அருள்என்னும் அன்புஈன் குழவி
முனைவர் துரை.குணசேகரன்,
மனத்தான், பகுத்தறியும் குணத்தான் மாண்புக்குரிய இனம் மனித இனம். பண்பட்ட மனித மனம் தனக்கென வாழாது. அதற்குக்காரணம் அம்மனத்தில் குடி கொண்டிருக்கும் கனிந்த அன்பால் உருவான அருட்பண்பு. மாந்தரிடத்தில் இப்பண்பு குடிகொண்டிருப்பதால்தான் இன்னும் இவ்வுலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. தொல்காப்பியர் காலம் தொடங்கி அண்மையில் சென்னை, திருவள்ளுர்,கடலூர் போன்ற நகரங்களில் வெள்ளச்சேதம் ஏற்பட்ட காலம் வரை மேற்கூறிய அருள் பண்பின் மேன்மைத்திறம் குறித்தது இக்கட்டுரை.
அன்பின் வழிப்பட்ட அருள்: வரையறை
அருளுக்குப் பொருள் விளக்கம் கூறவந்த பிங்கலந்தை நிகண்டு,
“தகவும் கருணையும் இரக்கமும் தயவும்
கிருபையும் அபயமும் கிளர் அருள் ஆகும்”
என்று குறிப்பிடுகிறது. அருள் குறித்து கருத்துரைக்கும் மொ.அ. துரை. அரங்கசாமி,
பிற உயிர்களின் துன்பம் கண்டு துடிப்பவருடைய உள்ளத்தில் முதல் முதல் நெகிழ்ச்சி ஏற்படும் கசிவும் காதலும் அன்பும் ஆர்வமும் அருளும் உண்டாகும். இவை ஒரு பொருள் குறித்த பல சொற்கள் போலத் தோன்றினாலும் தம்முள் பெரிதும் வேறுபாடு கொண்டவை. அருள் என்பது இவ்வரிசைப்படி இறுதியாகும் என்று குறிப்பிடுகின்றார்.(அன்புநெறியே தமிழ்நெறி.பக்.73-77)
அன்பு தொடர்பான பல சொற்களை எடுத்துரைக்கும் ஜெக வீரபாண்டியனார், “தன்னைப்பெற்ற தாய் தந்தையர் மேல் ஒருவருக்குள்ள பிரியம் மருவியபொழுது அது பிரிவு; மனைவியரிடம் நேரின் காதல்; மக்கள்பால் உறின்பாசம்; சுற்றத்தினர் மேல் எழுந்தால் அது வாஞ்சை; தாழ்ந்த பிராணிகள் மேல் சாரின் தயை; ஒத்தார்மீது உறின் நேசம்; உயர்ந்தவர்மேல் வரின் ஆர்வம்; பொருள்கள்பால் புகின் பற்று; தெய்வத்தின் மீது வைப்பின் பக்தி; முதிர்ச்சியில் பிறப்பது அருள்” என்று விளக்குகின்றார்.(நீதி நூல்கள் தொகுதி.2.பக்.269)
அன்பின் திறத்தினை அறத்துப்பாலில் அன்புடைமையில் பத்துக்குறட்பாக்களில் விளக்கிய வள்ளுவர்(71-80) பொருள் செயல் வகை குறித்து பொருட்பாலில்,
“அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியா லுண்டு”(757)
என்று அன்பின் குழந்தையாக அருளைக்குறிப்பிடுகின்றார். இதற்கு உரை எழுதப்புகுந்த பரிமேலழகர், “தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார் உளதாவ தாகலின் அதனை’அன்பீன் குழவி என்றும், அது வறியார் மேல் செல்வது அவ்வறுமை களைய வல்லார்க்கு ஆகலின் பொருளை அதற்கு ‘செவிலி ’என்றும், அஃது உலகிற் செவிலியர் போலாதுதானே எல்லாப்பொருளும் உதவி வளர்த்தலின் ‘செல்வச்செவிலி’ என்றும் கூறினார்.” என்று தெளிவுரை நல்குகின்றார். இதன்வழி அன்பின் கனிந்த உள்ளம் அருள் என்றும், இது முழுமையுற எண்ணத்துடன் செயல்பாட்டிற்குத் தேவையான பொருள் தேவை என்றும் தொடர்பில்லார், தொடர்பில்லாதவை மாட்டுப் பிறப்பது அருள் என்பதும் பரிமேலழகர் கருத்து. இது அன்பினை, தன்னலம் சார்ந்ததாகவும் அருளினை, பொது நலம் சார்நததாகவும் வெளிப்படுத்தும் என்பதும் அறியத்தக்கவையாகும். ஆனால் வள்ளுவரோ தம்முடைய அன்புடைமை அதிகாரத்தில்,
“அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு”(72)
என்னும் குறள் வழி அன்பும் பொதுநலம் சார்ந்ததாகவே காட்டுகின்றார் என்பது தெளிவு.
