நான் அறிந்த சிலம்பு – 109

மலர் சபா

புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

 

சாரணர் மறைதல்

 

கவுந்தியின் புகழ் வார்த்தைகள் கேட்ட

சாரணர்கள் மனமொன்றி மகிழ்ந்து

நிலமட்டத்தினின்று ஒரு முழம்

உயர்ந்த நிலையில் நின்று,

“கவுந்தியே! பிறவி தருகின்ற பற்று

உனக்கு இல்லாமல் போவதாக” எனக்கூறி

நீள் நிலம் வழி செல்லாமல்

வான்வழியே பறந்து சென்றனர்.

 

அவர் சென்ற திசை நோக்கி

கோவலனும் கண்ணகியும்

அடிகளுடன் பணிந்து வேண்டினர்.

“எம் பிறவிப் பந்தம் அறுக” என்று.

 

காவிரியைக் கடந்து தென்கரை அடைந்து மூவரும் ஒரு சோலையில் இருத்தல்

 

மேகங்கள் சூழ நின்ற சோலைகளில் இருந்த

காவிரியாற்றங்கரையில் நீர் நிறைந்த நெடுந்துறையில்

கண்ணகியும், கோவலனும், தவத்திரு கவுந்தியடிகளும்

ஓடம் ஒன்றில் ஏறி அமர்ந்து

குற்றம் தீர்க்கவல்ல கோயில்கள் இருந்த

தென்கரையை அடைந்தனர்.

 

அங்கே மலர்கள் சூழ நின்றிருந்த

பூஞ்சோலைகளில் அமர்ந்து இளைப்பாறினர்.

 

வம்பப் பரத்தையும் வறுமொழியாளனும்

 

ஆங்கே,

பரத்தைத் தொழிலைப் புதிதாக மேற்கொண்ட

பரத்தைமகள் ஒருத்தியும்

அவள்மீது காமம் கொண்டு அவளுடன் சென்ற

பயனற்ற சொற்கள் பேசித்திரியும் காமுகன் ஒருவனும்

நறுமணச் சோலையில் புகுந்து

அம்மூவரின் அருகில் வந்தனர்.

 

கோவலனையும் கண்ணகியையும் பார்த்த அவர்கள்,

“மன்மதனும் இரதியும் போல இருக்கும் இவர்கள் யார்?”

என்றுணர்ந்திடும் வண்ணம் அவர்களை நெருங்கி,

கவுந்தியடிகளிடம் கேட்டனர்..

“நோன்புகள் நோற்றுப் பட்டினி கிடந்ததால்

உடல்மெலிந்த தவத்தீரே!

உம்முடன் வந்துள்ள இவர்கள் யார்?” எனக் கேட்டனர்.

 

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  208 – 224

 

http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *