(நகைச்சுவை எழுத்தாளர், கவிஞர், நடிகர் கிரேஸி மோகன் அவர்களின் மறைவுக்கு வல்லமையின் ஆழ்ந்த இரங்கல். வல்லமையில் அவர் எழுதிய பல்லாயிரம் வெண்பாக்களும் சந்தப் பாக்களும் அவர் புகழையும் ஆற்றலையும் உலகிற்கு முழங்கிக்கொண்டே இருக்கும். அவர் நினைவுகளால் வாழ்வார், நித்தியத்தில் தோய்வார். வாசகர்கள், சக எழுத்தாளர்கள், நண்பர்கள், கிரேஸி மோகன் குறித்த நினைவுகளை வல்லமையுடன் பகிருமாறு அழைக்கிறோம் (vallamaieditor@gmail.com) – அண்ணாகண்ணன்)
காவிரிமைந்தன்
வாழ்கின்ற வாழ்க்கையில் வருகின்ற கவலைகள்
வாய்விட்டுச் சிரித்தால்தான் போகும்!!
ஆறறிவு மானுடர்க்கும் ஐந்தறிவு ஜீவன்களுக்கும்
அடிப்படையில் வேற்றுமை அதுதானே சிரிப்பு!!
பரபரப்பாய் இயங்கிடும் பம்பர கதியிலுமே
பல்லைக் காட்டிச் சிரிக்கும்போதே நோயகலும்!
யாரிதற்கு வழிவகுப்பார்? யாரை இங்கே அணுகிடலாம்?
கிரேஸி இருக்க ஏது பயம் என்றதுவே உண்மைதானே!!
இயல்பான நகைச்சுவையை இனிதாக வழங்கவல்ல
இரட்டையரில் இவர் ஒருவர்! ஹாஸ்ய கர்த்தா!!
நாடக மேடைகளை நாடுதோறும் சென்று நடத்தி
நகைச்சுவைக்கு நாங்கள் என்றே பேரெடுத்தவர்!!
திரையுலக ஜாம்பவான்கள் சிலரும்கூட கூட்டணிவைத்து
வெளிப்படையாய் வெற்றிக்குக் காரணம் இவரென்றாரே!!
எவ்வயது கொண்டவரையும் சிரிக்க வைத்து
இடைவெளி இல்லாமல் வயிறு குலுங்க வைத்து
இவருக்கு இணைசொல்ல யாருமில்லை
இறக்கும்வரை சிரிப்பதற்கே மறக்கவில்லை!
சிரிப்புக்கு இவர்தானே சிரபுஞ்சி!
கிரெஸி என்றால் கொண்டாட்டம்!
மோகன் என்றால் குதூகலம்!
கூட்டுக் குடும்பத்திற்கு எடுத்துக்காட்டு!
வார்த்தைக்கு வார்த்தை விஞ்சிநிற்கும்
வளமான நகைச்சுவை இன்பம்! இன்பம்!
மேடை நாடகங்கள் காண்பதற்கு
கூடும் மக்களின் கூட்டம் சாட்சி!
சிரிப்பலைகள் ஒன்றையொன்று அடங்குமுன்னே
அடுத்ததாக எடுத்துவிடும் சாதுர்யமென்ன?
மண்ணுலகில் வந்ததவர் காரணம் முடிந்ததோ?
விண்ணுலகில் சிரிக்கவைக்கப் புறப்பட்டாயோ?
புன்னகையை ஒருசிறிதும் மறக்காமல் பிறருக்கும்
எந்நாளும் வழங்கிட்ட வள்ளல் கிரேஸி புகழ்வாழ்க!!
அன்புடன்
காவிரிமைந்தன்
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
சென்னை 600 075.
தன் மனதை இன்னொருத்தியிடம் என்றைக்குப் பறிகொடுத்து என்னுயிர் நீயென்று பறைசாற்றுகிறோமோ – அன்று முதல் ஆரம்பமாகிறது காதல் தேரோட்டம்! கணம் ஒன்று செல்வதைக் கூட மனம் கனமாக நினைக்கத் தோன்றும்! உளம் ஒன்று இப்படி இருந்ததாக நேற்றுவரை அறிந்திராதவன் இன்று முதல் அதையும் சேர்த்துச் சுமக்கத் துவங்குகிறான்! இயற்கை தந்த இந்த ஈர்ப்பு விசையில் இவன் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு அவளையும் சுற்றுகிறான் என்று சொல்லலாமா?
