Tag: சிலம்பு

  • (Peer Reviewed) சிலப்பதிகாரத்தில் ஆறுகள் கட்டமைக்கும் சூழலியல் உறவும் பண்பாடும்

    முனைவர் இரா.இலக்குவன்
    வெ.ப.சு. தமிழியல் ஆய்வு மையம்
    ம.தி.தா. இந்துக் கல்லூரி
    திருநெல்வேலி – 627610

    சிலப்பதிகாரத்தில் ஆறுகள் கட்டமைக்கும் சூழலியல் உறவும் பண்பாடும்

    ஆறு, சூழலியல் சங்கிலியில் மாபெரும் கண்ணியாகும். மக்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் விரவிச் சமைப்பதில் ஆற்றுக்குத் தலையாய பங்குண்டு. ஆறு மண்ணில் மட்டுமல்ல, மக்கள் உணர்வுகளிலும் ஓடுகிறது. ‘மனிதரையும் இயற்கையையும் இணைக்கும் தளை நீர், நமது அன்றாட வாழ்விலும், நீர் நீங்காத இடம் பெற்றுள்ளது. காலம் தொடங்கிய காலம் முதலே நீர் அசாதாரணமான சமூக நிறுவனங்களை உருவாக்கியிருக்கிறது’1 என நீரின் இன்றியமையாமையை ஹீரியா தாஜிசாதக் விளக்குகிறார். நிலத்தின் அடிப்படையில் வாழ்வு பகுக்கப்பட்ட நமது தமிழ் மரபிலும் ‘நீரின்று அமையாது உலகு’ எனும் தெளிவும் ஆறு, நீர் சார்ந்த எண்ணங்களும் அக்கறைகளும், விழாக்களும் உண்டு.

    சூழலியல் உணர்வை மண்ணில் இருந்து பெற்ற இளங்கோவடிகள், தமிழ்நாட்டின் முக்கியமான ஆறுகளையெல்லாம் சிலப்பதிகாரத்தில் காட்சிப்படுத்துகிறார். அவை அமைந்திருக்கும் அழகை மட்டுமல்லாமல் அவற்றை மையமாக கொண்டியங்குகின்ற சூழல் உறவு சங்கிலியை இளங்கோவடிகள் நுட்பமாக உணர்த்துகிறார். அது மட்டுமல்லாது, காப்பியத்தின் திருப்பு முனையையும் பாத்திரங்களின் அழுத்தமான உணர்வுகளையும், காப்பியப் போக்குகளையும் வெளிப்படுத்துவதற்கு  ஆறுகளையும், அதன் இயற்கைக் காட்சிகளையும் பயன்படுத்துகிறார். அவற்றை இக்கட்டுரையில் காண்போம்.

    கானல்வரிப் பாடல்

    சிலம்பின் மிக முக்கியமான திருப்பம் கானல்வரி ஆகும்.

    ‘வாழ்க வெங்கோ மாதவி மடந்தை
    கான்ற பாணி கனக விசயர்தம்
    முடித்தலை நெரித்தது’

                                             (நீர்ப்படைக்காதை (49-51)

    என மாடலமறையோன் மூலம் காப்பியத்தில் உரைக்கிறார்

    வரிப்பாடல் என்பது ஒரு பாடல் வகையாகும். அது பாட்டுத் தலைவன் பிறந்த நிலமும் அந்நிலத்துத் தொழிலும் புலப்படப் பாடுவது என்பார் அடியார்க்கு நல்லார்.2 கானல் வரியில் கோவலன் பாடுவதாக ஆற்றுவரி, சார்த்துவரி கானல்வரி, நிலைவரி, முரிவரி முதலிய பாடல்களும், மாதவி ஆற்றுவரி, சார்த்துவரி, திணைநிலைவரி, மயங்குதிணைநிலைவரி, சாயல்வரி முதலிய இசைப் பாடல்களும் உள்ளன. கோவலன், மாதவி இருவரும் பாடும் ஆற்றுவரிப் பாடலில் காவிரியாற்றை மையமாகக் கொண்டு தத்தமது கருத்துகளை வெளிப்படுத்துகின்றனர்.

    கோவலன் பாடும் பாடல்

    ‘திங்கண் மாலை வெண்குடையான் சென்னிச் செங்கோலது வோச்சிக்
    கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி’ (7:2)

    ‘மன்னுமாலை வெண்குடையான் வளையாச் செங்கோ லதுவோச்சி
    கன்னி தன்னைப் புணர்ந்தாலும் வாழி காவேரி’ (7:3)

    எனக் காவிரியாற்றைக் கோவலன் வாழ்த்துவதாக முதலிரண்டு பாடல்கள் உள்ளன.

    இப்பாடல்கள் மூலம் பாத்திரங்களின் எவ்விதக் கருத்துகளும் இயற்கையுடன் உறவுடையதாக வேண்டுமென்பதில் அடிகளுக்கிருந்த ஆர்வம் புலனாகிறது. முதல் இரண்டு பாடல்களும் ஆற்றையும், அதன் வளத்தையும் பேசுவனவாகவும், அடுத்த பாடல் ஆறு சார்ந்த வாழ்க்கையையும் பயனையும் பேசுவதாக உள்ளன.

    ‘உழவ ரோதை மதகோதை யுடைநீ ரோதை தண்பதங் கொள்
    விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி
    விழவ ரோதை சிறந்தார்ப்ப நடந்தவெல்லாம் வாய்காவா
    மழவ ரோதை வளவன்றன் வளவனே வாழி காவேரி’ (7;4)

    இது கோவலன் பாடும் மூன்றாவது பாடல். புதுப் புனல் கண்ட உழவரின் மகிழ்ச்சியொலி, மதகில் நீர் பாயும் ஒலி, மடை உடைந்து பாயும் ஒலி, புதுப்பனல் பாய்வதை விழாவாகக் கொண்டாடும் மக்களின் ஒலி எனப்பல ஒலிகள் எழுகின்ற காவிரியை அடிகள் வாழ்த்துகிறார்.

    காவிரியில் விழா

    இதில் ‘தண்பதங் கொள் விழவர் ஓதை’யும் எழுந்தது எனக் கூறுவதைக் கண்டோம். இதிலிருந்து காவிரியில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து வரும் போது. மக்கள் அதைப் பெரும் விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர் என்பது தெரிகின்றது. இவ்விழா பல நாட்கள் நடந்திருக்கின்றது. இந்த விழாவை மன்னர் தொடங்கி வைப்பது ஒரு மரபாக இருந்துள்ளது. அத்தலைநாளை மற்ற விழா நாட்களைக் காட்டிலும் சிறப்பாகக் கருதியிருக்கின்றனர்.

    இச்செய்தி,

    ‘விண் பொரு பெரும்புகழ் கரிகால் வளவன்
    தண்பதம் கொள்ளும் தலைநாள் போல’ (6:159-160)

    எனக் ‘கடலாடுகாட்சிக்கு’ உவமையாகக் கூறுவதன் மூலம் அறிய முடிகிறது. மேலும்,

    ‘கழாஅர் பெருந்துறை விழாவின் ஆடும்’      (அகம் 225)

    கலிகொள் சுற்றமொடு கரிகால் காணத்
    தண்பதங் கொண்டு தவிர்ந்த இன்னிசை’        (அகம் 376)

    ஆகிய அகநானூற்றுப் பாடல் வரிகள், இவ்விழாவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. ஆகவே இவ்விழா, சங்க காலம் தொடங்கியே மக்களிடம் இருந்து வந்துள்ளது என்பதும் தெரிகின்றது. ஒவ்வொரு நாகரிகத்திலும், மிகத் தொன்மையான மரபுகள், இந்த அரிய வள ஆதாரத்தை வாழ்க்கையின் தோற்றத்துடனும் தூய்மையுடனும், இனப்பெருக்கத்துடனும் தொடர்புப்படுத்திக் காட்டுகின்றன.5 இவ்வகையில் காவிரியில் நடக்கும் இவ்விழா இனப்பெருக்கத்துடன் தொடர்புடைய ஒரு சடங்கு எனலாம்.

    மாதவியின் வரிப்பாடல்கள்

    மாதவியின் ஆற்றுவரிப் பாடல்களிலும் முதலிரண்டுப் பாடல்கள் காவிரியின் வளத்தைப் பாடுகின்றன. மூன்றாவது பாடல் காவிரியில் சோழ நாட்டுக்கு விளையும் பயனைப் பேசுகிறது.

    ‘மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப்பூவாடை யதுபோர்த்து
    கருங்க யற்கண் விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி’    (7:25)

    ‘பூவார் சோலை மயிலாலப் புரிந்து குயில்களிசைபாடக்
    காமர் மாலை யருகசைய நடந்தாய் வாழி காவேரி’      (7:26)

    இவ்விரண்டு பாடல்களிலும் காவிரியின் சிறப்பைப் பேசுவதன் மூலம், பூக்கள் மலிந்த சோலைகள் (பல்வேறு தாவர வகைகளின் தொகுதி), மயில்கள், குயில்கள், வண்டுகள் முதலிய உயிரிகளின் சூழலும் காவிரியுடன் பிணைந்திருப்பதை விளக்குகிறார்.

    மாதவியின் மூன்றாவது பாடல்,

    ‘வாழி யவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி
    ஊழி யுய்க்கும் பேருதவி யொழியாய் வாழி காவேரி’   (7:27)

    எனக் காவிரியை வாழ்த்துகிறது.

    வேளாண்மைச் சமூகமான தமிழ்ச் சமூகம், உலகை வளர்க்கும் தாயாக ஆற்றைக் கொண்டாடுவதை ஆதிக் கருத்தாகக் கொண்டு விளங்கியிருக்கிறது. இளங்கோ, காவிரியை வளர்க்கும் தாயாகவும் சோழநாட்டைப் பேருதவி பெறும் குழந்தையாகவும் கண்டிருப்பது உணவை அடிப்படையாகக் கொண்ட மனித வாழ்வில் ஆற்றின் பங்கை உணர்த்துவதாக அமைகிறது. தமிழ்மரபு வழிச் சிந்தனையில்  ஆறு தாயாகவும், பெண்ணாகவும் கருதுவது தூய்மையுடனும் உறவுடைய சடங்குக் கருத்தாகும்.

    புரந்தூட்டும் பெண்

    காவிரியாற்றைத் தாய் எனக் கூறும் இளங்கோவடிகள், பெண் எனப் புறஞ்சேரியிறுத்த காதையில் கூறுகிறார்.

    ‘உலகு புரந்தூட்டும் உயர்பேர் ஒழுக்கத்துப்
    புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
    வையை யென்னும் பொய்யாக் குலக்கொடி’         (13:168-170)

    எனப் பாடுகிறார். வையை ‘பூங்கொடி’ என்பது சடங்கியல் கருத்தான தூய்மையை உணர்த்துகிறது. வையையாறு பூங்கொடி, பெண்; அருளும் பெண் அல்லள் ‘உலகு புரந்தூட்டும்’ என்று கூறுவதன் மூலம் ஆற்றுக்கும் மக்களுக்கும் உள்ள உறவை உரிமையின்  பாற்பட்ட உறவாக இளங்கோ கற்பிக்கிறார். இவ்வாறு ‘இயற்கையை அன்னை  என்று அழைத்துச் சீராட்டும் பாங்கு. சுரண்டுவதற்கு எதிரான கலாச்சாரத் தடையாக விளங்கியது’ என்பார் வந்தனா சிவா.6

    கடல் விழா

    தமிழர்கள் ஆறுகள், கடல் நீர்நிலைகள் சார்ந்த விழாக்களைக் கொண்டாடினர். காவிரி கடலோடு கலக்கும் இடத்தில் மக்கள் விழா கொண்டாடினர்,  இவ்விழாவை இந்திரனோடு தொடர்புடைய விழாவாகக் கருத முடியாது, மணிமேகலையிலும் இவ்விழா பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. இந்திர விழாவின் ஒவ்வொரு கூறும், அது மழைச் செழிப்பு குறித்த ஒரு மாபெரும் மந்திரச் சடங்கு என்பதைச் சுட்டிக் காட்டும் என்றும் இங்கு இந்திரன் மழைக் கடவுள் என்ற அர்த்தத்தில் உலகச் செழிப்பைக் குறித்து நிற்கிறான் என்றும் ந. முத்துமோகன்.7 குறிப்பிடுவார். இந்திரன் மருத நிலத்து தெய்வமாவான்.

    ‘வேந்தன் மேய தீம்புனல் உலகமும்’

    என்பது தொல்காப்பிய நூற்பா வரி.8

    உழவைத் தொழிலாகக் கொண்ட மருத நிலத்து மக்களின் மழைத் தேவையைப் பூர்த்தி செய்யும் தெய்வமாக இந்திரன் விளங்கியதால் அவன் தீம்புனல் உலகத் தெய்வமாவான். மேலும்,

    ‘முடிவளை உடைத்தோன் முதல்வன் என்று
    இடி உடை பெருமழை எய்தா தேகப்
    பிழையா விளையுள் பெருவளம் சுரப்ப
    மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க’

    என்று மாங்காட்டு மறையோனின் வைதீக மரபுச் சொல்லாடலும் இந்திரனை மழைக்குரிய கடவுளாகப் பேசுகிறது. பின் எக்காலத்தில் வருணன் மழைக்கடவுள் ஆனான் என்பது அறிய முடியவில்லை. ஆக இந்திரன் மழைக்கடவுள் என்பது உறுதிப்படுகிறது. எனவே ந. முத்துமோகன் சொன்ன கருத்தும் பொருந்தி வருகிறது, மேலும் அடிகள் கடலாடு காட்சியைக் ‘கடல் விளையாட்டு’ என்று குறிப்பிடுகிறார். இதுவோர் கோலாகலத்தன்மை கொண்ட மழை குறித்த சடங்கு விழா என்றும் முடிவுக்கு வரலாம்,

    சிலம்பில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பாடும்போது முதலில் அவரவருக்குரிய ஆறுகளைக் குறிப்பிட்டு வாழ்த்தப்பட்டனர்.

    ‘வாழியரோ வாழி வருபுனல்  நீர் வையை
    சூழும் மதுரையார் கோமான்தன் தொல்குலமே’    (29 : 13)
    ‘வாழியரோ வாழி லரு புனல்நீர் ஆன்பொருநை
    சூழ் தரும் வஞ்சியார்தன் தொல்குலமே’           (29 : 14)
    ‘காவிரி நாடனைப்பாடுதும் பாடுதும்
    பூவிரி கூந்தல் புகார்’                                  (29 : 15)

    என ஆறுகளுடன் இணைத்து மன்னர்களை வாழ்த்தும் மரபு இருந்துள்ளது. நாகரிகத்துக்கும் வளத்துக்கும் காரணமாய் அமைந்த ஆறுகள், அரச குலத்துடன் உறவுபடுத்திப் பேசப்படுவதன் மூலம், பேரரசு உருவாக்கத்தில் அதனுடைய பாங்கு உணர்த்தப்படுகிறது.

    தண்பொருநையில் விழா

    பொருநையாற்றை இளங்கோவடிகள் கூறும்போது, மக்கள் ஆற்றில் வண்ணமும் எண்ணமும் மலரும் கலந்தால், ஆறு வானவில் போல் காட்சியளிப்பதாகக் கூறுகிறார்.

    ‘தண் ஆன் பொருநை ஆடுநர் இட்ட
    வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து
    விண்உறைவில் போல் வீங்கிய பெருந்துறை’      (27:231-232)

    என்கிறார், இவ்வரிகளை நோக்கும் போது விழா வயப்பட்ட பொருநையாற்றின் வருணனையாகவே கொள்ளலாம்.

    பேரியாறு

    இளங்கோவடிகள் வஞ்சிக் காண்டத்தில் மலை வளம் காணச் செல்லும் சேரன் செங்குட்டுவன், பேரியாற்றங்கரையில் தங்கியிருந்ததாகக் கூறுகிறார்.

    கோங்கம் வேங்கை தூங்கிணர் கொன்றை
    நாகம் திலகம் நறுங்காழாரம்
    மதுகரம் ஞிமிரொடு வண்டினம் பாட
    நெடியோன் மார்பில் ஆரம் போன்று
    நெடுமலை விளங்கிய பேரியாற்றங்கரை’

    என அவ்வாற்றைப் புகழ்கிறார்

    கோங்கம், வேங்கை கொன்றை, நாகம் (சுரபுன்னை), திலகம் (மஞ்சாடி சந்தனம்) முதலிய மரங்கள் உதிர்த்த மலர்களால் ஆற்றின் நீர்பரப்பு மறைந்து, பூக்களாக மிதந்து சென்றன. அப்பூக்களை மொய்த்து மதுகரம், ஞிமிறு எனும் வண்டினங்கள் இசை பாட, பேரியாறு மலையின் குறுக்காகச் செல்வது, திருமால் மார்பில் கிடந்த மாலை போன்ற தோற்றம் உடையதாக இருந்தது என்கிறார் இளங்கோ.

