Tag: முனைவர் இராம. இராமமூர்த்தி

  • காந்தியம் – ஒரு வாழ்க்கைநெறி

    –முனைவர் இராம. இராமமூர்த்தி

    அண்ணல் காந்தியடிகளைத் தேசப்பிதா என்று மிகப் பலரறிவர்; போற்றுவர். இந்திய விடுதலைக்கு வித்திட்ட மகான் என்பர்; அகிம்சைப் போராட்ட வீரர் எனப் புகழுவர். சத்தியமே பேசிய மாமனிதர், எளியவாழ்க்கை வாழ்ந்த உத்தமர் என்றெல்லாம் ஏத்துவர். இப்பாராட்டுரைகள் – புகழுரைகள் உண்மையேயாகும்.

    தமிழ்த்தென்றல் திரு.வி.க. அவர்கள் காந்தியடிகளை மிக நன்றாக அறிந்தவர். அதுமட்டுமன்று! காந்தியநெறியைப் பின்பற்றியொழுகிய மிகச்சிலருள் திரு.வி.க. குறிப்பிடத்தக்கவர். அதனாலேயே காந்தியடிகளைப் பற்றித் தாமெழுதிய நூலுக்கு ‘மனிதவாழ்க்கையும் காந்தியடிகளும்’ எனப் பெயரிட்டழைத்தார்.

    சால்புள்ள மனிதவாழ்க்கை, அதாவது குறிக்கோளுடைய நன்மனித வாழ்வு – ‘An ideal human life’ எவ்வாறிருக்குமெனில், அஃது காந்தியடிகளின் வாழ்க்கையைப் போல ஒளிவுமறைவு சிறிதுமின்றிச் ’சத்திய சோதனை’யாகக் காட்சியளிக்குமென்பார் தமிழ்த்தென்றல்.

    அவர்கண்ட காந்தியடிகளை – அம் மகாத்மாவை, இக்கால இளந்தலைமுறையினர் அறிதல் வேண்டும். அறிந்துகொள்வது அவர்கட்கு மட்டுமல்ல, பாரதப் பெருநாட்டிற்கும் நன்மை பயப்பதாகும். அண்ணல் காந்தியடிகள், வாழ்க்கை நெறியாகப் பன்முகப் பார்வையை யளித்துள்ளார். அவர் இந்திய நாட்டிற்கு, இந்தியர்கட்குத் தேவையான கல்விமுறை பற்றிச் சிந்தித்துள்ளார். அவர்தம் கல்விச் சிந்தனையின் செயல்வடிவமே ’ஆதாரக் கல்வித் திட்டம்’ என்றழைக்கப்படும் அடிப்படைக் கல்வித்திட்டமாகும். இதனையே ஆங்கிலத்தில் ‘Basic Education’ என்று குறிப்பிடுவர்.’வார்தாக் கல்வித் திட்டம்’ எனவும் (Wardha Scheme of Education) இதனை வழங்குவர்.

    இதற்குச் செயல்வடிவம் தந்து நடைமுறைப்படுத்த அமைப்புமுறையை வகுத்தளித்தவர் காலஞ்சென்ற குடியரசுத் தலைவர் ஜாஹீர் ஹுசைன் அவர்கள். இக்கல்வித் திட்டம் கைத்தொழில் ஒன்றை அடிப்படையாக – முதன்மையாகக் கொண்டது. இக்கல்வித்திட்டம் மனிதனின் உடல், உள்ளம், ஆன்மா ஆகிய முத்திற வளர்ச்சிக்கும் துணைபுரிவதாகும்.

    காந்தியடிகள் இந்தியர்களின் மேம்பாட்டிற்காகக் கல்வித்திட்டம் மட்டும் அளிக்கவில்லை. சிறந்த பொருளாதாரத் திட்டத்தையும் வகுத்துத் தந்தார். காந்தியடிகளின் பொருளாதாரத் திட்டம் கிராமியப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் கிராமங்கள் ஏராளம். சாதாரண மக்களே கோடிக்கணக்கில் வாழுகின்ற நாடு பாரதநாடு. கைத்தொழிலை – சிறுதொழிலை அடிப்படையாகக் கொண்டது காந்தியின் பொருளாதாரத் திட்டம். இஃது ஓர் தற்சார்புப் பொருளாதாரத் திட்டமாகும். காந்தியடிகளுக்கு செய்யும் செயலின் முடிவு மட்டும் முக்கியமன்று! அம்முடிவினை நோக்கிச்செல்லும் வழியும் நல்லவழியாக அமைதல் வேண்டும். பழியைத் தரூஉம் தீயவழியில் வரும் செல்வத்தை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை.

    நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
    அன்றே ஒழிய விடல்
    (113) எனும் வள்ளுவத்தை ஒத்தது அண்ணலில் வாழ்க்கைநெறி.  

    ஆனால் தற்காலப் பொருளாதார மேதைகளான ஆடம் ஸ்மித் (Adam Smith – pioneer of political economy), ஆல்பிரட் மார்ஷல் (Alfred Marshall – one of the most influential economists of his time) போன்றோர் தம்முடைய திட்டங்களின் இலக்குகளைப் பற்றிப் பேசுவரேயன்றி, அதற்கு அவர்கள் மேற்கொள்ளும் பாதையினைப் பற்றிக் கவலைப்பட்டாரில்லை. மேனாட்டாரைச் சொல்வானேன்? நம் இந்தியப் பொருளாதார அறிஞர் சாணக்கியர்கூட முடிவிற்கே – இலக்கிற்கே முதன்மை தந்துள்ளார். வழியைப் பற்றிச் சிறிதும் கவலவில்லை.

    நேரிய வழியை மையமாகக்கொண்ட காந்தியப் பொருளாதாரத் திட்டத்தையே, காலஞ்சென்ற காந்தியப் பொருளாதார மேதை ஜே. சி. குமரப்பா (J. C. Kumarappa – is credited for developing Gandhian economics) அவர்கள், தாய்மைப் பொருளாதாரத் திட்டம் என்று குறிப்பிடுகின்றார்.

    கல்வியும் பொருளாதாரமும் மட்டுமல்ல; எளிய வாழ்க்கைமுறையையும் நமக்குக் காட்டியவர் காந்தியடிகள். மறந்தும் பகைவர்க்கும் இன்னாசெய்வதை அறியாதவர் அம்மகான். ஆம், அரசியல் எதிரிகளிடமும் பகையற்ற போராட்டமுறையை நடத்திக் காட்டியவர்.

    இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
    என்ன பயத்ததோ சால்பு
    எனும் குறளுக்குச் சான்றாய்த் திகழ்ந்தவர் அண்ணல் காந்தியடிகள்.

    வன்முறையை எந்தவடிவிலும் விரும்பாத அந்தப் பெருந்தகை, அகிம்சை நெறியை அரசியலில் ஓர் ஆயுதமாகக் கொண்டவர் – கண்டவர் ஆவார். தனிவாழ்க்கையிலும் சத்தியத்தை – வாய்மையைப் பேசுவதையே தன் நோன்பாகப் பின்பற்றி வாழ்ந்தவர். உள்ளத்தாற் பொய்யா தொழுகியதால் உலகத்தார் உள்ளத்துளெல்லாம் அவர் உறைந்தார்; நிறைந்தார்.

    காந்தியாரிடம் விளங்கிய மற்றுமோர் உயர்பண்பு காலந்தவறாமை. புலால் உண்ணாமை, மது அருந்தாமை போன்ற தனித்த உயர்பண்புகளாலும் காந்தியார் உலகிற்கோர் எடுத்துக்காட்டாய் விளங்குகின்றார். அதனாலேயே அவர் புகழொளி உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கின்றது.  

    எனவே, இந்தியர்களின் எதிர்காலம் ஒளிமயமாய்த் திகழ்ந்திட, காந்திய நெறியைப் போற்றுவோம்; அந்நெறி பற்றி ஒழுகுவோம்; ஏனெனில், காந்தியம் ஒரு கோட்பாடன்று; அது மானுடர் கைக்கொள்ளவேண்டிய வாழ்க்கைநெறி!

    Share
  • துணைவஞ்சி

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

    முன்னுரை: புறத்திணைகள் ஏழெனத் தொல்காப்பியமும், பன்னிரண்டெனப் பன்னிருபாட்டியலும், புறப்பொருள் வெண்பாமாலையும் சுட்டுகின்றன. தொல்காப்பியங் கூறிய ஏழுதிணைகளைப் பன்னிரண்டாகப் பகுத்துரைப்பதோடு சில திணைவிளக்கங்களிலும் புறப்பொருள் வெண்பா மாலை வேறுபடுகின்றது. குறிப்பாகக் காஞ்சித் திணையமைதியில் தொல்காப்பியமும் புறப்பொருள் வெண்பா மாலையும் பெரிதும் வேறுபடுகின்றன.

    காஞ்சிதானே பெருந்திணைப் புறனே
    பாங்கருஞ் சிறப்பிற் பன்னெறி யானும்
    நில்லா வுலகம் புல்லிய நெறித்தே.
      (தொல்: பொருள்: 67)

    என நிலையாமை குறித்துத் தொல்காப்பியங்கூற,

    வேஞ்சின மாற்றான் விடுதர வேந்தன்
    காஞ்சிசூடிக் கடிமனை கருதின்று.  (புறப்: 61) 

    எனப் பகை எதிர்நிலையைப் புறப்பொருள் வெண்பா மாலை கூறும். மேலும், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணைப் படலங்கள் புறப்பொருள் வெண்பா மாலையான் திணைகளாக வகுக்கப்பெற்றன. இந்நிலையில் இப்பாடல்களுக்கு உரைவகுத்த உரைகாரர், அவர் தாம் மேற்கொண்ட மதத்திற்கேற்பத் (கொள்கை) திணை, துறை வகுப்பர். இதனாற் சில பாடல்கட்கு இரண்டு மூன்று துறைகள் வகுக்கப்படுவதுமுண்டு. இந்நிலை அகப்பாடல்கட்கும் விலக்கன்று.

    புறநானூற்றுப் பாடல்கட்கு வகுக்கப்பெற்றுள்ள திணை, துறைகள், பெரும்பாலும் தொல்காப்பியம், பன்னிருபாட்டியல், புறப்பொருள் வெண்பா மாலை போன்ற நூல்களில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றி யிருப்பதைக் காணலாம். இந்நூல்களுள் கூறப்படாத துறைகளும் இருக்கலாம். அங்ஙனம் காணப்படுகின்ற ஒரு துறையே ’துணைவஞ்சி.’ இதனைக் குறித்தே இக்கட்டுரையாளர் ஈண்டுச் சிந்திக்கின்றார்.

    துணைவஞ்சித் துறையில் அமைந்துள்ள பாடல்களாகப் புறநானூற்றில் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அவை, 36, 45, 46, 47, 57, 213 என்ற எண்களில் அமைந்துள்ளன. 36-ஆம் புறப்பாடல் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது. 45-ஆம் பாடல் சோழன் நலங்கிள்ளியையும், நெடுங்கிள்ளியையும் கோவூர் கிழார் பாடியது. 46-ஆம் பாடல் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.  47-ஆம் பாடல் இளந்தத்தன் எனும் புலவரைக் காப்பான்வேண்டி, நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது. 57-ஆம் பாடல் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டிய நன்மாறனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது. 213-ஆம் பாடல் கோப்பெருஞ்சோழனைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது. இவ்வகைப் பாடல்களின் பொருளமைதியைக் காணப் புகுமுன் துணைவஞ்சியின் இலக்கணத்தைக் காண்டல் இன்றியமையாதது.

    துணைவஞ்சி: இப்பெயர் மாத்திரையானே, இத்துறை வஞ்சித்திணையின் பாற்படும் என்பதனை நன்கறியலாம். ஆனால், துணைவஞ்சி எனும் துறைப்பெயர், தொல்காப்பியப் புறத்திணை நூற்பாக்களில் ஒன்றிற்கூட இடம்பெறவில்லை. தொல்காப்பியர் ‘இயங்குபடை அரவம்’ முதலாக ‘அழிபடை தட்டோர் தழிஞ்சி’யொடு துறை பதின்மூன்றே என வஞ்சித்திணையின் துறையாமாறு சுட்டுவர். ஈண்டுத் துணைவஞ்சி என்ற பெயரான் துறையொன்றும் இடம்பெறவில்லை.

    ’வாடா வஞ்சி’ முதலாக ’நல்லிசை வஞ்சி’ யீறாக இருபத்தொரு துறைகளையே புறப்பொருள் வெண்பா மாலை சுட்டுகின்றது. இவ்வாசிரியரும் துணைவஞ்சியெனத் துறையொன்றையும் வகுக்கவில்லை. இஃதிவ்வாறாக, துணைவஞ்சி குறிக்கப்பெறும் இடத்தைக் காண்போம்.    

    ’கழிபெருஞ் சிறப்பின் துறைபதின் மூன்றே’ என்ற அடிக்குச் சிறப்புரை வரைந்த இளம்பூரணரே, முதன்முதலில் இன்னும் ”கழிபெருஞ்சிறப்பின்” என்றமையின் பேரரசர் துணையாக வந்த குறுநில மன்னரும் தாமும் பொலிவெய்திப் பாசறை நிலை உரைத்தலும் பிறவும் கொள்க. இவை பற்றியன துணைவஞ்சி. “நீயே புறவின் அல்லல்” (புறம்: 46) “வள்ளியோர்ப் படர்ந்து” (புறம்: 47) என்னும் புறப்பாட்டுகளில் காண்க” எனவுரைப்பர் (தொல்.பொருள். இளம். ப.94). இதனால், பேரரசர் துணையாகவந்த குறுநில மன்னரும் பேரரசரும் பொலிவெய்திப் பாசறைநிலையுரைத்தலும் பிறவும் துணைவஞ்சி என்பது இளம்பூரணர் கருத்துரையாகும்.  

    இனி, முன்குறித்த பாடல்கட்கு உரைவரைந்த பழையவுரைகாரர், ‘சந்து செய்வித்தலின் துணைவஞ்சி’யாயிற்றென்பர். இவர் கருத்துப்படி, போர் நிகழாவாறு தடுக்கும் நிலைமை – அமைதிப்படுத்தும் நிலைமை – துணைவஞ்சியெனச் சுட்டப்பெறுதல் காண்க. புறநானூற்றுப் பழையவுரைகாரர், இளம்பூரணர் கருத்தையே ஏற்றுக்கொண்டு துறைவிளக்கம் தந்துள்ளமை இதனாற் தெள்ளிதிற் புலனாகும்.

    அடுத்து, மேற்குறித்த புறப்பாடல்களின் பொருளமைதியையும், அவை எழுந்த சூழ்நிலையையுங் காண்போம். இத்துறையில் முதலிற் காணலாகும் பாடல் (36) கருவூர் முற்றியிருந்த சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியதாகும். காவன்மரம் வெட்டும் ஓதை செவியிற் கேட்டும், பகைஎதிர்த்து வாராதவனிடத்துப் போர்மேற்செல்லல் என்பது, நாணுத்தகவுடைத்து எனக் கூறிப் போரை விலக்கும் உட்கோள் கொண்டது இப்பாடல்.

    அடுத்த பாடல், உறையூர் முற்றியிருந்த நலங்கிள்ளியையும், அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் கோவூர் கிழார் பாடியதாகும். இப்பாடல் போர் மேற்கொண்டானும் அடைத்திருந்தானும் ஒரே குடியினர் (சோழ மரபினர்) அவருள் ஒருவர் வென்றாலும் தோற்றாலும் அவர்தம் குடியே பழியை யெய்தும் எனக்கூறிப் போரைத் தவிர்க்க முயல்கின்றார் புலவர்.

    46—ஆம் புறப்பாடல், மலையமான் மக்களைக் கொல்லமுயன்ற குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது. ஈண்டு, ஏதுமறியாச் சிறுவரைக் கொல்ல எண்ணிய முயற்சியைத் தடுத்தமை காட்டப் பெறுகின்றது.

    47—ஆம் புறப்பாடல், இளந்தத்தன் என்ற புலவரை ஒற்றெனக் கருதிக் கொல்லப்புகுந்த நெடுங்கிள்ளியின் செயலைத் தடுப்பான்வேண்டிக் கோவூர் கிழார் பாடியது. ஈண்டுக் கொலை முயற்சியின்றின்றும் புலவரைக் காத்தலைச் சுட்டுகின்றார் கோவூர் கிழார்.

    பகைவர் நாட்டின்மீது படையெடுத்தலைத் தவிர்(த்)தற்பொருட்டுப் பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைக் காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது 57—ஆம் புறப்பாடல். இப்பாடலில் போர் முயற்சியைத் தவிர்ப்பது சுட்டப்பெறுகிறது.

    தன்மக்கள்மேற் படையெடுத்துச் சென்ற கோப்பெருஞ்சோழனைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடியது புறம் 213. இங்கும் போர்முயற்சியைத் தவிர்த்தலே பாடற் பொருளாகிறது.

    மேற்காட்டிய ஆறு பாடல்களில் 36, 45, 46, 57-ஆம் எண்களில் அமைந்த பாடல்கள் நான்கும் பகைமேற் சென்று பொருதலைத் தவிர்ப்பான் வேண்டியெழுந்தன. இவை மண்நசையான் மேற்சென்றமை சுட்டுமாற்றான் வஞ்சித்திணைப் பாற்படும் என்பது பொருந்தும். இந்நான்கு பாடல்களிலும் புலவர்கள் சந்துசெய்ய முயன்றமையும் தெள்ளிதிற் புலனாகின்றன. சந்து செய்விக்கும் முயற்சியை நேரடியாகச் சுட்டும் துறையொன்றும் வஞ்சித்திணைக்குரிய துறைகளை விளக்கும் நூற்பாவில் இடம்பெறவில்லை.

    இந்நிலையில் வஞ்சித்திணையிற் சார்ந்தும், அத்துறைகளில் அடக்கவியலாப் பாடல்களை யாங்ஙனம் அமைப்பது என்ற எண்ணம் அறிஞர்களிடத்து எழுந்திருக்கக் கூடும். அத்தருணத்தில் இத்தகைய பாடல்களைப் புறனடையிற் சுட்டுமாறு போன்று, துணைவஞ்சி என்றொரு துறையைப் படைத்திருக்க வாய்ப்புண்டு.

    இத்தகைய புறப்பாடல்களைக் கண்ட இளம்பூரணர், ‘கழிபெருஞ் சிறப்பின்’ என்ற மிகையானே ‘துணைவஞ்சி’ என்ற ஒரு துறையை அமைத்து, அத்துறையுள் அடக்குவாராயினர்.

    ஆனால் மலையமான் மக்களை (குழந்தைகளை)க் கொல்ல முயன்ற கொலை முயற்சியைத் தவிர்க்க முயன்றமை வஞ்சித் திணையில் அடங்குமாறு யாங்ஙனம்? பகைவர் மண்ணை நச்சிப் படையெழுதலும், பகைவரை வென்றபின் அவர்தம் மக்களைப் பற்றிவந்து கொல்லும் முயற்சியும் ஒன்றாதல் பொருந்துமா என்பதை எண்ணுக. ஈதொப்பவே, ஒற்றன் எனத் தவறாகக் கருதியமையான் இளந்தத்தன் என்ற புலவரைச் சிறைப்படுத்திக் கொல்லமுயன்ற செயலும் வஞ்சித் திணையாமோ? தன்மக்கள்மீது கொண்ட சினத்தான் அவரைக் கொல்லக் கருதியமையைப் பிறர் மண்ணை விரும்பிப் படையெழும் வஞ்சித் திணையுள் அடக்குவதும் பொருந்துமாறில்லை.

    இப்பாடல்களுக்கு மன்னுயிர்மாட்டு அன்புசெலுத்தும் புலவர்தம் அருள் உள்ளங்களே கரணியமாகின்றன. பிற உயிர்கள்மாட்டு அன்புசெலுத்தும் பேருள்ளப் பாங்கினை வஞ்சித்திணையில் அடக்குவதும், துணைவஞ்சி எனப் புதியதொரு துறை வகுத்துரைப்பதும் தொல்காப்பியர் காட்டும் புறத்திணை நெறிக்குப் பொருந்தி வாராமையை எண்ணுக. அதனாலேயே தொல்காப்பியர், துணைவஞ்சி என ஒரு துறை வகுக்கவில்லை. பின்னர் விரிவாகப் புறத்திணைகளைச் சுட்டும் புறப்பொருள் வெண்பா மாலையும் ‘துணைவஞ்சி’ என ஒரு துறையை வகுக்கவில்லை.

    இவ்வஞ்சித்திணைப் பகுதிக்கு உரைவரைந்த நச்சினார்க்கினியர், துணைவஞ்சியில் இளம்பூரணர் அடக்கிய புறப்பாடல்கட்கு அத்துறை பொருந்தாதெனக் கூறி மறுப்பர். அவர், “துணை வேண்டுதல் உலகியல் வழக்கு. “நீயே புறவினல்ல லன்றியும் பிறவும்” (46) என்னும் புறப்பாட்டும், “வள்ளியோர்ப் படர்ந்து” (47) என்னும் புறப்பாட்டு முதலியனவும் துணைவஞ்சி என்பார்க்கு அவை மேற்செலவின்கண் அடங்காமையிற் பாடாண்திணை யெனப்படுமென்றுரைக்க” எனக்கூறி இளம்பூரணர் கருத்தை மறுப்பர்.

    புறநானூற்றுப் பழையவுரைகாரர் இந்த ஆறு புறப்பாடல்களையும் ‘சந்து செய்வித்தலின் துணைவஞ்சி யாயிற்று’ எனக் கூறுவதை நோக்கின், இளம்பூரணர் உரைசெல்வாக்கான் அவ்வாறு கூறியிருப்பாரோவென எண்ணத் தோன்றுகின்றது. இன்றேல் புறநானூற்றுப் பாடல்கட்குத் திணை, துறை வகுத்தார் இன்று கிட்டாதவொரு புறப்பொருள் இலக்கணநூலைப் போற்றியொழுகியிருக்க வேண்டும் என்பது புலனாம். எனினும், இத்துறை வகுப்பு தொல்காப்பியப் புறத்திணை நெறிக்குப் பொருந்துமாறில்லையென்க.

    முடிவுரை: இதுகாறுங்கூறியவற்றான், புறப்பாடல்கட்கு வகுத்துரைக்கப்பட்ட திணை, துறைகள் பொருந்துமாற்றைத் தொல்காப்பியம் அல்லது புறப்பொருள் வெண்பா மாலையை முழுமையாகப் பின்பற்றி ஆய்வுசெய்தல் வேண்டும். அவ்வாறு செய்யின், ஐயத்திற்கும் குழப்பத்திற்கும் இடமின்றிப் புறப்பாடல்கட்குத் திணை, துறைகளைத் தெளிவாய்ச் சுட்டவியலும். ஆகலின், இலக்கணிகளும் ஆய்வாளர்களும் இத்துறையில் கருத்தினைச் செலுத்துதல் வேண்டும். ஆய்வொளி பரவின் ஐயவிருள் இரிந்தோடுமன்றோ!

     

    Share
  • நாணுடைமை சான்றோர்க்கணி!

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

    ”அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது”, என்பார் ஔவையார். இறைவன் படைப்புக்களுள் மனிதப்பிறவியே சிறப்புடையது. மனிதன் மட்டுமே நன்மை தீமைகளைப் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவன். இத்திறனையே பகுத்தறிவென்றும், ஆறாமறிவென்றுங் கூறுவர். ஏனைய உயிரினங்களினின்றும் மனிதனை வேறுபடுத்துவது இவ்வாறாம் அறிவேயாகும். இதனாலேயே தொல்காப்பியரும், “மக்கள் தாமே ஆறறி வுயிரே”, எனக் கூறுவாராயினர். இப்பகுத்தறிவின் பயனால் அமைவதுவே நற்பண்புகள், நற்செயல்கள் எல்லாம். நற்பண்புகளையே மனிதப் பண்புகளெனப் புகழ்ந்துகூறுவர்.

    திருக்குறள் பல நற்பண்புகளைப் பட்டியலிடுகின்றது. ஒட்டுமொத்தமாகப் ’பண்புடைமை’ என்ற பெயரானேயே நற்பண்பு சுட்டப்பெறுகின்றது. நற்பண்புகளுள் ஒன்றாக நாணம் சுட்டப்பெறுகின்றது. அதுவே ’நாணுடைமை’ என்ற தலைப்பில் அமைந்துள்ளது. நாணமென்றால் என்ன? மகளிரின் இயல்பாக அச்சம், மடம், நாணம், பயிர்ப்பென நாற்குணங்களைச் சுட்டுவர். மகளிரின் குணமாகிய நாண் என்பதற்குக் “காமக்குறிப்பு நிகழ்ந்தவழிப் படுவதோர் உள்ளவொடுக்கம்” என்பர் நச்சினார்க்கினியர்.

    ஆனால் நாம் இங்குக் கூறவந்த நாணம் மகளிர்க்கு மட்டும் உரியதன்று; ஆடவர் பெண்டிர் இருவர்தம் நல்வாழ்விற்கும் தேவைப்படுமொன்றாம்.  நாணம் என்ற சொல்லிற்குத் ’தமக்குப் பழிவருஞ் செயல்களைச் செய்யாமை’ என்பர் இளம்பூரணர். இதனையே திருவள்ளுவர் ஈண்டுக் கையாளுகின்றார். நல்லமனிதர் பழிச்செயல்களைச் செய்யப் பெரிதும்  அஞ்சுவர். பழிபாவங்கட்கு நாணுவதே – செய்ய விரும்பாமையே பெரியோர் செயலாகும். மிகப்பெரிய செல்வமே கிடைப்பதாயினும் – ஏன் இவ்வுலகமே தமக்குப் பரிசாகக் கிடைப்பதாயினும் – பழிவருவதற்குக் காரணமான இழிசெயல்களைச் சான்றோர் ஒருநாளும் செய்யமாட்டார். புறநானூற்று அரசப்புலவரான கடலுள்மாய்ந்த இளம்பெருவழுதி, சான்றோரின் இக்குணத்தையே, “புகழெனின் உயிருங் கொடுக்குவர், பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர்” எனக் கூறுவார். ”கழியக் காதல ராயினுஞ் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்” என்பது ஆவூர் கிழாரின் அமுதமொழி.

    பழிச்செயலை மேற்கொள்ளவோ செய்யவோ பெரியோர் நாணுவர். இத்தகைய நாணமே, வள்ளுவர் கூறும் நாணுடைமையில் இடம்பெறுவதாகும். மனிதர்க்குச் சிறப்புத் தருவது அவரணியும் ஆடம்பரமான உடைகளோ, அறுசுவை உணவோ அல்ல. இதனையே நாலடியார்,
    குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும் மஞ்சளழகும் அழகல்ல என அழுந்தக் கூறும். புறத்தில் மேற்கொள்ளப்படும் ஆடம்பரத்தால் ஒருவர் சிறப்பெய்துவதில்லை. அவரது நற்பண்பே அவருக்குப் பெருமை தரும். அண்ணல் காந்தியடிகளுக்கு அவரது ஆடை அணிகலன்களாப் புகழைத் தந்தன? அவரை அரைநிர்வாணப் பக்கிரி (half naked fakir) எனக் கேலிமொழி பேசியவர்கள் உண்டு. அண்ணல் காந்தியடிகளின் நயத்தக்க நாகரிகப் பண்பே அவரை மகாத்மாவாக மாற்றியது; உலக உத்தமர் என்ற பாராட்டைப் பெற்றுத்தந்தது.

