Tag: முனைவர் துரை. குணசேகரன்

  • அருள்என்னும் அன்புஈன் குழவி

    முனைவர் துரை.குணசேகரன்,

     

    மனத்தான், பகுத்தறியும் குணத்தான் மாண்புக்குரிய இனம் மனித இனம். பண்பட்ட மனித மனம் தனக்கென வாழாது. அதற்குக்காரணம் அம்மனத்தில் குடி கொண்டிருக்கும் கனிந்த அன்பால் உருவான அருட்பண்பு. மாந்தரிடத்தில் இப்பண்பு குடிகொண்டிருப்பதால்தான் இன்னும் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தொல்காப்பியர் காலம் தொடங்கி அண்மையில் சென்னை, திருவள்ளுர்,கடலூர் போன்ற நகரங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்ட காலம் வரை மேற்கூறிய அருள் பண்பின் மேன்மைத்திறம் குறித்தது இக்கட்டுரை.

    அன்பின் வழிப்பட்ட அருள்: வரையறை

    அருளுக்குப் பொருள் விளக்கம் கூறவந்த பிங்கலந்தை நிகண்டு,

    தகவும் கருணையும் இரக்கமும் தயவும்

    கிருபையும் அபயமும் கிளர் அருள் ஆகும்

     

    என்று குறிப்பிடுகிறது. அருள் குறித்து கருத்துரைக்கும் மொ.அ. துரை. அரங்கசாமி,

    பிற உயிர்களின் துன்பம் கண்டு துடிப்பவருடைய உள்ளத்தில் முதல் முதல் நெகிழ்ச்சி ஏற்படும் கசிவும் காதலும் அன்பும் ஆர்வமும் அருளும் உண்டாகும். இவை ஒரு பொருள் குறித்த பல சொற்கள் போலத் தோன்றினாலும் தம்முள் பெரிதும் வேறுபாடு கொண்டவை. அருள் என்பது இவ்வரிசைப்படி இறுதியாகும் என்று குறிப்பிடுகின்றார்.(அன்புநெறியே தமிழ்நெறி.பக்.73-77)

    அன்பு தொடர்பான பல சொற்களை எடுத்துரைக்கும் ஜெக வீரபாண்டியனார், “தன்னைப்பெற்ற தாய் தந்தையர் மேல் ஒருவருக்குள்ள பிரியம் மருவியபொழுது அது பிரிவு; மனைவியரிடம் நேரின் காதல்; மக்கள்பால் உறின்பாசம்; சுற்றத்தினர் மேல் எழுந்தால் அது வாஞ்சை; தாழ்ந்த பிராணிகள் மேல் சாரின் தயை; ஒத்தார்மீது உறின் நேசம்; உயர்ந்தவர்மேல் வரின் ஆர்வம்; பொருள்கள்பால் புகின் பற்று; தெய்வத்தின் மீது வைப்பின் பக்தி; முதிர்ச்சியில் பிறப்பது அருள்” என்று விளக்குகின்றார்.(நீதி நூல்கள் தொகுதி.2.பக்.269)

    அன்பின் திறத்தினை அறத்துப்பாலில் அன்புடைமையில் பத்துக்குறட்பாக்களில் விளக்கிய வள்ளுவர்(71-80) பொருள் செயல் வகை குறித்து பொருட்பாலில்,

    அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்

    செல்வச் செவிலியா லுண்டு”(757)

     

    என்று அன்பின் குழந்தையாக அருளைக்குறிப்பிடுகின்றார். இதற்கு உரை எழுதப்புகுந்த  பரிமேலழகர், “தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார் உளதாவ தாகலின் அதனை’அன்பீன் குழவி என்றும், அது வறியார் மேல் செல்வது அவ்வறுமை களைய வல்லார்க்கு ஆகலின் பொருளை அதற்கு ‘செவிலி ’என்றும், அஃது உலகிற் செவிலியர் போலாதுதானே எல்லாப்பொருளும் உதவி வளர்த்தலின் ‘செல்வச்செவிலி’ என்றும் கூறினார்.” என்று தெளிவுரை நல்குகின்றார். இதன்வழி அன்பின் கனிந்த உள்ளம் அருள் என்றும், இது முழுமையுற எண்ணத்துடன் செயல்பாட்டிற்குத் தேவையான பொருள் தேவை என்றும் தொடர்பில்லார், தொடர்பில்லாதவை மாட்டுப் பிறப்பது அருள் என்பதும் பரிமேலழகர் கருத்து. இது அன்பினை, தன்னலம் சார்ந்ததாகவும் அருளினை, பொது நலம் சார்நததாகவும் வெளிப்படுத்தும் என்பதும் அறியத்தக்கவையாகும். ஆனால் வள்ளுவரோ தம்முடைய அன்புடைமை அதிகாரத்தில்,

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்

    என்பும் உரியர் பிறர்க்கு”(72)

     

    என்னும் குறள் வழி அன்பும் பொதுநலம் சார்ந்ததாகவே காட்டுகின்றார் என்பது தெளிவு.

    மேற்காணும் விளக்கங்களிலிருந்து பரிவு, காதல், பாசம், வாஞ்சை, தயை, நேசம், ஆர்வம், பற்று, பக்தி, நட்பு, அருள் இவையனைத்தும் அன்பின் வெளிப்பாடு என்பதும் இதன் முதிர்ந்த கனிந்த நிலையே அருள் என்றும் தெளியலாம். ஆன்மிகவாதிகளின் அருளால் உள்ளம் தெளிவாகும். பிறரின் அருளால் புறமும் நலமாகும். முன்னதற்குப்பொருள் தேவையிலை; பின்னதற்குப் பொருள் அவசியம் என்று வரையறுத்துக்கொள்ளலாம்.

     

    பிறவிக்குணமா?

    தமிழ் மூதாட்டி ஒளவை பழக்கம், பாரம்பரியக்குணம் இவற்றிற்குரியவையாகப் பின்வருவனவற்றைக் குறிப்பன ஆய்வுக்குரியது.

    சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

    வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்நித்தம்

    நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

    கொடையும் பிறவிக் குணம்

     

    ஒளவையின் கருத்தை ஏற்றுக்கொண்டாலும் பின்னவை மூன்றையும் பழக்கத்தால் கொண்டுவரமுடியும். பிறவிக்குணம் நிலையானது; பழக்கம் நிலையில்லாதது. தொடர் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் மட்டுமே பழக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பது தெளியலாம்.

    நேயச்சிந்தனைகள்:

    அன்பின் பிரிவுகளில் ஒன்றான நேயம் தொடர்பில்லாதோர் மாட்டு நிகழ்வது. இதனை மனிதநேயம், ஆன்மநேயம் என்று வகைப்படுத்தலாம். உறவினர் அல்லாத பிற மாந்தர்களிடம் செலுத்துவது மனிதநேயம் என்றும், பிற உயிர்களிடமும் உயிரல்லாத பொருள்களிடமும் கொண்டுள்ள  நேயத்தினை ஆன்மநேயம் என்றும் தெளிவுபடுத்தலாம். எடுத்துக்காட்ட வேண்டுமெனில் பாரதியின்,

    வாழ்ந்தால் முப்பது கோடியும் வாழ்வோம்

    வீழின் முப்பதுகோடி முழுமையும் வீழ்வோம்

     

    என்றது மனிதநேயம் என்றால்,

     

    காக்கை குருவி எங்கள் சாதிநீள்

    கடலும் மலையும் எங்கள் கூட்டம்

     

    என்றது, ஆன்மநேயத்தின்பாற்படும் எனலாம்.

    இலக்கியங்களில் மனிதநேயம்:

    தமிழை பக்தியின் மொழி என்பார் தனிநாயக அடிகள். ஆழ்வார்களும் நாயன்மார்களும் பிறரும் அரும்பாடுபட்டு, தமிழில் பக்தி இலக்கியச் செய்திகளை அளவில்லாது அளித்துள்ளனர். அதன்வழி மக்கள் மனத்தில்   நேயச்சிந்தனைகளை வளர்த்துள்ளனர். மற்ற உயிர்களினின்றும் மனிதன் வேறுபடுவதற்கு அடிப்படை அவன் பெற்றுள்ள மனமே.

    அறிவு: தொல்காப்பியர் வரையறை

    அறிவினை முன்னோர்கள் வழியில் வகைப்பாடு செய்யும் தொல்காப்பியர்,

    ஒன்றறி வதுவே உற்றறிவதுவே

    இரண்டறி வதுவே அதனொடு நாவே

    மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

    நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே

    ஐந்தறி வதுவே அவற்றொடு மனனே

    நேரிதின் உணர்ந்தொர் நெறிப்படுத் தினரே”(தொல்.மரபியல்.27)

     

    என்று அறிவியலாளரும் வியக்கும் வண்ணம் ஓரறிவு முதல் ஆறறிவு வரை தெளிவுபடுத்தியுள்ளார். இதில், புலன்களின் வளர்ச்சி நிலையைச் சுட்டும் அவர், அவ்வற்றிற்குரிய உயிரினங்களையும் பட்டியலிடுகின்றார். அதன் நிறைவாக,

     

    மக்கள் தாமே ஆறறிவுயிரே’(மரபியல். நூ.33)

    என்றும் குறிப்பிடுவதன் வழி மனத்தாலறியும் அறிவினைக்கூடுதலாகப் பெற்றவர்கள் மனிதர்கள் என்பது புலனாகும்

    மனத்தால் மாறுபாடு:

    மனம் கொண்டவர்கள் மனிதர்கள் என்பதனாலெயே அனைவரும் பண்பட்டவர்கள் என்று சொல்லமுடியாது. மனிதர்களில் சிலர் பிறரை அடக்கி ஆளவேண்டும் என்று தம் அதிகார பலத்தைக் காட்டக்கூடியவர்கள் பண்படா மனத்தவர் பட்டியலில் உள்ளவர்கள். இவர்கள் ‘அன்பின் வழியது உயிர் நிலை’ (குறள்.80) என்னும் குறளின் பொருளை உணராதவர்கள். மாறாக அன்பால் எதனையும் சாதிக்க இயலும் என்னும் கருத்து கொண்ட பண்பட்டவர்கள், செயல்பாட்டினால் அனைவர் நெஞ்சிலும் வாழ்ந்து கொண்டுள்ளனர்.

    சங்ககாலத்து மனிதநேயம்:

    நேயத்தின் பாற்பட்ட உயர் சிந்தனைகள் மிகுந்திருப்பது சங்க காலப் படைப்புகள். அவற்றுள் குறிப்பிடத் தகுந்தது புறநானூறு. அகத்திணையைத் தமிழன் அன்பின் ஐந்திணை என்று வகுத்து மிகுதியான பாடல்களைத் தந்திருந்தாலும், புறத்திணைப் படைப்புகளில் அன்பினை விதைத்து அது செழித்த தன்மையினைப் புறநானூறு போன்ற படைப்புகள் உலகிற்குப் பறைசாற்றும்.

     

    மூவேழு வள்ளல்கள்:

    அபிதான சிந்தாமணி குறிப்பிடும் மூவேழு வள்ளல்களில் முதலேழில் இடம்பெற்றுள்ள குமணன் செம்பியன் ஆகியோரும் கடையேழு வள்ளல்களாக்க் குறிப்பிடப் பெற்றவர்களில் எழினி, ஓரி, நள்ளி, பாரி, பேகன், மலையமான் ஆகிய அறுவரும் இதில் குறிப்பிடப்பெறாத ஆய் அண்டிரனும் புறநானூற்றில் குறிப்பிடப்பெற்ற வள்ளல்கள் ஆவர். முதலேழு வள்ளல்களில் ஒருவராக அபிதான சிந்தாமணி குறிப்பிடும் குமண வள்ளலைப் பாடும் பெருஞ்சித்திரனார், கடையேழு வள்ளல்களின் பட்டியலைத் தந்து, இவர்கள் மறைந்ததனால் ‘இரந்தோர் துன்பம் நீக்குபவன் நீ’ என்னும் கருத்தால் வந்ததாகக் குறிப்பிடுகின்றார்.(புறம்.158) இது இவ்வாறிருக்க, கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு வாழ்ந்த குமணனை முதலேழு வள்ளல்களின் பட்டியலில் சேர்த்து மேற்காணும் களஞ்சியம் குறிப்பிடுவது குழப்பத்தை அளிப்பதாக உள்ளது.

    மேலே குறிப்பிடப்பெற்றுள்ள வள்ளல்கள் தன்னலம் பாராமல் அவர்களின் உள்ளம் கனிந்த நிலையில் அருள் சுரப்பின் காரணமாக அவர்கள் செய்த செயல் இன்றும் மக்கள் மனத்தில் நின்று நிலவுகின்றது.

    மறுமைப்பயன் நோக்கியதா?

    ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்

    தன் பிள்ளை தானாக வளரும்

    என்னும் பழமொழி தன்னலத்தின் வெளிப்பாடாக, வீட்டிற்கு மணப்பெண்ணாக வந்தவரை பாதுகாப்புடன் நடத்தினால் அவர்வழி தனக்குப் பிறக்கும் பிள்ளையை கவனித்துக் கொள்வார் என்று வலிந்து பொருள் கொள்வர். ஆனால் நாட்டுப்புறத்தில் வழங்கும் பொன்மொழிகள் அலங்காரத்துடனோ பொருள் ஆழத்திலோ வெளிவருவதில்லை; இயல்பாக வெளிவருபவை. எனவே, மேற்காணும் பொன்மொழி, குறிப்பிடும் ‘ஊரான் பிள்ளை’ என்பது முன்பின் அறிமுகமில்லாதவர்களைக் குறித்ததுதான் என்று கொள்ளுதலே சிறப்பு.  இது பொதுநலத்தின் பாற்பட்டது என்றாலும் பலனை எதிர்பார்த்துச் செய்வது. ஆனால், சங்ககாலத்தில் ஆட்சி செய்த குறு நிலமன்னர்களில் வள்ளலாகப் பெயர்பெற்ற ஆய்அண்டிரனின் வள்ளல் தன்மையைக் குறிப்பிட வந்த ஏணிச்சேரி முடமோசியார்,

    இம்மைச் செய்து மறுமைக் காமெனும்

    அறவிலை வணிக னாயலன்” (புறம்.134)

    என்று குறிப்பிடுவது சிந்தனைக்குரியது. பயன் கருதிச் செய்யக்கூடிய அறம் ஒருவகை வணிகம்தான் என்னும் கருத்தைக் கொண்டவர்கள் சங்ககால வள்ளல்கள் என்பது பின்பற்றத்தக்கது.

     

     

    பொய்மொழியான பொன்மொழி:

    விருந்தும் மருந்தும் மூன்று நாள்

    என்பதும் மற்றுமொரு பொன்மொழியாகும். பொதுவாக இம்மாதிரியான முதுமொழிகள் சமூகத்தின் பிழிவாக, பெரும்பான்மைநோக்கி வெளிவருவன. ஆனால் சங்கால மன்னர்களில் சிலர் இம்மொழியைக் கேள்விக்குறியாக்கும் வகையில் தம்முடைய கொடைப்பண்பினால் மாற்றிக் காட்டுவதைக் காணமுடிகிறது. அதியமான் நெடுமானஞ்சியின் கொடைத்தன்மைய,

    ஒருநாள் செல்லல மிருநாட் செல்லலம்

    பலநாள் பயின்று பலரோடு செல்லினும்

    தலை நாட் போன்ற விருப்பினன்…………………..”

    என்று குறிப்பிடும் ஒளவையார், எத்தனை முறை விருந்தினராகச் சென்றாலும் முதல் நாள் சென்றதைப் போன்ற வரவேற்பை அளிப்பான் என்றும், அவர்களுக்குப் பரிசில் என்பது ‘யானை கோட்டிடை வைத்த கவளம் போன்று” (புறம்.101) உறுதியானது என்றும் சுட்டுவன கொடைத்தன்மையின் சிறப்பினைப் பறைசாற்றுவதாகும்.

    புலவர்களின் அருள்தன்மை:

    மன்னர்கள் மட்டுமன்றி, புலவர்களும் மக்களுக்கு எண்ணற்ற செயல்களின் வழி அவர்களின் வாழ்வுக்குப் பெரும் உதவி புரிந்துள்ளனர். முடியாட்சிக்கால மன்னர்கள் செய்த தவறுகளை அஞ்சாது சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்தியதுடன் மக்கள் மகிழ்வுடன் வாழ வழியையும் காட்டியுள்ளனர். இவ்வகையில் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகிய உடன்பிறந்த மன்னர்களிடையே நடக்கவிருந்த போரினைத் தடுத்து அவர்களுடன் மக்களையும் காப்பாற்றினார் கோவூர்க்கிழார். (புறம்.44)  கோப்பெருஞ்சோழனை எதிர்த்த அவனின் பிள்ளைகளை அழித்து ஒழிக்க எண்ணிய மன்னனின் செயலை, உரிய விளக்கங்களை அளிப்பதன் வழி தடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பிள்ளைகளுக்கு வாங்கித்தந்தார் புலவர் எயிற்றியனார். மலையமான் திருமுடிக்காரியின் மக்களை, பகையின் காரணமாக, கொல்ல நினைத்த குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுக்கு அறிவுரை நல்கி பிள்ளைகளைக் காத்தார் கோவூர்க்கிழார்(புறம்.46) அவரே, இளந்தத்தன் என்னும் புலவனை நலங்கிள்ளியின் ஒற்றன் எனக் கருதிக் கொல்ல நினைத்த நெடுங்கிள்ளியிடம் புலவர்களின் பெருமைகளைச் சுட்டிக்காட்டிக் காத்தார்(புறம்.47) இவையனைத்தும் மனித நேயத்தின்பாற்பட்ட செயல்களே.

     

    புரவலர்களாக புலவர்கள்:

    வறுமையுற்ற போதும் பொய்கூறாதவர்கள் புலவர்கள். வறுமையால் மன்னர்களைப்பாடி வளமையுற்ற போது அவ்வளத்தை வைத்துக்கொண்டு பலகாலம் வள்ளல்களாக விளங்கியிருக்கின்றனர். நீண்டநாள் வறுமையில் வாடி இறுதியில் குமணனைப்பாடி கொண்டுவந்த பொருளை தம் மனைவியிடம் கொடுத்து,

    நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும்

    ……………………

    இன்னோர்க் கென்னா தென்னொடுஞ் சூழாது

    வல்லாங்கு வாழுது மென்னாது நீயும்

    எல்லார்க்குங் கொடுமதி மனை கிழவோயே”(புறம்.163)

     

    என்று கூறும் புலவர் பெருஞ்சித்திரனாரின் செயல் எண்ணி எண்ணி பெருமை கொள்ளத்தக்கது. எனக்கு வேண்டியோர் உனக்கு வேண்டியோர் என்று பாராமல் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும். இங்கு  இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதைப் போன்ற  உள்ளங்கொண்ட  பெருஞ்சித்திரனார்கள் இன்று பலர் தேவை. வேண்டுதல் வேண்டாமை இலான் என்று இறைவனை வள்ளுவர் குறிப்பிடுவார். இறைவன் தன்மை கொண்ட பலர் சங்க காலத்தில் வாழ்ந்துள்ளனர். இன்று சமுதாயம் காணும் துன்பத்தைத் துடைக்க சங்க காலத்தில் வாழ்ந்த அரசர், புலவர்கள் பலர் தேவைப்படுகின்றனர்.

    ஆன்ம நேயச்சிந்தனையாளர்கள்:

    இறையடியார்களும் இயற்கை விரும்பிகளும் அவ்வப்போது மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்து  உயிர்களின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் அக்கறைகொண்டு வாழ்ந்தும் வாழவைத்தும் வந்துள்ளனர்.

     

    வாகனங்களும் தலவிருட்சங்களும்:

     

    ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும்

    பாடுற மாட்டை பாடிக்கறக்கணும்

     

    என்பது நாட்டுப்புற  வழக்கு. இதே உத்தியைப் பின்பற்றி ஆன்மிகவாதிகள் சில நேரங்களில் மக்களை எச்சரிக்கை விடுத்தும் அன்பாகவும் கூறி விலங்குகள் பறவைகள், மரங்கள் முதலானவற்றைப் பாதுகாத்துள்ளனர்.

    பன்றி, மூஞ்சுறு போன்றவற்றை இறைவனின் வாகனமென்று அடிக்கக்கூடாதென்றும் வேம்பு, அத்தி உள்ளிட்ட மரங்கள் கோவில் தலவிருட்சங்கள் அதனால் இம்மரங்களை வெட்டக்கூடாதென்றும் பாதுகாத்து வருகின்றனர்.

    மரம் வெளியிடும் காற்று மனிதர்க்கு மூச்சுக்காற்று; மனிதர் வெளியிடும் நச்சுக்காற்றை உள்ளிழுத்து வாயுமண்டலத்தைத் தூய்மைசெய்கிறது மரம். இவ்வகையில் மனிதனின் உயிராக விளங்கும் மரங்களில் ஒன்றை வெட்டுவதற்கு முன் பத்து மரக்கன்றுகளையாவது நடவேண்டாவா? மேலை நாட்டு நாகரிக மோகத்தில் திளைத்து பிறந்தநாள், திருமணநாள் கொண்டாடும் தமிழர்கள் அவ்வப்போது வீணாகச் செலவிடும் தொகையில் மரக்கன்றுகைளை அளித்து தமக்கும் சமூகத்திற்கும் தொண்டாற்றலாமே.

    ஆன்மீகவாதிகளின் ஆன்மநேயம்:

    ‘புல்லாகி பூடாய் புழுவய் மரமாய்’ என்று எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்ததாகக் கூறும் மாணிக்கவாசகர் (திருவாசகம்.சிவபுராணம்.26-31),

    எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்

    தம்முயிர் போல் எண்ணி

     

    வாடியபயிரைக் கண்டபோதே வாடும் மனத்துடன் வாழ்ந்த வள்ளலார் (திருவருட்பா.5298), போன்ற எண்ணற்ற அருளாளர்கள் தோன்றி தமிழ் மக்களும் விலங்குகளும் உயிரினங்களும் வாழ வழிகண்டனர்.

     

    அறிமடமும் சான்றோர்க்கணி:

    வள்ளல்கள் சிலரின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கின் அவை அவர்களின் அறியாமையானவையாகத் தோன்றும். ஆனால் உடுக்கை இழந்தவன் கைபோன்று துன்பமுற்றோர் அல்லது துன்பமுற்றவையின் இடுக்கண்களைய வேண்டுமென்ற உடனடிச் சிந்தனைகளைச் சீர்தூக்கி ஆராயின் உதவி செய்தோரின் உள்ளம் வெளிப்படும். துன்பத்தில் தாம் பங்குகொண்ட்து மட்டுமன்றி அதனைத் தாம் ஏற்றுக்கொண்டு அவர்களை அல்லது அவைகளை அத்துன்பத்தினின்றும் விடுவித்து இன்பமடையச்செய்த செயல்களை சங்ககாலம் தொடங்கி இக்காலம்வரை காணலாம். அவ்வகையில் முல்லைக்குத் தேரீந்த பாரி, மயிலுக்குப் போர்வையீந்த பேகன் உள்ளிட்ட பலரின் செயல்களைச் சுட்டலாம். இச்செயல்கள் மேற்குறிப்பிட்டோரின் அறியாமை என்று எண்ணுவது, எண்ணுவோரின் அறியாமைக்குச் சான்றாகும். மாறாக இவ்வறிமடமும் இச்சான்றொர்களுக்கு அணியாகத் திகழும். வாகனங்கள் மிகுதியாகச் செல்லும் சாலைத் தடுப்புகளுக்குள் மாட்டிக்கொண்ட பல விலங்குளை சிலர், உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றும் நிகழ்வுகளை இன்றும் முக நுல்களில் அன்றாடம் காணலாம்.

     

     

     

     

    ஒருபானைச் சோற்றுக்கு:

    சிலவாண்டுகளுகு முன் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு வீரர்களும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டு பாகிஸ்தான் வீரர்கள் புதைந்து கொண்டிருந்த நேரம் இந்திய வீரர்கள் உடனடியாகச் சென்று காப்பாற்றினார்களாம். எல்லையில் தீவிரவாதத்தை முறியடிக்க அதே வீரர்களை சுட்டு வீழ்த்துவதென்றாலும் இந்திய வீரர்கள் செய்வார்கள். அது நாட்டைக் காப்பாற்றும் கடமை. ஆனால் எதிர்பாராத  இயற்கைச் சீற்றத்தால் எதிரிகளை அழிவிலிருந்து காப்பாற்றியது மனித நேயம்.

    மனிதநேயம் மறைந்து போனதா?

    எதற்கெடுத்தாலும் சங்க காலம், பக்திக் காலம் என்று பழைய காலங்களின் சிறப்புகளைப் பட்டியலிடுகின்றோர் தற்காலத்தை ஒரு கற்காலமாக நினைத்து எண்ணிப் பழிதூற்றி வந்தனர். எதற்கெடுத்தாலும் இது கலிகாலம். நடக்காதவை எல்லாம் நடக்கும் என்று புறஞ்சொல்லி வந்தனர். நவம்பர், திசம்பர் 2015ல் அடாது பெய்த மழை வெள்ளத்தால்  சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் நீரில் மூழ்கி தத்தளித்த அவலத்திற்குப்பின், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுகின்றவரை.

    வெள்ளத்தில் தத்தளித்தோரை மீட்டவர்களில் பெரும்பாலானோர், எதற்கும் உதவமாட்டார்கள் என்று பெரியவர்கள் ஒதுக்கி வைத்து வேண்டாவெறுப்பாக முகஞ்சுளித்துப் பார்த்த இளையோர் பட்டாளம், தன்னலம் பாராத தன்னார்வத் தொண்டர்கள், சுவைஞர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி வளர்ந்து வருபவர்கள் என்று மக்கள் தவறாகக் கணக்குப் போட்டு வைத்திருந்த திரை நட்சத்திரங்கள், நீரால், மொழியால் நிரந்தரமான எதிரிகள் என்று தமிழர்கள் கணக்குப் போட்டு வைத்திருந்த அண்டை மாநிலத்தார்கள், எதைச்செய்தாலும் அதிலொரு அரசியலிருக்குமோ என்று மக்கள் அச்சத்துடனேயே பார்த்துவரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர், மேலாக, இலாப நோக்கோடு இச்செய்தியைப் போட்டுள்ளார்கள் என்று வாசகர்கள் இதுவரை தப்புக்கணக்கு போட்டிருந்த, உயிரை துச்சமென மதித்து எண்ணற்ற உயிர்களைப் பாதுகாக்க உயிரான செய்திகளை உடனுக்குடன் தெரிவித்து மக்களின் நெஞ்சங்களிலிருந்த  அச்ச உணர்வைப் போக்கிய ஊடகங்கள் என்று இப்பட்டியல் நீண்டுகொண்டே போகும். அடித்த மழை வெள்ளம் போல. இவற்றுக்கெல்லாம் என்ன காரணம் மனிதம் பாடநூல்களில், சொல்லிக் கொடுக்கும் வகுப்பறைகளில் பாடத்திட்டங்களின் வழி மறைந்து போயிருக்கலாம். ஆனால், மனித மனங்களிலிலிருந்து சிறிதளவும் குறையவில்லை. மாறாக வளர்ந்திருக்கின்றது; முழுமையாய் மலர்ந்திருக்கின்றது.

     

    இனங்காட்டும் சூழல்:

    சூழ்நிலை மனிதனை உருவாக்கு கின்றது என்பதை விட  இனம் காட்டுகிறது என்பது மிகப்பொருத்தம். சென்னை மழையில் நன்கு அறிமுகமானவர்கள் கூட தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு நெஞ்சம் நெகிழும்படியாக உதவிகளைச் செய்துள்ளனர். விளம்பரங்களைத் தேடிக்கொண்டவர்கள் என்று யாரையும் விரல்விட்டு சொல்லவியலாது. உலகம் உருண்டை என்பதைப் போல இதுவரை கீழ்த்தளத்திற்கு இருந்த மதிப்பு மேலே மேலே  மேல் தளத்திற்கு சென்றுவிட்டது. விலைமதிப்பில்லாத, இமயத்தின் சிகரத்தில் இருந்த சென்னை நகர மண்ணின் விலை படுபாதாளத்திற்குச் சென்றாலும் வியப்பதற்கில்லை. சென்னையில் நீர் நின்ற இடங்களெல்லாம் ஆறு, ஏரி, குளம், கால்வாய் என்று பெயர் உள்ள இடங்கள்தாம். இனி நீரிருக்க அவ்விடங்களை விட்டுவிடலாம் மக்கள் இருக்க ஏற்ற இடங்களைத் தெரிவு செய்யலாம்.

    மழைக்குமுன் சென்னை(.மு.செ.):

    எதிர் வீட்டில் யாரிருக்கிறார்கள்? இந்தப் பெயர் கொண்ட தெரு எங்கே இருக்கிறது? இந்த ஊருக்குப் போகும் வழியாது? என்று எத்தனைக் கேள்விகள் கேட்டாலும் ‘தெரியாது’ என்னும் பதிலை, கேட்பதற்கு முன்பாகவே ஆயத்தமாக வைத்திருந்த இளைஞர் பட்டாளம்; பக்கத்துத் தெருவில் உள்ள வீட்டிற்கு, பத்துக் கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டுவந்து விட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்; பையில் இருந்த பணத்தை கொள்ளையனுக்குக் கொடுத்துவிட்டுத் தவிக்கும் நாட்டுப்புறத்தானுக்கு ‘உள்ளே போ’ என்று சொன்னேனே கேட்டியா? போ……. போயி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு போ என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பேருந்து நடத்துநர்கள்; அப்பாவியாக புகார் கொடுத்துவிட்டு பணம் எப்போது கிடைக்கும்? என்று கேட்கும் பட்டிக்காட்டானிடம் ‘உடனே(கிடைக்கும்)…. போ சொல்லி அனுப்புறோம்’ என்று மறைமுகமாகத் தமக்குக் கிடைக்கப் போவதை உற்சாகத்தில் கொக்கரிக்கும் காவல்துறையினர்; பளபளக்கும் வார்த்தையால் பளிச்சிடும் விளக்கொளியில் இருட்டினை விற்பனை செய்யும் வியபாரிகள்; பணத்திற்காக எதையும் செய்யும் கைக்கூலிகள்; விளம்பரம் தேடும் அரசியல் வாதிகள்; இளைஞர்களைச் சீரழிக்கும் திரைத்துறையினர் என்று அனைத்துத் துறையிலும் உள்ள புல்லுருவிகளின் கை ஓங்கியிருந்தது இங்கே குறிப்பிடப்பட்ட துறைகளில் மிகவும் நல்லவர்களும் வெளியில் தெரியாத வேர்களாகவே இருந்தனர்.

    மழைக்குப் பிறகு சென்னை(.பி.செ.):

    அனைத்து தீய செயல்களுக்கும் கழுவாய் தேடியதைப் போல இன்று சென்னை தம்முடைய அழுக்குளைப் போக்கிக்கொண்டு அழகாக மாறி வருகிறது.  நச்சுப்பாம்பு கடித்ததையும் பொருட்படுத்தாது மீட்புப்பணியில் ஈடுபட்டு இறந்து போன திருவொற்றியூர் தியாகராயபுரம் முகமது ஜாபர் மகன் இம்ரானைப் போல மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு மறைந்துபோன மாணிக்க உறவுகளை, மக்களை நம்பி வாழ்ந்த பாசப்பிராணிகளை இனி பார்ப்பது எந்த நாளோ? இழந்து போன உடைமைகளை மீட்டெடுப்பது என்றோ?

    ‘படுத்தால் உறக்கம் இல்லை’; தூங்கி இரண்டு நாளாச்சி; உடனே போயி லோடு ஏத்திட்டு வரணும் என்று ஐதராபாத்திலிருந்து கண்டெய்னர் லாரி ஓட்டி வந்த ஓட்டுநர் ஷாஜி போன்று  தன்னலம் கருதாத சேவையில் ஈடுபட்ட ஆயிரமாயிரம் தன்னார்வத் தொண்டர்களின் பணிக்கு ஈடாக எதனை அளிப்பது?  இழப்புகளைப் பற்றி கவலைப்படாது பாதுகாப்புத்தேடி ஓடிஒளியாமல் பெண்ணாக இருந்தாலும் வெள்ளத்தில் நீந்திவந்து, செயல்படும் ஒன்றிரண்டு தொடர்வண்டிகளின் வழி மக்களுக்குச் சேவைசெய்ய வேண்டுமென்று இருபத்தினான்கு மணி நேரம் தொடர்ந்து பணிபுரிந்து சாதனை நிகழ்த்திய தொடர் வண்டி இயக்க கண்காணிப்பு அலுவலர் சென்னை மாடம்பாக்கம் ஜே.கீதா சுரோ  போன்றவர்களுக்கு  எப்படி நன்றி சொல்வது?

    எல்லாவற்றிற்கும் ஒரே பதில்தான். இவர்களில் எவரும் நன்றிக்காக உதவியோர் அல்லர்.அவர்கள் காட்டியது வெறும் அன்பன்று; கனிந்த அருள். இதன்வழி அனைவரும் தெரிந்து கொண்டது யாதெனின் இது குறித்து கோமல் அன்பரசன் தினமணியில் எழுதிய கட்டுரையின் வழி சொல்வதென்றால் ‘மாமழை மீட்டெடுத்த மனிதநேயம்’ என்பதுதான்.

    இனி ஒரு விதி செய்வோம்:

    எதிர்பாராத பேரிடரை எப்படியோ மக்கள் சக்தியால் ஓரளவு மீட்டெடுத்துள்ளோம். இனியும் இழப்பதற்கு மக்களிடம் ஒன்றுமில்லை. 2005 திசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தில் மறைதோர்களைக் காட்டிலும் நிவாரணத்தொகை பெறுவதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் மிகுதி. ஆழிப்பேரலை அடிக்கடி நிகழும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று ‘சுனாமி’ எனும் சொல்லே அவர்களுடையதுதான். அப்படிப்பட்ட நாடுகளுக்குச் சென்று தெளிவான திட்ட வரையறைகளைத் தீட்டி அரசு முனைப்புடன் செயல்பட்டால் இனியும் இதுபோன்ற இழப்புகளைத் தவிர்க்கவியலும்.

    பேரிடர் மேலாண்மைச் சட்டத்தைக் கொண்டுவந்து மழை வெள்ளம் மட்டுமன்று அணு உலை, ஆழிப்பேரலை உள்ளிட்ட எந்தச் சூழலிலும் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும் ஏரியைத் தூர்த்து எழுப்பப்பட்ட நகரந்தான் மெக்சிகோ. அந்த நகருக்குக் கீழே 62 கிலோமீட்டர் நீளத்திற்கு மிகப்பெரிய அளவிலான பாதாளச் சாக்கடையை அமைத்து மிகுதியான நீரை வெளியேற்றுகின்றனர். இதைப்போன்ற ஒரு திட்டத்தை  சென்னை நகரில் ஏற்படுத்தி செயல்படுத்துவது காலத்தில் கட்டாயம்.

    பெய்கின்ற மழை நீரை தேக்கி வைத்து பயன்படுத்தக் கூடிய வகையில் இருக்கும் நீர் நிலைகளைத் தூர்வாரி கரைகளை உயர்த்தி தேவையான நேரங்களில் பயன்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இனியும் நீர் நிலைகளை ஆக்கிரமிக்கும் எந்தச்செயலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்போதுதான் ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ என்று சிலப்பதிகார இளங்கோவைப் போன்று மழையை வாழ்த்திப் பாடமுடியும். இன்றேல் மழை மேகத்தைக் கண்டால் சென்னை நகரத்தை விட்டே ஓடத்தோன்றும். சென்னையில் பெய்த பேய் மழையால் தூய்மையானது கூவம் மட்டுமன்று; மக்களின் மனங்களும்தான். அதன் வழி மழை மேகம் மறைத்திருந்த மனித நேயம் வெளுத்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எல்லாவற்றிற்கும் அடிப்படை மக்கள் காட்டிய அன்பின் நிறைவு; அருளின் தெளிவு.

    முனைவர் துரை.குணசேகரன்,
    (மாநிலத்தலைவர்,
    தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவை),
    தலைவர், தமிழாய்வுத்துறை(ப.நி)
    ஏ.வி.சி.கல்லூரி(தன்.).,
    மயிலாடுதுறை,
    தமிழ்நாடு-609305

    —————————————-

    Share
  • ஏ.வி.சி. கல்லூரியில் வைரவிழா பாட்டுமன்றம்

    1f7ae4c7-d36e-4c1e-a8d9-d64c478fb42d

              அன்பநாதபுரம் வகையார் அறத்துறைக்கல்லூரியின் வைரவிழா நிகழ்வுகளில் ஒன்றாக, தமிழாய்வுத்துறையின் சார்பில் கல்லூரி வேலாயுதம் அரங்கில் மாபெரும் பாட்டுமன்றம் 19.02.2016 பிற்பகல் 2.00 மணிக்குத்தொடங்கியது.

           நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் முனைவர் சு.அசோகன் தலைமை வகித்தார். இன்றைய இளைஞர்களுக்கு நல்வழி காட்டுவதில் பெரிதும் பயன்படுவது ‘பழைய திரைப்பாடலே` `புதிய திரைப்பாடலே`, `நாட்டுப்புறப்பாடலே` என்னும் பொருளில் பாட்டு மன்றம் நடைபெற்றது. இதற்கு , கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி `நகைச்சுவை நாவலர்` முனைவர் இரா.நவஜோதி நடுவராக இருந்து நிகழ்த்தினார். விஜய் தொலைக்காட்சி `கலக்கப்போவது யாரு` புகழ் சிவகாசி சசிகலா `பழைய பாடலே` என்னும் அணியிலும், கலைஞர் தொலைக்காட்சி புகழ் கவிஞர் தணிகை வேலன் `புதிய பாடலே` என்னும் அணியிலும், வசந்த் தொலைக்காட்சி புகழ் கவிதா `நாட்டுப்புறப்பாடலே` என்னும் அணியிலும் பாடல்கள் வாயிலாக தங்களுடைய வாதத்தை எடுத்துரைத்தனர். நிறைவாக நடுவர் இன்றைய இளைஞர்களுக்கு நல்வழி காட்டுவதில் பெரிதும் துணையாக இருப்பது நாட்டுப்புறப்பாடலே என்று தீர்ப்பளித்தார்.

           முன்னதாக வருகை தந்திருந்த அனைவரையும் தமிழ் ஆராய்ச்சியாளர் பேரவையின் மாநிலத்தலைவரும் கல்லூரித்தமிழாய்வுத்துறையின் தலைவருமான முனைவர் துரை.குணசேகரன் வரவேற்றார்.

           தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் செல்வ.கனிமொழி நன்றி கூறினார். நிகழ்ச்சியை முனைவர் து.சந்தானலெட்சுமி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் முனைவர் எஸ்.இராமசாமி, பேரா.ஆறுமுகம், மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் செந்தில் நாயகம், பொறியியல் கல்லூரி முதல்வர், தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர், இயக்குநர், பேராசிரியர்கள், பல்வேறு துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நகரப்பிரமுகர்கள், மாணவச்செல்வங்கள் என்று திரளாகக்கலந்து கொண்டனர்.

           நிகழ்ச்சிக்கு தமிழாய்வுத்துறை இணைப்பேராசிரியர் முனைவர் சு.தமிழ்வேலு உள்ளிட்ட இருபத்தெட்டு பேராசிரியர்கள் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

                                                                                                                                                    (முனைவர் துரை.குணசேகரன்)

                                                                   தமிழாய்வுத்துறைத்தலைவர்

                                                                             நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

    Share
  • கோட்பாட்டியல் நோக்கில் புறநானூறு

    — முனைவர் துரை. குணசேகரன்.

    புறநானூறு

    1.0 அறிமுகம்:-
    குறிக்கோள்கள் கொண்டது இலக்கியம். குறிக்கோளில்லா வாழ்வு சிறக்காது, சமயவாழ்வில் சாதனை படைத்த நாயன்மார் ஒருவர் ‘குறிக்கோள் இலாது கெட்டேன்’ என்பதிலிருந்து இதன் இன்றியமையாமை புலனாகும். சங்கத்தமிழர் வாழ்வியல் பெட்டகமாக விளங்கும் படைப்புகளுள் புறநானூறு குறிப்பிடத்தக்கது. இதனை ஆய்வதன் வழி அக்காலமக்களின் கொள்கைகள் விளங்கும். ஒருமித்த கொள்கைகளின் வழி புறநானூறு புலப்படுத்தும் கோட்பாடுகளை ஆய்வதே இக்கட்டுரையின் தலையாய நோக்கமாகும்.

    1.1 புறநானூற்றுப் பொருண்மை:-
    சங்ககால எட்டுத்தொகை நூல்களில் புறநூல்கள் இரண்டில் ஒன்று புறநானூறு. இந்நூலை ஆய்வதன் வழி மன்னர்கள், புலவர்கள், பொதுமக்கள் என்னும் முத்திறத்தார் வாழ்வியலை நன்குணரலாம். நாணயத்தின் இருபக்கங்கள் போன்று சங்க இலக்கியங்கள் அகம், புறம் என்னும் இரு கூறுகளைக்கொண்டவை. இவற்றுள் புறநானூறு சங்ககாலமக்களின் புறவாழ்வு குறித்தது. அகமல்லாத அனைத்தும் புறம் என்று பொதுவாகக்குறிப்பிட்டாலும் அக்காலமக்களின் வீரம், கொடை, விருந்தோம்பல், உயிரிறக்கம், உள்ளிட்ட பலவற்றை உள்ளடக்கியது இத்துறை.

    1.2 அரசியலின் மேன்மை:-
    மன்னராட்சிக்காலமாயினும் மக்களாட்சிக்காலமாயினும் அதிகாரம் படைத்ததாக விளங்குவது அரசியலாகும். அன்று மன்னர்கள் சார்ந்ததாக விளங்கியது; இன்று அமைச்சர்கள் சார்ந்ததாக விளங்குகிறது. புறநானூறு காலத்து அரசியலில் பெருவேந்தர்கள் தொடங்கி, குறுநிலமன்னர்கள்வரை ஆட்சி செய்துள்ளமை புலனாகும்.

    2.1 மன்னரியல்:-
    முடியாட்சி மன்னர்களேயாயினும் குடிமக்களை உடலாகக்கொண்டவர்களாகத் தான் பெரும்பாலான மன்னர்கள் விளங்கியுள்ளனர். ‘நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே’ என்று அவர்களை உயிராகக்கருதிய மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் உயர்வையே தம்முடைய உயர்வாகக்கருதி ஆட்சிபுரிந்தனர் அக்கால மன்னர்கள்.

    2.1.1 வாரிவழங்கிய வள்ளல்கள்:-
    தொழிற்கூடங்கள் இல்லாத காலம். வறுமையுற்ற மக்களின் வாழ்வில் ஒளியூட்ட மன்னர்கள் வள்ளல்களாக விளங்கியிருக்கின்றனர். மூவேழு வள்ளல்களில் கடையேழு வள்ளல்களின் பட்டியலை, புறம் பின்வருமாறு குறிப்பிடுகிறது.

    பரம்பின் கோமான் பாரியும்
    கொல்லி ஆண்ட வல்வில் ஓரியும்
    காரிவளர்ந்து பேரமர்க் கடந்த
    மாரிஈகை மறப்போர் மலையனும்
    கூவிளங் கண்ணி கொடும்பூண் எழினியும்
    பெருங்கடல் நாடன் பேகனும்
    மோசி பாடிய ஆயும்
    தள்ளாது ஈயும் தகைசால் வன்மை
    கொள்ளாத ஓட்டிய நள்ளியும்(புறம்.158)

    2.1.2 ஆன்மநேயம்:-
    கடையேழு வள்ளல்களில் பாரி, பேகன் இவர்களின் கொடைத்திறம் குறித்து ஐயுறுவோரும் உண்டு. முல்லைக்கொடிக்கு தேரைஈந்தது, மகிழ்வில்ஆடிய மயில் வருந்துவதாக எண்ணிப்போர்வை ஈந்தது அறிவின்பாற்பட்டவை அல்ல என்பது அவர்களின் வாதம்.

    உடுக்கை இழந்தவரின் கைபோல உறுதுயருற்றது என்று கருதியவுடனே அத்துன்பத்தில் பங்குகொண்டு செயல்படுவது: அத்துன்பத்தைத் தாம் ஏற்றுக் கொண்டு அதனை அதனின்று விடுவிப்பது கொடை மடத்தின்பாற்படும். அவ்வகையில் தாம் ஊர்ந்துவந்த மாணிக்கத்தேரினை முல்லைக்கொடி படர ஈந்துவிட்டு வந்த பாரியும், தாம் போர்த்தியிருந்த போர்வையை மயிலுக்கு ஈந்த பேகனும் இன்றுவரை பேசப்படுகின்றனர். இவற்றில் அவர்களின் ஈரப்பண்பு புலனாகும். இவை மனிதநேயம் தாண்டி ஆன்மநேயத்தின் பாற்பட்டவை.

    2.1.3 அதியனும் குமணனும்:-
    நெடுநாள் வாழ்வைத்தரவல்ல, அரிதின் முயன்று பெற்ற நெல்லிக்கணிணியைத் தாம் உண்ணாமலும் அதன் தன்மையை வெளிப்படுத்தாமலும் ஔவைக்கு,

    ஆதல் நின்னகத்து அடக்கிச்சாதல்
    நீங்க எமக்கு ஈத்தனையே(புறம்.19)

    என்று அதியன் அளித்த நிலையின்வழி தம்மைக்காட்டிலும் தமக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் புலவர்கள் நீண்டநாள் வாழவேண்டும் என்னும் உயரிய தன்மை புலனாகும். அவனை அவர்பாடியது என்று புறத்தால் பெருமைப்பட்டவர்கள் புலவர்கள் அன்றோ.

    உயிரைக்கொடுத்தேனும் கொடைத்தன்மையைக் காத்தவன் கண்ணன் என்று பாரதம் பெருமிதப்படுத்தும். அவ்வகையில் கொடைக்காகத் தம்முயிரைத்துச்சமெனக் கருதிய குமணவள்ளலைப்புறம் காட்டும் (165). தம்பிக்கு அஞ்சி, காட்டில்வாழும் குமணவள்ளலை நாடிச்சென்று பாடிய பெருஞ்சித்தினாருக்குத் தன் தலையைக் கொண்டு போய்க்கொடுத்து, பரிசில்பெற்றுச்செல்க என்று உரைத்தான் என்பதை அறிகின்றபொழுது, அக்காலத்து மன்னர்களின் கொடைக்குணம் புலனாகும்.

    2.1.4 பயன்கருதாக்கொடை:-
    எதையும் பயன்கருதிச்செய்தல் என்பது இன்று சராசரி மனிதர்களின் பண்பு. ஆனால் சங்கத்தமிழ் மன்னர்கள் கொடுத்த கொடை அவ்வாறு பயன்கருதியதன்று. இம்மை, மறுமை குறித்த நம்பிக்கையுள்ள காலத்தில் வாழும் கடையேழு வள்ளல்களில் ஒருவனான ‘ஆய்’ எப்படிப்பட்டவன் என்பதை,

    இம்மைச் செய்ததை மறுமைக்கு ஆம்எனும்
    அறவிலை வணிகன் ஆயலன்.(புறம்.134)

    என்று உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடுவது இவண் கருதத்தக்கது.

    காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனான பிட்டங்கொற்றனின் கொடை குறித்து,

    “இன்று செலவினுந் தருமே; சிறுவரை
    நின்று செலினுந் தருமே; பின்னும்
    முன்னே தந்தனன் என்னாது துன்னி
    வைகலும் செலினும் பொய்யலன் ஆகி
    யாம்வேண்டி யாங்குஎம் வறுங்கலம் நிறைப்போன்
    தான்வேண்டி யாங்குத் தன்இறை உவப்ப”(புறம்.171)

    என்று குறிப்பதன் வழி ஒளவையார் சொன்ன “கொடையும் தயையும் பிறவிக்குணம்” என்பது உறுதியாகின்றது.

    2.1.5 வீரத்தின் விளைநிலம்:-
    ஆடவர்களை வீரத்தின் அடிப்படையில் ‘மைந்தர்கள்’ என்று அழைப்பது வழக்கம். ஆடவர்கள் மட்டுமன்றிப் பெண்டிரும் செம்மாந்த வீரப்பண்பு மிக்கவர்களாக விளங்கியிருக்கின்றனர். வீரத்தின் மேம்பட்ட நிலையில் மன்னர்கள் வஞ்சினம் கூறி அதன்படி பகைமுடிக்காவிடில் ‘என் மார்பை பொருட்பெண்டிர் தழுவுவதாக’ என்று குறிப்பதன் வழி நாடாளும் மன்னனாயினும் பொருட்பெண்டிர் தழுவலை, பழியாகக் கொள்ளும் ஒழுக்கமேன்மை புலனாகும்.

    2.1.6 உயிரா? மானமா?
    புறப்பாடல் காலத்து மன்னர்களின் வாழ்வியல் குறித்து ஆராய்கையில், அவர்கள் வீரம் செறிந்தவர்களாக வாழ்ந்தது மட்டுமன்றி, தோல்வி ஏற்படும் பொழுதோ மானத்திற்கு இழுக்கு நேரும்பொழுதோ ‘மயிர் நீப்பின் வாழாக்கவரி மாவாக’ உயிரைப்பரிசாக அளித்து மானம் காத்தனர் என்பது கண்கூடு. சோழன் செங்கணானுக்கும் சேரன் கணைக்காலிரும் பொறைக்கும் கழுமலம் எனுமிடத்தில் நடந்த போரில் சேரன் தோல்வியுற்றான். சோழனால் சிறைபிடிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டான். சிறைப்பட்ட சேரன் தாகம் தணிக்கத்தண்ணீர் காலத்தில் கிடைக்காமையால்,

    மதுகையின்றி வயிற்றுத்தீத் தணியத்
    தாமிரந் துண்ணும் மளவை
    ஈன்மரோ இவ்வுலகத் தானே.(புறம்.74)

    என்று கூறி உயிர் துறந்தான். குடிபழிதூற்ற ஆட்சிசெய்தல், புலவர் பாடாமை, இரவலர்க்கு ஈயாமை போன்றவை வேந்தனைக் கீழ்மைப்படுத்தும் செயல் என்று புலவனாகவும் விளங்கிய தலையாலங்கானத்து செருவென்றை பாண்டிய நெடுஞ்செழியன் எண்ணியவை (புறம்.72) இவண் எண்ணத்தக்கது.

    2.1.7 போர்நெறி:-
    போர் செய்தலைக்கடமையாகக் கொண்ட புறநானூற்று மன்னர்கள் அதனைப் பெரிதும் அறநெறியின்பாற்பட்டே நிகழ்த்தியுள்ளனர். போரினின்றும்

    ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
    பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
    தென்புலம் வாழ்நர்க் கருங்கட னிருக்கும்
    பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
    எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென
    அறத்தாறு நுவலும் பூட்கை (புறம் 9:1-6)

    என்று பாதுகாக்கப்பட வேண்டியவர் குறித்த பட்டியல் இடம் பெறுகிறது. இது குறித்து ஆய்வுரை நல்கும் கு.வெ.பாலசுப்பிரமணியன், “வீரநிலைக்காலப்போர்கள் ஆனிரை, பார்ப்பனர், பெண்டிர், பிணியாளர், மகப்பெறாதவர் என விலக்கி, போர்மறவரோடு மட்டும் போரிடும் நிலை இல்லை. சங்ககாலத் தமிழ்ச்சமூகத்தில் வைதிகசமயம் தம் கோட்பாடுகளைப் படரவிட்டதன் விளைவே ஆனிரை, பார்ப்பனர், உயிர்கட்குத்தீங்கு விளைக்கக்கூடாது என்ற எண்ணமாகும். சமண, பௌத்த நெறிகள் உயிர்க்கொலையை, கடுமையாகக்கண்டித்த சமயங்கள் ஆகும். இவற்றிடமிருந்து இவ்வருளற நெறியைப்பின்பற்றிய வைதிகசமயம் பசுவைத்தெய்வமாகக் கொல்லுதல் கொடிய, தீயவினையாகக் கருதப்பட்டது” என்று குறிப்பிடுகின்றார். மேலும், ஆகோன் மறவர் பசுவை வெட்டி உண்ணும் வழக்க முடையவர்கள் என்பதற்கு அக நானூற்றிலிருந்தும் (309:1-6) சான்று காட்டி நிறுவுகின்றார். (சங்க இலக்கியத்தில் புறப்பொருள், ப.91) இவ்வகையில் சமண சமயத்தின் அறக்கோட்பாடு தமிழர்களின் போர்த்துறையில் ஓர் கோட்பாடாக இடம் பிடித்ததை எடுத்துக்காட்டுகின்றார்.

    புறமுதுகிட்டு ஓடுதல் நாணமிருந்த செயல்களில் ஒன்றாகவும் அவ்வாறு ஓடுவோரைத்துரத்திச் சென்று போரிடுதலும் விரும்பத்தகாத தொன்றாகக் கருதப்பட்டது. ஒரு மன்னன் தொண்ணூற்றாறு விழுப்புண்கள் பெற்றதைப் பெருமையாகக் கருதும் நிலையை, புறம் எடுத்துக்காட்டும். கரிகாலனின்வேல் தன்மார்பைப்பதம் பார்த்துவிட்டுப்புறம் போனதற்கு வருந்தி பெருஞ்சேரலாதன் வடக்கிருந்ததாகப்புறம் குறிப்பிடுவது (65,66) இவண் கருதத்தக்கது.

    2.1.8 விருந்தோம்பல்:-
    அல்லிலாயினும் விருந்துவரின் உவந்தவர்கள் தமிழர்கள். விருந்தும் மருந்தும் மூன்றுநாள் என்னும் மொழியைப்பொய்யாக்கும் வகையில் மன்னர்கள் விருந்து போற்றிய தன்மையைப்புறம் எடுத்துரைக்கும்.

    ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
    பலநாள் பயின்று பலரோடு செல்லினும்
    தலைநாள் போன்ற விருப்பினன் (புறம் 101)

    என்று விருந்தளித்த தன்மை போற்றப்படுகிறது.

    3.1 புலவரியல்:-
    மக்களுக்கும் மன்னர்களுக்கும் பாலமாக விளங்கியவர்கள் புறநானூற்றுக்காலத்து வாழ்ந்த புலவர்கள் என்றால் மிகையன்று. செம்மாந்த வாழ்வு வாழ்ந்த மன்னர்களால் புரக்கப்பெற்ற புலவர்களும் சீரும் சிறப்புமாக வாழ்ந்தனர் என்பதைப் புறப்பாடல்கள் வழி அறிந்துகொள்ளலாம். வறுமையுற்ற காலத்தும் வளமைபெற்ற காலத்தும் செம்மை மாறாத் தன்மையுடன் வாழ்ந்தனர்.

    3.2 எல்லாருக்கும் எல்லாம்:-
    நீண்டநாள் வறுமையுற்ற நிலையில் குமணனைப் பாடிப்பெற்ற பரிசிலைக் கொண்டுவந்த பெருஞ்சித்திரனார் தம் மனைவியிடம் கொடுத்து,

    “நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும்
    இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது
    வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும்
    எல்லோர்க்கும் கொடுமதி”(புறம் 163)

    என்று எந்தக்கட்டுப்பாடுமின்றி எல்லாருக்கும் கொடுக்குமாறு கூறும் பண்பு, எண்ணி வியக்கத்தக்கது. இதன்வழி எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் என்னும் சமத்துவப்பண்பு வெளிப்படும். வள்ளுவர் கூட,

    நன்றாற்ற ளுள்ளும் தவறுண்டு அவரவர்
    பண்பறிந்து ஆற்றாக் கடை(குறள் 469)

    என்று கட்டுப்பாடு விதித்திருக்க, புறநானூற்றுப் புலவர் பெருஞ்சித்திரனாரின் பண்பு ‘வறுமையுற்ற காலத்து எவரும் உதவமுன்வராத நிலையிலும் வாராதுவந்த பொருளை வைத்துக்கொண்டு நீண்டநாள் வாழ்வோம் என்று எண்ணாமல் எல்லாருக்கும் கொடுக்கச்சொல்லும் பண்பு போற்றத்தகுந்தது.

    3.3 பொய்கூறாமை:-
    ‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானே’ என்று கற்பனை கலந்து பாடும் புலவர்கள் குறித்த கருத்து இக்காலத்தில் நிலைத்திருக்க, புறநானூற்றுக் காலப்புலவர்கள் வறுமையைக்காரணம் காட்டி பொய்கூறாதவர்கள் என்பதனை ஆய் அண்டிரனைப்பாடும் மருதனிளநாகனாரின்,

    வாழ்தல் வேண்டிப்
    பொய் கூறேன்: மெய் கூறுவல்:(புறம் 139)

    என்னும் புறப்பாடல் உறுதி செய்யும்.

    3.4 அஞ்சாமை:-

    அஞ்சிவ தஞ்சாமை பேதைமை யஞ்சுவது
    அஞ்ச லறிவார் தொழில்(குறள்: 428)

    என்பது குறள். இதன்வழி அஞ்சுதல் ஆகாதவற்றிற்கு அச்சம்கூடாது என்பதும் பெறப்படும்.

    முடிமன்னர்களிடையே போர் நடக்கும் பொழுதும் அஞ்சாது புலவர்கள் சென்று சந்து செய்வித்தனர் (புறம்.45). பகை காரணமாக அவர்களின் பிள்ளைகளைக் கொல்ல எண்ணியபொழுது அவர்களின் உண்மைப்பண்பினை அஞ்சாது எடுத்துரைத்துக்காத்தனர். (புறம்.46). கொடுவினைகளைப் பட்டியலிடும் ஆலத்தூர் கிழார் இவற்றிற்குக்கூடக் கழுவாய் உண்டு ஆனால்,

    “நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன்
    செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென”(புறம் 34)

    என்று செய்நன்றி மறந்தோருக்குக்கழுவாயில்லை என்பார். சோழன் கிள்ளி வளவனை ‘மாமழை சொரியும் துளியினும் பலகாலம்; வாழ்க’ என்று வாழ்த்தியவர், கரூர்வேந்தனின் காவல் மரத்தைக்கிள்ளிவளவன் வெட்டியபோது ‘நாணுத்தகவுடைத்து’ என்று அஞ்சாது இடித்தும் உரைக்கிறார் (புறம்.36).

    3.5 மாறுபட்ட சிந்தனை:-
    போரும் அதன்வழி விளைந்த வீரமும் குறித்துப் பெருமிதமாகப்பேசும் புறநானூற்றில், கணியன் பூங்குன்றனின் பாடல் மாறுபட்ட சிந்தனையை வெளிப்படுத்தும். இந்திய நாட்டின் முன்னாள் முதன்மை அமைச்சர் இந்திராகாந்தி ஐ.நா.அவையில் பேசும் பொழுது எந்நாட்டுப்புலவர்,

    “யாதும் ஊரே யாவருங் கேளிர்
    தீதும் நன்றும் பிறர்தர வாரா”

    என்னும் பாடலை எடுத்துக்காட்டி அதன் ஆங்கில மொழிபெயர்ப்பின்வழி அனைவரையும் வியக்கச்செய்தார் என்பது வரலாறு. பூங்குன்றனின் இப்பாடலின் நிறைவில்,

    “நீர்வழிப் படூஉம் புணைபோ லாருயிர்
    முறைவழிப் படூஉம்”(புறம் 190)

    என்னும் விதி குறித்த நிலையாமைச் சிந்தனையின் வெளிப்பாடாகும். இது குறித்து, “போரிலும் வீரப்புகழிலும் ஏற்பட்ட ஒரு சலிப்பும் அதன் காரணமாகத்தோன்றிய ஒரு நிலையாமை உணர்வும் இத்தகைய பனுவல்கள் தோன்றக்காரணமாகும். வீரநிலைக்காலச் சமூகத்தைத் திருப்பியவையாக இத்தகு கருத்துகள் பெற்ற வெற்றி, தொடர்ந்து தோன்றிய நீதிநூல்கள் பலவற்றிற்கு அடித்தளமாக அமைந்திருக்க வேண்டும்” என்று சங்க இலக்கியத்தில் புறப்பொருள் என்னும் நூலின் வழி (ப.319) தந்துள்ள கு.வெ.பாவின் கருத்து இவண் பொருந்தத்தக்கது.

    4.1 மக்களியல்:-
    மன்னராயினும் புலவராயினும் அவர்களின் முயற்சியாகவும் மக்களுக்காகவே. மக்களை நல்வழிப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சி மட்டுமன்றி, மக்களும் அவர்களைப்பெரிதும் மதித்து வந்துள்ளனர்.

    4.2 நோயற்ற வாழ்வே:-
    நாடு நலம்பெற நோயின்றி அனைவரும் வாழ மக்களும் மன்னரும் அவரவர் கடன்களை ஆற்றவேண்டும் என்னும் உயரிய கருத்தை உள்ளடக்கி, பிசிராந்தையார் தமது செய்யுளை அமைத்துள்ளார். நரையிலாமைக்குக் காரணம் பற்றிக் குறிப்பிடுகையில் மன்னன், பிள்ளை, பணியாளர், மனைவி என்று அனைவரும் அவரவர்களுக்குரிய கடன்களையாற்றுகின்றனர். அதனால் மனத்தில் எவ்விதச் சலனமுமின்றி நிறைவுவாழ்வு வாழ்ந்துவருவதால் கவலையில்லா மனிதனாய் முதுமையில்கூட முடியும் நரைத்தலின்றி வாழ்வதாக, அப்பாடலை யாத்துள்ளார் (புறம்.191)

    4.3 நாடுநலம்பெற:-
    சங்ககாலச் சமுதாயம் பரத்தமையைக்கண்டிக்காத சமூகமாக விளங்கியது. பரத்தமை ஒழுக்கத்திற்குப்பெரிதும் காரணம் ஆடவர்களே. ஆணாதிக்கச் சமூகம் என்பதால் அதனைக் கண்டிக்கத்தயங்கினார். வள்ளுவர் மட்டும் வெளிப்படக்கண்டிக்கிறார். ஆனால் அதனை மறைமுகமாக ஒளவையார் பின்வரும் புறநானூற்றுப்பாடல் வழி வெளிப்படுத்துகின்றார் என்று கருதலாம்.

    நாடா கொன்றோ: காடா கொன்றோ:
    அவலா கொன்றோ: மிசையா கொன்றோ:
    எவ்வழி நல்லவர் ஆடவர்
    அவ்வழி நல்லை: வாழிய நிலனே!(புறம்.187)

    இதன்வழி ஒரு நாடு நல்ல நாடாக இருப்பது அச்சமூகத்தில் வாழும் ஆடவர்களைப் பொருத்தது என்று வெளிப்படுத்துவதன்வழி அக்கால ஆடவர் சமுதாயத்தின் ஒழுக்கக் கேட்டினைச்சாடுகிறார் எனலாம். இப்பாடலில் இக்கால நிலவமைப்பு வெளிப்படுவதை அறிந்து கொள்ளலாம்.

    5.0 முடிவுகள்:-
    புறநானூற்றை ஆய்ந்ததன்வழி பின்வரும் முடிவுகளைப்பெறலாம்.

    ⚫ சமூக மேம்பாட்டுக்கு அரசியலின் பங்கு அளப்பரியது.
    ⚫ மக்களைக்காப்பதை உயிராகவும் மானத்தை அதனினும் மேலானதாகவும் கருதியமை.
    ⚫ புலவர்களைக் குருவாக – அமைச்சராக – நண்பராகப் போற்றல்
    ⚫ பொருட்பெண்டிர் முயக்கம், புலவர் பாடாமை, மக்கள் பழிதூற்றல், இரவலர்க்கு ஈயாமை இழிவு என அஞ்சல்.
    ⚫ புகழுக்காக உயிரைவிடவும், துணிந்தமை; பழிக்காக உலகமே கிடைத்தாலும் பெறவும் மறுத்தமை.
    ⚫ எந்நிலையிலும் எதிர்ப்பில்லா, தவறா, விளம்பரமில்லா குறையாத விருந்தோம்பலைப் போற்றியமை.
    ⚫ பகை முடிக்கப்போர் நிகழ்ந்தாலும் அறவழியிலேயே நிகழ்த்தியமை.
    ⚫ என்பன போன்ற பலவற்றைப் புறநானூற்று மன்னர்கள் வழியும்.
    ⚫ மன்னர்களிடையே பகை தீர்க்கவும் மக்களின் குறைபோக்கவும் அஞ்சாது சென்று இடித்துரைத்தும், இணங்கிடவுரைத்தும்.
    ⚫ வறுமையிலும் செம்மை, பிறருக்கு வாரி வழங்கும் தன்மை
    ⚫ பொருளுக்காகப்பொய் கூறாமலும் மன்னனை நல்வழிப்படுத்தியமை
    ⚫ மக்களுக்கும் மன்னருக்கும் பாலமாக விளங்கியமை
    ⚫ என்பன போன்றவற்றை புலவர்கள் வழியும்…..
    ⚫ மன்னனே உயிர் அறமே வாழ்வுக்கு அடிப்படை, நல்ல சமூகத்திற்கு ஆடவர்களே பெரிதும் காரணம்.
    ⚫ அமிழ்தமாயினும் தனித்து உண்ணாமை
    ⚫ உயிர் கொடுத்தோர் என்பவர் உண்டிகொடுத்தோரே.

    மேற்சுட்டியன உள்ளிட்ட பல, மக்கள் வழியும் பெறப்படும். இம்முடிவுகள் புறநானூற்றின் வழிப்பெறப்படும் கோட்பாடுகளாகக் கொள்ளக்கிடக்கின்றன. நாடாளும் மன்னரை கவிபாடும் புலவன், வாழும் மக்கள் அனைவரும் அறத்தைப் பின்பற்றுவதைக் கடமையாகக்கொண்டவர்கள் என்பது பொது நிலையில் அறிந்து கொள்ளலாம். இவையும் இவையோன்றை எண்ணற்ற பிறவும் புறநானூறு உணர்த்தும் கோட்பாடுகளாகும். இவற்றில் காலத்திற்கேற்ப கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளி வாழ்ந்தால் தனிமனிதன் குடும்பம் சமூகம் சிறக்கும் என்பதில் ஐயமில்லை.

    முனைவர் துரை.குணசேகரன்
    தலைவர், இணைப்பேராசிரியர்,
    தமிழாய்வுத்துறை, ஏ.வி.சி. கல்லூரி,
    மயிலாடுதுறை – 609 305.

    Share
  • கலித்தொகை: கருத்தும் காட்சியும்

    –முனைவர் துரை. குணசேகரன்.

    கலித்தொகை

    எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் சங்க இலக்கியங்கள் ஆகும். இவற்றுள் எட்டுத்தொகையில் இடம் பெற்றிருக்கும் படைப்புகளில் பாவால் பெயர்பெற்றவை இரண்டு. அவற்றுள் ஒன்று கலித்தொகையாகும். கடவுள் வாழ்த்துப்பாடலுடன் அகப்பொருளமைந்த கலிப்பாவால் இயன்ற நூற்றைம்பது பாடல்கள் கொண்டது. பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் முறையால் முறையே பெருங்கடுங்கோன், கபிலர், மருதனிளநாகன், நல்லுருத்திரன், நல்லந்துவனார் ஆகியோரால் 35,29,35,17,33 என்னும் நிலையில் பாடப்பெற்ற நூலின் தொகுப்பாகும். அனைத்தும் நல்லந்துவனாரால் பாடப்பட்டவையே என்னும் கருத்தும் நிலவுகின்றது.(1)

    நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
    பாடல் சான்ற புலனெறி வழக்கம்
    கலியே பரிபாட்டாயிரு பாங்கினும்
    உரிய தாகு மென்மனார் புலவர் (தொல் பொருள்.56)

    என்னும் நூற்பாவால் புலனெறி வழக்கில் பாடுதற்கு ஏற்ற பாவகையில் கலிப்பாவும், பரிபாடலும் ஏற்றவை என்பது புலனாகும். “தரவு, தாழிசை, முதலிய கலியுறுப்புகள் புலனெறி வழக்கிற்கூற்று நிகழ்த்துதற்குரியார் மற்றொருவர்க்கு நன்று கட்டுரைக்குமிடத்து, அக்கருத்தினைத்தொகச்சொல்லியும் தூவாதநீக்கி வகுத்துரைத்து வலியுறுத்தியும் முடிவின்கண் பயனால் நகச்சொல்லியும் நன்றி பயத்தற்கேற்ற வெவ்வேறோசையும் அமைப்பும் உடையவாகத்திகழ்தலும் இதனது சிறப்புரிமைக்கு ஏதுவாதல் வேண்டும்” என்னும் ந.மு.வேங்கடசாமி நாட்டார் கூற்றும் இதனை மெய்ப்பிக்கும். சிறப்புகள் பலகொண்ட கலித்தொகை கூறவந்த அடிக்கருத்துகளுக்கேற்ப காட்சியமைப்புகள் அமைந்திருக்கும் சிறப்புகள் குறித்து ஆராயுமுகத்தான் அமைகிறது இக்கட்டுரை.

    நான்கில் ஐந்து:
    இயற்கையோடு இயைந்து வாழ்வு நடத்தியவன் சங்கத்தமிழன். தமிழகத்தை நான்கு நிலமாகவும் அவற்றுள் வாழும் மக்களின் ஒழுக்கத்தை ஐந்தாகவும் பாகுபடுத்தினர். தொல்காப்பியர் நிலத்தை முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று முறைப்படுத்தி அதற்கேற்ப திணையை அமைத்தார். நிலமில்லாப்பாலைக்கு கடைசி இடமளித்தார். ஆனால் கலித்தொகை பாலைத்திணைக்கு முதலிடமளித்ததுடன் தொல்காப்பியர் அளித்த முறைவைப்பை குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்றும் மாற்றியமைத்துள்ளது குறிப்பிடத்தகுந்தது.

    “கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஒழுக்கங்களைக்கூறி உள்ளடக்கத்தில் புரட்சி செய்த கலித்தொகை, உருவத்திலும் அகநானூற்றைத்தவிர எந்த நூலிலும் முதலிற்கொள்ளாத பாலையை முதலிற்கொண்ட திணைவைப்பு முறையிலும் புரட்சிக்கோலத்தைக் கொண்டிலங்குகிறது” என்பார் ஆய்வாளர்.(2) பாலைக்கு நிலத்தை தமிழின் முதல் காப்பிய ஆசிரியர் இளங்கோவும் நம்பியகப்பொருள் ஆசிரியரும் வெளிப்படுத்துகின்றனர் என்றாலும் முல்லையும், குறிஞ்சியும் வறட்சியின் காரணமாக பாலை நிலமாகத்தோன்றும் என்ற குறிப்பினால் தழிழகத்தில் பாலைக்கு நிலமில்லை என்பது பெறப்படும். “கற்றறிந்தார் ஏத்தும் கலியில்” ஐந்து திணையிலும் இடம் பெறும் பாடல்களில் ஒரு சிலவற்றின் கருத்துக்கேற்ற காட்சிகளை ஆராயும் நோக்கில் அமைகிறது இக்கட்டுரை.

    பாலைத்திணை – சுரத்தின் கொடுமை:
    தலைவியைப் பிரிந்து பொருளீட்டத்தலைவன் செல்லும் காட்டின் தன்மையை,

    வறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்
    சிறியவன் செல்வம்போற் சேர்ந்தார்க்கு நிழலின்றி
    யார்கண்ணு மிகந்துசெய் திசைகெட்டா னிறுதிபோல்
    வேரொடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலி
    னலவுற்றுக் குடிகூவ வாறின்றிப் பொருள்வெஃகிக்
    கொலையஞ்சா வினைவராற் கோல்கோடி யவனிழ
    லுலகுபோ லுலறிய வுயர்மர வெஞ்சுரம் (கலி. 10:17)

    என்று வருணிக்கின்றார் சேரமன்னன் பெருங்கடுங்கோ. இதில் வறிய இளையவனின் கொடுமை, பெருந்தன்மையில்லாதவனிடத்துள்ள பயனில்லா செல்வம், வரம்புமீறி வம்பு செய்வானுக்கு வரும் கேடு, கொடுங்கோலன் ஆட்சியில் வாழும் மக்களின் பொலிவிழப்பு முதலியவற்றை எடுத்துக்காட்டி இவற்றைப்போன்று நிழலில்லா மரங்களின் கிளைகள் மட்டுமன்றி வேர்களும் வெம்பிநிற்கும் காட்சியை அழகுடன் படம்பிடித்துக்காட்டுகின்றார்.