நேற்றுவரை எனக்கில்லை.. இதுபோன்ற ரணத்தொல்லை.. என்று கவிதைகளை கிறுக்கத் தொடங்கினால்.. அது காதலின் ஆரம்பம்! விழியின் வழியே தொடங்கி வீதியுலா வருகிறதே காதலெனும் உற்சவம்! உள்ளத்தில் உற்சாக கங்கை வழிய வழிய உலகமே பிரகாசமாய் காட்சியளிக்கும்! உணவின் கவளம் உள்ளிறங்க மறுக்கும்! உறக்கம் கூட உயிரைத் துரத்தும்! பருவம் படுத்தும் பாடென்று பட்டவர்கள் சொல்வதுண்டு!
ஆனாலும் இந்த அனுபவத்தை கடந்து செல்லத்தானே மனம் துடிக்கிறது! இந்த அவஸ்தையில் புரண்டு படுக்க எண்ணங்கள் வருகின்றன! சிறு துன்பமான இன்பமானது என்பாரே கவியரசர்.. அதுவா?
‘தேன் சிந்துதே வானம்’ என்கிற திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய வரிகளுக்கு இதமான இசை வி. குமார்! பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் பாடிய பருவராகமிது! உள்மனதைத் தொட்டுவிடும் உன்னத கானமிதற்கு திரையில் வடிவம் கொடுத்தவர் தமிழ்த் திரையுலக மார்கண்டேயர் சிவகுமார் ஆவார்!
பியானோ என்னும் இசைக் கருவியில் தருவிக்கப்பட்ட மெல்லிய ராகம் தன்னில் இழைந்தோடும் குரல் சேர அருமையான பாடல் அவளுக்காகவே அற்பணிக்கப்பட்டது எனலாம்
என்னைப் பொருத்தவரை.. இந்தப் பாடலையும் காதலித்தேன் என்பதே உண்மை!
வஞ்சி உன் வார்த்தையெல்லாம் சங்கீதம் வண்ணவிழி பார்வையெல்லாம் தெய்வீகம் பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில் இன்பங்கள் உருவாகக் காண்போம் குழலோசை குயிலோசையென்று மொழி பேசு அழகே நீ இன்று (உன்னிடம் மயங்குகிறேன்)
தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால் நான் சொல்லும் கானம் உண்டு ராகத்தினால் கார்காலக் குளிரும் மார்கழி் பனியும் கண்ணே உன் கை சேரத் தணியும் இரவென்ன பகலென்ன தழுவு இதழோரம் புது ராகம் எழுது (உன்னிடம் மயங்குகிறேன்)
“பூஜைக்கு வந்த மலர்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிது! பி.பி.ஸ்ரீநிவாஸ்- பி.சுசீலா குரல்கள் இழைந்து தரும் விருந்து! இதயமலர்கள் இரண்டு இணைந்து திரையில் தோன்ற இசையின் கோலம் புல்லாங்குழலில் புறப்பட்டு வருகிறது.
ஆண்மையும் பெண்மையும் சந்திக்கும் அந்தப்புரமென்றும், தனிமையில் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகும் சொந்தப்புரமென்றும், மல்லிகை மலரணை பூத்திரி, ராத்திரி என்கிற வார்த்தைகள் சரளமாய் வந்துபோகுமென்றும், பருவம் சுமந்துவந்த கனவுகளெல்லாம் நனவாய் மாறும் இரவென்றும் பல்வேறு வடிவங்கள் தாங்கிநிற்கும் முதலிரவு காட்சிதான்!
அன்பின் அரவணைப்பு, ஆசைகளின் மொழிபெயர்ப்பு, பெண்மையின் மௌனகீதம்… கண்களில் காந்தம்… இன்னுமென்ன வேண்டும் இதைப் பற்றி பாடல் தீட்ட… அழகியல்.. . அகவியல் இரண்டையும் கலந்திங்கே அமுதமாய் பொழிகிறது கவிஞர் வாலியின் தேன்மழை!
