Tag: இசைக்கவி ரமணன்

  • பரதாஞ்சலிக்கு ஒரு கவிதாஞ்சலி | இசைக்கவி ரமணன்

    பரதாஞ்சலிக்கு ஒரு கவிதாஞ்சலி | இசைக்கவி ரமணன்

    பரதாஞ்சலி வழங்கிய “சத்ய பாரதி சுந்தரம்” என்னும் விருதினைப் பெற்றுக்கொண்டு, இசைக்கவி ரமணன் பொழிந்த கவிமழை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • இயல்பாய் வாழ்வோம் | இசைக்கவி ரமணன் பாடல்

    இயல்பாய் வாழ்வோம் | இசைக்கவி ரமணன் பாடல்

    இசைக்கவி ரமணன் இயற்றிய ஓர் அமர கவிதை. இதில் ஒவ்வொரு சொல்லும் அமுதம். கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள் : கவியரசு கண்ணதாசன் விழா I கம்ப தரிசனம்

    சிங்கப்பூரில் நிகழ்ச்சிகள் : கவியரசு கண்ணதாசன் விழா I கம்ப தரிசனம்

    வணக்கம்.

    சிங்கப்பூர் அழைக்கிறது! இரண்டு நிகழ்ச்சிகள்:

    1. சிங்கப்பூர் எழுத்தாளர் கழகம் நடத்தும் கவியரசு கண்ணதாசன் விழா – 19.11.2022 சிங்கப்பூர் நேரம் மாலை 5.30 மணிக்கு (இந்திய நேரம் மதியம் 3.00 மணிக்கு) ‘கவியரசரின் பாடல்களில் இலக்கியச் சுவை’ என்னும் தலைப்பில் பேசுகிறேன். (ஆங்கில அழைப்பிதழில் நேரலைச் சுட்டி இருப்பதைக் காண்க).

    2. 20.11.2022 ஞாயிறு சிங்கப்பூர் நேரம் மாலை 6.30 மணிக்கு (இந்திய நேரம் மாலை 4 மணிக்கு) லிஷா மற்றும் லிஷா இலக்கிய மன்றம் வழங்கும் என் “கம்ப தரிசனம்” நூல் வெளியீடு. இதில், சிங்கப்பூரின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர், மதிப்புக்குரிய திரு. கா.சண்முகம் அவர்கள் சிறப்பு விருந்தினராக வந்து என் நூலை அறிமுகம் செய்கிறார். (நேரலை ஏற்பாடு உறுதியானதும் தெரிவிக்கிறேன்).

    சிங்கப்பூரில் உள்ள அன்பர்கள் அவசியம் வருக! மற்றோர் நேரலையில் இரண்டு நிகழ்ச்சிகளையும் கண்டு மகிழ்க!

    அன்புடன்,
    ரமணன்

    Share
  • மாதம்தோறும் மகாகவி | இசைக்கவி ரமணன்

    மாதம்தோறும் மகாகவி | இசைக்கவி ரமணன்

    வணக்கம்.

    சேவாலயா – மதுரத்வனி இணைந்து வழங்கும் “மாதம்தோறும் மகாகவி” தொடர் நிகழ்ச்சி.

    சென்ற மாதம் “பரமகுருவும் பாரதியும்” என்ற தலைப்பில் சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டேன். இந்த மாதம் 14 ஆம் தேதியும் அதன் தொடர்ச்சிதான்.

    சென்னை, ஆர்கே கன்வென்ஷன் செண்டர், லஸ் முனை அருகில், மாலை 6.30 மணி

    நேரிலே வாருங்கள்! இல்லையேல் நேரலையில் காணுங்கள்!

    பாரதியைத் தெரிந்து கொள்வது நம் அனைவருக்கும் நன்மை பயப்பது.

    அன்புடன்,
    இசைக்கவி ரமணன் 

    Share
  • மின்னல் பிஞ்சு | இசைக்கவி ரமணன் கவிதை

    மின்னல் பிஞ்சு | இசைக்கவி ரமணன் கவிதை

    இசைக்கவி ரமணன் வழங்கும் ‘மின்னல் பிஞ்சு’ என்ற அழகிய கவிதையைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • மழை வீழும் நேரம் | இசைக்கவி ரமணன் பாடல்

    மழை வீழும் நேரம் | இசைக்கவி ரமணன் பாடல்

    இசைக்கவி ரமணன் இயற்றி இசையமைத்துப் பாடிய மழை வீழும் நேரம் என்ற இனிய பாடலைக் கேட்டு மகிழுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • காலங்களில் அவன் வசந்தம் – 72ஆவது நிகழ்ச்சி

    காலங்களில் அவன் வசந்தம் – 72ஆவது நிகழ்ச்சி

    இசைக்கவி ரமணன் வழங்கும் காலங்களில் அவன் வசந்தம் – 72ஆவது நிகழ்ச்சி.

    சிறப்பு விருந்தினர் – முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் (சிங்கை)

    Share
  • பாமரன் பார்வையில் பாரதி – நூல் வெளியீட்டு விழா

    பாமரன் பார்வையில் பாரதி – நூல் வெளியீட்டு விழா

    அன்பர்களே!

    வணக்கம்.

    முதன்முதலாக நான் பாரதியைப் பற்றி எழுதிய நூல் “பாமரன் பார்வையில் பாரதி.” இதை ‘தினமலர்’ நாளிதழைச் சேர்ந்த தாமரை நிறுவனம் வெளியிடுவதும், அது பாரதியின் நினைவு நூற்றாண்டில் வெளியாவதும் சிறப்பு.

    நண்பர்கள் சேவாலயா முரளியும், ராமகிருஷ்ணனின் மதுரத்வனியும் இணைந்து வழங்கும் ‘மாதம் தோறும் மகாகவி’ சொற்பொழிவுத் தொடருக்காக நான் எழுதிய குறிப்புகளே இந்த நூலுக்கு மூல காரணம்.