மேற்காணும் விளக்கங்களிலிருந்து பரிவு, காதல், பாசம், வாஞ்சை, தயை, நேசம், ஆர்வம், பற்று, பக்தி, நட்பு, அருள் இவையனைத்தும் அன்பின் வெளிப்பாடு என்பதும் இதன் முதிர்ந்த கனிந்த நிலையே அருள் என்றும் தெளியலாம். ஆன்மிகவாதிகளின் அருளால் உள்ளம் தெளிவாகும். பிறரின் அருளால் புறமும் நலமாகும். முன்னதற்குப்பொருள் தேவையிலை; பின்னதற்குப் பொருள் அவசியம் என்று வரையறுத்துக்கொள்ளலாம்.
பிறவிக்குணமா?
தமிழ் மூதாட்டி ஒளவை பழக்கம், பாரம்பரியக்குணம் இவற்றிற்குரியவையாகப் பின்வருவனவற்றைக் குறிப்பன ஆய்வுக்குரியது.
“சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்
நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்”
ஒளவையின் கருத்தை ஏற்றுக்கொண்டாலும் பின்னவை மூன்றையும் பழக்கத்தால் கொண்டுவரமுடியும். பிறவிக்குணம் நிலையானது; பழக்கம் நிலையில்லாதது. தொடர் பயிற்சியும் முயற்சியும் இருந்தால் மட்டுமே பழக்கத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பது தெளியலாம்.
நேயச்சிந்தனைகள்:
அன்பின் பிரிவுகளில் ஒன்றான நேயம் தொடர்பில்லாதோர் மாட்டு நிகழ்வது. இதனை மனிதநேயம், ஆன்மநேயம் என்று வகைப்படுத்தலாம். உறவினர் அல்லாத பிற மாந்தர்களிடம் செலுத்துவது மனிதநேயம் என்றும், பிற உயிர்களிடமும் உயிரல்லாத பொருள்களிடமும் கொண்டுள்ள நேயத்தினை ஆன்மநேயம் என்றும் தெளிவுபடுத்தலாம். எடுத்துக்காட்ட வேண்டுமெனில் பாரதியின்,
“வாழ்ந்தால் முப்பது கோடியும் வாழ்வோம்
வீழின் முப்பதுகோடி முழுமையும் வீழ்வோம்”
என்றது மனிதநேயம் என்றால்,
“காக்கை குருவி எங்கள் சாதி– நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்”
என்றது, ஆன்மநேயத்தின்பாற்படும் எனலாம்.
இலக்கியங்களில் மனிதநேயம்:
தமிழை பக்தியின் மொழி என்பார் தனிநாயக அடிகள். ஆழ்வார்களும் நாயன்மார்களும் பிறரும் அரும்பாடுபட்டு, தமிழில் பக்தி இலக்கியச் செய்திகளை அளவில்லாது அளித்துள்ளனர். அதன்வழி மக்கள் மனத்தில் நேயச்சிந்தனைகளை வளர்த்துள்ளனர். மற்ற உயிர்களினின்றும் மனிதன் வேறுபடுவதற்கு அடிப்படை அவன் பெற்றுள்ள மனமே.
அறிவு: தொல்காப்பியர் வரையறை
அறிவினை முன்னோர்கள் வழியில் வகைப்பாடு செய்யும் தொல்காப்பியர்,
“ஒன்றறி வதுவே உற்றறிவதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தொர் நெறிப்படுத் தினரே”(தொல்.மரபியல்.27)
என்று அறிவியலாளரும் வியக்கும் வண்ணம் ஓரறிவு முதல் ஆறறிவு வரை தெளிவுபடுத்தியுள்ளார். இதில், புலன்களின் வளர்ச்சி நிலையைச் சுட்டும் அவர், அவ்வற்றிற்குரிய உயிரினங்களையும் பட்டியலிடுகின்றார். அதன் நிறைவாக,
‘மக்கள் தாமே ஆறறிவுயிரே’(மரபியல். நூ.33)
என்றும் குறிப்பிடுவதன் வழி மனத்தாலறியும் அறிவினைக்கூடுதலாகப் பெற்றவர்கள் மனிதர்கள் என்பது புலனாகும்
மனத்தால் மாறுபாடு:
மனம் கொண்டவர்கள் மனிதர்கள் என்பதனாலெயே அனைவரும் பண்பட்டவர்கள் என்று சொல்லமுடியாது. மனிதர்களில் சிலர் பிறரை அடக்கி ஆளவேண்டும் என்று தம் அதிகார பலத்தைக் காட்டக்கூடியவர்கள் பண்படா மனத்தவர் பட்டியலில் உள்ளவர்கள். இவர்கள் ‘அன்பின் வழியது உயிர் நிலை’ (குறள்.80) என்னும் குறளின் பொருளை உணராதவர்கள். மாறாக அன்பால் எதனையும் சாதிக்க இயலும் என்னும் கருத்து கொண்ட பண்பட்டவர்கள், செயல்பாட்டினால் அனைவர் நெஞ்சிலும் வாழ்ந்து கொண்டுள்ளனர்.
