏண்டா பிரசாத்து? ரெண்டுபேரும் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தீங்களே! `ஒங்க பொண்ணை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு’ அப்படின்னு தரகர்கிட்ட சொல்லிவிடவா?” தாய் கேட்டாள்.

    “எனக்கு இந்தப் பொண்ணு வேண்டாம்மா”.

    “அதான் ஏன்னு கேக்கறேன். `நான் நாகரிகமானவ. தமிழெல்லாம் படிக்கிறதில்லே’ன்னு சில அரைகுறைங்கமாதிரி அலட்டிக்காம, ஆன்மிகப் புத்தகங்களெல்லாத்தையும் கரைச்சுக் குடிச்சிருக்கா. ரொம்ப புத்திசாலிடா!”

    “எனக்கு இவ்வளவு புத்திசாலியான பொண்ணு வேண்டாம்மா. பெண்ணியம் பேசறா. எல்லாத்தையும் அலசறா”.

    “அதான் டாக்டர் பட்டம் வாங்கியிருக்கா”. அழுத்தமாகச் சொன்னாள் அம்மா.

    “அவளோட ஆராய்ச்சியை வேலையோட வெச்சுக்கட்டும். கோயிலுக்குப் போனோமா, சாமி கும்பிட்டோமா, பிரசாதம் வாங்கிச் சாப்பிட்டோமான்னு இருக்கிற சராசரி பொண்ணுதான் எனக்குச் சரிப்படும்”.

    மனதுக்குள் சொல்லிக்கொண்டான், `கல்யாணம் ஆகி, பிறக்கப்போகிற குழந்தைக்குப் பெயர் வைப்பதில்கூட எங்களுக்குள் ஒற்றுமை இல்லையே! இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் எதிரும் புதிருமாக இருந்தால் வாழ்க்கை நரகமாக இருக்காதா!’

    Share
  • பெயரின் முதல் எழுத்து (சிறுகதை)

    பெயரின் முதல் எழுத்து (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “அம்மா! நான் பட்டம் வாங்கறச்சே, எல்லாரோட அப்பா அம்மாவும் யூனிவர்சிடிக்கு வந்திருந்தா. எனக்கு மட்டும்..,” எப்பவோ நடந்ததை நினைத்து, அஞ்சனா பெருமூச்சு விட்டுக்கொண்டாள்.

    “நான் வேலை செஞ்சாத்தான் நாம்ப சாப்பிட முடியும், ஒன்னைப் படிக்கவைக்க முடியும். ஒனக்குத் தெரியாதா, அஞ்சனா?” கங்காவின் குரல் கெஞ்சியது.

    “நான் ஒன்னைக் குத்தம் சொல்லலே. இன்னிக்காவது சொல்லிடும்மா. நெத்தியிலே பொட்டு இட்டுக்கறே. கழுத்திலேயும் இருக்கு. ஆனா, ஒனக்குத் தாலி கட்டினவரை நான் பாத்ததே இல்லே. அப்படி ஒத்தர் இருக்காரா, இல்லே..”.

    கங்கா பதறினாள். “என்ன வார்த்தை சொல்றே! நான் அப்படிப்பட்டவ இல்லேடி. சட்டப்படி என்னை ஒத்தர் கல்யாணம் பண்ணிண்டார். அவருக்குப் பிறந்தவதான் நீ.”

    “பின்னே ஏன் அவர் நம்பகூட இல்லே?”

    “என்னத்தச் சொல்ல! எங்க கல்யாணம் முடிஞ்ச மறுநாளே அவருக்கு என்னப் பிடிக்காம போயிடுத்து”.

    “நீ அப்படி என்ன பண்ணினே?”

    “நான் ஒரு தப்பும் பண்ணலே”. மகள் சற்றும் எதிர்பாராவிதமாக, கங்கா தன் புடவையைத் தூக்கினாள். “பாத்தியா? இதுதான்..!” அவள் சுட்டிய இடத்தில் சருமத்தின் நிறம் மாறியிருந்தது.

    “`குஷ்டரோகம் இருக்கிற பொண்ணை எல்லாருமா சேர்ந்து என் தலையிலே கட்டியிருக்கேள்!’ அப்படின்னு கத்திட்டுப் போனவர்தான். எங்கப்பா, `இவளுக்குச் சின்ன வயசிலேருந்து இப்படி ஒரு தழும்பு இருக்கு. இது வியாதியில்லே, மாப்பிள்ளை,’ அப்படின்னு அவர் காலைப் பிடிச்சுண்டு எவ்வளவோ கெஞ்சினார். அந்த மனுஷன் மசியலியே!”

    தனக்கு வேறு எந்த விவரமும் தெரியாதே என்று நினைவிலெழ,  “முக்கியமானதை விட்டுட்டியேம்மா. ஒன்னை நிர்கதியா விட்டுட்டுப் போனவரோட பேரு?”

    கங்கா மௌனம் சாதித்தாள்.

    அஞ்சனா மேலும் துருவினாள். “என் பேருக்கு முன்னாடி G ன்னு தலைப்பெழுத்து போட்டியே. அது ஒன்னோட பேரோட முதல் எழுத்துதானே?”

    “அவரோட பேரும் அதிலதான் ஆரம்பிக்கும்”. சொல்லியபடியே முகத்தைத் திருப்பிக்கொண்டாள் கங்கா, இதற்குமேலும் இதைப்பற்றிப் பேசத் தான் தயாரில்லை என்பதை உணர்த்துவதுபோல்..

    அதற்குமேலும் அம்மாவைக் கஷ்டப்படுத்த மனம் வரவில்லை அஞ்சானாவுக்கு. “இன்னிக்கு ஏதாவது சினிமா பாத்துட்டு, அப்படியே வெளியில சாப்பிட்டுட்டு வரலாமா?” என்று பேச்சை மாற்றினாள்.

    `அதுக்கெல்லாம் காசு கொட்டியா கெடக்கு?’ என்று முன்போல் சொல்ல முடியவில்லை கங்காவுக்கு. அவர்கள் உரையாடலால் அவள் மனமும் தத்தளித்துக்கொண்டுதான் இருக்கும். பாவம்!

    “இரு. புடவையை மாத்திண்டு வரேன். நீயும் பௌடர் அடிச்சுண்டு வா,” என்று சிரிக்க முயன்றாள்.

    அஞ்சனாவின் மனம் படத்தில் செல்லவில்லை.

    G என்ற எழுத்தில் என்னென்ன பெயர்கள் இருக்கும் என்ற யோசனையில் ஆழ்ந்தாள். கணேசன், கணபதி? கங்காதரன்?

    அதற்குமேல் யோசிக்க முடியவில்லை.

    படத்தில் கதாநாயகன் நாலைந்து தடியன்களை அடித்து உதைத்துக்கொண்டிருந்தான். பின் எப்படித்தான் கதாநாயகியின் மனதில் இடம் பிடிப்பது?

    அஞ்சனா முகத்தைச் சுளித்தாள். இந்த காதல், கத்தரிக்காய் எல்லாம் திரையில் பார்க்கத்தான் சுவாரசியமாக, கிளுகிளுப்பாக இருக்கும். நடைமுறையில் அம்மா மாதிரி எத்தனை பெண்கள் கஷ்டப்படுகிறார்களோ!

    “ஒரே சத்தமா இருக்கு,” என்று முணுமுணுத்துவிட்டு, மெல்ல எழுந்தாள். இருண்டிருந்த தியேட்டரின் கதவிலிருந்து வெளிப்பட்டவளுக்கு ஒரு சிறு கும்பல் கண்ணில்பட்டது.

    `என்ன நடக்கிறது இங்கே?’

    ஒருவர் தரையில் கிடந்தார். முகம் நீல நிறமாக மாறியிருந்தது. கைகள் விறைத்திருக்க, கண்கள் என்னவோ திறந்தபடிதான் இருந்தன.

    அருகில் வேதனை தோய்ந்த முகத்துடன் நின்றிருந்தவர் அவரது நண்பர் போலும்! “இருதயச் சிகிச்சை நடந்து ஒரு மாசம்கூட ஆகல,” என்று பொதுவாகத் தெரிவித்தார்.

    “நகருங்கள், ப்ளீஸ். என்னால் உதவ முடியும்,” என்றபடி, அவர் அருகில் சென்றாள் அஞ்சனா.

    அவர்களிருவரும் வீடு திரும்புகையில், கங்கா விசாரித்தாள்: “பாதி படத்திலே எங்கேடி போயிட்டே?”

    “நான் போனதும் நல்லதாப்போச்சு. ஒரு உசிரைக் காப்பாத்தினேன்”. நடந்ததை விவரித்தாள். “இந்த reflexology-யால ஒடனே பலன்! அவர் கையில சில எடங்களை அழுத்திப்பிடிச்சேன். ரத்த ஓட்டம் சீராகி, எழுந்து நடந்து போனார். `பை’ அப்படின்னு கையை ஆட்டினார்னா பாத்துக்கயேன்!”

    “அப்படியே புண்ணியம்!” தாய் மெச்சிக்கொண்டாள். “அவர் யாருன்னு கேக்கலியா நீ?”

    “யாரா இருந்தா என்னம்மா? அவர் எழுந்து நடந்ததும், அங்கே இருந்தவாளெல்லாம் என்னைப் பாத்து சிநேகமா சிரிச்சதே சந்தோஷமா இருந்தது! ஒண்ணும் பேசாம நடந்துட்டேன்”.

    வேடிக்கை பார்த்தபடி பேரங்காடியில் நடந்துகொண்டிருந்த அஞ்சனா குரல் வந்த திசையில் திரும்பினாள்.

    “ஹலோ! அன்னிக்கு பேர்கூடச் சொல்லாம அவசரமா போயிட்டீங்களே! எனக்கும் கேக்கத் தோணல”.

    அவள் முகத்திலும் சிரிப்பு படர்ந்தது. பெயரைச் சொல்லிவிட்டு, “சௌக்கியமா?” என்று விசாரித்தாள்.

    “ஒங்க புண்ணியத்தால நல்லா இருக்கேன். வாங்களேன், காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்”.

    “ஒங்க பேரைச் சொல்லலியே, ஸார்?”

    “கௌரிசங்கர்”.

    G – யில் ஆரம்பிக்கும் பெயர்! இவருக்கும் தன் அப்பா வயதுதான் இருக்கும். ஒரு கணம் திகைத்தவள், தன்னையே கடிந்துகொண்டாள்.

    இது என்ன பைத்தியக்காரத்தனம்?

    `வேண்டாம்’ என்று அம்மாவைத் துரத்தியவரைப்பற்றி எதற்காக ஓயாது யோசித்து மூளையைக் குழப்பிக்கொள்வது? அந்த மனிதர் எங்கே, எவளுடன்  இருக்கிறாரோ!

    “மத்தவங்க எல்லாரும் வேடிக்கை பாத்துக்கிட்டு நின்னப்போ, நீதான் என்னை.,” மார்பில் கையைப் பதித்துக்கொண்டார். “ஒங்க அம்மாவும் அப்பாவும் ஒன்னை நல்லபடியா வளத்திருக்காங்க அஞ்சனா”.

    ஏதோ சொல்லவந்தவள், தன்னை அடக்கிக்கொண்டாள். `எனக்கு அம்மா மட்டும்தான்’ என்பதை கண்டவரிடமெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பானேன்!

    “மனுஷனாப் பிறந்து ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்யட்டா எப்படி?” என்றாள் அடக்கத்துடன்.

    “எனக்கு யாருமேயில்ல,” குழந்தைபோல, சுயபரிதாபத்துடன் கூறினார். “ரெண்டு கல்யாணம். ஒண்ணும் நிலைக்கலே”.

    ஒரு முறை அவரை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, தலையைக் குனிந்துகொண்டாள். இவ்வளவு பெரியவரிடம் எப்படித் துருவித் துருவிக் கேட்பது!

    தன் மனப்பாரத்தை யாரிடம் கொட்டுவது என்று காத்திருந்தவர்போல் அவரே தொடர்ந்தார்: “ஒருத்திக்குத் துரோகம் பண்ணினேன். தீர விசாரிக்காம அவளைத் துரத்தினேன்”.

    அவரே பேசட்டும் என்று அஞ்சனா காத்திருந்தாள்.

    “பெருநோய் அவ்வளவு லேசா பரவற வியாதியில்ல. ரொம்ப நாள், அதுவும் நெருக்கமா இருக்கிறவங்களுக்குத்தான் அந்த வியாதி வர வாய்ப்புண்டு. அது தெரிஞ்சதும், குத்த உணர்ச்சி உறுத்திக்கிட்டே இருந்திச்சு. எனக்கு அவசர புத்தி”.

    `இப்போது இந்தப் பேச்சு எதற்கு?’ என்று அஞ்சனா கேட்கவில்லை.

    “இன்னொருத்தியை ஏத்துக்க முடியல. அவ கேஸ் போட்டா. எனக்கு..,” தலையைக் குனிந்துகொண்டார். “நான்.. ஆம்பளையே இல்லேன்னு!”

    அஞ்சனாவுக்கு அதற்குமேலும் சந்தேகம் இருக்கவில்லை.

    `நீங்கள் ஆண்மகன்தான். உங்களுக்குப் பிறந்த பெண் நான்!’ என்று கூறிவிடலாமா?

    `எதற்காக?’ என்று அவள் மனம் இடக்கு செய்தது.

    துரோகமாம், குற்ற உணர்ச்சியாம்! என்னமாக அளக்கிறார்! பிரயாசைப்பட்டுத் தேடியிருந்தால் அம்மா இருக்கும் புதிய இடத்தைக் கண்டுபிடித்திருக்க முடியாதா?

    இத்தனை வருடங்களாக அம்மா எத்தனை அவமானங்களைச் சந்தித்திருப்பாள்! ஏன், தானே கேட்கவில்லையா, `நீ முறையாகக் கல்யாணம் செய்துகொண்டவள்தானா?’ என்று?

    இந்த மனிதர் நன்றாகத் துடிக்கட்டும்.

    சே! இவருக்கா உதவி செய்தேன்! மற்றவர்களைப்போல, வேடிக்கை பார்த்துவிட்டு நகர்ந்திருக்கலாம்.

    “என்னம்மா அஞ்சனா எழுந்துட்டே?”

    “எனக்கு அவசரமா ஒரு எடத்துக்குப் போகணும். மறந்தே போயிட்டேன்,” என்றபடி அஞ்சனா அங்கிருந்து விரைந்தாள்.

    அவள் போன திசையையே பார்த்தபடி இருந்தவருக்கு ஏதோ புரிந்தாற்போல் இருந்தது. இவளைப் பெற்றவள் தான் கைவிட்ட கங்காதான். அதே சாயல்! வேறு ஒருவரை மணந்து, இவளைப் பெற்றிருக்கிறாள்.

    தாலி கட்டிய பெண்ணுக்குத் துரோகம் செய்துவிட்டதாக எண்ணி இவ்வளவு காலமும் துடித்தோமே! எல்லாம் வீண்.

    கௌரிசங்கருக்கு அழுகை வரும்போல இருந்தது.

    வீடு திரும்புகையில், அஞ்சனா பலவாறாக யோசித்தாள்.

    `அம்மா! நான் அப்பாவைப் பாத்துப் பேசினேன்’.

    `அவர் யார் தெரியுமா? அன்னிக்கு ஒரு நாள் தியேட்டரில..’

    அம்மா என்ன சொல்வாள்?

    `கையோட அப்பாவை அழைச்சிண்டு வந்திருக்கமாட்டியோடி?’ என்பாள். கண்களில் ஆர்வம் கொப்புளிக்கும்.

    அவர் வந்தால், அம்மாவின் உலகத்தில் அவரும், அவருடைய உலகத்தில் அம்மாவும்தான் இருப்பார்கள், கடந்தகால இழப்பைச் சரிசெய்வதுபோல். இனி, அவளை யார் கவனிக்கப்போகிறார்கள்!

    வேண்டாம். யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்வதுபோல் ஆகிவிடும். எனக்கு அம்மா வேண்டும்.

    “எங்கே போயிட்டே, அஞ்சனா? ரொம்ப இருட்டிப்போயிடுத்தே! வேலை அதிகமா இன்னிக்கு?” அம்மாவின் உண்மையான கரிசனம் ஒரு கணம் அவளை நிலைதடுமாறவைத்தது. சட்டென்று மனதைத் திடப்படுத்திக்கொண்டாள்.  `ஆமாம்மா. ரொம்ப வேலை!” என்றாள், முகத்தைப் பரிதாபமாக வைத்துக்கொண்டு.

    Share
  • அறுபதில் கல்யாணமா! (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    வேதாவும் தினகரனும் ஒரே இடத்தில் வேலைபார்த்தவர்கள். குடும்ப பாரத்தைச் சுமப்பதால், அவளுக்குக் `கல்யாணம்’ என்ற எண்ணமே எழவில்லை என்றவரை அவருக்குத் தெரியும்.

    அரசியல், சினிமா என்று பொது விஷயங்களைப்பற்றிப் பேசி நண்பர்கள் ஆனபோது, `நம் மனைவிக்கு இவளைப்போல் புத்திசாலித்தனமாகப் பேசத் தெரியவில்லையே!’ என்ற சிறு ஏக்கம் எழும். உடனே அடக்கிவிடுவார்.

    “நான் எங்கம்மாவோட போயிடப்போறேன்,” என்றுவிட்டு, வேலைமாற்றம் வாங்கிக்கொண்டு வேதா போனபோது, `இவளுக்கு நம்மிடம் பிடித்தம் கிடையாதா!’ என்ற ஏமாற்றம் எழுந்தது.

    ஒரு வாரம் சென்றபின், வேதா தொலைபேசியில் அழைத்தாள். “பொழுதே போகலே,” என்றாள்.

    அப்படியே அவர்கள் தொடர்பு சில வருடங்கள் நீடித்தது. நோய்வாய்ப்பட்ட மனைவி கோகிலாவைப் பார்த்துக்கொள்வதைப்பற்றி தினகரன் விவரிக்க, ஆறுதலாக ஏதாவது கூறுவாள் வேதா.

    மனைவி இறந்தபின்னும் இப்படியே பேசியபோதுதான் தினகரனுக்கு அந்த எண்ணம் எழுந்தது.

    அவளை நேரில் சந்தித்தபோது, “நாம்ப ரெண்டுபேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா, வேதா மேடம்?” என்று கேட்டேவிட்டார்.

    அவள் வெட்கப்படுவாள், குனிந்த தலை நிமிராது என்றெல்லாம் யோசித்து வைத்திருந்தவருக்கு ஏமாற்றம்.

    “யோசிச்சுச் சொல்லட்டா?” என்று பதில் கேள்விதான் வந்தது.

    `வருகிற வெள்ளிக்கிழமை நான் வேதாவைக் கல்யாணம் பண்ணிக்கொள்ளப்போகிறேன்,’ என்று ஈ-மெயிலில் தெரிவித்ததோடு சரி. அதற்குப்பின் அப்பாவிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. அழைப்பெல்லாம் கிடையாது.

    “இந்த வயசிலே அப்பாவுக்கு இப்படிப் புத்தி போக வேண்டாம்!” பொறுமினான் எம்.லிங்கம்.

    “அறுபதாம் வயசில ரெண்டாவது கல்யாணம் நடக்காத அதிசயமா என்ன!” என்று அப்பாவுக்குப் பரிந்து பேசினான் அவனுடைய தம்பி எம்.தேவன். அண்ணன், தம்பி இருவருமே தம் பெயரின் முதல் எழுத்தான `மகா’வைச் சுருக்கி விட்டிருந்தார்கள்.

    “அப்படி ஒரு கல்யாணம் மொதல் சம்சாரத்தோட நடக்கிற சமாசாரமில்ல? இந்த மனுசரோ, எப்ப நம்ப அம்மா சாகப்போறாங்கன்னு காத்துக்கிட்டு, இப்படி ஒரு காரியத்தில எறங்கிட்டாரு! அம்மா இருந்த எடத்திலே இன்னொருத்தி!“

    புற்றுநோயால் அம்மா அவதிப்பட்டபோது அப்பாதானே கவனித்துக்கொண்டார்!

    `இந்த வீட்டிலே நிம்மதியே இல்லே!’ என்றுவிட்டு, மனைவி, இரு குழந்தைகளுடன் வேற்றூருக்கு வேலை மாற்றம் வாங்கிக்கொண்டு, தனிக்குடித்தனம் போனவனுக்கு இந்தக் கரிசனம் எப்படி வந்தது?

    “ஏண்டா, தேவா? அம்பது வயசுக்குமேல ஆனவளுக்கு குழந்தை பிறக்காது. இல்லே?” அண்ணன் சந்தேகத்தை வெளிப்படுத்தியபோது, தேவனுக்குச் சிரிப்பு வந்தது. அப்பாவின் சொந்த வீடு, வங்கியில் ரொக்கம்—இதற்கெல்லாம் பங்கு கேட்க இன்னொரு வாரிசு வந்துவிடப்போகிறதே என்ற பயம் இவனுக்கு!

    “வயசான காலத்திலே அப்பாவுக்கு பேச்சுத்துணைக்கு ஒருத்தர் வேண்டியிருக்குபோல!”

    “பேச ஆள் வேணுமானா, ஏதாவது கிளப்புக்குப் போறது!”

    அயல்நாட்டில் குடியுரிமையுடன் வேலை பார்த்துவந்த இளையவனுக்கு அலுப்புத்தட்டியது. “என்ன இருந்தாலும், வீட்டிலே ஒருத்தர் கூடவே இருக்கிறமாதிரி ஆகுமா? யாருமில்லாத வீடு `ஹோ’ன்னு இருக்கும். உள்ளே நூழையவே அலுப்பா இருக்கும். அதோட, தலைவலி, காய்ச்சலுன்னு வந்தா, `இப்போ தேவலியா?’ன்னு அனுசரணையா கேக்க..”. தன் சொந்த அனுபவத்தை வார்த்தைகளாக வடித்தான்.

    “அப்பாவை விட்டுக்குடுக்க மாட்டியே! எப்பவுமே நீதான் அவரோட செல்லப்பிள்ளை! ஒன்கூடப் பேச வந்தேன் பாரு!” வெறுப்புடன், தொலைபேசி இணைப்பைத் துண்டித்தான் லிங்கம்.

    கடந்த இரண்டு நாட்களாக குழம்பியிருந்த மனதிற்குச் சற்று ஆறுதல் அளிப்பான் என்று தம்பியை அழைத்தது தண்டம்.

    `யாரோ, எப்படியோ தொலையட்டும்!’ என்று, தொலைக்காட்சியை முடுக்கி, அதில் ஆழ்ந்துபோனான்.

    `மணப்பெண் மாதிரியா வந்திருக்கிறாள்!’ முகம் சுளித்தது. பண்டிகை நாட்களில் பட்டுப்புடவை உடுத்திக்கொண்டு, அவர் காலில் விழுந்து நமஸ்கரித்த கோகிலா மனதில் வந்துபோனாள்.

    “ரெடி?” என்ற வேதாவின் முகத்தில் ஆர்வமோ, துடிப்போ இல்லை. ஏதோ காரியத்தை முடிக்கும் அவசரம்தான் தெரிந்தது.

    கசங்கிய காட்டன் புடவை. எப்போதும்போல், கழுத்தில் ஒரு சிறு சங்கிலி. கையில் கடிகாரம்.  வளை இல்லை. என்ன நாகரீகமோ!

    அதற்குமேல் அவரால் சும்மா இருக்க முடியவில்லை. “அழகா, கல்யாணப்பொண்ணா லட்சணமா பட்டுப்புடவை, தங்க வளையலுன்னு நீ வரக்கூடாதா, வேதா?”

    `நீங்க மட்டும் ஜரிகைக்கரை போட்ட பட்டு வேஷ்டியிலேயா வந்திருக்கீங்க? பேண்ட்-சட்டைதானே! ஒங்க லட்சணத்துக்கு இது போதும்!’ வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக்கொண்டாள் வேதா.

    தான் எது சொன்னாலும், செய்தாலும் புன்னகையுடன் ஆமோதித்த நீண்டகால நண்பன் இல்லை இவர். `மனைவி என்றால் தனது ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டவள்’ என்று நம்பி நடக்கும் ஒரு சராசரி கணவர்.

    `ஏமாந்துவிட்டேன்!’ என்றெழுந்த எண்ணத்தை ஒரு பெருமூச்சுடன் வெளியேற்றிவிட்டு, அவருக்குப்பின் நடந்தாள் புதுமனைவி.

    Share
  • அரட்டைக் கச்சேரி (சிறுகதை)

    அரட்டைக் கச்சேரி (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    பெண்களிடம் ஒரு விசேஷம். `பிரச்னை’ என்று எதையாவது சொல்ல ஆரம்பித்த உடனேயே அதற்குத் தீர்வு காணும் வழிகளை எடுத்துக் கூறமாட்டார்கள். தீர்வு காணவா பிரச்னைகளைப் பிறரிடம் கூறுகிறோம்? ஒரு விஷயத்தையே பலரிடமும் பலமுறை பகிர்ந்துகொண்டால் ஏதோ ஆறுதல். அவ்வளவுதான்.

    பெண்களின் இந்த மனோபாவம்கூட ஆண்களுக்குப் புரிவதில்லை. மனைவியோ, பிற பெண்களோ அரைகுறையாக எதையாவது கூற ஆரம்பித்த உடனேயே அதை எப்படிச் சமாளிப்பது என்று லெக்சர் அடிக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

    அந்த இடைநிலைப் பள்ளியில் நாற்பது பேரில் இரண்டே இரண்டு ஆண்கள்தாம். அவர்களைப்பற்றி நமக்கென்ன! விடுங்கள்.

    ஆசிரியர்கள் அறையில் பெண்களின் குமுறல் ஒலித்துக்கொண்டே இருக்கும்.  அங்கிருந்த சுவர்களுக்கு வாயிருந்தால், கதறி அழும்.

    பிறரது வாழ்க்கையைப்பற்றித் தெரிந்துகொள்ள எல்லா ஆசிரியைகளும்  ஆர்வம் காட்டினார்கள். நாளைக்கே அவர்களுடைய பிரச்னைகளுக்கு அனுதாபம் காட்ட யாராவது வேண்டாமா? பத்து பேராவது வகுப்பிற்குப் போகாத நேரமெல்லாம் வாய் ஓயாது பேசினார்கள். அனுதினமும்.

    திங்கட்கிழமை

    “நீ ஒண்ணும் எனக்குப்புத்தி சொல்லவேண்டாம். நீதான் என்னை வளர்க்கலியே!” கோகிலாவின் குரல் கீச்சென்று ஒலித்தது. அவளுடைய மகள் அப்படித்தான் இரைந்திருப்பாளோ, என்னவோ!

    சிறுவயது முதல் பாட்டி வீட்டில் அருமை பெருமையாக வளர்ந்திருந்தாலும், பெற்றவள் தன்னைக் கைகழுவி விட்டதாகத்தான் தாரா நினைத்தாள். அந்த வருத்தம்தான் கோபமாக வெளிப்பட்டது.

    இடைநிலைப் பள்ளிக்கு வந்தபின், பெற்றோரிடம் திரும்ப வந்தது ஏதோ தண்டனைபோல்  இருந்தது அவளுக்கு. தான் எது செய்தாலும் பாராட்டிய பாட்டி, தாத்தா எங்கே, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடிக்கும் அம்மா எங்கே!

    `நீ ஒண்ணும் எனக்குப்புத்தி சொல்லவேண்டாம். நீதான் என்னை வளர்க்கலியே!’ என்று அழுகைக் குரலில் கத்தத்தான் அவளால் முடிந்தது.

    கோகிலா மகளைப் பற்றிய  அதே கதையைச் சக ஆசிரியைகளிடம் எத்தனையோ முறை சொல்லிவிட்டாள். அவர்களும் குறுக்கே பேசாமல் கேட்டுக்கொண்டார்கள்.

