Tag: பேரா. நாகராசன்

  • பழந்தமிழரின் உலகளாவிய கடல் வணிகம்

    திரைகடலோடித் திரவியம் தேடிய தமிழ் வணிகரின் கடல்வழிப் பாதை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ள எண்ணிம வளங்களைப் பயன்படுத்த வேண்டும்.

    கடல் வழியை அடிப்படையாகக் கொண்டால் உலகை வடக்கும் தெற்குமாகப் பிரிக்கும் இடம் பண்டைய எகிப்து எனக் கருதலாம். பழந்தமிழர்களுக்கு எகிப்துடன் நெடுங்கால வணிக உறவு இருந்ததை வரலாற்றுக் குறிப்புகள் சுட்டும்.

    தரைவழிப் பாதையாக உலக வணிகர்கள் பயன்படுத்திய பாதைகள் சந்திக்கும் இடம் எகிப்து என்றாலும் வடக்கையும் தெற்கையும் பிரிக்கும் எகிப்தின் சிறிய நிலப்பரப்பைத் தாண்டி செங்கடல் வழியாகத் தெற்கில் வரும் சூக்குமம் தமிழர்கள் நன்கறிந்து காற்றின் போக்கில் கடல் வழியாகச் செங்கடலை அடைந்து அலெக்ஸ்சான்ட்ரியா வழியாக கிரேக்க உரோமாபுரி வணிகத்தை மேற்கொண்டனர்.

    மேலும் தமிழ் வணிகர்கள் இந்துமாக்கடல் பசிபிக் கடல் மேலாண்மையில் சிறந்து சிறு தீவுகளை இணைத்து கடல்வழியை உருவாக்கினர். அங்கே தொன்மை வாய்ந்த நினைவுச் சின்னங்களையும் தோற்றுவித்தனர்.

    தமிழகத்தின் தென்கோடியில் அமைந்திருந்த ஆய் நாடு உலக வணிகத்தைக் கிழக்கிலும் மேற்கிலும் இணைக்கும் முக்கியப் புள்ளியாக அமைந்திருந்தது. தமிழர் வரலாற்றில் ஆய்நாடு தொடர்பான தகவல் கடலுக்கடியில் புதைந்துள்ளது.

    ஆய்நாடு அழிந்த நிலையில் ஆய்வேளிர் இடம்பெயர்ந்து கொங்கு நாட்டை உருவாக்கி கடல் வணிகத்தைத் தொடர்ந்தனர். மூவேந்தர் கீர்த்தியைப் பாடிய தமிழ் வரலாற்றாளர் கொங்கின் சிறப்பை ஆய்வுக்கு உட்படுத்தவில்லை.

    இளம் ஆய்வாளர்கள் இந்த ஆய்வில் முனைப்புடன் ஈடுபட வேண்டும்

    நாகராசன்

    Share
  • எண்ணிம தமிழர் வாழ்வியல் ஆய்வுப் புலம்

    பேரா. நாகராசன்

     

    கணினிப் புரட்சியும் இணைய வளர்ச்சியும் எண்ணற்ற கருத்து வளங்களை இணையத்தில் தொடர்ந்து உருவாக்கி வருகின்றது. தமிழின் இலக்கிய வளங்கள் இன்று இணையத்தில் அனைவரும் படிக்கும் வகையில் எண்ணிம நூலகங்களில் கிடைக்கின்றன. இணையத்தின் நுட்பம் அறிந்தவர்கள் வலைத்தளம் மூலமாகவும் மடலாடல் குழு மூலமாகவும் தமிழர் வாழ்வியல் தொடர்பான கருதுகோள்களைத் தொடர்ந்து வெளியிட்டுவருகின்றனர்.

    சமூக ஊடகங்கள் தங்கள் பங்குக்கு தமிழர் வாழ்வியல் தொடர்பான எண்ணற்ற வளங்களை பல்லூடக வடிவில் வெளியிடுகின்றனர். தமிழ்ப் புலவர்களும் தமிழ் ஆய்வாளர்களும் தங்களின் கட்டுக்குள் வைத்திருந்த தமிழர் வாழ்வியல் இன்று இணையவெளியில் கட்டற்ற கருத்துகளாக வெளியாகின்றன.

    புதிய ஆய்வுப்புலமாக உருவாகியுள்ள எண்ணிமத் தமிழர் வாழ்வியல் ஆய்வு சமூகவியல், மானுடவியல் உளவியல், ஆய்வுத்தளங்களையும் இணையத் தொழில்நுட்பங்களையும் ஒருங்கிணைத்து ஒரு புதிய ஆய்வுப் புலத்தை உருவாக்கியுள்ளது.

    இந்தப் புதிய ஆய்வு முயற்சியைப்பற்றி இனிவரும் பகுதிகளில் விரிவாகக் காணலாம்.

    Share
  • ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும் 13

    பேரா. நாகராசன்

    கற்பனையும் அனுமானமும்

     

    உள்ளத்தில் உருவாகும் மனப்படங்களுக்கு எழுத்து வடிவம் தருவது கற்பனை. ஒரு எழுத்தாளன் தன் உள்ளத்தில் உருவான காட்சியை எழுத்து மூலம், படிப்பவர்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் காட்சியாகப் படைக்கிறான். தமிழர் மனிதவியலில் தொன்மை மிக்க இலக்கியங்கள் கற்பனை வழியாகவே சமுதாயத்தில் பரவியது. கற்பனை படைப்பாற்றலை வளர்த்து படைப்புகளை உருவாக்கத் தூண்டுகோலாக அமைவது.

    தற்கால ஊடகமான வெள்ளித்திரை கனவுத் தொழிற்சாலையாக விளங்கி கற்பனையை ஒளி ஒலியுடன் பார்ப்போரைக் கண்ணைத் திறந்துகொண்டு கனவு காணச் செய்கின்றது. கணினியும் தொலைக் காட்சிப் பெட்டியும் எண்ணிம வடிவில் திரையில் தோன்றும் இல்லாத மாயத் தோற்றத்தை உண்மை என்று நம்பவைக்கிறது.

    இன்றைய தமிழ் கூறும் நல்லுலகில் கற்பனையும் கனவும் மாயத் தோற்றமும் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் எண்ணற்ற வளங்களை கருத்துக் கருவூலங்களாகப் படைத்து அவற்றை இணைய வெளியில் எளிதில் கிட்டுமாறு செய்துள்ளது.

    ஆய்வுலகம் இவ்வாறு காணக்கிடைக்கும் கருத்துவளங்களைத் தகவலாக ஏற்றுக்கொள்வதில்லை. பகுத்தறிவால் சீர்தூக்கி ஐம்பொறிகள் வழியாகத் தரவுகளின் அடிப்படையில் பொய்யையும் புனைவையும் வடித்து அகற்றி எல்லாரும் ஏற்றுக்கொள்ளும் முடிவுகளை வெளியிடும் பண்பு கொண்டது. ஆய்வு அறிவு வளர்ச்சிக்கும் சமுதாய முன்னேற்றத்துக்கும் தகவல்களைப் படிக்கட்டுகளாகப் பயன்படுத்தி ஒரு சமூகத்தை மூட நம்பிக்கைகளிலிருந்து மீட்டெடுத்து ஒரு அறிவார்ந்த சமூகமாக மாற்ற வல்லது.

    எண்ணற்ற சிந்தனைகள் எண்ணிம வடிவில் இணைய வெளியில் கொட்டிக்கிடந்தாலும் ஆய்வாளர்கள் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்று எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு செயல்படுவர். திருவிழாவில் எவ்வாறு ஒரு சிறு குழந்தை தந்தையின் தோளில் அமர்ந்து தந்தையின் பார்வைக்கு அப்பாலும் காண இயலுவதுபோல் ஆய்வாளன் கடந்தகாலக் கருத்துக் குவியல்மேல் ஏறிநின்று தொலை நோக்குப் பார்வையுடன் சமுதாயத்துக்குத் தேவையான புதிய தகவல்களை உருவாக்குகிறான்.

    ஆய்வு வெளியில் திக்குத் தெரியாத காட்டில் திரியும் வழிப்போக்கனை அனுமானம் மூலம் முன்னெட்டு எடுக்க வைக்கும். அனுமானம் என்பது கற்பனையோ கனவோ தோற்ற மயக்கமோ அல்ல. அனுமானம் என்பது ஆய்வில் முன்னேற ஆய்வாளன் கைகொள்ளும் உத்தி. ஆய்வுக்கு அனுமானம் ஒரு இன்றியமையாத கருவியாகும்.
    ஆய்வாளர்கள் அனுமானம் என்றால் என்ன? எவ்வாறு அனுமானத்தை உருவாக்குவது? போன்ற கேள்விகளுக்கு விடைகளை அறிந்து அனுமானத்தை உருவாக்குதல், அனுமானத்தை நிறுவுதல் போன்ற செயல்களுக்கான திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

    ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது கற்பனை. அய்வாளர்கள் மடம் தொடர்பான கருத்துகளை அனுமானமாகக் கொண்டு மடத்தின் தோற்றம் கட்டமைப்பு என்று அலகீடுகள் மூலம் தரமான நம்பகத்தன்மை மிக்க தகவல்களை நிறுவுவர்.

    தொடரும்

    Share
  • ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும்! (12)

    எண்ணிம எழுத்தும் தரவும்

     

    மின்னியலில் எழுத்தும் தரவும் எண்ணிம வடிவில் ஒரு சீரான அடிப்படையில் அமைந்து விளங்கும்.

    எழுத்துக்கள் சேர்ந்து சொல்லாகவும் சொற்கள் சேர்ந்து வரிகளாகவும் வரிகள் சேர்ந்து பத்தியாகவும் பத்திகள் பக்கங்களாகவும் பக்கங்கள் சேர்ந்து நூலாகவும் உருவாகும்.

    எண்ணிம வடிவில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதும்போது சொல்லுக்கும் சொல்லுக்கும் இடையில் ஒரு எழுத்தளவு இடைவெளி இருக்க வேண்டும். வரிக்கும் வரிக்கும் இடையில் இரண்டு எழுத்தளவு இடைவெளி இருக்க வேண்டும். பத்திக்கும் பத்திக்கும் இடையில் மூன்றெழுத்து இடைவெளி இருத்தல் வேண்டும். ஒரு பக்கத்தின் மேலும் கீழும் பக்கவாட்டிலும் குறிப்பிட்ட காலி இடம் இருக்க வேண்டும். இது தொடர்பான தகவல் ஆய்வு இதழில் கொள்கையாகவும் வடிவ அமைப்பாகவும் குறிப்பிடப்பட்டிருக்கும் இதழுக்கு இதழ் மாற்றம் இருக்கும் என்பதால் ஆய்வுக் கட்டுரை எழுதும் முன் அந்த இதழைப் பார்க்க வேண்டும்.

    ஆய்வாளர் கட்டுரை எழுதும்போது காகிதத்தில் பேனாவில் எழுதி திருத்தங்கள் செய்து கணிணியில் எண்ணிம வடிவில் பதிவிடலாம் அல்லது நேரடியாகக் கணினியில் பதியலாம். கணினியில் பதிவிடும்போது முதலில் கட்டுரைக் குறிப்புகளை நோட் பேடில் வரியாகப் பதிவிடலாம். மைக்ரோசாஃப்ட் மென்பொருளில் எழுதுவதைவிட இதுவே சிறந்தது.

    கணினியில் மென்பொருள் மூலம் வடிவ மாற்றம் செய்ய இயலும். கணினியில் சொற்கள் மட்டும் உள்ள பதிவுகள் வரிவடிவில் இருக்கும். எழுத்தில்லாமல் உருவம் அமைந்தால் அது பட வடிவம். ஒலி வடிவிலும் உருவாக்கலாம். இவை எல்லாம் தனித்தனி ஊடக வடிவங்களாகும். ஒன்றோடொன்று இணைந்தால் அதுவே பல்லூடக வடிவத்தைப் பெறும்.

    இணையத்தில் வெளியாகும் ஆய்வுகள் வரி வடிவிலும் ஒலி வடிவிலும் ஒளிக்காட்சி வடிவிலும் அமையலாம். பல்லூடக வடிவில் அமைவது மேலும் சிறப்பானதாக அமையும். அச்சு ஊடகத்தில் இதுபோன்ற முயற்சி செயல்பட வாய்ப்புகள் குறைவு.

    நாகராசன்

    Share
  • ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும்! (11)

    பேரா. நாகராசன்

     

    படியெடுத்தலும் குறிப்பெடுத்தலும்

     

    ஒரு மூல ஆவணத்திலிருந்து படியெடுப்பது தவறான செயல் என்பது எழுதுவோர் மாணவப் பருவத்திலேயே அறிவர். படியெடுப்பதன் மூலம் எழுதுவோர் தங்களின் இயல்பான எழுத்து நடையில் எழுதுவதைத் தவிர்ப்பதால் அவர்கள் நகலெடுக்கும் கருவியாக மாறி தங்களின் தனித்தன்மையுள்ள எழுத்தாற்றலை இழந்துவிடுவர்.

    ஒரு கருத்துரு தொடர்பான தகவலைத் திரட்டும் நிலையில் மூல ஆவணங்களை நகலெடுக்கலாம். ஆனாலும் ஆய்வுக் கட்டுரைக்குப் பயன்படுத்தும்போது மேற்கோள் காட்டவேண்டியிருந்தால் படைப்பாளரின் வார்த்தைகளை பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தியவர்கள் எந்த ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்டது, அதன் ஆசிரியர், ஆவணத்தின் தலைப்பு வெளியான ஆண்டு, இடம், நாடு போன்ற தகவல்களைக் கட்டுரையில் அடிக்குறிப்பு அல்லது கட்டுரையின் இறுதிப்பகுதியில் மேற்கோள் ஆவணத் தொகுப்பில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். மற்ற ஆவணங்களில் உள்ள ஆய்வுக் கட்டுரைக்குப் பொருத்தமான தகவல் ஆய்வாளரின் சொந்த நடையில் அமைய வேண்டும். அதற்கு ஆய்வாளரின் குறிப்பெடுக்கும் திறன் பேருதவியாக இருக்கும்.

    ஆய்வுக்கான ஆவணங்கள் மூன்று விதமாக அமையும். ஆய்வு முடிவுகள் முதலில் ஆய்விதழ்களில் வெளியாகும். சில நேரங்களில் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வை பன்னாட்டுக் கருத்தரங்கங்களிலும் தேசிய அளவிலான மாநாடுகளிலும் வெளியிடுவர். இந்த இரண்டுவகை ஆவணங்களும் முதல் நிலை ஆவணங்கள். ஆய்வாளர் இவ்வகை ஆவணங்களை அதிகம் குறிப்பெடுக்க வேண்டும்.

    இரண்டாம் நிலை ஆவணங்களாக நூலும், பதிப்பாசிரியரால் வெளியிடப்படும் கட்டுரைத் தொகுப்பும் அடங்கும். பொதுவாக நூல் ஆவணப்படுவதற்குச் சில ஆண்டுகள் காலம் தேவைப்படுவதால் அவற்றில் உள்ள தகவல் குறைந்தது பதிப்பிட்ட ஆண்டிலிருந்த ஐந்து ஆண்டுகள் பழையதாக இருக்கும். ஆயினும் நூல்களில் விமரிசகர்களும், ஆய்வாளர்களும் சிறந்தவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றில் உள்ள முக்கியத் தகவல்களைக் குறிப்பெடுத்துப் பயன்படுத்த வேண்டும். அவ்வாறான தகலுக்கான ஆவணங்கள் தொடர்பான குறிப்புகள் ஆய்விதழ் போன்றே அடிக்குறிப்பில் அல்லது ஆவணத் தொகுப்பில் குறிப்பிட வேண்டும். இக்குறிப்புகள் ஒரு ஆய்வாளர் ஆய்வுக் கட்டுரைக்கு உழைத்த உழைப்பைப் படம் பிடித்துக் காட்டும்.

    சொற்களஞ்சியம், அகராதி, நிகண்டு, ஒரு தலைப்பின் தொகுப்பு ஆய்வு, அச்சு ஊடகத் திரட்டி போன்றவை மூன்றாவது வகையான ஆய்வு ஆவணங்களாகும்.

    ஆய்வாளர் அச்சு ஊடக ஆவணங்களை நகலெடுக்கலாம். எண்ணிம ஆவணங்களைப் படியடுக்கலாம். ஆனால் அசலை அப்படியே எழுதினால் அது குற்றமாகும். ஆய்விதழ் நடத்துபவர்கள் இந்தக் குற்றங்களைக் கண்டுபிடிக்க இப்போது மென்பொருளைப் பயன்படுத்துவதால் இவ்வகை அறிவுத் திருட்டை மேற்கொள்வது தீங்கையே விளைவிக்கும்.

    தொடருவோம்

    Share
  • ஆய்வுகளும் – ஆய்வறிஞர்களும்! – சிறப்புக் கட்டுரை!

    கட்டுரையாளர், பேரா. நாகராசன் அவர்கள் சென்னைப் பல்கலைகழகத்தில் 30 ஆண்டுகளாக பல மாணவர்களை ஆய்வாளர்களாக உருவாக்கியுள்ள  ஆகச்சிறந்த ஆய்வறிஞர். தமது நீண்ட கால அனுபவத்தின் அடிப்படையில் இக்கட்டுரையை ஆய்வாளர்களின் தெளிவான சிந்தையை ஊக்குவிக்கும் வகையில் மிக செம்மையாக வழங்கியுள்ளார். பேராசிரியர் ஆழ்ந்த அனுபவ ஞானம் பெற்ற வரலாறை அவர்தம் மொழியாகவே இங்கு காணலாம்..

    ஆசிரியர்

     

    1. இணையமும் காப்புரிமையும்

     

    காப்புரிமைச் சட்டம் என்பது அச்சு ஊடகப் படைப்புகளுக்காக, படைப்பாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஒரு சட்டப் பாதுகாப்பு. ஒரு படைப்பாளனின் எழுத்துவடிவில் உருவான புதிய கருத்தை மற்றவர்கள் திருடி தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுவதைத் தடுக்க இந்த காப்புரிமை பயன்பட்டது.

    காப்புரிமை பற்றிய சரியான தகவல் ஆங்கிலத்தில் கீழே காணவும்:

    According to The Indian Copyright Act, 1957 (Chapter V Section 25), Anonymous works, photographs, cinematographic works, sound recordings, government works, and works of corporate authorship or of international organizations enter the public domain 60 years after the date on which they were first published, counted from the beginning of the following calendar year (ie. as of 2018, works published prior to 1 January 1958 are considered public domain). Posthumous works (other than those above) enter the public domain after 60 years from publication date. Any other kind of work enters the public domain 60 years after the author’s death. Text of laws, judicial opinions, and other government reports are free from copyright. Photographs created before 1958 are in the public domain 50 years after creation, as per the Copyright Act 1911.

    இந்த சட்ட சரத்தின்படி 1958 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட அச்சு ஊடகப் பதிப்புகள் பொது வெளியில் எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்ற உரிமையுடன் விளங்குவதைக் காணலாம். இந்த சரத்து அச்சில் வெளியானத் தகவல் மற்றும் செய்திகளுக்கு மட்டும் பொருந்தும்.

    இணைய வெளியில் வெளியாகும் எழுத்து, ஒலி, ஒளி மற்றும் புகைப்படச் செய்திகள் ஆகியவற்றின் தகவல்கள், மற்றவர்கள் எடுத்துக் கையாளப்படுவதைத் தடை செய்யும் வகையில் அமையவில்லை. இணையம் ஒரு பொது வெளி அங்கு பதியப்படும் கருத்துகளைப் பாதுகாக்க டிஜிட்டல் மேனேஜ்மென்ட் ரைட்ஸ் என்ற பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக் கொள்வதே தற்காப்புக்கான வழி.

    இணையவெளி இணைய வழி ஆய்வுக் கட்டுரைகள் இணையத்தில் கிட்டும் எண்ணிம வடிவில் உள்ள ஆவணங்களையும் கருவூலங்களையும் மேற்கோள் காட்டுவதில் காப்புரிமைச் சட்டம் தலையிட வாய்ப்பில்லை எனலாம்.

    தமிழர்களின் தொல்லியல், மரபியல் சமூகவியல் மற்றும் வாழ்வியல் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் இணைய வெளியில் உள்ளன. அவை அனைத்தும் காப்புரிமைச் சரத்துக்குள் வராத ஆவணங்கள். எனவே அவற்றைப் பயன்படுத்த எந்தத் தடையும் இல்லை.

    எந்தவிதமான தனிப் படைப்பும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் பொது வெளியில் கட்டற்ற பயன்பாட்டுக்கு உரியதாக உரிமை பெற்றுவிடும். ஆய்வாளர்கள் ஆய்வுக் கட்டுரை எழுதும்போது எது தன் சொந்தக் கருத்து சொந்த எழுத்து என்பதை நிறுவ, தான் ஆதாரமாக மேற்கோள் காட்டிய ஆவணங்கள் பற்றிய குறிப்பை வெளியிடுவது முறையானது. கட்டுரையின் உள்ளே அடிக்குறிப்புகளாகவும் கட்டுரையின் இறுதியில் ஆதார ஆவணக் குறிப்புப் பட்டியலாகவும் கட்டாயம் குறிப்பு எழுத வேண்டும்.

    இணையத்தில் அவ்வாறு அளிக்கப்படும் தொகுப்பு வெப்ளியோகிராஃபி என்றழைக்கப்படும். இணையத்தில் எங்கு காணக்கிடைக்கும் என்ற உசாத்துணையுடன் இணையத்தில் தேடிய நாள் பற்றிய குறிப்பையும் இட வேண்டும். இது தொடர்பான மேலதிகத் தகவல் இணையத்தில் அமெரிக்கன் சைக்காலஜிகள் அசோசியேஷன் இணையதளத்தில் ஆவணமாகக் கிடைக்கும் அதைத் தரவிறக்கிப் பயன்படுத்த வேண்டும்.

     

    2. அறிதலும் ஆய்வும்

     

    அறிதல் நால்வகைப்படும். அவையாவன:

    1 முன்னோர்களின் தொன்று தொட்டு பின்பற்றப்பட்ட பழக்க வழக்கம்
    2. சான்றோர்களின் காலத்தால் அழிக்க முடியாத சிந்தனைகள்
    3. உள் மனதில் உருவாகும் எண்ணங்களின் வெளிப்பாடுகள்
    4. அறிவியல் கருத்து வளங்கள்

    மேலை நாட்டினர் அறிவியல் மூலம் நிறுவப்படும் கருத்துகளை, தரம் மிக்க நம்பகத்தன்மை மிக்க தகவல் களஞ்சியம் என்று கருதுகின்றனர். வெறுப்பு விருப்பின்றி சுயச் சார்பில்லாமல் சுற்றுச் சூழலில் உள்ள நிகழ்வுகளைத் தரவுகளாகத் திரட்டி அலசி ஆய்வதே அறிதலின் நோக்கம் என்று அவர்கள் கருதுகின்றனர். மேலே சுட்டப்பட்ட மற்ற மூன்று அறிதல் முறைகளும் ஏற்புடையதல்ல என்பது அவர்களின் தீர்க்கமான முடிவு.

    ஆனால் தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவர்கள் வாழ்ந்த வாழ்வியலையும் மரபுகளையும் வாய் மொழியாகவும் இலக்கியமாகவும் படைத்துள்ளனர், அவற்றில் ஏராளமான கருத்துக் குவியல்கள் நிறைந்துள்ளன.

    அந்தக் கருத்து வளங்கள் இணைய வெளியில் எழுத்து வடிவிலும் ஒலி ஒளி மற்றும் காணொளி வடிவிலும் தரவுகளாகக் கிடைக்கின்றன. பல்லூடக வடிவில் பொதுக் கருத்தாக பரவியுள்ள அந்தத் தரவுகளை அறிதல், ஆய்வின் முதல் நோக்கமாகும்

    ஏட்டில் எழுதாக் கவிதைகள், நாட்டுப்புறப் பாடல்கள், தெருக்கூத்து என்று எழுத்து வடிவுக்கு அப்பால் உள்ள தகவல்களை ஆய்வு செய்து ஆய்வுக் கருத்துகளை வெளியிடுவதே இணைய ஆய்விதழ்களின் கடமையாகும்

    முன்னோர்களின் பழக்க வழக்கங்கள் அச்சில் பதிவிடாமல் வாய்மொழியாக சீர் சடங்கு பாரம்பரியம் என்று தொன்று தொட்டுத் தொடரும் வழக்கங்களை இணைய வெளியில் தேடுவதும் தொகுப்பதும் இணைய ஆய்வாளர்களின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

    ஆவி வழிபாடு முன்னோர்களைப் போற்றும் வீர வணக்கம் உள்ளத்துள் உருவாகும் வழிபாட்டுச் சிந்தனைகளின் வெளிப்பாடு என மேலை நாட்டு அறிவியலுக்கு அப்பாற்பட்ட கருத்து வளங்கள் தமிழில் நிறைந்துள்ளன. அவை எல்லாம் இணைய ஆவணங்களாக எண்ணிம வடிவில் உள்ளன.

    உயர் கல்வியில் ஆய்வுத் துறை வளர்ச்சிக்கு தொடங்கப்பட்ட சென்னைப் பல்கலை ஆங்கிலம் மற்றும் சமஸ்கிரிதம் மட்டுமே ஆய்வுக்குரிய மொழிகள் என்று தீர்மானித்து தமிழ் மொழி ஆய்வுக்குகந்த மொழி அல்ல என்றும் அம்மொழியில் ஆய்வும் அறிவியலும் படைக்க வழி இல்லை என்றும் கருதியது. கீழ்த்திசை ஆய்வுகளுக்கு என்று ஒரு நிறுவனத்தைத் தோற்றுவித்தபோதும் உலகச் செம்மொழிகள் பற்றிய ஆய்வு அங்கே நடந்தாலும் தமிழுக்கு இடம் இல்லை என்ற நிலை நீடித்தது.

    பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு இருக்கை என்ற நிலை ஒரு ஆங்கிலேயப் போர் வீரனின் விதவை தமிழுக்கு என்று கொடுத்த கொடையைக் கொண்டே அமைக்கப்பட்டது. படிப்படியாக பட்டப்படிப்பு பட்ட மேற்படிப்பு முனைவர் பட்டப்படிப்பு என்று தமிழ் முன்னேறினாலும் தமிழ் ஆய்வுக் கட்டுரைகள் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என்று பல்கலைக்கழக விதி வலியுறுத்தியது.

    தமிழில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவதற்கான உலகத் தரம் வாய்ந்த ஆய்வு இதழ்கள் தமிழகத்தில் செயல்படவில்லை. தமிழ் ஆய்வாளர்களுக்கு ஆங்கிலப்புலமை இல்லாமையால் உலக அளவிலான உயர்வான ஆய்விதழ்களில் கட்டுரைகளை வெளியிட இயலவில்லை.

    இன்றைய நிலையில் இணைய ஆய்விதழ்கள் அச்சு மட்டும் அல்லாது பல்லூடக வடிவில் வளங்களைத் திரட்டியும் தொகுத்தும் ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிட வாய்ப்பளிப்பது பெருமைக்குரியதாகும். தமிழ் ஆய்வுகள் தமிழில் இணைய வெளியில் வெளியிடுவதன் மூலம் தமிழர்களின் அறிவுப்புலம் உலக அளவில் பரவுவதற்கு வாய்ப்பு உருவாகியுள்ளது.

    மேலை நாட்டு ஆய்வுப்பார்வை என்று தமிழ் ஆய்வைச் சுருக்கிக் கொள்ளாமல் தமிழ் ஆய்வாளர்கள் தமிழர்களின் முழுமையான அறிவுப்புலத்தை ஆய்வுலகத்துக்கு எடுத்துச் செல்ல இயலும்.

     

    3. சட்ட வரைவும் கட்டமைப்பும்

     

    ஆய்வுப் பணி என்பது ஒரு திட்டமிட்ட செயல். அறிவுலகம் எண்ணற்ற தகவல்களை அன்றாடம் உருவாக்கி அவற்றைப் புலங்களாகப் பகுத்துத் தொகுத்துவரும் நிலையில் முதலில் ஆய்வு எந்தப் புலத்தில் / புலங்களில் மேற்கொள்ள வேண்டும் என்பதை முதலில் முடிவு செய்ய வேண்டும்.

    தமிழ் ஆய்வுகள் வரலாறு மற்றும் சமூகவியல் சார்ந்து அமைவது பொருத்தமாக இருக்கும். ஆய்வாளர் இந்தப் புலங்களில் அதுவரை நிகழ்ந்த ஆய்வுகளின் தொகுப்பை அலசி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட தலைப்புகளையும் ஆய்வுக்குப் பயன்பட்ட ஆய்வு முறைகளையும் அறிந்துகொள்ள வேண்டும்.

    வரலாற்று ஆய்வுகள் காலப் பாகுபாட்டு அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை மட்டும் தேர்வு செய்து ஆய்வு அக்காலகட்டத்துள் அமைவதாக இருக்க வேண்டும். மேலைநாட்டு நிகழ்வுகள் நீண்ட தொடராக நேர்கோட்டுப் பாதையில் அமைந்துள்ளதுபோல் தமிழக வரலாறு அமையவில்லை. அறுபதாண்டுக்கு ஒரு முறை சுழலும் சக்கர வடிவிலான வரலாற்று நிகழ்வுகளை ஆய்வு செய்து கால நிர்ணயம் செய்வது எளிதான காரியம் அல்ல. எனினும் தமிழ் வரலாற்றாய்வாளர்கள் தங்கள் ஆய்வின் மூலம் பல காலகட்டத்தை நிறுவியுள்ளனர். ஒவ்வொரு ஆய்வாளரும் அவர்கள் அனுமானத்திற்கேற்ப வரலாற்று நிகழ்வுகளின் காலத்தை நிறுவியுள்ளனர். அதன் காரணமாகவே சங்க காலம் என்பது கி.மு முதலாம் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டுவரை குறிப்பிடப்பட வேண்டிய சூழல் உள்ளது. எனவே ஆய்வாளர் தன் ஆய்வுக்குரிய காலம் என்ன என்பதையும் அக்காலகட்டம் எந்த ஆய்வாளரின் காலப்பகுப்புக்கு உட்பட்டது என்பதையும் தெளிவு படுத்த வேண்டும்.

    தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புக்குத் தொடர்பான அந்தக் குறிப்பிட்ட காலத்துக்கான ஆவணங்களை ஆய்வாளர் முதலில் திரட்ட வேண்டும். ஆவணங்கள் பல வடிவங்களிலும் பலதரம் வாய்ந்ததாகவும் இருக்கும். ஆவணங்களின் நம்பகத் தன்மையை உள்ளுறை மற்றும் வெளிப்புற விமர்சனங்கள் மூலம், விலக்குவது விலக்கி நம்பகத் தன்மை மிக்க ஆவணங்களை ஆய்வுக்கு அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

    ஆய்வாளர் ஆய்வுக்கான கேள்வியை எழுப்பி ஆவணங்கள் மூலம் அதற்கான விடையைக் கண்டுபிடிக்க வேண்டும். அவ்வாறான கேள்விகள் வழக்கில் நின்று நிலவும் வரலாற்றுத் தகவல்களைத் தகவில என்று நிறுவுவதாக அமைதல் வேண்டும். பழையன கழிதலும் புதியன புகுதலும் வரலாற்று ஆய்வின் அடிப்படை.. சரியான காலம் என்று நம்பிக்கொண்டிருக்கும் தகவல் புதிய தரவுகளால் தகவில என்று நிறுவுதல் மூலம் தமிழக வரலாற்று நிகழ்வுகளில் உள்ள தொன்மங்களும் புனைவுகளும் பிழைகளும் களையப்படும்.

    இவ்வாறில்லாமல் ஆய்வின் மூலம் ஒரு புதிய தகவலை ஆவணச் சான்று மூலம் நிறுவுதல் அனுமானத்தைத் தோற்றுவிக்கும் ஆய்வாக அமையும். வரலாறு என்பது அரசவை வரலாறாக எழுத்து வடிவில் இருக்கும் தரவுகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டது. அதில் ஆய்வாளர் பார்வையும் கோணமும் உள்ளடங்கி நிற்கும். ஆய்வுப்பொருளாக அமைந்தவர்களில் பார்வையும் கோணமும் அதில் இருப்பதில்லை. வாய்மொழி வரலாறு வரலாற்று நிகழ்வுகளை ஆய்வுப் பொருளானவர்களின் பார்வையில் அவர்கள் கோணத்தில் வெளிப்படுத்துவதாக அமையும்.

    வரலாற்று ஆய்வாளர்கள் சட்ட வரைவில்லாத கட்டமைப்பில்லாத ஆய்வைத் தொடங்கினால் அவர்கள் திக்குத் தெரியாத காட்டில் அலைந்து திரிய வேண்டியதிருக்கும் அவர்களின் ஆய்வு முடிவுகள் சமகால ஆய்வாளர்களின் கழுகுப் பார்வைக்கு இரையாகிவிடும்.

     

    4. சுய சிந்தனையும் அறிவியல் இயக்கமும்

     

    மேலை நாட்டுச் சமூகம் விக்டோரியப் பேரரசியின் ஆட்சிக் காலம் வரை சமய நம்பிக்கைக்குள் சிக்கி மக்கள் அறிவார்ந்த சிந்தனையைப் பயன்படுத்தாமல் மத குருமார்களின் கட்டுக்குள் வாழ்ந்ததை மேலை நாட்டு சமூக வரலாறு படம்பிடித்துக் காட்டும்.. விக்டோரியப் பேரரசியின் காலத்தில் அறிவியல் மறுமலர்ச்சி ஏற்பட்டதை வரலாறு சுட்டும்.

    ஆனால் தமிழர்களின் சமூக வரலாறு முற்றிலும் வேறுபட்டது. பல ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்ந்த சமுதாயமாக வாழ்ந்த தமிழ்ச் சமூகம் ஒரு புறம் ஆவி வழிபாடு முன்னோர் வழிபாடு என்றிருந்தாலும் இன்னொருபுறம் சுய சிந்தனையாலும் பட்டறிவாலும் இயற்கையுடன் இணைந்து வாழும் கலையை உருவாக்கிக் கொண்டு. அச்சுறுத்தும் இயற்கைக்கு அஞ்சாமல் இயற்கையின் சக்தியை வாழ்வின் முன்னேற்றத்துக்குப் பயன்படுத்திக் கொண்டது.

    காற்றின் திசை வேகம் அலைகளின் போக்கு போன்றவற்றைப் பட்டறிவால் அறிந்து தன்னைச் சுற்றியிருந்த முக்கடல் மூலம் மேற்கிலும் கிழக்கிலும் தன் வணிகத்தைப் பெருக்கிக் கொண்டான் மனிதன். அவைதீக சமயங்களான தமிழ்ச் சமணம் தமிழ் புத்தம் வழியாக முன்னோர் வழிபாட்டுடன் அறிவிற் சிறந்த ஆன்றோர்களின் துணைகொண்டு அருளும் அறிவும் இணக்கமாகச் செயல்படும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டான்.

    நீதி நெறியோடு காதல் வீரம் அன்பு அருள் போன்ற நுண்ணிய உள்மனச் சிந்தனைகளுக்கு ஊடக வடிவத்தை உருவாக்கி திறன் வாய்ந்த கலைஞர்கள் மூலம் சமுதாயம் முழுமைக்கும் பரப்புரை செய்து ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தமிழ்ச் சமுதாயம் ஒரு அறிவார்ந்த சமுதாயமாக இருக்குமாறு கட்டமைத்துக் கொண்டனர்.

    சுற்றியுள்ள சூழலையும் இயற்கையையும் புறக்கண்ணால் ஆய்ந்து கண்ட காட்சிகளுக்கு வடிவம் கொடுத்தனர். மொழி என்னும் கருவியின் மூலமும் நுண்கலைகள் மூலமும் மனத்தகத்தே நோன்றிய நுண் உணர்வுகளுக்கும் அவனால் வடிவம் கொடுக்க முடிந்தது. இடைக்காலத்தில் வைதீக ஆன்மீகச் சிந்தனைகள் மேலெழுந்து தமிழரின் சுய சிந்தனை மற்றும் பட்டறிவின் வெளிப்பாடுகளை அழுத்தி மறைத்த நிலையில் தமிழர்களின் வரலாறு ஒரு மறைக்கப்பட்ட வரலாறாகவே விளங்கியது.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேலை நாட்டு அறிஞர்களில் சிலர் கிறித்துவக் குருமார்கள் மற்றும் அவர்கள் நடத்திய திருச்சபை மக்களை அறிவுப்பாதையில் முன்னேறவிடாமல் தடுப்பதாகக் கூறி அறிவுப் புரட்சிக்கான இயக்கங்களை உருவாக்கினர். அதை அடியொற்றி சென்னையிலும் அறிஞர்கள் வைதீகச் சமயம் மக்களை இருட்டில் வைக்கும் வேலையில் ஈடுபட்டுத் தமிழன் தன் உண்மை வரலாற்றை அறிந்துகொள்ள விடாமல் தடுக்கிறது என்று ஒரு எதிர்ப்பியக்கத்தை உருவாக்கினர்.
    சுய சிந்தனையாளர் சங்கம் தமிழர்களின் கடந்த காலச் சிறப்பு எவ்வாறு சமய ஆதிக்க சக்திகளால் மறைக்கப்பட்டுள்ளது என்பதை எடுத்துரைத்து தமிழர் சிந்தனை சுய சிந்தனையாக உருவெடுத்து தமிழர்களின் அறிவியல் படைப்புகளை மீட்டெடுக்க வலியுறுத்தினர்.

    மேலை நாட்டு அறிவியல் ஆய்வு முறைகளைச் சீர்தூக்கிப் பார்த்து பொருத்தமான ஆய்வு நெறிகள் மூலம் தமிழர்களின் வரலாறு வாழ்வியல் மரபியலை மீட்டெடுக்க வேண்டும்.

    இது தொடர்பான சில உசாத்துணைகள் கீழே காண்க:

    https://keetru.com/index.php/2009-10-07-12-27-44/maatruveli-mar-2014/26890-2014-07-28-11-24-03

    https://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B2%E0%AF%8C%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/article5316513.ece

     

    5. சங்க காலமும் சம காலமும்

     

    தமிழர்கள் பெருமையுடன் குறிக்கும் சங்க காலம் என்ற கருத்துருவில் சங்கம் என்ற சொல் சமணத்தின் தாக்கத்தால் உருவான ஒன்று. சமணர்கள் ஆசிரியர்களாக விளங்கி தமிழ்ச் சமுதாயத்தின் சிந்தனைகளைத் திரட்டியும் பரப்பியும் பெரும் தொண்டாற்றியுள்ளனர்.

    செந்தமிழ்நாடு என்றழைக்கப்பட்ட பாண்டிய நாட்டில் அமைந்திருந்த சம கால சம தள சம தகுதி படைத்த சான்றோர்களின் அமைப்பே சங்கம் என்றழைக்கப்பட்டது. தனியர்களின் படைப்புகள் சமூகத்தின் பொதுநிலைக் கருவூலமாக ஏற்றவை என்ற தர நிர்ணயம் இந்த சங்கத்தால் செயல்படுத்தப்பட்டது. ஒரு புதிய படைப்பு சங்கத்தின் முன் வைக்கப்பட்டு அவர்களால் திறனாய்வு செய்யப்பட்டு தரம் மிக்க படைப்புகளைத் தமிழின் கருத்துக் கருவூலங்களாக ஏற்கப்பட்டு மக்களிடையே பரவலாக்கப்பட்டது.

    சமகாலத்தில் அறிவுலகம் இதே முறையைப் பின்பற்றுவதைக் காணலாம். ஒவ்வொரு புலத்துக்கும் என்று அறிவுசால் உறுப்பினர்களைக்கொண்ட சங்கம் இயங்குவதையும் அவை ஆய்விதழ்களை நடத்துவதையும் நாம் காணலாம். சங்க காலத் தமிழ்ச் சங்கம் போன்றே இவர்களும் தனியர்களின் முனைப்பால் உருவான ஆய்வுக் கட்டுரைகளை அத்தளத்தில் புலமையும் சான்றாண்மையும் மிக்கவர்களுக்கு அனுப்பி ஆய்வுக் கட்டுரையின் நிறை குறைகளை அலசி தர நிர்ணயம் செய்யுமாறு வேண்டி அவர்களின் கருத்தின் அடிப்படையில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுகிறார்கள்.

    இன்றைய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை இதுபோன்ற தரமதிப்பீட்டுக்குப்பின் வெளியிடும் ஆய்விதழ்களில் வெளியிடுவதே சிறப்பான ஆய்வு முனைப்பாக அமையும்.

    இணையத் தோற்றம் வளர்ச்சிக்குப்பின் உலகெங்கும் உள்ள சமகால சமதள சம தகுதி வாய்ந்த அறிஞர்களைத் தொடர்புகொள்வது எளிதாக்கப்பட்ட நிலையில் இதழாசிரியர் அல்லது அவரால் நியமனம் பெற்ற ஒரு சிறு குழுவின் முடிவால் ஆய்வுத்தரம் இறுதி செய்யப்படாமல் பரவலாகப் பலரின் உற்று நோக்கலுக்கும் தீர்ந்த முடிவுக்குப் பின்னர் வெளியிடப்படுவது தமிழ் ஆய்வின் தரத்தைப் பல மடங்கு உயர்த்திப்பிடிக்கும் என்பதில் ஐயம் இல்லை.

     

    6. கருத்தும் தகவலும்

     

    கருத்து தனியரின் பார்வை. தகவல் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பார்வை. ஐம்புலன்களையும் கொண்டு ஐம்பொறிகளாலும் புற உலகைக் காணும்போது கருத்து மனிதனுக்கு மனிதன் இடத்துக்கு இடம் காலத்துக்குக் காலம் மாறும் தன்மைகொண்டது. ஒருவரே தன் கருத்தை அடிக்கடி மாற்றிக் கொள்வதும் உண்டு. புற உலகை உற்று நோக்கலில் பயிற்சியில்லாத ஐம்பொறிப் பார்வை உண்மைக்கு மாறாகவும் அமைவதுண்டு. நிலவைக் கண்டதும் அல்லி மலர்வதாகக் கவிதை பாடலாம். நிலவு தோன்றாத இரவிலும் அல்லி மலர்வது அறிவுப் பார்வை. கதிரவன் உதிப்பதும் மறைவதும் அன்றாடம் காணும் காட்சி. பூகோளவியல் கதிரவன் எழுவதும் இல்லை மறைவதும் இல்லை என்ற அறிவியல் பார்வையைப் பள்ளிப் பருவத்திலேயே வழங்குகின்றது.

    தனியரின் கருத்துகளை சரி என்றும் தவறென்றும் நிறுவ இயலாது. ஒருவரின் கருத்து தவறு என்று எந்நாளும் நிறுவ இயலாது. கருத்து மாறும் தன்மை கொண்டது. தோற்ற மயக்கமும் காட்சிப் பிழையும் கருத்தில் இருக்கும் நிலையில் விருப்பு வெறுப்பற்ற பயிற்சி பெற்ற ஒருவர் தரவுகளின் அடிப்படையில் முன்வைப்பது தகவல். தகவலை யார் வேண்டுமானாலும் சோதனை செய்து அதன் நம்பகத்தன்மையை நிறுவ முடியும். புதிய தரவுகள் அடிப்படையில் தகவல் தொடர் மாற்றம் பெறும்.

    வழக்கில் உள்ள பல செய்திகளைப் புதிய தரவுகள் மூலம் தகவில என்று நிறுவ முடியும். ரோம் எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்பது வரலாற்றுச் செய்தி. வாடிகன் நூலக ஆவணங்களின் தரவுகள் பிடில் என்ற இசைக்கருவி நீரோ மன்னன் காலத்துக்குப் பின்னரே வடிவமைக்கப்பட்டது என்ற தகவலை முன்வைத்து வரலாற்றுச் செய்தி பிழையானது என்று நிறுவியது.

    கருத்துகள் எண்ணற்றவை. ஆனால் மனிதனின் தகவல் கையாளும் சக்தி மிகவும் குறைவானதாகும். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது அறிவியல். தேவைக்கு அதிகமான கருத்துகளைச் சுருக்கித் தகவலாக மாற்றுவது ஆய்வாளர்களின் பணி. தனியனின் ஐம்பொறிகளின்மீது சுற்றுச் சூழலின் தாக்கம் மனிதனிடம் எண்ணற்ற கருத்துகளை உருவாக்க வல்லது. கருத்துகளைச் சுருக்கி சரியான செய்திகளைச் சீர்தூக்கி தகவல் ஆய்வாளர்களால் உருவாக்கப்படுகின்றது. திரட்டப்படும் தகவல் தொடரடையாக மாற்றப்பட்டு கோட்பாடுகளாக உருவாக்கப்படும். தொடர்புடைய கோட்பாடுகளின் தொகுப்பு இயற்கையின் செயல்பாடுகளை விளக்கும் விதிகளாக அமைகின்றன.

    ஆய்வாளர்கள் கருத்துகளை அப்படியே ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் செய்திகளை முன்வைத்து தரவுகள் மூலம் அவற்றைத் தகவலாக மாற்றம் செய்கின்றனர். இந்தத் தகவல் தொகுப்பே ஆய்வுமூலம் நிறுவப்படும் தகவல் தளமாக அமையும். புதிய தரவுகள் மூலம் தகவில என்று நிறுவப்படாதவரையில் அந்தத் தகவல் நின்று நிலவும். புதிய தரவுகள் மூலம் தகவில என்று நிறுவப்பட்டால் அத்தகவல் ஆய்வுலகப் பார்வையிலிருந்து மறையும்.

     

    7. சிந்தனையும் கருத்துருவும்

     

    விலங்கினங்களையும் மனிதனையும் வேறுபடுத்திக் காட்டுவது சிந்தனை. விழித்திருக்கும்போதும், கனவுடன் கலந்த உறக்கத்தின் போதும், மனித மனம் இடைவிடாது சிந்திக்கின்றது. அறிதுயிலாயினும் அல்லது நீடு துயிலாயினும் சிந்தனை ஓட்டம் தடைப்படுவதில்லை. ஐம்பொறிகளால் உள்வாங்கப்பட்ட வெளிப்புறச் சமிக்ஞைகளையும் உள் மனத்தில் பெருக்கெடுத்தோடும் நுண்ணிய எண்ணங்களையும் மூளையால் தொடர்ந்து அலசுகின்றது. இந்தச் செயல்பாடு மனிதனை கணக்கற்ற கருத்துகளை உள் வாங்கவும் வெளிப்படுத்தவும் உதவுகிறது.

    அகத்தில் தாக்கம் ஏற்படுத்திய சிந்தனைகள் வார்த்தைகள் மற்றும் பல்லூடக வழியாகப் பரிமாற்றம் செய்ய ஏதுவான சிந்தனைகளை மனிதன் எழுத்தாலும் வாய்மொழியாலும் பரப்புரை செய்கிறான். வார்த்தைகளால் வர்ணிக்கக் கூடிய விளக்கக் கூடிய உள்மனச் சிந்தனைகள் கருத்துருவாக வடிவம் பெறுகிறது. பாசம், பக்தி, அருள் போன்று நுண்ணிய கருத்துருக்களும் புற உலகில் கண்ணால் கண்டு காதால் கேட்டு உய்த்துணரவல்ல ஐம்பொறிகளுக்கு வசப்படும் கருத்துருக்களும் சமூக வெளியில் பரவும்.

    விலங்குகள் அனைத்துக்கும் வாழ்க்கையை நடத்தத் தேவையான அறநெறி நீதி நெறி உண்டு. மீன் இனத்தில் பெரிய மீன் சின்ன மீனை வாயால் கவ்வலாம். ஆனால் சின்ன மீன் பெரிய மீனைக் கவ்வக்கூடாது. பெரிய குரங்கு சிறிய குரங்கைக் கடிக்கலாம்.. ஆனால் சிறிய குரங்கு பெரிய குரங்கைக் கடிக்கக் கூடாது அதுபோல் சேவல் கோழியைத் துரத்திக் கொத்தலாம். ஆனால் கோழி சேவலைக் கொத்தக்கூடாது.

    மனிதன் சிந்தனையால் காலத்துக்குக் காலம் வாழ்வுக்கு அடிப்படையான அறநெறிகளை உருவாக்கிக் கொள்கிறான். அவற்றில் ஒன்று ஆய்வுக்கான அறநெறி. ஆய்வுக்கான அறநெறி – தெரிந்திருப்பது தெரியாமல் இருப்பதைவிட உகந்தது. உனக்குத் தெரிந்ததை மற்றவர்கள் தெரிந்துகொள்ளச் செய் என்பதாகும். தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்கு கருத்துருக்களை எடுத்துச் சொல்லும்போது கற்றல் நிகழ்கின்றது. ஆசிரியர் மாணவன் குரு சீடன் என்ற உறவும் மலர்கின்றது. மரபணுக்களால் ஒரு தலைமுறையிலிந்து மற்றொரு தலைமுறைக்கு பகிர்மானம் செய்யப்படும் பண்புக் கூறுகளுக்கு அப்பால் மூளையில் இருந்து மற்ற மூலைகளுக்கு பகிரப்படும் கருத்துருக்களின் தொகுப்பு மனிதனை சிந்தனை செய்யும் விலங்காக மாற்றும்.

    வாய்மொழியாகவும் இசை நாடகம் ஆகிய வடிவங்களிலும் ஒரு குழுமத்தின் அறிவு வளங்கள் ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு தொடர் சங்கிலியாக பகிரப்படுகின்றது. வாய்மொழிப் பரப்புக்கு தகவலை மூளைக்குள் சேமிக்கும் நினைவுத் திறன் அவசியம். ஒரு லட்சம் வேத மந்திரங்களை அட்சரம் பிசகாமல் ஒப்புவிக்கும் திறன் குருவிடமிருந்து சீடனுக்குச் சென்றடைகிறது. இதன் காரணமாகவே பல்லாயிரயம் ஆண்டுகளுக்கு முன் உருவான வேத வளங்கள் மாற்றம் இன்றி பல தலைமுறைகளைக் கடந்து வந்துள்ளது. பாரம்பரியம், பண்பாடு, மரபு போன்றவை குழுக்களில் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாகப் பரவிவிருகின்றது.

    குழுக்களாக ஆதிக்குடிகளாக வாழ்ந்த தமிழர்கள் தேர்ந்த கலைஞர்களைக் கொண்டு மக்களுக்கு கதை சொல்லல், சிற்பம், ஓவியம், கல்வெட்டு செப்புப் பட்டயம், ஓலைச் சுவடிகள் எனப்பல ஊடகப் பதிப்புச் சாதனங்கள் மூலம் பதிப்பிட்டு வெளியிட்டுள்ளனர். வாய்மொழி வழக்கில் மறைந்து நிற்கும் வளங்களைத் தேடிக் கண்டுபிடித்து அவற்ற்றுக்கு வடிவம் கொடுத்து கால ஓட்டத்தால் மறையாமல் காப்பது ஆய்வின் நோக்கமாகும்.

    பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வாய்மொழியாக விளங்கிய வைதீகச் சிந்தனைகளை வியாசர் தொகுத்ததும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தென் தமிழ்நாட்டில் ஆடல் மகளிரால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நாயக நாயகிப் பாடல்கள் திராவிட வேதமாகத் தொகுக்கப்பட்டதும் எடுத்துக் காட்டுகளாக அமையும்.

    அகச் சிந்தனைகளாலும் புற வெளியை ஐம்பொறிகளால் தேடுவதாலும் உருவாகும் கருத்துருக்களே ஆய்வுக்கான அடிப்படைக் கருப்பொருளாக அமையும். காலப் போக்கில் கருத்துருக்கள் பெற்ற மாற்றம் புதிய கருத்துருக்களின் தோற்றம் ஆகியவற்றைத் தேடித் தொகுப்பது ஆய்வாளர்கள் பணியாகும்.

    ஒத்த கருத்துக்களை அலசி நிரலிட்டு தொகுத்தால் அவையே கருதுகோளாக வடிவம் பெறும். இணைய வளர்ச்சிக்குப்பின் விக்கிப் பீடியா ஆய்வாளர்கள் ஆய்வைத் தொடங்கத் தேவையான கருதுகோள்களை எளிதில் கிட்டும்வண்ணம் செயல்படுத்திவருகின்றது. அச்சு ஊடகத்துக்கும் இணையத்திற்கும் நிறைய வேறுபாடுள்ளது. இணையம் பொது வெளி. கருத்துகளை வெளியிடத் தடைகள் அதிகம் இல்லை. புத்தக உலகம் கட்டுப்பாட்டுக்குள் இயங்குவது. ஒரு நூலைப் படைத்து வெளியிடுவது இணையத்தில் எளிது புத்தக உலகில் எளிதல்ல. புத்தகத்தைப் படிப்போர் உடனே விமரிசனம் செய்ய இயலாது ஆசிரியன் படிப்போர் வளையத்துக்கு அப்பாற்பட்டு இருந்து விமரிசனங்களுக்கு அதிகம் அவதிப்படாது தற்காத்துக்கொள்ள முடியும். இணையம் அதற்கு நேர் மாறானது.

    இணையத்தில் மின் நூலகங்கள் கடந்தகாலச் சிந்தனை வளங்களை பல்லூடக வடிவில் எளிதில் கிடைக்குமாறு வாய்ப்பை அளித்துள்ளது. நூற்றாண்டுக் காலத்துக்கும் பழமையான நூல்களும் மற்ற ஆவணங்களும் இணையத்தில் எளிதாகக் கிடைக்கும்.

    இணைய வெளியில் ஆய்வு செய்பவர்கள் விரைவாகவும் திறம்படவும் செயல்படக் கிட்டியுள்ள வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

     

    8 . காடும் மரமும்

     

    காட்டைப் பார்க்கும்போது மரத்தை எண்ண முடியுமா? மரத்தை எண்ணும்போது காட்டை முழுமையாகக் காண முடியுமா? இந்தப் புதிர் ஆய்வின் இரு பெரும் பிரிவுகளை வெளிக்கொணர வல்லது..

    ஆய்வுப்புலத்தில் நிறுவப்பட்டு நின்று நிலவும் கோட்பாடுகளையும் விதிகளையும் பருப்பொருள் அலகீடுகளால் கணக்கீடு செய்ய இயலாத கருத்துருக்களையும் ஆய்வு செய்வது ஏரண அடிப்படையில் தர்க்கவாத அடிப்படையில் செய்யப்படும் ஆய்வு என்ற ஒரு வகை. ஐம்பொறிகளைப் பயன்படுத்தி அளவிட்டுத் தரவுகளை உருவாக்காமல் ஏரணத்தின் அடிப்படையில் செயல்படும் ஆய்வு வழக்கில் உள்ள நிறுவப்பட்ட நம்பகத்தன்மை மிக்க விதிகளை தர்க்கரீதியாக அலசி புதிய தகவலை நிறுவும் முறையாகும்.

    ஒரு அன்றாட நிகழ்வை எடுத்து இம்முறையை விளக்கலாம்.

    சென்னை மாநகரில் ஒரே எண்ணிக்கை தலைமுடியுள்ள இருவர் உள்ளதை எவ்வாறு நிறுவுவது? ஒவ்வொருவரின் தலைமுடியையும் எண்ணி விடை காண்பது இயலாத காரியம். இதற்கான விடையை ஏரண அடிப்படையில் நிறுவலாம்.

     

     ஒருவரின் தலை முடியைவிட அதிகமானவர்கள் சென்னையில் வசிக்கிறார்கள் என்பது ஒரு ஏரண அடிப்படையில் நிறுவப்பட்ட தகவல்.. இந்த அடிப்படையில் நம் அலசலுக்காக ஒருவரின் தலைமுடியின் எண்ணிக்கை ஐம்பது என்று கருதினால் சென்னை மக்களின் எண்ணிக்கை ஐம்பத்தி ஒன்று என்றாகும் அல்லவா. இந்த ஐம்பத்தியொருவர்களில் எவருமே தலையில் முடியே இல்லாத சொட்டையர்களை உள்ளடக்கவில்லை என்ற நிலையில் முதலாமவருக்கு ஒரு முடி இரண்டாமவருக்கு இரண்டு முடிகள் என்று எண்ணிக்கையிடலாம். ஐம்பதுபேருக்கு ஐம்பது முடிகள் என்ற நிலையில் ஒருவர் கணக்கீட்டுக்கு வெளியே இருப்பார். அவருக்கு இந்த ஐம்பதில் ஏதாவது ஒரு எண்ணிக்கையில் முடி இருக்கும் என்று கருதினால் சென்னையில் ஒரே எண்ணிக்கையில் தலை முடியுள்ள இருவர் உள்ளனர் என்பதை ஆய்வாளர் தன் தலைமுடியைப் பிய்த்துக்கொண்டு சிந்திப்பதில் இருந்து தப்பிக்க வைக்கும் ஆய்வாக அமையும் .

    இதே தலைப்பில் ஒரு மானிடவியல் ஆய்வாளர் உலகெங்கும் உள்ள 720 குழுக்களைத் தனித்தனியாக ஆய்வு செய்து சில ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.

     

    1. கட்டுப்பாடுமிக்க அமைப்புகளில் வாழும் மனிதர்களின் முடி குறுக்கி வெட்டப்பட்டிருக்கும். எ. கா. ராணுவ வீரர்கள் கைதிகள்.

    2. நீண்ட முடி வளர்ப்போர் -மேல்நாட்டறிஞர்கள், விதிகளைப் புறந்தள்ளும் இளைஞர்கள், பெண்கள்.

    3. நீண்டமுடி வாழும் சமூகத்திலிருந்து ஒதுங்கி நிற்பதையும் குறுகிய முடி சமுதாயத்தை ஒட்டி வாழ்வதையும் குறிக்கும்.

    4. சந்நியாசிகள் ஃபக்கீர்கள் நீண்டமுடியுடன் சமுதாயத்தை விலக்கி வாழ்வதைக் குறிக்கும். சடாமுடியும் மழித்த தலையும் அவர்களைச் சமுதாயத்திற்கு அப்பால் வாழ்பவர்களாக விளக்கும்.

    5. நாரதபரிவர்ச்சக உபநிஷத் குடுமி பாலுணர்வைக் கட்டுப்படுத்தி வாழ்வோரைக் குறிக்கும் என்றும் மழித்த தலை கற்பு வாழ்வைக் குறிப்பதாகவும் சடாமுடி உலக வாழ்வை வெறுத்து ஒதுக்கியவர்களையும் சுட்டுவதாகக் குறிப்பிடும்.

    இவ்வாறு சிறு பிரிவுகளாகப் பிரித்து ஐம்பொறியால் உற்றுநோக்கி அலகீடுகளால் அளவிட்டு நிறுவும் தகவல் இரண்டாவது ஆய்வு வகையாக அமயும் இது மரத்தை எண்ணி காட்டைக் காண்பதைப் போன்றது.
    ஆய்வாளர்கள் ஆய்வு செய்யும்போது இந்த இரண்டு முறைகளிலும் ஆய்வு மேற்கொள்ளலாம்.

     

    9. எடுக்கவோ கோர்க்கவோ

     

    தமிழர்களின் வரலாறு மற்றும் சமூகவியல் ஆய்வுத்தளத்தில் எண்ணற்ற கருத்துருக்கள் இணைய வெளியில் எண்ணிம வடிவிவில் கிட்டுகின்றன.

    முதல்பணி அவற்றைத் தேடுபொறி மூலம் தேடி பட்டியலிடுதல். கருத்துருக்கள் எழுத்துவடிவில் மட்டுமின்றி படமாகவும் படக்காட்சியாகவும் ஒலி வடிவாகவும் கிடைக்கும். சிதறிக்கிடக்கும் மணிகளைத் தேடி எடுக்க வேண்டும். உள்ளத்தில் தோற்றக் காட்சியாகவும் புறத்தில் ஊடக வடிவிலும் காணக்கிடைக்கும் கருத்துருக்களை எளிய தெளிவான மிகைபடல் கலக்காமல் சரியான சொற்களைப் பயன்படுத்தி விவரிக்க வேண்டும். விவரணை அடிப்படையில் அவை தெளிவான பிரிவுகளில் பகுக்கப்படவேண்டும். ஒரு கருதுகோள் அல்லது அனுமான அடிப்படையில் அவை பல்வேறு விதங்களில் தொகுக்கப்பட வேண்டும்.

    எடுத்துக் காட்டாக ஒரு மானுடவியல் அறிஞர் தாங்கள் நூறு விழுக்காடு தனித்தன்மைமிக்க அமெரிக்கர்கள் என்று தற்பெருமை பேசுவோரின் முகத்திரையைக் கிழிக்கும் வண்ணம் அன்றாட வாழ்வில் எவ்வளவு கலப்புகள் அமெரிக்கச் சமூகத்தில் மலிந்து கிடக்கின்றன என்பதைக் கட்டுரையாக வடித்தார். ( தமிழகத்திலும் தனித்தமிழ் பேசுவோர் தெளிய இதுபோன்ற ஆய்வுகள் உதவும்.

     

    உசாத்துணை கீழே காண்க:
    http://www.expat.or.id/info/expatstories.html

     

    அதுபோன்றே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழகக் கோவில்களில் உள்ள இறையுருக்களின் பீடம் நின்ற அமர்ந்த கோலம் முத்திரைகள் ஆயுதங்கள் எடுக்கப்பட்டு ஆய்வு அடிப்படையில் கோர்க்கப்பட்டுள்ளதைக் கீழே கொடுத்துள்ள படங்களில் காணலாம்.

     

    10 . எண்ணும் எண்ணிமமும்

     

     

    பழந்தமிழர் வணிகத்தில் சிறந்து விளங்கிய காரணத்தால் அவர்கள் எழுத்துடன் எண்ணையும் போற்றி வளர்த்தனர். பெரிய மதிப்பையும் ஒன்றுக்கும் குறைவான சிறிய மதிப்பையும் அளவிடத் தேவையான குறியீடுகளை அவர்கள் பயன்படுத்தினர். தமிழர்கள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் ஒன்று முதல் ஒன்பது வரையிலான கணிதக் குறியீடுகள் கடல் கடந்து வெளிநாடுகளுக்கும் பரவியது. வணிகர்கள் என்ற நிலையில் மதிப்பில்லாத சூன்யத்துக்கான சுழியை அவர்கள் பயன்படுத்தியதில்லை. நூறு ஆயிரம் பத்தாயிரம் என்று குறியீடுகளை உருவாக்கியவர்கள் சுழியத்தைப் பயன்படுத்தியதில்லை. பிற்கால புத்த வைதீக சமயங்கள் சூன்யத்தையும் மாயையும் பாழ் நிலையையும் குறிக்க சுழியத்தைப் பயன்படுத்தினர்.

    ஃபிரஞ்ச் கணித மேதை புதிய கணக்கிடும் கணித முறையைக் கண்டுபிடிக்க முனைந்து இரண்டு எண் குறியீடுகளை மட்டும் வைத்து கணக்கிடும் முறையை உருவாக்க நினைத்தவர் தமிழ்க் கணித முறையில் உள்ள எண் குறியீடு ஒன்றையும் சமஸ்கிருதப் பயன்பாட்டில் உள்ள சூன்யத்தைக் குறியிடும் சுழியையும் இரண்டு எண் குறியீடுகளாகப் பயன்படுத்தினார்.

    பிற்காலத்தில் கணக்கிடும் கருவியைப் பயன்படுத்த முனைந்த அறிஞர்கள் சிக்கலற்ற எளிதான இருநிலை எண் குறியீட்டைப் பயன்படுத்தி கணினியை உருவாக்கினர். கணினிக்கு மனித மொழி தெரியாத நிலையில் கணினிக்கு ஏற்ற குறியீடுகளாக மொழியின் எழுத்துகளைக் குறியீடாக்க முனைந்தனர். கணினி எண் அடிப்படையில் இயங்கினாலும் தேவையை உணர்ந்து ஆங்கில எழுத்துகளுக்கும் எண்ணிமக் குறியீடுகளை உருவாக்கினர். இவ்வாறு எண்ணிமக் குறியீடுகள் வழியாகவே ஆங்கில எண்ணும் எழுத்தும் மின்னியல் வடிவம் பெற்றது.

    மேல்நாட்டில் உருவாக்கப்பட்ட கணினிகள் ஆங்கில மொழிக்கு மட்டுமே எண்ணிம வடிவம் உருவாக்கியதால் கணினியின் இயக்கம் பெரும்பாலும் ரோமானிய மொழிக் குடும்பத்துக்கு ஏற்றவாறு செயல்பட்டது. பின்னர் மற்ற மொழிகளின் எண்ணும் எழுத்தும் எண்ணிம வடிவம் பெற்று அம்மொழிகளின் வழங்கள் கணினியில் உள்ளீடு செய்யவும் கணினியில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள எண்ணிம வளங்களை இயற்கை மொழியில் மாற்றி கணினித் திரையிலும் காகிதத்திலும் வெளிப்படுத்தினர்.

    இணைய வளர்ச்சியில் தமிழ் வளங்கள் அதிகமாக எண்ணிம வடிவம் பெற்றது. கணினியில் ஒரு தளம் மட்டுமே இயங்கும் வண்ணம் யூனிகோட் ஒருங்குறியீடு வளர்ச்சியடைந்து தமிழ் மொழியின் பல்லூடக வளங்கள் அனைத்தும் எண்ணிம வடிவில் கிட்டும் வாய்ப்பு உருவானது. எண்ணிம வளங்கள் மின்னியல் வடிவங்களில் தோன்றியதன் அடிப்படையில் தமிழ் ஆய்வு எண்ணிமத்துக்கு மாற்றம் பெற்று புதிய தளம் உருவானது

    இன்று தமிழ் ஆய்வாளர்கள் கணினியைப் பயன்படுத்தி மின்னியலில் அதி அற்புதமான முன்னேற்றங்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்யும் எண்ணிம மனிதவியல் என்ற புதிய துறையை உருவாக்கியுள்ளனர்.

    எண்ணிம மனிதவியலை விளக்க கீழ்க்காணும் விளக்கம் உதவும்!

    எண்ணிம மனிதவியல் (Digital Humanities) என்பது மனிதவியல், கணினியியல் துறைகள் இணைந்த ஒரு கல்விப் புலம் ஆகும். இத்துறை மரபுசார் சமூக அறிவியல் துறைகளை (சமூகவியல், மானுடவியல், தொல்பொருளியல், மொழியியல், பண்பாட்டியல்) கணினியியல் கருவிகள், குறிப்பாக தகவல் அறிவியல் கருவினைப் (தரவு காட்சிப்படுத்தல், தகவல் மீட்டெடுப்பு, தரவு அகழ்வு, புள்ளியியல்) பயன்படுத்தி அணுகும் முறைமை ஆகும். எண்ணிமச் சேகரிப்புகளை தொகுப்பதிலிருந்து, பெரும் பண்பாட்டுத் தரவுகளை அகழ்வது வரை என இத்துறையின் அக்கறைகள் விரிவானது.

    தமிழ் ஆய்வாளர்கள் இந்தப் புதிய துறையில் ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது இன்றியமையாத ஒன்று.
    தொடருவோம்

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    இந்த வார வல்லமையாளர் [08/07/2013 – 14/07/2013]

     பேரா.  நாகராசன்

    சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய். வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே என்ற கவிதை வரிக்கேற்ப மடலாடர்கள் மற்றும் படைப்பாளர்கள் தங்கள் சிந்தனை வளங்களைக் கருத்து வடிவில் வல்லமை மின் இதழிலும் மடலாடல் குழுவிலும் வெளியிடுவது நாம் அறிந்ததே

    தனித்திருப்பவன் தனியனல்ல ஒருவரின் தனித்தன்மை ஒரு குழுவில் இருக்கும்போதே வெளிப்படும். தனித்தன்மை மிளிரத் தங்களின் ஆற்றல் வெளிப்படும் வண்ணம் தெரிந்தெடுத்த புலத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்துபவர்களே வல்லமையாளர்கள்

    photoநவீன விஞ்ஞானம் நாத்திகம் என்று தமிழ்க் குமுகம் தன்னுடைய நடுநாயகமான ஆன்மீகத்திலிருந்து விலகி வெகுதூரம் பயணிக்கும் ஆபத்தான சூழலில் தமிழகத்தின் சமயச் சிந்தனைகளைத் தொடராகக் கோர்வையுடம் எழுதும் வல்லமை உடையவர் அவர்

    சமயக் குரவர்களையும் பாணர்களையும் நினைவில் நிறுத்தும் வண்ணம் பல தலங்களுக்கு நேரில் சென்று அத்தலங்களின் பெருமைபற்றி ஆற்றொழுக்கான எளிய தமிழ் நடையில் எழுதும் வல்லமை படைத்தவர் அவர்

    பழமையான ஓலைவடிவிலும் அச்சு ஊடகத்திலும் உள்ள வளங்களில் சிறப்பான சிலவற்றித்  தேர்ந்தெடுத்து இணையத்துக்குத் தொடர்ந்து அறிமுகப்படுத்தும் அவர்  அருகிவரும் கருத்து வளங்களை எண்ணிமப்படுத்துவதில் வல்லவர்

     ஒவ்வொருநாளும் அதிகாலையில் எழுந்ததும் இணையத்தில் தன் பங்குக்கான தினம் ஒரு திவ்ய நாமம் நாள் தவறாமல் எழுதும் வல்லமையுடையவர் நல்லதொரு கருத்தென்றால் தயங்காமல் பாராட்டுவதும் குறையைச் சுட்டும்போது மென்மையான நிலைப்பாட்டையும் எடுத்துப் பிறர் மனம் புண்படாமல் எழுதும் வல்லமையாளர் இணையத்துக்கே இயல்பான கருத்து மோதல் கட்சி சேர்த்தல் பிறரை எள்ளி நகையாடல் போன்ற வல்லமைகள் இல்லாதவர் இணையத் தமிழுக்கு உயர்கல்வியில் உரிய இடம் கிடைக்கவேண்டும் என்ற மாறாப்  பற்று கொண்டவர் அவர் திரு.காளைராஜன் அவர்கள் அவரே இந்த வார வல்லமையாளர் அவரைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு கிடைத்தது எனக்குக் கிடைத்த பெருமை அவரே இந்த வார வல்லமையாளர்

     

    Share
  • கனவுத் தொழிற்சாலையின் கன்சல்டன்டாக நான்

    பேரா. நாகராசன்

    கன்சல்ட்டன்ட் என்று நான் என்னைச் சொல்லிக் கொண்டால் அது இன்சல்ட்தான் ஆனாலும் தொழிற்துறையில் அந்த வார்த்தை மட்டும்தான் அப்போது என் வேலையைக் குறிக்க ஓரளவு உதவி செய்தது. என் கல்வியும் நான் பெற்ற மதிப்பெண்களும் எனக்கு ஒரு சாதாரண வேலையைக்கூட வாங்கித் தராது என்பதை மற்றவர்களைவிட நான் தெளிவாக அறிந்திருந்தேன். ஆனாலும் சிவகாமிப்பாட்டி மட்டும் ஒரு மாற்றுக்கருத்தை எனனைப்பற்றி முன்மொழிந்து கொண்டிருந்தார்.  கண்ணில் பூவிழுந்து பார்வை சரியில்லாதபோதும் என் கைரேகையைப் பார்ப்பதில் குறியாக இருப்பார்.  அவர் மட்டுமே என் கையில் உள்ள மேடுகளும் ஆழமாய்ப் பதிந்த கோடுகளும் நான் ஒரு மாதிரியான அறிவாளியாக் வருவேன் என்று கட்டியம் கூறுவதாகச் சொல்வார்.  படிப்பென்னவோ விஞ்ஞானம் கல்வியியல் உளவியல் என்று கூட்ஸ் வண்டி அடிக்கடி பாதை மாறுவதுபோல் மாறி நான் படித்த பல்கலைக் கழகத்திலேயே நான் மாணவராக இருந்தபோது புகழ்ந்துபேசிய ஒருவர் துணைவேந்தராக வந்தபோது என்னை ஆசிரியராக்கியது.  அவரே வெறி பிடித்தவர் போன்று எனக்குப் பதவி உயர்வு கொடுத்து என்னை நானே நம்பமுடியாத உயரத்தில் தக்க வைத்தார்

    எனக்கு எளிதாக வந்த திறன் ஒன்று உண்டென்றால் அது நலிந்த நிறுவனங்களை விலைக்குவாங்கி விற்பது பற்றி ஜக்கம்மா குறி சொல்வதுபோல் அருள்வாக்குச் சொல்வது.  எந்த நிறுவனங்கள் இந்த வேலைக்குச் சரிப்படும் என்று என்னால் உடனே கண்டுபிடிக்க முடிந்ததால் அவ்வாறு வாங்கி விற்பது லாபகரமாக் இருந்ததால் எனக்கு நல்ல மார்க்கெட் இருந்தது.  அப்படி ஒரு வாங்கி விற்கும் கன்சல்டன்சியில் நான் ஒருவரைச் சந்தித்தது என்னைக் கனவுத் தொழிற்சாலையில் கொஞ்சகாலம் குப்பை கொட்ட வைத்தது. தமிழ்த் திரை உலகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குழுவின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டு வளர்ந்த தொழில்.  முதலில் ஸ்டூடியோ சொந்தக்காரகள் கையில், பின்னர் பெரிய கதாநாயகர்களின் கைக்குள், அதன்பின் வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஃபைனான்சியர்கள் கையில் அப்புறம் தொழிநுட்பம் தெரிந்த இயக்குநர் குழுவின் கையில் என்று மாறி மாறி வந்துள்ளது.  ஒரு காலத்தில் திரை உலகைத் தன் ஆளுமைக்குள் வைத்திருந்த குடும்பம் இனிமேல் ஸ்டுடியோ நடத்தத் தன்மானம் இடங்கொடுக்கவில்லை என்று கருதி அவர்களின் ஸ்டுடியோவை விலைக்கு விற்கவந்து அது தொடர்பாக வாங்குபவருடன் இந்தக் குறிசொல்லும் பணியால் தொடர்பு ஏற்பட்டது.  வாங்கியபின் அதன் வளர்ச்சிக்கான திட்டங்கள் உத்திகள் தீர்மானம் செய்யும் நிலையில் எனக்கு ஒரு வாய்ப்பு அங்கே கிடைத்தது