    ஆரளைக்கள்வர்களின் அறமற்றசெயல்:
    தலைவன் குறிப்பிட்ட பாலை நிலத்தின் கொடுமையை எடுத்துரைத்து, துணையாக எம்மையும் அழைத்துச்செல் என்று தலைவி கூறுகின்ற நிலையில்,

    “மரையா மரல்கவர மாரி வறப்ப
    வரையோங் கருஞ்சுரத் தாரிடைச் செல்வோர்
    சுரையம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர்தம்
    உண்ணீர் வறப்பப் புலவர்வாடு நாவிற்குத்
    தண்ணீர் பெறாஅத் தடுமாற் றருந்துயரங்
    கண்ணீர் நனைக்குங் கடுமைய காடென்றால்”(கலி.6:1-6)

    என்று குறிப்பிடும்பொழுது பாலைநிலத்து ஆரளைக்கள்வர்களின் கொடுஞ்செயல் நெஞ்சை பதைபதைக்கச்செய்கிறது. திருமணமான சூழலில் பொருளீட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்துவரும் தலைவன் ஈட்டிய பொருளுடன் விரைந்து இல்லம் திரும்புகிறான். அவனுடைய பயணநேரத்தைவிட பிரிவின் கொடுமையினால் அவனுடைய மனம் விரைந்து தலைவியை அடையும் நிலை. இந்தச்சூழலில் பொருளீட்டிவரும் தலைவனை வழிமறித்து ஆறளைக்கள்வர்கள் பொருளை வழிப்பறி செய்கின்றனர். பொருளை அளிக்க மறுக்கும் தலைவன் மீது அம்புமழை பொழிகின்றனர். யாருடைய அம்பு எய்தபின் குருதிமிகுந்த வேகத்துடன் பீறிட்டு அடிக்கின்றது என்று பார்த்து கும்மாளமிடுகின்றனர். மிகுதியான குருதிவெளியேறியதால் வறட்சி ஏற்படுகிறது. வறட்சியினால் நீர் கேட்டு கீழே விழுகிறான் தலைவன். அவன் படும்துன்பத்தைப்பார்த்து மகிழ்கின்றனர் கள்வர்கள். இதனால் வருகின்ற கண்ணீரை நாவால் நக்கி ஒரு சிறிய நேரம் உயிர்வாழும் நிலை. தலைவன் பொருள் கொண்டு வரவில்லை என்றாலும் அவன் உயிருக்கு இறுதிதான். (கலி.பா.4:4-5) இப்படிப்பட்ட கொடுமையுடைய காட்டுவழியில் செல்லுகின்ற தலைவனுடன் தலைவியும் வருகின்றேன் என்று கூறுவதால் செலவழுங்கும் நிலை உருவாகும்.

    காட்டுக்குச் செல்லவிருக்கும் இராமனுடன் செல்லவிழையும் சீதையிடம், காட்டின் கொடுமையை எடுத்துரைக்கின்றான் இராமன். அப்போது சீதை, “நின்பிரிவினும் சுடுமோ பெருங்காடு”
    என்று குறிப்பிடும் நிகழ்வு இவண் ஒப்பு நோக்கத்தக்கது. பாலைநிலத்தின் கொடுமையைப் பளிச்சிடச்செய்ததில் கலித்தொகை முதன்மை வகிக்கிறது எனலாம்.

    உலக இயல்பு:
    தலைவனின் பிரிவு குறித்து ஆற்றாளாய தலைவியிடம் தோழி,

    “உன்னுடன் வழிமொழிந் திரக்குங்கால் முகனுந்தாங்
    கொண்டது கொடுக்குங்கால் முகனும்வே றாகுதல்
    பண்டுமிவ் வுலகத் தியற்கை யஃதின்றும்
    புதுவதன்றே…….” (கலி.22:1-4)

    என்று உலக நடப்பு குறித்து எடுத்துக்காட்டி ஆற்றுவித்தது. இதேபோன்று பொருளீட்ட தலைவியைப் பிரிந்து செல்ல விழையும் தலைவனிடம், ஒரேயாடையை இருவரும் போர்த்திக் கொள்ளும் நிலை வந்தாலும் ஒருவரையொருவர் பிரியாதிருப்பவருடைய வாழ்க்கை,

    “ஒரோஒகை தம்முட் டழீஇ யொரோஒகை
    ஒன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினும்
    ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” (கலி.18:9-11)

    என்று இளமை நிலயாமையை முதன்மைப்படுத்தி சேர்ந்திருப்போர் வாழ்வின் சிறப்பினை எடுத்துக்கூறி தோழி தலைவனின் செலவழுங்குவித்த நிகழ்வு குறிப்பிடத்தக்கது.

    உடன்போக்கை அறமெனல்:
    தலைவனைப்பிரிந்த தலைவியை ஆற்றுவித்தல், தலைவனை செலவழுங்குவித்தல் இவைமட்டுமன்றி தலைவனுடன் உடன்போக்கு சென்ற தலைவியைத்தேடிச்செல்லும் செவிலித்தாய்க்கு முக்கோட்பகவர் உரைக்கும் அறநிலை தத்துவம் நிறைந்ததாக உள்ளது. பாலைத்திணையிலுள்ள முப்பத்தைந்து பாடலில் பின்வரும் ஒரே ஒரு பாடலே களவுத்துறையிலமைந்த பாடல் என்பது குறிக்கத்தகுந்தது.

    முக்கோலையும் குடையையும் கொண்டு செல்லும் அந்தணர்களைப்பார்த்து செவிலி இச்சுரத்திடை,

    “என்மக ளொருத்தியும் பிறன்மக னொருவனுந்
    தம்முளே புணர்ந்த தாமறி புணர்ச்சியை
    ரன்னா ரிருவரைக் காணீரோ பெரும”(கலி.9:6-8)

    என்று வினவ, கண்டோம்; மாணிழை மடவரலாகிய தலைவிக்குத் தாய் போன்றீர் என்று வினவலுடன், பின்வரும் அறிவுரையை அளிக்கின்றார்:

    ‘சந்தனம் பூசிக்கொள்பவர்க்கன்றி பிறந்த மலைக்கும், வெண்முத்து அணிபவர்க்கன்றி நீருக்கும், இன்னிசை கேட்பவர்க்கன்றி யாருக்கும் பயனில்லை. இவையொத்தே நும்மகளும் தலைவற்கன்றி நுமக்குப் பயன்படாள். உடன்போக்கு சென்ற இணையருக்கு எவ்வித துன்பமும் தராதீர். அவர்கள் சென்றவழி அறவழியின் பாற்பட்டதே”(கலி.9:9-23)

    திருமணமான பெண்ணைப்பார்த்து வயிற்றில் ஏதாவது புழுப்பூச்சி உண்டா என்று கேட்பது இன்னும் வழக்கமான ஒன்று. “புழு” என்றால் ஆண்பிள்ளை என்றும் “பூச்சி” என்றால் பெண்பிள்ளை என்றும் குழுஉக் குறி முறையில் வினவுவதாகும். இதற்குக்காரணம் புழுவானது வாழுங்காலம் வரை அதே இல்லத்தில் வாழ்ந்து மறைவதும், பூச்சியெனில் தக்ககாலத்தில் வேறொரு இடத்திற்குப்பறந்து சென்று வாழ்க்கை நடத்துவது என்றும், மறைபொருளை உணர்த்துவதாகும். ‘நாத்தனார்” என்று வழங்கும் உறவும் இதனை ஒத்ததே. ‘நாற்று அன்னார்” என்பதே இதன் இலக்கிய வழக்காகும். அதாவது விதைக்கப்பட்ட நாற்றங்காலுக்கு நாற்று பயன்தராது. அது பிடிங்கி நடப்படும் வேறொரு வயலுக்கே பலன்தருவதைப் போன்று தமிழ்ப்பண்பாட்டில் பிறந்தகத்தில் பெண்பிள்ளை பலன்தருவதில்லை. வாழ்க்கைப்பட்டுச் செல்லும் இல்லத்திற்கே பயன் என்னும் இன்றைய நிலை இவண் ஒப்பு நோக்கத்தக்கது.

    கொடியகாட்டில் இளகிய உள்ளம்:
    பொருள்வயிற்பிரிந்து சென்ற தலைவன் மீண்டு வருவான் என்பதற்குத் தலைவி, தலைவன் முன்பு உரைத்த பின்வரும் நிமித்தங்களைத் தோழியிடம்கூறி அமைதி கொள்கிறாள். தலைவன், செல்லும் வழியில்,

    துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப்
    பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவு முரைத்தனரே:
    ………..
    அன்புள் மடப்பெடை யசைஇய வருத்தத்தை
    மென்சிறக ராலாற்றும் புறவெனவு முரைத்தனரே:
    ……….
    இன்னிழ லின்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
    தன்னிழயைக் கொடுத்தளிக்குங் கலையெனவு முரைத்தனரே (கலி.11:8-17)

    என்று தலைவன் முன்பு கூறிய காட்சிகளைத் தோழிக்கு எடுத்துக் காட்டுகின்றாள். இதன்படி …
    கன்று கலக்கிய சிறுதண்ணீரைப் பிடிக்கு ஊட்டிப்பின் களிறு உண்டது;
    வெயிலின் கொடுமையால் வருந்திய பெண்புறாவின் வருத்தத்தை ஆண்புறா தன் சிறகால் போக்கியது;
    நிழலின்றி வருந்திய பெண்மானுக்குத்தன்நிழலை அளித்தது ஆண்மான்.

    இக்காட்சிகள் பொருளீட்டச்சென்ற தலைவன் மனத்தைமாற்றும். அவன் திரும்பி வருவான். இது குறித்துப்பல்லியும் பலன் கூறியுள்ளது என்று தலைவனின் வரவுகுறித்து ஐயுற்ற தோழிக்குத் தலைவி பதிலளிக்கிறாள். மிருகங்களின் மேற்காணும் செயல்குறித்து ஐயுறத்தேவையில்லை. “இன்னும் இத்தன்மைகளை மிருகங்கள் பலவற்றிடம் காணலாம். மீன்களுள் “போத்து” என்னும் ஒருவகை மீன் தன் பெடையிட்ட முட்டைகளைத்தன் வாயிலேயே தாங்கிக்கொண்டு பொரிக்கு மனவிற்கு உணவு கொள்ளுவதில்லை என்று ஞானாம்பாள் அம்மையார் குறிப்பிடுவது சிந்தனைக்குரியது.(3)

    குறிஞ்சிக்கவி:
    கபிலர் பாடியதாகக்கருதப்படும் குறிஞ்சிக்கலியில் நாடக அமைப்பில் காணப்படும் பாடல்கள் சில உள்ளன. அவற்றுள் தலைவி தோழிக்கு அறத்தொடு நிற்கும் நிலையில் பாடப்பட்ட ‘சுடத்தொடீ கேளாய்” எனும் பாடல் (51) குறிப்பிடத்தகுந்தது.

    தோழி அறியாமல் தம் மனத்தில் குடிக்கொண்ட தலைவனின் செயல்குறித்து தலைவி குறிப்பிடுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. சிறுவயதில் தோழியுடன் தாம் கட்டிய மணல் வீட்டைக்கலைத்தும் கூந்தலில் சூடிய பூவினைப்பறித்தும் வரிப்பந்தினைக்கவர்ந்தும் சென்ற பட்டித்தனமான சிறுவன், தலைவி பருவம் எய்தியபின் அவளைக்காணவியலாமையால் அவள் இல்லம் நோக்கி வருகிறான். தலைவன் இல்லத்தில் தாயும் மகளும் இருக்கின்றனர். தலைவன் தண்ணீர்கேட்க தாய் மகளிடம் பொறுப்பை ஒப்படைக்க வந்திருப்பவன் யார் என்று அறியாது நீர் கொண்டுவந்து கொடுக்கிறாள். கொடுத்த தண்ணீரை வாங்காமல் அவளின் வளை முன்கையைப் பற்றுகிறான். எதிர்பாரதா நிகழ்வு என்பதால் தலைவி பெண்ணுக்கே உரிய நாணாத்தினால் “இவன் ஒருவன் செய்தது காண்” என்று அலற, ஒடிவருகிறாள் தாய். அப்போதுதான் வந்திருந்தவன் தன்மனத்தில் இடம் பிடித்தவன் என்பதை அறிகிறாள். இப்போது தாயிடமிருந்து அவனைக்காப்பாற்ற வேண்டியசூழல் உண்மையைச்சொன்னால் தலைவனின் நிலை பரிதாபமாகிவிடும். எதுவும் சொல்லவில்லை என்றால் தாய்க்கு ஐயம் வந்துவிடும். இக்கட்டான சூழலில் “உண்ணுநீர் விக்கினான்” என்று ஒரு பொய்யைச் சொல்லி, தலைவனைக்காக்கிறாள். தாயும் உண்மையென்று நம்பி அவளின் “முதுகைப்புறம் பழித்து” நீவிவிட, அவனோ தலைவியைக் “கொல்வான் போல் கடைக்கண்ணால் நோக்கி நகைக்கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்” என்று தோழியிடம் தலைவி நடந்த கதையைக் கூறுகிறாள்.

    மேற்காணும் நிகழ்வு மூவரைக் கொண்ட ஓரங்க நாடகம் போன்று அமைந்திருப்பது சிறப்பாகும். இயல்பாக நடக்கும் கதைபோன்று இருப்பினும் அதன்வழி தலைவி தோழிக்குத்தம் உள்ளக்கருத்தை வெளிப்படுத்துகிறாள். தலைவன் தலைவி இருவரும் நேருக்கு நேர்பார்க்க, தலைவியின் தாய் தலைவனின் பின்புறம் தலைவியின் முகத்தைப்பார்க்கும் நிலையில் நிற்கிறாள். அவனுக்குத் தலைவனின் முகம் தெரிய வாய்ப்பு இல்லை. தலைவனோ தலைவி அலறியதால் அவளைக் கொல்வது போல் நோக்கினாலும் தன்னைக் காப்பாற்றியதால் காதல் நகையைத் தொடர்ச்சியாக வீசுகிறான். அதனால் “நகைக்கூட்டம்” என்ற தலைவி, நிறைவாக “அக்கள்வன் மகன்” என்று சொல்லும் பொழுது இயல்பான மக்களின் பேச்சு வழக்கில் அமைவது போன்று “திருட்டுப்பயபிள்ளை” என்று பெற்றெடுத்த தந்தையைத் திட்டுவது போன்று இருந்தாலும், தன் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட ஆடவன் என்பதை உள்ளுறையாகத் தோழிக்கு உணர்த்தி, அறத்தொடு நிற்கிறாள். இது நாடகப்பாங்கில் அமைக்கப்பட்ட ஒரு சிறுகதையாக அமைந்து சிறைக்கிறது. தலைவியின் தாய் அருகில் இருந்தாலும் அவள் அறியாத நிலையில் இந்நிகழ்ச்சி அரங்கேறுவது பண்பாட்டுச் சிறப்புமிக்க பாடலாசிரியரின் தனித்திறமாகும். விரும்பிய அடிக்கருத்திற்கேற்ற காட்சியமைப்பு சிறக்கிறது என்பது வெளிப்படை. இதுபோன்று கலித்தொகையில் பலபாடல்கள் உள்ளன.

    காமர்கடும்புனல்:
    குறிஞ்சிக்கலியின் முப்பத்தொன்பதாம் பாடலின் தொடக்கமாக இடம் பெறுவது இத்தொடர். புனலில் குளிக்கும்பொழுது அடித்துச்செல்லப்பட காப்பாற்றிய ஆடவனை விரும்புகிறாள் தலைவி. தாய் கேட்கும் கேள்விகளுக்குப்பதில் சொல்ல வேண்டிவரும் என்பதற்காகத்தோழி தாம் குறித்த புனலின் தன்மையை இவ்வாறு கூறித்தொடங்குகிறாள். தொடக்கமாக புனலுக்குக் கொடுத்த அடைமொழிகளே காட்சியமைப்பில் சிறப்புடன் தாயைச்சமாளிக்கும் விதத்தில் அமைந்துள்ளன.

    ஆடவன் காப்பாற்றவேண்டிய நிலைக்கு ஏன் சென்றீர்கள்? அந்தச்சுனையில் ஏன் குளித்தீர்கள்? நீர்நிலையில் அடித்துச் சென்றதற்கு என்ன காரணம்? என்றெல்லாம் தாய்கேட்பாள் என்பதற்காக அந்தப்புனல் காண்பாரை ஈர்க்கக்கூடியது என்பதால் அது “காமர் புனல்” என்று சொல்லுகின்றாள். அதுமட்டுமன்றி அப்புனலில் ஏன் தடுமாற்றம் ஏற்பட்டது என்பதற்காக “கடும்புனல்” என்னும் சொல்லைப்போட்டாள் தோழி. புனலில் அடையாக வரும் “காமர்” “கடும்” என்னும் பெயரடைகள் தோழியின் பேச்சுத்திறத்திற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். இக்காட்டுகள் வழி தாயின் கோபத்திற்கு ஆளாகாமல் தப்பித்துக் கொள்வதற்கும் தலைவியைக் காப்பாற்றிய அவனே அவளின் உள்ளத்தைக் கவர்ந்தவன் என்று அறத்தொடு நிற்றலுக்கும் இத்தொடரின் வழி உணர்த்தும் காட்சிகள் வலிமை வாய்ந்தவையாகும். இங்குச் சொற்செட்டுடன் காட்சியமைப்பும் படிப்போரை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

    மருதம் – ஊடல் தீர்க்கும் உவமைகள்:
    கலித்தொகையில் சற்றொப்ப முந்நூற்றைம்பத்தாறு உவமைகளுக்குமேல் பயின்று வந்துள்ளன. அவை பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தல் என்னும் அமைப்பில் முறையே 113:59:30:40:11 என்றும், கடவுள் வாழ்த்தில் மூன்றும் ஆகும் என்று விளக்குவார் தெசிணி.(4) இவ்வகையில் உவமை நலத்தால் சிறந்திருக்கும் கலித்தொகையின் மருதக்கலியில் தலைவியின் ஊடலால் தலைவன் கூறும் உவமை மனங்கொளத்தக்கது.

    “யாரிவன் எங்கூந்தல் கொள்வான்…..” என்று ஊடி “வாரல் நீ வந்தாங்கே மாறு” என்று வாயில் மறுத்த போது தலைவன், உடலும் உயிரும் ஒன்றாக, தலை இரண்டாகிய புள்ளின் இருதலையில் ஒன்று மற்றொன்றுடன் போர்செய்வதைப்போல உன் செயல் இருப்பின் என்னுயிர் நிற்கும் வழியாது? என்று உருக்கமாக எடுத்துரைக்கிறான்.

    இதனை,

    “…………ஒருயிர்ப் புள்ளின் இருதலை யுள்ளொன்று
    போரெதிர்ந் தற்றாப் புலவல்நீ கூறினென்
    ஆயருயிர் நிற்குமா றியாது” (கலி.89:4-6)

    என்று கலித்தொகை காட்டும். இவ்வினவலில் உள்ள உவமை தலைவியில் ஊடல் தீர்வதற்கு ஏற்றவாறு அமைந்து சிறக்கிறது. சங்க இலக்கியத்தின் வேறொரு படைப்பில் “இருதலைப்புள்ளின் ஓருயிர் அம்மே” என்று தலைவி தோழியைக்குறிப்பிடல் இவண் ஒப்பு நோக்கத்தக்கது.

    தந்தைபோலிரு – தந்தையாயிராதே:
    தலைவன் மீது ஊடல் கொண்ட தலைவி தன் மகனிடம் தந்தையின் குணத்தில் எதை ஒத்திரு, எதை ஒவ்வாதே என்று குறிப்பிடுமிடங்கள் நெகிழ்ச்சிக்குரியனவாக உள்ளன. பகைவெல்லும் திறத்தில் தந்தையாயிரு, ஒன்று கலந்த தோள் நெகிழச்செய்யும் கொடுமை நிலையில் அவராயிராதே என்னும் பொருள் பட,

    கன்றிய தெவ்வர்க் கடந்து களங்கொள்ளும்
    வென்றி மாட்டொத்தி பெருமமற் றொவ்வாதி
    ஒன்றினேம் யாமென் றுணர்ந்தாரை நுந்தைபோல்
    மென்தோள் நெகிழ விடல் (கலி.86:13-16)

    என்று மகனுக்குத்தாய் உரைக்குமிடம், ஈன்று புறந்தருதல் மட்டுமின்றி சான்றோனாக்குவதிலும் சங்ககாலத்தாய்க்கு இருந்த பங்களிப்பு புலனாகும். இக்காட்சி தலைவியின் பிரிவுத்துயரத்தைப் படம்பிடித்துக்காட்டும் சிறந்தகாட்சியாகும்.

    முல்லைக்கலி:
    கலித்தொகை பாடியோரில் இருவர் அரசர்கள் அவர்களில் முல்லைக்கலியின் ஆசிரியரான சோழன் நல்லுருத்திரனும் ஒருவர். இப்பகுதியில் சங்கவிலக்கியங்களில் வேறெங்குமே இடம்பெறாத ஏறுதழுவல் பகுதி குறிப்பிடத்தகுந்தது. பிற கலித்தொகைப்பிரிவினின்னும் மிகக்குறைந்த பாடல்களாக இப்பிரிவில் பதினேழு பாடல்கள் அமைந்திருப்பினும் ஒவ்வொரு பாடலும் மிகுதியான அடிகளைக்கொண்டவை. வீரத்தின் விளைநிலமாய் சங்கத்தமிழர் விளங்கினர் என்பதை, புறப்பாடல்கள் மட்டுமன்றி அகப்பாடல்களும் சிறப்புறக்காட்டுகின்றன என்பதற்கு இம்முல்லைக்கலியே சான்று. கலித்தொகை காலத்தால் பழமை வாய்ந்ததாக இருப்பினும் புதுக்கவிதை போன்று.
    ஏறுதழுவும் காட்சியை,

    எழுந்தது துகள்
    ஏற்றனர் மார்பு
    கவிழ்ந்தன மருப்புக்
    கலங்கிணர் பலர் (கலி.102:21-24)

    என்று படம்பிடிக்கிறது. “ஏறு தழுவலில் வெற்றிபெறாத ஆடவரை ஆயர்மகள் புல்லாள்” என்பது பெண்டிரும் வீராங்கணைகளாக விளங்கியமைக்குச் சான்றாகும்.

    தாயின் நெஞ்சம் தோழியாக….:
    ஏற்றிணை வெற்றிகொள்ளும் ஆயனை உள்ளத்தில் ஏற்றிக்கொள்ளுகின்றாள் ஆயர்மகளொருத்தி. ஆயன் சூடியிருந்த கண்ணியைக்கொம்பிலே ஏந்தி வீசியது ஏறு. அது ஆயர் மகளின் கூந்தலிலே வந்து விழுந்தது. வீழ்ந்த கண்ணியைத்தலையிலே சூடிக்கொண்ட அவள், தான்சுற்றிக்கொள்ள ஏற்றகொழுகொம்பாக அவனை ஏற்றுக்கொண்டாள். இச்செயல்கண்டு தாய் கோபம் கொள்வாளோ என்று ஏங்கிய தலைவிக்குத் தோழி,

    ஆயர் மகனாயின் ஆயமகள் நீயாயின்
    நின்வெய்யனவனாயின் அவன்வெய்ய நீயாயின்
    நின்னைநோ தக்கதோ இல்லைமன்

    என்று கூற, அது கேட்ட தலைவி,

    …………. நின்நெஞ்சம்
    அன்னை நெஞ்சாகப் பெறின் (கலி.107:20-23)

    என்று வேண்டுகிறாள். ஐப்பான் நாடு அளவிலே சிறியதாக இருப்பினும் அங்கு வாழும் மக்களின் மனமே விரிந்து பரந்தது என்பார்கள். காரணம் பணிபுரியும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் முன், முதலாளியாக இருந்து இது நம்முடைய தொழிலகமாயின் பணியாளர் கேட்கும் உரிமையைத்தருவோமா என்று எண்ணிச்செயல்படுவர். தொழிலதிபராயின், இத்தொழிலகத்தில் நாம் தொழிலாளியாக இருந்தால் இப்போராட்டத்தைச் செய்வோமா என்று என்று எண்ணிச் செயல்படுவார்களாம். அதனால் போராட்டமே நடைபெறாது; நடைபெற்றால் அது நடைபெற வேண்டிய ஒன்றாகவிருக்கும் என்பார்கள். காரணம் தாம் எதிரியின் நிலையில் இருந்து எண்ணிச் செயல்படுவதே காரணம். அது போன்று முல்லைக்கலியில் காதல் வயப்பட்ட தலைவிக்கு உடன்பாடான பதிலை அளிக்கும் தோழியின் நெஞ்சு, தாயின் நெஞ்சாக ஆகவேண்டும் என்னும் எதிர்பார்ப்பில் நிகழ்த்தப்பெறும் உரையாடல் எண்ணி வியக்கத்தக்கது. இக்காட்சிகளை அடிக்கருத்துக்கேற்ப நயமாகவும் வலுவாகவும் ஆசிரியர்கள் அமைத்திருக்கும் திறம் பாராட்டத்தக்கது. இதுபோன்று கருத்திற்கேற்ப காட்சிச் சிறப்புடைய பாடல்கள் பல உள்ளன.

    நெய்தற்கலி:
    பாலைக்கலியை அடுத்து மிகுதியான உவமைகள் கொண்ட பகுதியாக நெய்தற்கலி விளங்குகின்றது. காட்சியைக்கற்போர் மனத்தில் எளிதின் உணர்த்த இவ்வுவமைகள் பெரிதும் பயன்படுகின்றன. பிரிவிடை ஆற்றாது மாலைப் பொழுது கண்டு வருந்திய தலைவி அவன் வரவு கண்டு மகிழும் காட்சியைக் கண்டோர் கூறுவதாகக் கலித்தொகையின் நூற்றியிருபதாம் பாடல் அமைந்துள்ளது. மருட்சி மெய்ப்பாடு மிகுந்துள்ள இப்பாடலில் “வெந்ததோர் புண்ணில் வேல்கொண்டு நுழைப்பான் போல்” காதல் நோய் கொண்டவரை கலக்கமுறவந்த மாலையோ என்று வினவுதல் போன்று, ஏழு உவமைகள் வந்து சொல்லவந்த கருத்தினை, பசுமரத்தாணி போல் நெஞ்சில் காட்சிகள் வழி பதிய வைக்கின்றன. சங்க காலத்திற்குப் பிறகு தோன்றிய காப்பியங்களுக்கு உவமையளவில் கொடைகள் பல நல்கியமையும் புலனாகும். வரைவுடம்படாத்தலைவனுக்கு அறிவுரை கூறி வரைவுகடாயவிதத்தில் அமைந்திருக்கும் பாடலின் உள்ளுறைக் கருத்தும் வாழ்வியலின் விளக்கமும் எக்காலத்தும் எவரும் ஏற்றுப் பின்பற்ற வேண்டிய வாழ்வியல் பெட்டகமாகும்.

    ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை, பொறை உள்ளிட்ட ஒன்பது குணங்கள் ஒவ்வொரு குடிமகனுக்கும் வேண்டும் என்னும் உயரிய நோக்கில் அவற்றிற்கு சொற்கட்டுடன் தரப்பட்டிருக்கும் வரையறை மனங்கொள்ளத்தக்கது. இப்பாடலில் இடம் பெறும்,

    நீர்மலி கரகம்போல் பழந்தூங்கு முடத்தாழை
    ……
    தீம்பா லுண்பவர் கொள்கலம் வரைதல்(கலி. 133:4, 17)

    உவமைகள் அடிக்கருத்தின் உள்ளுறையாய் அமைந்து காட்சிச்சிறப்புடன் கருத்தைக்கவருகின்றன. “ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல்” தொடங்கி “பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்பது வரை தலைவனுக்கு உரைக்கப்படும் அறிவுரை மனித இன உயர்விற்கு வரையறுக்கப்பட்ட வாழ்வியல் சிந்தனைகளாகும்.

    இவ்வகையில் கருத்தைக்கற்பவர் நெஞ்சில் பதிய வைப்பதற்கேற்ற காட்சியை அமைத்ததில் கலித்தொகை முதன்மையான இடம்பெறுகின்றது. அதனாற்றான் இது கற்றோர் ஏத்தும் கலியாகி மற்றவரையும் கற்கச்செய்யும் மாசற்ற படைப்பாகிறது. இதனை ஆய்ந்ததன் வழிப் பின்வரும் முடிவுகள் பெறப்படுகின்றன:

    • உலக வழக்கு, நாடக வழக்குடன் புனைந்துரையும் கலந்த புலனெறி வழக்கிலும் காட்சிகள் அமைந்து வெளிப்படுத்த வேண்டிய கருத்துகளைத் தெற்றெனப் புலப்படுத்தல்.

    • நிலம், திணை முறைவைப்பில் வெளிப்படுத்தும் கருத்தின் இன்றியமையாமைக்கேற்ப மாற்றம்.

    • ஓராடைக்குள் இருப்பதால் மட்டுமே ஒற்றுமை என்பதைவிட இருவரின் ஒருமித்த எண்ணத்தில் ஒருங்கிருத்தலில் நடைபெறும் வாழ்க்கையே வாழ்க்கை என அறிவுறுத்தல்.

    • பிறறறியா தம்முளே புணர்ந்த புணர்ச்சியாம் காதல் மணத்தைத்தாமறி புணர்ச்சி என்று பெயர் சூட்டியதுடன் அறவழிகளில் அதுவுமொன்று எனல்.

    • கருத்துப்புலப்பாட்டில் ஓரங்க நாடகவமைப்பில் அமைந்த பல பாடல் காட்சிகள் சிறப்பிடம் பெறல்.

    • செதுக்கிச் சேர்ப்பது போன்று சொற்செட்டுடன் அமைந்துள்ள சொல்லாட்சிகள் பல கருத்துப் புலப்பாட்டில் வெற்றிபெற்றுள்ளமை.

    • உவமைகளுடன் வெளிப்படுத்தும் காட்சிகள் உள்ளம் கொள்ளை கொள்ளும் வகையில் பசுமரத்தாணியாய் பதியவைப்பதில் முதன்மை பெறல்.

    • ஈன்று புறந்தந்த தாய்க்குப் பிள்ளையைச் சான்றோனாக்குவதிலும் பங்குள்ளமை வெளிப்படல்.

    • தமிழிலக்கியங்களில் தனித்ததொரு நிலையில் ஏறுதழுவும் காட்சியைப் படம்பிடித்தல், வெளிப்படுத்தலில் பழமைக்குப் பழமையாய், பாவகையில் கலிப்பாவென்றாலும் எளிய, புதிய சொல்லாட்சியையும் புதுக்கவிதை போன்று பயன்படுத்தியமை.

    • ஒருவர் தாமாக இருந்து எண்ணுதல் மட்டுமன்றி, பிறராக இருந்து எண்ணும் சூழலும் இடம் பெற்றுள்ளமை.

    • உள்ளுறை, இறைச்சி முறையில் அடிக்கருத்து காட்சி அடிப்படையில் சொற்செட்டு, தத்துவ வரையறைகளைத் தந்து வாழ்வியல் பெட்டகமாக அமைந்துள்ளமை.

    • இவையும் இவை போன்ற பிறவும் இக்கட்டுரையின் வாயிலாகப் பெறப்படுகின்றன.

     

     

    குறிப்புகள்:-
    1.ந.மு.வேங்கடசாமி நாட்டார் (க.ஆ) கலித்தொகை மாண்புகள், கலித்தொகைச் சொற்பொழிவுகள் (சென்னை : கழகம், ம. பதி.2001).

    2.நா. ஆறுமுகம், கலித்தொகை : ஓர் ஆய்வு, (சென்னை : பாரிநிலையம், 1985), ப. 21.

    3.கே. ஞானாம்பாள் அம்மையார் (க.ஆ), ஷபாலைக்கலி| கலித்தொகைச் சொற்பொழிவுகள், ப.93.

    4.தெசிணி, கலித்தொகையும் முத்தொள்ளாயிரமும்: ஒரு திறனாய்வு (சென்னை: அருணா விஜயநிலையம், 2002) பக்.20-73.

     

     

     

     

     

    முனைவர் துரை. குணசேகரன்
    தலைவர், தமிழாய்வுத்துறை
    ஏ.வி.சி.கல்லூரி (தன்னாட்சி)
    மயிலாடுதுறை – 609305.

    Share
  • நக்கீரநோக்கில் நற்றமிழ்ப்புணர்ச்சியிலக்கணம்

    — முனைவர்   துரை. குணசேகரன்.  

    ThamizhVellathaazhi Dr. Ponmudi Book Cover 2

    ​​​​​​​​​​​​​​​​​​​​​​

    மதிப்புரைவரலாறு:
    இரண்டாயிரத்துப்பதினோராமாண்டின் பத்தாவதுமாதத்தில், ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று, எங்கள் கல்லூரியில் ஆங்கிலத்துறையிற்பணியாற்றும் பேராசிரியர் மகேந்திரனென்பார், முன்பின் அறிமுக-மில்லாதவொருவரை, நான் முன்னதாக ஏற்றுக்கொண்டதற்கிணங்க என் இல்லத்திற்கேயழைத்துவந்தார்.

    அவருடைய நண்பர்களிலொருவர், ஏதோ நூலெழுதியிருப்பதாகவும், அதற்கு மதிப்புரைதருமாறு வேண்டியும் முன்பே அவர் என்னிடம் பேசியிருந்தார். அவர் அழைத்துவந்த அந்த நண்பர், ஒரு நாற்-பதுவயதுமதிக்கத்தக்கவராகவும், பார்ப்பதற்கு மிகவும் எளியவராகவுங்காட்சியளித்தார்.

    அறிமுகம்:
    முதலில், நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமானோம். அவருடைய பெயர் பொன்முடியென்றும், திருமறைக்காட்டிலுள்ள ஆயக்காரன்புலமென்றவூரைச்சேர்ந்தவரென்றும், திருநள்ளாற்றிலுள்ள சமுதாயநலவழிமையத்தில் மருத்துவராகப்பணியாற்றுகிறாரென்றும் மகேந்திரன் கூறினார்.

    நாங்கள் தமிழ்மொழியைப்பற்றி பொதுவாகப்பேசிக்கொண்டிருந்தபோது, மருத்துவர் பொன்முடி இலக்கணத்திற்குள்ளேநுழைந்தார். இலக்கணமென்றால், அவர் புணர்ச்சியிலக்கணத்தைப்பற்றியேபேசினார். ஒரு மருத்துவர் புணர்ச்சியிலக்கணத்தைப்பற்றிப்பேசியது எனக்கு வியப்பாயிருந்தது!

    அந்த புணர்ச்சியிலக்கனத்தின்படி எவருமே சரியாயெழுதுவதில்லையென்றும், உரைநடைமட்டுமன்றி, இக்காலத்தில் கவிதைகளுங்கூட புணர்ச்சியைப்பொருத்தவரை பிழையாகவேயுள்ளனவென்றும் ஒரு புதுமையானபார்வையில் அவர் பேசத்தொடங்கினார். நானும் அதற்கு ஈடுகொடுக்கவேண்டியதாயிற்று. முதற்சந்திப்பிலேயே எங்கள் பேச்சு மூன்றுமணிநேரத்துக்குநீடித்தது! அந்த மூன்றுமணிநேரமும் போனதேதெரியாமற்போயிற்று! புணர்ச்சியைப்பற்றி அவர் அவ்வளவுபேசினார்.

    புணர்ச்சியால் பொருள்மாற்றம்:
    புணர்ச்சியை சரியாகப்பயன்படுத்தாததால் பொருளில் குற்றமும் குழப்பமுமுண்டாவதாகவும், புணர்ந்தசொற்கள் பிரித்தெழுதப்படுவதாகவும், மேலும் வல்லினமெய்யை சொற்களில் ஈற்றெழுத்தாய்-நிறுத்துவதாகவும், மகரவீற்றை கெடுத்தபின்னும் புணர்த்துவதில்லையென்றும் தமிழிலக்கணத்தின்படி இவையெல்லாம் குற்றமென்றும் இவற்றைப்போல் இன்னும் பலவற்றையும்பேசினார்.

    அத்துடன் சில எடுத்துக்காட்டுகளை எழுதிக்காட்டி, சொற்களிலும் அவற்றின் வரிசையமைப்பிலும் எந்தமாற்றமுமின்றி, அந்த சொற்களை வெவ்வேறிடங்களில் சேர்த்தும்பிரித்துங்காட்டி, அப்படி சேர்ப்-பதாலும் பிரிப்பதாலும் ஒரு வாக்கியத்தின் பொருளை வேறுவேறாகமாற்றமுடியுமென்றும் விளக்கிக்-காட்டினார். அது ஒரு புதியசெய்தியாயிருந்தாலும் ஏற்கக்கூடியதாயிருந்தது.

    உண்மை:
    அவருடைய பேச்சில் உண்மையிருப்பதாகத்தோன்றியது. மேலும் அவர், ‘ஐயா, பேருந்துநிலையம், அஞ்சல்நிலையம், காவல்நிலையம் என்பனவெல்லாம் பிரித்தெழுதமுடியாத தொடர்மொழிகள். ஆனால் தமிழகமெங்கும் இவை இரண்டிரண்டுசொற்களாக பிரித்துத்தானேயெழுதப்பட்டிருக்கின்றன?’ என்றுகேட்டபோது, எனக்கு மறுமொழியேதும் சொல்லமுடியவில்லை.

    குற்றமில்லையாவென்று வினவினார்:
    ‘துவக்கப் பள்ளி’ ‘உயர்நிலைப் பள்ளி’ ‘மேனிலைப் பள்ளி’ ‘கலைக் கல்லூரி’ என்றெல்லாம் தமிழகமெங்குமுள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் எழுதப்படுவதை நினைவூட்டி, இவற்றில் வல்லினமெய் சொல்லில் ஈற்றெழுத்தாயிருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

    இந்த வல்லினமெய், சொற்கள் புணர்ந்ததாலேயேவந்ததென்றும், புணர்ந்தசொற்களை பிரித்ததுடன், வல்லினமெய்யை ஈற்றெழுத்தாய்நிறுத்தியிருப்பது குற்றமில்லையாவென்றுங்கேட்டார்!

    என்னநினைத்தாரோயென்னவோ, திடீரென்று தாம் கொண்டுவந்திருந்த ஒரு அச்சிட்டநூலினை என்னிடம் தந்து, ‘ஐயா, இதுதான் என் நூல். தாங்கள் தயைகூர்ந்து இந்த நூலை முழுவதுமாகப்-படித்துவிட்டு, உவந்தால் ஒரு மதிப்புரையினை நல்கிடவேண்டும்.’ என்றுகூறினார்.

    ‘காலங்காலமாய் நாம் புணர்ச்சியிலக்கணத்தை கற்றும் கற்பித்தும்வருகிறோம், இவர் சொன்னதெல்லாம் இவ்வளவிற்கு பெரியகுற்றமாயிருக்குமென்று இதுவரை எண்ணிப்பார்த்ததில்லை. இப்போதுபார்த்தால், இதற்காக இவர் ஒரு நூலையேயெழுதியிருப்பதாகச்சொல்கிறார். சரி, இருக்கட்டும்.’ என்றெண்ணிக்கொண்டு அவரிடம் சொன்னேன், ‘சரி. படித்துப்பார்க்கிறேன்.’ என்று.

    நிழலைப்போன்று நீங்காதிருந்தது:
    அன்றிலிருந்து, தமிழ்வெல்லத்தாழியென்ற அந்த நூலை, நேரங்கிடைத்தபோதெல்லாம்படித்தேன். ஒரு நிழலைப்போன்று அந்த நூல் என்னைவிட்டு நீங்காது என் அருகிலேயேயிருந்தது. அப்போது நான் வாங்கிய மகிழ்வுந்தில், மூன்றேமாதங்களுக்குள் பத்தாயிரங்கிலோமீட்டருக்குமேற்பயணஞ்-செய்யவேண்டியிருந்தது. அவ்வளவுதூரமும் என் மகிழ்வுந்து என்னைச்சுமந்ததோயில்லையோ அந்த நூலை சுமந்தேவந்தது!

    தமிழ்வெல்லத்தாழியின் பொருள் கனமானது. ஒரு பத்துப்பக்கத்தை படிப்பேன், உறங்கிவிடுவேன்! ஆனாலும், நூலின் பொருளானது உறக்கத்திலும் என் நினைவிலேநின்று என்னை எழுப்பும், மீண்டும்-படிப்பேன். ஒருவாறாக, நூல்முழுவதையும் படித்து முடித்துவிட்டேன்.

    அறிஞர்பெருமக்கள் ஒரு முடிவுக்குவரவேண்டும்:
    நூலை படித்துக்கொண்டிருக்கும்போதே, நூலிற்காணப்பட்ட பலகருத்துகள் ஏற்றுக்கொள்ளத்தக்கனவாகவே தோன்றினாலும், சிலவற்றைப்பொருத்தவரை ஐயப்பாடுகளும் பற்பல வினாக்களும் தோன்றாமலிருக்கவில்லை! சிலவற்றை குறித்துவைத்துக்கொண்டு, அவரை நேரில்வரவழைத்து என் ஐயப்பாடுகளையும் வினாக்களையும் அவரிடமேகேட்டேன்.

    அவரோ, என் ஐயங்களுக்கும் வினாக்களுக்குமான விளக்கங்களை அவருடையபார்வையில் சரியாகவிளக்கிக்காட்டினார். அவர் என்னதான்விளக்கமளித்தாலும், சிலவற்றை அப்படியேயேற்றுக்-கொள்வதற்கு என் மனம் இடந்தரவில்லை. அதேநேரத்தில் அவருடைய அந்த கருத்துகள் சரியானவை-யாகவேயிருக்கக்கூடுமோவென்னும் ஐயமும் இன்னும் இருந்துகொண்டேதானிருக்கிறது.

    இதற்கு என்னசெய்யலாமென்று சிந்தித்தேன். அதன்பயனாய், என் சிற்றறிவிற்கெட்டிய சிலவற்றை தமிழறிஞர்களின்பார்வைக்கு இதன்வாயிலாக கொண்டுவரவிழைகிறேன். அறிஞர்பெருமக்கள் இந்த நூலினை தாங்களுமாய்ந்து அதற்கேற்ப ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

    மதிப்பீடு:
    சிவனும் ஔவையும்

    ‘தமிழ்வெல்லத்தாழி’ என்பது இந்த நூலின் தலைப்பாகும். இந்த நூலை எழுதிமுடித்தபின், அதுவரை நூலுக்கு பெயர்வைத்திராத நூலாசிரியர், அதற்கு என்னபெயர்வைப்பதென்று தாமாக-வெண்ணித்துணியவியலாதபோது, ஒருநாள், தான் அன்றாடம்வணங்கும் ‘கருப்பசாமி’ என்ற சாமியிடம் மனத்தை நிலைநிறுத்தி, ‘கருப்பசாமி, நூலுக்கு பெயர்சொல்’ என்று வேண்டியதாகவும், அந்த கருப்பசாமியோ, ‘என்னிலும்பெரியவரைக்கேள்’ என்றதாகவும், ஆசிரியர் அந்த சிவபெருமானையேகேட்க, அந்த பெருமான் ‘வெல்லம்’ என்று ஒற்றைச்சொல்லைத்தந்தாரென்றுங்கூறுகிறார்!

    இந்த ஒற்றைச்சொல்லைவைத்துக்கொண்டு என்னசெய்வதென்றுபுரியாமல்விழித்த ஆசிரியர், தமிழ்க்கடவுளென்று முருகனைக்கேட்க, முருகனிடமிருந்து ‘ஔவையைக்கேள்’ என்றவிடைவந்ததாம். அதன்படி ஔவையைக்கேட்டபோது, ‘தாழி’ என்று, சிவபெருமானைப்போல் அவரும் ஒற்றைச்சொல்லையேதந்தாராம்.

    ஆசிரியர் பின்னர் அது தமிழ்பற்றியநூலாயிற்றேயென்றெண்ணி, அந்த இரண்டுசொற்களுடன் தமிழென்பதையுஞ்சேர்த்து,

    தமிழ் + வெல்லம் + தாழி = தமிழ்வெல்லத்தாழி
    என்றுபெயர்வைத்தாராம்.

    தலைப்புப்பொருத்தம்:
    இந்த பெயரிலுள்ள வெல்லத்தாழி என்பதை, ‘வெல்லம் + தாழி’ என்றும், ‘வெல்லத்து + ஆழி’ என்றும் இருவேறுவகையிற்பிரித்துப்பார்க்கும்போது, இரண்டிற்கும் வெவ்வேறுபொருள்வருவது சிறப்பு. புணர்ச்சியைப்பற்றியதான இந்த நூலுக்கு, புணர்ச்சியாலேயேசிறப்புறுகின்ற இந்த தலைப்பு, இறையருளாற்கிடைத்ததென்று ஆசிரியர் மகிழ்கிறார்.

    என்னதான் இறைதந்ததாயிருப்பினும், இந்த தலைப்பிற்கான பொருள் மறைபொருளாகவேயிருப்பதால், வாசகர்களுக்கு எளிதில் புரியும்வகையில், ‘நக்கீரநோக்கில் நற்றமிழ்ப்புணர்ச்சி’ என்றபெயர் பொருத்தமாயிருக்குமென்பது என்கருத்து. ஏனெனில், இந்த நூலாசிரியரும், வினாமேல்வினாவாக நூல்முழுவதும் வினவிக்கொண்டேதான்போகிறார்.

    தமிழிலக்கியவரலாற்றை புரட்டிப்பார்த்தால், இறைநம்பிக்கையுடைய புலவர்பெருமக்களுக்கு, இக்கட்டானசூழலில் இறைவன் அருள்கூர்ந்தவரலாறுகளை அறிந்துகொள்ளலாம்.

    ‘உலகெலாம்’ என்று சேக்கிழாருக்கு பெரியபுராணம்பாடுவதற்கு அடியெடுத்துக்கொடுத்ததும், சுந்தரரை தடுத்தாட்கொண்டதுடன், ‘சொற்றமிழால் பாடுக’ என வேண்டிக்கொண்டதும், திருவாதவூராருக்காக பாண்டியமன்னனிடம் பிரம்படிபட்டதுடன், தம்மைப்பற்றி அவர்வாயாற்பாடச்சொல்லி, தான் கால்கடுக்கநின்றுகொண்டு தானே அதை எழுதிக்கொண்ட திருச்சிற்றம்பலத்தான்வரலாறும் அறியக்கிடக்கிறன.

    அதேபோன்று, தம்பொருட்டு மாணவன் நாடுகடத்தப்பட்டானென்பதை அறிந்து, திருமழிசையாழ்வார் கணிகண்ணன்பின்னாற்செல்லும்போது, தன்னுடன் திருமாலையுமழைத்துச்சென்றவரலாறும், மீண்டும் பழையபடியே கோவிலிற்கிடக்கச்செய்தவரலாறும் நாம் அறிந்தவொன்றே.

    இவ்வகையில், சரியானதாக ஒரு முடிவெடுக்கமுடியாதநிலையில், இறைவன்முன்னர் திருவுளச்-சீட்டுபோட்டு, அந்த இறைவனளிக்கின்றமுடிவினை ஏற்றுக்கொள்ளும்வழக்கம் இறைநம்பிக்கை-யுள்ளோரிடத்தில் இன்றுமிருப்பதை நாம் காணமுடிகிறது. அவ்வகையில், மருத்துவர் பொன்முடியும், இறைவனிடம்வேண்டி தம் நூலுக்கு பெயர்சூட்டியிருப்பது, வரலாற்றில் இடம்பெறத்தக்கது.

    நூலெழுந்த சூழல்:
    தமிழ்வெல்லத்தாழியென்னும் இந்த நூல் வெளிவருகின்ற இந்த நேரம், தமிழுக்கு பொற்காலமன்று. தமிழரே தமிழை புறக்கணிக்குங்காலம். வரலாற்றில் களப்பிறர்காலம்போல் தமிழுக்கு இது போதாதகாலம். அப்துல்ரகுமானின்வரியிற்சொல்வதென்றால்,

    அகமிழந்தான் புறமிழந்தான்
    ஆன்மாவை விற்றுவிட்டான்
    முகமிழந்தான் தன்னுடைய
    முகவரியை இழந்துவிட்டான்.
    என்றுசொல்கின்றநேரம்.

    பொல்லாதநேரம்:
    படித்தவன்மட்டுமன்றி பாமரன்கூட ‘தமிழ்த்தாய்வாழ்த்து’ என்று தமிழ்த்தாய்க்கு வாழ்த்துசொல்லுமுன், “ஹலோ, மைக்டெஸ்டிங் ஒன் டூ த்ரீ… தமிழ்த்தாய்வாழ்த்து.” என்றவாறு, முதலில் ஆங்கிலத்தில் ஆறுசொற்களை அள்ளிவீசுவதை விழாக்களில் காணநேரிடுகிறது.

    இது, தமிழன்னையை அவளுடையபிள்ளைகளே மாற்றாந்தாய்மனப்பான்மையோடுபார்க்கும்நேரம்!

    ஆங்கிலமாகிய அந்த வேற்றுமொழியின்மீதுகொண்ட பற்று, தமிழரை இந்தநிலைக்காளாக்கிவிட்டது!

    யுனெஸ்கோவின் அறிக்கையில், இன்னும் ஐம்பதாண்டுகளில் அழிந்துவிடக்கூடுமென்று கருதப்-படுகின்றதும், உலகமுழுவதிலும் படிப்படியாக அழிந்துவருவதுமான பலமொழிகளின் பட்டியலில், தமிழ்மொழியான நம் தாய்மொழி, முதலிடத்திலிருக்கின்ற பொல்லாதநேரமிது.

    கிரீக்கு, இலத்தீன், ஈப்ருவெனப்படும் எபிரேயம், சமற்கிருதம், சீனம், தமிழ் ஆகிய ஆறும் உயர்-தனிச்செம்மொழிகள். அவற்றுள், வாழுகின்றமொழிகள் சீனமும் தமிழுந்தான்! திராவிடமொழிகளின் தாயென்று கால்டுவெல்லாரும், உலகத்தின் தாய்மொழியென்று பாவாணரும்போற்றியது தமிழையே!

    சீரியநோக்கு:
    கோள்களிலொன்றென்றுமட்டுமேயறிந்து, ஒரு கோளுக்கு அமெரிக்கா ஏவுகலமொன்றினை அனுப்பியபோது, ஒருவேளை அந்த கோளில் மனிதர் இருப்பாரேயானால், அவர் இந்த பூவுலகி-லிருந்தேசென்றிருக்கவேண்டுமென்றுகருதி, அந்தமனிதர் அறிந்தமொழி, உலகிலுள்ள மொழிகளுள் மிகப்பழைமைவாய்ந்ததாகிய தமிழாகமட்டுமேயிருக்கக்கூடுமென்று முடிவெடுத்து, தமிழ்மொழிக்கான பலவகையான குறியீடுகளை அந்த ஏவுகலத்தில் வைத்து அனுப்பியது.

    அமெரிக்கர்கள் அது செம்மண்ணிறைந்தகோளென்று இன்றுகண்டுகூறினர். ஆனால், நம் தமிழர்களோ, ‘செவ்வாய்’ என்று அதற்கு அன்றேபெயர்சூட்டிவிட்டனர். என்னவிந்தைபாருங்கள்! ‘மாடுகட்டி போரடித்தால் மாளாதென்றுசொல்லி யானைகட்டி போரடித்த குடும்பம்’ என்றுசொல்லி பெருமைப்-பட்டுக்கொள்வதைப்போல், உலகளவில் பெயர்பெற்றமொழியென்று நாம் நம் மொழியைப்பற்றியும்- பெருமைபட்டுக்கொள்ளலாம்.

    இத்தகைய பல பெருமைகளுக்குரியதும் மிகவும் சிறந்திருந்ததுமான நம் தமிழ்மொழி, இன்று அழிவுறுமொழிகளில் முதலிடத்திலிருக்கின்ற இந்தநேரத்தில், அதனை மீட்டெடுத்துக்காத்து, அதன் பெருமையை மீண்டும்நிலைநாட்டி, மேலும்பெருகவைக்கும் சீரியநோக்குடன்வெளிவருகிறது, இந்த தமிழ்வெல்லத்தாழி.

    மருத்துவர் பொன்முடி மருத்துவத்தைப்பயின்றவராயினும், தம்மை பெற்றெடுத்தவள் தமிழன்-னையென்பதை மறவாமல், அவர் தமிழ்மொழியின்மீது அக்கறைகொண்டு, அதை கற்கமுனைந்து, ஆசானின்றி தானேகற்றாரென்பது ஒருபுறமிருக்க, தமிழ்மொழியில் காலங்காலமாகச்சொல்லப்பட்டு-வருவதும், தமிழிலக்கணத்தின் எழுத்து சொல் பொருள் யாப்பு அணி ஆகிய ஐந்துவகைகளுள் எழுத்திலக்கணத்திற்சொல்லப்படுகின்றதுமாகிய புணர்ச்சியிலக்கணத்தைப்பற்றி விரிவானவோர் ஆய்வினைமேற்கொண்டு, பத்தாண்டுகளாக அரும்பாடுபட்டெழுதியதுதான் தமிழ்வெல்லத்தாழி.

    தமிழ்வெல்லத்தாழியின் அடித்தளம்:
    தமிழ்மொழிக்கென்று எண்ணற்றசிறப்புகளுண்டு. அதற்குரிய இலக்கணமேசிறப்புவாய்ந்தது. அந்த இலக்கணத்திலும், யாப்பிலக்கணமென்பது மிகவும் நுட்பமானதும் வியக்கத்தக்கதுமாகும். இது பாவியற்றுவதற்கென்றேயமைந்தது.

    செய்யுளானாலும் உரைநடையானாலும், அதில் புணர்ச்சியிலக்கணம் பெரும்பங்குவகிக்கிறதென்பதும், அதில் பிழையேற்படுமாயின் சொல்லவருகின்ற பொருளிலும்பிழையேற்படுமென்பதும், மருத்துவர் பொன்முடியின்கருத்தாகும். அதனடிப்படையிலெழுந்ததே இந்த தமிழ்வெல்லத்தாழியென்னும் புதுமையானநூல்.

    அடிப்படையானதும் தேவையானதும்:
    இதுவரை பெரிதாயுணரப்படாதிருந்த புணர்ச்சியிலக்கணத்தின் சரியானபயன்பாட்டை, பல்வேறெ-டுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார், நூலாசிரியர். அவர்தருகின்ற அந்தவிளக்கங்களினடிப்படையிற்-பார்த்தால், புணர்ச்சியிலக்கணமானது தமிழ்மொழியின் உரைநடைக்கும் கவிதைக்கும் அவற்றின் பொருள்வெளிப்பாட்டைப்பொருத்தவரை மிகச்சிறந்த நுட்பத்தைத்தரவல்லதென்பதும், இந்த ஒரேகாரணத்தால், தமிழுக்கு புணர்ச்சியிலக்கணம் மிகவும் அடிப்படையானதும் தேவையானதுமாகு-மென்பது அறியக்கூடியதாயிருக்கிறது.

    பொருளில் நுட்பம்:
    எந்தவொருவாக்கியத்திலும், இந்த புணர்ச்சியிலக்கணத்தினால்வெளிப்படுத்திக்காட்டக்கூடிய அந்த வாக்கியத்தின் பொருளிலிருக்கும் நுட்பத்தைவைத்துப்பார்க்கும்போது, உலகிலுள்ள எந்தவொருமொழியும் தமிழ்மொழிக்கிணையானதாக இருக்கமுடியாதென்பதை உறுதியாகக்கூறமுடிகிறது!

    எடுத்துக்காட்டாக,
    1. ‘உன் மகனுடைய பெயர் என்ன?’
    2. ‘உன் மகனுடைய பெயரென்ன?’
    இவற்றுள், முன்னதில் ‘பெயர் என்ன?’ என்றும், பின்னதில் ‘பெயரென்ன?’என்றுமிருக்கின்றன. இந்தமாற்றத்தினால், இவை இரண்டும் வெவ்வேறுபொருளையுணர்த்துகின்றனவென்றால், உங்களால் நம்பமுடிகிறதா? முடியவில்லைதானே? இந்த விளக்கத்தைப்பாருங்கள்:

    ஒருவர், தன்னுடைய மகனுடைய பெயரை நேரடியாகச்சொல்லாமல், வெவ்வேறுகுறிப்புகளைச்சொல்லி கேட்பவரை கண்டுபிடிக்கச்சொல்லும்போது, கேட்பவர் கண்டுபிடிக்கமுடியாமல் சலிப்படைந்து, ‘ஒன் மகனோட பேரு என்னன்னுதான் சொல்லேன்!’ என்பதுண்டன்றோ?

    இவ்விடத்தில், ‘ஒன் மகனோட பேரென்னன்னுதான் சொல்லேன்!?’
    என்றுகேட்பது பொருந்தாதிருப்பதைப்பாருங்கள். அவர்கள் பேசிக்கொண்டிருந்தது முன்பிருந்தே பெயரைப்பற்றித்தானென்பதால், ‘பேரென்னன்னு’ என்று சேர்த்துப்பேசுவது தேவையற்றது.

    ‘பெயரென்ன?’ என்பது எங்கேபொருந்துகிறதென்பதை இங்கேபாருங்கள்:

    ஒருவருடைய மகனைப்பற்றி அவனுடைய உயரம், எடை போன்ற குறிப்புகளை பதிவுசெய்து-கொண்டிருக்கும் ஓர் அலுவலரிடம், அவர் சென்று, அந்த குறிப்புகளை சொல்லத்தொடங்கியதும், அந்த அலுவலர், மாணவனின் பெயர் சொல்லப்படவில்லையென்பதால்,

    ‘முதலில் உங்கள் மகனுடைய பெயரென்னவென்றுசொல்லுங்கள்!’ என்றுதானேசொல்வார்? இங்கே ‘பெயர் என்ன?’ என்றுகேட்பது பொருந்தாதன்றோ?

    இரண்டாம்வேற்றுமைத்தொடர்:
    3. ‘உன் மகனுடையபெயரென்ன?’
    இதில், மூன்றுசொற்கள் ஒன்றாகச்சேர்ந்து, தொடர்மொழியாகிநிற்கின்றன. இவ்வாறு பலசொற்கள் சேர்ந்திருக்கும்போது எந்தவொருதொடர்மொழியிலும் அதிலுள்ள முதற்சொல்லுக்கேசிறப்பென்கிறார், ஆசிரியர். அதன்படி, ‘மகனுடையபெயரென்ன?’ என்பதில், மகனென்பதற்கேசிறப்பு. இதை இரண்டாம்வேற்றுமையின் விரிநிலைத்தொடரென்கின்றோம், நாம். பொருளடிப்படையில், இது எங்கேபொருந்துமென்பதைப்பாருங்கள்:

    ஒருவர் தன் மகளுடையபெயரை சொல்லிவிட்டபிறகு, அவருடைய மகனுடையபெயரை சொல்-லாமலிருக்கும்போது, அதை தெரிந்துகொள்ளவிரும்பும் அவரது நண்பர் அவரைப்பார்த்து, ‘உன் மகனுடையபெயரென்ன?’ என்றுகேட்பதுதானே இயல்பு? ஆசிரியர், இதில் ‘மகனுடைய’ என்பதற்கு பேசும்போது ஒரு அழுத்தமிருக்குமென்பதையுஞ்சொல்கிறார்.

    4. ‘உன்மகனுடையபெயரென்ன?’
    இதில் நான்குசொற்களுஞ்சேர்ந்திருக்கின்றன. பொருளைப்பார்த்தால், சொல்பவர், தன்மகனுடைய-பெயரைச்சொல்லாமல், இன்னொருவருடையமகன்பெயரைச்சொல்லும்போது, அவரைப்பார்த்து, ‘அவருடையமகன்பெயரிருக்கட்டும், முதலில் உன்மகனுடையபெயரைச்சொல்’ என்றகருத்தில், ‘உன்மகனுடையபெயரென்ன?’ என்றுகேட்பதுதான் பொருந்தக்கூடியது.

    ஆனால், இவ்விடத்தில், ‘உன் மகனுடையபெயரென்ன?’ என்றுகேட்பது பொருந்தாதிருப்பதைப்பாருங்கள்.

    சொற்களையும் மாற்றாமல், அவற்றின் வரிசையமைப்பிலும் எந்தமாற்றமுஞ்செய்யாமல், புணர்ச்சியை தேவைக்கேற்றபடிபயன்படுத்துவதால், சொல்லவருகின்ற பொருளில் இத்தனைவேறு-பாடுகாட்டமுடியுமென்பது புதியசெய்தி. இந்த நுட்பமான பொருள்வேறுபாட்டினை அடிப்படை-யாகக்கொண்டுகட்டப்பட்டதுதான், ‘தமிழ்வெல்லத்தாழி’ எனும் இந்த நூல்.

    தமிழில் புணர்ச்சி:
    புணர்ச்சியென்றால் என்னவென்பதுபற்றி நன்னூலார்,

    மெய்யுயிர் முதலீ றாமிரு பதங்களும்
    தன்னொடும் பிறிதொடு மல்வழி வேற்றுமைப்
    பொருளிற் பொருந்துழி நிலைவரு மொழிகள்
    இயல்பொடு விகாரத் திணைவது புணர்ப்பே
    {உயிரீற்றுப்புணரியல்-நூற்பா-1}

    என்றுகுறிப்பிடுகிறார். இதன்வழி,
    ‘மெய்யையும் உயிரையும் முதலாகவும் ஈறாகவுமுடைய பகுபதம்பகாப்பதமென்னும் இருபதங்களும், தன்னொடு தானும், பிறிதொடு பிறிதுமாய், அல்வழிவேற்றுமைப்பொருட்களில் பொருந்துமிடத்து, நிலைமொழியும் வருமொழியும் இயல்போடாயினும் விகாரத்தோடாயினும்பொருந்துவது புணர்ச்சியாகும்’ என்பது இதன் பொருளாகும்.

    இருபத்தாறுவகை:
    இயல்பாதல், தோன்றல், திரிதல், கெடுதல் என நால்வகைமாற்றங்கள் நிகழும். வேற்றுமை, அல்வழி என, முறையே பன்னிரண்டு, பதினாறு என இருபத்தெட்டுபுணர்ச்சிகள். இவற்றுள், வேற்றுமையில் தொகைநிலை தொகாநிலையென மொத்தம் பன்னிரண்டும், அல்வழியில், தொகைநிலையில் ஐந்தும், தொகாநிலையில் பதினொன்றுமாக, மொத்தம் இருபத்தெட்டுவகையால் புணர்ச்சியானது நிகழும்.

    அல்வழியில் தொகாநிலையில்வருவன, எழுவாய்த்தொடர் விளித்தொடர் இடைத்தொடர் உரித்தொடர் அடுக்குத்தொடர் ஆகிய ஐந்தும், தெரிநிலையும் குறிப்புமாகிய பெயரெச்சத்தொடர்களும் வினையெச்சத்தொடர்களும் வினைமுற்றுத்தொடர்களுமாகிய ஆறுமாக, மொத்தம் பதினொன்றாகும்.

    இதன்படி, மொத்தமாக இருபத்தெட்டிடங்கள் புணர்ச்சிக்கிடமானவையென்பது எளிதிற்பெறப்படும்.

    சேர்த்தெழுதுவதில்லை:
    இப்படிப்பட்ட வரைமுறைகள் புணர்ச்சியிலக்கணத்தில் தெளிவாகச்சொல்லப்பட்டிருந்தும், புணர்ச்சிக்கிடமான இந்த இருபத்தெட்டிடங்களிலும் நாம் தேவையிருந்தும் பலவிடங்களில் சேர்த்-தெழுதுவதில்லையென்பதையும், அதேநேரத்தில் சிலவிடங்களில் தேவையில்லாதபோதும் சேர்த்-தெழுதிவிடுகிறோமென்பதையும் மருத்துவர் பொன்முடி மீண்டுமீண்டுஞ்சுட்டிக்காட்டுகிறார்.

    இக்காலத்தில், உரைநடையில் எங்காவது எழுவாய்த்தொடரை பார்த்திருக்கிறீர்களாவென்று ஒரு வினாவையுந்தொடுக்கிறார்!

    நமக்கெல்லாம் தெளிவில்லை:
    ஓர் இலக்கணநூலில், ஓரிடத்தில் ‘இரண்டு மாத்திரையளவு ஒலிக்கும்’ என்றும், இன்னோரிடத்தில், ‘ஒன்றரை மாத்திரை அளவே ஒலிக்கும்’ என்றுமிருப்பதை சுட்டிக்காட்டும் ஆசிரியர், {த.வெ.தா.- பக்192} ‘இரண்டுமாத்திரையளவொலிக்கும்’ என்றும், ‘ஒன்றரைமாத்திரையளயொலிக்கும்’ என்றும் இவற்றை சேர்த்தெழுதுமளவிற்கு நமக்கெல்லாம் இன்னும் புணர்ச்சியிலக்கணத்தில் தெளிவில்லையென்று குற்றஞ்சாட்டவுஞ்செய்கிறார்.

    அதுமட்டுமன்றி, ‘இத்தகைய நீண்டதான தொடர்மொழிகள், ஒருகாலத்தில் தமிழ்மொழியில் இருந்திருக்கவேண்டும்’ என்கிறார், ஆசிரியர்.

    தொடர்ந்து, ‘ஏனெனில், தொடர்மொழிக்கான விளக்கங்களையும், அவற்றுக்கான நிலைக்களன்களையும், தொடர்மொழிகளை அமைப்பதற்கான விதிமுறைகளையும், நன்றாக வெளிப்படுத்தும்வகையில், இலக்கணநூற்கள் காலங்காலமாக சொல்லிக்கொண்டேவந்திருக்கின்றன.’ என்றுகூறுகின்றார். அது உண்மைதானே?

    பொருட்பிழையும்நேரும்:
    ஆனால் நாம்தான், நீண்டதொடர்மொழிகளை எளிமைப்படுத்தும்பொருட்டு, பிரித்துப்பிரித்-தெழுதத்தொடங்கிவிட்டோம். அதனால், இலக்கணத்திற்கும் நாம் எழுதும் உரைநடைக்கும் மிகுந்த-வேறுபாடுதோன்றிவிட்டது.’ என்றுங்கூறுகிறார்.

    அதுமட்டுமன்றி, ‘தொடர்மொழிகளை சரியானமுறையிலமைத்தெழுதாவிட்டால், மொழியின் நடைமாறுவதோடு, இலக்கணப்பிழையும்நேரும்; பொருட்பிழையும்நேரும்.’ என்று அறிவுறுத்துவதோடு, ‘முதலில் இலக்கணநூற்களையாவது பிழையின்றியெழுதாவிட்டால், தமிழ் அழிவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கவேண்டியதுதான்.’ என்று கலக்கமுறவுஞ்செய்கிறார்.

    புணர்ச்சிபற்றி ஆசிரியரின் பார்வை:
    1. தொகைநிலைத்தொடர்மொழிகளை எழுதும் முறை:
    ‘தொகை’ என்னுஞ்சொல்லை, ‘விரி’ என்றசொல்லுடன் பொருத்திப்பார்க்கும்போது, அதற்கு ‘மறைந்துவருதல்’ என்றபொருள்வருகிறது. ஆனால், இந்த சொல்லுக்கு, நர்மதாவின் தமிழகராதியில், ‘சேர்க்கை’ ‘கூட்டம்’ என்ற வேறுபட்டபொருளைக்காணமுடிகிறது.{பக்.460 – ஆகஸ்ட் 2000} தொல்காப்பியத்தின் சொல்லதிகாரத்தில், எச்சவியலில், தொகைச்சொற்களெல்லாம் நடக்கும் விதம்பற்றிக்குறிப்பிடுகையில்,
    “எல்லாத் தொகையு மொருசொன் னடைய” {நூற்பா – 420}
    என்று தொல்காப்பியர் நூற்பாவமைக்கிறார்.

    இதற்கு சேனாவரையர், ‘அறுவகைத்தொகைச்சொல்லும் ஒரேசொல்லாய்நடத்தலையுடைய’ என்று உரைவகுக்கிறார். இவற்றோடு, அல்வழியின் ஐவகையையும் நாம் சேர்த்துக்கொள்ளலாம்.

    ஒரேசொல்லாகவேயெழுதவேண்டும்:
    இதனடிப்படையிற்பார்க்கும்பொழுது, தொகைநிலைத்தொடர்மொழியினை பிரித்தெழுதாமல், {இக்காலத்தில் பிரித்தெழுதப்படுகிறதென்பது நூலாசிரியரின் குற்றச்சாட்டு} அதனை ஒரேசொல்லாகக்கொண்டு, ஒரேசொல்லாகவேயெழுதவேண்டுமென்பது எளிதிற்பெறப்படுகிறது.

    இதனை கருத்தூன்றிப்படித்திருக்கும் மருத்துவர் பொன்முடி, இந்த கொள்கைக்குமாறாக, தொகை-நிலைத்தொடர்மொழிகள் பிரித்தெழுதப்படுவதை, பாடநூற்களிளிருந்தும் அறிஞர்களின் படைப்புகளி-லிருந்தும் சான்றுகளை எடுத்துக்காட்டி, இந்த பிழை நூற்களில் விரவிக்கிடப்பதை எடுத்துரைக்கிறார். சான்றாக, ஓர் இலக்கணநூலிற்காணப்பட்டதை அவர் எடுத்தாள்வதை கீழேபார்ப்போம். {த.வெ.தா.-பக்.192

    ‘அண்ணன் தம்பி’ ‘ஆடு மாடு’ ‘தாய் தந்தை’ {மூன்றும் உம்மைத்தொகைகள்}

    இவற்றுள், ‘தாய்தந்தை’ என்றிருக்கவேண்டியதைப்பற்றி விளக்கும்போது,

    ‘தாய்தந்தையை அழைக்கவேண்டும்’ என்பதும், ‘தாய் தந்தையை அழைக்கவேண்டும்’ என்பதும் ஒரேபொருளைத்தரக்கூடியனவாவென்று ஓர் வினாவெழுப்புகிறார்.

    நான்காம்வேற்றுமையின் உருபும் பயனும் உடன்றொக்கத்தொகையான ‘தலைவலிமருந்து’ என்பது அதேநூலில், ‘தலைவலி மருந்து’ என்று பிரிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் ஆசிரியர், ‘பிரித்தெழுதும்போது இவை தொகைநிலைத்தொடராகமாட்டாவென்பது இவர்கள் அறியாததுபோலும்! இதைக்கூடப்புரிந்துகொள்ளமுடியாதவர்கள் எவ்வாறு இலக்கணநூலெழுதத்துணிந்தனரென்பது வியப்பைத்தருகிறதன்றோ?’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். {த.வெ.தா. பக்.-193}

    ‘தமிழ் மொழி’ என்று பிரித்தெழுதுதல்:
    ‘தமிழ்மொழி’ என்னும் சொல்லானது, ஒரு தொடர்மொழியாகும். இது, இலக்கணத்தில் ‘இருபெய-ரொட்டுப்பண்புத்தொகை’ எனப்படுகிறது. தொகைநிலைத்தொடரை பிரித்தெழுதக்கூடாதென்பதை முன்பேபார்த்தோம். ஆனால், பாடநூற்களிற்கூட, ‘தமிழ் மொழி’ என்று இது பிரிந்திருப்பதை சுட்டிக்-காட்டுகின்ற ஆசிரியர், நம் தாய்மொழியின் பெயரைக்கூட நாம் சரியாயெழுதாமல் பாடநூற்களிலேயே-பிழையாயெழுதுவதை ஆங்காங்கேசுட்டிக்காட்டி வேதனைப்படுகிறார்.

    ‘தொடர்மொழி’ என்பதே ஒரு தொடர்மொழியென்றும், இலக்கணத்தில் அது வினைத்தொகை-யெனப்படுகிறதென்றும், அந்த இலக்கணநூலில், இதுகூட ‘தொடர் மொழி’ என்று பிரித்தெழுதப்பட்-டிருக்கிறதென்றுங்கூறும் ஆசிரியர், ‘இதையேபிரித்தெழுதும்போது, மற்றவற்றைப்பிரித்தெழுதுவதில் வியப்பேதுமில்லை’ என்றுங்குறிப்பிடுகிறார். {பக்.193}

    2. வல்லினமெய்யில் தமிழ்ச்சொற்கள் முடிவுறாமை:

    ஆவி ஞணநமன யரலவ ழளமெய்
    சாயு முகரம் நாலாறு மீறே
    {நன்னூல் – 107}

    இந்த நூற்பாவில், நாலாறெனப்படுகின்ற அந்த இருபத்திநான்கெழுத்துகளே தமிழ்ச்சொற்களுக்கு ஈற்றெழுத்தாய்நிற்பனவென்பது சொல்லப்பட்டிருப்பதால், அவைதவிர பிறவெழுத்துகள் சொல்லுக்கு இறுதியில் வாராவென்பது கொள்ளப்படுகிறது. இந்த வரிசையில், வல்லினமெய் இல்லையென்பது எண்ணிப்பார்க்கத்தக்கது.

    ஆகையால் அது மொழிக்கு ஈற்றெழுத்தாக வாராதென்பது எளிதிற்பெறப்பட்டது.

    இலக்கணநூற்கள் இவ்வாறு தெளிவாக வரையறுத்திருந்தும், இந்நாளில் உரைநடையில் வல்லின-மெய்யை சொற்களில் ஈற்றெழுத்தாய்நிறுத்துவது அனைத்துநூற்களிலுங்காணப்படுகிறதென்றும், பாடநூற்களுங்கூட இதற்கு விதிவிலக்கல்லவென்றுங்கூறும் ஆசிரியர், ஒருவர் பேசும்போது, பேச்சை வல்லினமெய்யில் நிறுத்தமுடியாதென்றும், அவ்வாறு நிறுத்துவது ஆங்கிலம்போன்றமொழிகளில் இருந்தாலும், தமிழில் அப்படியொருவழக்கம் இல்லவேயில்லையென்றுங்கூறுகிறார்.

    அடிப்படைக்கருத்து:
    புணர்ச்சியின்போது வலிமிகுந்துபுணர்ந்தசொற்களை, அவை புணர்ந்து ஒரு தொடர்மொழியானபின் புணர்ந்தவிடத்திலேயேபிரிப்பதனாற்றான் வல்லினமெய்யை சொல்லின் ஈற்றெழுத்தாய்நிறுத்தவேண்டிய தேவை உண்டாகிறது.

    புணர்ச்சியென்றாலே சேர்க்கையென்றுதானே பொருள், அவ்வாறிருக்க புணர்ந்தசொற்களை பிரித்தெழுதுகிறோமேயென்னும் அடிப்படையானகருத்தைப்பற்றிக்கூட எண்ணிப்பாராமல், தமிழை கற்றவர்க்ளெல்லாங்கூட அதை பிழையாயெழுதுவது ஏனென்று ஒரு வினாவை முன்வைக்கிறார்.

    தொல்காப்பியர்காலந்தொட்டே நூற்பாக்களில் வல்லினமெய் ஈற்றெழுத்தாக வைக்கப்பட்டிருக்-கிறதேயென்றால்,

    வல்லினமெய் சீருக்கேயீறாகிறது:
    ‘மரபுக்கவிதைக்கு சீரளவு அடிப்படையானது. ஒவ்வொருவகைப்பாவிலும் அதற்கென்றுள்ளசீர்-களையேயமைக்கவேண்டும். இதற்கு, ‘வகையுளி’ என்பர், அறிஞர். வேறாய்ச்சொல்வதானால், சீரின் அளவானது மாறுமானால், பாவின் வகையும் வேறாகிவிடும். சீரளவில் மாறுபாடென்பது, யாப்பிலக்-கணத்தின்படி குற்றமாகும்.

    எனவே, செய்யுட்களைப்பொருத்தவரை, அந்த குற்றத்திற்கு இடங்கொடாதபடி, சீரளவிற்காகவும், மெய்யெழுத்துகள் அசைக்கணக்கில் பெரிதானமாற்றமேதும் செய்வதில்லையென்பதனாலும் ஒரு தொடர்மொழியானது வலிமிகுந்தபுணர்ச்சியில்மட்டுமல்லாது, நாம் முன்பேகண்டபடியான இருபத்தெட்டுவகைப்புணர்ச்சியிலும், இயல்பாயினும் விகாரமாயினும் நிலைமொழிவருமொழிகள் பிரிக்கப்படுவதுண்டு.’ என்று விளக்கமளிக்கிறார்.

    அந்தவகையில், வல்லினமெய் சீருக்குத்தானீற்றெழுத்தாகிறதேயன்றி அந்த தொடர்மொழியானது தொடர்மொழியாகவேகொள்ளப்படுகிறதென்பது ஆசிரியரின் கருத்து. ஆனால், உரைநடையைப்-பொருத்தவரை, அவ்வாறு பிரித்தெழுதுவதும் வல்லினமெய்யை ஈற்றெழுத்தாய்நிறுத்துவதும் குற்றமேயென்கிறார்.

    இருபெயரொட்டுப்பண்புத்தொகை:
    உரையாசிரியர்களின் உரைகளும், தமிழறிஞர்களின் எழுத்துகளும், பள்ளி, கல்லூரி பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றுக்கான பாடநூற்களுங்கூட இதற்கு விதிவிலக்கல்லவென்றுகூறும் மருத்துவர் பொன்முடி, தம்முடைய நூலில் அனைத்திடங்களிலும் இதுபற்றி சான்றுகளுடன் விளக்கமளிக்கிறார்.
    எ.கா: பொது + தமிழ் = பொதுத்தமிழ்
    இதில், ‘தமிழ்’ என்பது பொதுப்பெயராகவும், ‘பொது’ என்பது சிறப்புப்பெயராகவும் புணர்ந்து, ‘உயிர்முன் கசதப மிகும்’ என்னும் புணர்ச்சிவிதிப்படி வலிமிகுந்து, ஓர் இருபெயரொட்டுப்பண்புத்தொகையாகி, ‘பொதுவாகியதமிழ்’ என்று பொருளையும்பெற்றது.

    இவ்வளவிற்கிலக்கணவிளக்கம்பெறுகின்ற பொதுத்தமிழென்பதை, பாடநூற்களில் ‘பொதுத் தமிழ்’ என்று பிரித்தெழுதியிருப்பதை சுட்டிக்காட்டும் ஆசிரியர், இதில் ‘பொதுத்’ என்பது தகரவொற்றை தன் ஈற்றெழுத்தாய்க்கொண்டிருப்பதையும், இது பிழையென்பதையும் குறிப்பிட்டுச்சொல்கிறார்.

    அ. சங்கநூலிலிடம்பெற்றிருக்கின்ற உரைகள்:
    சங்கச்செய்யுட்களிலிடம்பெற்றிருக்கின்ற உரைநடைகளையும், செய்யுட்களுக்கு உரையாசிரி-யர்களெழுதியுள்ள உரைகளையும்பார்க்கும்பொழுது, உரையாசிரியர்கள் இந்த வல்லினமெய்யீற்றைப்பற்றி கவலைப்பட்டதாகத்தெரியவில்லை. சான்றாக, “அது கேட்டுக் கடல்சூ ழிலங்கைக் கயவாகு வென்பான்…பெருகிப் பிழையா வினையுள் நடாயிற்று” என்றுள்ளது.

    இதில் வல்லினமெய்யீற்றுச்சொற்கள் உள்ளன. அதுமட்டுமன்றி, புணர்ந்தசொற்களை பிரித்தெழுதுதலாக, ‘பிழையாவினை’ என்று சேர்ந்திருக்கவேண்டியதான ஒரு ஈறுகெட்டவெதிர்மறைப்-பெயரெச்சத்தொடரானது பிரிந்துநிற்பதையும்பாருங்கள்.

    இதனால், ‘பிழையா’ என்பதற்கிருக்கவேண்டிய எதிர்மறைப்பெயரெச்சப்பொருள் அதற்கு இல்-லாமற்போனதுடன், அது, பலர்பாலுக்கான எதிர்காலவினைமுற்றுப்பொருளைக்கொண்டுநிற்கிறது! புணர்ச்சி இல்லாதவிடத்தில், ஒரு எதிர்மறைப்பெயரெச்சத்தின் ஈறு, எதனாற்கெடும்?

    ஆ. சிலப்பதிகாரத்துக்கானவுரையில்:
    “மலைநாட்டிலுள்ள நெடுவேள் குன்றில்…அழைத்துச் சென்ற புதுமையைத் தம் கண்ணாற் கண்ட குன்றக்குறவர்…உரைத்தனர்.” என்றுள்ளது.

    இதில், ஒரு வினையெச்சத்தொடரும், ஒரு மூன்றாம்வேற்றுமையின் விரிநிலைத்தொடரும் புணர்ந்-திருந்தும், அவை பிரிக்கப்பட்டதால், அங்கெல்லாம் வல்லினமெய் சொல்லுக்கு ஈற்றெழுத்தாயிற்று.

    ஆனால், ‘புதுமை’ என்றசொல், ‘செயப்படுபொருள்வேற்றுமை’ என்றறியப்படுகின்றதான இரண்-டாம்வேற்றுமையின் ‘ஐ’ என்ற உருபை ஏற்று, ‘புதுமையை’ என்றாகியபின்னர், ஒரு வினைமுற்றுடன்-புணராமல், ‘தம்’ என்னும் ஒரு பெயர்ச்சொல்லுடன்புணர்ந்தது, கூடாப்புணர்ச்சி.

    சிலம்பின் அடியார்க்குநல்லாருரையில், “அழகிய புகாரினைப் போற்றுவோம்” என்றுள்ளது.

    இதிலும், ஒரு பெயெரானது ஐயுருபேற்றது. ஆனால், புணர்ச்சியில் பிழையின்றி, ஒரு வினைமுற்-றுடனேபுணர்ந்தது. பிழையின்றி புணர்ந்தென்னபயன்? ‘புகாரினைப்’ என்பதுடன் அந்த தொடர்-மொழியானது பிரிக்கப்பட்டது, அதில் வல்லினமெய் சொல்லுக்கு இறுதியானது.

    இ. இருபதாம்நூற்றாண்டுரைநடை:
    “பத்துப் பாட்டுகளிலும், மிகச்சிறியபாட்டாகிய முல்லைப் பாட்டிலும், மிகப் பெரியபாட்டாகிய மதுரைக் காஞ்சியிலும் பிரிவுத்துயரைக் காண்கிறோம்”

    மேற்சுட்டப்பட்ட அனைத்தெடுத்துக்காட்டுகளிலும், சொல்லின் இறுதியில் வல்லெழுத்தின் மெய் நிறுத்தப்பட்டுள்ளதை காணமுடிகிறது.

    இவர்களனைவரும் தவறுசெய்திருப்பார்களென்று கூறவியலாதிருந்தாலும், மருத்துவர் பொன்முடி சுட்டிக்காட்டுகிற இலக்கணத்தினடிப்படையிலும், அவர் அளிக்கின்ற விளக்கங்களினடிப்படையிலும் மேலேகுறிப்பிடப்பெற்றவை அனைத்திலும் வல்லினமெய் சொற்களுக்கு ஈற்றெழுத்தாயிருப்பதை பிழையேயென்று ஒப்புக்கொள்ளவேண்டிய சூழல் உண்டாகியிருக்கிறது.

    3. தொகாநிலைத்தொடர்கள்:
    தொகாநிலைத்தொடர்களைப்பொருத்தவரை, வேற்றுமையில் ஆறும், அல்வழியிலுள்ள ஒன்பதில், இடைத்தொடர், உரித்தொடர், அடுக்குத்தொடர் ஆகியவற்றைமட்டுமன்றி வினைமுற்றுத்தொடரை-யும்பிரிக்கவியலாதாகையால், அவைபோக, மற்றுள்ள ஐந்துதொடர்களுமாக, ஆகமொத்தம் பதினோரு-தொடர்மொழிகளையும் நம்முடைய தேவைக்கேற்றாற்போல் தொடர்மொழியாகவோ அவற்றின் நிலைமொழிவருமொழிகளை பிரித்து தனிமொழிகளாகவோ ஒவ்வோரிடத்திலும் சொல்லவருகின்ற பொருளுக்கேற்றவாறுபயன்படுத்தவேண்டுமென்கிறார்.

    தொகைநிலைத்தொடர்மொழிகளுள், வேற்றுமையில் ஆறும், அல்வழியில் ஐந்துமாகிய பதினோரு-தொடர்மொழிகளையும் பிரிக்கவேகூடாதென்னும் மருத்துவர் பொன்முடி, தொகாநிலைத்தொடர்களிலும், மேற்சொல்லப்பட்டவற்றை பிரிக்கக்கூடாதவையென்றேசொல்கிறார்.

    நான்கைத்தவிர, அல்வழித்தொடர்களான எழுவாய்த்தொடர், விளித்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர் ஆகிய நான்கையும், வேற்றுமையிலுள்ள விரிநிலைத்தொடர்கள் ஆறையும் ஆகமொத்தம் பதினோருதொடர்களைமட்டுமே பிரித்தெழுதலாமென்கிறார்.’

    வரையறை:
    மொத்தமுள்ள இருபத்தாறுதொடர்மொழிகளுள், பிரிக்கக்கூடாதவை பதினைந்து, பிரிக்கக்கூடியவை பதினொன்று.’ என்று வரையறுக்கிறார்.{பக். 156}

    ஒரு பெயரெச்சத்தொடர் சேர்ந்தும் பிரிந்தும்நின்று, எவ்வாறு தேவையானபொருளை சரியாகத்-தருகிறதென்பதற்கு எடுத்துக்காட்டாக, ‘இடிந்தவீடு’ என்றதொடரை எழுதிக்காடுகிறார்.{பக்.148}

    எடுத்துக்காட்டு:
    ‘இடிந்தவீட்டைக்கட்டுவது எளிது, ஆனால் புதுவீட்டைக்கட்டுவது எளிதன்று.’
    ‘இடிந்த வீட்டைக்கட்டுவது எளிது, ஆனால் சுற்றியிருந்த மரங்களையுண்டாக்குவது எளிதன்று.’
    இந்த இரண்டெடுத்துக்காட்டுகளிலும், ‘வீட்டைக்கட்டுவது’ என்னும் இரண்டாம்வேற்றுமையின் விரிநிலைத்தொடரும், ‘எளிது’ என்னும் தனிமொழியும் ‘இடிந்த’ என்ற ஒரு பெயரெச்சத்தினைத்-தொடர்ந்துநிற்கின்றன. அவற்றில் எந்தமாற்றமுமில்லை.

    ஆனால், அந்த பெயரெச்சமானது, ஒன்றில் சேர்ந்துநின்றும் மற்றதில் பிரிந்துநின்றும், பொருளில் வேறுபாட்டையுண்டாக்குகிறதென்றும், அந்த வேறுபாடு என்னவென்றும் விளக்கந்தருவதோடு, இவற்றில் சேர்ந்திருக்குமிடத்தில் பிரித்தும், பிரிந்திருக்குமிடத்தில் சேர்த்துமெழுதிப்பார்த்தால், பொருள் பொருந்தாதிருப்பதை காணவுஞ்சொல்கிறார்.

    எச்சமும் முற்றும்:
    பலரும், எச்சம் முற்று ஆகியவைபற்றிய தெளிவின்றியேயெழுதுகின்றனரென்பது நூலாசிரியரின் மற்றுமொருகுற்றச்சாட்டு.

    பெயரெச்சத்திற்குப்பின் பெயரல்லாததும், வினையெச்சத்துக்குப்பின் வினயல்லாததுமாகியசொற்கள், புணர்ந்துநிற்பதை குற்றமென்றுகூறும் ஆசிரியர், எடுத்துக்காட்டுகளை பாடநூற்களிலிருந்தேதருகிறார்.

    ‘இக்காப்பியத்தை இயற்றித் தமிழன்னைக்கு’ {பக். 254}{இயற்றி-வினையெச்சம், தமிழன்னை-பெயர்.
    ‘வெற்றிநங்கையைத் தழுவிப்புலவர்கள்’ [பக்.332} தழுவி-வினையெச்சம், புலவர்கள்-பெயர்.
    ‘பனைமடல்களை வெட்டிக் குதிரை செய்வதிலே உள்ள உயிர்த்துன்பங்கள் பல’
    {பக்.?376} வெட்டி-வினையெச்சம், குதிரை-பெயர்.
    ‘வெட்டிக்குதிரை’ என்ற இந்த தொடர்மொழிக்கு என்னபொருளென்று ஆசிரியர் வியக்கிறார்!

    பிழையும் சரியும்:
    ஒரு பெயரெச்சத்தைத்தொடர்ந்து, அதற்குரிய பெயர்ச்சொல்வருவது மரபு. ஆனால், இரண்டுபெயரெச்சங்கள் அடுத்தடுத்துநிற்பது பிழையென்கிறார்.

    எ.கா; ‘ஆழமான குறுகிய பள்ளத்தாக்குகளையும் நீர்நிலைகளையும் கனிதரும் மரங்களையும் தேனையும் கொண்ட அந்தக் குன்றுக்குக் கொல்லி மலை என்று பெயர்.’
    இதில், ‘ஆழமான’ ‘குறுகிய’ ஆகிய இரண்டுமே தெரிநிலைப்பெயரெச்சங்கள். இதனை, ‘ஆழமானதும் குறுகியதுமான பள்ளத்தாக்குகளையும்…’ என்றெழுதுவதே முறையென்கிறார். {பக்.321}

    வினையெச்சத்தைப்பொருத்தவரை ஒன்றையடுத்தொன்றாக எத்தனைவேண்டுமானாலும்வரலாமென்றும், முடிவில் வினைமுற்றுவருமென்றுங்கூறுகிறார்.

    எகா: ‘எடுத்துவைத்துக்கொண்டிருந்திருக்கிறான்’
    இந்த வினையெச்சத்தொடர்மொழியானது, எடுத்து, வைத்து, கொண்டு, இருந்து ஆகிய நான்கு-வினையெச்சங்களை தொடர்ந்துபெற்று, முடிவில் ‘இருக்கிறான்’ என்ற வினைமுற்றைக்கொண்டு தன் பொருள்முடிவை பெறுகிறது.

    இலக்கணவிளக்கம்:
    ‘ஓடிவந்துநின்ற அழகியகுழந்தை’ – சரி. {தெரிநிலைப்பெயரெச்சத்தின்பின் ஒரேயொரு குறிப்புப்பெயரெச்சம்}
    ‘ஓடிய வந்த நின்ற குழந்தை’ – பிழை. {தெரிநிலைப்பெயரெச்சங்கள்}
    ‘கரிய பெரிய அழகிய சிலை’ – பிழை. [குறிப்புப்பெயரெச்சங்கள்}
    ‘அழகிய வந்த குழந்தை’ – பிழை. {குறிப்புப்பெயரெச்சத்தின்பின் தெரிநிலைப்பெயரெச்சம்}
    “ஆக, பெயரெச்சங்களைப்பொருத்தவரை, தெரிநிலைப்பெயரெச்சமோ குறிப்புப்பெயரெச்சமோ தனக்குத்தானே அடுத்தடுத்துநிற்காதென்றும், எனினும், ஒரு தெரிநிலைப்பெயரெச்சத்தின்பின் ஒரேயொரு குறிப்புப்பெயரெச்சம்வருவது சரியென்பதும், ஆனால், ஒரு குறிப்புப்பெயரெச்சத்தின்பின் தெரிநிலைப்பெயரெச்சம் வரவேவராதென்பதும், இங்கு விளக்கப்பட்டது.” {பக்.327}

    உரைநடையெழுதுவதில் இதுபோன்று சிக்கல்களிருப்பதை ஆசிரியர் எடுத்துக்காட்டுவதோடு, தெரிநிலைப்பெயரெச்சம், குறிப்புப்பெயரெச்சம், வினையெச்சம் வினைமுற்று ஆகியவைபற்றி அறிந்-தெழுதினால்மட்டுமே உரைநடையானது பிழையின்றியமையுமென்கிறார்.

    4. ‘உடம்போ டுயிர்வந் தொன்றுவ தியல்பே’
    இந்த நூற்பாவை கற்றவர்களுங்கூட, அதுபற்றி சிறிதும் எண்ணியேபார்க்காமல், ‘தமிழ் இலக்கணம்’ ‘உயிர் எழுத்து’ ‘மெய் எழுத்து’ ‘நேர் அசை’ ‘தொடர் இயக்கம்’ என்றெல்லாம் தொடர்மொழியா-யிருக்கவேண்டியவற்றை இவ்வாறு பிரித்தெழுதுகின்றனர்.

    இவை சரியானவையல்ல. இவற்றை தமிழிலக்கணம், உயிரெழுத்து மெய்யெழுத்து நேரசை தொடரியக்கம் என்றவாறு சேர்த்துத்தானெழுதவேண்டுமென்கிறார், மருத்துவர் பொன்முடி.

    அதற்கு அவர்தருகின்ற இலக்கணவிளக்கமென்னவென்றால், தொடரியக்கமென்பது வினைத்தொகை, மற்றவை இருபெயரொட்டுப்பண்புத்தொகையென்பதாகும். இப்படிப்பார்க்கும்போது, ஆசிரியரின் கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

    5. உடம்படுமெய்க்குப்பின்னும் பிரித்தெழுதுதல்:
    புணர்ச்சியில், நிலைமொழியின் இறுதியும் வருமொழியின் முதலும் உயிராகவேயிருப்பின், அவை புணர்வதில் சிக்கல்வருகிறது. அந்த உயிர்களை புணர்த்துவதற்கு,

    ‘இ ஈ ஐவழி யவ்வும், ஏனை
    உயிர்வழி வவ்வும் ஏமுன் இவ்விருமையும்
    உயிர்வரின் உடம்படு மெய்யென்றாகும்’

    என்னும் நன்னூற்பாவினடிப்படையில், யகரமும் வகரமும் உடம்படுமெய்யாகவந்து புணர்ச்சியை சிக்கலின்றியமைக்கின்றன. அவ்வாறு உடம்படுமெய்பெற்றுப்புணர்ந்தவற்றை பிரித்தெழுதுவதை குற்றமென்கிறார், ஆசிரியர். எடுத்துக்காட்டாக, ஒரு பாடநூலிலிருந்து,

    ‘இம்மை யின்பத்தைப் பெற வேண்டுவோர்க்குங் கல்வி யறிவு முதன்மையாகும்’
    என்பதைக்காட்டுகிறார்.

    ‘இம்மை + இன்பம் = இம்மையின்பம், கல்வி + அறிவு = கல்வியறிவு ஆகியவை இணைந்-தேவரவேண்டுமென்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

    6. புணர்ச்சியால் மகரங்கெட்டசொல்லை தனியேநிறுத்துதல்:
    பாடம் + நூல் = பாட + நூல் {மகரம் கெட்டது} = பாடநூல். இது புணர்ச்சிமரபு.

    இவ்வாறு, மகரவீறுகெட்டு புணர்ந்திருக்கின்ற இந்த தொடர்மொழியை ‘பாட நூல்’ என்று பிரித்தெழுதுவது பிழையாகும். ஆனால், பாடநூற்களிலேயேகூட, இதுபோன்ற பலதொடர்மொழிகள் பிரித்தெழுதப்படுவதை எடுத்துக்காட்டுகளுடன் குறிப்பிட்டுக்காட்டுகிறார். ‘மின்சார வாரியம்’ என்பது, தமிழகமுழுவது-மிருக்கிறதென்று, அதையுஞ்சுட்டிக்காட்டுகின்றார்.

    அதுமட்டுமன்றி, மகரவீறு கெடுமாயின், அந்த சொல் உயிரை விதியீறாகக்கொள்கிறது. அதனைத்-தொடர்ந்து உயிர்முதன்மொழிவருமானால், அங்கே ‘அத்து’ என்னும் சாரியைவரவேண்டுமென்கிறார். ‘குடும்ப அட்டை’ என்பது ஒவ்வொருவீட்டிலுமுள்ளது. இதை அத்துச்சாரியையில்லாமலெழுதியிருப்-பதைப்போல், ‘குளத்தாமை’ என்பதை, ‘குள ஆமை’ என்றெழுதலாமாவென்றுகேட்கிறார்!

    7.பிரித்தெழுதுமிடங்கள் இல்லவேயில்லையா?
    மருத்துவர் பொன்முடி, நூல்முழுவதும் சேர்த்தெழுதுவதையேவலியுறுத்துகிறாரே, பிரித்தெழுதுமிடங்கள் இல்லவேயில்லையாவென்னும் வினா, உங்களுக்கெழுவதைப்போன்றே எனக்குமெழுந்தது. ஆனால், அவர் அதற்கும் சரியானவிளக்கத்தைமுன்வைக்கிறார்! அதாவது,

    தேவையிருந்தால் பிரிக்கலாம்:
    ‘ஒரு தொடர்மொழியில் எத்தனைச்சொற்களிருந்தாலும், அவை யாவற்றையுஞ்சேர்த்து, ஒரேசொல்-லாகவேகொள்ளவேண்டுமென்றும், அப்படிப்பட்டவற்றை பிரித்தெழுதுதல் குற்றமென்றும் கடுமை-யாகக்கூறுகின்ற மருத்துவர் பொன்முடி, முன்பேகண்டதுபோல், இருபத்தாறுவகைத்தொடர்மொழிகளுள் பதினோருவகைத்தொடர்மொழிகளை, தேவையிருந்தால் பிரித்துமெழுதலாமென்கிறார்.
    சான்று:
    எழுவாய்த்தொடர்: {பக். 107}
    ‘உன் மாமாவந்திருக்கிறாரே?’
    ‘மாமா வந்திருக்கிறார், ஆனால் அவர் இன்றே ஊருக்குப்போகிறார்.’
    வினாவிலுள்ள, ‘மாமாவந்திருக்கிறார்’ என்ற எழுவாய்த்தொடர், விடையில் ‘மாமா வந்திருக்கிறார்’ என்று பிரிந்திருப்பது, பொருளைச்சார்ந்ததே. வினவுபவர் மாமாவந்திருக்கிறாரேயென்றுகேட்டதற்காக, விடைசொல்பவரும் ‘மாமா’ என்றுதொடங்கவேண்டியதில்லை. ‘ஆமாம்’ என்றுமட்டுமோ, ‘ஆமாம், வந்திருக்கிறார்.’ என்றோசொன்னாற்போதும். ‘மாமா’ என்பதை சொல்லவேண்டியதேயில்லை.

    ஆனால், வந்திருக்கின்ற அந்த மாமா, அன்றே ஊருக்குப்போகவிருக்கின்றசெய்தியின் தாக்கத்தினை உணர்த்தும்பொருட்டு, ‘மாமா வந்திருக்கிறார்…’ என்றுசொல்கிறார். {இதில் சொற்கள் பிரிந்திருப்பதால், இது எழுவாய்த்தொடராகாது} இதை கேட்பவரும் பின்னால்வரப்போகின்ற ஏதோ-வொருபொருளை உணர்த்துவதற்காகத்தான் அவ்வாறுபேசுகிறாரென்பதை உணர்ந்துகொள்வார்.

    வினையெச்சத்தொடர்:
    அதேபக்கத்தில் ஒரு வினையெச்சத்தொடர்:
    ‘உங்கள் மாமா வந்திருக்கிறாராமே, என்னசெய்கிறார்?’
    ‘என்னசெய்கிறார், வந்து இருக்கிறார்.’
    இதில், ‘வந்து’ என்ற வினையெச்சமானது, முதலில் வினைமுற்றுடன்சேர்ந்து வினையெச்-சத்தொடராயிருப்பதும், அடுத்ததில் தொடராயில்லாமல் பிரிந்திருப்பதும் பொருளைச்சார்ந்ததே-யாகுமென்றுகூறுகின்ற ஆசிரியர், “இவ்வாறு தனித்துநிற்பதால், ‘ஒன்றுஞ்செய்யாமலிருக்கிறார்’ என்றுசொல்லவேண்டியதை, ‘வந்து இருக்கிறார்’ என்று பிரித்துப்பேசுவதனாலேயே கேட்பவருக்கு உணர்த்திவிடமுடிகிறதன்றோ?” என்று கேட்கவுஞ்செய்கிறார்.

    இதுபோல், சொல்லவருகின்ற பொருளுக்கு தேவையாயிருப்பின், வினையெச்சத்தொடரை பிரித்தெழுதலாமென்கிறார். ‘இடிந்தவீடு’ என்ற பெயரெச்சத்தொடர் சேர்ந்தும் பிரிந்தும்நின்று எவ்வாறு வெவ்வேறுபொருளைத்தந்ததென்பதை சற்றுமுன் கண்டோம்.

    ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’
    என்பது தொல்காப்பியர்நூற்பா. குறிக்கின்ற பொருளின் சிறப்புடைமையையும் சிறப்பின்மையையும் அறிந்துபயன்படுத்தவேண்டுமென்பதற்காகவே, சொற்களை சேர்த்தல் சேர்க்காதுவிடுத்தல், வலியை மிகுத்தல் மிகுக்காதுவிடுத்தல் இவற்றோடு குறியீடுகள் ஆகிய அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை முறையாகப்பயன்படுத்தும்பொழுது, சொல்லவருகின்ற பொருளானது பொருள்மயக்கமின்றி மிகச்சரியாகவெளிப்படுகிறது.

    உலகிலேயே சிறந்தமொழி:
    ஒருவருடைய கருத்தை வெளிப்படுத்தும் கருவிகளுள், மொழியே சிறந்தது. உலகத்திலுள்ள மொழிகளுள் தமிழ்மொழியைப்பற்றி, “ஒரு கருத்தை வெளியிடுவதற்கு உலகிலேயே சிறந்தமொழி, தமிழ்மொழிதான்” என்று, ‘பெர்சிவல்’ என்ற மேலைநாட்டறிஞர் திறந்தமனத்துடன்குறிப்பிட்டுள்ளதாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.

    ஆதங்கம்:
    ‘மீண்டும் பிறப்புண்டேல், தமிழனாகப்பிறந்து, திருக்குறளை படித்து மகிழவேண்டும்’ என்று காந்தியடிகள் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டதாக கூறுவர்.

    இவற்றின்வழி, கருத்தை சிறப்பாகப்புலப்படுத்துவதில், தமிழுக்குள்ள திறமானது நன்றாகப்புலப்படும். இவ்வளவிற்கு சிறப்புவாய்ந்த நம் தமிழ்மொழியை, அதன் சிறப்பிற்கு குறைவராதபடி, அதன் திறனறிந்து சரியாகப்பயன்படுத்துவதற்குத்தெரியாமல், அனைவரும் தவறிவிட்டோமேயென்பதுதான் மருத்துவர் பொன்முடியின் அமைதியடையமுடியாததான ஓர் ஆதங்கமாகும்.
    அவர் சொல்கிறார்,
    ‘புணர்த்தவேண்டியசொற்களை புணர்த்தாமலெழுதுவது எவ்வளவிற்குப்பிழையோ, அதைவிடப்-பிழையானது புணர்த்தவேண்டாதவிடத்தில் புணர்த்தியெழுதுவதாகும்’ என்று.

    பொருளேயுணர்த்துகிறது:
    இது, புணர்ச்சியிலக்கணத்தின்படி அனைவருமே ஏற்றுக்கொள்ளவேண்டியதாகும். ஆனால், எங்கெங்கு புணர்த்தலாகும், எங்கெங்கு புணர்த்தலாகாதென்பதுதான் சிக்கலைத்தருவதாயிருக்கும்போலிருக்கிறது. அதற்கென்று மாறாததான விதிகளை வகுத்துத்தந்துவிட்டால், அந்த சிக்கல் எளிதாகிவிடுமென்றேன், நான். ஆனால் அவரோ,

    ‘எந்தவோரிடத்திலும் அங்கே புணர்த்தினாற்சரியாயிருக்குமா புணர்த்தாவிட்டாற்சரியாயிருக்குமா-வென்பதை சொல்லவருகின்ற பொருளேயுணர்த்துகிறது. புணர்ச்சியென்பது சொல்லவருகின்ற பொருளைப்பொருத்தமைவதால், பிரித்தாளக்கூடிய பதினோருவகையானதொடர்மொழிகளும் எங்கெல்லாம் தொடர்மொழியாகவேநிற்குமென்பதையும், எங்கெல்லாம் பிரித்தாளப்படக்கூடுமென்பதையும் பொருள்வகையாற்குறிப்பிட்டுக்காட்டுவதென்பது இயலாதது.’என்றார்.

    பாமரர்மொழியில் புணர்ச்சி:
    ‘இலக்கணமென்றால் என்னவென்றேதெரியாதவர்களான பாமரமக்கள், தங்களுக்குள் இயல்பாக உரையாடுபோது, சேர்க்கவேண்டியவிடங்களில் சேர்த்தும், பிரிக்கவேண்டியவிடங்களில் பிரித்தும் எந்தச்சிக்கலுமில்லாமல் தாங்கள் சொல்லவேண்டிய கருத்தை தெளிவாகவெளியிடுவதை உற்றுநோக்-கினாலே, புணர்ச்சியின் தேவையும் அதன் சரியான பயன்பாடும் நமக்கு நன்றாகப்புலப்படும்.’
    என்றுகூறும் மருத்துவர் பொன்முடி,
    நூலிற்கூட, குழந்தைகளும் தாங்கள் பேசுகிறபோது, ஆறுசொற்கள்வரை பொருளறிந்து சேர்த்துப்-பேசுவதாகக்குறிப்பிட்டு, அவற்றை எடுத்துக்காட்டுகளோடு விளக்குகிறார்.{பக்.64}

    இரண்டாம்வேற்றுமையிலும் நான்காம்வேற்றுமையிலும் உருபு வெளிப்பட்டுவருமாயின், வலி மிகுமென்பது விதி. ஆனால், மருத்துவர் பொன்முடியோ, புணர்ச்சியில்லையென்றால், உருபு வெளிப்-பட்டுவந்தாலும் வலி மிகாதென்கிறார். உண்மைதானே, புணர்ச்சியேயில்லாமல் எப்படிமிகும்?

    இக்காலத்தில் மிகுந்த வலியோடு நிலைமொழியை நிறுத்திவிட்டு, வருமொழியை தனியேயெழுதும்நிலை மேலோங்கியிருப்பதால், இந்த இரண்டுருபுகளிலொன்று எங்குவந்தாலும், அவ்விடத்தில் சொல்லப்படுகின்ற பொருளுக்கு புணர்ச்சி தேவையாயில்லையாவென்பதுபற்றிய நினைவேதுமில்லாமல் வலிமிகுத்துவிடுவதோடு, வருமொழியை பிரித்துமெழுதிவிடுகிறார்களென்று குற்றஞ்சுமத்துகின்ற ஆசிரியர், இந்த போக்கை பாடநூற்களிலும் அடிக்கடிகாணலாமென்கிறார்.

    மொழியியல்வழி விளக்கம்:
    சங்கவிலக்கியங்களில்வரும் உள்ளுறை இறைச்சி ஆகியவற்றைப்போன்று, ஒரு வாக்கியத்தை அதன் பொருளடிப்படையில் அகவமைப்பு புறவமைப்பு என்ற இருநோக்கடிப்படையிற்காண்பர், மொழியியலார்.

    “பொருண்மையியல்விதிகள் அகவமைப்பில் செயல்பட்டால்தான், வாக்கியத்தின் முழுப்பொருளை உணர்வதற்கு தடையேதுமிருக்காது” என்றுகுறிப்பிடுகிறார், அறிஞர் கி.அரங்கன், தன்னுடைய ‘தொடரியல்: மாற்றிலக்கண அணுகுமுறை’ என்றநூலில்.

    மருத்துவர் பொன்முடியின் தமிழ்வெல்லத்தாழியும், வாக்கியத்தின் பொருளில் பொருட்குழப்பமேதுமின்றி, அதிலுள்ள சொற்களில் பொருட்சிறபுறுஞ்சொற்கள் யாவையென்பதை கண்டறிந்து, அவற்றுக்கு சிறப்புண்டாகும்வகையில் புணர்ச்சியை சரியாகப்பயன்படுத்தி, அந்த வாக்கியத்தின் பொருளை தெளிவாகவெளிப்படுத்துமாறு அதனை எழுதவேண்டுமென்பதைத்தான், தன்னுடைய நோக்கமாகக்கொண்டுள்ளது.

    முன்னுக்குப்பின் முரண்:
    தமிழை எப்படிவேண்டுமானாலுமெழுதலாமென்பதுபோல், பலரும் அதை தத்தமக்குத்தோன்றி-யவாறெழுதுவது வேதனைக்குரியதென்னும் மருத்துவர் பொன்முடி, அறிஞர்களாயிருந்தும் அவர்கள் எழுதித்தந்திருக்கின்ற பாடநூற்களிலேயேகூட ஓரிடத்தில் சேர்த்தெழுதியதை பிறிதோரிடத்தில் காரணமேதுமின்றி பிரித்தெழுதுகின்றனரென்பதை நூலில் ஆங்காங்கே சுட்டிச்செல்கிறார்.

    புணர்ச்சிபற்றிய அக்கறையின்மையே இதற்கெல்லாம் காரணம். இந்த நூல் வெளிவந்தபிறகாவது, அவர்களுடைய எழுத்தில் மாற்றமேற்படுமென்று நம்புவோம்.

    வல்லின்மெய்யீற்றில் சொற்களை நிறுத்துவதும், மகரத்தை கெடுத்தபின்னர் அதனை தனியேநிறுத்-துவதும், அதுமட்டுமன்றி, அதனுடன் புணர்ந்திருக்கவேண்டிய உடம்படுமெய்யை தவிர்த்துவிட்டு, வருமொழியாயிருக்கும் உயிர்முதன்மொழியினை எந்தமாற்றமுமின்றி உயிர்முதல்வருமொழியாக-நிறுத்துவதும், பிரிக்கவேண்டியவிடத்தில் சேர்ப்பதும், சேர்க்கவேண்டியவிடத்தில் பிரித்தெழுதுவதும் இதுபோன்ற இன்னபிறகுறைபாடுகளும் எல்லாநூற்களிலும் காணப்படுகிறதேயென்பதுபற்றி சிலரிடம் வினவினால், அவர்கள் வேடிக்கையாக, ‘பழக்கதோசம்’ என்கிறார்கள்!

    தவறானபழக்கமென்பது, மொழிக்கானாலும் நமக்கானாலும் ஆகாததோசமாகத்தானிருக்கும். அது மாற்றப்படவேண்டியது காலத்தின் கட்டாயம். இந்த நூலை படித்தபிறகாவது என்னைப்போன்றவர்களும் மற்றவர்களும் தம்முடைய எழுத்தில் இதுபோன்ற பிழைகள் நேராவண்ணம் திருத்திக்கொள்ளுதல் தேவையானதே. ஏனெனில், நம்முடைய அறியாமை வெளிப்படுமுன், உண்மையை நாமேயறிந்து, அதற்கேற்ப பிழையின்றி முறையாயெழுதிவிடுவது நலமன்றோ?

