Tag: கல்வெட்டு

  • சமணர் கல்வெட்டுகள்

    சமணர் கல்வெட்டுகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    இந்திய மதங்கள் யாவும் தந்திர யோகத்தை அடிப்டையாகக் கொண்டவையே. ஆசீவகம், புத்தம், சமணம், சீக்கியம் ஆகிய மதங்கள் தந்திர யோகிகளால் தோற்றுவிக்கப் பட்டவையே. தந்திர யோகத்தை மேற்கொண்ட வேத வேள்வியரே பின்னாளில் பிராமணர் எனப்பட்டனர். பிராமணர் தோற்றுவித்தது தான் இந்த பிச்சை எடுத்து வாழும் துறவு வாழ்க்கை முறை. பிராமணரிடம் இருந்து தான் இந்த பிச்சைத் துறவு நெறியை ஆசீவக, சமண, புத்த நெறிகள் ஏற்றுக்கொண்டன. தந்திர யோகம் தனிமனித ஒழுக்கத்தை பெரிதும்  வற்புறுத்துகிறது. பிரம்மச்சரியம், கள் உண்ணாமை, புலால் மறுப்பு ஆகியன தந்திர யோகத்தின் அடிப்படை ஒழுக்கமாகும். 2,600 ஆண்டுகள் முன்பு சமணம் வட இந்தியாவில் தோன்றியது என்ற போதும் இம்மதம் வணிகரிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றதால் தென்னகத்தில் மௌரியர் ஆட்சிக்கு முன்பேயே பரவியிருந்தது என்பதற்கு “யாற்றூர் செங்காயபனுக்கு தாவனூர் பின்அன் கூற்றன் அறுத்த அதிட்டானம் ” என்ற புகளூர் தமிழி கல்வெட்டே சான்றாகின்றது. வணிகப் படைகளின் எண்ணிக்கை குறைந்ததால் தமிழ் வேந்தர் ஆட்சி வீழ்ந்த பின் தமிழகத்தில் சமணம் சரிந்து மறைவுற்று இன்று சிறு வடிவாக மட்டுமே காணப்படுகிறது. கல்விப் புலத்திலும் இலக்கியப் புலத்திலும் சமணம் தமிழகத்தில் பெருந் தொண்டாற்றியதற்கு கல்வெட்டுச் சான்றுகளும் இலக்கியச் சான்றுகளும் உள்ளன. ஆனால் தமிழகத்தில் புத்த மதத்திற்கு அரச ஆதரவோ வணிகர் ஆதரவோ பெரிதாகக் கிட்டாததால் தமிழகத்தில் அதன் பரவல் மிக குறைவாகவே இருந்தது. எனவே சமணம் போல் அல்லாமல் அரிதாகவே புத்த மதக் கல்வெட்டுகள் தமிழகத்தில் காணப்படுகின்றன. எனினும் வரலாற்றைத் தவறான போக்கில் நடத்தும் வகையில் இலக்கியம் குறிப்பிடும் “முக்கோல் பகவர்” என்பது புத்த மதத் துறவிகளைத் தான் குறிப்பதாக தமிழில் குறு நூலே வெளியிட்டுள்ளனர். ஏதோ புத்தம் தமிழகத்தில் எல்லா இடத்திலும் பரவலாகப் பரவி இருந்தது போலவும் பின்னர் புத்த மக்களை ஊருக்கு வெளியே துரத்தி ஒதுக்கியது போலவும் காட்ட முயல்கின்றனர். மதமே இல்லாத போது எப்படி ஊருக்கு வெளியே துரத்தி இருக்க முடியும்? புத்தத் துறவு நெறிப்படி ஒருவர் தாமே சமைத்த உணவை உட்கொள்ளக் கூடாது பிறர் சமைத்த உணவைத் தான் பிச்சை எடுத்து உண்ண வேண்டும் என்பதே. பின் எப்படி “முக்கோல் பகவர்” என்பதை புத்த துறவி என்று கொள்ள முடியும். இதற்கு முரணாக முதுமையில் யோக தந்திரத்தைப் பின்பற்றி வாழ்ந்த அந்தணர் / பிராமணர் அரிசி, பருப்பு, காய் போன்றவற்றைப் பிச்சையாகப் பெற்று தாமே சமைத்து உண்டனர். இதனால் வெங்காயம், பூண்டு போன்ற துறவுக்கு ஒவ்வாத பொருளை தவிர்க்க இயலும். புத்த துறவிகள் பிறர் சமையலில் வெங்காயம், பூண்டு இவற்றை தவிர்க்க முடியாது. எனவே முக்கோல் பகவர் என்பது பிராமணரைக் குறிப்பதே. இங்கு கீழே சில சமணக் கல்வெட்டுகள் விளக்கப்பட்டுள்ள்ளன. ஈற்றாக ஒரு புத்தக் கல்வெட்டும்  விளக்கப்பட்டுள்ளது.

    காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம் வட்டம் ஆலந்தூரில் உள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோவில் நுழைவாயிலில் உள்ள 3 வரி கற்பலகைக் கல்வெட்டு

    1. ஸ்ரீ கோவிசைய கம்ப விக்கிரம வர்மற்கு யாண்டைந்தாவதின் சித்திரை முதலாகப் புலியூர்க் கோட்டத்து மாங்காடு நாட்டு மாங்காட்டு திருவராந்தானத்துக்கு [ஆர்க்]  
    2. காட்டுக் கூற்றத்து பரிபண்டத்துறை பரிசை கிழார் அமர்நிலையார் மகளார் இப்பள்ளி உடைய அநந்தவீரக் குரவர் மாணாக்கியார் கு _ _ _ அடிகள் திருவமுதுக்கு வைத்த நெல்லறுபதின் 
    3. [குறுணி] முந்நாழி நெல்லால் விக்கட்டுவோமானோம். அவிச்சொரியுந்தால் முப்பதின் பலத்தாவிட்டார். இதுக்கு முட்டாமைச் _ _ _ _  

    அராந்தானம் – சமண பள்ளி, அருகன் (ஸ்)தானம்; பரிபண்டத்துறை – வரிக் கருவூலம்; பரிசை – காவல்; திருவமுது – படையல், நைவேத்தியம்; விக்கட்டு – பகுத்து; நாழி – காற்படி; அவிச்சொரி – சோறு வைத்தல்; பலம் – 35 கிராம் நிறை; முட்டாமை – நில்லாமை

    விளக்கம் : இக்கல்வெட்டு கம்ப விக்கிரம பல்லவனுக்கு 5 ஆம் ஆட்சி ஆண்டு 874 இல் வெட்டப்பட்டது. சித்திரை மாத தொடக்கம் முதலே புலியூர் கோட்டத்தில் அடங்கிய மாங்காடு நாட்டின் மாங்காட்டு ஊரில் அமைந்த அருகன் கோவிலுக்கு  தஞ்சையின் கண்டியூருக்கு அருகே அமைந்த ஆர்க்காட்டு கூற்றத்தின் வரிக் கருவூலக் காவல் தலைவர் அமர்நிலையாரின் மகளும் இந்த சமண கோவிலின் அனந்தவீரக் குரவரின் மாணவியுமான கு_ _ _ அடிகள் கோவில் திருவமுத்துக்கு கொடுத்த நெல் அறுபது குறுணியை மூன்று காற்படியாகப் பிரித்து சோறு வடிக்கையில் முப்பது பலமாக அளவிட்டு வடிக்கச் சொன்னார். இது இடைநில்லாமல் பார்த்துக் கொள்வோம் என்று உறுதி கூறினர் கோவிலார்.

    புலியூர் என்பது இன்று சென்னைக் கோடம்பாக்கத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இன்றைய மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் அருகில் இந்த சமண பள்ளி இருந்திருக்கலாம். தஞ்சை ஆர்க்காட்டை சேர்ந்த கருவூலக் காவல்தலைவர் மகள் பெயர் சிதைந்துள்ளது. அடிகள் என்பது துறவாட்டி என்று பொருள்படுகிறது. இவள் தஞ்சை சோழ நாட்டில் இருந்து பல்லவரின் தொண்டை நாட்டில் அமைந்த மாங்காட்டிற்கு வந்து அனந்தவீரரிடம் சமண சித்தாந்தத்தை கற்றுள்ளாள். பின் அங்கேயே துறவாட்டியாகி கோவிலின் அன்றாட படையலுக்கு 60 குறுணி நெல் வழங்கியுள்ளாள் என்பதும் அதன் அன்றாட படையல் அளவு 30 பலம் என்பதும் வட்டியாக கணக்கிடப்பட்டதாகத் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இல்லாவிடில் இடைநில்லாமல் என்ற சொற் பயன்பாடு இங்கு பொருள் தராது. இந்த மாங்காட்டுக் கல்வெட்டு சமண கோவில் சிதிலமடைந்த பின் பிற்காலத்தில் அங்கிருந்து கொண்டு வரப்பட்டு ஆலந்தூர் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் அடிக் கல்லாக இடப்பட்டுள்ளது.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 63, சூலை 2004, பக். 7

    விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டாரத்தில் உள்ள பந்தல்குடி கிராமத்தில் திர்த்தங்கரர் சிற்ப பீடத்தின் மீது பொறிக்கப்பட்டுள்ள 6 வரிக் கல்வெட்டு

    1. ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு இருபத்திரண்டாவது வெண்பு னாட்டு நா
    2. லூ ரவிசேரி பள்ளிக்கு இவ்வூர் மாறஞ்சடையன் மகன் சங்கையன் ம
    3. கன் சங்கையஞ் சடையன் மகள் சடைய நற்சக்கி(யை) இந்நாட்டு “வெண்புரை திணை
    4.  வழுவிலி மகன் வழுவிலி சாத்தன்” பெற்ற சடைய நற்சக்கி மகன் சாத்
    5. தம் புகழ் மகன் புகழ் சடையேன் எம் மூத்தப்பன் வழுவிலி சாத்த
    6. னையும் எம் மூத்தம்மை சடையன் நற் சக்கியையுஞ் சாத்தி இட்ட கற்திருமேனி  

    திணை – ஒழுக்கம், நெறி, நோன்பு, விரதம்; வழுவிலி – பிழறாத; வெண்புரை – வெள்ளைப்பிறை, மூத்தப்பன் – கொள்ளுப் பாட்டன்

    விளக்கம் : முதலாம் இராசராசனின் 22 ஆம் ஆட்சி ஆண்டு கி.பி. 1007 இல் வெண்பு நாட்டில் அடங்கிய நாலூ ரவிசேரியில் உள்ள சமண பள்ளிக்கு இந்த ஊரில் வாழும் மாறஞ்சடையன் மகன் சடைய சங்கனுடைய மகன் சங்கை சடையனான பேரனின் மகள் சடைய நற்சக்கியை மணந்த இந்த நாட்டின் வெள்ளைப்பிறை நோன்பு பிறழாதவன் என்பதைக் குறிக்க “வெண்புரை திணை வழுவிலி எனப்படுவானின் மகன் வழுவிலி சாத்தன் பெற்றெடுத்த சடைய நற்சக்கியின் மகன் சாத்தன்புகழ் என்பானின் மகன் புகழ்சடையன்  எனும் நான் எமது கொள்ளுத் தாத்தா வழுவிலி சாத்தனையும் அவர் மனைவியான எமது கொள்ளுப் பாட்டி  நற்சக்கியையும் நினைவில் இருத்தி இந்த தீர்த்தங்கரர் சிலையை வடிப்பித்து நிறுத்தினேன் என்கிறான்.

    இதில் கொள்ளுப்பேரன் புகழ் சடையன் தனக்கு முன்பு வாழ்ந்த மூன்று தலைமுறையை குறிப்பிடும் முன் தன் கொள்ளுப் பாட்டிக்கு முற்பட்ட புகழ்மிக்க மூன்று தலைமுறையை குறிப்பிடுகிறான். கொள்ளுப் பாட்டியின் வம்சம் பாண்டியர் வழிவந்தாற்  போலத் தெரிகிறது. ஆக இக்கல்வெட்டில் ஏழு தலைமுறைப் பெயர்கள் குறிக்கப்படுகின்றன. Chaumasi chaudas – ஆடிப் பௌர்ணமி முதல் கார்த்திகை பௌர்ணமி வரை கடைபிடிக்கப்படும் நான்கு மாத விரத காலம் (சாதுர்மாஸ்ய விரதம்) சமணரும் சிறப்பானது. இதைத்தான் இக்கல்வெட்டு “வெண்புரை விரதம் பிறழாத” என்று குறிக்கிறதோ? தெரியவில்லை.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 96, 2015, பக். 3

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் வேடல் ஆண்டார்மடம் 21 வரிக்கல்வெட்டு

    1.   ஸ்வஸ்திஸ்ரீ கோவிராச கேசரி பர்ம[ர்]க்கு யாண்டு பதிநாலாவது சி 
    2.  ங்கபுர நாட்டுக் கீழ்வழி விடால் மாதேவி ஆராந்தி மங்கல 
    3.    முடைய குணகீர்த்தி படாரார்வழி  மாணாக்கியார் கனகவீர[க்  கு]ரத்தி 
    4.   யாரையும் மவர்வழி மாணாக்கியாரையும் தாபிஸி[க]ள் நாநூற்றுவர்க்கும் 
    5. கொள்ளாதமையில் இக்[கோயி]ற் பிள்ளைகளைந் நூற்றுவர்க்கும் வழி இலாருங் 
    6.   காத்தூட்டுவோமானோம். எங்களு[டை]ய ஸ்வரக்ஷை. இது இரஷிப்பாரடி நி[லை எ]ங்கள் 
    7. [த]லைமேலன மாதேவி அராந்[தி] மங்கலமுடைய  [கன]கவீரக் குரத்தியார்  
    8. த் தங்க _ _ ர் மகளாதனமையில் _ _  _ 
    9.  முக்கியருமிது [கா]ப்பர் அவர்கள் ஸ்வரக்ஷை. இதனை இரக்ஷிப்பார 
    10.  டிநி[லை] என் தலைமேலன  
    11.   _ _ _ டறுங்  காழாறு[ம்] மு  
    12. தலாகிய மாதேவி ஆ 
    13.  ராந்தி மங்கலமுடைய 
    14.  கநக வீரக் குரத்தியார் தங் 
    15. கள் மகளாராதிநமையில்  
    16.  இதுவெல்லாந் தங்  
    17. கள் காவல். இதனை தீங்  
    18. கு நினைத்தாந் கங்கை இடைக் குமரி இடை
    19.  எழு நூற்று காதமுஞ்ச செய்த பாவ  
    20. ங் கொள்வார். காவலனுக்கு [பிழை]த்தா 
    21. ராவார்  

    கொள்ளா – ஏற்காதமை, ஒவ்வாமை; படாரர் – துறவி, கோயில் அதிகாரி;-   குரத்தி – ஆசிரியை ; தாபிசி – தவசிகள்; ஊட்டு – சோறளி; காழார் – யானைப்படை வீரர்; பிழைத்தார் – குற்றம் செய்தவர்.

    விளக்கம் : முதலாம் ஆதித்த சோழனின் 14 ஆம் ஆட்சி ஆண்டு 885 இல் விடால் எனப்பட்ட இன்றைய வேடலில் வெட்டப்பட்ட கல்வெட்டு இது. சிங்கபுரநாட்டின் கிழக்கு வழியில் அமைந்த விடால் ஊரான ஆராந்த மங்கலமுடைய சமண பள்ளித் துறவி குணகீர்த்தியிடம் பாடம் பயின்ற மாணாக்கியான கனகவீர குரத்தி என்ற ஆசிரியையும் அவரிடம் பாடம் பயிலும் மாணவிகளையும் தவமியற்றும் துறவியர் 400 பேருக்கும் ஒவ்வாமையால் இந்த சமண பள்ளியில் பயிலும் அந்த பெண் பிள்ளைகள் ஐநூற்றுவரையும் அங்கிருந்து வெளியேற்றி விடுகின்றனர். அதனால் போக்கிடம் இன்றி தவித்த இவர்களுக்கு இடமளித்து சோறு கொடுத்தோம் என்கின்றனர் இந்த ஊரார். இது நாங்கள் தரும் பாதுகாப்பு என்கின்றனர். இதை காப்பவர் பாதம் எமது தலைமேல் ஏற்போம் என்றும் மாதேவி ஆராந்தி மங்கலமுடைய சமண பள்ளியின் கனகவீரக் குரத்தியார் தமது மகளானபடியால் _ _ _ ஊர் முக்கியரும் இதை காக்க வேண்டும் என்கின்றனர். இது அவர்களின் நற்காப்பு ஆகும் என்கின்றனர். இதனைக் காப்பவரின் அடிப்பாதம் எனது தலைமேல் இடக் கடவது _ _ _ , யானைப்படை வீரர் முதலாகிய ஆராந்த மங்கலம் வாழ்வோர்க்கு சொல்வது யாதெனில் கனகவீரக் குரத்தியார் உமக்கு மகளென ஆவதால் இது உமது காவலாகும். இதற்கு கேடு நினைப்பார் கங்கைக்கும் குமரிக்கும் இடையே 700 காத நிலப்பரப்பில் வாழ்வார் செய்யும் பாவங்களை அடைவர். அரசனுக்கு குற்றம் இழைத்தவராவார்.

    இதில் 500 மாணாக்கியர் என்பது துறவிகள் அல்லாத வெவ்வேறு சமூக பிரிவில் அடங்கிய மாணவியர் என்று கொள்ளலாம். குரத்தியரில் மணவாழ்வு கொண்டோரும் துறவாட்டியாக இருப்பாரும் உண்டு என்பதற்கு கழுமலைக் கல்வெட்டு எண்: 336 “இவன் மணவாட்டி சேந்தன் குரத்தி (ஏற்படுத்திய) திருமேனி”  என்பது ஓர் அரிய சான்று ஆகும். இந்த மாணவிகளின் வாழ்க்கை நெறி தம் துறவு நெறிக்கு ஏற்புடையதல்ல என்பதால் 400 துறவிகள் இவர்களைச் சமணப் பள்ளியில் இருந்து வெளியேற்றி விட்டனர் போலும். ஊராரிடம் தஞ்சம் புகுந்த இவர்களுக்கு ஊரார் அடைக்கலம் அளித்தனர் என்றே கொள்ளலாம். மேலும் இந்த மாணவிகள் அண்டை அயல் கிராமங்களில் வாழ்பவராக இருத்தல் வேண்டும். இல்லாவிடில் இத்தனை பேருக்கும் கிராமத்தாரால் அன்றாடம் சோறிட முடியாது. இது பெண் கல்வி அந்நாளில் மக்களால் ஊக்குவிக்கப்பட்டதற்கு அடையாளம். பெண்கள் வேதம் கற்கலாகாது என்று தான் சொல்லப்பட்டதே ஒழிய உலகியல் கல்வி கற்க தடை ஏதும் இருந்தது இல்லை என்பதால் மத வேற்றுமை பாராமல் பெண்கள் சமண பள்ளிகளில் சேர்ந்து கல்வி கற்றுள்ளனர். எனவே பண்டு சமூகத்தில் பெண் கல்வி சமணத்தால் ஓரளவு ஊக்குவிக்கப்பட்டு பரவியிருந்தது என்பது தெரிகிறது. ஆனால் தென்னிந்திய சமூக நிலையை தமது நாட் குறிப்பில் எழுதிய ஆங்கிலேயர் நடன மகளிரான தேவரடியாரைத் தவிர்த்து பிற பெண்கள் எவரும் கல்வி கற்கவில்லை என்ற குறிப்பு இசுலாமிய படையெடுப்பிற்கு பின் வந்த ஆட்சியாளரின் தவறான முடிவினால் பெண் கல்வி தடைபட்டிருக்க வேண்டும் என்றே எண்ண முடிகிறது. அரசியல் மேடையிலும் எழுதிலும் சொல்வது போல பெண் கல்வித் தடைக்கு இந்து மதமோ பிராமணரோ காரணம் அல்ல என்பதற்கு இக்கல்வெட்டு முகாமையான சான்றாகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 3 ல் பகுதி 3 & 4 பக். 224 – 225

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை வட்டம் மதுரை – திண்டுக்கல் சாலையில் அமைந்த ஊர் வடுக்கப்பட்டி 17 வரிக் கல்வெட்டு.

    1.  ஸ்வஸ்திஸ்ரீ பாகனூர்க் கூற்ற 
    2. த்து மானசித்தநல்லூராயின மா  
    3. லைக் குளத்து தான சாலையும் குளமும் அத்தா 
    4. ணிகள் பேராயி(ன)மை(யி)லி வ்வூர்க்கு மி 
    5. வ்வறத்துக்கு தீயார் நமக்குப் பகைவ்வரா(ய்) 
    6. யுங் கூலிச் சேவகரொருவர் நிற்கிலு மிவ் 
    7. வறத்துக்கு வருங் குற்றங் காப்பதாகவும் 
    8. பெருநிரவி யிரு நங்கைய் வாசனை கொள்ள 
    9. எல்க்கை வாசனை கொண்டு கல்லு நாட்டி 
    10. நப் பெருவாரியன் வேம்பன் வயிரி 
    11. (யும் தி)கையாயிரத்து அறுகை வாணிகன் 
    12. (மாணிக்) கூ(த்தனுமெ) திகைவாரியன் யிர 
    13. சாழனும் திகை வாரியன் கட்டாணை ராமனும் 
    14. ஆச்சவீர அத்தாணிகள் முனிவர் சி 
    15.  ம்புளு கலிக்கோட்டை விடங்கனும் 
    16.  அவர்கள் இது காளிப் 
    17. பேடு 

    வாசனை – நல்ஆதரவு, அருள்; அத்தாணி – அரச ஆதரவு பெற்ற வணிகர் குழு; அறுகை – அறுந்த கை; வாரியன் – மேற்பார்வையாளன்; பேடு – அச்சம்

    விளக்கம் : இது 11 ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு. பாகனூர் கூற்றத்தில் அடங்கிய மானசித்த நல்லூர் என்னும் மாலைக்குளத்தின் தானசாலையையும் அதன் நீர் வழங்கும் குளத்தையும் அத்தாணிகள் என்ற வணிகக் குழுவினரின் தம் பெயரை வைத்து, இந்த ஊருக்கும் இந்த அறத்திற்கும் கேடு செய்பவர் நமக்கும் பகைவராக கருதப்படுவார் என்று அறிவிக்கின்றனர். கூலிச் சேவகர் ஒருவர் நிலையாக நின்று இந்த அறச்சாலையில் ஏற்படும் குற்றத்தை தடுத்துக் காக்க ஏற்படுத்தப்பட்டார். பெருநிரவி எனும் வணிகர் கூட்டத்தின் இரண்டு பெண் தெய்வங்கள் (அம்மன்) நல்ஆதரவும் அருளும் கொண்டும் எல்லை தெய்வத்தின் (அம்மன்) நல்ஆதரவும் அருளும் கொண்டும் எல்லைக் கல் நாட்டியோர் பெரிய மேற்பார்வையாளன் வேம்பன் வயிரியும், திசைஆயிரத்து அறுபட்ட கை உடைய வாணியன் மாணிக்க கூத்தனும், திசைஆயிரத்து மேற்பார்வையாளன் வீர சோழனும், திசை ஆயிரத்து மேற் பார்வையாளன் கட்டாணை இராமனும், திசை ஆயிரத்து வீரர்கள் அரச ஆதரவு வணிகரான அத்தாணிகள், சமண முனிவர் சிம்புளுவின் ஆதரவு பெற்ற கலிக்கோட்டை விடங்கனும் ஆவர் என்று ஆறு வணிகரின் பெயர்கள் குறிக்கப்படுகின்றன. அவர்களுடைய அச்சம் தரும் காளியும் காவலுக்கு நிறுத்தப்பட்டது.

    சமணரில் பெரும்பாலார் வணிகர் என்பதற்கு வணிகரின் இந்த சமணக் கொடையே சான்று. தமிழ் வேந்தராட்சி நீங்கி அயலவர் ஆட்சியில் தமிழ் வணிகர் கீழ்நிலை எய்தியதால் வணிகர் ஆதரவு குன்றி சமண சமயம் தமிழகத்தில் ஒழிந்தது.

    பார்வை நூல்: பாண்டிய நாட்டில் சமணம் பக். 446

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஆலத்தூர் யாளிக் கல் 8 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ சிந்தரையன் மகளார் நம்
    2. பிராட்டியார் வானவன் மாதே
    3. வியார் சிற்றாச்சர் வடிக்க மணவா
    4. ட்டி _ _ _ ந்து தவப்பட்டு ஆலந்தூர
    5. டிகள் பள்ளி ஆளாநின்ற காலத்து வீர சங்
    6. காதப் பெரும்பள்ளி என்று பெருமாநடிக
    7. ள் நாமத்திலே உள்ளோசஞ்யுஞ் செயிவித்து பு
    8. துக்குவித்தார்   

    சிற்றாச்சர் – சின்னம்மை, சித்தி; தவப்பட்டு – தவமியற்றி; பெருமானடிகள் – வேந்தன்; சஞ்யு –  ஒலிக்கும் மணி

    விளக்கம் : இக்கல்வெட்டு கொடும்பாளூர் இளவரசியும் முதலாம் இராசராசனின் பட்டத்து அரசியுமான வானவன் மாதேவியை குறிப்பதால் இது 10 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு எனத் தெரிகிறது. சிந்தரையன் மகளும் இளவரசியும் ஆன, வேந்தன் இராசராச சோழனின் பட்டத்து அரசி வானவன் மாதேவிக்கு சித்தியுமான வடிக்க மணவாட்டி இங்கு வந்து தவம் செய்த சமண பள்ளியை, ஆலந்தூர் அடிகள் இந்த சமண பள்ளியின் அதிகாரியாக இருக்கின்ற போது இச் சமண பள்ளியைப் புதுப்பித்து மனவெழுச்சி தரும் ஒரு மணியும் செய்வித்து அதற்கு வீர சங்காதப் பெரும் பள்ளி என்று தன் கணவனான வேந்தனின் (கொங்கு சோழன் வீரசோழ பராந்தகன்) பெயரை சூட்டுவித்தாள். இதன் மூலம் கொங்கு சோழருக்கும் தஞ்சை சோழருக்கும் உள்ள உறவு வெளிப்படுகிறது.

    சிந்து தேச அரசன் தெற்கே யாத்திரை வந்த போதோ அல்லது வடிக்க மணவாட்டியின் பாட்டன் வீட்டார் வடக்கே யாத்திரை சென்ற போதோ வானவன் மாதேவியின் பாட்டியை மணந்துள்ளான் என்று கொள்ளலாம். இதன் மூலம் வானவன் மாதேவியின் பாட்டன் சிந்து தேச அரசன் என்று தெரிகிறது. அரச குடும்பத்தவர் இப்படி இனம், மொழி, பண்பாடு கடந்து இன்னொரு அரச குடும்பத்துடன் உறவு கொள்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இதில் வேடிக்கை என்ன என்றால் இந்த தமிழக அரச குடும்பத்தவர் ஆரிய வெண் தோலும் குருதியும் உள்ளவர் என்ற போதும் இந்த நிலவுடைமை ஆண்ட பரம்பரை மார்தட்டிகளை மட்டும் ஏனோ ஆரியர் என்று அடையாளப் படுத்தாமல் ஏமாளியான கருத்த பார்ப்பானை மட்டும் ஆரியனாக அடையாளப்படுத்துவதானது தமிழரை முட்டாள் ஆக்கும் உத்தி ஆகும். தமிழர் தான் இந்த முட்டாள் தனத்தை உதறித் தள்ள வேண்டும். இக்கல்வெட்டால் இராசராசன் வேந்தனாக பட்டம் சூட்டப்படும் முன்பே அவன் பட்டத்து அரசி வானவன் மாதேவி இங்கு சிறப்பு அடையாளமாக குறிக்கப்படுகிறாள் என்றால் இராசராசன் புகழ் வேந்தனாகும் முன்பே தென்னகத்தில் விரிந்து பரவி இருந்தது என்று தானே பொருள்?

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 253

    திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஆலத்தூர் சமண பள்ளி முன் மண்டப நிலையில் உள்ள 9 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி  ஸ்ரீ கோநாட்டானேன் வீ
    2. ரசோழப் பெருமானடிகளுக்குத் திரு
    3. வெழுத்திட்டுச் செல்லாநின்ற யாண்டு முப்
    4. பத்தேழாவது ஆனித் திங்கள் முதல் _ _ 
    5. ஆலந்தூர் வீரசங்காதப் பெரும்பள்ளியில் 
    6. இவ்வருக தேவர் _ _ _ வயிற்று 
    7. நிலன் _ _ நாலெல்லை ஆக 
    8.  _ _ _ _ _ 
    9. வழி ஏழச்சம் ஒழியாமல் அறுவான்.

    செல்லாநின்ற – நடப்பாண்டு, current year; பெருமானடிகள் – வேந்தர்; திருவெழுத்திட்டு – முடிசூடி; வயிற்று – உணவு; ஏழு அச்சம் – ஏழு தலைமுறை; ஒழியாமல் – தங்காமல்

    விளக்கம் : கொங்கு சோழன் வீரசோழ பராந்தகனுக்கு  முடிசூட்டி 37 ஆம் ஆண்டு (கிபி 979) ஆகையால் ஆனி  மாதம் முதலாக ஆலந்தூரில் உள்ள வீரசங்காதப்  பெரும்பள்ளியாம் இந்த சமண கோவில் அருகருக்கு அன்றாடம் அமுதூட்ட  கோநாட்டவனால் நிலக்கொடை வழங்கப்பட்டு அதன் நான்கு எல்லையாக கை _ _ _ _ _ _ என்று எல்லை குறிப்பிட்ட இடம் சிதைந்து விட்டது. இந்த ஏற்பாட்டை அழிப்பவன் வழியினர் ஏழு தலைமுறைக்கு தங்காமல் அழிந்து போவான். ஒரு தலைமுறை அழிந்தாலே அடுத்த தலைமுறை தொடராது பின் எப்படி ஏழு தலைமுறை செல்லுமோ? புரியவில்லை.

    இதற்கு மேலுள்ள வடிக்க மணவாட்டி கல்வெட்டின் காலத்தை கணிக்க இக்கல்வெட்டு பெரிதும் உதவுகிறது. இக்கல்வெட்டில் அவள் குறிப்பிடும் வீரசங்காதப் பெரும்புள்ளி என்ற பெயர் இடம் பெறுவதால் 979 க்கு முன் அக்கல்வெட்டு வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது. 980 தோடு வீரசோழன் பராந்தகன் ஆட்சி முடிந்து விடுவதால் இவனது உடல்நலம் தேற வேண்டி நோன்பு இருந்து இக்கோவிலை புதுப்பித்துள்ளாள் வடிக்க மணவாட்டி என்று கொள்ள முடிகிறது.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 253

    திண்டுக்கல் மாவட்டம் பழனி வட்டம் ஐவர்மலை (ஐயம் பாளையம்) குகைத்தளத்தின் மேல் உள்ள 7 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு

    1. சகரையாண்டு எழுநூற்றுத் தொண்ணூற்றிரண்டு
    2. போந்தன. வரகுணற்கு யாண்டு எட்டு. குணவீரக் கு
    3. ரவடிகள் மாணாக்கர் காழத்து சாந்திவீரக் 
    4. குரவர், திருவயிரை பாரீஸ்வ படாரரையு மியக்
    5. கி அவ்வைகளையும் புதுக்கி இரண்டுக்கு முட்
    6. டாவவியு மோரடிகளுக்கு சோறாக அமைந்தன 
    7. பொன் ஐந்நூற்றைந்து காணம் 

    அவ்வு – கூடும் இடம், assembly hall; போந்தன – போயின; காழத்து – மியான்மர் நாட்டு; முட்டாவ – முடிதல்; அவி – அவை, மாண்டபம்; ஓராடி – சேர்ந்து உழைப்பவர், உழைப்பாளர்.

    விளக்கம் : சக ஆண்டு 870 கழிய இரண்டாம் வரகுணவர்மப் பாண்டியனுக்கு 8 ஆம் ஆட்சி ஆண்டில் 870 இல் குணவீரக் குவரடிகளின் மாணவரான மியான்மர் நாட்டைச் சேர்ந்த சாந்திவீரக் குரவரையும் திருவயிரையின் பாரீஸ்வ கோயில் அதிகாரியையும் இணைத்து இயக்கி இங்கத்து பழுதுபட்ட கூடங்களை புதுப்பித்து அவை இரண்டையும் கட்டி முடிக்கவும் கூடம் கட்டும் உழைப்பாளிகளுக்கு சோறிடவும் மொத்தம்  505 காணம் பொன் முதலிடப்பட்டது என்று கணக்கு காட்டப்பட்டுள்ளது.

    சமண அற நூல்களைக் கற்க பர்மாவில் இருந்தும் மாணவர் தமிழகம் வந்தது இதன் மூலம் தெரிகின்றது. கல்வெட்டில் வரகுண பாண்டியன் ஆட்சி ஆண்டும் சக ஆண்டும் ஒருங்கே குறிக்கப்பட்டது காலக் கணிப்பிற்கு பெரிதும் உதவுகின்றது. பாண்டியர் ஆட்சி கொங்கில் சில காலம் இருந்துள்ளதால் கொங்கில் அது சமண பரவலுக்கு [பெரிதும் ஆதரவாயிற்று என்று கொள்ளலாம்.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 253

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டம் சாத்தமங்கலம் ஊரில் சந்திரசுவாமி கோயில் அருகே உள்ள பெருமாள் பாறை என்னும் இடத்தில் உள்ள 8 வரிக்  கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கம்ப பன்மற்கு யாண்
    2. டாறாவது காடகதிரையர் ம
    3. ணவாட்டி மாதவி யித்திருக்கோ
    4. யில் புதுக்கி முகமண்டக மெ
    5. டுப்பித்து பாழி புதுக்கி யக்
    6. கா படாரி திருக்கோயில் லெடு
    7. ப்பித்து இப்பள்ளிக்கு கிட்ட 
    8. பெரு மணி ஒன்று ஊட்டு(வி)த்தாள் 

    பாழி – சமண முனிவர் தங்கும் இடம்; படாரி – அம்மன்; கிட்ட – செம்பு; ஊட்டு – விருந்து

    விளக்கம் : பல்லவன் கம்ப வர்மனின் 6 ஆவது ஆட்சி ஆண்டு 875 இல் காடகதிரையர் என்ற வணிகருக்கு மனைவியான மாதவி என்பவள் இந்த சமணத் திருக்கோவிலை புதுப்பித்து அதில் முக மண்டபம் கட்டியும், சமண முனிவர் தங்கும் இடத்தைப்  புதுப்பித்தும், யக்ஷிக்கு புதிதாக ஒரு கோயில் கட்டியும், இந்த சமண கோவிலுக்கு செம்பினால் ஆன பெரிய மணி ஒன்றைக் கட்டியும் மக்களுக்கு விருந்து கொடுத்தாள்.

    காடகதிரையர் என்ற சொல் இவர் காட்டுவழியில் வரித் தண்டல் உரிமை பெற்ற வணிகப் படைத்தலைவர் என்று விளங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டம் சிறந்த சமணர் ஊர்களை கொண்ட மாவட்டம் என்பதற்கு இங்கு அமைந்த சமண தளங்களே சான்று. இதற்கு இந்த மாவட்டம் அதிகமாக சமணத்தை பின்பற்றிய கங்கர், நுளம்பர், வாணர் படையெடுப்பிற்கு ஆட்பட்டதே காரணம் எனலாம்.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி 13, அதில் திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி 2, பக். 104 த நா தொ து வெளியீடு.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கழுகுமலைப் பேரூராட்சி கழுகுமலை வேட்டுவன் கோவில் 7 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்ரீ திரும[லை]க்  
    2. குறத்திகள் 
    3. மாணாக்கன் ஏ
    4. னாதி குத்த
    5. னஞ் சாத்திச்  
    6. செய்வித்த ப
    7. டிமம் 

    ஏனாதி – வில்வீரர் படைத்தலைவன்; படிமம் – கற்சிலை; குரத்தி – ஆசிரியை

    விளக்கம் : திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தில் உள்ள திருமலையின் சமண பள்ளியைச் சேர்ந்த ஆசிரியைகளிடம் பாடம் பயின்ற மாணாக்கன் ஏனாதி குப்தன் என்பவன் தன் முன்னோரை நினைந்து செய்வித்த தீர்த்தங்கரர் சிற்பம் இது.

    இவனது ஊர் திருமலை என்று கொள்ளும்படியாக இவன் இளவயதில் இங்கத்து ஆசிரியைகளிடம் பாடம் பெற்றுள்ளான். ஆசிரியைகள் ஆண் மாணவருக்கும் பாடம் புகட்டியுள்ளனர் என்பது இதனால் தெரிகிறது. இவனது இயற்பெயர் குறிக்கப்படவில்லை. குப்தன் என்பது வணிகருக்குள்ள வர்ணப் பட்டம் ஆகும். அதன் தமிழ் வடிவம் தான் குத்தன். அதே நேரம் இவன் விற்படைத் தலைவனாகவும் இருந்துள்ளான் என்பது ஏனாதி பட்டத்தால் விளங்குகிறது. இக்கல்வெட்டு சமணத்திற்கு வணிகரே ஆதரவளித்தனர் என்பதற்கு பெருஞ் சான்றாகிறது. ஏனெனில் மகாவீரரும் இதே வணிகர் குலத்தில் பிறந்த படைக் குடும்பத்தவர் என்பதே ஆகும். சமணத்தின் விரிந்த பரவல் சாதி உணர்வாலேயே ஏற்பட்டது. வணிகர் பலர் சமணத்தைக்  கைவிட்டதால் பிற்காலத்தில் சமணம் தமிழகத்தில் வீழ்ந்தது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 5 பக் 129 எண்:370

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் கழுகுமலைப் பேரூராட்சி கழுகுமலை வேட்டுவன் கோவில் 7 வரிக் கல்வெட்டு.

    1.  ஸ்ரீ திருநேற்சுறத்து அரைம
    2. லை ஆழ்வாற்குத் திருப்ப
    3. ணி செய்கிற பட்டன் சுந்தர
    4. னான நேற்சுறநாட்டுப் பெ
    5. ருங் கொல்லனுக்கு கரு
    6. ஞ்செய் கால் சந்த்ராதித்த[வல்]
    7. நிற்கச் சேத்து      

    அரை – நடு; ஆழ்வார் – தீர்த்தங்கரர்; கருஞ்செய் – குடைந்து செய்த; கால் – அடிப்பாகம், basement; சேத்து – செய்தான்

    விளக்கம் : திருநேர்சுரம் என்ற கழுகுமலையின் நடுமலையில் தீர்த்தங்கரருக்கு பூசை செய்யும் சமண பிராமணன் சந்திர சூரியர் நிலைக்கும் காலம் வரையில் நிலைக்கும்படியாக சுந்தரன் என்ற பெயருடைய நேற்சுரநாட்டின் பெருங் கொல்லனிடம் (சிற்பி) கருங்கல்லைக் குடைந்து அடித்தளம் செதுக்கச் செய்தான்.

    காலம் குறிப்பிடாத கழுமலைச் சமணக் குடைவறைக் கோவில் கல்வெட்டுகளிலேயே இது பழமையானதாக இருக்கலாம். ஏனெனில் இது அடித்தளம் அமைத்ததை பற்றிக் குறிக்கிறது. ஒரு கோவிலுக்கு அடித்தளமே முதலாகும். பிற பின்னர் தான் ஏற்படும்.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 5 பக் 127 எண்: 357

    வேலூர் மாவட்டம் வேலூர் வட்டம் சின்னபாலம் பாக்கம் சரக்குமலை உச்சியின் குகை மேற்கூரையில் செவ்வகக் கட்டத்தில் வெட்டியுள்ள 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ கோவிசைய நிருபதுங்கு 
    2. ற்கு யாண்டு பத்தொன்பதாவது பெ
    3. ரிய பெண்ணாகடத்து ஸிம்ஹ நந்தி படாரர்
    4. க்கு பங்கள நாடுடையார் கொடுக்கர் வீரத்
    5. தொழிலர் பேராற் பங்கள நாடுடையார்த் த
    6. (ள)கள் சிறிய நங்கையார் செய்வித்த ஸ்ரீ கோயில்  

    கொடுக்கன் – மகன்; வீரத்தொழிலர் – சத்திரியர்; நங்கை – அம்மையார்; தளகள் – தளவாட வீரர்கள்

    விளக்கம் : பல்லவன் நிருபதுங்க வர்மனின் 19 ஆம்  ஆட்சி ஆண்டு 888 இல் பெரிய பெண்ணாகடத்தின் சமண கோயில் அதிகாரி சிம்மநந்திக்கு பங்காளநாடு ஆளும் அரையன் மகனும் சத்திரியரும் ஆனவர் பெயரால் பங்கள நாட்டின் படை தளத் தலைவர் நினைவில் சிறிய அன்னை கட்டுவித்த திருக்கோவில் இது. இந்த பெண்ணாகடம் சித்தூர் அருகில் இருந்திருக்கலாம்.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 7, 1996, பக். 17-18

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டம் திருமலையில் சுவரோவியம் தீட்டிய குகைக்கு இடப்புற முல்லா பாறையில் வெட்டி உள்ள 8 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ கச்சியும் தஞ்சையங்கொண்ட ஸ்ரீ கன்
    2. னர தேவர்க்கு யாண்டு பத்தொன்பதாவது 
    3. கன்னரதேவ ப்ரித்வி கங்கரயர் தேவியார் கங்க மாதேவி 
    4. யார் கன்மி பொக்கிலிரு பிரிதியங்கரையர் மண
    5. வாட்டியார் பெற்றாள் நங்கையார் வை
    6. காவூர்த் திருமலை யக்ஷ படாரர்க்
    7. குத் துஞ்சா விளக்கொன்று சந்தி
    8. ராதித்தருள்ளவளவும் வைத்தார். 

    பொக்கு – கருவூலம்; கன்மி – அனுக்கர், attendar;

    விளக்கம் : காஞ்சியையும் தஞ்சையையும் கைப்பற்றிய இராட்டிரகூட வேந்தன் மூன்றாம் கிருஷ்ணனான கன்னரதேவனின் 19 ஆம் ஆட்சி ஆண்டு 953 இல் திருவண்ணாமலையை ஆண்டு கொண்டிருந்த மன்னர் கன்னரதேவ (கிருஷ்ணதேவ) பிரிதிவி கங்கரையரின் பட்டத்து அரசியான கங்க மாதேவியாரின் சார்பாக அவளது அனுக்கியான கருவூலக் காப்பாளராக இருக்கும் பிரிதியங்கரையருடைய மனைவியான பெற்றாள் நங்கை என்பவள் இந்த வைகாவூரில் உள்ள திருமலை யக்ஷ படாரர் சிலை முன்பாக அணையா விளக்கு ஒன்றை சந்திர சூரியர் உள்ள காலத்தளவும் எரியும்படி வைத்தாள்.

    இராட்டிரகூடன் கன்னரதேவனின் மேலாண்மையை ஏற்றதால் திருவண்ணாமலை மன்னன் பிரிதிவி கங்கரையன் தன் பெயர் முன்பாக கிருஷ்ணன் என்ற வேந்தன் பெயரை இணைத்துக் கொண்டான் என்று தெரிகிறது. அரசியின் அனுக்கி பிரிதியங்கரையன் மனைவி என்பதில் இருந்து இருவரும் ஏதோ வகையில் உறவினர் என்று புரிந்து கொள்ள முடிகிறது. அதனால் தான் பிரிதியங்கரயன் கருவூலக் காப்பாளனாக இருக்க முடிந்தது. முக்கிய பதவிகளில் அரச குடும்பத்தவரே அந்நாளில் அமர்த்தப்பட்டனர் என்பதற்கு இது சான்றாகிறது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 23, எண் 65, பக். 41

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம் திருமூர்த்திமலை பாறையில் உள்ள 12 வரிக் கல்வெட்டு

    1.  பரிதாபி வருடம் கார்த்திகை மாதம் 1 தி இம்முப்பட்டத்துக் கணக்காண்ட
    2. எத்துலப்ப னாயக்கரவர்கள் நாளையில் போட்ட கல்வெட்டு. அமணே சுர சுவாமியுட 
    3. பூமி அமண சமுத்திரஞ் சீர்மையில் யாதாமொருத்தன் துரைத்தனத்துக்கு வந்தா 
    4.  லும் அவருட பெண்பிள்ளை கலியாணஞ் செய்தால் அந்தப் பிள்ளைக்கு 
    5.  நால் பொன்னுக்குள்ளாக கடமை போதவும் மாடுகள் சீதனங்குடுக்கவும் யிந்த தலத்துக் 
    6. கு முறையாருக்குப் பிள்ளை குடுத்துத் தலத்திலேயும் யிருந்தால் நாலுபேர் துரைமக்கள் வைத் 
    7.  த மானியம் விட்டு நடப்பிக்கவும், இதுக்கு மிகை யாதாமொருவன் பிள்ளைப் பிரியத்துக்கு எத்தா 
    8. யுடமை போட்டாலுங் கோபாதமத்தனை பூமி சீதனங் குடுத்தாலுமவன் கங்கைக் கரையிலே 
    9. காராம் பசுவை கொண்ண தோஷத்திலே போவான். அதிகாரத்தில் சிறிது திரவியமெச்சாக
    10.  ச் சம்பாதிச்ச பாகத்திலேயுங் கூட அ_ _ செய்து தானதர்மஞ் செய்து தீர்க்கமா 
    11. ய் நடந்துகொண்டவனுக்குக் காசியில் தீர்த்தமாடின பலன் உண்டு. யி_ _  ப்படி மே 
    12. னி கண்டிருந்து மீதி நடப்பிக்க இராமே _ _ த்தமனுக்கு 

    பட்டம் – நாற்றங்கால் பகுதி, ஆட்சி; கணக்கு – ஒழுங்கு சீல ஏற்பாடு, system; கடமை – மாப்பிள்ளை வீட்டார் மணப் பெண் வீட்டாருக்கு கொடுக்கும் வரதட்சணை; நாளை – வரும் காலம்; சீர்மை – நாட்டுப்பகுதி; துரை – வரி அதிகாரி; முறையார் – உறவினர், சொந்தம்

    விளக்கம் : இது பரிதாபி ஆண்டு கார்த்திகை மாதம் 1 நாள் 1792 இல் வெட்டப்பட்ட கல்வெட்டு. எத்துலப்ப நாயக்கர் என்ற பெயர் இவரை தெலுங்கர் என்று சுட்டுகிறது. இவர் தளி பாளையக்காரர் குடும்பத்தவர் ஆவார். இந்த மூன்று பாசன நிலப்பகுதியின் ஒழுக்க சீலத்தை ஆள்கின்ற எத்துலப்ப நாயக்கர் எதிர்காலத்தில் நடந்துகொள்ள வேண்டி நிறுத்திய ஒழுக்கக் கல்வெட்டு. இது அமணேசுவர சுவாமியின் (அருகன்) நிலப்பகுதி எனவே இங்கு அநியாயம் நடக்கக் கூடாது. இந்த அமணசமுத்திர நாட்டுப் பகுதியில் எவரேனும் ஒருவன் வரி அதிகாரி பதவிக்கு வந்தால் அவருடைய பெண் பிள்ளைக்குக் கலியாணம் செய்யும் போது மாப்பிளை வீட்டாரிடம் அந்த பெண்ணுக்கு நான்கு பொன்னுக்கும் குறைவாகத் தான் வரசட்சணை வாங்க வேண்டும். பெண் வீட்டாருக்கு மாடுகளையும் சீதனமாகக் கொடுக்கலாம். இந்த தலத்திலேயே வாழும் உறவினருக்குப் வரி அதிகாரி பெண் கொடுத்து அவர்கள் இந்த தலத்திலேயே வாழ்ந்தால் நான்கு பேருக்கு வரி அதிகாரியின் ஆள்கள் மானியம் கொடுத்து நடந்துகொள்ள வேண்டும். இதற்கு மேலாக எவரேனும் ஒருவன் பெண் பிள்ளையை மணம் செய்து கொடுத்துப் பிரிவதற்கு எவ்வளவு வரதட்சணை போட்டாலும் இதாவது, பசுவின் குளம்படி அளவு நிலத்தைக் கூட வரதட்சணையாக பெற்றாலும் கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தை கொள்வான். அதிகாரத்தில் சற்றே கூடுதலாக பொருள் அதிகமாக சம்பாதித்தாலும் அந்த அதிக உபரி பணத்தை தான தர்மம் செய்து நேரிய வழியில் நடந்து கொண்டவனுக்கு காசியில் குளித்த பயன் உண்டாகும். இப்படியாக மேற்படி உள்ளபடி நடக்கச் செய்வது இராமே _ _ த்தமனுக்கு கடமை ஆகிறது.

    வேலூர் விரிஞ்சிபுரத்து படைவீட்டு பிராமணர்கள் பெண் வீட்டாருக்கு கன்யாசுல்கம் என்ற வரதட்சணை கொடுக்க முடியாமல் தம் மகனுக்கு திருமணம் நடத்த முடியாமல் துன்புற்ற போது அதற்கு எதிராக ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதே போன்றே இந்த அமணசமுத்திரத்தில் வரி அதிகாரிகள் வீட்டில் பெண் எடுத்தவர்கள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாகி எத்துலப்ப நாயக்கரிடம் முறையிட அந்த வரதட்சணைக் கொடுமைக்கு அவர் வரம்பிட்டுப் பிறப்பித்த ஆணைக் கல்வெட்டே இது. எத்துலப்பர் ஒரு உண்மையான ஆட்சியாளராக தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளார் என்று தான் கூற வேண்டும். உள்நாட்டு ஆட்சி நீங்குவதற்கு முன் உள்நாட்டு ஆட்சியாளரால் வெளியிடப்பட்ட கல்வெட்டு என்ற வகையில் இது சிறப்பானது. 1801 க்கு பின் ஆங்கிலேயர் இவருள்ளிட்ட சில பாளையக்காரர் பாளையங்களை ஒழித்து தமது பிரிட்டிசு ஆட்சியை முழுமையாகத் தமிழகத்தில் நிறுவினர் என்று ஆவணச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 260

    கோயம்பத்தூர் மாவட்டம் அவிநாசி வட்டம் ஆலத்தூர் சமணப் பள்ளி கருவறை நிலைக்காலில் உள்ள 12 வரி தமிழ் எழுத்துக் கல்வெட்டு

    1. பொங்கல் 
    2. லூர் வண்ணா 
    3. ன் நீலஞ் 
    4. செல்லன் 
    5. மணவாட்டி 
    6. காவஞ் சாத்தி 
    7. யையும் ம
    8. கள் செல்ல ப 
    9. ணத்தியை 
    10. யும் சாத்தி 
    11. நாட்டுவித்த 
    12. ல் நிலை  

    சாத்தி – நினைவில் கொண்டு பெயரிட்டு

    விளக்கம் : இதன் காலம் குறிக்கப்படவில்லை எனினும் தமிழ் எழுத்தில் உள்ளதால் சோழர் ஆட்சி ஏற்பட்ட காலத்தது என்று கொள்ளலாம். இது வணிகர் அல்லதா எளியோர் சமணத்தை பின்பற்றியதற்கு அடையாளமாக உள்ள கல்வெட்டு. பொங்கலூரில் வாழும் வண்ணான் நீலன் செல்லன் என்பவன் இறந்த தன் மனைவி காவன் சாத்தியையும் மகள் செல்லப் பணத்தியையும் நினைவில் வைத்து நிறுத்திய கல் வாயில் நிலை என்று உள்ளது.

    வணிகரின் வீரதாவளத்தில் துணி துவைத்திருந்தால் அந்த சமண வணிகரின் தொடர்பால் வண்ணார் சமண சமயத்தை தழுவி இருக்கலாம் என்பதில் வியப்பு ஒன்றும் இல்லை.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுச் சமணக் கல்வெட்டுகள், புலவர் செ இராசு, பக். 256

    திருச்சி மாவட்டம் பொன்மலை கீழ்க்குறிச்சி பௌத்தப்பள்ளி கல்வெட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ வீரத்தாவளத்தில் பௌத்தப் பள்ளிக்கு இந்த செந்தாமரைக் கண்ணநல்லூர் முதலடங்க இறையிலியான பள்ளிச் சந்தம். 

    வீரதாவளம் – வணிகப்படை வீரர் ஓய்வாக தங்கும் ஊர்; பள்ளிச் சந்தம் – பௌத்தப் பள்ளிக்கு வழங்கும் கொடை

    விளக்கம் : இந்த கல்வெட்டு அருகே 11 ஆம் நூற்றாண்டு புத்தர் சிற்பம் ஒன்று பத்மாசனத்தில் அமர்ந்து தியான நிலையில் தலை இழந்து காணப்படுகிறது. வணிகரின் படை ஆள்கள் ஓய்விற்கு தங்கும் இடமான இந்த செந்தாமரைக் கண்ணநல்லூர் என்னும் கீழ்க்குறிச்சியில் அமைந்த பௌத்த பள்ளிக்கு இவ்வூரின் பொருள் வரியையும் சேர்த்து இறையிலியாக பள்ளிக்கொடை வழங்கினர் வணிகர் என்கிறது இக் கல்வெட்டு.

    இக்கல்வெட்டின் மூலம் தென்னகத்தில் காலூன்றாத புத்த மதம் வணிகரின் ஆதரவால் சில இடங்களில் தலை தூக்கி நின்றது என்பது விளங்குகிறது. இது ஒரு அரிதான புத்த மதக் கல்வெட்டு. சில வட நாட்டு வணிகரோ அல்லது ஈழ வணிகரோ இங்கு வந்து தங்குவதால் அவரோடு நல்லுறவு பேணும் எண்ணத்தில் இங்கு புத்தர் கோவிலை வணிகர் கட்டி இருக்கலாம்.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 57, 2002, பக். 15

    Share
  • கல்வெட்டில் பண்டைய சமூகப் பதிவு

    கல்வெட்டில் பண்டைய சமூகப் பதிவு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    தனி மனிதர்கள் பலர், ஒன்றுபடச் சேர்ந்ததே சமூகம் எனச் சமூகத்திற்குத் தவறான விளக்கம் தரப்படுகிறது. 1,000 பிச்சைக்காரர்கள் ஒன்று கூடினாலும், அவ்வாறே 1,000 துறவிகள் ஒன்று கூடினாலும் அது சமூகம் ஆகாது. ஏனெனில் இந்த ஆயிரம் பேருக்கும் குடும்பப் பொறுப்பு என ஏதும் கிடையாது. என்றால் கூட்டமாகச் சேர்ந்திருப்பது சமூகம் ஆகாது. ஒரு இரயில் நின்றதும் 1,000 பேர் அதில் இருந்து இறங்கி தம் வழியே செல்கின்றனர் இது சமூகம் ஆகாது. ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் குடும்ப அமைப்பில் தான் குடும்பப் பொறுப்பு ஏற்படுகிறது. ஏனெனில் அவர்தம் குடும்பப் பொறுப்பானது இறக்கும் காலம் வரை 3-4 தலைமுறைக்கு நீள்கிறது. குடும்பத்தவர் தாம் உலகில் நிலைக்கப் பொருளைக் கொடுத்தும் கொண்டும் வாழப் பொருள் உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். இதனால் வெவ்வேறு மாற்றுத் தொழில் செய்வோரிடம் கூட்டுச் சமூகப் பொறுப்பு கட்டமைக்கப்பட்டு சமூகம் என்பது நாம் கண்கூடாகக் காணும் பொருள் போல உண்டாகிறது. தனிமனிதர்களான துறவிகள், பிச்சைக்காரர்கள் கூட்டமாக கூடினாலும் இப்படியான பொறுப்பை கொண்டிராததால் அவர்களை சமூகம் என்று அழைக்க முடியாது. ஆனால் இவர்கள்  சமூகத்தைச் சார்ந்து வாழ்பவர்கள். இந்த வெவ்வேறு மாற்று தொழில் செய்யும் குடும்பங்களால் தான் ஊர் என்பதே உண்டாகிறது. ஒரு குடும்பத்திற்கு அடுத்ததாக ஊர் என்பதே பெரிய சமூகம் ஆகும். அதுவே பல ஊர்களை உள்ளடக்கி நாடு என்று விரிகிறது. பல நாடுகள் இணைந்ததே தேசமென்ற பெரும் சமூகக் கட்டமைப்பு ஆகும். குடும்பம் சிதைந்து தனிமனித நலன் மேலோங்கினால் (ஆண் ஆணோடும், பெண் பெண்ணோடும், திருமணமில்லா இருபாலார் கூட்டு வாழ்க்கை ஆகியவற்றால்) சமூக அமைப்பு, ஊரமைப்பு, நாட்டமைப்பு ஆகியன சிதைந்து விடும். ஊர்ச் சமூகம் நாடாக விரியும் போது நிர்வாகம், பாதுகாப்பு, பணம் போன்ற சமூக முறைமைகள் தேவைப்படுகின்றன. இந்த முறைமை வந்த பின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தோர் தமக்கென தனியே படையைப் பேணி மண உறவால், படை சூழ்ந்த உறவுகளால் படைச்சாதி என்ற படைச் சமூகத்தை உண்டாக்கி இந்த சமூக இயங்கியலை கட்டுப்படுத்தினர். இந்த கட்டுப்பாட்டால் சில சமூகத்தவர் ஏற்றம் பெற்று எல்லா வசதிகளையும் உரிமைகளையும் அனுபவித்தனர். பலர் அதற்கு வெளியே வைக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்டதால் சமூகத்தில் ஏற்றத் தாழ்வு உண்டானது. அது எவ்வாறு கல்வெட்டில் வெளிப்படுகிறது என்று பார்ப்பதே இந்தப் பார்வை.

    சேலம் மாவட்டம் சேலம் வட்டம் பேளூருக்குத் தென்கிழக்கில் சின்ன ஏரிக்கரையில் உள்ள இரு கல்வெட்டுகள்

    1. ஸ்வஸ்திஸ்ரீ 
    2. மிலாடாந
    3. ஜனனாத வள
    4. நாட்டுத் துரவி நா
    5. ட்டு வெளியூர் வண்
    6. ணாத்தி தாழி வடுகி 
    7. இட்ட தூம்பு   

    வெளியூர் – இன்றைய பேளூர்; தூம்பு – மதகு; மிலாடு – ஒன்றுகூடும் இடம்; தாழி – பருத்த, குண்டான

    விளக்கம் : முதலாம் இராசராசன் சிறப்புப் பெயரான சனநாதன் பெயரில் அமைந்த நாடு என்பதை கொண்டு இதன் காலம் முதற் குலோத்துங்கன் காலம் என்று தீர்மானிக்கப்பட்டது. இராசராசன் வெற்றிக்கு பின் ஒன்றுகூடும் இடம் சனநாதன் வளநாடு என்று பெயரிடப்பட்ட நாட்டில் அமைந்த துரவி நாட்டின் திறந்த வெளியூரில் (பேளுர்) வாழும் வண்ணாத்தி குண்டு வடுகி என்பவள் இந்த ஏரிக்கு மதகு ஒன்று அமைத்துக் கொடுத்தாள். இந்த ஏரியின் நீரில் தான் அவள் நாள்தோறும் ஊரார் துணிகளைத் துவைத்துக் காயவைத்துக் கொடுத்து பிழைப்பு நடத்தி வந்தாள். இந்த மதகால் ஏரி நீர் பாசனத்திற்கு அளவோடு வெளியேறும் அல்லாவிடில் முன்பு போல கால்வாய் மூலம் அதிக நீர் வெளியேறி ஏரி நீர் விரைந்து வற்றும் என்பதே காரணம்.

    பார்வை நூல்: கொங்கு இதழ் பிப்ரவரி 1974 பக். 39

    1. ஸ்வஸ்திஸ்ரீ கொலோத்துங்க சோ
    2. ழ தேவற்கு யாண்டு 41 வது 
    3. மிலாடாகிய ஜநநாத வளநாட்டு 
    4. த் துறவிநாட்டு வெளியூரா
    5. ன ஏரியில் ஏறி
    6. வீரபட்டணத்து வண்ணான் பி
    7. ச்சன் சொக்கன்
    8.  இடுவுத்த தூம்பு.

    எறிவீரபட்டணம் – வணிகர் படை ஊர்; இடுவித்த – கட்டி நிறுத்திய

    விளக்கம் : முதலாம் குலோத்துங்க சோழனின் 41 ஆம் ஆட்சி ஆண்டு கிபி.1111 இல் சனநாத வளநாட்டில் அடங்கிய துறவிநாட்டில் உள்ள திறந்த வெளியூரில் (பேளூர்), வணிகர் தம் எறிவீரபட்டணத்தில் வாழும் வண்ணான் பிச்சன் சொக்கன் என்பவன் ஏரிக்கு மதகு கட்டினான்.

    மேல் உள்ள முதல் கல்வெட்டு போல் அல்லாமல் இதில் வேந்தனின் ஆண்டுக் குறிப்பும் பெயரும் உள்ளது. இதைக்  கொண்டு அந்த மதகும் கல்வெட்டும் இதே ஆண்டினது எனக் கொள்ளலாம். வண்ணாத்தி தாழி வடுகியும் வண்ணான் பிச்சன் சொக்கணும் உறவினர் ஆதல் வேண்டும். மிக அரிதாக வண்ணார் செய்த சமூகப் பங்களிப்பு இக்கல்வெட்டு மூலம் வெளிப்படுகிறது.

    பார்வை நூல்: கொங்கு இதழ் மார்ச்சு 1974 பக். 68

    அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டம் கண்டராதித்தம் ஊரில் உள்ள இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கருவறை தெற்குச்சுவர் பீடத்தில் உள்ள 12 வரிக் கல்வெட்டு.

    1. கோற்சடை பன்மர் திருபுவனச் சக்கர 
    2. வத்திகள் ஸ்ரீ பராக்கிரம பாண்டி
    3. ய தேவர்க்கு யாண்டு 9 ஆவது ஆனி மாதம் 10 தில் 
    4. நாலாயிர நாடாழ்வானேன் என் 
    5. மனையான அஞ்சாந் தெருவில் 
    6. மேற் சிறகில் தெற்
    7. கொரு மனை விட்டு உ 
    8. ள்ளில் மனை ஒன்று 
    9. காரிமகன் சிவநாய
    10. னுக்கு விற்றேன். 
    11. இப்படிக்கு ஊரக 
    12. ம் கற்பகத்து அறிவேந்     

    சிறகில் – குறுக்கு தெரு, cross street; உள்ளில் – உள் வீடு; ஊரகம் – ஊர் அதிகாரி; கல் பகத்து – பகுத்து விலை கூறல், கல்பெயர்த்து வை

    விளக்கம் : “முதலாம் ஜடாவர்ம பராக்கிரம பாண்டியனின் 9 ஆவது ஆட்சி ஆண்டு கி. பி. 1324 ஆனி மாதம் 10 ஆம் நாளில் நாலாயிர நாடாழ்வானான நான் இவ்வூரில் ஐந்தாம் தெருவில் மேற்கே உள்ள குறுக்கு தெருவின் தெற்கே ஒரு வீடு தள்ளி உள் இருந்த மனை ஒன்றை காரியின் மகன் சிவனாயனுக்கு விற்றுவிட்டேன்”. இப்படி விற்ற வீட்டை கல் பெயர்த்து நாட்டியதை அறிவேன் என்று ஊர் அதிகாரி கையொப்பம் இட்டார்.

    இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்ன என்றால் நாலாயிர நாடாழ்வான், காரி மகன் சிவனாயன் ஆகிய பெயர்களை உற்று நோக்குங்கள் இவர் இருவரும் அரச குடும்ப வழி மணம் புரிந்த படைத்தளபதி சாதியர் என்று தெளிவாகிறது. ஐந்தாம் தெரு வடக்கு தெற்காக நீண்டிருந்தால் தான் அதன் மேற்கில் குறுக்கு தெரு அமைய முடியும். அதில் இரண்டாம் வீடு நீண்டு தென்புற புழைக்கடையில் இன்னொரு வீட்டை கொண்டு இருந்துள்ளது. கோவிலுக்கு சற்றும் தொடர்பில்லாத இரண்டு தனி ஆள்களின் கொடுக்கல் வாங்கல் செய்தி ஏன்? எப்படி? இந்த கோவிலில் பதியப்பட்டு ஆவணமானது என்பது ஒரு கேள்வி.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I பக். 122 ஆசிரியர்: இல. தியாகராஜன்

    அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டம் கண்டராதித்தம் ஊரில் உள்ள இலட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் கருவறை தெற்குச்சுவர் பீடத்தில் உள்ள 10 வரிக் கல்வெட்டு.

    1. கோற்சடை பன்மரான திருபுவன
    2. ச் சக்கரவத்திகள் ஸ்ரீ பராக்கிறம பாண்
    3. டிய தேவற்கு யாண்டு 10 ஆவது ஆனி
    4. மாதம் 22ந் தியதி நான்று தென் பத்தரா
    5. யனேன் யென் மனையான இரண்டான் தெரு
    6. வின் மேல் சிறகில் தலைமனையில் மனை
    7. ச பணியிருக்கும் அண்ணாமலைய் மகன் நாழி
    8. ப் பிள்ளைக்கு விற்றேன். இப்படிக்கு இவை 
    9. அறிவோ
    10. ம் 

    ஞான்று – போது; தியதி – நாள்; மனை எச்ச – வீட்டு வேலை; தலைமனை – வளமனை, bungalow

    விளக்கம் : “முதலாம் ஜடாவர்ம பராக்கிரம பாண்டியனின் 10 ஆவது ஆட்சி ஆண்டு கி. பி. 1325 ஆனி மாதம் 22 ஆம் நாளின் போது தென் பத்தராயனான நான் என்னுடைய வீடான இரண்டாம் தெருவிற்கு மேற்கு வரிசையில் உள்ள பெரிய வீட்டில் வேலை செய்யும் அண்ணாமலை என்பவர் மகன் நாழிப்பிள்ளைக்கு விற்றேன். இப்படிக்கு இந்த விவரத்தை அறிவோம் என்று கையெழுத்து இட்டுள்ளனர். இதில் எதை, எந்த வீட்டை விற்றார் என்ற குறிப்பு தெளிவாக இல்லை. பத்தராயன் தன் இன்னொரு வீட்டை விற்றார் என்று கொள்வதே சரியாக இருக்கும். ஏனெனில் பெரிய வீட்டை வாங்கும் அளவிற்கு பணியாளுக்கு பணம் இருந்திருக்குமா? பத்தராயன் பெயர் அவரை அரச குடும்பத்தவர் என்று காட்டுகிறது. எனவே தான் அவருக்கு வளமனை இருந்துள்ளது.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I பக். 123 ஆசிரியர்: இல. தியாகராஜன்

    தென் ஆர்க்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் வலஞ்சுரம் பசுபதீசுவரர் கோயில் 9 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ திரிபுவனச் சக்கரவற்திகள் ஸ்ரீ இராச தேவற்கு யாண்டு 11 வது உத்தம (நீ)திய்யா
    2. பெருங் கீத்தி முத்தமிழாலையாமும் மையு நிறைந்தோர் எழுபத்தொன்பது நாட்டு மில
    3. டாகிய ஜனநாதவள நாட்டு மேலாராற்றூர் கூற்றத்து திருவலஞ்சுரத்தில் இருங்கோ
    4. ளப்பாடி நாட்டோமுங் குந்றக் கூற்ற நாட்டோமும் துண்ட நட்டோமுந் திருமுனைப்பாடி
    5. நாட்டோமுஞ் செங்குந்ற நாட்டோமும் வாணகப்பாடி நாட்டோமும் ஆண்டய் நாட்டோ
    6. மும் பங்கள நாட்டோமும் மேல்கரை நட்டோமும் கங்கப்பாடி நட்டோமும் பரணூற்(று) நா
    7. ட்டோமும் எம்மிலிசைந்து உடையார் திருவலஞ்சர உடையநார் கோயில் கல்வெட்டியதாவது இந்
    8. நாட்டு மலையமார்களும் நத்த மக்களும் இடங்கைத்திலே பாவாடை ஏறினோம். இடங்கைக்கு 
    9. கண்ணுங் கையுமாய் புல்லும் பூமியுள்ளவு நிற்க கடவோம். இதில் பிழங்கில் மாறுசாதிக்கு தாழ்வு 
    10. செய்தோமானோம்.

    இசைந்து – விரும்பி; மலையமார் நத்த மக்கள் – பார்க்கவ குல சாதியில் நயினார், உடையார் பட்டம் உள்ளவர்; பாவாடை – இறைவன் திருமேனி முன் உறுதி கொள்; பிழங்கில் – தவறினால்; மிலாடாகிய – ஒன்று கூடும் இடம், assembling point; மில் – சேர்க்கை, நெருங்குதற் கருத்து. இந்தியில் இன்றும் சந்திப்பு என்பது மிலா எனப்படுகிறது

    விளக்கம் : இரண்டாம் இராசராசன் 11 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி.1161இல் உடையார்களின் மெய்கீர்த்தியை கூறித் தொடங்கும் இக்கல்வெட்டு ” 79 நாட்டவர் ஒன்றுகூடும் ஜனநாத வளநாட்டின் மேலாராற்றூர் கூற்றத்தில் உள்ள திருவலஞ்சுரத்தில் இருங்கோளப்பாடி நாட்டு (விருத்தாச்சலம் பெண்ணாடம்), குன்றக் கூற்ற நாட்டு (பெரும்பழுவூர்), துண்ட நாட்டு (பெரம்பலூர்), திருமுனைப்பாடி நாட்டு (சேந்தமங்கலம்), செங்குன்ற நாட்டு , வாணகப்பாடி நாட்டு (விழுப்புரம் சங்கராபுரம்), ஆண்டை நாட்டு, பங்களநாட்டு (வேலூர் – திருப்பத்தூர்), மேல்கரைநாட்டு (ஈரோடு), கங்கப்பாடி நாட்டு (தருமபுரி), பரணூற்று நாட்டு என 11 நாட்டின் பார்கவ குலத்தவர் நாமே விரும்பி திருவலஞ்சுர ஈசன் கோவிலில் கல்வெட்டுவித்தது யாதெனில், இந்த நாடுகள் அனைத்தின் மலையமார், நத்த மக்கள் ஆகியோர் இடங்கைப் பிரிவிலே சேர்ந்தோம். இனி இடங்கைப் பிரிவிற்கு கண்ணும் கையுமாய் புல்லும் பூமியும் உள்ளளவும் இருப்போம் என்று உறுதி கூறுகிறோம். இதில் தவறினால் வேற்று சாதியை தாழ்வாக நடத்திவிட்டோம் என்றாகும்”.

    இக்கல்வெட்டு மூலம் பண்டு தமிழகத்தில் 79 நாடுகளுக்கு மேல் இருந்துள்ளன என்று அறிந்து கொள்ளலாம். காலம் எப்போதும் போல மாறாமல் இருந்தால் இந்த உறுதிமொழியை அப்படியே காப்பாற்ற முடியும். ஆனால் 50 ஆண்டுகள் கழித்து காலம் மாறியது பிற சாதிகளுக்கு காணி விற்க கூடாது என்று முடிவுகொண்டு இவர்களே இந்த உறுதிமொழியை தகர்ப்பதை கீழ் உள்ள கல்வெட்டுகளை படித்து விளங்கிக் கொண்டால் புரியும்.

    பார்வை நூல்: ஆவணம் 11, 2000 பக். 32

    திருச்சி மாவட்டம் முசிறி  வட்டம் கரட்டாம்பட்டி நடுகல்

    ஸ்வஸ்தி ஸ்ரீ மதிரை கொண்ட கோப் பரகேசரி பர்மருக்கி யாண்டு 35 ஆவது. இவ்வாண்டு மியமானாட்டு வள்ளுவப்பாடி, விரியூர் ஆட்டை ஊற்றத்தூர் நாட்டுப் பாடாவூர் ரெஞ் சுருனிமான்கள்  நிரை கொண்டு போக நிரைப் பின்பு சென்று ஆடு ஈடு கொண்டு பட்ட நாகன் வீரன் மகளுக்கு ஓர் (ரோ)ரால்  இறையிலி வைத்து குடுத்தோம் விரியூர் ஊராரோம்   

    சுருனி > சுருதி – கேட்டல்; நிரை – மந்தை; ஈடு – இழந்தவற்றுக்கு மாற்றாக; ஓர் ஓர் – ஒரே நினைப்பாக, இரண்டாம் கருத்து இல்லாமல், no second thought; இறையிலி – அரசனுக்கு வரி செலுத்த வேண்டாத நிலம்

    விளக்கம் : மதுரையை கைப்பற்றி ஆண்ட முதற் பராந்தகனின் 35 ஆவது ஆட்சி ஆண்டு கி.பி 942 நிகழ்ச்சி. இந்த ஆண்டில் மியமாநாட்டில் அடங்கிய வள்ளுவப்பாடி, விரியூர் ஆகிய ஊர்களின் ஆடுகளை ஊற்றத்தூர் நாட்டின் பாடாவூ(லூ)ரைச் சேர்ந்த மூப்பனார் மறவர்களான ஐந்து நாட்டு சுருதிமான்கள் மந்தையாக கொள்ளை கொண்டு போயினர். கொள்ளை கொண்ட ஆட்டு மந்தையின் பின்னே தொடர்ந்து சென்று இழந்த ஆடுகளுக்கு மாற்று ஆடுடன் மீண்டு திரும்பிய பின் வீரசாவடைந்தான் நாகன் என்பவன். அந்த வீரன் மகளுக்கு இரண்டாவது மாற்று கருத்து ஏதும் இல்லாமல் அனைவரும் ஒரே சிந்தனையுடன் முடிவெடுத்து இறையிலி நிலக்கொடை கொடுத்தோம் விரியூர் ஊராரோம் என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.

    ஐந்து நாடு என்பது ஊட்டத்தூர், திருப்பிடவூர், பாச்சில், திருவெள்ளறை, சென்னிவலக் கூற்றம் என்னும் ஐந்து நாடுகள் கொடுக்கப்பட்டு குடியேறியதால் ஐந்து நாட்டு சுருதிமான்கள், அஞ்சுநாட்டார் என்று குறிக்கப்பட்டனர். இவர்கள் இன்றைய பார்கவ குல சுருதிமான் அல்லது மூப்பனார் குல மக்கள் ஆவர்.

    பார்வை நூல்: வரலாற்று குழு வலைத்தளப் பக்கம்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெரம்பலூர் வட்டம் பெரிய குறுக்கை அகரம் இலட்சுமி நாராயண பெருமாள் சிதிலமடைந்த கோவிலில் கண்டெடுத்த 12 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ 
    2. குறுக்கைத் 
    3. திருச்சிற்றம்ப
    4. லச் சதுர்வே
    5. தி மங்கலத்
    6. துத் திருமுற்ற
    7. ங்களும் இந்
    8. த அகரமும் ஐ
    9. ஞ்சு நாட்டு
    10. ச் சுருதிமா
    11. ந்கள் கா
    12. வல்   

    முற்றம் – ஊரின் வெளியிடம், அகரம் – பிராமணர் குடியிருப்பு; சுருதிமான் – மூப்பனார் சாதி படை மறவர்.

    விளக்கம் : இவ்வூரின் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலின் மூன்றாம் இராசராசனின் 24 ஆம் ஆட்சி ஆண்டுக் (கி.பி. 1240) கல்வெட்டு இவ்வூரை “குறுக்கை திருச்சிற்றம்பலத்து சதுர்வேதி மங்கலம்” என்கிறது. சுருதிமான்கள் இடங்கைப்பிரிவினர். உழு தொழில் செய்பவர் என்கிறது ஊற்றத்தூர் மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு. இந்த ஊரின் கோவில்களைச் சுற்றியுள்ள வெளியிடங்களும் பிராமணர் அக்கிரகாரமும் ஐந்து நாட்டு சுருதிமான்களான மூப்பனார்களின் காவலுக்கு உட்பட்டவை என்கிறது இக்கல்வெட்டு. இதில் இருந்து மூப்பனார் போர் புரிபவர் குடியினர் என்று உணர முடிகிறது. போர்க்குடி என்றால் அரச குடியுடன் மணஉறவு ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. அந்த வகையில்  சுருதி மான்கள் படைத் தலைவர்களாக அரையர்களாக கிழார்களாக இருந்துள்ளனர்.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 17, பக். 8-9, த நா தொ து வெளியீடு

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பிரம்மதேசம் ஊர்த்தெருவில் நடப்பட்ட கற்பலகையில் பொறித்த 67 வரிக் கல்வெட்டு

    ஸ்வஸ்தி ஸ்ரீ / கொலோத்துங்க சோழ / தேவற்கு யாண்டு 10  ஆவது / வடகரை கரிகாலகந்ந வள / (நா)ட்டு வந்நாட்டு பிரிதிசூர சது / (ப்)பேதி மங்கலமாந பிரம / தேசத்தை எங்களய்யந் ராஜரா / ஜ  வந்நாடுடையார் இவூரை / வல்லுவந் புலியநாந  இருப / த்து நால்ப்   பேரரையந் உ / ள்ளிட்ட பள்ளிகளுக்கு காணி / செய்து குடுத்தார். ஸ்ரீ ரா / ஜராஜ தேவற்கு யாண்டு 6  / ஆவது திருவையாறுடையா / ந் கரிகால சோழநான  சனநாத / வந்நாடுடையாநும் நந்தம / ரில்  நாந _ _ _ வந்நாடுடை / யாநும் இவ்வனைவோமும்  பி / ரமதேசமுடைய பள்ளிகள் / நாட்டரையநுக்கும் புலியந் / மாதநாந மகதை நாட்டு / பேரையநுக்கும் புலியந் / பெரியாநாந வந்நாட்டு நா / டாழ்வாநுக் / கும் புலியந் / நாந திக்கும் சா / த்தந் பெரியா / நுக்கும் சோ / மந் புலிய நு / க்கும் இவர்கள் / வங்குசத்துக் / கல்லது மற் / று பிராமண / ர் வெள்ளாளருள் /ளிட்டாருக்கும் / பள்ளிக்கும் வி / ற்க கடவதல் / லவாகவும் / சந்திராத்த / வல்  முள்ளத / னையும்  எங்க / ள் வங்குசம் / __ _ / _ _ _ / _ _ _ / _ _ _ / _ _ வாலிகண்டபுரத்து _ டின் முக்கூட்டு மொக்க எழு / கும் தென்பாற்கெல்லை / க்கு வடக்கும் மேற்பாற் கெல் / லை அனுக்கூர் எல்லைக்கு கிழக் / கும் வடபாற்கெல்லை சிறுவி / சலூர் எல்லைக்கு தெற்கும் இந்த நாலெல்லைக்குப் / பட்ட நிலம் இவர்கள் இ _ _ _ / க்கு வேண்டுவநவு / ஞ் செய்து சோப்பை _ – / த்து கொடு இருந்தமை _ _ _ ம / கதை நாட்டு பேரையந்  / புலியந் பெரியாநாந வந்நாட்டு  நாடாழ்வாநும் / _ _ _ _ / ணநாத வந்நாடுடையாநும் / இராசராச வந் நாடுடையா  / னும் விருபேரமுப் / _ _ _ _ / ன் வல்லவரையன் சத்தி / யம்                

    ஐயன் – தந்தை; பேரையன் – படைத்தலைவன்; நந்தமர்  – உடையார் சாதி; வங்குசம் – வம்சம்; பள்ளிகள் – வன்னியரில் ஒரு பிரிவினர், மொக்க – முழுவதுமாக; எழுகும் – பரவும், தோன்றும்; சொப்ப – செப்பமாக, neatly; கொடு – தீங்கு

    விளக்கம் : சோழ வேந்தன் மூன்றாம் குலோத்துங்கனின் 10 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1188), வடகரை கரிகாலக்கன்ன வளநாட்டு வந்நாட்டின் ஊரான பிரிதிசூர சதுர்வேதி மங்கலமான பிரம்மதேசத்தை எங்கள் தந்தை ராஜராஜ வந்நாடு உடையார் என்னும் அரசர் அல்லது கிழார் வள்ளுவன் புலியனான இருபத்தினால் பேரரையன் உள்ளிட்ட பள்ளிகளுக்கு காணி (உரிமை நிலம்) செய்து கொடுத்தார் என்று வல்லவரையன் கூறுகிறான். இந்த வல்லவரையன் தூண்டுதலில் 34ஆண்டுகள் கழித்து இப்போது சோழ வேந்தன் மூன்றாம் இராசராசனின் 6 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1222) திருவையாறுடையான், கரிகாலச் சோழனான ஜனநாத வந்நாடுடையான், உடையார் சாதி நந்தமரில் நாந_ _ _ வந்நாடுடையான் ஆகியோர் வல்லவரையனுடன் ஒன்றாக சேர்ந்து எடுத்த முடிவு யாதெனில், “பிரம்மதேசத்தினுடைய பள்ளிகளான நாட்டரையனுக்கும், புலியன் மாதனான மகதை நாட்டு படைத் தலைவனுக்கும், புலியன் பெரியானான வந்நாட்டு நாடாழ்வானுக்கும், புலியானான திக்கும் சாத்தன் பெரியானுக்கும், சோமன் புலியனுக்கும் ஆகிய  இவர்கள் ஐந்து வம்சத்தை சேர்ந்த பள்ளிகள் தவிர்த்து வேறு எந்த பிராமணருக்கோ, வெள்ளாளருக்கோ அல்லது பள்ளிகளுக்கோ விளை நிலத்தை விற்ககூடாது. இதை  சந்திரனும் ஞாயிறும் உள்ள வரை எங்கள் வம்சத்தார் கடைபிடிக்க வேண்டும். இந்நிலம் வாலிகண்டபுரத்தின் _ _ _ டின் முக்கூட்டு இருந்து முழுவதும் பரவியுள்ள தென்பகுதி எல்லைக்கு வடக்கிலும் மேற்குப்பகுதி எல்லை அனுக்கூர் எல்லைக்கு கிழக்கும் வடபகுதி எல்லையில் சிறுவிசலூர் எல்லைக்கு தெற்கும் ஆக இந்த நான்கு எல்லைக்கும் உட்பட்ட நிலம் ஆகும்” என்று எல்லை சுட்டப்பட்டுள்ளது. இது நிறைவேற இவர்கள் வேண்டிய நடவடிக்கை எடுத்து செப்பமாக (fully, neatly) அதில் தீங்கில்லாமல் இருக்க வேண்டும். மகதை நாட்டு பேரையன், புலியன் பெரியானான வந்நாட்டு நாடாழ்வான், _ _ ஜனநாத வந்நாட்டுடையான், இராசராச வந்நாடுடையான், விருபேரமுப்_ _ _ ஆகியோர் ஐவரும் இவ்வாறு நடப்பதாக வல்லவரையனுக்கு சத்தியம் செய்து கொடுத்தனர்.

    வல்லவரையன் ஒரு குறுநில அரசன் அல்லது கிழான் என்று தெரிகிறது. இவன் தூண்டுதலால் 1222 இல் இந்த காணி விற்பனைத் தடை நடவடிக்கையை நந்தமரோடு (உடையார் சாதி) சேர்ந்து கொண்டு மேற்கொள்ளக் காரணம் எதுவாக இருக்கும் என்று எண்ணுங்கால் இது சமூக பாதுகாப்பு நடவடிக்கை அல்ல என்று மட்டும் புரிகிறது. ஏனெனில் பிராமணரோ பிள்ளைமாரோ பள்ளிகளோ இவர்களுக்கு அச்சமூட்டுபவர் அல்லர். எனவே இதை ஒரு ஒடுக்குமுறையின், அடக்குமுறையின் முதல்படியாக கொள்ள வேண்டி உள்ளது. இவர்களுக்கு தமது உழு நிலத்தை விற்றால் இவர்கள் அந்த ஊரில் வந்து குடியேறுவர். அத்தோடு நில்லாமல் இந்த அரசகுடி மண உறவுடைய படைச் சாதியார் போலவே தாமும் எல்லா உரிமைகளையும் பெற உரிமை கோருவர். அப்படி உரிமை கொடுத்தால் இந்த படைச் சாதிக்கும் புதிதாக உரிமை பெற்ற சாதியாருக்கும் வேறுபாடு இல்லாமல் போகும். முன்பு இடுப்பில் கச்சை கட்டிக் கொண்டு தம் முன் குனிந்து கைகட்டி நின்றவர் இனி அச்சமின்றி நிமிர்ந்து செல்வர். தமக்கு எந்த மதிப்பும் இனி இருக்காது  என்ற அச்ச எண்ணமே இதற்கு காரணமாக எனலாம். இதே காலகட்டத்தில் தான் கொங்கு நாட்டில் கொங்கு சோழன் வீரராசேந்திரனின் ஆட்சியில் அதற்கு முன் இல்லாத சில உரிமைகள் கோவில் பணி மக்களான கம்மாளர், சிவப்பிராமணர், தேவரடியார், கைக்கோளர், உவச்சர் ஆகியோர் தம் வீட்டு நன்மை தீமைகளுக்கு இரட்டை சங்கு, பேரிகை கொட்டலாம், வீட்டுச்  சுவருக்கு சுண்ணாம்புப் பூசலாம், வாயிலுக்கு இரட்டை கதவு வைக்கலாம், காலுக்கு செருப்பு அணியலாம், குதிரை ஏறுதல் போன்ற சலுகைகள் உரிமைகள் தரப்பட்டன என்பதை அங்கத்து கல்வெட்டுகள் உறுதி செய்கின்றன. எனவே இந்த வல்லவரையனின் கல்வெட்டின் மூலம் உண்மையாகவே இந்த சமூகத்தில் ஏற்றத் தாழ்வுகளை இந்த படைச் சாதியார் தான் அதிகாரத்தில் இருந்து கொண்டு நடப்பித்தனர் என்று உறுதியாகிறது. இந்த படைச் சாதியர் தான் இன்று தமிழகம் முழுவதும் நிலவுடைமை சாதிகளாக உள்ளனர். இவர்களில் வெள்ளைத் தோல் ஆரியர் அதிகம் உண்டு என்பது அரசகுடிக் கலப்பால் அது ஏற்பட்டது என்பதை உணர்க. இதாவது, அரசகுடிக்கு பெண் கொடுத்து அரசகுடிப் பெண்ணைக் கொண்டதால் இப்படி நேர்ந்தது எனலாம். அதனால் தான் பார் ஆண்டவர், மண் ஆண்டவர், அடக்கி ஆண்டவர், ஆண்ட பரம்பரை என்று இவர்கள் மார்த் தட்டுகின்றனர்.  இந்த கல்வெட்டின் மூலம் இக்கல்வெட்டு கூறும் உண்மைக்கு எதிர்மாறாக தான் கடந்த 150 ஆண்டுகளாக வெள்ளையர் முதற்கொண்டு தலித்தியர், திராவிடவியலர், கம்யூனித்துகள் போன்றோர் சமூகத்தில் உள்ள எல்லா ஏற்றத் தாழ்வையும் இந்து மதம் தான், சனாதன தர்மம் தான், பிராமணர் தான் ஏற்படுத்தினர் என்ற பேச்செல்லாம் பொய்ப் புனைவுகள் என்றாகிவிட்டன அன்றோ !! தமிழ்நாட்டின் 60,000 தமிழ்க் கல்வெட்டுகளும் முழுவதுமாக படிக்கப்பட்டு அச்சேறினால் வரலாற்றில் நடந்த உண்மைகள் அத்தனையும் ஆய்வின் வெளிச்சத்திற்கு வரும். பொய்கள் தகரும்.