    ஆராய்ச்சி மாணவனாக இருந்தால் அடிமை வேலை செய்ய வேண்டும் என்பது பல்கலைக் கழகத்தில் எழுதப்படாத விதி.  அப்படியாகத்தான் எனக்குக் கிடைத்த வேலை ஆராய்ச்சி சஞ்சிகளைப் பதிப்பித்து விற்று வருமானம் ஈட்டுவது.  மூன்று சஞ்சிகளைப் பதிக்கும் வேலையைத் தொடங்கி அதன் வடிவமைப்பு விற்பனை என்று நானாவித வேலையையும் செய்து பழகிக் கொண்ட எனக்கு என்பலம் என்னவென்று ஒருநாள் தெரிந்தது.  சக ஆய்வு மாணவர் ஒருவன் என்னுடைய வழிகாட்டியான பேராசிரியத் தலைவர் என்னை வெளியேற்ற ஏற்பாடு செய்துவருவதைச் சொன்னார்.  வழிகாட்டிக்கும் ஆய்வு மாணவனுக்கும் உள்ள உறவு பலசரக்குக் கடைச் செட்டியாருக்கும் பொட்டலம் கட்டும் இளைஞனுக்கும் இடையே உள்ள உறவு போன்றது.  செட்டியார் எச்சரிக்கை எத்திராஜராகப் எதிர்க்கடை வராதவாறு வேலை செய்பவர்களுக்குப் பொட்டலம் கட்டுவது தவிர எந்த வேலையையும் கற்றுக்கொடுக்க மாட்டார்.  அப்படியே அவரைத் தாண்டிக் கற்றுக் கொண்டவனையே விட்டால் வினை என்று கூலியில்லாத வேலையாளாக மாற்றி மருமகனாக ஆக்கிக்கொள்வார்.  இங்கு நான் வெளியேற்ற்ப்படும் நிலையில் முன்யோசனை இல்லாமல் என் சக ஆய்வாளரிடம் இந்த மடம் இல்லையென்றால் எனக்கென்ன கவலை இங்கிருந்து நேராக எந்தப் பத்திரிக்கை வாசலில் நின்றும் நான் ப்ரூஃப் ரீடர் வேலைக்கு வந்திருக்கேன் என்று சொன்னால் அப்படியே தூக்கிட்டுப் போயிடுவாய்ங்க தெரியுமா என்று ஆண்டுக் கணக்காக ஆய்வு என்ற பெயரில் நான் செய்த புரூஃப் ரீடர் வேலையைச் சொல்ல அவர் என்னுடைய பேராசிரியரிடம் போட்டுக் கொடுக்க அதனால் என் வழிகாட்டி என்னை வெளியே போக முடியாதபடி செய்துவிட்டார். அதுமூலம் நான் பத்திரிக்கையில் ஒரு வேலையை உருப்படியாகச் செய்யமுடியும் என்று எண்ணத் தோன்றியது

    எனது நண்பரின் புதிய முயற்சியில் அவர் முன் எடுத்த ஒரு திட்டம் சினிமாத் துறையில்  ஒரு வாரப் பத்திரிக்கை தொடங்குவது.  அந்தக் காலகட்டத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பும் சூல்நிலையில் அவரை ஆசிரியராகக் கொண்டு இந்தப் பத்திரிக்கையை நடத்தவேண்டும் என்பது அவரின் இந்த முயற்சிக்கு அடிப்படையாக அமைந்தது பத்திரிக்கையைத் தொடங்கி வடிவமைத்து உருவாக்கி வெளிவிடும் வேலையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது.  ஆராய்ச்சி மாணவனாக இருந்தபோது சென்னை அரசினர் தோட்டத்தில் வசித்துக்கொண்டு கால் இடறிக்கீழே விழுந்தால் ஒரு தியேட்டர் படியில் விழவேண்டும் என்ற சூழலில் ஆய்வறிக்கைக்காக அல்லும் பகலும் நேரம் செலவழித்ததால் ஒரு திரைப்படம்கூடப் பார்த்ததில்லை.  ஒருமுறை என் சகஆய்வு மாணவரின் காதல் திருமண வரவேற்புக்காக இடம் புக் செய்ய ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன்.  வாசலில் ஏகப்பட்ட கூட்டம் என்னவென்று தெரியாமலேயே வரவேற்பாளரிடம் சென்று பணம்கட்டிவிட்டுத் திரும்பி வந்தால் கூட்டம் என்னைப் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதுபோல் பார்த்தது.  ஏணிப்படி ஏறுமாறாக என்று கேடடதற்கு உன் அருகில் ரிசப்சனில் நின்றது யார் தெரியுமா  என்று கேட்டது கூட்டம். ஐயா தெரியாதய்யா என்று சொன்னேன்.  நீயெல்லாம் தமிழ்நாட்டில் பிறந்ததே ஒரு பெரிய பாவம் என்று சலித்துக்கொண்ட ஒரு பெரிசு பையா அதுதான் இந்தியத் திரை உலகின் கனவுக் கன்னி அவரைப் பார்க்க நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம் என்று சொன்னார்கள்.  இந்த இரண்டு நிகழ்வுகளுமே திரைத்துறையைப்பற்றிய என் பாண்டித்துவத்தைப் பறைசாற்றும்.

    எப்படியோ போடப்போகும் பணம் 5 லட்சம் வந்தால் வரட்டும் போனால் போகட்டும் நான் கவலைப்படமாட்டேன் நீங்கள் நடத்துங்கள் உங்கள் நாடகத்தை என்று சொல்லிவிட்டார் நண்பர். நன்குபடித்துப் பட்டம் பெற்ற எழுத்தாற்ற்ல் மிக்க கணினிப் பயன்பாடு தெரிந்த தலைமை ஏற்கவும் தலைமையின்கீழ்ப் பணி செய்யவும் விழைவுள்ள ஆறுபேரை ஆசிரியக்குழுவாக அமைத்து இந்திய அளவில் தலை சிறந்த இயக்குனர் நடிகர்களை அழைத்துவந்து நேருக்குநேர் சந்திப்பு பேட்டி என்று பயிற்சி அளித்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் தலைமையில் மற்றவர்கள் குழுவாகப் பணி செய்து பத்திரிக்கையைக் கொண்டுவரும் அளவுக்குப் பயிற்சி அளித்துப் பத்திரிக்கையின் வெள்ளோட்டமாக மூன்று மாதங்கள் பத்திரிக்கையை முழுமையாக அச்சிட்டு தெரிந்தெடுத்த சிலருக்கு அனுப்பி அவர்களின் கருத்துக் கேட்டு இறுதியில் ஐந்து நிமிட விளம்பரப்படம் ஒன்றை சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வாழ்த்துக்களுடன் உருவாக்கி அந்தப் பத்திரிக்கை வெளியானது.  கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நாடுதிரும்பாமல் அமெரிக்காவில் உயிர் துறந்தார்.  அவருக்கென்று ஆரம்பித்த பத்திரிக்கை என்பதால் வேறு  யாரையும் ஆசிரியராகப் போடாமல் அந்தப் பத்திரிக்கை பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்தது.

    அந்தப் பத்திரிக்கையின் ஆல் இன் அழகுராஜாவாக ஆல் ரவுண்டராக நான் இருந்த காலத்தில் ஒரு பெரிய அச்சுக்கூடத்தில் ஸ்டாப் தி பிரஸ் என்று அச்சிடுவதை நிறுத்தும் அதிகாரத்துடன் பவனிவந்து திரை உலகம் தொடர்பான ஒரு பெரிய தரவுத் தளத்தினை உருவாக்கி (திரை உலகக் கிசுகிசுவும் உள்ளடக்கம் ஆனால் வெளியிட்டதில்லை) புலனாய்வுக் கட்டுரை நம்பகமான் தகவல் என்று அது தரமான திரை உலகச் செய்திகளுடன் பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடக்க அடித்தளம் அமைத்தேன்.

    அந்தப் பத்திரிக்கை மூடப்படும்வரை பெண்களைக் காட்சிப்பொருளாகவோ கவர்ச்சிப் பொருளாகவோ காட்டாமல் ஒரு படத்தில் தாரகையாகி சிவப்பு விளக்கு வெளிச்சத்தில் மறைந்த கதாநாயகிகள் மரணப் படுக்கையில் வெளி உலகின் பார்வையில் இருந்து மறைந்து இருந்த மாபெரும் நடிகையைக் கண்டுபிடித்து வெளி உலகுக்குக் கொணர்ந்து அவரின் இறுதி ஆசையை நிறைவேற்றியது என்று மங்கையருக்கு ஒருசில நற்பணிகள் செய்தது இந்நாளின் என்னுடைய மலரும் நினைவுகளாகக் கருதலாம்.

    படத்திற்கு நன்றி உதயன்.

    Share
  • இன்னுயிர் ஈந்து மானம் காத்துக் காவல் செய்வோம்

    நாகராசன் 

    பசும்போன் முத்துராமலிங்கத் தேவர்

    தமிழகத்தின் வரலாற்றில் தமிழ் நாட்டின் தென்பகுதி, வீர இலக்கியப் பதிவுகளில் மறவர் பூமி என்று அழைக்கப்படும் பூமி.  இங்கு வாழ்ந்த மறவர் குமுகம், குறிப்பிடத்தக்க பண்புக் கூறுகளான மானம், தன்மானம், முதல் மரியாதை, வாழ்வுப் பழக்கம், காவல் என்ற தமிழனின் அரும் பெரும் பண்புகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் போற்றி காத்துவரும் தமிழ்க் குமுகப் பிரிவாகும்.

    இலக்கியங்கள் குறிப்பிடும் வீரப் பண்புகளான செஞ்சோற்றுக்கடன், தலைவன் இறந்த செய்தி கேட்டால் தன் தலையைக் கொய்து வீர மரணம் அடைதல், வாளால் தலையை அறுத்துத் தலைவன் காலடியில் படைத்தல், அரசனுக்காக நாட்டுக்காக உயிர்துறக்க எக்கனமும் தயார் நிலையில் இருத்தல், ஆகியவை சற்றும் வழுவாமல் கடைப்பிடிக்கும் பழக்கத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவிலும் மற்ற நாடுகளிலும் தலைசிறந்த போர்வீரர்கள் என்று பெருமை பெற்றவர்கள். 

    வீரச் செயல் புரிந்து வீரமரணம் அடைந்தவர்கள் நினைவைப் போற்றி, வீரர் நடுகல் நட்டு, அதில் அவர்களின் வீரப் பராக்கிரமம் பற்றிய புகழாரங்களைச் செதுக்குவதும், போரின் வெற்றிக்குக் காரணமானவர்களைக் குறுநில மன்னர்களாக்கி அழகு பார்ப்பதும், தமிழக வரலாற்றில் நிரவிக்கிடக்கும் தகவல்களாகும். 

    ஆங்கில ஆதிக்கம், அதன் நாடு பிடிக்கும் பேராசைக்குப் பெரும் தொல்லை தந்தவர்கள் என்ற முறையில், ஆங்கிலேயர்களுக்கு இந்த மறவர் குமுகத்தின் மீது அச்சமும் பகையும் வெறுப்பும் இருந்தது.  அவர்களின் வாழ்வியல் மரபை, அவர்களின் பழக்க வழக்கங்களை, சரிவரப் புரிந்துகொள்ளாத ஆங்கிலேயர் அவர்கள் தங்கள் சொந்த நாட்டில் வாழும் சில பழங்குடிகளை குற்றப் பரம்பரை என்று அடையாளம் காட்டப்பட்டதுபோல், தமிழகத்திலும் அவர்களைக் குற்றப் பரம்பரையினர் என்று அடையாளப்படுத்தி அவர்களைக் குற்றப் பரம்பரை என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தது. 

    தங்கள் மண்ணுக்குள் வந்த மிலேச்சசர்கள் மறவர்களின் கோவில்களைத் தம் வசப்படுத்தி அவர்களின் இறைவழிபாட்டைத் தடை செய்தது மறவர்கள் மத்தியில் ஆங்கிலேயர் மீது மாறா வெறுப்பும் தீராப் பகையும் கொள்ள வைத்தது.  அவர்கள், அவர்களின் கிராமத் தெய்வங்களை வழிபாடு செய்து, இறைவன் சந்நதியில் முதல் மரியாதை பெற்று, உயர்தனிச் சிறப்புடன் சிறு குழுவாக வாழ்ந்த அவர்களின் வாழ்முறை சிதைந்ததை, அவர்கள் தங்களின் தன் மானத்துக்கு விடப்பட்ட சவாலாகக் கருதினார்கள்.  இதன் காரணமாக ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிரான உரிமைக்குரல் இந்த மறவர் பூமியில் தொடக்கம் முதல் இறுதிவரை தொய்வில்லாமல் நிகழ்ந்தது. 

    சாத்வீகப் போர், தர்ம யுத்தம் என்று சொல்வதெல்லாம் கவைக்குதவாது என்று சொல்லி, ஆயுதம் எடுப்போம் என்ற நேதாஜி அவர்களின் சங்கநாதம், சிங்கையிலும் மலாயாவிலும், தோட்டத் தொழிலாளர்களாகவும் ஏவலர்களாகவும் வேலை பார்த்தாலும் அவர்களின் இயல்பான போர்க்குணம் ஓங்க இந்தியத் தேசிய ராணுவமாக்க் கிளர்ந்தெழுந்து, புலம்பெயர்ந்த இந்திய அரசு வெளிநாட்டில் ஏற்படுத்தப்பட்டு ஆங்கிலேயர்களை ராணுவ ரீதியில் சந்திக்க இந்த மறவர் படை பெரும் ஆற்றலுடன் போரிட்டது.  நமது லட்சியம் செங்கோட்டை என்ற முழக்கத்துடன் இந்தியாவில் மணிப்பூர் வரை வந்த இந்த மறவர்படை ஜப்பானின் தயக்கத்தால் ஆங்கிலேயர்களிடம் சிறைபட்டு வெஞ்சிறையில் வாழ நேர்ந்தது. 

    மானம், தன்மானம் என்று வாழ்ந்த இவர்களை ஒரு குற்றப் பரம்பரை என்று, வீர மாண்பு நிறைந்த ஒரு குமுகப் பிரிவையே கொச்சைப்படுத்தியதை, எதிர்த்துக் காங்கிரசில் இருந்து மதுரை வழக்கறிஞர் ஜோசப் (ரோசாப்பூ துரை) முயற்சி எடுத்து, அவர்கள் படும் இன்னல்களைக் குறைத்தாலும் அவர்களை அந்தக் குற்றப்பரம்பரை என்று மோச வலையிலிருந்து மீட்க இயலவில்லை. 

    மாபெரும் குறுநில மன்னர் வழி வந்து, அளவற்ற செல்வத்துடன் பசும்பொன் கிராமத்தையும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களையும் அடக்கியுள்ள நிலப்பரப்பில் பிறந்து வளர்ந்த, முத்துராமலிங்கத் தேவர், தேவர்களாகிய மறவர்களை ஒருகுடைக்குள் கொணர்ந்து, அவர்களின் அரிய பண்புகளை மீண்டும் தழைக்கச் செய்து, அவர்களின் வீரம் இந்தியச் சுதந்திரத்துக்குச் செந்நீர் பாய்ச்சி, அவர்கள் குற்றப் பரம்பரையினர் அல்ல, ‘அவர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழக்கில் இருந்த பண்புக்கூறுகளுடன், இறையுணர்வுடன், மற்றவர்களைக் காவல் காத்து, அவர்களுக்காகத் தங்கள் உயிரையும் கொடுக்கத் தயங்காதவர்கள்’, என்று நிலை நிறுத்தியவர்.  

    பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், மாறாத மனித நேயம், குறையாத இறையுணர்வு, எளிமையான வாழ்வு என்று மானிடத்தின் உயர் பண்புகளுக்கு உறைவிடமாக இருந்து, லட்சக்கணக்கான மறவர்களை ஒன்று திரட்டி, அவர்களின் வீரத்தை, தியாகத்தை இந்திய அரசியல் வானில் வெளிச்சம் போட்டுக்காட்டத் தன் இன்னுயிர் தந்தவர் என்றால் மிகையாகாது.

    Share
  • ரோசாப்பூ துரை

     

     

    நாகராசன்

    தாழ்த்தப்பட்டவர்கள் அடக்கப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்களுக்குக் குரல் கொடுத்த அறிஞர், மற்றும் வழக்கறிஞர்

    1970 1980களில் பாமரர் வரலாற்று ஆய்வாளர்கள் இந்திய தேசிய இயக்கங்களும் மார்க்சிய ஆங்கில ஆதிக்க வரலாறும் பாமரர் பற்றி அறியத் தடைக்கல்லாக இருந்தது என்ற மாபெரும் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.  ஆனால் தேசிய நீரோட்டத்திலும் பாமரர் பற்றிய உரிமைக்குரல் எழுப்பிய தீவுகளும் உண்டு என்பதற்கு உதாரணமாக விளங்கியவர் ரோசாப்பூத் துரை

    பாமரர்களுக்காகக் குரல்கொடுத்த ரோசாப்பூத் துரையே மதச்சார்பு காரணமாகத் தேசியவாதிகளால் ஓரங்கட்டப்பட்டார் என்பது வியப்புக்குரிய உண்மை.  தேசிய அளவில் அண்ணல் காந்தியார் ராஜாஜி மோதிலால் நேரு ஜவஹர்லால் நேரு போன்ற தேசியத் தலைவர்களுடன் தோளோடு தோளாக நின்ற ரோசாப்பூத் துரை தமிழகத்தில் யாரென்று அதிகம் அறிபப்படாமல் இருந்து மறைந்தார்

    கேரளாவில் பிறந்து சென்னை கிறித்துவக் கல்லூரியில் 1903 -ல் பட்டப்படிப்பும், எடின்பர்கில்   எம்.ஏ தத்துவமும் பயின்று 1908-ல் பார் அட் லா வாகப் பதிவு பெற்று 1909-ல் இந்தியா திரும்பினார்.  இங்கிலாந்தில் இந்திய சுதந்திரப் போராளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ரோசாப்பூத் துரை சூசன்னா என்ற மங்கையை மணந்த கையுடன் சென்னை வந்து சேர்ந்தார்.
     
    சென்னையில் சில மாதங்களே தங்கியிருந்து சவுத் இன்டியன் மெயில் பத்திரிக்கையில் எழுத ஆரம்பித்தவர் கோபால மேனன் என்பவரின் அறிவுரைப்படி மதுரைக்குச் சென்று குற்றவியல் வழக்கறிஞராகப் பணிபுரிய ஆரம்பித்தார்.  வக்கீல் தொழிலில் கொடி கட்டிப் பறந்த அவர் எண்ணம் ஆங்கில அடக்குமுறைக்கு ஆட்பட்டு அல்லலுறும் கள்ளர்கள் பக்கம் திரும்பியது.  சட்ட ரிதியாகக் குற்றப் பரம்பரை என்று குற்றம் சாட்டப்பட்டு இரவு முழுதும் காவல் நிலையத் தாழ்வாரத்திலும் வெட்ட வெளியிலும் இரவு 11 மணி முதல் விடிகாலை 4 மணி வரை இருக்கவேண்டும் என்ற சட்டத்தை எதிர்க்க முனைந்தார்

    1919-1929 களில் 14000 கள்ளர்கள் தங்கள் கைரேகையைப் பதிவு செய்து வேறு இடங்களுக்குச் செல்லாமல் இரவு காவல் நிலையத்தில் தங்க வேண்டும் என்ற கடுமையான சட்டத்தால் கள்ளர் குடும்பப் பெண்டிர் கடும் மன உளைச்சல்படுவதை எடுத்துக் கூறி ஆங்கில ஏகாதிபத்தியம் ஓரளவுக்குக் கடுமையைக் குறைத்துக்கொள்ள முயன்று வெற்றியும் கண்டார்

    1918-ல் ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த ராமனாதனுடன் இணைந்து மதுரைத் தொழிற் சங்கத்தை உருவாக்கினார். மார்ச் 22 ஆம் நாள் ராஜாஜியால் ரோசப்பூத் துரை காந்தியடிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.  உடனே அண்ணலின் தளபதியாகச் சூளுரை எடுத்துக்கொண்ட ரோசாப்பூத் துரை அவர்கள் இல்லத்தில்தான் மதுரை வந்த காந்தியார் மார்ச் 26 முதல் 28 1919-ல் (அறிமுகமான நான்கு நாட்களுக்குள்) தங்கியிருந்தார்.  1919-ல் காந்தியார் தமிழகம் வந்ததன் நோக்கம் ரெளலட் சட்டத்துக்கான நாடு தழுவிய போராட்டத்தில் தமிழகம் பங்குபெற ஆதரவு திரட்டவே.  ஏப்ரால் 6 ஆம் நாள் மதுரையில் வேலை நிறுத்தம் முழு வெற்றியடையக் காரணமாக இருந்த ரோசாப்பூத் துரை காந்தியாரின் நம்பிக்கையைப் பெற்று தேசிய நீரோட்டத்திலும் போராட்டத்திலும் முழு ஆர்வத்துடன் பங்குபெற்றார்

    1920 ல் மோதிலால் நேருவின் இன்டிபென்டன்ட் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் பின்னர் ராஜாஜியைத் தொடர்ந்து யங் இந்தியாவின் ஆசிரியராகவும் பணி புரிந்தார்.  ராஜ துவேஷ குற்றத்திற்காக நேரு குடும்பத்தாருடன் சிறை சென்றார்

    மீண்டும் தம்ழகம் வந்த ரோசாப்பூ துரை மார்ச் 24-ல் வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார்.  காந்தியார் ரோசாப்பூத் துறை வேறு சமயத்தைச் சார்ந்தவர் இந்து சமயப் பிரச்சினையில் தலை நுழைத்துப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று வற்புறுத்தியும் அதை ஏற்காமல் ஈ.வெ.ரா வுடன் இணந்து போராட்டத்தில் பங்கு கொண்டார்.  ஈ வெ ராவுடம் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஸ்வராஜ்யக் கட்சிக்காரர்களை எதிர்க்கும் கொள்கையை தளர்த்திக் கொள்ளாமலும் தேவைப்பட்டால் தனித்து நின்று போராடும் பாங்கும் அவரை மிகவும் கவர்ந்தது

    ரோசாப்பூத் துரை அண்ணல் அம்பேத்காருடன் தொடர்பில் இருந்தவர் அவருக்கு மிகவும் பிடித்த தமிழ்நாட்டு இளைஞர் காமராசர்.  விருது நகர் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட காமராசருக்கு ஆதரவாக வழக்காடி சதி வழக்கிலிருந்து காமராசரை வெளியே கொண்டு வந்தவர் ரோசாப்பூத் துரை

    தனக்குச் சரியென்று பட்டதால் பின்னாளில் காந்தியாரின் ஒத்துழையாமை உப்பு சத்யாக்கிரகம் மதுவிலக்குக் கொள்கையை ஆதரிக்க மறுத்தார் 1938-ல் தன் 50 வயதில் இறந்தார் ரோசாப்பூத் துரை. மதுரையைச் சுற்றியுள்ள கள்ளர்களும் மற்ற தாழ்த்தப்பட்டவர்கள் அவர் மரணச் செய்தி அறிந்து கதறி அழுதனர்.

    அவரின் பிறந்த நாளைக் கள்ளர் சமுதாயம் நினைவில் நிறுத்தி ஆண்டு தோறும்  கொண்டாடியது.  தங்கள் குழந்தைகளுக்குப் பெண் என்றால் ரோசாப்பூ என்றும் ஆணாக இருந்தால் ரோசப்பூத் துரை என்றும் பெயரிட்டு அவர் நினைவைப் போற்றியது.

    ரோசாப்பூ என்ற பெயர் எதனால் வந்தது?

    நேரு போல் தன் உடையில் ரோசாப்பூ அணிந்ததாலா? மதுரைத் தமிழில் ஜோசப் என்பதை ரோசாப்பூ என்று சொன்னார்களா?என்பது இன்றுவரை விளங்கவில்லை

    Share