Tag: விஜயகுமார் வேல்முருகன்

  • தனியாக எரிகிறது

    விஜயகுமார் வேல்முருகன்

     

    இன்று ஏதோ ஒரு வித்தியாசமாகத்தான் இருந்தது சுடுகாடு.. வாசல் முழுதும் எக்கச்சக்க பூக்கள் நான்கைந்து பிணங்களின் வருகைப்போல..

    தாந்தட்டி தாத்தாவின் மகனும், பேரனுங்கூட வந்திருந்தார்கள்..

    இரண்டு தகன மேடைகளும் கொழுந்துவிட்டு எரிந்துக்கொண்டிருக்க..

    அவரவர் உறவினர்கள் அருகருகே.. தாத்தா வேர்வை மழையில் நனைந்திருந்தார்.. தகன மேடைக்கு சற்றுத்தள்ளி.. அடுத்தடுத்த இரண்டு குழிகள்..

    தாத்தாவின் மகன் ஒரு குழியிலும், பேரன் ஒரு குழியிலும் ‘சாங்கியங்களை’ முடித்துக்கொண்டிருந்தனர்..

    வியப்பாக இருந்த குமாரின் முகத்தை பார்த்து,
    வியர்வையை துடைத்தப்படி தாத்தா சிறு புன்னகை மட்டும் செய்ய சற்று தள்ளி நின்றான் குமார்..

    நேரம் ஆக ஆக.. கூட்டம் குறைய தொடங்கியது..

    அப்பொழுது “என்ன கொமாரு இங்க நிக்கிற?” என்ற குரலை கேட்டு திரும்பியவனை நோக்கி ஊர்த்தலைவர் வர.. “இங்க எதுக்குங்க தலைவரே வருவாங்க?” என்று குறும்பு சிரிப்போட கேக்க..

    “ஹா ஹா ஹா.. அதானே.. செத்தவன கொண்டுவந்து போடத்தானே வருவோம்.. சரிசரி.. கொமாரே .. கோடாங்கி அம்மா பொணத்த எரிச்சிபுட்டு கணக்கு பாக்க கிளம்புறோம்” என்று சொல்லியபடி, சாங்கிய மண்டபத்தை பார்த்து தலைவர் போக.. அவர் பின்னாடியே பறை அடிச்சவர், சங்கு ஊதி, இன்னும் சிலர் போனார்கள்..

    தாந்தட்டி தாத்தாவின் மகனும், பேரனும் கூட கிளம்பி விட்டார்கள்.. நன்றாக இருட்டி விட்டது..

    தாந்தட்டி தாத்தாவும் பானையிலிருந்த தண்ணீரை குடித்துவிட்டு “வா தம்பி கொமாரு” என அழைக்க..

    “என்ன தாத்தா இன்னைக்கி செம்ம வேட்டைப்போல” என குமார் கேட்டபடி நடந்து எதிலேயோ இடறிப்போய் விழப்போக “ஆத்தாடி.. கொமாரு” னு பதறிப்போய் தாத்தா அவனைத் தாங்கிப் பிடிக்க..

    கீழே பார்த்தால் ஓலை பாடையி்ல் ஒரு பிணம்..

    “என்னங்க தாத்தா.. இங்க ஒரு சடலம் இருக்கு? இதுக்கு யாரும் சொந்தக்காரவங்க இல்லையா?”

    “தம்பி அது யாருன்னு தெரியுதா? நல்லா உத்துப்பாருங்க” என்று சொல்லியபடியே தாத்தா தீப்பந்தத்தை எடுத்துக்காட்ட…

    “இவர எங்கேயோ பாத்தமாதிரி இருக்கே.. ஆஆஆஆங்.. வட்டிக்கட ஆனந்தன் தானே இவரு?..”குமார் கேட்க

    ” அநியாய வட்டி ஆனந்தன்னு சொல்லு தம்பி.. இவன் ஆடுன ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா.. கொஞ்சங்கூட இரக்கமே இல்லாதவன்.. வட்டிக்கு வட்டிப்போட்டு அதுபோட்ட குட்டிக்கும் வட்டிப்போட்டு எத்தன குடும்பங்கள நடுத்தெருவுக்கு தள்ளுனான் தெரியுமா..”

    “அப்படியா தாத்தா.. இவருக்கு கொழந்தைங்க இல்லைல?”

    “ஆமாந்தம்பி.. இல்லாத வரைக்கும் சந்தோசம் தம்பி.. இல்லைனா இவன் செஞ்ச பாவம் பூரா அதுங்க தலைல விழுந்திருக்கும்.. இவனோட சம்சாரம் நல்ல குணவதி.. பாவி அடிச்சி அடிச்சே பைத்தியமாக்கிட்டான்.. ஊருக்கு ஒரு கூத்தியா வச்சிருந்தும் ஒன்னுக்குக்கூட புள்ளைங்களே இல்லை தம்பி..

    உங்க தெருவுக்கு ரெண்டு தெரு தள்ளி மேற்கு தெரு இருக்கே அதுல ஒரு பெரிய மாடி வீடு இருக்கே தெரியுமா?”

    “ஆமாங்க தாத்தா.. ‘ஆனந்தம் இல்லம்’னு போட்டிருக்குமே அதானே?”

    “ம்ம்ம்.. அதேதான்..அது ஒன்னும் இவன் சொந்தமா கட்டுன வீடு இல்ல.. ராஜலிங்கம் னு ஒரு வாத்தியார் இருந்தாரு அவரோட வீடு.. ரொம்ப தங்கமான ஆளு”

    “ஆமங்க தாத்தா நான் கூட கேள்விப்பட்டுருக்கேன்.. எங்க பள்ளிக்கூடத்துல தலைமை ஆசிரியரா இருந்தார்னு போடுல எழுதி வச்சிருக்காங்க” குமார் சொல்ல..

    “அவரே தாம்பா.. இவன்கிட்ட வட்டிக்கு கடன் வாங்குனாரு.. மாசாமாசம் வட்டிய ஒழுங்கா தான் கொடுத்துட்டு வந்தாரு..

    ஒரு நாளு அசல் திருப்பிகொடுக்க, தன்னோட ஊர்ல இருந்த சொத்த வித்துட்டு வந்து பணத்த வீட்ல வச்சிருந்தாரு.. அத கேள்விபட்ட இவன் கூட்டாளிகளோட போயி அவர் வீட்ல வச்சிருந்த பணத்தை திருடியிருக்கான்..

    அத வாத்தியாரோட சம்சாரம் பாத்துட்டாங்க, அவங்கள கழுத்தை நெரிச்சி கொன்னுபுட்டான்.. அந்த நேரத்துக்கு வாத்தியாரோட பையன் வர அவனையும் கத்தியால குத்தி கொலை செஞ்சிருக்கான்.. இத பார்த்த்த அவங்க வீட்ல வேலை செஞ்சவன் ஓடிப்போயி போலீஸ்ட்ட சொல்ல.. இவன கைது செய்ய வந்தாங்க..

    கூட்டாளிகள்ல ஒருத்தன மாட்ட விட்டுட்டு இவன் தப்பிச்சுட்டான் தம்பி.. அப்பறமா .. வெளியே போயிட்டு வந்த வாத்தியாரு பொண்டாட்டி, புள்ளையும் செத்துக் கிடந்தத பாத்துட்டு நெஞ்சு வலி வந்து அவரும் செத்துபோய்ட்டாரு..

    அந்த மூனு பேரையும் அதோ அந்த எட்டி மரத்து பக்கத்துல தான் புதைச்சேன் தம்பி.. ம்ம்ம்..” என்று பெருமூச்சு விட்டார் தாத்தா..

    குமார் தாத்தாவின் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தான்..

    “ஊர்ல இருக்குறவங்க எல்லாரோடைய வயித்தெரிச்சலையும் கொட்டிகிட்டான்..

    கடைசியில புத்து நோய் வந்து முத்திப்போயி கூட இருந்த கூட்டாளிகளும் கைவிட்டுட்டு போயிட்டாங்க.. ஒரு சொந்த பந்தமும் கிடையாது .. இப்ப அனாதையா செத்துப்போயி.. ஊர்க்கார பெரியவங்க தூக்கிஇ வந்து போட்டுட்டு செய்யிறத செய்யினு பணத்தக் கொடுத்துட்டுப் போயிட்டாங்க.. இதாந்தம்பி இவனோட வாழ்க்க முடிவு” என்று சொல்லியபடி மூன்றாவது தகன மேடையில் விறகு கட்டைகளை அடுக்க, கூட குமாரும் உதவியபடி..

    கடைசியில் ஆனந்தனின் சடலத்தை தாத்தா , ஒரு குழந்தையை போல தூக்க, உதவ போன குமாரை “வேண்டாம் தம்பி.. நானே தூக்கி வச்சுடுறேன்” என்று விறகுகள் மீது வைத்து வரட்டிகளை அடுக்கி, மேலேயும் பக்கவாட்டிலும் களிமண் போட்டு மூடி ஆங்காங்கே சிறு ஓட்டைகளை போட்டு வைத்தார்..

    “யேன் தாத்தா இவருக்கு மட்டும் இப்படி செய்யுறீங்க” என்று குமார் கேக்க..

    “தம்பி.. இவன் புத்துநோய்ல செத்தவன்.. அப்படியே விறகு மட்டும் வச்சு எரிச்சோம்னா சாகாத விச கிருமிகள் காத்துல கலந்து போயிடும்..

    பக்கத்துல ஏதாவது உடம்பு முடியாத ஆளுக இருந்தாங்கனா அவங்கள தாக்கிடும்.. அதான் களிமண்ணுல ஊமத்தம், ஆமணக்கு இலைகள குளைச்சி பூசிட்டு எரிச்சோம்னா எந்த விசகிருமிகளும் வெளியேறாது” என்று சொல்லியபடி ஓட்டைகள் வழியே கற்பூரங்களை கொளுத்திப்போட.. சிறிது நேரத்தில் அனைத்து ஒட்டைகள் வழியாகவும் புகை வர உள்ளே பிணம் கொளுந்துவிட்டு எரியும் சப்தம் கேட்டது..

    “அநியாய வட்டி ஆனந்தன் கொஞ்ச நேரத்துல சாம்பலாயிடுவான்.. நாம அப்படி போய்டுவோம் தம்பி” என்று சொல்லியபடி தாத்தாவும், குமாரும் வெட்டியான் தாத்தா குடிசை நோக்கி நடந்தார்கள்.

    தனியாக எரிந்துக்கொண்டிருக்கிறது அநியாய வட்டி ஆனந்தனின் பிணம்.

    Share
  • நான் மரம் பேசுகிறேன்.!

     

     

    எண்ணிலா
    என் இலைகளால்
    மானிடனே
    உன் சுவாசத்திற்காய்
    நான் .!

    என் கிளைகளில்
    ஊஞ்சல் கட்டி
    ஆடியே சிரித்தாய்
    உன்னுடன் நானும்
    சிலிர்த்தேன்.!

    அணில் கடித்த
    பழத்தையும் உனக்காய்
    சுமந்தே நின்றேன்
    ருசித்து நீ உன்ன
    ரசித்தே நான்.!

    அன்னை மடிபோல்
    எந்தன் அடியில் உறக்கம்
    தென்றலாய் நான் வீச
    அசந்து நீ தூங்க
    அசையாமல் நான்.!

    உனக்கே என்னை
    முழுதும் அளித்தேன்
    மானிடா
    என் உயிர் மூச்சை
    மட்டும் அறுத்து விடாதே
    அடுத்து உன் வம்சத்தின்
    குலக் கொடிகளை
    காணும் ஆவலில்
    நான்..
    நான் மரம் பேசுகிறேன்.!

    விஜயகுமார் வேல்முருகன்

    Share
  • கவிதை

    விஜயகுமார் வேல்முருகன்

    அடித்துக்கொள்ளும்
    இதயத்தோடும்
    துடித்துக்கொள்ளும்
    இமைகளோடும்
    காத்திருக்கின்றேன் வாசலில்.!

    பிரசவ பார்க்கும் அறையது
    பிரசவிக்கும் அவள்
    உடலில் மட்டும் வலியோடும்
    மனதில் மிகுந்த வலிமையோடும்
    பிரசவிக்க காத்திருக்கிறாள்.!

    பிரசவம் அறையின் வாசலில்
    அவளின் நிலையில் நானும்
    உடலில் மட்டும் வலிமையோடும்
    மனதில் மிகுந்த வலியோடும்
    பிரசவத்திற்காக காத்திருக்கிறேன்.!”

    நொடிகள் கரைந்து நிமிடங்களாக
    நிமிடங்கள் கரைந்து மணிகளாக
    வேதனையின் முடிவின் அழுகை
    பிரசவித்துவிட்டாள் குழந்தையை
    நானும் எனது கவிதையை.!

    Share
  • விடியும்பொழுது

    -விஜயகுமார் வேல்முருகன்

    இரவின் கருமை மெல்லக்
    கரைந்து கொண்டிருந்தது
    கிழக்கில் எழும் செங்கதிர்களால்…

    கரைகின்ற இருளிலும்
    கரைக்கின்ற ஒளியிலும்
    கரைகின்றன காக்கை கூட்டங்கள்

    பாறையின் மீது
    பாதைகள் கண்டு
    பாதங்கள் பதித்தன எறும்புகள்

    பாவையர் வளை கைகள்
    பாவிசைக்கும் ஒலியோடு
    பார்த்து இட்டனர் கோலங்கள்

    கோலத்தின் அழகைக் காணக்
    கோளமாய் ஆதவன் உதிக்கவே
    கோவையாய்ப் பொழுதும் விடிந்தது!

     

    Share
  • பரிசம் போட வாரேன்!

    -விஜயகுமார் வேல்முருகன்

    ஒத்தக்கடைக்குப்போற
    நேர்மண்ணுபாதப் போல – ஏ(என்)
    அத்தமக மேல என்னோட
    கண்ணு பார்வ தானே

    கோயிலுக்கு நேந்துகிட்டு
    கட்டிவச்சக் காசபோல
    அவ நெனப்பத்தானே
    நெஞ்சுக்குள்ளக்
    கட்டிவச்சேன் பாசத்தால

    வெறும் ஆசையெல்லாம்
    அவமேல இல்ல
    உயிர் நேசமெல்லாம் அவமேல
    நான் என்னத்தச் சொல்ல

    வேசமெல்லாம் போட்டதில்ல
    பாசாங்கும் செஞ்சதில்ல
    நெசமெல்லாம் பேசுறேனே
    பாசமாகப் பாக்குறேனே
    நேசமுள்ள அவகிட்டதானே

    ஆத்தங்கர மேட்டுலையும்
    மஞ்சக்கிழங்கு காட்டுலயும்
    ஒதுங்கி நாம பேசவேணாம்
    உரிமையுள்ள மச்சாங்கிட்ட
    வீட்டிலேயே பேசிடலாம் பசுங்கிளியே

    வருசம் கொஞ்சம் ஓடியாச்சு
    பரிசம் போடும் நாளுமாச்சு
    கரிசக்காட்டுக் குயிலுங்கூடப்
    பரிகாசம் காட்டிக் கூவியாச்சு
    மாரிமாசம் கழிஞ்சபின்னே
    மணமுடிக்க போறேன் உன்ன!

     

    Share
  • தமிழை வளர்த்திடுவோம்!

    -விஜயகுமார் வேல்முருகன்

    தமிழகத்தில் தமிழில் பேசத் தயக்கம் ஏனடா?
    தாய்மொழி உனக்குத் தமிழே தானடா
    தமிழில் உனக்கு இல்லாத அர்த்தங்கள் ஏதடா?
    தமிழைத் தவிர்த்து அன்னியமொழியின் ஆதிக்கம் அதிகம் ஏனடா?
    தமிழகத்திலேயே தமிழில்லையென்றால்
    தமிழ் வளர்வது ஏதடா?
    தமிழ்ச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த ஊரடா
    தமிழறிஞர் பலர் புகழ் வளர்த்த நாடடா
    தமிழகப் பள்ளிகளில் தமிழின் பாடது பெரும்பாடடா
    தமிழ்ப்பெயரெதுவும் பிள்ளைகளுக்கு இல்லையே அது ஏனடா?
    தமிழைப்படி என்றநிலை போனதடா
    தமிழையும்படி என்றே நிலையும் ஆனதடா
    தற்கால நிலையது மாறவேண்டுமடா
    தன்னிகரில்லாத் தமிழதை ஏற்றம்பெற வைப்போமடா!

     

    Share
  • உனதாகும்!

    -விஜயகுமார் வேல்முருகன்

    நதிபோல் ஓடும்வாழ்வில்
    விதியே என்று ஓடாமல்
    மதியதைத் துணைக்கொண்டு
    கதியே தன்னம்பிக்கையாய்
    ஆதிமுதல் முயற்சியுடன் முன்னேறு வெற்றியது உனதாகும்!

    என்றும் தயக்கம்
    எதிலும் தயக்கம்
    என்றில்லாமல்
    எல்லாவற்றிலும் ஆர்வமாய்
    எப்பொழுதும்
    எழுச்சியுடன்
    ஏற்றமிகு சிந்தனையுனை
    ஏற்றம்பெற வைக்கும்
    என்றென்றும் வாழ்வில்!

     

    Share
  • பண்பாளரைப் போற்றிடுவோம்!

    -விஜயகுமார் வேல்முருகன்

    படைப்புகள் பல படைத்துவிட்டே
    பார்க்க ஒன்றுமறியாதார் போல்
    பாத்திறம் படைத்தோர் நிறைகுடமாய்
    பண்பு தளும்பாதிருப்பர்!

    படைப்புகள் சில படைத்ததற்கே
    பாக்களுக்கெல்லாம் அரசர்தானென்று
    பகட்டுவேடமிட்டே குறைகுடமாய்
    பண்பற்றே தளும்பிடுவர்!

    பலகனங்களைத் தோளிலும் மனதிலும் தாங்கிடுவர்
    பண்பாளர் தலைக்கனம் மட்டும் தாங்காதார்
    பண்படுத்தியே பண்ணியற்றிடுவர்-மனம்
    புண்படுத்திடப் பண்ணியற்றார் அவர்!

    பலகனங்களை நாவினில் தாங்கிடுவர்
    பண்பிலாத் தலைக்கனமதைத் தாங்கியவர்
    பண்பற்ற பண்ணினை இயற்றிடுவர்-மனம்
    புண்பட்ட நெஞ்சினை மேலும் கீறிடுவர்!

    பண்புற்ற பண்பாளரைப் போற்றிடுவோம்
    பண்பற்ற பண்பாளரல்லாதவரை ஓட்டிடுவோம்!

     

    Share
  • வெற்றியும் தோல்வியும்!

    -விஜயகுமார் வேல்முருகன்

    நூறு வெற்றிகளைப்
    பெற்றவன்தான் ஆனால்
    அதற்காக
    ஆயிரம் தோல்விகளை
    அடைந்தவன் நான்!

    வெற்றிதனைப் பெற்றதனால்
    வெறிகொண்டு தலையில்
    வைத்து ஆடவுமில்லை…
    தோல்விதனை அடைந்ததனால்
    தலைகுனிந்து ஓடவுமில்லை!

    வெற்றியும் தோல்வியும் கலந்தே
    வாழ்க்கை இங்கே இருக்கிறதே!
    தோல்வியையும் ரசித்திருந்தால்
    வாழ்க்கையது இனிக்கிறதே!!

     

    Share