Tag: மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

  • மாசி மகத்தை மனதில் நினைப்போம் !

    மாசி மகத்தை மனதில் நினைப்போம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    நதி நீராடுதல் நலனே நல்கும்
    அதனை முன்னோர் அவசிய மாக்கினார்
    ஒவ்வொரு தினமும் உன்னத மென்று
    உள்ள மெண்ணி இணைத்தார் வாழ்வில்

    உள்ளத் தூய்மை உடலில் தூய்மை
    தெள்ளத் தெளிவுடன் தேர்ந்தார் முன்னோர்
    நீரால் உடலில் தூய்மை நிறையும்
    நேர்மையால் உளத்தில் தூய்மை நிலைக்கும்

    உடலில் தூய்மை உளத்தில் தூய்மை
    தருவதே சமயத்தின் நோக்கே ஆகும்
    இரண்டும் தூய்மை எய்திடும் நிலையில்
    இறையின் நினைப்பு இதயத்தில் அமரும்

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதமும்
    ஒவ்வொரு பொழுதும் உன்னதம் ஆகும்
    உன்னதக் கருவை உட்கரு வாக்கி
    உயர்பரம் பொருளை உணர்ந்திடச் செய்தார்

    இறையினைத் தேடி ஓடவே வேண்டாம்
    இயற்கையை இறையாய் இருப்பதே தத்துவம்
    நீரும் இயற்கை நெருப்பும் இயற்கை
    இரண்டு மாகி இருக்கிறான் இறைவன்

    இருளிலும் இருப்பான் ஒளியிலும் இருப்பான்
    இறுதியும் தொடக்கமும் இல்லான் இறைவன்
    இறைவனைக் கண்டிட ஏங்கியே நிற்கிறோம்
    ஏக்கத்தைப் போக்கிட வழிகளைத் தேர்கிறோம்

    திருநாள் பெருநாள் தேடிடும் மார்க்கமாய்
    பக்குவம் பேணிக் கைக்கொண்டு வருகிறோம்
    மாசியில் மகமாய் வருகின்ற திருநாள்
    மாண்புடை மகத்துவம் கொண்ட நன்னாளே

    சைவம் வைணவம் இணையும் வகையில்
    மாசி மகமும் ஆகியே இருக்கு
    சிவனும் இருப்பார் முருகனும் இருப்பார்
    திருமால் இருப்பார் சிவசக்தியும் இருப்பார்

    இட்ட  பெயர்கள் பற்பல வாகினும்
    எல்லாம் இறையே எல்லாம் உயர்வே
    உயர்வாம் இறையை மனமதில் எண்ணி
    நதிநீராடல் மாசி மகத்தின் மகத்துவமாகும்

    மகத்துடன் இணையும் மாசிப் பெளர்ணமி
    மகத்துவம் மிக்கது என்பது தத்துவம்
    புனித நீராடுதல் மகத்துவம் என்பதால்
    மாசி மகத்துடன் இணைத்ததை வியப்போம் !

    Share
  • உவேசா உயிர் மூச்சு தமிழே !

    உவேசா உயிர் மூச்சு தமிழே !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    உத்தம தானபுரம் ஈன்றிட்ட முத்து
    உவேசா என்றுமே தமிழுக்குச் சொத்து
    தமிழ் அன்னை தவமைந்தன் அவரே
    தமிழ் உலகில் வாழுகிறார் தமிழாய்

    ஆங்கிலத்தை வட  மொழியைப்  பாரா
    அன்னைத் தமிழ் அகமேந்தி நின்றார்
    தூங்காமல் தமிழ் படித்துச் சுவைத்தார்
    சுவைத் தனைத்தும் சொர்க்கமாய் கண்டார்

    நல்ல தமிழ் ஆசானைக் கண்டார்
    எல்லை இல்லா இன்பத்தை அடைந்தார்
    கற்பவைகள் தேர்ந் தெடுத்துக் கற்றார்
    கற்றபடி நடந்து அவரும் உயர்ந்தார்

    நாம் படிக்கும் அத்தனையும் ஏடாய்
    வீடெல்லாம் இருந்ததை நாம் அறியோம்
    ஏடு தேடி ஊரெல்லாம் ஓடி
    வீடிருக்கும் ஏடு கண்டு வியந்தார்

    எங்கள் தமிழ் அத்தனையும் ஏட்டில்
    தங்கியே இருந்ததை நாம் உணர்ந்தால்
    உவேசா செய்த பணி உணர்வோம்
    உயிர் கொடுத்து மீட்டார் தமிழனைத்தும்

    கட்டை வண்டி கைகொடுக்க அவரும்
    காடு மேடு சென்றலைந்து திரிந்தார்
    எத்தனையே தமிழ் ஏட்டைக் கண்டார்
    எடுத் தெடுத்து கையெடுத்து அணைத்தார்

    ஏடு தேடி சென்றபோது எரித்தார்
    ஓடு கின்ற ஆற்றினிலே விட்டார்
    பாடு பட்டு அத்தனையும் தடுத்தார்
    நாம் படிப்பதற்கு நூலாக்கித் தந்தார்

    சங்கத் தமிழ் தமிழனது சொத்து
    எங்கள் சுவாமிநாதன் மீட்டாரே நினைப்போம்
    உவேசா என்று சொன்னால் உழைப்போ
    உவேசா உயிர் மூச்சு தமிழே !

    Share
  • தேடுவார் தேடினால் தெரிவான் இறைவன் !

    தேடுவார் தேடினால் தெரிவான் இறைவன் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    ஆதியு மில்லா அந்தமு மில்லா
    சோதியாய் சுடராய் இருப்பது இறையே
    வாதிட முடியா வண்ணமா யிருப்பது
    ஆதியா யிருக்கும் அரும் பொருளாகும்

    ஆணவ மிருப்பார் காணவு மாட்டா
    அஞ்ஞான மில்லா மெஞ்ஞானப் பொருளே
    வாய்மையும் தூய்மையும் வாய்த்த நற்பொருளே
    விண்ணாய் மண்ணாய் வியாபிக்கும் பொருளே

    அப்பொருள் சிவனே அதுவே முதலே
    எப்பொரு ளுள்ளும் இருப்பது மதுவே
    நிற்பதும் நடப்பதும் நினைத்திடு மனைத்தும்
    நிறைந்திடு பொருளாய் இருப்பது சிவமே

    சிவனை நினைவார் சிந்தை சிறக்கும்
    சிந்தை சிறந்தால் சிவனே தெரிவார்
    சிவனை நினைக்கச் சிவ ராத்திரியே
    சிறப்புடை நாளாய் அமைந்துமே இருக்கு

    புராணக் கதைகளைத் புறந்தள்ள வேண்டாம்
    புத்தியைப் புகட்டும் அத்தனை கருக்கள்
    விளங்கா உண்மையை விளக்கிட வந்த
    விளக்கே அவையென விளங்கினால் நலனே

    அறிவியல் அனைத்தும் அமைந்தது சமயம்
    அஞ்ஞான நிலையில் விளங்குதல் அரிது
    இறையின் தத்துவம் இயற்பியல் தத்துவம்
    எல்லாம் சிவ ராத்திரி மகத்துவம்

    மனத்தை ஒடுக்கினால் மர்மம் விலகும்
    மர்மம் விலக வைப்பதே நோன்பு
    பரம் பொருளாகிய சிவனைப் பரவி
    பக்தியால் நோற்றால் பக்குவம் கிடைக்கும்

    மாலொடு அயனும் அடிமுடி தேடிய
    கதையைக் கருத்தில் இருத்திட வேண்டும்
    அடிமுடி காணா அலைந்ததன் காரணம்
    அகத்தை என்பதே அடிப்படை அன்றோ

    தேடுவார் தேடினால் தெரிவான் இறைவன்
    தெளிவுடன் இருந்தால் தரிசனம் தருவான்
    இதுவே  சிவனின் ராத்திரி தத்துவம்
    தனித்து விழித்து பசியுடன் இருப்போம்

    நம்பிக் கைவைத்தால் நல்லதே கிடைக்கும்
    நம்பிக்கை யென்பதே நல்லதோர் மந்திரம்
    நமச்சிவாய நமைக் காக்கும் மந்திரம்
    சொல்லுவோம் மந்திரம் வெல்லுவோம் பகையினை !

    Share
  • ஊர் உவக்கும் பண்பு!

    ஊர் உவக்கும் பண்பு!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    கடல் அலைகள் ஆர்ப்பரித்துக்
    கரை தொட்டு மீளும்
    மனதி லெழும் நினைவுகளும்
    மறு படியும் மீளும்

    வான் பறக்கும் பறவைகளும்
    மண் தொட்டு நிற்கும்
    மனம் இருக்கும் சுமையெல்லாம்
    மண் ஏற்று நிற்கும்

    தேன் எடுக்கும் வண்டெல்லாம்
    திசை எங்கும் திரியும்
    தெளிவு பெறா நிலையினிலே
    தேடுகிறார் பல பேர்

    ஊர் நடுவே பழுத்தமரம்
    ஒரு பேதம் காட்டா
    பேர் பெற்றார் என்பார்கள்
    பின் பற்றார் பண்பை

    நீர் கொடுக்கும் மழையே
    பார் பெற்ற வரமே
    ஊர் உவக்கும் பண்பே
    உயர் மனிதப் பிறப்பே

    Share
  • பார் வியக்க வாழ்வோம்  !

    பார் வியக்க வாழ்வோம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    பெரு வெள்ளம் வந்தால்
    பெரு அணையும் உடையும்
    பெரு ஆசை வந்தால்
    பெரு வாழ்வு சிதையும்

    பசி வயிறு மிகுந்தால்
    வறுமை தலை விரிக்கும்
    வறுமை தலை விரித்தால்
    வாடி விடும் உலகு

    பொய் ஆட்சி செய்தால்
    மெய் மயங்கி நிற்கும்
    மெய் மயங்கி நின்றால்
    பொய் எழும்பி ஆடும்

    பொய் ஆடி நின்றால்
    மெய் விழிக்க நினைக்கும்
    மெய் விழிக்கும் வேளை
    வெளிச்சம் அங்கே விரியும்

    கண் கருணை இழந்தால்
    மண் சிறக்க மாட்டா
    மண் சிறக்க வேண்டில்
    மனம் சிறக்க வேண்டும்

    கல்வி எனும் பயிரை
    கிள்ளி விடல் கூடா
    கல்வி எனும் சொத்து
    எழு பிறப்பும் இருக்கும்

    பல நூற்கள் படிப்போம்
    படித்த படி நடப்போம்
    பகுத் தறிவு பெறுவோம்
    பார் வியக்க வாழ்வோம்  !

    Share
  • இருக்கிறார் கடவுள் என்பதே தத்துவம்  !

    இருக்கிறார் கடவுள் என்பதே தத்துவம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மண்ணும் கடவுள் மரமும் கடவுள்
    நீரும் கடவுள் நெருப்பும் கடவுள்
    ஊர்கள் தோறும் பற்பல பெயரில்
    உருவம் பெற்று கடவுள் திகழ்கிறார்

    ஏகன் ஆகி இருப்பார் கடவுள்
    எங்கும் நிறைந்தும் இருப்பார் கடவுள்
    தாபங் கொண்டு தேடுவார் கண்ணில்
    தரிசனம் கடவுள் கொடுப்பார் என்பர்

    சமயச் சண்டையில் இருக்கார் கடவுள்
    சாதிச் சண்டையில் இருக்கார் கடவுள்
    இமயம் இருப்பார் கடவுள் என்கிறார்
    இறைவன் இல்லா இடமே இல்லை

    கடவுளை நம்பாச் சமயமும் உண்டு
    கடவுளே இல்லை என்பாரும்  உண்டு
    நம்பினார் நம்பாதார் யாவர்க்கும் என்றும்
    நல்லதை நல்குவார் கடவுளாய் தெரிவார்

    உருவாய் இருப்பார் அருவாய் இருப்பார்
    ஒருவரும் நினையா உருவமாய் ஒளிர்வார்
    அருளாய் இருப்பார் அன்பாய் இருப்பார்
    அனைத்தும் ஆகி இருப்பார் ஆண்டவன்

    கற்பனை யாகக் கடவுள் இருக்கிறார்
    கற்சிலை யாகக் கடவுள் இருக்கிறார்
    இத்தரை இருப்பார் எண்ணு மனைத்திலும்
    இருக்கிறார் கடவுள் என்பதே தத்துவம்  !

    Share
  • பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்!

    பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மார்கழி மாதம் மாண்புடை மாதம்
    மாதவன் சிவனை வாழ்த்திடும் மாதம்
    கோதைத் தமிழும் வாசகர் தமிழும்
    இறையின் தத்துவம் இயம்பிடும் மாதம்

    இறையின் தத்துவம் இயம்பிடும் வகையில்
    மாதங்கள் அனைத்தையும் வைத்தனர் முன்னோர்
    தையில் தொடங்கி மார்கழி வரைக்கும்
    தத்துவம் சமயம் வைத்தனர் முன்னோர்

    மார்கழி மகத்துவம் தொடரும் வகையில்
    தையில் பொங்கல் தைப்பூசத் திருநாள்
    ஆன்மீகம் அறிவியல் அனைத்தும் அளிக்கும்
    அற்புத நாளாய் அமைவது சிறப்பே

    உலக சிருஷ்டி தொடங்கிய நாளாய்
    அமைவதே தைப் பூசத் திருநாள்
    சக்தியும் சிவனும் ஐக்கிய மாகும்
    முக்கியம் மிக்கதும் இத் திருநாளே

    நீரும் சிவனே நெருப்பும் சிவனே
    மண்ணும் சிவனே விண்ணும் சிவனே
    சிவனின் நினைப்பால் வந்தவன் கந்தன்
    கந்தனைத் தந்ததும் தைப்பூச நன்னாள்

    கந்தனின் கையில் வேலினைக் கொடுத்து
    வந்திடு வினைகளைப் போக்கிடும் வகையில்
    செந் திருவான சக்தியின் செயலும்
    அமைந்த நன்னாளே தைப்பூசத் திருநாள்

    காவடி எடுப்பார் கந்தனின் சன்னதி
    கந்தனை எண்ணியே சன்னதி குவிவார்
    தைப்பூசத் திருநாள் கந்தனின் பெருநாள்
    எண்ணியே எண்ணியே அடியவர் பரவுவார்

    நல்லன அனைத்தும் தொடங்கிடும் நாளாய்
    தைப்பூசத் திருநாள் அமைவதே முக்கியம்
    ஏடு தொடக்குவார் காதும் குத்துவார்
    இறை நினைப்புடனே எல்லாம் தொடங்குவார்

    பூசத் திருநாள் பொலிவுடைத் திருநாள்
    பொங்கலை  அடுத்து வந்திடும் பெருநாள்
    பக்தியை விதைக்கும் பக்குவத் திருநாள்
    இத்தரை சிறக்க மலர்ந்திடும் பெருநாள் !

    Share
  • கண்ணப்பன் நிலையைக் கணக்கிடல் அரிது !

