Tag: சேக்கிழார்

  • சேக்கிழார் பா நயம் – 63 (பெருமையால்)

    சேக்கிழார் பா நயம் – 63 (பெருமையால்)

    திருச்சி  புலவர் இராமமூர்த்தி

    திருவாரூர்த் திருக்கோயில் முன் தேவாசிரிய மண்டபத்தில் சிவனடியார்கள் கூடி இருந்தனர். அவர்களைக் கண்ட சுந்தரர், ‘’இச்சிவனடியார்களுடன் சேரும் திருவருள் எப்போது கிட்டுமோ என்றெண்ணி திருக்கோயில் வாயிலை அடைந்தார். அவர் முன்னே எதிரே காட்சியளித்த சிவபிரானின்  திருவடிகளைக் கண்டமையால் பெற்ற ஞானத்தால், திருவடிப் புகழ்ச்சியை நான்கு திருப்பாடல்களில் பாடி மகிழ்ந்தார். அப்போது சிவபிரான் அடியார்களின் தன்மையைச் சுந்தரருக்கு  உணர்த்தியருளினார்.

    அடியார்களின் எழுவகைச் சிறப்புக்களை ஆண்டவனே உணர்த்திய அழகை இத்திருப்பாடல் வழங்குகிறது. இப்பாடலில்,

    1. “பெருமையினாலே தமக்குத்  தாமே ஒப்பாவார்கள்;
    2. பேணுதல் தன்மையினாலே எம்மைத் தமக்கே உரிமையாகப் பெற்றார்கள்;
    3. எம்மோடு  ஒன்றித்து நின்ற நிலையினாலே உலகத்தை வெல்வார்;
    4. அதனால் மேலே  வரக்கடவன  வாகிய ஊனங்கள் ஒன்றுமில்லாதவர்;
    5. பிறர் எவரும் நிற்றற்கு   அரிய நிலையிலே நின்றவர்கள்;
    6. அன்பு நிறைதலினாலே இன்பத்தையே நிறையத் துய்ப்பவர்கள்;
    7. இம்மை மறுமைகளைக் கடந்த நிலை பெற்றவர்கள்

    இத்தகையினராகிய இந்த அடியவர்களை நீ சேர்வாயாக“ என்று,இறைவன்  கூறியருளுகின்றார்.

    விளக்கம்: பிறர் யாரும் செய்தற்கு அரிய செயல்களைச் செய்தவர்கள் என்பதே இவர்களின் பெருமையாகும். இதனைத் திருவள்ளுவர், ‘’செயற்கரிய செய்வார் பெரியர்‘’ என்று போற்றுகின்றார். இப்பெருமை எய்தற்கு அரியது. இதனை எய்திய அடியார்களைப் பற்றித் திருக்களிற்றுப் படியார் என்ற சாத்திர நூல்,

    ‘’செய்தற்   கரிய  செயல்பலவும்   செய்துசிலர்
    எய்தற்    கரியதனை   எய்தினர்கள்’’

    என்று கூறுகின்றது. பசித்து வருந்திய எல்லா உயிர்களுக்கும், தாம் வருந்தாமல் பெரிய அளவில் உணவு வழங்கி உதவுதலே பெருமையாகும்.

    பஞ்சம் வந்து உலகமெல்லாம் வருந்துங் காலத்தும் தாம் அஞ்சாது பெருஞ் சோற்று மலை ஈந்து உயிர்களைக் காத்ததும், “பிறந்தார் பெறும்பயன் இரண்டில் அடியார்க் கமுதுசெய்வித்தல் ஒன்றாமாயின் நீவா“ எனச் சூளுரைத்து ஒரு பாட்டுப்பாடிய அளவில்,  எலும்பு உயிரும் வடிவமும் பெற்றெழச் செய்ததும், இன்னோரன்ன பிறவும் இவர்களது பெருமையாம். இவற்றை முன்னர்த் திருக்கூட்டச்சிறப்பிலே,

    “பூதமைந்தும்  நிலையில்   கலங்கினும்,
    மாதொர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்“

    என்பது முதலாக வடித்தெடுத்து வகுத்தருளினமை பின்னர் ஒவ்வொரு  வரலாற்றிலும்  காண்க.

    தம்மை ஒப்பார் – தம்மையே தமக்கு ஒப்பாகப் பெற்றார். பிறர் இவருக்கு  இணையாகார். “தனக்கு உவமை யில்லாதான்“ என்பது எமது தன்மை; “எம்மை அடைந்த அடியார்களாகிய இவர்களுக்கும் அதுவே தன்மை“ என்று இறைவன் அறிவித்தவடியாம். இப்பெருமைகளை இப்புராணத்திலே ஒவ்வொரு  நாயன்மார் சரிதத்திலும் தனித்தனி விரிவாகக் கண்டுணர்ந்துகொள்க.

    பேணலால் எம்மைப் பெற்றார் – பேணுதல் – குழவியைத் தாய் பேணுமாறு போற்றுதல்; என்றும் இடைவிடாது சிந்தித்து வாழ்தல். “வருமிவள் நம்மைப் பேணும் அம்மைகாண்“ என்ற காரைக்காலம்மையார் புராணம் காண்க. பசிக்குமே  என்றெண்ணி இறைவனுக்கே உணவூட்டியவர் கண்ணப்பர். எம்மைப் பெறுதலாவது – எம்மைத் தமக்கே உரிய உரிமைப் பொருளாகப் பெறுதல். நாம் அவர்களது அன்புக்குள்ளாவோம்; எம்மை அடைய வேண்டுபவர்கள் அவர்களை அடைந்து, அவர்கள் வழிப்படுத்த எம்மை வழிபட்டு, அவர்கள்தர எம்மை அடையக்கடவர் என்றபடி. “படமாடக் கோயிற் பரமர் – நடமாடக் கோயில் நம்பர்“ என்ற திருமூலர் திருமந்திரங்காண்க. அடியார்களைப் பேணலால் அடியடைந்த சிறுத்தொண்டர், அப்பூதியார், குலச்சிறையார் முதலிய நாயன்மார் சரிதங்கள் காண்க. பேணுதல் – உவப்பன செய்து வழிபடுதல். ‘பெரியாரைப் பேணி ‘ என்ற திருக்குறள்  உரையில் காண்க!

    ஒருமையால் உலகை வெல்வார் – ஒருமை உணர்ச்சியினால் இறைவனோடு ஒற்றித்திருத்தல். “ஒட்டிட்ட பண்பின் உருத்திரபல்கணத்தார்“ என்பது தேவாரம். இதனையே “மெய்ஞ்ஞானத் தாணுவினோ டத்துவிதம்“ என்றார் தாயுமானார். இறைவனோடு ஒன்றிய இடத்து உலகம் அவ்வுயிரைப் பற்றாது அருளுள் அடங்கி நிற்கும்; ஆதலின், உலகைவெல்வார் என்றார். உலக பாசக்கோடுகளின் பற்றிலிருந்து விடுபட இது ஒன்றே வழி என்று ஒருமையால் என இரட்டுற மொழிந்துள்ளார்.

    ஊனம் மேல் ஒன்றுமில்லார் – ஊனம் – குறித்ததொன் றாகமாட்டாக் குறைவு. யாதுங்குறைவிலார் என்றதும் அது. ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ என்பது திருக்குறள் ஆணை. உடம்பே ஊனம் என்றெண்ணும்போது, ஏனை ஊனங்கள் உடம்பில்  ஒடுங்குவன. உடம்பெடுத்தலே – பிறவியே – ஊனங்கட்கெல்லாம் காரணமும் தாயகமுமாவது. உயிருக்கு வரும் ஊனமாவது உடம்பெடுக்கும் பிறவி. இவர்கள் பேணலால் எம்மைப் பெற்றாராதலின் பிறவி வாராமற் செய்துகொண்டார். ஆதலின் மேல் ஊனம் ஒன்றுமில்லாராயினர்.

    அருமையாம் நிலை – பிறரால் அடைதற்கரிய நிலை.

    அன்பினால் இன்பம் ஆழ்வார் – அன்பு காரணமாக இன்பம் உளதாம். “இன்பமே யென்னுடை யன்பே“,  “இறவாத வின்ப அன்பு வேண்டி“ முதலிய திருவாக்குக்களால்  புலப்படும்.

    இருமையும் கடந்து நின்றார் – இருமை – இம்மை மறுமை என்பன. அவை இம்மை என்னும் இவ்வுலகப்பிறப்பு நிலையும், மறுமை என்னும் சுவர்க்க நரகப்பிறப்பு நிலையும் ஆம். இறைவனைப் பற்றிநின்ற நிலையினாலே இவ்வுலக நிலையையும், சுவர்க்காதி போகங்களைப் பொருளல்ல வென்றொதுக்கியதால் மறுமையும் கடந்தவர். “கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு“, “போகம் வேண்டிலேன்பு ரந்த ராதி யின்பமும்“ “சுவர்க்கங்கள் பொருளளவே“, “உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன்  பேர்வேண்டேன்“. என்ற வாக்குகள்  இதனை உணர்த்தும்.

    “நின், திருவடி பிடித்து வெருவரல் விட்டு
    மக்களும்  மனைவியும்  ஒக்கலுந் திருவும்
    பொருளென நினையா துஉ ன்னரு ளினைநினைந்து
    இந்திரச் செல்வமும்  எட்டுச் சித்தியும்
    வந்துழி வந்துழி மறுத்தனர்  ஒதுக்கிச்
    சின்னச் சீரை துன்னல்  கோவணம்
    அறுதற் கீளொடு பெறுவது புனைந்து
    சிதவ லோடு ஒன்று  உதவுழி எடுத்தாங்கு
    இடுவோர்  உளரெனின்  நிலையில் நின் றயின்று
    படுதரைப் பாயலில்  பள்ளி மேவி ஓவாத்
    தகவெனும்  அரிவையைத் தழீஇ மகவெனப்
    பல்லுயிர்  அனைத்தையும்  ஒக்கப் பார்க்கும் நின்
    தெய்வக் கடவுள்   தொண்டர்“

    என்று திருவிடை மருதூர்  மும்மணிக் கோவை  கூறுகிறது.bஇத்தகைய திருவாக்குகளிற் கண்ட இலக்கணங்களும், அவற்றிற் கிலக்கியமாய் விளங்கும் சிறுத்தொண்டர், இயற்பகையார் முதலிய நாயன்மார் சரிதங்களும் காண்க.

    இருமை – “இருமை வகை தெரிந்து“ என்ற குறளிற் பரிமேலழகர் இருமை   யென்பதற்குப் பிறப்பு வீடென்று உரைகண்டார். வீட்டைக் கடந்த நிலை வேறின்மையாலும், இங்கு இருமையுங்கடந்து என்றமையாலும் ஈண்டு மேலே கண்டவாறுரைக்கப் பெற்றது. இருமை – எண் குறித்ததாகக் கொண்டு பிறப்பும் இறப்புங் கடந்த  பேராவியற்கை பெற்றார்  என்பதை அறிக.

    “பெத்தத்தும்   தன்பணி யில்லை பிறத்தலான்
    முத்தத்தும்  தன்பணி யில்லை முறைமையால்
    அத்தற்கு  இரண்டும்  அருளால்  அளித்தலால்
    பத்திப் பட்டோர்க்குப் பணியொன்று மில்லையே“

    என்ற திருமூலர் திருமந்திரக் கருத்தினைக்கொண்டு இவர் நிலையினை  இவ்வாறு உரைத்தலும் ஒருவகையாற் பொருந்துவதாம்.

    “வீடும் வேண்டா விறலின் விளங்கினார்“ என்றதும் காண்க. இவ்வாறன்றி இதற்கு இருவினைகளையும், இன்ப துன்பங்களையும், பிறப்பிறப்புக் களையும், ஒழித்தவர் என்று கூருவாருமுண்டு.

    இவரை – அண்மைச் சுட்டு. இதோ இங்கு முன்னர்த் தேவாசிரியனிற் கூடியிருக்கும் இவர் எனக் காட்டிக் குறித்தபடியாம்.

    அடைதல் – அடிமையாகச் சேர்ந்து அவர்களோடணைதல். ஆகவே அடியார்களை  ஆண்டவனோடு ஒருங்கு வைத்துப் போற்றும்  சேக்கிழாரின் வாக்குச் சிறப்பை எண்ணி எண்ணி, மகிழ்கிறோம்! இனி மீண்டும் பாடலைப்  படித்துப் பயில்வோம் .

    பெருமையால்   தம்மை  ஒப்பார் ; பேணலால்  எம்மைப்  பெற்றார்;
    ஒருமையால்   உலகை  வெல்வார்;   ஊனம்  மேல் ஒன்றும்  இல்லார்;
    அருமை ஆம்  நிலையில்  நின்றார்; அன்பினால்   இன்பம் ஆர்வார்;
    சிறுமையும்   கடந்து  நின்றார் , இவரை நீ  அடைவாய்!’’ என்றார்!

    இப்பாடலால்,  இறைவன்   நமக்கும்  அடியாரை அடையும் தேவையை  வலியுறுத்துகிறார்!

    Share
  • சேக்கிழார் பா நயம் – 61 (நீதி  மாதவர்)

    சேக்கிழார் பா நயம் – 61 (நீதி மாதவர்)

    திருச்சி  புலவர்  இராமமூர்த்தி

    சுந்தரர் முன் காட்சியளித்த  இறைவன்  திருவடிச் சிறப்புகளுள்  அடுத்து அவற்றின் திருவருள் தன்மைகளைக்  கூறுகிறார்.

    நீதி  மாதவர்   நெஞ்சிற்  பொலிந்தன
    வேதி   யாதவர்   தம்மைவே   திப்பன
    சோதி   யாயெழுஞ்  சோதியுட்   சோதிய
    வாதி   மாலவன்   காணா   வளவின.

    பொருள்: “நீதியில் நிற்கும் தவமுடையார்களது மனத்திலே ஒளி வீசி விளங்குவன; அறியாதவர்களையும் அறிவித்துத் திருத்துவன; ஒளிப்பொருள்களுக் கெல்லாம் ஒளிகொடுத்து அவற்றின் மேலும் எழுந்து விளங்கும் ஒளியாயுள்ளன; ஒரு காலத்துததோன்றும் இயல்பினராகிய மாலினாலே காணமுடியாத அளவையுடையன;

    மற்ற எளிய மக்களின்  உள்ளத்தில் விளக்கமின்றி  இறைவன் திருவடிகள் இருக்கும். ஆனால்  எல்லா  இடத்திலும் இருக்கும் இறைவன் திருவடிகள் சிவபிரான் அருளிய ஆகம ஒழுக்கமும்  தவமாகிய சிவபூசையும் உடைய சிறந்த அடியார்களின்  நெஞ்சிலே நீங்காது நிலைத்து நிற்கும். இதனைத் தேவாரம்,

    ‘’கற்றாரின்  உற்று   ஓரும்  காட்சியானை’’   என்றும்,

    ‘’கற்பவர்   விழுங்கும்  கற்பகக்  கனியை ‘’  என்றும்  கூறுகின்றது.

    திருவருள்  நிலையை அறியாது  மலமாயையுள்  அழுந்திக் கிடப்பவர்கள்  கேவலர் எனப்படுவர். அவர்களை  திருவருளால்  அறிவு பெறும் நிலைக்கு   இறைவன் உயர்த்துவார். இத்தகையோர்   சகலர்  எனப் பெறுவர். இதனை  வேதித்தல் என்பார்கள். வேதித்தல் = வேறுபடுத்துதல். தெரிந்து பூசிப்போரிடத்துப் பொலிந்து, தெரியாது வாளா கிடப்போரை அறிவித்தும் அருள் செய்வன இரண்டு பாதங்கள்   ஆகும்.