    பார்வை நூல்: பெரம்பலூர் மாவட்ட கல்வெட்டுக்கள் செப்பேடுகள் பக். 154-156 ஆசிரியர்: இல. தியாகராஜன் & ஆவணம் 23, பக்.58 – 59

    அரியலூர் மாவட்டம் வாரணவாசி மருதமுத்துக் கவுண்டர் கொல்லையில் நடப்பட்டுள்ள 44 வரிக்  கற்பலகைக் கல்வெட்டு

    திருபுவனச் சக்க / ரவத்திகள் இராச / ராச தேவற்க்கு / யாண்டு 21 வதின் எதிராமா / ண்டு உடையார் திருவாலந்து / றை நாயனார் / தேவதாந / ங் கீழ்ச் சார் / ஆந வாரணவாசி / யில் காணி இ / வாரணவாசி / உடையாந் / வந்தவர் வி / ற்றல்  ஒற்றி வை / க்குதல் / செய்வார் தந் சா / தியாற்கு / விற்பது த / ன் சாதி த / விர விற்றார் / உண்டாகி / ல் நாயிலு(ம்) / பந்றியிலு(ம்) / கடையா / க குத்தி நூ / ர கடவதாக / வும் கீழ்ச்சா / ர் ஆந ஐஞ் / சு நாட்டுக லூற்கு / விலங் / கல் உண்டாகில் நா /ங்கள் / ளே ஏறட்டு / கொண்டு தீ / த்துக் குடுப் / போம் ஆக க / ல் வெட்டி நா / ட்டி குடுத்தோ / ம் அஞ்சு / நாட்டோம்.     

    எதிர் – அடுத்த , successive; காணி – விளை நிலம்; வந்தவர் – புதிதாக குடியேறியவர்; ஒற்றி – அடமானம்; கடையாக – கீழாக; நூர – அழிய; விலங்கல் – குறுக்காக, இடைஞ்சலாக; ஏறட்டு – பொறுப்பு ஏற்று, முன்வந்து; தீத்து – கழித்து, இல்லாதாதல், விலக்கு, முடித்தல்; அஞ்சு நாட்டோம் – சுருதிமான்கள் என்னும் மூப்பனார்கள்

    விளக்கம் : மூன்றாம் இராசராச சோழனின் 22 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1238) திருவாலந்துறை இறைவனுக்கு தேவதானமாக கொடுக்கப்பட்ட கீழ்சாரான வாரணவாசியில் உள்ள விளை நிலத்தை இந்த வாரணவாசியில் வாழ்பவர் புதிதாக வருபவருக்கு விற்றாலோ அடமானம் வைத்தாலோ அது தன் சாதியாருக்கு மட்டுமே விற்பதாகவே இருக்க வேண்டும். தன் சாதியார் தவிர மாற்று சாதியாருக்கு விற்பாரானால் அவரை நாயை விட, பன்றியை விட கேவலமாகக் கருதி குத்திக் கொல்லுக.  கீழ்ச்சாரான ஐந்து நாட்டு ஊர்களுக்கு இடைஞ்சலாக ஏதேனும் நடக்குமானால் நாங்களே முன்வந்து அச்சிக்கலை முடித்து வைப்போம் என்று கல்வெட்டி புதைத்து நிறுத்தினோம் ஐந்து நாட்டு சுருதிமான்களான மூப்பனார்களோம் என்று மூப்பனார்கள் ஆணை வெளியிட்டுள்ளனர்.

    இந்த கல்வெட்டு மூலம் பிற சாதியார் தம் ஊர்களில் குடியேறுவதை தடுக்கும் ஒரு உத்தியாகவே இந்த நடவடிக்கையை படைச் சாதியாரான மூப்பனார்கள் மேற்கொள்கின்றனர் என்பது தெளிவு. இது ஏனெனில் உழு நிலம் வாங்குபவர் இந்த ஊரில் வந்து நிரந்தரமாக குடியேறுவார். பின் இந்த படைச்சாதி மூப்பனார்களைப் போல தாமும் எல்லா உரிமைகளையும் பெற கோரிக்கை வைப்பர். அதனால் அரசகுலத்துடன் மணவுறவு உள்ள படைச் சாதியாரான தமது கௌரவம் கெடும் என்ற அச்சம் தான் காரணம். இதே காலகட்டத்தில் கொங்கு  நாட்டில் வீரராசேந்திரனின் ஆட்சியில் கம்மாளர், சிவ பிராமணர், தேவரடியார், கைக்கோளர், உவச்சர் ஆகியோருக்கு முன்பு இல்லாத உரிமைகளான வீட்டு நன்மை தீமைகளுக்கு இரட்டை சங்கு, பேரிகை கொட்டல், வீட்டிற்கு சுண்ணாம்பு பூசல், இரட்டைக் கதவு வைத்தல், காலுக்கு செருப்பு அணிதல், குதிரை ஏறுதல் போன்ற சலுகைகள் தரப்பட்டன. அப்படி ஒரு உரிமைக் கொடுப்பு ஏதும் இவர்களது ஊரில் நிகழக் கூடாது என்ற கருத்தே இந்த நடவடிக்கைக்கு காரணம் என்பது மேலுள்ள சில கல்வெட்டுகளால் வெளிப்படுகிறது.

    பார்வை நூல்: அரியலூர் மாவட்டக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் தொகுதி I பக். 267 – 269 ஆசிரியர்: இல. தியாகராஜன்

    திருச்சி மாவட்டம் அரியலூர் வட்டம் ஏறகுடி 20 வரிக் கல்வெட்டு

    1.  ஸ்வஸ்தி ஸ்ரீ  கொர்சடைய பன்மர் திருபுவனச் ச
    2. க்ரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டி தேவ 
    3. ற்க்கு யாண்டு 25 வது ஆவணி மாதம் 5 தி 
    4. நாள்  பழுவூர்பற்று திரணி நாட்டவரும் கண்
    5. டராதித்தன்  பிடாகைத் திரணி நாட்டவரும் இ
    6. றைக் குடியில் பெரியநாடான ஆலடியில் 
    7. (டியில்) நிறைவற நிறைந்து குறைவறக் கூ
    8. டி எங்களில் இசைந்து ஒருமைப் பிடிபா
    9. டு பண்ணின பரிசாவது பழுவூர் பற்றினா
    10. லும்  கண்டராதித்தன் பிடாகையிலும் பல பற்றி
    11.  லும் நாங்கள் கொண்டுடை வோமாய் நா 
    12. ங்கள் ஆண்டு போதுகிற நிலக் காணிகளும் 
    13. நத்தக் காவல் காணிகளும் காப்புக் காணி 
    14. களும் மற்றும் எப்பேற்பட்ட உரிமைகளும் 
    15. எங்கள் ஆண் மக்களே இந்தக் காணி ஆள
    16.  _ _ வும். இப்படி இசைந்து ஒரு
    17.  மைப் பிடிபாடு பண்ணினோம் பழுவூர்ப்பற்று ஐ
    18. ஞ்சு நாட்டவரும் கண்டராதித்தன்  பிடாகை ஐ
    19. ஞ்சு நாட்டவரும் இவ்வானைவரோம்.
    20.  இப்படிக்கு இவை சொக்கனார் எழுத்து.

    பிடாகை – உட்கிடையூர்; பிடிபாடு – வழிகாட்டு நெறி, guidelines; பரிசாவது – ஏற்பாடாவது; பற்று – ஒதுக்கிய நிலம்; ஆண்டு – கட்டுப்பாட்டில் அனுபவி; நத்தக் காவல் – வீட்டு மனைப் பிரிவு காவலர்; காப்புக் காணி – காவலுக்கு உட்பட விளை நிலம்

    விளக்கம் : ஜடாவர்ம வீரபாண்டியனின் 25 ஆவது ஆட்சி ஆண்டு (கி.பி.1278) ஆவணி மாதம் 5 ஆம் நாள் பழுவூர் பற்று திரணி நாட்டாரும் கண்டராதித்தன் உட்கிடையூர் திரணி நாட்டாரும் இறைக் குடியில் பெரிய நாடான ஆலடியில் பெருங் கூட்டமாகக் கூடி எங்களுக்கு நாங்களாகவே விரும்பி ஒரேகருத்துள் வழிகாட்டு நெறியை செய்து மேற்கொண்ட ஏற்பாடு யாதெனில், பழுவூர் பற்றிலும் கண்டராதித்தன் உட்கிடையூரிலும் இன்னும் பல பற்றிலும் நாங்கள் உரிமை கொண்டுள்ள நாங்கள் கட்டுப்படுத்தி அனுபவிக்கின்ற  உரிமை நிலங்களும், வீட்டுமனைக் காவலர் நிலங்களும் காவலுக்கு உட்பட்ட நிலங்களும் வேறு எந்த வகைத் தான உரிமைகளும் எமது ஆண் பிள்ளைகளே, அவர் வழியினரே இந்த உரிமை நிலங்களை ஆண்டு அனுபவிக்க வேண்டும். இப்படியாக விரும்பி ஒரேகருத்துள் வழிகாட்டு நெறியை செய்தோம் பழுவூர் பற்றில் வாழும் மூப்பனார் சாதி ஐந்து நாட்டவரும் கண்டராதித்தன் பிடாகை மூப்பனார் சாதி ஐந்து நாட்டவருமான இந்த அனைவரும். இப்படியாக இவை எல்லாம் சொக்கனார் எழுத்து.

    மேல் கல்வெட்டில் சொன்னபடியே என்ன தான் கடுமையாகப் பிற சாதிமாருக்கு நிலங்களை விற்க கூடாது என்று முடிவெடுத்து நடைமுறைப் படுத்தினாலும் பெண் வழியாகப் பிரித்துக் கொடுத்த நிலங்களை மாப்பிள்ளைகளும் பெண் வழிப் பேரர்களும் பிற சாதிமாருக்கு விற்பதால் தமது சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. ஏனெனில் மாப்பிள்ளை, பேரர்களுக்கு  அவரது ஊர்களிலேயே தந்தை வழி நிலம் உள்ளதால் பெண் வீட்டார் நிலம் தேவைப்படாது. இந்த அனுபவத்தால் அடுத்த கட்ட நடவடிக்கையாக பெண்களுக்கு எந்த சொத்து உரிமையும் இல்லை என்ற முறையே சரியானது அப்போது தான் மாப்பிள்ளைகள் சொத்தை பிராமணருக்கோ பிள்ளைமாருக்கோ பள்ளிகளுக்கோ விற்கமுடியாது என்று கருதி பெண்ணுக்கு சொத்துரிமை ஏதும் இல்லை என்று அறிவித்து நடைமுறைப்படுத்தினர். இக்கல்வெட்டு மூலம் பெண்ணுக்கு சொத்துரிமை இந்துமதத்தால், மனுநெரியால், பிராமணர்களால் தடை செய்யப்படவில்லை அதை படைச் சாதியினர் தான் தடை செய்தனர் என்று தெளிவாகிறது அன்றோ!!

    பார்வை நூல்: ஆவணம் 6, 1995, பக். 33

    விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் சமணர் கோயில் கற்பலகை 13 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ 
    2. சகலலோகச் 
    3. சக்கரவத்தி 
    4. இராசநாராயணன்
    5. மனுநெறி தப்பாத
    6. மல்லிநாதன். பெருந்தேவ
    7. ந் செட்டித் தெருவில் 
    8. வேற்று மனிதர் இருக்க
    9. கடவதல்ல வென்றும்,
    10. பரிசாம் விடுவரல்ல 
    11. வென்றும் சொ
    12. ன்னோம். இப்ப
    13. டி செய்க.     

    பரிசாம் – காசு, வாடகை

    விளக்கம் : இரண்டாம் இராசநாராயண சம்புவராயனான மல்லிநாதன் ஆட்சியில் வெட்டப்பட்ட ஆண்டுக்குறிப்பு ஏதும் இல்லாத கல்வெட்டு இது. இவனை மனுநெறி தப்பாதவன் என்று கூறி,” இவ்வூர் பெருந்தேவன் செட்டித் தெருவில் சமணர் அல்லாத வேற்று சாதியார், மதத்தார் எவரும் குடியிருக்கக் கூடாது என்றும், சமணர் எவரும் வேற்றாருக்கு வீட்டை வாடகைக்கு விடக்கூடாது என்றும் ஆணையிட்டான். அவ்வாறே நடந்து கொள்க”  என்று கல்வெட்டு தெரிவிக்கிறது.

    கல்வெட்டில் குறிக்கப்படும் செட்டித் தெருவில் வாழும் சமணர் தொழிலால் வணிகர், உணவால் சைவர் என்பதால் அவர்களாகவே வேந்தனிடம் கோரிக்கை வைத்து இந்த ஆணையை பெற்று வந்துள்ளனர். மேலும் வர்ண கோட்பாடு என்பது சிவ, விண்ணவ மதத்திற்கு மட்டும் என்று இல்லாமல் சமண, புத்த மதத்தவரையும் சேர்த்து சமூக முறைமையாகவே கட்டுப்படுத்தியுள்ளது அல்லது மதம் கடந்து அனைவரையும் உள்ளடக்கியது என்று தெரிகின்றது. வாடகை என்ற சொல் அப்போது இல்லை என்பதால் பரிசாம் என்ற சொல் ஆளப்பட்டுள்ளது. வேந்தனும், சமணரும் கூட சாதி ஆதரவாளராகவே இருந்துள்ளனர் என்பதற்கு இக்கல்வெட்டு பெரும் சான்று ஆகிறது.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 17, பக். 132 ஆண்டு: 2006

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவில் தென் சுவர் 4 வரிக் கல்வெட்டு

    1. ஸ்ரீமத் பூமிதேவி புத்ரஸ்ய சாதுர்வண்ண குலோத்பவம் சர்வலோகஹிதார்த்தாய சித்ரமேளஸ்ய 
    2. சாஸனம். திரிபுவனச் சக்ரவர்த்தி ஸ்ரீ ராஜராஜ தேவர்க்கு யாண்டு அஞ்சாவது நாடும் நகரமும் கூடி
    3. இருந்து காஞ்சிமாநகரில் செப்பேட்டுப்படி செக்கார் செய்யக் கடவ முறைமை எண்ணையு _ _ _
    4. வையிலே கூறி விற்க கடவந். இவனுக்கு உகச்சும் பறையும் கொட்டக் கடவதல்லன். ஒரு துறையில் நீருண்ணக் கடவனல்லன். தந்  மனையில் சேந்த வடக்கு திருவாசலுக்குப் புறம்பே _ _ _ துக்கு குடுக்ககடவ _ _ _ தல்லந். _ _ _ ல்லா தெற்றஞ் செய்யக் கடவதல்லந். வாஸ்துவுக்கும் _ _ _ ம்பி _ _ _  ம வெற்றிலையும் _ _ _  ந்து விற்கக்  கடவன். எண்ணை, விறகு மல்லாதும் _ _ _  கடவந்.     

    சித்ரமேள – சித்திரமேழி நாட்டார் வணிகக் குழு சபை; சாசனம் – சட்ட ஆவணம்; செக்கார் – எண்ணை வணிகர்; உ(வ)கச்சு – மத்தளம், தவில்; தெற்றம் – தவறு, பிழை; ஸ்ரீமத் – எங்கும் நிறைந்த இறைவன் திருவருளால்

    விளக்கம் : எங்கும் நிறைந்த இறைவன் திருவருளால் பூமியின் மைந்தர்களின், நால்வர்ணக் குலத்தில் பிறந்த, உலகமனைத்தின் நன்மைக்கும் பொருட் தேவைக்கும் வாழும் சித்திரமேழிநாட்டு வணிகக் குழுவின் சட்ட வரைவு என்று கல்வெட்டு சித்திரமேழியாரின்  மெய்க்கீர்த்தியுடன் தொடங்குகிறது. மூன்றாம் இராசராசனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டு 1219 இல் நாட்டுச் செட்டிகளும் நகரத்துச்  செட்டிகளும் ஒன்று கூடி இருந்து காஞ்சிமாநகரில் உள்ள செப்பேட்டின்படி செக்கில் எண்ணை பிழிவோர் செய்ய வேண்டிய வாழ்க்கை முறை என்று அறிவித்தது யாதெனில், “எண்ணையை _ _ விலை கூறி விற்க வேண்டும். (எப்படி விலை கூற வேண்டும் என்ற வரி சிதைந்து விட்டது). செக்கருக்கு வீட்டு நன்மை தீமைகளில் மத்தளமும் பறையும் கொட்ட உரிமை இல்லை. ஒரே நீர்த்துறையில் மேல் சாதியாரோடு நீர் மொண்டு, பருகக் கூடாது. தன் வீட்டு வடக்கு திருவாயிலுக்கு வெளியே _ _ _ கொடுக்கக் கூடாது. (எதை கொடுக்க என்ற வரி சிதைந்து விட்டது). _ _ பிழையாக செய்யக்கூடாது. (எதை என்பது சிதைந்து விட்டது). வாஸ்துவுக்கும் _ _ _ வெற்றிலை _ _ _ விற்கலாம். (இன்னொரு பொருள் எது என்பது சிதைந்து விட்டது. எண்ணை, விறகு அல்லாதது தவிர்த்து இவற்றை மட்டும் விற்கலாம் என்று வரையறை சொல்கிறது.

    படைப்பற்றுப் பள்ளருக்கும் பறையருக்கும் தமது உரிமை குறித்து பிணக்கு ஏற்பட்டு காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கல்வெட்டை பார்த்து வந்ததில் ‘பள்ளருக்கு தவிலும் சேமக்கலமும் முழங்கலாம், ஐந்து பந்தர்கால் நடலாம்’ என்றும் பறையருக்கு ‘கொட்டு மேளதாளம்,12 பந்தர் கால் உரிமை உள்ளதையும்’ உறுதி செய்தனர் என்பதை புதுக்கோட்டை ஆலங்குடி கல்வெட்டு (ஆவணம் இதழ் 15, பக். 32) தெரிவிக்கிறது. இவர்களுக்கு கொடுத்த உரிமை கூட எண்ணை வணிகருக்கு, செக்கருக்குக்  கொடுக்கவில்லை என்பது கேள்விக்கு உரியதாக உள்ளது. இந்த வணிக சபையோர் தான் இதை அறிவிப்பதால் அவர்களையே இதற்கு முழு பொறுப்பு ஆக்குவதா அல்லது பின்னிருந்து இயக்கிய ஆட்சியாளர்களை காரணகர் ஆக்குவதா என்று தெரியவில்லை. ஆனால் இதே கால கட்டத்தில் தான் கோவில் பணி மக்களுக்கும் படைப்பற்று சாதிமாருக்கு சில உரிமைகள் கூடுதலாக தரப்பட்டதை வைத்து பார்க்கும் போது இந்த செக்கர்களும் தமக்கும் அது போல உரிமையை எதிர்பார்த்து கோரிக்கை வைத்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. அந்த கோரிக்கையில் எண்ணை மட்டும் இன்றி சில கூடுதல் பொருள்களை காட்டாக வெற்றிலை, விறகு விற்பது ஆகிய உரிமைகள் தரப்பட்டு பழைய அதே சமூகக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தன என்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது. கல்வெட்டில் குறிக்கப்படும் காஞ்சிபுரம் செப்பேடு கிடைத்தால் அது யார் ஆட்சியில் எழுதப்பட்டது, நால் வர்ணத்தை எப்படி சாதியாகப் பிரித்தார்கள். இதனால் படைச் சாதி அடைந்த பயன் என்ன? அத்தனையும் தெரிந்து விடும். ஆனால் திரு. நாகசாமி இது இந்த கோவிலுக்கு அமர்த்தப்பட்ட செக்கருக்கு மட்டுமான விதி என்கிறார். பின் ஏன் சித்திரமேழி சபை இதை அறிவிக்க வேண்டும்? கோவில் நிர்வாகத்தர் அல்லவா அறிவிக்க வேண்டும்?

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள் மடல் 7 எண்: 865 & கல்வெட்டு காலாண்டு இதழ் 8 பக். 23 த நா தொ து வெளியீடு. 

    Share
  • கல்வெட்டு, இலக்கியப் புனைவு இல்லை

    கல்வெட்டு, இலக்கியப் புனைவு இல்லை

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    இனக்காப்பிற்காக, பிற இனத்தாரோடு போர் செய்த பழங்குடி நிலை முற்றாக மாறி, வேந்தர், மன்னர், அரையர், கிழார்-கோன்  ஆகிய  நாலடுக்கு அதிகார ஆட்சியாளர் தமது ஆட்சி நிலைக்கவும் நாடு விரிக்கவும் பழங்குடிகள் முதல் எளிய அப்பாவி மக்கள் வரை தமது உயிரை ஈகம் செய்தும் குடும்ப வாழ்வை அழித்தும் வாழ்கிற போரில் தள்ளினர். இதற்காகத் தேர்ந்த பயிற்சி உடைய வீரராகவும் உளவாளியாவும் அவர்களை மாற்றினர். இத்தகு நெறி கொண்ட போர் எளிய மக்களின் உலக வாழ்க்கையை, சமூக வாழ்க்கையை, சமய நம்பிக்கையை அடியோடு மாற்றிப் போட்டது என்பதே  வரலாறு. போரில் இறந்த வீரன் தெய்வமாக வணங்கப்பட்டான் குருதி சிந்தினமைக்காக அவன் குடும்பத்தாருக்கு நெய்த்தோர்பட்டி நிலம் வழங்கப்பட்டது என்பதே ஆறுதல் செய்தி. இவற்றுக்குச் சான்றாக இங்குச் சில நடுகல் கல்வெட்டுகளை விளங்கிக் கொள்ளலாம்.

    ஒரு முறை அமெரிக்கப் பெண் ஒருத்தி இந்தியா ஒரு ஆன்மீக பூமி என்கின்றீர் பின் ஏன் மக்கள் காமவயப்பட்டு இவ்வளவு அதிகப் பிள்ளை பெற்று இந்தியா மக்கள் தொகைப் பெருக்க நாடாக உள்ளது எனக் கேட்டாள். அதற்கு அவளுக்கு, இந்தியா ஆன்மீக பூமி தான் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் இந்திய மக்கள் எல்லோரும் யோக ஆன்மீக  வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கவில்லை. எனவே இந்தியாவில் குறைந்த அளவு மக்கள் தான் உண்மையான ஆன்மீகத்தை நாடுபவராக உள்ளனர் என்று விடை கூறப்பட்டது. இந்தியாவில் தோன்றிய தந்திர யோகம், வேத மதம், சமணம், புத்தம்  ஆகியன புலால் கூடாது என்று உணவுக் கட்டுப்பாடு வைத்தன. பொய், களவு கூடாது என்றன. பெண் பித்து கூடாது என்றன. ஆனால் இவற்றை மக்கள் கடைப்பிடிக்க விடாதபடி தனது வெற்றி ஒன்றே குறியாகக் கொண்டு வேந்தர், மன்னர், அரசர், கோன் போன்ற ஆட்சியாளர்கள் போரில் ஈடுபடும் வீரருக்குப் புலால் விருந்தும், கள் விருந்தும் கொடுத்துப் போருக்கு அனுப்பினர். வலுவான படை அமைக்க, தம்முள்ளே வலுவான உறவு நீடிக்க ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்தனர். அதைத் தான் எளிய போர் வீரனும் கடைப்பிடித்தான். விளைவு இரு குடும்பங்களைப் பேண முடியாமல் வறுமையில் உழலும் சூழல் ஏற்பட்டது. கல்விப் பரவல், கீழ்த்தட்டு குடிகளிடம் இல்லாமல் போனது. ஆதலால் மக்களிடம் ஒழுக்கக் குறைபாட்டால் ஆன்மீகம் மிகச் சிலருக்கு மட்டுமே வாய்த்ததாக அமைந்துவிட்டது.

    குமரி மாவட்டம் தோவாளை வட்டம் ஆரம்போலி(ஆரல்வாய்மொழி)யில் கிடைத்த 17 வரி நடுகல் கல்வெட்டு. இப்போது பத்மநாபபுரம் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

    1. ஸ்ரீ கோமாறஞ் சடையர்க்கு இ
    2. ருபத்தேழாமாண்டு சேரமா
    3. னார்  படை விழிஞத்து புறத்து 
    4. விட்டுழக்கக் கரைக்கோட்டை அழி
    5. ப்பான் வர பெருமானடிகளுள
    6. ன்பு மீக்குள இரண கீர்த்தி[யு] 
    7. ம் அமர்க்கழியும் உள் வீ
    8. ட்டினொற்றைச்  சேவகர் கோட்
    9. டை அழியாமை காத்தெறி
    10. ந்து  பலரும் பட்ட இ
    11. டத்து இரணகீர்த்தி உள் 
    12. வீட்டுச் சேவகன் கொழுவூ
    13. ர்க் கூற்றத்துப் பெருமூர்
    14. த் தாதம் பெருந்திளை [அ]
    15. த்திரத்தாற் பலரோடுங் 
    16. குத்திப் பட்டான் இரு
    17. பது கமாளி சேவகன்   

    விடு – திரிந்து; உழக்க  – அழிக்க; ஒற்றை – ஒற்றர் படை; தாதம் – மூலப்படை; திளை – போர்ப்படை, அத்திரம் – அம்பு; இருபது  – பதுங்கு படை, மறைந்து தாக்கும் படை, Ambush; கமாளி – பிரிவு, Division (கமர்  – நிலப்பிளவு. எனவே கம் என்றால் பிரிவு. கம் + ஆளி  = கமாளி – பிரிவினன்; சேவகன் – படைத்தலைவன்  

    விளக்கம் : நடுகல்லின் முன் பக்கம் வீரன் உருவம்  பொறிக்கப்பட்டுள்ளது. பின்புறம் கல்வெட்டுச் செய்தி உள்ளது.  இக்கல்வெட்டு கி.பி. 792இல் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் வரகுணனுக்கு 27ஆம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டது. விழிஞம் திருவனந்தபுரத்திற்கு மேற்கே கடற்கரையில் அமைந்துள்ளது. ஏற்கெனவே மாறஞ்சடையன் சேரனிடம் இருந்து கைப்பற்றிய அவனது சில ஆட்சிப் பகுதிகளை மீட்கச் சேரமான் படை விழிஞத்தின் புறநகர்ப் பகுதியை அழித்தபடி, கரைக்கோட்டையை அழிக்க வந்தது. அப்போது பெருமானடிகள் பாண்டியனிடத்து மிக்க அன்பு கொண்ட இரணகீர்த்தி, அமர்கழி, அரண்மனை உள்வீட்டு ஒற்றர்படைத் தலைவன் ஆகியோர் கோட்டை அழிந்துவிடாமல் காத்து, பகைவரை அழித்து ஒழித்தனர். அதில் பலர் வீரச் சாவடைந்த இடத்தில் இரண கீர்த்தி, உள்மனை படைத்தலைவன், கொழுவூர் கூற்றத்தில் உள்ள பெருமூர் மூலப் படையின் பெரும்படைப் பிரிவு ஆகிய பலரோடும் சேர்ந்து பகைவர் பலரைக் குத்திக் கொன்று  வீரச்சாவடைந்தான் கோட்டைப் பதுங்கு படைப் பிரிவின் தலைவன். இவனது இயற்பெயர் குறிக்கப்படவில்லை. பட்டான் என்ற ஒருமைச் சொல் இரணகீர்த்தியையோ உள்மனை ஒற்றனையோ குறிக்கவில்லை என்பது தெளிவு. ஆரல்வாய்மொழி அவன் ஊர் என்பதால் இந்த நடுகல் அங்கே சுற்றத்தாரால் நிறுத்தப்பட்டது. இக்கல்வெட்டு பலரால் தவறாக விளக்கப்பட்டுள்ளது.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 72, பக்.9-10, ஆண்டு 2006, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு.

    தருமபுரி மாவட்டம் அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ள 12 வரி நடுகல் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ  அரிமிதைய மாவலி வாணராயர் 
    2. கங்கநாடும் புறமலைநாடும் கோயினூர்நாடும்
    3.  கோவூர்நாடும் தாயனூர்நாடும் பற்றநாடும் ம _ _ _ 
    4. அவர்க்குத் தாநாகிப் பிள்ளைய் கொண்டுள்
    5. புகுந்து வஞ்சித்து நாடு கொண்டானுளம்பன்.
    6. அவர் போரிற் றுஞ்சின பின்னைத் தேவிமார்
    7. கருப்பிணியருளராக அவகளைக் காத்திருந்
    8. தாண் பிள்ளைப் பெறுவதுந் தகடூர் புகுந்து
    9. நுளம்பன் பலத்தோடே துணிந்து நாடு பாவி
    10. நார்  சங்கரகுட்டியார் . அவரோடுடன்
    11. புகுந்து தகடூரில் பட்டார் நாகந்தை 
    12. சிறு குட்டியார். கல்நாடு    

    தாநாகி – அத்தானாகி; பலத்தோடு – படையுடன்; நாடுபாவி – நாடுவிரித்து, ஆக்கிரமித்து; பட்டான் – வீரசாவடைந்தான்; கல்நாடு – நெய்தோர்பட்டி, உதிரப்பட்டி

    விளக்கம் : இந்நடுகல் கல்வெட்டு 8-9ஆம் நூற்றாண்டினதாகக் கருதப்படுகிறது. இதில் எந்த வேந்தர் பெயரும் குறிப்பிடாதது அரிமிறைய மாவலி வாணராயர் சுதந்திர ஆட்சியை நடத்தினர் என்று கொள்ள வேண்டியுள்ளது. அவர் கங்க நாடு (தகடூர்), புறமலைநாடு (அரூர்), கோயினூர்நாடு, கோவூர்நாடு (ஊத்தங்கரை), தாயனூர்நாடு, பற்றநாடு என்று மிக பெரிய நிலப் பரப்பை ஆண்டுள்ளார். இவரது வாணர் குடும்பத்திற்கும் நுளம்பர் குடும்பத்திற்கும் இடையே முன்னம் திருமணம் நிகழ்ந்து நுளம்பன் இவருக்கு அத்தான் உறவாகிப் போனான். அந்த நுளம்பன் அரிமிறைய வாணன் குடும்பத்தில் பெண் எடுத்து மாப்பிள்ளை ஆகிப் போனான். அந்த உரிமையில் அரிமிறைய வாணனை வஞ்சித்து அவனது நாட்டின் ஒரு பகுதியைத் தனதாக்கிக் கொண்டான் நுளம்பன். இதனால் இருவருக்கும் நிகழ்ந்த போரில் அரிமிறைய வாணன் போரில் இறந்து விடுகிறான். இவனுடைய மனைவியர் அதன் பின் கருவுற்றிருப்பதை அறிய வர அதற்காக அவர்களைக் காத்து அதில்  ஒருத்தி ஆண் பிள்ளை பெற்றவுடன் படையுடன் தகடூரில் புகுந்து நுளம்பன் படையுடன் துணிந்து மோதி இழந்த நாட்டைக் கைப்பற்றினார் படைத்தலைவர் சங்கரக் குட்டியார். அவருடன் இணைந்து தகடூரில் படையோடு புகுந்து வீரச்சாவடைந்தார் நாகந்தை சிறு குட்டியார். இந்நடுகல் அவர் நினைவில் நடப்பட்டு அவரது குடும்பத்திற்கு நெய்த்தோர்பட்டி நிலம் தரப்பட்டது.

    முதலாம் மகேந்திர நுளம்பன் தான் அரிமிறைய வாணனை வஞ்சித்து நாடு கவர்ந்தான் என்று கொள்ளப்படுகிறது. வாணரும் நுளம்பரும் கன்னடர் ஆவர். தமிழகத்தில் இவர்களது அதிகாரம் பல்லவரால் ஏற்பட்டது.

    பார்வை நூல்: கல்வெட்டியல் 132, த நா தொ து வெளியீடு.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் திண்டிவனம் அருகே கிடைத்த 3 வரி நடுகல் கல்வெட்டு

    1. கம்பப் பெருமாள் ஆனையாடின
    2. கொந்தளத்து இவ்வூர் அழிந்த நாள்
    3. பட்டான் இவ்வூர் கோதுபத்தி  மாத்ரகன்.

    கொந்தளத்து – அமளிகுமளி, turmoil; கோதுபத்தி (கோடு+பத்தி) – குலையாகப் பிரித்த படையணிப் பிரிவு, army division; divide as a battalion; மாத்ரகன் – அளவிடுபவன், surveyor, assessor

    விளக்கம் : 9ஆம் நூற்றாண்டில் வேந்தன் கம்ப வர்மப் பல்லவனே திண்டிவனம் அருகே யானைப் படையுடன் சென்று போர் புரிந்த போது இந்த ஊரே அமளி குமளியாக அழிந்த நாளில் இவ்வூரின் படைப்பிரிவில் அளப்போனாக உள்ள வீரன் இப்போரில் வீரச்சாவடைந்தான். அவன் இயற்பெயர் குறிப்பிடப்படவில்லை. இறந்த வீரன் எந்த அரசன் சார்பாக போரிட்டான் என்றும்   தெரியவில்லை. ஆண்டுக் குறிப்பும் இல்லை. இந்த ஊர், சிறு படைத் தளமாக இருந்ததாலே வேந்தனால் அழிக்கப்பட்டது. கம்ப வர்மன் நிருபதுங்கன், அபராஜித்தன் பதவி சண்டையில் யார் பக்கம் இருந்தான் என்று தெரியவில்லை. அப்படியானால் இது பல்லவர் இடையே நடந்த போராகக் கொள்ள முடியுமா?

    கல்வெட்டின்படி ஒவ்வொரு படையெடுப்பின் போதும் ஊரும் சேர்ந்தே அழிக்கப்படுகிறது என்பதை இக்கல்வெட்டு சுட்டுகிறது. இங்கே ஊர் என்பது படைவீரர் ஊர் என்று கொள்வதே சரியாகும்.

    பார்வை நூல்: கல்வெட்டியல் 131, த நா தொ து வெளியீடு.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் கருங்காலிப்பாடி ஊரில் கண்ட 5 வரி நடுகல் கல்வெட்டு.

    1. தென் வேணாட்டு மேலைக் கரு
    2. ங்காலிப்பாடி சிலகில் காவேட்டுவைய
    3. ன் அடியேன் பறையன் பளியனேன் 
    4. ஊரழியப் போகே
    5. னென்று  பட்டான்  

    சிலகில் – பிளவில், இருமலைக்கு நடுவே; போகேன் – விடமாட்டேன்

    விளக்கம் : மன்னன் பெயரோ ஆண்டோ இல்லாத கல்வெட்டு இது. வேணாட்டின் தெற்கே உள்ள கருங்காலிப்பாடியின் மலை இடுக்கில் வாழும் காட்டின்  வேட்டுவத் தலைவனுக்கு அடியவனான பறையன் பளியன் என்பவன் இவ்வூரை பகைவர் அழிக்க விடமாட்டேன் என்று சூளுரைத்து, போரில் வீரச் சாவடைந்தான்.

    பளியர் என்போர் தமிழகப் பழங்குடி மக்கள் ஆவர். இன்று திண்டுக்கல், தென்காசிப் பகுதிகளில் மட்டும் சிறு தொகையில் வாழ்கின்றனர். ஆனால் இக்கல்வெட்டு அவர்கள் தமிழகத்தின் வட பகுதியான திருவண்ணாமலையிலும் வாழ்ந்ததைத் தெரிவிக்கிறது. மன்னர்கள் அமைதியாக வாழும் பழங்குடிகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களையும் போரிலும் உளவிலும்  ஈடுபடுத்தினர். மேலும் இது போன்ற பழங்குடிகளே பின்னாளில் பறையர் என்ற சாதி தோன்றக் காரணமாக இருந்துள்ளனர் என்பதற்கு இக்கல்வெட்டு சான்று. ஆனால் இந்துமதம் தான், பிராமணர் தான் பட்டியலின மக்களை உருவாக்கினர் என்று அரசியல் மேடையிலும் எழுத்திலும் பொய்யுரைத்து வரலாற்றையே புனைவாகச் செய்துள்ளனர். இக்கல்வெட்டு அதைத் தகர்க்கிறது. தமிழ்நாடு தொல்லியல் துறை பன்றயன் புளியனேன் என்று தவறாகப் படித்து அச்சேற்றி ‘கல்வெட்டியல்’ என்ற நூலில் கடைசிப் பகுதியில் வெளியிட்டுள்ளது. இப்படித் தப்பும் தவறுமாக படித்து நூல் வெளியிட்டால் உண்மை தான் மறைக்கப்பட்டுவிடும்.

    பார்வை நூல்:  நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி I, பக். 341, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி

    தருமபுரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் ஒட்டம்பட்டி 6 வரி நடுகல் கல்வெட்டு

    1. சிவமார பருமர்க்கு யாண்டு யிருபத்
    2. திரண்டாவது மாவலி வாணராயர் க
    3. ங்க நாடாள இந்திரன் தகடூ
    4. ர் மேல்வந்த ஞான்று மறவனா
    5. ர் சேவகன் கண்ணனூருடை கமிய
    6. த் தழமன் பட்டான்.  

    கம்மிய – கருமார் (அ) கைவினைஞன், blacksmith / craftsman; தழமன் – தழல் என்றால் நெருப்பு. எனவே உலைக்கு நெருப்பைப் பேணுபவன்; சேவகன் – படைத்தலைவன் 

    விளக்கம் :  நுளம்ப வேந்தன் சிவமாறனின் 22ஆம் ஆட்சி ஆண்டில் அவனுக்கு அடங்கிய வாண மன்னன் மாவலி வாணராயன் கங்க நாட்டை (தகடூர்) ஆண்டுகொண்டிருக்கையில் வைடும்ப அல்லது தெலுங்குச் சோழன் மன்னன் இந்திரன் தகடூர் மேல் படை கொண்டு வந்த போது இந்த வாணனுக்கு அடிபணிந்த ஆட்சியாளன் மறவனுடைய படைத்தலைவனாக உள்ள கண்ணனூருடைய கருமான் உலைக்கு நெருப்பு எரிப்பவன் வீரச் சாவடைந்தான். இவன் இயற்பெயர் தெரியவில்லை. இவன் போர்க்கருவி செய்பவனாய் இருந்திருப்பான் எனத் தெரிகிறது. இதன் மூலம் ஒவ்வொரு படையும் தனியே தனக்கென கருமாரை வைத்திருந்தன என்று தெரிகிறது. அதே நேரம் படையெடுத்து வருபவன் முதலில் அழிப்பது ஆயுதம் செய்பவரை ஆயுத சாலையைத் தான் என்பதை இக்கல்வெட்டு நமக்கு சுட்டுகிறது.

    பார்வை நூல்:  நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி I, பக். 348, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் அங்குத்திசுனை  7 வரி வட்டெழுத்து நடுகல் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ  நுளம்பன் மகன் 
    2. சிவமாறன் வூறளிய்க் ஆழுடைய 
    3. போயையந் மகந் துட்டப்பநுக்கு  
    4. தம்பி முளித்தயந் செய்வித்தாந். 
    5. தச்சான் வெந்றி 
    6. சிரியன் நாட்டி
    7. னக் கல்      

    ஆளுடைய – தலைமை செய்யும்; போ ஐயன் – வில் வேடுவர் தலைவன், bowman.  போ + அன் = போவன் அல்லது போயன் என் ஆகும். போ என்பது வளைந்த வில்லை குறித்தது. ஆங்கிலச் சொல் Bow உடன் தொடர்புடையது. 

    விளக்கம் : மேலுள்ள ஒட்டம்பட்டி கல்வெட்டுக்கு முற்பட்ட 8ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டு இது. மாவலி வாணனைச் சிவமாற நுளம்பன் வென்று ஆட்படுத்துவதற்கு முன் நிகழ்ந்தது எனக் கொள்ளலாம். சிவமாறன் ஊத்தங்கரை மேல் படையெடுத்து ஊரை அழித்த போது போயர் தலைவனுக்கு மூத்த மகன் துட்டப்பன் அதில் வீரச்சாவடைந்தான். அவன் தம்பி முழித்தயன் இந்த நடுகல்லைச் செய்வித்தான். சிற்பி வென்றி சிரியன் இந்தக் கல்லையும் எழுத்தையும் செதுக்கி நிறுத்தினான். இதில் மான் வேட்டையாடுவது போன்ற உருவப் பொறிப்பு போயர் வேட்டுவர் என்று சுட்டுகிறது. இவர்கள் போர்த் தொழிலை ஏற்றவர்கள். இந்தப் பழங்குடிகள் பின்னாளில் தருமபுரியில் குடியேறிய தெலுங்கு ஒட்டருடன் கலந்துவிட்டனரோ? ஏனெனில் இவர் பெயரை இன்று ஒட்டர்கள் பயன்படுத்துவதாகத் தெரிகிறது.  

    பார்வை நூல்: கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றுப் பேரவை காணொளி

    இராமநாதபுரம் மாவட்டம், முதுகுடி ஊர் அருகில் உள்ள கருங்குளம் ஏரி 16 வரிக் கல்வெட்டு

    1. ____ 
    2. குலைசேகர தேவ
    3. ர்க்கு யாண்டு 34 வ
    4. துக் கருங்குளத்திர்க் 
    5. கு ஒரு பழி உண்
    6. டானபடியாலே, 
    7. இப்பழிக்கு இவ்வூர் 
    8. குடும்பரில் பெரிய 
    9. தேவப் பள்ளன் அணை 
    10. வெட்டிப் போகையா
    11. லே இவன் மகளுக்கு 
    12. ஊரார்களிட்ட உதி
    13. ரப்பட்டி குடுத்தபடி தபான
    14. வ  நிலம் அரை மா  அணை 
    15. நிலம் சந்திராதித்தவன் 
    16. மானி போவிப்பர் 
    17. கா _ _ _   

    பழி – தீவினை; அணை – கரை; தபானவ – வறண்ட புஞ்சை; மானி – மதித்து; போவி – செல்வதாக   

    விளக்கம் : மாறவர்மன் குலசேகரப் பாண்டியனின் 34ஆவது ஆட்சி ஆண்டு 1302 இல் இராமநாதபுரம் முதுகுடி ஊருக்கு அருகில் உள்ள கருங்குளத்தில் கரை உடைந்துவிட்டது. இந்த உடைப்பை இந்த ஊர் குடும்பரில் பெரிய தேவப் பள்ளன் கரைவெட்டி தடுத்தான். அதில் அவன் இறந்துவிடுகிறான். இதனால் பரிவுற்ற ஊர் மக்கள் அவன் மகளுக்கு நெய்த்தோர்பட்டியாக குளக்கரைக்கு ஒட்டி அரைமா வறண்ட புஞ்சை நிலத்தைக் கொடுத்தனர். இதைச் சந்திரன் சூரியன் உள்ள கால அளவும் மதித்துச் செல்ல வேண்டும் என்று குறித்தனர். நெய்தோர்பட்டி என்ற குறிப்பு பெரிய தேவ பள்ளன் இந்தக் கரையைப் பாதுகாப்பதில் எடுத்துக்கொண்ட உயிர்ச் சேதத்திற்காகக் கொடுத்திருக்கலாம்.       