    குறியீடுகளின் தேவை:
    ஒரு தொடர்மொழியின் நிலைமொழியோடு முதல்வரியானது முடிவுற்று, அதன் வருமொழியானது அடுத்தவரியில்வரவேண்டியிருக்கும்போது, முதல்வரியின் இறுதியில் ஓர் இடைக்கோடிட்டு, அது ஒரு தொடர்மொழியென்பதை உறுதிப்படுத்தவேண்டுமென்கிறார்.

    அவ்வாறு செய்யவில்லையென்றால், அந்த தொடர்மொழியின் நிலைமொழியை ஒரு தனிமொழி-யென்றேநினைக்கவேண்டியிருக்குமென்றும், சிலநேரங்களில், அடுத்தவரியைப்படித்தபின்னுங்கூட பொருளில் குழப்பமேற்படுவதுண்டென்றுங்கூறுகிறார். அதேபோல், வாக்கியத்தின் பொருளோட்டத்தில் மாற்றமுண்டாகுமிடங்களிலெல்லாம் ஒரு காற்புள்ளியிடுவதும் தேவையானதென்கிறார்.

    நூல்வழியாக அறிந்துகொள்ளவேண்டியவை:
    * வல்லினமெய், தமிழ்ச்சொல்லின் இறுதியில் நிற்காது.
    * புணர்ச்சிக்குப்பிறகு, சொற்களை பிரித்தற்கூடாது.
    * சேர்க்கக்கூடாதவிடங்களில் சேர்த்துவிடக்கூடாது.
    * தொகைநிலைத்தொடர்மொழிகளை பிரிக்கவேகூடாது.
    * புணர்ச்சியின்றி மகரவீற்றை கெடுக்கக்கூடாது.
    * வினையெச்சத்தொடரில் பலவினையெச்சங்களிருக்கலாம். காரணம்பற்றி பிரிந்தும்நிற்கலாம்.
    * பெயரெச்சங்களில், தெரிநிலப்பெயரெச்சமோ குறிப்புப்பெயரெச்சமோ தனக்குத்தானே அடுத்துநிற்காது. ஆனால், ஒரு தெரிநிலைப்பெயரெச்சத்தின்பின் ஒரேயொரு குறிப்புப்பெயரெச்சம் வரலாம்.
    * பெயரெச்சத்தொடரும், தகுந்த காரணமிருக்க, பிரிந்துநிற்பதுண்டு.
    * இலக்கணம் வலிமிகுமென்று வரையறுத்துள்ளவிடங்களிலும், புணர்ச்சியின்றி வலி மிகாது.
    * மற்றகுறியீடுகளைப்போன்றே, இடைக்கோடும் இன்றியமையாதது.
    இவையும் இன்னபிறவும் இந்த நூலின்வழியாக நாம் அறிந்துகொள்ளக்கூடியவையாகும்.

    நூலின் நிறைகள்:
    * இந்தக்காலத்திற்குத்தேவையான நல்லநூல். புணர்ச்சியை நிலைநிறுத்தவந்திருக்கும்நூல்.
    * தமிழுலகில், இன்று பரவிக்கிடக்கின்ற புணர்ச்சிபற்றியதான அறியாமையை அகற்றும்பொருட்டு, இலக்கணப்புரட்சிசெய்யும் சிறந்தநூல்.
    * இதுவரையுள்ள இலக்கணநூற்கள் புணர்ச்சியைப்பற்றி என்னசொல்கின்றனவோ, அவ்விலக்கண-மட்டுமன்றி, நடைமுறைக்கேற்றவகையில் புதியவிதிகளை அமைத்துக்கொள்ள வழிவகுக்கும்நூல்.
    * உரைநடையெழுதுவதில், இந்நாள்வரையிலும் நடைமுறையிலிருந்துவருவதை மாற்றி, ஒரு புதியநடைமுறையை மேற்கொள்ளவேண்டி, தமிழறிஞர்குழாமும் அரசும் கூடிப்பேசி, ஒரு முடிவெடுக்-கவேண்டிய சூழலை உருவாக்கியிருக்கின்றநூல்.
    * புணர்ச்சியென்பது, பொருளைப்பொருத்ததேயென்பதை முதன்முறையாகச்சொல்லும்நூல்.
    * எழுத்து சொல் வாக்கியம் ஆகியவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு, தொடர்மொழியின் தேவை-யையும் அதன் சிறப்பையும் முழுமையாகவெளிப்படுத்தும் புதுமையானநூல்.
    *ஒரு வாக்கியத்திலுள்ள எந்தவிருசொற்களானாலும், அவற்றிற்கிடையேயுள்ள இலக்கணவுறவுகளை தெள்ளிதின்காட்டி, அந்த சொற்களை புணர்த்துவதாலும் புணர்த்தாமல் விடுத்தலாலுமுண்டாகக்கூடிய பொருள்மாற்றங்களை ஐயமறப்போக்கியதில், மருத்துவர் பொன்முடி தனித்துநிற்கிறார்.

    குறைகள்:
    நூலில் நிறைகள்மட்டுமன்றி, குறைகளுமுள்ளன. அவையாவன:
    * குன்றக்கூறல் இல்லையென்றாலும், மிகைபடக்கூறல் உண்டென்றேசொல்லவேண்டும். இலக்-கணம்பேசுகின்ற இந்த நூலில், இசையென்றும் யோகமென்றும்பேசுகிறார்.
    * கூறியதுகூறலென்பது நூல்முழுவதுங்காணப்படுகிறது. இது, படிப்போர்க்கு சலிப்பையேற்படுத்தக்கூடும்.
    * ஒவ்வொருநூலின்கீழும் ஒவ்வொருபுணர்ச்சிபற்றியும் மீண்டுமீண்டுங்கூறியிருப்பதை தவிர்த்து, ஒவ்வொருபுணர்ச்சியின்கீழும் அனைத்துநூற்களைப்பற்றியும் ஒருங்கிணைத்துக்குறிப்பிட்டிருந்தால், பக்கங்களின் அளவை வெகுவாகக்குறைத்திருக்கலாம்.
    * தொடர்மொழிகள் ஒரேசொல்லாகத்தானிருக்கவேண்டுமென்பதற்காக, மருத்துவர் பொன்முடி, முப்பத்திரண்டெழுத்துகள்வரை ஒரேசொல்லாயெழுதியிருக்கிறார். ஒருசொல்லில் எழுத்துகள் ஓர் அளவுக்குமேலிருக்கும்போது, அதை இடைவிடாமற்படிப்பதென்பது எவருக்குமே எளிதன்று.

    தொகுப்புரை:
    தமிழையே புரட்டிப்போடுவதாக, முற்றிலும் புதியநோக்கிலமைந்துள்ளது தமிழ்வெல்லத்தாழி.

    இதில் இடம்பெற்றிருந்த பல அறிஞர்களின் பெயர்கள் நீக்கப்படவேண்டுமென்று நான் கேட்டுக்-கொண்டபோது, மறுப்பேதுஞ்சொல்லாமல், எனது கருத்தை அப்படியேயேற்றுகொண்ட நூலாசிரியருடைய பெருந்தன்மையை பாராட்டுகிறேன்.

    முற்றிலும் புதியகருத்து:
    தொல்காப்பியர்காலந்தொடங்கி இக்காலம்வரை, எவருமேயெண்ணிப்பார்த்திராத ஒரு புதுமை-யானசிந்தனை; தொடாத துறை. இதுதான் தமிழ்வெல்லத்தாழியின் அடிப்படைகளில் இன்றியமையாதது. எனவே, இனியுங்காலந்தாழ்த்தாமல் அறிஞர்கள் ஒன்றுகூடி ஒரு முடிவெடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டதென்றேகருதுகிறேன்.

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருட் காண்ப தறிவு
    {குறள்423}

    என்பதற்கிணங்க, இந்த நூலின்மெய்ப்பொருளையும் அறிஞர்கள் ஆய்ந்தறிந்து, அதன்பின்வரும் முடிவின்படி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். புணர்ச்சியையும் அதன் பயன்பாட்டையும் புதியகோணத்திலாய்ந்திருக்கும் இந்த நூலைத்தந்த நூலாசிரியருக்கும், அவருடைய நூலுக்கும், வரவேற்பினையும் வாழ்த்தினையுமளிக்கவேண்டும்.

    உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப்
    புரத்தின் வளமுருக்கி பொல்லா – மரத்தின்
    கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோல் மாந்தர்
    மனக்கோட்டந் தீர்க்கும்நூன் மாண்பு.

    என்கிறது நூலின் சிறப்புகுறித்து நன்னூற்பாயிரம். அறியாமையை போக்கி, அறிவை வளர்த்து, மனக்கோணலை மாற்றுகின்ற ஆற்றல்வாய்ந்ததே நல்லநூலுக்கு அடையாளம். அவ்வகையில், என் அறியாமையிலிருந்து என்னை வெளிக்கொணர்ந்து, என்னை பெரிதுமாற்றியவொருநூலுக்கான மதிப்-புரையினை, நானேநல்கியதை பெரும்பேறாகக்கருதுகிறேன்.

    இந்த நூல் வெளிவந்தபிறகு, பழியோ புகழோ எதுவந்தாலும் அதிலிருந்து அந்த ஆனைமுகனே-காக்கவேண்டுமென்பதை “…பழிவரினும் புகழ்வரினும் சேர்ந்துபணிந்தேன் திருவடிகள் காப்பு” என்று தம் காப்புச்செய்யுளில் குறிப்பிடுவதிலிருந்து, ஆசிரியர் இரண்டையுமேயெதிர்பார்த்துத்தானிருக்கிறா-ரென்பது புலப்படுகிறது.

    அறிஞருலகம் ஒன்றுகூடி, புணர்ச்சிதொடர்பாக, மருத்துவர் பொன்முடியளித்துள்ள புதிதான இந்த கருத்துகளை நன்கு விவாதித்து, நல்லவொருமுடிவினை எட்டுதலும்வேண்டும், அதன்வழியாக, தமிழ்மொழியை அதன் அழிவுப்பாதையிலிருந்து மீட்டு, அதனை என்றுமேயழியாததாய் சீருடனும் சிறப்புடனும் நாம் அனைவரும் கொண்டாடிடவும்வேண்டும்.
    நன்றி.
    என்றும்
    மாறாத்தமிழன்புடன்,
    துரை குணசேகரன்
    29 – 06 – 2012

    _____________________________________________

    முனைவர் துரை குணசேகரன்,
    எம்.ஏ {தமிழ்}, எம்.ஏ {சமூகவியல்}, எம்.ஏ {மொழியியல்}, எம்..எட்., எம்.ஃபில்., பிஎச்.டி, பி..ஜி.டி.எல்.,
    தலைவர், தமிழ்த்துறை,
    மயிலாடுதுறை ஏவிசி கல்லூரி, மயிலாடுதுறை
    மாநிலத்தலைவர், தமிழாராய்ச்சியாளர்ப்பேரவை.

     

    Share
  • மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இலக்கியப் பணிகள் – 3

    — முனைவர்   துரை. குணசேகரன்.

     

    மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

    கடியேறு மலரோனைக் கடுஞ்சிறையில் வைத்துப்
    படியாதி எவ்வுலகும் படைத்தருளும் பிரானை
    முடியாத முதலோனை மூவர் பெருமானை
    வடிவேலன் தனைப்பேசா வாயென்ன வாயே
    வள்ளி மணாளனைப்பேசா, வாயென்ன வாயே…

    மகாவித்துவானின் 200ஆம் பிறந்த நாளை முன்னிட்டு அண்மையில் மயிலாடுதுறை மன்னன்பந்தல் ஏ.வி.சி.கல்லூரி தமிழாய்வுத்துறை இக்கட்டுரையாளரின் பதிப்பில் ‘மாண்புகள் மிகுந்த மயிலாடுதுறை’, என்னும் நூல், கல்லூரி முதல்வர் ‘முத்தமிழ்வித்தகர்’ முனைவர் முத்து.வரதராசன் அவர்களின் ‘பெண்ணியம் போற்றுவோம்’, என்னும் கவிதை நூல், எங்கள் துறைப்பேராசிரியர்கள் முனைவர் இரா.மஞ்சளா, முனைவர் ந.சரவணன் ஆகியோரின் ‘அ.வ.அ.கல்லூரித்தமிழாய்வுத்துறையை வளர்த்தெடுத்த சான்றோர்கள்’ என்னும் நுல் ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது. இம்மூன்றுநூல்களும் மகாவித்துவானை ஆதரித்த திருவாவடுதுறை ஆதீனத்திற்குப்பெருமைசேர்க்கும் வகையில், தற்போதைய திருக்கையிலாய பரம்பரை 24ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீஅம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகளின் திருக்கரங்களால் வெளியிடப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    மகாவித்துவானின் மகிமை:-
    கண்டதேவிப்புராண அரங்கேற்றத்திற்காக பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள தேவிக்கோட்டை (தற்போது தேவக்கோட்டை) நகரவைசியர் பெருமக்கள் மகாவித்துவான் அவர்களை மாணவர்கள், வேலைக்காரர்களோடு திருவாவடுதுறையிலிருந்து அழைத்துச்சென்றனர். பட்டுக்கோட்டைக்கு அருகில் சென்றபோது இருள்சூழ்ந்ததால் அங்கிருந்த ஒரு குடிசைவீட்டில் சென்று விசாரிக்கின்றனர். அவ்வில்லத்தில் திண்ணையில் படுத்திருந்த ஒரு பார்ப்பனப்பெண் ஆடவர்கள் பலரையும் பார்த்தவுடன் உள்ளே சென்று இல்லத்தைத்தாழிட்டுக்கொண்டார். நீண்ட நேரம் கழித்து அவளின் கணவன் உணவுப்பொருள்முடிந்த ஒரு மூட்டையுடன் வந்து கதவைத்தட்டினான். வெளியில் படுத்திருந்த மகாவித்துவானின் மாணவர்கள் அவரை அழைக்கவே, மறுத்து கதவைத்திறந்து தாழிட்டுப்படுத்துக்கொண்டார். படுத்தவர் தமக்கு இரண்டு நாட்களுக்கு உணவுக்குப்பஞ்சமில்லை என்னும் மகிழ்வில் ஒரு பாடலை உரக்கப் பாடிக்கொண்டே படுத்துக்கொண்டார்.

    தமிழ்ப்பாடலைக் கேட்ட மகாவித்துவான் அவரை அழைத்து தம் எதிரே பாடச்செய்தார். அப்போது அவர் தந்தை ஒரு வித்துவான் என்றும் அவர் வைத்திருந்த நூல்களை எல்லாம் வாங்கிச்சென்றவர்கள் மீண்டும் தரவில்லை என்றும் வருத்தப்படார். தமக்கு உண்மையாகப்பாடஞ்சொல்ல எவருமிலர். வறுமையும் அதற்கு இடந்தரவில்லை. மனைவியுடன், மக்களும் பிறந்துவிட்டனர் என்று ஆதங்கப்பட்டவர்,

    “மாயூரத்தில் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் என்று ஒரு சிறந்த தமிழ்வித்துவான் இருக்கிறாராம். ஏழைகளாயுள்ளவர்களுக்கு அன்னமும் வஸ்திரமும் அளித்து அவர்களை நன்றாகப்படிப்பித்து அனுப்புவது அந்தமகானுக்கு வழக்கமாம். அவரிடத்தில் சிலமாதம் படித்தாலும் படிப்பவர்கள் கல்விப்பெருக்கத்தை அடைவார்கள் என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட மகோபகாரியைப்போல் இக்கலிகாலத்தில் யார் இருக்கிறார்? அந்தப்புண்ணியவானிடத்தில் போய்ப்பழக அவா இருக்கிறது, அதற்கும் முடியவில்லை”
    என்று பலவாறாகப்புலம்புகிறார். மகாவித்துவானின் மாணவர்களில் ஒருவர் அருகில்வந்து முதுகைத்தட்டி, ‘இங்கே படுத்திருக்கும் இவர்கள்தாம் நீங்கள் குறிப்பிடும் அந்த மாமனிதர்’ என்று சொன்னதுதான் தாமதம், அவர் துள்ளிக்குதித்து மகிழ்ச்சியால் ஆடிப்பாடியதற்கு அளவே இல்லை. விருந்துக்கு ஏற்பாடு செய்ய ஓடினார். தடுத்து அனைத்தையும் கொடுத்து உணவுக்கு ஏற்பாடு செய்யச்சொன்னார்கள்.

    காலை எழுந்தும் உணவுஉண்டுவிட்டு இல்லத்திற்குத் தேவையான பொருட்களைத்தந்துவிட்டு, பிராமணரின் விருப்பப்படி அவரையும் கண்டதேவிப்புராண அரங்கேற்றத்திற்கு அழைத்துச்சென்ற நிகழ்வினை உ.வே.சா. அழகுறப்பதிவு செய்கிறார். இதன்வழி மகாவித்துவான், ‘கொள்வோன் கொள்வகை அறிந்து கொடுக்கும்’ ஆசானாக மட்டுமன்றி, அவர்களின் உடல்நிலை, உளநிலை, இல்லநிலைகளையும் அறிந்து அவற்றிற்கேற்ப அளிக்கும் மாமனிதராகவும் விளங்கினார் என்பதும் தெளிவு.

    மாணவர் படை:-
    மகாவித்துவானிடம் பாடங்கேட்ட மாணவர்களில் குறிப்பிடத்தகுந்தோர் பலர் உள்ளனர். சாதி, சமயம் பாராது அனைவரையும் தம்முடைய பிள்ளைகளாக எண்ணிப்பாடம் நடத்தியவர். பூவாளூர் தியாகராச செட்டியார், அரண்வாயில் வேங்கடசுப்புப்பிள்ளை, திருவீழிமிழலை சாமிநாதக்கவிராயர், சுந்தரம்பிள்ளை, களத்தூர் வேதகிரியார், பங்களூர்த்தேவராசபிள்ளை, குலாம்காதர் நாவலர், சவராயலு நாயகர், மாயூரம் வேதநாயகம் பிள்ளை, ஆரியங்காவற்பிள்ளை, அழகிரிராஜு, வல்லம் கந்தசாமிப்பிள்ளை, மாயூரம் தெற்குவீதி முத்துப்பிள்ளை, சித்தர்காடு நமசிவாயபிள்ளை, சிவலிங்கவாத்தியார் சிங்கவனம் சுப்புபாரதி, திருப்பாம்புரம் சாமிநாதபிள்ளை, கர்ணம் வைத்தியலிங்கம்பிள்ளை, கூறைநாடு முத்துகுமாரபிள்ளை முத்தாள்புரம் கோபாலபிள்ளை, சுந்தரபெருமாள் கோவில் அண்ணாசாமி ஐயர், திருமங்கலக்குடி சேஷயங்கார், திருவாவடுதுறை வெங்குவையர், தர்மதானபுரம் கண்ணுவையர், மாயூரம்பட்டமங்கலம் சபாபதிஐயா, கூறைநாட்டுச் சாமிநாதவாத்தியார், கோபாலகிருஷ்ணபாரதி, சாத்தனூர் பஞ்சுவையர், திருத்தருப்பூண்டிபாகவதர், பெரியராமசாமி ஐயர், சின்ன ராமசாமி ஐயர், காரைக்கால் சவேரிநாதபிள்ளை, உ.வே. சாமிநாத ஐயர் உள்ளிட்ட பலருக்கும் ஆசிரியராக விளங்கியவர். இந்த மாணவர் படையினர் பல்லாயிரக்கணக்கான மாணவர்களை உருவாக்கும் ஆற்றாலர்களாக விளங்கியவர்கள்.

    “ஊர்வந்து சேர்ந்தேன், என்றன் உளம்வந்து சேரக்காணேன்
    ஆர்வந்து சொலினும் கேளேன்: அதனை இங்கு அனுப்புவாயே”

    என்று திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய தேசிகருக்கு மடல் எழுதியவர் கிறித்தவ அறிஞர் மாயூரம் வேதநாயகம்பிள்ளை. இவர் மகாவித்துவானின் மாணவர் மட்டுமன்றி அவருக்கு பலநேரங்களில் உதவியும்புரிந்த நண்பருமாவார். இவர்மீது குளத்தூர்க்கோவை பாடுமளவிற்கு மகாவித்துவானின் நட்பு இருந்தது. சீர்காழிக் கோவை பாடுதற்கும் அரங்கேற்றத்திற்கும் வழிவகுத்தவர்.

    எண்ணற்ற மாணவர்கள் பயின்றாலும் சிலர் அவருடைய நூல்களைப்பதிப்பு செய்துள்ளனர். அவருடைய முழுவரலாற்றையும் உலகமறிமச்செய்த மாணவர் தமிழ்தாத்தா உ.வே.சா.ஆவார். ஐந்தாண்டுகள் மகாவித்துவானிடம் பாடம் பயின்றவர். தொடக்கத்தில் சிற்றிலக்கியத்துறையில் இருந்தாலும், சேலம் இராமசாமி முதலியாரின் தொடர்பால் தமிழ்ச்செவ்வியல் இலக்கியங்கள் பலவற்றைப்பதிப்பு செய்யும் அளவிற்கு சிறந்தபதிப்பாசியராக விளங்கினார்.

    அதுவரை, ‘இறைச்சி’பற்றியும் ‘கள்’ குறித்தும் பாடப்பெற்ற இலக்கியங்கள் என்று ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சங்கஇலக்கியம், காப்பியஇலக்கியங்களைத்தேடிக்கண்டு, பதிப்பித்ததுடன், தமிழைச்செவ்வியல்மொழி என்று அறிவிக்கவும் காரணமாக விளங்கியவர்களில் குறிப்பிடத்தகுந்தவர் உ.வே.சாமிநாத ஐயராவார். இவர் மகாவித்துவான் பட்டறையில் பட்டைதீட்டப் பெற்ற தமிழ்வைரம்.

    புராணம் பாடும் புலவர்:-
    மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் படைப்புகளை, பலவகைகளில் பாகுபடுத்தலாம். அவர் படைப்புகளில் மிகுதியானவை தலபுராணங்களே.

    1. அம்பர்ப்புராணம்
    2. ஆற்றூர்ப்புராணம்
    3. உறையூர்ப்புராணம்
    4. கண்டதேவிப்புராணம்
    5. ஸ்ரீகாசிரகசியம்
    6. குறுக்கைப்புராணம்
    7. கோயிலூர்ப்புராணம்
    8. சூரை மாநகர்ப்புராணம்
    9. தணியூர்ப்புராணம்
    10. தியாகராசலீலை
    11. திருக்குடந்தைப்புராணம்
    12. திருத்துருத்திப்புராணம்
    13. திருநாகைக்காரோணப்புராணம்
    14. திருப்பெருந்துறைப்புராணம்
    15. திருமயிலைப்புராணம்
    16. திருவரன்குளப்புராணம்
    17. பட்டீச்சுரப்புராணம்
    18. மண்ணிப்படிக்கரைப்புராணம்
    19 .மாயூரப்புராணம்
    20. வானொளிபுற்றூப்புராணம்
    21. விளத்தொட்டிப்புராணம்
    22. வீரவனப்புராணம்
    என்று 22 புராணங்களைப்படைத்து ‘புராணம்பாடும்புலவர்’ என்னும் பெயர்பெற்றவர். இதுகுறித்து திருவாவடுதுறை ஆதீனகர்த்தாவாக விளங்கிய அருள்மிகு சுப்பிரமணிய தேசிகருக்கு, திருச்சிராப்பள்ளி ராவ்பகதூர் தி.பட்டாபிராமபிள்ளை,
    “சற்றொப்ப 30 ஆண்டுகளுக்கு முன்பு நானும் என் தம்பியும் நண்பர்கள் சிலருடன் திருஎவ்வூரிலிருந்து திருவெண்பாக்கம் என்னும் சிவதலத்திற்கு வழிபாட்டிற்காகச் சென்றுகொண்டிருந்தோம். அப்போது எதிரேவந்த எழுபது வயது மதிக்கத்தக்க வேளாளர் ஒருவரிடம் திருவெண்பாக்கம் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். பின்பு, ‘இத்தலத்திற்கு புராணம் உண்டா’? என்று வினவினேன். ‘புராணம் பாடுதற்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களா இருக்கிறார்கள்? அந்தமகான் இருந்தால் இதற்கும் ஒருபுராணம் பாடியிருப்பார்” என்றார். அந்தச்சொற்கள் என் அகக்கண்ணின்முன் பிள்ளையர்களுடைய திருவுருவத்தையும் செயல்களையும் தோற்றச்செய்தன; நெஞ்சம் உருகியது. வந்த அன்பர்களிடம், “ஜன சஞ்சாரமற்ற இந்தக்காட்டிலேகூடபிள்ளையவர்களுடையபுகழ் பரவியிருக்கிறது பார்த்தீர்களா! என்று சொன்னேன்” என்று குறிப்பிடுகின்றார்.

    இது மகாவித்துவானின் ‘புராணம்பாடும்’ புலமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. மகாவித்துவான் தாம் கண்டு, கேட்டு அறிந்த செய்திகளை தம்முடைய படைப்பில் உரியவிடங்களில் சேர்ப்பார். திருவாவடுதுறை மடத்தையும் அதன் குருமூர்த்தியையும் உரியவிடங்களில் பாராட்டத்தயங்கமாட்டார்.

    ஒன்றைப்படிக்குங்காலத்தில் ஊன்றிப்படித்தலும் உருகவைத்தலும் மகாவித்துவானுக்கு கைவந்தகலை. ஒருமுறை காஞ்சிபுராணத்தின் இரண்டாம் கண்டத்திலுள்ள ஒரு பகுதியைப்படித்து, அதன்பாலுள்ள சொற்சுவை பொருட்சுவைகளை நுகர்ந்து இன்புற்றார். படைத்த கச்சியப்ப முனிவரின் அருமை பெருமைகளை நினைந்து கண்ணீர்விட்டும் அதனை ஆடையால் துடைத்தும் படித்துக்கொண்டேயிருந்தாராம். இந்நிகழ்வு நடந்தது மாணவர் சிதம்பரம்பிள்ளையின் இல்லத்தில் மாணவர்களுக்கு பாடம்சொல்லி முடித்தபின் நள்ளிரவில் நடந்தது. இதனை, அயலித்தே உறங்கிக்கொண்டிருந்த பிரபு ஒருவர் சாளரம் வழியாகப்பார்த்துவிட்டு, எழுந்து வந்து அவர் கையிலிருந்த புத்தகத்தை வெடுக்கென்று பிடிங்கி எறிந்துவிட்டு, ‘ஐயா நீங்கள் வாசித்ததுபோதும் நிறுத்துங்கள். கவலைகள் ஏதுமிருந்தால் சொல்லிவிடுங்கள். சிதம்பரம்பிள்ளை போன்றவர்கள் இருக்கும்பொழுது எதற்காகக்கவலைப்படுகிறீர்கள்?’ என்று வருந்திக்கேட்டாராம் இந்த அழுகை ஊன்றிப்படிப்பதனால் வந்தது என்றோ, படிப்பதால் அவ்வாறு அழுகைவரும் என்றோ அறியாதவர் அவர்.

    தங்கள் ஊர் குறித்து, தலபுராணங்கள் பாடப்படுவதை மக்கள் பெருமையாக நினைப்பர். தலபுராணம் பாடுவதற்கு அவ்வூர்,
    1. பாடல்பெற்ற இடமாக இருத்தல்
    2. அற்புதங்கள் நிகழ்த்தப்பெற்றவையாக இருத்தல்
    3. முக்தி பெறும் தலங்களில் ஒன்றாக இருத்தல்
    4. தேவர்கள் வழிபட்ட இடம் என்னும் நம்பிக்கை
    5. சித்தர்கள் வாழ்ந்த தலம்
    6. புராணக்கதைகளில் இடம் பெற்றிருத்தல்
    என்பனவற்றில் பெரும்பான்மையைக்கொண்ட இடமாக இருத்தல் வேண்டும்.

    படித்தல், பாடம் சொல்லல், நூல்கள் யாத்தல், சிறப்புப்பாயிரம் அளித்தல், நூல்களைப்பதிப்பித்தல், நூல்களுக்கு உரைவழங்கல் என்பனவற்றை தம்வாழ்வியல் பணிகளாகக்கொண்டவர் மகாவித்துவான் அவர்கள். தாம் வாழும் காலம்வரை தலபுராணங்கள் பாடப்பெறாத, அல்லது வடமொழியில் பாடப்பட்டும் தமிழில் இல்லாத தலத்தில் வாழுவோர், மகாவித்துவானை அழைத்துச்சென்று பாடச்சொல்லி மகிழ்ந்தோர் பல்லோர். அவ்வகையில் தமிழில் மிகுதியான தலபுராணம் பாடிய பெருமைக்குறியவராக அவர் கருதப்பட்டார்.

    மகாவித்துவான்பாடிய தலபுராணங்களில் மாயூரப்புராணமும், திருநாகைக் காரோணப்புராணமும் பெருங்காப்பியங்களாக எண்ணத்தக்கவை. மயிலாடுதுறை அமைந்திருக்கும் சோழநாட்டின் பெருமைகுறித்துக்கூறவந்த மகாவித்துவான்,

    “பூவினூர் பதுமம் போலும் புருடருள் திருமால் போலும்
    காவினுள் கற்பம் போலும் கலைகளுள் ஞானம் போலும்
    ஆவினுள் காரான் போலும் அறத்தினுள் அறமே போலும்
    நாவிலுண் மெய்நாப் போலும் நாட்டினுள் சோழநாடு”

    என்று மயூரப்புராணத்தின்வழி உணர்த்துகின்றார். அவ்வாறு விளங்கும் சோழநாட்டில்,

    “பாங்கு சேர்தவ முடையரே வசித்திடு பண்பால்
    தாங்கு வார்சடைப் பிரானுமை யொடுமமர் தகவால்
    வீங்கு பேரொளி யாவழியா தமர் விறலால்
    ஓங்கு வான்சிவ லோகமே கௌரி மாயூரம்”

    என்று சிவலோகத்திற்குச் சமமாக மயிலாடுதுறை விளங்குகின்றது என்கிறார்.

    மகாவித்துவான் படித்தவாரே, படைப்புகளைப்படைக்கவும் தெரிந்தவர். உறையூர்ப்புராண அரங்கேற்றம் தொடங்கியது. நாட்டுச்சிறப்பு, நகரச்சிறப்பு என்று அவரவர்களுக்குப்பிடித்த இடங்களைமனம் உருகிக்கேட்கின்றனர். நகரப்படத்தின் ஓரிடத்தில் கூறப்பட்டுள்ள வருணணையை நெஞ்சுருகி கேட்டுவந்த அந்தக்கோவிலின் தருமகர்த்தா கண்ணீர்விட்டுக்கொண்டே கேட்டாராம். இதுபோன்று மகாவித்துவானின் புராணங்களில் பல உள்ளன.

    அந்தாதி:-
    மகாவித்துவான் பாடிய படைப்புகளில் எண்ணிக்கையில் இரண்டாமிடத்தில் இருக்கும் இலக்கியம் அந்தாதியாகும். இதில் நான்கு வகை அந்தாதிகளைப் பாடியுள்ளார்.

    1) பதிற்றுப்பத்தந்தாதி (6)
    அ. தண்டபாணி பதிற்றுப்பத்தந்தாதி
    ஆ. திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் பதிற்றுப்பத்தந்தாதி
    இ. திருவூறைப் பதிற்றுப்பத்தந்தாதி
    ஈ. பழசைப்பதிற்றுப்பத்தந்தாதி (பட்டீசுவரம்)
    உ. பாலைவனப்பதிற்றுப்பத்தந்தாதி
    ஊ. பூவானூற்றுப் பதிற்றுப்பதந்தாதி
    என்னும் ஆறு பதிற்றுப்பத்து அந்தாதிகளைப்பாடியவர்.

    2) திரிபந்தாதி (4)
    அ. குடந்தைத்திரிபந்தாதி
    ஆ. திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதி
    இ. திருவானைக்காத்திரிபந்தாதி
    ஈ. திருவிடைமருதூர் திரிபந்தாதி
    என்று நான்கு திரிபு அந்தாதிகளைப் பாடியுள்ளார்.

    3) யமகவந்தாதி (4)
    அ. திருச்சிராப்பள்ளி யமவஅந்தாதி
    ஆ. திருவாவடுதுறை யமவஅந்தாதி
    இ. தில்லையமகவந்தாதி
    ஈ. துறைசை யமக அந்தாதி
    என்று நான்கு யமக அந்தாதிகளைப் பாடியுள்ளார்.

    4)வெண்பாவந்தாதி (1)
    (அ) எறும்பீச்சரம் வெண்பாவந்தாதி
    என்று ஓர் அந்தாதியை வெண்பா வடிவில் பாடியுள்ளார். இவ்வகையில் 15 அந்தாதிகளைப் பாடியிருப்பன தெளிவாகிறது.

    இவற்றுள் திருவானைக்காத்திரிபந்தாதி 26ஆம் வயதில் எழுதியது. திரிபந்தாதிக்குப்பின் யமகவந்தாதிகளைப் படைக்கத்தொடங்கினார். முதலில் தாம் வாழ்ந்துவந்த திரிசிராமலை குறித்த அந்தாதியினை விநாயகக்கடவுள் தொடங்கி, சேக்கிழார் வரை பதினொருவரை வாழ்த்தி, அவையடக்கமாக ஒரு செய்யுளையும் என பன்னிரு செய்யுட்களையும் புதுமையான முறையில் படைத்திருப்பார். இது வேறு அந்தாதிகளில் இல்லாதமுறை. ‘திருவ10றைப்பதிற்றுப்பந்தாதியில்’ படைப்புப் பயணத்தைத்தொடங்கிய பிள்ளையவர்கள், ஹதிருவிடைமருதூர் திரிபந்தாதியில் நிறைவு செய்கிறார்.

    பிள்ளைத்தமிழ்:-
    புராணங்கள் அந்தாதிகளுக்கு, அடுத்தநிலையில் பிள்ளைத்தமிழில் பாடியவர் மகாவித்துவான்.
    1. அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ்
    2. காந்திமதியம்மைப்பிள்ளைத்தமிழ்
    3. சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
    4. திருவிடைக்கழி முருகர்பிள்ளைத்தமிழ்
    5. திருவெண்ணீற்றுமைபிள்ளைத்தமிழ்
    6. பாகம்பிரியாள்பிள்ளைத்தமிழ்
    7. பிரமவித்தியாநாயகிபிள்ளைத்தமிழ்
    8. பெருந்திருப்பிராட்டிபிள்ளைத்தமிழ்
    9. மங்களாம்பிகைபிள்ளைத்தமிழ்
    10. அம்பலவாணதேசிகர்பிள்ளைத்தமிழ்
    என்பன அவை.
    பிள்ளைத்தமிழ் பத்தில் ஏழு அம்பிகை மீது பாடப்பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இலக்குமணப்பிள்ளை என்பாரின் வேண்டுகோளுக்கிணங்க இயற்றிய முதல் பிள்ளைத்தமிழ் அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழாகும். ‘தாங்கற்ற நூலளவேயாகுமாம் நுண்ணறிவு’ என்பதற்கேற்ப மகாவித்துவான் கற்ற பலநூல்களின் கருத்துகள், கற்பனைகள் மலிந்துள்ள நூல். இந்நூலினால் இவருக்கு உண்டான புகழுக்கு எல்லையே இல்லை என்பார்கள். இதுகுறித்து உ.வே.சாமிநாதய்யர், “திரிபந்தாதிகளில் தளிர்த்து, திரிசிரபுர யமகவந்தாதியில் அரும்பி, அகிலாண்ட நாயகி மாலையிற் போதாகி, இப்புலவர்சிகாமணியின் கவித்திறனும் புகழும் அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழில் மலர்ந்து நின்றன” என்று குறிப்பிடுவதன்வழி இப்பிள்ளைத்தமிழின் பெருமையை உணர்ந்துகொள்ளலாம்.

    தொடக்கத்தில் இந்நூலைப்பதிப்பிக்க இயலாமல் அம்முயற்சியைக்கைவிட்டார் மகாவித்துவான். பிறகு 1842இல் திரிசிரபுரம் இலக்குணப்பிள்ளையின் பொருளுதவியுடன் பொன்னம்பல முதலியார், மகாலிங்கையர் உள்ளிட்ட பதினைந்து அறிஞர்களின் சிறப்புப்பாயிரங்களுடன் வெளிவந்தது.

    மகாவித்துவானின் அறுபதாண்டு நிறைவில் பாடியது சேக்கிழார் பிள்ளைத்தமிழாகும். முதல் பிள்ளைத்தமிழுக்குக்கிடைத்த மதிப்பும் மரியாதையும் கடந்து இப்பிள்ளைத் தமிழுக்குக் கிடைத்தது. அனைவரின் பாராட்டையும் பெற்ற நூல்.

