Tag: சங்கர் சுப்ரமணியன்

  • நேர்மையின் வலி!

    சங்கர் சுப்ரமணியன்

    அப்பாவின் கைப்பிடித்துக்                                    Pandavas
    காலார நடக்கையிலே
    சொல்லி வந்திடுவார்
    அர்ச்சுனனின் உண்மையும்
    தர்மனின் நேர்மையும்
    அவர்களடைந்த மேன்மையும்
    எனக்கும் பசுமரத்தில் அடித்த
    ஆணிபோல் நெஞ்சத்தில் பதிந்து போனது!

    சிவப்பு விளக்கு எரிகையிலே
    முன்னம் செல்ல, அலுவலகங்கள்
    வேலைமுடிக்க பணம் கொடுக்க,
    வரிசையில் நில்லாமல் இடை சொருக,
    முன் நிற்பவனின் இடம் பெற,
    மனம் பொருந்தா வேலை செய்ய…
    பின்னமிருந்து சமூகம் என்னை
    முன்னம் தள்ளப்பார்க்கும்!

    இப்படியாகச் செய்யாவிடின்
    இல்லாத காரணம் சொல்லி
    என்னைப் பின்னம் தள்ளும்!
    இவன் கனவுகளில் நிஜம்
    இழக்கும் பைத்தியக்காரன் என்ற
    முத்திரையுடன் எள்ளி நகைக்கும்!

    எதுவரினும், என் முகம் சிதைந்திடினும்
    நேர்மையின் வலி என்
    இதயமெல்லாம்  ஆறாத ரணங்களாய்
    நிறைந்திடினும், நான் நிறம்
    இழந்திடேன்! ஏனெனில் கழட்டி
    மாட்டும் சட்டையல்ல என் நேர்மை!
    உறையும்வரை உடன்வரும் என் உதிரம்!

    Share
  • நான் சாட்சியாய்!

    -சங்கர் சுப்ரமணியன்

    அவள் கிடத்தப்பட்டிருந்தாள் வீட்டு முற்றத்தில்
    பதற்றமும் கண்ணீரும் கவலையும்
    சோகமும் சொல்லவொண்ணாத் துயரமுமாக
    தனித்து நின்றிருந்தேன் நான் தவித்தபடி!

    எதுவோ நடந்திருக்கிறது என்பதற்குச் சாட்சியாக
    நான் இருப்பதாகவே பொய்யான காரணங்களை
    உயிர்ப்பித்துச் சந்தேகப் பார்வையில் என்னை
    மேய்ந்தது சுற்றியிருந்த ஊர்ஜனம்!

    சமமாகப் பிரித்து கலைத்துவிட்ட விதியின்
    இந்த கோர விளையாட்டைக் கண்டு திகைத்து
    மீளாத துயரத்தில் தாங்கவே முடியாமல்
    கனத்து வலித்தது என் நெஞ்சம்!

    எல்லாக் காரணங்களையும் ஒவ்வொன்றாக
    மனத்தில் திரையிட்டு உண்மையில்லை
    என்பதாக அழித்துக்கொண்டிருக்கும் காரணங்களை
    மறுதலிக்கும் என் மனம்!

    என்ன காரணமென்று எழுந்துவந்து என்
    காதிலாவது  சொல்லிப்போயேன்
    சந்தோஷமாய் நாம் வாழ்ந்ததற்கு அதுவாவது
    ஒரு சாட்சியாய் இருந்து போகட்டுமே!

     

    Share
  • வான்மதி

    — சங்கர் சுப்ரமணியன்

    young-romantic-indian-couple“நன்கு யோசித்து சொல் வான்மதி… இது நம்முடைய கடைசி சந்திப்பாக கூட இருக்கலாம். உன்னுடைய பக்கமிருப்பு என்னுள் கிளர்ந்தெழ செய்யும் உணர்வுகளையெல்லாம் என் வாழ்நாளில் உணரவே முடியாமல் போய் விடுமோ என்றேதான் நான் கவலை கொள்கிறேன். அண்ணன், அம்மா, அப்பா இப்படியான உறவுகளிலிருந்து நீ எப்படி… விடுபட்டு வெளிவந்து விடுவாய் என்று கவலைகொள்கிறாய் . உன் கவலையும் எண்ணமும் எனக்கு அர்த்தமற்றதாகத்தான் தோன்றுகிறது . முதலில் உன்னை புரிந்து கொள். உனக்கே நீ செய்வது சரியென்று தோன்றுகிறதா ..நம்முடைய பழக்கமெல்லாம் பொய்யாகித்தான் போகணுமா… நன்றாக யோசித்துகொள். மறுமுறை எடுத்து கூற நான் உன் பக்கமில்லாமல் போகலாம்…”

    கவலையும் கோபமும் கலந்து அவன் நிற்க . அவள் வார்த்தைகளற்று எதிர் நின்றாள். அவள் வீடும் இவனுமென அவளுடைய மனம் முடிவெடுக்க முடியாமல் தவித்தது. யார் பேச்சு நியாயம் என்பதை எப்படி யோசித்தாலும் அவிழ்க்க முடியாத முடிச்சாக இறுகிக் கொண்டே போனது அவளுக்கள். சார்புதன்மை கொண்ட பெண்னினமே இப்படித்தானோ எனறு அவள் இனம் மேலே வெறுப்பாக உணர்ந்தாள். யாரையும் கஷ்டப்படுத்தாமல் எந்த முடிவும் இல்லையோ. கடவுள் எதற்காக எதிர்மறையான சந்தர்ப்பங்களை வைத்து வாழ்க்கையை சோதிக்கிறான் என்பது புரியாத புதிராகத்தான் உள்ளதாகவே அவளுக்கு தோன்றியது. இலேசான தலையசைப்பும் முகச்சுழிப்புமாக அவன் எழுந்து நடந்தான் . சுற்றியிருந்த வயல்வெளிக்கு நடுவில் அமந்திருந்த அந்த அழகு குன்றின் மேற்புறம் வளர்ந்திருந்த அந்த வேப்ப மரத்தின் நிழலில் இருவர் மட்டும் தனித்திருந்தனர்.

    “ஒவ்வொருமுறை பிரச்சனைகள் வரும்பொழுதெல்லாம் உன்னை உன் மனதிற்குள் முடிக்கொள்ளவே முயலுகிறாய். நானொருவன் உனக்காக எதுவும் செய்ய காத்திருக்கிறேன் என்ற உணர்வு ஏன் உனக்கு வராமலே போகிறது வான்மதி. இதுவரை நடந்துமுடிந்த அத்தனை பிரச்சனைகளும் நான் உன்னை மீட்டு வரும் எல்லைக்குள் இருந்தது. ஆனால் நீ இப்பொழுது எடுக்கும் இந்த முடிவு என்னையே எல்லை கடந்து தூரதள்ளிவிடும். சரியான சிந்தனைகளில் நாம் தீர்மானிக்கும் கணங்களே நம்முடைய வாழ்க்கையின் முன்னிருந்து நம்மை வாழ்தலுக்கு அழைத்து செல்வதாகத்தான் நான் நம்புகிறேன். உறவுகள் எப்பொழுதுமே நம்மை முழுமையாக வெறுத்து தள்ளுவதில்லை. காலம் முன்னிருந்து காயங்களை ஆற்றி சேர்த்து வைத்துவிடும். நாம்தான் அவர்களுக்கான தியாகம் என்பதான கற்பனையான எண்ணத்தில் சுயம் இழக்கிறோம்”

    அவளுடைய இழப்பு என்பது மீட்டெடுக்க முடியாத மரணம் என்பதாகத்தான் அவன் உணர்ந்தான். அவன் மனம் சமாதானப்படுத்த ஆயிரம்ஆயிரமாக வார்த்தைகளை கோர்த்து காத்திருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் இவள் இல்லையென்றானால் இனி இல்லவே இல்லை என்பதை எண்ணும் பொழுதே இதயம் நடுங்கியது. ஆனால் அவளோ தடுக்க முடியாத உள்ளக்குமுறலில் உடைந்து அழுதாள் . அவளால் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் கரைபுரண்டு வெளியேறிக்கொண்டிருந்தது.