சங்ககாலத்து மனிதநேயம்:
நேயத்தின் பாற்பட்ட உயர் சிந்தனைகள் மிகுந்திருப்பது சங்க காலப் படைப்புகள். அவற்றுள் குறிப்பிடத் தகுந்தது புறநானூறு. அகத்திணையைத் தமிழன் அன்பின் ஐந்திணை என்று வகுத்து மிகுதியான பாடல்களைத் தந்திருந்தாலும், புறத்திணைப் படைப்புகளில் அன்பினை விதைத்து அது செழித்த தன்மையினைப் புறநானூறு போன்ற படைப்புகள் உலகிற்குப் பறைசாற்றும்.
மூவேழு வள்ளல்கள்:
அபிதான சிந்தாமணி குறிப்பிடும் மூவேழு வள்ளல்களில் முதலேழில் இடம்பெற்றுள்ள குமணன் செம்பியன் ஆகியோரும் கடையேழு வள்ளல்களாக்க் குறிப்பிடப் பெற்றவர்களில் எழினி, ஓரி, நள்ளி, பாரி, பேகன், மலையமான் ஆகிய அறுவரும் இதில் குறிப்பிடப்பெறாத ஆய் அண்டிரனும் புறநானூற்றில் குறிப்பிடப்பெற்ற வள்ளல்கள் ஆவர். முதலேழு வள்ளல்களில் ஒருவராக அபிதான சிந்தாமணி குறிப்பிடும் குமண வள்ளலைப் பாடும் பெருஞ்சித்திரனார், கடையேழு வள்ளல்களின் பட்டியலைத் தந்து, இவர்கள் மறைந்ததனால் ‘இரந்தோர் துன்பம் நீக்குபவன் நீ’ என்னும் கருத்தால் வந்ததாகக் குறிப்பிடுகின்றார்.(புறம்.158) இது இவ்வாறிருக்க, கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு வாழ்ந்த குமணனை முதலேழு வள்ளல்களின் பட்டியலில் சேர்த்து மேற்காணும் களஞ்சியம் குறிப்பிடுவது குழப்பத்தை அளிப்பதாக உள்ளது.
மேலே குறிப்பிடப்பெற்றுள்ள வள்ளல்கள் தன்னலம் பாராமல் அவர்களின் உள்ளம் கனிந்த நிலையில் அருள் சுரப்பின் காரணமாக அவர்கள் செய்த செயல் இன்றும் மக்கள் மனத்தில் நின்று நிலவுகின்றது.
மறுமைப்பயன் நோக்கியதா?
“ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்
தன் பிள்ளை தானாக வளரும்”
என்னும் பழமொழி தன்னலத்தின் வெளிப்பாடாக, வீட்டிற்கு மணப்பெண்ணாக வந்தவரை பாதுகாப்புடன் நடத்தினால் அவர்வழி தனக்குப் பிறக்கும் பிள்ளையை கவனித்துக் கொள்வார் என்று வலிந்து பொருள் கொள்வர். ஆனால் நாட்டுப்புறத்தில் வழங்கும் பொன்மொழிகள் அலங்காரத்துடனோ பொருள் ஆழத்திலோ வெளிவருவதில்லை; இயல்பாக வெளிவருபவை. எனவே, மேற்காணும் பொன்மொழி, குறிப்பிடும் ‘ஊரான் பிள்ளை’ என்பது முன்பின் அறிமுகமில்லாதவர்களைக் குறித்ததுதான் என்று கொள்ளுதலே சிறப்பு. இது பொதுநலத்தின் பாற்பட்டது என்றாலும் பலனை எதிர்பார்த்துச் செய்வது. ஆனால், சங்ககாலத்தில் ஆட்சி செய்த குறு நிலமன்னர்களில் வள்ளலாகப் பெயர்பெற்ற ஆய்அண்டிரனின் வள்ளல் தன்மையைக் குறிப்பிட வந்த ஏணிச்சேரி முடமோசியார்,
“இம்மைச் செய்து மறுமைக் காமெனும்
அறவிலை வணிக னாயலன்” (புறம்.134)
என்று குறிப்பிடுவது சிந்தனைக்குரியது. பயன் கருதிச் செய்யக்கூடிய அறம் ஒருவகை வணிகம்தான் என்னும் கருத்தைக் கொண்டவர்கள் சங்ககால வள்ளல்கள் என்பது பின்பற்றத்தக்கது.