    “பாட்டி-தாத்தாகிட்ட வளர்ந்திருந்தா, அருமையாக இருந்திருப்பாங்க,” பொதுவாகக் கூறினாள் பூமா. “என் மகனுக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லே. வேலைக்காரி போட்டிருந்தேன், பிறந்ததிலிருந்தே அவனை வளர்க்க!”

    “ரொம்ப அடிச்சாளா?” கம்மிய குரலில் யாரோ கேட்டார்கள்.

    அவள் பதில் சொல்வதற்குள் இருவர் குறுக்கிட்டுப் பேசினார்கள்.

    “பிள்ளை பெத்து லீவு முடிஞ்சதும் நாம்ப வேலைக்கு வந்துடணும். வீட்டிலே குழந்தையைப் பாத்துக்க சொந்தக்காரங்க இல்லாட்டி என்ன செய்யறது?”

    “நாப்கின் மாத்தற வேலையை அடிக்கடி வைக்கிறதுன்னு ஒரு சின்னக் குழந்தையைக் கொன்னுட்டாளாமே ஒரு ராட்சசி! பேப்பரில பாத்தீங்கல்லே?”

    “கடவுள் புண்ணியத்திலே எங்க வீட்டிலே அப்படி எதுவும் நடக்கலே,” என்ற பூமாவின் குரலில் நிம்மதியோ, மகிழ்ச்சியோ ஒலிக்கவில்லை. “குழந்தையை அடித்தோ, திட்டியோ செஞ்சா வேலை போயிடும்னு பயம் அவளுக்கு. வீட்டுக்குள்ளே காமெரா போட்டிருந்தோமா! அதனால அவன் பெரியவன் ஆனதும்கூட என்ன தப்பு செஞ்சாலும் கண்டுக்கமாட்டா”.

    சிறிது மௌனம்.

    வேலைக்காரிகளிடம் வளர்ந்த பிள்ளைகளின் போக்கு எப்படி இருக்கும் என்பது அவர்கள் உத்தியோகத்தில் அறிந்ததுதான். இப்போது எல்லா மாணவ மாணவிகளும் அதனால்தானே யாருக்கும் அடங்காமல் இருந்தார்கள்!

    “அன்னிக்கு க்ளினிக்கில பாத்தேன். ஒரு ஆறு வயசுப் பையன் ஹாண்ட்ஃபோனில் என்னவோ விளையாடிக்கிட்டு இருந்தானா! அவங்கம்மா அதைப் பிடுங்கப் பாத்தப்போ அவ கையைக் கடிச்சுட்டான்!”

    `ஒன் பிள்ளையும் அப்படித்தானோ!’ என்ற ஏளனம் அந்தச் சமாசாரத்தில் தொக்கி இருந்தது.

    சண்டை ஆரம்பமாவதற்குள் மணி அடிக்கவே, அவர்கள் கலைந்தார்கள்.

    செவ்வாய்

    “தோளெல்லாம் ஒரே வலி!” முனகலுடன் அரட்டைக் கச்சேரி ஆரம்பித்தது.

    “என்ன ஆச்சு, லாய்?” அனுதாபத்தைவிட உண்மையை அறிந்துகொள்ளும் ஆர்வமே அக்கேள்வியில் தொக்கி இருந்தது.

    முதல் நாள் இரவு, கணவர் குடித்துவிட்டு, வீட்டு வாயிலிலிருந்த சாக்கடையில் விழுந்துவிட, நாலடி ஆழத்துக்குள் இறங்கி அவரைத் தன் தோளில் தாங்கியபடி மாடிவரை தூக்கிப் போனதை விவரித்தாள், தோளைப் பிடித்துவிட்டுக்கொண்டபடி, மிஸஸ் லாய் என்ற சீன ஆசிரியை.

    `நானாக இருந்தால், அந்தக் குடிகாரரை அப்படியே விட்டுத் தொலைத்திருப்பேன்!’ என்று தமக்குள் எழுந்த எண்ணத்தை யாரும் வெளியிடத் துணியவில்லை.

    “ஆண்கள் வளர்ந்துவிட்ட சிறுகுழந்தைகள்!” கசந்து வந்தது ஒரு குரல். “என் கணவர் எப்போதும் நண்பர்களுடன் கிளப்பில் குடித்துக்கொண்டு இருப்பார். அபூர்வமாக ஒருநாள் வீட்டில் தங்குவார். ஒரே இடத்தில் உட்கார்ந்துகொள்வார், எதையோ எதிர்பார்த்தபடி. அப்போது குழந்தைகள் அவரைக் கண்டுகொள்வதேயில்லை என்று ஆத்திரப்படுவார்”. அவள் அனுபவம் சிரிப்பில் முடிந்தது.

    “பசங்களை வெளியில கூட்டிட்டுப் போய், நாலு விஷயத்தைப் பத்திக் கலந்துபேசி – இப்படியெல்லாம் செஞ்சாத்தானே அவங்களுக்கு நம்பளை மதிச்சுப் பேசத் தோணும்!”

    “பெண் குழந்தைகள் ரொம்ப மோசம்!” என்றபடி மிஸஸ் கூ தன் கதையை ஆரம்பித்தாள். “நேத்து ராத்திரி என் மகளைப்பிரம்பால் அடிச்சேன். ராத்திரி பூராவும் `ஙொய் ஙொய்’னு அழுகை. சரியான நியூசன்ஸ். என் மகன் அப்படி இருந்ததே இல்லே. என்ன அடிச்சாலும் அழமாட்டான். சமர்த்து!”

    பதினைந்து வயதான மகனுக்குப் பிறகு, அல்லோபதி, அக்யூபங்க்சர் என்று பல சிகிச்சைகளுக்குப் பிறகு கடந்த வருடம் பிறந்தது! ஒரே வயதான பச்சைப் பாலகியைப் பிரம்பால் அடிப்பார்களா!

    இந்திய ஆசிரியைகள் அதிர்ச்சியுடன் எதுவும் பேசாதிருக்க, அது புரியாது, “பிரம்பால் அடிக்காத குழந்தை ஒழுங்கா வளராது,” என்று தன் வளர்ப்புமுறையைப் பாராட்டிக்கொண்டாள் மிஸஸ் கூ.

    `நாம் நல்ல தாயாக இருக்கிறோமா?’ என்ற கேள்வி ஒவ்வொரு பெண்ணின் மனத்திலும் எழ, அன்றைய கும்பல் கலைந்தது.

    புதன்

    “என் பொண்ணுக்கு மூணு வயசாகுது. நேத்து மத்தியானம் படத்துக்குக் கூட்டிப் போறதா இருந்தேன். `மழை வந்துடும். இல்லாட்டி வெயில் காயும். நம்ப காரை டிரைவரோட அனுப்பறேன்,’ அப்படின்னாரு ஹஸ்பண்ட்”. மூச்சு விட்டுக்கொண்டாள் நர்மதா.

    எல்லாரும் சுவாரசியமாகக் கேட்டபடி இருந்தார்கள், அவர்கள் முன்னால் வைத்திருந்த நூடுல்ஸ் ஆறியதைப் பொருட்படுத்தாது.

    “எப்பவும் காரிலேயே போனா, ஏழைபாழைங்க படற கஷ்டத்தை அவளுக்கு எப்படிப் புரிய வைக்கிறது? பஸ்ஸுக்காக வெயில்லே காத்துக்கிட்டு நிக்கறப்போ, `நான் பாவம்!’னு திரும்பத் திரும்பச் சொன்னா. `பாவம் இல்லே!’ன்னு நல்லா திட்டிட்டேன்”.

    “நீ ஒரு நல்ல அம்மா!” மிஸஸ் லாய் சிலாகிக்க, அதை ஆமோதித்து, எல்லாரும் தலையாட்டினார்கள் – வயிற்றெரிச்சலை மறைக்க ஒரு சிறு புன்னகையுடன்.

    வியாழன்

    “நேத்து எனக்கும், ரவிக்கும் ஒரே சண்டை,” ஆரம்பமே சூடு பிடித்தது. கணவன்-மனைவி சண்டை பூசலென்றாலே சுவாரசியம்தான்.

    “எதுக்கு?”

    “பின்னே என்ன? சமையல், வீட்டு வேலை, பசங்களுக்குப் பாடம் சொல்லிக் குடுக்கறது எல்லாம் என் தலையிலதான். புதன்கிழமை அவரோட முறை — குப்பையை வெளியே கொட்ட. அந்த ஒரு வேலைகூடச் செய்யாம டி.வி பாத்துக்கிட்டு இருந்தா? வந்த கோபத்திலே நல்லா கத்திட்டேன்”.

    “திரும்பக் கத்தினாரா?”

    “அதான் இல்லே. `இஸ்மயில் சொன்னான், இந்தப் பெண்களால எப்பவும் தொல்லைதான்’ அப்படின்னார், என்னை மட்டம் தட்டறதா நினைச்சுக்கிட்டு. `ரெண்டு பொண்டாட்டி கட்டினவனுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்’னு பதிலடி குடுத்தேன்!”

    அப்போது எழுந்த சிரிப்போசையில் சுவர்கள் நிமிர்ந்தன. `நாம்ப இப்படி பேசறமாதிரி, ஆம்பளைங்களும் நம்பளைப்பத்திப் பேசுவாங்களா?’ என்று அப்பெண்கள் மனத்தில் எழுந்த கேள்விக்கு விடையும் கிடைத்தது.

    Share
  • கல்யாணமே வேண்டாம்! (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    பல வருடங்களுக்குப்பின் அன்று சாயங்காலம்தான் அவளைப் பார்த்தேன். நாகரிகமான தோற்றம். ஆனால், முகத்தில் ஏதோ கோபம், இல்லை, வருத்தம். தெரிந்த முகமாக இருந்தது. ஆனால் உடனே பிடிபடவில்லை. ஏன்தான் வயதாகிவிட்டதோ என்ற அர்த்தமற்ற எரிச்சல் பிறந்தது.

    எப்போதும்போல் விளையாட்டு மைதானத்தில் பார்த்ததால், சற்று பொறுத்துத் தெளிவு பிறந்தது.

    நோர்லேலா! என் மகளின் பால்யத் தோழி.

    என்னைப் பார்த்தவுடனே அடையாளம் கண்டுகொண்டாள். “ஆன்ட்டி!” என்று கூவியபடி சிமெண்டு பெஞ்சில் என் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டாள்.

    என் மகள் சுந்தரியைப்பற்றி விசாரித்தாள்.

    “அதோ, ஊஞ்சல்ல ஒக்காந்து, சிவப்பு கவுன் போட்டிருக்கே, அவளோட பொண்ணுதான். இப்போ ரெண்டாவது பிரசவத்துக்கு வந்திருக்கா,” என்று தகவல் தெரிவித்துவிட்டு, “ஒனக்கு எத்தனை குழந்தைங்க?” என்று விசாரித்தேன்.

    “நான் அப்படிப்பட்ட பொண்ணு இல்லே,” என்றாள், சிரிக்காமல்.

    “என்னது?”

    “எனக்கு கல்யாணம் ஆகல,” என்று அலட்சியமாகச் சொன்னவள், “பண்ணிக்கவே போறதில்ல,” என்றாள் உறுதியாக.

    மேலே ஏதும் கேட்டுவிடப்போகிறேனோ என்று பயந்தவள்போல், , “சும்மா காத்தாட நடந்துவந்தேன். ஒங்களைப் பாத்ததில சந்தோஷம்,” என்றபடி எழுந்து நடந்தாள்.

    நான் மௌனமாக இருந்தேன்.

    “யாரு பாட்டி?” என்று விசாரித்தாள் பேத்தி.

    “ஒன்னைமாதிரி குட்டியா இருந்தப்போ, ஒங்கம்மாவோட ஃப்ரெண்ட்,” என்றேன்.

    அப்போது அச்சிறுமிகள் இருவரும் சேர்ந்து விளையாடினாலும், நட்பு இருக்கவில்லை. அவ்வளவு ஏன், நோர்லேலாவுக்கு எவருடனும் இணைந்து விளையாடக்கூடத் தெரியவில்லை.

    `நான்தான் ஃபர்ஸ்ட்  வந்தேம்மா. நோர்லேலா என்னை இடிச்சுத் தள்ளிட்டு, ` நான்தான் ஃபர்ஸ்ட்!’ அப்படின்னு பொய் சொல்றா!” அழுகைக்குரலில் சுந்தரி கூறியது உண்மைதான் என்று அவர்கள் விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கும் தெரிந்திருந்தது.

    “போனாப்போறா, பாவம்!” என்று சமாதானப்படுத்தினேன்.

    “பொய் சொல்றது தப்புதானேம்மா?” நான் சொல்லிக்கொடுத்த பாடத்தை எனக்கே புகட்டினாள் என் எட்டு வயதுப்பெண்.

    “அவகூட தினமும் வராளே ஆரிஸ், அவ நோர்லேலாவை ரொம்ப அடிக்கறா, பாவம்!” அதற்குமேல் என்னால் சொல்ல முடியவில்லை.

    நோர்லேலாவின் பெற்றோரை அங்கு எவரும் பார்த்தது கிடையாது. அந்த இந்தோனீசிய வேலைக்காரிதான் அவளுக்கு ஒரே துணை.

    ஒருமுறை, நோர்லேலா ஓடிவர, என்மேல் மோதிக்கொண்டாள். நான் புன்னகைத்தேன். பின்னால் வந்துகொண்டிருந்த ஆரிஸ் அவள் கையைப் பிடித்திழுத்து ஒரு வயதே நிரம்பிய அந்தக் குழந்தையின் முதுகில் அடிக்க ஆரம்பித்தாள்.

    “விடு, விடு,” என்று நான் அலறியபோது, “ஒங்களுக்குத் தெரியாது, ஆன்ட்டி. இவ ரொம்ப நாட்டி!” என்றாள். அடியை நிறுத்தவில்லை.

    இந்த வன்முறை அடுத்த பத்து வருடங்கள் தொடர்ந்தது. `நமக்கெதற்கு வம்பு!’ என்று என்னைப்போலவே பல தாய்மார்களும், பாட்டிகளும் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

    அதற்கும் முடிவு வந்தது.

    `வீட்டுக்குப் போகலாம், வா!’ என்று ஆரிஸ் அழைத்ததைச் சட்டைசெய்யாது நோர்லேலா விளையாடிக்கொண்டே இருக்க, `என்னையா அலட்சியம் செய்கிறாய்!’ என்று ஆத்திரத்துடன், அவள் முடியைக் கொத்தாகப் பிடித்து இழுத்தாள் ஆரிஸ். சிறுமியின் அலறல் மைதானம் முழுவதும் கேட்டது.

    ஐந்து வயதே ஆகியிருந்த சீ சூனை அவனைப் பார்த்துக்கொள்ளவென்று நியமிக்கப்பட்டிருந்தவள் `உப்புமூட்டை’ தூக்கிக்கொண்டு வருவாள், அருமையாக. இப்போது அவன் நோர்லேலாவின் நிர்கதியைப் பார்த்து, பெரிதாக அழ ஆரம்பித்தான்.

    ஒரு குழந்தைக்கு இருந்த மனிதாபிமானம்கூட நமக்கில்லையே என்று வெட்கமாகப்போயிற்று எனக்கு. இந்தக் கொடுமைக்கு எப்படி முடிவு கட்டுவது?

    சற்று இருட்டியதும், நோர்லேலாவின் வீட்டுக்குப் போய், அழைப்பு மணியை அழுத்தினேன்.

    “எஸ்?” கதவைத் திறந்தவளிடம், “நான் தினமும் பார்க்கில் உங்கள் மகளைப் பார்க்கிறேன். அந்தக் குழந்தையை வேலைக்காரி சித்திரவதை செய்கிறாள். உங்களிடம் சொல்லிவிட்டுப் போகலாம் என்றுதான்,” நான் முடிப்பதற்குள் உள்ளேயிருந்து வந்தவர் நோர்லேலாவின் தந்தையாக இருக்கவேண்டும். வயதானவராக தோற்றமளித்தார்.

    “என்ன விஷயம்?” என்று விசாரித்தவுடனே, “உள்ளே வாங்களேன்!” என்று உபசரித்தார்.

    “சும்மா பார்த்துட்டுப் போகலாம்னுதான் வந்தேன்,” என்றபடி நடையைக் கட்டினேன்.

    இவர்களிருவரையும் நான் பார்த்ததே இல்லையே என்று என் யோசனை போயிற்று. அதுதான் ஆயிரக்கணக்கில் சம்பளம் கொடுக்கிறோமே, இனி வேலைக்கு வந்தவள் பாடு என்று விட்டுவிட்டார்கள்!

    அடுத்த சில நாட்கள் நோர்லைலா விளையாட வரவில்லை. அவள் வந்தபோது, அப்பா உடன் வந்தார். என்னைப் பார்த்ததும், முகம் சிறுத்துப்போயிற்று.

    வாயை வைத்துக்கொண்டு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. “ஆரிஸ் வரலியா?”

    அவர் கையை வீசினார். “போயிட்டா!” குரலில் வெறுப்புடன் நிம்மதியும் கலந்து வந்தது.

    பெற்ற குழந்தையைச் சரியாகப் பராமரிக்கத் தெரியவில்லையே என்று பிறர் கேலி செய்யும் அளவுக்கு நடந்துகொண்டுவிட்டோமே என்ற அவமானம். விரைவில் என்னைக் கடந்துபோனார்.

    அதன்பின்னர் இருவரையுமே காணவில்லை. அப்பெண்ணை ஹாஸ்டலில் விட்டுவிட்டார்கள் என்று யாரோ சொன்னார்கள்.

    நோர்லேலா கூச்சல் போட்டபடி விளையாடும் குழந்தைகளைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்களில் ஏக்கம் என்று என் கற்பனை போயிற்று. அவள் என்று அப்படி மகிழ்ச்சியுடன் இருந்திருக்கிறாள்?

    நான் பேச்சை ஆரம்பித்தேன். “கல்யாணம்தான் வேண்டாங்கிறே. ஒரு குழந்தையை தத்து எடுத்துக்கலாமே!”

    “ஐயோ! வேண்டவே வேண்டாம். நான் வேலைக்குப்போறப்போ, எவகிட்டேயாவது விட்டுட்டுப் போகணும். அவ அடிச்சுக் கொல்வா!” சிறுவயதில் பட்ட துன்பங்கள் அவளை எவ்வளவு தூரம் காயப்படுத்தியிருக்கிறது!

    பிறகு, மெல்லிய குரலில் சொன்னாள்: “ஆன்ட்டி! அன்னிக்கு நீங்க மட்டும் எங்க வீடு தேடி வந்து, அந்த அம்மாகிட்ட நான் அனுபவிச்ச கொடுமையைப்பத்தி சொல்லியிருக்காட்டி, என்னைக் கொன்னே போட்டிருப்பா அந்தப் பழிகாரி!”

    அதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குப் புரியவில்லை. ஏன் பல வருடங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தீர்கள் எல்லாரும் என்கிறாளோ? உங்கள் குழந்தையை யாராவது படுத்தினால், பொங்கி எழமாட்டீர்களா என்கிறாளோ?

    “குழந்தைங்க பாரம்னு நினைக்கிறவங்க தத்து எடுத்துக்கக் கூடாது”. அவள் குரலில் ஏக்க இறக்கம் இல்லை. இயந்திரம் பேசுவதுபோல் இருந்தது.

    இவள் யாரைச் சொல்கிறாள்?

    அவளே விளக்கமும் அளித்தாள். “நான் யாரோ அனாதையாம். எங்கேயிருந்து பொறுக்கினாங்களோ! சாப்பாடு போட்டு, படிக்கவும் வெச்சா அவங்க கடமை முடிஞ்சுட்டதுன்னு நெனைச்சாங்க எங்க வீட்டிலே!” அவள் குரலில் அளப்பற்ற வெறுப்பு. “நான் அன்பா வளரலே. சின்ன வயசில எனக்குக் கிடைக்காததை இன்னொரு குழந்தைக்கு என்னால எப்படி ஆன்ட்டி குடுக்க முடியும்?”

    கண்கள் சொருகியிருந்தன. “எப்பவாவது, வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்தா நம்பகூட பேச ஒருத்தன் இல்லியேன்னு இருக்கும். ஆனா, அவனும் அடிக்க ஆரம்பிச்சா? எனக்கு வழிகாட்ட யாரும் இல்லியே! அதான் கல்யாணமும் வேண்டாம், குழந்தையும் வேண்டாம்னு இப்படியே இருக்கேன்!”

    சம்பந்தம் இல்லாமல், “வீட்டுக்கு வாயேன், லேலா. சுந்தரி ஒன்னைப் பாத்தா சந்தோஷப்படுவா!” என்று ஏதோ சொன்னேன். மனம் கனத்திருந்தது.

    Share
  • அம்மாவுக்குப் படையல் (சிறுகதை)

    அம்மாவுக்குப் படையல் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாகச் செய்ய ஒன்று இருந்தது. கைத்தொலைப்பேசி வேண்டாம், கணினியில்தான் படங்கள் பெரிதாகத் தெரியும் என்று யோசித்து, மேசைக்குமுன் உட்கார்ந்தாள் காஞ்சனா.

    அரைத்தூக்கத்தில் கணவர் ஏதோ முணுமுணுத்ததை அலட்சியம் செய்தாள்.

    `இன்று அம்மாவின் பத்தாவது நினைவுநாள். அதை ஒட்டி நான் படைத்தது!’ என்ற விளக்கத்துடன் பத்து விதமான வண்ண வண்ண உணவுப்பண்டங்கள் வெவ்வேறு அளவைக்கொண்ட பாத்திரங்களில்.  முதல்நாளையப் பதிவு.

    அவள் பார்வை அதன்கீழ் போயிற்று. உதடுகள் பெருமைச்சிரிப்பில் விரிந்தன. விதவிதமான விமரிசனங்கள். எழுதியவர்களுடைய குணாதிசயங்களும் அவளுக்குள் எழுந்தன.

    பார்த்தாலே நாவில் ஊறுகிறதே! – யாரோ சாப்பாட்டுப் பிரியர்.

    உங்களுக்குத்தான் எவ்வளவு பொறுமை! எத்தனை மணிநேரம் அடுப்பில் வெந்தீர்கள்? – சமைப்பதே தண்டனை என்று வெறுப்பவர்.

    அம்மாவைவிட மேலான வேறு தெய்வமில்லை இவ்வுலகில் – சினிமாவில் காட்டுவதெல்லாம் உண்மை என்று நம்பிவிடும் ஏமாளி.

    அடுத்ததைப் பார்த்ததும் சட்டென மனம் அதிர்ந்தது.

    அம்மாமேல் எத்தனை அன்பு வைத்திருந்தால் இப்படிக் கொண்டாடுவீர்கள்!

    சற்றுமுன் எழுந்த உற்சாகம் வடிந்தது.

    குற்ற உணர்ச்சியால்தான் இவ்வளவும் செய்தோமா?

    அதை உடனே மறுத்தாள்.

    பதின்ம வயதில் சற்று முன்னேபின்னேதான் இருப்பார்கள். தன்னைத் தன் போக்கில் விடாது, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருந்த அம்மாவுடன் ஓயாது சண்டை பிடித்துக்கொண்டிருந்ததில் என்ன தப்பு?

    அண்ணா ஊர்சுற்றிவிட்டு வந்தபோதெல்லாம் எதுவும் கேட்டாளா அந்த அம்மா? அவன் மட்டும் உயர்த்தியோ?

    கேட்டபோது, `என்ன இருந்தாலும் நீ ஒரு பொண்ணு!’ என்றுவிடுவாள்.

    `ஆண்களுக்கு நான் எந்த விதத்திலும் சளைத்தவளில்லை’ என்ற வீம்பு அப்போதுதான் எழுந்தது. இரவு நேரங்களில் `பார்ட்டி’ என்று கண்ட இடங்களுக்கு போக ஆரம்பித்தாள். பல தரப்பட்ட ஆண்களுடன் பழக்கம் ஏற்பட, வீட்டில் கிடைக்காத நிம்மதி வெளியிலாவது கிடைத்ததே என்ற நிறைவு ஏற்பட்டது.

    அம்மாவுடன் அப்பாவும் சேர்ந்துகொண்டார். அவள் பெயர் கெட்டுவிடுமாம். `அப்புறம் யார் உன்னைக் கல்யாணம் செய்துகொள்வார்கள்?’ என்று இரைந்தார்.

    `எனக்கே தேடிக்கத் தெரியும். இந்த வீட்டை விட்டுத் தொலையறேன்!’ என்று கத்திவிட்டு வெளியேறினாள்.

    எங்கு போவது என்ற குழப்பம் இருக்கவல்லை.

    அம்மாவுடன் சண்டை போட்டபோதெல்லாம் தன் தோழி ஆலிஸிடம் அதைப் பகிர்ந்துகொண்டிருக்கிறாள்.  படிக்கப் பிடிக்காது, ஒரு உத்தியோகத்தை தேடிக்கொண்டவள் ஆலிஸ். அவளுடைய பெற்றோர் கடல் கடந்து, வேறு நாட்டில்.

    அப்போதெல்லாம், `நான் தனியாத்தானே இருக்கேன். அம்மாகூட  இருக்கப் பிடிக்காட்டி, இங்கே வந்து இரேன்!’ என்று அபயகரம் நீட்டியவளே அவள்தானே!

    `செத்தாலும் அந்த வீட்டுக்குப் போகமாட்டேன்!’ என்றபடி நிர்க்கதியாக வந்து நின்று தோழியின் தோளில் கரம் போட்டு அணைத்துக்கொண்டாள் ஆலிஸ்.

    அப்பா இறந்த செய்தி கிடைத்தபோது, மரியாதைக்காக வீட்டுக்குப் போனாள் காஞ்சனா. அம்மா அவளைக் கண்டுகொள்ளவில்லை.

    முப்பது வயதில், `தனக்கு எல்லா விதத்திலும் ஈடு கொடுக்கக்கூடியவன் இவன்தான்!’ என்று தோன்றிப்போக, ஒருவனை மணந்தாள்.

    ’தறுதலை’ என்று தான் அஞ்சிய மகள் ஒருவாறாகச் சராசரி பெண்ணைப்போல் இல்லறத்தில் இணைந்துவிட்டாளே என்ற பூரிப்புடன், அம்மா கல்யாண வைபவத்தில் கலந்துகொண்டாள். `எனக்கு இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு!’ என்று பார்ப்பவரிடமெல்லாம் சொல்லி மகிழ்ந்தாள்.

    இரு குழந்தைகளையும் பெற்றபிறகு, `இனி அம்மா நம்மைக் கண்டிக்க என்ன இருக்கிறது!’ என்று அம்மாவைத் தன்னுடன் வந்து தங்கும்படி அழைத்தாள் காஞ்சனா, `தனியா இருக்கீங்களேம்மா!’ என்ற உபசார வார்த்தைகளுடன்.

    `இத்தனை வருஷம் தனியாத்தானே இருந்தேன்! அபார்ட்மெண்டில அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க இருக்காங்க. என்ன பயம்?’ என்று மறுத்துவிட்டாள் அம்மா.

    கடந்ததை அசை போட்டுக்கொண்டிருந்தாள் காஞ்சனா. தான் வற்புறுத்தி அழைத்தும், அம்மா ஏன் தன்னுடன் வரச் சம்மதிக்கவில்லை?

    `வயதான என்னைப் பார்த்துக்கொள்ளாது, எவளோ சிநேகிதிக்குச் சமைத்துப் போட்டுக்கொண்டிருந்தாயே!’ என்ற எண்ணமோ?

    பல வண்ணங்களில் தான் சமைத்து வைத்திருந்ததை அம்மா இனி சாப்பிட வரமாட்டாள் என்ற எண்ணம் உதிக்க, காஞ்சனா உரக்க அழுதாள்.

    தான் பெற்ற பெண்களும் தன்னைப்போலவே பெற்றவளைப் புரிந்துகொள்ளாது வதைப்பார்களோ என்ற பயமும் அதில் கலந்திருந்தது.

    Share
  • அறியாப் பருவத்திலே (சிறுகதை)

    அறியாப் பருவத்திலே (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    மணப்பெண்ணைப் பார்த்தபோது அதிர்ச்சியைவிட ஆனந்தம்தான் அதிகம் எழுந்தது ரமணனுக்கு.

    இவளுக்கு என்ன, இருபத்து நான்கு வயதிருக்குமா? கணக்குப் போட்டுப்பார்த்தால் சரியாக வந்தது.

    `கணக்கு’ என்றதுமே உமா ஞாபகம்தான் எழுந்தது.

    கண்டிப்பாக உமாவுக்குப் பிறந்தவளாகத்தான் இருக்கவேண்டும். அதே சாயல், அதே வெட்கங்கலந்த சிரிப்பு.

    அவனுடன் படித்த உமா படிப்பில் கெட்டிக்காரி. பாடத்தில் சந்தேகம் கேட்பதுபோல் அவளுடன் பழகியவன் அவளுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானான்.

    சிடுமூஞ்சி கணக்கு வாத்தியாரைப்போல் இல்லாது, பொறுமையாக விளக்கிவிட்டு, “நான் என்ன, ஒன்னோட டீச்சரா?” என்று சிரிப்பாள் உமா. வெட்கமும் பெருமையும் அதில் கலந்திருக்கும்.

    “சனிக்கிழமை என்கூட ஒரு இடத்துக்கு வர்றியா? என்று அவன் கெஞ்சலாகக் கேட்டபோது, அவள் அதிகம் யோசிக்கவில்லை.

    “எங்கேடா?” என்றுமட்டும் கேட்டாள்.

    “சொன்னாத்தான் வருவியா? அது ஒரு சர்ப்ரைஸ்! ஒனக்கு நிச்சயம் பிடிக்கும்,” என்று புதிர் போட்டுவிட்டு, “லைப்ரரின்னு வீட்டிலே சொல்லிட்டு வா!” என்று திட்டம்கூட வகுத்துக்கொடுத்தான்.

    “எங்கேடா?” மீண்டும் கேட்டாள்.

    “ராஜன் வீட்டுக்கு!” என்று மட்டும் தெரிவித்தான்.

    அவர்களுடன் இன்னும் நாலைந்துபேர் இருந்தார்கள். ஒன்றாகப் படித்தவர்கள்.

    “டி.வி பாக்கத்தான் என்னை வரச்சொன்னியா? இதுக்கு வீட்டிலேயே ஒக்காந்து படிச்சிருப்பேன்,” என்று அலுத்தவளிடம், “இது வேற மாதிரி,” என்று நமட்டுச்சிரிப்புடன் புதிர்போட்டான் ரமணன்.

    அவளுக்குப் பயம் வந்தது. “ராஜன்! ஒங்க வீட்டிலே பெரியவங்க யாரும் இல்லே?” என்று கேட்டாள்.

    “அப்பா வேலை விஷயமா வெளிநாட்டுக்குப் போயிருக்கார். அம்மாவும் கூடப்போயிருக்காங்க. வீட்டிலே நானும், அண்ணனும்தான். நல்ல காலம், அவனுக்கு இன்னிக்கு ஏதோ விளையாட்டுப்போட்டி! நாம்ப ஜாலியா படம் பாக்கலாம்!” பெரிய சிரிப்புடன் பதில் வந்தது.

    “நான் போறேன்,” என்று எழுந்தவளின் கையைப்பிடித்து இழுத்தான் ரமணன். “ஒனக்கும் சேர்த்துக் காசு குடுத்திருக்கேன் உமா. கொஞ்சம் பாரு. பிடிக்காட்டி போயிடலாம்”.

    அறையில் அசாத்திய மௌனம் நிலவியது. எல்லாம் படம் ஆரம்பிக்கும்வரைதான். அதன்பின் ஒரே கூச்சல், கும்மாளம்.

    படிப்பைத்தவிர வேறு எதையும் அறிந்திராத அந்த பதினான்கு வயதுப் பெண்ணுக்கு வெட்கமாக இருந்தது.

    `பெண்களை என்னமாக இழிவு படுத்துகிறார்கள்!’ என்று கோபமும் வந்தாலும், புதிய விஷயத்தை அறிந்துகொள்வதில் ஏற்பட்ட ஆர்வத்துடன் பார்த்தாள்.

    திரையில் வரும் பெண்ணாகவே காமத்துடன் தன்னைப் பார்க்கிறார்கள் நண்பர்கள் என்று புரிந்துகொண்டபோது நிலைமை முற்றியிருந்தது.

    அதற்கடுத்த வாரம் பள்ளியில், “ஸாரி உமா. இனிமே அப்படிப் பண்ணமாட்டேன்,” என்று ரமணன் மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.  “நடந்ததை மறந்துடு”.

    ஆனால், நடந்ததை மறக்கமுடியாதபடி விதி விளையாடியது.

    “யாருடி அவன்? நீ படிச்சு முன்னுக்கு வருவேன்னு பாத்தா, இப்படி கெட்டுப்போய் வந்து நிக்கறியே!” அப்பா குதித்தார்.

    இருபுறமும் போலீஸ் காவலுடன், தலையைக் குனிந்தபடி, ரமணன் நடந்தபோது பள்ளி முழுவதும் வேடிக்கை பார்த்தது. பின்னால், வருத்தமே உருவாக அவனுடைய விதவைத்தாய்.

    இளம் வயது அவனுக்குத் துணையாக இருந்தது. சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பினார்கள்.

    ராஜன்தான், `எனக்கென்ன பயம்? எங்கப்பா எனக்கு ஆதரவா இருக்காரு!’ என்று வீறாப்பாகப் பேசினாலும், ஈராண்டுகளாக இப்படி ஒரு தொழிலில் சாமர்த்தியமாகச் சம்பாதித்த தனக்கு உலை வைத்துவிட்டானே பாவி என்று குமுறினான்.

    `அந்தப் பொண்ணு `நோ! நோ!’ ன்னு கத்தினா. அவ கையையும், காலையும் ரெண்டு, ரெண்டு பேர் பிடிச்சுக்கிட்டு,” என்ற வர்ணனையுடன் வாக்குமூலம் அளித்தான்.

    வீடியோ கடைக்குப்போய், `ஸ், ஸ்’ என்று ரகசியக்குரல் கொடுக்க, மேசை அடியில் கொடுப்பார்கள் அப்படங்களை. அவன் நல்ல காலம், `அவங்க அந்த மாதிரி படம் பாக்கறப்போ ஒனக்கென்ன அங்கே வேலை?’ என்று யாரும் அவனைக் கேட்கவில்லை. போலீஸ் அதிகாரியின் பிள்ளையாயிற்றே!

    வியாபார நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்து, புதிய மனிதனாக வெளியே வந்த ரமணன் முதல் வேலையாக உமாவைத் தேடிப்போனான்.

    அவளிருந்த வீட்டில் யாரோ குடியிருந்தார்கள். எங்கு போய் தேடுவது என்ற குழப்பம்தான் எழுந்தது அவனுக்குள்.

    விரக்தியுடன், தானுண்டு, தன் கடை உண்டு என்று வாழ ஆரம்பித்தான்.

    ரமணனுடைய மினி மார்க்கெட்டில் வேலை செய்த பரதனுக்குக் கல்யாணமாம்.

    “எல்லாரும் ஒங்களைமாதிரி சன்யாசியா இருப்பாங்களா ஸார்?” என்று விளையாட்டாகக் கேட்டபடி பத்திரிகை கொடுத்தான் மாப்பிள்ளை.

    நானா சன்யாசி! நான் பிஞ்சிலேயே வெம்பிப்போனவண்டா!

    “என்னடா? லவ்வா?”

    வெட்கப்பட்டான். “அதெல்லாம் இல்ல ஸார். அனாதை ஆசிரமத்திலே வளர்ந்த பொண்ணு. பஸ் ஸ்டாப்பில பாத்தேன். பிடிச்சுப்போச்சு”.

    “அப்போ அது லவ்தான்!” தனக்கும் மீண்டும் கலகலப்பு வந்துவிட்டதே என்ற ஆச்சரியம் எழுந்தது ரமணனுக்கு.

    மணவறையில் அமர்ந்த பெண்ணைப் பார்த்ததும், அவன் மனம் ஆடிப்போயிற்று.

    இவளா? இவளா அனாதை?

    அப்பன் நானிருக்கிறேன்.

    ஆனால், அதை உரக்கச் சொல்லமுடியுமா?

    பிறந்ததுமே, `வேண்டாம்!’ என்று உன்னை உதறிவிட்டுப் போய்விட்டாளா உன் தாய்? ஆத்திரம் எழுந்தது.

    `பாவம், சிறு பெண்! அவள் வேறு என்ன செய்திருக்க முடியும்?’ என்று மூளை தர்க்கம் செய்தது.

    நான் செய்த தவற்றுக்கு இப்பெண்கள் இருவரும் பலி!

    “மொதல்லே முதலாளி காலிலே விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கலாம், வா!”

    கூச்சத்துடன் காலை பின்னுக்கு இழுத்துக்கொண்டான் ரமணன்.  “நல்லா இருங்க!” என்று வாழ்த்தியபோது, குரல் தழுதழுத்தது.

    தனக்கு நாதியில்லாமல் போய்விட்டதே என்ற கவலை இனி இல்லை. கடையை பரதனுக்குக் கொடுப்பதுதான் தான் செய்யக்கூடிய பிராயச்சித்தம். இனியாவது மகள் செல்வச்செழிப்புடன் வாழ்வாள்.