    “வான்மதி உன்னை அழவைக்க வேண்டும் என்பதற்காக நான் பேசவில்லை . உன்னை நன்கு உணர்ந்ததாலே பேசுகிறேன். முடிவுகளை உன் குடும்பத்திற்கென்று எடுக்காதே. அவர்களை சமாதானப்படுத்தும் சந்தர்ப்பங்களை நாம் உருவாக்கி கொள்ளலாம். ஆனால் சந்தரப்பங்களை இழந்தபின் வருத்தத்தில் வாழ்க்கை கஷ்டப்படும். நாளை நான் ஊருக்கு கிளம்புகிறேன் ஒனறிரண்டு மாதங்கள்தான் நான் இந்தியாவிலே இருக்கும் நிலை ஏற்படலாம். ஆகையால் கடைசியாக நான் நாளை ஊருக்கு செல்லும் பேருந்தில் உனக்கும் என் பக்கத்து இருக்கையை எடுத்திருப்பேன். நன்றாக யோசித்து முடிவெடு வான்மதி . உன் முடிவு எதுவென்றாலும் எனக்கு பூரண சம்மதமே. என்னை கஷ்டப்படுத்துவதாக நினைத்து உன்னை வருத்தி கொள்ளாதே. நம் வாழ்க்கை பயணங்கள் யாருக்காகவும் காத்திருப்பதில்லை.” என்றபடி பக்கமாக அமர்ந்து அவள் கைகளை தன் கைகளுக்குள் வைத்து இறுக்கி பிடித்து கொண்டான். இப்படியான இருப்போடு காலம் கடந்து வாழ்ககை இங்கேயே முடிந்து விடாதா என்ற ஏக்கமே அவள் நெஞ்சில் நிறைந்தது.

    “ஏய் வன்மதி எப்படி இருக்கேடி” குரல் கேட்டு திரும்பி பார்க்க தோழி நின்றிருந்தாள்

    “என்னடி இவ்வளவு லேட்டா வர்ற . ஊர்விட்டு போய்விட்டா பழகியதெல்லாம் மறந்திருவியோ” புன்னகையுடனும் பார்த்த சநதோஷமாகவும் ஒடிச்சென்று தோழியின் கை படித்து உரிமையுடன் வான்மதி கேட்டாள்

    “கொஞ்சம் லேட்டாயிருச்சுடி. அதுக்கே இப்படியா… எங்க யாரையும் கானோம். உன்னோட வீட்டுக்காரரும் இல்ல” என்றபடி புன்னகையுடன் தோழி அவள் பக்கமாக வந்தாள். “அப்பா எல்லாரையும் அழைச்சுட்டு டவுனுக்கு போயிருக்கார். நான்தான் இன்னைக்கு ஊரச் சுத்திட்டு நாளைக்கு சேர்ந்துகிறேன்னு சொன்னேன். அப்பா சிரிச்சுக்கிட்டே உன்னை வரச்சொல்லட்டான்னு கேட்டாரு. அதுக்குதான் நான் போகறத தள்ளிபோடுறேன்னு அவருக்கு புரிஞ்சிரிச்சுன்னு தெரிஞ்சு நானும் சிரிச்சுட்டேன்” என்றாள் புன்னகையுடன்

    இருவரும் பக்கமாக அமர்ந்து பேச ஆரம்பித்தார்கள். இருபக்கமும் திறந்த அவர்கள் மனது வார்த்தைகளை அள்ளிக்கொட்டியது சரளமாக. ஆடி ஒடி அலுத்தபடி, ஊருக்கு ஒதுக்குபுறம் ஆலமரத்தடியில் ஒத்தையில் தனித்திருந்த பிள்ளையாரின் பக்கமாக இருவரும் அமர்ந்து காரணமின்றி சிரித்ததில் ஆரம்பித்த பேச்சு, தட்டாம் பூச்சி பிடிக்க மார்க்குச்சியை வைத்துக்கொண்டு தெருவெங்கும் சேர்ந்து திரிந்தும், ஒன்றுகூட கிடைக்காமல் அழுதபடி வீடு வர அண்ணன் இருவருக்குமாக பிடித்துகொடுத்த தட்டாம் பூச்சியுடன் நாள் முழுவதும் வளையாடிக் களித்தது, வம்பு பேசும் பையன்களிடம் எனக்காக அவள் இட்ட சண்டை. வெளிநாட்டிலிருந்து வந்த அப்பா கொண்டு வந்ததில் அவளுக்கு பிடித்ததென மறைத்து எடுத்து வந்து கொடுத்தது. அம்மாவிடம் கூட பேச முடியாத இளமையின் இரகசியங்களை பரிமாறிக்கொண்டது என எல்லாமுமாக கடந்த பேச்சு அவனிடம் வந்தது.

    “என்னடி அவனை மறந்துட்டேல்ல” என்று தோழி மெதுவாக கேட்டதும் அவள் கண்களில் வேகமாக கண்ணீர் திரையிட…

    “ஏய்…இதுக்குதான் அத பேசவே வேண்டாம்னுதான் இருந்தேன். ஸாரிடி..” தோழி வருத்தத்துடன் அவளை சமாதானப்படுத்த முயல…

    “என்ன சொல்லனே தெரியல… என்னால அவன் நினைப்பு இல்லாம ஒரு நாள் கூட இருக்கவே முடியலடி… அவனுக்கு என்னை பத்தி சரியா தெரிஞ்சிருக்கு . எனக்குதான் என்னையே தெரியல….நல்லா தூங்கிகிட்டு இருக்கிற நட்ட நடு ராத்தரியில அவன் பக்கத்தில உட்கார்ந்து தலைகோதி விடுறமாதிரி இருக்க.. சடக்குன்னு தூக்கத்திலருந்து விழிச்சா…அப்பறம் மனசு பூரா அவன் நினப்பு புகுந்துகிட்டு இராப்பூரா தூக்கமே வரமாடக்குதிடி.. எப்பவாவது என்னோட புருஷன் எந்திரிச்சு பார்த்தா …ஒன்னுமில்லைங்க வீட்டு நினைப்புன்னு சொல்லி சமாளிக்கிறேன். அவன என்னால மறக்க முடியும்னு தோனலடி . நினப்பு ஒருபக்கம் நிசம் ஒருபக்கம்னு என்னைய இரண்டா சாமி பிரிச்சு கொடும படுத்துற மாதிரு இருக்கு. எதுக்கு இப்படி பொய்யா வாழணும் பேசாம எதையாவது குடிச்சிட்டு செத்து போய்ரலாம்னு கூட இருக்கும். ஆனா இந்த மனுஷன் என்ன தப்பு செஞ்சுதுன்னு என் புருஷனுக்காக வாழுறேன்.”

