சிறு கை அளாவிய கூழ் – 2
இவள் பாரதி

நெற்றி சுருக்கி
புருவமுயர்த்தி
உதடு சுழித்து
அடித்துவிட்டதைப் போல
ஓசையின்றி
அழுகிறது
உறங்கும் குழந்தை
ஆழ்மனவிழிப்பில்
எழுந்துவிட்ட தாய்
தூக்கம் விரட்டி
விழித்திருக்கிறாள்
இரவெல்லாம்
அழுவதும் சிரிப்பதுமான
உறங்கும் குழந்தையை
ஆறுதல்படுத்தியும்
மகிழ்வெய்தியும்
=====
உனது
ஒவ்வொரு முடிக்குமான
இடைவெளியில்
ஊர்ந்தூர்ந்து செல்கிறேன்
புதிதாக விதைக்கப்பட்ட
காட்டொன்றில்
இருப்பதான நினைவெனக்கு
நீ துளிர்க்கும் சிறுமரம்
ஒரு காடு
பூவுலகம்
குட்டி பிரபஞ்சம்
======
உதடுகளுக்கிடையில்
நாக்கைத் துருத்தி
பால் குடிக்கும் பாவனை செய்கிறாய்
உறக்கத்தில்
மனம் பதறியெழுந்து
முலையிரண்டும் கசிய
ஒன்றை உன் உதட்டில் வைக்கிறேன்
சடாரெனக் கவ்வி
சப்பிக்கொண்டே உறங்குகிறாய்
======