    தன்னைப்போல் தனிமரமாக இல்லாது, எங்கோ குடும்பம், குழந்தைகள் என்றிருப்பாள் உமா. அந்த எண்ணமே மகிழ்ச்சி அளித்தது.

    “ஸார் முகத்திலே இன்னிக்குத்தான் சிரிப்பைப் பாக்கறேன்!” என்று மகிழ்ச்சியுடன் புதுமனைவியிடம் கூறினான் பரதன்.

    அது நிலைக்காது என்று அப்போது எவரும் நினைக்கவில்லை.

    ஒரு வாரத்திற்குப்பின். “ஒங்க மொதலாளி நீங்க நினைக்கிறமாதிரி நல்லவரில்லே. என்னை வெறிச்சு வெறிச்சுப் பாக்கறாருங்க. நாம்ப வேற எங்கேயாச்சும் போயிடலாம். ஒங்களுக்கு இந்த வேலை வேணாம்!” என்று கெஞ்சலும் பயமுமாகக் கூறியபோது, மனைவியின் விருப்பத்திற்கு அடிபணிந்தவனாக, “நானும் கவனிச்சுட்டுத்தான் வரேன். காலாகாலத்திலே கல்யாணம் கட்டாட்டி இப்படித்தான்!” என்று அந்த பிரச்னைக்கு முடிவு கட்டினான் பரதன்.

    Share
  • அள்ளிக் கொடுத்தவன் (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    `எவன் எவனுக்கோ பேரும் புகழும் கிடைக்குது!’ கையிலிருந்த தொலைபேசியை சோபாவின் பக்கத்தில் எறிந்தார் பழனியப்பன். அவருக்கு எழுந்த எரிச்சலில் தூர வீசியிருக்கலாம்தான். ஆனால் நஷ்டம் தனக்குத்தானே என்ற விவேகம் அவருக்கு இருந்தது.

    யாரோ நடிகனாம். அதுவும் ஆரம்ப கால நடிகன். ஆனால் பிழைக்கத் தெரிந்தவன். இல்லாவிட்டால், அவனுடைய அற்ப சொற்ப வருமானத்தில் பெரும்பகுதியை தருமத்திற்குக் கொடுத்திருப்பானா! அதையும் நான்கு பதிவுகளில் — பெரிய போட்டோவுடன் — முகநூலில் போடச் செய்திருப்பானா?

    எல்லாம் அரசியலில் நுழையச் செய்கிற சதித்திட்டம்!

    தானும்தான் நாற்பது வருடங்களாக இதே துறையில் இருக்கிறோம். இந்த யுக்தி தோன்றாமல் போய்விட்டதே!

    பழனியப்பன் உடனே காரியத்தில் இறங்கினார். ஏதாவது ஓர் அனாதை ஆசிரமத்துக்குப் போய், அங்குள்ள குழந்தைகளுக்கு ஐந்தோ, பத்தோ கொடுப்பது என்று தீர்மானித்தார். என்ன, ஆயிரம் வெள்ளி செலவாகுமா?

    அது போதாது. பத்தாயிரமாவது கொடுத்தால்தான் பெயர் வரும். சற்று யோசித்து, பாலஸ்தீனத்தில் போரினால் அவதிப்படுகிறவர்களுக்கு எவ்வளவு அள்ளிக் கொடுத்தாலும் போதாது. தன் தர்ம குணத்தைப் பறைசாற்ற நல்ல வழி அதுதான் என்று பலவகையாக யோசித்து, காசோலையில் எழுத ஆரம்பித்தார்.

    அவர் தோள்வழியே எட்டிப்பார்த்த மனைவி, “எதுக்குங்க இவ்வளவு காசு?” என்று வாயைப் பிளந்தாள்.

    கோயிலில் தட்சணையாக ஒரு வெள்ளி போடுவதே அதிகம் என்று அவளைக் கண்டித்திருக்கிறார். “சாமிதான் நமக்குக் குடுக்குது. அது கடனா,  நாம்ப திருப்பிக்குடுக்கறதுக்கு?” என்று அவர் சொல்லியதும் அவளுக்கு நியாயமாகத்தான் பட்டது.

    இப்போது தன் காசு எங்கே போகிறது என்பதை விளக்கிவிட்டு, “அவங்க நம்ப இனம் இல்லே.  இப்படியெல்லாம் ஏதாச்சும் செஞ்சாத்தான் முன்னுக்கு வரமுடியும். நாளைக்கே, `மந்திரி பொண்டாட்டி!’ அப்படின்னு நாலு பேர் வாயைப் பிளந்து, ஒன்னைக் கையெடுத்துக் கும்பிடுவாங்க, பாரு!”

    தான் என்ன, பிற ஆண்களைப்போல் ஊருக்கு ஒரு சின்ன வீடு வைத்திருக்கிறோமா? மனைவியே அழகாக, மக்காகத்தானே இருக்கிறாள் என்ற பெருமை கலந்த திருப்தி அவருக்கு. தன் நல்ல குணத்துக்கு கண்டிப்பாக அரசியலில் முன்னுக்கு வந்துவிடலாம்.

    தன் காரியதரிசியை அழைத்தார். “புத்தாண்டு வருதில்ல? அதுக்கு ஏதாவது அனாதை ஆசிரமத்துக்கு நான் போய் நன்கொடை குடுக்க ஏற்பாடு பண்ணு”.

    “அதுக்கு இன்னும் ரெண்டு வாரம் இருக்குங்களே! நாலே நாள்லே கிறிஸ்துமஸ் வருது!”

    “அப்போ சரி. அப்படியே இதையும் அனுப்பிடு!” என்று, காசோலையை அவன் கையில் கொடுத்தார்.  உள்ளூர் முகவரிதான். போரினால் பொருளையும் நாட்டையும் இழந்து திண்டாடுகிறவர்களுக்கு அளிக்க யாரோ புண்ணியவான் நிதி திரட்டுகிறான்.

    அனாதைக் குழந்தைகள் ஒவ்வொருவராக வரிசையில் வர, பழனியப்பன் போலிப்புன்னகையுடன் அவர்கள் கையில் பத்து வெள்ளியைக் கொடுக்க, காமராக்கள் இயங்கின.

    அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை, அவர்களைப் பார்த்துக்கொள்வதற்கென நியமிக்கப்பட்டிருந்த ஆயா உடனே அவர்களிடமிருந்து அதைப் பிடுங்கிக்கொள்வாள் என்று.

    “என்னோடது!” என்று ஒரு சிறுவன் தப்பித்து ஓடப்பார்த்தான். அவளும் விடாது துரத்தினாள்.

    கிரீச்!

    திரும்பிப் பார்த்துவிட்டு, “ஏதோ விபத்து, ஸார்,” என்று கூடவே இருந்த காரியதரிசி கூறினார்.

    “இதெல்லாம் போலீஸ் விவகாரம். நாம்ப மாட்டிக்கப்படாது! வந்த வேலை முடிஞ்சுடுச்சில்ல!”

    அப்போது அவருக்குத் தெரியவில்லை அவர் கொடுத்திருந்த பத்து வெள்ளியைப் பத்திரப்படுத்துவதற்காக நடுத்தெருவில் ஓடி, விரைந்து வந்த வாகனச் சக்கரத்தில் மாட்டி உயிரை இழந்தான் ஒரு சிறுவன் என்று.

    மேலும் இரு தினங்கள் கழிந்தன. தினசரியைப் புரட்டியவருக்கு அதிர்ச்சி.

    `போரினால் பொருளையும் நாட்டையும் இழந்து திண்டாடுகிறவர்களுக்கு அளிக்க நிதி அளியுங்கள்!’ என்று லட்சக்கணக்கில் பணம் சேர்த்து, அதைத் தங்களுக்குள் பங்கு போட்டுக்கொண்ட பத்து நபர்களின் புகைப்படம்!

    குற்றம் செய்யும்போது அவமானம் இல்லை, பிடிபட்டால்தான் கேவலம் என்ற உண்மையை வெளிக்காட்டுவதுபோல், எல்லாரும் குனிந்த தலையுடன் அமர்ந்திருந்தார்கள்.

    `இது நல்லவனுக்குக் காலமில்லே!’ என்று உரக்கவே கூறினார் பழனியப்பன்.

    Share
  • பூப்பெய்தும் பருவம் | விழிப்புணர்வு ஊட்டுவது எப்படி?

    பூப்பெய்தும் பருவம் | விழிப்புணர்வு ஊட்டுவது எப்படி?

    பூப்பெய்துவது குறித்த விழிப்புணர்வைச் சிறுமிகளுக்கு வழங்க வேண்டிய தேவை உள்ளது. இது குறித்த விவரங்களை அவர்களுக்கு யார் வழங்குவது சிறந்தது? அம்மாவா? ஆசிரியரா? எப்படி வழங்குவது? என்பது சற்றே சிக்கலான ஒன்று. இந்தக் கல்வியை எவ்வாறு எளிமையாக வழங்கலாம்? மலேசியாவில் வசிக்கும் எழுத்தாளர் நிர்மலா ராகவன் வழங்கும் ஆலோசனைகள் இதோ.

     

    Share
  • சிரிக்கச் சிரிக்கச் சில சிந்தனைகள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    சிரிக்கச் சிரிக்கச் சில சிந்தனைகள் | நிர்மலா ராகவன் நேர்காணல்

    மலேசிய எழுத்தாளர் நிர்மலா ராகவன் அவர்களின் சிரிக்கச் சிரிக்கச் சில சிந்தனைகள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : https://youtube.com/@Annakannantimes)

    Share