    “ஏய் என்னடி இது காலம்னு ஒன்னு இருக்கு கன்டிப்பா அது நம்மை மாத்திடும். நீ வீனாப்போட்டு மனச கொளப்பிக்காத… நம்ம பொம்பள சென்மமே அடுத்தவளுங்களுக்காக வாழ்றதுக்குதானே..புருஷனையும் ஆத்தா வீட்டையும் நினைச்சு… அவன மறக்க முடியலன்னாலும் அவனோட நினைப்பை குறைச்சுக்கோடி….”

    “முடியும்னு தோனல.. ஆனா விடுறதுக்கு முடிவெடுத்த மாதிரி மனச கொண்ணுக்கவேண்டியதுதான். அவன எப்படியாவது என்னோட வாழ்க்கைல திரும்ப ஒருதடவை பரர்க்கனும்… பார்த்து உன் நினைப்ப என்னால என்னோட உசருல இருந்து பிரிக்கவே முடியலன்னு அவன்கிட்ட சொல்லி கதறி அழனும்னு தோனுதுடி.. ஊருக்கு ஏதும் வந்தானாடி. எப்படி இருக்கிறான்னு ஏதாச்சும் விஷயம் உனக்கு தெரியுமா…”

    “வந்தாண்டி.. வந்து இந்த ஊர்ல இருந்த சொத்த எல்லாம் அவனை வளரத்த பெரியப்பா பேருக்கே எழுதுக்கொடுத்துட்டான். ஊர்ல அவனோட சொந்தக்காரங்கெல்லாம் யோசிச்சு செய்ப்பான்னு சொன்னாங்க. என்னை பெரியப்பா குறையில்லாம புள்ளையாத்தான் வளர்த்தார். மாடசாமியை நான் என்னுடை சொந்த அண்ணனாத்தான் பார்க்கிறேன் . இதப்பத்தி வேற யாரும் பேசவேண்டாமனு சொல்லிட்டான்னு ஊரெல்லாம் ஒரே பேச்சு. சிங்கப்பூர்ல இப்ப வேலை பார்க்கிறானாம். கல்யாணம் இங்கேயே முடிச்சுக்கிலாம்னு அவனோட பெரியப்பா மூலம் பேசிப்பார்த்தாங்க. அவன் ஒரேடியா வேண்டாம்னு சொல்லிட்டானாம். அவனுக்கு மனசுக்கு பிடிச்சவங்களத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டானாம்” என்றாள் தோழி

    “இப்படித்தான் தீர்மானமானிக்கிற பாதையிலதான் மனசு போகணும். மனசு பாதையை தேடக்கூடாதுன்னு எப்பவுமே அவன் சொல்லுவான்….” என்றாள்.

    “என்னடா இப்ப ஜென்னியோட அடிக்கடி உன்ன பார்க்கிறேன்” என்று புன்னகையுடன் கேட்ட நண்பனின் பக்கமாக திரும்பி பார்த்தான்.

    “ஜென்னிக்கும் எனக்கும் நல்ல புரிதல் இருக்கிறது. எங்களுடைய எண்ணங்களும் விருப்பங்களும் நேர்பாதையில் பயணிப்பதில் எங்களுக்கே வியப்பாகத்தான் உள்ளது. வாழ்க்கையைத்தேடி நாம் ஓடுவதாகவும், அதுவே விரும்பி நம்மை நோக்கி வருவதுவுமான சுற்றுப் பயணத்தில் இது இரண்டாவதாக எனக்கு படுகிறது. என்னை சுற்றி வரும் இந்த வாழ்க்கையில் ஜென்னியோடு பயணித்தால் சுகமாக இருக்கும் என்பதாக தோன்றுகிறது. கடக்கும் எல்லா கணங்களையும் இருவருமாக சேர்ந்து கடக்க விரும்புகிறோம். அவளுடன் இருக்கும்பொழுது இவ்வுலகம் எனக்கு இன்னும் கொஞ்சம் அழகில் மெருகேறி மின்னுவதாக தோன்றுகிறது. ” என்றான்

    “ஜென்னியோட ப்ராஜக்ட் முடியப்போகுதே. அவள் விசாவை எக்ஸ்டென்ட் பண்ண போகிறாளா”

    “நாங்கள் இருவரும் இங்கிலாந்திலே குடியேறிவிடலாம் என்று தீர்மானித்துள்ளோம். அனேகமாக இன்னும் ஒன்றிரண்டு மாதங்களில் இந்த ப்ராஜக்ட் முடிந்து அவள் திரும்ப இங்கிலாந்து செல்லுவதற்கு முன் எங்கள் திருமணத்தை முடித்துவிட்டு இருவரும் சேர்ந்தே அங்கு போய் என்னுடைய விசாவை மாற்றி கொள்ளலாம் என்றுள்ளோம்.”

    “ஜென்னியின் வீட்டில் பேசியாகிவிட்டதா…” நணபனின் கேள்விக்கு

    “சரியான தோழி என்பதாகவே மனத்தில் இருத்தியிருந்த ஜென்னியை, வாழ்க்கையும் ஜென்னியுடனே என்று நான் தீர்மானித்த கணம். அவளுடைய குடும்பத்தை சந்தித்தபின்தான் என்றால் அது ஒன்றும் மிகையில்லை. அப்பா அம்மா இருவருமாக இங்கு வந்திருந்த பொழுது அவள் என்னையும் அவள் வீட்டிற்கு அழைத்திருந்தாள். அறிமுகமற்றவன் எனபதாக ஒரு கணம் கூட நான் உணரவில்லை அவர்களுடன் இருந்தபொழுது. எது செய்தாலும், எங்கு செல்ல முடிவெடுத்தாலும் ,எது பேச ஆரம்பித்தாலும் , எல்லோருக்கும் அது பிடித்தமானதாக இருக்கிறதா அல்லது எல்லோரும் அந்த மனநிலைக்கு மாறுவதற்கு உகந்ததான முடிவா என்று நன்கு ஆராய்ந்தபிறகே ஆரம்பிக்கிறார்கள். உடன் வருபவர்களே முக்கியம் என்பதாக யாருக்கேனும் உடன்படாத மனநிலை ஏற்பட்டால் அத்தனையும் கலைத்து வீடு திரும்ப எப்பொழுதும் தயார் நிலையலே அவர்களது செயலோ பயணமோ அமைகிறது. எதற்காக இப்படி என்று ஆச்சரியத்துடன் நான் கேட்டால் . என் அப்பாவின் எண்ணம் உடன் வாழும் மனிதனின் சந்தோஷத்திற்கு பின்தான் உலகம் என்பது என்றாள். அற்புதமான அந்த குடும்பத்து உறுப்பினர் என்பதில் நான் பெருமையாக உணர்கிறேன்” பேசி முடிக்கும்பொழுது பெருமிதம் கலந்த புன்னகை அவன் முகத்தில் வழ்ந்தது