    கண்ணப்பன் நிலையைக் கணக்கிடல் அரிது !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    சேக்கிழார் பெருமான் செப்பிய கதையில்
    மாக்கதை யாக மனமதில் பதிவது
    கண்ணினை அப்பிய கண்ணப்பன் கதையே
    எண்ணிட  எண்ணிட வியப்பாய் விரியுது

    நடக்குமா என்று கேட்டிட வைக்கும்
    நம்பவே இயலா கண்ணப்பன் கதையே
    படித்திடும் தோறும் பதறுதே நெஞ்சம்
    கண்ணைப் பிடுங்கிட எண்ணிய காரியம்

    வெட்டுக் குத்து ரத்தம் இறைச்சி
    பார்த்துப் பழகிய வேடுவர் வாழ்க்கை
    அந்த வாழ்க்கையை பற்றியே வாழ்ந்தவன்
    பக்தி வலைக்குள் புகுந்தது வியப்பே

    கொல்வதும் தின்பதும் கொண்டாடிக் களிப்பதும்
    நல்லது என்றுமே நாளுமே வாழ்ந்தவர்
    வாழ்ந்தவர் மரபில் வந்தவன் கண்ணப்பன்
    எப்படி மாறினான் என்பதே அதிசயம்

    கற்றவன் அல்ல தேர்ந்தவன் அல்லன்
    அறமும் அறியான் அஹிம்சையும் அறியான்
    ஆனால் அவனுள் ஏதோ இருந்தது
    அதுவே அவனின் அன்பாய் மலர்ந்தது

    கோவிலும் தெரியான் சாமியின் தெரியான்
    சடங்கு மறியான் சாத்திர மறியான்
    பக்தி ஊற்று பீறிட்டு எழுந்தது
    பரமனின் முன்னே தன்னையே மறந்தான்

    சுவைத்துச் சுவைத்து இறைச்சியைப் படைத்தான்
    வாயுடை நீரால் மஞ்சனம் செய்தான்
    சூதும் அறியான் சூழ்ச்சியும் தெரியான்
    தூய மனத்துடன் அனைத்துமே யாற்றினான்

    கண்ணைப் பிடிங்கி அப்பினான் கண்ணப்பன்
    எப்பிடிப் பிடிங்கினான் என்பதே கேள்வி
    தன்னை மறந்து கண்ணப்பன் இருந்தான்
    கண்ணைப் பிடிங்கினான் காணிக்கை ஆக்கினான்

    இறைவனின் கண்களில் இரத்தங் கண்டான்
    பதறித் துடித்தான் பரிகாரம் கண்டான்
    கண்ணே மருந்து என்றே எண்ணினான்
    எண்ணிய திண்ணன் பிடிங்கியே அப்பினான்

    கண்ணப்பன் நிலையை கணக்கிடல் அரிது
    அன்பின் வடிவமாய் ஆகினான் அவனும்
    அன்பினில் அமிழ்ந்த கண்ணப்பன் செய்கை
    ஆருமே நினைக்கா அரும்பெருஞ் செய்கை

    அன்பின் முதிர்நிலை கண்ணப்பன் அடைந்தான்
    அவனுக் கீடார் யாருமே இல்லை
    அதனால் அவனை அணைத்தார் ஆண்டவன்
    அன்பே சிவமாய் அமைந்ததன் விளைவே !

    Share
  • தென்றல் வந்து வீசாதோ!

    தென்றல் வந்து வீசாதோ!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    தென்றல் வந்து வீசாதோ
    சிந்தை மகிழ்ந் தாடாதோ
    நொந்த மனம் மாறாதோ
    நோய் நொடிகள் ஓடாதோ

    கந்த னருள் சேராதோ
    கர்ம வினை போகாதோ
    சந்ததும் நம் வாழ்வில்
    தென்றல் வந்து வீசாதோ

    சொந்த மெலாம் சேராரோ
    சுமை யகன்று போகாதோ
    வெந்த மனம் மாறாதோ
    வினை யகன்று போகாதோ

    பந்த பாசம் பெருகாதோ
    பழைய நிலை மாறாதோ
    செந் தணலும் தணியாதோ
    தென்றல் வந்து வீசாதோ

    ஆறா வடு மாறாதோ
    அகங் குளிர மாட்டாதோ
    கோணா முகம் இருக்காதோ
    கொள் முதலும் பெருகாதோ

    தேனாய் சொல்லும் பெருகாதோ
    சிந்தை யன்பு நிறையாதோ
    தானாய் மனந் தெளியாதோ
    தயாள குணம் அமையாதோ

    தென்றல் வந்து வீசாதோ
    சிந்தை சிந்து பாடாதோ
    சந்ததும் கந்தன் புகழ்
    எண்ணி மனம் பாடாதோ!

    Share
  • கடவுளை நம்பினால் கைவிட மாட்டார்!

    கடவுளை நம்பினால் கைவிட மாட்டார்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்
    காணும் இடமெல்லாம்  கடவுள் இருப்பார்
    ஆணவும் உள்ளார் காணவும் மாட்டா
    அரும் பொருளாகி  இருக்கிறார் ஆண்டவன்

    இருளிலும் இருப்பார் ஒளியிலும் இருப்பார்
    இல்லம் இருக்கும் விளக்கிலும் இருப்பார்
    இரும்பிலும் இருப்பார் செம்பிலும் இருப்பார்
    கரும்பினில் சுவையாய் யாகியும் இருப்பார்

    அருமறை அனைத்திலும் ஆண்டவன் இருப்பார்
    ஆதியும் அந்தமும் இல்லார் ஆண்டவன்
    ஓசையின் உள்ளே  ஆண்டவன் இருப்பார்
    ஓவியம் காவியம் அனைத்திலும் இருப்பார்

    நோயாய் வருவார் வைத்தியம் செய்வார்
    மருந்தாய் அமைந்து சுகத்தைக் கொடுப்பார்
    விருந்தாய் இருப்பார் வேற்றுமை காட்டார்
    விண்ணும் மண்ணும் நிறைவார் இறைவன்

    காயாய் இருப்பார் கனியாய் இருப்பார்
    கற்கண்டுக் குள்ளே இனிப்பாய் இருப்பார்
    தேனாய் இருப்பார் பாலாய் இருப்பார்
    தேடுவார் தேடினால் தெரிவார் ஆண்டவன்

    கருவில் உயிராய் இருப்பார் கடவுள்
    உருவாய் அருவாய் ஒளிர்வார் கடவுள்
    அருளின் உருவாய் ஆகியே இருக்கிறார்
    அன்புடை அகத்தில் அமருவார் கடவுள்

    ஆண்டவன் வடிவம் ஆருமே அறியார்
    அவரவர் கற்பனை ஆண்டவன் வடிவம்
    அன்பின் வடிவே ஆண்டவன் என்பது
    ஆணவம் அகற்றிய ஆன்றோர் வாக்கே

    அன்பு கருணை அடைக்கலம் அணைப்பு
    துன்பம் துடைத்தல் துயரம் களைதல்
    தாங்கிப் பிடித்தல் சமயத்தில் வருதல்
    அனைத்தும் ஆண்டவன் என்பதே நம்பிக்கை

    விஞ்ஞானம் அறியா வியப்பே கடவுள்
    மேலான ஞானமே கடவுளை காணும்
    அஞ்ஞான நிலையில் ஆண்டவன் தெரியார்
    அஞ்ஞானம் அகன்றால் ஆண்டவன் தெரிவார்

    காணாப் பொருளைக் கண்டவர் சிலரே
    கற்பனைக் கெட்டா அதுவே கடவுள்
    கற்பனைக் கடந்த ஜோதியே கடவுள்
    கடவுளை நம்பினால் கைவிட மாட்டார் !

    Share
  • மனதைத் திறந்து காட்டிட வேண்டும்!