    பார்வை நூல்: கொங்கு இதழ் 25. செ இராசு, திசம்பர் 1972

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் வட்டம், சின்னத்தாமல்செறு கிராமத்தில் கற்பலகையில் செதுக்கிய நடுகல்லில் உள்ள 8 வரிக் கல்வெட்டு.

    1. செல்(லை)ளை
    2.  வூரர் அடியக
    3. ன் பம்மான்
    4. டை மகன்  ஆ
    5. னை கொன்
    6. றும் நத்தம்
    7. கொண்டா 
    8. ந்  

    அடியகன் – ஏவலன், தொண்டன்; பம்மாண்டி – பறை அடிப்பவன்;  நத்தம் – நெய்த்தோர்பட்டி நிலம்

    விளக்கம் : மன்னன் பெயரோ ஆண்டுக் குறிப்போ இல்லாத தனி நடுகல் கல்வெட்டு. வீரன் இடக்கையில் கேடயமும் வலக்கையில் குறுவாளும் ஏந்தியுள்ளான். செல்லைவூரரின் ஏவலன் பறையடிப்பவனின் அடியாள் வீரன் ஊரில் அட்டகாசம் செய்த யானையைக் கொன்று தானும் வீரச்சாவடைந்து விடுகிறான். அதற்காக அவன் வீட்டாருக்கு நெய்தோர்பட்டி நிலம் ஊராரால் கொடுக்கப்பட்டது. வீரன் பெயர்க் குறிப்பு இல்லை. பம்மாண்டை பெயரும் இல்லை.

    பார்வை நூல்: நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி II, பக்.130, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையம் 7 வரி நடுகல் எருது பிடி கல்வெட்டு

    1. கோவுரிச் சங்கன் 
    2. கருவந் துறையி
    3. லே எருது விளை
    4. யாடி பட்டான். 
    5. சங்கன் மகன் பெ
    6. ரிய பயலு நட்ட க
    7. ல்லு 

    எருது விளையாடி – காளை அடக்கி; கோ – ஆனேறு, நூல் கோற்றல்; உரி – களைதல், கழற்றுதல் 

    விளக்கம் : மன்னன் பெயர், ஆண்டுக் குறிப்பு, விளையாடிய காரணம் ஏதும் இல்லாத நடுகல் கல்வெட்டு. ஆத்தூர் கருமந்துறையில் 400 ஆண்டுகள் முன் நடந்த எருது பிடித்து, கழுத்தில் கட்டியதை உருவும் போட்டியில் விளையாடிய போது அந்த எருது முட்டி சங்கன் சாவடைந்தான். இவனது மூத்த மகன் இதன் நினைவாக நடுகல் நட்டான். இதே விளையாட்டாக இருந்ததாலோ என்னவோ அவன் “கோவுரி” என்ற அடையுடன் அழைக்கப்படுகிறான். இன்றைய சல்லிக்கட்டு அக்காலத்தே கொங்கில் கோவுரி எனப்பட்டது.

    பார்வை நூல்: கல்வெட்டு காலாண்டு இதழ் 15, பக். 14 த நா தொ து வெளியீடு

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் குலசேகரபுரம் ஊரில் கிட்டிய இறுதி 6 வரிக் கல்வெட்டு

    1. _ _ _ ஆற்றுந பெருமகன் உய
    2. ர் பிரம்மதாய்ய பெற்றமை தெருட்டு
    3. கொல்லாறு விட நடந்து கொண்
    4. டார் மணற்குடி பார்ப்பார் சா
    5. ன்றார். வடக்குஇருக்கை அறி நாட்டா
    6. த் தெல்லையாக நட்ட கல் 

    தெருட்டு – அறிவிப்பு; கொல்லாறு – ஏச்சு பேச்சு, ஏளனம் (அ) தீங்கான பேச்சு, கொல் குறும்பு, act of teasing; இருக்கை – குடியிருப்பு; நாட்டாத்து – ஊர்;

    விளக்கம் : கடைசி ஆறு வரிகள் தவிர்த்து மேல் இருந்த கல்வெட்டு வரிகள் உடைந்து சிதைந்துவிட்டன. எனவே முழுச் செய்தியும் அறிய முடியவில்லை.  _ _ _ ஆற்றுந பெருமகன் உயர்ந்த  பிரம்மதாயம் / பிரம்ம தேயம் பெற்றதை அறிவித்தவுடன் மணற்குடி பார்ப்பாரச் சான்றோர் தம் ஏச்சு பேச்சுகளை விட்டு நல்லமுறையில் நடந்து கொண்டனர். இந்தப் பிரம்மதேயத்தின் வடக்குக் குடியிருப்பை அறிந்துகொள்ள ஊர் எல்லையாக நடப்பட்ட கல் இது. பெருமகன் என்பது ஆட்சியாளனைக் குறிக்கிறது. அவன் மணற்குடி பார்ப்பாரச் சான்றோரரான பிராமணருக்கு இறையிலி நிலக்கொடை அறிவித்துள்ளான். அதன் வடக்கு எல்லை இது என்று கல்வெட்டு அறிவிக்கின்றது. இதன் மூலம் பார்ப்பாரச் சான்றார் என்பது பிராமணரைக் குறிப்பது தான் நாடார் குலத்தவரை குறிப்பதல்ல என்பது தெளிவு. சிலர் இதற்கு நாடாருள் பார்ப்பர் என்று தவறாகக் கருத்துத் தெரிவிக்கின்றனர். பிரம்மதேயம் பிராமணருக்கு மட்டும் கொடுக்கப்படுவது என்பதைக் கருதவேண்டும். கல்வெட்டில் இ, ய, த, ட எழுத்துகள் பழமையானவை. இக்கல்வெட்டில் குறில் எழுத்துகளும் மெய் எழுத்துகளும் புள்ளியிடப்பட்டுள்ளதால் இது  7ஆம் நூற்றாண்டினது என்று தெரிகிறது. இதே போல மதுரை மேலூரின் பெருமாள் மலை அருகே 13ஆம் நூற்றாண்டின் “நாயனார் திருமுகப்படி திருமுகூர்  நாட்டு தேவதானம் பட்டூர்க்கு எல்லை” எல்லைக் கல்வெட்டு கிட்டியது ஒப்பு நோக்கத் தக்கது.

    பார்வை நூல்:  நடுகல் கல்வெட்டுகளும் சிற்பங்களும் தொகுதி II, பக். 176, ஆசிரியர் ச. கிருஷ்ணமூர்த்தி. கல்வெட்டு காலாண்டு இதழ் 11 பக்.33

    திண்டுக்கல் மாவட்டம்  ஒட்டன்சத்திரம் வட்டம் கப்பலூர்ப்பட்டியில் உள்ள 23 வரி கல்வெட்டு

    ஸ்ரீ கோக்கண்டன் மாந்தரனுக்குச் செல்லா நின்ற யாண்டு அ (8). இவ்வாண்டு (பெரு)மாள் கீழ்  வாழ்ந்து மழநாட்டான் மூர்க் கூற்றத்துக் கீழ்க்கூற்றில் எதகம்பாடி வெள்ளான் கூத்தன் காடி நிருத்தியான நெருப்பறையாசாரிகள் மக னிருத்தி  விரதி (சூரன்) றந்தையாரையுந் தாயாரையுஞ் சாத்திச் செய்வித்த கிணறும் வட்டும்.    

    பெருமாள் – மன்னன்; காடிக்காரம்  – நெருப்புக்கல், ஆயக்கல், silver nitrate acid; நிருத்தி – தேய்க்கும், அழிக்கும்; நெருப்பு அறை – நெருப்புக் கல்; வட்டு – நீர் முகக்கும் கலன்     

    விளக்கம் : மன்னன் கோக்கண்டன் மாந்தரனின் எட்டாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு. இவன் களப்பிர மன்னன் என்றும் சேரன் என்றும் இரு வேறு கருத்து நிலவுகிறது. இந்த மன்னன் கீழ் நேரடியாகப் பணி செய்து வாழ்பவனான மழநாட்டான்மூர் கூற்றத்தின் கிழக்கில் எதகம்பாடி ஊரைச் சேர்ந்த நெருப்புக்கல் உரைக்கும் நெருப்புக் கல் ஆசாரி வெள்ளான் கூத்தனுடைய மகன் விரதி சூரன் என்பவன் தன் தந்தையையும் (வெள்ளான் கூத்தன்) தாயையும் நினைவில் கொண்டு பொது மக்கள் பயனுற கிணறும் நீர்க்கலனும் செய்தான். இவனும் இவன் தந்தையும் உலோகப் பணியோடு (metallurgy) தொடர்புடையவர் போலும்.

    பார்வை நூல்:  கல்வெட்டு காலாண்டு இதழ் 85, ஆண்டு: 2011 பக்.4 & இதழ் 66 பக். 42, ஆண்டு: 2005

    குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் புலியூர்க் குறிச்சி கிராமத்தில் உள்ள உதயகிரிக் கோட்டை 13 வரி கிருத்துவர் கல்லறைக்  கல்வெட்டு

    1. லோகத்திலே பரதேசி கிறிஸ்துவனே 
    2. நில்லு நினையுங்கோ 
    3. இவ்விடத்திலே யிருக்கிற 
    4. வலிய காப்பிதாருட மகன் செரிய கப்பித்தான் 
    5. யுவான் யஸ்தாக்கியோ வென்தொ தெலுனுவ  9(00)
    6. 2(0)1 ஆண்டு ஆவணி மாதம் 12 நாள் செவாயி  கிளமைக்கு பிற
    7. ந்து  9(00)4(0) ஆண்டு சித்திரை மாதம் 2(0)2 நாள் திங்கள் கிள
    8. மைக்கு களக்காட்டுச் சண்டையிலே காயப்பட்டு 
    9. 9(00)4(0)1 ஆண்டு புரட்டாசி மாதம் 9 நாள் சரீரம் 
    10. விழுந்து போகவும் செய்து அவருடைய 
    11. ஆற்பனாவுக்கு உதவியாக சறு 
    12. வேசுரனோட வேண்டி
    13. க் கொள்ளவும் ஆமென். 

    பரதேசி – வெளிநாட்டு; நினை – அஞ்சலி; வலிய – பெரிய; கப்பித்தான் – படையணி தலைவன், captain; செரிய – சிறிய; ஆற்பனா – ஆத்மா;      

    விளக்கம் : திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மாவின் படைத்தளபதி தச்சு வீரர் திலெனாய் (Euastachius Benedictus de  Lannoy (1715 – 1777). இவருடைய மகன் சிறிய கப்பித்தான் யுவான் யஸ்தாக்கி யோவென் தொ தெலுனு (Yuvan Euastace Johannes de Lannoy) கொல்லம் ஆண்டு 921 (1745) இல் ஆவணி மாதம் 12 நாள் செவ்வாய்க் கிழமையில் பிறந்தவர். இவர் தமது 19 வயதில் கொல்லம் ஆண்டு 940 (1764) இல் சித்திரை மாதம் 22 நாளில் திங்கட்கிழமை அன்று களக்காட்டுப் போரில் காயமடைந்தார். பின் 8 மாதம் 17 நாள் கழித்து 941 (1765) இல் புரட்டாசி மாதம் 9 ஆம்  நாளில் 20 ஆம் வயதில் உடலை விட்டு ஆவி பிரிந்தது. அவருடைய ஆன்மாவுக்கு ஆறுதலாக உலகத்தில் வாழும் வெள்ளை நாட்டவரே இங்கு நின்று நினைத்து எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்க . ஆமென்!! இவர் தமிழகத்தில் குடி இருந்ததால் உரோமன் கத்தோலிக்க முறைப்படி புதைக்கப்பட்டாலும் இவரது பிறப்பும் இறப்பும் தமிழில் எழுதப்பட்டது. இவருக்கு பின்னர் இறந்த தந்தை திலெனொய் மகனுக்கு அருகேயே புதைக்கப்பட்டு அவரது கல்லறை ஆவணம் (epithet) தமிழ், இலத்தின் மொழிகளில் எழுதப்பட்டுள்ளது.

    பார்வை நூல்: கல்வெட்டு  காலாண்டு இதழ் 72, பக்.9 ஆண்டு 2006

    மயிலாடுதுறை மாவட்டம் திருவீழிமிழலை (திருவிந்தளூர் செப்பேடு, பக்கம். 186)

    நமக்கு யாண்டு முப்பத்தஞ்சாவது நாள் நூற்றிருபத்தொன்றினால் வரியிலிட்டுக் குடுத்தபடியும் நமக்கு யாண்டு முப்பத்தஞ்சாவது நாள் நூற்றினால் கங்கைகொண்ட சோழபுரத்தில் நம் வீடு முடிகொண்டசோழநில் தெற்கில் மறைவிடக் கூடத்தில் நாம் கூறை உடா நிற்க விக்கிரம சோழபாண்டியந் நமக்குச் சொல்லி நூற்று முப்பத்தின்மர் சதுர்வேதி பட்டர்களுக்கு ப்ரஹ்மதேய இறையிலியாக குடுப்பித்த சோழகுல நாராயணச் சதுர்வேதி மங்கலம் _ _ _   

    வரியிலிட்டு – எழுதிக் கொடுத்த; வீடு – அரண்மனை; கூறை உடா  – ஆடை உடுத்தாமல் 

    விளக்கம் : முதலாம் இராசேந்திர சோழனின் மகன் வேந்தன் இராசாதிராசனுக்கு 35ஆம் ஆட்சி ஆண்டில் 121 ஆம் நாளில் எழுத்தில் எழுதிக் கொடுத்த அறிவிப்பு ஆணை யாதெனில், எனக்கு 35ஆம் ஆட்சி ஆண்டில் நாள் 100 அன்று கங்கைகொண்ட சோழபுரத்தில் என் அரண்மனை முடிகொண்ட சோழனில் தெற்குத் திசையில் இருந்த மறைவிடக் கூடத்தில் நான் ஆடை ஏதும் உடுத்தாமல் (இலங்கோடுடன்) நின்றிருக்க, விக்கிரம சோழபாண்டியன் என்னிடம் சொல்லியதால் 130 சதுர்வேதம் கற்ற பிராமணர்களுக்கு பிரம்மதேய இறையிலிக் கொடையாக கொடுக்கப்பட்ட  ஊர் சோழகுல நாராயணச் சதுர்வேதி மங்கலம் ஆகும்.

    வேந்தன் எண்ணெய்க் குளியலாட எண்ணெய் பூசி இருந்ததால் ஆடை உடுத்தாமல் இருந்திருக்கலாம். மேலும் அமைச்சன் அல்லது அணுக்கச் செயலன் விக்கிரம சோழபாண்டியன் இப்படி மறைவிடம் செல்லும் வகையில் வேந்தனுக்கு நெருங்கிய குருதி உறவினனாக இருத்தல் வேண்டும். முதலாம் இராசேந்திரன் தனது மகனை மதுரைக்கு ஆட்சியாளனாக அமர்த்திய போது அவனுக்குச் சோழ பாண்டியன் என்று பட்டம் சூட்டினான் என்பதில் இருந்து இது உறுதியாகிறது. இராசாதிராசன் 100 ஆம் நாளில் இந்தக் கொடைக்கு ஒப்புதல் அளித்தாலும் ஓலை ஆணை என்னவோ 21 நாள் கழித்துத் தான் எழுதி வழங்கப்பட்டது. ஆக அதன் ஏற்பாட்டிற்கு இத்தனை நாள் ஆகியுள்ளது.

    பார்வை நூல்: கங்கைகொண்ட சோழபுரம் கல்வெட்டுகள், பக். 101, இல. தியாகராஜன்.

    சதிகல் கல்வெட்டு (இடம் கொங்கின் வடமேற்கு பகுதியாக இருக்கலாம். ஊர்ப் பெயர் தெரியவில்லை)

    வீரபிரதாப ஸ்ரீ  _ _ _ _ ராயமகாராயர்  பிருத்விராச்சசியம் செய்திருக்க சக வருஷம் 1339 ஆவது ஹேவிளம்பி சம்வத்சரத்து பாத்திரபதசுத்த பஞ்சமி  ஸ்ரீ சகலாட்சபுரத்தும்  ரெ _ _ மகன் புக்கரன் ஸ்வரக்கத்தன் ஆனதில் அவன் பெண்டாட்டியர் மூவர் தோளும் கையும் கொடுத்த கம்பம் 

    சொர்க்கத்தன் – இறந்து சொர்க்கம் புகுந்தவன் 

    விளக்கம் : விசயநகர வேந்தன் வீர விஜயராய மகாராயர் மண்ணுலகு ஆண்டு கொண்டிருந்த சக ஆண்டு 1339 (கி.பி.1417) இல் ஏவிளம்பி ஆண்டில் பாத்திரபத சுத்த பஞ்சமி அன்று ஸ்ரீ சகலாட்ச புரத்தும்  ரெ _ _  மகன் புக்கரன் இறந்து சொர்க்கம் ஏகினபடியால் அவனது மூன்று மனைவியரும் உடன்கட்டை ஏறி மாண்டதன் நினைவாகத் தோளும் கையும் கொடுத்த கம்பம்  நாட்டப்பட்டது.

    இறந்த பெண்டிரின் நினைவாக இவ்வாறான சிற்பம் அல்லது சதிக்கல் கல்வெட்டுகளுடன் இருப்பது தமிழகத்தில் மிக அரிது. சதிக்கல் கருநாடகத்தில் அதிகமாக காணப்படுகிறது.  

    பார்வை நூல்: செந்தமிழ் தொகுதி 3 & தென்னிந்திய வீரக் கற்கள், பக். 379-380, வெ. கேசவராஜ்

    Share
  • கல்வெட்டில் வரலாற்றின் சுவடுகள்

    கல்வெட்டில் வரலாற்றின் சுவடுகள்

    தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை வெளியிட்டுள்ள தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி XIX & XXII ஆகியவற்றில் இருந்து சில கல்வெட்டுகள்.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர்  ஊத்தங்கரை சாலையில் உள்ள கொரட்டி கிராமம் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள 7 வரிக் கற்பலகைக் கல்வெட்டு. 

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ வலியடக்கியார்க் கேழாவது. 
    2. வலியடக்கியார் போவூர் நாடைந்நூறு பூமி 
    3. யுமாள காடு வெட்டிப்படை ஆறு[கு]ழுகூர் மேல் 
    4. வந்தெறிந்த ஞான்று வலியடக்கியார் கோ 
    5. [யி]ற்றமன் வாணிக வாணிளவரையன் இரண்டு 
    6. குதிரையும் மேலாரையும் குத்திப்பட்டான் நெ
    7. த்தோர்பட்டி   

    ஞான்று  – பொழுது; எறிந்த – அழித்த; கோயிற்றமன் – அரண்மனைப் பணியாள், சேவகன்; மேலார் – இராகுத்தான். குதிரை வீரர்.

    விளக்கம்: மன்னர் வலியடக்கியார் போவூர்நாடு ஐந்நூறு நிலப்பரப்பை ஆண்டு கொண்டிருந்த போது அவனது 7ஆம் ஆட்சி ஆண்டில் காடுவெட்டி மன்னனின் படை ஆறுகுழுமூர் ஊர் மீது வந்து அழித்த போது வலியடக்கியாரின் அரண்மனைப் பணியாள் வாணிக வாணிளவரையன் இரண்டு குதிரையைக் குத்திக் கொன்று அவற்றின் இராகுத்தன்களையும் கொன்று தானும் வீரச் சாவடைந்தான். அதற்காக அவன் குடும்பத்தாருக்கு குருதி சிந்தி உயிர் விடுவோருக்குத்  தரப்படும் நெய்த்தோர் பட்டி நிலம் கொடையாக வழங்கப்பட்டது.

    வாணிக என்ற சொல் இவன் வணிகர் குடியைச் சேர்ந்தவன் என்பதைக் காட்டுகிறது. அதே நேரம் வாணிளவரையன் என்பது இவன் வாணர் அரசர் குலத்தைச் சேர்ந்தவன் என்பதையும் குறிக்கிறது. இதாவது, பண்டு ஆறலைக் கள்வர் தம் பண்டங்களையும் உடைமைகளையும் கொள்ளையிடாமல் காத்தற் பொருட்டு வணிகர் தமக்கென தனியே ஒரு பாதுகாப்புப் படையைப் பேணினர். அப்படை சில வேளைகளில் மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, எதிரிப் படையோடு போரிட்டு விரட்டியதால் மன்னன் வணிகரை சிறப்பித்து “எட்டி” என்ற பட்டம் வழங்கினான். இதுவே பின்னாளில் சகர முன் மெய் பெற்று ‘செட்டி’ ஆனது. அப்படிப்பட்ட  நிகழ்வுகளில் மன்னன் வணிகருக்குத் தன் பெண்ணைக் கொடுப்பதும் வணிகரிடம் பெண் எடுப்பதும் நிகழ்ந்தது. அப்படியான ஒரு உறவில் தோன்றியவன் தான் இந்த வாணிக  வாணிளவரையன் என்று புரிந்து கொள்ளலாம். இதாவது, வாண அரசன் வணிகனுக்கு மணம் முடித்த தன் மகள் வயிற்றுப் பேரனைத் தத்தெடுத்து இளவரசனாக ஆக்கி இருக்கிறான் என்பதே. மனுதர்மம் வணிகர்நெறி பொருள் விற்பது தான் என்று குறித்துள்ளது. ஆனால் இப்படி படை பேணுவதும் போரிடுவதும் சத்திரியர் நெறி என்று மனுஸ்மிருதி குறித்ததை வணிகர் செய்யலாமோ?  இது விதி மீறல் அல்லவோ? இந்த மேற்கண்ட செயல் மனுதர்மம் தமிழகத்தில் பின்பற்றப்படவில்லை என்பதைத்தானே காட்டுகிறது? ஆனால் அரசியல் மேடையிலும்  எழுத்திலும் மக்களை முட்டாள் ஆக்கும் விதமாக அல்லவா பேசுகின்றனர், எழுதுகின்றனர். ஆறு என்றால் ஓய்வு; குழுமூர் என்றால் கூடும் ஊர். இதாவது, படையினர் ஓய்விற்காக கூடும் ஊர் என்பது இதன் பொருள்.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XIX & ஆவணம் 12, 2001 பக்கம் 5.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேவர் முக்குளம் கிராமம் பள்ளிகொண்ட பெருமாள் கோவில் கூரையில் இருந்த 44 வரி வணிகக் கல்வெட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ  ராஜேந்திர / சோழ தேவற்கியாண்டு பதி / நெட்டாவதிற் / ஸ்வஸ்திஸ்ரீ  தேவதேவந் த்ரி / _ _ வாணி அமரகன்யாச்சி தந் / வந்த தந்மோத புஜ / _ _ _   / ண் நாதந் ஸ்பஷ்ட நிர்ம்மித மஹாராசாதி / மர்த்தந ஸகல பராஸர / _ _ ரிய சாமுண்டேஸ்வரி / _ _ _ / வீரஸாஸன  மஹா / புவந வீரர்க _ மஹா / வீர  ஸ்ரீவி _ புத _ _ தி / ஐநூற்றுவரும் இ / வர் மக்களாந ஸ்ரீநா _ / வீரபுத்ரரோம் மாப்பந் புளியுமநை / க் கொன்ற பணிய் மக்கள்  மண்டலங் / காக்கும் கண்டழியும் மண்டலங்கா / க்கும் கவறை செட்டியையும் ஐஞ் / ஞூற்றுவந்  _ _ /  (பின்பக்கம்) ல்கிந்ற பணிசை ம / கந்  திடாவூரிருக்கும் ப்ரா / ஹ்மணந் அஞ்ஞூற்றுவாண்டா / நும்  அருமொழிதேவ முநிவர் சி / ங்கமும் எதிராந சிங்கமும் சிறு / திடாவூரிருக்கும்  கலியுக கண்டழி / யும் துறகலூர் எறியும் விடங்க / ச்செட்டியும்  சத்துருகண்ட மாயி / லெட்டியும்  பாதாளதூசியும் நாட்டுப் / பெருவாரியந்  நாட்டுச்செட்டியும் / மேற்பாடி மூத்தநும்  பாண்டி ஞாட்டைஞ் ஞூற்றுவாண்டாநும் வா / ளையூரைஞ் ஞூற்றுவாண்டாநு / ம்  இவர்களோடும் வந்த பல்வ / கை வீரரும் ஸமையமும் இருக்க ந / ம்  மகந், வீரகள் புத்திரனைக் கொற்ற / குலைப்பகையந் மாளனைக் குத்தி / க் கைதறித்து சமையத்துக் கிட / சோமையந் மகந் சாமுண்டந் பணி /கண்டு நாநாதேசிய  வீர திருவடியாயிரு / ந்து இவனுக்கு வீர பட்டணஞ் செய்து / குடுத்து _ _ ணிக்கச் செட்டுங் கட்டி / _ யம்ப _ _ _                        

    மக்களான – படைவீரரான; பணிசை – பணிசெய்; கண்டழி – துணை நிற்கும் படை; எறி – தங்கும்  அல்லது காக்கும்; மாயிலெட்டி – எண்ணெய் வணிகன்; பெரு ஆரியன் – பெருந் தலைவன்; ஸமயம் –  படையின் ஒரு பிரிவுப் பெயர்; கொற்ற – அச்சுறுத்திய; தறித்து – வெட்டி; கிட – ஆயுத சாலை;  வீரபட்டணம் – வீரர் ஓய்வு கொள்ளும் மனைகள், rest house; கட்டி – அகமகிழ்ந்து; இயம்ப – சொல்ல

    விளக்கம்: இந்த வணிகப் படைக் கல்வெட்டு முதலாம் இராசேந்திரனின் 18 ஆம்  ஆட்சி ஆண்டு 1030 இல் வெட்டப்பட்டது. 3 ஆம் வரி முதல் 14 ஆம் வரி வரை வணிகர் தம் மெய்க்கீர்த்தியே இடம் பெற்றுள்ளது. 15 ஆம் வரியில் தான் செய்தி தொடங்குகிறது. திசை ஐந்நூற்றுவரும்  இவருடைய படை வீரர்களான ஸ்ரீ நா _ _ வீரமக்களும் மாப்பன் புளியுமனை கொன்ற பணிமக்களும், இம்மண்டலம் காக்கும் துணை நிற்கும் படையும் இம்மண்டலம் காக்கும் கவறை செட்டியும், ஐந்நூற்றுவன் _ _ _ நில்கின்ற பணிசெய் மகனும், திடாவூரில்  வாழும் பிராமணன் ஐந்நூற்றுவாண்டானும், அருமொழித்தேவ முனிவர் சிங்கமும் எதிரான (தம்பி) சிங்கமும், சிறுத்திடாவூரில் இருக்கும் கலியுகத் துணை நிற்கும் படையும், துறகலூரில் இருக்கும் விடங்கச் செட்டியும், சத்துருகண்ட மாயிலெட்டியும், பாதாளத்தூசியும், நாட்டுப்  படையின் பெரு ஆரியனான நாட்டுச் செட்டியும், மேல்பாடி மூத்தனும், பாண்டி நாட்டு ஐந்நூற்றுவாண்டானும், வாளையூர் ஐந்நூற்றுவாண்டானும், இவர்களோடு வந்த இவர்தம் பல்வகை வீரரும், சமையப் படையும் சூழ்ந்து இருக்க, “நம் மகனையும் வீரர்கள் மகனையும் அச்சுறுத்திய குலப்பகைவன்  மாளனைக் கத்தியால் குத்திக் கையை வெட்டிய சமையப் படையின் ஆயுதக் கிடங்கு சோமையன் மகன் சாமுண்டனின் செயல்திறன் கண்டு சாமுண்டனை நாநாதேசிய வணிகரின் வீரத்திருவடியாய் இருக்கவும் இவனுடைய படை ஆள்கள் ஓய்வுகொள்ள, தங்கில் (வீரபட்டணம்) செய்து குடுத்து வசதி செய்யவும்” மாணிக்கச்செட்டி அகமகிழ்ந்து ஆணை இட்டார். குலப் பகைவன் எனக் குறிக்கப்படும் மாளனும் வணிகனாகவே இருக்க வேண்டும்.

    பாலக்காடு அட்டப்பாடி வணிகக் கல்வெட்டும் இதே போல வீரபட்டணம் செய்து கொடுத்ததைத் தெரிவிக்கிறது. ஐகுந்தம் வணிகக் கல்வெட்டும் இதே போல வணிகர்கள் மாபெரும் படையைப் பேணியதைக் குறிக்கிறது.

    பார்வை நூல்: ஒன்றியத் தொல்லியல்  துறையால் 1926இல் முன்பக்கம்  மட்டும்  பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்பக்கக் கல்வெட்டு அண்மையில் தான் அறியப்பட்டு நாளேட்டில் வெளியானது. முழுமையாக இன்னும் எந்த நூலிலும் அச்சேறவில்லை.

    வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் நத்தம் கிராமம் திருப்பழனமுடைய நாயனார் கோவில் தெற்குச் சுவரில் உள்ள 10 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ  திருபுவனச்  சக்கரவர்த்திகள் ஸ்ரீ குலோத்துங்க _ _ 
    2. [ழ] தேவற்கு யாண்டு 30 [ஆ]வது நிகரிலி சோழமண்டலத்து 
    3. _ _ ட்டு தகடூர் நா[ட்டு எ]யில்னாட்டுக்  கலி[ஞ்சி]றைப் பற்றுக் [கா] _ 
    4. கெயின்கறையில் வீடுடையார் திருபழனமுடைய  நாய[னா] _
    5. [ர்]த் திருக்கோவலூர் உடையார் திருவீரட்டானமுடையார் கோ[யி]
    6. ல் தேவரடியாரில் ககையாழ்வி மகள் ஆளுடையனாச்சியார்  
    7. _ _ _ க்குத்  திருப்பள்ளியறை நாச்
    8. சியாரை  எழுந்தருளிவித்து இன்னாச்சியார் 
    9. திருவத்தசாமத்துக்கு அமுதூட்டுக் குடுத்துவிட்ட
    10. குட்டையூர் திருத்தி விட்ட நிலம் நாற்     

    பழனம் – வயல், பொய்கை ;  நாயனார் – இறைவன்; 

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு 1208இல் மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் 30ஆம் ஆட்சி ஆண்டில் வெட்டப்பட்டது. நிகரிலி சோழ மண்டலத்தில் அடங்கிய தகடூர் நாட்டின் எயில் நாட்டு கலிஞ்சிறைப் பற்றில் காகைகறையில் கோவில் கொண்ட திருப்பழனமுடைய  நாயனார்க்குத் திருக்கோவிலூரில் கோவில் கொண்ட திருவீரட்டானம் ஈசுவரர் கோவில் தேவரடியாரில் ககையாழ்வியின் மகள் ஆளுடைய நாச்சியார் இங்கத்து திருபள்ளியறை இறைவியை எழுந்தருளச் செய்து  இத்தேவிக்குத் திருஅர்த்த சாம பூசைக்கு அமுதூட்ட, குட்டையூரில் காடு திருத்தி, சாகுபடிக்குக் கொண்டு வந்த நிலத்தில் நாற்பது அளவு நிலத்தைக் கொடையாகக் கொடுத்தனர். கல்வெட்டு அதற்கு மேல் சிதைந்துவிட்டது. ஆளுடையநாச்சியாரின் தாய்ப் பெயர் ககையாழ்வி என்பதும் காகைகறை என்பதும் ஒலித் தொடர்பு கொண்டுள்ளதால் இவள் தன் தாய் ஊர் இது என்று  வந்தனளோ?  ககை, காகை இரண்டில்  ஒன்றில் ஏதோ எழுத்துப் பிழை உள்ளது?

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XIX, பக்கம் 238

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் ஒலக்கூர் கிராமம் அகத்தீசுவரர் கோயில் கருவறை தென்புற ஜகதி மற்றும் பட்டிகையில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கடல் சூழ்ந்த பார்  மாதருங் கலை மாதருங் சீர்மாதருங் போர்மாதரும்  வந்து வாழ  நாற்கடல் சூழ் புவி ஏழும் பாற்கடல் சூழ் புகழ் பரப்பச் சோதிமணிமுடி  புனைந்தருளி அறு சமயமு மைம்பூதமு  நெறியில் வந்து பாரிப்பத்  தென்னவருஞ் சேரலருந்  சிங்களரு முதலாய 
    2. மன்னவர்  வந்திறை சூழ்த்து சேவிப்ப  ஊழி  ஊழி ஒரு செங்கோலேழு  பாருமினி  தளிப்பச் செம்பொன் வீரஸிம்மாஸனத்து உலகுடை முக்கோக் கீழாநடிகளோடும்  வீற்றிருந்தருளிய கோ ராஜகேசரிபந்மரான  திரிபுவனச்சக்ரவத்திகள்  ஸ்ரீ இராஜாதிராஜா தேவர்க்கு யாண்டு  நாலாவது  ஐயங்கொண்
    3. ட சோழ மண்டலத்து  ஒய்மா நாடான   விஜையராஜேந்த்ர வளநாட்டு எயில் நெடுங்கல் நாட்டு நெடியத்துக் குடிப்பள்ளி  அப்பன் சாத்தநும் வெண்குன்றக் கோட்டத்து உரத்தி நாட்டு உரத்தி ஒரளி உதையன் பெருமாளும் பரிவேட்டை போன இடத்தில் ஒரளி உதையன்  பெருமாள் புல்வாயை எய்த அம்பு பிழைத்து இவ்
    4. வப்பன் சாத்தனை அம்புபட்டு பட்டமையில் இதுக்குப் பெருமக்களும் பெரிய நாட்டாரும் பன்னாட்டாரும் கூடி இருந்து பிராயச்சித்தம் விதித்தபடி  இம்மண்டலத்து  உலக்கை ஊராந ராஜேந்த்ர நல்லூர்த் திருவகத்தீஸ்வர முடைய மஹாதேவர் கோயிலில் வாதாபி விடங்கர்க்கு இ(வ்)வப்பன் சாத்
    5. தனுக்காகப் பகைநீங்க இவ்வொ(ர)ளி உதையன் பெருமாளேன் வைத்த திருநுந்தா விளக்கு ஒன்றுக்கு இக்கோயில் திருவுண்ணாழிகை ஸபையோம் உபையமாகக் கைக்கொண்ட  பசு முப்பத்திரண்டும் இஷபம் ஒன்றுங் கைக்கொண்டு  இத்திரு நுந்தா விளக்கு ஒன்றுஞ் சந்திராதித்த வரை எரிக்கக் கடவோம் ஆகச் சம்ம
    6. தித்தோம்  திருவு(ள்)ணாழிகைச் ஸபையோம்.            

    பரிவேட்டை – வேட்டைச் சுற்று; புல்வாய் – கலைமான்; பெருமக்கள் – பிரமாண ஊர் மன்ற உறுப்பினர்; பெரிய நாட்டார் – நாட்டாண்மை தலைவர்; பிழைத்து – தவறுதலாக;  பன்னாட்டார் – பல்குழு வணிகராக இருக்குமோ?;  வாதாபி விடங்கர் – உளியால் செதுக்கப்படாத லிங்கம்; உண்ணாழிகை – கருவறை 

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு இரண்டாம் இராசாதிராசன் மெய்க் கீர்த்தியுடன் தொடங்குகிறது. இது அவனது 4 ஆம் ஆட்சி ஆண்டு 1170இல் வெட்டப்பட்டது. தொண்டைநாடு என்னும்  செயங்கொண்ட சோழ மண்டலத்தில் அடங்கிய ஓய்மா நாடெனும் விசய ராசேந்திர வளநாட்டு எயில்நெடுங்கல் நாட்டில் உள்ள நெடியம் கிராமத்தில் வாழும் பள்ளியான அப்பன் சாத்தனும் வெண்குன்றக் கோட்டத்தில் அடங்கிய உரத்தி நாட்டு உரத்தி ஒரளி உதையன் பெருமாளும் சுற்று வேட்டைக்குப் போன இடத்தில் ஒரளி உதையன் பெருமாள் கலைமானை நோக்கி விட்ட அம்பு தவறுதலாக அப்பன் சாத்தனைத் தைத்து அவன் இறந்து போகிறான். இதன் காரணமாகப் பிராமண ஊர் மன்றத்தாரும், பெரிய நாட்டரும், பன்னாட்டு வணிகரும் ஒன்று கூடி, கொன்ற பாவத்திற்குக் கழுவாய் விதித்து இம்மண்டலத்தில் உள்ள உலக்கை ஊரான இராசேந்திர நல்லூர் என்னும் இன்றைய ஒலக்கூரில் உள்ள அகத்தீசுவரர் கோவிலில் உள்ள வாதாபி விடங்கர் சிவலிங்கத்திற்கு, இறந்த அப்பன் சாத்தன் கொலைப் பழிநீங்க இந்த ஒரளி உதையன் பெருமாள் ஏற்படுத்திய நந்தா விளக்கு எரிப்பு ஒன்றுக்கு இக்கோயில் கருவறை பிராமணர் நன்கொடையாக முப்பத்திரண்டு பசுவும் ஒரு காளையும் பெற்றுக்கொண்டு இத்திரு நந்தா விளக்கை ஞாயிறும் நிலவும் நின்று நிலைக்கும் காலம் வரை எரிப்போம் என்று உறுதி கூறி, கல்வெட்டினர் கருவறைப் பணி செய்யும் பிராமணர்கள்.

    இங்கு நியாயத்தாரின் நீதிமன்றம் தவிர்க்கப்பட்டதோ? எல்லாம் மிரட்டல் தானோ என்று எண்ணத் தோன்றுகிறது. உதையன் பெருமாள் நந்தா விளக்கு எரிக்கும் அளவிற்குச் செல்வ செழிப்புள்ள குடியில் பிறந்தவன் என்பதை அவன் சுற்று வேட்டையால் விளங்கிக்கொள்ள முடிகிறது. உரத்தி ஓர் ஊர் பெயர். ஒரளி ஊராளி என்பதன் கொச்சைத் திரிபா எனத் தெரியவில்லை.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XXII, பக்கம் 8

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் உப்புவேலூர் கிராமம் திருவிருத்தப் பெருமாள் கோயில் வாசலில் உள்ள 2 வரிக் கல்வெட்டு

    1. இக்கோயில் திருவாசல்
    2.  பறயன் திருவாசல்

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு 14 ஆம் நூற்றாண்டினது எனக் கருதப்படுகிறது. இந்தக் கோவிலின் தெய்வீக வாசல் ஒரு பறையனால் செய்விக்கப்பட்டதனால் அவன் பெயரில் பறையன் திருவாசல் எனக் குறிக்கப்பட்டது.

    பறையர்கள் கோவிலுக்குச் சந்தி விளக்கு ஏற்றிய கல்வெட்டுகள் பல உள. ஆனால் இது சந்தி விளக்கை விட அதிகச் செலவாகும் திருப்பணி என்பது இப்பறையன் செல்வச் செழுமையும் பதவியும் பெற்று வாழ்ந்திருக்க வேண்டும் என்று காட்டுகிறது. உண்மை இப்படி இருக்க, தலித்தியர் தம்மை இச்சமூகம் 2,000 ஆண்டுகளாக ஊரில் வரவிடாமல் ஒடுக்கியதாக பொய்யை  நம்பிப் பழிக்கின்றனர். எல்லாக் கோயிலும் ஊர் நடுவே தான் அமைந்துள்ளன. ஒருவர் கோவிலுக்குச் செல்ல வேண்டுமெனில் பிராமணர் வாழும் தெருவைக் கடந்து தான் கோவிலுக்குச் செல்ல முடியும். இத்திருவாசல் அமைத்த பறையன் ஊருக்குள் வந்து தானே இதைச் செய்திருக்க முடியும்? திருவாசல் செய்தவன் கோவிலில் சாமி கும்பிடாமலா இத்திருப்பணியைச் செய்திருப்பான்? எனவே பறையர் ஒடுக்குமுறை என்பது 16-17 ஆம் நூற்றாண்டில் தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் நிகழ்ந்த நிர்வாக ஒடுக்கு முறை ஆகும். நிர்வாக ஒடுக்குமுறைக்கும் மதத்திற்கும் மனுதர்மத்திற்கும் எந்தத் தொடர்புமில்லை. விசயநகர ஆட்சிக்கு முன் பறையர் ஒடுக்கு முறை இருந்ததில்லை என்பதே உண்மை.

    பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் XXII, பக்கம் 153.

    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பெரிய கோளாப்பாடியில் உள்ள 8 வரி நடுகல் கல்வெட்டு.

    1. கோவிசைய மயேந்திர பருமற்கு 
    2. யாண்டு பதினொன்றாவது கீழ் வேணாட்
    3. டுத் துடரி மேல் விலக்குமிறை
    4. யார் வந்த ஞான்று பெரும்பா
    5. ண்ணரையர் மருமக்கள் அம்கோ
    6. ட்டையர் சேவகன் சாக்கை ப
    7. றையனார் இளமகன் ஏறன்
    8. எறிந்து பட்டான். 

    ஞான்று – போது; மருமக்கள் – பெண் கொடுத்த உறவால் வந்த உறவினர்; சேவகன் – படைத்தலைவன்; இளமகன் – பயிற்சி பெறும் கன்னி வீரன்; எறிந்து – வென்று; பட்டான் – வீரச் சாவடைந்தான்.   

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு பல்லவன் முதலாம் மகேந்திர வர்மனின் 11ஆம் ஆட்சி ஆண்டு 601இல் வெட்டப்பட்டது. கிழக்கு வேணாட்டு துடரி மீது விலக்குமிரையார் படையெடுத்து வந்த போது பெரும்பாண அரசர் மருமக்களான அம்கோட்டையர்க்குப் படைத்தலைவன் சாக்கைப் பறையனிடம் பயிற்சி பெரும் கன்னி வீரன் ஏறன் என்பவன் எதிரிப் படையை வென்று வீரச் சாவடைந்தான்.

    துடரி இன்றைய பெரிய கோளப்பாடியாக இருக்கலாம். பறையர்கள் போர்வீரர்களாக, தொன்முது காலம் முதல் இருந்து வந்துள்ளனர். அவர்கள் தம் இன மக்களைத் திரட்டிப் பயிற்சி தந்து போரிட்டதால் அப்படைக்குத் தளபதிகளாகவும் இருந்துள்ளனர். சாக்கைப் பறையன் ஆடவும் தெரிந்தவனோ? ஏறு என்றால் காளை ஏறன் என்றால் காளையன். இப்படித்தான் அக்கால மக்கள்  தமிழில் பெயர் வைத்தனர்.