    “சந்தோஷம்… ஊரில் யாருக்காவது தெரியப்படுத்த வேண்டுமெனில் தெரியப்படுத்து. இங்கு செய்யப்படவேண்டிய ஏற்பாட்டுக்கு நான் பொறுப்பு” புன்னகையுடன் நண்பன் கூற

    “ஊருக்கு நான் எப்பொழுதும் ஒரு காட்சி பொருளாகவே இருக்கிறேன். பெற்றோர்களின் இழப்பு, பெரியப்பாவின் வளர்ப்பு, போராட்டமான வாழ்க்கை , இப்பொழுதோ சுகமாக சம்பாதிக்கும் வெளிநாட்டு வேலைக்காரன். எதிலும் அவர்களின் இருப்பு பார்வையாளர்கள் என்பதாகவே எனக்கு தோன்றும் . ஆகையால் அவர்களைப்பற்றி பெரியதாக எனக்கொன்றும் கவலையில்லை. பெரியப்பாவிடம் மட்டும் தெரியப்படுத்த வேண்டும். ஆனால் கடந்தமுறை நான் ஊருக்கு செல்லும்போதே அவர் தளரந்திருந்தார். அதனால் இப்பொழுது நான் அனுப்பும் பணத்தில் அவருக்கென்றும் மருத்துவ செலவுக்கென்றும் தனித்தனியாக அனுப்புகிறேன். ஆகையால் அவராலும் வரமுடியாது. பெரியப்பா தவிர வீட்டில் என்னுடைய வளர்ச்சியல் பிடித்தவர்களும் இல்லை, வெறுத்தவர்களும் இல்லை. அவர்களுக்கு நான் அவர்கள் ஊரில் வாழ்ந்த ஒரு ஊர்க்காரன்” என்றான்

    “உன்னை தேடுபவர்கள் என்று யாருமே ஊரில் இல்லையா…” நணபன் மறுபடியுமாக கேட்க

    “அப்படி தேடுபவர்கள் யாரும் ஊரிலில்லை. எனக்கென்று இருந்த சொத்துகளையும் நான் பெரியப்பா பேருக்கு மாற்றி விட்டதில் என்னுடைய பெரியப்பா வீட்டில் அனைவருக்குமே சந்தோசம் . என்னை வளர்த்ததற்கு என்னால் அவர்களுக்கு இப்படியாக கைமாறு செய்யமுடிந்ததில் எனக்கும் சந்தோசம். வாழ்க்கை என்னும் இந்த நதிமூலத்தில் கடந்து வந்த பாதைகளை விட சேரும் கடல்தான் முக்கியம் என்று நான் நம்புகிறேன். பதித்து கடந்த தடங்களை திரும்பி பார்க்க எனக்கு எப்பொழுதுமே விருப்பமாய் இருப்பதில்லை. எனக்கு எதுவும் இழப்பென்று தோன்றவில்லை . அடுத்த முயற்சிக்கான உந்து சக்தியாகத்தான் என்னுடைய முந்தைய தோல்விகள் அமைவதாகவே எனக்கு எப்பொழுதும் தோன்றும்..”

    “டேய்… வான்மதி ஞாபகம் இல்லையா.. மறைக்கிறாயா…” லேசான கோபம் கலந்து வேகத்துடன் நணபன் கேட்க..

    “வான்மதி……” நீளபெருமுச்சு விட்டபடி பெயரை மெதுவாக உச்சரித்த அவன்

    “அவள் ஞாபங்களின் உயிர்ப்புகளை நான் மறக்கவோ , மறுக்கவோ அவசியம் இல்லை. அது அதுவாகவே என்னுள் கலந்திருக்கட்டும” அவனுடைய கண்களில் கண்ணீர் மெல்லிய திரையிட்டு அவன் விழி மறைத்தது.

    பட உதவி: http://www.123rf.com/

    Share
  • நான் யார்

    சங்கர் சுப்ரமணியன்k-images

    சொந்தம் நட்பு காதல்

    பகிர்ந்தது உணர்ந்தது இலயித்தது

    அழுகை பயம் கோபம்

    நெகிழ்ந்தது உணர்ந்தது மயங்கியது

     

    பார்த்து இரசித்தல் பேசிக்கலைதல்

    துயரத்துடன் பிரிதல் மகிழ்ச்சியுடன் தொடுதல்

    மாறிமாறி என்னுள் மையங்கொள்ளும் உணர்ச்சியின்

    சுழற்சியில் நான் சலித்து போய்

     

    எதற்காக இப்படி ஒரு வாழ்க்கை என்று

    யாரையும் கேட்டால் அது உன் கர்மா என்றனர்

    எது அந்த கர்மா என்று பெரியோரை

    கேட்டால் தெளிந்த ஞானியை கேள் என்றனர்

     

    தேடிசலித்து நல்லதோர் ஞானியை கண்டு

    அவரிடம் கேட்டால் யார் நீ என்று என்னை அவர் கேட்டார்

    பெயர் ஊர் தொழில் உறவு நட்பு எல்லாம் சொல்லி

    என்னை நான் அவரிடம் அறிமுகம் செய்ய

     

    அடையாளங்கள் தவிர்த்து சொல் நீ யார்

    மாறாத புன்னகையுடன் மறுபடியும் கேட்டார்

    ஆமாம் சூட்டிக்கொண்ட அடையாளங்களை கடந்து

    யோசித்தால் நான் யார்

     

    http://kaleidoscope.cultural-china.com/en/10Kaleidoscope10392.html

    Share
  • என் உருவம்

    சங்கர் சுப்பிரமணியன்

     

     

    என் உருவம்
    பழகிடத் தோழியும்
    யாரிடமும் பழகாத மனைவியும்…
    சம்பாதித்த அண்ணனும்
    சமமாக சொத்து பிரிக்கும் நியாயமும்…
    கேளாமல் உதவிடும் நண்பனும்
    கேட்டாலும் உதவ மறுக்க நல்ல காரணங்களும்…
    சேஷ்டை செய்யும் பையனும்
    அதைத் தாங்கிக்கொள்ளும் அவன் நண்பனும்…
    மனம்நிறையும் மாற்றான் விருந்தும்
    மறுதலிக்கும் உற்றான் வருகையும்….
    சோம்பித் திரியும் நாட்களும்
    செல்வம் கொழிக்கும் வாழ்க்கையும்…
    உள்ளொன்று புறமொன்றென
    மாறி நிற்கும் என் உருவம்….