    சாதாரண மனிதனை நாடுபாராட்டும் சான்றோனாக்க நாணுடைமையே – பழியஞ்சும் மனப்பான்மையே – மிகப்பெரிய காரணம் எனத் திருக்குறள் கூறுவது இயல்புதானே?

    அதனாற்றான்,
    “அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ
    டைந்துசால் பூன்றிய தூண்”, எனக் கூறுமாற்றான் சான்றாண்மைக்குத் தேவைப்படும் நற்பண்புகளுள் நாணுடைமையும் ஒன்றாக வலியுறுத்தப்படுகின்றது.  இதனாலேயே, பண்டைநாளை மன்னர்களும் தவறாது அறச்செயல்களைச் செய்துவந்தனர். மனுநீதிச்சோழன் வரலாறும், பொற்கைப்பாண்டியன் வரலாறும் அம்மன்னர் பெருமக்கள் பழிக்கு அஞ்சித் தன்மகனைத் தேரூர்ந்தமையும், தன்கை குறைத்த செயலையும் எடுத்தியம்புகின்றன அல்லவா? நெடுங்கிள்ளி, போருக்கும் வாராமல் கோட்டையையும் திறவாமல் இருந்த செயலைக்கண்ட புலவர் கோவூர் கிழார், இச்செயல் நாணுத் தகவுடைத்து – நாணத்திற்குரிய செயல் – எனக்கூறி யிடித்துரைக்கவில்லையா?

    அது மட்டுமா? திருவிளையாடற் புராணத்தில் “பழியஞ்சின படலம்” என்ற தலைப்பில் ஒரு திருவிளையாடலமைந்துள்ளது. அப்படலத்தில் பாண்டிய மன்னன் ஒருவனுக்கு வரவிருந்த பழியை இறைவன் காத்தருளிய அருட்செயலே எடுத்துரைக்கப்படுகின்றது. அற்றைநாளில், செய்யத்தகாத செயல்களென, பழிதரூஉஞ் செயல்களென ஒருபட்டியலே தரப்பட்டுள்ளது. அவற்றுள், மது உண்ணுதல், புறங்கூறுதல், பொய்ச்சாட்சி கூறல், பிறனில் விழைதல், போரிற் புறமுதுகிட்டோடல் போல்வன சிலவாம். சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியாகிய வரந்தரு காதையில் கொள்ளவேண்டியவை, தள்ளவேண்டியவை குறித்து இளங்கோவடிகள் ஒரு நெடிய பட்டியலை யமைத்துள்ளார். ”பொய்யுரை யஞ்சுமின்; புறஞ்சொல் போற்றுமின்; ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்; தீநட்பு இகழ்மின்; பொய்க்கரி போகன்மின்” என நீளுகின்றது அப்பட்டியல்!

    இதனை நோக்க, செய்யத்தக்க செயல்கள், செய்யத்தகாத செயல்களென அவர்கள் பிரித்திருந்த தன்மையை யறியலாம். “செய்தக்க அல்ல செயக் கெடும்” எனத் திருவள்ளுவர் மொழிவதும் இஃதே!

    ஆகவே, நல்வாழ்வு வாழ, நற்செயல்களைச் செய்யும் பண்பு வேண்டும்; பழிச்செயல்களைத் தவிர்க்கும் பண்பு அதனினும் வேண்டும் என்பதனைத் தமிழ்ப்பெருமக்கள் நன்கறிந்திருந்தனர். அறிந்ததோடமையாமல், அச் செயல்களைத் தம் வாழ்விற் பின்பற்றியும் வாழ்ந்தமையால் வசையின்றி இசையோடு இலங்கியது அவர்தம் வாழ்வு!

    எனவே நண்பர்களே! வாழ்வு சிறக்கப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய கருவூலம் நாணுடைமை எனும் நற்பண்பாகும். அப் பண்பின் பெற்றியை விளக்கும் குறள்மணிகள் சில…

    அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
    பிணியன்றோ பீடு நடை. (1014)

    நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
    நாண்துறவார் நாணாள் பவர்.
    (1017)

    நாணகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
    நாணால் உயிர்மருட்டி யற்று.
    (1020)

    குறள்காட்டும் இச்சீரிய கருத்துக்கள் ஞானச்சுடரை நம்முள் ஏற்றட்டும்! ஞாலம் போற்றும் நல்வாழ்வை நமக்கு நல்கட்டும்!

     

     

    Share
  • இருளும் ஒளியும்!

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

    மனிதகுலம் தோன்றிய நாள்தொட்டு இடைவிடாமல் ஒரு போர் நடந்துகொண்டே யிருக்கின்றது. அப்போர் எது? தேவாசுர யுத்தமா? இராம இராவண யுத்தமா? அல்லது பாரதப் போரா? அன்றெனில் சென்ற நூற்றாண்டில் நிகழ்ந்தது போன்ற உலகப் போர்களா? இவ்விடைகளை உண்டெனவும் கூறலாம்; இல்லை யில்லை யெனவும் மறுப்புரைக்கலாம். அப்படியானால் அப்போர்தான் யாது? அப்போர் எங்கு நிகழ்கின்றது? ஏன் நிகழ்கின்றது? அப்போரைச் செய்வோர் யார்? நமக்கும் அப்போருக்கும் என்ன தொடர்பு? இவ்வினாக்கட்கெல்லாம் விடைதான் என்ன? அதனை இப்போது காண்போம்.

    வாழ்வின் முதற்பொருளாகத் தமிழர்கள் நிலத்தையும் காலத்தையும் வகுத்தனர். “முதலெனப்படுவது நிலம்பொழு திரண்டின் இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே”, என்பது தொல்காப்பியம். நிலமோ காட்சிப்பொருள்; யாவருங் காணலாம்.  அஃது மலையாகவும் மண்ணாகவும், காடாகவும் கடலாகவும் காட்சியளிப்பதனைக் கண்டுள்ளோம். ஆனால், காலத்தைக் காணமுடியுமா? காலம் கருத்துப்பொருள்; நுண்பொருள்; அருவப்பொருள். அதனால் காணவியலாது; உண்மையே! எனினும் உணரமுடியுமே! கதிரெழுங் காலையும், கடும்பகற்பொழுதும், மயங்கும் மாலையும், மறைக்கும் இருளும் நாளும் நாளும் வந்துபோவதை அறியமாட்டாமோ நாம்? அறிவோமன்றோ? அதற்கென்ன என்பீர்!

    மாலை மறைகின்றது. பகலொளி தந்த கதிரோன் மெல்ல மெல்ல மேற்றிசையில் மறைகின்றான். இருட்பகைவன் மெதுவாகத் தன் ஆட்சியை இந்நிலவுலகிற் பரப்புகின்றான். எங்கும் இருள்; இருட்படலம் பார்வையை மறைக்கின்றது. மீண்டும் வைகறை விடியல்; வெள்ளி முளைக்கின்றது; பின்னர்ப் பகலவன் தோன்றக் காலையும் மாலையும் வருகின்றன. இவ்வொளிக்கும் இரவிற்கும் இன்று நேற்றா யுத்தம் தொடங்கியது? பகலாட்சி நடைபெறுவதும் அதனை விரட்டிவிட்டு இருளாட்சி தொடர்வதுவும் தொடர்கதையாகவே உள்ளது. இவ்வுருவக நிகழ்ச்சி நமக்கு – மக்களினத்திற்குத் தரூஉஞ் செய்திதான் யாது? அதனை எண்ணுவோம்; அறிவொளி பெறுவோம்.

    இவ்வுருவகப் போர், அறிவிற்கும் அறியாமைக்கும், நன்மைக்கும் தீமைக்கும், அடக்கத்திற்கும் அடங்காமைக்கும் நிகழ்கின்ற போரேயாகும். ஒவ்வொரு நிலையில் ஒவ்வொன்று வெற்றிபெறுவதுபோல் தெரிகின்றது. இறுதிப் போரில் வெற்றிபெறுவது யார்?

    மனிதகுலம் அன்பையும் அறிவையும் அருளையும் நற்பண்புகளையும் போற்றி நற்செயல்களைச் செய்யும்போது ஒளி – பகல் – உண்மை வெல்லுகின்றது. அதே மனிதகுலம் ஆணவங்கொண்டு அருளைத் துறந்து, தீமையை – பொய்ம்மையை மேற்கொள்ளும்போது இருட்பகைவன் – இருளரக்கன் ஆட்சி நிலவுகின்றது. உண்மைக்கும் பொய்ம்மைக்கும் நடக்கும்போரை நிறுத்துவது எவ்வாறு? அல்லது வாய்மை நிரந்தரவெற்றிபெற என்ன செய்யவேண்டும்?

    இப்போரில் வெற்றிபெற மார்க்கங்கள் உள்ளனவா? மனிதகுலம் சிந்தித்தது; பல மார்க்கங்களை – நெறிகளைக் கண்டறிந்தது. அக்கண்டுபிடிப்பில் மலர்ந்ததுவே – முகிழ்த்ததுவே சமயங்கள். இச்சமயங்கள் மனிதர்களிடம் காணப்படும் ஆணவத்தை நீக்கி அடக்கத்தை விதைக்கவும், அச்சத்தை நீக்கி அன்பைப் பயிரிடவும், அறியாமையை விரட்டி அறிவொளி பரவிடவும் வழிகாணலாயின. “அன்பே கடவுள்” என அன்புநெறியை அனைத்துச் சமயங்களும் பரப்பின; உண்மையைப் போற்றின; ஆணவம் கூடாதென அறைந்தன.

    ஆனால், காலப்போக்கில் சமயங்கட்குள்ளேயே சச்சரவுகள் – சண்டைகள் தோன்றின. போர்களுக்குச் சமயங்களும் காரணமாயின, வேலியே பயிரின் அழிவிற்குக் காரணமானாற் போல. சமயப் பூசல்கள், சமயங்களிடையே பிணக்கை ஏற்படுத்தின; உயர்வு தாழ்வுகளை உண்டாக்கின. சமயவாதிகள் ஆணவங்கொண்டவராயினர். சமயங்கள் பிளவுபட்டன. வேற்றுமைகள் உருவாயின. என் செய்வது?

    சான்றோர்கள், அருளாளர்கள் மீண்டும் சிந்திக்கத் தொடங்கினர். ஆணவமற்ற அன்புநெறியைப் பரப்புவது எவ்வாறு? மனிதர்களைச் சகோதரவுணர்வொடு வாழச்செய்வது எவ்வாறு? பலகாலம் சிந்தித்தனர்; பலர் சிந்தித்தனர். பல்வேறு வழிகளைக் கண்டனர். அங்ஙனம் சிந்தித்த சிந்தனையாளர்களுள் வள்ளலார், காந்தியார், திரு.வி.க. போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்கள் புதிய சமயங்களைத் தோற்றுவித்தனரல்லர்; மாறாகப் பழைய சமயங்கட்குப் புதுப்பார்வை தந்தனர்; பொதுமைநெறி காட்டினர். சமயங்களெல்லாம் ஒரே கருத்தினையே வலியுறுத்துகின்றன.

    இறைவன் எல்லாவுயிர்களையும் நேசிப்பவன். அவனது தூயஅன்பில் வேறுபாடில்லை; அவன் உயிர்களுள் வேறுபாடு காண்பதுமில்லை; காட்டுவதுமில்லை. எல்லாச் சமயங்களும் ஆறுகளைப் போன்றவை. இறைவனோ அவ்வாறுகள் சென்று சங்கமிக்கும் – கலந்திடும் – பேராழியாகப் – பெருங்கடலாக விளங்குகின்றான் என்றனர் அருளாளர்கள். எனவே, சமயங்கள் மனிதர்களிடம் ஒருமையுணர்வை, நல்லிணக்கத்தையே ஏற்படுத்தவேண்டும். அதற்கு முரணாக மனிதர்கட்குள் பிளவையும் பேதத்தையும் ஏற்படுத்தலாகா என அறிவுறுத்தினர். இப்பொதுமைக் கருத்தை – பொதுமைச் சமயக்கோட்பாட்டை வடலூர் வள்ளலார் தம் திருவருட்பாவில் கூறாத இடமில்லை. சான்றாக ஒரு பாடலைக் காணலாம்.

    மருளொடு மாயைப்போய்த் தொலைந்தது மதங்கள்
    –வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம்
    அருளொளி விளங்கிய தொருதிருச் சபையும்
    –அலங்கரிக் கின்றனர் துலங்குவீற் றிருக்கத்
    தெருளோடு பொருளும்மேன் மேலெனக் களித்துச்
    –சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே
    இருளறுத் தெனையாண்ட அருட்பெரும் ஜோதி
    –என்வள்ள லேபள்ளி யெழுந்தருள் வாயே!

    இப்பாடலில் இருள் விலகுதலும் அருளொளி பரவுதலும் உட்கருத்தாதலை உணர்க. மதச் சண்டைகள் ஒழிந்தன என்பார் வள்ளலார். அவர் காட்டும் இறைவனே அருட்கடலாக விளங்கிடும் பேரொளிப் பிழம்பாம்.

    இதனாலேயே வள்ளற்பெருமான், பிறிதோரிடத்தில், “மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்”, என வேண்டுகின்றார்.  அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையாக இறைவனைப் போற்றிப் புகழ்கின்றார். “அன்பே சிவமென்பது” திருமந்திரம்.

    அண்ணல் காந்தியடிகள் நமக்குத் தந்த நன்முத்துக்கள், வாய்மை, இன்னாசெய்யாமை, அன்புடைமையாம். பகைவனையும் நேசிப்பதே காந்தியாரின் சமயம். “இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்”, என்பது வான்புகழ் வள்ளுவம். பாரதி, “அறிவொன்றே தெய்வமென,” முழங்குகின்றான். அப்பர் பெருமான்,

    ”கங்கை யாடிலென் காவிரி யாடிலென்
    கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்
    ஓங்கு மாகடல் ஓதநீ ராடிலென்
    எங்கு மீச னெனாவதர்க் கில்லையே” எனச் சுட்டுவார். இறைவன் எங்குமுளான்.