    பார்வை நூல்: செங்கம் நடுகற்கள் க.எண் 1971/96

       

    திண்டுக்கல் மாவட்டம் உடும்பகுடி வேட்டைக்காரசாமி கோவில் 13 வரி நடுகல் கல்வெட்டு

    1. ஸ்ரீ 
    2. இரணசிங்க 
    3. த் துவராவதி வெள்ளார்
    4. பளி 
    5. நாயகன் கா
    6. ரி சாத்தன்   
    7. உடும்பகு
    8. டி நிரை கொள்ள 
    9. பின்பு சென்று 
    10. எறிந்து பட்டான் 
    11. பள்ளி வே
    12. ளா(ந்) சாரிகன் சி
    13. ய்    

    வெள்ளார் / வெள்ளாளர் – வெள்ளைத் தோல் ஆரியர்; பள்ளி – வன்னியர்; நிரை – கால்நடை கூட்டம்; கொள்ள – கொள்ளையிட; எறிந்து – வென்று; வேளாண் – அரசகுடி உறவினன், அரசகுடி ஆள்; சிய் – சேய், மகன்.

          

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு 9ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளப்படுகிறது. இதில் வேந்தர் பெயர் ஏதும் குறிக்காமல் அங்கத்துக் குறுநில அரசன் பெயர் குறிக்கப்படுவது பல்லவர் ஆட்சிக் குலைவின் காரணமாக இருக்கலாம். இரணசிங்க துவராபதி வெள்ளாளர்க்குப் படைத் தலைவனான சேவகன், பள்ளிசாதித் தலைவன் காரி சாத்தன் என்பவன் உடும்பகுடி கால்நடைகளைக் கொள்ளையிட்ட போது அதைத் தடுக்கப் பின்தொடர்ந்து துரத்திச் சென்று போரில் வென்று வீரச் சாவடைந்தான் பள்ளி வேளாண் சாரிகன் என்ற அரசகுடி உறவினன். அவன் மகன் இந்நினைவுக்கல் எடுப்பித்தான். இன்று இது வேட்டைக்காரச் சாமியாக வணங்கப்படுகிறது.

    வெள்ளாளர் என்பவர் வெள்ளைத்தோல் ஆரியர் என்பதால் தான் வெள்ளாளர் என்று குறிக்கப்பட்டனர். தொண்டை மண்டலத்தில் இருந்து கைக்கோளர், பறையர் ஆகியோர் படைவீரர்களாகத் தெற்கே சென்று தனியே படைப்பற்று குடியிருப்பு அமைத்தது போலவே பள்ளி என்னும் வன்னியரும் தெற்கே சென்று திண்டுக்கல்லில் படைப்பற்று அமைத்து வாழ்ந்ததற்குச் சில நடுகற்கள் சான்றாக உள்ளன. இது அதில் ஒன்று.

    பார்வை நூல்: இது வரலாற்றுத் தேடல் குழுவால் புதிதாக அறியப்பட்ட நடுகல் கல்வெட்டு. இன்னும் நூலில் அச்சேறவில்லை.

    மதுரை பழங்காநத்தம் மேற்கே உள்ள மாடக்குளம் ஊர் குளத்தின் வடக்கு மடைத்தூண் 12 விரிக்க கல்வெட்டு.

    1. விறோதி வருஷம் 
    2. ஆவணி மாத
    3.  ம் 29 தேதி திருவா
    4. லைவாயன் ம
    5. டைக் கல்லு 
    6. எடுத்து நாட்டி 
    7. வித்தான் திரு
    8. வாலை வாச்சி 
    9. அதிகாரி மகன் 
    10. ஆரியர் புத்திர
    11. கணக்கு நாய
    12. ன் பிள்ளை.   

    விளக்கம்: இந்தக் கல்வெட்டு விரோதி ஆண்டு 1709 அல்லது 1769இல் ஆவணி மாதம் 29ஆம் தேதி வெட்டப்பட்டது எனக் கணிக்கப்பட்டுள்ளது. மதுரை மாடக்குளம் ஊர்க்குளத்தின் திருவாலைவாயன் எனும் மடைக்கல் சாய்ந்து சரிந்து கிடந்ததைத் தூக்கி அதே இடத்தில் நிறுத்தினான் திருவாலை மன்ற அதிகாரி மகன் ஆரியர் புத்திரக் கணக்கு நாயன் பிள்ளை என்பவன். 18ஆம் நூற்றாண்டு வரை ஆரியர், இதாவது உயர்ந்தோன் என்ற பட்டத்தைத் தாங்கியவர் வெள்ளாளர் ஆவர். ஆனால் அடுத்த 19 ஆம்  நூற்றண்டில் அதைப் பிராமணர் பக்கம் திரும்பிவிட்டனர் அதே வெள்ளாளர்.

    பார்வை நூல்: ஆவணம் 15, 2004, பக்கம் 120

    Share
  • கல்வெட்டு சொல்லும் மெய் வரலாறு

    கல்வெட்டு சொல்லும் மெய் வரலாறு

    கல்வெட்டுகள் வெறும் கல்வெட்டுகள் அல்ல அவை உண்மையின் உரைகற்கள் ஆகும். ஏனெனில் ஓலைகளில் இடைச் செருகலைச் செய்ய முடியும் ஆனால் கல்வெட்டில் ஒருமுறை பதித்தால் அதை மாற்றவே முடியாது. அப்படி மாற்றி இடைச்செருகினால் அது தெள்ளத் தெளிவாகத்  தெரிந்துவிடும். இனி வாரும் நாமும் சில கல்வெட்டுகளை உரசிப் பார்த்து உண்மையை அறிவோம்.

    திருச்சிராப்பள்ளி மாவட்டம் கருவூர் வட்டம்  கருவூர் பசுபதி ஈசுவரர் கோவில் மொட்டை கோபுர வலது நுழைவாயிலில் உள்ள  9 வரிக் கல்வெட்டு. 

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ  திரிபுவனச்  சக்கரவத்திகள் கோ நேர்மேல் கொண்டான் வெங்கால நாட்டுக் 
    2. கருவூர் ஆள் (உ)டையார் திருவாநிலை (ஆ)ளுடையார் கோயில் காணி உடைய சிவப்பிரா 
    3. மணர்க்கும்  ஆண்டார்களுக்குந் தேவரடியார் கைக்கோளர்க்கும்  வெள்ளாள(ர்)க்கு
    4. ம் உவச்ச(ர்)க்கும் ஓலை குடுத்த பரிசாவது, இவர்கள் நம்மை தின்மைகளுக்கு இரட்டை சங்கு   
    5. ஊதவும் பேரிகை கொட்டவும் தங்கள் வீடுகள் இரண்டு நிலை எடுத்துச் சாந்து இட்டுக்கொள்
    6. ளவும்  இரட்டை கதவு இட்டுக் கொள்ளவும் செங்கழுநீர் பூவால் வாசிகை தோள் இடவும் இ
    7. வர்கள் நம் சரக்குக்கு தருவதான அச்சு நாற்பதுங்  கொண்டு இவர்கள் மக்கள் செ(ய்)து
    8. கொள்வார்கள் ஆக நம் ஓலை பிடிபாடாக கொடுத்தோம் (3) ஆண்டு நாள் 2(100)8(10)7 நந்தபன்ம
    9. ன் எழுத்(து) வை(யிராத்)தராயன் எழுத்து தொண்டை(மான்  எழுத்து) காலிங்கரா(ய)ன் எழு(த்து). 

    திருவானிலை – கருவூர் சிவன் கோவில்: ஆளுடையார் – செயற்பாடுகளை நிர்வகிப்போர்; காணிஉடையார் – பரம்பரை உரிமை உடையவர்; ஆண்டார் – அடியார், பக்தர்; உவச்சர் – மத்தளம் கொட்டுவோர்; ஓலை – ஆணை ஓலை; பரிசு – விவரம்; சாந்து – சுண்ணாம்பு; இரண்டு நிலை – முன், பின் என இரு வாயில் கால்; வாசிகை தோள் – வாயில் அரண்வளை இருபுறம்: சரக்கு – பண்டாரம், கருவூலம்; அச்சு – பொற் காசு; பிடிபாடு – வழிகாட்டு நெறி, guidelines; கதவு – கதல் என்றால் பக்கவாட்டில் நகர்தல் (to slide aside), நகர்தல் அசைதல். இதை வேராகக் கொண்டு கதல் + வு = கதவு என்ற சொல் உண்டானது.

    விளக்கம்:  இக்கல்வெட்டு, கொங்குச் சோழன் கோ நேரின்மை கொண்டான் வீரராசேந்திரனின் 3ஆம் ஆட்சி ஆண்டில் 1210 இல் நாள் 287 இல் வெட்டப்பட்டுள்ளது. வெங்கால நாட்டில் அடங்கும் கருவூர் நகரை நிர்வகிப்போர், அங்கத்து சிவன் கோவிலை நிர்வகிப்போர், பரம்பரை உரிமை உடைய சிவப் பிராமணர், அடியார்கள், தேவரடியார்கள், கைக்கோளர்கள், வெள்ளாளர்கள், மங்கல இசைஞர்கள் ஆகியோருக்கு இந்த ஆணை ஓலையில் கொடுத்த சலுகை விவரம் யாதெனில், “இவர்கள் குடும்ப நன்மை தீமைகளுக்கு இரட்டை சங்கு ஊதிடவும், முரசு கொட்டவும், தமது வீடுகளில் இரண்டு நிலை வாயில் நிறுத்தவும், சுவருக்கு சுண்ணாம்பு பூசவும், வாயிலுக்கு இரண்டு கதவுகள் பொருத்தவும்  வாயில் அரண்வளையின் இரு புறமும் செங்கழுநீர்ப் பூ தொடுத்த மாலையை அணிவிக்கவும் உரிமை தரப்படுகிறது. மேலும் இவர்கள் என் கருவூலத்திற்கு ஆண்டாண்டு செலுத்துகின்ற 40 பொற்காசுகளை இனி தராமல் அதைக் கொண்டு இவர்கள் பிள்ளைகளை வளர்க்கட்டும் என்று இந்த ஆணை ஓலைப்படி பற்றி ஒழுகக் கொடுத்தோம். இது நந்தபன்மன் ஒப்புதல் எழுத்து, வயிராதராயன் எழுத்து, தொண்டைமான் எழுத்து, காலிங்கராயன் எழுத்து என்று உள்ளது.

    இப்படி சமூக நிலையை உயர்த்தும் உரிமை தரும் கல்வெட்டுகள் கொங்குப் பகுதிகளில் ஆங்காங்கே காணப்படுகின்றன.  இதன் மூலம் இந்த உரிமைகள், மக்களுக்கு இதற்கு முன்னம் மறுக்கப்படிருந்தன என்ற உண்மை விளங்குகிறது. கொங்கில் போலவே பாண்டிய நாட்டிலும், சோழ நாட்டிலும், தொண்டை நாட்டிலும் 12 ஆம் நூற்றாண்டு வரை இந்த உரிமைகள் மக்களுக்கு மறுக்கப்படிருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. இப்படியான உரிமைகளை  அரச குடும்பத்தவர், படைத்தலைவர்கள் ஏற்கனவே அனுபவித்து இருந்தால் மட்டுமே பின்னீடு அதே போன்று பிறரும் வாழ வகை செய்யும் எண்ணம் தோன்ற முடியும். அக்காலத்தில் ஒருவரது உடை, வீடு ஆகியவற்றை வைத்தே அவரது சாதி, சமூக நிலை எல்லார்க்கும் தெரியும்படியான நிலை தான் இருந்துள்ளது. இப்படி சமூகத்தில் ஏற்றத் தாழ்வு நிலவ ஆட்சி ஆண்ட அரசர்களும் படைத் தலைவர்களுமே  முழுக் காரணமாக இருந்துள்ளனர். தமக்கு என்று தனி அந்தஸ்து, கெளரவம் இருப்பதாக எண்ணிய ஆட்சியாளர்கள் இந்த வேற்றுமையை தமது ஆட்சிப் பகுதியில் நிலைப்படுத்தி இருந்துள்ளனர். இதனால் சமத்துவம் இருக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் இந்த வரலாற்று உண்மைக்கு மாறாக இந்து மதம், சனாதன தர்மம், மனு தர்மம், பார்ப்பனியம், பார்ப்பனர் தான் எல்லா சமூக ஏற்றத் தாழ்விற்கும் காரணம் என்று பொய் பரப்புரை செய்யப்பட்டுள்ளது. அந்தப் பொய்யை இக்கல்வெட்டு, சுக்கு நூறாக உடைக்கின்றது.

    பார்வை நூல்: A R no  136 of 1905 no 137. பக்கம் 173 & 174 of South Indian Inscriptions,  Vol  39

    வட ஆர்க்காடு மாவட்டம் வாலாஜா வட்டம்  குடிமல்லூர்  பூமீசுவரர் கோவிலின் நடுக் கோவில் வட சுவரில் உள்ள  11 வரிக் கல்வெட்டு. 

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ  திருபுவனச்  சக்கரவத்தி ஸ்ரீ குலசேகர தேவர்க்கு யாண்டு  12 பன்னிரண்டாவது மேஷ  நாயற்றுப் பூர்வ பக்ஷத்து சதுத் தேசியும் வெள்ளிக்கிழமையும் பெற்ற அவிடத்து நாள் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து படுவூர் கோட்டத்து கலவைப்பற்று கரைவழி  
    2. வல்லியூர் உடையார் கிடாரங்கொண்ட சோளீசுரமுடைய நாயினார் கோயில் கெங்கைகொண்ட சோழன் திருக்காவணத்து கலவைப்பற்று  ஆந்திநாடு அத்திப்பற்று முறுகன்மங்கலப்பற்று  நாட்டாரும் அகம்படியாருமான மற்றும் வலங்கைக்கடைத்த சாதியுள்ளாரும் இடங்கைக்கடைத்த சா
    3. தி(யிலுள்ளாரும்) நிறைவற நிறைந்து குறைவறக் கூடியிருந்து  எங்களிலிசைந்து  _ _ _ நாயனாற்கு  உபய நிச்சயித்துக் குடுத்தபடி  இராசத் துரோகியுமாய் நாட்டுத் துரோகியுமான  (கொல்லத்) தரையனை கொல்வதாக நாடாகக் குவிந்து வருகையில் இவன் 
    4. இன்னாயனார் திருக்கோயில் திருமலையில் மேலேறியிருக்கையி லிவநைக் கொல்லுமளவுக்குத்  திருமலையை (இறக்கி) கொல்ல வேண்டுமென்று சொல்லுகையில். இக்கோ(யி)ல் மாகேசுரர், தானத்தார், கவரிப்பிணா பொற்கோயிற்  கைக்கோளரும் 
    5. திருமலையை இறக்கவொண்ணாதென்று சொல்லுகையில் திருமலை(யிறக்கி) கொன்றால்த்  திருமலைகு சென்றாலே இழிந்து வெள்ளியிலே புரிக்  கட்டவும் பூசைக்கு _ _ _ 
    6.  (ணக்க) நாங்கள் வைத்த உபையஞ் சந்திராதித்த வரையு நடத்தக் கடவதென்று  சம்மதித்து அறுதி பண்ணிக்  குடுத்தபடி ஆண்டொன்று(க்கு  வேலி) ஒன்றுக்கு  கலநெல்லு அரைப்பணமும் புஞ்செப்பற்றுக்கு ஏர் ஒன்றுக்குக் கல(தானியம்)  
    7. யெறு சாத்திறங்கு சாத்து பாக்கு மிளகு பொதிக்கு பொதிஒன்றுக்கு ஒரு பணமு முப்புப்பொதிக்கு எள்பொதிக்கு பொதிஒன்றுக்கு  அரைப்பணமு _ _ _  நெல்லு  _ _  _ _ கால்ப்  பணமு _ _ _   ஒன்றுக்கு _ _ _ (சால்)தறி ஒன்றுக்கொரு பணமு வாணிகர் செக்கு வாணிகர் (செ)
    8. கொள்ளக் கடவதாகவும். இப்படி சம்மதித்து இந்த உபையஞ்  சந்திராதித்த வரை நடத்திக் குடுக்க  _ _ _ 
    9. டுத் துரோகியுமான  கொல்லத் தரையனைக் கொல்ல திருமலை  இறக்கி யிவனையுங் கொன்று இந்த _ _ _ 
    10. மெடுத்துத் தண்டிக் கொள்ளும்படிக்கு உடையார் கிடாரங்கொண்ட சோளீசுரமுடைய நாயனார்  
    11. _ _ உருத்திர ஸ்ரீ  மாயேசுரர் ஸ்ரீ காரியஞ் _ _ _ (த்தாரும்)  கவரிபிணா பொற்கோயில் கைக்கோளர்க்கும்  ஸ்ரீ வீரபத்திரர்க்கும் இப்படி (ச)ம்மதித்து  

    நாயிற்று – ஓரை, ராசி; நாட்டார் – ஊரவர், அடைத்த – அடங்கிய; உபயம் நிச்சயித்து – கோவிலுக்குக் கொடை உறுதி ஆக்கி; நாடாக குவிந்து – ஊரே கூடி, திருமலை – போர்த்திய விமான கவசம்; இறக்கி – நீக்கி, கலைத்து; கவரிப்பிணா – கவிழ்த்துக் கட்டிய; இழிந்து – அவிழ்ந்து, சேதம், damage; புரி – முறுக்கிய கயிறு, twine; தண்டி – திரட்டு, வசூலி, collect.

    விளக்கம்:  இக்கல்வெட்டு, மாறவர்மன் குலசேகர பாண்டியனின் 12ஆம் ஆட்சி ஆண்டு 1279இல் வெட்டப்பட்டது. மேழ ஞாயிற்று(ராசி) சந்திர மாதத்தின் முதல் பாதி 14 ஆம் நாள் வெள்ளிக்கிழமை கூடிய அவிட்ட நாண் மீன் நாளன்று செயங்கொண்ட சோழமண்டலத்தின் படுவூர் கோட்டத்தில் அடங்கிய கலவைப்பற்று கரைவழி வல்லியூர் உடைய கிடாரங்கொண்ட சோழீசுவரமுடைய இறைவன் கோயிலில் கங்கைகொண்ட சோழன் திருகாவணத்து கலவைப்பற்று, ஆந்திநாட்டு அத்திப்பற்று, முருகன் மங்கலப்பற்று ஊராரும், அகம்படியாரும், இடங்கை வலங்கையில் அடங்கிய சாதியாரும் ஒன்று கூடித் தாமே விரும்பி நன்கொடை உறுதி செய்து கொடுத்தது யாதெனில், “இராசத் துரோகியும், நாட்டுத் துரோகியுமான கொல்லத்து அரையனைக் கொல்வதற்கு நாட்டினர் திரண்டு வரும்போது அவன் இந்த இறைவன் கோவிலில் விமானத்தில் ஏறி அதை போர்த்திய கவசத்தில் ஒளிந்து கொண்டான். அப்போது அந்த போர்த்திய கவசத்தை நீக்கி அவனைப் பிடித்துக் கொல்ல வேண்டும் என்று சொல்லுகிற போது இக்கோயில் மகேசுவரர், பொறுப்பாளர், கவித்துக் கட்டிய பொற்கவசக் கைக்கோளரும் சேர்ந்து விமானக் கவசத்தை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டனர். மீறி விமானக் கவசத்தில் ஏறிக் கொன்றால் கவசம் சேதமாகிவிடும். அதை மீண்டும் கட்ட வேண்டும் என்றால் வெள்ளி முறுக்குக் கயிறால் தான் கட்ட முடியும் என்று கூறுவதோடு மீண்டும் அதற்குப் புதிதாகப் பூசை செய்யவேண்டும் என்று சொல்லுகின்றனர். இதற்கு இணங்க நாங்கள் செய்கின்ற நன்கொடை சந்திர சூரியர் நிலைக்கும் காலம் வரை நடத்திச் செல்ல வேண்டும் என்று ஒப்புக்கொண்டு முடிவாக அறிவித்தபடி “ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வேலி நெல்லில் இருந்து ஒரு கலநெல்லும் அரைப்பணமும் புன்செய்  நிலத்தில் இருந்து ஏர் ஒன்றுக்குக் கல தானியமும், ஏறும் பாக்கு மரத்தில் சாத்துப் பாக்கும், மிளகு பொதியில் பொதி ஒன்றுக்கு ஒரு பணமும், உப்பு பொதி, எள் பொதியில் பொதி ஒன்றுக்கு  அரைப்பணமும் (கல்வெட்டு சிதிலமடைந்து படிக்க முடியவில்லை) தறி ஒன்றுக்கு ஒரு பணமும் இப்படி சம்மதித்து இது சந்திர சூரியர் உள்ள வரை நடப்பதாகுக. இதற்கு ஈடாக இராச துரோகியும் நாட்டுத் துரோகியும் ஆன கொல்லத்தரையனைப்  பிடித்துக் கொல்வதற்கு  விமானக் கவசத்தை நீக்கிக் கொன்று, இந்த ஒப்புதல்படி பணத்தைத் திரட்டிக்கொள்ளுமாறு கிடாரம் கொண்ட சோழீசுவரமடைய இறைவன் கோவில் உருத்திரர், மாகேசுவரர், கோவில் பணியாளர், கவிழ்த்துக் கட்டிய தங்கக் கோவில் கைக்கோளருக்கும் வீரபத்திரருக்கும் இப்படியாக நடந்து போக ஒப்புக்கொண்டோம் என்று உறுதி தந்தனர்.

    கொல்லத்தரையன் நாடே சினந்து திரண்டு கொல்லும் அளவிற்கு வரிப் பணத்தைத் திரட்டி அதைக் கருவூலத்தில் செலுத்தாமல் கவர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. அதனால் தான் கல்வெட்டில் இதை இராச துரோகம், நாட்டுத் துரோகம் என்று  குறிப்பிட்டுள்ளனர். ஒரு மனிதனை தம் கோவம் அடங்குவதற்காக உடனே கொல்வதென்பது தேவையற்றது. அவன் இரண்டு நாள்கள் மேலாக சோறும் தண்ணீரும் இன்றி விமானக் கவசத்திலேயே ஒளிந்து இருக்க முடியாது. அப்படி இருந்தால் பட்டினிச் சாவு தான் அல்லது அவன் தானே கீழே இறங்கிவிடுவான் அப்போது அவனை பிடித்துக் கொல்ல முடியும். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பதே உலக நடப்பு.

    பார்வை நூல்: A R no  136 of 1905 no 137. பக்கம் 228 & 229 of South Indian Inscriptions,  Vol  39.

    புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம்  குளத்தூரில்  சிதிலமடைந்த சிவன் கோவில் கிழக்கு சுவர் 3 வரிக் கல்வெட்டு. 

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ  இத்திருக்கற்றளியிலும் திருவக்ர மண்டபத்திலும் 
    2. எழுத்து வெட்டாதொழிக; வெட்டில் இராசத்துரோபியும் 
    3. சிவத்துரோபியு மினத்துரோபியுமாவான்  

    அக்ர மண்டபம் – முக மண்டபம்

    விளக்கம்:  இக்கல்வெட்டு சுந்தர சோழீசுவரமுடைய நாயனார் கோவிலில் 13ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்டதாகத் தெரிகிறது. இக்கோவில் சன்னதியிலும் முகமண்டபத்திலும் கல்வெட்டு ஏதும் வெட்டக் கூடாது அப்படி மீறி வெட்டுவோர் அரச துரோகியும், சிவத் துரோகியும் சிவபிராமணத் துரோகியும் ஆவான் என்று இனத்தைச் சுட்டி எச்சரிக்கிறது.

    இதன் மூலம் அறிய வரும் உண்மை யாதெனில் எல்லா அரச ஓலையிலும் “கல்லிலும் செப்பிலும் வெட்டிக் கொள்க” என்று கூறினாலும் அந்த எல்லா ஓலை ஆணையும் அவ்வாறு கல்லில் வெட்டப்படவில்லை, சிவாச்சாரியார் அவற்றில் எதை வெட்டுவதற்கு ஒப்புக் கொண்டாரோ அதுவே கல்வெட்டானது மற்றையவை ஓலையாகவே இருந்து அழிந்தன. மேற்படியான கொள்கையில் சில பிராமணர் இருந்தாலும் கிடைத்த மொத்த தமிழ்க் கல்வெட்டுகள் 60,000 இல் நடுகல் கல்வெட்டு, ஊர்க் கல்வெட்டு என 1,000 கல்வெட்டுகள் போக எஞ்சிய 59,000 கல்வெட்டுகள் கோவிலில் பொறிக்கப்பட, கோவில் சிவ பிராமணரும் பட்டாச்சாரிகளுமே காரணம் ஆவர். இந்த 59,000 கல்வெட்டுகள் வெட்டப் பெறாமல் கோவில் புனிதம் கெட்டுவிடும் என்று தடுத்திருந்தால் இன்று நமக்கு எந்த வரலாறும் கிடைத்திருக்காது. இதற்குத் தமிழ் உலகம் பிராமணருக்கு நன்றி கூற வேண்டும்.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள்  – மடலம் 34, பக்கம் 347

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை  வட்டம் ஒழுகூரில் தனியார் வீட்டின் எதிரே உள்ள 7 வரி வீரர் கல்வெட்டு. 

    1. மதிரை கொண்ட கோப்பர கேசரி ப
    2. ன்மற்கி  யாண்டு பதினாறாவதில் 
    3. படுவூர் கோட்டத்து ஒழுகையூர் னாட்டு 
    4. ஒழுமூர் தேர் வய நசரரும
    5. த்தி கோசத்தாரு மவை வீரக்
    6. கைச் சிறப்பு  இவகாவலாய் இவ
    7. களே ரக்ஷிப்பார்கள். 

    ஒழி > ஒழு – ஒய்வு, leisure; வய – வழி, via; நசரர் – கண்காணிப்பாளர், உயர் பொறுப்பு அதிகாரி( நல்/ நய் > நச் – வெண்மை கருத்து வழி ஒளி, காட்சி கருத்துக்கு வேரானது. காண்க > நளி – வெள்ளைச் சாரணை. நய் > நயனம் – ஒளிபடைத்த கண். யகர சகர திரிபில் இந்த நய > நச ஆகி இந்தி, உருது  போன்ற மொழிகளில் நசர் என்று பார்வையை குறிக்கிறது. ஆக நயனம் என்பதும் தமிழ் வேர் உடையது என்பது இக்கல்வெட்டால் அறிய முடிகிறது; அத்தி  நெடுமைக் கருத்தில் யானை, மரம், மலையை குறித்தது; ஹஸ்தி என்ற சமசுகிருத சொல் அத்தி என்று ஆகவில்லை என்பதைக் கருத்தில் கொள்க. அத்தி தூய தமிழ்ச் சொல்லே. கோசத்தார் – போர்க்களத்தில் யானைக்கு ஊறு நேராமல் கவசமாக இருந்து பேணுவோர்; வீரக்கை – வீரச்செயல்

    விளக்கம்:  இக்கல்வெட்டு முதற் பராந்தக சோழனின் 16ஆம் ஆட்சி ஆண்டு 923இல் வெட்டப்பட்டது. படுவூர் கோட்டத்தில் அடங்கிய ஒழுகையூர் நாட்டின் ஒழுமூரில் மண்ணில் அழுந்தி விடாமல் தேருக்கு வழிக் காவல் போகும் பொறுப்பு அதிகாரிகளும், யானைப் பேணுவோரும் அவை வீரச்செயலின் சிறப்பு என்று கருதி அவற்றுக்குக் காவலாய் இவர்களே இருந்து காக்க வேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளது. இங்கு  வீரச்செயல் என்ன என்பது பற்றித் தெளிவான குறிப்பு ஏதும் இல்லை. 4-5ஆம் நூற்றாண்டு பூலாங்குறிச்சி கல்வெட்டில் அத்திகோயத்தார் என்று குறிக்கப்பட்டது இங்கே அது கோசத்தார் என்று யகர சகர திரிபாக குறிக்கப்பட்டுள்ளது. இது ஒரு  ஆணைக் கல்வெட்டு ஆகும். அன்றைய ஒழுமூர் தான் இன்றைய ஒழுகூர். ஒழு என்றால் ஒய்வு இதாவது, யானை, குதிரை ஆகியன போரில்லாத போது ஒய்வு கொள்ளும் இடம் என்று பொருள். இதனால் ஒழுகூரில் பராந்தகன் காலத்தில் யானைப் படைக்கும், தேர்ப் படைக்கும் இங்கே நிலை இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது.

    பார்வை நூல்: ஆவணம் 2019, பக்கம் 12

    கல்வெட்டு தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டம் பெரும்பாலை பூவாலை சிவன் கோவில் அருகில் உள்ள 26 வரிக் கல்வெட்டு,

    ஸ்வஸ்தி ஸ்ரீ வீரவல்லாள தேவர் ப்ரிதிவி இரா / ச்சியம் பண்ணியருளா நின்ற யு(வ) ஸம்வத்ஸ / ரத்து சித்திரை மாஸத்து (அத) பூர்வபக்ஷத்து / சதுர்தி திங்கட்கிழமை பெற்ற நாள் (சிமிளில்) கண் / டர  ஹனுமன் செம்பொந் தியாகப்பெருமாள் ப / வழத்தூரில் இருக்கையில் தண்டியதேவர் பவழ / த்தூரிலே புது படையாக்குகையில் தம்முடைய (ச) / ( மூ) கத்தில்  தந்திரிமாரை யழைத்து வேட்(ட)டினவர்  / களுக்கு ஊர்களுங் குடுத்து  வேண்டும் வரிசைகளு / (ங்) குடுக்கக் கடவேனாகவும் என்று குறுப்பு நாட்டில்  வி / சையன் மங்கலத்து முடக்கோழி வேட்டுவரில் செங் / குன்றந் மகன் சோழங்க தேவர் வேட்டி இரண்டு / குதிரையும் பிடித்துக் களத்திலே தாமும் படுகையி / ல் தம்முடைய தம்பி செம்பொன் தியாகப் பெருமாள் / திருமுன்பே குதிரை யிரண்டு மொப்பித்து குடுத்த / வளவில் சொன்னமை பாஷைக்குத் தப்புவராயர் கண் / டர் கண்டர்  ஹனுமன் பல வடகரை வஞ்சி நாட்டில் வா / ள கைகாட்டும் பெரும்பாலி பூவாலங்  காணியாட்சி / யாகக் குடுத்தேன் மதன வம்சத்து மத்தளி வகாரா _ _  /  ர் சூரியன் தட்டுக்(கு தட்டை) சிங்காரம் மலை கலங் / கிலு மனங் கலங்காத கண்டன் சோழங்கத் / தேவனுக் குடுத்தோம். இக்காணியாட்சிக்கு அல்லல் / பேசினார் உண்டாகில் கங்கை(மாக்) கரையிலே ப்ராஹ்ம / ணனை வதஞ் செய்தான் பாவம், குரால் பசுவை  / கொன்றான் பாவம் புகக்கடவார்களாகவும்  இ கா /  ணியாட்சி குடுத்தவனை  தே _ _ 

    பிரிதிவி இராச்சியம் – மண்ணுலக அரசியம்; சிமிலில் – குடுமியில்; சமூகத்தில் – அருகில், சமீபம்; தந்திரி – படைத் தலைவன். பண்டு படைத் தலைவரே அமைச்சராகவும் இருந்தனர். வேட்டாடினவர் – போரில் விலங்குகளைப் பிடித்தோர்; வரிசை – அரசனின் பாராட்டு, மதிப்பு; ஒப்பித்து – ஒப்படைத்து; தட்டுக்கு தட்டை – அடிக்கிற அடியில்; சிங்காரம் – அழகு; காணியாட்சி – நில உரிமை.

    விளக்கம்:  இக்கல்வெட்டு, போசள வேந்தன் வீர வல்லாளனின் 41ஆம் ஆட்சி ஆண்டில் இதாவது, யுவ ஆண்டில் மண்ணுலக அரசை ஆளுகின்ற போது சித்திரை மாதம் முதல் பாதி நாலாம் நாள் திங்கட்கிழமையில் குடுமியில் கண்டர அனுமனை சூடிய அரசர் செம்பொன் தியாகப்பெருமாள் பவழத்தூரில் தங்கி இருந்த போது தண்டியத் தேவர் பவழத்தூரில் புதிய படைத்தளத்தைக் கட்டிய போது தன் அருகே படைத் தலைவர்களை அழைத்து, போர்க்களத்தில் விலங்குகளைப் பிடித்தோருக்கு ஊர்களும் அளித்துச் செய்ய வேண்டிய மதிப்பும் செய்வேன் என்று சொல்ல, அப்போது குறுப்பு நாட்டில் விசையன் மங்கலத்தை சேர்ந்த முடக்கோழி வேட்டுவரில் செங்குன்றம் மகன் சோழங்க தேவன் போர்க்களத்தில் இரண்டு குதிரைகளைப் பிடித்து அக்களத்திலேயே வீரச் சாவடைந்தான். அவன் தம்பி செம்பொன் தியாகப்பெருமாள் முன்னே அந்த இரண்டு குதிரையையும் ஒப்படைத்த போது சொன்னபடியே பேச்சு தவறாமல் கண்டர் அனுமன் வடகரை வஞ்சிநாட்டில் நீள கைகாட்டிய பெரும்பாலையில் உள்ள பூவாலை ஊரை உரிமை நிலமாக கொடுத்தான். மதன வம்சத்து மத்தளியினர் இதை அனுபவிக்கட்டும், வெய்யில் அடிக்கிற அடியில் ஒரு மலை தன் எழில் குலைந்து கலங்கினாலும் கலங்கும் ஒழிய எதற்கும்  கலங்காத கண்டன் சோழங்க தேவனுக்காகக் கொடுத்தேன். இந்த நில உரிமையைச்  செல்லாது என்று பேசுவோர் இருப்பராயின் கங்கைக் கரையில் பிராமணனைக் கொன்றவன் அடையும் பாவத்தையும் குரால் பசுவைக் கொன்றவன் அடையும் பாவத்தையும் அடைவர். இந்த நில உரிமை கொடுத்தவனை என்பதற்கு மேல் கல்வெட்டு சிதைந்துவிட்டது.

    பார்வை நூல்: ஆவணம் 33, 2022, பக்கம் 98 & 99

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஐகுந்தம் 40 வரி வணிகக் கல்வெட்டு 

    ஸ்வஸ்தி ஸ்ரீ சம / ஸ்த பு(வ)ன விக்யாத வீர /ர் வீரஸாஸன அனேக கு / ன கனாலம்க்ரித ஸ்த்ய ஸே / ஸா ஸாரி ஸாரித்ரய ஸமை / சம்புன்ன வளஞ்சிய ஸ்ரீ / மர்ஹதாரி மக்களாகிய எ / யிநாட்டு திருப்பெறு மாடப்ப / ள்ளித் தளத்தை ஞூற்றுவரோம் அ / ய்ங்குன்றத்து அய்கமநான மும் / முறி தன்மசெட்டிக்கு வீரதாவள / மாக வைத்தபடி, இவன் இருந்த ஊ / ரில் நமக்கள் வீரபெரு நிரவிமா / ரும் நாட்டு செட்டிகளும் வந்தவன / றுமெய் கண்டு சோறு உண்பதாக / வும் பணமென்றும் பாவாடை / கொங்கவாரெழுநூறும் கண்டழி / மூலபத்திரரும் ஐய்யன் போய் / களமடக்கி கீழ் மேற் காக்கை (பின்பக்கம்) / நாநாதேசியும் / கொற்றக்குடைப் படை முன் / நூறும் / யென்றும் கொள்ளப் பெறு / தார்களாகவும். இப்பரிசல்ல / து செய்வார் கெங்கை இடை / குமரியிடைப்பட மாப்ப / ட்ட பாவத்தில் படுவார். இவ / ந் சிறிய தம்பநு தமைய / நும் தொறு மீட்டுப்பட்ட / நன்மை கண்டு வைத் / தோம். இவன் பரியுடைமை / கண்டு வைத்தோம், தி / ருப்பெறு மாடப்பள்ளித் தளதை / ஞூற்றுவரோம். பதிலழிவாந் / நமில் வே / ரு வந் / ந் / பழவரி இவீர / நும் அப்பி / த் தம்பலமும்.   

    பொருள்சமஸ்த பு(வ)ன– அனைத்து உலகும்; விக்யாத –  அறிந்த;  வீரஸாஸன – வீரர்  ஆவணம்; அனேக குண கனாலம்க்ரித – எல்லா ஒழுக்கமும் நிரம்பி அழகுறுத்தும் கூட்டம்; ஸத்ய ஸேஸா ஸாரி – வாய்மை, சிறப்பு, ஒழுக்கம்; ஸாரித்ரய – ஒழுக்கம் மூன்றும்; ஸமை – பொறையுடைமை, forgiveness; சம்புன்ன –  திறமை; மர்ஹதாரி – புகழ்மிக்க; தளதை – படைக்குழு உள்ள இடம், military base; ஞூற்றுவரோம் – நூற்றுவர்; அய்கமநான –  உயர் தலைவனான ( – தலைமை, கமனம் – செலுத்தல்), high commander; மும்முறி – மூன்றுமுறை முறியடித்த; வீர தாவளமாக  – வீரர்க்குரிய ஆதரவாக, army base; வைத்தபடி – கொடுத்தபடி; நிரவிமார் – மதிப்பீட்டாளர்; அறுமெய் கண்டு – நன்மை (goodness) கண்டு; பாவாடை – மதிப்புறு ஆடை; வார் -கயிறு; கண்டழி மூலபத்திரர் – துணைநிற்கும் மூலப்படை; ஐய்யன் போய் – இமைக்கும் நேரத்தில் விரைந்து சென்று, in no time,  கண்ணை குறிக்கும் வழக்கொழிந்த தமிழ்ச் சொல் ஆனால் இன்றும் ஆங்கிலத்தில் Eye என்றே வாழ்குகிறது; களமடக்கி – வென்று போர்முடித்து; காக்கை – காப்பதற்கு; பரிசு – நற்செயல்; பரியுடைமை – இரங்குகை, பாதுகாப்பு; பதிலழி – பதிலாகச் செல், மாற்றாள், go as a substitute. பதில் தமிழல்ல என்போர் தம் கருத்தை மறுபரிசீலனை செய்ய வைக்கும் கல்வெட்டு இது.

    விளக்கம்: இக்கல்வெட்டு 12 – 13 நூற்றாண்டினதாகும். எல்லா உலகும் அறிந்த வீரர்தம் வீர ஆவணமாவது பல குணம் கொண்ட கணத்தால் அணி செய்யப்பட்டு வாய்மை, சிறப்பு, நல்லொழுக்கம் என மூன்று ஒழுக்கமும் பொறைமையும்  திறமையும் அமையப்பெற்ற வளஞ்சிய வணிகக் குழு என்று வணிகரின் மெய்க்கீர்த்தியைச் சொல்கிறது. “வளஞ்சிய வணிகக் குழுவின் புகழ்மிக்க மக்களாகிய எயிநாட்டு திருப்பெறு மாடப்பள்ளிப் படைத்தளத்தைச் சேர்ந்த நூற்றுவர் நாம் ஒன்றுகூடி ஐங்குன்றத்துப் படைத்தலைவரும் மும்முறை எதிரிகளின் தாக்குதலை முறியடித்தவரும் ஆன தன்மசெட்டிக்கு வீரர்க்குரிய ஆதரவை  (support) கொடுத்தபடியாவது, இவன் இருந்த ஊரில் நம் மக்களான வீரபெரு மதிப்பீட்டாளரும் நாட்டுச் செட்டிகளும் வருபவரின் நன்மை கருதி சோறு உண்பதற்குப் பணமாகவும் மதிப்புறு ஆடையாகவும் கொங்குநாட்டின் கயிறு எழுநூறும் கொடுத்தனர். துணைநிற்கும் மூலப் படையினர்  விரைந்து போய் போர் முடித்து, கிழக்கு மேற்கு திசையைக் காப்பதற்கு  நாநாதேசி குழு வணிகரும் அரசகுடையும், படை முந்நூறு எண்ணிக்கையையும் கொள்ளப் பெறுவார்களாக” என்று ஏற்பாடு செய்கின்றனர்.  இந்த நற்செயலை இல்லாமல் அழிப்பவர் கங்கை இடை குமரியிடை வாழ்பவர் செய்த பாவத்தில் வீழ்வார். திருப்பெறு மாடப்பள்ளித் படைத்தள நூற்றுவராகிய நாம் “இவனுடைய சிறிய தம்பியும்,  தமையனும் கால்நடை மீட்டு இறந்த நற்செயல் கண்டு இதை கொடுத்தோம்”. “இவனுடைய பெருமை கண்டு இதை கொடுத்தோம்”.  இறுதி வரி விளங்கவில்லை. (பதிலழிவான் என்றால் மாற்றாள் (substitute) என்று கொண்டால் நம்மிடையே மாற்றாளுக்கு உரிய பழைய கட்டு (வரி) போலவே இவ்வீரனுக்கும் அவ்வழியாக கிட்டட்டும் ( தம்பலம்).

    வணிகர் நெடுவழியில் தம்மை ஆரலைக் கள்வர் தாக்கி அழித்து தம் பொருளை கவர்ந்து செல்லா வண்ணம் தமக்குத் தாமே ஒரு படை கட்டிப் போரிட்டுத்  தம்மையும் தம்பொருளையும் பேணிக் காத்துக்கொண்டனர். அவ்வாறு ஒரு நிகழ்வில் வளஞ்சிய வணிகர் தன்ம செட்டியின் போர்ச் செயலை கேள்வியுற்று அவனைப் பாராட்டி அவனுக்கு மேலும் படை ஆதரவைக் கூட்டி வழங்கினர் என்பதே இக்கல்வெட்டு செய்தி.

    பார்வை நூல்: ஆவணம் இதழ் 30, 2019

    கேரள மாநிலம்  பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடியில் உள்ள பட்டணம்புதூரில் காணப்படும் 20 வரி வட்டெழுத்துக் கல்வெட்டு. 

    ஸ்வஸ்தி ஸ்ரீ ஸமஸ்த புவ / நாச்ரய பஞ்ச சத வீர / சாஸனஞ் செய்த பரிசாவ / து நாடாழ்வானை எறிஞ்ச கொங்க ம / ண்டலமுய்யக் கொண்டானும் நாடாழ் / வானை எறிஞ்ச அய்யபொழில் நம் / பியும் (பசும்பை நுவக்கியை) எறி / ஞ்ச எழுமடி கொங்கரிளஞ் சிங் / கமும் களக்காடுடையானை எறிஞ்ச  / அஞ்ஞூற்றுவ பேரரையனும் வீரர்கள் ம / _ _ _ பொன் வில்லார் புத்திரனும் / திகை மாணிக்கச் செட்டியும் அறை / ஞாட்டுப் பொரத்தி  நிரந்த வீ / ர பெரு நிரவித் திகை ஆயிரத்த / ஞ்ஞூறவரோம் பொரத்திக்குந் தான் / றிக்கும் வீரப்பட்டனஞ் செய்து / குடுத்தோம். பணிசெய் மக்களானா / ர்  மெய்க்கண்டு சோறுண்க.  பண்டை கோ / ரவி வீரமாணிக்க செ(ட்)டி _ _ _ / (ளச்சரப் பேரையே) 

    ஆஸ்ரய – அடைக்கலம், ஆதரவு, புகலிடம்; பரிசு – விவரம்; எறிஞ்ச – வென்ற, கொன்ற; திகை – திசை; பொரத்தி – பொறுமை, ஓய்வு, தங்கில், rest house < பிற சொற்களில் இருந்து பெற்ற ஊகம் தான் இதற்கு நேரடிப் பொருள் இல்லை; நிரந்த – நிறைந்த; வீரபெரு – வீரம்மிகுந்த; தான்றி – எல்லை வேலி; வீர பட்டணம் – வீரர் தங்கும் சிற்றூர்.

