பொன் வண்டு கதைக்கு மேகலா இராமமூர்த்தியின் முடிவுரை

0

பொன் வண்டு – முதற்பகுதி

பொன் வண்டு (இறுதிப் பகுதி)

                                    மேகலா இராமமூர்த்தி

…… நேரே அரசாங்க மருத்துவமனைக்கு பேருந்தை செலுத்தச் செய்தார்.

அவசர சிகிச்சை டாக்டர் (emergency physician) விரைந்து முதலுதவி செய்ய ஆரம்பித்தார். முதலில் மூக்கிலிருந்து கொட்டுகின்ற இரத்ததை நிறுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டார். மாலாவின் துணையுடன் ஒயிலாவை நிமிர்த்தி உட்காரவைத்து, அவள் மூக்கின் மேல்பகுதியில் ஐஸ்பேக் (icepack) வைத்து இரத்தத்தை நிறுத்தினார். சிறிது நேரத்தில் ஒயிலாவிற்கு நினைவு திரும்பியது. மெல்ல மெல்ல கண்களைச் சிரமப்பட்டு திறந்தவளுக்குத் தன்னைச் சுற்றித் தெரிவதெல்லாம் ஏதோ கனவுபோலவே தோன்றியது.

ஏதோ கேட்பதற்கு அவள் வாயைத் திறக்கும்முன், பயங்கரமான அழுகுரல் அவள் காதில் விழுந்தது. ஒயிலாவின் அம்மா அழுது அரற்றிக்கொண்டு அவளை நோக்கி ஓடிவந்துகொண்டிருந்தாள். அவளின் பின் ஒயிலாவின் தந்தையும் அப்பத்தாவும் கலங்கிய கண்களோடு வந்துகொண்டிருந்தனர். மஞ்சு பள்ளிக்குச் சென்றிருந்தபடியால் அவளுக்கு விவரம் ஏதும் தெரியாது. ஒயிலாவின் அருகில் வந்ததும் அவர்கள் இன்னும் பெருங்குரலில் அழ ஆரம்பித்தனர்.

அங்கு நின்றுகொண்டிருந்த டாக்டர் அவர்களை நோக்கி “ஏன் இப்படிக் கூச்சல் போடறீங்க?” கொஞ்சம் அமைதியா இருங்க, ப்ளீஸ்” என்றார். அங்கு சற்று அமைதி நிலவியது. ”யாரு கண்ணு பட்டுச்சோ எம்புள்ள மேலே, இப்படி ஆஸ்பத்திரியிலே கெடக்காளே? என்று சன்னமான குரலில் புலம்பினாள் ஒயிலாவின் தாய்.

அப்போது, டாக்டர், ஒயிலரசியின் தந்தையைப் பார்த்து “கொஞ்சம் என் ரூமுக்கு வாங்கன்னு” சொல்லிவிட்டு நகர்ந்தார். ஒருவிதப் பதற்றத்தோடு அவரைப் பின் தொடர்ந்தார் ஒயிலாவின் தந்தை. ரூமுக்குள் வந்தவுடன் டாக்டர் தன் குரலைச் சற்று தாழ்த்திக்கொண்டு “இதுபோல முன்னமே மூக்குல இரத்தம் வந்திருக்கா அல்லது இதுதான் முதல் தடவையா?” என்று கேட்டார்.

”இல்ல டாக்டர்” அவ வீட்டுல  இருக்கும்போது இதுமாதிரி  நடந்ததில்ல. காலேஜுலேயும் நடந்திருக்க வாய்ப்பில்லேன்னுதான் நெனைக்கிறேன். அப்படி ஏதாச்சும் நடந்திருந்தா எம்மக எங்கிட்ட சொல்லியிருப்பா. ஏன் டாக்டர் கேக்கறீங்க? பயப்படறதுக்கு ஒண்ணுமில்லையே? என்று கலவரத்தோடு கேட்டார்.

டாக்டர் சிறிது யோசித்தார். பயப்படற மாதிரி ஏதும் இருக்காதுன்னு தான் நானும் நெனைக்கிறேன். சில சமயங்கள்ல தலைல அடிபட்டாக்கூட மூக்கிலேர்ந்து அதிகப்படியா இரத்தம் வர வாய்ப்பிருக்கு. அதனால நாம எதுக்கும் மூளைய ஸ்கேன் செஞ்சு பாத்திடறது நல்லதுன்னு நெனைக்கிறேன். நம்ம மருத்துவமனைல அதுக்கான வசதியில்லை. அதனால சென்னையிலெ இருக்குற ஒரு பிரபலமான மருத்துவமனைக்கு சிபாரிசுக் கடிதம் தரேன். அங்க போய்ப்பாத்திடறது நல்லது என்றார்.