பொய்மொழியான பொன்மொழி:
“விருந்தும் மருந்தும் மூன்று நாள்”
என்பதும் மற்றுமொரு பொன்மொழியாகும். பொதுவாக இம்மாதிரியான முதுமொழிகள் சமூகத்தின் பிழிவாக, பெரும்பான்மைநோக்கி வெளிவருவன. ஆனால் சங்கால மன்னர்களில் சிலர் இம்மொழியைக் கேள்விக்குறியாக்கும் வகையில் தம்முடைய கொடைப்பண்பினால் மாற்றிக் காட்டுவதைக் காணமுடிகிறது. அதியமான் நெடுமானஞ்சியின் கொடைத்தன்மைய,
“ஒருநாள் செல்லல மிருநாட் செல்லலம்
பலநாள் பயின்று பலரோடு செல்லினும்
தலை நாட் போன்ற விருப்பினன்…………………..”
என்று குறிப்பிடும் ஒளவையார், எத்தனை முறை விருந்தினராகச் சென்றாலும் முதல் நாள் சென்றதைப் போன்ற வரவேற்பை அளிப்பான் என்றும், அவர்களுக்குப் பரிசில் என்பது ‘யானை கோட்டிடை வைத்த கவளம் போன்று” (புறம்.101) உறுதியானது என்றும் சுட்டுவன கொடைத்தன்மையின் சிறப்பினைப் பறைசாற்றுவதாகும்.
புலவர்களின் அருள்தன்மை:
மன்னர்கள் மட்டுமன்றி, புலவர்களும் மக்களுக்கு எண்ணற்ற செயல்களின் வழி அவர்களின் வாழ்வுக்குப் பெரும் உதவி புரிந்துள்ளனர். முடியாட்சிக்கால மன்னர்கள் செய்த தவறுகளை அஞ்சாது சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்தியதுடன் மக்கள் மகிழ்வுடன் வாழ வழியையும் காட்டியுள்ளனர். இவ்வகையில் நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகிய உடன்பிறந்த மன்னர்களிடையே நடக்கவிருந்த போரினைத் தடுத்து அவர்களுடன் மக்களையும் காப்பாற்றினார் கோவூர்க்கிழார். (புறம்.44) கோப்பெருஞ்சோழனை எதிர்த்த அவனின் பிள்ளைகளை அழித்து ஒழிக்க எண்ணிய மன்னனின் செயலை, உரிய விளக்கங்களை அளிப்பதன் வழி தடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பிள்ளைகளுக்கு வாங்கித்தந்தார் புலவர் எயிற்றியனார். மலையமான் திருமுடிக்காரியின் மக்களை, பகையின் காரணமாக, கொல்ல நினைத்த குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுக்கு அறிவுரை நல்கி பிள்ளைகளைக் காத்தார் கோவூர்க்கிழார்(புறம்.46) அவரே, இளந்தத்தன் என்னும் புலவனை நலங்கிள்ளியின் ஒற்றன் எனக் கருதிக் கொல்ல நினைத்த நெடுங்கிள்ளியிடம் புலவர்களின் பெருமைகளைச் சுட்டிக்காட்டிக் காத்தார்(புறம்.47) இவையனைத்தும் மனித நேயத்தின்பாற்பட்ட செயல்களே.
புரவலர்களாக புலவர்கள்:
வறுமையுற்ற போதும் பொய்கூறாதவர்கள் புலவர்கள். வறுமையால் மன்னர்களைப்பாடி வளமையுற்ற போது அவ்வளத்தை வைத்துக்கொண்டு பலகாலம் வள்ளல்களாக விளங்கியிருக்கின்றனர். நீண்டநாள் வறுமையில் வாடி இறுதியில் குமணனைப்பாடி கொண்டுவந்த பொருளை தம் மனைவியிடம் கொடுத்து,
“நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும்
……………………
இன்னோர்க் கென்னா தென்னொடுஞ் சூழாது
வல்லாங்கு வாழுது மென்னாது நீயும்
எல்லார்க்குங் கொடுமதி மனை கிழவோயே”(புறம்.163)
என்று கூறும் புலவர் பெருஞ்சித்திரனாரின் செயல் எண்ணி எண்ணி பெருமை கொள்ளத்தக்கது. எனக்கு வேண்டியோர் உனக்கு வேண்டியோர் என்று பாராமல் எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும். இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்பதைப் போன்ற உள்ளங்கொண்ட பெருஞ்சித்திரனார்கள் இன்று பலர் தேவை. வேண்டுதல் வேண்டாமை இலான் என்று இறைவனை வள்ளுவர் குறிப்பிடுவார். இறைவன் தன்மை கொண்ட பலர் சங்க காலத்தில் வாழ்ந்துள்ளனர். இன்று சமுதாயம் காணும் துன்பத்தைத் துடைக்க சங்க காலத்தில் வாழ்ந்த அரசர், புலவர்கள் பலர் தேவைப்படுகின்றனர்.