    Share
  • காத தூரம்

     

     

    சங்கர் சுப்பிரமணியன்

     

    என் வீட்டிலிருந்து காத தூரம் நடந்தால்
    வரும் காணிநிலம் அதில் கண்கள் விரிய பார்த்தால்
    கொஞ்சும் அழகுப்பாவை ஒன்று அவளுடன்
    எனக்கு ஒரு கனத்த கதையுண்டு

    வண்ணக் கலவைகளை முகத்தினில் பூசி கொஞ்சும் தமிழ் பேசி
    ஆசை வார்த்தைகள் ஆயிரங்களை அழகாக கோர்த்து
    புரட்டு கதைகள் பல பேசி பொய்முகம்
    போர்த்திக்கொண்டே பேதை அவளிடம் பழகினேன்

    அவள் விழிக்கும் அதிகாலை நான் விழித்து அவளுக்கு
    முன்னதாக அவள் எப்பொழுதும் விரும்பிச் செல்லும்
    அந்த சிவனுக்கு முன்நின்று மந்திரங்கள் படித்து
    கபட நாடகம் அரங்கேற்றியே அவள் அன்பைப் பெற்றேன்

     

    என் வானத்து நிலவென்றென். நீ இல்லாத வாழ்வு இருளென்றேன்.

    உன் உறவு என் உயிரென்றென். நீ இன்றி நான் உலர்ந்த சருகென்றேன்.

    உள்ளமெல்லாம் அவள் நினைப்பில் கரைந்ததாக பொய்யுரைத்தே

    அவள் உள்ளத்தில் நிறைந்தேன் அழகான வண்ணத்தில்

     

    அத்தனையும் நம்பிய அந்த அறியாத பேதை என்னை அவள்
    உயிராய் தீர்மானித்தாள் என் நினைவுகளை நெஞ்சத்தில்
    சூடிக்கொண்ட நேசத்தில் அவள் நெகிழ்ந்திருந்த ஒரு கணத்தில்
    கனன்று எரிந்த உணர்ச்சிகளில் நான் அவளை முழுவதுமாய் சுவைத்தேன்

     

    நாடகத்தின் முடிவாக போட்ட என் வேஷம் கலைக்க
    எக்காளமிட்ட சந்தோஷத்துடன் என் மனம் சந்தர்ப்பங்களை
    எதிர்நோக்க கனவிலும் நான் எதிர்பாராத முடிவுரையை
    கடவுள் அரங்கேற்றினான் என் கண் முன்னே

     

     

    தேனுண்ட வண்டு போல் அவள் தனித்திருந்த
    அந்த நள்ளிரவு அவள் வீடு தேடி நான் போனேன்
    என் மெல்லிய சத்தத்திற்கு வெட்கத்துடன் அவள் கதவு திறக்க
    வேட்கையுடன் நான் உள் நுழைந்தேன்

     

    உணர்வுகளின் தழுவல்களில் உயிரோட்டங்களைத் தேடி
    தனியாத மோகத்தில் நாங்கள் தவமாய் கூடிக்கொண்டிருக்க
    பெருத்த சத்தம் கேட்டு பதறி கலைந்து சுற்றம் பார்த்தால்
    எங்களை ஆவேசத்தடன் சுற்றியிருந்தது அந்த பெருந்தீ

    கணமும் தாமதியாது எரியும் நெருப்பை அவள் போர்த்திக் கொண்டு வேகத்துடன்
    என்னை வெளித்தள்ளினாள் என்ன செய்கிறேன் என்கிற உணர்வுகளற்று
    என்னையும் நான் மாய்த்துகொள்ள வேகத்துடன் நெருப்புக்குள் ஓடமுயல
    சுற்றியிருந்த ஊர் என்னை தடுத்து தனித்து நிறுத்தி விட்டது

    கனநேரத்தில் நடந்தேறிய அந்த நாடகத்தின் கடைசித் தருணத்தில்

     என்னை காப்பாற்றி விட்ட பெருமித சந்தோசத்தில்

    இதயம் நிரம்பிய புன்னகையுடன் என்னை பார்த்தபடியே

     அந்த நெருப்பினில் தன்னை தாரை வார்த்து கொண்டாள்

     

    பாவிமகள் போகையில் என் நெஞ்சத்து ஆழத்திலே
    அவள் உயிரை பதித்து என்னுயிரை கொன்று போனாளே
    நீங்காத அவள் நேசத்தின் வாசமுடன் நிஜங்களை தொலைத்து

    நான் முடிவுதேடும் இறப்பு நோக்கிய பயணத்தில் வாழ்கிறேன்

     

     

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    சங்கர் சுப்ரமணியன்

    அன்புள்ள மணிமொழிக்கு

    அன்பு மகளே எப்படியிருக்கிறாய் . இங்கு அனைவரும் நலம். எப்பொழுதும் எங்கள் ஞாபகங்களில் நீதான் நிறைந்து கொள்கிறாய். நீ என்னோடு பேசும் பொழுதெல்லாம் ஞாபகப்படுத்துகிறாய். என்னை பார்க்க வேண்டும், அல்லது அவசரமாக தகவல் அனுப்ப வேண்டும் என்றால் என் பேஸ்புக் பக்கத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்று. என் கடிதம் உன்னுடைய நண்பர்கள் மத்தியில் இலேசான வெட்கத்தை ஏற்படுத்துவதாக கூறியிருந்தாய். ஆனால் மணிமொழி இப்படியாககடிதம் எழுதும் பொழுதுதான் என்னுடைய முழுமையான உணர்வுகள் வார்தைகளில் வெளிப்படுவதாகவும், மற்ற எந்தவிதமான தொடர்புகளும் முழுமையில்லாமல், இன்னமும் கொஞ்சம் அழகாக தெரியப்படுத்தி இருக்கலாமோஎன்ற ஆதங்கத்தில் முடிவதாகவே எனக்கு தோன்றுகிறது.

    நேற்று நம் வீட்டுக்கு பொதுமக்கள்  மனதில்  நிறைந்து  இருக்கும் அண்ணன் கோபால்சாமி வந்திருந்தார். யாருக்கும் உதவுவதற்கு எந்த சமயத்திலும் தயாராக காத்திருப்பவர் அவர். என்னுடைய அப்பாவின் நெருங்கிய நண்பர் . நான்தான் என்னுடைய வாழ்க்கை தேடலில் கொஞ்சமாக தள்ளியிருந்துவிட்டேன் அவரிடமிருந்து. நம் வீடு தேடி மறுபடியுமாக அவர் வந்தது எனக்கு பெருமைதான். அவர் ஏதோ உடம்பு முடியாமல் நீ படிக்கும் ஆஸ்பத்திரியில் சேர்ந்திருந்ததும், அங்கு உன் அனுகுமுறையும் , சேவையும் கண்டு வியந்து போய் உன்னை விசாரித்து, நீ என் அப்பாவின் பேத்தி என தெரிந்ததும் இங்கே மறுபடியுமாக வந்திருந்தார். “ துளி கூட கலப்படமில்லாத அன்பினில் நிறைந்த அந்த மனம், வாழ்க்கையையும் சேவையையும் இருவேறாக பிரிக்காத அந்த பக்குவம். எவருடைய மனத்தையும் எப்பவுமே கஷ்டப்படுத்தாமல் வெளிவரும் வார்த்தை . உன் அப்பாவின் மாற்றமில்லாத பிரதியாகத்தான் அவளைப் பார்த்தேன். அத்தோடு அவளோடு ஒட்டிக்கோண்ட அறிவும், அவள் ஈடுபாடும்…” என  இன்னமும் பலவாறாக உன்னை நம் சொந்தங்களின் முன்னே பெருமையுடன் பேசிவிட்டு, படிப்பு முடிந்ததும் கண்டிப்பாக தெரியப்படுத்து . இனியாவது எங்களிடமிருந்து ஒதுங்காமல் வீட்டிற்கு வா … என்று கூறி, மறுக்காமல் மதிய உணவையும் நம் வீட்டிலேயே முடித்து விட்டு சென்றார். என் மனத்திற்குள் பிடிபடாத பெருமை இன்னமும் நிறைந்து வழிகிறது. என் தந்தையையும் உன்னையும் பற்றி நான் பெருமையாக கேட்கும் பொழுதெல்லாம் இப்படித்தான் வார்த்தைகளற்று என் மனம் சந்தோசத்தில் நிறைகிறது.