‘பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்’ எந்த விருந்திலும் பரிமாறுபவர் பசியாருவதில்லை! அதுவும் பரிமாறும் நேரத்தில்! ஆனால் களவியலில் மட்டும்தான் இந்தக் கதை ரகசிய ஓலையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. நான் தந்து நீ பெறவும், நீ தந்து நான் பெறவும் பசியாறுதல் நடக்கிறது. இதைப்பற்றி எழுதப்பட்ட பல்லாயிரம் பாடல்களிலும் இல்லாத வார்த்தைப் பிரயோகம்… கவிஞர் வாலியை பாராட்ட வார்த்தைகளைத் தேட வைக்கிறது! ஒற்றை வரியில் சொன்னால் வாலியால் வரையப்பட்ட பூஜைக்கு வந்த மலரிலிருந்து சொட்டும் தேன்! திருமதி P சுசீலா அவர்கள் P B ஸ்ரீனிவாஸுடன் பாடும் பாடல்.
……………………………………………………………………………
படம்: பூஜைக்கு வந்த மலர் (1965)
பாடல்: வாலி
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
குரல்: P சுசீலா, P B ஸ்ரீனிவாஸ்
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: முக்தா S ஸ்ரீனிவாசன்
……………………………………………………………………………
மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட
நான் ஆடுவேன்…
குழல் தந்த இசையாக
இசை தந்த குயிலாக
குயில் தந்த குரலாக
நான் பாடுவேன்…
(கண் மையேந்தும் விழியாட)
உறவென்னும் விளக்காக
உயிர் என்னும் சுடராக
ஒளிவீசும் உனக்காக
நான் வாழுவேன்…
விரல் கொஞ்சும் யாழாக
யாழ் கொஞ்சும் இசையாக
இசை கொஞ்சும் மனமாக
நான் மாறுவேன்…
(கை விரல் கொஞ்சும் யாழாக)
இளங்காதல் வயதாலே தனியாகினேன்..
அந்த இளவேனில் நிலவாலே கனியாகினேன்….
இமை மூடி தூங்காமல் போராடினேன்…
உந்தன் இதழோடு இதழ் வைத்து சீராகினேன்…
(கண் மையேந்தும் விழியாட)
கொடிபோன்ற இடையாட களைப்பாகினேன்…
உன் மடிமீது தலை சாய்த்து இளைப்பாறினேன்…
அழகென்ற விருந்தொன்று பரிமாறினேன்..
அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்…
இசையின் மொழியை முற்றிலும் அறிந்த குயில் எம்.எஸ். சுப்புலஷ்மி …
மீரா திரைப்படத்தில் வரும் இந்த கானம் காற்றினிலே வரும் கீதம்…
இயற்றியிருக்கிறார் கல்கி கிருஷ்ணமூர்த்தி.. எத்தனையோ பாடல்கள் நம் காதில் விழுந்தாலும் எத்தனையோ கானங்கள் நம் நெஞ்சம் நுழைந்தாலும் … இந்த கானம் தருகிற அமைதியும் ஆனந்தமும் அலாதியானது.
எந்த அலம்பலும் இல்லாமல் அன்பின் மொழியாக … நந்தவனத்திற்குள் வருகின்ற தென்றல் போலே கேட்போரை நிம்மதியின் சன்னதிக்கு அழைத்துசெல்கிறார்.
கண்ணனை எண்ணி மனம் உருகி.. உச்சநிலையில் உள்ளம் தொடுகிற பணியை இந்தப் பாடல் எந்த ஆர்பாட்டமுமின்றி செய்துவிடுகிறது.
கர்நாடக சங்கீதத்தில் முதல் நிலையில் விளங்கிய இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி பாடிய ஒரு சில திரைப்பாடல்களில் இதுவும் ஒன்று.
எஸ். வி. வெங்கட்ராமன் அவர்களின் இசையில் இழைந்தோடிவரும் இன்ப கானம்!
மனம் ஒருமிக்க இந்தப் பாடலில் மயங்கலாம்…
இறை அருள் பெற்ற இசையரசியின் குரல் கேட்டு இன்புறலாம் …
……………………………………………………..
படம்: மீரா (1945)
பாடல்: கல்கி கிருஷ்ணமூர்த்தி
இசை: எஸ். வி. வெங்கட்ராமன்
குரல்: எம்.எஸ். சுப்புலஷ்மி
……………………………………………………..
