Blog

  • அண்ணாவின் சாதுர்யம் | மறவன்புலவு சச்சிதானந்தன்

    அண்ணாவின் சாதுர்யம் | மறவன்புலவு சச்சிதானந்தன்

    அறிஞர் அண்ணா உடனான தம் சந்திப்புகளை, அனுபவங்களை நம்முடன் பகிர்கிறார் மறவன்புலவு சச்சிதானந்தன். ஒரு சிக்கலை எப்படி அணுகுவது, எப்படித் தீர்ப்பது என்பதில் அண்ணாவின் சாதுர்யத்தை இதில் விளக்குகிறார்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • S V Sahasranamam

    Baskar Seshadri

    SV Sahasranamam Centenary academy Celebrated a small function on the eve of his 109th Birthday today. The Venue was PS High school, Mylapore. SVS Started his career when he was in the teen age after leaving the House since he was not interested in his education.

    He groomed himself to a greater actor with versatile performances and he portrayed all the roles. Almost all old actors of those days preferred to have him in their movies for the stellar acting that was very natural. His voice was an added advantage and his love on Dramas grew much which lead him to start the famous Seva stage.

    In today’s Programme his family and lover of fine arts participated. who can Forget his marvellous performance in Policekaran Magal of Ace Director Sridhar?

    Drama artist Mouli, Venkat, Justice Suresh Kumar, Sachu, TKS Kalaivanan Participated in the function and shared their memories of Sahasranamam.

    National Pictures Perumal and AV Meyyappan gave a big opportunity to him in Parasakthi a 1952 Release which became a blockBuster with Dialogues Penned By Karunanidhi (Inset Picture).

    This versatile Performer Passed away in 1988 when he was 75.

    Share
  • படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 22

    படித்தேன்! சுவைத்தேன்! பகிர்ந்தேன்! – 22

    முனைவர் ச. சுப்பிரமணியன்

    ‘நீர்க்குமிழி’ கவிதை : துரை வசந்தராசன்
    மொழிபெயர்ப்பு: பொன்னுசாமி திருநாவுக்கரசு

    முன்னுரை

    ‘பிறநாட்டுச் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்’ என்பதை முன்னிறுத்தித் ‘திறமான புலமையினில் வெளிநாட்டார் அதை வணக்கம செய்தல் வேண்டும்’ என்பதைத் தொடர்ந்து சொல்வான் பாரதி. நாம் இரண்டினையும் தவறியும் செய்துவிடக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்து பன்றிக்குட்டிகளாய் கவிதைக் குட்டிகளைப் போட்டுக் கொண்டிருக்கிறோம். சிங்கக் குருளையைப் போல கவிதைகள் சில முகநூலில் வருவதைக் காணமுடிகிறது. தம்பி வசந்தராசன் ஒரு சிங்கம். அன்னாருடைய ‘நீர்க்குமிழி’ என்னும் கவிதையைக் கண்ணுற்றபோது அறிஞர் பொன்னுசாமி திருநாவுக்கரசு அவர்களின ஆங்கில மொழி பெயர்ப்பையும் கவனிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.  இருகோப்பை கனிரசத்தை ஒரு கோப்பையில் அருந்தும் பேறு பெற்றேன்.

    அசலும் நகலும்

    முதனூல் வழிநூல் சார்பு நூல் என்று நூலகள் மூவகைப்படும். முதனூலின் மொழிபெயர்ப்பு வழிநூல் ஆகாது. மூலத்தின் சாரத்தை உள் வாங்கிக்கொண்டு தன்னை வெளிப்படுத்தும் தனித்தன்மையோடு செய்யப்படுவதே வழிநூலாகும். கம்பராமாயணம் இதற்குப் பொருத்தமான சான்றாகலாம். மொழிபெயர்ப்பு என்பது வழிநூல் ஆசிரியனுக்கு இடம் கொடுக்காது.  காரணம் அவ்வாறு இடம் கொடுத்தால் முதநூலில் சிறந்தது சிதைவு பெறும். சிதைந்தது சிறப்புறும். மேலும் இது முதனூல் ஆசிரியன் உரிமையில் தேவைற்ற தலையீடாகும்.  எனவே இருப்பதை அப்படியே மொழிமாற்றம் செய்வதுதான் மொழிபெயர்ப்பு எனப்படும்.