ஒயிலாவிற்கு பூரண ஓய்வு  தேவைன்னு டாக்டர் சொல்லி அவளை டிஸ்சார்ஜ் செஞ்சிருந்ததாலே  அவளைப் படுக்கையைவிட்டு  எழ அனுமதிக்கவில்லை அவளின் தாயும், தந்தையும். ஒயிலாவிற்குப் பொழுது போவது மிகக் கடினமாகத்தான் இருந்தது. தோப்புப் பக்கம் போகமுடியலையேன்னு அவள் வருத்தப்பட்டுக் கொண்டே படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருந்தாள்.

அப்போது பக்கத்து அறையில்  அவள் தாயும், தந்தையும் மெதுவாகப்  பேசிக்கொண்டிருந்தது அவள் காதில் விழுந்தது. அவள் தந்தை, டாக்டர் தன்னிடம் கூறிய விஷயங்களை ஒன்றுவிடாமல் அவள் தாயிடம் கூறிக்கொண்டிருந்தார். தலையில் அடிபட்டாலும் மூக்கிலிருந்து இரத்தம் வடியுமுன்னு டாக்டர் சொன்னதைக் குறிப்பிட்டு, ஒயிலா எங்கயாச்சும் கீழே விழுந்தாளா? உனக்கு ஏதாச்சும் தெரியுமான்னு அவள் தாயிடம் கேட்டுக்கொண்டிருந்தார். அப்படி ஏதும் நடக்கலியே, நடந்திருந்தா ஒயிலா எங்கிட்ட சொல்லாம இருக்கமாட்டாளே என்று தன் தாய் தன்னைப் பற்றிக் கூறிக்கொண்டிருந்தை ஒயிலா கேட்டாள். அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. நினைவுகள் பின்னோக்கிச் சென்றன.

அன்று சனிக்கிழமை. கல்லூரி விடுமுறை. வழக்கத்தைவிட வேகமாகக் காலை டிபனை முடித்துவிட்டு மான் போலத் துள்ளிக்கொண்டு தோப்புக்குச் சென்றாள் ஒயிலா. முதல் நாள் தமிழ்ப் பேராசிரியை நடத்திய “காணி நிலம் வேண்டும்” என்ற பாரதியின் பாடல் வரிகளை முணுமுணுத்துக் கொண்டு, உற்சாகத்தில் உள்ளம் துள்ளத் தோப்பையும், சிட்டுக்குருவிகளையும் காண ஆவல் கொண்டு வேகமாக ஓடினாள். திடீரென்று கால் இடறிக் கீழே விழுந்தாள். பலமாக எதன் மீதோ தலை மோதியது; உலகம் சுழன்றது. உடனே நினைவிழந்தாள்.

சிறுது நேரம் கழித்துக்  கண் விழித்துப் பார்க்கையில் தான் ஒரு பள்ளத்தில் கிடப்பதை அறிந்தாள் ஒயிலா. தலை விண், விண் என்று வலிப்பதை உணர்ந்து திரும்பிப் பார்த்தாள். தன் தலை அந்தப் பள்ளத்திலிருந்த பெரிய கருங்கல் ஒன்றில் மோதியிருப்பதை அறிந்து அதிர்ந்தாள். மூக்கிலிருந்து ஏதோ கசிவதை அறிந்து கையால் வழித்தாள். ஆ! ரத்தம் என்று கத்தினாள். இங்கு நடந்ததை அம்மா, அப்பாவிடம் தெரிவிப்பதா, வேண்டாமா என்று சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்தவள், வேண்டாம்! அவர்களிடம் சொன்னால் பயந்து போவார்கள். வீணாக அவர்களைச் சங்கடப் படுத்த வேண்டாம், என்று முடிவெடுத்து, தோப்பில் அதற்குப் பிறகு இருக்க மனமின்றி வீடு நோக்கி நடந்தாள்.

“நாளைக்கு விடிகாலையிலேயே ஒயிலாவோட கெளம்பிப் பட்டணம் போகணும், ஸ்கேன் எடுக்கணும்” என்று தந்தை, தன் தாயிடம் கூறிய வார்த்தைகள் ஒயிலாவின் பழைய நினைவுகளைக் கலைத்து அவளை நிஜ உலகிற்கு அழைத்து வந்தன.

பொழுது விடிந்தது. ஒயிலரசியும், அவள் தந்தையும் சென்னைக்குப் புறப்பட்டனர். அப்பத்தா ஓடிவந்து ஒயிலாவிற்குத் திருநீறிட்டாள். ஒனக்கு ஒரு கொறவும் வராது தாயி! என்று கண்ணீரோடு திருஷ்டி கழித்தாள். ஒயிலாவின் அன்னையும், மஞ்சுவும் சோகம் கப்பிய முகத்தோடு அருகில் நின்றனர்.

நீண்ட பயணம் ஒயிலாவை மிகவும்  களைப்படையச் செய்தது. பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டாள். இரவு உணவை ஹோட்டலில் முடித்துக்கொண்டு இருவரும் ஓர் விடுதியில் தங்கினர். மறுநாள் காலை சீக்கிரமேயெழுந்து மருத்துவமனை செல்ல ஆயத்தமாயினர். அவசர சிகிச்சை டாக்டர் தந்த சிபாரிசுக் கடித்ததைக் காட்டியதில் மருத்துவமனையில் சிறிது விரைவாகவே ஸ்கேன் எடுக்க முடிந்தது. ஸ்கேன் ரிசல்டை மறுநாள் தெரிந்துகொள்ளலாம் என அறிந்தார்கள்.

ஒயிலாவும், தந்தையும் தாம் தங்கியிருந்த விடுதிக்குத் திரும்பினர். பொழுதைப் போக்குவது சிரமமாக இருந்தது இருவருக்கும். ”அப்பா! நாம சும்மா இங்கையே ஒக்காந்திருக்காம மெரினா பீச்சுக்குப் போயிட்டு வருவோமே” என்று ஒயிலா சொன்ன யோசனையை அவள் தந்தை ஏற்றுக்கொண்டார். அன்று மாலை மெரினா பீச்சுக்குச் சென்றார்கள். ஒயிலா கடல் அலைகளோடு விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்ட அவள் தந்தை, ”கடவுளே எம்மவளுக்கு ஒரு நோயும் இருக்கப்படாது. நாளைக்கி ஸ்கேன் ரிப்போர்ட்டில் ஒரு பிரச்சனையுமில்லன்னு வரணும்” என்று கண்ணீரோடு கண்ணைமூடிப் பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்.

அப்பா! என்ற தீனமான குரலைக் கேட்டுக் கண்ணைத் திறந்தார் அவர். தன் மகள் நினைவு தப்பி மயக்கமாகியிருப்பதையும், அவள் மூக்கிலிருந்து இரத்தம் வடிவதையும் கண்டு, ”ஐயோ! யாராவது உதவிக்கு வாங்களேன்!” என்று அலறினார். சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த ஒருவர் விரைந்து வந்தார். என்ன சார்! என்ன ஆச்சு? என்று கேட்டபடியே ஒயிலாவைப் பார்த்தார். பேச இயலாமல் ஒயிலாவின் தந்தை தவித்ததைக் கண்டு, ”பாப்பாவுக்கு என்ன ஆச்சு சார்! என்று மறுபடியும் கேட்டார். ஒயிலா திடீரென்று மூர்ச்சையானதையும், அவள் மூக்கிலிருந்து இரத்தம் வடிவதையும் ஒயிலாவின் தந்தைக் கண்ணீரோடு கூறிமுடிக்க, அவர் ”கவலைப்படாதீங்க சார்! நான் ஆட்டோ டிரைவர் தான், பாப்பாவை உடனே ஆஸ்பத்திரியிலே சேத்து ட்ரீட்மெண்ட் குடுத்துடலாம்” என்றார்.

ஒயிலாவின் தந்தை கண்ணீர்  மல்க அவரைக் கையெடுத்துக் கும்பிட்டார். காலையில் ஸ்கேன் எடுத்த மருத்துவமனையின் பேரைச் சொல்லி அங்கேயே சேத்துடலாம் என்று தெரிவித்தார். ஆட்டோ விரைந்தது.

மறுபடி ஒயிலா கண்விழித்தபோது மீண்டும் தான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதை அறிந்து தனக்குத் தானே வருத்தத்தோடு புன்னகைத்துக் கொண்டாள். அருகில் தன் தந்தை அமர்ந்து தன்னையே கண்கொட்டாமல் பார்த்துகொண்டிருப்பதை அறிந்து சிரிக்க முயன்றாள். அன்று இரவு வந்த ”ட்யூட்டி டாக்டர்” ஒயிலாவின் ஸ்கேன் ரிப்போர்ட் ரெடியாகிவிட்டது என்று கூறி ஒயிலாவின் தந்தையைத் தன் அறைக்கு அழைத்தார். ”இதோ வந்துடறேம்மா” என்று ஒயிலாவிடம் சொல்லிவிட்டு அவள் தந்தை அறையை விட்டு அகன்றார்.

தன் எதிரில் நின்ற ஒயிலாவின்  தந்தையை வருத்தத்தோடு பார்த்த  டாக்டர், ”சார் மனசத் தேத்திக்குங்க, உங்க மகளோட சிறுமூளையிலே பலமான அடிபட்டு இரத்தம் கட்டியிருக்கு. ஆபரேசன் செஞ்சு குணப்படுத்தமுடியாத அளவு சேதம் பலமாயிருக்கு. எந்த நேரமும் அவங்க உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். கடவுள வேண்டிக்குங்க. மனுசங்களாலெ முடியாததைக் கடவுள் பொறுப்புலதான் விடவேண்டியிருக்கு” என்று கூறி அமைதியானார். அதைக் கேட்டு ஒயிலாவின் தந்தை சுக்கு நூறாகச் சிதறிப்போனார். ஸ்கேன் ரீப்போர்ட்டை கை நடுங்க வாங்கித் தன் பையில் மறைத்துக் கொண்டு தன் மகளிருந்த அறையை நோக்கித் தள்ளாடியபடியே சென்றார்.

ஒயிலா பட்டணத்திலிருந்து வீடு வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆயிற்று. அவள் கல்லூரி செல்ல அனுமதிக்கப் படவில்லை. எல்லோரும் தன்னைப் பரிதாபமாகப் பார்ப்பதும், அடிக்கடி வீட்டில் அழுகுரல்கள் கேட்பதும் வாடிக்கையாயிற்று. ”பயப்படும்படி ஏதும் ஸ்கேன் ரிபோர்ட்டில் இல்லை” என்று தன் தந்தை தன்னிடம் கூறினாலும், மற்றவர்கள் நடவடிக்கையால் தன் உயிருக்கு ஏதோ ஆபத்து காத்திருக்கின்றது என்பதை அந்த சுட்டிப் பெண்ணால் நன்றாக உணரமுடிந்தது.

மறுநாள் அதிகாலையில் உறக்கம் கலைந்து எழுந்த ஒயிலரசி அப்பத்தாவையும் எழுப்பி தனக்கு மிகவும் பிடித்த பால் பணியாரம் செய்து தரவேண்டும் என்று கேட்டாள். பேத்தியின் மீது உயிரையே வைத்திருந்த அப்பத்தாவும், ”அதுக்கென்ன ராசாத்தி இதோ செஞ்சுதாரேன்” என்று அடுக்களைக்கு விரைந்தாள். ”பல் தேய்ச்சுட்டு வந்து ஒரு பிடி பிடிக்கிறேன்னு” சொல்லிட்டு கொல்லைப் பக்கம் ஓடினாள் ஒயிலரசி.

அரைமணி நேரமாகியும் ஒயிலரசி  அடுப்பங்கரைப் பக்கம் வரலியே, சுட்டு வச்ச பணியாரம் ஆறிப்போயிடுமே என்று எண்ணிக்கொண்டே, ”ஒயிலா… ஒயிலாக்குட்டி!” என்று கூப்பிட்டுக்கொண்டே கொல்லைப் பக்கம் வந்த அப்பத்தா, ஒயிலரசி தரையில் விழுந்துகிடப்பதைக் கண்டு பதறியபடியே அவளருகே ஓடினாள். எந்தாயீ, ஒயிலா…ஒயிலா! என் தங்கமே எழுந்திரும்மா என்று அலறினாள். அப்பத்தாவின் அலறல் கேட்டு வீட்டிலிருந்த அனைவரும் பீதியோடு ஓடிவந்தனர். ஒயிலாவிடம் எந்த அசைவுமில்லை.

ஒயிலாவை மடியில் போட்டுக்கொண்டு உலுக்கினாள் அப்பத்தா. அம்மா… எங்கண்ணு…எழுந்திரு தாயீ! என்று மீண்டும் அரற்றினாள்.. ஒரு பதிலுமில்லை. முகத்தை நிமிர்த்திப் பார்த்தாள். மூக்கிலிருந்து வழிந்த இரத்தம் சிறிது காய்ந்திருந்தது.

பின்பு நடந்ததெல்லாம் மறக்க முடியாத நிகழ்வுகள் ஆகிப் போயின! ”பொன் வண்டு” போல அவ்வீட்டில் வளைய வந்த ஒயிலாவின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சியையும், ஈடுசெய்யமுடியா இழப்பையும் அக்குடும்பத்திற்குத் தந்தது.

உடலைவிட்டு ஒயிலரசியின்  உயிர் பிரிந்திருந்தாலும் அவள் ஆன்மா என்றும் அழிவின்றி அவ்வீட்டையும், அவள் மிகவும் நேசித்த தோட்டதையுமே சுற்றிச் சுற்றி வரும் என்பதில் சந்தேகமில்லை…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *