பரிசம் போட வாரேன்!
-விஜயகுமார் வேல்முருகன்
ஒத்தக்கடைக்குப்போற
நேர்மண்ணுபாதப் போல – ஏ(என்)
அத்தமக மேல என்னோட
கண்ணு பார்வ தானே
கோயிலுக்கு நேந்துகிட்டு
கட்டிவச்சக் காசபோல
அவ நெனப்பத்தானே
நெஞ்சுக்குள்ளக்
கட்டிவச்சேன் பாசத்தால
வெறும் ஆசையெல்லாம்
அவமேல இல்ல
உயிர் நேசமெல்லாம் அவமேல
நான் என்னத்தச் சொல்ல
வேசமெல்லாம் போட்டதில்ல
பாசாங்கும் செஞ்சதில்ல
நெசமெல்லாம் பேசுறேனே
பாசமாகப் பாக்குறேனே
நேசமுள்ள அவகிட்டதானே
ஆத்தங்கர மேட்டுலையும்
மஞ்சக்கிழங்கு காட்டுலயும்
ஒதுங்கி நாம பேசவேணாம்
உரிமையுள்ள மச்சாங்கிட்ட
வீட்டிலேயே பேசிடலாம் பசுங்கிளியே
வருசம் கொஞ்சம் ஓடியாச்சு
பரிசம் போடும் நாளுமாச்சு
கரிசக்காட்டுக் குயிலுங்கூடப்
பரிகாசம் காட்டிக் கூவியாச்சு
மாரிமாசம் கழிஞ்சபின்னே
மணமுடிக்க போறேன் உன்ன!