    மூலக்கலவை மொழிபெயர்ப்பு

    இருப்பதை அப்படியே பெயர்த்தெழுவதுதான் மொழிபெயர்ப்பு என்று முந்தைய பத்தியில் சொல்லப்பட்டது. அப்படிச் செய்தால் செய்திகள் பரிமாறப்படுமேயன்றிக் கவிதை மணமோ, கற்பனை வளமோ வெளிப்பட வாய்ப்பில்லை. மூலத்தின் சாரத்தை முற்றிலுமாக உள்வாங்கிக் கொண்டு, பெயர்த்தெழுதும் மொழிமரபுக்குப் பெருமை உண்டாகும் வகையில் செய்யப்படுவதுதான் மொழி பெயர்ப்பு. ராபர்ட் பிராஸ்டு என்னும் கவிஞன் எழுதிய கவிதை வரிகள் இப்படி அமைந்திருக்கின்றன.

    The woods are lovely dark and deep
    But I have promises to keep
    And miles to go before I sleep
    And miles to go before I sleep

    இந்த நான்கு வரிகளை அறிஞர் ஒருவர் எப்படி மொழி பெயர்த்திருக்கிறார் தெரியுமா?

    வளமிகு காடுகள் வாவென அழைக்கும்!
    ஆயினும் எனக்கோ ஆயிரம் கடமைகள்!
    துயில்கொளுமுன்பு முடித்திடல் வேண்டும்!
    தொலைவோ பல கல் நடந்திடல் வேண்டும்!

    என்று மொழி பெயர்த்திருக்கிறார் மூலத்தில் . காடுகளின் வளப்பம் சொல்லப்பட்டிருக்கிறதேயன்றி அவை கவிஞனை அழைப்பதாக இல்லை. ஆனால் மொழிபெயர்ப்பில் தத்துவச் சாரத்தை உள்ளடக்கித் தன் இறுதிக் காலத்தை எண்ணிய கவிஞன் பாடுவது போல் காடுகள் அழைப்பதாக மொழிபெயர்த்திருக்கிறார். ‘Promises’ என்ற பன்மையைத் தமிழ் வழக்கியல் மரபுக்கேற்ப ‘ஆயிரம் கடமைகள்’ என மொழி பெயர்த்திருக்கிறார். ஒன்பது வாசல் உடலுக்கு ஆயிரம் வாசல் இதயம் என்று கண்ண்தாசன் பாடவில்லையா? ஒரு ஜென்மமே சமாளிக்க முடியாத போது ஆயிரம் ஜென்மங்கள் என்று படம் வரவில்லையா? ஒரே நிலவை ஆயிரம் நிலவே வா என்று புலமைப்பித்தன் ;அழைக்கவில்லையா? இந்த மரபு மொழிபெயர்ப்பாளருக்குத் தெரிந்திருக்க வேண்டும். இவருக்குத் தெரிந்திருக்கிறது. And miles to go before I sleep என்னும் தொடரை மூலத்தின் கருத்து கூடுதலை வலிமை பெறுமாறு இருவகையாக மொழிபெயர்த்து எழுதிய திறனை எத்தனைப் பாராட்டினாலும் தகும். ‘நாளது சின்மையும் இளமையது அருமையும்’ என்பதுபோல முரண்பாடுகளை மொழிபெயர்க்கும் பேராற்றல் இது. இளமைக் காலம் மிகக்குறைவு. ஆனால் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசைகள் பல கோடி! அதுபோல முடிக்க வேண்டிய கடமைகளும் அதற்கான வாழ்நாளும் முரணாக உள்ளன என்பதை அந்த ஒரே தொடர் உணர்த்துவதாகக் கருதி மொழிபெயர்த்திருக்கும் அருமை!

    மொழிபெயர்ப்புச் சிக்கல்

    எவ்வளவு தான் மூலத்திற்கு ஏற்ற சொற்களைப் பிறமொழிகளில் கண்டாலும் சொற்றொடர்களையும் மரபுத் தொடர்களையும் கையாள்வது பெருஞ்சிக்கலாகும். சான்றாகக் ‘கற்பு’ என்பதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இயலாது. ‘பாவாடை தாவணியில் பாரத்த உருவமா? என்பதை எப்படி ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது? ‘தொழுது’ என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் சொல் இல்லை. தொழுது என்பதை மண்டியிடுதல் என்ற அளவிலேயே மொழி பெயர்க்க இயலும். உண்மையில் தொழுது என்பது மனத்தால் தொழுவது. அறிஞர்களோ WORKSHIP’ ‘BEND’ ஆகிய சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒரு மொழிபெயர்ப்பைப் பாருங்கள்.

    தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை

    No god adoring low she bends her lord
    I hen rising serves the rain falls instant at her word

    மொழி பெயர்ப்பாளர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகித்தான் இதனை மொழிபெயர்த்திருக்கிறார் தெய்வத்தைத் தொழ வேண்டியதில்லை என்பதற்கு ‘No god adoring’ என்று தெளிவாகக் கூறுகிறார். சிறப்பாகக். கணவனை ‘lord’ என்கிறார். உடனடியாக மழைபெய்யும் என்பதையும் சரியாகவே மொழி பெயர்த்திருக்கிறார். அவருக்கு எங்கே சிக்கல் வருகிறது என்றால் தொழுதெழுவாள் என்பதில்தான்! திருவள்ளுவரின் மரபு சார்ந்த சொல்லாட்சி அது. ‘Bend’ என்னும் ஆங்கிலச் சொல் முதுகோடு தொடர்புடையது. இடுப்போடு இயைபுடையது. சைக்கிள் சக்கரத்திற்குக் கோட்டம் பார்க்கலாம். வளைவுகளை (bend) எடுக்கலாம். மனத்திற்கும் அதற்கும் தொடர்பு கிடையாது. கோணல் மனம் என்று மொழி பெயர்க்க முடியாது. எனவேதான் உச்சபட்சமாக ‘bend her lord’  என்று மொழி பெயர்த்திருக்கிறார்.  உண்மையில் கொழுநன் தொழுதெழுவாள் என்பதற்கு bend her lord என்பது பொருளாகாது. ஆனால் ஆங்கிலத்தில் அவ்வளவுதான் முடியும். இது ஆங்கிலத்திற்கும் பொருந்தும். ஒரு சான்று ‘A BIRD IN THE HAND IS WORTH TWO IN THE BUSH’ என்பது ஆங்கிலப் பழமொழி. இதனைப் பொந்துக்குள் இருக்கும் இருபறவையைவிடக் கையிலிருக்கும் ஒரு பறவையே மேல் என்பது சரியான மொழிபெயர்ப்பே!  ஆனால் பண்பாட்டுக்குகந்த மொழிபெயர்ப்பாகாது. எனவே நாம் என்ன செய்கிறோம்? ‘மரத்தில் இருக்கும் பலாக்காயைவிடக் கையிலிருக்கும் களாக்காயே மேல்’ .என்று வழமை பாராட்டுகிறோம்.