    விளக்கம்:  இக்கல்வெட்டு 10ஆம் நூற்றாண்டினதாகக் கொள்ளப்படுகிறது. சேர அரசர் ரவி பெயர் இறுதியில் குறிக்கப்படுவது இதற்குச் சான்று. உலகுக்கெல்லாம் புகலிடமான ஐந்நூற்றுவ வணிகர் குழு தம் வீர ஆவணத்தில் செய்திட்ட விவரம் யாதெனில், “நாடாழ்வானை வென்ற கொங்க மண்டலம் உய்யக் கொண்டானும், நாடாழ்வானை வென்ற ஐயம்பொழில் நம்பியும், பசும்பை நுவக்கியை வென்ற ஏழு மடங்கு கொங்கர் இளஞ் சிங்கமும், களக்காடுடையானை வென்ற ஐநூற்றுவ பேரரையனும், _ _ _ பொன் வில்லார் மகனும், திசை மாணிக்கச் செட்டியும் அறை நாட்டு பொறுமை நிறைந்த வீரம் மிகுந்த நிரவியைச் சேர்ந்த திசை ஆயிரத்து ஐந்நூற்றுவரும் சேர்ந்து ஓய்வு இல்லத்திற்கும் அதன் எல்லை வேலிக்கும் அடங்கிய வீர பட்டணம் (குடியிருப்பு) செய்து கொடுத்தனர். இங்குப் பணி செய்யும் மக்கள் உண்மையை அறிந்து பின் சோறு இட வேண்டும். பண்டு அரசன் ரவி (பாஸ்கர ரவி அல்லது தாணு ரவி) வீர மாணிக்கச் செட்டிக்கு என்பதோடு கல்வெட்டு முழுமை பெறாமல் உள்ளது.

    இன்றைய பட்டணம் புதூரே பண்டைய நிரவி ஆகும். இங்கு தான் போரில்லாத காலத்தில் அல்லது நோயுற்ற காலத்தில் ஓய்வு கொள்ள வீர வணிகருக்கு என்று தங்கில் அமைந்தனர் திசை ஆயிரத்து ஐநூற்று வணிகர். பிராமணர் தான் தமிழில் சமசுகிருதம் திணித்தனர் என்பதை பொய்யாகும் விதமாக வணிகரும் தமது மெய்க்கீர்த்தியை சமசுகிருதத்தில் எழுதி வைத்துள்ளனர் என்பது அதை பொய்யாக்குகிறது.  மனுஸ்ம்ரிதி சத்திரியருக்குத் தான் போர்த் தொழிலை உரித்தாக்குகிறது ஆனால் நாடோடும் வணிகரும் போர்த் தொழில் புரிந்தது மனுஸ்ம்ரிதி மீறல் அன்றோ? இது மநுஸ்மிருதி நடைமுறையில் இல்லாத ஏட்டுச் சுரைக்காய் என்பதை உணர்த்துகிறது.

    பார்வை நூல்: ஆவணம் 33, 2022, பக்கம் 9 & 10

    திண்டுக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் நல்லமனார்கோட்டை என்னும் ஊரிலிருந்து வலப்புறமாக இரண்டரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பெரும்புள்ளி என்னும் ஒரு சிறிய கிராமம். அங்குள்ள கன்னிமார் கோவிலுக்குச் செல்லும் வழியில் வயல்வெளிகளினூடே இரண்டு நடுகற்கள் உள்ளன. அதில் ஒரு நடுகல் இரண்டாக உடைந்த நிலையில் கல்வெட்டுகளைத் தாங்கியுள்ளது. இதன் காலம் கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு பத்தாம் நூற்றாண்டாக கொள்கின்றனர்.

    1.ஸ்ரீ அரையரெள்

    2 ளி கோய்த்திர

    3 னான மதுரா

    4 ந்தகப் பள்

    5 ளி வேளான் ப

    6 ள்ளி நாட்டு நி

    7 ரை போகயில்

    8.பட்டான்

    விளக்கம்: அரையர் எள்ளியின் கோத்திரத்தைச் சேர்ந்த மதுராந்தகப் பள்ளி வேளாண் என்பவன் பள்ளி நாட்டின் நிரைகள் கொள்ளை போகையில் அதை மறித்து வீரச் சாவடைந்தான் என்பது கல்வெட்டின் பொருள். பல்லவர் ஆட்சிக் காலத்தில் வேள் என்ற சங்க காலச்சொல் அரையர் என்ற மாற்றுச் சொல்லால் கைவிடப்பட்டாலும் அச்சொல் வேளுடைய ஆள்  என்ற பொருளில் வேளாண் என்ற மற்றொரு சொல்லால் அழியாமல் தொடர்ந்து புழங்கி வந்துள்ளது. வேளாளன் = வேள்  + ஆள் + அன். வேளாண் என்போர் பெரும்பாலும் ஆட்சியாளர்களின் பங்காளிகள், சொந்தக்காரர்கள் என்பதையே இக்கோத்திரக் குறிப்பு குறிக்கின்றது. வேள், அரையன் ஆகிய சொற்கள் duke என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நிகரானவை. வேந்தனுக்கு (emperor) படைத் தளபதியாக மன்னன் (king) இருந்தான். மன்னனுக்கு படைத் தளபதியாக அரையன்/வேள் (duke) இருந்தான். இந்த அரையனுக்குப் படைத் தளபதியாக கிழான் (knight) இருந்தான். ஆக இந்த படைத் தளபதிகள் அமைத்த சாதிகள் தான் ஆண்ட பரம்பரை என்னும் இன்றைய நிலவுடைமைச் சாதிகள்.

    இந்த வேளாண்களே பண்டு நிலவிற்பின் போது உடன் இருந்து கண்காணித்து கையெழுத்திட்டுள்ளனர் என்பதற்குப் பல கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன.  இதே வேளாண்களிடம் தான் நீதி வழங்கும் நியாயத்தர் பொறுப்பும் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வேளாண்கள் தான் சில இடங்களில் வெள்ளாளராகவும், சில இடங்களில் பள்ளிகளாகவும் சில இடங்களில் அம்பலக்காரர் என்றும் உள்ளனர்.

    ஆவணம் , இதழ் – 18,  2007, பக். 21 மற்றும் கல்வெட்டு காலாண்டிதழ்-65, பக்கம் 39-40.

    Share
  • திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்

    துரோகம் என்றால் இரண்டகம், நம்பிக்கை குலைத்தல், நன்மதிப்பை பாழடித்தல் என்று கொள்ளலாம். இதில் ஒருவரை ஒருவர் மோசம் செய்வது என்றில்லாமல் இராசதுரோகம், ஊர்த்துரோகம், இனத்துரோகம், சிவத்துரோகம் என்பனவும் உண்டு. சிவத்துரோகம் என்பதற்கு சிவநெறிக்கு புறம்பாக நடத்தல் இதாவது, சிவன் கோவில் சொத்துகளை மோசடி செய்தல், களவாடுதல் ஆகியன அடங்கும். இதற்கு அக்காலத்தே கடும்தண்டனை இருந்தது. சிவத்துரோகத்தை புரிந்தவர் பெரும்பாலும் சிவன் கோவில் ஊழியத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பிராமணர், வெள்ளாளர்  ஆகியோரே ஆவர். இந்த குற்றத்தை கண்டுபிடித்தவரும் பிராமணர் வெள்ளாளரே ஆவர். கஜினி முகம்மது, மாலிகாபூர் போன்றோர்  பல கோவில்களை இடித்துபோட்டு பொன்னும் பொருளுமாய் கொள்ளையிட்டுச் சென்றனர். அதற்கு காரணம் அவர்களிடத்தில் உருவ வழிபாட்டு நம்பிக்கை இல்லை என்பதும், பிறமத அவமதிப்பு ஆகியனவே காரணம். ஆனால் சிவன் கோவிலில் ஊழியம் செய்து கொண்டு மோசடியிலும் களவிலும் ஈடுபடும் செயலும் இத்தகையதன்றோ என எண்ணத் தோன்றுகிறது, இதாவது சிவன்பால் நம்பிக்கை இன்மை என்பதே.  இது குறித்த சில கல்வெட்டுகள் அக்காலத்தே இருந்த சட்ட முறைமைகளை எடுத்துக் காட்டுகின்றன.

    இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் திருத்தளீசுவரர் கோவில் முதல் சுற்றில் உள்ள தென் சுவரில் பொறிக்கப்பட்ட  15 வரிக் கல்வெட்டு. இடத்தேவைக்காக சாய்வுக் கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

    ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீ ஸகாப்தம்  1309 ன் மேல் செல்லாநின்ற ப்ரபவ வருஷத்து மேஷநாயற்று இரண்டாந்தியதியும் பூர்வ்வபக்ஷத்து நவமியும் ப்ரஹஸ்பதிவாரமும் பெ ற்ற பூசத்து நாள் கேரளசிங்க வளநாட்டு ப்ரஹ்மதேய ந்திருப்பத்தூர் உடையார் திருத்தளியாண்ட நாயினார் கோயிலில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர ஸ்ரீகாரியஞ் / செய்வார்களும் மாடாபத்தியஞ் செய்வானும் முப்பது வட்டத்து ஸிவப்ராஹ்மணரும் தானத்துக் கமைந்த தானத்தாரும் ஆக இவ்வனைவோமும் இக்கோயிற் /  கணக்கு ப்ரஹ்மப்ரியனுக்கும் இன்னாட்டு மட்டியூரான ந்ருபசேகரச் சதுர்வ்வேதி மங்கலத்து சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வானுக்கும் அதளையூர் / நாட்டு தேனாற்றுப்போக்கு சிறுவயலுடையான் வேண்டவளந்தான் ஆயப்பிள்ளைக்கும் ஆக இம்மூவற்கும் கணக்கெழுத்துக் காணியாட்சி விலைப்ரமாணம் பண்ணி / க்குடுத்த பரிசாவது கணக்கன் குலாலன் அம்பலத்தாடுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான் தனக்கு க்ராமத்தில் மனையும் முதலெழுத்தும் முதல் வ / ழக்கமும் இல்லையாயிருக் கச்சிதே தானறிந்ததாக ஸிவத்ரோகமாக காணாமல் களவிலே ஆயிரத்தெழுநூற்றுத் தட்டானை ஆட்பிடித்து கற்தச்சன் அலைவாயுகந் / தானைக் கொண்டு தன்னுதென்று கல்வெட்டுவிக்கையில், இப்படி செய்த இந்த வெளிப்பட்டு ஸிவத்ரோகம் வெளிப்பட்டு அம்பலத்தாடுவோன் ஓடிப்போகையில் தட்டானை / யுங் கற்தச்சனையுங் கைக்கொண்டு கண்மாளர் கைய்யிலே காட்டிக்குடுத்து கண்மாளரும் இவர்களை அழியச் செய்து தானத்துக்கு பொருந்த ப்ராய / ச்சித்தம் பண்ணிவிடுகையாலும் இந்த ஸிவத்ரோகியான அம்பலத்தாடுவான் முன்னில்லாமல் ஓடிப்போகையாலும் கோயிற் கணக்கெழுத்துக் காணியாட்சியில் ப்ரஹ்மப்ரியன் காணியாட்சி ஒன்று பாதி நீக்கி இவனோ பாதி ஒன்று பாதிக்கும் விலை நிச்சயித்த ஆடூர் பணம் 300. இதில் தேவர் விசையாலய தேவற்கு கற் / பூர முதலாக குடுத்த ஆடூர் பணம் 200 ஸ்ரீ பண்டாரத்துக்கு முதலாக பற்றின ஆடூர் பணம் 100 ஆக ஆடூர் பணம் 300. இப்பணம் முன்னூற்றுக்கும் கணகெழுதுத்துக் காணி / யாட்சியும் ஸுதந்த்யங்கள்  எப்பேற்பட்டனவும் சந்த்ராதித்யவல் செல்லவிற்று விலை ப்ரமாணம் பண்ணிக்குடுத்தோம் உடையார் திருத்தளியாண்ட நாயினார் கோயிலில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர ஸ்ரீ காரியஞ் செய்வார்களும் மாடாபத்தியஞ் செய்வானும் முப்பது வட்டத்து ஸிவப்ராஹ்மணரும் தாநத்துக் கமைந்த / தாநத்தாரும் ஆக இவ்வோமும் ப்ரஹ்மப்ரியருக்கும் கரியமாணிக்காழ்வாநுக்கும் ஆயப்பிள்ளைக்கும் ஆக இம்மூவற்கும்.

    பூர்வபக்ஷம் – வளர்பிறை; ஸ்ரீ காரியம் – திருப்பணி; மாடாபத்தியம் – மடைபள்ளி நிர்வாகம்; தானத்துக் கமைந்த தானத்தார் – அந்தந்த பொறுப்பிற்கு அமைந்த பொறுப்பாளர்; பரிசாவது – விதம், எப்படி எனில்; முதலெழுத்தும் முதல் வழக்கமும் – தந்தை முகவரியும் முதல் மதிப்பும்; காணாமல் – கண்டுபிடிக்கமுடியாதவாறு; களவிலே – திருட்டுத்தனமாக; கைக்கொண்டு – பிடித்துவைத்து; காட்டிக் கொடுத்து – பிடித்துக் கொடுத்து.

    விளக்கம்: சக ஊழி 1309 பிரபவ ஆண்டு மேழஞாயிறு 2-ம் நாள் வியாழக்கிழமை பூச நட்சத்திரம் நிகழும் போது (1387, மார்ச்சு 28) வெட்டப்பட்ட கல்வெட்டு. இது விசயநகர ஆட்சிக்காலம்.

    கேரளசிங்க வளநாட்டில் பிரமதேயமான திருப்பத்தூர் திருத்தளியில் அமைந்த இறைவர் கோவிலில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர திருப்பணி செய்பவர்களும் மடைபள்ளி நிர்வாகம் செய்பவனும், முப்பது வட்டத்து சிவபிராமணரும், அந்தந்த பொறுப்பிற்கு அமைந்த பொறுப்பாளர் ஆக எல்லோரும் கூடி இக்கோயிற்  கணக்கு பொறுப்பில் உள்ள பிரம்மபிரியனுக்கும், சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வானுக்கும், வேண்டவளந்தான் ஆயப்பிள்ளைக்கும் ஆக இம்மூவற்கும் கணக்கெழுத்திற்கான காணியாட்சியை விலைப்பிரமாணம் செய்துகொடுத்தது எப்படி எனில் பிரம்மபிரியன் தனக்கு உதவியாக கணக்கு பணிக்கு அமர்த்திய கணக்கன் குலாலன் அம்பலத்தாடுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான் தனக்கு இக்கிராமத்தில் வீடும், இன்னார் மகன் என்ற முகவரியும், முதல் மதிப்பும் இல்லாத போதிலும் இவ்வாறு இருப்பதாக காட்டி வீடும், பிற சலுகைகளும் தனக்கு வர வேண்டி எவரும் கண்டு பிடிக்காதபடி திருட்டுத்தனமாக ஆயிரத்தெழுநூற்று தட்டானை கண்டு அவன் மூலம் கல்தச்சன் அலைவாயுகந்தானை ஏற்பாடு செய்து கொண்டு இந்த கிராமத்து வீடு தனதென்று கல்வெட்டிக் கொண்டான். இது ஒரு சிவத்துரோகம் ஆகும் என்கின்றது கல்வெட்டு. இப்படி மோசடி செய்த சிவத்துரோகச் செயல் வெளிப்பட்டு அம்பலத்தாடுவான் ஊரைவிட்டு எங்கோ ஓடிப்போய்விட  கோவிலார் தட்டானையும் கல்தச்சனையும் பிடித்து வைத்து கம்மாளரிடம் விசாரிப்பதற்கு ஒப்படைத்து விடுகின்றனர். கம்மாளர் இந்த இருவரையும் தக்கபடி அடித்து உதைத்து கோவிலுக்கு பொருத்தமான வகையில் கழுவாய் செய்ய வைத்து விடுகின்றனர். சிவத்துரோகி அம்பலத்தாடுவன் கண்ணில்படாவாறு எங்கோ ஓடிப்போனமையால் பிரம்மபிரியன் கோயில் கணக்கெழுதும் காணியாட்சியில் ஒருகாணியைப் இரு பாதியாகப் பிரித்து ஒரு பாதியை தான்  வைத்துக்கொண்டு அதற்கு விலை கொடுத்துவடுகின்றான் மற்றொரு பாதியை அம்பலத்தாடுவான் பங்காக கோயிலாரிடம்  ஒப்படைக்கின்றான்.அதை கோவில் நிர்வாகத்தார் ஊராருக்கு விற்றுவிடுகின்றனர். இப்படியாக 300 ஆடுர் பணம் விற்ற காசாக சேர்கின்றது. அதில் 200 ஆடூர் பணம் விசையாலைய தேவருக்கு கற்பூர முதலாக கொடுக்கப்பட்டது. எஞ்சிய100 ஆடூர் பணம் கோவில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பிரம்மபிரியனுக்கு நிலமும் அதன் உரிமைகள் அனைத்தும் விற்கப்பட்டு கோவிலாரால் விற்றுஆவணம் செய்து தரப்பட்டது. திருத்தளி இறைவர் கோயில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர திருப்பணி செய்பவர்கள், மடநிர்வாகம் செய்பவனும், முப்பது வட்டத்து சிவப்பிராமணரும், அந்தந்த பொறுப்பிற்கு அமைந்த பொறுப்பாளர் ஆக இவரனைவரும் பிரம்மபிரியன், கரியமாணிக்காழ்வான்,  ஆயப்பிள்ளை ஆகிய இம்மூன்று கணக்கருக்கும் விலைப் பிரமாணம் செய்து கொடுக்கின்றனர் .

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 25, பக். 158-161, (A.R.No 126  of 1908)

    இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் திருத்தளீசுவரர் கோவில் முதல் சுற்றில் உள்ள தென் சுவரில் பொறிக்கப்பட்ட  19 வரிக் கல்வெட்டு. இடத்தேவைக்காக சாய்வுக் கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

    ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீ ஸகாப்தம்  1309 ன் மேல் செல்லாநின்ற ப்ரபவ வருஷத்து மேஷநாயற்று இரண்டாந்தியதியும் பூர்வ்வபக்ஷத்து நவமியும் ப்ரஹஸ்பதி வாரமும் பெ ற்ற பூசத்து நாள் கேரளசிங்க வளநாட்டு ப்ரஹ்மதேய ந்திருப்பத்தூர் மூலவ[ரு]ஷ மஹாஸபையோம் நம்[மூர்]க்கணக்கு  மத்யஸ்தன் ப்ரஹ்மப்ரியனுக்கும் / இன்னாட்டு ப்ரஹ்மதேயம் மட்டியூரான நிர்ப்பசேகரச் சதுர்வ்வேதி மங்கலத்து மத்யஸ்தன் சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வானான மஹாஜன ப்ரியனுக்கும் அதளையூர் / நாட்டு தேனாற்றுப்போக்கு சிறுவயலுடையான் வேண்டவளந்தான் ஆயப்பிள்ளைக்கும் [ஆக] இவ்வனைவற்கும்  கணக்கெழுத்துக் காணியாட்சி விலைப்ரமாணம் பண்ணி / க்குடுத்த பரிசாவது நம்மூர்க்கண் கணக்கன் குலாலன் அம்பலத்தாடுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான் தனக்கு க்ராமத்தில் மனையும் முதலெழுத்தும் முதல் / வழக்கமும் இல்லையாயிருக் கச்சிதே ஸபை தனக்குக் கல்வெட்டிக்குடுத்ததாக அம்பலத்திலே ஸபையை /  அரியாமல் க்ராமத்ரோகமாகக் காணாமல் களவிலே நம்மூர் ஆயிரத்தெழுநூற்றுத் தட்டானை ஆட்பிடித்து இவனைக் கொண்டு திருக்கோட்டியூர் கல்தச்சன் / அலைவாயுகந்  தானை  அழைப்பித்து நங் க்ராமத்தில் மனையும் முதலெழுத்தும் முதல்  வழக்கமும் தன்னுதென்று களவிலே கல்வெட்டுவிக்கை / யில், இப்படி செய்த  க்ராமத்ரோகம் வெளிப்பட்டு இ[வ்வம்]பலத்தாடுவான் ஓடிப்போகையில் தட்டானைய்யும் [க]த்தச்சனையுங் கைக்கொண்  டு கண்மாளர் கைய்யிலே காட்டிக்குடுத்து இவர்க[ளை] _ _ _ _  றைக்கு கண்மாளர் அழியச் செய்து ஸபைக்குப் பொருந்த ப்ரா ச்சித்தம் பண் / ணிவிடுகையில் இந்த க்ராமத்ரோகம் செய்த அம்ப[லத்தா]டுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான்  முன்னில்லாமல் ஓடிப் / போகையில் நம்மூற்கணக்கெழுத்துக் காணியாட்சியில் ப்ரஹ்மப்ரியன் காணியாட்சி ஒன்று பாதி நீக்கி இவனோ பாதி ஒன்று பாதிக் / கும் இவன் ஒற்றி விலை கொண்ட நிலக்காணியாட்சிக்கும் விலை நிச்சயித்த ஆடூர் பணம் 300. இதில் இவன் ஒற்றி விலை கொண்ட காணியா / யாட்சியாய் பலற்கும் ஸபா விநியோகமாக விற்ற நிலத்துக்கு ஆடூர் பணம் 100 நீக்கி தேவர் விசையாலய தேவற்கு கற்பூர முதலாக குடுத்த ஆடூர் பணம் 200. / இப் பணம் இருநூற்றுக்கும் கணக்கெழுத்து காணியாட்சியும் ஸு[த]ந்த்யங்கள்  எப்பேர்பட்டனவும் சந்த்ராதித்யவல் செல்லக் கல்வெட்டிக் குடுத்தோம் / மூலபருஷ மஹாஸபையோம் இந்தக் கொள்கின்ற மு[றைக்]கும் நங்க்ராமத்தில்  ப்ரமப்ரியன் மனையை அடுத்த ஒருமனை சேர்ம்மா / னமாக அனுபவிப்பார்களாகவும் இப்படி சம்மதித் கணக்கெழுத்துக் காணியாட்சி விலை ப்ரமாணம் பண்ணிக்குடுத்தோம் மூலபருஷ மஹா / ஸபையோம் ப்ரஹ்ம்ப்ரியனுக்கும் கரியமாணிக்காழ்வானுக்கும் ஆயப்பிள்ளைக்கும் அருளால் ஸபைக் கணக்கு மத்யஸ்தன் பெருமாண்டான் /  மயிலேறுவானான ப்ரஹ்மப்ரியன் எழுத்து.

    காணியாட்சி – நில உரிமை, மூலபருஷ மகாசபை – கோவில் நிர்வாக சபை,

    விளக்கம்: சக ஊழி 1309 பிரபவ ஆண்டு மேழஞாயிறு 2-ம் நாள் வியாழக்கிழமை பூச நட்சத்திரம் நிகழும் போது (1387 ல்) வெட்டப்பட்ட கல்வெட்டு.  மேற்கண்ட கல்வெட்டின் அதே செய்தியை கொண்டுள்ளது. ஆனால் இதில் சிவத்துரோகம் என்ற முறையில் அணுகாமல் கிராமத்துரோகம்ர ஊர்த்துரோகம் என்ற முறையில் அணுகி உள்ளனர். இக்கோயிற்  கணக்கு பொறுப்பில் உள்ள பிரம்மபிரியன், சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வான், வேண்டவளந்தான் ஆயப்பிள்ளை ஆக இம்மூவரும் இக்கல்வெட்டில் ஊர் மத்தியஸதராக அறியப்படுகின்றனர். அம்பலத்தாடுவான் தனக்கு ஊர்ச்சபை வீடு கொடுத்ததாக கல்வெட்டிக் கொள்கிறான். இந்த மோசடி அறியப்பட்டதும் அம்பலத்தாடுவான் ஊரைவிட்டு ஓடிப்போகின்றன். பிரம்மபிரியன் ஒரு காணி நிலத்தை பாதியாக பிரித்து தான் ஒரு பாதியை வைத்துக் கொண்டு எஞ்சிய பாதியை அம்பலத்தாடுவான் பங்காக அறிவிக்கிறான்.  அம்பலத்தாடுவானுடைய பறிமுதல் செய்த நிலத்தில் பாதியை வைத்துக் கொண்டு அதை பிரம்மபியனே விலைக்கு வாங்கிவிடுவதால் அதற்கு விற்று ஆவணமும் அடுத்த பாதி நிலத்தை பலருக்கும் விற்று அவற்றுக்கும் விற்று ஆவணம் கொடுத்தனர் கோவில் நிர்வாக சபையார். இக்கிராமத்து நிலத்தை வேறு எவரும் வெளியில் இருந்து வந்து வாங்கி பயிர் செய்யப்போவதில்லை. எனவே  உள்ளூரான் பிரம்மபிரியன் வாங்கியதில் தவறு ஏதும் இல்லை. அதே வேளையில் பிரம்மபிரியன் வீட்டிற்கு அடுத்துள்ள வீட்டை கணக்கர் மூவரும் சேர்ந்தே அனுபவிப்பதற்கான உரிமை ஆவணத்தையும் கோவில் நிர்வாக சபையார் கொடுக்கின்றனர். இந்த வீட்டையும் விலைக்குத் தானே விற்றிருக்க வேண்டும். ஏன் இந்த மூன்று கணக்கரும் காசில்லாமல் வீட்டை அனுபவிக்க கோவில் நிர்வாக சபையார் ஒப்புக் கொண்டனர் என்று புரியவில்லை.  இதைத் தான் தன்னதென்று அம்பலத்தாடுவான் கல்வெட்டிக் கொண்டானா? தெரியவில்லை.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 25, பக். 162-163.

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்பெரும்பூதூர் வட்டம், குமட்டூர், 10 வரிக் கல்வெட்டு

    ஸ்வஸ்த்திசிரி திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரைகொண்ட பாண்டியன் முடிதலையுங் கொண்டருளிய சிரிகுலோத்துங்க சோழதேவருக்கு யாண்டு பதினாறாவது விக்கிரமசோழ வளநாட்டு இன்னம்பர்நாட்டு உடையார் சிரிவி_ _ _ _ கோயிலில் கும்பிட்டு இருக்கும் ஆண்டார்கள் பெரியதேவர் இராசாதிராச தேவர்க்கு யாண்டு ஏழாவது நாளிலே பழையனூருடையார் / பல்லவராயருக்கு உடையார் தேவதானமான கமுகுதிருநந்தவன மாத்தலாறு நூற்றுநால்பது கமுகாக்கி கல்வெட்டவேமும் விண்ணப்பஞ்செய்து பிரசாதம் செய்தருளிச் செய்யும்படி பெறவேணுமென்று அவரும் விண்ணப்பஞ் செய்தும் _ _ _ _  இருந்து வருகையாலும் திருக்கொடிக்கமுகும் தெண்டும் திறப்பிலே கைவிலைக் கொண்டு வெட்டிவந்து இப்படியாய் வருகிற / கமுகை இக்கோயில் மாடாபத்தியம் பழுவூர் ஆண்டான் பதிநாலாவதும் பதினைஞ்சாவதும் கமுகு தன்னகத்துக்கு வெட்டியும் காசுக்கு வெட்டி விற்றும் தன் சம்மந்திக்கு வெட்டிக்குடுத்தும் இப்படியாக அழித்து கமுகு மூவாயிரத்தி இருநூற்றுக்கும் பாக்கு முப்பத்திரண்டு நூறாயிரமும் பதினைந்தாவது _ _ _ _  நாற்பத்திராயிரத்தறநூற்று சின்னமும் மின்னிலே மேனோக்கிப் பாழாய்த் தேவர்கடமை இழந்து வருகையாலு மித்தேவருக்கு தானத்தாரும் / கும்பிட்டிருக்கும் ஆண்டார்களும் இருந்து முதலாய் சீபண்டாரத்து ஒடுக்கினகாசு முதலிடாதேயிவன் தான் கையுற்றக் காசு முப்பத்தினாயிரத்தி நானூறு மிவன் பேரவரியோலை ஏற்றத்தாலுமிவன் கல்லிமுக்கி வாங்கிய காசிலுமிவன் சிவநாமத்து வரிசைக்கு முதநிலத்தாலும் கமுகு கடைமையாலும் _ _ _ _  அஞ்சாவது ஆனிமாதத்தே திருக்காப்புக்கொண்டு கிடந்தவாறே ஆண்டார்கள் பழுவூருடையானை யழைத்து முறையாட்டம் கேட்க புக இவன் புழக்கடையே விழுந்து ஓடிப்போனவாறே யிவனகத்தை சோதிச்ச இடத்து நாற்பதில் கல  நெல்லும் கோயிற்குறியான திருப்பரிகலமும் கண்டு எடுக்கையாய் மற்றும் பல  சிவதுரோகம் முன்னாளிவன்  செய்கையாலும் இவன் வீட்டை இடித்து குலோத்துங்க சோழ வினாயகப்பிள்ளையாரை எழுந்தருளிவித்து இவனகத்தே கண்டு எடுக்காயாயிவனும் சிவதுரோகம் செய்கையாலும் சிரீபண்டாரத்து தன்கையுற்ற காசாலுமிப்பல / படியால் முதலாந காசிலி காசுக்கு திறப்பில் சிரீபராந்தக சதுர்வேதி மங்கலத்திலத்து இவன் தனக்கு கொண்ட காணியாக்கக் கொண்ட கமுகும் விளைநிலமும் திருநாமத்து சிரீபண்டாரத்து கொண்டகாசுக்கு சிரீவீரநாராயணர்க்கு விண்ணப்ப _ _ _ _ பிடாரி வாய்க்காலுக்கு வடக்கு _ _ _ _ கிழக்கடைய நிலம் ஒருமாவரைக்காணி நீக்கி தெற்கடையதிலம் ஒருமாவரைக்காணியில் தெற்கடைய நிலம்முக்காணியில் / கிழக்கடைய ஒரு பூ நிலம் காணி அரைக்காணியும் எட்டாங்கண்ணாற்று நாலஞ்சதிர நிலம் இரண்டுமாமுக்காணியும் கோதண்டராம வாய்க்காலில் _ _ _ _வடக்கடைய நிலம் நான்மாவரையில் கிழக்கடைய நிலம் ஒருமாவரையின் உத்தேசம் நீக்கி இதன்மேற்கு நிலம் முக்காணியில் இதன் கிழக்கடைய நிலம் அரைக்காணி முந்திரிகை நீக்கி இதன்மேற்கு கமுகு நிலம் காணிமுந்திரிகையும் இதன் தெற்கடைய  நிலம் நான்குமாவரையில் கிழக்கடைய நிலம் இரண்டுமாக்காணியில் தெற்கடைய நிலம் ஒரு மாவரைவரை_ _ _ _  நிலம் அரையான்த தேசம் நீக்கி / இதன் தெற்கடைய நிலம் அரைக்காணி முந்திரிகையில் முந்திரிகை கீழ்கால் நோக்கி மேற்கடைய நிலம் முந்திரிகை கீழ் முக்காலும் இதன் மேற்கடைய நிலம் அரைக்காணி முந்திரிகையில் தெற்கடைய நிலம் அரைக்காணி நீக்கி வடக்கு_ _ _ _ வதிக்கு மேற்கு வானவன்மாதேவி வாய்க்காலுக்கு வடக்கு நாலாங்கண்ணாற்று இரண்டாஞ்சதிரத்து தெற்கடை ய நிலம் நான்மாவரையில் / மேற்கடைய நிலம் முக்காணியில் வடமேற்கடைய நிலம் மாகாணி யிப்படியாக காசுக்குடலாக திருநாமத்துகாணியாக கூட்டினோம். இது பன்மாஹேஷ்வர ரக்ஷை.

    ஆண்டார்கள் – அடியார்கள்; கமுகு திருநந்தவனம் –பாக்குதோப்பு; முறையாட்டம்- கணக்கு.

    விளக்கம்: கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் பதினாறாவது ஆட்சிஆண்டில் (பொ.ஊ. 1194ல்)  வெட்டப்பட்டது. இன்னம்பர் நாட்டில் இறைவனை கும்பிட்டு இருந்த அடியார்கள் இரண்டாம் இராசாதிராசனின் 7-ம் ஆட்சி ஆண்டில் (பொ.ஊ.1173 ல்) பழையனூர் பல்லவராயரிடம் வேந்தரின் தேவதானமாக 140 மரங்கள் கொண்ட பாக்குத் தோப்பை இறைவனுக்கு எழுதித்தர வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்கள். பல்வரையரும் இறைவனுக்கு பிரசாதம் செய்தருளும்படி பாக்குத் தோப்பை தேவதானமாக எழுதிக் கொடுத்தார். கோவில் மடைபள்ளி நிர்வாகி பாக்குத்தோப்பிற்கே சென்று விலை கொடுத்து பாக்கை வெட்டிவருகின்றான். இப்படி வரும் பாக்கை தன்வீட்டிற்கும் கொண்டு வந்து, பிறருக்கு காசிற்கு வெட்டி விற்றும், தன் சம்பந்திக்கு கொடுத்தும் அப்படியாக பச்சைப் பாக்கை  3200 காசிற்கும், 3200000 பாக்கை 42,600 காசிற்கும் விற்றதனல் கோவிலுக்கு முன்புவந்துகொண்டிருந்த நில வருவாய், பாக்கு வரி இழப்பு ஏற்பட்டது. பல்வரையரும், கோவில் பொறுப்பாளரும், இறைவனைத் தொழும் அடியார்களும் கொடுத்த காசை 30,400 இவன் கோவில் கருவூலத்தில் சேர்க்காமல் தானே கையாடல் செய்துகொண்டான். இதனால் சிவநாமத்து நில வருவாயும், பாக்கு வரியும் வராமல் போனது. ஆடிமாதத்தில் காப்புகட்டிய அடியார்கள் இந்த மடைபள்ளி நிர்வாகியை கணக்குதரும்படி கேட்டனர். அவன் தன் விட்டின் புழக்கடைவழியே ஊரைவிட்டு ஓடிப்போனான்.அவன் வீட்டை வந்து சோதித்தபோது 40 கல நெல்லும் கோயில் திருப்பரிகலமும் கண்டு எடுத்தனர். இன்னும் பல சிவதுரோகம் செய்திருந்ததினால் இவன் வீட்டை இடித்து பிள்ளையார் கோவில் கட்டினர். இவன் பாக்கு விற்ற காசில் ஊரில் பல்வேறு இடங்களில் வாங்கிப் போட்டிருந்த நிலங்கள் அத்தனையும் பறிமுதல் செய்து அவற்றை இறைவன் பெயருக்கு உரிமை ஆக்கினர். மடைபள்ளி நிர்வாகி பழுவூர் ஆண்டான் ஒரு பிராமணர் ஏனென்றால் மடைபள்ளியில் பிராமணரே பணியாற்றுவர்.

    பார்வை நூல்: தமிழ்க் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக் 292-293, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம். 0-9886769865

    Share
  • கல்வெட்டில் வரிகள், பட்டணவர் பற்றிய செய்தி

    சேஷாத்ரி ஸ்ரீதரன்

    கல்வெட்டில் வரிகள், பட்டணவர் பற்றிய செய்தி

    புதுவை அருகு  திருவாண்டார் கோயில் எனும் ஊரில் அமைந்த பஞ்சநதீசுவரர் கோயிலின் தனித்துக் கிடக்கும் கற்பலகையில் உள்ள 18ஆம் நூற்றாண்டு எழுத்தமைதி கொண்ட  கல்வெட்டு.

    1. விளம்பிஸ்ரீ_ _ _
    2. மாதம் 10 தேதி நயினார்
    3. வசவப்ப மழவராயர்
    4. திருவய்யாறுடை
    5. ய நயினார் கோயில்
    6. வந்தேறு குடியளு
    7. க்கு கட்டளை விட்டபடி
    8. திருவாண்டார் கோயி
    9. லில் குடியிலிபா
    10. ழாக இருக்கவல்
    11. அண்ணமாரை
    12. யன் குடியேற்
    13. றிக் கொள்ள சொல்
    14. விருத்தகை இரு
    15. க்கையில் தம் கு
    16. டியளுக்கு கட்டளை
    17. இட்டபடி கையிகோளர்
    18. வியாபாரியள் உண்
    19. டான பலபட்டடை
    20. காசவற்கத்துக்கும்
    21. குடியளுக்கும் இவரு
    22. ஷம் ஒன்றுக்கு
    23. மானியம். அதுக்கு
    24. மேல் மாதம் ஒன்றுக்
    25. கு அரைக் கட்டணமு
    26. ம் ஆயத்துக்கு மா
    27. தம் மூன்று காசு

    விருத்தகை – வேண்டுகோள்; பலபட்டடை – வணிகர் மற்றும் கைத் தொழில் செய்வோர் வரி; காசவற்கம் – வரியை நாணயமாக செலுத்தும் கைத்தொழிலோர், வணிகர்; ஆயம் – நிர்வாகம் வரி.

    விளக்கம்: விளம்பி ஆண்டு 16 ஆம் நூற்றாண்டில் 1539 & 1599 ஆகிய ஆண்டுகளில் நிகழ்கின்றது. வசவப்ப மழவராயர் கட்டளைப்படி பஞ்சநதீசுவரர் கோயில் அமைந்த திருவாண்டார் கோயில் ஊரில் வந்து குடியேறும் குடிகளுக்கு இட்ட கட்டளை. திருவாண்டார் கோவிலில் குடியில்லாத வறிதாக இருக்கின்ற நிலங்களில் அண்ணமாரையன் குடியேற்றிக் கொள்ளச் சொல்லி வேண்டுகோள் தெரிவித்திருந்தபடி தம் குடிகளிடம் கட்டளையிட்டபடி கைக்கோள வணிகர்கள் உள்ளிட்ட பல தொழில் செய்வோர், வரிகட்டும் வணிகர் உள்ளிட்ட குடியேறும் குடிகள் இவ்வாண்டு மட்டும் மானியம் பெறலாம். அதன்பின் மாதம் ஒன்றுக்கு அரைக் கட்டணமும் நிர்வாகத்திற்கு மாதம் மூன்று காசும் செலுத்த வேண்டும்.

    இந்நாளைய நகர வரி போல் உள்ளது, அந்நாளைய ஆயம். பண்டு மக்கள் அதிக வரிச்சுமைக்கு ஆளாகி இருந்தனர். அதிலும் குறிப்பாக நாயக்கர் ஆட்சிக் காலத்தில் கட்ட முடியாத அளவிற்கு அதிக வரிச்சுமை.

    பார்வை நூல்: வரலாற்றில் திருவாண்டார் கோயில், வில்லியனூர் புலவர் ந. வேங்கடேசன்

    புதுவை காரைக்கால் அருகு மேல்பொன்பேத்தி ஊரில் தனியார் வீட்டின் வாயிற்படியில் உள்ள கற்பலகையில் பொறித்த  16 ஆம்  நூற்றாண்டு 20 வரிக் கல்வெட்டு. இந்தக் கோட்டுச்சேரி, காரைக்காலிலிருந்து பொறையாறு செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

    1. ஆங்கீர ஆண்டு வைய்யாசி 10ந் தேதி
    2. ஸ்ரீமதுராயச _ _ _ _ _ ருவர் அய்யன் கா
    3. ரியத்துகே _ _ _ _ _ தவதரையர்
    4. கோட்டுச்சேரி பட்டணவர் செங்
    5. கணச்செட்டி எறையச் செட்டி ஆ
    6. லத்துடைய நம்பி அறம்[வ]ளத்த
    7. நம்பி உள்ப்பட்டாற்கு குடுத்த ச
    8. றுவ மானியப் பட்டையம்
    9. இந்த ஊர்ப் பட்டணச்சேரி வரு
    10. ஷம் ஒன்றுக்கு அய்யன் கட்டளை
    11. பொன் அறுபது இந்தக் கட்டளை
    12. இட்ட[தி]ல் தரும் பொன் அறுபதுக்கு
    13. ள்ளே இந்த ஊரில் பரவை மீனு
    14. [ம்] பட்டணச்சேரி _ _ _ _ _ த்துடநே சே
    15. [ர்]ந்தபடியாலே [நா]ளது முதல் சந்தி
    16. ராதித்தவரையும் கோட்டுச்சேரி பரவை
    17. மீன் உள்பட பட்டணவரே அனு
    18. பவித்துக் கொள்ளவும் யிந்த மாநி
    19. யத்தை இயாதொருவ_ _ _ _ _
    20. அழித்தவன்

    பட்டணவர்–மீனவச் செட்டியார்  அய்யன் கட்டளை – அய்யனுடைய  நில எல்லை பரவை மீன் – கடல் மீன்

    விளக்கம்: 18ஆம் நூற்றண்டில் ஆங்கிர ஆண்டு கி.பி. 1742-1743 இல் நிகழ்கின்றது. கோட்டுச்சேரி பட்டணவரான செங்கணச் செட்டி, எறையச்செட்டி, ஆலத்துடைய நம்பி, அறம்வளர்த்த நம்பி உள்ளிட்ட நால்வருக்கு கொடுத்த சர்வமானிய பட்டயம் யாதெனில் அய்யன் கட்டளை வரை உள்ள பட்டணச்சேரியில் ஆண்டு ஒன்றுக்கு 60 பொன் ஓபோ கட்டவேண்டும். இப்படி தரும் பொன் அறுபதுக்கு கடல்மீனை பிடிக்கும் உரிமையை இந்த நால்வரே அனுபவிப்பாராக என்று கூறப்பட்டுள்ளது.

    இந்தப் பட்டணவர் 12ஆம் நூற்றாண்டில் துணி, ஆடை நெய்து விற்றுவந்தனர் என்று தெரிகின்றது. 18 ஆம் நூற்றாண்டில் மீன் விற்க வந்துவிட்டனர்.

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர்                       S. Kuppusamy & G. Vijayavenugopal.

    திருப்புவனை வரதராஜ பெருமாள் கோயில் மேற்கு வராந்தா திருச்சுற்று மதில் 10 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்திஸ்ரீ பூமாது புணரப் புவிமாது விளங்க நாமாது வி[ளங்க] ஜயமாது மகிழத் தந்திரு பாதமலர் மன்நவர் சூட மந்நிய வுரிமையில் மணிமுடிசூடிச் செங்கோல் செந்று திசை தொறு நடப்ப வேங்கலி  நீங்க மெய்யறந் தழைப்பக் கலிங்க மிரியக் கடம
    2. லை நடத்தி வலங்கோளாழி வரையாழி [ந]டப்ப இருசுடரளவும் ஒருகுடை சுழற்றச் செம்பொன் வீரஸிம்ஹாஸனத்து முக்கோக் கிழாநடிகளோடும் வீற்றிருந்தருளிய கோப்பரகேசரிபந்மரான த்ரி(பு)ஹுவ[ன]ச் சக்கரவத்தி
    3. கள் ஸ்ரீ விக்கிரம சோழ [தேவர்]க்கு யாண்டு ஒன்பதாவது ராஜராஜ வளநாட்டு வீராவதார வளநாட்டு ப்ரஹ்மதேயம் [த்ரி]புவன மாதேவிச் சதுப்பேதி மங்கலத்து [ந]டுவிற் கோயில் ஸ்ரீவீரநாராயண விண்ணகராழ்வார்க்கு இர _ _ _ _ _
    4. ணவர் ப்ரஹ்மவைஸ்வநு[க்]கு ஜனித்த [ப்ரித்ரஷ்ட] ஆயோஹவாரானப் பற்றுள்ணர்கு உபநயாநாதி கருமங்களுக்கும் தேவர்களுக்கு  [த்வ]ஜ படமும் சாத்தியருளத் திருப்பரிசட்டங்களும் ராஜாக்களுக்குச் சாத்தியருளத் திருப்பரிச்ச[ட்டங்களும்]
    5. நெய்யக் கடவ முறைமையாலும் பல ஆஹமங்களும் ங ஸ்மிதிகளாலும் ((ஞ்) சொல்லுதலாலும் செய்யக்கடவராவ[ர்]களே யாதலால் இக்கோயிலுக்கு இவர்களுக்கு நிமந்தமாகவிட்ட நிலம் ஜனனாத நல்லூர்க் கட்டளையில் இவ்வாழ்வார்
    6. யிறையிலி நிலத்தில் திரிபுவனமாதேவி வதிக்கு மேற்குப் பிராந்தக வா[ய்]க்காலுக்கு வடக்கு இரண்டாங் கண்ணாற்று முதற் சதிரத்துக் கிழக்கடைய நிலம் ஆறுமாவில்  வடக்கடைய நில[ம்] இருமாவரையும் சேட்படி விளாகத்தில் வடதலை
    7. யிலே பத்து மனையுங்  கைக்கொண்டு  வைகாசித் திருநாளைக்கு நாலு  திருப்பரிச்சட்டமும்  திருவுத்திரியம் இரண்டு  திருமுடிச்சேலை  இரண்டும்  விஷுவயன ஸங்கிரமங்கள் நாலுக்கு திருப்பரிசட்டம்  நாலும் து[வ]ஜ படமும்  திருவாசலுக்கு  திருநமநி
    8. கையும் திருவிதான ஒந்றும் ஆக இவ்வூர்க்கள் பணிமாரக் கடவோமாக இந்நிலம் இம்மனைகளும் கைக் கொண்டு சிலாலேகை  பண்ணிக்   குடத்தோம்  இயோரிரான பட்டணவரோம். இப்படி  செய்யாவிடில்  இவ்வாழ்வார் கோயிலில் ஸ்ரீவயிஷ்ண
    9. வர் தடுத்தும் வளைத்தும்  தண்டியும்  சிறையாக்கியும் கொள்ளக்கடவ[ர்]களாக  ஸம்மதித்தோம்  செங்காட்டுப் புத்தூரான உத்தம சோழப் பட்டணத்தோமும் உம்பர்பாடியான உய்யக்கொண்ட  சோழபட்
    10. டணத்தோமும்  வேளார்  காணியான  இராஜேந்திர சோழபுரத்தோமும்  கருப்பூரான  விக்கிரம  சோழபுர்த்தோ[மு]ம்.  ஸ்ரீ வைஷ்ணவர்  இரக்ஷை.

    உபநயநாதி கர்மம் – பூணூல் சடங்கு; தேவர்களுக்கு – பிராமணர்களுக்கு; த்வஜ படமும் – பிராணமத் துணியும்; திருப்பரிசட்டம் – செப்புத் திருமேனிகளுக்கு சாற்றும் ஆடை; கட்டளை – எல்லைக்கு உட்பட்ட, jurisdiction;  வதிக்கு –  கால்வாய்க்கு; கண்ணாறு – சிறு பாசன வாய்க்கால்; திருவுத்திரியம் – தோள் துண்டு; விஷுவயன சம்கிரமங்கள் – புத்தாண்டு, அயன கால சடங்குகள்; பணிமார – செய்து தர; இயோரியரான –

    விளக்கம்: விக்கிரம சோழனின்  9 ஆம் ஆண்டு (கி.பி. 1127) ஆட்சிக் கல்வெட்டு. முதல் இரண்டு வரிகளில் மெய்கீர்த்தியுடன் தொடங்குகின்றது. பிரதிலோமரில் அடங்கும் பிரம்ம வைசியரான இதாவது, பிராமணத் தந்தைக்கும் வைசியத் தாய்க்கும் பிறந்த ஆயோகவரான பட்டணவர் பற்றியது.  பூணூல் சடங்குகளில் பிராமணருக்கு பிராமண ஆடை, மேனியில் சாற்றத் துணி. அதே போல் வேந்தர், மன்னவர், அரசர், கிழார் உள்ளிட்ட ஆளும் குடிக்கு மேனியில் சாற்றும் துணியும் நெய்ய வேண்டிய முறையில் நெய்ய ஆகமங்களும் ஸ்மிருதிகளும் சொல்லுகின்ற முறையில் நெய்பவராதலால்  இக்கோயில் தெய்வத் திருமேனிகளுக்கு ஆடை சாற்ற இவர்களுக்கு நிவந்தமாக (பணிக்கூலி) விட்ட நிலம் ஐனனாத நல்லூர் வரம்பில் உள்ள இவ்விறைவர்க்குச் சொந்தமான இறையிலி நிலம் (நான்கு எல்லை குறிக்கப்படுகின்றது) இருமாவரையும் அதோடு சேட்படி விளாகத்தில் வடதலையில் பத்து வீடுகளும் இவர்கள் ஏற்று வைசாகித்  திருநாளுக்கு  நான்கு  சாற்றும் ஆடை, தோள்துண்டு, இரண்டு  திருமுடிச்சேலை,  கொடிக்குத் துணி,  திருவாசலுக்கு திருநமநிகை திருவிதானம் ஒன்று என இந்த உருப்படிகளைச் செய்து தந்து இந்நிலம் இவ்வீடுகளை கைக்கொண்டு இப்படியே ஆவதாகக் கல்வெட்டிக் கொடுத்தோம் பட்டணவரான நாம். இப்படி செய்யாவிட்டால் ஸ்ரீ வைஷ்ணவர் எங்கள் தொழிலைத் தடுக்கவும், எம் உடலை வளைக்கவும், எம்மைத் தண்டிக்கவும், சிறைப்படுத்தவும் ஒப்புக்கொண்டோம். செங்காட்டுப் புத்தூர் உத்தம சோழ பட்டணத்தோம், உம்பர்பாடி உய்யக்கொண்ட சோழ பட்டணத்தோம்,  வேளார் காணி ராஜேந்திர சோழபுரத்தோம், கருப்பூரான விக்கிரம சோழபுரத்தோம் என நான்கு ஊர் பட்டணத்தவர் இந்த ஒப்பந்தத்தை    மேற்கொண்டனர். இது கோயில் சார்பாளர் பட்டணத்தவர் என இரு தரப்புக் கல்வெட்டு ஆகும்.

    எப்படி அனுலோமர் என்பது உண்மையில் இல்லாததோ, அப்படித்தான் பிரதிலோமர் என்பதும் இல்லாதது. அதனால்தான் இங்கு சாஸ்திரம் வலிந்து சுட்டிக் காட்டப்படுகின்றது. பட்டணவர் எவரும் சாஸ்திரம் சொல்லுவது போல பிராமணத் தந்தைக்கும் வைசியத் தாய்க்கும் பிறந்தவர் அல்லர்.  மாறாக தந்தை தாய் இருவருமே வணிகர் குலத்தவர்தாம்.  இந்தப் பட்டணவர் சாதி, பிராமண தந்தை வைசியத் தாய்க்கு பிறந்தவரை மூதாதையராகக் கொண்டது என்பதும் ஏரணப்படி ஏற்புடையது அல்ல. இந்த வரையறை பட்டணவருக்குத் தெரிந்திருக்க வாயப்பில்லை. அப்படி தெரிந்திருந்தால் அதை அவர் ஏற்றிருக்க மாட்டார் என்பது திண்ணம். என்றாலும் இப்படி ஒன்றிரண்டு கல்வெட்டுகள் இருப்பதை மட்டுமே கருத்தில் கொண்டு நால் வருணமும் மனு தர்மமும் சோழர் ஆட்சியில் கோலோச்சியதாகப் பிதற்றுகின்றனர், தொல்லியல் வரலாற்று ஆசிரியர்கள் சிலர்.

    மேற்கண்ட இரண்டாம் கல்வெட்டில் பட்டணவர் மீனவச் செட்டியாராக அறியப்படுகின்றனர். இக்கல்வெட்டிலோ, ஆடை நெய்பவராக அறியப்படுகின்றனர். இவற்றில் இடம்பெறும் இருவரும் ஒரே சாதியார் என்றால் 12ஆம் நூற்றாண்டில் ஒருதொழிலும் 18ஆம் நூற்றாண்டில் வேறு ஒரு தொழிலும் செய்யக் காரணம் என்ன? என்று ஆராய்ந்தால் அயலவரான விஜயநகரர் ஆட்சியின் போதும் நாயக்கர் ஆட்சியின் போதும் ஆந்திரத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட சௌராஷ்டிரர் மற்றும் முத்திரிய நாயுடுகள் ஆகியோர்  கோயில் ஆடைகள் நெய்யவும் ஆட்சியாளருக்கு ஆடை நெய்யவும் உரிமை பெற்றதால் தமிழ்ப் பட்டணவர் வாழ்வாதாரம் இழந்து மீன் விற்கும் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகத் தெரிகின்றது. அயலவர் படையெடுப்பும் ஆட்சியும் இந்த அளவிற்கு சமூக பொருளியல் பாதிப்பை தமிழருக்கு  ஏற்படுத்தியதை இக்கல்வெட்டின் மூலம் உணர முடிகின்றது.

    பார்வை நூல்: புதுச்சேரி மாநிலக் கல்வெட்டுகள், பாகூர்                         S. Kuppusamy & G. Vijayavenugopal,  Institut Francais De Pondichéry :  2006

    https://en.wikipedia.org/wiki/Varadharajaperumal_temple,_Thirubuvanai

    Share
  • பட்லூர் வாகீசுவரர் கோயில் – அனுலோம பாரசிவர் பற்றிய கல்வெட்டு

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    பட்லூர் வாகீசுவரர் கோயில்

    அனுலோமர், பிரதிலோமர் எனக் கலப்பினச் சாதி மக்கள் இரண்டு பெரும் பிரிவினராக முறைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதற்கு மனு தர்மம் சான்றாகக் காட்டப்படுகின்றது. அனுலோமர், உயர்சாதி தந்தைக்கும் தாழ்ந்த சாதி அன்னைக்கும் பிறந்தவர். இதாவது சத்திரிய உயர்சாதி ஆணுக்கும் வைசிய குல தாழ்ந்த சாதிப் பெண்ணுக்கும் பிறந்தவர், அனுலோமர் எனப்பட்டனர்.  கராணி என்போர் வைசிய தந்தைக்கும் சூத்திரத் தாய்க்கும் பிறந்தவர். இது தந்தை வழிமுறை பிறங்கடையை அடையாளப்படுத்தி சொல்லப்படுகின்றது. தமிழ்க் கல்வெட்டுகளில் அனுலோமர் பாரசிவர், பஞ்ச கம்மாளர்கள், பதினெண் விஷயத்தார்கள் என்ற வாணிகக் குழுவில் உள்ள பலர், வணிகர்களாக அறியப்படுகின்றனர். பொற்கொல்லர் என்பாரும் இதில் ஒருவர்.

    அனுலோமர், பிரதிலோமர் என்ற வரைவிலக்கணப்படி தான் (definition) இச்சாதிகளில் உள்ள எல்லா ஆடவருடைய பெண்டிருடைய தாயும் தந்தையும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்களா? என்றால் தெளிவான விடை இல்லை. இதாவது, ஒரு சாதியின் கலப்பு முன்னோர் என்றோ, எப்போதோ, ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு நாட்டின் ஒரு மூலையில், ஏதோ ஒரு காரணத்திற்காக அவ்வாறு சேர்ந்த கலப்புச் சாதியர் தானே ஒழிய, ஒவ்வொரு தலைமுறையின் தாயும் தந்தையும் கலப்புச் சாதியர் அல்லர் என்ற புரிதல் ஏற்பட்ட மாத்திரத்திலேயே இதன் பொருள் குளறுபடி எல்லோராலும் உணர முடிகின்றது. அவ்வகையில் அனுலோமர் பிரதிலோமர் என்போர் கலப்புச் சாதியார் அல்லர் என்பதே உண்மை.

    இதை எல்லாம் சாஸ்திரத்தில் மட்டுமே படித்து அறிந்திருந்த ஒரு சில முட்டாள் பிராமணர்கள், கல்வெட்டுகளில் சிற்சில இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் குறித்துவிட்டனர். இவ்வாறு கல்வெட்டில் அனுலோமராக, பிரதிலோமராகக் குறிக்கப்பட்ட இச்சாதி மக்களுக்கு தாம் அவ்வாறான கலப்புச் சாதியர் என்பதே தெரியாது. தெரிந்திருந்தால் அதை ஏற்றிருக்க மாட்டார்கள், எதிர்த்திருப்பார்கள் என்பது தான் உண்மைக்கும் உண்மை. ஏனென்றால் அவர் தம் பெற்றோர் எல்லோரது பெற்றோரையும் போல ஒரே தொழிலைச் செய்கின்ற ஒரே சாதி மக்கள் தாம், கலப்புச் சாதியர் அல்லர்.

    ஆனால் இக்காலத்தே வரலாறு எழுதும் தொல்லியல் வல்லுநர்கள் பலர்,  இந்த உண்மையைச் சற்றும் எண்ணிப் பாராமல், கல்வெட்டில் தவறாகக் குறித்த பிராமணர்களைப் போல, இவர்களும் இதற்கு மதிப்பு (weightage) கொடுத்து சோழர் ஆட்சிக் காலத்தே வர்ண ஏற்றத் தாழ்வு, சாதி வேறுபாட்டுக் கொடுமை தலைவிரித்தாடியது, ஆதலால் சோழ ஆட்சி கேடுகெட்ட ஆட்சி என்று மதிப்பளிக்கின்றனர். இது இவர்கள் எந்த அளவிற்கு முட்டாள் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிவிடுகின்றது.

    உண்மையில், ஊருக்கு ஊர் இடம் பெயருகின்ற ஆண்களில், குறிப்பாக, சத்திரியர், வணிகர் என்போர், மனக்கட்டுப்பாடு இல்லாமல் வேற்று சாதிப் பெண்கள் மூலம் கலப்புப் பிள்ளைகளுக்கு வழிகோலினர். அப்பிள்ளைகள் வளர்ந்து பெரியவர் ஆனதும் பிழைப்பிற்கு ஏதோ ஒரு தொழிலை மேற்கொள்ள வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகின்றது. அந்நாளில் இந்நாளைப் போல் விரும்பிய தொழிலை ஒருவர் ஏற்றுச் செய்ய முடியாது. அத்தொழிலை ஏற்கெனவே செய்துகொண்டிருக்கும் சாதி மக்கள் அதை எதிர்ப்பார்கள். இதைக் குற்றம் என்று மன்னனிடம் முறையிடுவார்கள். அப்படி ஒரு சூழல் வரும் போது மன்னன் புதிய கலப்பு சாதிக்கு ஒரு பெயரை வழங்கி ஏற்பிசைவு (recognize) தந்து பிழைப்பதற்கு இன்னின்ன தொழிலை மேற்கொள்ளலாம் என்ற உரிமையையும் தந்து பிணக்கைத் தீர்த்து வைக்கிறான்.

    இப்படித் தான் சாதிகளை மக்கள் உருவாக்கி விடுகிறார்கள் அதற்கு மன்னன் ஏற்பிசைவு மட்டும்தான் தருகிறான்.  மன்னன் வேண்டும் என்று எந்த ஒரு சாதியையும் உருவாக்குவதில்லை. ஆனால் வரலாறு எழுதுவோர், பழிபோடுவது என்னவோ மன்னன் மீது அல்லது பிராமணர் மீது தான். தமிழ்நாட்டில் தமிழ்ச் சமூகத்தில் வர்ணக் கோட்பாடு, மனு தர்மக் கோட்பாடு கல்வெட்டளவில் தான் இருந்தது. பலரும் உரைப்பது போல அது சமூகப் பிரச்சனையாக தலைவிரித்தாடியது இல்லை.

    பாரசிவர் என்பவர் பிராமணத் தந்தைக்கும் சூத்திரத் தாய்க்கும் பிறந்தவர் என்ற சாஸ்திரக் கூற்றின் படி அனுலோமப் பிரிவில் வைக்கப்பட்டனர். இவர்கள் தமிழ்நாட்டுக் கோவில்களில் அம்மனுக்குப் பூசனை ஆற்றிய உவச்சர் மரபினர் ஆவர். இவர்கள் பல கோவில்களில் பிராமணருடன் பிராமணரல்லாத பூசகராக, காணி உரிமையோடு பணி புரிந்தது கல்வெட்டுகளில் பதிவாகி உள்ளது. ஈங்கு  நாலு கல்வெட்டில் அவர் பற்றிய குறிப்பு கீழே. 

    ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பட்லூர் அமைந்த வாகீசுவரர் கோயில் கருவறை தென்மேற்கு ஜகதி கல்வெட்டு:

    1. ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலஞ் சிறக்க ஸ்ரீ வீரராசேந்திர தேவர்க்கு யாண்டு இருபத்தொன்பதாவதற்கெதிர் ஒன்பதாவது வ
    2. டகரை நாட்டு பட்டில் ஊரும் ஊராளிகளோம் எங்களூர் இந்நாயனார் வாகீஸ்வரமுடையாற்கு னாங்கள் ஏரி இட்டுக் குடத்தபடியாவ
    3. து பசுங்கண்ணித் தாழையோமுற்று இதில் நீர் பாஞ்ச நிலங்கண்டிட மெல்லாம் இறையின்றி ஏகபோகமாக இட்டு
    4. குடுத்தோம் வாகீசுரமுடையாற்கு. இக்கோயில் காணியுடைய பிராமணரில் பாலாசிரிய கோத்திரத்து பொ[ல்]லாத பிள்ளை ம
    5. கன் மாதேவ பட்டனும் இக்கோயிற் காணி உடைய உகச்சரில் பாரேசிவரில் பூமந்வந்நியான வீரபத்திர சக்கரவத்திய் இக்குளம்
    6. உழுது மூன்றிலொன்று னாயநாற்கு குடுப்பார்களாகவும் இவ்வேரியைக் கோயிற்றமந்னாதல் ஊராராதல் மாற்றுவாந் யாதொ
    7. ருவன் வழியேச்சமறுவாந். இது பன்மாஹேஸ்வர ரட்சை.

    ஊரும் – ஊரில் வாழ்வோர்; ஊராளிகளும் – ஊரைச் சேர்ந்த வெளியிடத்தில் வாழ்பவர்; ஏகபோகமாக – முழுஉரிமையாக; கோயில்காணி உடைய பிராமணர் – official priest; உவச்சர் – காளி, துர்க்கை பூசகர்; ஏரி – குளம்; கோயிற்றமன் – கோயில் பணி நிகழ்த்தும் பூசகர் மேற்பார்வை; ஊராராதல் – ஊரார் மேற்பார்வை; மாற்றுவான் – தனக்கு உரிமை மாற்றுவான்; ஏழு அச்சம் அறுவான் – ஏழுதலைமுறை இல்லாது ஒழிவான்; மாகேசுவரரர் – சிவனடியார்.

    விளக்கம்: கொங்கு சோழன் வீர ராசேந்திரனின் 29+9 =38ஆம் ஆண்டு ஆட்சியின் (கி.பி. 1244) போது வடகரைநாட்டில் அடங்கிய பட்டில் ஊரான இன்றைய பட்லூர் ஊரைச் சேர்ந்தவர்களும் அதில் வாழ்வோரும் சேர்ந்து தமது ஊர் இறைவரான வாகீசுவரருக்கு ஏரி ஒன்றைக் கட்டிக் கொடுத்தனர். அதற்குப் பசுங் கண்ணித்தாழை முற்று எனப் பெயரிட்டனர். இந்த ஏரியையும் அதன் நீர் பாயும் நிலத்தையும் வரியின்றி முழு உரிமையாக வாகீசுவர கோயில் இறைவர்க்கு கொடுத்தனர். இக்கோயில் காணியுடைய பிராமணர் பாலாசிரிய கோத்திரத்தில் பிறந்த பொல்லாப்பிள்ளையின் மகன் மாதேவ பட்டன், அதேபோல இக்கோயில் காணி கொண்ட அம்மன் கோயில் உவச்சன் ஆன பாரசிவரில் பூமன் வந்நியான வீரபத்திர சக்கரவர்த்தி ஆகிய இருவரும் இக்குளத்தின் நீரைக் கொண்டு உழுவித்து அதில் விளையும் பயிரில் மூன்றில் ஒன்றை இக் கோயில் இறைவனுக்கு கொடுக்க வேண்டும். இவ் ஏரி கோயில் மேறபார்வையில், ஊரார் மேற்பார்வையில்  இருப்பதைத் தடுத்துத் தம் சொந்த நலனுக்கு மாற்றிக் கொள்பவன் குலம் ஏழு தலைமுறைக்கு இல்லாததாகிப் போகும். சிவனடியார் இதை முறைமையைக் காக்க வேண்டும்.

    பொதுவாக, கோயிலுக்கு நிலம், விலங்கு, பொன் ஆகிவற்றைத் தான் கொடையாகத் தருவார்கள். அதைத் தவிர்த்து இந்த ஊர் மக்கள் நீர்ப் பாசனத்திற்கு வேண்டி ஏரி அமைத்துக் கொடுத்து உள்ளனர். நீரை எந்த நிலத்தில் பாய்ச்சிப் பயிர் செய்வது என்பதைக் குறிக்காமல் 3இல் 1 பங்கு விளைச்சலை மட்டும் இறைவனுக்குத் தப்பாமல் கொடுக்க வேண்டும் என்பது கேள்விக்கு இடம் அளிக்கின்றது.

    பார்வை நூல்:  ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக்.192

    ஈரோடு மாவட்டம், பவானி வட்டம், பட்லூர் அமைந்த வாகீசுவரர் கோயில் தெற்கு கிழக்கு  பட்டிகைக் கல்வெட்டு:

    1. ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலம் சிறக்க கோவிராஜகேசரி பந்மராநத் திரிபுவனச் சக்கரவர்த்திகள் வீர ராசேந்திர தேவர்க்கு திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற திருநல்லியாண்டு 201 (21) எதிர் பத்தாவது ஆநிமாஸ முதலாக வடகரை பட்டில்லூராளிகளும் நடுவில் நித்யகண்ட சக்கரவத்திகளும் தேவர்க்கும் எம்மிலி _ _ _
    2. _ _ _ யாவது மேக்கடுக்கு கல்லுக்கு மறைக்கும் கிழக்கு  பிடாரியார் தேவதானத்துக்கு மேற்கும் தெற்கு இட்டேறிக்கு வடக்கும் இவ்வெல்லைக்குட்பட்ட நிலமும் இந்நாயனாற்கு பூசிக்கும் நம்பிமார் பட்டில் காணியாளருக்கும் மாணபோகத்துக்கும் பட்டில் காணியாள உவச்சரில் பாரேசிவர் பூமந் வந்நியாந வீரபத்திர சக்கரவத்திக்கு மாணபோகம் _ _ _ மேற்கு பிடாரியார் தேவதானத்துக்கு கிழக்கும் கிழக்கு இட்ட கல்லுக்கு மேற்கும் தெற்கு ஒழுகு கல்லிச்சிறு பொழிக்கு வடக்கும் _ _ _

    திருவெழுத்திட்டு – முடிசூடி; செல்லா நின்ற – நடப்பாண்டு, current year; திருநல்லி யாண்டு – ஆட்சி ஆண்டு; எதிர் – வருகின்ற, வந்த; நடுவில் – சூழ அமர்ந்து; பிடாரி – காளி, துர்க்கை போன்ற அம்மன்; இட்டேறி – வயல்கள் நடுவே செல்லும் வரப்புப் பாதை; நம்பிமார் – பிராமணர்; மாணபோகம் – மழைநம்பி பயிரிடுதல் அல்லது சாய்நிலத்தில் பயிரிடுதல் ; ஒழுகு – பாயும்

    விளக்கம்: கொங்கு சோழன் வீர ராசேந்திரனின் 21+10 = 31 ஆம் ஆண்டு ஆட்சியின் போது (கி.பி. 1237) ஆனி மாதம் முதலே பட்டில் ஊரைச் சேர்ந்தவர்களும் அவர்க்கு நடுவே நித்யகண்ட சக்கரவர்த்தியும் கொலுவிருக்க, தம்மால் இயன்ற கொடையான மேற்கில் அடுக்கிய கல்லுக்கு மறையிலும் கிழக்கில் பிடாரி  கோயில் தேவதானமும் தென்மேற்கில் இட்டேறிக்கு வடக்கும் என உள்ள நிலத்தை இக்கோயில் இறைவர்க்கு பூசனை ஆற்றும் பிராமணர்க்கு பட்டில் நிலமாகவும், மாணபோகமுள்ள பட்டில் நிலம் உள்ள இடத்தில் பாரசிவரான பூமன் வந்நியான  வீரபத்திர சக்கரவத்திக்கு மாணபோக நிலமும் தந்தனர். அந்நிலம் பிடாரி கோயிலுக்கு கிழக்கும், தெற்கே ஓடும் கல்லிச்சிறு குளத்திற்கும் இடையில் அமைந்துள்ளது என்று நில எல்லைகளை குறித்து உள்ளனர். மேலே உள்ள முதல் கல்வெட்டில் குறிக்கப்பட்ட பாரசிவ உவச்சரும் இவரே.

    பண்டு பரவலாக கோயில்களில் பிராமணப் பூசகரோடு பிராமணரல்லா பாரசிவ பூசகரும் பணியாற்றி உள்ளனர் எனத் தெரிகின்றது.

    பார்வை நூல்:  ஈரோடு மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக்.190.

    கோயம்பத்தூர் மாவட்டம் அவினாசி வட்டம் அன்னூர் எனும் இடத்தில் அமைந்த மன்னீசர் கோவில் கல்வெட்டு:

    1. _ _ _ _ ம
    2. ண்டல முதலி துறையூரில் உவச்சக்காணியுடைய பராசிவன்
    3. வாச்சிய மாராயனுக்கு அந்நாள் வதிமுகம் கொடுத்து இவன் ஆளுடையார்
    4. திருமுருகன் பூண்டி நாயனார் கோயிலுக்கும் ஆளுடையார் _ _ _ _
    5. களில் உள்ள உவச்சக் காணிகளுக்கும் இக்கோயில்களில்
    6. கோயிற் காணிகளும் இவர்களுக்கு காணியாக கொடுத்தோம் சோழகுல மாணிக்க _ _ _

    வதிமுகம் – தங்க இடம் கொடுத்து உவச்சர் காணி – அம்மன்கோயில் பூசகருக்கு ஒதுக்கிய நிலம்

    விளக்கம்: 13 ஆம் நூற்றாண்டின் இக்கல்வெட்டில் வேந்தன் பெயரும், ஆட்சி ஆண்டும் குறிக்கப்படவில்லை. மண்டலமுதலி துறையூரில் உவச்சருக்கான காணியை உடைய பாரசிவன் வாச்சிய மாராயனுக்கு முன்னாளிலே தங்கு இடம் கொடுத்து இவன் தெய்வமான திருமுருகன் பூண்டி இறைவர் கோயிலுக்கும் கல்வெட்டில் சிதைந்துள்ள கோயில்களில் உள்ள உவச்சருக்கான காணிகளுக்கும் மற்றும் இக்கோயில்களின் காணிகளுக்கும் (வரிவிலக்கு தந்து) அவற்றை இவனுக்குக் காணியாக கொடுத்தேன் என்று சோழகுல மாணிக்கம் என்ற அரையன் தெரிவிக்கிறான்.

    பார்வை நூல்:  கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொ.து, சென்னை. பக். 82

    எளவானரைசூர் கோவில் கல்வெட்டு , திருக்கோவிலூர் வட்டம்:

    1. ஸ்வஸ்த்திசிரி கோச்சடைய பன்மாரான திரிபுவனச் சக்கரவத்திகள் சிரிசுந்தர பாண்டிய தேவற்கு
    2. யாண்டு 13- ஆவது எதிர் மூன்றாவது உடையார் ஊர்பாகங்கொண்டருளிய நாயனார்
    3. கோயில் தானத்தாரோம் இக்கோயில் பாரசிவற்கு விவாஸ்தாபத்திரம் பண்ணிக் குடுத்த பரிசாவது
    4. நலங்கிங்குகளுக்கு அனுதரிக்கும் இடத்து பாண்டி மண்டலம்,
    5. சோழ மண்டலம், மகத மண்டலம் இம்மண்டல்களிலும் பலதிருப்பதிகளில் செய்தபடியும் நடுவில்மண்டலத்தில் திருமுதுகுன்றமும்
    6. திருவாமாத்தூரும் திருவதிகை திருவெண்ணைநல்லூர் செய்த மரியாதை செய்யக்கடவராகவும்
    7. இப்படி செய்தோமாகில் சிவத்துரோகிகளும் இராசத்துரோகிகளுமாக கடவதாகவும்
    8. இப்படி சம்மதித்து விவஷ்த்தாபத்திரம் பண்ணிக் குடுத்தோம் பாரசிவற்கு தானத்தாரோம்.

    விவஸ்தா பத்திரம் – தீர்மான ஆவணம்; அனுதரிக்கும் – பின்பற்றும்; திருப்பதிகளில் – கோவில்களில்

    விளக்கம்: மதுரை சுந்தர பாண்டியனின் 13 + 3 =16 ஆவது ஆட்சி ஆண்டில் எளவனூர் இறைவர் கோயில் பொறுப்பாளர்களாகிய நாங்கள் இக்கோயிலில் திருப்பணி செய்யும் பாரசிவற்கு தீர்மான ஆவணம் செய்து கொடுத்ததாவது நலங்கிங்குகள் கடைபிடிக்கும் போது பாண்டி மண்டலம், சோழ மண்டலம், மகத மண்டலம் ஆகிய மண்டலங்களில் உள்ள பல கோவில்களில் செய்தபடியே நடுவில் மண்டலம் திருமுதுகுன்றமான விருத்தாசலம், திருவாமாத்தூர், திருவதிகை, திருவெண்ணை நல்லூர் ஆகிய ஊர்களில் செய்த மரியாதையை இந்த பாரசிவருக்கும் செய்யக்கடவராக அல்லாக்கால் சிவதுரோகிகள், இராசதுரோகிகள் போல்வார் ஆகுவராக. இப்படியாக கோவில் பொறுப்பாளர்கள் நாங்கள் இசைந்து பாரசிவருக்கு தீர்மான ஆவணம் செய்து கொடுத்தோம்.

    கோயில் பெயர்கள் சமஸ்கிருதம் ஆனது என்னவோதெலுங்கு நாயக்கர் ஆட்சியில் தான் என்பதை கல்வெட்டுகள் தெளிவுபடுத்துகின்றன.

    பார்வை நூல்:  தமிழ் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள் (C.Era 300 – 1800), க.பன்னீர்செல்வம், 2018.  ARIEp 1938 B. No 492

    https://www.facebook.com/pg/ஶ்ரீ-வாகீஸ்வரர்-திருக்கோவில்-பட்லூர்-245845535884081/posts/

    Share
  • கொங்கு நாட்டில் பறையர் ஆற்றிய கோயில் திருப்பணிகள்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    கொங்கு நாட்டில் பறையர் ஆற்றிய கோயில் திருப்பணிகள் 

    கொங்கு நாடு கன்னியாகுமரி போலவே தனக்கெனத் தனிவரலாறு கொண்டிருந்ததானது அங்கத்து கல்வெட்டுகளால் அறிய முடிகின்றது. கொங்கு, சோழர் காலத்தில் இங்கு கோயில் இயக்கம் தொடங்கியது முதல் அவர் உத்தாரம் (support) பெற்று நல்ல முறையில் கோயில் இயக்கம் எடுத்துச் செல்லப்பட்டதைக் கல்வெட்டுகளில் காண முடிகின்றது. இவற்றில் வெள்ளாளர் குழுக்களாக, கூட்டமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதிகாரப் பொறுப்பில் இருந்த வெள்ளாளரிடம் பறையர் காவற் பணியில் இருந்ததைக் கல்வெட்டுகளால் அறிய முடிகின்றது. இப்பறையர்கள் இங்கத்து கோயில்கள் சிலவற்றில் விளக்கேற்றித் திருத்தொண்டு புரிந்தது பதிவாகி உள்ளது. இது இவர்கள் கோயிலுட் சென்று கருவறை மூலவரை எதிர் வணங்கினமைக்குச் சான்றாகின்றது.

    இதை ஏன் இங்கே சிறப்பாகக் குறிக்க வேண்டி உள்ளது என்றால் புராணங்கள், மனுதர்மம் ஆகியவற்றின்படி இவர்கள் கோயிலில் நுழைய அனுமதி இல்லாத தீண்டத் தகாதோராக நடத்தப்பட்டனர் என்ற தப்பான, பிழையான கருத்தே மக்கள் பெரும்பாலார் நெஞ்சங்களில் குடிகொண்டு உள்ளது. இப்பிழையான கருத்தை முறியடிக்கும் ஆயுதமாகச் சில கல்வெட்டுகள், கொங்கில் காணக் கிடைக்கின்றன.

    ஏன் இங்கே மட்டும் கிடைக்கின்றன? மற்ற இடங்களிள் இவ்வாறான கல்வெட்டுகள் இல்லையா? என்ற கேள்விக்கு முதலாவதாக இங்கே தமிழகத்தின் பிற பகுதிகள் போல் அல்லாமல் பெரிய கோயில்கள் மிகக் குறைவு அதனால் கல்வெட்டுகளும் குறைவு. ஆதலால் இங்கத்துச் சாதி உணர்வுள்ளவரில் தனியார் சிலர், தம் சொந்தச் செலவில் இங்கத்துக் கோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்தும், படித்தும் அச்சில் ஏற்றி, நூலாக வெளியிட்டு உள்ளனர். இப்படி மற்ற இடத்தில் பெரிதாக எவரும் செய்யாததால் பறையர் பற்றிய செய்திகள் பிற இடங்களில் அதிகம் வெளியாகவில்லை.

    வெளியான அளவிற்கு இவை பறையர் சமூக சமநீதிப் போராட்டத்திற்கான சிறந்த ஆயுதங்களாக உள்ளன. இதை உணர்ந்தால் இவர்களுக்கு நன்மை உண்டாகும். அப்படி அல்லாமல் மீண்டும் மீண்டும் புராணத்தையும் மனுதர்மத்தையும் காட்டி சைவ, வைணவ மதங்களைச் சாடி, பிராமணரைப் பழிப்பார்களானால் இக்கல்வெட்டுகள், பிடியில்லாக் கத்தியாக இவர்களைத்தான் காயப்படுத்தும். கொங்கு கல்வெட்டு போல பிற இடத்துக் கல்வெட்டுகள், கோயில் வாரியாக நூலாக வெளியாவதற்கு நடுவண் தொல்லியல் துறைக்கு அழுத்தம் தர வேண்டும். இனி, சில கல்வெட்டுகளைக் காண்போம்.

    கோயம்புத்தூர் மாவட்டம் சங்கமேசுவரர் கோயில் தெற்கு ஜகதி உள்ள 3 வரிக் கல்வெட்டு.    

    1. ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரம சோழ தேவற்கு யாண்டு பதினேழாவது எதிர் எதிர் பேரூர் நாட்டு கோவன்புத்தூர் உடையார் சங்கீசுரமுடையார் கோயில் பக்கல் வடபரிசார நாட்டி
    2. லிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன் வைத்த சந்தியா தீபமொன்றுக்கு மிக்கோயிலிற் காணியுடைய சிவப்பிராமணனுக்கு ஓரச்சு குடுத்தே _ _ _ _
    3. சந்திராதித்தவரை செல்வதாகவு மிக்கோயிற் குடமுங் குச்சியுங் கொடு புக்கானிவனொருவன் செலுத்தக் கடவேனாகவும் கல்வெட்டுவித்தேநிது பன்மாஹேஸ்வர ரக்ஷை.

    பக்கல் – for, ஆக; நாட்டுக் காமுண்டன் – ஊர் காவலன்; காணியுடைய பிராமணன் – official priest ; அச்சு – காசு; புக்கான் இவன் ஒருவன்- கருவறையில் புகும் உரிமையுள்ள பிராமணன்; பன்மாகேசுவரர் – சிவனடியார்; ரக்ஷை – காக்கவேண்டும்.

    விளக்கம்: கொங்கு சோழர் மூன்றாம் விக்கிரம சோழனுக்கு 17+1+1 = 19 ஆம் ஆண்டு ஆட்சியில் (கி.பி. 1292 ) கோயம்புத்தூர் தெற்கு சங்கமேசுவரர் கோயிலில் வடபாரிச நாட்டில் வாழ்கின்றவனும் புல்லிகூட்டத்து வெள்ளாளனிடம் பணியில் உள்ளவனுமான பறையனான பறையன் என்பான், ஊர்க் காவல் செய்து வந்தான். அவன் இக்கோயில் காணியுடைய சிவப் பிராமணனிடம் காசு ஒரு அச்சு கொடுத்து சந்தியா விளக்கு ஒன்று எரிக்கச் செய்தான். இது சந்திர சூரியர் காலம் வரை ஏற்று நடத்தப்படும் என்று குடமும் குச்சியும் கொண்டு கருவறையில் நுழையும் அனுமதி பெற்ற பிராமணன் அப்படியே செய்வதாகக் கல்வெட்டி, அதைச் சிவனடியார் காக்க வேண்டும் என்கிறான்.

    இக்கல்வெட்டில் பயிலும் காணியுடைய பிராமணன், புக்கான் இவன் ஒருவன் என்ற சொல்லாட்சிகள் கருவறை பிராமணரைப் பிற கோயில் பிராமணரிடம் இருந்து வேறுபடுத்தி உயர்வாகக் காட்டுகின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் அக்காலத்தே கோயில் சாராத (unofficial) ஆனால் அகவை முதிர்ந்த கோயில் சார்ந்த பிராமணருக்கு சார்பாக (substitute) அவர்களது உறவினரும் கோயில் பூசையில் ஈடுபட்டிருந்தனர். இத்தகையோருக்கு அந்த முதிர்ந்த பிராமணர் தான் தன் உரிமையில் இருந்து ஒரு பங்கைச் சம்பளமாக வழங்குவார்.  இது தான் அந்த வேறுபாடு.

    பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக். 153 மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    கோயம்பூத்தூர் வடக்கில் அமைந்த இடிகரை ஊரில் உள்ள வில்லீஸ்வரர் கோயில் கருவறைச் சுவர் 15 வரிக் கல்வட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டிய / தேவற்கு யாண்டு 8 வது வ / டபரிசார நாட்டுக் கொற்ற / மங்கலத்திலிருக்கும் வெள் / ளாழன் பையரில் பறைய / ன் பறையனேன் ஆளுடை / யார் வில்லீஸ்வரமுடையா / ற்கு வைத்த / சந்தியா தீபவிளக்கு / ஒன்றுக்கு ஒடுக்கின வராகன் பணம் 10 இ / ப் பணம் பத்துங் கைக் கொண்டேன் இக் / கோயிற் காணியுடைய சிவ பிராமணன் / காசிவ கோத்திரத்துத் திருநட்டன் அகத்திஸ்வர / முடையானான சித்தரமேழி பட்டனேன் கு / டங் கொடு கோயில் புகுவார் சந்திராதித்த / வரை செல்வதாக பன்மாஹேஸ்வர ரக்ஷை.

    பையர் – கூட்டம், கீழ்ப்படிந்த வீரன், மகன், subordinate warrior; ஆளுடையார் – இறைவர்; ஒடுக்கின – கொடுத்த; வராகன் – ஒரு வகை காசு; சந்தி தீபம் – மாலை விளக்கு.

    விளக்கம்: இது 14 ஆம் நூற்றாண்டு கொங்கு பாண்டியனான வீர பாண்டியனின் 8 ஆம் ஆட்சி ஆண்டில் கொற்ற மங்கலத்தில் இருக்கும் பையர் கூட்டத்தை சேர்ந்த வெள்ளாளனிடம் பணியாற்றும் பறையன் பறையன் என்பான் வில்வீஸ்வரமுடையாருக்கு சந்தி விளக்கு ஒன்றிற்காக 10 வராகன் பணம் கொடுக்கின்றான். இதை பெற்றுக்கொண்ட கோயில் காணியுடைய சிவபிராமணன் காசிபகோத்திரத்தில் பிறந்த திருநட்டன் அகத்தீசுவரன் என்ற சித்திரமேழி பட்டன் அதைச் சந்திர சூரியர் உள்ள காலம் வரை நடத்திச் செல்வதாக உறுதி கூறுகின்றான்.  விளக்கேற்றியவர் கோயிலில் சென்று வழிபடுவது இயல்பு. இதாவது, பறையன் பறையன் உள்ளே சென்று வழிபட்டுள்ளான். இது அவன் தீண்டாமைக்கு ஆட்படவில்லை என்பதற்கு சான்று.

    பார்வை நூல்: கொங்குநாட்டுக் கல்வெட்டுகள், கோயம்புத்தூர் மாவட்டம், பக். 179, மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    ஈரோடு பெருந்துறை வட்டம், ஆதியூர் கண் அமைந்த ஆதீசுவரர் கோவிலில் உள்ள கல்வெட்டு

    ஸ்வஸ்திஸ்ரீ நன்மங்கலஞ் சிறக்க திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்க்குத் திருவெழுத்திட்டுச் செல்லா நின்ற திருநல்லியாண்டு நாலாவது குழப்பு நாட்டு ஆதவூரில் வெள்ளாளன் வண்ணக்கரில் பிள்ளையாழ்வான் கரும்பறையனேன் நாயனார் ஆதீஸ்வரமுடையார் திருக்கோயில் திருநிலைகால் இரண்டு படி இரண்டும் என் தர்மமாகச் செய்வித்தேன் கரும்பறையனேன்.

    திருவெழுத்திட்டு – முடிசூட்டி; திருநல்லியாண்டு – ஆட்சி ஆண்டு; பிள்ளையாழ்வான் – கீழ்படிந்த பணியாள்; திருநிலைக்கால் – கதவு நிலை.

    விளக்கம்: மதுரை வேந்தன் வீரபாண்டியனின் நான்காம் ஆட்சி ஆண்டான 1269 இல் குழப்பு நாட்டில் அடங்கிய ஆதவூர் வண்ணக்கர் கூட்டத்து வெள்ளாளனின் பணியாளான கரும்பறையன் என்பான் ஆதிசுரமுடைய ஈசன் கோயிலில் இரண்டு திருநிலைக் கதவும் இரண்டு படியும் செய்வித்து கொடுத்து திருத்தொண்டு புரிந்தான்.

    பார்வை நூல்: கொங்கு வேளாளர் கல்வெட்டும் காணிப் பாடலும், பக். 143

    கோயம்புத்தூர் உடுமலைப்பேட்டை வட்டம், கடத்தூரில் உள்ள மருதீசர் கோயில் கோபுர வாசல் இடது நிலைக்காலில் வெட்டப் பட்ட 11 வரி கல்வெட்டு.

    ஸ்வஸ்திஸ்ரீ வீ / ராஜேந்திர தேவற்கு / யாண்டு பத்தாவ / து கடற்றூர் வெ / ள்ளாந் கள்ளந் ப / றையந் நரவீரகே / ரழச் சிலை செட்டி / இட்ட திருநிலை வாய் / முகவணை உ / த்தரமும் திருக்க / தவும் இட்டேந்.

    திருநிலைவாய் – கோபுரத்தோடு கூடிய வாயில்; முகவணை – வாயிலை ஒட்டிய கற்சுவர்.

    விளக்கம்: கொங்குச் சோழன் வீர ராஜேந்திரனின் 10ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி. 1217) கடத்தூரில் வாழும் வெள்ளாளனுக்குப் பணியாற்றும் கள்ளன் பறையன் என்பான் நரவீரகேரளச் சிலைச் செட்டி சார்பாக இக்கோயில் திருநிலை வாயிலுக்கு முகவணை, உத்தரம், திருக்கதவு ஆகியன செய்து இட்டான். இதை வீரகேரளச்செட்டி நேரில் நின்று கவனிக்க முடியாததால் கள்ளன் பறையன் இத் திருப்பணியை அவன் சார்பில் மேற்பார்வை செய்து இட்டான் என்று கொள்வதே முறையானது. அந்த வகையில் கோயிலில் வழிபாடும் நடத்தி இருக்கின்றான்.

    பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக் 190.

    கோயம்புத்தூர் வடக்கில் இடிகரை ஊரில் அமைந்த வல்லீஸ்வரர் கோயில் கருவறைச் சுவரில் பொறித்த 4 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ வீரபாண்டிய தேவற்கு யாண்டு 12 வது வடபரிசார நாட்டு இடிகரையி லிருக்கும் வெள்ளாழன் பைய்யரில் ச
    2. டையன் நேரியான் பறையனேன்ஆளுடையார் வில்லீஸ்வர முடையாற்கு வைத்த சந்தியா தீபவிளக்கு ஒன்றுக்கு ஒடுக்கின வ
    3. ராகன் பணம் 10. இப்பணம் பத்துங்கைக் கொண்டேன் இக்கோயிற் காணியுடைய சிவபிராமணன் காசிவ கோத்திரத்து திருநட்ட அகத்தீ
    4. ஸ்வரமுடையானான சித்திரமேழிப் பட்டனேன் குடங்கொடு கோயில் புகுவார் சந்திராதித்த வரை செல்வதாக இத்தன்மம். பன்மீயேசுவர ரக்ஷை.

    விளக்கம்: 14 ஆம் நூற்றாண்டு கொங்கு பாண்டியரில் வீரபாண்டியனுக்கு 12 ஆவது ஆட்சி ஆண்டில் இடிகரையில் வாழும் பையர் கூட்டத்து வெள்ளாளனின் பணியாள் நேரியான் பறையன் வில்லீசுவரமுடைய இறைவர்க்கு மாலை விளக்கு ஏற்ற 10 வராகன் பணம் கொடுத்தான். இதைக் கோயில் அலுவல பிராமணன் சித்திர மேழிப் பட்டன் பெற்றுக் கொண்டு சந்திர சூரியர் உள்ள வரை நடத்துவதாக உறுதி தந்தான்.

    இதே கோவிலில் 8ஆம் ஆட்சி ஆண்டின் இதே போல ஒரு கல்வெட்டு மேலே இடம்பெற்றுள்ளது.

    பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக். 342

    கோயம்புத்தூர் அவிநாசி வட்டம் சேவூரில் உள்ள கபாலீசர் கோயியில் முன்மண்டப தெற்கு குமுதத்தில் உள்ள 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ வீரராசேந்திர தேவற்கு யாண்டு இருபத்து நாலாவது _ _ _
    2. பாக்குடியில் இருக்குஞ் சாமந்தரில் குன்றன் _ _ _ _
    3. உடைய பாரசிவரில் வீற்றிருந்த வறியான் _ _ _
    4. இடங்கை நாயகந் நித்தப் பரையன்உள்ளிட்டாரும் வடுக _ _ _
    5. யாரும் இவர் _ _ _ _ பிடாரியாற்கு சந்தியா தீபத்துக்கு _ _ _
    6. இதுபன்மாயேசுவர ரக்ஷை.

    பாரசிவர் – அம்மன் கோயில் பூசகர்; சாமந்தன் – அமைச்சன் அல்லது படைத்தலைவன்;  பிடாரி – துர்கை.

    விளக்கம்: கொங்கு சோழரில் வீர ராஜேந்திரனுக்கு 24 நாலாவது ஆட்சிஆண்டில் (கி.பி.1230) பாக்குடியில வாழும் சாமந்தன் குன்றன், கோயில் பூசகரான பாரசிவர் வீற்றிருந்த வறியான், இடங்கைப் பிரிவுத் தலைவன் நித்தப் பரையன் உள்ளிட்டோர் ஆன இவர்கள் பிடாரிக்கு மாலை விளக்கு எரிக்க ஆவன செய்துள்ளனர்.

    பார்வை நூல்: கோயம்பத்தூர் மாவட்டக் கல்வெட்டுகள், த.நா.அ.தொல்லியல் துறை, பக். 270

    திருப்பூர் காங்கேயம் வட்டம் பட்டாலியில் உள்ள பால்வண்ணீசுவரர் கோயில் தெற்கு சுவர் கல்வெட்டு.

    1.   ஸ்வஸ்திஸ்ரீ விக்கிரமசோழ தேவர்க்கு யாண்டு இருபதாவது பட்டாலி காவலன் குறும்பிள்ளரில்

    2.    செயங்கொண்ட வேளானும் செயங் கொண்ட வேளாந் மகந் பறையநும் இவ்விருவரும் பட்டாலியிற் பால் 

    3.   வெண்ணீஸ்வரமுடையாற்குச் சந்தியா தீபம் இரண்டுக்கும் குடுத்த பொந் இருகழஞ்சும் இக்கோயி

    4.   ல் காணி உடைய சிவப்பிராமணந் கூத்தந் கூத்தனும் திருமழபாடியுடையாநான கடைக்கிறிச்சியும் இருவோம் இப்

    5.   பொந் இருகழஞ்சுங் கொண்டு நித்தப்படி சந்திராதிச்சம் செலுத்துவோமாக  இச்சந்தியாதீபம் கு

    6.   டமுங் குச்சியும் கொண்டு மிக்கோயில் புக்காந் இவ்விளக்கிடுவாநா வந் _ _ _ _  

    வேளான் – அரசன், அரசமரபினன், ஆட்சியாளன்; மகன் – கீழ்படிந்த வீரன்.

    விளக்கம்: கொங்கு சோழரில் மூன்றாம் விக்கிரம சோழனின் 20 ஆம் ஆட்சி ஆண்டில் (கி.பி.1293) வெட்டப்பட்ட கல்வெட்டு. வேட்டுவ மரபினரான குறும்பிள்ளர் மரபில் வந்த செயங் கொண்டன், அவனுக்கு கீழ்படிந்த வீரன் பறையன் இருவருமாகச் சேர்ந்து காங்கேயம் பட்டாலியில் உள்ள பால்வண்ண ஈசுவரர் கோவில் இறைவருக்கு இரண்டு சந்தியா விளக்கு எரிக்க அக் கோவிலின் காணி பெற்ற சிவப்பிராமணர்கள் கூத்தன் கூத்தன் மற்றும் கடைக்குறிச்சி ஆகிய இருவரிடம் அதற்காக இருகழஞ்சு கொடுத்தனர். சிவப்பிராமணர் ஞாயிறும் நிலவும் உள்ள வரை சந்தி விளக்கு ஏற்ற உறுதிஉரைத்தனர்.

    பார்வை நூல்: திருப்பூர் மாவட்டக் கல்வெட்டுகள், பக். 11, 2012,  த.நா.அ. தொல்லியல்துறை.

    Share
  • (Peer Reviewed) இராமநாதபுரம் வட்டாரக் கல்வெட்டுகள் காட்டும் வணிகம்

    முனைவர் ஆ.ராஜா,
    அருங்காட்சியகத் துறை,
    தமிழ்ப் பல்கலைக்கழகம்,
    தஞ்சாவூர் – 10

    இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதியில் சங்க காலம் முதல் இடைக்காலம் வரை கடல்சார் வணிகமும் உள்நாட்டு வணிகமும் சிறந்து விளங்கின. இவ்வணிகம் கி.பி.12-14ஆம் நூற்றாண்டுகளில் பிற்காலப் பாண்டியர்களின் எழுச்சியின் காரணமாகச் சிறந்த வளர்ச்சியை அடைந்தது.  இக்காலக் கட்டத்தில் பல்வேறு வணிகக் குழுக்கள் அயல்நாட்டு, உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தன. இராமநாதபுரம் கடற்கரைப் பகுதி, நிலவியல் அடிப்படையில் அதிகமான ஆற்று முகத்துவாரங்களைக் கொண்ட பகுதியாக அமைந்திருப்பதால் கடல்சார் வணிகச் செயல்பாடுகளுக்குப் பெரிதும் துணை புரிந்தன. அந்த வகையில் இராமநாதபுரம் வட்டாரத்தில் இடைக்காலத்தில் செயல்பட்ட வணிகக் குழுக்கள் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆராயும் இக்கட்டுரை, கல்வெட்டுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டதாகும்.

    வணிக நகரம்

    இராமநாதபுரம் வட்டாரத்தில் அமைந்துள்ள தேவிப்பட்டினம் மற்றும் தீத்தாண்டதானபுரம் ஊர்களிலுள்ள கி.பி 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளும், கீழக்கரையிலுள்ள கி.பி.16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளும் இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதிகளில் செயல்பட்ட வணிகக் குழுக்கள், வணிகர்கள், பட்டினங்கள், வணிக நகரங்கள், அங்காடிகள், பெருந்தெருக்கள், வணிகப் பொருட்கள், சரக்குப் போக்குவரத்துச் சாதனங்கள் பற்றிய செய்திகளையும் குறிப்பிடுகின்றன.

    வணிகக் குழுக்கள்

    இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்திலுள்ள தீத்தாண்டதானபுரம் இடைக்கால பாண்டியர்கள் காலத்தில் பல்வேறு வணிகக் குழுக்களைச் சார்ந்தவர்கள் வாழ்ந்த சிறந்த வணிக நகரமாக விளங்கியுள்ளது. இவ்வூரை கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டு, ‘முத்தூற்றுக் கூற்றத்திலிருந்த தீத்தானம்’ என்று குறிப்பிடுகிறது1. இவ்வூரில், முதலாம் சடையவர்மன் வீரபாண்டியனின் (கி.பி.1253-1283) காலத்தில் பதினெண்விசயத்தார், அஞ்சுவண்ணத்தார், மணிக்கிராமத்தார், தென்னிலங்கை வளஞ்சியர், கைக்கோளர், பிரான்மலை வணிகர்கள், சாமந்த பண்டசாலி, தோயாவத்திரச் செட்டிகள் போன்ற வணிகக் குழுக்களும் வணிகர்களும் குடியேறி வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர்2. இவர்கள் தீத்தாண்டதானபுரத்திலுள்ள சர்வதீர்த்த உடைய நாயனார் கோயிலின் இடிந்த மண்டபத்தை மீண்டும் கட்டுவதற்கான செலவுகளுக்காக இவ்வூரில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் மீது ஒரு பகுதியை வரியாகச் சேகரித்து தானமாக வழங்கியுள்ளனர். மேலும், மேற்குறிப்பிட்ட ஊரிலுள்ள பாண்டிய மன்னர்களான மாறவர்மன் வீரபாண்டியன், சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் ஆகியோரின் கல்வெட்டுகள்  வணிகர்களான கைக்கோளர்களும் செட்டிகளும் இவ்வூரிலுள்ள கோயிலுக்குச் சில தானங்கள் வழங்கியதைக் குறிப்பிடுகின்றன3.

                இராமநாதபுரம் வட்டத்தில் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள தேவிப்பட்டினம், பிற்காலப் பாண்டியர்களின் காலத்தில் கடல்சார் வணிகத்தில் சிறந்த துறைமுகப்பட்டினமாக இருந்துள்ளது. கி.பி.13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டியர் கல்வெட்டானது இவ்வூரை செவ்விருக்கை நாட்டிலிருந்த சீறிளங்கோமங்கலமான உலகமாதேவிபட்டினம் என்றும், கி.பி.14ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டில் ஸ்ரீவல்லபட்டினம் என்றும் குறிப்பிடுகின்றது4. இவ்வூரில் கி.பி.13ஆம் நூற்றாண்டின்போது நகரத்தார்கள், நானாதேசிகள் ஆகிய வணிகக் குழுக்கள் தங்கியிருந்து வணிகம் செய்து வந்தனர்5. இவர்களில் நானாதேசிகள், பன்னாட்டு வணிகக் குழுவினர் ஆவர். இவர்கள் பல இடங்களிலிருந்து வந்த சரக்குகளைக் கடல் வழியாகத் தொலைதூர நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளனர்.

                பிற்காலப் பாண்டிய மன்னனான இரண்டாம் சடையவர்மன் விக்கிரம பாண்டியனின் ஆட்சிக் காலத்தில் (கி.பி.14ஆம் நூற்றாண்டு) தேவிப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடல்வழியாகப் பல்வேறு நாடுகளுக்கு வணிகப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதே போன்று பல பகுதிகளிலிருந்து வந்த வணிகப் பொருட்கள் இத்துறைமுகத்தில் இறக்குமதியும் செய்யப்பட்டுள்ளன6. வணிகத்திற்காகத் தேவிப்பட்டினத்தில் தங்கியிருந்த நானாதேசிகள், அங்கிருந்த சிவன்கோயிலில் தங்கள் வணிகக் குழுவின் பெயரில் கட்டவிருந்த வாசலுக்கான  செலவிற்காகத் தேவிப்பட்டினம் மற்றும் செவ்விருக்கை நாட்டிலிருந்த பிற துறைமுகங்களுக்கும் வந்து செல்லும் வணிகப் பொருட்களுக்கு வரி விதித்துள்ளனர்7.

                இராமநாதபுரம் வட்டத்தில் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள கீழக்கரை, கி.பி.16ஆம் நூற்றாண்டில் முத்து வணிகத்தில் சிறந்து விளங்கிய வணிகத் துறைமுகப் பட்டினமாகும். கி.பி.16ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் இவ்வூர் ‘செம்பிநாட்டிலுள்ள அனுத்தொகைமங்கலம்’ என்றும் ‘கீழக்கரையான நினைத்தது முடித்தான் பட்டினம்’ என்றும் குறிப்பிடுகின்றது8. இக்காலக் கட்டத்தில் இவ்வூரிலும், இவ்வூருக்கு அருகிலிருந்த மூன்று துறைமுகப் பட்டினங்களிலிருந்தும் பதினெண் விசையத்தார், முத்து வணிகத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். செம்பி நாட்டு அனுத்தொகைமங்கலத்திலிருந்த நினைத்தது முடித்தான் பிள்ளையார் கோயில் திருப்பணிக்கும், பூசைக்கும் இவர்கள் விற்கும் நூறு முத்துகளுக்கு அரைப்பணம் வீதம் தானம் கொடுத்துள்ளனர்9.

                மேற்குறிப்பிட்ட வட்டத்திலுள்ள இராதானூரில் நெசவுத் தொழிலிலும், துணி வணிகத்திலும் ஈடுபட்ட மதுரையைச் சேர்ந்த கைக்கோளர்கள், அப்பகுதியில் தங்கியிருந்து வணிகம் மேற்கொண்டிருந்தனர்10.

    வணிகம் செய்தவர்கள்

                இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதியிலுள்ள இடைக்காலப் பாண்டியர்களின் கல்வெட்டுகள், இப்பகுதியிலிருந்த தனி வணிகர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. திருவாடானை வட்டம், இராதானூரிலுள்ள கல்வெட்டு செம்பொன்மாரியைச் சேர்ந்த அவ்வைப் பெருந்தெரு வணிகன் சம்பந்தன் பள்ளியாழ்வான் என்ற மிதிக்குணநாயகன், அவ்வூரிலிருந்த சிவன் கோயிலுக்குத் தூண் ஒன்றைத் தானமாக வழங்கிய செய்தியைக் காட்டுகிறது11.

    பட்டினம்

    இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள திருமாலுங்கண்டார்கோட்டை என்ற ஊரானது, இடைக்காலப் பாண்டியர் காலத்தில் எறிவீரர்களால் பாதுகாக்கப்பட்ட வணிக நகராக இருந்துள்ளது. கல்வெட்டில் திருமாலுங்கண்டார்கோட்டை என்ற ஊரை இடைவழியாகிய எறிவீரப்பட்டினம் என குறிப்பிடுவதை அறிய முடிகிறது12. பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதியில் தேவிப்பட்டினம், பெரியபட்டினம், கீழக்கரை, தொண்டி ஆகியவை முக்கிய துறைமுகப் பட்டினங்களாக இருந்து வந்துள்ளன13. இப்பகுதியில் தங்கியிருந்த பல வணிகக் குழுக்கள் இத்துறைமுகங்களை மையமாகக் கொண்டு வணிகம் செய்து வந்துள்ளன. இவற்றைத் தவிர உட்பகுதிகளில் உள்ள திருமாலுங்கண்டார்கோட்டை, இராதானூர் மற்றும் தீத்தாண்டதானபுரத்தில் முகமழகியான் பெருந்தெரு என்ற வணிகர்களின் குடியிருப்பும் இருந்துள்ளதை இவ்வூர்களிலுள்ள கல்வெட்டுகள் சான்று பகர்கின்றன14.

    பொருட்கள்

    இராமநாதபுரம் மாவட்டக் கடற்கரைப் பகுதிகளிலுள்ள இடைக்காலப் பாண்டியர்கள், விஜயநகர-நாயக்கர்க் காலக் கல்வெட்டுகள் இப்பகுதியில் வணிகம் செய்யப்பட்ட பொருட்களைப் பற்றிய குறிப்புகளைக் காட்டுகின்றது. தேவிப்பட்டினத்தில் மிளகு, பாக்கு, கருஞ்சரக்கு, புடவை போன்றவை, கி.பி.13ஆம் நூற்றாண்டு வாக்கில் அயல் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன15. இத்துறைமுகப் பட்டினத்திற்குப் பல பகுதிகளிலிருந்து சரக்குகள் வந்து பின்னர் அவை பல இடங்களுக்குச் சென்றுள்ளன. மேலும், இங்கு ஏறுவன, இறக்குவன, எடுப்பன, நிறுப்பன, விரிப்பன, பிடிப்பன, அளப்பன, முகப்பன ஆகிய தன்மைகளையுடைய பலதரப்பட்ட வணிகப் பொருட்கள் வணிகம் செய்யப்பட்டதை கல்வெட்டுச் சான்றுகள் வாயிலாக அறிய முடிகிறது16. முக்கிய வணிகப் பொருளாகக் கீழக்கரையில் கி.பி.16ஆம் நூற்றாண்டில் முத்து இருந்திருக்கிறது17.

    போக்குவரத்துச் சாதனங்கள்

                இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரைப் பகுதிகளில் கடல்சார் வணிகத்தில் பயன்படுத்தப்பட்ட சில போக்குவரத்துச் சாதனங்கள் பற்றிப் பிற்காலப் பாண்டியர் கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. தேவிப்பட்டினம் துறைமுகத்தில் சிற்றுரு, தோணி போன்ற கலங்கள், கடல்சார் வணிகத்தில் சரக்குப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளன18. மேலும், பொருட்களை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு எடுத்துச் செல்ல, ஆட்களையும் பயன்படுத்தியுள்ளனர்.

    அயல்நாட்டு வணிகம்

                இராமநாதபுரம் வட்டாரத்தில் கடற்கரையில் அமைந்துள்ள துறைமுகப் பட்டினங்களுக்கும் இலங்கை, அரேபிய நாடுகளுக்கிடையேயும் மிக நெருக்கமான கடல்சார் வணிகத் தொடர்பு இருந்துள்ளது. இவ்வணிகத் தொடர்பில் தென்னிலங்கையைச் சார்ந்த வளஞ்சியரும் இசுலாம் சமயத்தைச் சார்ந்த அரேபிய வணிகர்களான அஞ்சு வண்ணத்தாரும் ஈடுபட்டிருந்தனர்.

    உள் வணிகம்

                கி.பி.13-14ஆம் நூற்றாண்டில் இராமநாதபுரம் வட்டாரப் பகுதியில் அஞ்சுவண்ணத்தார், மணிக்கிராமத்தார், தென்னிலங்கை வளஞ்சியர், நகரத்தார், நானாதேசிகள், பதினெண்விசயத்தார், கைக்கோளர்கள்  ஆகிய வணிகக் குழுக்கள், தேவிப்பட்டினம், பெரியபட்டினம், கீழக்கரை, தொண்டி ஆகிய கடற்கரை துறைமுகப் பட்டினங்களையும் தீத்தாண்டதானபுரம், இராதானூர், திருமாலுங்கண்டார்கோட்டை முதலிய கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகளையும் மையமாகக் கொண்டு கடல்சார் வணிக நடவடிக்கைகளைச் செய்து வந்துள்ளன. இதே காலக்கட்டத்தில் இராமநாதபுரம் வட்டாரத்திற்கு அருகே இருக்கும் சிவகங்கை வட்டாரத்தில் பெரும்பாலும் நகரத்தார்கள் நாட்டின் உட்பகுதியில் வணிகம் செய்து வந்தனர். இவர்கள் விற்ற பொருட்களைப் பற்றி, பிரான்மலை கல்வெட்டு குறிப்பிடுகிறது19. அதாவது உப்பு, நெல், அரசி, பயறு, அவரை, துவரை, ஆமணக்கு, பாக்கு, மிளகு, மஞ்சள், கடுகு, சுக்கு, சீரகம், நெல்லி, வெங்காயம், இரும்பு, பருத்தி, நூல், புடவை, எள் தைலம், குதிரை, யானை முதலியவற்றைப் பதினெண்விசையத்தார், திசையாயிரத்து ஐந்நூற்றுவர், நகரத்தார் ஆகிய வணிகக் குழுக்கள் வணிகம் செய்துள்ளன என்பதை அறிய முடிகிறது.

                இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருவாடானை, முதுகுளத்தூர் பகுதிகள் இராமநாதபுரம் வட்டாரக் கடற்கரையிலுள்ள துறைமுகங்களையும், சிவகங்கை வட்டார உட்பகுதி வணிக நகரங்களையும் இணைக்கும் பகுதிகளாக இருந்துள்ளன. கடற்கரைப் பகுதிகள் மற்றும் உட்பகுதிகளிலிருந்த பல்வேறு வணிகக் குழுக்கள் குழு அமைப்பில் இயங்கியதால் இவர்கள் வணிகம் செய்த பகுதிகளிலிருந்த திருக்கோயில்களின் வழிபாட்டிற்கும் பராமரிப்பிற்கும் கொடைகள் வழங்கும்போது வணிகம் தொடர்பான தீர்மானங்களை இணைந்து எடுத்துள்ளனர்.

    சான்றெண் விளக்கம்

    1. Annual report of indian epigraphy for 1926 – 27, Archaeological survey of India, New Delhi, No.599.
    2. Noboru Karashima (ed), Ancient and Medieval Commercial Activities in the Indian Ocean: Testimony of Inscription and Ceramic Sherds, Taisho University, Tokyo, 2002.P.269.
    3. Annual report of Indian epigraphy for 1926 – 27, Archaeological survey of india, New Delhi, 599, 601.
    4. V.Subrahmanya Aiyer, South Indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, Nos.405, 404, 1937, p.215.
    5. V.Subrahmanya Aiyer, South Indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, Nos.405, 404, 1937, p.215.
    6. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, No.403, 1937, pp.213 – 214.
    7. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, No.405, 1937, p.215.
    8. V.Srinivasa Rao, South indian inscriptions, Vol.23, Archaeological survey of india, New Delhi, Nos.396, 398, 1979, pp.296 – 298
    9. V.Subrahmanya Aiyer, South Indian inscriptions, Vol.8, Archaeological survey of India, New Delhi, No.396, 1937, p.209.
    10. V.Mahalingam, A Topographical list of Inscription in the Tamil Nadu and Kerala states, Vol.VI, Indian Council of Historical Research, New Delhi, 1978, P.410.
    11. மேலது, ப.411.
    12. மேலது, ப.224.
    13. பா.ஜெயக்குமார், தமிழகத் துறைமுகங்கள் (இடைக்காலம்), அன்பு வெளியீட்டகம், தஞ்சாவூர், 2001, பக்.83 – 107.
    14. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.403, 1937, p.214.
    15. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.405, 1937, p.215.
    16. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.403, 1937, p.214.
    17. South indian inscriptions, Vol.23, Archaeological survey of india, New Delhi, No.396, 1979, pp.296 – 297.
    18. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.405, 1937, p.215.
    19. V.Subrahmanya Aiyer, South indian inscriptions, Vol.8, Archaeological survey of india, New Delhi, No.442, 1937.

    =================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ஆசிரியர் கூற்றுப்படியே இராமநாதபுரம் அதிகமான ஆற்று வடிநிலம் கொண்ட பகுதிதான். கல்வெட்டுகளின் அடிப்படையில் இராமநாதபுரம் 13 -16 நூற்றாண்டுகளில், சிறப்பாக, பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் வணிக மையமாய்ச் செழித்திருந்ததைத் தகுந்த சான்றுகளை வைத்துக் காட்டியுள்ளார். ஆசிரியர் தமது கடின உழைப்பை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதுகாறும் அறியப்படாத அரிய வணிகச் செய்திகளை நூல் ஆதாரங்கள் மூலம் எடுத்துத் தந்துள்ளார். இதில் தரப்பட்டுள்ள தரவுகள், எதிர்கால இளம் ஆய்வாளர்களுக்குத் தக்க முறையில் திசை காட்டுவதாக அமைந்துள்ளன.

    =================================================

    Share
  • மண்ணாப்பேடி புலைப்பேடி ஒழிப்பு அரசாணை பற்றிய கல்வெட்டு

    -சேஷாத்ரி ஸ்ரீதரன்

    மேல் சாதிப் பெண் மீது கீழ்சாதி ஆடவன் (புலையன், வண்ணான்) இரவில் கல்லோ குச்சியோ எறிந்தால் அவளை சாதி விலக்கி அந்த ஆடவனுடன் குடும்பம் நடத்த அனுப்பி வைக்கும் ஒரு சமூக வழக்கும் தான் இந்த மண்ணாப்பேடி புலைப்பேடி என்ற வழக்கம். மண்ணாப்பேடி என்றால் வண்ணாரிடம் அச்சம், புலைப்பேடி என்றால் புலையரிடம் அச்சம். இந்த மண்ணாப்பேடி புலைப்பேடி ஒழிப்பு அரசாணை பற்றிய 106 வரி கல்வெட்டு குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் திருவிதாங்கோட்டில் உள்ள பத்மனாபபுரம் அருங்காட்சியகத்தில் உள்ளது. இந்த ஆணையை வேணாட்டு வேந்தர் வீரகேரளவர்மன் சிறைவாய் மூத்தவர் பிறப்பித்தார்.

    கல்வெட்டுப் பாடம்:

    கன்னி வியாழம் / நின்ற கொல்ல / ம் 800 70 1 (871) / தை மாதம் 20 7 (27) / சனியாட்செ / யும் சதயவும் / பூர்வ பக்கிஷத்து / பிறதி பதவும் சிங் / ஙங் கரணவும் பரி / கம நாமயோக / வும் இந்நாளா / ல் வீரகேரள வ / ற்ம சிறவாய் மூத்த / தம்பிரானார் கல்க் / குளத்து எழுந்த / ருளி  இருந்தருளி / கல்ப்பித்த படி / க்கு ரண்டு வக / மகாசனவும் கூ / டி கல்ப்பித்த மொ / ளியாவது தோ / வாளைக்கு மேக் / கு கண்ணாற்று / க்கு கிழக்கு கட / லினும் மலைக்கு / ம் அகத்து அகப் / பட்ட நாட்டில் பில / பேடியும் மண்ணா / ப் பேடியும் இல்லா / எந்த நம் தம்புரா / ன் திருவுள்ளம் / பற்றிக் கல் / ப்பிச்ச ப / டிக்கு ரண் / டு வக மாச / னங் கூடி / கல்ப்பிச்சு / கல்லு வெ / ட்டி நாட்டி / ய கல்ப்பினை / மறுத்து பி / லப்ப பேடியு / மண்ணாப் / பேடியும் உ / ண்டாம் கா / லத்து / மண்ணாப் / பேடியும் வகி / ற்றுப் பிள்ள / ஆதியா தோ / ண்டி வெ / ட்டுமாறு / ம் இந்த க / ல்ப்பினை மறு / த்து பிலப் / பேடியும் ம / ண்ணாப் / பேடி எந் / த வகை பொண்ணு/ ம் பிள்ளை / க்கு உண்டா / யால் / ப் பெண்ணு / ம் பிள்ள / குளிச்சு / கர ஏறிக் / கொண் / டால் தோ / ழமல்ல / எந்நும் க / ல்ப்பிச்ச / து. இ வண் / ணம் புல் / லும் பூமி / யும் கல்லு / ம் காவே / ரியும் ஒள் / ள காலத் / து நடக்கு / மாறும் க / ல்ப்பிச் / சது. திருவயத்து ம / ற்ற கண்டு வ / த்திக் கரிக்கு / ம்  திருவுள்ளம் ப / ற்றிக் கல்ப்பிச்சது./ திருவிதாங் / கோட்டு தெண்ட / ப்படை வீட்டில் / வடக்கு வாசலில் / கல்லு வெட்டி நாட் / டினது. இந்தக் / கல்லுக்கு யாதாமொ / ருத்தர் ஒரு கால / ம் யாதாம் ஒரு / வர் விக்கிநஞ் / செய்தார் அ / வர்கள் கெங்க / கரையில் காரா / ம் பசுவை கொ / ண்ட தோசத் / தில் போவா / ராகவும்.  

    சொற் பொருள்: கொல்லம் – கி.பி. 824-825 ல் தொடங்கிய ஒரு சேர ஆண்டுக் கணக்கு; வியாழம் – குருபார்வை ; சனியாழ்ச்சை – சனிக்கிழமை; பூர்வ பக்ஷம் – வளர்பிறை; எழுந்தருளி – வந்திருந்து; இருந்தருளி – தங்கியிருந்து; மகாசனம் – பொதுமக்கள்; கல்பித்த – வழிகாட்டிய, பிடிபாடு தந்த; மொழியாவது – உரையாவது, பேச்சு; கண்ணாறு – வாய்க்காலை ஒட்டி அமைந்த பாதை; எந்த – என்ற; தம்புரான் – வேந்தன், உயர்குடிமகன், noble man; கல்பினை – பிடிபாடு, வழிகாட்டுநெறி, guidelines; மறுத்து – மறுதலித்து, புறந்தள்ளி, reject; வகிற்று – வயிற்று; உண்டாம் – கருவுண்டாகும் சமயத்து; ஆதியா –   ; எந்நும் – என்றும்; ஒள்ள – உள்ள; திருவயம் – வயம் என்றால் நீர், குதிரை என்ப்பொருள். திரு என்ற சிறப்படையை ஒட்டி திருக்குளம் என்ற கொள்ளலாம்.; வத்திக் கரி – ; தெண்டப்படை வீடு – படைக்கொட்டில்; யாதாம் ஒருவம் – எவரேணும் ஒருவர்; கொண்ட – கொன்ற;

    விளக்கம்: கன்னி இராசியும் குருநோக்கும் நின்ற கொல்லம் ஆண்டு 871 (கி.பி.1695-1696) தை 27 ஆம் நாள் சனிக்கிழமை சதய நட்சித்திரம் கூடிய வளர்பிறையான இந்நாளில் வேணாட்டு வேந்தன் வீரகேரளன்வர்மன் சிறைவாய் மூத்தவர் கல்குளத்தில் வந்திருந்து தங்கியிருந்த காலப் பொழுதில் ஆணையிட்டபடி புலையர் வண்ணார் ஆகிய இரு சாதி பொதுமக்கள் கூடி இருக்க வழிகாட்டிநெறியால் சொன்னதாவது, தோவாளைக்கு மேற்கு வாய்க்காலுக்கு இப்பாலும் கிழக்கு கடலின் மலைக்கும் இடைப்பட்ட நாட்டில் புலைப்பேடி மண்ணாப்பேடி வழக்கம் இல்லாது ஒழிக என்று வேந்தன் முடிவு கொண்டு அதற்கு வழிகாட்டுநெறி வழங்கியபடி இரு வகை சாதிமாரும் கூடி பிடிபாட்டு வழிகாட்டுநெறியை ஏற்று அதைக் கல்லில் வெட்டி நாட்டிய உடன்பாடு. இந்த உடன்பாட்டு ஆணையைப் புறந்தள்ளிப் புலைப்பேடியும் மண்ணாப்பேடியும் ஏற்படும் காலத்தே மண்ணாப்பேடி வயிற்றுப் பிள்ளையை குழிதோண்டி வெட்டிக் கொல்ல வேண்டும். இந்த பிடிபாட்டை வழிகாட்டுநெறியைப் புறந்தள்ளிப் புலைப்பேடி, மண்ணாப்பேடி ஆகிய எந்த வகையால் பெண் கருவுற்றாலும் பெண்ணும் பிள்ளையும் தீட்டுகழியக் குளித்து கரை ஏறினால் எந்த தோஷமும் இல்லை குற்றமும் இல்லை என்றும் வழிகாட்டுநெறி தரப்படுகின்றது. இவ்வண்ணம் புல்லும் பூமியும் கல்லும் காவேரியும் நிலைக்கும் காலம் வரை இந்த பிடிபாடு செல்வதாகச் சொல்லப்பட்டது. இது திருவிதாங்கோட்டில் உள்ள படைக் கொட்டிலின் (armoury) வடக்கு வாசலில் கல்வெட்டி நாட்டப்பட்டது. இந்தக்  கல்லுக்கு எவரேனும் ஒருவர் கேடு செய்தால் அவர் கங்கைக்கரையில் காராம் பசுவைக் கொன்ற குற்றத்தை பாவத்தை அடைவராக என்று முடிக்கப்பட்டுள்ளது.  மேல் சாதி கீழ் சாதி கலப்பை சமூகத்தில் அறவே ஒழிக்கும் முயற்சி இது என்பது புலனாகின்றது. இது சரியான நடவடிக்கை என்றால் இதை ஏன் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தடைசெய்ய வேண்டும்? ஏன் முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே தடை செய்யவில்லை? என்ற கேள்வியும் இயல்பாகவே எழுகின்றது. அப்படியானால் புலையர், வண்ணார் போன்ற சாதிகள் 16 – 17 ஆம் நூற்றாண்டுகளிற் போல் இழிவாக, தாழ்வாக அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் எண்ணப் படவில்லை, நடத்தப்படவில்லை என்பதே காரணமாகலாம். காலத்தைச் சுற்றி வளைத்து சுருக்கியதில் தீண்டாமை 16 ஆம் நூற்றாண்டில் உருவாகி 17 ஆம் நூற்றாண்டில் வலுப்பெற்றது என்ற கருத்து தான் மேலெழுகின்றது. ஆனால் வெள்ளையர்கள் ஏதோ ஒரு மூலையில் கரையானுக்கு இரையாகிக் கொண்டிருந்த மனுதர்மத்தை அச்சில் எடுத்துப்போட்டு அது தான் இழிவுபடுத்தியது, தாழ்வுபடுத்தியது, ஒடுக்கியது என்று சொல்வதைக் கல்வெட்டுச் சான்றுகள் பொய்ப்பிக்கின்றன. ஒரு இடத்தில் நிகழ்ந்த சமூகக் கொடுமையை எல்லா இடங்களிலும் நிகழ்ந்ததாகக் காட்டுவது எத்தகு குற்றமோ அத்தகு குற்றம்தானே பிற்பட்ட நூற்றாண்டு சமூகக் கொடுமையை இன்னும் முற்றபட்ட நூற்றாண்டில் நடந்தேறியதாகக் காட்டித் திணிப்பதுவும், இதாவது 400 ஆண்டு கால நிகழ்ச்சியை 2,000 ஆண்டுகளாக இழித்து தாழ்த்தி ஒடுக்கப்பட்டதாகச் சொல்வதும்.

    கல்வெட்டில் சேரநாட்டு பேச்சு வழக்குத் தமிழ் ஆங்காங்கே தலைப்படுகின்றது.

    புலைப்பேடி மண்ணாப்பேடி பற்றி அறிய https://www.jeyamohan.in/20559#.XHtDP8Azbcc

    பார்வை நூல் கன்னியாகுமரி மாவட்டக் கல்வெட்டுகள், 2008 வெளியீடு, பக். 141-144. தமிழ்தாடு அரசுத் தொல்லியல் துறை, சென்னை – 8.

    Share
  • வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு

    சேசாத்திரி

    வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு

    தமிழ்நாட்டின் நடுநாடாம் பெரம்பலூர் வட்டம் அசூர் ஊரில் உள்ள அருள்மிகு சொக்கநாதசுவாமி கோவில் முன்மண்டபம் தெற்கு அதிட்டாணம் ஜகதி. 6 வரி கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ ஸகாப்தம்1350 இதன்மேல் செல்லா நின்ற சௌம்ய வருஷம் மார்கழி மாதம் 27 நாள் த்ரயோதஸியும் சனிக்கிழமையும் பெற்ற மூலத்து நாள் திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆன வன்னாட்டு வெண்பாற் நாட்டில் அசுகூரில் வலங்கை தொண்ணூற்று எட்டும் இடங்கை தொண்ணூற்று எட்டும்
    2. நிறைவற நிறைந்து குறைவறக் கூடி உடையார் சொக்கநாத நயினார் கோயிலில் திருக் கட்டளையில் கல்வெட்டினபடி இந்த நாட்டுக்கு பூறுவம் மற்ற மரியாதி பயிர்வழி கடமை இறுக்கும் இடத்து நன்செய்க்கு பாழ், சாவி கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு அன்பது பணமும் புன்செய் வரகு கேழ்வரகுக்கு பாழ் சாவி கழித்து பயிர் கூடின நிலத்திலே
    3. பத்தில்லொன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் இளவரிசை ஆன பல பயிருக்கும் இளவரிசைத் துண்டம் கால்வாசி கழித்து பயிர் கூடின நிலத்திலே பத்தில் ஒன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் வான்பயிர் ஆன செங்கழுநீர் கரும்பு கொழுந்துக்கு நூறு குழிக்கு
    4. அஞ்சு பணமும் வாழை மஞ்சள் இஞ்சிக்கு நூறு குழிக்கு இரண்டரைப் பணமும் கமுகு தென்ன மரத்துக்கு தலை கூடின முதலிலே மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் ஆட்டைக்  காணிக்கைக்கு இருநூற்று இருபது பொன்னும் மகமை தலையாரிக்கத்துக்கு எண்பது பொன்னும் பட்டடைக் குடிஆன செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வா
    5. ணியர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டரைப் பணமும் இடையர், வலையர், கண்மாளர் குடிமக்கள் பறையர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டு பணமும்  புன்பயிற் செய்தால் புனத்துக்கு  ஒரு பணமும்  இம்மரியாதி இம்முதல் குடுக்க கடவோமாகவும் இது ஒழித்து வேறு புறமுதல் புதுவரி என்று குடுக்க கடவோம் அல்லவாகவும்
    6. இப்படிக்கு இந்த கல்வெட்டுப்படி செய்யாமல் இருந்தோர்க்கு உடன்பட்டு கல்வெட்டை அழித்து செய்வார்கள் உண்டானால் அவர்களைத் தீர விளங்கி மேற்படக் குத்தி கீழ்ப்பட இழுத்துப்போடக் கடவோம் ஆகவும் இந்த கல்வெட்டை அழித்தவர்கள் கெங்கைக் கரையிலே கபிலையைப் கொன்ற பாபத்திலே போகக் கடவர்கள் ஆகவும் ஸுபமஸ்து.

    விளக்கம்:

    விஜயநகரம் இரண்டாம் தேவராயர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1428 இல் வெட்டிய கல்வெட்டு. திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆள வன்னாட்டு வெண்பாற் நாட்டில் உள்ள அசுகூரான அசூரில் உள்ள சொக்கநாத சுவாமி கோயிலில் கூடிய வலங்கை 98 சாதிகளும், இடங்கை 98 சாதிகளும் குறைவின்றி நிறைவே நிறைந்தவராய் தாம் அரசுக்கு செலுத்த வேண்டிய பயிர்க் கடமை(வரி), பல இனத்தார் செலுத்த வேண்டிய பல வரிகள் குறித்து இக் கல்வெட்டு கூறுகிறது.

    நன்செய் பயிரில் பாழும் உமி மட்டும் உள்ள சாவியைத் தவிர்த்து வளர்ந்த பயிரில் வேலி ஒன்றுக்கு ஐம்பது பணமும், வரகு கேழ்வரகு விளையும் புன்செய் பயிரில் வீணாகிய பாழ், உமி ஆகிய சாவி தவிர்த்து வளர்ந்த பயிரில் பத்தில் ஒன்று 1/10 கழித்து வேலி ஒன்றுக்கு 25 பணமும் இவற்றுக்குக் கீழான இளவரிசை துண்டில் 4 ல் 1 பங்கான கால்வாசி கழித்து, மேலும் 10 ல் 1 பகுதி கழித்து, வேலி ஒன்றுக்கு 25 பணமும் வானாவாரி பயிருக்கு 100 குழிக்கு 5 பணமும், வாழை மஞ்சள் இஞ்சி க்கு 100 குழிக்கு 2-1/2 பணமும், முதல் குருத்து விட்ட கமுகு, தென்னை மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் தரவேண்டும். ஆண்டு காணிக்கைக்கு 220 பொன்னும், மகமை என்னும் கோவில் வரி, தலையாரிக் காவல் வரிக்கு 80 பொன்னும் தரவேண்டும். பட்டடைக் குடிஆன செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர் ஒருவர்க்கு இரண்டரைப் பணமும் இடையர், வலையர், கண்மாளர், பறையர் ஒருவர்க்கு இரண்டு பணமும் புன்செய் பயிர் செய்தால் புனத்து 1 பணமும் தரவேண்டும். இவை தவிர்த்து வேறு எந்தப் புது வரியும் செலுத்த வேண்டாம்.

    இந்த ஏற்பாட்டிற்கு உடன்படாமல் கல்வெட்டை அழிப்பவர்களை நன்றாக வாட்டி வதைத்து, தலையில் குத்தி, கீழே இழுத்துப் போடுவோம் என்று எச்சரிக்கின்றனர். வலங்கை இடங்கையில் இடம்பெறாமல் இருப்பதால் தான் செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர், இடையர், வலையர், கண்மாளர், பறையர் என்போர் தனித்துக் காட்டப்பட்டார்களோ அல்லது இவர்கள் ஊழியத் தொழில் ஆற்றுவோர் என்பதால் இவர்கள் குறைவான வரி செலுத்தினால் போதும் என்று தனியே காட்டப்பட்டார்களா?

    மொத்தத்தில் இக்கல்வெட்டில் பறையர் பிற சாதிமாரோடு சரிநிகராக வைக்கப் படுவது, 15 ஆம் நூற்றாண்டில். இவர்கள் தாழ்த்தப்படவோ, ஒடுக்கப்படவோ இல்லை. தீண்டாமைக்கு ஆட்படவும் இல்லை எனத் தெரிகின்றது.

    பார்வை நூல்:

    தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி III பக்கம் 15, 2010, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு

    Share