    இந்த நூலுக்கு தமிழறிஞர் திரு. ம.வே.பசுபதி ஐயா அவர்கள் ஆசியுரை வழங்கியிருப்பது எனக்குப் பெரும் பெருமை.

    செப்டம்பர் 8 புதன் கிழமை மாலை 6 மணிக்கு, சென்னை மயிலாப்பூரில், லஸ் கார்னர் அருகிலுள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில், நூலை வெளியிடுபவர் என் நலம் விரும்பியும், புலவரும், சிறந்த எழுத்தாளரும் பேச்சாளருமான திருச்சி புலவர் திரு. இரா. இராமமூர்த்தி ஐயா அவர்கள்.

     

    நூல் வெளியீட்டைத் தொடர்ந்து என்னுடைய ‘மாதம் தோறும் மகாகவி’ சொற்பொழிவு நடைபெறும்.

    YouTube

    அரங்கில் உங்களைச் சந்திக்க அன்புடன் அழைக்கிறேன்!

    அன்புடன்,
    ரமணன்

     

    Share
  • இசைக்கவி ரமணனின் கவிதை

    இசைக்கவி ரமணனின் கவிதை

    இசைக்கவி ரமணன்

    இந்தக் கவிதையை இசைக்கவி ரமணனின் குரலில் இங்கே கேட்கலாம்

    தொங்கிச் சுழலும் உலகத்தைத்
    தொற்றிச் சுழற்றும் நோயொன்று
    பங்கம் செய்தது நம்வாழ்வை
    பணமும் இதன்முன் வெறும் ஏழ்மை
    எங்கே இருந்து வந்ததென
    இடத்தைச் சொல்லி என்னபயன்?
    எங்கும் அதுவாய் ஆகிறதே
    எல்லாம் பாழாய்ப் போகிறதே!

    நம்பிக் கைகள் ஒருபக்கம்
    நடுக்கங் கள்பல ஒருபக்கம்
    தெம்புடன் இருந்து பார்த்தாலும்
    தெரியா தேஇதன் நிசப்பக்கம்!
    வம்புச் சண்டை கிளப்பாமல்
    வதந்தி களினைப் பரப்பாமல்
    கும்பிடு போட்டுக் கைகழுவிக்
    குடிலில் ஒடுங்கும் காலமிது!

    பொறுமை தேவை மிகத்தேவை
    பொறுப்பு ணர்ச்சியோ தலைத்தேவை
    வெறுப்பும் வெறுமையும் அண்டாத
    வீர விவேகம் அதுதேவை
    கறுப்புப் பணமும் பதவிகளும்
    கால்தூ சானதிந் நோயாலே
    இருக்கும் இடத்தை விட்டெவனும்
    எங்கும் செல்ல முடியாதே!

    விழுந்து புரண்டு தவித்தோமே
    விலகி வாழ்ந்திடக் கற்போமே
    பழுதுக ளான உறவுகளைப்
    பழகிப் புதுமை செய்வோமே
    அழுந்தி நூல்கள் படித்திடுவோம்
    ஆழ்ந்து பார்ப்போம் நம்முள்ளே
    விழுந்து விழுந்து சிரித்திடுவோம்
    வீணையை மீட்டிப் பாடிடுவோம்!

    கடவுளை நம்பிக் கும்பிடுவோம்!
    கைகளை நன்றாய்க் கழுவிடுவோம்!
    கடமையை இயன்ற வரைசெய்வோம்
    கவலையை நீக்கிக் காத்திருப்போம்
    திடமாய் இருப்பது மானிடமே!
    தேவர்க்கும் இதுவோர் புகலிடமே!
    தொடாமல் விடாமல் தொடுவான்போல்
    தொடர்வோம் சீக்கிரம் விடுபடுவோம்!

    Share
  • இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது!

    -சுரேஜமீ

    இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது! – திருக்குறள் பாசறை, மஸ்கட் வழங்கியது.

    ‘இலக்கியமும் திரையிசையும்’ எனும் தலைப்பில் பேசுவதற்காக மூன்று நாட்கள் பயணமாக மஸ்கட் வந்திருந்தார் இசைக்கவி ரமணன். இனிய பல திரையிசைப் பாடல்களுக்குப் பின்னால் இருந்த தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சொல்லி மஸ்கட் தமிழர்களின் இதயங்களைக் கட்டிப் போட்டார் என்று சொன்னால் மிகையல்ல.

    எழுந்து போக மனமில்லாமல், இன்னும் கொஞ்சம் தொடராதா என்ற கேள்விதான் நிகழ்ச்சியின் வெற்றி.

    மஸ்கட் மக்களுக்கு இசைக்கவி அண்ணா அவர்கள் பாரதி யார்? எனும் நிகழ்ச்சி மூலம் ஏற்கனவே பரிச்சயம் ஆகி இருந்தாலும், இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கும், மக்களுக்குமான உறவு இன்னும் பலப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

    பாரதி யார்? எனும் நாடகத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மஸ்கட் மீண்டு வரவில்லை என்பதை, ஒவ்வொரு தமிழரும் அவருடனான உரையாடல்களில் நன்றியோடு பகிர்ந்து கொண்டனர்.

    ‘இலக்கியமும் திரையிசையும்’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திருக்குறள் பாசறை அமைப்பு, ‘வாழும் பாரதி’ எனும் விருதினை ஐயா இசைக்கவி ரமணன் அவர்களுக்கு அளித்து தனது அன்பை அவருக்குக் காணிக்கையாக்கியது.

    தாய்த் தமிழகத்தில், அன்னாரை ‘வாழும் பாரதி’ எனத் தமிழ்ச் சான்றோர்கள் கொண்டாடினாலும், அதையே விருதாக வழங்கி,

     

    வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
    வான்புகழ் கொண்டது தமிழ்நாடு! எனும்

    பாரதியின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், இந்த விருதை திருக்குறள் பாசறை வழங்கியது மிகவும் பொருத்தமே!