    “கல்லாதார் மனத்தணுகாக் கடவுடன்னை“,

    “மற்றவரறியா மாணிக்க மலையை“ முதலிய திருவாக்குக்கள் இதனை விளக்கும். வேதிப்பன – என்பதற்குப் பேதிக்கச் செய்வன – மாற்றுவன – என்றுரைத்தலுமாம். மாற்றுவது வேதி எனப்படும். இது தரிசவேதி – பரிச வேதி என் இருவகைப்படும். என்றது காண்க.

    ஆணவத்திற் கட்டுண்டுகிடப்போரை அதிலிருந்து பரிசம் – நோக்கு – பாவனை முதலிய தீக்கைகளால் மாறச் செய்வன. பரிசத்தாலே கட்டுநீங்கும் கோழி முட்டையும், பார்வையால் நீங்கும் மீன்முட்டையும், பாவனையால் (நினைவினால்) நீங்கும் ஆமை  முட்டையும், இவற்றிற்கு உதாரணங்களாகக் கூறுப.

    இப்பாடலில்  சோதியாய் எழும்  சோதி என்பது,  சூரியன், சந்திரன் , விண்மீன்கள் , அக்கினி மற்றும் விளக்குகளில் தோன்றும் எல்லா  ஒளிகளையும் குறித்தது. இவை தாமே ஒளிகொடுப்பன அல்ல. இவற்றுள்ளே நின்று ஒளிகொடுப்பவன் இறைவன். அவன்பிறிதொன்றினானன்றித்தானே ஒளியுடையவன்;ஆதலின்சுயஞ் சோதியாவன். அவனை ஒளியுருவுடையவனாகவே நினைப்பது சிவாகமங்களின்றுணிபு.

    சிவபூசை விதியில் சூரிய பூசையிலே சூரியமண்டலத்திடையில் விளங்கும் ஒளியுருவனாகிய சதாசிவ மூர்த்தியைப் பூசிக்கும் முறை சைவாசாரியர்களிடம் உண்டு. இச்சோதியை, சோதிகளிலே மிகுந்த சோதி என்றும்,சோதிகளுக்குள்ளே நின்று அவற்றிற்கு ஒளிதரும் சோதி என்றும் கொள்க. “ஒளியா யொளியதன் ஒளி“ என அடுக்கிக் கூறுவதுங் காண்க. மும்மலங்களுக்கு சடமாயொழியவே, அவைகளினின்றும் நீங்கிச் சுத்தமாய் மேம்படும் ஆன்ம ஞானவொளியுடன் ஒளியாகி அதனை விளக்குவன.

     “சோதிக்குட் சோதியாய்த் தோன்றிடுவன் காணே“ – சித்தியார்.

    “ஓங்காரத் துள்ளொளிக் குள்ளே முருகனுருவங்கண்டு“ – கந்தர் அலங்காரம்.

    இப்பாடலில் ஆதிமாலவன் காணா அளவின என்பது – பன்றியாய்ச் சென்று திருவடி தேடிக் காணாதவர் திருமாலே யாதலானும், இங்குக் கூறுவது அந்தப் புண்டரீகப் பதமேயாதலாலும் மாலவன் என்ற பாடமே சிறந்ததாம். ஆதி – தொடக்கம் – தோன்றுதல். “ஈறிலாதவன் ஈசன் ஒருவனே“ என்றபடி இறைவன் ஒருவனே ஆதியும்  அந்தமுமில்லாதவன்; அநாதியாயுள்ளவன். தமக்கு ஒரு ஆதியை – தொடக்கத்தை – உடையார் அநாதியை அறியார். ஆதலின் ஆதி மாலவன் காணா அளவின என்றார். “ஆதியுமந்தமுமல்லா வரும்பெருஞ் சோதி“ என்பது திருவாசகம். பெருஞ் சோதியேயாயினும் சிலர் காணப்பெறாமலிருப்பது அவர்களது பக்குவக் குறையிலேகாண்க. “சோதியேசுடரேசூடரேசூழொளி விளக்கே“ என்ற திருவாசகமும்காண்க. சோதியாய் எழும் மூன்று சோதியும் இறைவனது மூன்று கண்களாம். கண்கள் கருவிகளேயாதலின் இவற்றுள்ளே உயிரின் செயல் கலந்தாலன்றி  இவைகட்குச் செயல் இல்லை. இம்மூன்றினுள்ளும் உட்சோதி யாயிருந்து இறைவன் அவற்றிற்கு ஒளி தருவன் என்பதும் குறிப்பு. கறுத்தனவாயினும் சிவந்தன; பொலிந்தனவாயினும் வேதிப்பன; சோதியவாயினும் காணா வளவின; என அணிபெறத் தொடர்ந்து துதித்த சுவையும் காண்க. வேதிப்பன – என்ற கருத்து

    “குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன“ என்ற திருவிருத்தத்திலும், மாலவன் காணா- என்ற கருத்து “கருடத் தனப்பாகன் காண்டற் கரியன“ என்ற திருவிருத்தத்திலும் அப்பர் பெருமான் அருளியமை காண்க. சோதிய – என்பது “சோதியாய் நிறைந்தான் சுடர்ச்சோதியுட் சோதியான்“  என்ற திருஞான சம்பந்த நாயனார் தேவாரத்துட் காண்க.  இனி முழுப் பாடலையும் படித்துணர்வோம்,

     நீதி  மாதவர்   நெஞ்சிற்  பொலிந்தன
    வேதி   யாதவர்   தம்மைவே   திப்பன
    சோதி   யாயெழுஞ்  சோதியுட்   சோதிய
    வாதி   மாலவன்   காணா   வளவின!

    ஆகவே சிவபூசை செய்யும் தவமுடையோர் நெஞ்சில் பொலிவதும், கேவலமலத்துட் கிடந்தோரைச்  சகலராக்குவதும்,  ஒளிகள் அனைத்தையும் கொண்ட பேரொளிப் பிழம்பாய்  நிற்பனவும், ஆதியும் அந்தமும் இல்லா  அரும்பெருஞ் சோதியும் இறைவன் திருவடிகளே  என்று சுந்தரர் கண்டு கூறியதைச் சேக்கிழார்  கொண்டு கூறுகிறார்.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 57 (மாதுடன்)

    சேக்கிழார் பா நயம் – 57 (மாதுடன்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    மாதுடன் கூடி வைகி மாளிகை மருங்கு சோலைப்
    போதலர் வாவி மாடு செய்குன்றின் புடையோர் தெற்றிச்
    சீதளத் தரளப் பந்தர்ச் செழுந்தவி சிழிந்து தங்கள்
    நாதர்பூங் கோயி னண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி

                                                                                                                                57(329)

    இப்பாடலில் இறைவன் , சுந்தரர், பரவையார் தம் செயல்களின் சித்தாந்தச் சார்புடன் கூடிய விளக்கம் புலப்படுகின்றது. எல்லாக் காதலர்களும் குளம், சோலை, செய்குன்று ஆகிய இடங்களில் தம் காதல் அனுபவங்களை பெறுவர். இங்கும் சுந்தரர் மாளிகையின் அருகில் உள்ள சோலையில், பரவையாருடன் கூடி இருந்தார். அங்கே மொட்டுக்கள் மலர்ந்து நறுமணம் வீசின. அங்கே ஒரு குளக்கரையில் அமைந்த செய்குன்றின் மேல் ஓர் உயர்ந்த இடத்தில் உள்ள குளிர்ந்த முத்துப் பந்தலின் கீழே ஓர் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

    அப்போது பெருங்காயப் பாண்டம் அப்பொருள் நீக்கிய போதும் அதன் மணம் நீங்காதது போலச் சுந்தரருக்கு இறையுணர்வு பூத்தது. சுந்தரர்தம் காதல் மயக்கத்திலிருந்து மனந்திரும்பி இறைவனின் பூங்கோயிலை அடைந்து வழிபாடு செய்ய விரும்பினார். ஆகவே அந்த இருக்கையிலிருந்து எழுந்தார்.

    வாவி – செய்குன்று முதலிய இப்பொருள்கள், கூடிய நாயகன் நாயகிகள் அனுபவிக்கும் உலக அனுபவப் பொருள்களாம். மேலும் பரவையார் (கமலினியார்), சங்கிலியார் (அநிந்திதையார்) இவர்களின் பொருட்டே சுந்தரமூர்த்திகள் ஆணைவழி அவதரித்து அவர்களின் வழியே வேட்கை தீர மணக் கோலத்துடன் மண்மேல் விளையாடி வருகின்றார். ஆதலானும் இவை இவரது அனுபவங்களுக்கு மிக உரியவாயின. தவிசு செழுமையாய் இருந்தது; அது சீதளத் தாளப் பந்தர்க்கீழ் அமைந்திருந்தது; மேற்பந்தரும் கீழ்த் தவிசும் ஒரு தெற்றியில் அமைக்கப்பெற்றன; அத்தெற்றி ஒரு செய்குன்றின் புடையிருந்தது; செய்குன்று வாவியின் மாடு அமைந்தது; வாவி சோலையினிடை இருந்தது; சோலைதானும் மாளிகை மருங்கு நின்றது

    எந்த மகனும் விட்டு நீங்கலாகாத உலக இன்பப் பொருள்களாகிய சோலை – வாவி -செய்குன்று – தவிசு இவற்றின் இடையேயும் பூங்கோயில் சென்று கும்பிடும் விருப்பமே நம்பிகளுக்கு மிக்கு எழுந்தது என்று கூறியவதனால்“ பிரான் சரணார விந்தமலர் சிந்தையினும் சென்னியினும் மலர் வித்து………கூடி விளையாடிச் செல்கின்றார்“ என்று முன் பாட்டில் கூறியதன் உண்மை விளக்கப்பெற்றது.

    சித்தாந்த விளக்கம்:

    எல்லார் உயிர்க்கும் இச்சை, அறிவு, செயல் என்ற மூன்று சத்திகள் உண்டு. இவை மூன்றும் வேலை செய்கின்ற மட்டிலே மேல் நிகழ்ச்சிகள் நிகழும். பொருள்களை முதலில் நிருவிகற்பக் காட்சியாகக் கண்ட உயிருக்கு அதிலே புத்தி கலந்து தொழில் செய்தபோது சவிகற்பக் காட்சி நிகழும். அதன்பின் அதில் ஞானம் உண்டாம். பின் அதில் இச்சை நிகழும். இங்கு நம்பிகளது அறிவிச்சை செயல்கள் அவ்வாறு தொடர்ந்து நிகழாது பரவையார் சார்வும், சோலை வாவி முதலிய பொருள்களும், கண்டபோது அவற்றின் சார்பினாலே முன்னை அறிவும் இச்சையும் செயலுமாகத் தொடர்ந்து நிகழ்ந்து கும்பிடும் விருப்பை எழுப்பப் பின்னர்த் திருத்தொண்டத் தொகை அருள ஏதுவாயினமை குறிக்கத்தக்கது.

    உலகத்தில் நிற்கும்போதே சிவஞானிகளின் அறிவு இச்சை செயல்கள் உலகச் சார்பிலே செல்லாது சிவச்சார்பிலே செல்வனவாம். அவர்கள் உலகத்தைப் பாரார். அவர்களதுகண் விழித்தே யிருக்குமாயினும் உலகத்தை நோக்காது; உண்முகமாகவே நோக்கி நிற்றலால் உலகத்தார்க்குக் குருடாகவே காணும். “விழித்த கண்குரு டாய்த்திரி வீரரும் பலரால்“ என்பது இவர்களது இயல்பு. உயிர்களுக்கு உடம்புகள் அவ்வவற்றின் கருமத்திற்கீடாய் வரும்; அவ்வுடம்புகளே மேலும் கருமத்திற்குக் காரணமாயும் இருக்கும்.

    ஆனால் சிவஞானிகளுக்கோ எனில் பிராரத்த வினையைத் தொலைப்பதன் பொருட்டு மட்டுமே செயல் செய்யக் காரணமாக உடம்புகள் பயன்படும். அவை மேல் விளைவுக்கு வித்தாகா. சூரிய வெளிச்சத்திலே விளக்கு ஏற்றிச் செய்யப்படும் கிரியைகளில் விளக்கின் காரியம் பயனற்றொழியச் சூரிய ஒளியினுதவி கொண்டே அவை செய்யப்படுவது போலச் சிவாஞ்ஞையாகிய அருள்நெறியிலே அதன் முன்னிலையிற் செய்யப்படும் அந்தப் பிராரத்த அநுபவம் செயலற்று நிற்கும். இங்கு நம்பிகள் செயலும் அவ்வாறே காண்க.

    மேலும் “அவனே தானே யாகிய வந்நெறி, யேக னாகி யிறைபணி நிற்க, மலமாயை தன்னொடு வல்வினை யின்றே“ என்று சிவஞானபோதம் பத்தாஞ்சூத்திரம் வகுத்தும், அதன் கீழ் “அவனருளால் அல்ல தொன்றையுஞ் செய்யா னாகவே அஞ்ஞான கன்மம் பிரவேசியா வாகலான்“ என்று அருளியதுங் காண்க.

    பசுபாசங்களின் இயல்புகளை உள்ளவாறுணர்ந்து, செய்வனவெல்லாம் அவனருள் வழிநின்று செய்யப்படும் செயலாகக் கண்டுகொண்டிருப்பாராயின், அவ்விறைப்பணியாகிய அடிமைத் திறமுடையார் எவ்வுடம்பினின்று எவ்வினைகளைச் செய்யினும் அவை அவர்க்குப் பந்தமாதலில்லை;

    பிராரத்தவினையுந் தன்னைக் கூட்டுவிக்கும் முதலவன் சந்நிதியில் உடலூழாய் ஒழிவதன்றி, ஏனையோர்க்குப் போல அவர்க்கு ஆதலில்லை யாகலான், பெருங்காயமிட்டு எடுத்தொழிந்த கலத்திலே அதன் வாசனை மங்கிப்போய் மெலிதாய் நாறுமாறுபோல, நானவ னென்றெண்ணிச் சிவோகம்பாவனை செய்தறியும் ஞானிக்குப் பிராரத்த வினையும் அதற்கிடமாகிய உடம்பு முதலிய மாயேயமும் வாசனை மாத்திரையாய் மெலிதாய் வந்து தாக்குமாயினும், அவ்வழி யேறுவதாகிய ஆகாமியவினை பிறவிக்கு வித்தாய் நிலைபெற்று முறுகுதலின்றிக் கெட்டொழியும். ஒளி இருளைத் துரக்குமாறு போல அவ்வுணர்வு ஆகாமியத்தைத் துரக்கும் என்று இக்கருத்தை விரித்து மாபாடியத்திலே எமது மாதவச் சிவஞான யோகிகள் உரைத்தருளியவற்றையுங் காண்க. விரிவு அங்குக் கண்டு கொள்க.

    இதனைச் சேக்கிழார், மிகவும் நுட்பமாகப் புலப்படுத்த ,

    மாதுடன் கூடி வைகி மாளிகை மருங்கு சோலைப்
    போதலர் வாவி மாடு செய்குன்றின் புடையோர் தெற்றிச்
    சீதளத் தரளப் பந்தர்ச் செழுந்தவி சிழிந்து தங்கள்
    நாதர்பூங் கோயி னண்ணிக் கும்பிடும் விருப்பால் நம்பி

    என்று பாடினார். மேலும் ஒரு விளக்கம் சி கே எஸ் உரையில் உள்ளது கீழே காண்க.

    விளக்கம்:

    ‘வெளிமுகம் – உண்முகம்’ என்ற இருவகை நிலைகளையும் குறிப்பதற்காகப் “பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்“ என்று மிக அழகுபெற ஒரே அடியிற் குறித்த ஆசிரியர், முன்பாட்டிலே அவற்றைப் பிரித்து “மலர்வித்து….. விளையாடிச் செல்கின்றார்“ என விரித்தனர். அதன் விளைவை இப்பாட்டிலே “கூட வைகிச்செழுந்தவிசிழிந்து கும்பிடும் விருப்பால் நம்பி“ என்று காட்டி, விளையாட்டு விளையாட்டின் மட்டிலே நிற்க, விருப்பம் பெருமானிடத்தே பதிந்து கிடந்ததை விரித்தோதினார்.

    சரணாரவிந்தமலர் சிந்தையிலும் சென்னியிலும் மலர்வித்ததனால் கும்பிடும் விருப்பம் நிகழ்ந்தது. கும்பிடுதல் நனவில் நிகழ்வது. மலர்வித்தல் அதனோடு கனவு முதலிய நிலைகளினும் நிகழ்வது. சென்னி ஆயிரம்இதழுடையதாய் மேனோக்கி மலர்ந்த தாமரை போன்றதாகவும், சிந்தை -குவிந்த தாமரை போன்றதாகவும் கூறுவர். இது பற்றியன்றே பட்டினத்தடிகள் முதலிய பெருஞானிகளும் திருக்கோயில் வாயில் காத்திருந்தனர் என்க.

    ஆகவே,

    ‘’எத்தவத்தைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் ,
    முத்தர் மனம் இருக்கும் மோனத்தே ‘’

    என்றதற்கேற்ப சுந்தரர் மனத்தில் எப்போதும் சிவ சிந்தனையே இருந்தது என்பதும்,அவர் பன்னாளும் யோகமே பயின்றார் என்பதும், சிவ சிந்தனை இருந்தால் நாமும் அந்நிலையை எய்தலாம் என்ற ஊக்கமும் இப்பாடலின் தொகு பொருளாகி நயத்துடன் விளங்குகிறது.

    (தொடரும்….

    Share
  • சேக்கிழார் பா நயம் – 56 (தென்னாவலூர்)

    சேக்கிழார் பா நயம் – 56 (தென்னாவலூர்)

    திருச்சி புலவர் இராமமூர்த்தி
    ———————————————————

    திருவாரூரில் பரவை நாச்சியாரைச் சந்தித்த சுந்தரர், அம்மங்கையைத் திருமணம் புரிந்துகொள்ளும் அவாவினைப் பெருமானிடமே தெரிவித்தார். பரவையார் தம் முன் திருமணக் கோலத்துடன் திகழ்ந்த சுந்தரரைப் பற்றிய செய்திகளைத் தம் தோழியரிடம் உசாவித் தெரிந்துகொண்டார். அவர் ஆதி சிவனடியார் என்பதறிந்து அவர்பால் பெருங்காதலுற்றார். திருவாரூர்ச் சிவனடியார்களிடம் இறைவன், இருவரைப் பற்றியும் அவர்கள் கனவில் கூறி, அவர்கள் திருமணத்துக்கு உரிய செயல்களைத் தொடங்குமாறு அறிவுறுத்தினார். அவ்வாறே சுந்தரர் கனவிலும், பரவையார் கனவிலும் அவர்கள் திருமணம் புரிந்துகொள்ளத் திருவருள் புரிந்தார். ஆகவே சுந்தரர், பரவையார், அடியார்கள் ஆகிய அனைவருக்கும், இறைவன் இருவர் திருமணத்தை உறுதி செய்தார்.

    இறைவன் திருவருளால் தம் உள்ளத்தால் பரவையாருடன் இணைந்த சுந்தரர், தாமே , பரவையாருடன் இணைந்து, பெற்ற சிற்றின்பத்தையே பேரின்பமாக்கிக் கொள்ளும் வகையில், அவருடன் யோக வாழ்வில் இணைந்து வாழத் தொடங்கினார். இந்த வாழ்வு, இறையருளின் திறம் பெற்ற திருமண மக்களின் வாழ்வில் உண்டாகும்.

    இதனைக் கம்பர் தம் இராமாயணத்தில் ,

    ‘மன்றலின் வந்து மணத்தவி சேறி
    வென்றி நெடுந்தகை வீரனும் ஆர்வத்து
    இன்றுணை அன்னமும் எய்திஇருந்தார்
    ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்’

    என்று பாடுகிறார்.

    இராமனும் சீதையும் கொண்ட காதல், கருங்கடற்பள்ளியில் கலவி நீங்கிப் போய்ப் பிரிந்தவர் கூடிய தெய்வீகத் தன்மை வாய்ந்தது. அவ்வாறே திருக்கயிலையில் உள்ளம் ஒன்றிய சுந்தரரும், பரவையாரும் திருவாரூரில், போகம் ஒன்றிய தெய்வீக யோக வாழ்வை நடத்தினர். திருவாரூர்த் தேவர்பிரான் திருவருளால் அழகிய நாவலூர் மன்னனாகிய சுந்தரர், பரவையாரின் திருமார்பாகிய மலைமேல் தவயோகம் பயின்றார்.

    இரண்டு ஆன்மாக்களின் கூட்டத்திலே சிற்றின்பம் எனப் பேர்பெறும். நாயகன் நாயகி பாவனையில் ஆன்மாவாகிய நாயகி உயிர்த்தலைவனாகிய ஈசனைக் கூடுதல் பேரின்பம் எனப் பெறும். அவ்வாறே, பிராண வாயுவை அடக்கிச் சுழுமுனையின் வழியே பிரமரந்திரத்திற் செலுத்தித் துவாதசாந்தத்திலே விந்துச் சோதியாகிய ஒளியைத் தரிசித்து அக்காட்சியிலே அழுந்தி அதன்மயமாய் நிற்றல் சிவயோகம் எனப்பெறும்.

    சீவன்மாக்களும் இவ்வாறே சிவயோகம் பயில்தல் வேண்டும் என்பது குறிப்பு.

    திருமார்புகளின் சார்வே யோகமாயிற்று; அது பரம்பரை விருப்பமாய் விளைந்ததேயன்றி வேறு செயலுக்குக் காரணமாகவில்லை என்பது.

    ‘பெற்ற சிற்றின்பமே பேரின்பமாம் அங்கு
    முற்ற வரும் பரிசு உந்தீபற,
    முறையாதும் மாயைஎன்றுஉந்தீபற’

    என்ற திருவுந்தியாரால் விளங்கும் .

    திருமார்புகள் பரஞானம், அபரஞானம் இரண்டையும் குறிக்கும் என்பது லலிதா சகஸ்ர நாமம்!

    திருக்கயிலாய மின்னல்கள் வந்து சாரும் இடை , பரவையாரின் இடை என்பதை , ‘மின்னாருங் கொடிமருங்குல் பரவை எனும் மெல்லியல்’ என்ற தொடர் விளக்கும். மேலும் அவர்தம் திருமார்புகள் பொன்மலையாகிய கயிலாயத்தின் சார்பு பெற்றதை , ‘பொன்னாரும் முலை ஓங்கல் புணர்குவடே’ என்ற தொடர் விளக்கும். இந்தக் கயிலை மலையில் செய்யும் தவமே , சிவ பரம்பரையினர் பலகாலமும் மேற்கொண்டு பயிலும் யோகம் ஆகும். இதனையே சேக்கிழார் பெருந்தகை,

    ‘பொன்னாரும் முலை ஓங்கல் புணர்குவடே சார்வாகப்
    பன்னாளும் பயில் யோகம் பரம்பரையின் விரும்பினார்!’

    என்று பாடினார்.

    இனி முழுப் பாடலையும் பயில்வோம்!

    தென்னாவ லூர்மன்னன் தேவர்பிரான் திருவருளான்
    மின்னாருங் கொடிமருங்குல் பரவையெனும் மெல்லியல்தன்
    பொன்னாரும் முலைஓங்கல் புணர்குவடே சார்வாகப்
    பன்னாளும் பயில்யோகம் பரம்பரையின் விரும்பினார்!

    இப்பாடலில் தெய்வத்தின் திருவருளால் இந்தப் பூமியில் வரும் உயிர்களின் செயல்கள் யாவும் தெய்வச் செயல்கள். ஆதலால், அதே தெய்வத்தின் கருணையினால் பூமியில் தோன்றும் நம் செயல்களும் தெய்வச் செயல்களாக அமைய வேண்டும். அவ்வகையில் நம் வழிபாடும் வாழ்க்கையும் அமைதல் வேண்டும். திருஞான சம்பந்தரின் திருமணம், அனைவர்க்கும் சிவலோகப் பேற்றை அருளியது இதனால்தான்.

    ‘காடே திருந்தென்ன? காற்றே புசித்தென்ன? கந்தைகற்றி
    யோடே யெடுத்தென்ன? உள்ளன்பி லாதவ ரோங்குவிண்ணோர்
    நாடே யிடைமரு தீசர்க்கு மெய்யன்பர் நாரியர்பால்
    வீடே யிருப்பனு மெய்ஞ்ஞான வீட்டின்ப மேவுவரே.’

    ‘என்செய லாவதி யாதொன்று மில்லை இனித்தெய்வமே
    உன்செய லேஎன் றுணரப்பெற் றேன்!’

    என்ற பட்டினத்தடிகள் பாடல்கள் இதனைப் புலப்படுத்துகின்றன.

    ஆகவே நாம் தெய்வத்தின் திருவருளாகவே அனைத்தையும் நினைக்கப் பழகிக் கொண்டோமானால், நம் வாழ்க்கையின் நடவடிக்கை ஒவ்வொன்றும் சிவன் திருவருளாகவே அமையும்; நாம் பெற்ற சிற்றின்பமே பேரின்பமாகும் சிறப்பினை நாம் பெறலாம். சேக்கிழார் தம் நயம் மிக்க பாடலால் நாம் அடையும் பயன் இதுவே!

    (தொடரும்….

    Share
  • சேக்கிழார் பா நயம் – 52 (பஞ்சின்)

    சேக்கிழார் பா நயம் – 52 (பஞ்சின்)

    திருச்சி  புலவர்  இராமமூர்த்தி

    —————————————————-

    இயற்கை  நிகழ்ச்சிகளில் கதிரவன்  மறைதலும் , இரவின்  தோற்றமும், நிலவு வெளிப்படுதலும்   இலக்கியங்களில்  தனித்த இடம் பெறும் .  கதிரவன் மறைவுக்குக்  காரணம் கற்பித்து  உருவகமும்  தற்குறிப்பேற்றமும்  கலந்த பாடலை   அடுத்து, அதனோடு  ஒப்பிடும்வகையில் வானின் இருள் நீண்டு நெடுநேரம் விளங்கியதைக்  கவிஞர் பாடுகிறார்.

    இத்தகைய பாடல்களில் தாம் விரும்பும் தத்துவங்களை  எடுத்துக்கூறி விளக்குவது  கவிஞர்களின்  உத்தியாகும். இராமாயணத்தில் வஞ்சனை அரக்கர்தம் வடிவைப்   போலவும், அவர்களின் நெஞ்சைப்போலவும் நீலவானம்  இருண்டது என்பதைக்கம்பர்,

    நஞ்சினின் நளிர் நெடும் கடலின் நங்கையர்

    அஞ்சன நயனத்தின் அவிழ்ந்த கூந்தலின்

    வஞ்சனை அரக்கர்-தம் வடிவின் செய்கையின்

    நெஞ்சினின் இருண்டது நீல வானமே

    என்று பாடுகிறார்.  மேலும் கூனியின்  உரையாகிய  நஞ்சு பாய்ந்தமையால் கலங்கிய   கைகேயி தன்  சிந்தை போல,   சிவந்த  வானம்  இருண்டது என்பதை,

    அந்தியில் வெயில் ஒளி அழிய வானகம்

    நந்தல்_இல் கேகயன் பயந்த நங்கை-தன்

    மந்தரை உரை எனும் கடுவின் மட்கிய

    சிந்தையின் இருண்டது செம்மை நீங்கியே

    என்றும் பாடுகிறார். அடுத்து  இராமனின்  கார்வண்ண  மேனியைப் பார்த்த பெண்களின்  கண்கள் கருத்தனவோ?, இப்பெண்களின்  மைதீட்டிய  கண்களின் பார்வையால்  இராமன் மேனி கருத்ததோ? என்பதைக்   கம்பர்,

    பஞ்சு அணி விரலினார்-தம் படை நெடும் கண்கள் எல்லாம்

    செஞ்செவே ஐயன் மெய்யின் கருமையை சேர்ந்தவோ தாம்

    மஞ்சு அன மேனியான் தன் மணி நிறம் மாதரார் தம்

    அஞ்சன நோக்கம் போர்க்க இருண்டதோ அறிகிலேமால்

    என்றும் பாடுகிறார்.  போர்க்களத்தில்  இரவில்  இராமனைக் காண வந்த வீடணன்,  இராமன்  தனியே இரவில் நிற்பதைக்  கண்ட கதிரவன் வருந்தி மேலை மலையில் புகுந்தான்  என்பதைக் கம்பர் ,

    மரங்களும் மலையும் கல்லும் மழை என வழங்கி வந்து

    நெருங்கினார் நெருங்க கண்டும் ஒரு தனி நெஞ்சும் வில்லும்

    சரங்களும் துணையாய் நின்ற நிசாசரன் தனிமை நோக்கி

    இரங்கினன் என்ன மேல்-பால் குன்று புக்கு இரவி நின்றான்

    என்றும் , பின்னர் அவ்வானம்  வேதம் நான்கும்  இல்லை என்றும், மனுமுதல் சாத்திரங்கள்  இல்லை  என்றும், வேள்விகள் உண்மை   இல்லை என்றும், தெய்வத்தன்மை  வாய்ந்த வேதியர்  தம்   ஈடுபாடும் இல்லை  என்றும் கூறி, தாமரைக் கையை   உடைய    ஆதிமுதல்வனாகிய  திருமாலைப்  பரம்பொருள் என்று வணங்காத  பேதையர்   உள்ளம் போல   இருண்டது  என்பதைக் கம்பர் ,

    வாழிய வேதம் நான்கும் மனு முதல் வந்த நூலும்

    வேள்வியும் மெய்யும் தெய்வ வேதியர் விழைவும் அஃதே

    ஆழி அம் கமல கையான் ஆதி அம் பரமன் என்னா

    ஏழையர் உள்ளம் என்ன இருண்டன திசைகள் எல்லாம்

    என்றும்  பாடுகிறார். இவ்வகையில் சேக்கிழார்  பெருந்தகை, ‘’பஞ்சு போன்ற மெல்லிய பாதம் கொண்ட வேசையர் உள்ளமும், வஞ்சனை உடைய மக்களின்  கொடிய  பாவமும், சிவப்பரம்பொருளின்  ஐந்தெழுத்தின்  தியான  முறைகளை   அறியாதோரின்  நெஞ்சும் போல , எல்லாத்   திசையிலும்   நீண்ட   வானம்       இருண்டது’’  எனப்  பாடுகிறார். அந்தப் பாடலை இங்கே  படித்து  உணர்வோம்.

    ‘’பஞ்சின்   மெல்அடிப்  பாவையர்   உள்ளமும் ,

    வஞ்ச   மாக்கள்தம்   வல்வினை   யும்அரன்

    அஞ்சு  எழுத்தும்  உணரா   அறிவிலோர்

    நெஞ்சும்   என்ன   இருண்டது   நீலவான்’’

    இப்பாடலில் இருமனப்  பெண்டிராகிய பாவையர்தம்  தன்னலம் மிக்க உள்ளம் இருண்டே  விளங்கும்  என்ற தனி மனிதத்  தீமையும்,

    வஞ்சனை செய்து வாழுவோர் செய்யும் பாவங்கள் என்னும் சமுதாயத் தீமையும்,

    (வஞ்ச மாக்கள்தம் வல்வினையும் – வல்வினைமாக்கள் வஞ்சமும் என்று உம்மையைப் பிரித்துக் கூட்டி உரைத்தலுமாம். முன் வினையின் பயனாகி வரும் வஞ்சம் மேன்மேலும் வினையை விளைத்தலால் வஞ்ச மாக்கள் வல்வினை என்றார். “வினையின் வந்தது வினைக்கு விளையாது“ என்றதும் காண்க. “வஞ்ச வல்வினைக் கறுப்பறு மனத்தடியார்கள்“ என்று பின்னர்க் கூறுவதுங் காண்க. வஞ்சமுடைமையால் மக்கள் மாக்கள் எனப்பெற்றனர். ஐயறிவுடைய மிருகங்கள் போன்றார் என்பது குறிப்பு. விலக்கலாகாமையின் வல்வினை என்றார் என்ற விளக்கமும் காண்க).

    சிவபெருமானின்  மந்திரமாகிய  ஐந்தெழுத்தின்  பெருமையையும், அவற்றை  உச்சரிக்கும்  வைகரி, பைசந்தி, சூக்குமை ஆகிய மூவகைப்  பாராயண முறைகளை அறிந்து   அவற்றை  ஓதாதவரின் உள்ளம் அறியாமை  உடையது   என்னும்  ஆன்மிகத்  தீமையும்

    (அரன் அஞ்செழுத்தும் உணரா அறிவிலோர் – அரன் -ஆன்மாக்களுடைய பாசங்களை அரிப்பவன். அஞ்செழுத்தும் உணரா அறிவிலோர் – அஞ்செழுத்தை உணரப் பெறாத மடவோர் என்க. “மன்னு மஞ்செழுத் தாகிய மந்திரம் தன்னி லொன்று வல் லாரையுஞ் சாரலே“ என்று இமயன்றூதர்க்கு அப்பர் பெருமான் இட்ட ஆணையும் காண்க. “விதி எண்ணு மஞ்செழுத்தே“ என்றபடி எழுத்து அறிவினுள்ளே உணரப் பெறுவ தொன்றாதலின் உணரா அறிவிலோர் என்றார்.

    இத்திருவைந்தெழுத்துகள் ஒவ்வொன்றிற்கும் – பொருளும் – உள்ளீடும் -நிற்குமுறை-ஓதுமுறைமுதலியனவும்உண்டு.இதனை

    “எவ்வெவ்கோட்படுபொருளும்“ என்ற குரு தோத்திரத்திலே குறித்தருளினர் எமது மாதவச்சிவஞான முனிவர் அஞ்செழுத்தின் வகையும் பெருமைகளும் நூல்களிற்பேசப்பெறுவன. சைவாசாரியார்பாற் கேட்கத்தக்கன. “நாயோட்டு மந்திரம்“என்று அதன் பெயர்தானும் சொல்லலாகாது என அறிவிப்பர் திருமூலதேவர்.மூவர் முதலிகள் கருணையினாற் பஞ்சாக்கரப் பதிகங்களை அருளினர். மணிவாசகப் பெருமானார் “நமச்சிவாய வாழ்க“, “நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்“ முதலிய திருவாசகங்களில் பஞ்சாக்கரங்களை அருளினர் என்பர்.)

    ஆகிய  மூன்றும்  இருளடைந்த   உள்ளத்தைக்  காட்டுவன, என்று சேக்கிழார் பாடுகிறார்.

    ‘’நமச்சிவாய  வாழ்க’’  என்று தொடக்கத்திலும்,  ‘’யானேயோ  தவம் செய்தேன் , சிவாய நம   எனப்பெற்றேன் ‘’ என்று  இடையிலும்

    இயைந்தனள் ஏந்திழை என் உள்ளம் மேவி
    நயந்தனள் அங்கே நம சிவ என்னும்
    அயன் தனை யோரும் பதம் அது பற்றும்
    பெயர்ந்தனள் மற்றும் பிதற்று அறுத்தாளே

    ஆமே சிவங்கள் அகார உகாரங்கள்
    ஆமே பரங்கள் அறியா இடம் என்ப
    ஆமே திருக்கூத்து அடங்கிய சிற்பரம்
    ஆமே சிவகதி ஆனந்தம் ஆமே

    சிவசிவ என்கிலர் தீவினையாளர்
    சிவசிவ என்றிட தீவினை மாளும்
    சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
    சிவசிவ என்ன சிவகதி தானே

    நம என்னும் நாமத்தை நாவில் ஒடுக்கி
    சிவ என்னும் நாமத்தை சிந்தையுள் ஏற்ற
    பவம் அது தீரும் பரிசும் அது அற்றால்
    அவமதி தீரும் அறும் பிறப்பு அன்றோ

    சிவாயநம என சித்தம் ஒருக்கி
    அவாயம் அறவே அடிமை அது ஆக்கி
    சிவாய சிவசிவ என்று என்றே சிந்தை
    அவாயம் கெட நிற்க ஆனந்தம் ஆமே

    மந்திரம் ஓர் எழுத்து உரைத்த மாதவர்
    சிந்தையில் நொந்திட தீமைகள் செய்தவர்
    நுந்திய சுணங்கனாய் பிறந்து நூறு உரு
    வந்திடும் புலையராய் மாய்வர் மண்ணிலே

    ஆயும் சிவாயநம மசிவாயந
    ஆயும் நமசிவாய யநமசிவா
    ஆயுமே வாயநமசி எனும் மந்திரம்
    ஆயும் சிகாரம் தொட்டு அந்தத்து அடைவிலே

    என்றெல்லாம்  பல வகைகளிலும்  பக்குவத்திற்கேற்ப அஞ்செழுத்து  ஓதுதல் சிவஞானியர்  வழக்கங்களை   சேக்கிழார் சுவாமிகள்  உரைத்தருளுகின்றார். அகவிளக்காகி இருள் கெடுப்பது ஐந்தெழுத்தாதலின் அது ஏற்றப்பெறாத நெஞ்சு இருண்டிருக்கும் என்பது குறிப்பு. இவற்றை  அறிந்து, உணர்ந்து கொண்டோர்  வாழ்க்கை ஒளி பெறும். என்பதை இப்பாடல்  நயமாக  விளக்குகிறது.

    (தொடரும்…

    Share
  • சேக்கிழார்  பா நயம் – 33 (அயலோர்)

     திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

    சேக்கிழார்  பா நயம் – 33 (அயலோர்)

    சேக்கிழார்  அருளிய திருத்தொண்டர் புராணத்தைக்  கற்போருக்கு  ஐயங்கள் ஓரிரண்டு தோன்றலாம். அவ்வையங்கள் எல்லாருக்கும் தோன்றுவனவே! கயிலையிலிருந்து  தென்திசையில்  தோன்றி வளர்ந்த சுந்தரரும், அங்கு  மலர்த்தொண்டு புரிந்த  கமலினியாரும்  அநிந்ததையாரும், தமிழகத்தில் பரவையாரும்  சங்கிலியாருமாய்த் தோன்றி, சிவத்தொண்டு  புரிந்து மீண்டும் சிவலோகம்   எய்தினர்.   இறைவனால்  தடுத்தாட்கொள்ளப்பெற்ற சுந்தரரோ, சடங்கவியார் மகளை விட்டு  நீங்கித்  தலந்தோறும்    பதிகப்  பாடல்கள் பாடியவாறே  சென்றார்! ‘‘அந்தச்   சுந்தரர் வாழ்க்கையின்  இடையில், அவரைத் திருமணம்  புரிந்து கொள்ளவிருந்த  சடங்கவி சிவாச்சாரியார் திருமகள் வாழ்க்கை  என்னவாயிற்று?’’  என்ற ஐயம் எல்லாருக்கும் உண்டாகும்!