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே…
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
மனங் குவிந்திடவும்
வானவெளிதனில் தாரா கணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ.. என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
காற்றினிலே வரும் கீதம்..
காற்றினிலே வரும் கீதம்..
காற்றினிலே..
சந்தக் கவிதை அருணகிரியாருக்கு வந்தகவியாவும் வழங்கியவன் கந்தநாதன்! சிந்தையில் நிறைந்தபடி கந்தனை நினைத்தாலே முத்தமிழால் உள்ளம் துள்ளும்! எத்தனைப் பாடல்கள் எழுதினாலும் இன்பத்தேன் சிந்திடும்! அத் தமிழ்க் கடவுள் அவனாலே கற்பனை வளங்கள் பெருகும்! சக்தியின் மைந்தன்.. கருணையில் வள்ளல்! சிவகுருபாலன்!.. நமைக் காக்கும் தெய்வம்!
மலையரசி தாயால் மகிமை பெற்ற நம் கண்ணதாசன் – உள்ளம் உருகியே இயற்றிய பலத் திரைப்பாடல்கள் பக்திக்கு பல்லக்குத் தூக்கும்! உருகாதோர் உள்ளமிங்கே ஒன்றிரண்டும் கிடையாது என்றே சொல்லும்! கந்தன் கருணை முதல் திருவருள் முதலாக தமிழ்த் ‘தெய்வம்’ பற்றிய அவனது படைப்புகள் என்றைக்கும் நிலைத்திருக்கும்!
‘நீலகிரி எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்திற்கா கவியரசு கண்ணதாசன் இயற்றிய பைந்தமிழ்ப் பாசுரம்.. கர்நாடக இசையிலும் வில்லிசைதன்னிலும் தேர்ச்சி பெற்று திரைக்கு இசையமைக்க முன்வந்த மெல்லிசை மன்னர் டி.கே.ராமமூர்த்தி அவர்களின் தூய இசைக் கோர்வையில் முருகக்கடவுள் புகழ்பாடவே இப்பூமிக்கு வந்து அவதரித்த சூலமங்கலம் சூலமங்கலம் ராஜலட்சுமி – பி.சுசீலாவுடன் இணைந்து வழங்கிய குரல்களில் தெய்வீக மணம் கமழும் தெள்ளமுதம் இதோ..
தென் பரங்குன்றம் செந்தூர் மன்றம்
செந்தமிழ்ச் சங்கம் திருநாள் எங்கும்
வடிவேல் சேவை நினைந்தாள் பாவை
காணும் – கண்ணில் எங்கும் – கண்டாள் உந்தன் தேவை
(திருத்தணி)
கந்த வேலை எந்த வேலும்
வெல்லுவதில்லை!
உந்தன் பேரை அன்றி வேறு
சொல்லுவதில்லை!
உன்னை எண்ணும் உள்ளம் ஏதும்
கொள்ளுவதில்லை!
இன்று நாளை என்றும் துன்பம்
அண்டுவதில்லை!
திருமுருகன் அழகினில் மயங்காதவர் யார்? அழகுக்கு மறுபெயரே முருகன்தானே! அன்னவர்தம் சரண்புகுந்தார் எனும்போது அவன்மீது ஆசைவைத்து நாயகி பாடுகின்றாள் ஒரு பாடல்! ‘பஞ்சவர்ணக்கிளி’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாட்டு! கவிஞர் வாலி அவர்கள் வரைந்திருக்கும் ஓவியமாய், சுகமான சொற்களிலே சொக்க வைக்கிறார்! பி.சுசீலா குரலிலே தேன்மழை பொழிகிறார்! மெல்லிசை மன்னர்கள் இசையமைத்திட இனிதாய் ஒரு பாடல் அரங்கேறுகிறது! நம் மனதில் இன்றும் அக் காட்சி நினைவோடு நிற்கிறது!
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன் அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன் ஆ…
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே ஆ..