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரளான மக்கள் முன்னிலையில்,

    திருவாளர் குமார் மகாதேவன், இயக்குனர், ஓமான் சபூர்ஜி கம்பெனி அவர்கள்

    ‘வாழும் பாரதி’ என்ற விருதையும், பத்திரத்தையும்

    ஐயா இசைக்கவி ரமணன் அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்கள்.

    நிகழ்ச்சி அமைப்பாளர் மற்றும் திருக்குறள் பாசறை நிறுவனர் கவி. சுரேஜமீ அவர்கள் முன்னிலையில், பாரதி யார்? எனும் நாடகத்தில் மஸ்கட்டிலிருந்து தங்கள் பங்களிப்பைச் செய்த அனைத்து நடிகர், நடிகையர், குழந்தைகள் சேர்ந்திருக்க, அன்னாருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

    இரண்டு நாட்கள் நிகழ்வும் இனிதே நிறைவேற, இன்பக் கனவுகளுடனும், இனி எப்போது வருவார் எனும் கேள்வியுடனும், மஸ்கட் தமிழர்கள் காத்திருக்கின்றனர்.

    இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த திருவாளர் சுரேஷ் மற்றும் சேகர் மற்றும் நிகழ்ச்சியின் வெற்றிக்காகத் தன்னை அர்ப்பணித்த அனைத்துத் தன்னார்வத் தொண்டர்களுக்கும் திருக்குறள் பாசறை தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு,

    ஐயா இசைக்கவி ரமணன் அவர்கள் இன்னும் பல விருதுகளைப் பெற வாழ்த்துகிறது!

    – சுரேஜமீ
    12.1.2019

    Share
  • வாணியைச் சரண்புகுந்தேன்!

    இசைக்கவி ரமணன்

    விடையற்ற கேள்விகளின் வெளிச்சப் புள்ளி`

    –கவிஞர் ஹரிகிருஷ்ணன்

    கால மயக்கம்

    எது வேத காலம் என்னும் ஏகோபித்த முடிவு இன்னும் ஏற்படவில்லை. பண்டிதர்கள் ஒருவர்க்கொருவர் மாறுபடுவது ஒருபுறம் இருக்கட்டும். ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆராய்ச்சியை அரசியலும், மதங்களும் ஆளும்படி விட்டுவிட்டார்கள். அதனால் அவர்களில் ஒருவர் கூறுவதை இன்னொருவர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தொடர்ந்து நிலவும் இந்தப் பெருங்கூச்சலின் நடுவே, நமக்குச் சற்றேனும் தெளிவாகத் தெரியும் தகவல்கள் இருக்கத்தான் செய்கின்றன:

    1. ரிக்வேதம் கி.மு. 1600 ஐச் சேர்ந்தது என்றார்கள். துவாரகையில் மேல்மட்டத்தில் நடந்த ஆராய்ச்சியே அந்தக் கண்டுபிடிப்புகளை கி.மு. 1200 என்று தேதியிட்டது. மொத்தம் ஏழு மட்டங்கள் உள்ளன. அதில், இந்தக் கூற்று, மேல்மட்ட ஆராய்ச்சியால் வந்த கண்டுபிடிப்பு! அப்படியானால், ரிக் வேதத்திற்கும் துவாரகைக்கும் இடைப்பட்ட காலம் 400 ஆண்டுகள்தானா? என்ன பிதற்றல் இது?

    2. மஹாபாரதத்தின் காலம் கி.மு. 2550 லிருந்து கி.மு. 3212 வரை என்று கொள்வதற்கான ஆராய்ச்சிப்பூர்வமான தகவல்கள் இருக்கின்றன. அப்படியானால், ராமாயணக் காலம்? 3000 ஆண்டுகளேனும் முந்தியிருக்காதா? ராமன், இக்‌ஷுவாகு குலத்தில் 92 ஆவது அரசன் என்று ஒரு கணிப்பும் 62 ஆவது அரசன் என்று ஒரு கணிப்பும் இருக்கிறதென்று கேள்விப்படுகிறோம். அவனுக்குப் பல தலைமுறைகள் முன்பு ஹரிச்சந்திரன் ஆண்டான் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். ஹரிச்சந்திரன் காலத்திலேயே, காசி, உலகத்திலேயே மிகப் பழமையான நகரமாகக் கருதப்பட்டிருக்கிறது. எனில் திலீபன் காலம் எது?

    3. ரிஷிகள் சரஸ்வதி நதியின் கரையில்தான் வாழ்ந்தார்கள் என்றும், புவியியல் மாற்றங்களால் அந்த நதி புதையுண்டு போன பிறகு, அவர்கள் சிந்து நதிக்கரைக்குப் புலம் பெயர்ந்தார்கள் என்றும், அதன்பின் கங்கைக் கரைக்கு வந்தார்கள் என்றும் கேள்விப்படுகிறோம். இதில் சிந்து சமவெளி நாகரிகத்தின் காலமெது? உயர்ந்த நாகரிகத்தைக் கடைபிடித்த அந்த மனிதர்கள் என்ன மொழி பேசினார்கள்? தெரியவில்லை. பாண்டங்களில் கிடைத்த சித்திரச் சின்னங்கள் இன்னும் புதிராகவே தொடர்கின்றன.

    4. ஒரு சமூகம், ஒரு குறிப்பிடத்தக்க நாகரிக நிலையை எய்துவதற்கு எத்தனை நூற்றாண்டுகள் பிடித்திருக்க வேண்டும்?

    இவற்றையெல்லாம் மனதில் வைத்துப் பார்க்கும்போது, வேத காலம் என்பது குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்று நாம் கொள்ளலாம்.

    சரஸ்வதி யார் அல்லது என்ன?