ஆன்ம நேயச்சிந்தனையாளர்கள்:
இறையடியார்களும் இயற்கை விரும்பிகளும் அவ்வப்போது மனிதர்கள் மட்டுமன்றி விலங்குகள், பறவைகள், தாவரங்கள் என அனைத்து உயிர்களின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் அக்கறைகொண்டு வாழ்ந்தும் வாழவைத்தும் வந்துள்ளனர்.
வாகனங்களும் தலவிருட்சங்களும்:
“ஆடுற மாட்டை ஆடிக்கறக்கணும்
பாடுற மாட்டை பாடிக்கறக்கணும்”
என்பது நாட்டுப்புற வழக்கு. இதே உத்தியைப் பின்பற்றி ஆன்மிகவாதிகள் சில நேரங்களில் மக்களை எச்சரிக்கை விடுத்தும் அன்பாகவும் கூறி விலங்குகள் பறவைகள், மரங்கள் முதலானவற்றைப் பாதுகாத்துள்ளனர்.
பன்றி, மூஞ்சுறு போன்றவற்றை இறைவனின் வாகனமென்று அடிக்கக்கூடாதென்றும் வேம்பு, அத்தி உள்ளிட்ட மரங்கள் கோவில் தலவிருட்சங்கள் அதனால் இம்மரங்களை வெட்டக்கூடாதென்றும் பாதுகாத்து வருகின்றனர்.
மரம் வெளியிடும் காற்று மனிதர்க்கு மூச்சுக்காற்று; மனிதர் வெளியிடும் நச்சுக்காற்றை உள்ளிழுத்து வாயுமண்டலத்தைத் தூய்மைசெய்கிறது மரம். இவ்வகையில் மனிதனின் உயிராக விளங்கும் மரங்களில் ஒன்றை வெட்டுவதற்கு முன் பத்து மரக்கன்றுகளையாவது நடவேண்டாவா? மேலை நாட்டு நாகரிக மோகத்தில் திளைத்து பிறந்தநாள், திருமணநாள் கொண்டாடும் தமிழர்கள் அவ்வப்போது வீணாகச் செலவிடும் தொகையில் மரக்கன்றுகைளை அளித்து தமக்கும் சமூகத்திற்கும் தொண்டாற்றலாமே.
ஆன்மீகவாதிகளின் ஆன்மநேயம்:
‘புல்லாகி பூடாய் புழுவய் மரமாய்’ என்று எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்ததாகக் கூறும் மாணிக்கவாசகர் (திருவாசகம்.சிவபுராணம்.26-31),
“எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்
தம்முயிர் போல் எண்ணி”
வாடியபயிரைக் கண்டபோதே வாடும் மனத்துடன் வாழ்ந்த வள்ளலார் (திருவருட்பா.5298), போன்ற எண்ணற்ற அருளாளர்கள் தோன்றி தமிழ் மக்களும் விலங்குகளும் உயிரினங்களும் வாழ வழிகண்டனர்.
அறிமடமும் சான்றோர்க்கணி:
வள்ளல்கள் சிலரின் செயல்பாடுகளைக் கூர்ந்து நோக்கின் அவை அவர்களின் அறியாமையானவையாகத் தோன்றும். ஆனால் உடுக்கை இழந்தவன் கைபோன்று துன்பமுற்றோர் அல்லது துன்பமுற்றவையின் இடுக்கண்களைய வேண்டுமென்ற உடனடிச் சிந்தனைகளைச் சீர்தூக்கி ஆராயின் உதவி செய்தோரின் உள்ளம் வெளிப்படும். துன்பத்தில் தாம் பங்குகொண்ட்து மட்டுமன்றி அதனைத் தாம் ஏற்றுக்கொண்டு அவர்களை அல்லது அவைகளை அத்துன்பத்தினின்றும் விடுவித்து இன்பமடையச்செய்த செயல்களை சங்ககாலம் தொடங்கி இக்காலம்வரை காணலாம். அவ்வகையில் முல்லைக்குத் தேரீந்த பாரி, மயிலுக்குப் போர்வையீந்த பேகன் உள்ளிட்ட பலரின் செயல்களைச் சுட்டலாம். இச்செயல்கள் மேற்குறிப்பிட்டோரின் அறியாமை என்று எண்ணுவது, எண்ணுவோரின் அறியாமைக்குச் சான்றாகும். மாறாக இவ்வறிமடமும் இச்சான்றொர்களுக்கு அணியாகத் திகழும். வாகனங்கள் மிகுதியாகச் செல்லும் சாலைத் தடுப்புகளுக்குள் மாட்டிக்கொண்ட பல விலங்குளை சிலர், உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றும் நிகழ்வுகளை இன்றும் முக நுல்களில் அன்றாடம் காணலாம்.