    மனதைத் திறந்து காட்டிட வேண்டும்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ் மொழிக்  கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    மன்னிக்க நினைத்தால் மன்னிக்க வேண்டும்
    வாழ்த்திட  விரும்பினால் வாழ்த்திட வேண்டும்
    மனத்தினில் தேக்கி வைத்திடல் வேண்டாம்
    மனதைத் திறந்து காட்டிட வேண்டும்

    ஆத்திரம் வந்தால் அடக்கிட வேண்டாம்
    கொட்டியே தீர்த்தால் குளிர்ந்திடும் அனைத்தும்
    அழுகை பெருகினால் அழுதிடல் அவசியம்
    அடக்கினால் அனைத்தும் அணுவாய் மாறும்

    கற்றவர் யாவரும் பெரியவர் அல்லர்
    கற்றதைக் கருத்தில் எடுப்பவர் பெரியவர்
    நிற்பதும் நடப்பதும் நெறியாய் இருப்பதே
    கற்றவர் இலக்கணம் என்பதே உண்மை

    உறவு என்பது உபசாரம் அன்று
    உறவு என்பது உயர் நிலையாகும்
    அன்பால் மலர்வதே ஆனந்த உறவு
    ஆசை வார்த்தைகள் நல்லுற வன்று

    நடிக்கும் உறவு கலைந்திடும் நிச்சயம்
    நம்பகத் தன்மை குலைந்தால் துன்பமே
    துடிக்கும் உணர்வுடன் உறவுகள் இருந்தால்
    தொடரும் உறவாய் தொடரும் தொடரும்

    Share
  • எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தியாறேவா!

    எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தியாறேவா!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    வெள்ளத்தின் வேதனை போக்கிடவே வா
    பள்ளத்தில் வீழ்ந்தோரை எண்ணியே வா
    உள்ளத்தால் உடைந்தோர்க்கு உயர் மருந்தாய்வா
    எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தி யாறேவா

    மண்ணுக்குள் புதையுண்டு மாண்டோரை நினைக்கும்
    மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா
    மழையாலே அள்ளுண்டு வீடிழந்து நிற்பாரின்
    மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா

    கும்பிட்ட கோவிலெங்கும் குளமாகி நிற்கையிலே
    நம்பிக்கை இழக்காமல் நாடினார் இறையிடமே
    இறைதூதர் வடிவிலே எங்கிருந்தோ வந்து
    உதவினார் குணம்போற்ற ஓடிவா புத்தாண்டே

    விளம்பரம் தோடாமல் விரைந்தோடி வந்து
    வீழ்ந்திருப்பார் இடம்பார்த்து தேவையினை அறிந்து
    உளமுவக்க உவந்திட்டார் உச்சிதொட்டு வாழ்த்துதற்கு
    புத்தாண்டே நீயும் புறப்பட்டு வந்துவிடு

    போரிடும் எண்ணம் புதைந்து விட வேண்டும்
    யாரிடமும் பகைமை கொள்ளாமை வேண்டும்
    சமத்துவமும் நீதியும் நிறைந்திடவே செய்யும்
    சாதுர்யம் மிக்க புத்தாண்டாய் மலர்க

    இருபத்து ஆறு எல்லோர்க்கும் நல்லதை
    ஈய்கின்ற ஆண்டாக இருந்திடவே வேண்டும்
    இன்னல் அகன்று எல்லோரும் நலமாய்
    இருக்கின்ற ஆண்டாக இறைவாநீ ஆக்கிடுவாய்

    நலமோங்க வேண்டும் வளமோங்க வேண்டும்
    நிலமீது யாவருக்கும் நிம்மதியே வேண்டும்
    அளவில்லா அருளுடைய ஆண்டவனே நீயும்
    அனைவர்க்கும் அருந்துணையாய் அமைந்துவிடு நாளும் !

    Share
  • வாழ்க வளமுடன் என்றுமே வாழ்த்திடுவோம் !

    வாழ்க வளமுடன் என்றுமே வாழ்த்திடுவோம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    அழவைத்து வந்ததெலாம் அழவைக்க வைத்துவிடும்
    நிலமீது நிம்மதியை நித்தமுமே குலைத்துவிடும்
    கண்ணீரை வரவழைத்தால் கண்ணீரே முதலாகும்
    மண்மீது மற்றவரை வதைத்துவிடல் முறையல்ல

    ஏமாற்றிப் பறித்தால் எதுவுமே நிலைக்காது
    எக்கணமும் திருட்டு இருட்டையே காட்டிவிடும்
    பொய்யோடு களவென்றும் உய்யும்வழி காட்டாது
    உய்யும்வழி காண உண்மையாய் இருந்திடுங்கள்

    ஆசையில்லா  மனம் யாருக்குத் தானிருக்கு
    அவனியிலே வாழ்வார்க்கு ஆசைக்கோர் அளவில்லை
    ஆசையினால் விளைகின்ற அத்தனையும் விட்டுவிட்டால்
    அவனியிலே வாழ்க்கை ஆனந்தமாய் இருக்கும்

    திருமூலர் செப்பினார் பட்டினத்தார் பகர்ந்தார்
    நால்வரும் மொழிந்தார் நல்வழியும் சொன்னார்
    ஒளவையும் சொன்னார் ஆளுமைகள் பலசொன்னார்
    உள்ளத்தில் பதிக்காமல் இருந்திடுதல் முறையாமோ

    உறங்கினால் விழிப்போமா யாருக்கும் தெரியாது
    ஓராயிரம் கனவை உள்ளத்தில் சுமக்கின்றோம்
    வஞ்ச மனத்துடனே வாழ்வது முறையாமோ
    நஞ்சகற்றி வாழ்ந்தால் நாளுமே பேரின்பம்

    மனமகிழ வாழ்த்துவோம் வாஞ்சையுடன் அணைப்போம்
    தினமே நல்லதைத் தேர்ந்துமே செய்திடுவோம்
    புலனைந்தும் நன்னெறியில் போகவே வைத்திடுவோம்
    நலமுடைய நல்வாழ்வு நமைத்தேடி வந்துவிடும்

    வாழ்க வளமுடன் என்றுமே வாழ்த்திடுவோம்
    வளமோடும் நலமும் வாய்க்குமே எங்களுக்கு
    இனியவை என்றைக்கும் இன்பத்தையே கொடுக்கும்
    எல்லோரும் அன்பாலே இணைவதுதான் பேரின்பம் !

    Share
  • திருவெம்பாவையை எம் சிந்தையில் இருத்துவோம் !

    திருவெம்பாவையை எம் சிந்தையில் இருத்துவோம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
    மெல்பேண், ஆஸ்திரேலியா 

    உலகில் பல மொழிகள் ஒவ்வொரு விதத்திலும் சிறப்பினை உடையதாய் விளங்குகின்றன என்பது தான் பொதுமையான கருத்தாகும். இவற்றுள் எங்கள் தாய் மொழியான தமிழ் ஒன்றேதான் பக்தியைப் பாடிக் கொண்டாடிய மொழி என்பதும் மிக மிகச் சிறப்புடையதாகும். தமிழ் என்றால் பக்தியின் மொழி என்று துணிந்து கூறலாம். அந்தளவுக்கு பக்தியை இலக்கியம் ஆக்கிய பெருமை எங்கள் தமிழ் மொழிக்கு மட்டுமே உரித்தான தாகும் என்று உரத்தே உரைக்கலாம். பக்தியை இலக்கியம் ஆக்கியமையால் பண்கசிந்த தமிழும், பக்குவத் தமிழும், பாடிப் பரவிடும் தமிழும், இன்னிசைத் தமிழும், இயைய வைக்கும் இங்கிதத் தமிழும் எமக்கு பெரும் பொக்கிஷமாகக் கிடைத்தன என்பதை மனமிருத்துவது மிகவும் முக்கியமாகும். சைவமும், வைணவமும், பக்தி இலக்கியத்திக்கு வழங்கிய பெருங்கொடைகள் – தமிழை யாவரும் வியந்தே பார்த்திட வைத்திருக்கிறது. அந்த வகையில் மார்கழியில் மனம் அமரும் வகையில் – வாசகர் மணித் தமிழும், கோதையின் கொஞ்சு தமிழும் கொண்டாடிப் போற்றும் வகையில் மலர்ந்திருக்கிறது என்பது மனக்கொள்ளத்தக்கது.