    அவள் நதியா? இல்லை, அறிவின் தாயா? என்ற சர்ச்சையில் இன்னும் பண்டிதர்கள் ஈடுபட்டிருக்க, `அவள் இரண்டும்தான்` என்று என் குருநாதர் சொன்னதால் என்னைப் பொறுத்தமட்டில், அவர் வாக்கே இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி, அல்லது, ஹரி சொன்ன `வெளிச்சப் புள்ளி.`

    ரிக்வேதம் சரஸ்வதியைப் பற்றிப் பாடும் ஸுக்தங்களை மேலோட்டமாகப் பார்த்தால் அவை ஒரு நதியை வர்ணிப்பது போலவும், உள்ளாழ்ந்துப் பார்த்தால் அவை ஒரு தெய்வ சக்தியைக் குறித்துப் புகழ்வது போலவும் தோன்றுகிறது என்கிறார்கள் பெரியோர்.

    நதியை ஒரு பக்கத்தில் விட்டுவிட்டு, தேவியைப் பார்ப்போம்!

    சரஸ்வதி என்பது சத்தியம் என்னும் செம்பொருளிலிருந்து இறங்கிவரும் ஓர் ஊக்கத்தின் சக்தி. அது மாமுனிகளின் சித்தத்தில் தெளிவான ஞானமாக தரிசனமாகிறது. அந்தத் சித்தத்திலிருந்துதான் வேதக் கவிதைகள் வெளிப்பட்டன. சத்திய தரிசனம் கண்டவனே ரிஷி. ரிஷி என்றாலே காண்பவன் என்று பொருள். ரிஷியே கவி. சத்தியத்தின் வெளிப்பாடே கவிதை. அறியாமையே அனைத்துப் பாவங்களுக்கும் காரணம். ரிஷிகளின் கவிதையே அந்த அறியாமையைக் களையும் மருந்து. ஆம், சத்தியமே, அவித்தைக்கு முறிவு.

    சரஸ்வதி ஆனந்தமான உண்மைகளைத் தூண்டுபவள். (ஸுன்ருதானாம் சோடயித்ரி) சித்தத்தில், சத்தியத்தின் முறையான மனனங்களை விழிக்கச் செய்பவள். (சேதந்தி சுமதினாம்) அனைத்து எண்ணங்களையும் அல்லது புத்தியை (திய) ஒளிதிகழச் செய்கிறாள். (விராஜதே)

    ஸுக்தம் குறிப்பிடும் ஸமுத்ரம் கடல் அல்ல, அது இதயத்தில் கொழிக்கும் இறைவெள்ளம். ஆம், ஸமுத்ரத்திற்கு முன் ஹ்ருத வருகிறது. பின்பு, க்ருத அதாவது தெளிவு வருகிறது.

    குறைந்தது இரண்டு விதமாகப் பொருள்கொள்ளும்படி விளங்குகிறது வேதத்தின் பாஷை.

    வாக் தேவி:

    சத்தியத்தைக் கேட்கச் செய்யும் சக்தி சரஸ்வதி. சத்திய ரீங்காரமே ஸ்ருதி எனப்படுகிறது. வாக் என்பது பேச்சல்ல!

    தீயென்றால் காடெரியத் தேனென்றால் பூமகிழ

    வாய்நின்ற பேரருளே வாக்கு

    நாம் பேசுவது பேச்சு. ரிஷிகளின் பேச்சு வாக்கு. `மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்,` என்றான் பாரதி. அது வாக்கு. ஏன்? அது உச்சத்தில் இருக்கும் சத்தியம் என்னும் பிரக்ஞையிலிருந்து வருவது. மாமுனிகளின் மூலம் மந்திரங்களாக வெளிப்படுவது. மகத்தான செயல்களை நொடியில் செய்வது.

    பவபூதி சொல்வதைக் கேட்போம்:

    `எத்தனை நல்ல மனிதர்கள் என்றாலும், அவர்களுடைய பேச்சு என்பது, அவர்கள் மனதில் ஏற்கனவே இருக்கும் எண்ணங்களுக்கு ஏற்பவேதான் இருக்கும். ஆனால், ஒரு முனிவரின் வாக்கு என்பது அவருடைய மனதிலிருந்து வருவதில்லை. அது எல்லாவற்றுக்கும் மேலான சத்திய சித்தம் என்னும் தளத்திலிருந்து நேரடியாக வருவது. அப்படி அது வெளிப்படும்போது, அந்த முனிவரைச் சுற்றியுள்ள சூழல் அல்லது உலகத்தையே மாற்றவல்ல ஆக்கசக்தி வாய்ந்ததாக அது விளங்குகிறது. அது அறியாமையை அழிக்கவல்லது.“

    இதையே ஸ்ரீ அரவிந்தர் வாயிலாகக் கேட்போம்:

    `சத்தியம் என்பது நம்மை ஒளியாய், அல்லது ஒளியின் குரலாய் வந்தடைகிறது. அது நம் புத்தியில் ஒரு மாறுதலை நிகழ்த்துகிறது. நம்மிலும் நம்மைச் சுற்றிலும் ஒரு தெளிவை வலிந்து வழங்குகிறது. எண்ணத்தில் நின்ற சத்தியம், காட்சியாய் விரிகிறது. அந்த சத்திய தரிசனம் ஆன்ம சத்தியமாய் நிலைபெறுகிறது. அதுவே உணர்ச்சி, புத்தி, செயல் யாவற்றையும் சத்தியத்தின் புறப்பாடாகவே ஆக்கிவிடுகிறது. இதுவே வேதத்தின் ஜீவக் கோட்பாடு.“

    சரஸ்வதீ ஸுக்தம் (இலா, சரஸ்வதி, பாரதி:)

