சங்க இலக்கியத்தில் அணிகலன்கள்
முனைவர் மூ. சிந்து
இணைப் பேராசிரியர்
தமிழ்த்துறை
டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி ( தன்னாட்சி)
காளப்பட்டி ரோடு
கோயம்புத்தூர் – 641048
முன்னுரை
மனிதர்கள் தன்னை அடையாளம் காட்ட விழைவது இயற்கையாகும். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பொருளாதாரம் மற்றும் சூழலுக்கேற்ப உணவு, உடை, அணிகலன், ஆகியவற்றில் ஒப்பனைகளை ஏற்படுத்திக் கொள்வதை அவசியமாகக் கருதுகின்றனர்
”ஆடையில்லா மனிதன் அரை மனிதன்” “ஆள் பாதி ஆடை பாதி” என்பது நம் தமிழர் வழக்கு. ஆடைகளில் தன்னிறைவைக் கண்ட மனிதர்கள், அணிகலன்களை பூட்டி தங்களை அழகுபடுத்திக் கொள்கின்ற நிலைப்பாட்டினை இன்று ஆண், பெண் இருபாலர்களிடையேயும் காணமுடிகிறது.
இன்றைய மகளிரைப் போன்றே சங்ககாலத்துப் பெண்களும் ஆடை அலங்காரங்கள், அணிகலன்கள், ஒப்பனைகள் முதலியவற்றில் மிகுந்த நாட்டம் கொண்டவர்களாகவும், விரும்பி அதனை அணிந்துகொள்ளும் குணம் உடையவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
அணிகலன்கள்
அணி என்பது அழகு எனப் பொருள்படும். மகளிர் தன்னை அழகுப்படுத்தவும், அழகுக்கு மேலும் அழகு சேர்க்கவும் அணிகலன்களைப் பயன்படுத்தினர். நூலுக்கு அணி செய்வது போல ஒரு பெண்ணுக்கு அணி செய்ய அணிகலன்கள் இன்றியமையாதாகும்.
மலர்அணிகலன்கள்
‘ஆம்பல் வன்னித் தொடிக்கை மகளிர்’ (புறம். 63:12)
பவளவளை செறிந்தாட் கண்பணித்தான் பச்சைக்
குவளைப் பசுந்தண்டு கொண்டு’ (பரி. 11:101-102)
ஆம்பல், குவளை முதலியவற்றின் தண்டுகளால் மகளிர் வளையல் செய்து அணிந்ததை அறியமுடிகிறது.
‘கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சி’ (குறுந். 80:1)
என்றும்
“பரூஉப்பகை ஆம்பல் குருஉத்தொடை நீவிச்
சுரும்பிமீர் ஆய்மலர் வேய்ந்த” (அகம். 136:27-28)
எனும் பாடல் வரிகளில் ஆம்பல் மலர்களால் ஆன மாலையைக் கழுத்தில் அணிந்து கொண்டதையும், கூந்தலில் சூடியதையும் தெரிவிக்கிறது. மேலும் தாவரங்களினின்று உருவாக்கிய அணிகளைத் தவிர உலோகங்களால் செய்யப்பட்ட அணிகலன்களையும் சங்கப் பெண்டிர் அணிந்திருந்தமையை அறியமுடிகிறது.
செயற்கை அணிகலன்கள்
வணிகத் தொடர்புகளாலும், உலோகக் கண்டுபிடிப்புகளாலும், செயற்கை அணிகலன்கள் புழக்கத்தில் வந்தன.
“அணி, பூண், பணி, இழை, கலன், நகை, குழை, தொடி, வளை முதலிய சொற்கள் அணிகலன்களைக் குறித்து வழங்கப்படுவனவாக அமைந்துள்ளன” என்று வெ.வரதாராசன் அவர்கள் தமிழரின் ஒப்பனைக் கலைத்திறன் என்ற நூலில் கையாண்டுள்ளார்.
சங்ககால மகளிர் தலையணி, நுதலணி, காதணி, கபத்தணி, தோளணி, மார்பணி, கையணி, விரலணி, இடையணி, காலணி எனும் பலவகை அணிகலன்களை உடலுறுப்புகளில் அணிந்தனர் என்பதையும் அறியமுடிகிறது.
மகளிர் தன்னை அழகுபடுத்த அணிகளையும், அணிகளை அழகுப்படுத்த அதில் விதவிதமான இரத்தினங்களையும், கற்களையும், முத்து பவளங்களையும் பதித்து அணிந்து கொண்ட செய்திகளையும் சங்க இலக்கியங்களில் காணமுடிகிறது.
“கைவல் வினைவன் தையுரு சொரிந்த
சுரிதக உருவு” (நற். 86: 5-6)
கைத்தொழிலில் வல்லவன் இரத்தினக் கற்கள் பதியப்பெற்று செய்த பொன்னாலாகிய சுரிதகம் என்னும் அணியை அணிந்த பெண்டிரைப் பற்றி பூதன்தேவனார் மருதத்திணைப் பாடலில் எடுத்துரைத்துள்ளார்.
“எறிமகர வலயம் அணிதிகழ் நுதலியர்” (பரி.10-77)
மகரலயம் எனும் நுதலணியைப் பற்றிப் (நெற்றியணி) பரிபாடல் கூறுகிறது.
காதணிகள்
புராணக் காலத்தில் ஒலைகளான அணிகளன்களும், சங்க காலத்தில் பூக்களால் ஆகிய அணிகலன்களும், உலோக அணிகளும் அணியப்பெற்றமையை அறியமுடிகிறது. பொன்குழை ஒண்குழை, கனங்குழை, சிறுகுழை, மகரக்குழை, கொடுங்குழை, தோடு ஆகியவற்றை காதணிகளாக சங்கப் பெண்டிர் அணிந்திருந்தனர்.
“ஞாயலியர் மென்காதிற் புல்லிகைச் சாமனா” (கலி. 96.11)
புல்லிகை எனும் அணியும் காதணியையே குறிக்கும் என்பதை அறிய முடிகிறது.
“கோழி பொறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்கார் புதல்வர் புரவியின் றுருட்டு
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்” (ப.பாலை. 23-25)
காவிரிப் பூம்பட்டினத்துத் தாய்மார்கள் கோழிகளை விரட்ட காதில் அணிந்த குழையைத் தூக்கி எறிந்ததைப் பட்டினப்பாலை பாடல் வழி அறியலாகிறது.
கழுத்து அணிகலன்கள்
கழுத்து அணிகலன்கள் என்பது கழுத்தில் அணியப்படுவது. இது தாலி, மாலை, அல்லது மதாணி (தொங்கல்) போன்ற பல்வேறு வடிவங்களில், தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களால் அமைந்ததாகும்.
பொன்னாலாகிய காசுகளைக் கோர்த்து இழைக்கப்பெற்ற காசு மாலையைக் கழுத்தில் அணிந்ததையும்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல ஒருகா சேய்க்கும் (குறு. 67:4)
பொன்னொடு புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகம். 7:17-18)
பொன்னொடு புலிப்பல் கோக்கப் பெற்ற தாலி அணிந்ததையும் அறிய முடிகிறது.
கொடுமணம் பட்ட வினைமாண் அருங்கலம்
பந்தர்ப் பெயர்க்கும் பன்மாண் ஏந்தெழில் (பதி. 67:1-2)
அரசர்கள் ஏகவடம் என்னும் முத்து மாலைகளை அணிந்தார்கள். செல்வர் வீட்டுப் பெண்களும் அரசகுமாரிகளும், இராணிகளும் முத்துமாலைகளை அணிந்தார்கள். உரோம தேசத்து மகளிர் தமிழ்நாட்டு முத்துக்களைப் பெரிதும் மதித்தனர் என்ற செய்தியை மயிலை சீனி வேங்கடசாமியின் பழங்காலத் தமிழர் வாணிகம் என்ற நூலின் மூலம் அறியமுடிகிறது.