ஒருபானைச் சோற்றுக்கு:
சிலவாண்டுகளுகு முன் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் இரு நாட்டு வீரர்களும் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று நிலச்சரிவு ஏற்பட்டு பாகிஸ்தான் வீரர்கள் புதைந்து கொண்டிருந்த நேரம் இந்திய வீரர்கள் உடனடியாகச் சென்று காப்பாற்றினார்களாம். எல்லையில் தீவிரவாதத்தை முறியடிக்க அதே வீரர்களை சுட்டு வீழ்த்துவதென்றாலும் இந்திய வீரர்கள் செய்வார்கள். அது நாட்டைக் காப்பாற்றும் கடமை. ஆனால் எதிர்பாராத இயற்கைச் சீற்றத்தால் எதிரிகளை அழிவிலிருந்து காப்பாற்றியது மனித நேயம்.
மனிதநேயம் மறைந்து போனதா?
எதற்கெடுத்தாலும் சங்க காலம், பக்திக் காலம் என்று பழைய காலங்களின் சிறப்புகளைப் பட்டியலிடுகின்றோர் தற்காலத்தை ஒரு கற்காலமாக நினைத்து எண்ணிப் பழிதூற்றி வந்தனர். எதற்கெடுத்தாலும் இது கலிகாலம். நடக்காதவை எல்லாம் நடக்கும் என்று புறஞ்சொல்லி வந்தனர். நவம்பர், திசம்பர் 2015ல் அடாது பெய்த மழை வெள்ளத்தால் சென்னை, திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் நீரில் மூழ்கி தத்தளித்த அவலத்திற்குப்பின், நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுகின்றவரை.
வெள்ளத்தில் தத்தளித்தோரை மீட்டவர்களில் பெரும்பாலானோர், எதற்கும் உதவமாட்டார்கள் என்று பெரியவர்கள் ஒதுக்கி வைத்து வேண்டாவெறுப்பாக முகஞ்சுளித்துப் பார்த்த இளையோர் பட்டாளம், தன்னலம் பாராத தன்னார்வத் தொண்டர்கள், சுவைஞர்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தி வளர்ந்து வருபவர்கள் என்று மக்கள் தவறாகக் கணக்குப் போட்டு வைத்திருந்த திரை நட்சத்திரங்கள், நீரால், மொழியால் நிரந்தரமான எதிரிகள் என்று தமிழர்கள் கணக்குப் போட்டு வைத்திருந்த அண்டை மாநிலத்தார்கள், எதைச்செய்தாலும் அதிலொரு அரசியலிருக்குமோ என்று மக்கள் அச்சத்துடனேயே பார்த்துவரும் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர், மேலாக, இலாப நோக்கோடு இச்செய்தியைப் போட்டுள்ளார்கள் என்று வாசகர்கள் இதுவரை தப்புக்கணக்கு போட்டிருந்த, உயிரை துச்சமென மதித்து எண்ணற்ற உயிர்களைப் பாதுகாக்க உயிரான செய்திகளை உடனுக்குடன் தெரிவித்து மக்களின் நெஞ்சங்களிலிருந்த அச்ச உணர்வைப் போக்கிய ஊடகங்கள் என்று இப்பட்டியல் நீண்டுகொண்டே போகும். அடித்த மழை வெள்ளம் போல. இவற்றுக்கெல்லாம் என்ன காரணம் மனிதம் பாடநூல்களில், சொல்லிக் கொடுக்கும் வகுப்பறைகளில் பாடத்திட்டங்களின் வழி மறைந்து போயிருக்கலாம். ஆனால், மனித மனங்களிலிலிருந்து சிறிதளவும் குறையவில்லை. மாறாக வளர்ந்திருக்கின்றது; முழுமையாய் மலர்ந்திருக்கின்றது.