    ‘பரவுசீர் உலகலொம் விரவு சேவையர் பிரான்’ என்றும்
    ‘சகலகலா பண்டித தெய்வச் சைவா’, என்றும்
    ‘சைவப் பயிர் தழையத்தழையும் புயல்’, என்றும்
    “பக்திச்சுவை நனி சொட்டச்சொட்டப் பாடிய கவிவலவ”என்றும்
    பெரியபுராணம் பாடிய சேக்கிழாரைப் பலவாறாகப் பாராட்டும் மகாவித்துவானின் பாராட்டு, அவருக்கும் பொருந்தும்.

    கோவை:-
    ‘பாவை பாடிய வாயால் ஒரு கோவை பாடுக’
    என்னும் தொடர் மாணிக்கவாசகர் வாழ்வில் நடந்தது. மகாவித்துவான் படைப்புகளில் சிறப்பிடம் பெறுவன கோவைகளாகும். இவ்வகையில் மூன்று கோவைகளைப்படைத்துள்ளார் அவர்.
    1. சீர்காழிக்கோவை
    2. குளர்த்தூர்க்கோவை
    3. வியாசைக்கோவை
    என்பன அவை.

    திருவாளர் சபாபதி முதலியாரின் வேண்டுகோளுக்கேற்ப இயற்றப்பட்டதுதான் வியாசைக்கோவை. மாயூரம் வேதநாயகம் பிள்ளைமீது இயற்றப்பட்ட குளத்தூர்க்கோவையின் சில செய்யுட்களைக் கேட்ட அவர், விநாயக முதலியார் மீதும் ஐந்திணைக் கோவையொன்று செய்யவேண்டும் என்று வற்புறுத்தினாராம். அதற்கேற்ப நூறு செய்யுட்களைப்பாடினார். எஞ்சியவற்றை திரிசிரபுரம்போய் முடித்தனுப்புவதாக உறுதி கூறினார். ஆனால் அவற்றை அவரின் கட்டளைப்படி சி.தியாகராச செட்டியாரால் செய்யப்பெற்றதாம். இது தொடர்பான ஒரு நிகழ்வை உ.வே.சா பின்வருமாறு குறிப்பிடுகின்றார்;

    தியாகராச செட்டியாரின் உபகாரச்சம்பளம் பெற்றுக்கொண்டு உறையூலிருந்தபோது அவரைப்பார்க்கச்சென்றேன். அப்போது, ‘ஐயா அவர்களும் நீங்களும் இயற்றிய வியாசைக்கோவையைப் பார்த்ததில்லை; தங்களிடம் உண்டோ, எனக் கேட்க, ‘என்னிடம் ஓர் அச்சுப்படியே உள்ளது. அதனைத்தர மனம் இடந்தரவில்லை’ என்றாராம். ‘அதனைக்கொடுத்தால் படித்துவிட்டுத்தந்துவிடுவேன்’ என்று கூற, அதனைக் கொண்டு வந்து கொடுத்தாராம். ஒருநாள் காலை தொடங்கி அதனைப்படித்துப்பொருள் கேட்டு வருகையில், 100 பாடல்கள் வந்தவுடன், ‘இனி வாசிக்கவேண்டாம்; நிறுத்திவிட வேண்டும்’ என்றாராம். ஏன் என்று கேட்டபோது, “உங்களுக்கு என்னிடத்தும் என்பாட்டினிடத்தும் மிக்க மதிப்புண்டு. இதுகாறும் உள்ளவை ஐயா பாடியவை. அதற்கு மேல் உள்ளவை ஐயாவின் கட்டளையால் நான் பாடியவை. அவரின் இனிய பாடல்களைப்படித்தபின் என்னுடைய பாடல்களைப் படித்தால் என் யோக்கியதை வெட்டவெளியாய்விடும். அமிர்தத்தை உண்டவன் பிண்ணாக்கை உண்டதுபோல் இருக்கும்’’ என்று வருந்தினாராம். அப்போது அவர் கண்களில் நீர் பெருகிற்று என்று குறிப்பிடுகின்றார் தமிழ்தாத்தா உ.வே.சா மகாவித்துவானின் கவிச்சுவை அறிந்தோரில் முதன்மையானவர் தியாராசச் செட்டியார் என்பதும், அவரின் பெருந்தன்மையும் இதன் வழிப்புலனாகும்.

    மாயூரம் வேதநாயகம்பிள்ளையும் சிலசைவ அன்பர்களும் கேட்டுக் கொண்டதற்கிணங்க சீர்காழியில் எழுந்தருளியுள்ள பிரமபுரீசுவரர் மீது பாடப்பட்டதுதான் சீர்காழிக்கோவையாகும். கோவிலின் வலம்புரி மண்டபத்தில் அரங்கேற்றம் நடைபெற்றது. நாளும் வேதநாயகம்பிள்ளையும் உடன் இருந்து கேட்டுள்ளார்.

    சீர்காழிக்கோவை அரங்கேற்றத்தில் கிடைத்த தொகையில் தன்னுடைய மாணவர் ஒருவருக்குத்திருமணம் செய்துவைத்ததுடன், வீடு கட்டிக்கொடுத்தும் செலவுக்குப்பணம் கொடுத்துமுள்ளார். எஞ்சிய தொகையை, திரிசிரபுரத்தில் செலுத்தவேண்டிய கடனுக்காக அனுப்பியுமுள்ளார் என்பது வியக்கத்தக்க செய்தியாகும்.

    பிற சிற்றிலக்கியங்கள்:-
    மகாவித்துவான் கலம்பகம், உலா, குறவஞ்சி, சிலேடை வெண்பா உள்ளிட்ட பல சிற்றிலக்கியங்களையும் படைத்துள்ளார்.

    கலம்பகம் (2)
    1. வாட்போக்கிக்கலம்பகம்
    2. அம்பலவாண தேசிகர் கலம்பகம்

    உலா (1)
    1. திருவிடைமருதூர் உலா

    தூது (2)
    1. சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடுதூது
    2. தானப்பா ஆசாரியார் தசவிடு தூது

    குறவஞ்சி (1)
    1. திருவிடைக்கழி குறவஞ்சி

    சிலேடைவெண்பா (1)
    1. திருவாவடுதுறை சிலேடை வெண்பா
    என்பன அவை.

    தவிர, பதிகம், அகவல், சரித்திரம், தனிப்பாடல்கள், விருத்தம், கதை, ஆனந்தக் களிப்பு போன்ற பலவற்றையும் படைத்துள்ளார்.

    பதிகம் (3)
    1. திருத்துருத்திக் கச்சி விநாயகப்பதிகம்
    2. திருத்துருத்திச்சுப்பிரமணிய சுவாமி பதிகம்
    3. திருவிடைமருதூர் தோத்திரப்பதிகம்

    அகவல் (1),
    1. திருவாவடுதுறை ஆதீனத்துக்குருபரம்பரை அகவல்

    சரித்திரம் (2)
    1. திருப்பனந்தாள் ஸ்ரீ குமரகுருபர சுவாமிகள் சரித்திரம்.
    2. திருவாவடுதுறை ஸ்ரீ சிவஞான யோகிகள் சரித்திரம்

    தனிப்பாடல் (1)
    1. திருவாவடுதுறை சுப்பிரமணிய தேசிகர் மீது பாடப்பெற்ற தனிப்பாடல்.

    விருத்தம் (1)
    1. திருமயிலைச் சித்திரச் சரித்திரப் புகழ்ச்சி மாலையைச் சார்ந்த தனிவிருத்தங்கள்

    கதை (1)
    1. மயிலிராவணன் கதை

    ஆனந்தக் களிப்பு (1)
    1. மதுரை திருஞானசம்பந்த சுவாமிகள் ஆனந்தக்களிப்பு

    இதுவரை, என்னுடைய உரையின்வழி குறிப்பிடப் பெற்ற படைப்புகள் 73. இவற்றுள் இன்று கிடைப்பவை, பதிப்பித்தும் கிடைக்காதவை, பதிப்பு செய்யாதவை என்னும் பல தரப்பட்ட வகையில் மகாவித்துவானின் படைப்புகள் உள்ளன. உரையில் இடம்பெறாத படைப்புகளும் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. அனைத்தையும் ஒருமித்துப்பதிப்பித்து வெளியிட்டால் மகாவித்துவானினி பெருமை புலனாகும்.

    மேற்கூறிய படைப்புகள் அன்றி,
    1. கப்பற்பாட்டு
    2. குருபரம்பரை அகவல்
    3. பொன்னூசல்
    4. மங்களம்
    5. லாலி
    6. வாழ்த்து
    போன்றவற்றையும் குறிப்பிடும் உ.வே.சா. அவர்கள், தம்முடைய குருநாதராம் மகாவித்துவான் வேறு சில படைப்புகளையும் எழுதவேண்டும் என்று எண்ணியிருந்தார் என்று சுட்டுகின்றார். அவற்றுள் ஒன்று குறிஞ்சித்திணை வளங்கொழிக்கும் குற்றாலத்திற்கு ஒரு கோவை எழுதவேண்டும் என்பதாகும். அது என்ன காரணத்தினாலோ நிறைவேறவில்லை வருந்தி எழுதுகின்றார்.

    விரைந்து செய்யுளியற்றும் வல்லாளர்:-
    மகாவித்துவானின் மாணவர் கோபாலப்பிள்ளை என்பவர் விரைந்து எழுதுவதில் வல்லவர். இதனால் செருக்குற்றிருந்தார். மயிலாடுதுறையில் மயூரநாதர் தெற்குவீதியில் ஆசிரியர் இல்லத்தில் தங்கியிருந்தபோது, ஐயா, ‘என்கை வலிக்குமாறு செய்யுள் செய்வதில்லையே’ என்று உடன்படிக்கும் மாணவர்களிடத்துச்சொல்ல, மகாவித்துவான் காதில் விழுந்து விட்டது.

    சில நாள் கழித்து சாய்வு நாற்காலியில் அமர்ந்து தாம்பாடி வந்த காரோணப் புராணத்தில் சுந்தரவிடங்கப்படலத்தில் கற்பனை நிறைந்த பாடல்களைச்சொல்லத் தொடங்கினார். அப்பாடல்களை, கோபாலப்பிள்ளை காலை ஏழு மணி தொடங்கி இடைவேளையின்றி நண்பகல் 12 மணி வரை எழுதிக் கொண்டே இருந்தார். திடீரென எழுந்து ஏடுகளைச்சேர்த்துக் கட்டி எழுத்தாணியை உறையிலிட்டு, மகாவித்துவான் காலடியில் வைத்துவிட்டு அவர் காலடியில் வீழ்ந்து எழாமல் கிடந்தார்.

    ‘என்ன நடந்தது? ஏன் இப்படி? எழுந்திரு’ என்றார் ஆசிரியர். ‘ஐயா, என் வலக்கைச்சுண்டுவிரலின் பின்புறமும் இடக்கை கட்டைவிரல் முனையிலும் குருதி கசிகிறது. இனி என்னால் எழுதமுடியாது. என்அகம்பாவம் அழிந்தது தாங்கள் கவிசொல்லும் வேகத்திற்கு என்னால் மட்டுமன்று எவராலும் எழுதமுடியாது’ என்று தோல்வியை ஒப்புக்கொண்டார்.

    இது போன்ற நிகழ்வுகள் எத்தனையோ …

    பரந்துபட்ட அறிவு:-
    பொருள் சொல்வதில் மகாவித்துவானுக்கு நிகர் அவரே. தன்னைவிடப் பெரியவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று தற்பெருமை கொண்ட ஒருவர், மகாவித்துவான் அறிந்திராத பாடல் ஒன்றைச்சொல்லி, பொருள் கூறுக என்றார். இதோ அந்தப் பாடல்;

    காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங்காற்
    காணியுங் காணியுங் காணியுங் காணிமுக்காற்
    காணியுங் காணியுங் காணியுங் காணியுநாற்
    காணியுங் காணியுங் காணியுங் காட்டுங்கழுகுன்றே

    உடனே, அதிலே உள்ள காணிகளைக்கூட்டி காலைக்காட்டு என்பது இதன் பொருள். கழுகுன்றத்தை அடைந்தால் அத்தலம் சிவன் திருவடியைக்காணச் செய்யுமென்பது இதன் கருத்து. இது பிணக்கில்லாத பெருந்துறைப்பித்தனே… என்வினை ஒத்தபின் கணக்கில்லாத்திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே என்பதை நினைத்து பாடப்பெற்றது என்று விடையளித்தாராம்.

    வினா தொடுத்தவர் உடனே, இதுவரையிலும் யாரும் இதற்குச்சரியாகப் பொருள் சொல்லவில்லை. கடினமான செய்யுளையே பொறுக்கி எல்லோரையும் கேட்டுக் கலங்கச்செய்து கொண்டுவந்த நானே, இதன் உண்மைப்பொருளைத் தெரிந்துகொள்ளவில்லை. யாதொரு கவலையின்றி இதற்குப்பொருள் கூறிய தாங்கள், தெய்வப்பிறவி என்று பாராட்டினாராம். இப்படிப்பலப்பல நிகழ்வுகள் மகாவித்துவான் வாழ்வில் பலமுறை நடந்துள்ளன.

    மகாவித்துவானின் இலக்கியப்பணிகளில் பாடம் நடத்துதல், படைப்புகளைப் படைத்தல் இரண்டு மட்டுமே சிறப்பிடம் பெறுகின்றன. இவற்றைத் தவிர்த்து பதிப்புப் பணியில் ஈடுபட்டு ஒருசில படைப்புகளைப்பதிப்பித்துள்ளார். சாற்றுக்கவி அளித்தல், சிறப்புப்பாயிரம் நல்கல், சில படைப்புகளுக்கு உரை வழங்கல், வடமொழி படைப்புகளைத் தமிழில் வசனநடையாக மொழிபெயர்த்து, அதன்பின் செய்யுளாக்கல், உள்ளிட்ட இலக்கியப்பணிகளிலும் ஈடுபட்டவர்.

    நகையுணர்வு:-
    மகாவித்துவான் அவர்கள் இயல்பாக நகைச்சுவை உணர்வு மிக்கவர்கள். மற்றவர்களின் செயலில் தவறு இருக்குமாயின் நயமாகச்சுட்டிக்காட்டி வெளிப்படுத்தக்கூடிய பண்பாளர்.

    இவர் மயிலாடுதுறையில் 1860 ஆம் ஆண்டில் இருந்து வசிக்கத்தொடங்கினார். பல்லவராயன் பேட்டையிலிருந்து சடையப்பப்பிள்ளை என்பவர் இவருக்கு நெல் அனுப்பினார். அந்நெல் மகாவித்துவானுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அந்த நெல்லின் பெயர் ‘தில்லைநாயகம்’. உடனே ஒரு மடல் எழுதுகிறார், ‘தில்லை நாயகன் பித்தனென்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன் அந்தச் செய்தி உண்மை என்பதை இப்பொழுது அறிந்து கொண்டேன். என்று. இதை உணர்ந்துகொண்ட சடையப்பப் பிள்ளை, மாற்றாக ஈர்க்கு சம்பா நெல்லை அனுப்பினார்.

    பிள்ளையவர்களிடம் பாடம் கேட்க ஒருவர் வந்தாராம். ‘என்ன படிக்க வேண்டும்’ என்று கேட்டதற்கு, ‘இலக்கியம் படிக்கவேண்டும்’ என்று பதிலளிக்க, இலக்கணம் படிக்க வேண்டாமா ? என்று கேட்டாராம் பிள்ளை. ‘நன்றாகப் படித்திருக்கிறேன்’ என்று சொன்னதும், ஒரு பாடலைச்சொல்லி இதில் ‘எழுவாய்’, ‘பயனிலை’ என்ன என்று கேட்கிறார். வந்தவர் நீண்ட நேரம் யோசித்துக்கொண்டேயிருக்க, பிள்ளை வந்தவரைப்பார்த்து, ‘எழுவாய்… பயனிலை’ என்று சொல்ல, புரியாமல் விழிக்கிறார். இதற்கு ‘எழுந்திருப்பாய்’ இனி அமர்ந்திருப்பதில் ‘பயனில்லை’ என்னும் பொருள் என்று அருகில் இருப்போர் குறிப்பால் சொன்னதாகக்குறிப்பிடுவர்.

    இவ்வுரையின்வழி மகாவித்துவானின் புலமை வெளிப்படும். 200ஆம் பிறந்த நாள் காணும் மகாவித்துவானின் படைப்புகள் அனைத்தையும் அச்சிட்டு நூலாக்கி மக்களுக்கு எளிதில் கிடைக்கச்செய்தல் நாம் அவருக்குச்செய்யும் தொண்டுகளுள் ஒன்று. தமிழுக்கு மிகப்பெரிய அளவில் தொண்டாற்றிய மகாவித்துவானுக்கு அவர் வாழ்ந்த மயிலாடுதுறையிலோ, ஆதீனைப் புலவராயிருந்த திருவாவடுதுறையிலோ மணிமண்டபம் எழுப்பி அவர் சிலையைத்தமிழர்கண்டு வழிபட வழிசெய்தல் அவருக்குச்செய்யும் மற்றொரு தொண்டாகும்.

    நவீன அறிவியல் வளர்ந்துள்ள இக்காலத்தில் ஒருவரின் நிழற்படங்களைக் கோடிக்கணக்கில் உருவாக்கமுடியும். ஆனால் அறிஞர்களின் படங்கள் வெளிவந்த காலத்தில் வாழ்ந்தாலும் மகாவித்துவானின் உண்மையான படத்தினை இணையத்திலும் காண்பது அரிது. எனவே, அவரின் திருவுருத்தினை இந்தியமக்கள் அறியும் வகையில் அவருக்கு அஞ்சல்தலை வெளியிடல் அவருக்குச் செய்யும் பிறிதொரு தொண்டாகும். ‘மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை, இந்தியா’ என்று எழுதினாலே மடல் அவரை வந்து சேர்ந்துவிடும் பெருமைமிக்க அவருக்கு, மேற்காணும் செயல்களைச் செய்ய ஒருமித்து அரசுகளுக்குக்குரல்கொடுப்போம்.

    (நிறைவுற்றது)

    குறிப்பு:-
    இவ்வுரையின் ஒருபகுதி, காரைக்கால் பண்பலை 100.3இல் 08.05.2015 இரவு 08.30க்கு இலக்கியச்சோலை பகுதியில் ஒலிபரப்பானது.

    முனைவர் துரை. குணசேகரன்
    தலைவர் தமிழாய்வுத்துறை
    அ.வ.அ.கல்லூரி (தன்னாட்சி)
    மன்னன்பந்தல், மயிலாடுதுறை

    Share
  • மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இலக்கியப் பணிகள் – 2

    — முனைவர்   துரை. குணசேகரன்.

     

    மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

    கடியேறு மலரோனைக் கடுஞ்சிறையில் வைத்துப்
    படியாதி எவ்வுலகும் படைத்தருளும் பிரானை
    முடியாத முதலோனை மூவர் பெருமானை
    வடிவேலன் தனைப்பேசா வாயென்ன வாயே
    வள்ளி மணாளனைப்பேசா, வாயென்ன வாயே…

    ‘முயற்சி திருவினையாக்கும்’ என்று சொல்வார்களே அது பிள்ளையவர்கள் வாழ்வில் நூற்றுக்குநூறு உண்மை. பிள்ளையவர்கள் திருத்தணிகைப்புராணத்தை வருவித்துப்படித்து வருகிறார். அப்புராணத்தில் அகத்தியன் அருள்பெறுபடலத்தின் சிலபகுதிக்குப்பொருள் விளங்கவில்லை. ‘சிவதருமோத்திரம்’ என்னும் நூலின் உதவியால் பொருளை விளங்கிக்கொள்ளலாம் என்று அறிகிறார். அச்சுவடியைப்பெற அரும்பாடுபடுகிறார்.

    இந்தச்சுவடி, திரிசிரபுரத்தில் ஆன்மீகவாதியான தேசிகர் ஒருவரிடம் இருப்பதாக அறிந்து நேரில்சென்றும் பலஅன்பர்கள் வழியாகவும் கேட்டுப்பயனில்லை. பொருள் தருவதாகச் சொல்லியும் சாக்குபோக்குச்சொல்லி அலைக்கழித்து வருகிறாராம் அந்த அன்பர். எங்கு இருக்கப்போகிறதோ என்று எண்ணிய பிள்ளையர்களுக்கு, தம்மூரிலேயே அந்தச்சுவடி இருக்கிறதென்பதை எண்ணி முதலில் மகிழ்ச்சியடைந்தார். ஆனால் கைக்குஎட்டியது வாய்க்குஎட்டாதபோது அதுபற்றிக்கவலைப்பட்டார்.

    முகவாட்டத்துடன் இருந்த பிள்ளைவர்களைப்பார்த்த அவரின் மாணவர் சுந்தரம்பிள்ளை என்பவர் அதுகுறித்து வினவுகிறார். உண்மையறிந்து, அதனைப்பெற்றுத்தருவதாக உறுதிகூறிச்செல்லுகிறார். ஒருமுறை மேற்படி சிவதருமோத்திர சுவடியிருக்கும் வீட்டிற்கு எதிரே பிரபு ஒருவர் இரட்டைக்குதிரைகள் பூட்டிய வண்டியில் வந்து இறங்குகிறார். முன்னர் ஒரு சேவகன் ஓடிவந்து, இந்த வீடு இன்னாருடையதானா? அவர் இருக்கிறாரா? என்று தேசிகரிடம் வினவ, நான்தான் அவர், என்னவேண்டும் என்றுகேட்கிறார். அதற்குள் இன்னொரு சேவகன் ஓடிவந்து திண்ணiயில் விரிப்பொன்றை விரிக்க, வேறொருவன் திண்டினைக்கொண்டு வந்து வைக்கிறான். பிரபு திண்ணையில் அமர்ந்து திண்டில் சாய்ந்துகொண்டு கம்பீரமாய்க் காட்சியளிக்கிறார்.இதைக்கவனித்த தேசிகர் நாமாகச்சென்று விசாரித்தால் மதிப்பு இருக்காது என்று எண்ணி ஒருபலகையில் சென்று அமர்ந்துவிட்டார். முன்பு வந்த அதே சேவகன் உள்ளே வந்து விவரத்தைச்சொன்னான். ‘உள்ளே அழைத்து வரலாமே’ என்று கூறியவர், தாமே வந்து பார்ப்பதாகக்கூறி வெளியில் வருகிறார். முகமன் கூறி நிற்கிறார்.

    சிறிதுநேரம் கழித்து சேவகர் ஒருவரிடம் வந்திருப்பவர் யார்? எங்கே வந்தார்கள் என்று மந்தணமாக (மறைவாக) கேட்கிறார். “எஜமானவர்கள் தென்னாட்டில் ஒரு ஜமீன் பரம்பரை. தாயார் முதலியோருடன் சிதம்பரதரிசனத்திற்காக வந்து இவ்வூரில் இறங்கி ஜம்புநாதர், தாயுமானவர், அரங்கநாதர் ஆகியோரை வழிபட்டுச்செல்ல கண்டோன்மென்டில் ஒரு பங்களாவில் மூன்றுநாட்கள் தங்கிச்செல்லலாம் என்றிருந்தார்கள். அதற்குள் தாயாருக்குச்சுரம் ஏற்பட்டது. எவ்வளவோ மருத்துவம் செய்தும் பலனில்லை. இங்கேயே தகனம் செய்துவிட்டு இன்று காலை நடக்கவேண்டிய செயல்களையும் செய்து முடித்தோம். சொந்த இடமாக இருந்தால் எவ்வளவு சிறப்பாக நடந்திருக்கும் என்ன செய்வது? எல்லாம் தெய்வச்செயல்” என்று கூறிமுடித்தான். “சிலவிவரங்களை விசாரிக்க, தக்கவர் யார் என்று கேட்டதற்கு, அனைவரும் உங்கள்பெயரைச்சொன்னார்கள். அதனால்தான் இங்கு வந்தோம் என்றான். காரியத்தை நடத்துவதற்கு வேண்டிய பதார்த்தம் அவ்விடத்தைப்போன்று இவ்விடத்தில் கிடைக்காது. நடத்துதற்குரிய நபர்களும் அவ்வாறே. அதனால் ஊருக்கே புறப்பட்டுப்போய்விடலாமோ என்றுகூட நினைக்கிறார்கள்” என்று கூறினார்.

    விவரங்களைக்கேட்ட தேசிகர், “பணம்மட்டும் இருந்தால் என்ன பொருள் கிடைக்காது? எல்லாவற்றிற்கும் ஆட்கள் இருக்கிறார்கள். யோசிக்கவே வேண்டாம் என்று கூற, யோசனை ஒன்றுமில்லை சிவதருமோத்திரம் என்று சுவடி உள்ளது. அதனை இந்தநேரத்தில் படித்துக்கொண்டே பொழுதுபோக்கவேண்டியுள்ளது. பிரபுவின் பிதாஎஜமான் இறந்தபோதுகூட எங்கிருந்தோ அந்தச்சுவடியைத்தருவித்து படித்தார்களாம். அந்தச்சுவடியும் கிரந்தத்தில் இருந்தால் பயன்இல்லை. தமிழில் வேண்டுமாம். இதற்காகவே அங்கே போயவிடலாம் என்று நினைக்கின்றனர்” என்று கூறிய சேவகன், ‘இங்கேயே இருந்து முடித்துவிட்டுப்போனாலென்ன என்று எவ்வளவோபேர்சொல்லியும், காதில் ஏறவேயில்லை. ‘இந்தப்புத்தகத்தைப்படிக்கா மற்போனாலென்ன?’ என்று மெல்லிய குரலில் சொன்னான்.

    உடனே தேசிகர் பிரபுவை நோக்கி ‘சிவதிருமோத்திரசுவடி தமிழிலேயே என்னிடமிள்ளது. பயன்படுத்திக்கொள்ளலாம் உங்களைப்போன்ற பிரபுக்களுக்கில்லா மல் வேறுயாருக்குத்தான் கொடுக்கப்போகிறேன் என்றார். கிரியை நடப்பதற்கு வேண்டிய குறிப்புகளைக்கேட்டு எழுதிவாங்கிக்கொண்டு, செலவு குறைவாகத்தான் இருக்கிறது. அங்கே செய்தால் இன்னும் அதிகமாகும்’ என்றுகூற, ‘இவ்வளவு செலவு செய்யக்கூடியவர்கள் இங்கே யார் இருக்கிறார்கள்’ என்று தேசிகர் பதிலுரைத்தார்.

    பிரபு, ‘நீங்களே இருந்து எல்லாவற்றையும் செய்க, வாங்கவேண்டியவற்றை உடனிருந்து வாங்கித்தரவேண்டும்’ என்று சொல்விட்டு வண்டியில்ஏறி அமர்ந்தார். சேவகன் ஒருவர், ‘நாங்கள் எப்போது வரவேண்டும்?’ என்று கேட்க, கிரியைக்கு ஒரு வாரத்திற்குமுன் வந்தால்போதும்’ என்று தேசிகர் கூறிவிட்டு, பிரபுவிடம், ‘கொஞ்சம் தாமதித்துச்செல்ல வேண்டும’; என்று வேண்டிக்கொண்டு இல்லத்திற்குள் ஒடுகின்றார். ஒரு சுவடியை எடுத்துவந்து, ‘இந்தப்புத்தகத்தை முன்பே கொடுக்காததற்கு மன்னிக்க வேண்டும். தங்களைப்போன்றவர்களின் பழக்கத்தைவிட இந்தப்புத்தகம் எனக்குப்பெரிதில்லை. குறிப்பறிந்து செய்யும் மகாபிரபுவுக்குத்தெரிவிக்க என்போன்றோருக்கு வேறுஎன்ன இருக்கிறது’ என்று வழிகிறார். ‘எல்லாம் தெரிந்துகொண்டோம்: அதிகமாக ஒன்று சொல்லவேண்டியதில்லை’ என்று கூறி, ஐந்து ரூபாயை எடுத்துக்கொடுத்துவிட்டுக்கிளம்பினார் பிரபு. சேவகர்கள் வண்டியின் முன்பும் பின்பும் ஓடினார்கள். தேசிகருக்கு இக்காட்சி அளவுகடந்த மகிழ்ச்சியை அளித்தது.

    இதுவரை நடந்தது ஒரு நாடகம் என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும். பிரபுவாக நடித்தவர் பிள்ளையவர்களின் அன்புக்குரிய சுந்தரம்பிள்ளை. ஒருநாள் அவர் வந்து பிள்ளையைப்பார்த்து சிவதிருமோத்திரசுவடியைத்தருகிறார். ‘ஏதப்பா இந்தச்சுவடி? எப்படி கிடைத்தது?’ என்று கேட்டவர், ‘ஏன் மீசையை எடுத்துவிட்டாய். உனக்கு நேர்ந்த துக்கம் எனக்குத்தெரியாமல் போய்விட்டதே. ஏன் எனக்குச் சொல்லியனுப்பவில்லை?’ என்று கேட்கிறார். ‘அதைப்பற்றிப்பிறகு சொல்கிறேன். இந்த நூலை படிஎடுத்துக்கொண்ட ஒருவாரத்தில் கொடுத்துவிடுங்கள். யாருக்கும் தெரியவேண்டாம’; என்று சுந்தரம்பிள்ளை கூறிவிட்டுச்செல்கிறார்.

    பிள்ளையவர்கள் பத்துப்பத்து ஏடாகப்பிரித்து படியெடுத்து உரியகாலத்தில் கொடுத்தனுப்புகிறார். அந்தச்சுவடியுடன் ஒரு பவுனையும் கொடுத்து, தேசிகரிடம் சேர்ப்பிக்குமாறு சுந்தரம்பிள்ளை சேவகர் ஒருவரிடம் பணிக்க, தேசிகரின் வரவேற்பிற்கிடையே அவரிடம் ஒப்படைத்துவிட்டு, ‘உறவினர்களின் வற்புறுத்தலினால் ஊரில்போய் காரியத்தைச் செய்வதாகவும், தங்களிடம் கூறிவிட்டுச் சொல்லமுடியவில்லையே என்று வருந்துவதாகவும்’ கூறினான். மேலும், விரைவில் தங்களையும் அவ்விடத்திற்கு அழைப்பார்கள் என்றும் கூற, முதலில் வருந்திய தேசிகர், பொன் கிடைத்ததில் சமாதானமடைந்ததாக உ.வே.சா. தமது நூலில் குறிப்பிடுகின்றார்.

    பிள்ளையவர்கள் வேறொருவர் மூலம் நடந்த நிகழ்வுகளை அறிந்து, சுந்தரம்பிள்ளையின் அடைக்குந்தாழ் இல்லாத அன்பின்பெருமையை எண்ணி மகிழ்ச்சியடைந்தார். தாம் நிகழ்த்திய நாடகம் குறித்து சுந்தரம்பிள்ளை அஞ்சி சிலநாட்கள் பிள்ளளையவர்களைப்பாராமலே இருந்துவிட்டார். அவரின் வற்புறுத்தலின் பேரில் சுந்தரம்பிள்ளை வந்தார். ‘என்ன அப்பா இப்படிச்செய்யலாமா?’ என்று கேட்பொழுது,

    “பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
    நன்மை பயக்கு மெனில்”

    என்னும் குறளுக்கேற்ப நடந்துகொண்டேன். இதனால் யாருக்கு எந்தத்தீமையும் இல்லையே. ஐயாவுக்குக்குற்றமாகத் தோன்றினால் பொறுத்தருளவேண்டும் என்றார். இந்நிகழ்வு ஆசிரியர்மீது மாணவர்கொண்டிருக்கும் உண்மையான குருபக்தியைக்காட்டுகிறது. அதுமட்டுமன்றி ஐயத்தைப்போக்கிக்கொள்ள பிள்ளையவர்கள் ஒவ்வொருநேரத்தில் எடுக்கும் முயற்சியை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

    மாணவரின் திறனாய்வுக்கு மதிப்பு:-
    மகாவித்துவான் அவர்களுக்குள்ள பெருமைகளில் குறிப்பிடத்தகுந்தது அவர் உருவாக்கிய மாணவர் பரம்பரை. பங்களூரில் இருந்த தேவராசப்பிள்ளை, பிள்ளையவர்களை மாணாக்கர்களுடன் அழைத்துப்பாடம் கேட்டவர். பிள்ளையவர்கள் கவலையில்லாமல் இருந்தால் படைப்புகளை மிகவும் நேரத்தியாகச்செய்வார் என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

    பிள்ளையவர்கள் பாடிய அம்பர்புராணத்தில் சில பகுதிகளைக்கேட்டுவந்த அவருடைய தலைமாணவர்களில் ஒருவரான தியாகராசச்செட்டியார், “பாலியத்தில் செய்த உறையூர் புராணத்தைப்போல இப்புராணம் யோசித்துச்செய்யப்படவில்லை. அம்மாதிரி செய்தால் மிக நன்றாகவிருக்கும்” என்று கூறினார். அதற்கு, “வல்லூர்த் தேவராசபிள்ளiயின் பேருபகாரம்தான் காரணம். அவ்வாறு யாரேனும் என்னைக்கவலையில்லாமல் ஆதரித்து வைத்திருந்தால் இன்னும் எவ்வளவோ செய்வேனே” என்று பிள்ளையவர்கள் பதிலளித்தாராம்.

    பெருங்காப்பியம் படைத்த தேரெழுந்தூர் கம்பனுக்கு, திருவெண்ணெய் நல்லூர் சடையப்பவள்ளல்போன்று, திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு அங்காங்கே நாடுமுழுவதும் அவ்வவ்போது சிற்சிலமகான்கள் உதவியிருந்தாலும் நிரந்தரமாக, ஒரிடத்தில் அமரவைத்து கல்விப்பணியாற்றுமாறு செய்ய வழியில்லை. அவ்வாறு வழியிருந்திருப்பின் பாடஞ்சொல்லும் தொழிலகமாய், படைப்புகளைத்தீட்டும் பட்டறையாய், பதிப்புரைக்கூடமாய் தனிமனிதரே விளங்கியிருப்பார் என்பதில் ஐயமில்லை.

    இடிப்பாரை இல்லா ஏமாறா மன்னன்
    கெடுப்பார் இலானும் கெடும்

    எனும் குறளுக்கு இலக்கியமாய், பிள்ளையவர்கள் விளங்கியிருக்கிறார்கள். குருகுலவாசம் என்று படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள்தாம் எல்லாம். மாணவர்களுக்கு விடுதலை உணர்வோடு பேசும் உரிமை இருந்திருக்குமா என்று ஐயுறும் காலத்தில் ஒரு மாணவர் ஆசிரியரின் நூலைத்திறனாய்ந்து கருத்துகூறும் நிலையினைப்பார்க்கவியலுமா? பிள்ளையவர்களின் மாணவர் தியாகராச செட்டியார் அம்பர்ப்புராணம் குறித்து கூறியபோது, அதனை ஏற்றுக்கொண்டு அதற்குரிய காரணத்தைக்கூறியதும், அந்நிகழ்வினை அவரின் இன்னொரு மாணவராம் உ.வே.சா.பதிவு செய்வதும் குருநாதரின் பெருந்தன்மையினைக்காட்டும் நலமான நல்ல நிகழ்வுகளாகும்.

    படைப்பாக்கத்தில் மாணவருக்கு உதவி:-
    மாணவர்களுக்கு கருத்துவிடுதலை அளிப்பது மட்டுமன்றி, படைப்புகளை உருவாக்குவதிலும் உறுதுணையாகப்பலநேரங்களில் விளங்கியவர் மகாவித்துவான் அவர்கள். இவரின் மாணவரான தேவராசப்பிள்ளை தெலுங்கில் இருந்த குசேலோபாக்கியனத்தை தமிழ்வசனநடையில் பெயர்த்து கவிதையாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அதற்குரிய ஆற்றலை அவர் அப்போது பெறாதிருந்ததால் ஊக்கம் குறைந்து உடம்பும் தளர்ந்தநிலையில் காணப்பட்டார். இதனால் வருத்தமுற்றிருப்பதை அறிந்தபிள்ளையவர்கள், “குசேலோ பாக்கியானத்தை செய்யுள்வடிவில் பார்க்க எண்ணமிருந்தால் ஓய்வு நேரங்கில் பாடிமுடித்துவிடுகிறேன். நன்றாகப்பாடுதற்குப்பயிற்சி எடுத்துக்கொண்டபின் ஏதேனும் நூல் இயற்றலாம். இதனை இத்தோடு நிறுத்திவிட்டுக்கவலையின்றி இருங்கள்” என்றார். ஆசிரியரின் சொல்லை மறுத்தற்கஞ்சி அம்முயற்சியை நிறுத்திவிட்டார்.