தோள் அணிகலன்கள்
‘தொடி’ என்பது பழந்தமிழில் பெண்கள் அணியும் கைவளை அல்லது தோள்வளையைக் குறிக்கும் ஒரு அணிகலன் சொல் ஆகும். இது சங்கு, பொன் அல்லது பிற உலோகங்களால் செய்யப்படலாம். இலக்கியங்களில் இது பெரும்பாலும் ‘ஒள் தொடி’ (ஒளிமிக்க வளையல்) எனப் பெண்களின் அழகுக்கும் மென்மைக்கும் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது.
“ஒண்தொடி நெகிழ” (அகம். 265:9)
“தொடிதோள் இலர்க” (அகம். 269:1)
எனும் ‘தொடி’ என்னும் அணிகலன் அணியப் பெற்றமையை அறியமுடிகிறது.
மார்பணிகலன்கள்
மார்பணி என்பது பொதுவாக மார்பில் அணியும் அணிகலன் (மதாணி, பூண்) அல்லது கவசத்தைக் குறிக்கும். இது ஒருவகை மார்புப் புண், தண்டனையாக மார்பில் தைக்கப்படுவதாகும்.
வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து, பூண் சுடர்வர,
எழுமுடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து, (ப.ப 16:16,)
பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை,
மாண் வரி அல்குல், மலர்ந்த நோக்கின், (ப.ப 65:6)
என்ற வரிகள் அரசியர் மார்பணி அணிந்தைமையை எடுத்துரைக்கிறது.
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை (அகம். 16:9)
மன்னர்கள் மார்பணி அணிந்ததும், பரத்தையர்களாலும் அணியப் பெற்றதையும் அகநானூறு பாடல் வழி அறியமுடிகிறது.
கை அணிகலன்கள்
தமிழர் பண்பாட்டில் கை அணிகலன்கள் பாரம்பரியம் மற்றும் அழகைக் குறிக்கின்றன. வளையல், காப்பு, கைகளில் அணியப்படும் ஆபரணங்கள். இவை தங்கம், வெள்ளி, மற்றும் சங்கு போன்ற பொருட்களால் செய்யப்படுகின்றன.
கைகளில் வளையல்கள் அணிவது சங்ககாலந் தொட்டே மங்கலமாகக் கருதப்பட்டது.
“வல்லோன் வாளரம் ரு கோனோர் எல்வளை” (நற்.78:8-9)
வளையல்கள், கொடிகள், பூக்கள், வரிகள் ஆகிய தொழில்நுட்பத்தோடு செய்யப் பெற்றதைக் காணமுடிகிறது.
“அணிவளை முன்கை ஆயிழை மடந்தெ (அகம் 361:4)
“சின்னிரை வால்வளைக் குறுமகள்” (குறுந் 189.6)
“வளைக்கை விறலி
வல்லோள் வானரம் பொருத
கோணேர் எல்வளை அகன்தொடி செறித்த முன்கை” (நற்.77:8-10)
ஆகிய வரிகளின்றும் மகளிர் அனைவரும் (கணவனை இழந்தோர் தவிர வளையல்கள் அணிந்திருந்ததை அறியமுடிகிறது.
பாண்டியன் நெடுஞ்செழியனின் மனைவி பாண்டிமா தேவி வலம்புரிச்சங்கு வளையல்களோடு பொன் வளையல்களையும் அணிந்திருந்ததை நெடுநல்வாடை கூறுகிறது.
“பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகை நூல் யாத்து” (நெடுநல். 141-142)
திருமணத்தின் போது கொடுக்கப்படும் பரிசப் பொருட்களில் ஒன்றாக தமிழகத்தில் சங்கு வளையல்கள் இருந்துள்ளதை அறியமுடிகிறது.
