மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் மெல்பேண், ஆஸ்திரேலியா
வெள்ளத்தின் வேதனை போக்கிடவே வா
பள்ளத்தில் வீழ்ந்தோரை எண்ணியே வா
உள்ளத்தால் உடைந்தோர்க்கு உயர் மருந்தாய்வா
எல்லோர்க்கும் நல்லாண்டாய் இருபத்தி யாறேவா
மண்ணுக்குள் புதையுண்டு மாண்டோரை நினைக்கும்
மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா
மழையாலே அள்ளுண்டு வீடிழந்து நிற்பாரின்
மனவருத்தம் போக்கிடவே புத்தாண்டே வா
கும்பிட்ட கோவிலெங்கும் குளமாகி நிற்கையிலே
நம்பிக்கை இழக்காமல் நாடினார் இறையிடமே
இறைதூதர் வடிவிலே எங்கிருந்தோ வந்து
உதவினார் குணம்போற்ற ஓடிவா புத்தாண்டே
விளம்பரம் தோடாமல் விரைந்தோடி வந்து
வீழ்ந்திருப்பார் இடம்பார்த்து தேவையினை அறிந்து
உளமுவக்க உவந்திட்டார் உச்சிதொட்டு வாழ்த்துதற்கு
புத்தாண்டே நீயும் புறப்பட்டு வந்துவிடு
போரிடும் எண்ணம் புதைந்து விட வேண்டும்
யாரிடமும் பகைமை கொள்ளாமை வேண்டும்
சமத்துவமும் நீதியும் நிறைந்திடவே செய்யும்
சாதுர்யம் மிக்க புத்தாண்டாய் மலர்க
இருபத்து ஆறு எல்லோர்க்கும் நல்லதை
ஈய்கின்ற ஆண்டாக இருந்திடவே வேண்டும்
இன்னல் அகன்று எல்லோரும் நலமாய்
இருக்கின்ற ஆண்டாக இறைவாநீ ஆக்கிடுவாய்
நலமோங்க வேண்டும் வளமோங்க வேண்டும்
நிலமீது யாவருக்கும் நிம்மதியே வேண்டும்
அளவில்லா அருளுடைய ஆண்டவனே நீயும்
அனைவர்க்கும் அருந்துணையாய் அமைந்துவிடு நாளும் !
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.