மேகலா இராமமூர்த்தி
”யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்
பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை” என வாயூறிப் பேசுகின்றான் மகாகவி பாரதி. இந்த வரிசையிலே காலத்தால் மூத்தவர் வள்ளுவப் பேராசான். அவரை அடுத்து வருபவர் சேரமன்னனின் இளவலான இளங்கோ. இவ்விருவரின் அறக்கருத்துக்களில் சிலவற்றை ஒப்பு நோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
“சான்றோர் சான்றோர் பாலராவர்”(great minds think alike) என்பது பெரியோர் வாக்கு. இக்கருத்தை மெய்ப்பிப்பது போலவே குறளின் கருத்துக்களைப் பலவிடங்களில் எடுத்தியம்புகின்றார் சிலப்பதிகார ஆசிரியர். உதாரணங்கள் சிலவற்றை இங்குக் காண்போம்.
சிலம்பின், மதுரைக் காண்டம் விறுவிறுப்பிற்குப் பஞ்சமில்லாப் பகுதியாகும். அதில் வருகின்ற அடைக்கலக் காதையில் சமணத் துறவியான, கவுந்தியடிகள் பத்தினிப் பெண்டிரின் சிறப்பைப் பற்றி இடைக்குல முதுமகள், மாதரியிடம் கூறும்போது,
”வானம் பொய்யாது; வளம் பிழைப் பறியாது
நீணீல வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடெனும்
அத்தகு நல்லுரை அறியாயோ நீ?” என வினவுகின்றார், இஃது,
”தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை” (குறள்: 55) என்னும் திருக்குறளை நினைவுக்குக் கொண்டுவருகின்றதல்லவா?
அதுபோலவே, சிலம்பில் மற்றுமோர் காட்சி, வழக்குரை காதையில்….
ஆவேசத்தோடு தன் கணவன் கோவலன் கொலையுண்டதைப் பற்றித் தன்முன்னே சொல்லிக்கொண்டிருந்த கண்ணகியைப் பார்த்துப் பாண்டிய மன்னன் புன்சிரிப்பைச் சிந்திவிட்டு, பெண்ணே…!
“கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று!
வெள்வேற் கொற்றம்- காண்!” என்றல்லவா கூறுகின்றான். இவ்வரிகள்,
”குடிப்புறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்”(குறள்: 549) என்னும் குறட்கருத்தின் பிரதிபலிப்பாகவே தோன்றுகின்றது.
அடுத்து, சிலப்பதிகாரத்தின், ’வஞ்சின மாலை’யில் மாபத்தினி கண்ணகி, பாண்டியன் தேவியைப் பார்த்துக் கூறும் வரிகள் இவை:
“முற்பகல் செய்தான் பிறன்கேடு தன்கேடு
பிற்பகல் காண்குறூம் பெற்றியகாண்!”
என்ன விந்தை!! தெய்வப் புலவரின் தமிழ்மறையும் இதேகருத்தை “இன்னா செய்யாமை” என்னும் அதிகாரத்தில் பறைசாற்றியுள்ளது. இதோ அக்குறள் வரிகள்..
“பிறர்க் கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்.” (குறள்: 319)
சிலம்பின் ”வஞ்சிக் காண்டம்” சேரன் செங்குட்டுவன் கண்ணகித் தெய்வத்திற்குச் சிலை எடுத்த வரலாற்றை விரித்துரைக்கின்றது. அதில், மாடல மறையோன் ’யாக்கை நிலையாமையைப் பற்றியும், ’அறக்கள வேள்வி’ செய்யவேண்டியதன் அவசியத்தையும் செங்குட்டுவனுக்கு எடுத்துரைக்கும்போது…..
“நாளைச் செய்குவம் அறமெனின் இன்றே
கேள்வி நல்லுயிர் நீங்கினும் நீங்கும்” என்று செப்புகின்றான்.
இதே பொருளில் பல குறட்பாக்களை நாம் “நிலையாமை” எனும் அதிகாரத்தில் காண்கிறோமே…
அவற்றுள் ஒன்று, நம் பார்வைக்கு…..
“நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.” (குறள்: 335)
இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தது போல் அமைந்துள்ளது சிலப்பதிகாரத்தின் இறுதிப் பகுதியான ”வரந்தரு காதை”. குறளும், சிலம்பும் கைகோர்த்துக்கொண்டு ஒத்த அறக்கருத்துக்களை ஓங்கி ஒலிக்கின்ற அழகை என்னவென்பது..? தமிழன்பர்கள் அனைவரும் படித்து மகிழவேண்டிய பகுதியிது!
“தெய்வம் தெளிமின்: தெளிந்தோர்ப் பேணுமின்!
ஊனூண் துறமின்; உயிர்க்கொலை நீங்குமின்;
தானம் செய்ம்மின்; தவம் பல தாங்குமின்;
செய்ந்நன்றி கொல்லன்மின்; தீநட்பு இகழ்மின்;
———————————————————————————
கள்ளும் களவும் காமமும் பொய்யும்
வெள்ளைக் கோட்டியும் விரகினில் ஒழிமின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா” இவை வரந்தரு காதையின் வைர வரிகள்…!
இவ்வரிகளுக்கு இணையான குறட் கருத்துக்களை இனிக் காண்போம்.
வள்ளுவத்தின், “கடவுள் வாழ்த்து” தெய்வம் தெளிவதற்கு நமக்குப் பேருதவி செய்கின்றது. “நீத்தார் பெருமை” என்ற அதிகாரம், பற்றற்ற உயர்ந்தோரின்-தெளிந்தோரின் சிறப்பை வகைப்படுத்துகின்றது.
அதுபோன்று,
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா வுயிரும் தொழும்” (குறள்: 260) என ஊனூண் துறப்பதின் அவசியத்தை குறள் கூறுகின்றது. உயிர்க்கொலை அதைவிடக் கொடியது என்பதனை,
”அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்” (குறள்: 321) என்ற குறளமுதம் “உயிர்க் கொலை நீங்குமின்” என்பதன் விளக்கம் தானே?
தானம் செய்வதின் சிறப்பை “ஈகை”யும், தவத்தின் பெருமையை “தவம்” என்ற அதிகாரமும் தெளிவாய்ச் சொல்லவில்லையா?
”செய்ந்நன்றி அறிதலை”யும், ”தீநட்பின்” தன்மையையும் அறிதற்குத் திருக்குறளினும் விஞ்சிய
வழிகாட்டி உண்டோ?
”உண்ணற்க கள்ளை” எனவும், ”கள்ளாமை காக்க” எனவும் வள்ளுவப் பேராசான் நமக்கு அறிவுறுத்த வில்லையா?
“காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்” (குறள்: 360) என்பதும்,
“பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று” (குறள்: 297) என்பதும் வள்ளுவரின் வாய்மொழிகளே!
”பயனில்சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல்”(குறள்: 196) என்று பயனில சொல்லும் “வெள்ளைக்கோட்டி”யைக் கடுமையாய்ச் சாடுகின்றார் வள்ளுவர்.
அதுபோல்,
”நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு” (குறள்: 336) என்று ”நிலையாமை” குறித்த உண்மைகளையும் நெகிழ்ச்சியாய் வெளியிடுகின்றார்.
இவ்வொப்பீடுகள் வாயிலாய் நாம் அறிவது என்ன? சிலம்பில் எங்கு நோக்கினும் குறட் கருத்துக்கள் குவிந்து கிடக்கின்றன என்பது தானே!
இவ்வுயரிய கருத்துக்கள் படிப்போருள்ளங்களைப் பரவசப்படுத்துவதோடல்லாமல், வள்ளுவரின் வழித்தோன்றலாகவே இளங்கோவடிகளை எண்ணி மகிழச்செய்கின்றது!!
சான்றோரின் சிந்தனைகள் ஒத்திருப்பது உண்மையே அல்லவா!
படங்களுக்கு நன்றி:
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Puhar-ILango.jpg