பனி பெய்யும் மாலையிலே பழமுதிர்ச் சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே கன்னி மனம் கொய்து விட்டான்
பன்னிரண்டு கண்ணழகை பார்த்திருந்த பெண்ணழகை
வள்ளல்தான் ஆள வந்தான் பெண்மையை வாழ வைத்தான்
பெண்மையை வாழ வைத்தான் ஆ…
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
மலை மேல் இருப்பவனோ மயில் மேல் வருபவனோ
மெய்யுருகிப் பாட வந்தால் தன்னைத் தான் தருபவனோ
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
அலை மேல் துரும்பானேன் அனல் மேல் மெழுகானேன்
ஐயன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ…
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
அண்ணல் உறவுக்கென்றே உடலெடுத்தேன்
அவன், அருளைப்பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
வார்த்தைகள் வரம்கேட்டு வந்து விழுந்தனவோ? கவிஞர் வாலி கரம்பட்டு கண்கள் மயங்கினவோ? சுகமான பாடல்கள் பல.. பி.சுசீலா பாடியிருந்தாலும் அவற்றுள் முன்னணியில் ‘அழகன் முருகனிடம் ஆசைவைத்தேன்’ பாடல்! கேட்பது சுகம்! கேட்டு ரசிப்பது சுகம்!! என்று சுகத்தின் பன்முகங்கள் இதோ ஒரு பாடலிலே.. அழகியலின் பதிவு எனில் அழையுங்கள் கவிஞர் வாலி அவர்களை! இறைவனையும் கலந்தபடி இனிதாய் எழுதித்தந்திடுவார்.. அழகனைப் பற்றி அவள் பாடும் பாடலிது! இது முருகனை அழைக்கும் முத்திரைப் பாடல்!!
கவியரசரது சிந்தனையில் பிறந்துவந்த கற்பனையில்
கொடிகட்டிப் பறக்கும் இனிய பாடல்கள் எத்தனையோ?
கவிதை நயம், கற்பனை வளம், சொல்லாட்சி, பொருள்நயம் என
பட்டியலிட்டால் பல காத தூரம் நீளும்!!
காதலா.. தத்துவமா.. பக்தியா.. பாசமா.. மனித
உணர்வுகளை வார்த்தைகளால் மீட்டித்தந்த
கலைமகள் வீணை கண்ணதாசன்!
ஏகாந்தமாய்.. எழுத்துக்களாய்.. எண்ணமின்னலாய்
வந்தவையும் இங்கே வரவில் உண்டு!
எண்ணற்ற கவிஞர்பெருமக்கள் நம் தமிழை எடுத்து ஆண்டாலும்
என்றைக்கும் நம் நெஞ்சில் கவிஞர் என்றால் ‘கண்ணதாசன்’
பண்டிதர்மட்டுமே பயின்றிருந்த பைந்தமிழை – இங்கே
பாமரனும் முணுமுணுக்க வைத்தவர் கண்ணதாசன்!
உறவுக்கும் பிரிவுக்கும் உயிர்கொடுக்கும் வார்த்தைகளை – நம்
உள்ளங்களில் பதியவைத்தவர் கண்ணதாசன்!
அனுபவப் பிழிவுகளின் சாரங்களாம் தத்துவங்கள்!
அணிவகுத்துப் பாடல்களில் கொடுத்தவர் கண்ணதாசன்!
மானிட வாழ்வியலை மணி மணியாய் வகுத்து – அதில்
மறைந்திருக்கும் உண்மைகளை தத்துவமாய் கொடுத்து
மாபெரும் கவியரசராய் உயர்ந்தவர் கண்ணதாசன்!
“மணி கொண்ட சரம் ஒன்று கனல் கொண்டு வெடிக்கும்” –
– இராமாயணத்தில் சீதையின் நிலையை (சுயவரம் நடக்கின்ற போது) எடுத்து சொல்லும் விதம் – ராமன் மேல் கொண்ட காதலினால் – அவன் வில்லை வளைப்பானா என்ற கவலை கொண்டு சோகமே உருவாகி இருந்த சீதையின் நிலையை கண்ணதாசன் தனது பாடலில் – கவலை, சோகம், துயரம் கொண்ட சீதையின் கொதிக்கின்ற மூச்சினால் எழுந்த வெப்பக் காற்றினால் அவளது கழுத்தின் மணி மாலை கருகி வீழ்கின்றது – இதை “மணி கொண்ட சரம் ஒன்று கனல் கொண்டு வெடிக்கும்” போன்ற வரிகளால் நிறைத்த கர்ணன் திரைப்பாடல்கள் காலத்தை வென்று இன்றம் கண்ணதாசன் பெயர் சொல்லித் திகழ்கின்றன.
சொல்லுக்குள்ளே சூத்திரங்கள் இத்தனை இத்தனையா
எண்ணியெண்ணிப் பார்க்கும்போது எத்தனை வியப்பு!
ஒற்றைவரியெழுத உனக்குள் ஓராயிரம் எண்ண அலைகள்!
முத்துக்குளித்தன்றோ முகிழ்த்துவரும் உன் பாடல்!
தத்துவம் எதுவென்று எவரும் கேட்டால்
தவறாமல் உன் ஒற்றைப் பாடல் போதுமென்பேன்!
சென்ற திங்கள் முதல் ஞாயிறு வரையிலான காலகட்டத்தில் தம் ஆற்றலைச் சிறப்புற வெளிப்படுத்தி வல்லமை இதழின் அன்பர்கள் குழுவின் கவனத்தைக் கவர்ந்ததன் காரணமாகத் தேர்வு செய்யப்பட்டவர்
இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு பெனோ செபீன் அவர்கள்
இவ்வார வல்லமையாளர் விருதிற்காக ஐவரிடம் (விருது அறிவிப்பாளராகிய என்னையும் சேர்த்து) இருந்து ஐந்து சாதனையாளர்களின் பெயர் முகநூல், மின்னஞ்சல்கள் வழியாகப் பரிந்துரைக்கப்பட்டது. அந்த சாதனையாளர்களில், வல்லமை இதழின் வாசகர் திரு. ரவி சுப்பிரமணியன் அவர்கள் பரிந்துரைத்தவர்களில் ஒருவரான ‘பெனோ செபீன்’(Beno Zephine) அவர்களை இவ்வார வல்லமையாளராகத் தேர்வு செய்து அறிவிப்பதில் வல்லமை குழுவினர் மழ்கிழ்சி அடைகிறோம்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) நடத்திய 2013 ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வில், அகில இந்திய அளவில் 1,122 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 109 பேர். இவர்களில் சென்னையை சேர்ந்த, பிறவிலேயே பார்வையற்ற மாற்றுத்திறனாளியான பெனோ செபீனும் ஒருவர். ஐ.ஏ.எஸ். படிக்க வேண்டும் அதன்மூலம் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வுடன் படித்து, தேர்வில் வெற்றி பெற்று (343 வது இடம்) சாதனை படைத்துள்ளார்.
ரயில்வேயில் ஊழியராகப் பணியாற்றி வரும் இவரது தந்தை சார்லஸ் மற்றும் இல்லத்தரசியான தாய் மேரிபத்மஜா ஆகியோரின் மகளான 24 வயது பெனோ நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்தவர். விழியற்றோருக்கான லிட்டில் பிளவர் கான்வென்ட்டில் பள்ளிப்படிப்பையும், ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரியில் பி.ஏ.(ஆங்கில இலக்கியம்), லயோலா கல்லூரியில் எம்.ஏ படித்தவர். ஸ்மார்ட் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமியில் வார இறுதி ஐஏஎஸ் பயிற்சி வகுப்பில் படித்தவர். தகுதிநிர்ணயநிலையில் தற்போது இவர் திருவள்ளூரில் ஸ்டேட் வங்கியில் பணிபுரிந்து கொண்டே பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பிஎச்டியும் படித்து வருகிறார்.
இவரது சிறப்புத் தேவைகளை கருதி இவருக்கான பாடத்திட்டங்களை சிடியாக தயாரித்து பயிற்சி நிறுவனம் வழங்க, அதை பெனோ பிரெய்லி முறையில் மாற்றிப் படித்துள்ளார். இவருக்கு கல்லூரியில் வகுப்பு இருக்கும் நாட்களில் இவரது தந்தை பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பாடங்களை ஒலிப்பதிவு செய்து எடுத்துச் செல்வாராம். அதை கேட்டு பெனோவும் பயிற்சி பெற்றிருக்கிறார். சிறு வயதிலிருந்தே இவரது முன்னேற்றத்தை முதல் கடமையாகக் கொண்ட பெற்றோர்கள் தொடர்ந்து இவருக்காகப் பாடங்களையும், செய்தித்தாள்களையும் படித்துக் காட்டி உதவி செய்திருக்கிறார்கள்.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு ஒப்பாக பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் பற்பல போட்டிகளில், குறிப்பாக பேச்சுப் போட்டிகளில் பரிசு பெற்றவர் பெனோ. இவரது துடிப்பான ஆற்றல், இவரது பள்ளி நாட்களில் அவரது பள்ளிக்கு வருகை தந்த அந்நாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைக் கவர்ந்திருகிறது. துணை முதல்வர் ஸ்டாலினிடம் தனது பிறந்தநாள் பற்றி கூற அவரும் பெனோவின் இல்லத்திற்கு தவறாது வந்து பிறந்தநாள் கேக் ஊட்டி வாழ்த்தும் தெரிவித்திருக்கிறார்.