    இக்கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு செயற்பட்டால், “இருட்பகைவன் தானே மாய்வன், அருட்பகலோன் யாண்டும் ஒளிபரப்புவன்.” நல்லோர் ஆட்சி நடைபெறும். தீமைகள் விலகும். குருக்ஷேத்திரம் நாள்தோறும் நடைபெறாது. ஞானச் சுடரொளி பரவும். ஆணவ இருள் விலகும். ஞாலம் அன்பினில் தழைக்கும். போரும் பூசலும் ஒழியும். உலகெலாம் இன்புறும். அந்நன்னாளைக் காண இன்றே புறப்படுவோமா?

     

     

     

    Share
  • இயற்கையும் அன்புவாழ்வும்!

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

    சங்கத்தமிழ்ப் பூங்காக்கள் எழில் நிறைந்தன. இனிய நன்மணம் பரப்புவன. உண்டற்கினிய நற்கனிகள் மிக்கு விளங்குவன. செறிவுமிக்க பயிரினங்கள் பரந்துவிளங்குவன. இச்சோலையில் நுழையவும் நன்மணத்தை நுகரவும், கனிகளை மாந்தியின்புறவும் நுகர்வோர்க்குப் பொறுமையும் கூர்த்த மதியுமே தேவைப்படும் கருவிகளாம். தமிழர்வாழ்வு இயற்கையோடியைந்தது என்பார் தமிழ்த்தென்றல் திரு.வி.க. மேலும் இயற்கையை…இயற்கை எழிலை இறைவனாகக் கண்டு வழிபட்டவர்கள் தமிழர்கள் என்பார் அவர். தமிழர்கள் தாம் கண்ட கடவுளை அழகென – முருகெனக் கண்டு வழிபாடாற்றியவர்கள். அவர்கள் கண்ட எழிலார் இறைவனே முருகன்; முருகன் என்றால் அழகன் என்பார் அந்தத் தமிழ்ப்பெரியார்.

    இதனாலேயே, தமிழர்தம் வாழ்வை இயற்கையை ஒட்டியே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை எனப் பகுத்தனர் நம்முன்னோர். இந்நிலங்கட்குரிய ஒழுக்கங்களைக் குறிக்கவும் மேற்சுட்டிய பெயர்களையே இட்டுமகிழ்ந்தனர். இவ்வைந்திணைகளுள் முல்லைநிலக் காட்சி ஒன்றை இங்கே காணலாம்.

    முல்லைநில ஒழுக்கமாக, இருத்தலும் இருத்தல் நிமித்தமும் கூறப்பட்டுள்ளது. பொருள்தேடவோ, போர் காரணமாகவோ தலைவன் பிரிந்து செல்லலும், தலைவன் திரும்பிவரும் வரையில் தலைவி இல்லத்தின்கண் ஆற்றியிருத்தலும் இத்திணைக்கண் மிகுதியாக இடம்பெறுஞ் செய்திகளாம். அத்தகைய எழிலார் காட்சியொன்றன் வாயிலாக இயற்கையின் கவின்பெறு வனப்பும் தலைமகனின் காதலன்புப் பெருக்கமும் இயம்பப்பெற்றுள்ள சிறப்பே கவிஞனின் சிறப்பாம். கவிஞன் படைத்த அவ்வழகோவியத்தைக் காணலாமே!

    தலைவன், தான் மேற்கொண்ட அருஞ்செயலை முடித்துத் தன்னில்லந் திரும்புகின்றான். தேரேறி விரைந்துவர எண்ணிய தலைமகன், தேர்ப்பாகனைநோக்கித் ”தேரை விரைந்து செலுத்துக!” எனக் கூறுகின்றான். மனையிற் பிரிந்து காத்திருக்கும் தலைவியின் பிரிவுத்துயரைப் போக்க எண்ணுவது தலைவனின் இயல்புதானே!

    தேர் புறப்பட்டது; கான் வழியாகக் காற்றினுங்கடிதாக விரைகின்றது. அவன் கடந்துவரும் கானத்தில், பிடா மலர்கள் புதரின்கண் வெள்ளிய கொத்துக்களாய் மலர்ந்து கண்ணைக் கவருகின்றன. அவ்வெண்மலர்க்கொத்துக்கள் மாலைபோல வனப்புடன் திகழ்கின்றன. அத்தகைய முல்லையங்காட்டில் வேடுவன் வேட்டைக்காகத் தன் தோளில் தாங்கியுள்ள கவைக்கோலைப்போல முறுக்கிய கொம்புகளுடன் அழகுற ஆண்மானொன்று துள்ளிப்பாய்கின்றது. அவ்வாண்மான், படர்ந்து விரிந்துள்ள தண்டுகளோடு கூடிய அறுகம்புற்கொத்துக்களைத் தன் குட்டிகளோடு விளையாடும் இளைய பெண்மானுக்குக் காட்டியுண்ணச் செய்கின்றது. அத்துடன் அமையாது, தெளிந்த நீரோடையின் நன்னீரைக் காட்டி அப்பெண்மானை அருந்தச் செய்கின்றது. நீர்வேட்கை தீர்ந்த பெண்மான் தன்குட்டிகளோடு உறங்குமிடத்தைக் காவலும் புரிகின்றது அவ்வாண்மான். என்னே மான்களிடைக் காணலாகும் காதலன்பு!

    இவ்வெழின்மிகு காட்சியைக் கண்டனன் நம் தலைமகன். இக்காட்சி அவன் உளத்திடை எத்துணை எண்ணங்களை எழுப்பியிருக்கும் எண்ணுக. நம் கவிஞர்பெருமான் இக்காட்சியை இத்துடன் நிறுத்தித் தலைமகன் கண்முன்னே மற்றொரு காட்சியைக் காட்டுமுகத்தான், காட்சிமாற்றம் செய்கின்றார். இக்கவிஞர் காவியப்புலவர் மட்டுமல்லர்; நாடகந்தீட்டும் நற்கலைஞரும் ஆவார் போலும்! அடுத்த காட்சி நந்தலைவனின் நெஞ்சைத்தொடும் உணர்ச்சிமிக்க காட்சி!

    தலைவியின் இல்லம் அது. ஆங்கு அன்னங்கள் தம்பெடைகளோடு ஆடிக்களிக்கின்ற அழகிய காட்சியினைத் தலைவனைப் பிரிந்த தலைவி காணுகின்றாள். வினைமேற்சென்ற தலைமகன் இன்னும் இல்லத்திற்கு மீண்டுவரவில்லையேயென அவளன்பு மனம் தனிமைத்துயரான் தவிக்கின்றது. தலைவி, தான் அன்புடன் பாலூட்டிப் பாராட்டும் பைங்கிளியை முன்கையில் ஏந்தியவளாய்த் தன்னில்லத்தார்க்கு அஞ்சியவளாய்ப் பிறரறியாவாறு கொல்லைப்புறம் சென்றாள். அங்கே தன் அன்புக்கிள்ளையை நோக்கி ஒரு வேண்டுகோளை வைக்கின்றாள். கிள்ளாய்! “என் தலைவர் இன்றே திரும்பிவருவார் என இன்மொழி கூறுக!” என்பாள் தலைவி. அவளது பிரிவுத்துயரும் தலைவனின் நெஞ்சத்திரையில் திகழும் காட்சியாய் வலம்வருகின்றது. தலைவன் உள்ளத்துடிப்புடன் தேர்ப்பாகனை நோக்கிச் ”செல்க தேரே!” எனக் கட்டளையிடுகின்றான்; காட்சிகள் நிறைகின்றன.

    இத்தகு எழிற்காட்சியினைப் புனைந்த கவிஞரை அறிந்துகொள்ள விழைதல் இயல்புதானே! அக்கவிஞர் மருதனிளநாகனார். இவ்வழகோவியம் இடம்பெற்றுள்ள சங்கப்பனுவல் அகநானூறென்க. தமிழ்க்கவிஞர்கள், இயற்கையெழிலை வறிதே புனையாமல் வாழ்வுடன் இணைத்துக்காட்டும் நல்லியல்பினர் ஆவர். அச்சொல்லோவியத்தை அடியிற்காணலாம்.

    சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல்
    கண்ணியின்
    மலரும் தண்நறும் புறவில்
    தொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன
    இருதிரி மருப்பின் அண்ணல் இரலை
    செறியிலைப் பதவின் செங்கோல் மென்குரல்
    மறியாடு மருங்கின் மடப்பிணை யருத்தித்
    தெள்ளறல் தழீஇய வார்மணல் அடைகரை
    மெல்கிடு கவுள துஞ்சுபுறங் காக்கும்
    பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுறச்
    செல்க தேரே நல்வலம் பெறுந
    பசைகொல் மெல்விரற் பெருந்தோட் புலைத்தி
    துறைவிட் டன்ன தூமயிர் எகினம்
    துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பிற்,
    செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி
    இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென
    இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
    மழலை இன்சொல் பயிற்றும்
    நாணுடை அரிவை மாணலம் பெறவே!  (அகம்-34: மருதனிளநாகனார்)

     

     

    Share
  • நீங்காப்பழி!

    -முனைவர். இராம. இராமமூர்த்தி

    உலக மாந்தரனைவரும் புகழொடு வாழவே விரும்புவர். அப்புகழினைப் பெறல் எவ்வாறு? சிலர் ஈகையினால் புகழ்பெறுவர் கடையெழு வள்ளல்களைப் போல. சிலர் தாம்செய்யும் நற்செயல்களாற் புகழீட்டுவர். சிலர் செயற்கருஞ்செய்து புகழ்பெறுவர். அங்ஙனம் வாய்மையைப் போற்றியும் இன்னாசெய்யாமையை மேற்கொண்டும் புகழ்பெற்றவர் இந்தியத் தேசத்தந்தை அண்ணல் காந்தியடிகள். இங்ஙனம் இசைபட வாழ்தலையே நன்மக்கள் விரும்புவர்.

    பண்டை நாளைய மன்னர்களும் இத்தகு நல்லொழுக்க, நற்செயல்களாலேயே தம்புகழ் நிறுவினர். எனினும், மக்களைக் காக்கும் மன்னர்களுள்ளும் அடாதுசெய்து பெரும்பழி எய்திய மன்னர்களும் சிலருளர். அவருள் ஒருவனே நீங்காப்பழி யெய்திய நன்னன் என்பான். அவனை இலக்கியப் புலவோர், ‘பெண்கொலை புரிந்த நன்னன்’ என்றே அடைகொடுத்துப் பழித்துரைத்துள்ளனர்.

    அந்நன்னன் புரிந்த செயலைச் சற்று விரிவாகத்தான் காண்போமே. நன்னன் ஒரு குறுநில மன்னன். அவனது தோட்டத்தில் பயன்தரு மரங்கள் பல இருந்தன. அத்தோட்டத்திற்குக் காவலும் மிகுதி. அங்கு மாமரமொன்றில் காய்கள் காய்த்திருந்தன. அம்மாமரக்கனிகளை நன்னன் பிறர்க்கீயாது தானே உண்ணவிரும்புவான் போலும்! ஒருநாள் அம்மரத்திலிருந்த காயொன்று காற்றினால் அலைப்புண்டு அதன் பக்கலிலிருந்த ஆற்றுநீரில் வீழ்ந்து மிதந்து சென்றது.

    பக்கத்தூரிலிருந்து குறுநிலத் தலைவனின் மகளாகிய இளநங்கையொருத்தி, தன் தோழியர் குழாத்தொடு புனலாடச் சென்றனள். விளையாட்டும் வேடிக்கைப் பேச்சுமாய் அந்நங்கையர், அருகில் பாய்ந்துசென்ற அவ்வாற்றில் நெடுநேரம் புனலாடி மகிழ்ந்தனர். கண்கள் சிவப்ப நீராடிக்கொண்டிருந்த அத்தலைவன் மகள் ஆற்றுநீரில் மிதந்துவந்த மாங்காயைக் கண்டனள். இளநங்கை தானே? விளையாட்டுப் பருவமும் கூட. அம்மாங்காயை எடுத்துக் கடித்துத் தின்றனள்.

    இஃதிவ்வாறாக; தோட்டக்காவலர் மாங்காய் ஆற்றுநீரில் வீழ்ந்து மிதந்துசெல்வதை எவ்வாறோ அறிந்து, ஆற்றின் கரைவழியே மாங்காயைத் தேடி வந்துகொண்டிருந்தனர். அதுபொழுது, ஆற்றில் நீராடிய மங்கையொருத்தி அம்மாங்காயை எடுத்துத் தின்றதை யறிந்தனர்; வெகுண்டனர்.

    அவ்விள நங்கையை நன்னனிடம் அழைத்துச்சென்று நிகழ்ந்ததைக் கூறினர். நன்னன் சீற்றத்தின் உச்சிக்கே சென்றான். நிகழ்வின் உண்மையறியாதவனாய் – தேரா மன்னனாய் அவ்விளம்பெண்ணிற்குக் கொலைத்தண்டனை வழங்கினான். இச்செய்தியறிந்த அம்மங்கைநல்லாளின் தந்தையாகிய குறுநிலத் தலைவன் பதறிப்போனான். நன்னன் அரசவைக்கு விரைந்தேகினான். மன்னனாய் அங்கே நாளோலக்கத்தில் வீற்றிருந்த நன்னனை வணங்கித் தன்மகள் அறியாமற் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டினான். அப்பிழைக்கு ஈடாக எண்பத்தொரு களிற்றியானைகளையும், தன்மகளின் நிறைக்கீடாகப் பொன்னாலியன்ற பாவையொன்றையும் பரிசளிப்பதாயும் கூறித் தன்மகளை விடுவிக்க வேண்டினான் அவன். (அரசனைப் பிழைத்தோர் தம் நிறையுள்ள பொன்னால் பாவைசெய்து தண்டமாக இறுத்தல் அந்நாளைய மரபாயிருந்திருக்கின்றது.)