    மணிவாசகப் பெருமான் தமிழ் மனத்தை உருக்கிட வைக்கும் தமிழ் .சினத்தை அகற்றிட வைக்கும் தமிழ். சிந்தனையைத் தூண்டுந் தமிழ். சிவனை நினைந்து நெக்குருக வைக்குந் தமிழ். தாழ்வாய் உரைத்து தலை வணங்குந் தமிழ். இத்தகு தமிழால் எட்டா நிலையில் இருக்கும் எம்பொருமானை இயம்பிடும் வகையில் எட்டாந் திருமுறையாய் அமைந்து ஏற்றிப் போற்றப்பட்டுக் கொண்டிருக்குந் தமிழ். திருவாசகம் என்னும் தேன்தான் அந்தத் திருமுறைத் தமிழ். அந்தத் திருவாசகத்தில் ஒன்றாய் அமைந்திருப்பதுதான் மார்கழியில் மனமமரும் வாசகரின் திருவெம்பாவை என்னும் திவ்விய தமிழாகும். திருவண்ணாமலையில் மணிவாசகரால் மனமுருகிப் பக்திப் பெருவெளியில் உற்ற துணையாக வந்தமைந்த தமிழ்தான் திருவெம்பாவை என்னும் சிறப்புடைத் தமிழ் எனலாம்.

    “ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதி” – என்றுதான் மணிவாசகர் திருவெம்பாவையினைத் தொடங்குகிறார்.  “போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே” என்று நிறைவு செய்கின்றார். இருபது பாடல்கள் இறையினைப் பற்றியும், அவரின் இயல்பினைப் பற்றியும், இறையினைத் தொழுதிடும் அடியவர் மனநிலை பற்றியும், இறையடியார்கள் எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கக் கூடாது, என்பதைப் பற்றியும் பக்குவமாய் காட்டுகின்றார். அதற்காக அவர் பாவைப்பாட்டு என்னும் சங்கத்தமிழ் வழியில் பயணப்படுவதையும் காண்கின்றோம்.

    திரு + எம் + பாவை என்பது திருவெம்பாவை ஆகும். தெய்வத்தை நோக்கிய பக்தி நிலையில் நின்று பாடும் பாடல்கள் என்பதே இதன் அர்த்தம் எனவும் கொள்ளலாம். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் “ஏலோர் எம்பா வாய்” என்றே முடிகின்றதைக் காண்கின்றோம் இதனைப் பாவைப் பாட்டு என்றும் நீராட்டுப் பாட்டு என்றும் குறிப்பிடுவார்கள். இளம் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் எனக் கருதி மார்கழி மாதத்தில் நோன்பு நோற்பது வழக்கம். இந்தப் பெண்கள் அதிகாலை எழுந்து இறைவனது புகழைப்பாடி நீராடச் செல்லும் போது “திருவெம்பாவை” பாடல்களைப் பாடிச் சென்றுள்ளனர் என்பதையே இங்கு நாம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.

    முதல் நான்கு பாடல்களும் அதிகாலையில் நீராடப் புறப்பட்ட பெண்கள் இன்னும் நித்திரைவிட்டு எழாத தமது தோழியரை எழுப்புவதாக, அதற்கு அப்பெண்ணானவள் மறுமொழி கூறுவதாகவும் அமைந்திருக்கின்றது. ஐந்தாம் பாடல் தொடக்கம் எட்டாம் பாடல் வரை உள்ளன நித்திரைவிட்டெழும் பெண்கள் கூறும் விதமாக இருக்கின்றன. ஒன்பதாம் பாடல் முதல் இருபதாம் பாடல் வரை நித்திரை கலைந்த பெண்கள் இறைவனைத் துதித்துப் பாடும் வகையில் அமைந்திருக்கின்றன.

    மார்கழியில் அதிகாலை நீராடப் போகும் பெண்கள், ஒருவரை ஒருவர் எழுப்பி ஒன்றாய் கூடி நீராடும் காட்சியை உள்ளடக்கி, அவர்கள் வாயிலாக இறை புகழை, இறை தத்துவத்தை, இயம்பும் வகையில் திருவெம்பாவையினை மணிவாசகப் பெருமான் பக்திப் பாமாலை ஆக்கி இருக்கிறார். காலைப் பொழுது அற்புதமாய் காட்டப்படுகிறது. பெண்களின் இயல்பான உரையாடல் பக்தியுடன் இணைந்து பயணிக்கிறது.

    பெண்கள் ஒருவரை ஒருவர் விழிக்கும் வார்த்தைகள் எம்மை யெல்லாம் விழிக்கவும் வைக்கின்றன. நீராடுதல், நித்திரை விட்டெழுமாறு செய்தல், யாவும் சாதரணமாய் தெரிந்தாலும் அதற்குள் ஆத்ம தத்துவம், ஆத்ம ஈடேற்றம், அனைத்தும் அணைந்தே இருக்கிறது என்பதை அனைவரும் அகம் இருத்துவது அவசியமாகும்.

    சமயத்தை, தத்துவத்தை, ஆன்ம ஈடேற்றத்தை, மக்கள் மனத்தில் பதியச் செய்வது என்பது இலகுவான செயல் அன்று. ஞானவான் ஆகிய மணிவாசகப் பெருமான் இவற்றை மனத்தில் நன்றாய் பதித்த காரணத்தால் யாவருக்கும் பயனை நல்கும் வண்ணம் தேர்ந்தெடுத்த நல்வழியாகவே திருவெம்பாவை யினை அணுகுதல் பொருத்தமாகும். பெண்கள் மார்கழியில் அதிகாலையில் நீராடச் செல்வதை மனமேற்றினார் மணிவாசகர். பாவை நோன்பினை பெண்கள் நோற்பதையும் மனமிருத்தினார். இவையனைத்தையும் தன் சிந்தனைக்குள் இருத்தியே திருவெம்பாவையினைப் பாடினார் என்பது தான் பொருத்தமுடையதாகும்.

    மார்கழி நீராடப் போகும் இளம் பெண்களை இறைவன் புகழினை எடுத்தியம்பிட வைக்கிறார். நீராடச் செல்பவர்கள் தங்கள் தோழிகளை அவரவர் வீட்டு வாசலில் நின்று துயில் எழுப்புவதாய் திருவெம்பாவை யினை எமக்கெல்லாம் வழங்கி இருக்கிறார் மணிவாசகப் பெருமான்.

    “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்சோதி”

    “அத்தன் ஆனந்தன்”

    “தேவன் சிவலோகன்”

    “மாலறியா நான் முகனும் காணா மலையினை”

    “ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்”

    “என்னானை என் அரையன் இன்னமுது என்று எல்லோமும் சொன்னோம் கேள்”

    “கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை”

    “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே – பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே”

    “விண்ணுக் கொரு மருந்தை வேத விழுப் பொருளை”

    “இவ்வானும் குவலயமும் எல்லோரும் – காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி”

    “வேதப்பொருள் பாடி அப்பொருளாம் மாபாடி
    சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தாழ்பாடி
    ஆதி திறம்பாடி அந்தமாம் மாபாடிப் பேதித்து”

    “விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் – கண்ணார் அமுதமுமாய் நின்றான்”

    “போற்றியென் வாழ்முதல் ஆகிய பொருளே”

    என்று நீராடப் போகும் பெண்கள் வாயிலாக பரம்பொருளின் நிலையினை, பரம்பொருளின் வியாபகத் தன்மையை, பரம் பொருளின் பேராற்றலை, பரம் பொருளின் கருணையின் விசாலத்தை எல்லாம் மணிவாசகப் பெருமான் திருவெம்பாவைப் பாடல்கள் வாயிலாய் எமக்கெல்லாம் உணர்த்தி நிற்கிறார்.