மாநில அளவில் முதல் மதிப்பெண்கள் பெரும் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கும் பொழுது, மாற்றுத் திறனாளிகளில், விழியிழந்தோரில் முதலிடம் பெறுபவர்களுக்கு ஏன் மாநில அளவில் பாராட்டுகள் வழங்கப்படுவதில்லை என்ற கேள்வியை எழுப்பி, அந்நாள் முதல்வர் கருணாநிதியிடம் பெனோ கோரிக்கையை வைக்க, முதல்வரும் கோரிக்கையை ஏற்று பரிசீலனை செய்து அரசாணையும் பிறப்பித்துள்ளார். பொதுவாழ்விலும், சேவையிலும், தலைமைப் பண்பிலும் இதுபோன்ற இவரது தொடக்கமே வியப்பூட்டுவதாக அமைந்திருக்கிறது.
இவரது கல்லூரி நாட்களில், 2008 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் நடைபெற்ற உலக இளம் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள பெனோவிற்கு அழைப்பு வந்தபோது, தனது குடும்பத்தினரால் தன்னை அமெரிக்காவுக்கு அனுப்ப முடியாது என்பதை உணர்ந்த பெனோ, மு.க.ஸ்டாலின் அவர்களை அணுகி தனது கோரிக்கையை வைத்துள்ளார். துணை முதலவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களும் அரசு சார்பில் ரூபாய் ஐந்து லட்சம் வழங்கி அமெரிக்காவுக்கு இவரை அனுப்ப உதவியதுடன், அவரது நண்பர் இல்லத்திலேயே பெனோவைத் தங்க வைத்து, பெனோவிற்குத் தேவையான உதவிகளை வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளார். பெனோவின் உரை மாநாட்டில் அனைவரையும் கவருமாறு அமைய பெனோ நல்ல பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
இதனை அவரே விவரிப்பதை இந்தக் காணொளியில் காணலாம்: -http://youtu.be/aGq9d9q2YBs
சிறுவயதில் இருந்தே, மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும் என்ற கொள்கை கொண்ட பெனோ,
“எது இல்லையோ அதை நினைத்து வருத்தப்படுவதை விட எது இருக்கிறதோ அதை நினைத்து சந்தோஷப்பட்டால் வாழ்க்கையில் முன்னேறலாம்”
என்று நமக்கு அறிவுரையும் கூறுகிறார்.
வல்லமையாளரை பா எழுதி பாராட்டுகிறார் கவிஞர் காவிரி மைந்தன்
முழுமை பெற்ற மாந்தரிலே மூடர் பலர் இருக்கையிலே… புலன்குறைவாயிருந்தாலும் புரட்சிதான் புரிகிறாரே… இதை இவரால் செய்துவிட முடியுமா என்னும் கேள்விக்கு கதை முடித்து முதல் நபராய் வெற்றி பெற்று திகழ்கிறாரே!!
தனது பிறவிக்குறையை ஒரு குறை என்று எண்ணி துவண்டுவிடாமல் சாதனை புரிந்து, அனைவருக்கும் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்வது என்று வாழ்ந்து காட்டிவரும் இளம்பெண்மணி பெனோ செபீன் அவர்களுக்கு இந்த வாரத்தின் வல்லமையாளர் விருது வழங்குவதில் வல்லமை இதழ் அன்பர்கள் பெருமை கொள்கிறோம்.
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]
படம், தகவல்கள் செய்தித்தாள்கள் மற்றும் இணையத்திலிருந்து.