    பன்முறை அத்தலைவன் வேண்டியும் ஐயகோ…! அவ்வேண்டுகோளை ஏலாது அந்நங்கையைக் கொன்றான் நன்னன் என்னும் நயனிலன். பெண்கொலை புரிந்த நீங்காப் பழி நன்னனை மட்டுமன்றி அவன் மரபையே சூழ்ந்தது. அவனுடைய இந்த இழிசெயல் இலக்கியத்திலும் இடம்பிடித்துவிட்டது. தமிழிலக்கியங்கள் உள்ளவரை நன்னனின் பழியும் நீங்காமல் நிற்கும் என்பதையறிக.

    மன்னன் நீதிவழாது, கோல்கோடாது ஆட்சிபுரியவேண்டியதன் அவசியத்தை உணர்த்தவந்த பொதுமறையாசிரியர்,

    ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
    தேர்ந்துசெய் வஃதே முறை
    (குறள்: 541) எனவும்,

    இறைகாக்கும் வையக மெல்லாம் அவனை
    முறைகாக்கும் முட்டாச் செயின்.
    (குறள்: 547)

    எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    மேற்கண்ட “இறைகாக்கும்” எனத் தொடங்கும் குறட்பாவுக்கு உரைவரைந்த பரிமேலழகர், ”முறைகாக்குங்கால் முட்டுப்பாடு வந்துழியும் முட்டாது செய்தல் வேண்டும்” என்பார். மேலும் இம்முறைசெய்த சிறப்பினைத் தன்கை குறைத்தான் கண்ணும் (பொற்கைப் பாண்டியன்), மகனைத் தேரூர்ந்தான் கண்ணும் (மனுநீதிச்சோழன்) காண்க என்பார்.

    நன்னன் குற்றமொன்றும் செய்யாக் குமரியைக் கொன்றான். அந்நங்கை அவனுடைய தோட்டத்திற்சென்று காயைப் பறிக்கவுமில்லை; கொல்லையில் கிடந்த காயை எடுத்துக் கடிக்கவுமில்லை. புனல்தரு காயை யுண்டனள்; அவ்வளவே! இச்செயலில் அவள்செய்த பிழைதானென்ன? எண்ணுக!

    இக்கொடுஞ்செயலைப் பரணர் எனும் பைந்தமிழ்ப் புலவர், குறுந்தொகைப் பாடலொன்றிற் பாங்குறப் பதிவுசெய்துள்ளார்.

    மண்ணிய சென்ற ஒண்ணுதல் அரிவை
    புனல்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு
    ஒன்பதிற் றொன்பது களிற்றொ டு அவள்நிறை
    பொன்செய் பாவை கொடுப்பவுங் கொள்ளான்
    பெண்கொலை புரிந்த நன்னன் போல… (குறுந்: 292 – பரணர்)

    குடிபழி தூற்றும் கோலனாய்த் திகழ்ந்த நன்னனின் செயல் ஓர் ஆட்சியாளன் எவ்வாறிருக்கக் கூடாது என்பதற்கு இன்றளவும் சாட்சியாய் விளங்குகின்றதன்றோ?

     

    Share
  • இன்னா இன்னுரை!

    -முனைவர். இராம. இராமமூர்த்தி

    நாம் காணவிருக்கும் இக்கட்டுரைக்கண் இரண்டு செய்திகள் இடம்பெறவுள்ளன. பாடலின் மையப்பொருளாக விளங்கும் அகப்பொருட் செய்தியொன்று; பிறிதொன்று அப்பாடற்கு உறுதுணையாக விளங்குவதோடு, பண்டை நாளைய வரலாறு பற்றிய செய்தி. முதலில் அகப்பொருட் செய்திக்குறிப்பினைக் காணலாம்.

    சங்க இலக்கியங்களில் நற்றாய்க்கு உசாத்துணையாக விளங்குபவள், அவள் தோழியாகிய செவிலி. மற்றொருவர், ’தானே அவளே’ வேறுபாடின்றி விளங்கும் தலைவியின் உயிர்த்தோழியாவாள். இவ்வருமருந்தன்ன தோழி, செவிலி(த்தாயின்) மகளாவாள். இவ்விருவரும் அகப்பொருள் இலக்கியங்களில் இன்றியமையாச் சிறப்பிடங்கள் பெறுதலை இலக்கியங்கற்போர் நன்கறிவர். ஈண்டுச் செவிலியின் அன்பு மீதூர்ந்தவுள்ளம் தலைவியின் பிரிவால் வருந்தும் நிலையினை நாம் காண்போம்.

    அதற்குமுன்னர், இலக்கியம் படைக்கும் சங்கப்புலவர்கள், தாம் கூறுஞ்செய்திக்கு வலிவும் பொலிவுஞ் சேர்க்கப் பண்டைய வரலாற்றுச் செய்திகளை உவமை முகத்தானும், பிறவாற்றானும் அப்பாக்களில் அழகுறப் புனைந்துபாடுவர். இங்ஙனம் அகத்திணைப் பாடல்களுள் வரலாற்று நிகழ்வுகளை எழிலுறப் புனைந்து பாடியோர் பலர். அவருள்ளும் பரணரும் மாமூலனாரும் சிறப்பிடம் பெறுவோராவர். இவ்விருவர் அகப்பாடல்களான், வரலாற்று நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றால் தமிழக வரலாறு உறுதியும் ஒளியும் பெற்றுச் சிறந்துள்ளமை காணலாம். இத்தகு அரிய பாடல்களைப் புனையும் மாமூலனாரின் கைவண்ணத்தை இக்கட்டுரையில் இடம்பெறும் அகநானூற்றுப் பாடலான் காண்போம்.

    நம் தலைவி, தேன்கலந்த பாற்சோற்றினைச் செவிலி அன்பொடு குழைத்து ஊட்டியபொழுது மறுத்துண்ட செல்வமகள். தலைவியின் சிறுதுயரினையும் பொறாது வருந்துமியல்பினள் அன்புச்செவிலி. அவ்வண்ணம் அன்பால் வளர்ந்த அத்தலைமகள், தலைவன் ஒருவனைக் கண்டு காதல் வயப்பட்டனள். இரவும் பகலும் காதல் வளர்ந்தது. தலைவியின் காதலைப் போற்றத்தவறினர் தாயும் தமரும். தலைவனும் வரைதலை (மணஞ்செய்து கொள்ளலை) நீட்டினன். என் செய்வாள் பேதை? தலைவனொடு அவன் ஊருக்கு உடன்போகத் துணிந்தாள். தோழியும் உடன்போக்கிற்குத் துணைநின்றாள். காதல் தலைவனொடு தலைவி கொடிய பாலை நிலங்கடந்து அவனூர் செல்லத் துணிந்து சென்றாள்.

    தலைவியின் உடன்போக்கினையறிந்த செவிலி ஆற்றொணாத் துயரில் மூழ்கினாள். தலைவி விளையாடி மகிழ்ந்த இடங்களை நோக்கி நோக்கிப் பெருமூச்செறிந்தாள். தலைவியில்லா இல்லம், செவிலிக்குப் பாலையாகவே தோன்றிற்று. என்ன செய்வதெனப் புரியாது தவித்தாள் செவிலி. தலைவியின் பிரிவுத்துயரினும் அவள் காதலனோடு உடன்போக்கு மேற்கொண்ட பாலைநிலமும், காய்கதிர்ச்செல்வனின் கொடுமையும், நிழலற்ற அரிய வழிகளும் செவிலிக்குச் சொல்லொணாத் துன்பத்தைத் தந்தன; தலைவியின் பிரிவுத்துயர் நிலத்தினும் பெரிதாகி வருத்தியது.

    இத்துணைத் துயர்களையும் தாங்கிகொண்ட செவிலிக்குத் தாங்கொணாத் துயரொன்று உளத்தைத் துளைத்தெடுத்தது. அத்துயர்தான் என்ன? நாமறிய அவாவுவது இயல்புதானே! தலைவியும் தானும் (செவிலியும்) உடலால் இருவரே; ஆயினும் உயிரான் ஒன்றானவர். தன்னுயிர் பிரிந்துபோதலைச் செவிலி எங்ஙனம் ஆற்றுவள்? தலைவி சென்றபோழ்து தன்னுயிரும் சென்றிருக்கவேண்டுமே? புலம்பியவளாய் இனியும் உயிர்வாழ்கின்றேனே எனக் கவன்றனள் செவிலி. இந்நிலையில் தமிழ்நாட்டில் நிகழ்ந்த போர்நிகழ்வொன்று அவள் நினைவிற்கு வருகின்றது.

    வெண்ணிப்பறந்தலை என்ற இடத்தில் சோழன் கரிகாலனொடு பெருஞ்சேரலாதன் கடும்போர் புரிந்தான். கரிகாலன் எறிந்த வாள் சேரலாதனின் மார்பிற் பாய்ந்தது; அந்தோ! அவ்வாள் அவன் முதுகுவழியே வெளியேறியது. சேரலாதன் என் செய்வான்? முதுகில் வாட்புண் ஏற்பட்டதால் புறப்புண்பட்டதாக நாணினான்; பட்ட பழியைத் துடைக்கவேண்டி, வாளொடு வடக்கிருந்து தன்னுயிர் துறந்தான் சேரவேந்தன். சேரலாதன் இறந்தான் என்ற இன்னாச் சொல்லையும், அதேநேரத்தில் புறப்புண்ணாக நாணி உயிர்நீத்த இனிய மொழியையும் ஒருங்கே கேள்வியுற்ற அம்மன்னனின் அவைக்களச் சான்றோர் பலர் அவனோடு உடனுயிர் துறக்க எண்ணித் தம்மின்னுயிர் நீத்தனர். இந்நிகழ்வே செவிலியின் துயரை மிகுவித்தது. தம் மன்னன் இறந்தானெனக் கேட்ட சான்றோர் தம்முயிர் துறந்தனர்.  ஆனால் என் தலைவி பிரிந்துசென்ற பின்னும், என்னுயிர் பிரியவில்லையே?  நான் என்செய்வேன் எனப் புலம்புகின்றாள் அவள். செவிலியின் அன்பினை அளந்துரைக்கவும் இயலுமோ? அத்துயர் தம்நெஞ்சினையும் வருத்துவதனைக் கற்போர் உணர்வர். அன்பெனப்படுவது உறவினரைப் பிரியாது போற்றும் பெருந்தகைமையாகும். இதைத்தான் ’அன்பெனப்படுவது தன்கிளை செறாஅமை’ என்கிறது கற்றறிந்தார் ஏத்தும் கலி.

    செவிலியின் துயர்பேசும் அப்பாடல்!

    காய்ந்துசெலற் கனலி கல்பகத் தெறுதலின்
    நீந்து குருகுருகும் என்றூழ் நீளிடை
    உளிமுக வெம்பரல் அடிவருத் துறாலின்
    விளிமுறை அறியா வேய்கரி கானம்
    வயக்களிற் றன்ன காளையொ டென்மகள்
    கழிந்ததற் கழிந்தன்றோ இலனே யொழிந்தியான்
    ஊதுலைக் குருகின் உள்ளுயிர்த் தசைஇ
    வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு
    கண்படை பெறேஎன் கனவ ஒண்படைக்
    கரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்
    பொருதுபுண் ணாணிய சேர லாதன்
    அழிகள மருங்கின் வாள்வடக் கிருந்தென
    இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்
    அரும்பெறல் உலகத் தவனொடு செலீஇயர்
    பெரும்பிறி தாகி யாங்குப் பிறிந்திவண்
    காதல் வேண்டியென் துறந்து
    போதல்செல் லாவென் உயிரொடு புலந்தே.
    (அகம்-55: மாமூலனார்) 

    இவ்வகப்பாடல் புலவர் மாமூலனாரின் மிகுபுலமைக்கு ஓர் உரைகல். வரலாற்று நிகழ்வினைச் சுட்டுமாற்றான் பிரிவுத்துயரான் வருந்தும் செவிலியின் ஆற்றொணாத் துயரையும் ஓர் அழகோவியமாய்ப் படைத்துள்ள பாங்கு எண்ணியெண்ணி யின்புறத்தக்கது. இப்பாடற்கண் திகழும் மற்றுமொரு சிறப்பு அவர் கையாண்ட “இன்னா இன்னுரை”, என்னுந்தொடர். இத்தொடரில் முரண்பொருட்சுவையைக் காணலாம். ‘இன்னா’ எனுஞ்சொல் சேரலாதன் இறந்தான் என்பதனைச் சுட்டுதலால் அஃது இன்னாவுரை என்க; ’புறப்புண் நாணி வடக்கிருந்து உயிர்துறந்தான்’ என்பது சான்றோர்க்கு இன்னுரையாயிற்று. “இன்னா இன்னுரை கேட்ட சான்றோர்” எனவரும் செய்யுளடி மாமூலனாரின் சென்னியிற் றிகழும் மணிமுடியன்றோ!     

     

     

    Share
  • மரஞ்சாக மருந்து கொள்வரோ?

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

    சங்க இலக்கியங்கள் தொடு மணற்கேணியாய்ப் பயிலுந்தொறும் நுண்பொருள் காட்டும் காலக் கண்ணாடிகளாகும். இத்தகைய நுண்பொருள் காண, ஆசிரியர் தொல்காப்பியர் சில நெறிகளைச் சுட்டியுள்ளார். அவை உள்ளுறை, இறைச்சி என்பனவாம். நன்கு இலக்கியப் பயிற்சியுடையோரே இந்நெறிக்கண் சென்று நுண்பொருள் காண இயலும். இத்தகைய கூர்த்த மதியினையே, வள்ளுவப் பெருந்தகை, “நுண்மாண் நுழைபுலம்” எனக் குறித்துள்ளார். நுனித்துக் கற்றாரேயன்றி ஏனையோரும் இலக்கிய இன்பம் துய்ப்பான் வேண்டிச் செய்யுள் யாத்த புலவரும் பலருளர். அவருள் ஒருவரே கணிபுன்குன்றனார் ஆவார்.