இடுப்பு அணிகலன்கள்
“மேகலை” என்பது பெண்கள் தங்கள் இடுப்பில் அணியும் ஒரு வகை அணிகலன் அல்லது ஒட்டியாணம் ஆகும். இது இடையணி என்றும் அழைக்கப்படுகிறது,
வகையமை மேகலை” (பரி.22:30)
என்ற பரிபாடலும்
“நேர்மணி நேர்முக்காழப் பல்பல கண்டிகைத்
தார்மணி பூண்ட தமனிய மேகலை” (கலி.96:10-15)
என்ற கலித்தொகையும்
“பொலம்பசும் பாண்டிய காசுநிரை அல்குல்” (ஐங்.310.1)
என்று ஐங்குநூறும் இடுப்பில் அணியும் அணிகலன்களைக் கூறுகின்றன.
“…. தெண்நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்தூற்று” (நற்.110.45)
தெளிந்த ஒளியுடைய முத்துக்களை உள்ளே பரலாக இட்டுச் செய்த பொற்சிலம்பை அணிந்த சிறு பெண்ணைப் பற்றி அறியமுடிகிறது.
சிலம்பில் அணிகலன்கள்
சிலம்பு பற்றிக் கூறும் சிலப்பதிகாரத்தில் மாதவி அணிந்த அணிகலன்களாக விரலணி (கான்மோதிரம்), பரியகம் (கார்சவடி) நூபுரம் (சிலம்பு) பாடகம், சதங்கை. அரியகம் (பாதசாலம்) குறங்குசெறி (கவான்செறி. விரிசிகை, கண்டிகை (மாணிக்கவளை), கே தோள்வளை, சூடகம், கைவளை (பொன்வணா) பரியகம், (பாசித்தாமணி, கைச்சரி), வால்வளை (சங்கவளை, வெள்ளிவளை), பவழவளை, வாளைப் பகுவாய் மோதிரம், மணி மோதிரம், மரகத் தாள் செறி(மரகதக் கடைசெறி) சங்கிலி மறத்தொடரி. நுண்ஞாண் ஆரம், கயிற்கடை, யொகுழுகிய கோவை (பின்றாலி), இந்திர நீலக் கடிப்பிணை (நீலக்குதம்பை) தெய்வ வுத்தி (திருத்தேவி), வலம்புரி, தொய்யகம் (தலைப்பானை, பூரப்பாளை), புல்லகம் (தென்பல்லியும் வடபல்லியும்) என 27 வகை அணிகள் அணிந்திருந்ததாகச் சிலப்பதிகாரக் கடலாடுகாதை கூறுகின்றது. இவற்றுள் அடங்காத வேறு சில அணிகளும் அக்காலத்திருந்தன. அவற்றுள் ஒன்று ஆடை அல்லது சூடாமணி, பெண்டிர் அரைப்பட்டிகை மட்டும் மேகலை, காஞ்சி, கலாபம், பருமம், விரிசிகை என ஐந்து வகையாக இருந்தமையையும் சிலப்பதிகாரம் வழி அறியமுடிகிறது.
முடிவுரை
- சங்ககாலப் பெண்டிர் இயற்கையானப் பொருட்களைக் கொண்டு அணிகலன்களாக அணிந்தனர்.
- காலம் செல்லச் செல்ல வாணிகமும், தொழில் நுட்பமும் வளர்ச்சியடைந்த நிலையில் முத்து, பவளம், மாணிக்கம், மணி போன்ற பொருட்களைக் கொண்டு அழகுபடுத்தி அணிகலன்களை உருவாக்கினர்.
- சிறந்த வகை அணிகலன்களை சங்ககால மக்கள் அணிந்திருந்தனர் என்பதை உணர முடிகிறது.
- அணிகலன்கள் சங்ககால மக்களின் வாழ்க்கையோடு எல்லா நிலைகளிலும் இருந்தமையை தெளிவுற அறியமுடிகிறது.
துணை நின்ற நூல்கள்
-
சங்க இலக்கியத் தொகுப்பு – வர்த்தமானன் பதிப்பகம்.