    தாராள  மனமும்,  சமுதாய  அக்கறையும் கம்பீரமும் கொண்டவர் என் பணக்கார தந்தை. எங்கள் வீட்டு கதவு அதிக நேரம் உதவிகள் கேட்டே தட்டப்படும்.  மற்றவர்களுக்கு உதவி செய்வது தர்மம் அல்ல கடமை என்றே என்  தந்தை கூறுவார்.  எங்கள் கார் எங்கள் குடும்பத்தை சுமந்ததை விட, இக்கட்டமான தருணங்களில் சுற்றியருக்கும் கிராமமக்களை சுமந்து சென்றதே அதிகம். மருத்துவமனை இல்லாத சுற்றியுள்ள கிராமங்களின் மருத்துவ சேவைக்காக என்னை மருத்துவனாக்குவது என்பதில் உறுதியாக  இருந்தார். ஆனால்  தடுமாறிய காலசக்கரத்தில், எதிர்பாராத ஒரு அதிகாலை வேளையில், அம்மாவின் அலறல் சத்தம் கேட்டு ஒடிச்சென்று பார்த்தால், சிரித்தமுகத்துடன் என் தந்தை  இறந்து கிடந்தார் அவர் அறையில். அழுகுரல், கதறல் எல்லாம் எங்கோ தொலைதூரத்தில் கேட்கும் சத்தம் போல் இந்த உலகமே வெகுவேகமாக சுற்ற நான் மயங்கி விழுந்தேன். என்னால் தாங்கவே முடியாத தந்தையின் இழப்பை என்  மனமே முழுமையாக உணர்வதற்குள் சுயநலமிக்க மனிதர்களால் பணம் சொத்து என எல்லாம் நான் இழக்க… மிஞ்சியது இந்த வீடும் எனை சுற்றி பயமுறுத்தும் அழுகுரலும்தான். நான் வாழ்க்கையின் புரியாத தத்துவத்தில் செய்வதறியாது திகைத்து போனேன். என் அன்பு தந்தை, எனக்கு எல்லாமுமானவர் அன்று என்னோடு இல்லை என்று தெரிந்த தனிமையில், முட்டி கொண்டு  வந்தது பேரழுகை.

    மனத்தை ஒருமுகப்படுத்தி, தந்தையின் ஆசியுடன், உத்வேகம், உறுதி என்ற இரு வார்த்தைகளில் என் மனதை இருத்தி உழைத்தேன். பெரும் வெற்றிகள் என் வசப்படவில்லை எனினும் நான் நம் ஊரில் மதிக்கதக்க வகையில் முன்னேறி வந்ததை விட நான்  மிகவும் மகிழ்ந்தது. என்னுடைய வற்புறுத்தல்கள் எதுவுமின்றி, நீ படிப்பில் எல்லாருக்கும் முன்நின்று என் தந்தையின் கனவை மறுபடியுமாக உறுதிப்படுத்தியதும்தான். நீதான் முதல் மார்க் என்று எனக்கு தெரிந்ததும், சந்தோசத்தில் மிதக்கும் என் மனம். இன்னமுமாக உன்னை சந்தோசப்படுத்தி பார்ப்பதெற்கென்றே,  “அந்த மீனா ரொம்ப மினுக்குவாளே, அவா ஒருத்திக்குதான் கணக்கு வருமுன்னு, அவளையும் விடவா… நீ கணக்கில் கூட வாங்கியிருக்கிறாய்…” என்று நான் கேட்டதும். “ஆமாம் அப்பா எனக்கே தெரியலை, நான் எப்படி அவளை முந்தினேன்னு … மேக்ஸ் மிஸ் ரொம்ப பாரட்டினாங்க தெரியுமா …” என்றபடி உன்முகம் சந்தோசத்தில் மிளிர… என் மனம் சந்தோசத்தின் எல்லை தொட்டு… கீழிறங்காமல் உயரே… உயரே.. பறப்பதாக தோன்றிய உணரச்சிகளில் மிதந்தபடியே நண்பர்கள், சொந்தங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்தி பெருமை கொள்வேன்.

    அப்படியாக பள்ளிப்படிப்பை முடித்து மாவட்டங்களில் முதலாவதாக நீ வந்து, உனக்கு மருத்துவப்படிப்புக்கு அழைப்பு வந்த அந்த தருணம் . எப்பொழுதும் நாம் கும்பிடும் அந்த ஆத்தா வண்டிமலைச்சியே, வானத்திலிருந்து இறங்கி வீடு வந்தது போல், மறுபடியுமாக என் தந்தை இவ்வுலகம் வந்து சிறுபிள்ளையான என்னை கைப்பிடித்து ரோட்டுக்கடைக்கு அழைத்து செல்வது போல், வசப்படாத சநதோசத்தில் மனம் துள்ளி குதித்தது. தெரிந்த அத்தனை ஜோசியரையும் பார்த்து நல்ல நாள் குறித்து நம் குலதெய்வத்திக்கு பூஜை வைத்து நாம் கிளம்பி போய், நீ கல்லூரியில் சேர்ந்ததும். மனமுழுவதும் நிரம்பிய சந்தோசத்தில் கண்களில் நிறைந்த கண்ணீரை யாருமறியாமல் துடைத்துக்கொண்டே இருந்தேன் அன்று  மட்டுமல்ல, அதை நான் எப்பொழுது  நினைத்தாலும்.