    அவ்வாறு  கதைப்போக்கில் ஐயம் நிகழும்போது, உடனுக்குடன்  அதனைத் தீர்த்து வைத்து, நூலை  எழுதிச் செல்வது சிறந்த அறிஞர் பெருமக்களுக்கே  உரிய இலக்கியக் கடமை ஆகும். அவ்வகையில்  தமிழ் இலக்கியங்களில் நம்முன்  தோன்றிப் பின் மறைந்த கதை மாந்தர்கள் சிலரைப்  பற்றி விரிவாகவே எழுதலாம். அத்தகைய  கதை மாந்தர்களின்  நிலையை வேறெங்கேனும்  தேடிக் கண்டு பிடிக்கலாம்.

    இங்கே சுந்தரர், சடங்கவி பேதையைத் திருமணம் புரிந்துகொள்ள வந்த சிறப்பை அருகில்  நின்ற மகளிர்  புகழ்ந்தார்கள்.  வலிமை  மிக்க காளையைப் போன்று  விளங்கிய சுந்தரமூர்த்தி சுவாமிகளின் அழகைப்  புகழ்ந்த போது, ‘’கண்கள் எண்ணிலாத வேண்டும்  காளையைக் காண!’’ என்றனர். மேலும் “பெண்களில்   உயர  நோன்றாள் சடங்கவி  பேதை’’ என்றனர். “சிவவேதியர்   குலப் பெண்களுள்  இவளே, பெரிதும்  உயர்வைப் பெறத்  தவம்  செய்தாள்!’’ என்று சற்று வேறுபட்ட வகையில் புகழ்ந்தனர்.

    இங்கே சுந்தரரின்  அழகும், ஒப்பனையும் மிக விரிவாகக் கூறப்பட்டன.   ஆனால், சடங்கவி சிவாச்சாரியாரின் மகள், பேதை என்பன  தவிர வேறு  வர்ணனைகள்  இல்லை. அவர் நோற்றார் என்பதே அவரது  சிறப்பாகக் கூறப்பெறுகிறது. அவள் சுந்தரரை அடைய  நோன்பு செய்திருக்கிறார். சிறந்த  சிவனடியாரை அடைதல்  மட்டுமே சைவப்  பெண்டிரின் நோக்கம் என்பதை,

    “எம்கொங்கை  நின்  அன்பர் அல்லார் தோள்  சேரற்க
     கங்குல் பகல்  எம்கண்   மற்றொன்றும்  காணற்க
     இங்கு இப்பரிசே  எமக்கு  எங்கோன்  நல்குதியேல்
     எங்கு எழின்  எஞ்ஞாயிறு  எமக்கு”

    என்று மணிவாசகர் கூறுகிறார்.  எந்தச் சூரியன் எந்தத் திசையில் உதித்தாலும் எமக்கு அதில் நாட்டமில்லை. அதாவது அடியார் உறவே சிவலோகம், மற்ற நிகழ்ச்சிகள் எம் தியானத்தைக் கலைக்க மாட்டா என்பது அதன் பொருள்.   அந்தப் பெருவாழ்வை  அடைவதையே, ‘பெண்களில் உயர’ என்ற தொடர் குறிக்கிறது. சுந்தரரைத் தம் வாழ்முதலாக  ஏற்றுக்கொண்ட சடங்கவி பேதை,  அவரைப் புறத்தார் பார்வையிலும், தம் அகத்திலும்  என்றும் நீங்காத நிலையைப்  பெற்றாள். திருமண நாளிலேயே , அதற்குரிய  சடங்குகள் நிகழாத  நிலை.  ‘‘சடங்கு அவி’’ நிலை. இதனையே சிவ வேதியன் மகளும் அடைந்தாள். அதனால்  உலகில் சிவநெறியை  உயர்த்தும் நாவலூரரை, தம் தனி நாதனாக ஏற்றுக்கொண்ட அவர், உள்ளும் புறமும் அவரையே நீங்காது நினைந்து, இணைந்து உணரும்  நெறியிலிருந்து வழுவாது  வாழ்ந்தார். இதனைச் சேக்கிழார்,

    “அன்றே  மணம்  அழியும் 
     செயலால்  நிகழ் புத்தூர் வரும்   சிவவேதியன்  மகளும்     
     உயர் நாவலர்  தனி நாதனை  ஒழியாது  உணர்  வழியில்
     பெயராது”

    எனப் பாடினார். ஆகவே சுந்தரர் வாக்குப் படியும்,

    “இம்மையே தரும்சோறும்கூறையும் ஏத்தலாம் இடர்  கெடலும்ஆம்
     அம்மையே  சிவ லோகம் ஆள்வதற்கு யாதும்  ஐயுறவு  இல்லையே!’’

    என்ற நிலையில் ’’உயர்சிவலோகமும் எளிதாம்வகை பெற்றாள்’’ என்று சேக்கிழார் பாடியதன் பொருளை நாம்  புரிந்துகொள்ளலாம். மற்றையோர் திருமணத் தடையோ, வாழ்க்கையில்  இடையூறோ  அடைந்தால் வெவ்வேறு வகையில் நோன்பு நோற்றுச்  சுவர்க்கம்    புகுவர்.   இதனைச்  சேக்கிழார்,

    “அயலார்  தவம்  முயல்வார்’’ என்று  குறிக்கிறார்.  ஆகவே சிவவேதியன் மகளான  சடங்கவி பேதை, பெண்களில்  உயர நோற்றாள்;  அதனால்  சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள் என்ற சேக்கிழாரின்  வாக்கு, நமக்கு மனநிறைவு  அளிக்கிறது.  இனி முழுப் பாடலையும்  பயில்வோம்.

    “அயலார்தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
      செயலால் நிகழ் புத்தூர் வரு சிவவேதியன் மகளும்
      உயர்நாவலர்  தனிநாதனை  ஒழியாதுஉணர் வழியில்
      பொறாது உயர் சிவலோகமும் எளிதாம்வகை பெற்றார்”

    ‘இப்பாடலால் ஆசிரியர் இவ்வம்மையாரது பிற்சரிதங் கூறி முடித்துக் கொண்டதுமன்றி, ஏனையோரைப் போல, இவ்வம்மையார் தம் நாயகனை உடம்பு நாயகனாகக் கொள்ளாது தியானப் பொருளாகிய உயிர்நாதனாகக் கொண்டு ஒழுகினமையால் அவரையும் பிரியாது, பெறற்கரிய சிவலோக வழியும் பெற்றார் என்று இவரது வாழ்க்கையின் உயர்வையும் காட்டினார். இவ்வாழ்வு பெற உபகரித்து நின்றமையால் அம்மையாரை விட்டு நீங்கினார் என்ற சொல், நம்பிஆரூராரிடத்துச் சாராமையுங் காட்டியவாறு. திலகவதியம்மையார் சரிதமும் இங்கு வைத்து உணர்தற்பாலதாம். இவ்வுண்மைகளை உணராது, ஒரு கணவனிறப்பவும், அல்லது இருக்கவும், ஒன்றன்பின் ஒன்றாகப் பல மணங்களையும் நிகழ்த்தலாம் என்று கூவும் நவீன உணர்ச்சிக்காரர்கள் இச்சரிதங்களை உய்த்து ஓர்ந்து ஒழுகுவார்களாக.’

    என்ற  சிவக்கவிமணியார்  உரையையும்  இங்கே நாம் சிந்திப்போம். இவ்வகையில்  நம் மனத்துள் எழும் ஐயத்தை நீக்கி உரிய விளக்கத்தையும் அளித்த  சேக்கிழார் பெருமானின்  பா நயம்  போற்றுதற்கு  உரியது.

    ============= சே. பா ந. 33 === ========

    Share