    சரஸ்வதி என்னும்போது, ரிக்வேதம் இலா, சரஸ்வதி, பாரதி என்னும் மூன்று தெய்வங்களைச் சேர்த்தே கொண்டாடிப் போற்றுகிறது. மஹி என்னும் பெயரும் உண்டு. மஹியும் பாரதியும் ஒன்று என்பர் பெரியோர். மனுவின் பிள்ளை இல பெண்ணாகி இலாவானான் என்று புராணக் கதை ஒன்று உண்டு. ஆனால், இந்த மூன்று தெய்வங்கள், சத்திய வேள்வியில் ஈடுபட்டிருப்பவனுக்கு பார்வை, கேட்டல், மற்றும் விரிவு மூன்றையும் வழங்குகின்றனர். பாரதி என்பவள் அகண்ட பிரகாசம். இலா, அவ்வொளியின் அகண்டத்திற்கு ஏற்பவே, அதைச் சித்தத்தில் ஒளியாக்கித் தருபவள். ஊக்கத்தைத் தரித்தவளான சரஸ்வதி, அந்த ஒளியை, அதாவது சத்தியத்தைக் கேட்கச் செய்கிறாள்! இந்த சக்திகளெல்லாம் பார்க்கக் கூடிய வடிவில் தெரிபவை!

    மங்கலமான சத்தியங்கள் மண்டிக் கிடப்பவள்

    மனதில் ஆனந்த எண்ணங்களை விழிப்புறச் செய்பவள்

    அந்த சரஸ்வதி இந்த வேள்வியை ஏற்கட்டும்!

    (சோதயித்ரி ஸுந்ருதானாம் சேதந்தி ஸுமதீநாம்

    யக்ஞம் ததே ஸரஸ்வதீ! 1:3:11)

    சித்தத்தில் தரிசனத்தைச் சிந்திக்கும் வண்ணம் நிகழவைத்து

    சத்தியமாம் பெருவெள்ளத்தை விழிப்புறச் செய்பவள் சரஸ்வதி

    அத்தனை எண்ணங்களையும் ஒளியுறச் செய்கிறாள்1

    (மஹோஅர்ண: ஸரஸ்வதீ ப்ரசேத்யதி கேதுனா

    தியோ விஸ்வா விராஜதி 1:3:12)

    தூய்மை நல்குபவள் சரஸ்வதி. நிறைவால் நிறைந்திருப்பவள். சித்தத்தில் ஞானமாய்ச் செழித்திருப்பவள். நம் வேள்வியை ஏற்பளாக!

    (பாவகா ந: ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜினீவதீ

    யக்ஞம் வஷ்டு தியாவசு: 1;3:10)

    நிறைவால் நிறைந்திருப்பவள். செழுமையின் ஆற்றல் மிகுந்தவள், சித்தத்தில் ஞானத்தைப் பாதுகாப்பவள், எங்களைக் காப்பாற்றட்டும்!

    (ப்ரணோ தேவீ ஸரஸ்வதீ வாஜேபிர் வாஜினீவதீ

    தீனாம் அவித்ரி அவது 6:61:4)

    வாக் ஸுக்தம் : ரிக்வேதம் 10:125

    இந்த ஸுக்தம், வாக் என்னும் பெண் ரிஷியின் மூலம் வெளிப்பட்டது. வேதத்தில் குறைந்தது 25 பெண் ரிஷிகளைக் காணலாம். அவர்களுள், வாக் என்னும் ரிஷி சிறப்புக்குரியவர். ஸ்ரீ ஸுக்தம் அவர்மூலம்தான் வெளிப்பட்டிருக்கிறது. அதில் அவரே பராசக்தியாக வெளிப்பட்ட அபூர்வ இடம் உண்டு. `ஷுத்பிபாசா மலாம்ஜ்யேஷ்டாம் அலக்‌ஷ்மி நாசயாமி அஹம். `பசி தாகம் போன்ற முன்னர் தோன்றிய அசுத்தங்களை, துர்பாக்கியங்களை நான் விரட்டியடிக்கிறேன்` என்று அம்பிகையே மொழிகிறாள்! அதே ரிக்கின் அடுத்த வரி அம்பிகையை இறைஞ்சுவதாக அமைந்திருக்கிறது!

    அந்த வாக் ரிஷியின் மூலம்தான் இந்த வாக் ஸுக்தமும் வெளிப்பட்டது.

    வாக் என்பது பேச்சல்ல என்று ஏற்கனவே பார்த்தோம். அது சத்தியத்தின் இதயத்திலிருந்து வருகின்ற ஊக்கம். அண்டம் முழுதும் படைப்பில் நீக்கமற நிறைந்திருக்கும் ஆர்வம். அறிவின் ஆக்கத்தின் ஊற்று.

    எனவே. ஸுக்தம், `நான் ருத்திரர்கள், வசுக்கள், ஆதித்யர்கள், மித்ரன், வருணன், இந்திரன், அக்னி, அஸ்வினி தேவர்கள் இவர்களுடன் நடக்கிறேன், தாங்குகிறேன்,` என்னும் போது வாக் என்பதன் பொருள், பெரும் பிரமிப்பில் நம்மை ஆழ்த்துகிறது.

    `உயிர்கள் உண்பதும், காண்பதும், கேட்பதும், ஏன், சுவாசிப்பதும் என்னுடைய சக்தியால். சித்தத்தை என்பால் வைக்காதவர்கள் சிதைவுறுகிறார்கள். யாரை விரும்புகிறேனோ, அவனை வலிவுடையோன் ஆக்குகிறேன். அவனை ரிஷியாய் ஆக்கி, ஞானத்தைத் தந்து, பிரம்மத்தில் நிலைபெறச் செய்கிறேன்.

    ஒரு பெண்மூலம், இந்த மகாசக்தி பேச்சாகவும் வெளிப்பட்டிருக்கிறது என்பது நம்மை வாய்புதைக்க வைக்கிறது.

    மேதா ஸுக்தம்

    `நீ வருவதற்கு முன்னர், வருத்தம் தரும் பேச்சுக்களில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம். எங்களை மகிழ்ச்சியுடன் அணுகும் அறிவின் தேவியே வருக! மங்கலமானவளே, மென்மனம் கொண்டவளே, எங்கும் நிறைந்திருப்பவளே வருக! நின் வருகையால், நாங்கள் ஒளி பெற்று, பரம சத்தியத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தும் வல்லமை பெறுவோமாக!` என்றே துவங்கும் இந்த ஸுக்தம் எதைப்பற்றிப் பேசுகிறது என்பதை விளங்கிக் கொள்வது சிரமமாக இல்லை. அறிவார்ந்த உணர்வே மேதா. Conscious awareness! Conscious intelligence!

    `தேவியே! நின்னருள் பெற்றோர் ரிஷியாகலாம். செல்வங்கள் யாவும் பெறலாம். பிரம்ம ஞானம் எய்தலாம். பலவிதமாய்ப் பல்கும் ஐஸ்வரியங்களைப் பெறலாம். எம்மீது மகிழ்ச்சி கொண்டு, அறிவோடு கூடிய செல்வங்களையே அளிப்பாயாக! சரஸ்வதி தேவியின் அறிவு, என்னுள் அருளப்படட்டும்!`

    இவள்தான் வாணி!

    saraswati

    இவள் அறிவுத் தெய்வமல்ல, அறிவின் தெய்வம்! இவளுடைய நாதத்திலிருந்தே படைப்பு. சொல்லப்போனால், இவளுடைய வாக்கே இந்த சிருஷ்டி. எனவே, இவள் தேவதையல்ல, இவளுக்கு மேல் இன்னொரு சக்தி இல்லையென்னும்படி இருக்கின்ற பராசக்தியே இவள்.

    இந்த வாணியைத்தான் பாரதி சரண்புகுந்தான். அதனாலேயே அவனில் பாரதி பூரணமாய்க் குடிகொண்டாள். வேதங்களை நேரடியாகப் பயின்றவன் பாரதி. எனவே, அவன், ஒரு தெய்வத்தைப் பற்றிப் பாடினால் அதில் வேதத்தின் சொற்கள், வேதத்தின் பொருள், வேதத்தின் கொள்கை இவை காணப்படுவதில் வியப்பில்லை. சரஸ்வதியைப் பற்றிய, மேற்குறிப்பிட்ட விளக்கங்களை மனதில் வைத்துக்கொண்டு, பாரதியின்,

    ஆதிப் பரம்பொருளின் ஊக்கம் – அதை

    அன்னை எனப்பணிதல் ஆக்கம்!

    என்னும் வரிகளை நோக்கும்போது நமக்கு மெய் சிலிர்க்கிறது!

    ..நாதமோ டெப்பொழுதும் –என்றன்

    நாவினிலே பொழிந்திட வேண்டும்…

    கண்மணி போன்றவரே

    அண்மையில் இருந்திடுவீர் – இனி

    அடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ!

    என்று அவன் பாடிய பாடல் ஸரஸ்வதி ஸ்தோத்திரம் எனப்படுகிறது. ஆனால் இது வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, பாரதி, ஸரஸ்வதி, மஹி, வாக் எல்லோரையும் ஒருங்கே சேர்த்துத் துதிப்பது போலவே இருக்கிறது.

    உள்ளதாம் பொருள் தேடியுணர்ந்தே

    ஓதும் வேதத்தின் உள்நின்று ஒளிர்வாள்

    கள்ளமற்ற முனிவர்கள் கூறும்

    கருணை வாசகத் துட்பொருளாவாள்

    என்னும் வரிகள் ரிக் வேத விளக்கமாகவே தெரிகின்றன.

    வஞ்சமற்ற தொழில்புரிந்துண்டு

    வாழும் மாந்தர் குலதெய்வமாவாள்

    வெஞ்சமர்க் குயிராகிய கொல்லர்

    வித்தை யோர்ந்திரு சிற்பியர் தச்சர்

    மிஞ்சநற்பொருள் வாணிகஞ் செய்வோர்

    வீர மன்னர், பின் வேதியர் யாரும்

    தஞ்சமென்று வணங்கிடுந் தெய்வம்

    தரணி மீதறி வாகிய தெய்வம்..

    இதுவும் வேதக் கொள்கையே! ஸரஸ்வதியைத் தொழில்களோடு இணைத்துப் பார்க்கும் தரிசனம் ஸ்ரீ அரவிந்தருடையது. அவர்தான் பாரதியின் நண்பராயிற்றே! அவர்கள் இதைப் பற்றி விவாதித்திருக்கலாம்.

    வாணி யார்? இதோ பதில்:

    வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்

    ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்

    காணுகின்ற காட்சியதாய்க் காண்பதெல்லாங் காட்டுவதாய்

    மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே தொழுவோமே!

    அறிவுமுத்து மாலையினாள் என்னும் சொற்றொடர் சிந்திக்கத்தக்கது. சனாதன தர்மத்தில் அறிவைப் பேணும் வழக்கம் உண்டே தவிர, அறிவைத் தொழும் வழக்கம் இல்லை. அப்படிச் செய்தல் அறியாமை என்று நம் முன்னோர்களின் முடிவு. ஓர் உபநிடதம் சற்றுக் கடுமையாகவே சொல்கிறது, `அறிவை மதியாதவன் முட்டாள். அறிவை வணங்குபவன் அடிமுட்டாள்,` என்று. ஏன்? அறிவு, ஒரு கருவியாக மட்டுமே இருக்க வேண்டும். அதை நாம் ஆள வேண்டும். கருவியை எஜமானனாக்கித்தான் வேதத் திருவிழியாளுக்கு, மிக்க பல்லுரையெனும் கருமையிட்டார்கள் பண்டிதர்கள். அது நம்மை ஆண்டால், நாம் ஆணவத்தின் வசம் இருக்கிறோம் என்றே பொருள். எனில், நம் அறிவு கனியாது, தெளிவடையாது. வேதத்தின் உட்பொருள் காணாது. பேச்சோடு நின்றுவிடும். வாக்கு வராது. இதைத்தான், என்னென்னவெல்லாம் அறிவுகளோ அதை முத்துமாலைகளாக்கி அணிந்திருக்கிறாள் வாணி என்கிறான் பாரதி. பாரதியின் இந்தப் பார்வை அவன் எவ்வளவு உயரமானவன் என்று நமக்குக் காட்டுகிறது.

