பேரா. நாகராசன்

 

படியெடுத்தலும் குறிப்பெடுத்தலும்

 

ஒரு மூல ஆவணத்திலிருந்து படியெடுப்பது தவறான செயல் என்பது எழுதுவோர் மாணவப் பருவத்திலேயே அறிவர். படியெடுப்பதன் மூலம் எழுதுவோர் தங்களின் இயல்பான எழுத்து நடையில் எழுதுவதைத் தவிர்ப்பதால் அவர்கள் நகலெடுக்கும் கருவியாக மாறி தங்களின் தனித்தன்மையுள்ள எழுத்தாற்றலை இழந்துவிடுவர்.

ஒரு கருத்துரு தொடர்பான தகவலைத் திரட்டும் நிலையில் மூல ஆவணங்களை நகலெடுக்கலாம். ஆனாலும் ஆய்வுக் கட்டுரைக்குப் பயன்படுத்தும்போது மேற்கோள் காட்டவேண்டியிருந்தால் படைப்பாளரின் வார்த்தைகளை பயன்படுத்தலாம். அவ்வாறு பயன்படுத்தியவர்கள் எந்த ஆவணத்தில் இருந்து எடுக்கப்பட்டது, அதன் ஆசிரியர், ஆவணத்தின் தலைப்பு வெளியான ஆண்டு, இடம், நாடு போன்ற தகவல்களைக் கட்டுரையில் அடிக்குறிப்பு அல்லது கட்டுரையின் இறுதிப்பகுதியில் மேற்கோள் ஆவணத் தொகுப்பில் கட்டாயம் குறிப்பிட வேண்டும். மற்ற ஆவணங்களில் உள்ள ஆய்வுக் கட்டுரைக்குப் பொருத்தமான தகவல் ஆய்வாளரின் சொந்த நடையில் அமைய வேண்டும். அதற்கு ஆய்வாளரின் குறிப்பெடுக்கும் திறன் பேருதவியாக இருக்கும்.

ஆய்வுக்கான ஆவணங்கள் மூன்று விதமாக அமையும். ஆய்வு முடிவுகள் முதலில் ஆய்விதழ்களில் வெளியாகும். சில நேரங்களில் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வை பன்னாட்டுக் கருத்தரங்கங்களிலும் தேசிய அளவிலான மாநாடுகளிலும் வெளியிடுவர். இந்த இரண்டுவகை ஆவணங்களும் முதல் நிலை ஆவணங்கள். ஆய்வாளர் இவ்வகை ஆவணங்களை அதிகம் குறிப்பெடுக்க வேண்டும்.

இரண்டாம் நிலை ஆவணங்களாக நூலும், பதிப்பாசிரியரால் வெளியிடப்படும் கட்டுரைத் தொகுப்பும் அடங்கும். பொதுவாக நூல் ஆவணப்படுவதற்குச் சில ஆண்டுகள் காலம் தேவைப்படுவதால் அவற்றில் உள்ள தகவல் குறைந்தது பதிப்பிட்ட ஆண்டிலிருந்த ஐந்து ஆண்டுகள் பழையதாக இருக்கும். ஆயினும் நூல்களில் விமரிசகர்களும், ஆய்வாளர்களும் சிறந்தவை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டவற்றில் உள்ள முக்கியத் தகவல்களைக் குறிப்பெடுத்துப் பயன்படுத்த வேண்டும். அவ்வாறான தகலுக்கான ஆவணங்கள் தொடர்பான குறிப்புகள் ஆய்விதழ் போன்றே அடிக்குறிப்பில் அல்லது ஆவணத் தொகுப்பில் குறிப்பிட வேண்டும். இக்குறிப்புகள் ஒரு ஆய்வாளர் ஆய்வுக் கட்டுரைக்கு உழைத்த உழைப்பைப் படம் பிடித்துக் காட்டும்.

சொற்களஞ்சியம், அகராதி, நிகண்டு, ஒரு தலைப்பின் தொகுப்பு ஆய்வு, அச்சு ஊடகத் திரட்டி போன்றவை மூன்றாவது வகையான ஆய்வு ஆவணங்களாகும்.

ஆய்வாளர் அச்சு ஊடக ஆவணங்களை நகலெடுக்கலாம். எண்ணிம ஆவணங்களைப் படியடுக்கலாம். ஆனால் அசலை அப்படியே எழுதினால் அது குற்றமாகும். ஆய்விதழ் நடத்துபவர்கள் இந்தக் குற்றங்களைக் கண்டுபிடிக்க இப்போது மென்பொருளைப் பயன்படுத்துவதால் இவ்வகை அறிவுத் திருட்டை மேற்கொள்வது தீங்கையே விளைவிக்கும்.

தொடருவோம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.