    பூப்படர்ந்த ஆறுகள்

    இளங்கோவடிகள் குறிப்பிடும் காவிரி, வையை, பொருநை முதலான எல்லா ஆறுகளும், நீரே தெரியாத அளவுக்குப் பூக்கள் நிறைந்து வருவதாகவே கூறப்படுகிறது. இதனை வருணனையாக மட்டுமே கொள்ள முடியாது.

    தண்நறுங்காவிரித் தாதுமலி பெருந்துறை’

    என்றும்

    மணிப்பூ ஆடை அது போர்த்தும்’

    காவிரியாறு நடப்பதாகவும்,

    புண்ணிய நறுமலராடை போர்த்து’

    வையையாறு பூம்புனல் ஆறாகப் பாய்வதாகவும்,

    வண்ணமும் சுண்ணமும் மலரும் பரந்து’

    பொருநையாறு வருவதாகவும்,

    உதிர்ப்பூம்பரம்பின் ஒழுகுபுனல் ஒளித்து ‘

    பேரியாறு பாய்வதாகவும்,

    அடிகள் குறிப்பிடுகிறார்.

    ஆக, இது வருணனை மட்டுமல்ல என்பது தெளிவு. இளங்கோ, ஆறுகளைப் பூம்புனல் ஆறுகளாகக் குறிப்பிடுவதன் மூலம் ஆறுகளின் கரைகள் பல்வகை மரங்களால் செழித்திருக்கின்றன என்பதை உணர்த்துவதுடன், தமிழ்ப் பண்பாடு சார்ந்த தூய்மைப் பண்பினை ஆற்றுக்கு அளிக்கிறார் என்றே கொள்ளல் வேண்டும்.

    வைகையை வணங்குதல்

    மதுரை நோக்கிச் செல்லும் கோவலனும் கண்ணகியும் வைகையாற்றைக் கண்டவுடன் தொழுகின்றனர் என அடிகள் குறிக்கிறார்.

    ‘புனல்யாறு அன்று பூம்புனல்யாறு யென
    அனநடை மாதரும் ஐயனும் தொழுது’

    என்பார் இளங்கோ.

    இதிலிருந்து கோவலனும், கண்ணகியும் ஆற்றைத் தெய்வமாகக் கருதித் தொழவில்லை; ஆற்றின் சிறப்பையும் வளமையையும் கருதியே தொழுதிருக்கின்றனர் என்பது புலப்படுகிறது. அதிலும் ஆற்றைக் கண்ணகிதான் (அனநடைமாதர்) முதலில் தொழுதாள் எனும் செய்தி பெண்களுக்கும் இயற்கைக்கும் உறவு உண்டு என்ற மானுடவியல் கருத்தைக் காட்டுகிறது.

    காவிரியும் நாடும்

    வேளாண்மைச் சமூகமான தமிழ்ச்சமூகத்தில் சோழநாட்டின் வாழ்வு காவிரியின் வளத்தினாலாகும். சோழ நாட்டின் வாழ்வு, வளம், அரசியல், பொருளாதார நிலை ஆகியவனைத்திற்கும் மூலவூற்றாய் காவிரி திகழ்வதைக் கண்ட அடிகள், அந்நாட்டை,

    ‘காவிரி புரக்கும்நாடு கிழவோன்’ எனவும்

    (காவிரி புரக்கும்நாடு கிழவோற்கு)    (27;171)

    காவிரி நாடன்’     (1;5)

    எனவும் கூறப்படுகின்றான்.

    ‘சமூக நடவடிக்கைகளை உழவர்கள் முன்னின்று இயக்குவது மறைந்துவிட்ட காலை, பண்பாடு என்பது வேளாண்மையுடன் பிணைந்திருந்த காலம் மலையேறிவிட்ட சூழலியல் உணர்வு மட்கிப் போய்விட்ட இன்று இதுபோன்ற செய்திகள் வியப்பை9 மட்டுமே ஏற்படுத்துகின்றன.

    வைதீக சமயமும் ஆறுகளும்

    இந்தியாவில் எந்தவொரு புனிதப் பயணத்திலும் நடுநாயகமாகத் திகழ்வது புனிதசீர்க்கூடல் (சங்கமம்) ஆகும். சிறிது சிறிதாக ஊற்றெடுத்து வரும் தரையடிநீர் முதல் கரைபுரண்டோடும் ஆறுகளின் நீர், அலை பாயும் கடல் நீர் வரையில் நீரின் அருகில்தான் புனிதப் பயணங்கள் தங்கள் தனித்தன்மையைப் பெறுகின்றன என்பார் ருஸ்தம் பருச்சா.10 ஆனால் தொல்தமிழ் மரபில் ஆறுகள் மட்டுமல்லாது, வேறு எவ்வகை நீர்நிலைகளும் புனிதம் என்னும் நிறுவனமயப்பட்ட கருத்தோடு சம்பந்தப்படவில்லை.

    சிலம்பிலும் புனித நீராடுதல், புனித நீராட்டுதல், புனிதப் பயணம் பற்றிய செய்திகள் உள்ளன. ஆனால் அவற்றைப் பேசுபவர்களாக மாங்காட்டு மறையோன், தேவந்தி, மாடலமறையோன் முதலிய பார்ப்பனப் பாத்திரங்கள் மட்டுமே விளங்குகின்றன. இன்று தமிழ் மக்களால் காவிரி, தாமிரபரணி, வைகை முதலிய ஆற்றங்கரையில் ஆடிப்பெருக்குத் துறை, தைப்பூசத் துறை, தைந்நீராடல் ஆகிய விழாக்கள் வைதீக சமய விழாக்களாகத் திகழ்கின்றன. இவ்விழாக்கள் யாவும் ஆறுகளில் நீர் பெருக்கெடுத்து வரும்போது கொண்டாப்படுவனவாகும். ஆகவே இவை தூய்மை, வளமை ஆகிய சடங்கியல் கருத்தோடு ஆதிக் காலத்தில் கொண்டாடப்பட்டிருத்தல் வேண்டும்.

    தாய்வழிச் சமூகமான தமிழ்ச் சமூகம், ஆறுகளை இனப்பெருக்கம், வளமை தூய்மை ஆகிய சடங்கியல் தன்மையோடும், பாதுகாப்பு, அரவணைப்பு முதலிய வாழ்வியல் தன்மையோடும் உறவு கொண்டிருந்தது மேலும் இவ்விழாக்களின் மூலம் மக்களின் ஒட்டுமொத்த கவனமும் ஆற்றைப் பேண வேண்டிய உணர்வும் ஆற்றின் மீது குவிக்கப்படுகின்றது.

    காவிரி கட்டமைக்கும் சூழல் சங்கிலி

    குறுகிய நோக்கியல், அறிவு நதியின் பயணத்தை ஒரு நீளவாக்கில் தான் கவனிக்கிறது. ஆனால் உண்மையில் நதியின் பாய்ச்சல் வட்டப்பாதை சுழற்சியாகும் என்பார் வந்தனா சிவா11. இளங்கோ, காவிரியாற்றை, அதன் உறவு வட்டத்தை நுட்பமாகக் குறிக்கிறார். காவிரியாறு சமூகத்தின் வாழ்விற்கும் இயக்கத்திற்கும் பின்னூக்கியாகத் திகழ்வதையும் உயிரினங்களின் இருப்பையும் உயிர் – சூழல் சங்கிலியையும் கட்டமைப்பதையும் விளக்கிக் கூறுகினார். நாடுகாண் காதையில் அடிகள், காவிரியாறு சார்ந்த உயிரினங்களின் ஒழுக்கத்தைப் படம் பிடித்தாற் போல பேசுகிறார்.

    ’கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
    விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
    கால் பொருள் நிவப்பிற் கடுங்குர லேற்றோடும்
    சூன்முதிர் கொண்மூப் பெயல்வளஞ் சுரப்பக்
    குடமலைப் பிறந்த கொழும்பஃறமோடு
    கடல்வள னெதிரக் கயவாய் நெரிக்கும்
    காவிரிபுதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
    ஒவிறந்தொலிக்கும் ஒலியே யல்ல
    தாம்பியும் கிழாரும்வீங்கிசை யேத்தமும்
    ஓங்குநீர் பிழாவு மொலித்தல் செல்லாக்
    கழனிச் செந்நெற் கரும்புசூழ் மருங்கிற்
    பழனத்தாமரைப் பைம்பூங் கானத்துக்
    கம்புட் கோழியுங் கனைகுர னாரையும்
    செங்கா லன்னமும் பைங்காற் கொக்கும்
    கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
    உள்ளு மூரலும் புள்ளும் புதாவும்
    வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
    பல்வேறு குழுஉக்குரல் பரந்த வோதையும்
    உழாஅ நுண்டொளி யுள்புக் கழுந்திய
    கழா அமயிர் யாக்கைச் செங்கட் காரான்
    சொரிபுற முரிஞ்சிப் புரிஞெகிழ் புற்ற
    குமரிக் கூட்டிற் கொழும்பல் லுணவு
    கவரிச் செந்நெற் காய்த்தலைச் சொரியச்
    கருங்கை வினைஞரும் கலிமரும் கூடி
    ஒருங்கு நின்றார்க்கு மொலியே யன்றியும்
    கடிமலர்க் களைந்து முடிநாறழுந்தித்
    தொழவளைத் தோளு மாகமுந் தோய்ந்து
    சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றிக்
    செங்கய னெருங்கட் சின்மொழிக் கடைசியர்
    வெங்கட் டொலைக்கிய விருந்திற் பாணியும்
    கொழுங்கொடி யறுங்கையுங் குவளையும் கலந்து
    விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
    பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
    ஏரோடு நின்றோ ரேர் மங்கலமும்
    அரிந்து கால் குவித்தோ ரரிகடா வுறுத்த
    பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப்பாட்டும்
    தெண்கினைப் பொருநர் செருக்குடனெத்த
    மண்கிணை முழவின் மகிழிசையோதையும்
    பேர்யாற் றடைகரை நீரிற் கேட்டாங்கு’           (10:102 – 140)

    என்பது பாடல்.

    புதுப் புனல் வெள்ளத்தால் காவிரியில் எழும் ஓசையும், அதன் விளைவால் எழும் பறவைகள், விலங்குகள், மக்களின் ஓசைகளையும் அடிகள் விளக்குகிறார். காவிரி வெள்ளம் குடமலையில் விளையும் அகில், சந்தனம் முதலிய வளங்களை இழுத்து வந்து, முத்து பவளம் கொண்ட கடலை எதிர்கொண்டு அதன் கரையை இடிக்கும்.  காவிரியின் புதுவெள்ளம் மதகு வழி பாய்ந்து விழும்போது ஏற்படும் பெருவோசை எங்கும் நிரம்பியிருக்கும்.

    இவ்வொலியே அல்லாது ஆம்பி, கிழார், ஏற்றம், இறைகூடை முதலிய நீர் இறைக்கருவிகள் ஒலிகளும் கேட்கும். செந்நெல்லும், கரும்பும் வளர்ந்துள்ள மருத நிலத்தில் சம்மங்கோழி, கனைகுரல் நாரை, செங்கால் அன்னம், பைங்கால் கானக்கோழி, நீர்நிறக் காக்கை, உள்ளான், குளுவை, கணந்துட்புள், பெருநாரை ஆகியவை சேர்ந்து ஒலிக்கும் ஒலி, நெற்களங்களைச் சேறாக்கும் எருமைகளை விரட்டும் உழவர்களின் ஆரவாரவொலி, கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தும் உழத்தியர் கள்ளுண்ட களைப்பால் பாடும் விருந்திற்பாணி, உழவர்கள் செந்நெற்கதிரோடு அறுகையும் குவளையும் கலந்து தொடுத்த மாலையை ஏரிலே சூட்டிப் பாரை இரண்டாகப் பிளப்பார் போல போற்றுவார் தொழப் பொன்னேர் பூட்டி ஏரைப்பாடும் ஏர்மங்கலப் பாட்டொலி, கிணைப்பொருநர் இசைக்கும் முழவின் மகிழிசையொலி என எல்லாம் கலந்து கேட்டதாக இளங்கோ கூறுகிறார்.

    பின் மக்களின் வாழ்விடங்களை விளக்குகிறார். ஆறு சூழலமைப்பின் தலைக் கண்ணியாக விளங்குவதையும், மனிதன் விரிந்த நோக்கில் இயற்கையின் ஓர் கூட்டாளியே அன்றி முதலாளி அன்று என்பதையும் தனது கவிதையின் பொருளாக அடிகள் கொண்டிருப்பதை அறிய முடிகிறது. மக்களின் கலை, பண்பாட்டுச் சொல்லாடல்களைக் கட்டிச் சமைப்பதில் ஆற்றுக்கு உள்ள நேரடி உறவைக் காண இயலுகிறது.

    ஆற்றின் மீது நம்பிக்கை

    கோள்களில் சனிக்கோள், இடபம், சிங்கம், மீனமென்னும் மாறுபாடினும், ஆகாயத்தே தூமகேது எனும் விரிந்த கதிரையுடைய வெள்ளிக்கோள் தென்றிசைக் கண்ணே பெயரினும் காவிரியில் வெள்ளம் வரும் என்ற நம்பிக்கை அடிப்படையிலான கருத்தை அடிகள் குறிப்பிடுகிறார். இதே கருத்துக் கொண்ட பாடல் வரிகள் பட்டினப் பாலையிலும்13 உள்ளது. வெள்ளி எனும் மீன் தான் நிற்றற்குரிய வடதிசையில் நில்லாமல் தென்திசையிற் செல்லினும், மழை பெய்ய வேண்டிய காலத்துப் பொய்யாதொழியினும் காவிரியில் வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கும் என பட்டினப் பாலை கூறுகிறது. இளங்கோ, வைகையைப் பொய்யாக் குலக்கொடி என்கிறார். ஆக, அக்காலத்தில் மக்கள் பருவகாலங்களின் மீது கொண்டிருந்த நம்பிக்கைகளை விட, ஆறுகளின் மீது திடமான நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பதனை உணரலாம்.

    அவலமும் ஆறும்

    இளங்கோ அடிகள், காப்பியத்தின் அவல முடிவை வைகை நதியின் இயற்கை காட்சியைக் கொண்டே முன்னுணர்த்துகிறார். மதுரைப் பயணத்தில் கோவலனும் கண்ணகியும் வைகை கரையை வந்தடைகின்றனர்.

    ‘குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
    மரவமும் நாகமும் திலகமும் மருதமும்
    பாடலம் தன்னொடு பன்மலர்விரிந்து
    குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும்
    விரிமலர் அதிரலும் வெண்கூதாளமும்
    குடகமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
    பிடவமும் மயிலையும்         (13; 151 -153)

    ஆகிய மரங்களின் மலர்களும், கரையில் கிடக்கும் முருக்க மலர்களும், அருவி நீரோடு வந்த முல்லை மலர்களும் நிறைந்த வைகையாறு, நீர்ப்பரப்பே தெரியாமல் பூம்புனல் ஆறாய்ப் பாய்கிறது. இக்காட்சியை அடிகள் தனது காப்பிய முடிவை ஏற்றிக் கூறுவதற்குப் பயன்படுத்துகிறார்.

    கண்ணகிக்கு நேர இருக்கும் துன்பத்தினை முன்னமே அறிந்தவள்போல் வைகை தூய மணமிக்க பூக்களை ஆடையாகக் கொண்டு, தன் உடல் போர்த்து, தன் கண்களில் பெருகும் கண்ணீரை மறைத்து மற்றோர் காணாதவாறு சென்றாள் என பின்நிகழப் போகும் அவலத்திற்கு வருந்துவதாக வைகை மீது ஏற்றிக் கூறுகிறார்

    ‘தையற்கு உறுவது தானறிந் தனள்போல்
    புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக்
    கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கி’

    வைகை செல்வதாக அடிகள் குறிக்கிறார். இதன் மூலம் கண்ணகிக்காக முதன்முதல் கண்ணீர் விட்டழும் மானுடத்தன்மை கொண்ட உறவு நிலையினை வைகையாற்றிற்கு அடிகள் கற்பிக்கிறார்.

    அடிக்குறிப்புகள்

    1. ஹீரியா தாஜீ சாதக், ‘விலை மதிப்பில்லா அரிய ஆவணம்’, (க.ஆ), யுனஸ்கோ கூரியர் (மா.இ) சென்னை. தென்மொழிகள் புத்தக நிறுவனம்.
    2. பஞ்சாங்கம், க. 1993 ; சிலப்பதிகாரத் திறனாய்வுகள். – ஒரு பார்வை, சிவகங்கை ; (பிலிட்), ப. 105 (எடுத்தாண்டது)
    3. சோமசுந்தரனார், பொ.வே.1970, அகநானூறு­­, பா.எ. 376, திருநெல்வேலி, கழக வெளியீடு
    4. மேலது, பா. எ. 376

    5. பிரான்ஸ் பெக்கட் 1995 (க.ஆ), போதுமோ நீர்வளம் (கட்டுரை) யுனஸ்கோ கூரியர் (மா.இ).நவம்பர்,ப..21

    1. வந்தனாசிவா 2000 (ம.ப), உயிரோடு உலாவ (இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போராட்டமும் சுற்றுச்சூழலும்) சென்னை – 40, பூவுலகின் நண்பர்கள் ப.25
    2. முத்துமோகன், ந., 1998, ’மணிமேகலைக் காப்பியத்தில் இந்திரவிழா, அமுதசுரபி’ குறியியல் அணுகுமுறை’ அமைப்பியல் பின் அமைப்பில் பெங்களூர், காவ்யா பக். 158-159.
    3. இளம்பூரணர், 1989 (ம.ப.), தொல்காப்பியம் பொருளதிகாரம் திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நாற்பதிப்புக் கழகம்.
    4. 10. டேனியல் பூக்னோ, 1996 ; ‘உரையாடல்’ யுனஸ்கோ கூரியர், (மா.இ) (ஏப்ரல்) ப.9
    5. ருஸ்தம் பருச்சா, ‘திரிவேணி சங்கமம்’ யுனஸ்கோ கூரியர் (மா.இ) சென்னை; தென் மொழிகள் புத்தக நிறுவனம்
    6. வந்தனாசிவா 2000 (ம.ப) ;      ‘உயிரோடு உலாவ (இந்தியப் பெண்களின் வாழ்க்கைப் போராட்டமும் சுற்றுச்சூழலும்)’ சென்னை:பூவுலகின் நண்பர்கள் ப.25
    7. சோமசுந்தரனார், பொ.வே. 1962, ‘பட்டினப்பாலை’ பத்துப்பாட்டு இரண்டாம் பகுதி திருநெல்வேலி – 6 திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்.

    ================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    சிலப்பதிகாரத்தில் முக்கிய அங்கம் வகிக்கும் ஆறுகள் கட்டமைக்கும் சூழலும் பண்பாடும் குறித்த இந்த ஆய்வு, மிக நுணுக்கமான விளக்கங்களில் பரிமளிக்கிறது. இயற்கை சார்ந்த குறிப்புகள், பாத்திரங்களுக்கும் இயற்கைக்கும் உண்டான தொடர்பு ஆகியவை, சிலம்பு முழுவதும் விரவிக் கிடக்கின்றன. காப்பிய மாந்தரின் வாழ்வு, ஆறுகளைச் சார்ந்து அமையும் வண்ணம் புனைந்துள்ளது இளங்கோவடிகளின் தனிப்பெரும் புலமையைப் பறை சாற்றுகிறது என்றால், அந்த வரிகளை, காட்சிகளைப் ஆழமாக ஆராய்ந்து குறிப்புகள் வழங்கியிருப்பது இக்கட்டுரையின் சிறப்பு.

    ஆறுகளைத் தாயாக, பெண்ணாகப் பாடுவது, வேளாண்மைக்கு ஆறுகள்தான் அடிப்படை என வலியுறுத்துவது, மனிதனுக்கும் ஆறுகளுக்கும் இடையே உள்ள உரிமைத் தொடர்புகள், ஆறுகள் தொடர்பான விழாக்கள், மன்னருக்கும் ஆறுகளுக்குமான தொடர்புகள் போன்ற பல செய்திகளும் தக்க சான்றுகளுடன் விளக்கப்பட்டிருக்கின்றன. சிலம்பு பேசும் ஆறுகளின் வகை வகையான வருணனைகள் பல்நோக்குகளில் தொகுத்திருப்பது பாராட்டுக்குரியது.

    ஆறுகள் அழிந்து, வேளாண்மை நலிந்து, ஆறுகள் சார்ந்தே பண்டு அமைந்த புனிதப் பயணங்கள் முக்கியத்துவம் இழந்தது போன்ற தற்கால முரணைக் கோடிட்டுக் காட்டியுள்ளது, நாம் இழந்தவற்றை நினைவுகூர்ந்து வேதனையுற வைக்கிறது.

    ஆற்றின் நேரான ஓட்டம், வட்டமான சுழற்சி என்று மாறி வரும் காப்பிய மாந்தரின் வாழ்க்கைச் சூழலுடன் பொருத்திப் பார்த்துத் தரும் விளக்கம் இன்னுமொரு சிறப்பு.

    மழைக்கடவுள் இந்திரனா, வருணனா என்று பிற அறிஞர் கருத்தைச் சுட்டிக் காட்டித் தரும் விளக்கம், பட்டினப்பாலை, அகநானூறு தரும் ஆறு குறித்த ஒப்பீட்டு விளக்கங்கள் – ஆய்வின் கருத்துகளுக்கு மேலும் மெருகேற்றுகின்றன.

    ஆய்வு முடிவுகளைத் தனியே திரட்டி அளித்திருக்கலாம்.  ஆய்வுக் கட்டுரைக்கான அமைப்பிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். இது, தனியோர் ஆய்வேட்டுக்கான தலைப்பு ஆகும். இதை ஓர் ஆய்வுக் கட்டுரைக்குள் அடக்குவதை விட, ஆய்வுக் கட்டுரைக்கென வரையறுத்த எல்லையுடன் கூடிய தலைப்பினைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

    ================================================================

    Share
  • (Peer Reviewed) சிலம்பில் பெண்களின் அவல நிலை

    கு.வளா்மதி,
    உதவிப் பேராசிரியா்,
    தமிழ்த் துறை,
    தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி,
    சிவகாசி

    சிலம்பில் பெண்களின் அவல நிலை

    முன்னுரை

              ஐம்பெருங்காப்பியங்களுள் முதன்மையானது, ‘சிலப்பதிகாரம்’ ஆகும். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் ஒற்றுமைப் பண்புகளால் ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்று போற்றப்படுகின்றன. இன்பமும் துன்பமும் நிறைந்த மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மையப்படுத்தியே இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன. இலக்கியங்களில் கதைமாந்தா் படுகின்ற துன்ப நிலையைக் கண்டு வாசகா்கள் இரக்கம் கொள்கின்றனா். இந்தத் துன்ப நிலையே ‘அவலம்’ என்று கூறப்படுகின்றது. குடிமக்கள் காப்பியமான சிலப்பதிகாரத்தில் பெரும்பான்மையும் அவலம் இடம் பெற்றுள்ளதால், இது ‘அவலக் காப்பியம்’ என்றும் அழைக்கப்படுகின்றது. ஒரு காப்பியத்தில் முதன்மை மாந்தா், துணை மாந்தா் என்று மாந்தா்கள் பலா் இருப்பா். இளங்கோவடிகள் தோற்றுவித்த மாந்தா்கள் அவா் நினைத்த செயலை வெற்றியோடு செய்து முடித்து விடுகின்றனா். சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள மாந்தா்களில் பலா் – முக்கியமாக முதன்மை மாந்தா்கள் ‘அவல மாந்தா்’களாகவே காணப்படுகின்றனா். ‘சிலம்பில் பெண்களின் அவல நிலை’ பற்றி ஆராய்வதே இங்கு நோக்கமாகின்றது.

    அவலம் – விளக்கம்

                    அவலம் என்பதற்கு ‘வருத்தம்’ அல்லது ‘துன்பம்’ என்று பொருள் கொள்ள முடியும். இதனை ஆங்கிலத்தில் ‘Tragedy’ என்று கூறுகின்றனா்.

                    க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, “அவலம் என்பதற்கு வருந்தத்தக்க அல்லது இரங்கத்தக்க நிலை”1 என்று பொருள் கூறியுள்ளது.

                    தொல்காப்பியா் ‘அவலம்’ என்பதனை ‘அழுகை’ என்னும் பொருள்படக் கூறியுள்ளார்.

                            “இழிவே இழவே அசைவே வறுமையென

                             விளிவில் கொள்கை அழுகை நான்கே” 2

                என்று அவலம் தோன்றுவதற்குரிய நிலைக் களன்களைத் தொல்காப்பியா் குறிப்பிட்டுள்ளார். ‘இவை நான்கும் தன்கண் தோன்றினும், பிறன்கண் தோன்றினும் அவலமாகும்’ என்பது பேராசிரியரின் கருத்தாகும்.

    சிலப்பதிகாரத்தில் அவலத்தின் நிலைக் களன்கள்

                சிலப்பதிகாரத்தில் பிறரால் இகழப்பட்டு எளியனாகும் துன்பத்தைத் தரும் அவலமான ‘இழிவு’ என்பது காணப்படவில்லை. ஏனெனில், இந்நிலை பின்னால் மாறும்; அதை மாற்றும் நிலைமையும் வந்து சேரும்.

                ‘இழவு’ என்பது மீட்க முடியாத தன்மை உடையதாக – பேரிழப்பாகத் தோன்றினால், அவலம் மேலோங்கும். அன்புடையாரின் உயிரிழப்பு, இணையற்ற இழப்பாகச் சிலம்பில் காட்டப்பட்டுள்ளது.

                ஓா் உயர்ந்த குறிக்கோளினைக் கொண்டு படைக்கப்படும் காப்பியத்தில் வறுமை களைந்து வளம் சேர்க்க வேண்டும் என்னும் உயரிய நோக்கம் மிக்கிருப்பதால், ‘வறுமை’ என்ற நிலையில் சிலப்பதிகாரத்தில் மிகுதியும் அவலச் சுவை இடம்பெறவில்லை என்று கூறமுடியும்.

                ‘அசைவு’ என்பது, முன்பு இருந்த நன்னிலை மாறிப் பொலிவு கெட்டு, வேறொரு துயர நிலையை எய்தி அதனால் இறந்துபடுதல் என்பதாகும். தன் செயல்களினாலோ, குறைபாட்டினாலோ பலரும் போற்ற வாழ்ந்தவன் வீழ்ந்து படுகின்ற நிலையே இவ்வசைவாகும். இவ்வாறு வீழ்ச்சியுறுகின்ற அவல வீரர்களுக்காக இரக்கமும் அனுதாபமும் ஏற்படுவது இயற்கை.

                இவை தவிர, பிரிவின்கண் தோன்றும் அவலமும் பெரிதாகச் சிலப்பதிகாரத்தில் காட்டப்பட்டுள்ளது.

    சிலப்பதிகாரக் காப்பியப் போக்கு

                சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள், ‘புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம்’ என்று மூன்று காண்டங்களாகப் பகுத்துள்ளார். சிலப்பதிகாரக் காப்பியப் போக்கைக் கொண்டு ஐந்து பகுதிகளாகப் பகுக்க முடியும்.

    1. ‘கோவலன் – கண்ணகி திருமணத்தில் தொடங்கி, கண்ணகியின் பிரிவுத் துயர் வரை (1 – 4 காதைகள்)
    2. மாதவியிடம் மையல் கொண்ட கோவலன், மாதவியைப் பிரிந்து கண்ணகியிடம் சேரும் வரை (5 – 8 காதைகள்)
    1. புகாரிலிருந்து கோவலன் – கண்ணகி மதுரை செல்லுதல் வரை (9 -12 காதைகள்)
    2. கோவலன் கொலைக்களப்பட்டது முதல் கண்ணகி வழக்குரைத்து, மதுரையை எரிப்பது வரை (13 – 23 காதைகள்)
    3. கண்ணகி பத்தினித் தெய்வமாகும் இறுதி நிகழ்ச்சி வரை (24 – 30 காதைகள்)’

                 காப்பியத்தின் தொடக்கத்தில் திருமணம், அதனைத் தொடர்ந்து மாதவியுடன் ஊடல், கண்ணகியின் கனவு, மதுரை வாழ்க்கையில் அவலம் என்று இறுதி வரை சிலப்பதிகார கதைப் பின்னலில் அவலத்தைக் காண முடிகின்றது.

    அவல மாந்தா்கள்

                சிலப்பதிகாரத்தில் பெண்மாந்தருள் ‘கண்ணகி, மாதவி, பாண்டிமாதேவி’ ஆகியோர் அவல மாந்தர்களாகக் காட்சியளிக்கின்றனர்.

                கதையின் இறுதியில் ‘மாதரி, கவுந்தி, கண்ணகியின் பெற்றோர், மாதவி, மணிமேகலை’  ஆகியோருக்கு நேரிட்ட அவலத்தை மாடலன் தொகுத்துக் கூறுகின்றான். மாதவி மேற்கொண்ட துறவு, அவலத்தை மிகுவிப்பதாக உள்ளது.

    அவலமே வாழ்க்கை – கண்ணகி

               சிலம்பில் கண்ணகியையே முதலில் அறிமுகம் செய்கின்றார் இளங்கோவடிகள்! கண்ணகி உற்ற அவலமெல்லாம் கோவலனால் நேர்ந்தவையே ஆகும். புகாரில் கணவனோடு மகிழ்ந்திருந்த மகிழ்ச்சியை விட   கணவனைப் பிரிந்து வருந்தும் துன்பம் மிகுதி; மதுரையில் மாதரி இல்லத்தில் மகிழ்ந்திருந்த மகிழ்ச்சியை விட, கணவன் கொல்லப்பட்டுக் கிடந்த அவலம் மிகுந்தது. ஒரு மென்மையான பெண்ணின் நல்ல பண்புகள் கூட, வலிய ஆடவனின் குறைகளுக்கு முன்னால் அவளை அவலத்திற்குள் தள்ளுகின்றன. கணவனை இழந்த கண்ணகியே அவலச் சுவையின் ஆழத்தைக் காட்டுகின்றாள்.

                மாதவி ஆர்வ நெஞ்சமொடு, கோவலனோடு அகம் மகிழ்ந்திருந்த வேளையில் கண்ணகி கையற்ற நெஞ்சினளாக வருந்துகின்றாள். இன்பம் துய்ப்பதற்குரிய இளமை வீணே கழிந்தது, கண்ணகிக்கு! அவள் இளமையெல்லாம் வாட, அணிகலன்களை எல்லாம் களைந்து, அவலமாகக் காட்சியளிக்கின்றாள்.

    “கலங்கா உள்ளம் கலங்கக் கடைசிவந்து

     விலங்கி நிமிர் நெடுங்கண் புலம்புமுத்து உறைப்ப”3

                             “அம்செஞ் சீறடி அணிசிலம்பு ஒழிய,

                              மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்

                             கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்,

                             மங்கல அணியின் பிறிதுஅணி மகிழாள்”4

            தன்னைப் புறக்கணித்த கணவனைப் பற்றியும், காரணமாக அமைந்த மாதவியைப் பற்றியும் பழித்து ஒரு சொல்லும் சொல்லாத கண்ணகியின் பண்புநலன்கள், படிப்பவர் உள்ளத்தைத் துன்பத்தில் ஆழ்த்திவிடுகின்றன.

                வெளியுலகம் அறியாதவளாக, கணவன் என்ற நிஜத்தின் நிழலாக வாழும் கண்ணகி, மாதவியின் பொருட்டுத் தன்னைப் பிரிந்தவன் மீண்டும் வந்ததும் ‘சிலம்புள கொண்மின்’ என்று புன்னகைக்கின்றாள்; வேறு பேச்சில்லை. ‘ஏன் பிறந்தீர்? தற்போது வந்த காரணம் என்ன?’ என்று வினவின், மீண்டும் பிரிவானோ? என்ற அச்சத்தால் அவள் அமைதியாக இருந்திருக்கலாம். உளவியல் அடிப்படையில், இது ஒரு சிறந்த உத்தியாகும். ஒருவன் தவறிழைக்கும்போது, சுட்டிக் காட்டித் திருத்துதல் நலம். அவனே திருந்தி வாழும்போது அதனைப் பற்றிப் பேசாதிருத்தலே சிறப்பு. கண்ணகியும் இதனையே கையாளுகின்றாள்.

                ‘வண்ணச்சீறடி மண்மகள் அறிந்திலள்’ என்ற பெருமைக்குரிய கண்ணகி, அவலத்தின் தொடர்ச்சியாகப் புகாரிலிருந்து மதுரைக்கு நடந்தே வருகின்றாள்.

                                           “ ‘மதுரை மூதூர் யாது?’ என வினவ

                                           ஆறுஐங்காதம் நம்அகல்நாட்டு உம்பர்”5

                கோவலனைத் திருத்துவதற்கோ, மீண்டும் அழைப்பதற்கோ எந்த முயற்சியும் செய்யாத கண்ணகி, மதுரை செல்லலாம் ‘எழுக’ என்றவுடன் உடன் சென்றவள், கவுந்தியடிகளின் ஆதரவால் மாதரி வீட்டில் தங்கியிருக்கும் வேளையில்தான், அதுவும் தனது தவறுகளை எண்ணிக் கோவலன் வருந்திய பின்னரே சிறிது பேசுகின்றாள்.

                                       “அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்

                                        துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்

                                        விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை”6

                என மனை வாழ்க்கைக்குரிய அறங்களைக் கணவனோடு கூடி நிறைவேற்றும் நல்ல மனைவியாக வாழ முடியாத தன்னுடைய அவல நிலையை முதலில் கூறுகின்றாள், கண்ணகி! பெற்றோருக்கும் மற்றோருக்கும் தன் துன்பம் தெரியாத வண்ணம் தான் வாழ்ந்ததைச் சொன்ன கண்ணகி இறுதியில்,

                                          “போற்றா ஒழுக்கம் புரிந்தீர், யாவதும்

                                         மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின்

                                         ஏற்றெழுந்தனன் யான்”7

                 என்று முடிக்கின்றாள். குலத்திற்கு ஒவ்வாத, ஒழுக்கக் கேடுகளைத் தாங்கள் புரிந்தீர். யானோ பெண்களுக்கே உரிய கற்பு நெறியைக் கடைப்பிடித்ததால் ‘எழுக’ என்றவுடன் எழுந்தேன் என்பது, கண்ணகியின் பேச்சு!

                 கணவனின் தவறுகளைக் கண்டிக்காத, அவனோடு விவாதம் செய்யாத, தனக்கென ஒரு சுயம் இல்லாத, தன்னைப் பற்றிச் சிறிதும் சிந்திக்கத் தெரியாத ‘கண்ணகி’யே சிலப்பதிகாரத்தில் அவலத்தின் முழு உருவாகத் திகழ்கின்றாள்.

                மதுரையில் கணவனோடு சில நாட்கள் வாழும் வாய்ப்பே கண்ணகிக்குக் கிடைத்தது. சிலம்பு விற்று வருவார், சிறந்த வாழ்க்கை அமையும் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் கணவன் ‘கள்வன்’ என்று கொலை செய்யப்பட்டான் என்பது அவலத்தை மிகுவிக்கும் காட்சியாக அமைந்துள்ளது.

    “கணவனைப் பிரிந்த அவலம் அவளைமிகு மானுடநிலைக்கு உயர்த்தியது;

     கணவனை இழந்த அவலம் அவளைத் தெய்வ நிலைக்கு உயர்த்தியது”8

                என்று ம.ரா.போ.குருசாமி குறிப்பிட்டுள்ளார். காலம் காலமாக அடிமைப்பட்டு, வதைபட்டு, பத்தினியாக உருவெடுத்து நிற்கும் ஓர் அடிமை வர்க்கத்தின் எச்சமே, கண்ணகி. அவ்வாறு வாழ்ந்தவள், பாண்டியன் என்ற ஆடவனை, அரசனை எதிர்த்ததன் மூலம் புரட்சிப் பெண்ணாகச் சித்திரிக்கப்பட்டுள்ளாள். சிந்தித்தால், இங்கும் தன்வாழ்வு சீரழிந்ததற்காக அல்லாமல், கணவனுக்கு ஊறு நோ்ந்து விட்டதற்காகவே கண்ணகி பொங்கி எழுவதை உணர முடிகின்றது.

                அடிமைகளிடம்தான் புரட்சி மனப்பான்மை தோன்றும். அடக்கப்பட்டும், ஒடுக்கப்பட்டும் வாழும் ஒரு சமூகம் என்றாவது ஒருநாள், ஏதாவது ஒரு வகையில் தனது எதிர்ப்பைக் காட்டும் கண்ணகியும் நீதி இறந்ததற்காகப் போராடவில்லை. தன் கணவன் கொல்லப்பட்டுவிட்டான் என்பதாலேயே சீறுகின்றாள். அடிமனத்தில் அடக்கி வைத்திருந்த கண்ணகியின் உள்ளக் குமுறல்கள், எரிமலையாக வெடித்துச் சீறியதில் வியப்பொன்றும் இல்லை.

                                        “மெய்யில் பொடியும் விரித்த கருங்குழலும்

                                         கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும் வையைக்கோன்

                                         கண்டளவே தோற்றான்”9

                 கண்ணகி, மதுரை மாநகரில் தலைவிரி கோலத்துடன், கலங்கிய உள்ளத்துடன் நீதி கேட்க வரும்போது, அவளது அலங்கோலம் அவளது அவலத்தைப் பிரதிபலிக்கின்றது.

                 கோவலன் கொலையுண்டபின், அவனைத் தேடி அலைந்து, அவன் உடல் கிடக்குமிடம் சென்று கதறி அழும் கண்ணகியின் நிலை, அவலத்தின் உச்சக்கட்டமாகும். இதனை,

                                        “அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன்

                                         தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்ற”10

                  என்கிறார் இளங்கோவடிகள்! புகார் நகரில் அமைதியாக வாழ்ந்த கண்ணகி, மதுரையில் அரசனை எதிர்க்கவும், நகரை எரிக்கவும் காரணம், அவள் பெற்ற  ‘அவலக் கொடுமைகளே’ ஆகும்.

                 கணவனை இழந்தபின் கற்புடைப் பெண்களைப் போல் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் வாய்ப்பும் கிடைக்கவில்லை. தன் கணவனைப் பறிகொடுத்த கண்ணகியின் வாழ்வில்தான் அவலம் மிகுந்திருக்கின்றது. காப்பியத் தலைவியான கண்ணகி படுகின்ற துன்பங்களே, சிலப்பதிகாரக் கதையின் அவலத்திற்குக் காரணமாக அமைந்துள்ளன. பிற பாத்திரங்கள் படுகின்ற துன்பத்தைக் காட்டிலும், கண்ணகி படுகின்ற அவலமே மிகுதியாகும்.

    மாதவி சந்திக்கும் அவலம்

                 கணிகையர் குலத்தில் பிறந்தாலும் குலமகளாக வாழ ஆசைப்பட்ட மாதவியின் வாழ்வு, அவல வாழ்வாக அமைந்துள்ளது. கணவன் போன்ற கோவலனால் ஐயப்பட நேரிட்ட ஒரே அவலப் பாத்திரம், இரக்கத்திற்குரிய ‘மாதவி’ ஒருத்தி மட்டுமே! மாதவியின் இந்திர விழா ஆட்ட முத்திரைகளும் வேடப் புனைவுகளும் அவையோரின் ஆரவாரப் பாராட்டுகளும் கோவலன் மனத்தில் வெறுப்பையே விளைவித்தன. ஆழமான இந்த வெறுப்பின் அடையாளமாகவே கானல்வரிப் பாட்டில் கண்ணகியின் மேன்மையைப் பாராட்டிப் புகழ்கின்றான், கோவலன்.

                                            “மன்னும் ஓர் குறிப்பு உண்டு,

                                            இவன்தன் நிலை மயங்கினான் எனக்

                                            கலவியால் மகிழ்ந்தாள் போல்,

                                            புலவியால் யாழ் வாங்கித்

                                            தானும் ஓர் குறிப்பினாள் போற்,

                                            கானல் வரிப்பாடல் – பாணி”11

                    மாதவியின் மனத்தைப் புண்படுத்த வேண்டும் என்று கோவலன் பாடுகின்றான். மாதவி அதே துன்பத்தைக் கோவலனுக்கு உண்டாக்க, அவள் பாட  இருவரும் மனம் புண்பட்டுப் பிரிய நேரிடுகின்றது. தான் அடைந்த பிரிவுத் துன்பத்தைக் கோவலனுக்குப் புலப்படுத்தினால், தன் மீது இரக்கம் கொண்டு அவன் வரமாட்டானா? என்பதே மாதவியின் ஏக்கம். அந்த ஏக்கமும் பொய்த்து, அவலத்தை மிகுவிக்கிறது.

                                         “இரவிடைக் கழிதற்கு, என் பிழைப்பு அறியாது,

                                          கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்”12

                  கோசிகனிடம் மாதவி கொடுத்து அனுப்பிய இரண்டாம் மடல், அவளுடைய அவல உள்ளத்தின் உச்சமாக அமைந்துள்ளது. கோவலன் கொலையுண்ட செய்தியை அறிந்ததும் மாதவி தன் அழகு நலன்களையெல்லாம் தொலைத்து, மணிமேகலையுடன் துறவு மேற்கொள்கிறாள். கோவலனைப் பிரிந்து, அவன் இறந்தவுடன் துறவு பூணும் மாதவி பாத்திரம் அவலத்திற்கு உரியதாகும்.

    அரசியின் இறப்பு – அவலம்

                 சிறப்பு மிகுந்த பாண்டிய மன்னன், நாடக மகளிரின் நடனத்தால் ஊடல் கொண்ட அரசியின் ஊடல் தீர்ப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளான். சூழ்நிலைக்கேற்ப பொற்கொல்லனின் வருகை அமைகிறது.

     “வினைவிளை காலம் ஆதலின், யாவதும்

      சினைஅலா; வேம்பன் தேரான் ஆகி”13

                      கதைப் போக்கை நடத்தி வைக்கின்ற பொற்கொல்லன்தான் ‘கள்வன்’ என்பது மன்னனுக்குத் தெரியாதது பேரவலமாக அமைந்துள்ளது.

                 வழக்குரைக்க வந்த கண்ணகியைக் கண்டதும் ‘கணவனை இழந்தாள் கடையகத்தாளே’ என்று வாயிற்காவலன் கூறியமை, பாண்டிய மன்னனின் நினைவுக்கு வரவில்லை. அவன் வாழ்க்கையில் பரபரப்பூட்டப் போகும் ஒன்றைப் பற்றி அறியாதவனாக இருக்கும் பாண்டிய மன்னனின் நிலை இரங்கத்தக்கதாக உள்ளது.

                                                    “ ‘நற்றிறம் படராக் கொற்கை வேந்தே!

                                                      என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே!’எனத்

                                                       தேமொழி! உரைத்தது செவ்வை நன்மொழி;

                                                       யாம் உடைச்சிலம்பு முத்துஉடை அரியே”14

                 ‘தேராமன்னா! செப்புவது உடையேன்’ என்று தனியாக வந்து நீதி கேட்கும் கண்ணகியின் அவலத்துடன், புகழ்மிக்க, செங்கோலாட்சி புரிந்த பாண்டிய மன்னன், நீதிநெறி பிழைத்தமை கவலைக்கிடமாக உள்ளது. கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பை உடைத்து தன் அறியாமையை இந்தப்பெண் உணர்ந்து தெளியட்டும் என்பது பாண்டிய மன்னனின் எதிர்பார்ப்பு. மன்னனின் நம்பிக்கையும் நல்ல எண்ணமும் ஒரு  நொடிப் பொழுதிற்குள் நொறுங்கி விடுகின்றது. இதனால், பாண்டிய மன்னன் மீது இரக்கம் ஏற்படுகின்றது. கண்ணகி உடைத்த  சிலம்பில் இருந்து மாணிக்கப்பரல் பாண்டிய மன்னனின் முகத்தில் தெறித்து விழுந்ததும், தன்னை முதன்முதலாக உணரத் தொடங்குகின்றான்.

                                                      “யானோ அரசன்? யானே கள்வன்

                                                      மன்பதை காக்கும் தென்புலம் காவல்

                                                      என்முதல் பிழைத்தது; கெடுக என்ஆயுள்என

                                                       மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே”15

                 பாண்டிய மன்னனின் இறப்பு மட்டும் நிகழாமல் இருந்திருந்தால், பொற்கொல்லனுக்கு அடுத்த குற்றவாளியாக மன்னன் காணப்படுவான்; ஆனால், தனக்குத் தானே கெடுமொழி கூறிக்கொண்டு சாகக்கூடிய கொடும்சாவே அவன் மீதுள்ள வெறுப்பைத் துடைத்து விடுகின்றது.

                                                   “கணவனை இழந்தோருக்குக் காட்டுவதுஇல் என்று

                                                    இணைஅடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி!”16

                பாண்டிய மன்னனின்  இறப்பு, அரசியின் முடிவுக்குக் காரணமாக அமைந்து, சிலப்பதிகாரக் காப்பியத்தில் மேலும் அவலத்தை மிகுவிக்கின்றது.

    அவலத்தின் பயன்கள்

                இலக்கியங்களில் இடம்பெறும் கதை மாந்தருக்கு அவலம் நேரும்போது, வாசகன் தன்னை ஒப்பிட்டுப் பார்த்து அவர்கள் நிலையில் தான் இருந்திருந்தால், இத்தகைய அவலம் தனக்கும்  நேரிட்டிருக்குமே என்ற அச்சம் ஏற்படும். அதன் காரணமாக அவலத்திற்கு உள்ளானவர்கள் மீது இரக்கமும் தோன்றுகின்றது. பார்ப்பவர் உணர்வு வெளிப்பாட்டிற்கு இத்தகைய இலக்கியங்கள் வடிகாலாக அமைந்துள்ளன. இதோடு,  அவலத்தின் மூலம் இளமை, செல்வம், யாக்கை போன்றவற்றின் நிலையாமையை  எடுத்துக் காட்டி, வாழ்க்கையின் இலக்கைத் தெளிவுபடுத்துகின்றான், படைப்பாளன். மனித வாழ்வில் நிறைந்துள்ள இன்னல்களை அறிவதன் மூலம் உலக வாழ்வின் இயல்பு குறித்தும், வாழ்வில் ஏற்படும் நம்பிக்கை குறித்தும் அறிந்துகொள்ள முடிகின்றது.

    தொகுப்புரை

                சிலப்பதிகாரத்தில் ‘அவலம்’ என்ற சொல், ‘வருத்தம் (அல்லது) இரக்கம்’ என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தின் பாத்திரப் படைப்பு நடப்பியல் வாழ்வில் காணக்கூடிய மாந்தர்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது. சிலப்பதிகாரக் காப்பியம் – ‘அவலக் காப்பியம்’ ஆதலின் அவலத்தை மிகுவிக்கும் ‘சொல்லாட்சிகள்’ இடம் பெற்றுள்ளன. அவலக் காப்பியமான சிலப்பதிகாரத்தில் எதிர்பாராமல் நடைபெறும் சில தற்செயலான நிகழ்ச்சிகள் அவலத்திற்குக் அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளன. சிலப்பதிகாரத்தில் எதிர்நோக்கும் நிகழ்ச்சிகளுக்கு முரணான எதிர்த்திருப்பங்கள் நடந்து, அவலத்தை மிகுவிப்பதாக உள்ளன. ‘துன்ப மாலை’ என்ற காதை, கண்ணகியின் தீராத் துயரத்தை எடுத்துரைக்கின்றது. தற்குறிப்பேற்ற அணி போன்றவற்றின் மூலமும் அவலம் வெளிப்படுகின்றது. சிலப்பதிகாரத்தில் ‘ஊழ்வினை’ ஒரு கதாப்பாத்திரம் போல் செயல்பட்டு, அவல நிகழ்ச்சிகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.

    அடிக்குறிப்புகள்

    1. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.50
    2. தொல்காப்பியம், மெய்ப்பாட்டியல், நூற்பா – 5
    3. புகார்க் காண்டம், அந்திமாலை சிறப்புச்செய் காதை, 70,71
    4. புகார்க் காண்டம், அந்திமாலை சிறப்புச்செய் காதை, 47-50
    5. புகார்க் காண்டம், நாடுகாண் காதை, 41,42
    6. மதுரைக் காண்டம், கொலைக்களக் காதை, 71-73
    7. மதுரைக் காண்டம், கொலைக்களக் காதை, 81-83
    8. ம.ரா.போ.குருசாமி, சிலம்பு வழிச் சிந்தனை, ப.55
    9. மதுரைக் காண்டம், வழக்குரை காதை, வெண்பா – 3
    10. மதுரைக் காண்டம், ஊர்சூழ்வரி, 64,65
    11. புகார்க் காண்டம், கானல்வரி, கட்டுரை, 24
    12. மதுரைக் காண்டம், புறஞ்சேரி இறுத்த காதை, 90,91
    13. மதுரைக் காண்டம், கொலைக்களக் காதை 148,149
    14. மதுரைக் காண்டம், வழக்குரை காதை, 65-68
    15. மதுரைக் காண்டம், வழக்குரை காதை, 75-78
    16. மதுரைக் காண்டம், வழக்குரை காதை, 80,81

    ==========================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பண்டைக் காலம் தொடங்கி இன்றுவரை பெண்கள் எதிர்நோக்கும் அவலங்களுக்குக் காரணங்கள் மாறினாலும், இன்னல்கள் இன்னமும் அதே போலவே நீடிக்கின்றன.

    சிலம்பில் சித்திரிக்கப்பட்டுள்ள பெண்களின் அவலம் குறித்த இக்கட்டுரை, அவலத்தின் இலக்கண விளக்கம் தொடங்கி எந்தப் பாத்திரம் யாருடைய எந்தச் செயலால் அவலமுறுகிறது என்பதை வெளிப்படுத்துகிறது. கண்ணகியின் அவலம் குறித்துப் பேசும் பலரும் பெண்ணியம், அடிமைத்தனம் என்ற ஒரே கோட்டைப் பற்றிக் கொண்டு வாதிடுவர். இந்த ஆய்வுக் கட்டுரையில், அப்படியான கருத்துகளை வலுப்படுத்தாமல், கணவனிடம் கொண்ட அன்பு, சூழலால் உண்டான விளைவுகள், பிற மாந்தரின் செயல் விளைவுகள் என்ற நோக்கில் அவளின் அவலங்களை ஆய்ந்திருப்பது பாராட்டுக்குரியது. மாதவி படும் அவலம், துறவு மூலம் காணும் தீர்வு, அரசன் நீதி தவறியதால் உயிர் நீக்கும் அரசியின் அவலம் – இங்ஙனம் அவலங்கள் அவர்கள் பாத்திரப் படைப்பை மெருகேற்றுவதையும் இக்கட்டுரை எடுத்துக் காட்டுகிறது.

    இந்த ஆராய்ச்சியைப் பன்முகங்களில் விரிவுபடுத்தும் முகமாக, கண்ணகியின் அவலங்கள், அதற்குக் காரணமான நிகழ்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கலாம். மாதவி மற்றும் அரசியின் அவலங்கள், பிற பாத்திரங்களின் அவலம், அதனால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், பாத்திரம் செம்மையுறும் விதம் குறித்து விரிவாக இந்த ஆராய்ச்சியைப் பெரிய அளவில் எடுத்துச் செல்லும் சாத்தியக் கூறுகள் உள்ளன. இந்தப் பெண்களின் பாத்திரப் படைப்பு மூலம், தற்காலச் சமுதாயம் என்னென்ன கற்றுக் கொள்ளலாம் என்ற கோணத்திலும் ஆய்வுகளை விரிவாக்கலாம்.

    காப்பியப் பெண்களின் அவலங்கள் மூலம் அவர்கள் வாழ்வு மாறியது எங்ஙனம், அவர்கள் கற்றது என்ன, அதன் மூலம் பிறர் அறியும் பாடங்கள் என்ன என்ற கருத்துகளை வலியுறுத்தும் இக்கட்டுரை, காரணங்கள் மற்றும் விளைவுகளையும் விரிவாகவும் சிறப்பாகவும் ஆராய்ந்து, நம் பாராட்டுகளைப் பெறுகிறது.

    ==========================================================

    Share
  • (Peer Reviewed) சிலம்பில் மலர்கள்

    முனைவர் வீ. மீனாட்சி
    உதவிப் பேராசிரியர்,
    முதுகலைத் தமிழாய்வுத் துறை,
    பிஷப் ஹீபர் கல்லூரி,
    திருச்சிராப்பள்ளி – 620 017

    சிலம்பில் மலர்கள்

    பழந்தமிழர் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டுள்ளனர். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த அவர்களது வாழ்வியலைத் தமிழ் இலக்கியங்கள் வழி அறிய இயலுகிறது. ஐந்திணைக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த பழந்தமிழரின் இலக்கியங்கள், தமிழ்நாட்டில் வளர்ந்த மரங்கள், செடிகள், கொடிகள் அவற்றில் மலர்ந்த மலர்கள் ஆகியவை பற்றி அறிய உதவுகின்றன. பழந்தமிழர்கள் நிலங்கட்கு அந்நிலங்களில் மலர்ந்த சிறப்பான மலர்களைக் கொண்டும், மரங்களைக் கொண்டும் குறிஞ்சி (மலர்), முல்லை (மலர்), நெய்தல் (மலர்), மருதம் (மரம்), பாலை (மரம்) என்று பெயரிட்டு இருப்பது அவர்கள் இயற்கை மீது கொண்ட ஈடுபாட்டையும் சூழலியல் நோக்கினையும் விளக்குகின்றன. இதனடிப்படையில் பரல்களை மையமிட்டு இயற்றப்பட்ட சிலம்பில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் மலர்ந்த மலர்களைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

    மலர் – விளக்கம்

    மலர் என்பதற்குப் பூ; மலரென்னேவல் ; மலர்ச்சியானது என்றும் மலர்தல் என்பதற்கு எதிர்தல், தோன்றல், நிறைதல், விரிதல், மொட்டவிதழ், அகலுதல், பரத்தல், மனமகிழ்தல், மிகுதல் என்றும் கழகத் தமிழகராதி பொருள் உரைக்கின்றது.

    சிலம்பில் மலர்ந்த மலர்கள்

    பழந்தமிழரின் இலக்கியங்கள் இயற்கையின் பொருண்மையை உற்று நோக்கி உணர்ந்து படைக்கப்பட்டுள்ளன. இதில் தாவரத்தின் ஓர் உறுப்பான மலர்கள், அழகு, குளிர்ச்சி, மகிழ்ச்சி, கற்பு ஆகியவற்றின் குறியீடாக எடுத்தாளப்பட்டுள்ளன. இதில் செவ்வியல் இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில் மூவேந்தர்களின் இயற்கை எழில் சூழ்ந்த நாடுகளில் மலர்ந்த மலர்களும் அம்மலர்களின் இன்றைய அறிவியல் பெயர்களும் பின்வருமாறு :

    வேங்கை (Pterocarpus marsupium Roxb.&P.Santalinusl.) ஆத்தி (Bauhiniaracemasa Lam.)  வேம்பு            (Azadirachta indica A.Juss) பனை (Borassus flabellifer L.) கொன்றை (Cassia fistula .L) செந்தாமரை (Nelumbo nucifera Gaertn.)செங்கழுநீர் (Nymphaea pubescens Willd.)  சேதாம்பல் (Nymphaea pubescens Willd.) குவளை (Nymphaea sp.) கருவிளை (Clitoria ternatea L.) செங்கூதாளம் (Ipomoea sepiaria keen) வெட்சி (Ixora coccinea L.) தாழை (Pandanus odoratissimus L.f) ஆம்பல் (Nymphaea pubescens willd)  சேடல் (Jasminum sp) நெய்தல் (Phyllanthus emblica. L.) பூளை (Aerva tomentosa Forssk) மருதம் (Lagerstroemia reginae Roxb) கழுநீர் மலர் (Nymphaea pubescens willd) கருங்குவளை (Nymphaea sp) இலவம் (Bombax ceiba L.)முல்லை (Jasminum auriculatum Vahl) குமிழம் (Gmelina arborea Roxb) காந்தள் (Gloriosa superba L.)  பீர்க்கம்பூ (Luffa cylindrica (L) M. Roemer) காயாம்பூ (Memecylon edule Roxb) அசோகம் (Saraca asoca (Roxb.) De wilde) குரவு            (Tarenna asiatica (L.) kuntze) மகிழம் (Mimusops elengi L.) கோங்கு (Cochlospermum gossypium (L.) Alston)  வேங்கை (Pterocarpus marsupium Roxb. P. Santalinus. L) வெண்கடம்பு (Mitragyna parvifolia (Roxb) korth) சுரபுன்னை (Mammea suriga (Buch-Ham) kost) மஞ்சாடி (Adenanthere pavonina L.) செருந்தி (Ochna obtusata DC) செண்பகம் (Michelia champaca L.) பாதிரி (Stereospermum chelonodies (L.f) DC) குருகத்தி (Hiptage benghalensis (L.) kurz) செம்முல்லை (Iragia plukene Hi.R – sm’)  முசுட்டை (Rivea hypocrateriformis (Desr.) choisy)  மோசி மல்லிகை (Jasminum angustifolium vabl.) நறுந்தாளி (Ipomoea marginata) வெட்பாலை (Wrightia tinetora (Roxb.) R.Br.) பிடவம் (Randia malabarica Lam.) பகன்றை (Operculina turpethum silva moriso) மயிலை (Jasminum sp) இருவாட்சி (Jasminum sp) முள்முருங்கு (Erythrina stricta Roxb.) மல்லிகை (Jasminum sambac (L.) Aiton var. sambae) பித்திகை (Jasminum sp) செங்கழுநீர் (Nymphaea pubescens wild) கத்திகை (Hiptage benghalensis (L.) kurz) எட்டி (Strychnox nux – vomica L.)  வாகை (Albizia odoratissimus (L.f) Benth.) நீலோபற்மலர் (Nymphaea nouchali Burm.F) புன்னை (Calophyllum inophyllum L.) அடம்பம் (Ipomoea pes. caprae (L.) R.Br)  நந்தியாவட்டை (Eravatamia divaricata (L.) Burkill) நரந்தம் (Citrus sp) ஆச்சா (Hardwickia binata Roxb.) சந்தனம் (Santalum album L.)  சேமரம் (Alangium salvifolium (L.F) wang)  மாமரம்  (Mangifera indica L.) புன்கு  (Pongamia pinnta (L.) pierre) குறிஞ்சி (Phlebophyllum kunthianum Ness) காஞ்சி (Trewia polycarpa Benth) மந்தாரம் (Baubinia purpurea L.) தும்பை (Leucas cajan (L.) Mill sp.) வஞ்சி (Thespesia populnea (L.) sol. ex. corr?) பச்சிலை (Garcinia xanthochymus Hook .F) கடம்பம் (Neolamarckia Cadamba (Roxb.) Bosser) எனப் பல வகையான மலர்கள் மலர்ந்து மணம் வீசியிருக்கின்றன.

    இப்பூக்களை இளங்கோவடிகள்

    ‘கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும்
    காட்டிய பூவின்………………’

                            (சிலம்பு. அழற்படுகாதை : 93, 94)

    என்று குறிப்பிடுகின்றார். இங்கு இளங்கோவடிகள் சிலம்பில் எடுத்தாளப்படும் மலர்களை மரத்தின், செடியின் கிளையில் மலர்வதைக் கோட்டுப்பூ என்றும் கொடியில் மலர்வதைக் கொடிப்பூ என்றும் நிலத்தின் புதரில் மலர்வதை நிலப்பூ என்றும் நீரில் மலர்வதை நீர்ப்பூ என்றும் நான்கு வகைப்படுத்தியுள்ளார்.

    இதுபோன்ற பகுப்புமுறையினைச் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கரோலஸ் லின்னேயஸ் (Carl Linnaeus May 23, 1707 – January 10, 1778)  எனும் அறிவியலார் தாவர வகைப்பாட்டியல் (Plant Taxonomy)  என்று உலகிற்கு அளித்துள்ளார். அதற்கு முன்பே கோட்டுப்பூ, கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ என்று பழந்தமிழர் வகைப்பாடு செய்து தாவரக்குடும்பப் பகுப்பை உலகிற்கு அளித்திருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாக அமைகின்றது. இவ்வாறு இளங்கோவடிகள் தான் வகைப்படுத்திய மலர்களைச் சிலம்பில் கையாண்டுள்ள  விதம்பற்றிப் பின்வரும் பகுதி எடுத்துரைக்கின்றது.

    மன்னரும் மலர்களும்

                நாடாளும் மன்னர்கள் தங்களுக்குரிய அடையாளச் சின்னங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம்  அளித்துள்ளனர். மன்னர்களைக் குறிப்பிடும்போது அவர்கள் சூடியிருந்த மலர்மாலைகள் அடையாளமாகக் காட்டப்படுகின்றன.

                ‘சேர, சோழ, பாண்டியரை மூவேந்தர் என அழைக்கின்றோம். வேந்தர் என்ற சொல்லே வேய்ந்தோர் என்பதன் மரூஉ என்பர். தலையில் முடி வேய்ந்தோர் என்றும் தமக்கெனக் கொண்ட மரபுடன் மலர்வேய்ந்தோர் என்றும் சிந்தித்துப் போற்றும் வகையில் முடியில் மலர் மாலையினை இணைத்துச் சூடியிருக்கின்றனர். பொதுவாக மலர்களை-மலர்மாலைகளை-முடியுடன் இணைத்து வேந்தர்கள் சூடும் பழக்கம் இந்தியப் பெருநாடு முழுவதிலும் இருந்துள்ளது’ (தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, செ.வைத்தியலிங்கன், ப.47.) எனும் கருத்துக்கு ஏற்ப சிலம்பில் மூவேந்தரும் தனக்கென்று தனியாக ஒரு அடையாள மாலை சூடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதைக் காண இயலுகிறது.

                ‘ஆரங் கண்ணிச் சோழன் ………………..’

                                                                              (சிலம்பு. பதிகம் : 12)

                ‘ஆர்புனை சென்னி அரசற்கு அளித்து’                (சிலம்பு. நடுகல்காதை : 211)

    என்று சோழ மன்னன் ஆத்தி மரத்தில் பூக்கும் பூக்களை மாலையாகச் சூடியிருப்பதை இளங்கோவடிகள் சுட்டியுள்ளார்.

                ‘சினையலர் வேம்பன் தேரானாகிக்’

                                                                             (சிலம்பு. பதிகம் : 28)

                ‘இலைதார் வேந்தன் எழில் வான் எய்தக்’                                                               (சிலம்பு. நீர்ப்படை காதை : 62)

    என்று பாண்டிய மன்னன் வேப்பம் பூ  மாலையினை அணிந்துள்ளதையும் அப்பூவின் பெயரால் வேம்பன் என்று அழைக்கப்படுவதையும் இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.

                ‘தோடுஆர் போந்தை தும்பையொடு முடித்த’                                                     (சிலம்பு. நீர்படைக்காதை : 112)

                ‘தோடுஆர் போந்தை வேலோன் தன்நிறை’                                                          (சிலம்பு. நீர்படைக்காதை : 173)

    என்று சேரன் செங்குட்டுவன் இதழ்செறிந்த பனம் பூவினை  மாலையாகச் சூடினான் என்பதைச் சிலம்பு காட்டுகிறது.

    நாட்டு வளமும் மலர்களும்

                ஒரு நாட்டின் வளம் என்பது இயற்கை வளத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் மலர்கள் வளத்தின் குறியீடாக அமைகின்றன. இதனால்தான் இன்றும் ஒவ்வொரு நாட்டின் அடையாளச் சின்னங்களில் மலர்கள் இடம்பெறுகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்கு நிலங்களின் வளத்தினை அங்கு மலர்ந்த மலர்களின் மூலம் சிலப்பதிகாரம் காட்சிப்படுத்துவதால் உணரமுடிகிறது. இதில் முல்லையும் குறிஞ்சியும் தம் முறைமையில் திரிந்த நிலையில் உருவாகும் பாலை நிலத்தில் கொற்றவையின் அருளால் அங்குள்ள மரங்களில் மலர்கள் மலர்வதாக இளங்கோவடிகள் காட்டியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

                ‘நாகம் நாறும் நரந்தம் நிரந்தன

                …………………………………………………….

                …………………………………………………….

                திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே’                                                                         (சிலம்பு. வேட்டுவவரி:2-4)

    எனும் அடிகளில் பாலை நிலத்தில் கொற்றவையின் அருளால் சுரபுன்னை, நரந்தை, சேமரம், மாமரம், வேங்கை, இலவம், புன்கு, வெண்கடம்பு, பாதிரி, புன்னை, குரா, கோங்கு ஆகிய மரங்களெல்லாம் மலர்கள் மலர்ந்து மணம் வீசியதாக இளங்கோவடிகள் குறிப்பிடுவது அன்றைய பாலைநிலத்தின் வளத்தினையும் நம் கண்முன் காட்டுகிறது.

    தெய்வங்களும் மலர்களும் 

    சிலப்பதிகாரம் சமணக் காப்பியம் என்று வகைப்படுத்தினாலும் இளங்கோவடிகள் இக்காப்பியத்துள், சிவன், திருமால், முருகன், கொற்றவை, மதுராபதி தெய்வம் எனப் பல்வேறு தெய்வங்களைக் குறிப்பிட்டுள்ளார். இத்தெய்வங்களுக்குரிய குறிப்பிட்ட மலர்களும் சிலம்பில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக,

                ‘…………. மதுரை மூதூர்க்

                கொன்றையஞ் கடைமுடி                                                                                                                  மன்றப்பொதியிலில்’

                                                                         (சிலம்பு. பதிகம் : 40)

    என்று கொன்றை மாலை சூடிய சடைமுடியுடைய சிவபெருமான் என்றும்

                ‘வண்துழாய் மாலையை மாயவன்                                                                                                                    மேல்இட்டு’

                                                   (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை:16)

    எனும் அடிகளில் நப்பினை வளமுடைய துளசி மாலையை மாயவன் கழுத்தில் இட்டாள் என்றும் இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.

                ‘………… அலர் கடம்பன் என்றே

                வெறியாடல் தான் விரும்பி வேலன் வருக                                                                                                             என்றாள்’

                                                          (சிலம்பு. குன்றக்குரவை :13)

    எனும் அடிகள் முருகனுக்கு உரிய மலர் கடம்பம் என்றும் கடம்பன் என்று பூவின் பெயராலேயே முருகன் அழைக்கப்படுவதையும் உணர்த்துகிறது. கொற்றவை  சிவனுக்கு உரிய கொன்றை மலரையும், திருமாலுக்கு உரிய துளசி மாலையையும் தோளில் போட்டுக்கொண்டு வென்றிக் கூத்து ஆடுவது,

                ‘கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்த’                                                             (சிலம்பு. வேட்டுவ வரி : 11)

    என்று சிலம்பு காட்டுகிறது. மேலும் மதுரையில் வாழும் மதுராபதி தெய்வம் இடக்கையில் பொன்னிறமான தாமரை மலரை ஏந்தியுள்ளதை,

                ‘இடக்கை பொலம்பூந் தாமரை ஏந்தினும்’                                                                (சிலம்பு. கட்டுரை காதை : 7)

    எனும் அடிகள் உணர்த்துகின்றது. இவ்வாறு மன்னர்களின் அடையாளமாக மட்டுமல்லாது தெய்வங்களின் அடையாளமாகவும் மலர்கள் விளங்கியுள்ளன என்பதைச் சிலம்பின் வழி அறிய இயலுகிறது.

    பூதங்களும் பூக்களும்

                சிலம்பில் பூத வழிபாடு செய்யப்படுவதாகக் கூறப்படும் இடத்தில் மலர்கள் இடம் பெற்றுள்ளன. மக்கள் நாள் அங்காடிப் பூதத்தை வழிபடும் போது

                ‘பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து’

                   (சிலம்பு. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை:69)

    என்ற அடிகள் மூலம் பூவினை இட்டு வழிபட்டுள்ளனர் என்பதைக் காட்சிப்படுத்தி யுள்ளார்.

                மேலும் அந்தணப் பூதமானது முத்துப் பூண்களுடன் தாமரை, அறுகம்புல், நந்தியாவட்டம் இவற்றைக் கொண்டு புனைந்த தலையினன் என்று காட்சிப்படுத்தப் படுத்தப்பட்டிருப்பதை,

                ‘ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து

                வெண் நிறத் தாமரை, அறுகை, நந்தி என்று

                இன்னனவை முடித்த நல்நிறச் சென்னியன்’                                                  (சிலம்பு. அழல்படு காதை: 18-20)

    எனும் அடிகள் உணர்த்துகின்றன.

                அரச பூதமானது சண்பகம், கருவிளை, செங்கூதாளம் எனும் நீர்ப்பூக்களைக் கொண்ட கண்ணியையும் மாலையையும் அணிந்திருந்ததாக,

                ‘சண்பகம், கருவிளை, செங்கூதாளம்

                தண்கமழ் பூநீர்ச் சாதியோடு இனையவை

                கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்’                                                     (சிலம்பு. அழல்படு காதை: 40-42)

    என்று இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.

                வணிக பூதமானது வெட்சி, தாழை, ஆம்பல், சேடல், நெய்தல், பூளை, மருதம் போன்ற பூக்களை முடித்த தலையை உடையதாக இருந்ததை

                ‘வெட்சி, தாழை, கள்கமழ், ஆம்பல்,

                சேடல், நெய்தல், பூளை, மருதம்,

                கூடமுத்த சென்னியன் ; நீடு ஒளிப்’

                                                (சிலம்பு. அழல்படு காதை: 68-70)

    என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

                வேளாண் பூதமானது கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பு (சிலம்பு. அழல்படு காதை: 93-94) என்ற நான்கு வகைப் பூக்களை இணைந்த மாலையை அணிந்திருப்பதாக இளங்கோவடிகள் சுட்டியுள்ளார். இவ்வாறு தெய்வங்களுக்கு மலர் வழிபாடு உள்ளதைப் போல பூதங்களுக்கும் வழிபாட்டில் மலர் இடம் பெற்றுள்ளதைச் சிலப்பதிகாரம் எடுத்தியம்புகிறது.

    சிலம்பில் மலர்கள் வழி கையாளப்படும் உத்திகள்

                இயற்கை சார்ந்த வாழ்வியல் கொண்ட பழந்தமிழர் தம்மைச் சுற்றியுள்ள தாவர வகைகளைத் தம் படைப்பின் கருத்தைத் தெளிவுபடுத்த உத்தியாகவும் பயன்படுத்தியுள்ளனர். சிலம்பில் இத்தகு உத்திகளை உவமை, உள்ளுறை, குறியீடு எனப் பல வகையில் காப்பியப் போக்கில் இளங்கோவடிகள் அமைத்துள்ளார்.

    உவமை உத்தி

                கவிஞன் தன் கருத்தின் அழகை வெளிப்படுத்தக் கையாளும் உத்திகளில் உவமை என்பது ஒரு பொருளின் சிறப்பு, அதன் நலன், அதன்மேல் கொண்டுள்ள பேரன்பு, அதன் வலிமை, இவைகள் உணர்த்தப் பயன்படுகிறது. இத்தகைய உவமைப்பொருள் என்பது உயர்ந்ததாக இருக்க வேண்டும். இதனை,

                ‘உயர்ந்தன மேற்றே உள்ளுங் காலை’                                                                                     (தொல்.உவமவியல் : 1224)

    என்று தொல்காப்பியர் சுட்டுகிறார். இந்நிலையில் சிலம்பு பல்வேறு மலர்களை உவமைப்பொருளாகக் காட்டியிருப்பது மலர்கள் பழந்தமிழர் வாழ்வில் பெற்ற உயரிய இடத்தை இனம் காட்டுகிறது. இம்மலர்களின் மணம், மென்மை, வண்ணம், தூய்மை, தன்மை, சுவை, ஒளி, எழில், கவர்ச்சி, மங்கலம் எனும் பத்துத் தன்மைகளின் அடிப்படையில் உவமப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

    கண்மலர்கள்

                முகத்திற்கு அழகு மட்டுமல்லாது உள்ளத்தின் தெளிவை, கருத்தைக் காட்டுவன கண்களே. இத்தகைய அழகிய கண்கள் சிலம்பில் விதவிதமான மலர்களாகத் தோற்றமளிக்கின்றன.

                ‘கயமலர்க் கண்ணி…………….’ (சிலம்பு. மனையறம்படுத்த காதை : 11)

    என்று கண்ணகி பெரிய மலர்போலும் கண்ணையுடையவள் என்றும்

                ‘மாமலர் நெடுந்கண் மாதவி……………..’

                                               (சிலம்பு. அரங்கேற்று காதை : 170)

    என்று பெரிய மலர்போன்ற நீண்ட கண்களையுடைய மாதவி என்றும்

                ‘………………. கழுநீர் போலக் கண்ணகி கரும்                                                                                                                    கணும்’

      (சிலம்பு. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை : 236, 251)

                கழுநீர் மலர் போன்ற கண்ணகியின் கரும் கண் என்றும் சிலம்பில் இரு மலர்களாக மலர்ந்த கண்ணகி, மாதவி இருவரின் கண்களுக்கும் மலர்களை இளங்கோவடிகள் உவமைப்படுத்தியுள்ளார்.

                ‘தாமரை செங்கண் தழல் நிறக் கொள்ள’ (சிலம்பு. நடுகல்காதை : 110)

    எனும் அடிகளில் சேரனின் இயல்பானத் தாமரை போன்ற சிவந்த கண்கள் நெருப்பு நிறத்தைக் கொண்டன என உவமைப்படுத்தியுள்ளார்.

    முகத்துறுப்புகளும் மலர்களும்

                கண்கள் மட்டுமல்லாது பிற முகத்துறுப்புகளுக்கும் மலர்கள் உவமையாகச் சொல்லப்பட்டுள்ளன என்பதைப் பின்வரும் அடிகளால் அறிய முடிகிறது.

                ‘எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்

                கருநெடும் குவளையும் குமிழும் பூத்து ஆங்கு

                உள்வரிக் கோலத்து உறுதுணை தேடிக்

                கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்’

       (சிலம்பு. இந்திர விழவு ஊர் எடுத்த காதை : 214-217)

    எனும் அடிகளில் தாமரை போன்ற முகத்தில் ஒளிபொருந்திய இலவம் பூப்போன்ற இதழ்களையும், முல்லை மொக்குப் போன்ற பற்களையும், குமிழம் பூ போன்ற மூக்கையும் உடைய பெண்கள் எனக் கூறி முகத்துறுப்புகள் அனைத்தையும் மலர்களாக அமைத்துள்ளார்.

    மலர்க் கைகள்

                கோவலன், கண்ணகியின் உறுப்பு நலனைப் புகழும் போது,

                ‘………… நின்மலர்க்கையின் நீங்காது’

                                (சிலம்பு. மனையறம்படுத்த காதை : 60)

    என்று கண்ணகியின் மலர்ப்போன்ற கையினின்றும் பைங்கிளிகள் நீங்காது தங்கியிருக்கின்றன என உரைக்கின்றான்.

                ‘காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து’

                                                      (சிலம்பு. கடல் ஆடு காதை : 98)

    எனும் அடிகளில் மாதவி தன்னுடைய காந்தள் மலர் போன்ற மென்மையான விரல்களில்  பல்வேறு வகையான மோதிரங்கள் அணிந்திருந்ததாக இளங்கோவடிகள் சுட்டியுள்ளார். இவ்வாறு பெண்களின் கைகளுக்கு மலர்கள் ஒப்புமைப்படுத்தப் பட்டுள்ளன.

    மலரடிகள்

                இறைவனது பாதங்களை மலர்களுடன் ஒப்பிடுதல் பழந்தமிழர் மரபு. இதனடிப்படையில் திருமாலின் பாதங்களை,

                ‘திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால்!

                                                                                    நின்செங்கமல

                இரண்டு அடியான் மூவுலகமும் இருள்தீர                                                                                              நடந்தனையே’

                                                  (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை :34)

    எனும் அடிகளில் தேவர்கள் அனைவரும் திரண்டு வந்து போற்றும் திருமாலே உனது சிவந்த தாமரை போன்ற இரண்டு பாதங்களால் இந்த மேல், நடு, கீழ் எனும் மூன்று உலகங்களின் துன்பம் நீங்க நடந்தாயே என்று திருமாலின் பாதங்களைத் தாமரை மலருடன் உவமைப்படுத்தியுள்ளார்.

                ‘……………………. மலையர் தம் மகளார்

                செயலைய மலர்புரை திருவடி தொழுதோம்’                                                            (சிலம்பு. குன்றக்குரவை : 16)

    என்று மலை நாட்டினர் மகளாகிய வள்ளியினது அசோக மலர் போன்ற திருவடிகளைத் தொழுதோம் என்று வள்ளியின் பாதங்களுக்கு அசோக மலர் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

                இறைவனின் திருவடிகள் மட்டுமல்லாது கண்ணகியின் பாதங்களுக்கும் மலர் ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளது. கண்ணகியின் சிறப்பைச் சாலினி உரைக்குமிடத்தில்

                ‘இணை மலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக்’

                                                               (சிலம்பு. வேட்டுவ வரி : 45)

    எனக் கண்ணகி தாமரை இணை மலர்கள் போன்ற சிறிய அடிகளை உடையவள் என்பதைச் சிலம்பு எடுத்துரைக்கிறது.

    உந்திக் கமலம்

                திருமால் தாமரை மலர் போன்ற உந்தியை உடையவன் என்பதை

                ‘மலர்க்கமல உந்தியாய் மாயமோ                                                                                                                     மருட்கைத்தே’

                                                  (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை : 32)

    என்றும்

                ‘பெரியவனை, மாயவனைப் பேர்உலகம்                                                                                                                 எல்லாம்

                விரிகமல உந்தியுடை விண்ணவனைக்,                                                                                                                  கண்ணும்’

                                                 (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை : 36)

    எனும் அடிகளில் திருமால் இந்தப் பெரிய உலகத்தை எல்லாம் அடக்கியுள்ள விரிந்த தாமரைப் போன்ற உந்தியை உடையவன் என்றும் உவமிக்கின்றார்.

                இவ்வாறு தெய்வங்கள், மனிதர்கள் ஆகியோரின் உடலுறுப்புகளுக்கு மலர்களை ஒப்புமைப்படுத்தி உவமை உத்தியினை இளங்கோவடிகள் வெளிப்படுத்தியுள்ளார்.

    வண்ணமும் மலர்களும்

                வண்ணம் நிறைந்த மலர்களைக் காணும்போது மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். வண்ணம் பற்றிய சிந்தனை என்பது மனிதனுக்கு இயற்கை பொருள்களிடம் இருந்து கற்றுக் கொண்டதுதான். அதிலும் குறிப்பாக மலர்கள் வண்ணத்தாலும் மணத்தாலும் வேறுபாட்டைக் கொண்டவை. ஒவ்வொரு மலரும் தனக்கு எனக் குறிப்பிட்ட வண்ணத்தையும் மணத்தையும் கொண்டுள்ளன. இத்தகு மலர்களின் வண்ணமானது சிலம்பில் பல்வேறு இடங்களில் உவமைக்காக இளங்கோவடிகள் கையாளுகின்றார்.

                ‘மாரிப் பீரத்து அலர் வண்ணம் மடவாள்

                 கொள்ளக்  கடவுள் வரைந்து

                ஆர்இக் கொடுமை செய்தார்? என்று

                அன்னை  அறியின்  என் செய்கோ’

                                                                      (சிலம்பு. கானல்வரி : 36)

    எனும் அடிகளில் தலைவியானவள் மழைக்காலத்தில் மலரும் பீர்க்கம்பூ போன்ற மஞ்சள்நிற மேனியளாய் நிற வேறுபாடு கொள்ள, இக்கொடுமையைச் செய்தவர் யார் என்று அன்னை அறிந்தாள் நான் என் செய்வேன்? என்று தோழிக் கூறுவதாக அமைத்துள்ளார். இங்கு தலைவியின் மேனி வண்ண மாறுபாட்டிற்குப் பீர்க்கம்பூ உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

                ‘தூநிற வெள்ளை அடத்தாற்கு உரியள், இப்

                பூவைப் புது மலராள்’

                                                  (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை : 12)

    தூய்மையான வெள்ளைக் காளையின் வலிமையை அடக்கியவனுக்கு உரியவள் இந்தப் காயாம்பூ போன்ற வண்ணத்தினை உடையவள் என்றும்

                ‘ஆயர்பாடியின் அசோதை பெற்றெடுத்த

                பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ’

                                     (சிலம்பு. கொலைகளக் காதை : 46-47)

    ஆயர்பாடியில் அசோதை பெற்றெடுத்தக் காயாம்பூப்போலும் வண்ணமுடைய கண்ணன் என்றும்

                ‘மாயம்செய் வாள்அவுணர் வீழ, நங்கை                                                                                                       மரக்கால் மேல்

               வாள்அமலை ஆடும் ஆயின்

              காயா மலர்மேனி ஏத்தி, வானோர்

              கைமெய்மலர் மாரி   காட்டும் போலும்’

                                                                   (சிலம்பு. வேட்டுவ வரி : 12)

    அசுரர்கள் வீழ்ச்சியடைய, கொற்றவை மரக்கால் அணிந்து வாள் கூத்தை ஆடுவாள் ஆயின், காயாம் பூப் போலும் மேனியுடைய அவளைப் புகழ்ந்து தேவர்கள் மலர் மழையைச் சொரிவார்கள் என்றும் இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

                இங்கு கண்ணன், கொற்றவை எனும் தெய்வங்கள் அடர் நீல வண்ணம் உடையவை என்பதைக் குறிக்கவும் இடையர் குலப்பெண் கருமை வண்ணம் உடையவள் என்பதைச் சுட்டவும் காயாம் பூவினை இளங்கோவடிகள் உவமையாக எடுத்துரைக்கின்றார்.

    குறிப்பு உத்தி

                கவிதையில் ஒரு பொருளைக் குறிப்பிட்டு அதன் வாயிலாக, வேறொரு செய்தியை அறிவுறுத்துதல் குறிப்பு. இதனை, ‘ஒரு பொருளானது (Object) ஒரு சார்பாண்மைப்படுத்தலின் மூலம் ஒரு செய்தியை ஒரு பெறுநருக்குத் தெரிவிக்கிறது’ (குறியியல் – ஒரு சங்கப்பார்வை முனைவர் மொ.இளம்பரிதி ப.10) இளங்கோவடிகள் இதனை மிகச் சிறந்ததொரு உத்தியாக உருவாக்கியுள்ளார். பின்வரக்கூடிய நிகழ்ச்சிகளை முன்பு மறைமுகமாகக் குறிப்பால் உணர்த்த மலர்களைக் குறியீடாகக் காட்டியுள்ளார்.

                மங்கல வாழ்த்துப் பாடலில் மணமக்களை மலர்தூவி வாழ்த்தினர் என்று உரைக்காது மலருக்கு அடைமொழியாகச் சின்மலர் என்பதை,

                ‘காதலன் பிரியாமல், கவவுக்கை நெகிழாமல்

                தீது அறுக! எனஏத்தி சின்மலர் கொடுதூவி’

                                                            (சிலம்பு. மங்கலவாழ்த்து : 61-62)

    என்று குறிப்பிடுகிறார். இது பின்வரும் நாளில் கண்ணகிக்கு ஏற்பட இருக்கும் சிறுமையைக் குறிப்பிடுவதாக அமைகின்றது.

                இதே போன்று கவுந்தியடிகள், மாதரியிடம் கண்ணகியை அடைக்கலம் கொடுக்குமிடத்தில்,

                ‘மங்கல மடந்தையை நல்நீர் ஆட்டிச்

                செங்கயல் நெடும்கண் அஞ்சனம் தீட்டி

                தேமென் கூந்தல் சின்மலர் பெய்து’

                                    (சிலம்பு. அடைக்கலக்காதை : 131-133)

    எனக் குறிப்பிட்டுக் கண்ணகிக்கு வர இருக்கும் தீமையை முன்பே உணர்த்துவது போல் அவள் கூந்தலில் சின்மலர் பெய்து என உரைக்கின்றார்.

                ‘தாதுசேர் கழுநீர் தண்பூம் பிணையல்

                போதுசேர் பூங்குழல் பொருந்தாது ஒழியவும்’

                        (சிலம்பு. புறம் சேரி இறுத்த காதை : 21-22)

    எனும் அடிகளில் மண்மகள் கண்ணகியின் துயர்கொண்டு வருந்தும் நிலையில் மகரந்தப் பொடியுடன் கூடிய குளிர்ச்சி பொருந்திய கழுநீர் மாலை முல்லை மலர் சேர்ந்த மென்மையான கூந்தலில் சூடாது நீங்கவும் என உரைத்துக் கண்ணகிக்கு வர இருக்கும் தீங்கைச் சுட்டுவதாக அமைத்துள்ளார். கோவலன் தான் கண்ட கனவினை உரைக்கும்போது,

                ‘மாமலர்வாளி வறுநிலத்து எறிந்து’

                                             (சிலம்பு. அடைக்கலக்காதை : 101)

    என்று மன்மதன் மலர் அம்புகளை வறண்ட நிலத்தில் எறிந்துவிட்டு செயலற்று நிற்பதாக காட்டுவது பின்னாளில் கோவலன் கண்ணகி வாழ்வில் ஏற்படப் போகும் நிரந்தரப் பிரிவைக் காட்டுகிறது.

                வையை ஆறானது தன் இரு கரைகளிலும் நிறைந்த மரம், செடி, கொடிகளின் பூக்களைச் சுமந்து வரும் காட்சியில் குறிப்புப்பொருளை இளங்கோவடிகள் கையாண்டுள்ளார்.

                ‘குரவமும், வகுளமும், கோங்கமும், வேங்கையும்

                ……………………………………………………………………………………

                ……………………………………………………………………………………

                கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்’

                      (சிலம்பு. புறஞ்சேரி இறுத்த காதை : 151-173)

    எனும் அடிகளில் வையை ஆறானது குரவும், மகிழும், கோங்கும், வேங்கையும், வெண்கடம்பும், சுரபுன்னையும், மஞ்சாடி மரமும், மருதும் உச்சிச் செலுந்திலும் செருந்தியும், செண்பகமும், பாதிரியும், குருகத்தி, செம்முல்லை, முசுட்டை, மோசி மல்லிகை, நறுந்தாளி, வெட்பாலை, பிடவம், பகன்றை, மயிலை, இருவாட்சி, முள்முருங்கு, முல்லை, போன்ற மலர்களைப் பூந்துகிலாகக் கொண்டு கண்ணகிக்கு மதுரையில் ஏற்படப்போகும் துன்பங்களை உணர்ந்தவள் போல் நறுமலர்களாகிய ஆடையினை முழுவதும் போர்த்திக் கொண்டு, அடக்க முடியாத கண்ணீரை மறைத்து அடக்கிக்கொண்டு, புனல் ஆறு அன்று பூம்புனல் ஆறு எனக் கருதும் நிலையில் இருந்ததாகக் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும்,

                ‘கடுநெடும் குவளையும், ஆம்பலும், கமலமும்

                …………………………………………………………………………….

                …………………………………………………………………………….

                கண்ணீர் கொண்டு கால் உற நடுங்கப்’                                     (சிலம்பு. புறஞ்சேரி இறுத்த காதை : 184-188)

    என்று கரிய நீண்ட குவளை மலரும், ஆம்பலும், தாமரை மலரும் கண்ணகிக்கும் கோவலனுக்கும் நிகழப்போகும் துன்பத்தை முன்னரே அறிந்து கொண்டன போல் வண்டுகள் ஒலி அழுகை ஒலிபோல் விளங்க அம்மலர்கள் காற்றில் அசைவது, காலால் நடுங்கி கண்ணீர் விடுவது போல் இருப்பதாகக் காட்டியிருப்பது மலர்களைக் கொண்டு இளங்கோ உருவாக்கிய குறிப்பு உத்தியை உணர்த்துகிறது.

     உள்ளுறை உத்தி

                உள்ளுறை என்பது உள்ளொன்று வைத்து அதற்கு இணையான புறம் ஒன்றைக் கூறுவதாகும். இவ்வுத்தி முறையினைக் கானல்வரி பாடல்களில் பல்வேறு இடங்களில் காண முடிகிறது.

                ‘மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார்

                                                                                                    செங்கை

                …………………………………………………………………………………..

                …………………………………………………………………………………..

                பொறைமலி பூம்கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர்’

                                                                      (சிலம்பு. கானல் வரி : 27)

    எனும் அடிகளில் பிறர் அறியாமல் மறைவாக மணந்தவர்களை, வன்மையான பரதர் வாழ் பாக்கத்தில் உள்ள பெண்களின் சிவந்த முன் கைகளில் அணியப்பெற்ற வளையல்கள், தலைவன் பிரிவால் தலைவி மெலிய வீழ்தன. பிறர் அறிய அவள் செயலைத் தூற்றுகின்றன. இதை ஏழையாகிய யாம் எங்ஙனம் அறியாதிருப்போம். அறிவோம் ஐயனே எங்கள் புகார் நகர வண்டுகள் நெருக்கிய கிளைகளையுடைய மிகுதியாகப் பூத்த புன்னைமரக் கிளையில் அன்னப்பறவை ஏற, அன்னத்தை முழுமதியாகவும், புன்னைப் பூக்களை விண்மீன்களாகவும் கருதி, ஆம்பல் மலர்கள் மலர ஒலிக்கும் புகார் எங்கள் ஊர். இவ்வாறு செயற்கையைப் பார்த்து இயற்கை என நினைத்து ஏமாறும் ஊர் எங்கள் ஊர். அது போன்று எம் தலைவியும் உமது பேச்சை உண்மை என நம்பி ஏமாறுகிறாள் என்று தோழி உரைப்பதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். இங்கு ஆம்பல் மலரின் மலர்ச்சியில் உள்ளுறைப் பொருள் உணர்த்தப்படுகிறது.

    மலர்கள் பயன்பாடு

                மனிதரின் மனதிற்கு மகிழ்வினைத் தரும் மலர்கள் பொதுவாக ஆண் பெண் இருவரும் தங்களை அலங்கரிக்க மாலையாகச் சூடுதல் என்ற நிலையில் மட்டுமல்லாமல் அவர்கள் வாழ்வில் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தியுள்ளனர்.

    மடலும் மலர்களும்

                மாதவி, கோவலனுக்கு எழுதிய மடலில் தாழையின் வெண்மையான இதழை மடல் ஏடாகக் கொண்டு இருபக்கங்களிலும் சண்பகம், மாதவி, பச்சிலை, பித்திகை, மல்லிகை, இவைகளை வெட்டிவேரால் மிடைந்து செங்கழுநீர் மலர் இதழ்கள், கத்திகை இதழ்களுடன் சேர்த்துக் கட்டியது என்று வேனில் காதையில் (45-50) உரைப்பதும், அன்றைய மலர் பயன்பாட்டை எடுத்தியம்புகிறது.

    பட்டங்களும் மலர்களும்

                மன்னர்கள் சிறந்த வணிகர்களுக்கு எட்டி என்ற பட்டத்தை வழங்கினர். பட்டத்தின் சின்னமாக எட்டிமரத்தின் பூங்கொத்துப் போன்று பொன்னால் செய்து வழங்கினர். இந்த எட்டிப் பட்டம் பெற்ற சாயலன் பற்றிய குறிப்பு அடைக்கலக் காதையில் (163) இடம் பெற்றுள்ளது. இதேபோல் காவிதி என்பதும் ஒரு மலர். இப்பூவின் பெயரால் பொற்பூவானது அமைச்சர், கணக்கர், வேளாளர் ஆகியோருக்குக் காவிதிப் பட்டத்திற்குப் பரிசளிக்கப்பட்டுள்ளது. இக்காவிதிப் பட்டம் பெற்றவர்கள் பாண்டியன் அவையில் இருந்ததை,

                ‘காவிதி, மந்திரக் கணக்கர் – தம்மொடு’ (சிலம்பு. அழற்படு காதை : 9)

    என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

    பரிசும் மலரும் 

                சேரன் செங்குட்டுவன் போரில் வெற்றி பெற்ற வீரர்களை வருக என அழைத்து பொன்னாலாகிய வாகை மலரினைப் பரிசாக அளித்தான் என்பதை,

                ‘வருக தாம் என வாகைப் பொலம்தோடு’  (சிலம்பு. நீர்ப்படைகாதை : 43)

    எனும் அடிகள் எடுத்தியம்புகிறது.

    யாழ், வாள், வெண்கொற்றக்கொடைக்கு மாலை சூட்டுதல்

                மாதவி யாழுக்குக் கோட்டுப்பூ சூடியதை,

                ‘சித்திரப் படத்துள் புக்கு செழும்கோட்டின் மலர்புனைந்து’

                                                                         (சிலம்பு. கானல்வரி : 1)

    என்றும்

                சேரன் தன் வாளுக்கு வஞ்சி பூ மாலை சூட்டியதை,

                ‘வாய் வாள் மலைத்த வஞ்சி சூடுதும்’ (சிலம்பு.காட்சிக்காதை : 149)

    என்றும்

                சேரன் வெண்கொற்றக்கொடைக்குப் பூமாலை அணியப் பெற்றதை,

                ‘மறம்மிகு வாளும், மாலை வெண்குடையும்’  (சிலம்பு.கால்கோள் காதை : 44)

    என்றும் சிலம்பில் காணமுடிகிறது.

    பூந்தெப்பம்

                பெண்கள் பூக்கள் பொருந்திய தெப்பத்தில் ஏறிச்சென்று புனல் விளையாட்டில் மகிழ்ந்ததை,

                ‘பூம்புணை தழீஇப் புனல் ஓட்டு அமர்ந்து’  (சிலம்பு. ஊர் காண் காதை : 75)

    எனும் அடிகள் உணர்த்துகின்றன. இவ்வாறு பழந்தமிழரின் வாழ்வில் மலர்கள் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    தென்றலும் மலர்களும்

                கோவலனும், கண்ணகியும் ஏழுநிலை மாடத்தில் இருக்கும்போது தென்றலானது

                ‘கழுநீர், ஆம்பல், முழுநெறிக்குவளை

                ………………………………………………………………

                ……………………………………………………………..

                தாது தேர்ந்து உண்டு ; மாதவர் வாண் முகத்து’

                                                                (சிலம்பு. மனையறம்படுத்தக் காதை : 14-19)

    என்று செங்கழுநீர்ப் பூ, சோதாம்பல் பூ, இதழ் ஒடியாத முழுவதும் விரிந்த குவளைப்பூ, தாமரை, வயல்களில் உள்ள நீர்ப்பூக்கள், தாழை மடலில் விரிந்த வெண்நிறப்பூக்கள், மாலை போல் மலர்ந்து தொங்கும் மாதவிப் பூ, சண்பகப் பூ போன்ற பல்வேறு மலர்களின் மணங்களையும் கொண்டு வந்ததாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிலம்பில் இளவேனிற் வருணனை, சோலைகள் வருணனை, கடற்கரை தோற்றம் வருணனை, மருவூர்பாக்க அங்காடிகளில் பூக்கள் விற்பனை என்று பல்வேறு இடங்களில் இளங்கோவடிகள் மலர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

    சின்மலரும் – பூமழையும்

    இயற்கை வாழ்த்துடன் தொடங்கப்படும் சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடலில் சின்மலர் தூவி வாழ்த்துப் பெற்ற கண்ணகி,

                ‘……………. வானவரும் நெடுமாரி மலர் பொழிந்து

                குன்றவரும் கண்டு நிற்பக்கொழுநனொடு கொண்டு

                போயினார்’ (சிலம்பு. குன்றக்குரவை : 8)

    என இறுதியில் தேவர்கள், பூக்களை மழைபோல் சொரிந்து, கண்ணகியைக் கோவலனோடு அழைத்துச் செல்வதாகக் காட்சிப்படுத்தியிருப்பது சிலம்பில் இளங்கோவடிகள் மலர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும் இயற்கை சார்ந்த பழந்தமிழர் வாழ்வினையும் நன்கு உணர்த்துகிறது.

                மேற்சுட்டிய கருத்துகளின் வழி ‘இயற்கையோடு (Nature) உள்ளுணர்வை (Psychology) இணைத்துப் பார்க்கும் முறை அறிவியல் வளர்ந்தபின் தோன்றியதன்று மிகப் பிற்காலத்தது. ஆனால் (சங்க காலத் தமிழர் இயற்கை நிகழ்ச்சிகள், செய்திகள் (Natural Phenomenon) எல்லாவற்றையும் நுண்ணிய உள்ளுணர்வோடு இணைத்துப் பார்த்திருக்கின்றனர்’ சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், பி.எல்.சாமி ப.40, 41) எனும் கருத்துக் காப்பியக் காலத் தமிழர்களுக்கும் பொருந்தியிருப்பதை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

    தொகுப்புரை

    ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் மலர்ந்த மலர்கள் வழி இக்கட்டுரையானது

    • இளங்கோவின் கோட்டுப்பூ, கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ எனும் தாவர வகைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
    • சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் அடையாளச் சின்னமாக மலர்கள் இருந்ததையும், பழந்தமிழர் தெய்வ வழிபாடு, பூத வழிபாட்டில் மலர்களைப் பயன்படுத்தியுள்ளதை இனம் காட்டுகிறது.
    • இளங்கோவடிகள் மலர்களை உவமை, குறிப்பு, உள்ளுறை எனக் காப்பிய உள்ளடக்கத்தைச் சொல்லும் உத்தி முறைகளில் கையாண்டுள்ளதை எடுத்துரைக்கிறது.
    • மேலும் பழந்தமிழர் வாழ்வில் மலர்களைப் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தியிருப்பதையும் எடுத்தியம்புகிறது.

    துணைநூற்பட்டியல்

    • பி.எல்.சாமி, சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம், 1967, சென்னை-1.
    • பி.எல்.சாமி, இலக்கியத்தில் அறிவியல், சேகர் பதிப்பகம், 1982, சென்னை-78.
    • கோவை இளஞ்சேரன், இலக்கியம் ஒரு பூக்காடு, இராக்போர்ட்டு பப்ளிகேசன், 1982, சென்னை-2.
    • கு.வி.கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், பாரதிதாசன் பல்கலைக்கழகம், 2009, திருச்சி-24.
    • மொ.இளம்பரிதி, குறியியல் ஒரு சங்கப் பார்வை, காவ்யா பதிப்பகம், 2006, சென்னை-24.
    • ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை, சிலப்பதிகாரம், ராமையா பதிப்பகம், 2013, சென்னை – 14.
    • செ.வைத்தியலிங்கம், தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, 1996, சிதம்பரம்-01.

     ========================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    சிலப்பதிகாரத்தில் மக்களின் வாழ்க்கையோடு  மலர்கள் பிரித்தறியா வண்ணம் இணைந்து காணப்படுவதை ஆய்வாளர் பல இடங்களில் சான்று காட்டி விளக்கியுள்ளார். குறிப்பாக, பழந்தமிழர் வாழ்க்கை முறைகள், மலர்களுக்கும் மன்னருக்குமான தொடர்புகள், உவமை உத்திகள் என்று பன்முகங்களில் அடிப்படைக் கருத்துகளை முன்னிலைப்படுத்தியுள்ளார்.

    ஆய்வின் முடிவாக மேலைநாட்டார் பதினெட்டாம் நூற்றாண்டில் மரம், செடி கொடி, நீர் ஆகியவற்றில் பூக்கும் பூக்கள் பற்றிய வகைப்பாட்டைக் கூறியுள்ளனர். ஆனால் இளங்கோவடிகள் இப்படியான பாகுபாட்டை கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே சிலப்பதிகாரத்தில் பதிவு செய்துள்ளார் என்பதையும் மக்களின் பண்பாட்டில் மலர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

    குறுகச் சொல்லப்பட்ட இக்கருத்துகளை விரிவாக, ஒவ்வோர் உப தலைப்பும் ஓர் அத்தியாயமாக எடுத்துச் செல்லும் அளவு சிலம்பில் கருத்துகள் குவிந்து கிடக்கின்றன. மலர்கள் பற்றிய எந்தவொரு கருத்தும் விடுபட்டுப் போகக் கூடாது என்ற முனைப்புடன் ஆய்ந்தெழுதிய கட்டுரை ஆசிரியருக்குப் பாராட்டுகள்!

    மேலும் ஆய்வாளர் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள மலர்களுக்கான தாவரவியல் பெயர்களைப் பதிவு செய்துள்ளதால் மலர்களின் மருத்துவக் குணங்கள் சார்ந்த பதிவுகள் குறித்தும் பார்த்திருக்கலாம்.

    ===========================================

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 145

    மலர் சபா

     

    மதுரைக் காண்டம் – 03. புறஞ்சேரி இறுத்த காதை

     

    வையை ஆற்றின் காட்சி 

    flowers

    குரவம் வகுளம் கோங்கு வேங்கை
    வெண்கடம்பு சுரபுன்னை மஞ்சாடி மருதமரம்
    சேடல் செருந்தி பவளமல்லிகை செண்பகம் பாதிரி
    இந்த மரங்களின் மலர்கள் நன்கு விரிந்து
    வைகைப் பெண்ணின் பூந்துகிலாய்த் திகழ்ந்தது.

     

    குருக்கத்தி செம்முல்லை கொழுங்கொடி முசுண்டை
    விரிந்த மலர்களையுடைய மோசி மல்லிகை
    வெள்ளை நிறம் கொண்ட நறுந்தாளி
    வெட்பாலை மூங்கில் கொழுங்கொடிப் பகன்றை
    பிடவம் இருவாட்சி
    இந்த மலர்க்கொடிகள் பின்னிப் பிணைந்த கோவை
    வைகைப் பெண்ணுக்கு மேகலையாய்த் திகழ்ந்தது.

     

    அக்கோவையாகிய மேகலை
    எல்லா இடங்களிலும் செறிந்து பரந்து
    கரையென உயர்ந்து நின்ற காட்சி
    வைகைப் பெண்ணின் அல்குல் போல் திகழ்ந்தது.

     

    பரந்து விரிந்த ஆற்றிடைக் குறையின்
    அடிப்பக்கம் அகன்று காணப்பட்டு
    பல்வகை மலர்க்குவியல்களால் உயர்ந்து நின்று
    எதிர் எதிராய் நின்ற மணற்குன்றுகள்
    வைகைப் பெண்ணின் ஒளிபொருந்திய
    இள மார்புகளாய்த் திகழ்ந்தன.

     

    கரையில் நின்ற முருக்க மரங்கள்
    உதிர்த்து நின்ற செம்மலர்கள்
    அவள் வாய் எனத் திகழ்ந்தது.

    அருவி நீரோடு வந்த முல்லைமலர்கள்

    அவள் நகையாகத் திகழ்ந்தது.

     

    குறுக்கும் நெடுக்குமாய் ஓடுகின்ற கயல்மீன்கள்
    அவள் விழிகளாய்த் திகழ்ந்தன.

    விரிகின்ற மலர்கள் ஒருபோதும் நீங்காத கருமணல்
    அவள் கூந்தலாய்த் திகழ்ந்தது.

     

    இவ்வனைத்துச் சிறப்பும் பெற்ற வைகைப்பெண்
    இவ்வுலகில பல பொருட்களை விளைவித்து
    அனைவருக்கும் உணவு படைக்கும் சிறப்புடையவள்.
    புலவர்கள் நாவில் பொருந்தியவள்.
    திருமகளை ஒத்தவள்.
    பருவம் பொய்த்திடாத பாண்டியநாட்டின்
    குலக்கொடியாய்த் திகழ்பவள்.

     

    அந்த வைகைப்பெண்
    கண்ணகிக்கு வரக்கூடிய துன்பங்களை
    முன்னரே உணர்ந்தவள் போல
    தூய்மைவாய்ந்த நறுமண மலர்களைத்
    தன் மீது ஆடையாகப் போர்த்திக்கொண்டு
    தன் கண்களை மறைத்த நீரை
    வெளியே காட்டாமல் உள்ளடக்கி இருந்தாள்.

     

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 135 – 150

    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

     

    படத்துக்கு நன்றி:

    http://www.dreamstime.com/stock-images-flowers-floating-water-image

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 109

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    சாரணர் மறைதல்

     

    கவுந்தியின் புகழ் வார்த்தைகள் கேட்ட

    சாரணர்கள் மனமொன்றி மகிழ்ந்து

    நிலமட்டத்தினின்று ஒரு முழம்

    உயர்ந்த நிலையில் நின்று,

    “கவுந்தியே! பிறவி தருகின்ற பற்று

    உனக்கு இல்லாமல் போவதாக” எனக்கூறி

    நீள் நிலம் வழி செல்லாமல்

    வான்வழியே பறந்து சென்றனர்.

     

    அவர் சென்ற திசை நோக்கி

    கோவலனும் கண்ணகியும்

    அடிகளுடன் பணிந்து வேண்டினர்.

    “எம் பிறவிப் பந்தம் அறுக” என்று.

     

    காவிரியைக் கடந்து தென்கரை அடைந்து மூவரும் ஒரு சோலையில் இருத்தல்

     

    மேகங்கள் சூழ நின்ற சோலைகளில் இருந்த

    காவிரியாற்றங்கரையில் நீர் நிறைந்த நெடுந்துறையில்

    கண்ணகியும், கோவலனும், தவத்திரு கவுந்தியடிகளும்

    ஓடம் ஒன்றில் ஏறி அமர்ந்து

    குற்றம் தீர்க்கவல்ல கோயில்கள் இருந்த

    தென்கரையை அடைந்தனர்.

     

    அங்கே மலர்கள் சூழ நின்றிருந்த

    பூஞ்சோலைகளில் அமர்ந்து இளைப்பாறினர்.

     

    வம்பப் பரத்தையும் வறுமொழியாளனும்

     

    ஆங்கே,

    பரத்தைத் தொழிலைப் புதிதாக மேற்கொண்ட

    பரத்தைமகள் ஒருத்தியும்

    அவள்மீது காமம் கொண்டு அவளுடன் சென்ற

    பயனற்ற சொற்கள் பேசித்திரியும் காமுகன் ஒருவனும்

    நறுமணச் சோலையில் புகுந்து

    அம்மூவரின் அருகில் வந்தனர்.

     

    கோவலனையும் கண்ணகியையும் பார்த்த அவர்கள்,

    “மன்மதனும் இரதியும் போல இருக்கும் இவர்கள் யார்?”

    என்றுணர்ந்திடும் வண்ணம் அவர்களை நெருங்கி,

    கவுந்தியடிகளிடம் கேட்டனர்..

    “நோன்புகள் நோற்றுப் பட்டினி கிடந்ததால்

    உடல்மெலிந்த தவத்தீரே!

    உம்முடன் வந்துள்ள இவர்கள் யார்?” எனக் கேட்டனர்.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  208 – 224

     

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 104

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    மறையோர் இருக்கையும் உழவர் இருக்கையும் ஆகிய
    ஊர்கள் இடையிட்ட நாட்டின் வழியாகச் செல்லுதல்

     

    புலிச்சின்னம் பொருந்திய கொடியை
    உயர்த்தித் தாங்கிய தேரையுடைய
    வலிமைவாய்ந்த சோழமன்னனின் வெற்றிக்காகவும்,
    மழை பொழியும் சூழலை உருவாக்குவதற்காகவும்
    தேவர்களுக்கு உணவு சமைக்கும் மடைப்பள்ளியில்
    வேதியர்கள் தீ வளர்த்தனர்.

     

    அந்த வேள்வித்தீயில் எழுந்த நறும்புகை
    வானுயர்ந்த மாடமாளிகையைச் சூழ்ந்து நிற்க
    அவை மேகங்கள் சூழப்பட்ட மலையைப் போல்
    மிகச் சிறப்பாய்க் காட்சியளித்தன.

     

    இத்தகைய மங்கலச்சிறப்பு பொருந்திய
    மறையோர் வாழும் இல்லங்கள் பல நிறைந்த நல்ல ஊர்.

    இரந்து கேட்பவர்களின் சுற்றத்தையும்
    புரந்து காக்கும் அரசரின் வெற்றியையும்
    தம் உழவுத்தொழில் மூலம்
    காத்து நிற்பவர்கள்
    பரந்த நீருடைய காவிரிப்பெண்ணின்
    புதல்வர்களான உழவர்கள்.

     

    அவர்கள் வாழும் பழஞ்சிறப்பு வாய்ந்த ஊர்களில்
    கரும்பாலைகளில் கரும்புச்சாறு காய்ச்சும்போது
    எழுகின்ற புகையானது
    தூற்றப்படாத நெற்குவியல்களைச் சூழ்ந்து நிற்கும்.

    அந்தத் தோற்றம்
    மேகம் சூழ்ந்த மலைபோலக் காட்சியளிக்கும்.

     

    அதுபோன்ற உழவர்கள் பலரும்
    வாழ்கின்ற இடங்கள் நிறைந்த பல ஊர்கள்;

     

    இதுபோன்ற ஊர்கள் இடையில் கொண்ட
    நாடுகளை எல்லாம் கண்டு,
    ஒரு நாளில் ஒரு காத தூரத்துக்கு மேல்
    நடக்க முடியாதவர்களாய்,
    ஆங்காங்கே இடையிடையே தங்கி
    நாட்கள் பலவாய் நடந்துதான் சென்றனர்.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  142 – 155

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 103

    மலர் சபா

    *புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை*

    அறுகம் புல்லையும் குவளை மலர்களையும்
    ஒருங்கே சேர்த்து
    பொன்னிறமான செந்நெற்கதிர்களுடன் கோர்த்து
    ஏரிலே சூட்டி
    போற்றுவோர் வணங்கி நிற்க
    நிலத்தையே பிளக்கும் வண்ணம்
    உழவர் இசைத்த ஏர்மங்கலப்
    பாடலின் ஒலி
    ஒருபுறம் ஒலிக்கும்.

    நெல்லை அறுத்து
    ஓரிடத்தில் குவித்து
    அதனைக் கடாவிட்டு மிதித்து
    உதிர்ந்த நெல்லை
    முறத்தில் எடுத்துத் தூற்றும்போது
    இசைக்கின்ற முகவைப் பாட்டின் ஒலி
    ஒருபுறம் ஒலிக்கும்.

    தெளிந்த ஓசையுடைய
    தடாரியைக் கையில் கொண்டு
    கள்ளுண்டு செருக்கில் பொருநர்கள்
    கரிய சாந்து பூசப்பட்ட
    திர்ண்ட முழவிலே தோற்றுவித்த
    இனிய ஆரவார ஒலி
    ஒருபுறம் ஒலிக்கும்.

    இவ்வாறு மருதநிலத்தில்
    பல்வேறு ஓசைகளைக் கேட்டு
    வருத்தம் கொள்ளாதவராய்
    மகிழ்ச்சி கொண்டவராய்
    இன்னும் மேலும் ஒலிகள் கேட்கின்ற
    ஆர்வமுடையவராய் ஆற்றின் கரையில்
    நடந்து சென்றனர் அம்மூவரும்.

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 102

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    உழவரின் ஒலியும் பாட்டும்

     

    உழப்படாத நுண்ணிய சேற்றில் புரண்டதால்

    உடலில் பூசியுள்ள சேறு;
    கழுவப்படாத முடியினையுடைய உடல் மற்றும்
    சிவந்த கண்களுடன் இருந்தன எருமைகள்.
    அவைதாமும் தம்

    தினவைப் போக்கிக் கொள்வதற்காக

    களத்து மேட்டில் உழவர்கள்
    வைக்கோற் புரியால்
    கட்டிவைத்த நெற்கூடுகளில்
    முதுகை உராய்ந்தன.

    வலிமையான கைகளையுடைய
    கூலியாட்களும் நில உரிமையாளரும்

    அவற்றை விரட்ட
    ஒருங்கே எழுப்பும்  ஒலி

    ஒருபுறம் ஒலிக்கும்.

     

     

    மணமிக்க ஆம்பல் முதலிய
    மலர்களையும் களைகளையும் பறித்தெறிந்து
    களைத்து நின்ற உழத்தியர்
    நாற்று முடிகளைப் பிரித்து அழுத்தி நட்டனர்.
    அப்போது,
    வளைந்த வளையணிந்த அவர்தம்

    தோளிலும் மார்பிலும்
    சேறு பூசிய கோலம் அழகு செய்தது.
    இதே கோலத்தில் அந்த உழத்தியர்
    கள்ளுண்டு களித்தனர்.
    அதனால் செக்கச்சிவந்த கண்களுடன்

    அவர்கள் தாமும்
    கொச்சை மொழியில்

    புதுப்பாடல்கள் பாடிக்களித்த ஒலி

    ஒருபுறம் ஒலிக்கும்.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 120 – 131

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 101

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

    இந்த ஒலிகள் மட்டுமன்றி
    இசைக்கருவிகளான
    ஆம்பி, கிழார்,

    உரத்து ஒலிக்கும் ஏற்றம்,
    நீர் இறைக்கும் கூடை

    இவற்றின் ஒலியும் கேட்டபடி இருந்தது.

     

    வயல்களில் கரும்பும் நெல்லும்
    செழித்து வளர்ந்துள்ள
    மருதநிலத்தின் நீர் நிலைகளில்
    பசுமையுடனும் பொலிவுடனும்
    தாமரைகள் பூத்து நிற்கும்.

     

    சம்பக்கோழியும்
    உரத்து ஒலிக்கும் நாரையும்
    செங்கால் அன்னப்பறவையும்
    பசிய கால்களைக் கொண்ட கொக்கும்,
    கானாங்கோழியும், நீர்க்காக்கையும்
    உள்ளானும், குளுவையும்,
    கணத்துப்பறவையும், பெருநாரையும் ஆகிய
    நீர்நிலைப்பறவைகள் ஒன்றுகூடி
    உரத்த பலவகைக் குரல்களை எழுப்பின.

     

    இருபெரு வேந்தர்கள்
    போரிடும் போர்க்கள ஓசையைப் போலவே
    அப்பறவைகள் எழுப்பிய ஒலிகள்
    இடையறாது எங்கும் ஒலித்தபடி இருந்தது.

     

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 110 – 119

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

     

    Share