    அந்த தேவியைச் சிறுவயதில் நேரிலும் கண்டவனாதலின் அவன் அவள் மேல் காதலே கொண்டு `பகற் பேச்சும் இரவிற் கனவும் அவளிடை வைத்த நினைவையல்லால் பிற வாஞ்சையுண்டோ?` என்று கலைமகளிடம் காதல் வயப்பட்டதை வர்ணிக்கிறான்.

    மஹா காளியின் புகழ் பாடப் புகுந்தவன்,

    வேதமாய் அதன்முன்னுள்ள நாதமாய் விளங்குமிந்த

    வீரசக்தி வெள்ளம் விழும் பள்ளம் – ஆக

    வேண்டுநித்தம் என்றன் ஏழை உள்ளம்

    என்று வாணியைத்தானே பார்த்துப் பாடுகிறான்!

    ஒரு கணம்கூட, தான் பேசக் கூடாது. தனது எண்ணம் என்ற ஒன்றிருந்து அது எத்தனை சிறப்பானதாக இருந்தாலும் அது சொல்லாக வெளிப்படுவதில் பாரதிக்கு சம்மதமில்லை. அவளுடைய வாக்கே இவனது நாவினின்று வெளிப்பட வேண்டும் என்பதே அவன் தவம்:

    வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொரு ளாக விளங்கிடுவாள்

    தெள்ளுகலைத்தமிழ் வாணி நினக்கொருவிண்ணப்பஞ் செய்திடுவேன்

    எள்ளத்தனைப் பொழுதும் பயனின்றி இராதென்றன் நாவினிலே

    வெள்ளமெனப் பொழிவாய் சக்தி வேல் சக்திவேல் சக்திவேல்!

    அவள் வெளிப்பட்டால்தான், வேதக்கருப்பொருள் தன்னைப் புறந்தள்ளி வெளிப்பட்டால்தான் அது கவிதை, மந்திரச் சொல், வாழ்ந்த பயன். அல்லவெனில், `நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெடப் புழுதியில்` எறிந்த கதைதான்.

    ஓர் அரிய அக அனுபவத்தை வைக்கிறான், பராசக்தி என்ற கவிதையில். எல்லாமாகி இருப்பவள் பராசக்தி. அவளே கதையும் கவிதையும் சித்திரமும் சிற்பமும் நாடகமுமாய்ப் பல்கும்போது வாணியாகிறாள். காவியம் பாடென்கிறாள் வாணி. தன் கால்களைத் தவிர வேறெதையும் நினைக்காதே என்கிறாள் பராசக்தி. அல்லாடுகிறது மன்றாடும் கவிஞனின் மனம். (கவிதை..)

    இந்த அற்புதக் கவிதையில்,

    சொல்லினுக் கெளிதாக நின்றிடாள்

    சொல்லை வேறிடம் சொல்ல வழிவிடாள்

    என்னும் வரிகள் பராசக்தி, வாணி இருவருக்குமே கச்சிதமாகப் பொருந்தும்! அவர் இருவரல்லவே!

    சரி, வாணியைப் பற்றி இவ்வளவு சேதிகளைத் தெரிந்துகொண்டோம். பாரதிக்கும் பாரதிக்கும் உள்ள பரவசமான பந்தத்தைக் கண்டோம். நமக்கும் வாணியருள் வேண்டுமென்று தோன்றுகிறது. அவளிடம் எதை எப்படிக் கேட்க? கவலையே வேண்டாம், பாரதியின் இந்தப் பாடலைச் சொன்னால் போதும்:

    தெளிவுறவே அறிந்திடுதல் தெளிவுதர மொழிந்திடுதல்

    சிந்திப்பார்க்கே

    களிவளர உள்ளத்தில் ஆனந்தக் கனவுபல காட்டல்

    கண்ணீர்த்

    துளிவர உள்ளுருக்குதல், இங்கிவையெல்லாம் நீயருளும்

    தொழில்களன்றோ!

    ஒளிவளரும் தமிழ்வாணி அடியனேற் கிவையனைத்தும்

    உதவுவாயே!

    இந்தப் பாட்டை, பாஞ்சாலி சபதத்தில் சூதாட்டச் சருக்கத்திற்குக் கடவுள் வாழ்த்தாக வைத்தான்! அறியாமையின் சூதிலிருந்து நம் ஆன்மா தப்பி, அகண்டப் பிரகாசமாகத் திகழவேண்டுமானால், அவளே கதி!

    இறுதியாக, தன்னுடைய ஸரஸ்வதி வணக்கம் என்னும் பாட்டில், வாணிக்கு அழகான வடிவம் தந்து அவளைச் சரணெய்துகிறான்:

    வெள்ளைக் கமலத்திலே – அவள்

    வீற்றிருப்பாள் புகழ் ஏற்றிருப்பாள்

    கொள்ளைக் கனியிசைதான் – நன்கு

    கொட்டுநல் யாழிசை கொண்டிருப்பாள்

    கள்ளைக் கடலமுதை – நிகர்

    கண்டதொர் பூந்தமிழ்க் கவிசொலவே

    பிள்ளைப் பருவத்திலே – எனைப்

    பேணவந்தாள் அருள் பூணவந்தாள்!