    ஆதியும் அந்தமும் இல்லா அந்த அருப்பெருஞ்சோதியை பாடுவோம், பரவுவோம், பக்குவமாய் மனத்தில் பதிப்போம் என்று நீராடச் செல்லும் மகிளிர் வாயிலாக நல்ல தொரு நற்சிந்தனைப் பாடத்தைப் பக்தியுடன் பதிக்க விடுகிறார் மணிவாசகப் பெருமான் திருவெம்பாவை வாயிலாக எனலாம்.

    திருவெம்பாவைப் பாடல்களை மார்கழியில் ஆலயங்களில் அதிகாலை பாடுவதை நாம் அனைவரும் அதாவது சைவர்கள் கேட்டிருக்கிறோம். நாமும் கூடப் பாடியும் இருக்கிறோம். பாடும் வேளை அதன் பொருள் தெரிந்து பாடுவார் ஒரு சிலரே. மற்றவர்கள் இசையுடனோ அல்லது இசையின்றியோ பாடிவிடுவார்கள். பொருளை விளங்கிப் பாடினால் கிடைக்கும் பயனோ மிகப் பெரிது. இதனால்த்தான் “பொருள் உணர்ந்து சொல்வர் செல்வார் சிவனடிக் கீழ்” என மொழிந்ததை இனியாவது மனமிருத்துவது யாவருக்கும் பயனே.

    துயில் கொள்ளும் தோழியரைத் துயிலெழுப்பி நீராட அழைக்கும் பெண்கள் இறைபுகழைப் பலவாறு பாடுவதாய் திருவெம்பா அமைந்திருக்கிறது. அப்படி அழைக்கும் பெண்கள் கிண்டலாயும், கேலியாயும்,   தமக்குள் பேசுவதையும் திருவெம்பாவையில் காணலாம். சிரிக்கிறார்கள், சீறுகிறார்கள், சிந்திக்கவும் செய்கிறார்கள். ஆனாலும் தங்கருத்தான இறையின் முக்கியத்தைவத்தை மட்டும் விட்டு அகலாதே, மிகக் கவனமாகவே மொழியும் பக்குவத்தை நாமனைவரும் மனமிருத்துதல் அவசியமாகும். இப்படியான ஒரு பக்குவத்தை காட்டும் இயக்குனராய் மணிவாசகப் பெருமான் விளங்குகிறார் என்பதையும் மனமிருத்துதல் வேண்டும்.

    “மாதே வளருதியோ” , “வன் செவியோ நின் செவிதான்”, மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த் தொலிகள் வீதியெங்குமே ஒலிக்கிறதே இன்னுமா உனக்குக் கேட்கவில்லை என்னும் நிலை மிகவும் முக்கிய நிலையாகும். கேட்காத காது , விழிக்காத விழிப்பு இருந்தும் என்ன பயன்? உலக மாயையில் உழலுவதால்   உயர் பொருளான அந்தப் பரம்பொருள் பற்றிய வார்த்தைகளை உன் காது ஏற்க மறுக்கிறது. உலக மாயை உன்னை இறுகப் பற்றிக் கொண்டுள்ளதால் உன்னால் விழிப்படைந்திட முடியாமலே இருக்கிறது. என்னும் உயரிய தத்துவமே இங்கு உணர்த்தப்படுகிறது. நித்திரை எழும்பாத தோழியரை எழுப்பிட முயலுகிறார்கள் மற்றையப் பெண்கள் என்பதுதான் மேலோட்டமாய் நாமனைவரும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ஓர்ந்து உணர்ந்தால் உயர் பொருள் உள்ளம் அமரும்.

    ஆண்டாள் திருப்பாவையில் தன்னைக் காட்டும் பாங்கு வேறு. மணிவாசகர் திருவெம்பாவையில் தன்னைக் காட்டும் பாங்கு வேறு. ஆண்டாள் திருமாலை தன் கணவனாக்க முயலுகின்றாள்.தான் எப்படியும் திருமாலின் அருகமர்ந்து மனைவியாய் இருக்கவே மன்றாடி நிற்கிறாள். அதுவே அவளின் உள்ளடக்கிடக்கையாகி திருப் பாவையாய் மலர்கிறது. ஆனால் மணிவாசகர் காட்டும் பாங்கு சிவனடியாரே தங்களுக்குக் கணவராய் வாழ்வு க்குத் துணையாய் ஆகிட வேண்டும் என்று – பெண்கள் பாடிப் பரவுதாகக் காட்டுவ தேயாகும். மணிவாசகர் இல்லறைத்தைத் துறந்த பெருஞானி.

    உற்றாரை யான் வேண்டேன்
    ஊர் வேண்டேன் பேர் வேண்டேன்
    கற்றாரை யான் வேண்டேன்
    கற்பனவும் இனி அமையும்
    குற்றாலத்து அமர்ந்து உறையும்
    கூத்தா உன் குரை கழற்கே
    கற்று ஆவின் மனம்போலக்
    கசிந்து உருகி வேண்டுவனே!

    இதுதான் அவரின் நிலை. அதனால் அவர் ஆண்டாள் மனநிலைக்கு எப்பொழுதுமே வரமாட்டார். அதனால்த்தான் திருவெம்பாவையினை தானாய் நிற்காமல் இளம்பெண்கள் மூலம் இறையின் நிலையினை,  ஆன்ம தத்துவத்தை சொல்ல விளைந்தார் என்றுதான் எண்ண முடிகிறது. ஆண்டாள் முப்பது பாடினார். மணிவாசகர் இருபது பாடல்களே பாடினார். அதற்குள்ளும் ஒரு தத்துவம் உலகியலோடு இணைகிறது. பெண்களின் உடற்கூறு இங்கு மணிவாசகருக்கு விளங்கி இருக்கிறது. ஆனால் பெண்ணாய் இருந்தும் ஆண்டாள் ஏன் முப்பது பாடல்கள் பாடினார் என்பது அந்தத் திருமாலுக்கு மட்டுமே தெரியும் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    திருவெம்பாவையில் சக்தியின் தத்துவமும் வெளிப்பட்டு நிற்கிறது. பாவை நோன்பின் அடிப்படையே சக்தியை முன்னிறுத்துவதேயாகும். சக்தியே “பின்ன மிலான் எங்கள் பிரானாய்”, “பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளை”, ஆதியும் அந்தமும் இல்லா அந்த அரும் பெருஞ்சோதிக்குள் அப்பனும் அம்மையுமாய் அந்தப் பரம் பொருள் இருக்கிறது என்பதை மணிவாசகப் பெருமான் திருவெம்பாவை வாயிலாக எமக்கெல்லாம் உணர்த்தி நிற்கிறார்.

    திருவெம்பாவையை மார்கழியில் பாடுவதற்காய் மணிவாசகப் பெருமான் வழங்கி இருந்தாலும் அதனூடாய் – ஆன்மீக வெளிப்படுகிறது. ஆத்மஞானம் வெளிப்படுகிறது. இறைவனை மனதிருத்திப் பாடினால் மாநிலம் செழிக்கும், மழைவளம் மிகும், மழைவளம் மிகுந்தால் மக்கள் மனவளம் சிறக்கும். மனவளம் சிறந்தால் மாதேவன் மனமதில் அமர்வான். மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி வையகம் எங்கும் பரவிடும் அல்லவா. திருவெம்பாவையினைப் படிப்போம் எம் சிந்தையில் இருத்துவோம் !

    Share
  • கோதையின் தமிழைக் கொண்டாடி மகிழ்வோம் !

    கோதையின் தமிழைக் கொண்டாடி மகிழ்வோம் !

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண், ஆஸ்திரேலியா

    மாதங்களிலே மார்கழி மகத்தான மாதம். சைவமும், வைணமும் சங்கமிக்கும் மாதம். திருவெம்பாவையும் திருப்பாவையும் ஆலயங்களில் பக்தி பூர்வமாய் பாடப்படுகின்ற மாதம். ஆண்டாளின் அமுதத் தமிழும், மணிவாசகரின் உருக வைக்கும் தமிழும் பக்தியுடன் சேர்ந்து இசையாய் எழுந்து நிற்கும் மாதம். இந்த மாதம் இறையினை ஏற்றிப் போற்றி நிற்க அமைந்திட்ட மாதம். தெய்வீக மாதமாய் விளங்குவதால் –  குடும்ப விழாக்களுக்கோ வீட்டு நிகழ்வுகளுக்கோ இடம் கொடுப்பதில்லை. தெய்வீக மாதத்தில் தெய்வத்தை நினை என்று எங்கள் முன்னோர்கள் சொல்லி வைத்து விட்டார்கள். தெய்வீகம் முன்னிற்பதால் மார்கழி பீடை உடையது அல்ல –   பீடுடைய மாதம் என்பதே மிகப் பொருத்தமானதாகும். கண்ணனும் கீதையில் “மாதங்களில் நான் மார்கழி” என்று மொழிந்ததாய் அறிகின்றோம். சிவனும், திருமாலும் ஏற்றிப் போற்றப்பட்டு – சிவன் அடியாரும், திருமால் அடியாரும் தீந்தமிழால் பாமாலை சூட்டினார்கள். அப்படி அவர்கள் பாமாலை சூட்டி யதும் மார்கழியிலேதான். அந்த வழியில் ஒரு அடியார் பெண்ணாய் அமைந்து திருமாலுக்குப் பாமாலையோடு, பூமாலையையும் சூட்டி மகிழ்கின்றார். அவர்தான் – சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான கோதை நாச்சியார். சைவசமய குரவர்போல் – வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் வருகிறார்கள். அவர்கள் பன்னிருவர். அவர்களில் ஒரே ஒரு பெண்ணாய் வாய்த்தவர்தான் கோதை நாச்சியார்.  பெரியாழ்வாரின் மகளாய் திருமாலின் அருளினால் வாய்த்தவர்.

    திருமாலினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள். திருமாலின் பக்தியில் ஆழ்ந்தவர்கள். ஆதலால் ஆழ்வார்கள் என்று போற்றப்படும் உன்னத நிலைக்கு ஆழானவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்படியான ஆழ்வார்களில் ஒரு பெண்ணாய் இருக்கும் நிலையில் ஆண்டாள் நாச்சியார் விளங்குகிறார். ஆண்டாளைத் தவிர மற்றைய ஆழ்வார்கள் அனைவரும் ஆண்களாய் இருப்பதால் – அவர்கள் திருமாலை நோக்கும் விதமும் திருமாலை ஏற்றிப்போற்றிப் பாடும் விதமும் ஆண்டாள் போல் இருக்கவில்லை. அவர்கள் யாவரும் ஆண்கள் என்பதால் அவர்கள் நோக்கும், போக்கும் அவர்களுக்கே உரித்தானதாய் ஆகியே இருந்தது எனலாம். அவர்களும் திருமாலைக் காதலித்தார்கள். அந்தக் காதலும் பல நிலையிலே அமைந்திருந்தது. அவர்கள் அனை வரும் தம்மைப் பெண்ணாக உருவகித்தே தம்முணர்வுகளை வெளிப்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் பெண்ணாகவே இருந்த காரணத்தால் ஆண்டாள் நாச்சியாரின் வெளிப்பாடும், உணர்வுகளும், பெண்மைக்குரிய பாங்கிலேயே அமைந்திருந்தது. இதனால் ஏனைய ஆழ்வார்களின் தமிழைவிட ஆண்டாள் நாச்சியாரின் தமிழ் – அமுதத் தமிழாய், சங்கத் தமிழாய், காதல்த்தமிழாய், கற்கண்டுத் தமிழாய், அணைக்கும் தமிழாய், ஈர்க்குந்தமிழாய், படிக்கப் படிக்க சுவைக்கும் தமிழாய் – பல்பரிணாம் கொண்டதாய் விளங்கியது – விளங்குகிறது என்பதை மறுத்துரைத்து விடல் இயலாது.

    “திருப்பாவை” என்பது மார்கழியின் மகத்துவம், அந்தத் திருப்பாவையினை தமிழுக்கு, பக்தி உலகுக்கு வழங்கியவர் கோதை நாச்சியாரான ஆண்டாளே. மார்கழியில் மாலவனைப் போற்றிப் பாடும் பாங்கில் – பக்தியை, காதலை, அறிவியலை , வாழ்க்கை முறையை, தமிழ்ச் சுவையை, சமூகவியலை, இயற்கையை,  என்று பலவற்றை ஆண்டாள் நாச்சியார் திருப்பாவை வாயிலாக வழங்கி வரமாக்கி இருக்கிறார். திருப்பாவையினை சைவர்களும் படிக்கலாம். பக்தியினை ஊட்டும் மருந்து திருப்பாவையில் இருக்கிறது. பக்தி என்பது பரந்தது விரிந்தது. ஆண்டாளின் பக்தியும் அப்படியானதே. சைவத் தமிழ் உலகில், சைவப் பக்திப் பெருவெளியில் காரைக்கால் ஈந்திட்ட அம்மை போலவேதான் — வைணவப் பக்திப் பெருவெளியில் ஆண்டாள் நாச்சியாரும் வந்து அமைகிறார் என்பதை மனமிருத்துதல் வேண்டும். நால்வருக்கே வழிகாட்டி காரைக்காலம்மைமையார். ஆழ்வார்களும் அவர்கள் பின்வந்த வைணவப் பெரியவர்களும் ஏற்றிப் போற்றப்படும் வகையில் வந்தமைந்தவர்தான் ஆண்டாள் நாச்சியார். காரைக்கால் அம்மையாரை சிவபெருமான் அம்மையே என்று அழைத்தார் திருமாலோ ஆண்டாள் நாச்சியாரை தன் அருகிலேயே அணைத்துக் கொண்டார். காரைக்கால் அம்மையார் பெண்ணழகை பேயுருவாக்கிட சிவனிடம் வேண்டினார். கோதைநாச்சியார் தன்னழகை மானிடர்க்கு ஈயாது மாலவனுக்கே ஈந்தார். அத்தனைக்கும் வித்து பக்தி ஒன்றேதான்.

    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
    நீராடப் போதுவீர்! போதுமினோ, நேர் இழையீர்!
    சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்,
    ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்,
    கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்
    நாராயணனே, நமக்கே பறை தருவான்,
    பாரோர் புகழப் படிந்தேலோர் எம் பாவாய்.

    என்று திருப்பாவையை ஆண்டாள் நாச்சியார் ஆரம்பிக்கின்றார். முப்பது பாடல்கள் முத்தாக, கோதை தந்த சொத்தாக பக்தியுலகுக்கு வாய்த்திருக்கிறது. முதலாம் பாடலிலிருந்து பதினைந்தாம் பாடல்வரை துயில் கொண்டிருக்கும் தோழியரை எழுப்பும் விதமாய் திருப்பாவை அமைந்திருக்கிறது. மார்கழியில் பாவை நோன்பினை நோற்பதை மங்கையர் மனமிருத்த வேண்டும் என்பதை ஆண்டாள் நாச்சியார் பல வகைகளில் காட்டும் பாங்கும், அதற்காக தன்னுடன் வருமாறு தோழியரான மங்கையரை, அதிகாலை துயில் எழுப்புவதாகவும் அமையும் திருப்பாவைப் பாடல்கள் படித்து இன்புறத்தக்கன. அது மட்டுமல்ல திரு மாலின் தன்மைகளையும் எடுத்துக் காட்டியும் நிற்கின்றன.

    வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்குச்
    செய்யும் கிரிகைகள் கேளீரோ பாற்கடலுள்
    பையயத்துயின்ற பரமன் அடிபாடி
    நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
    மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
    செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
    ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
    உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்

    பாவை நோன்பினை எப்படிக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் பக்குவத்தை ஆண்டாள் நாச்சியார் மிகவும் நுட்பமாய் மனத்தில் பதியும் வண்ணம் இங்கே விபரித்து நிற்கிறார்.

    ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
    நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
    தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
    ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
    பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
    வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
    நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

    ஓங்கி உலகளந்த உத்தமன் என்று திருமாலைக் காட்டும் பாங்கு ஆண்டாளின் பக்தியின் உச்சம். அத்துடன் பாவை நோன்பினைக் கடைப்பிடித்தால் விளையும் நற்பலன்களையெல்லாம் பட்டியல் படுத்திக் காட்டுகிறார். “வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்” ஆண்டாள் நாச்சியாரின் முத்திரையாய் ஒளிர்கிறதல்லவா!

    ஆழி மழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்
    ஆழுயுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
    ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
    பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
    ஆழிபோல் மிம்மி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
    தாழாதே சாரங்கம் உதைத்த சரமழைபோல்
    வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
    மார்கழி நீராட மகிழ்தேலோர் எம்பாவாய்

    மழை எப்படி உருவாகிறது என்னும் அறிவியலை ஆண்டாள் நாச்சியார் இங்கே காட்டும் நுட்பம் வியப்பாய் இருக்கிறதல்லவா! பக்தியுடன் அறிவியலை இணைக்கும் கோதைத் தமிழைக் கோண்டாடி மகிழ்வது எம் தலையாய கடனல்லவா !

    “கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
    நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
    நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் நங்காய்”

    ” ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
    மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்”

    “உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
    செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்”

    ஆண்டாள் நாச்சியாரின் அகம் எப்படிப் பார்க்கிறது! பார்க்கும் பார்வையும், அதனூடாய் வெளிப்படுத்தும் காட்சியும் சுவையோ சுவையாய் சொக்க வைக்கிறதல்லவா!

    மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
    கோலே விளக்கே கொடியே விதானமே
    ஆலின் இலையாய் அருளேலோர் எம்பாவாய் !

    ஆண்டாள் நாச்சியார் மணிவண்ணனைப் போற்றி மனமிருத்தி மகிழுகிறார்.

    கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன்தன்னைப்
    பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
    நாடு புகழும் பரிசினால் நன்றாக
    சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
    பாடகமே என்றனைய பல்கலனும் யாமணியோம்
    ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
    மூடநெய் பெய்து முழங்கை வழிவார்
    கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

    கூடாரை வெல்லும் சிறப்புடைய கோவிந்தா உன்னை நோக்கிய நோன்பினால் எமக்குக் கிடைப்பதுதான் பேரின்பம். புகழோ ஆபரணங்களோ எமக்குப் பெரிதல்ல கோவிந்தா! உன்னை எண்ணி நின்று பிரசாதத்தை கூடியிருந்து உண்ணுவதே பேரின்பமாகும்.

    கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்ணோம்
    அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
    பிறவி பெறுந்தன்னை புண்ணியம் யாமுடையோம்
    குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
    உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
    அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னோடு
    சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
    இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

    நாங்கள் யாவருமே அறிவில்லாதவர்கள். பசுக்கூட்டம் வழிசென்று வாழ்பவர்கள். ஆயர்குலக் கொழுந்தே உன்னால் வைகுண்டத்தையே காணுகின்றோம். அந்தப் பாக்கியம் எமக்குக் கிடைத்திருக்கிறது. கோவிந்தா நீயோ குறை ஒன்றுமே இல்லாதவன். உனது உயர்வு தெரியாது சிறு பிள்ளைகளாய் உன்னை ஒருமையில் அழைத்தும் இருக்கிறோம். எங்கள் சிறுமைகளை மன்னித்து எங்களுடன் உறவாய் இருப்பதை மட்டும் விட்டுவிடாதே!

    சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்
    பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்
    பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து நீ
    குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
    இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
    எற்றைக்கும் ஏழே பிறவிக்கும் உன்தன்னோடு
    உற்றோமே யாவோம் உனகேநாம் ஆசெய்வோம்
    மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

    ஏழேழ் பிறவிக்கும் எங்களுடனே இருந்துவிடு. உந்தன் உறவை துண்டித்து மட்டும் விட்டுவிடாதே. உந்தன் பொற்றமரை அடியினைப் போற்றியே நிற்கின்றோம். எங்களின் விரத்தத்தை ஏற்றிவிடு கோவிந்தா. எந்த ஒரு பொருளும் எங்களுக்குப் பொருட்டல்ல. எங்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த சின்ன நோன்பை கோவிந்தா ஏற்றுக் கொண்டு எங்களை உன்னயல் வைத்திடுவாய் என்று ஆண்டாள் நாச்சியார் மனமுருகி வேண்டி நிற்கிறார்.

    வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
    திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
    அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
    பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
    சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
    இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
    செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
    எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

    தான் மனமுருகிப் பக்தியுடன் எம்பெருமான் நாராயணன் அருளைப், புகழை, பாடிய “சங்கத்தமிழ் மாலை” முப்பதையும் தப்பாமல் பாடினால் செல்வத்திருமாலின் திருவருளால் இன்புற்ரு வாழ்வார்கள் என்று உறுதி மொழியாய் உரைத்து நிறைவு செய்கிறார் திருப்பாவையினை ஆண்டாள் நாச்சியார்.

    திருவாடிப் பூரத்து ஜகத்து உதித்தாள் வாழியே:
    திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே,
    பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே:
    *பெரும்பூதூர் மாமுனிக்கு பின் ஆனாள் வாழியே,
    ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே:
    உயர் அரங்கற்கே கண்ணி உகந்து அளித்தாள் வாழியே:
    மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே:
    வண்புதுவை நகர்க் கோதை மலர்ப் பதங்கள் வாழியே*

    வைணவத்துக்கு வாய்த்த பெருஞ் சொத்து ஆண்டாள் நாச்சியார். மானிட இன்பங்களை, பக்தியில் திளைத்த ஆண்டாள் நாச்சியார் – இறையுடன் கலக்கும் மாறாப் பேரின்பமாய் ஆக்கி விடுகிறார். ஆண்டாள் நாச்சியாரின் நோக்கும் போக்கும் பேரின்பக் காதலாகவே பேருருக் கொள்ளுகிறது. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி கோவிந்தனை கொழுநன் ஆக்கிய பெருமையினை கோதை நாச்சியார் பெற்றுக் கொள்ளுகின்றார். கோவிந்தன் மேல் கொள்ளும் காதலை எடுத்துரைக்க ஆண்டாள் நாச்சியார் எடுத்தாளும் தமிழ்தான் அவரை அனைவரின் அகத்திலும் அமர்த்தி விடுகிறது. பக்தியின் பரவசத்தைப் பக்குவத்தை பாங்குடன் வெளிப்படுத்த அமுதத் தமிழை ஆண்டாள் நாச்சியார் கையாண்ட பாங்கு அனைவரையும் அவர் பக்கம் திருப்பியே விட்டது. எனவே “கோதைத் தமிழ் கொண்டாடும் தமிழாய்” ஆகியே விட்டது.

    Share