    என்றாலும் மாணவரின் மனக்குறையைக்குறிப்பாலறிந்த ஆசான் அதுவரை அவர்பாடிய குசேலோபாக்கியானப்பகுதிகளைத்திருத்தம் செய்தது மட்டுமன்றி, நாளொன்றுக்கு ஐம்பது செய்யுளுக்குக்குறையாமல் மாணவருக்கு முன்பாக இயற்றி முடித்தார். எந்தவிய சிரமமின்றி இயல்பாகப்பாடும் திறன்பெற்றிருந்த குருநாதர் பற்றி, “ஐயா! நீங்கள் தெய்வப்பிறப்போ! சாதாரண மனிதராக உங்களை நினைக்கவில்லை. சில பாடல்கள் செய்வதற்குள்ளே நான்பட்டபாடு தெய்வத்திற்கும் எனக்குமே தெரியும். இனிமேல் நான் உங்களிடத்தில் விசேட மரியாதையோடு நடப்பேன். இப்பொழுதுதான் உங்களுடைய பெருமை எனக்குத்தெரிய வந்தது. ஒரு பாட்டையாவது நீங்கள் திரும்பதிருத்தச்சொல்லவில்லையே. நீங்கள் இவ்வளவையும் மனத்திலே யோசித்து முடித்துக் கொள்கிறீர்களே. ஒரு பாட்டெழுதுவதற்குள் நான் கிழித்த காகிதங்கள் எவ்வளவோ இருக்கும்!” என்று ஆனந்தமடைந்தாராம்.

    “நாடு உனக்குதான் நாளை முடிசூட்டிக்கொள்’ என்ற போதும் இல்லை…இல்லை….

    ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனேஆள நீபோய்
    தாழிரும் சடைகள்தாங்கி தாங்கரும் தவம்மேற்கொண்டு
    பூழிவெண்கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள்ஆடி
    ஏழிரண்டாண்டில் வாவென் றியம்பினன் அரசன்என்றான்

    என்றபோதும் ‘அன்றலர்ந்த செந்தாமரை முகத்தினைவென்ற இராமன் முகத்தைக் கம்பன் காட்டுவானே… அதேபோன்று, அம்பர்ப்புராணம் குறித்த, மாணவர் தியாகராச செட்டியாரின் திறனாய்வையும், குசேலாபாக்கியானத்தை மாணவருக்காகப் பாடித்தந்தபோது மாணவர் தேவராசப்பிள்ளை பாராட்டியதையும் ஒரேநிலையில் எடுத்துக்கொள்கின்ற பண்பினை, மகாவித்துவானிடம் கண்டபோது, அவரைப் ‘பிற்காலக்கம்பர்’ என்று பாராட்டுவது மிகவும் பொருத்தம் என்பதை உணரலாம்.

    மாணவருக்காக எழுதிய குசேலோபாக்கியானத்தில் இரத்தலின் இழிவினை,

    “பல்லெலாம் தெரியக் காட்டிப் பருவரன் முகத்தில் கூட்டிச்
    சொல்லெலாம் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து
    மல்லெலாம் அகல வோட்டி மானமென்பதனை நீட்டிவீட்டி
    இல்லெலா மிரத்த லந்தோ விழிவிழி வெந்த ஞான்றும்”

    என்று காட்டுவது, இரப்போர் பற்றிய சித்திரத்தைப்பார்ப்பதுபோல் அமைந்துள்ளது. இதுபோன்று நூல்முழுவதும் ஆற்றொழுக்கான நடையால் படிப்போரை ஈர்க்கும் பாங்கினை இந்நூல் மட்டுமன்றி எந்நூலிலும் கண்டு சுவைக்கலாம்.

    காப்பிய உறுப்புகளெல்லாம் அமையப்பாடவேண்டும் என்று எண்ணித்தொடங்கிய தியாகராசலீலை முற்றுப்பெறாமல் உண்டாகிய மனக்குறை உறையூர்ப்புராணம் பாடியதால் தீர்ந்துபோனதாம். உதங்கமுனிவர் உறையூரை நோக்கி வரும்போது, பலதலங்களை வழிபட்டு வந்ததாகச் சொல்லப்படும் பகுதி, அத்தலங்களின் வரலாற்றை அழகுறப்படம் பிடிப்பதாக உள்ளது இதோ அப்பாடல்,

    “அனைபோலு நல்லானை அடையாரிற் புல்லானை
    வினையாவு மில்லானை விளக்குமறைச் சொல்லானை
    புனைமேரு வில்லானைப் புரிசடையிற் செல்வானை
    எனையாள வல்லானை யெழிற்காஞ்சி யிடைப்பணிந்தான்”

    பிள்ளையவர்கள் நிரம்பக்கற்று, பலரை உருவாக்கிய நிலையிலும் தமக்குத் தெரியாதவற்றை யார்கூறினாலும் மாணவராக இருந்து கேட்கும் பண்புடையவர். எப்பொருள் யார்யார்வாய்க்கேட்பினும், எத்தன்மைத்தாயினும் மெய்ப்பொருள் காண்பதன்றோ அறிவென்னும் வள்ளுவத்தை அறிந்தவர் அன்றோ.

    அறிதொறும் அறியாமை:-
    இலக்கணவிளக்கத்திற்கு, சிலவிடங்களில் பொருள் புரியாமையினால் திருவாரூர் வைத்தியநாத தேசிகரிடம் கற்றுத்தேர்ந்த சுப்பிரமணிய தேசிகரிடம் முறையாகபாடம் கேட்கிறார் பிள்ளையவர்கள். தாம்படித்ததே போதுமென்று தமக்குள்ளே நிறைவடைந்த சிலர், பிள்ளையவர்கள் பாடங்கேட்டலைப்பார்த்து வியந்து, “சிறந்த வித்துவானான இவரும் பாடங்கேட்கிறாரே! இவர் பாடங்கேட்க வேண்டுவது உண்டோ? என்ன கேட்கிறார்?” என்று வினவுவார்களாம். அறிதொறும் அறியாமை கண்டு அதனை அகற்றிக்கொண்டவர் பிள்ளையவர்கள் என்பது இதன்வழிப்புலனாகும்.

    மகாவித்துவான் பட்டம்:-
    திருவாவடுதுறை ஆதீனக்கட்டளைத்தம்பிரானாக விளங்கிய ஸ்ரீசுப்பிரமணிய தேசிகர், தமக்குக்குருவாக விளங்கிய தாண்டவராயத்தம்பிரான் அவர்களைக் கொண்டு ஆதீன மாணவர்களுக்குப்பாடம் சொல்லிக்கொடுக்கலாம் என்று முடிவுக்கு வருகிறார். அக்கருத்தை குருநாதரிடம் சொன்னபோது,

    “என்னுடைய தேகநிலை அவ்வாறு செய்ய இடந்தராது: வழக்கமும் இல்லை. திரிசிரபுரத்தில் மீனாட்சிசுந்தரம்பிள்ளையென்று ஒரு வித்துவான் இருக்கிறார். அவர் இரண்டுமுறை சென்னைக்கு வந்திருந்தார். அக்காலத்தில் அவருடன் நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிடைத்தது. பாடஞ்சொல்லுவதிலும் செய்யுள் செய்வதிலும் அவருக்கு இணையாக யாரும் இல்லை என்றே சொல்லலாம். இந்தஆதீன வித்துவானாக அவர் நியமிக்கப்டுவாராயின் ஆதீனத்தின்புகழ் எங்கும்பரவும். அவரைக்கொண்டு பலமாணாக்கர்களைப்படிப்பிக்கலாம்.” என்று விண்ணப்பித்துக்கொண்டாராம். அப்போது ஆதீன கர்த்தாவாக விளங்கியவர் அம்பலவாணதேசிகர். அவருடைய கட்டளையைப்பெற சுப்பிரமணியதேசிகர் பலவினாக்களுக்கு விடையளிக்கவேண்டியிருந்தது. இறுதியாக ஆதீன வித்துவானாக்க ஒத்துக்கொண்டார்.

    தம்மை ஆதீன வித்துவானாக்கிய அம்பலவாண தேசிகர் மீது ஒருசில நாள்களில் கலம்பகம் ஒன்றை இயற்றி அரங்கேற்றம் செய்தார். இதனைக்கேட்ட ஆதீனத்தம்பிரான்களில் ஒருவரான கனகசபைத்தம்பிரான் உள்ளிட்ட சிலர், ‘பிள்ளையவர்களுக்குச் சந்நிதானம் தக்க மரியாதை செய்தருள வேண்டும்’ என்று விண்ணப்பம் செய்ய, ‘மகாவித்துவான்’ என்னும் பட்டத்தை அம்பலவாண தேசிகர் வழங்கினார்.

    ‘மகாவித்துவான்’ என்னும் பட்டம் ஒருசிலருக்குத்தமிழகத்தில் அளிக்கப்பட்டிருந்தாலும், திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய மீனாட்சிசுந்தரம்பிள்ளைக்குத்தான் மிகவும் பொருத்தமாக அன்று முதல் இன்றுவரை நிலைத்து நிற்கிறது என்றால் மிகையன்று.

    (தொடரும்)

    குறிப்பு:-
    இவ்வுரையின் ஒருபகுதி, காரைக்கால் பண்பலை 100.3இல் 08.05.2015 இரவு 08.30க்கு இலக்கியச்சோலை பகுதியில் ஒலிபரப்பானது.

    முனைவர் துரை. குணசேகரன்
    தலைவர் தமிழாய்வுத்துறை
    அ.வ.அ.கல்லூரி (தன்னாட்சி)
    மன்னன்பந்தல், மயிலாடுதுறை

    *********************

    Share
  • மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் இலக்கியப் பணிகள் – 1

    — முனைவர்   துரை. குணசேகரன்.

     

    மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

    கடியேறு மலரோனைக் கடுஞ்சிறையில் வைத்துப்
    படியாதி எவ்வுலகும் படைத்தருளும் பிரானை
    முடியாத முதலோனை மூவர் பெருமானை
    வடிவேலன் தனைப்பேசா வாயென்ன வாயே
    வள்ளி மணாளனைப்பேசா, வாயென்ன வாயே…

    என்னும் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் வரிகளாலே முருகப்பெருமானைப்போற்றி, மகாவித்துவானின் இலக்கியப்பணிகள் குறித்த என்னுடைய பேருரையைத் தொடங்குகின்றேன்.

    கம்பனைப்போல்
    வள்ளுவர்போல்
    இளங்கோவைப்போல்
    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை

    எனும் பாரதத்தில் ‘பா’ரத்தால் பவனிவந்த சாரதியாம் பாரதியின் பாடலில் சேர்க்கப்படவேண்டிய இன்னொருவர் உண்டென்றால் அவர்தாம் சிற்றிலக்கியக்களஞ்சியக் கருவூலமாம் 199 ஆண்டுகளுக்கு முன் இம்மண்ணில்தோன்றி, மகத்தான சாதனைகளை நிகழ்த்திய மாமனிதர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை.

    காலத்தொடு கற்பனை கடந்த
    கருவூலத்துப் பழம்பாடல்
    கலைமாச் செல்வர்

    என்னும் குமரகுருபரர் சொற்களுக்கு இலக்கியமாய் வாழ்ந்தவர்.

    செந்தமிழ் வளர்ந்த தென்பாண்டி நாட்டில் மானிடர்போற்றும் மதுரைமா நகரில் இல்லறத்தை நல்லறமாய் நடத்துகின்றார் சிதம்பரம் பிள்ளை – அன்னத்தாச்சி இணையர். வாழ்வின் வளம்வேண்டி திரிசிரபுரம் எனும் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கே காவிரித்தென்கரையில் உள்ள எண்ணெயூருக்கும் அதனை அடுத்து அதவத்தூருக்கும் வந்து குடியமர்கின்றனர். இணையர் நடத்திய இல்லறப்பயனாய், செய்த பெருந்தவத்தால் 1815ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் ஆறாம்நாள் மீனாட்சிசுந்தரம்பிள்ளை பிறந்தார்.

    கல்வியும் இல்வாழ்வும்:-
    ‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’என்று பாடிய புறநானூற்றுப்புலவர் ‘சான்றோனாக்குதலை தந்தையின் கடனென்றார். அவரின் கூற்றை மெய்ப்பிக்கும்வகையில் சிதம்பரம்பிள்ளை, மகனை மற்றவர் போற்றும் மாண்புகள் மிகுந்தவனாக மாற்றும் முயற்சியில் ஈடுபடுகின்றார்.

    ஆம், சிறுவயதிலேயே தந்தை கற்பிக்கும் பள்ளியில் பிள்ளைக்கும் பாடஞ்சொல்லித்தரப்படுகிறது. ஐந்து வயதில் தொடங்கிய கல்வியால் ஆத்திசூடி, நீதிநூல்கள் தொடங்கி, காலஞ்செல்லச்செல்ல அந்தாதி, கலம்பகம், பிள்ளைத்தமிழ், நிகண்டு, பிரபந்தம், சதகம், மாலை, நைடதம், நன்னூல் உள்ளிட்ட இன்றியமையா சிற்றிலக்கியவகைகள் மற்றும் இலக்கணங்களையும் பிழையறக்கற்றுக்கொண்டார். பள்ளியில் ஆசிரியருக்கு அடுத்த நிலையில் உள்ள சட்டாம்பிள்ளையாக உயர்ந்தார்.

    பன்னிரண்டு வயதிலேயே செய்யுள் இயற்றும் ஆற்றலைப்பெற்றார். படிக்கும் நூல்களை ஏட்டில் எழுதும் பயிற்சியையும் பெறுகிறார். சூழலைக்கொடுத்து செய்யுள் செய்யும் பழக்கத்தையும் காலஞ்செல்லச்செல்ல திரிபு, யமகம், சிலேடை அமைத்து பாவியற்றும் கலையையும் கற்றுக்கொள்கிறார். விரைந்து, குறுகிய காலத்திலேயே பிந்தைய நிலையில் கற்க வேண்டியதனைத்தும் கற்றுக்கொள்வதுடன், தந்தைசென்று பாடஞ்சொல்லும் இடத்துக்கும் உடன் சென்றுவரலானார். தந்தை செல்லமுடியாத காலத்தில் மீனாட்சிசுந்தம் அவர்களே சென்று பாடம்நடத்தி வருகிறார். பிள்ளையின் திறமறிந்தோர் தந்தைக்கு அளிக்கும் மதிப்பையும் மரியாதையையும் அளிக்கின்றனர்.

    வெண்ணெய் திரண்டு வரும் நிலையில் தாழிஉடைந்தாற்போல மீனாட்சிசுந்தரம் பிள்ளை நன்கு வளர்ந்துவரும் சூழலில், பதினைந்து வயதில் தந்தை சிதம்பரம்பிள்ளை மறைவெய்துகிறார். அதுவரை, தாம்பிறந்த அதவத்தூரில் வாழ்ந்துவந்த பிள்ளையவர்கள், திரிசிரபுரம் மலைக்கோட்டையில் உள்ள தெற்கு உள்தெருவில் வாடகை வீடொன்றில்வந்து குடியேறுகிறார். காவேரிஆச்சி என்னும் மங்கை நல்லாளை நண்பர்களும் உறவினர்களும் மணமுடித்து வைக்கின்றனர்.

    தந்தை மறைந்தாலும் கல்வி கற்பதை மறக்கவில்லை. உறையூர் முத்துவீரராகவே முதலியார், திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார், வீரநாயக்கன்பாளையம் இருளாண்டிவாத்தியார் பாலக்கரை வீரராகவசெட்டியார், கோட்டடி ஆறுமுகம்பிள்ளை, கல்குடி மருதமுத்தப்பிள்ளை, வேலாயுதமுனிவர், கீழ்வேளுர் சுப்பையாபண்டாரம், திருநயம் அப்பாவையர், வேலாயுதமுதலியார், கீழ்வேளுர் சுப்பிரமணியதேசிகர், திரிசிரபுரம் கோவிந்தம்பிள்ளை போன்ற தலைசிறந்த கல்விமான்களிடம் எழுத்து, சொல், பொருள், யாப்பு என்னும் நான்கு இலக்கணங்களை ஐயமறக்கற்றுக்கொண்டார்.

    ஐந்தாம் இலக்கணமாம் அணியிலக்கணத்தைக்கற்பிக்க, உரிய ஆசிரியர் கிடைக்காமையால் தண்டியலங்கார ஆசிரியரை எதிர்பார்த்துக்காத்திருந்தார். அவ்வயம் வீடுவீடாக சென்று பிச்சையேற்று வாழ்க்கைநடத்திவரும் பரதேசி ஒருவர், அணியிலக்கணம் அறிந்தவர் என்பதை அறிகிறார். ஆனால், அப்பரதேசி எவரையும் மதிக்கும் இயல்பு அற்றவர் என்பதும் தெரியவருகிறது.

    தானே தரக்கொளி னல்லது தன்பால்
    மேவிக் கொளக்கொடா விடத்து மடற்பனை

    என்பதனையொத்து, தம்மை நாடிவருவோருக்கு சிலதமிழ் நூற்கருத்துகளை உரைப்பார் என்பதனை அறிந்து, அவரிடம் சென்று எவ்வாறேனும் அணியிலக்கணம் கற்கவேண்டும் என்று முடிவெடுக்கிறார். பரதேசி பிச்கை ஏற்கும் காலமறிந்து கூடவேசென்று அவருக்குப்பிடிக்கும் பொருள் கீழ்த்தரமான ஒன்று என்று அறிந்தும், அவர்விரும்பும் போதைப்பொருளில் ஒன்றை வாங்கிச் சென்று காலமறிந்து கொடுக்கிறார். அணியிலக்கணம் மட்டுமன்றி வேறுசில நூல்களைப்பெற்றும் பிள்ளையவர்கள் தன்னை மேம்படுத்திக்கொண்டதாக உ.வே.சா. குறிப்பிடுகின்றார்.

    ‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்றே’

    என்னும் புறப்பாடலின் பொருளை அறிந்தவர் அன்றோ. இவ்வகையில் ஐந்திலக்கணத்தில் பிள்ளையவர்கள் தேர்ச்சி பெற்றவராகிறார். மேலும்,
    நினைத்த மாத்திரத்தில் நினைத்த அளவு கவிதைபாடும் ஆசுகவி,
    இனிமையாக இசையுடன் கவிபாடும் மதுரகவி,
    சித்திரவடிவில் பாவியற்றும் சித்திரக்கவி,
    சுருங்கிய பொருளை விரித்துப்பாடும் வித்தாரக்கவி
    எனும் நால்வகையிலும் செய்யுளியற்றிப்பாடும் ஆற்றலை உரிய அறிஞர்களின்வழி கற்றுக்கொள்கிறார்.

    செய்யுள் இயற்றும் பயிற்சி:-
    பாடங்களை உரிய ஆசிரியர்களை நாடிக்கேட்டு வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொண்ட பிள்ளையவர்கள், நல்லவாய்ப்புகள் வழி அவற்றைச்செயல்படுத்தும் பயிற்சியைப் பெறுகிறார். தந்தையார் காலத்தில் பாடஞ்சொல்லி முடித்தபின் பிள்ளையுடன் உடன் பயின்ற மாணவர்களையும் கடைக்கு அனுப்பி, வீட்டிற்குத்தேவையான பொருள்களை வாங்கிவரச்சொல்வது பழக்கம். அப்போது பிள்ளையவர்களும் மாணவர்களும் ஒருசெய்யுளை ஒருவர் சொல்ல, அதன் இறுதிச்சொல்லை முதலாகக்கொண்டு அந்தாதி முறையில் வேறொருவர் வேறாருசெய்யுளைக் கூறுவர். இவ்வகையில் அவரவர் அறிந்த செய்யுளை அனைவரும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

    சங்கச்சாவடியைக்கடந்து பிள்ளைகள் செல்லும் பொழுது அங்குப்பணிபுரியும் அரங்கபிள்ளை என்பவர், சிதம்பரம் பிள்ளையின் மாணவர்கள் என்பதை அறிந்து அப்போது நடைபெற்றுவரும் பாடங்கள் குறித்தும் மனப்பாடம் செய்துள்ள பாடல்கள் குறித்தும் வினவுவார். செய்யுள் இயற்றும் வழியை அறிந்திருக்கிறீர்களா? என்ற வினவலுடன் ஒருமுறை விநாயகர் குறித்து ஒரு வெண்பாவைச்செய்யுங்கள் என்றாராம். அவ்வமயம் அனைவரும் அதுகுறித்து சிந்தனை செய்து கொண்டிருக்கையில் பிள்ளையவர்கள்,

    “பாரதத்தை மேருப்பருப் பதத்திலே எழுதி
    மாரதத்தைத் தந்தையிவர் வண்ணஞ்செய் சீருடையோய்
    நற்றழிழை யாங்கணயந்து கற்றுத் தேறமனத்
    துற்றருளை எங்கட் குதவு”

    எனும் வெண்பாவை விரைந்து எழுதித்தருகிறார். இதே போன்ற வழக்கத்தை ஒவ்வொருமுறையும் செய்யவைத்து, வெண்பாவிற்கு ஒரு பணமாகிய இரண்டு அணா கொடுத்து அனுப்புவாராம். இப்பயிற்சி பிள்ளையவர்கள் எதிர்காலத்தில் கடல்திறந்த மடையாக, பாக்களைக்கொட்டுவதற்குக்களனாக – பயிற்சிக்களமாக அமைந்தது.

    இதேபோன்று திரிசிரபுரம் மலையாண்டிப்பிள்ளை என்பவர் பிள்ளையவர்களின் ஆற்றலை அறிந்து, தம் ஊரிலுள்ள மிராசுதார் ஒருவரின் இல்லம் அழைத்துச்சென்று சிறப்பாக அறிமுகம் செய்தார். அருகில் இருந்த ஒருவர் ஒருபாடலைக்கூறி ‘இப்பாட்டுக்கு அர்த்தம் சொல்’ என்று கேட்க, உடனே பொருளுரைக்கிறார். இதனையே ஈற்றடியாகக்கொண்டு ஒருவெண்பாப்பாடு என்று சொல்ல, ‘சொல்’ என்பதற்கு ‘நெல்’ என்னும் பொருள் கொண்டு எழுத, அது பொருந்தாமையால் ‘தூய’ என்பதனை முன்னே வைத்து, உடனே பாடிமுடிக்கிறார். கேட்ட மிராசுதாரர் ஒருவண்டிநெல் கொடுத்தனுப்புகிறார். இது பிள்ளைக்கு மட்டுமன்றி, ‘தன் மகனைச்சான்றோன் எனக்கேட்கும் தந்தைக்கும்’ நெகிழ்ச்சியையும் மகிழ்ச்சியையும் தந்தன.

    தந்தையார் சோமரசம்பேட்டை எனும் ஊரில் மறைந்தார். மறைந்த ஆண்டு ‘விரோதி’ என்பதாகும். வேதனையின் விளிம்பிற்கே சென்ற பிள்ளையவர்கள்,

    “முந்தை அறிஞர் மொழிநூல் பலநவிற்றும்
    தந்தை எனைப்பிரியத் தான்செய்த – நிந்தைமிகும்
    ஆண்டே விரோதியெனும் அப்பெயர்நிற்கே தகுமால்
    ஈண்டேது செய்யாய் இனி”

    என்று வெண்பாப்பாடுகிறார். இப்பயிற்சிகள் பிற்காலத்தில் படைப்புலக அரிமாவாகத் தமிழகத்தில் பிள்ளையவர்கள் வலம்வர பேருதவியாய் இருந்தது.

    சென்னைப்பயணம்:-

    “நவில்தொறும் நூனயம் போன்று பயில்தொறும்
    பண்புடை யாளர் தொடர்பு”

    எனும் மொழிக்கேற்ப எண்ணற்ற நூல்களைப்பயின்று தமது அறிவெல்லையை விரிவுபடுத்திக்கொண்டார். தாம் வாழும் இடத்தைச்சுற்றியுள்ள தமிழறிஞர்களிடம் மட்டும் கற்றகல்வி போதாது என்று எண்ணினார். சென்னையில் கல்விச்சங்கம் ஒன்று நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் தமிழ் வித்துவான்களை வரவழைத்து மாணாக்கர்களுக்குப்பாடம் புகட்டுதல், பழைய தமிழ்நூல்களைப்புதிப்பித்தல், செய்யுள் வடிவிலான நூல்களை எழுதுவித்தல், கல்விநிலையங்களுக்கு ஏற்றவகையில் உரைநடையில் இலக்கணங்களையும் பாடங்களையும் இயற்றச்செய்தல், வடமொழி உள்ளிட்ட பிறமொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தல் முதலான பணிகளைச்செய்து வருவதை அறிந்துகொள்கிறார். சென்னை செல்லுவதற்கும் அங்கே தங்கித் தமிழறிஞர்களைச் சந்தித்து வருவதற்கும் பொருட்செலவு குறித்து சிந்தித்து வருகிறார்.

    இலக்குமணப்பிள்ளை மகாவித்துவானை ஆதரித்து வருபவர்களில் ஒருவராவார். சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள அவரின் வழக்கை நடத்துவதற்குரிய சரியான நபர் யார்’ என்பதை சிந்தித்து, மகாவித்துவானின் நினைவு வரவே, அவரை அனுப்பலாம் என்று முடிவுக்கு வருகிறார். காலம் கனிந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பார்களே அது இதுதான் போலும் இதனை,

    நித்தியத் தரித்திரராய் உழைத்துழைத்துத்
    தினைத் துணையும் பயனின்றிப் பசித்தமக்கள்
    சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக்
    கணத்திருந்த வெண்சோறு காணும் இன்பம்

    என்று புரட்சிக்கவியில் பாவேந்தர் பாடுவாரே அந்த இன்பத்தினை மகாவித்துவான் அடைந்திருப்பார்.

    சென்னையை அடைந்த பிள்ளையவர்கள் திருவாவடுதுறை ஆதீன வித்துவான் ஸ்ரீதாண்டவராயத்தம்பிரான், காஞ்சிபுரம் சபாபதிமுதலியார், எழும்பூர் திருவேங்கடாசலமுதலியார், திருத்தணிகை விசாகப்பெருமாளையர், திருவம்பலத் தின்னமுதம்பிள்ளை, சென்னையில் விநாயகப்புராணத்தை கச்சியப்ப முனிவர் அரங்கேற்றம்செய்தபொழுது அதற்குசிறப்புப்பாயிரம் அளித்த போரூர் வாத்தியார், அட்டாவதானம் வீராசாமி செட்டியார், புரசைஅட்டாவதானம் சபாபதி முதலியார் போன்றவர்களிடம் கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், காஞ்சிபுராணம், சைவப்பிரபந்தங்கள், திருவாரூர்த்தலபுராணம் உள்ளிட்ட நூல்களில் ஏற்பட்ட ஐயங்களைத்தீர்த்துக்கொண்டார்.

    கல்லாடம், திருவாசகம், திருச்சிற்றம்பலக்கோவையார், திருக்குறள் பரிமேலழகர் உரை, கம்பராமாயணம், பாகவதம், திவ்வியப்பிரபந்தம் போன்ற நூல்கள் தொடர்பான பாடங்களையும் தெளிவுபடுத்திக்கொண்டார். ஒவ்வொரு நாளையும் மூன்றாகப்படுத்திக்கொண்டு முற்பாகத்தில் காஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடத்தும், பிற்பகலில் எழும்பூர்த்திருவேங்கடாசல முதலியாரிடத்தும் கதிரவன் மறைவிற்குப் பின் மயிலை திருவண்ணாமலைமடத்துதிருவம்பலத்தின்னமுதம்பிள்ளையிடத்தும் சென்று அவர்களுக்கு ஆகவேண்டிய எழுதுதல், ஒப்புநோக்குதல் முதலான பணிகளைச் செய்துவிட்டு, தக்கநேரத்தில் பாடங்கேட்டுவருதலை வழக்கமாகிக்கொண்டிருந்தாராம். இவர்களில் எவருக்கேனும் பாடஞ்சொல்ல நேரமில்லையாயின் அதனை முன்பே தெரிந்துகொண்டு அந்த நேரத்தில் பிறஅறிஞர்களிடம் பாடம் கேட்கச்சென்று விடுவாராம்.

    பிள்ளையவர்கள் மேற்படிக்காலத்தை எவ்வாறு பொன்னான காலமாக எண்ணிச்செயல்பட்டுள்ளார் என்பதை உ.வே.சா. போன்ற மாணவர்களுக்குச் சொல்லுவாராம். திருவம்பலத் தின்னமுதம்பிள்ளை வீட்டிற்குச் செல்லும் பொழுது அருள்மிகு கபாலீசுவரர்கோவில் வாயில் வழியாகத்தான் போவார்களாம். உள்ளே சென்று வழிபட விருப்பம் இருந்தும் நேரம்போய்விடுமே என்னும் கவலையால் வெளியில்நின்றே வழிபட்டுச் செல்வதாக உ.வே.சா பிள்ளையவர்கள் குறித்த வரலாற்றில் குறிப்பிடுகின்றார்.

    அறிஞர் பாராட்டு:-
    ‘அடக்கம் அமரருள் உயக்கும்’ என்பது வள்ளுவரின் வாக்கு அல்லவா? இது பிள்ளையவர்களுக்கு மிகவும் பொருந்தும். சென்னையில் இருந்தநேரம் சபாபதி முதலியார் அவர்கள் பிள்ளையவர்களை மகாலிங்கையர் அவர்களிடம் அறிமுகம் செய்து வைக்கிறார். இருவரும் தமிழ்மலைகள். நீங்கள் எந்த நூலை வாசித்திருக்கின்றீர்? அவற்றில் ஒன்றிலிருந்து ஒரு பாடலைச்சொல்லுங்கள் என்றாராம். உடனே,

    இரசத வரையமர் பவள விலங்கல்
    இடம்படர் பைங்கொடியே
    இமையவர் மகிழ்வொடு புகழுஞ் சிமயத்
    திமயம் வரும்பிடியே….

    என்று தொடங்கி,

    மதுரித நவரசம் ஒழுகக் கனியும்
    வளத்த நறுங்கனியே
    தரணி மிசைப்பொலி தருமக்குயிலே
    தாலே தாலேலோ
    தழையும் தந்தி வனத்தமர் மயிலே
    தாலே தாலேலோ

    என்று நிறைவு செய்கிறார். பொருளையும் தக்கவாறு எடுத்துரைக்கிறார். கேட்ட மகாலிங்கயைர், ‘இப்பாடல் ஒரு பிள்ளைத்தமிழில் உள்ளது போலிருக்கிறது. சொற்களும் பொருளும் நயம்பட உள்ளன. இது திரிசிரபுரம் முதலிட இடங்களில் மட்டும்தான் வழங்குகிறது போலும். இதன்பெயரையாவது ஒருவரும் நம்மிடம் சொல்லவில்லையே’ என்று ஏக்கத்துடன், ‘இச்செய்யுள் எந்தநூலில் உள்ளது? இயற்றியவர் யார்?’ என்று வினவுகிறார்.

    மிகவும் அடக்கத்தோடு, ‘இது அடியேன் இயற்றிய அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழில் உள்ளது’ என்கிறார். ‘இவ்வளவு அருமையான நூலைப்படைத்தவர் அடங்கியிருப்பது வியப்பாக உள்ளது. இதைப்படைக்க எவ்வளவு நூல்பயிற்சியைப்பெற்றிருக்க வேண்டும் என்று பலவாறாகப்பராட்டி பலமுறை அச்செய்யுளைக்கூறச்சொல்லிக்கேட்டுமகிழ்ந்தாராம். இந்நூல் இதுவரை அச்சேறவில்லையென்றால் உடனே அம்முயற்சியில் இறங்குங்கள் என்று கூறியதுடன், ‘இந்த நகரில் எவ்வளவுநாள்; தங்கினாலும் என்னுடன்தான் தங்கவேண்டும். யோசிக்க வேண்டாம். ஆகவேண்டிய காரியம் எதுவாக இருப்பினும் முடித்துத்தர ஏற்பாடு செய்கிறேன்’ என்று அன்பொழுக வேண்டிக்கொண்டாராம். கற்றோருக்குச்சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பார்களே அது இதுதான் போலும்.

    பிறகு மகாலிங்கையருடன் பழகும் வாய்ப்பினை மிகுதிப்படுத்திக்கொண்டார். நன்னூல் விருத்தியுரை, காரிகையுரை தண்டியலங்காரவுரை நாற்கவிராச நம்பியகப்பொருளுரை முதலான நூல்களில் தமக்கிருந்த ஐயங்களைப்போக்கிக் கொண்டார். அதுவரை அவருக்குக்கிடைக்காமலிருந்த இலக்கணக்கொத்துரையையும் பெற்றுக்கொண்டார். அதனைக் கொடுக்கும்பொழுது, ‘இந்நூல் கிடைக்காமல் பலவிடங்களில் அலைந்தேன். திருவாவடுதுறை மடத்திலும் இல்லை. பின் தாண்டவராயத்தம் பிரானிடத்தே பெற்றேன். இதனை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டும்’ என்று கொடுத்தாராம். அதனை உடனே படியெடுத்துக்கொண்டதாகக்குறிப்பு உள்ளது. மகாலிங்கையரின் வேண்டுகோளான அகிலாண்டநாயகிபிள்ளைத்தமிழ், திரிசிரபுரம் இலக்குமணப்பிள்ளையின் பொருளுதவியால் அச்சிடப்பெற்றது. இதுகுறித்து என் உரையில் பின்னால் சொல்லவிருக்கிறேன். இதேபோன்று பிள்ளையவர்களின் அச்சான படைப்பு ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வரலாறு உள்ளது. உரையின் விரிவஞ்சி விட்டுவிடுகிறேன்.

    இணர் ஊழ்த்தும் நாறாமலர் அனையர் கற்றது
    உணர விரித்துரை யாதார்

    என்னும் குறள்நெறிக்கேற்ப, கற்ற கல்வியின் சிறப்பே எடுத்துரைக்கும் ஆற்றலில்தான் உள்ளது. அவ்வகையில் தந்தைஅளித்த பயிற்சியாலும் தாம் செய்த முயற்சியினாலும் பிள்ளையவர்கள் கல்விச்செல்வம் நிரம்பிய நிறைகுடமாய், ஆன்றவிந்தடங்கிய கொள்கைச்சான்றோராய் விளங்கினார். தான்பெற்ற இன்பம் இவ்வையகம் முழுதும் பெருக பாடம்சொல்லும் செயலில் இறங்கினார்.

    பெரியபுராண விரிவுரை:-
    பிள்ளையவர்கள் பெரியபுராணத்தின்மீது ஈடுபாடு கொண்டு அதனை ஐயமற அறிந்து கொண்டார்கள். அதனை விரிவுரையாக நிகழ்த்தினால் தமிழ்ச்சுவையையும் பக்தியின் மேன்மையையும் பலரறியக்கூடும் என்பதால் தக்காரை அணுகி விரிவுரையை நிகழ்த்திவருகிறார். சமயக்காழ்ப்புணர்ச்சியால் பொறாமைகொண்ட சிலரால் விரிவுரை தடைபடுகிறது. காரணம் பெரியபுராணத்தில் வரும் ஒவ்வோர் அடியவரின் புராணத்திலும் அவரின் மரணம் குறித்து செய்திவருவதால் அமங்கலமுடிவாயிருக்கின்ற இந்த நிகழ்வை ஒரு வீட்டில் நடத்தலாமா? என்று இல்லத்து உரிமயாளரை கலைத்துவிடுகிறார்கள். மொழிப்பற்று இல்லாதவரிடத்து இவ்விரிவுரை பயன்தராது என்று உரை நிறுத்தப்படுகிறது. சிலரின் வேண்டுகோளுக்கேற்ப பின்பு வேறொரு இடத்தில் எஞ்சிய பகுதி தொடங்கப்பெற்று நிறைவடைகிறது.

    இதேபோல பிள்ளையவர்களின் சீர்காழிக்கோவை உள்ளிட்ட ஒருசிலபடைப்புகளில் அரங்கேற்றத்தின்பொழுதும் இப்படிப்பட்ட இடர்பாடுகளைச் சந்தித்துள்ளார். காலப்போக்கில் அவையெல்லாம் நீங்கியது மட்டுமன்றி, ‘பிள்ளையவர்கள் நம்பகுதிக்கு வரமாட்டார்களா? நம்மூரைப்பற்றித்தலபுராணங்கள் பாடமாட்டார்களா’ என்று மக்கள் ஏங்கித்தவித்த காலம் உருவாயிற்று.

    (தொடரும்)

    குறிப்பு:-
    இவ்வுரையின் ஒருபகுதி, காரைக்கால் பண்பலை 100.3இல் 08.05.2015 இரவு 08.30க்கு இலக்கியச்சோலை பகுதியில் ஒலிபரப்பானது.

     

     

     

    முனைவர் துரை. குணசேகரன்
    தலைவர் தமிழாய்வுத்துறை
    அ.வ.அ.கல்லூரி (தன்னாட்சி)
    மன்னன்பந்தல்,மயிலாடுதுறை

    *********************

    Share