    வேதத் திருவிழியாள் – அதில்

    மிக்கபல்லுரை யெனும் கருமையிட்டாள்

    சீதக் கதிர்மதியே – நுதல்

    சிந்தனையே குழலென்றுடையாள்

    வாதத் தருக்கமெனும் – செவி

    வாய்ந்த நற்றுணிவெனும் தோடணிந்தாள்

    போதமென் நாசியினள் – நலம்

    பொங்குபல் சாத்திர வாயுடையாள்

    கற்பனைத் தேனிதழாள் – சுவைக்

    காவிய மெனுமணிக் கொங்கையினாள்

    சிற்பமுதற் கலைகள் – பல

    தேமலர்க் கரமெனத் திகழ்ந்திருப்பாள்

    சொற்படு நயமறிவார் – இசை

    தோய்ந்திடத் தொகுப்பதின் சுவையறிவார்

    விற்பனத் தமிழ்ப்புலவோர் – அந்த

    மேலவர் நாவெனும் மலர்ப்பதத்தாள்!

    வாணியைச் சரண்புகுந்தேன் – அருள்

    வாக்களிப் பாளெனத் திடம்மிகுந்தேன்

    பேணிய பெருந்தவத்தாள் – நிலம்

    பெயரளவும் பெயர் பெயராதாள்!

    திருஞான சம்பந்தரோடு அடியார்கள் ஜோதியில் கலந்ததுபோல்

    பாரதியோடு நாமும் வாணியைச் சரண்புகுவோம்!

    Share
  • குருவெண்பா

     

    இசைக்கவி ரமணன்

    1456219253-6062

     

    சிவனே குருவெனச் செப்பிய ஆசான்

    அவனே சிவனென் றறிந்தேன் – தவமே

    அறியா எனையும் அருளால் அணைத்தான்

    வறியன் அடைந்ததே வாழ்வு

    குருவே வெயிலாய்க் கொளுத்தி உறிஞ்சி

    குருவே மழையாய்ப் பொழிவார் – குருவே

    கரத்தைக் கொடுத்துக் கலத்தில் இருத்திக்

    கரையில் இறக்குவார் காண்!

    குருவின் திருவடியைக் கூடுவதும், அன்னார்

    அருளே கதியென் றடங்கி – இருப்பதுமே

    நல்வழி நம்வழி நம்பிக்கை யானவழி

    சொல்வ தறிந்ததிந்தச் சொல் !

    நிலையற்ற வாழ்வில் நிலையான தொன்றே

    கலைகின்ற காட்சி கலையாத தொன்றே

    குலையாமல் காக்கும் குருதேவன் பாதம்

    அலைபாயும் நெஞ்சே அறி

    பரமகுரு வந்தான்! பரிபக்கு வத்தைக்

    கரமதனில் தந்தான்! கலந்தான்! சரமாய்க்

    கவிதைமிகு கானங்கள் நான்பாட வைத்தான்

    செவியாரக் கேட்டான் சிரித்து

    விட்டுவிட்டேன் ஐயா நான் விட்டுவிட்டேன்; தாங்கவில்லை

    பட்டுவிட்டேன் ஐயா என் பாழும் விதியாலே

    தொட்டுவிட்டாய், பின்னே தொடர்ந்துவந்தாய்; போதவில்லை

    சுட்டால்தான் கிட்டும் சுகம்

    உணர்வெலாம் ஒற்றை உயிர்முனையில் கூடித்

    தணலாய்ச் சுடுதே தலைவா! அணைப்பாயா?

    இல்லை அணைப்பாயா? என்குருவே! என்னுயிரே!

    தொல்லைகள் நீங்கத் தொடு

    அன்பே குருதேவா! ஆருயிரே! ஒன்றுமில்லா

    என்மீதும் அன்பாய் இரைக்கும் கருணையென்னே!

    நன்றியன்றி வேறு நலமேதும் என்னிலில்லை

    புன்மைகள் இன்னமும் போயொழிய வேயில்லை

    சென்மத்தைக் காலமென்னும் செல்லரிக்க, அவ்வப்போ(து)

    உன்மத்தம் ஏறி உயிர்சிலிர்க்க, ஓர்கணத்தே

    கன்மம் அழிந்ததுபோல் காண, மறுகணத்தே

    கன்மமே என்விதியாய்க் கட்டி எனைஇறுக்க

    அன்பே!நான் காணும் அனுபவங்கள் யாவினுள்ளும்

    நின்றொலிக்கும் ஆதார நாதவொலி நீயன்றோ!

    உன்முகம் உன்ஸ்வாசம் உன்நினைவு உன்கனவு

    என்றோர் சுருதியில் எல்லாம் நடக்கிறது

    என்கடன் என்தவறு என்சரி என்பொறுப்பு

    என்றேதான் ஏதும் எனக்குண்டோ இங்கினிமேல்?

    நீயே பொறுப்பு நினதே விருப்பு வெறுப்பு, அன்றே

    தீயாய் வினையை எரித்தென்றன் சித்தத்

    திரிமுனையில்

    நீயன்றோ தீயாய் நிமிர்ந்து சுடரலானாய்?

    நினைவின் நிழல்கள் நிசமல்ல என்று

    நினைவு படுத்தி நெருங்கியது நீதானே?

    என்னை முடிப்பதாய் என்றைக்கோ சொன்னாயே?

    உன்முன்னில் ஓர்நாள் உயிருதற நின்றேனே

    அன்றே முடிந்ததாய் மற்றொருநாள் சொன்னாயே?

    என்னாயிற் றப்பா? எதுவும் தவறியதா?

    சின்ன மறதியா? செப்பு! சிரிக்காதே!

    ஏதும் இயலாத ஏழைநான் என்பதிலே

    பேதமின்றி உன்முன்பு பிள்ளையாய் நிற்கின்றேன்

    போதும்வா! உன்னில் பொசுக்கிவிடு! வேறிங்கே

    ஏதும்நான் கோரேன் இனி

    Share