இனங்காட்டும் சூழல்:
சூழ்நிலை மனிதனை உருவாக்கு கின்றது என்பதை விட இனம் காட்டுகிறது என்பது மிகப்பொருத்தம். சென்னை மழையில் நன்கு அறிமுகமானவர்கள் கூட தங்கள் முகத்தை மறைத்துக் கொண்டு நெஞ்சம் நெகிழும்படியாக உதவிகளைச் செய்துள்ளனர். விளம்பரங்களைத் தேடிக்கொண்டவர்கள் என்று யாரையும் விரல்விட்டு சொல்லவியலாது. உலகம் உருண்டை என்பதைப் போல இதுவரை கீழ்த்தளத்திற்கு இருந்த மதிப்பு மேலே மேலே மேல் தளத்திற்கு சென்றுவிட்டது. விலைமதிப்பில்லாத, இமயத்தின் சிகரத்தில் இருந்த சென்னை நகர மண்ணின் விலை படுபாதாளத்திற்குச் சென்றாலும் வியப்பதற்கில்லை. சென்னையில் நீர் நின்ற இடங்களெல்லாம் ஆறு, ஏரி, குளம், கால்வாய் என்று பெயர் உள்ள இடங்கள்தாம். இனி நீரிருக்க அவ்விடங்களை விட்டுவிடலாம் மக்கள் இருக்க ஏற்ற இடங்களைத் தெரிவு செய்யலாம்.
மழைக்குமுன் சென்னை(ம.மு.செ.):
எதிர் வீட்டில் யாரிருக்கிறார்கள்? இந்தப் பெயர் கொண்ட தெரு எங்கே இருக்கிறது? இந்த ஊருக்குப் போகும் வழியாது? என்று எத்தனைக் கேள்விகள் கேட்டாலும் ‘தெரியாது’ என்னும் பதிலை, கேட்பதற்கு முன்பாகவே ஆயத்தமாக வைத்திருந்த இளைஞர் பட்டாளம்; பக்கத்துத் தெருவில் உள்ள வீட்டிற்கு, பத்துக் கிலோ மீட்டர் சுற்றிக்கொண்டுவந்து விட்ட ஆட்டோ ஓட்டுநர்கள்; பையில் இருந்த பணத்தை கொள்ளையனுக்குக் கொடுத்துவிட்டுத் தவிக்கும் நாட்டுப்புறத்தானுக்கு ‘உள்ளே போ’ என்று சொன்னேனே கேட்டியா? போ……. போயி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு போ என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் பேருந்து நடத்துநர்கள்; அப்பாவியாக புகார் கொடுத்துவிட்டு பணம் எப்போது கிடைக்கும்? என்று கேட்கும் பட்டிக்காட்டானிடம் ‘உடனே(கிடைக்கும்)…. போ சொல்லி அனுப்புறோம்’ என்று மறைமுகமாகத் தமக்குக் கிடைக்கப் போவதை உற்சாகத்தில் கொக்கரிக்கும் காவல்துறையினர்; பளபளக்கும் வார்த்தையால் பளிச்சிடும் விளக்கொளியில் இருட்டினை விற்பனை செய்யும் வியபாரிகள்; பணத்திற்காக எதையும் செய்யும் கைக்கூலிகள்; விளம்பரம் தேடும் அரசியல் வாதிகள்; இளைஞர்களைச் சீரழிக்கும் திரைத்துறையினர் என்று அனைத்துத் துறையிலும் உள்ள புல்லுருவிகளின் கை ஓங்கியிருந்தது இங்கே குறிப்பிடப்பட்ட துறைகளில் மிகவும் நல்லவர்களும் வெளியில் தெரியாத வேர்களாகவே இருந்தனர்.
மழைக்குப் பிறகு சென்னை(ம.பி.செ.):
அனைத்து தீய செயல்களுக்கும் கழுவாய் தேடியதைப் போல இன்று சென்னை தம்முடைய அழுக்குளைப் போக்கிக்கொண்டு அழகாக மாறி வருகிறது. நச்சுப்பாம்பு கடித்ததையும் பொருட்படுத்தாது மீட்புப்பணியில் ஈடுபட்டு இறந்து போன திருவொற்றியூர் தியாகராயபுரம் முகமது ஜாபர் மகன் இம்ரானைப் போல மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு மறைந்துபோன மாணிக்க உறவுகளை, மக்களை நம்பி வாழ்ந்த பாசப்பிராணிகளை இனி பார்ப்பது எந்த நாளோ? இழந்து போன உடைமைகளை மீட்டெடுப்பது என்றோ?
‘படுத்தால் உறக்கம் இல்லை’; தூங்கி இரண்டு நாளாச்சி; உடனே போயி லோடு ஏத்திட்டு வரணும் என்று ஐதராபாத்திலிருந்து கண்டெய்னர் லாரி ஓட்டி வந்த ஓட்டுநர் ஷாஜி போன்று தன்னலம் கருதாத சேவையில் ஈடுபட்ட ஆயிரமாயிரம் தன்னார்வத் தொண்டர்களின் பணிக்கு ஈடாக எதனை அளிப்பது? இழப்புகளைப் பற்றி கவலைப்படாது பாதுகாப்புத்தேடி ஓடிஒளியாமல் பெண்ணாக இருந்தாலும் வெள்ளத்தில் நீந்திவந்து, செயல்படும் ஒன்றிரண்டு தொடர்வண்டிகளின் வழி மக்களுக்குச் சேவைசெய்ய வேண்டுமென்று இருபத்தினான்கு மணி நேரம் தொடர்ந்து பணிபுரிந்து சாதனை நிகழ்த்திய தொடர் வண்டி இயக்க கண்காணிப்பு அலுவலர் சென்னை மாடம்பாக்கம் ஜே.கீதா சுரோ போன்றவர்களுக்கு எப்படி நன்றி சொல்வது?
எல்லாவற்றிற்கும் ஒரே பதில்தான். இவர்களில் எவரும் நன்றிக்காக உதவியோர் அல்லர்.அவர்கள் காட்டியது வெறும் அன்பன்று; கனிந்த அருள். இதன்வழி அனைவரும் தெரிந்து கொண்டது யாதெனின் இது குறித்து கோமல் அன்பரசன் தினமணியில் எழுதிய கட்டுரையின் வழி சொல்வதென்றால் ‘மாமழை மீட்டெடுத்த மனிதநேயம்’ என்பதுதான்.
இனி ஒரு விதி செய்வோம்:
எதிர்பாராத பேரிடரை எப்படியோ மக்கள் சக்தியால் ஓரளவு மீட்டெடுத்துள்ளோம். இனியும் இழப்பதற்கு மக்களிடம் ஒன்றுமில்லை. 2005 திசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தில் மறைதோர்களைக் காட்டிலும் நிவாரணத்தொகை பெறுவதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்கள் மிகுதி. ஆழிப்பேரலை அடிக்கடி நிகழும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று ‘சுனாமி’ எனும் சொல்லே அவர்களுடையதுதான். அப்படிப்பட்ட நாடுகளுக்குச் சென்று தெளிவான திட்ட வரையறைகளைத் தீட்டி அரசு முனைப்புடன் செயல்பட்டால் இனியும் இதுபோன்ற இழப்புகளைத் தவிர்க்கவியலும்.
பேரிடர் மேலாண்மைச் சட்டத்தைக் கொண்டுவந்து மழை வெள்ளம் மட்டுமன்று அணு உலை, ஆழிப்பேரலை உள்ளிட்ட எந்தச் சூழலிலும் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியும் ஏரியைத் தூர்த்து எழுப்பப்பட்ட நகரந்தான் மெக்சிகோ. அந்த நகருக்குக் கீழே 62 கிலோமீட்டர் நீளத்திற்கு மிகப்பெரிய அளவிலான பாதாளச் சாக்கடையை அமைத்து மிகுதியான நீரை வெளியேற்றுகின்றனர். இதைப்போன்ற ஒரு திட்டத்தை சென்னை நகரில் ஏற்படுத்தி செயல்படுத்துவது காலத்தில் கட்டாயம்.
பெய்கின்ற மழை நீரை தேக்கி வைத்து பயன்படுத்தக் கூடிய வகையில் இருக்கும் நீர் நிலைகளைத் தூர்வாரி கரைகளை உயர்த்தி தேவையான நேரங்களில் பயன்படுத்த உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இனியும் நீர் நிலைகளை ஆக்கிரமிக்கும் எந்தச்செயலுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அப்போதுதான் ‘மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்’ என்று சிலப்பதிகார இளங்கோவைப் போன்று மழையை வாழ்த்திப் பாடமுடியும். இன்றேல் மழை மேகத்தைக் கண்டால் சென்னை நகரத்தை விட்டே ஓடத்தோன்றும். சென்னையில் பெய்த பேய் மழையால் தூய்மையானது கூவம் மட்டுமன்று; மக்களின் மனங்களும்தான். அதன் வழி மழை மேகம் மறைத்திருந்த மனித நேயம் வெளுத்து வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எல்லாவற்றிற்கும் அடிப்படை மக்கள் காட்டிய அன்பின் நிறைவு; அருளின் தெளிவு.
—————————————-