    வாழ்க்கையில் அதேபோல் எப்பொழுதுமே என்னால் மறக்கமுடியாத  தருணங்கள்.  அந்த  கஷ்ட காலத்தில்  வியாபாரத்திற்காக  நான்  சுற்றியுள்ள கிராமத்திற்கு சென்றால்,  கிராமமே திரண்டு வந்து  என் முன்னால்  நின்று “ஐயா.. உங்க  அப்பா  எங்க  குலசாமி அய்யனாராகவே  வாழ்ந்துட்டு  போய்ட்டாக. அவுகளோட குடும்பமே கஷ்டப்படயில, நமக்கு கஞ்சி ஒரு கேடான்னுட்டு.. நாங்க இப்பல்லாம்  இராத்திரிக்கு  கஞ்சி  குடிக்காமலேயே  படுத்துருவோம். எங்க அய்யனார் சாமிகிட்ட போய் நீ மட்டும் இருக்கிறது நெசம்ன்னா..எங்க ஐயாவோட குடும்பம் நல்லாயிருக்கனும்னு. எல்லாருமே ஒருதரமாவது வேண்டாம வேலைக்கு போகமாட்டோம். உங்களுக்கு பணக்கஷ்டம் ஏதாவது இருந்தா சொல்லுக, தலைக்கு வரி போட்டு பிரிச்சு கொடுக்கிறோம்.  உங்கள அப்பா தனியா விட்டு போய்ட்டத நினைக்காதீக. நாங்கெல்லாம் உசுரோடதான் இருக்கோம்” அவர்கள்  என்னுடனே  வந்து  பணிவாக  கேட்பார்கள். இப்பொழுது வரை  எவ்வளவு பெரிய  மணிதர்கள் அவர்களின்  கிராமத்திற்கு  வந்தாலும்  எனக்கு  பிறகே  அவர்களுக்கு  மரியாதை  அளிப்பார்கள். அப்பொழுதெல்லாம்  என்  தந்தை  என்னில்  உயர்ந்து  என்  இதயம்  நிறைத்து  கொள்வார்.  அவர்கள்  குலசாமி  அய்யனாரோ, என் தந்தை  குலசாமியாக வந்தோதான், யாரிடமும் கைநீட்டி உதவி பெறாமலே என் வாழ்க்கை உயர்ந்தது என்பதாகவே  எனக்கு  எப்பொழுதும் தோன்றும்.

    மணிமொழி… சமீபகாலமாகத்தான்  நான்  உன்னில்  தடுமாற்றங்களை  பார்க்கிறேன்.  அதுவும்  உன்னை  நான்  பார்க்க  வந்த சமயம்,  உன்  நண்பன்  என்று ஸ்டீபனை  அறிமுகப்படுத்திய பிறகு தான்.  ஸ்டீபன்  என்னிடமே  பேசினான். அவன்  பேச்சு முழுவதும், அளப்பில்லாத  உன்  திறமையை  அவன்  நாடு எப்படியாக கொண்டாடும்  என்பதாகவே  இருந்தது. எப்படியாவது  உன்னை  அவன்  நாட்டிற்கு  அழைத்து  செல்லும்  நோக்கிலே  அவன்  இருப்பதாகவே எனக்குபட்டது.  இப்பொழுதெல்லாம்  நான் சுற்றியுள்ள  எந்த  கிராமத்திற்கு  சென்றாலும்  அவர்கள் “ஐயா.. அம்மா அப்படியே உங்க அப்பா சாடை… அவுகளைப்  பார்த்தால்  எங்க அய்யனாரையே மறுபடியுமாக  நேர்ல பார்க்கிற  மாதிரியே  இருக்கு.  அம்மா  எப்போ  படிப்பு  முடிச்சு  வருவாக……” என்று என்னிடம்  கேட்கும் பொழுதெலலாம்  என்  நெஞ்சம்  நெகிழ்ந்து  என் தந்தையின்  நினைவுகளில்  என் இதயம்  நனைகிறது.   எனக்கென்று  என் தந்தை பதித்து  போன  கனவு   ஒன்றே ஒன்றுதான்,  இன்னமும்  இப்படியாக  அப்பழுக்கில்லாத  அன்பினில்  வாழும்  இந்த  மனிதர்களுக்கு  காவல் தெய்வம் அய்யனாராக  ஒரு சில மனிதர்கள்  வருவார்கள் என்பதுதான். நானும்  இந்த  ஐனங்களுடன்  சேர்ந்து  அப்படியான  காவல்  தெய்வமாகத்தான்  உன்னை பார்க்கிறோம், என் தந்தை மாதிரி…….!    ஆகவே  மணிமொழி…  உன்  தடுமாற்றங்களை  தள்ளி விட்டு  என்  அப்பாவைப்போல்  காவல்  தெய்வம் அய்யனாராக அவர்களுக்கு நீ  வரவே….. என் மனம்  ஆத்தா  வண்டிமலைச்சியை  வேண்டி  நிற்கும்.

    Share
  • அன்புள்ள மணிமொழிக்கு

    சங்கர் சுப்ரமணியன்

    அன்புள்ள மணிமொழிக்கு

    எப்படி இருக்கிறாய்..! என்று என் இதயத்திலிருந்து எழும் மெல்லியதொரு கேள்வி குரல், என் மெளனம் கலைக்காமல் வெளிவந்து காற்றோடு உனை தேடி பயணிக்கிறது. கண்கள் இலேசான கண்ணீரில் திரையட்டு கொள்ள, என் நினைவுகள் எனைக் கேளாமல் நம்முடைய நினைவுப்புத்தகத்தின் பக்கங்களை திறக்கிறது.

    நம் முதல் சந்திப்பில் நான் எப்படியாக உன்னை உணர்ந்தேன் என்பதுதான், என்னை நானே பலமுறையாக கேட்டுக் கொள்ளும் கேள்வி… அந்த இளந்தென்றல் வீசிய மாலைப்பொழுதில், ஒரு துாரத்து சொந்தத்தின் திருமணவிழாவில், நீ எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டாய், இலேசான கேலியுடன், புத்தக புழு..! என்று . ஆச்சரியங்களுடன் நான் உன்னை பார்க்க, அடக்கமான புன்னகையுடன் ஏற்றுக்கெண்டாய். ஏதாவது பேசலாம் என்று வார்த்தைகள் தேட, மறுப்பு இல்லா புன்னகையுடன் நீ இடம் மாறிக்கொண்டாய் . யாரிடமும் பெரியதொரு வார்த்தை பரிமாற்றம் இல்லாமல், பெரும்பாலும் மெளனமாகவே…. திருமணம் முழுவதும், ஆனால் ஏதாவது காரியங்கள், யாராலோ கட்டளையிடப்பட, அதை நீயும் மாறாத புன்னகையுடன் நிறைவேற்றி கொண்டிருக்க, என் பார்வை உன்னை என்னில் முழுமையாக பதிக்க முயற்சித்து கொண்டே இருந்தது, அந்த நாள் முழுவதும்.

    இயல்பாகவும் நானாகவும் ஏற்படுத்திக் கொண்ட அடுத்தடுத்த சந்திப்புகள் நம் எண்ண அலைகளை நேர் வரிசையில் கொண்டு செல்ல, என் எண்ணங்களில் நீ பவனி வருவது அதிகமாகிக் கொண்டே போக, உன்னில் தடுமாற்றங்களை தாண்டி என்னுடைய நினைவுகள் பதிந்ததை நீ அழுத்தமாக எனக்கு வெளிப்படுத்தியதும், நான் நானற்றுப்போய் என்னுள் நீ முழுமையாக வியாபித்துக்கெண்டாய். உன் முகம், உன் நினைவு, உன் கனவு என என்னுடைய தினங்களின் அத்தனை கணங்களிலும் நீயே நிறைந்து, எப்பொழுதும் குதுாகலிக்கும் மனம், எல்லாவற்றையும் ஆழமான இரசிப்புடன் பார்க்கும் பார்வை என என்னையறியாமலே நான் முழுமையாக மாறிப்போக…!, இப்பவும் என் மனம் அந்த காலகட்டத்தின் எப்பக்கம் திறப்பினும் இதயபக்கமெல்லாம் நிறைந்து வழியும் உன் நினைவுகள்…

    மயக்கம், மயக்கமின்மை என இரண்டும் கலந்து போன நிலையில், இரவுகள் நீண்டு கொண்டே போகும் உன் நினைவுகளுடன் நித்திரையில்லாமல் படுக்கையில். இருளும் வெளுப்புமில்லாத அந்த அதிகாலை வேளையில் , உன் எண்ணங்களோடு நான் நடந்து போக, எனை கடக்கும் அத்தனை பேரையும் அடையாளங்களற்ற உருவங்களாகத் தான் என் மனம் உணரந்தது. கண்டு கொண்ட சந்தோசத்தில், ஆர்ப்பரித்து வேகத்துடன் தொடவரும் அலைகளின் கரையோரம் அமர்ந்திருந்த, என் அருகாமையில் நெருக்கமாக அமர்ந்து , தோள் சாய்ந்து நீ விடும் மூச்சு காற்றில் கலந்து வரும் உன் உயிர் , தென்றலாக இதயம் தடவி என் உயிர் தீண்டியதும். சத்தமில்லாத மௌனத்தில் இந்த உலகமே இயங்க மறந்து நின்று போக, எனைக் கேளாமல் என்னிலிருந்து பிரிந்த என்னுயிர் உன்னில் கரைந்து கானாமல் போனது. அப்படியாக….. இப்பொழுது நினைத்தாலும் என்னால் மீளமுடியாத சந்தோசத்தில் என் இதயத்தை நிறைத்து கொள்ளும், பல…! மறக்க முடியாத தருணங்கள்.

    எண்ணமும், வாழ்க்கையின் நிஜங்களும் எப்பொழுதுமே ஒரே நேர் கோட்டில் பயணிப்பதில்லை. வாழ்க்கை விளையாட்டு என்ற விதி சாஸ்திரம், எதிர்பதங்களை வைத்து சோதிக்கவே விரும்புவதாக எனக்கு எப்போழுதுமே தோன்றும். அப்படியான அந்த காலகட்டத்தில், என்னை நிலைப்படுத்தி கொள்ள நான் எடுத்த அத்தனை முயற்சிகளுக்கும் தோல்வி முடிவு எழுதி, எனைப்பார்த்து விதி நகைத்த அதேவேளை, மன அகங்காரங்கள் என்ற மாய வலையில் வீழ்ந்த உன் குடும்பம் , உன்னை சுற்றி எழுப்பிய தடைகளை நீ எதிர்க்க முடியாமல், எதிர்த்து கூட்டி செல்வேன் என்று எதிர்பார்த்த என்னாலும் எதுவும் முடியாமல், திணறிப் போராடிய உனக்கும்… மிஞ்சியது உடல் வலிகளும் மனவலிகளும்தான்.

    வார்த்தைகள், விவாதங்கள், போராட்டங்கள், சோர்வுகள் என மாறிமாறி, நம்மை கலங்கடித்த, அத்தனை சந்தர்ப்பங்களும்  நமக்கு எதிர் நின்று, கட்டுப்பாடில்லா ஆழங்களுக்கு நம்மை தள்ளிப்போனது. மீளமுடியாமல் இருவரும் கண்ணீரும்,  அழுகையும், கடவுள்  நம்பிக்கையும் என பிடிமானத்திற்கு சிறு கொடி தேடி, தவித்து , கலைத்து போனோம். இன்னமும் அழிக்க முடியாத சாட்சியாக நினைவில் நிலைத்திருக்கிறது, அந்த கடைசி நேர சந்திப்பு…

    எப்பொழுதும் மடைதிறந்த வெள்ளம் போல் பாயும் உன் வார்த்தைகளை, என் மௌனத்தின் வாயிலாகவே இரசித்து, என் மெளனப்புன்னகையே உன் வார்த்தைகளுக்கு அர்த்தமான பதிலாக வெளிப்படுத்தும் நான், அன்று பதில்களற்ற மெளனத்தில் கரைய, நீயோ வார்த்தைகளற்ற மெளனத்தி்ல் அமர்ந்திருந்தாய் என் பக்கத்தில். கலையாத அந்த நிசப்தம் நம் உள் மனதை அசைத்து திருப்ப, கண்ணீரில் நிறைந்தன  நம் இருவருடைய கண்களும்

    வார்த்தைகள் தேடித்தேடி கலைத்தது நம் இருவரது மனமும், தாங்கமுடியாத ஒரு கணத்தில் என் கையை எடுத்து உன் கைகளுக்குள் வைத்து இறுகப்பற்றி கொள்ள, பிரபஞ்சம் தாண்டிய உலகத்தில் நாம் இருவர் மட்டும் காற்றில் பறப்பதாகத் தான் எனக்கு தோன்றியது.  விட்டு வெளிவர முடியாமல் கணங்கள் நீண்டுகொண்டே போக, நம்முடைய உலக இருத்தல் இந்த கணமோடு மடிந்து விடாதா.. என்ற ஏக்கங்கள் மட்டுமே நெஞ்சில் நிறைந்திருந்தது. கடினப்பட்ட மனதுடன், தளும்பிய கண்ணீருடன் வருகிறேன்.. என்று, உன் கைகளை சடெக்கென்று விடுவி்த்து, திரும்பி பார்க்கவும், தைரியமின்றி நீ ஓடிச்சென்றாய்…..

    அந்த வானம் மொத்தமாக நழுவி என் தலையில் விழுந்த மாதிரியான , தாங்கமுடியாத கனத்துடன் என் இதயம் நொறுங்கி போனது. நானும் இந்த உலகமும் வேறுவேறாக பிரிந்து, பிடித்தரமற்ற உயரத்திலிருந்து, தலைகீழாக நேர்பாதையில், வேகத்துடன் கீழ் நோக்கி பயணிப்பதாகத்தான் தோன்றியது. எப்படியாவது என்னிலிருந்து என் உயிர் நழுவாமல் தக்க வைத்து கொள்ள போராடித் தவித்த அந்த கணங்கள், என்னால் எப்பொழுதுமே மறக்க முடியாத, இப்பொழுது நினைத்தாலும் மனம் கனத்து கண்களில் கண்ணீர் திரையிட்டு நான் எனை மறந்து போகும் கணங்கள்.

    ஒவ்வொறு முறையும் உன் ஞாபகங்களில் என்னைத் தேடும் பொழுதெல்லாம், என்னுள் நிகழும் மாயாஜாலங்களில் எழும் அத்தனை உணர்வுகளையும் வார்த்தைகளுக்குள் அடக்கி, அழகாக அந்த வார்த்தைகளை கோர்த்து, உன்னிடம் மடலாக சமர்ப்பிக்கவே விரும்புகிறேன். ஆனால் மணிமொழி இருவேறு துருவங்களாக மாறிப்போன நம் வாழ்க்கை பாதையில்,  நீயோ எங்கோ ஒரு தூர தேசத்தில், தேடிவரமுடியாத தொலைதூரத்தில் உயிர் வாழ, என்னால் எப்பவுமே சமர்ப்பிக்க முடியாத இந்த மடல்கள்தான், என் உயிர் வாழ்க்கையின் ஆதாரமாக, என் இதய பக்கங்களில் நிறைந்து  கிடக்கிறது.

    Share