    இவரைச் சிலர் ‘கணியன் பூங்குன்றனார்’ எனவும் மொழிவர். ஆயினும், கணிபுன்குன்றனார் என்னும் பெயரால் இவர் பாடிய அகப்பாடல் ஒன்றே நமக்குக் கிட்டியுள்ளது. இப்புலவர்பெருமான் நற்றிணையில் பாலைத் திணையில் ஒரு செய்யுளைச் செய்துள்ளார். பாலைப் பாடல்கள் பெரிதும் பிரிவுத் துயரினையே சுட்டிவருவன. ‘போக்கெல்லாம் பாலை’ என்பர் சங்கச் சான்றோர். ’பிரிதலும் பிரிதல் நிமித்தமும்’ இத்திணைக்குரிய உரிப் பொருளாம். இனி, நாம் காண இருக்கின்ற செய்தியினைப் பார்ப்போம்.

    பொருள்தேடச் சென்றான் தலைவன் ஒருவன். இன்பமாக வாழ்வதற்குப் பொருள் இன்றியமையாததல்லவா? அறம் செய்வதற்கும் பொருள் மிகுதியும் தேவை. அதனாலன்றோ சான்றோர் ‘வினையே ஆடவர்க்கு உயிரே’ எனக் கூறுவாராயினர். இவையெல்லாம் நம் தலைவி அறியாதவளா? இல்லை இல்லை…அவள் இளையோள்; அண்மையில் மணவாழ்வு மேற்கொண்டவள். ஆதலால் பிரிவுத் துயரைப் பொறுக்கலாற்றாது பெரிதும் வருந்துகின்றாள். மாலைக் காலமும் வெண்மதியும் அவளது துயரை மிகுவிக்கின்றன.

    sankailakkiyamதலைவியின் துயரை அறிந்த அவள் இன்னுயிர்த் தோழி அவளுக்கு ஆறுதல் மொழிகள் பலவற்றைக் கூறி அவளை ஆற்றுவிக்க முயல்கின்றாள்.”நம் தலைவர் நின்மாட்டு அன்பு மிக்குடையவர்; உன்னை நீண்ட காலம் பிரிந்துறையார்; பொருள் தேடியதும் விரைந்து வந்துவிடுவார் தலைவர்” என்றாள் தோழி.     

    இதற்கு மறுமொழியாகத் தலைவி கூறுகின்றாள், “தோழி! நல்ல மருந்து மரமொன்றுள்ளது; அம்மரம் வேர் முதல் கனி வரையில் மருந்தாகப் பயன் தந்து நோய் நீக்கும் தன்மையுடையது. அதற்காக நோயைப் போக்க மருந்து வேண்டுபவர், அம்மரத்தையே வேரோடு வெட்டிச் சாய்ப்பரோ? மாட்டார்! மருந்திற்குப் பயன்படுமாறு சிறிதளவே பயன்படுத்திக் கொள்ளுவர். மேலும், நாடு காக்கும் வேந்தனும் மக்களைக் காக்க வரிவாங்குவது உலக இயல்பே. ஆனால் பொருள்சேர்ப்பதற்காக – வரி வாங்குவதற்காக – மக்களையே கொன்று அவர்தம் பொருளைப் பெற முயல்வரோ? அவ்வாறு பொருள்பெற முயன்றால் அம்மன்னனது ஆட்சி நிலைபெறுமா? அழிந்தல்லவா போகும்! இதனையறியாயோ தோழி நீ?” என்கிறாள் தலைமகள். மேலும் தவம் செய்வோர் உயர்நிலை அடையவே தவம் செய்வர். தம் இன்னுயிர் நீக்கவா தவம் செய்வர்? என்ற வினாவையும் எழுப்புகின்றாள்.

    இதுபோன்றே, இல்வாழ்க்கை நன்கு சிறப்புறப் பொருள் மிகுதியும் தேவையே. பொருள் பெற்றால்தான் இன்பமும் நிலைபெறும்; அறமும் செழிக்கும். “நடுவணது எய்த இருதலையும் எய்தும்” என்ற மூத்தோர் மொழி முற்றிலும் உண்மையே. ஆனால், தலைவர் பிரியாத வரையில் எனதுயிர் என்னுடலில் நின்றது உண்மையே. அவர் அன்பை நம்பியே வாழ்ந்தவள் நான். என் காதல் தலைவரோ என்னைப் பிரிந்து அரிய கானகங் கடந்து பொருள்தேடச் செல்வாராயின், என்னுயிரும் உடலில் தங்காது அவரோடு சென்றுவிடுமன்றோ? உயிரைப் பிரிந்து நான் எங்ஙனம் வாழ முடியும்? கூறாய் தோழி!” என்றாள் தலைவி. மேலும், ”அவர் தேடிக் கொண்டுவரும் பொருள், பிரிந்த நம் இன்னுயிரை மீட்டுத் தருமா?” எனவும் மற்றுமோர் வினாவை எழுப்புகின்றாள்.

    ”இவற்றையெல்லாம் நம் தலைவர் அறியாதவர் அல்லரே. அறிந்தும் என்னைப் பிரிந்து சென்றுள்ளாரே! இவள் இறக்கமாட்டாள் என்ற எண்ணந்தானே? இவ்வாறு பிரிந்து பொருள்தேடச் செல்வது தலைவனின் இயல்பேயென்பர் சான்றோர். இதுவே உலக இயற்கை போலும்” எனக் கூறித் துன்பத்திற் புலம்புகிறாள் தலைவி. எனினும், பொருள் தேடச் சென்ற தலைவன் பொருளொடு விரைந்து வருவான்; அவர்கள் வாழ்க்கையில் இன்பம் நிலைபெறும் என்பதே உலக வழக்கு.

    இப்பாடல் அகத்திணைப் பாடலாயினும், இவற்றில் இடம்பெற்றுள்ள மூன்று உவமைகளால் உலக மக்களுக்கு நல்லறிவு கொளுத்துகின்றது.

    1. மருந்திற்காக மரத்தையே கொல்லலாமா? என்ற வினாவின் வாயிலாக   மருந்துக்குத் தேவை வேராயினும், பட்டையாயினும் தமக்குத் தேவையான சிறிதளவே கொள்ளல் வேண்டும்; ஏனெனில் மருந்து சிறிதளவே உண்ணுதற்குரியது. அஃது உணவன்று; அதனாலேயே “மரஞ்சாம் மருந்துங் கொள்ளார் மாந்தர்”, என்றார் இப்புலவர். ஆனால், சில இடங்களில் மருந்துப்பயன் வேண்டி மரத்தையேயழிப்பதைக் காண்கிறோமே நாம்! இந்நிலை இனியேனும் மாறவேண்டும்.

    2. தவம் செய்வது நற்பயன் பெறவே; தம் உயிரைப் போக்குவதற்கன்று! எனவே, நற்பயன் நோக்கியே நாம் எச்செயலையும் மேற்கொள்ளவேண்டுமென்பதே இதன் கருத்தாம் என்க.

    3. நாடு வளம்கெடுமாறு மன்னர் வரிவாங்க மாட்டார். இஃது ஆட்சியாளர்க்கு என்றும் வழிகாட்டும் அறிவுரையாகும். இதே கருத்தைப் புறப்பாடல் 184-இல் புலவர் பிசிராந்தையார், பாண்டியன் அறிவுடைநம்பிக்கு அறிவுரை கூறுமுறையில் விரிவாகக் கூறியுள்ளார். இக்கருத்துக்கள் ஆட்சியாளர்களுக்கு என்றும் பொருந்துவன.

    இனி, பொருள்செறிந்த அந்நற்றிணைப் பாடலைக் காண்போம்!

    மரஞ்சா மருந்துங் கொள்ளார் மாந்தர்
    உரஞ்சாச்
    செய்யார் உயர்தவம் வளங்கெடப்
    பொன்னுங்
    கொள்ளார் மன்னர் நன்னுதல்
    நாந்தம்
    உண்மையின் உளமே அதனால்
    தாஞ்செய்
    பொருளளவு அறியார் தாங்கசிந்து
    என்றூழ்
    நிறுப்ப நீளிடை ஒழியச்
    சென்றோர்
    மன்றநங் காதலர் என்னும்
    இன்ன
    நிலைமைத் தென்ப
    என்னோரும்
    அறிபஇவ் வுலகத் தானே. (நற்: 226 – கணிபுன்குன்றனார்)

    (நன்றி: தினமணி – தமிழ்மணி)

    Share
  • தமிழரின் நனிநாகரிகம்

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

    முகப்புரை: உலகில் தோன்றிய பல்வேறு இனக்குழுக்களுள் முதன்முதலாக நாகரிகம் பெற்ற இனக் குழுக்கள் மிகச் சிலவே. அவ்வினக் குழுவினரை வரலாற்றாய்வாளர்கள் அவர்தம் மொழிப்பெயரான் சுட்டுவர். ஓரினத்தைக் குறிக்க மற்றெல்லாவற்றினும் மேம்பாடுடைய மொழியே முதன்மையானது. அத்தகைய மூத்த மொழிகளாக மட்டுமல்லாமல் செம்மொழிகளாகவும் விளங்கிய, சிறப்புடைய மொழிகளாகக் கிரேக்கம், இலத்தீன், எபிரேயம், பாரசீகம், சமற்கிருதம், தமிழ், சீனம் என்பவனவற்றை மொழியியற் பேரறிஞர் ச. அகத்தியலிங்கம் சுட்டுவார். இதனை எண்ணுங்கால் தமிழர்கள் உலகின் மூத்த குடிகள் மட்டுமல்லர்; நாகரிகத்தால் மேம்பட்டவருமாவர். இதனைக்,

    கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு
    முன்தோன்றி மூத்த குடி.
    (புறப். வெண்பா மாலை. கரந்: 14) எனக் கூறுகின்றது புறப்பொருள் வெண்பா மாலை.

    அவ்வடையாளக் கூறுகளை அகம், புறமென இருபாற்படுத்தி இக்கட்டுரைக்கண் காணலாம். இக்கட்டுரை சுருங்கியதாகலின் ஒரு சில சான்றுகளே காட்டப்படுகின்றன. உலக மொழிகள் எல்லாம் எழுத்திற்கும், சொல்லிற்கும் மட்டுமே இலக்கணங்களைக் கண்டன. எம் தமிழ்மொழியோ இவற்றொடு வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்த பெருமையுடையது. அதுவே பொருளிலக்கணமாம். எழுத்து, சொல், பொருள் என மூன்று பகுதிக்கும் முழுமையாக இலக்கணம் உரைத்த நூல் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியமாகும்.

    அகத்திணை காட்டும் வாழ்வியற் கூறுகள்: தொல்காப்பியர் வாழ்வை அகம், புறமென இருபாற்படுத்துவர். அகமாவது, கைக்கிளை முதலாப் பெருந்திணை ஈறா எழுவகைப்படும். கைக்கிளை என்பது முதிராக் காதலெனவும், ஒருபாற் காதலெனவும், சிறுமை பற்றிய உறவெனவும் விளக்குவர்; பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். ஏனைய முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்பன அன்பின் ஐந்திணைகளாகும். இத்திணைப் பாகுபாடு நிலத்தின் அடிப்படையில் அமைந்தது; ஒழுக்க இயல்பினையும் விளக்குவது.

    இத்திணைகள் முதல், கரு, உரி என மூவகைப்படுத்தப்படுகின்றன. நிலமும் காலமும் முதற்பொருள்; தெய்வம், உணவு, மக்கள் முதலியன கருப்பொருள்; ஒழுக்கமே உரிப் பொருளாம். இவ்வொழுக்கத்தினைப் புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என வகைப்படுத்துவர் இலக்கணிகள். ஒத்த தலைவனும், தலைவியும் ஒருங்கிணைந்து இன்புற வாழ்வது அகமாம். இவையெல்லாம் ஆரியர் முதலாய பிற தேயத்தார் அறியாதன.

    இக்காதல் வாழ்வைக் களவெனவும், கற்பெனவும் இருவகைக் கைகோளாகக் காட்டுவர். திருமணம் செய்துகொண்டு இணையராக வாழ்வதற்கு முன்னர்த் தலைவனும், தலைவியும் ஒருவரை ஒருவர் கண்டு, காதலித்து வாழ்வது களவொழுக்கமெனப்படும் (களவு = மறைவான ஒழுக்கம்). ஊரும், தமருமறிய மணம் செய்துகொண்டு வாழ்வது கற்பொழுக்கம். களவின்றியும் மணம் கூடுதல் உண்டு. மணவிழாக்கள் (வதுவைச் சடங்குகள்) பின்னர்த் தோன்றியன.

    “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
    ஐயர் யாத்தனர் கரண மென்ப”
    என்பது தொல்காப்பியம்.

    திருமணச் சடங்குகள்: வதுவைச் சடங்குகள் பற்றிய விரிவான செய்திகள் தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் இடம்பெறவில்லை. எனினும், அகம் 86-ஆம் பாடலில் நல்லாவூர் கிழார், தமிழர் திருமணமுறையைச் சுட்டியுள்ளார். அது வருமாறு:

    …புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
    வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
    கற்பினின் வழாஅ நற்பல உதவிப்
    பெற்றோற் பெட்கும் பிணையை யாகென
    நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி

    பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
    வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
    கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
    பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர….(அகம்: 86)

    இவ்வகப்பாடல் பண்டை நாளைத் தமிழர் திருமணமுறையை நன்கு விளக்கும்.

    இத்திருமணத்தில் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டுதலும், தீவலம் வருதலும், மங்கலநாண் அணிவித்தலுமாகிய வடவர் மணமுறை இடம்பெறவில்லை என்பது காண்க. இந்நிகழ்வுகள் முதன்முதலாகச் சிலம்பில்தான் முகங்காட்டுகின்றன. இனி, வேறுசில செய்திகளோடு அகப்பகுதியை நிறைவு செய்வோம்.

    சில வழக்கவொழுக்கங்கள்: இல்லுறை மகளிர் மாலைக் காலத்தில் தம் இல்லங்களில் நறுநெய்பெய்து அகல்விளக்கேற்றினர். இல்லுறை தெய்வங்களை நெல்லும் மலரும் தூவி வழிபட்டனர். போர் காரணமாகவோ, பிறவாற்றானோ தலைவனைப் பிரிந்த தலைவி பிரிவாற்றாமையான் வருந்தும்போது முதுபெண்டிர் அவளுக்கு இன்சொல்கூறி ஆற்றுவிப்பர். பண்டை நாளில் நெல், கழங்கு முதலியவற்றான் கட்டுவிச்சி குறி கூறுதலும், நற்சொல் (விரிச்சி) கேட்டலும் (இன்னே வருகுவர் தாயர்: முல்லைப் பாட்டு) இவைபோல்வன பிறவும் தமிழர் வாழ்வில் இடம்பெற்றுள்ளன.

    புறம் காட்டும் வாழ்வியற் கூறுகள்: காதலும் போருமே தமிழர்தம் அடையாளங்கள் என்பர். ஆயினும், புறமென்பது போரை மட்டும் குறிப்பதில்லை. அரசு, வாணிகம், கல்வி, கொடை, அறமென வேறுபல் செய்திகளையும் உள்ளடக்கியதே புறமெனப்படும். முதலில் தமிழர்தம் போர்ப் பண்பினைக் காண்போம்.

    puram.4போர் முறைகள்: போர் பற்றிய செய்திகளைத் தொல்காப்பியர் புறத்திணையியலில் ஏழு திணைகளாக வகுத்துக் கூறியுள்ளார். அவை, வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி என்பன. தமிழர்களின் போர் முறை அறநெறிப்பாற்பட்டது. போரால் தீங்குகள் நேராமல் காக்கப்படவேண்டியவர்களது பட்டியலைப் புறம் விரிவாகக் கூறுகின்றது.

    ”ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
    தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென…”
    (புறம்: 9)

    அத்தொடு போர் முறையில் வடவாரியர்க்கும் எம் தமிழர்க்கும் மிகப் பெரிய வேறுபாடுள்ளது. வடவர்கள் போர் தொடங்கும் முன்னும், போரில் வெற்றிபெற வேண்டியும் பல்வேறு வேள்விகளைச் செய்து பலிதருவர். மேலும், இந்திரன், அக்னி, வருணன், பிரமன், விஷ்ணு போன்ற தேவர்களிடம் பகையை வெல்லப் பிரம்மாஸ்திரம், நாகாஸ்திரம் போன்ற போர்ப்படைகளை வேண்டிப் பெறுவர். (காண்க: இராமாயணம், மாபாரதம் போன்ற நூல்கள்). இம்முறை தமிழ் மறவர் அறியா ஒன்றாகும். நம் புறநூல்களில் தமிழர் போர் முறையை நன்கறியலாம். தமிழர்கள் தம் தோள்வலியையும், வாள்வலியையும் நம்பியே போர்மேற்சென்றனர்; வெற்றியும் பெற்றனர்.

    நடுகல் வழிபாடு: போரில் இறந்துபட்ட வீரர்கள் நினைவாகக் கல்நட்டு, Nadukalஅக்கல்லில் இறந்தாரின் பீடும் பெயரும் பொறிப்பர். அதற்குக் கள் முதலியவற்றை வைத்துப் படைத்து வழிபாடு செய்வர். இதனடிப்படையிலேயே சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கல்லெடுத்து நீர்ப்படுத்தி வழிபாடாற்றப் பத்தினிக்கோட்டம் அமைத்தான். இதனையே ஆசிரியர் தொல்காப்பியரும், “காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல், சீர்த்த மரபில் பெரும்படை வாழ்த்தலென்று” (தொல்:பொருள்: புறத்: 5) விளங்கக் கூறுவார். இதுவே இற்றை நாளில் ’கல் நிறுத்துதல்’ எனும் ஈமச்சடங்காக மாறியுள்ளது.

    கல்விச் சிந்தனை: தமிழர், கற்றோரையும் புலவர் பெருமக்களையும் பெரிதும் போற்றியுள்ளனர் என்பதனைப் புறநானூறு, பதிற்றுப்பத்து போன்ற நூல்களான் அறியலாம். பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்” எனத் தொடங்கும் புறப்பாடலில் (எண்:183) கல்வியின் சிறப்பைப் பரக்கக் கூறியுள்ளான். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் வஞ்சினங்கூறும் காலை, “புலவர் பாடாது வரைகவென் னிலவரை” (புறம்: 72) எனக் கூறியுள்ளதை எண்ணுக. புலவரைப் போற்றும் பண்பு நலனை இப்பாடல் நன்கு புலப்படுத்தும். மேலும், “சான்றோர் சான்றோர் பால ராப” என்ற அடியும், “செறுத்த செய்யுள் செய்செந் நாவின், வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்” என்ற அடிகளும் அந்நாளைய தமிழ் மாந்தர் கல்வியின்மாட்டு எத்துணை மதிப்புக் கொண்டிருந்தனர் என்பதைத் தெள்ளிதிற் புலனாக்கும்.

    கொடைப் பண்பு: பொதுவாகத் தமிழரும், குறிப்பாகத் தமிழ் மன்னர்களும் கொடைநலம் வாய்க்கப் பெற்றவர் என்பதனைச் சங்க நூல்கள் அனைத்தும் கூறுகின்றன. தமிழர்கள், கொடையை வாணிக நோக்கிலோ, பயன்கருதியோ செய்தாரிலர்.

    ”இம்மைச் செய்தன மறுமைக் காமெனும்
    அறவிலை வாணிகன் ஆஅய் அலன்…”   
    (புறம்: 134)

    ”எத்துணை யாயினும் ஈதல் நன்றென             avvai
    மறுமை நோக்கின்றோ அன்றே
    பிறர், வறுமை நோக்கின் றவன்கை வண்மையே.”
    (புறம்: 141)

    ”செல்வத்துப் பயனே ஈதல்” (புறம்: 186)

    ”ஈயென விரத்த லிழிந்தன் றதனெதிர்
    ஈயே னென்ற லதனினு மிழிந்தன்று
    கொள்ளெனக் கொடுத்த லுயர்ந்தன் றதனெதிர்
    கொள்ளே னென்ற லதனினு முயர்ந்தன்று” (புறம்: 204)

    மேலே காட்டிய புறப்பாட்டடிகள் தமிழர்தம் கொடைச் சிறப்பினை நன்கு புலப்படுத்தும்.

    பிற செய்திகள்: தமிழர்கள் புகழெனின் உயிரும் கொடுப்பர்; பழியெனின் உலகே பரிசிலாகக் கிட்டினும் அச்செயலைச் செய்யார். வலியரென வழிமொழியார்; மெலியரென மீக்கூறா இயல்பினர். மக்கட்பேற்றினைப் பெரிதும் மதிப்பவர். மன்னரேயாயினும் அவர் செய்யும் தவற்றினைக் கண்டிக்கும் திறமுடையார் தமிழர். நட்புச் செய்தாரைப் போற்றும் திறனர் நம்மனோர். இன்னோரன்ன இனியநற் பண்புகளான் தமிழர் வாழ்வு பொலிவு பெற்றது.

    முடிப்புரை: ஈண்டுக் காட்டப்பட்டவை தமிழர்தம் நற்பண்புகளில் மிகச் சிலவே. கூறாது விடப்பட்டனவே மிகுதியானவை. தமிழர்தம் நனிநாகரிகத்தைக் கண்டறிய நம் பண்டைத் தமிழ் நூல்கள் பெரிதும் துணை நிற்பன. அவற்றைக் கற்போம்; அவனியில் நீடுபுகழ் சேர்ப்போம்.

    வெல்க தமிழர் நாகரிகம்!

     

    Share
  • மனோன்மணீயம் காட்டும் சிவகாமி சரிதை – பகுதி 2

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

    sundaranar

    பேரா. பெ. சுந்தரம்பிள்ளை

    பாண்டிய மன்னன் சீவகவழுதிக்கும் சேரவேந்தன் புருடோத்தமனுக்கும் போர் மூளும் சமயம் ஊரெங்கும் ஒரே பேராரவாரம். இதனைக் கேட்ட மனோன்மணி இதுபற்றித் தன் தோழி வாணியிடம், ”ஊரில் என்ன ஆரவாரம்!” எனக் கேட்கின்றாள். அவள் கவனத்தைத் திருப்ப எண்ணிய வாணி, பிற செய்திகளைப் பேசுகின்றாள். அப்போது மனோன்மணி வாணியை நோக்கி, “நின் இசைவிளங்கு குரலால் பாடுக!” எனச் சொல்லுகிறாள். அப்பாடலே இந்நூலில் இடம்பெற்றுள்ள ’சிவகாமி சரிதை’யாகும். இக்கதை, மனோன்மணீய நாடகத்திற்கு நேரடித் தொடர்பில்லாமல் இடம்பெற்றுள்ள கிளைக் கதையாகும்.

    Oliver Goldsmith

    கவிஞர் ஆலிவர் கோல்ட்ஸ்மித்

    இச்சிவகாமி சரிதை மனோமணீய நூலின் முதற்பதிப்பில் இடம்பெறவில்லை. இரண்டாம் பதிப்பிலேயே இடம்பெற்றதென்பர். இக்கதையும் ஆங்கிலக் கதையின் தழுவலே என்று கூறுவாருமுளர். இதன் மூலக்கதை ஆங்கிலக் கவிஞர் ’Oliver Goldsmith’ எழுதிய ‘The Vicar of Wakefield’ என்னும் நூலில் கிளைக் கதையாக இடம்பெற்றுள்ள “Edwin and Angelina, a ballad” என்பதைத் தழுவி அமைந்துள்ளது. Edwin சிதம்பரமாகவும், Angelina சிவகாமியாகவும் சுந்தரம்பிள்ளையால் படைக்கப்பெற்றுள்ளனர். சிவகாமி சரிதை மனோன்மணீய நாடகத்தின் மூன்றாம் அங்கம், மூன்றாம் களத்தில் வாணியின் கூற்றாக அமைந்துள்ளது.

    சிவகாமி சரிதையையும், Edwin and Angelina, a ballad கதையையும் ஒருங்குவைத்துக் கற்பார், சிவகாமி சரிதை இந்த ஆங்கிலக் கதையின் தழுவலே என்பதை நன்கறிவர். தொடக்கமுதல் இறுதிவரை இத்தழுவலின் சாயல் நன்கு புலப்படுகின்றது.

    எனினும், ஈண்டும் சுந்தரம்பிள்ளை தமிழ் மரபையும், தமிழ் நாகரிகத்தையும் மிக நன்றாகப் போற்றியுள்ளார். கதை நிகழுமிடம் பூம்புகார். கதைத் தலைவியான சிவகாமியின் தாய்வழிப் பாட்டிக்கு மக்கள் மூவர்; இருவர் பெண்டிர்; ஒருவர் ஆண். பெண்களுள் ஒருத்தியின் மகள் சிவகாமி; மற்றொருத்தி மகப்பேறில்லாதவள். ஆனால் பெரும் செல்வமுடையவள். அச்செல்வம் முழுவதையும் அவள் சிவகாமிக்கே தந்தாள். ஆண் மகனுக்குச் சிதம்பரம் என்ற ஒரே மகன். சிவகாமியும், சிதம்பரனும் உடன்பிரியா நிழல்போல் ஒன்றாக வளர்ந்தனர். ஒருவரை ஒருவர் காதலித்தனர்.

    “ஆனாலும், யான் பெற்ற பொருட்செல்வத்தால் தலை மயங்கினேன்; செருக்குற்றேன். தலைவர் என்ற அவரது நிலையை மறந்தேன். இதனால் அவர் என்னைவிட்டுச் சென்றார். பொருள்கருதி மணம் பேச வந்தனர் பலர். பின்னரே எனக்கு உண்மை புலனாயிற்று. எனவே அவரைத் தேடிப் பலவிடங்களிலும் அலைந்தேன்; அவரைக் காணவில்லை. இறுதியாக இக்காட்டிற்கு வந்தேன்” என்று சிவகாமி ஓர் முனிவரிடம் கூறுவதாக இக்கதை நடைபோடுகின்றது.

    சிவகாமி ஆண் வேடத்தில் முனிவரிடம் தன் துயரக் கதையினைக் கூறுகின்றாள். அவள் வேடம் கலைகின்றது. ஆற்றொணாது கண்ணீர் பெருக்குகின்றாள் சிவகாமி. மனம் வெறுத்து வெளியேறிய சிதம்பரனே ஆண்டு முனிவர் வேடத்தில் உள்ளான். அவனிடம் தன் கதையைக் கூறிவந்த சிவகாமி, முனிவர் குளிர்காய மூட்டிய தீயில் வீழ முற்படவும் ”சிவகாமி! யானுனது சிதம்பரனே!” எனச் செப்பினான் முனிவர் வேடத்தில் இருந்த சிதம்பரன். இருவரும் ஓருருவமாய் இணைந்தனர். இதுவே சிவகாமி சரிதை. ‘உண்மைக் காதல் வெல்லும்!” என்ற கோட்பாட்டை, வாணி இச்சரிதை வாயிலாக மனோன்மணிக்கு உணர்த்துகின்றாள். எனவே, மனோன்மணி சேரவேந்தன்பால் கொண்ட காதலும் வெல்லும் என்பதை வாசகர்கட்குக் குறிப்பால் உணர்த்துகின்றார் நூலாசிரியர்.

    மேலும் நாயகியாகிய உயிர் – பசு – சீவான்மா, மாயையின் வயப்பட்டு அல்லலுற்று இறுதியில் தலைவனை – பதியை – பரமான்மாவை அடைவதை உணர்த்துவது சிவகாமி சரிதை. இவ்வண்ணம் நுண்பொருளாகிய தத்துவக் கருத்தையும் தன்னுள் கொண்டிலங்குவது இக்கதை.

    சிவகாமியைச் சிதம்பரன் தீயில் விழாது தழுவிக் கொண்டாற்போல, எட்வினும் ஏஞ்சலினாவும் இணைந்தனர். அதனை,

    “Forbid it, Heaven!” the Hermit cried,
    And clasp’d her to his breast:
    The wond’ring fair one turn’d to chide—
    ’Twas Edwin’s self that prest.

    என்ற செய்யுள் வரிகள் நமக்குணர்த்தும். மேலும் அடுத்த பாடல்,

    “Turn, Angelina, ever dear!
    My charmer, turn to see
    Thy own, thy long lost Edwin here,
    Restor’d to love and thee.

    என்பதாகும்.

    ’Thy own, thy long lost Edwin here’ என்ற அடியின் தழுவலே ’சிவகாமி யானுனது சிதம்பரனே!’ என்னும் செய்யுளடி. உண்மைக் காதலும், காதலரும் உலகெங்கிலும் ஒன்றுபோலவே உள்ளனர் என்பதனை ஆலிவர் கோல்ட்ஸ்மித்தும், நம் பேராசிரியர் சுந்தரம்பிள்ளையும் ஒன்றுபோலச் சுட்டியுள்ளனர். இதனை எண்ணுங்கால் ’சான்றோர் சான்றோர் பாலராப’ என்ற புறநானுற்றுப் புலவனின் கருத்தும், ‘Great minds think alike’ என்ற ஆங்கிலப் பழமொழியும் நம்முன் தோன்றுகின்றன.

    இங்ஙனம் மனோன்மணீய நூலும் அதன்கண் இடம்பெற்றுள்ள சிவகாமி சரிதையும் கற்பார்க்குக் கழிபேருவகை ஊட்டுவதுடன் அமையாது, அவர்தம் அலைபாயும் மனங்களையும் பக்குவப்படுத்தும் பான்மையது என்றால் அவ்வுரை வெறும் புகழுரையன்று! முற்றிலும் உண்மையேயாம்.

    இறுதியாக ஓருரை. மணிவாசகரின் திருக்கோவையாரைப் பற்றி அறிஞர்கள் கூறும் கருத்துரை நம் மனோமணீயக் காப்பியத்திற்கும் முற்றிலும் பொருந்தும். திருக்கோவையார், “இலக்கிய நயங் காண்பார்க்கு ஓரினிய இலக்கிய நூல்; சமயக் கருத்துக்களைத் தேடுவார்க்கு அஃதொரு சமயநூல்; தத்துவ ஆய்வாளருக்குத் தத்துவ நூல்; இறைநிலை காண விழைவார்க்கு அஃதொரு வழிகாட்டி; பேரின்ப வீட்டிற்கு அஃதொரு திறவுகோல் என்பர் அறிஞர்பெருமக்கள். இப்பாராட்டுரைகள் அனைத்தும் மனோன்மணீயத்திற்கும் நன்கு பொருந்துவதைக் காணலாம்.

    எனவே, தமிழ்நலங்காண விரும்புவாரும், தமிழ் மாணாக்கர்களும் இவ்வினிய நாடக இலக்கியத்தைக் கற்று இன்புறுக!

    (முற்றும்)

     

    Share
  • மனோன்மணீயம் காட்டும் சிவகாமி சரிதை – பகுதி 1

    -முனைவர் இராம. இராமமூர்த்தி

     

    sundaranarபேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை
    (1855- 1897)

    நம் செந்தமிழ் மொழியை முத்தமிழ் என முன்னோர் வழங்குவர். இயல், இசை, ’கூத்து’ என்னும் நாடகம் ஆகிய மூன்று பகுதிகளாகத் தமிழ் தொன்றுதொட்டு இலங்கி வருகின்றது. தொல்காப்பியர், நாடகத் தமிழுக்குரிய மெய்ப்பாடுகளைப் பொருளதிகார மெய்ப்பாட்டியலில் மிக விரிவாக விளக்கியுள்ளார். நாடகம் எழுதுவதற்கான இலக்கண நூல்களும் அந்நாளில் இருந்தனவென்பதைச் சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்குநல்லார் எடுத்துக்காட்டியுள்ளார்.

    அகத்தியம், குணநூல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத் தமிழ் போன்ற தமிழ் நாடக இலக்கண நூல்கள் பண்டை நாளில் வழக்கிலிருந்தன. அல்லிக்கூத்து, கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம் போன்ற கூத்துக்களைப் பண்டைத் தமிழர் போற்றியுள்ளனர். எனினும் தமிழில் நாடக இலக்கிய நூல்கள் கிடைக்காமல் போனது நம் தவக்குறைவே. மேலும், கலைகளைப் பற்றிக் குறிப்பாக நாடகக் கலை பற்றி, நாகரிகக் கலப்பால் தமிழர்களிடையே மாறுபட்ட எண்ணமும் நிலவுவதாயிற்று.

    தமிழ்நாட்டில் பல நாடகங்கள் நடிப்பதற்காகத் தோன்றினாலும், இலக்கிய நாடகங்களாக அவை மிளிரவில்லை. இந்நிலையில் ஆங்கிலேயர் ஆட்சி தமிழ்நாட்டில் இடம்பெற்றபின் ஆங்கில மொழியும், இலக்கியமும் செல்வாக்குப் பெற்றன. சேக்ஸ்பியரின் நாடகங்கள் ஆங்கிலம் கற்ற தமிழர்களிடம் பாராட்டுப் பெற்றன.

    இச்சமயத்தில், 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திருநெல்வேலிச் சீமையைச் சார்ந்த பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளையவர்கள், ‘மனோன்மணீயம்’ என்றவோர் அரிய நாடக நூலைத் தமிழ்மக்கள் படித்தின்புறவும், நடித்து மகிழவும் படைத்துத் தந்தார். இந்நாடக நூலே இன்றளவும் தமிழ் நாடக இலக்கியத் துறையில் தன்னேரில்லா நாடக இலக்கியமாக விளங்கிவருகின்றது என்றால் மிகையன்று.

    இந்நூல், கடந்த ஒரு நூற்றாண்டுக் காலமாகச் சென்னைப் பல்கலைக்கழக இடைநிலை (Intermediate), இளங்கலைப் பட்ட வகுப்புக்களில் நாடக இலக்கியமாகத் திகழ்ந்த பெருமை பெற்றது. ஆங்கில நாடக இலக்கியத்தைப் போலவே ஐந்து அங்கங்களையும் (Acts) பல உட்களங்களையும் (Scenes) கொண்டது இந்நூல். நாடக நூலின் ஐந்து அங்கங்களை, நாடக இலக்கணிகள், முகம், பிரதிமுகம், கருப்பம், விளைவு, துய்த்தல் என்று குறிப்பிடுவர். மனோன்மணீயமும் இவ்வைந்து உறுப்புக்களைப் பெற்றுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

    பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, லிட்டன் பிரபு ஆங்கிலத்தில் எழுதிய ‘The Secret Way’ – இரகசியவழி என்ற நூலைத் தழுவியே மனோன்மணீயத்தைப் படைத்துள்ளார். எனினும், இந்நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலன்று; மூலக்கதை ஆங்கில மொழியில் அமைந்ததாயினும் மனோன்மணீயம் தமிழ்நாட்டுச் சூழலில் தமிழ் மண்ணில் தோன்றிய முதல் நூலே போன்று விளங்குகின்றதென்பதனை இந்நூலைக் கற்பார் நன்குணர்வர்.

    நாடகம் நடைபெறும் இடங்கள், தண்டமிழ் மதுரையும், தீந்தமிழ்த் திருநெல்வேலியும் சேரவேந்தனின் திருவனந்தபுரமும் ஆகும். இவையெல்லாம் தமிழ் மணக்கும் நன்னிலங்கள் அன்றோ! அம்மட்டோ! நாடகத்தில் இடம்பெறும் நாடக மாந்தர்களை நினைப்பின் அவர்கள் எல்லாரும் தமிழ்ப் பண்பாட்டினை வெளிப்படுத்துகின்ற நன்மக்கள்; நனிநாகரிகர். சீவகவழுதி பாண்டிய மன்னன்; சுந்தர முனிவர் குலகுரு; குடிலன் கேடுசூழ் அமைச்சன்; மனோன்மணி மன்னனின் ஒரே மகள்; நற்பண்புகளின் உறைவிடம். வாணி மனோன்மணியின் தோழி; நடராசனின் காதலி; அறிவில் சிறந்த நங்கை. நடராசன் சுந்தர முனிவரின் சீடன். புருடோத்தமன் சேரவேந்தன்; மனோன்மணியின் காதலன்; நற்பண்பினன். நாராயணன் மன்னனின் நலம்நாடும் நற்குடிமகன். பலதேவன் குடிலனின் மகன். சகடன் வாணியின் தந்தை; பொருளாசை மிக்கோன்.

    நாடக மாந்தர் மட்டுமல்லர், நாடகக் கதையும் தமிழ் நாகரிகத்தின் இரு கண்களாக விளங்கும் அகமும் புறமும் – காதலும் வீரமும் செறிந்து விளங்குவது. இதனைப் பின்புலமாகக்கொண்டு நடைபோடுவதே இம்மனோன்மணீய நாடகம். இந்நாடகத் தொடக்கம்கூட இந்நாட்டு நாகரிகத்தையும், பண்பாட்டினையும் பறைசாற்றுவதாகும்; அதனைக் காண்போம்.

    பாண்டிய மன்னன் சீவகவழுதியின் அரசவைக்கு மன்னனின் குலகுரு சுந்தர முனிவர் எழுந்தருளுகின்றார். மன்னன், தம் குருவை வணங்கி இனிய நன்மொழி கூறி வரவேற்கின்றார். அவ்வரவேற்புரை மன்னனின் மாண்பினைச் சுட்டுவது.

    “வருக! வருக! குருகிரு பாநிதே!
    திருவடி தீண்டப் பெற்றவிச் சிறுகுடில்
    அருமறைச் சிகரமோ ஆலநன் னீழலோ
    குருகுல விசயன் கொடித்தேர்ப் பீடமோ
    யாதென ஓதுவன்?”

    இம்மொழிகள் நம் பண்பாட்டினை உலகிற்கெடுத்துரைப்பதல்லவா? கருணை முனிவ! அருள் வள்ளலே! வருக! தங்களின் பொன்னார் திருவடிகள் தீண்டப்பெற்ற இச்சிறுகுடில் வேதங்களின் முடிவுப் பொருளோ? தென்முகக் கடவுள் வீற்றிருக்கும் ஆலமரத்தின் நல்ல நிழலோ? கண்ணபிரான் கீதை அருளிய அருச்சுனனின் தேர்ப் பீடமோ? அப்புகழுரைகள் தன் குருவிடம் மன்னன் காட்டிய நல்லெண்ணத்தின் வெளிப்பாடேயன்றோ?

    மேலும், இந்நாடகக் காப்பியத்தில் தமிழ்நாட்டின் இயற்கைஎழில் கவினுற எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. நடராசனின் தனிமொழியில் இடம்பெற்றுள்ள புல், வாய்க்கால், நாங்கூழ்ப்புழு பற்றிய செய்திகள் இயற்கை வருணனைகளோடு குறிப்புப் பொருளைச் சுட்டுவனவாகவும் அமைந்துள்ளன. இதனினும் மேலாக நாஞ்சில்நாடு எனப்பெறும் நன்செய்நாட்டு வளங்கூறும் பகுதி – இயற்கையெழிலைக் கற்பார் உள்ளம் களிகூர எடுத்துக்கூறும் பகுதியாகும். மனோன்மணீயம் கூறும் நன்செய்நாட்டு வளம் பத்துப்பாட்டின் பல நூற்பகுதிகளின் பிழிவெனக் கூறலாம். மருதமும் நெய்தலும் மயங்கிய திணைமயக்கப் பகுதிச் செய்திகள் தமிழ் மாணாக்கர் அனைவரும் படித்தின்புறவேண்டிய பகுதியாகும்.

    மேலும் இந்நூல் சுட்டும் நுண்பொருளாக அறிஞர்கள் சுட்டுவதையும் காணலாம். சீவகன் ஜீவாத்மாவாகவும், அவனை ஆட்டுவிக்கும் குடிலன் மாயா சக்தியாகவும், மனோன்மணி சுத்த தத்துவமாகவும், அவள் தோழி வாணி புத்தி தத்துவமாகவும், நடராசன் உபாசனா மூர்த்தியாகவும், புருடோத்தம வேந்தனை அனுக்கிரக சக்தியாகவும், சுந்தர முனிவரைக் கருணாமூர்த்தியாகிய ஞானாசிரியராகவும், மதுரையை மூலத்தானமாகவும் சுட்டுவர். இதனால் இந்நூல் தத்துவக் கருத்துக்களை உட்பொருளாகக் கொண்டு விளங்கும் நன்னூல் என்பதும் அறியத்தக்கதாகும். மற்றும் கருணாகரரும், நிட்டாபரரும் சிலந்திப் பூச்சியை எடுத்துக்காட்டித் தம் சித்தாந்த, வேதாந்தக் கருத்துக்களை விளக்கும் பகுதி இந்நூலின் மேலாந்தன்மையை அங்கையின் நெல்லியாய்த் தெளிவுபடுத்தும்.

     இனி, இந்நூலில் இடம்பெற்றுள்ள சுவைமிக்க ’சிவகாமி சரிதை’யை அடுத்த பகுதியில் காண்போம்.

    (வளரும்)

     

    Share