    மொழிபெயர்ப்பினால் உண்டாகின்ற பயன்

    உண்மையில் மொழி பெயர்ப்பை உலக இலக்கிய அறிமுக முயற்சி எனலாம். பைபிளும் குரானும் தமிழில் வந்திருக்கவில்லையென்றால் இறைத்தூதர்களின் அறிவுரைகளை நாம் கற்றிருக்க முடியாது. இதனால் சமயத்தால் ஒன்றுபட்டு மொழியால் வேறுபட்டிருப்பவர்கள் அடைந்த, அடைகின்ற, அடையப்போகும் பயன் எண்ணிறந்தன. விவிலியத்தைக் கற்பதற்கு ஒவ்வொருவனும் இலத்தீனையோ அராமைக்கையோ கற்க வேண்டியிருந்திருக்கும். அரபி மொழி தெரிந்தாலேயொழிய குரான் என்னும் மறையை நாம் உணர்நதிருக்க இயலுமா? இவ்வளவு பெரிய பணியைச் செய்வது மொழி பெயர்ப்பே!. வேதங்கள் இலக்கியங்கள் அல்ல. இலக்கியத்தில் சிக்கல்கள் வேறுமாதிரி அமைந்து விடும். உள்ளதை உள்ளவாறே சொல்லுவது சமய இலக்கியங்கள். உள்ளதை உணர்ந்தவாறு சொல்லுவது மொழி இலக்கியங்கள்.! படைப்பாளன் உணர்ந்தவற்றை மொழிபெயர்ப்பாளன் உணரவேண்டுமானால் படைப்பாளனாக மாறினாலே ஒழிய நடவாது. படைப்பாளன் எந்தத் தளத்தில் சஞ்சாரம் செய்தானோ அந்தத் தளத்தில் சஞ்சாரம் செய்தாலேயொழிய மொழிபெயர்ப்பு வெறும் எழுத்துக்களின் வேற்று வடிவங்களாகவே முடியும். பல மொழிபெயர்ப்புக்கள் அப்படித்தான் முடிந்து போயிருக்கின்றன. விதிவிலக்காகச சிலர், தன்னலம் கருதாது, தாயமொழிக்கு ஏதாவது செய்யவேண்டுமே என்ற நல்ல எண்ணத்தில் இந்தப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அப்படிக் கொண்டவர்களில் புகழ் விரும்பாப்  பொன்னுசாமி திருநாவுக்கரசும் ஒருவர். வசந்தராசன் கவிதைகளைத் தாய்மொழியில் சுவைத்து வந்த நான் முதன் முறையாக ஆங்கில மொழிபெயர்ப்போடு படிக்கும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறேன்! அந்த மொழிபெயர்ப்பின் அருமை பற்றிய சில செய்திகளை இந்தக் கட்டுரை எடுத்துரைக்க முயல்கிறது.

    வாழ்க்கை போல நீர்க்குமிழி

    ‘பொருளே உவமம் செய்தனர் ஆயினும் மருளறு சிறப்பின் அஃதுவமமாகும்’ என்பது தொல்காப்பியம். உவமத்தால் பொருள் விளக்கம் செய்வது இயல்பு. மாறாகப் பொருளால் உவம விளக்கம் செய்தால் என்ன ஆகும்? பொருள் உவமப்பணியைச் செய்யும். உவமம் பொருளாகி நிற்கும். ‘நீர்க்குமிழி’ என்பது புகழ் பெற்ற திரைப்படம். அந்தப் படத்தில் சுரதா எழுதிய பாடல்கள் உண்டு. அதில் ஒன்றின் சரணம் இப்படி அமைந்திருக்கும்.

    பிறந்தோம் என்பதே முகவுரையாம்
    பேசினோம் என்பதே தாய்மொழியாம்
    மறந்தோம் என்பதே நித்திரையாம்
    மரணம் என்பதே முடிவுரையாம்

    நிலையற்ற வாழ்க்கையை நான்கே வரிகளில் சுரதா தமக்கே உரிய மொழியாளுமையுடன் எழுதியவை இவை. இதன் தாக்கத்தைப் பின்னாலே வந்த அத்தனைக் கவிஞர்களிடத்தும் காணமுடியும். ‘சட்டி சுட்டதடா கைவிட்டதடா’ என்பார் கண்ணதாசன். ‘ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே! என்பார் பட்டுக்கோட்டையார்.

    சேவை செய்யும் தியாகி சிருங்கார போகி
    ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
    எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
    நம் வாழ்வில் காணாச் சமரசம் உலாவும் இடம்

    என்பது மருதகாசியின் வரிகள் .பாடுபொருள் நீர்க்குமிழி ஆனதால் வசந்தராசன் வாழ்க்கையை உவமமாக்கிவிடுகிறார். இது ஒரு நுண்ணியம். இந்தப் பாடலைக் கண்ணுறும் பலரும் பாட்டின் தலைப்பு ‘வாழ்க்கை’ என்றே  கருதுவர்!. அல்ல!. பாட்;டின் தலைப்பு ‘நீர்க்குமிழி’. இயற்கையைப் பாடுகிறார் கவிஞர்;. உயர்திணைப் பண்புகளை அதன் மீது ஏற்றி ஒப்பற்ற பாடலைப் படைக்கிறார் வசந்தன்.

    கருவில்லா நீர்முட்டை!கானல் கோடு!
    கட்டிவைத்த காற்றுப்பை! ஓடம் போகி!
    துருப்பிடிக்கா ஆசைகளின் தூரச் சொந்தம்!
    தொட்டாலே தனைமாய்க்கும் ரோசக் காரி!
    விருப்புற்று காணுகிற நேரந் தன்னில்
    விளையாட்டுக் காட்டிவைத்துவானத் தோகை
    உருள்விழிக்குள் உள்வாங்கி எடுத்துப் போகும்
    ஊர்வலமே நீர்க்குமிழி!வாழ்க்கை போல.!”

    முட்டை என்றால் கருவிருக்கும். கரு இருந்தால்தான் அது முட்டை. நீர்க்குமிழி முட்டைதான். ஆனால் அதில் கருவில்லை. கானலைக் கண்ணால் காணலாம். தொட முடியாது. பானிபூரியைப் போல் நீரின் மீது தவழ்ந்து வரும் நீர்க்குமிழி ஒரு காற்றுப்பை என்கிறார். ஓடத்தைப் போல் பயணம் செய்வதால் ஓடம் போகி என்கிறார். ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே ஒடம் போலே வாழ்ந்திடுவோமே வாழ்நாளிலே’ என்ற கண்ணதாசன் வரிகளைச் செரித்துக் கொண்டவர்களுக்கு வசந்தராசன் நீர்க்குமிழியை வாழ்க்கையாக உவமித்த நுண்ணியம் புரிவது எளிது. இந்த விருத்தத்தில் கவிதை மணம் அனைத்து வரிகளிலும் கமழ்ந்தாலும்

    துருப்பிடிக்கா ஆசைகளின் தூரச் சொந்தம்!
    தொட்டாலே தனைமாய்க்கும் ரோசக் காரி!

    என்னும் இரண்டு வரிகள் குறிப்பிடத்தக்கன. நீர்க்குமிழியை உயர்திணைப் பத்தினியாக்கிக் காற்றின் வாசம் பட்டாலே உடைந்துவிடும் ரோசக்காரி எனப்பாடியிருப்பது இலக்கணத்தில் அருமையான உருவக அணி. இலக்கியத்தில் அற்புதமான தொடர்! இந்தக் கவிதையை இப்படி மொழி பெயர்த்திருக்கிறார் திருநாவுக்கரசு.

    A water egg without an embryo ! A line mirage !
    A bonded bag of Air ! A ferrying aftermath !
    A distant kinship of un-corroded desire !
    A miffed lady who perishes by the touch itself !
    A show-off of Sky’s feather by play
    When seen at longing times !
    Only a Parade of enclosed takeaway
    In the rolling eyes,… akin to Life !

    பாட்டின் முதல் இரண்டு வரிகளின் மொழிபெயர்ப்பு இயல்பாக அமைந்திருப்பதைக் காணலாம். மூன்றாவது மற்றும் நான்காவது வரிகளை மிகக் கவனமாகக் கையாள்கிறார் திருநாவுக்கரசு. அவர் வேதியல் படித்தவர் என்பதை நினைவில் வைக்க வேண்டும். A distant kinship of un-corroded desire ! ‘சொந்தம்’ என்பதற்கு ஆங்கிலத்தில் பல சொற்கள் இருந்தாலும் ‘kinship’ என்பதையும் ‘துருப்பிடிக்காத’ என்பதற்கு மிகப் பொருத்தமாக ‘un-corroded’ என்ற சொல்லையும் கவனமாகக் கையாண்டு மூலத்தின் சாரம் சொரிகிறார்.

    விருப்புற்று காணுகிற நேரந் தன்னில்
    விளையாட்டுக் காட்டிவைத்துவானத் தோகை

    என்னும் இரண்டு வரிகளை முன்பின்னாக ஆக்கி, பாட்டின் பொருளுக்கான தெளிவைக்  கூடுதலாக்குகிறார் திருநாவுக்கரசு.

    A show-off of Sky’s feather by play
    When seen at longing times !

    வசந்தராசன் எதுகைக்காக அமைத்த கட்டுமானத்தை செறிவாக்கியிருக்கிறார் திருநாவுக்கரசு. இந்த மொழிபெயர்ப்பை மீண்டும் தமிழாக்கினால்,

    விருப்புற்று காணுகிற நேரந் தன்னில்
    உருள்விழிக்குள் உள்வாங்கி எடுத்துப் போகும்

    என்று அமைந்துவிடும். விடவே ‘காணுகிற நேரந்தன்னில்,உருள்விழிக்குள் உள்வாங்கி எடுத்துப்போகும்’ எனத் தொடர் நின்று  காணுகிற நேரத்திற்கும் எடுத்துப்போகும் நேரத்திற்குமான இடைவெளியைக் குறைப்பது உணர்க. மொழிபெயர்ப்பு,  மூலத்தைப் பின்னுக்குத் தள்ளும் இடங்களில் இதுவும் ஒன்று.

    மழை நடத்தும் மாநாடு

    இடி இடிப்பதை மழைக்கு வானம் கைதட்டி மகிழ்வதாகக் கற்பனை செய்வார் வைரமுத்து. தம்பி வசந்தராசன் வேறுவகையாகக் கற்பனை செய்கிறார். மழைநீர்ச் சொட்டு மண்ணில் ;விழுகிறது. சிறு சிறு துளைகள் உருவாகின்றன. நம் கண்ணுக்கு இதுதான் தெரியும். கவிஞன் கண்ணுக்கு மண்துளைகள் தொண்டர் படைகளாகத் தோன்றும். மழை மாநாடு நடத்துகிறதாம். மணலிலே தொண்டர்படை காத்திருக்கிறதாம். அருமை!

    மண்மீதில் மழைநடத்தும் மாநாட் டிற்கு
    மணல்பூத்த தொண்டர்படை! நீர்ப்ப ரப்பில்
    கண்பூத்த போல்காலாட் படைந டத்திக்
    காட்டுகிற ராணுவம்போல் ஆடும் காற்று!

    இந்தப் பகுதியை மொழிபெயர்ப்பாளர் எப்படி எழுதியிருக்கிறார் பாருங்கள்!

    A devoted army.., blossomed by the sand
    For the symposium conducted,
    By the rain on the soil’s watery surface !
    A dancing wind, like an army’s infantry

    இந்தப் பகுதியிலும் அடியை மாற்றி அமைத்துக் கொள்கிறார். மணல் பூத்த தொண்டர் படை என்பதை மழைநடத்தும் மாநாட்டிற்கு மணல் வாழ்த்துரைக்க வநதிருப்பதாகக் கற்பனை செய்கிறார். தமிழில் வசந்தராசன் கற்பனை அப்படி. ஆங்கிலத்தில் இப்படி! மொழி பெயர்ப்பு வெற்றி பெறுகிற இடங்களில் இதுவும் ஒன்று. தொண்டர் படை என்பதை ‘devoted army’ என்று பெயர்த்தெழுதுகிறார். ‘மாநாட்டை’ என மோனைக்காக வசந்தராசன் எழுத, ஆய்வரங்கம் என்னும் பொருள்படும் ‘symposium’ என்னும் சொல்லை திருநாவுக்கரசு பயன்படுத்துகிறார். கைதட்டலுக்காகக் கூடுவது மாநாடு. கருத்துக்களின் சங்கமம் ஆய்வரங்கம். கலைவதற்காகவே கூடுவது மாநாடு!. கூடிக் கலைவது ஆய்வரங்கம்! நீர்க்குமிழிகளின் மாநாடு வாழ்க்கைத் தத்துவத்தை ஆராய்கிறது என்பதை மூலவரும் உணர்ந்திருக்கிறார். உற்சவ மூர்த்தியும் உணர்ந்திருக்கிறார்.

    காலாட்படை என்பதை ‘army’s infantry’  என்று ஆங்கிலத்தில் எழுதுகிறார். காலாட்படை என்பது இரண்டாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த சொல். ‘Infantry battalion’ தற்போது வழக்கத்தில் உள்ள சொல். கண்பூத்தது போல் காலாட்படை வந்ததை That blurs the sight by its parade !  என்று அருமையாக மொழிபெயர்க்கிறார். ‘கண்பூத்தது’ என்பது மரபுத் தொடர;. அதற்கு இணையான ’blurs the sight’ தொடரை ஆங்கிலத்தில் உருவாக்கிக் கொள்கிறார்.

    பொன்பூத்த வயலெனினும் ஒருவாள் வந்து
    பொட்டென்று வரப்புடைத்துப் போகும் நாளில்
    விண்பூத்து விழும்காலில்! வாழ்க்கை யென்னும்
    வயல்பூத்த நீர்க்குமிழி அதனைப் பேசும்!

    என்னும் நான்கு வரிகளை

    A Day when bunds are collapsed
    Suddenly by a sword
    In the fields that, even, yield the gold,
    The sky’ll bloom and fall at the feet !
    That time the water bubble,
    That bloomed in field of Life,
    Will speak !

    என்று பெயர்த்தெழுகிறார். வசந்தராசன் ‘வரப்பு’ என்றதை நாவுக்கரசர் bunds என்கிறார். விண்புத்து காலில் விழும் மழைத்துளி’ என வசந்தராசன் எழுத, அதனை, ‘The sky’ll bloom and fall at the feet!’ என்று  பெயர்த்தெழுகிறார் அரசு. ஆங்கில மரபும் மொழிபெயர்ப்பு மந்திரமும் கைவந்தவர்க்கே ஒல்லும் அரிய திறன் இது. அடுத்த வரியை இன்னும் அழகாக மொழிபெயர்க்கிறார்.  ‘இத்தகைய அரிய காட்சி நிகழும் பொழுதில் வாழ்க்கையெனும் நீர்க்குமிழி பேசும்’ என்றெழுதுகிறார் ஒரு வரியில் மூலக்கவிதை சொன்னவர். மொழிபெயர்த்தவர் என்ன சொல்கிறார் தெரியுமா?

    That time the water bubble,
    That bloomed in field of Life,
    Will speak !

    ‘வாழ்க்கைக் கழனியில் மலர்ந்த நிகழ்வுகளாகிய நீர்க்குமிழிகள் அதனைப் பேசும்’ என்று மொழிபெயர்க்கிறார். கையில் ஏந்திய கார்த்திகை தீபத்தைக் காற்றால் அணைந்துவிடாமல் பாதுகாப்பாக முற்றத்தில் இறக்கி வைக்கிற ஒரு அடியவளின் முயற்சியை நான் இந்த மொழிபெயர்ப்பில் காணுகிறேன்.

    முத்தமிட்டு வாழ்ந்தால்தான் வரலாறாகும்

    தாங்க முடியாத வலியின் காரணமாகவும் எதிர்மறை மன அழுத்தங்களின்  காரணமாகவும் நம்மிடத்திலிருந்து வெளிப்ப்டுவது முக்கல். முனகல். பெருமூச்சு!. இந்தப் பண்புகளை நீர்க்குமிழிக்கு ஏற்றி நெட்டிவரும் நெடுமூச்சின் எச்சில்’ என்கிறார் கவிஞர். பொருத்தமான  சொற்களைப் பொறுக்கி எடுத்து, ‘Spittle of lengthened groan sigh என்று எழுதுகிறார் அரசு! ‘காலம் நெய்து வரும் காற்றாடை நூல் முடிச்சு’ என்னும் நுண்ணிய வரியை The Time !  Threaded knot of weaving wind’s robe ! எனக் கவிதையிலக்கணம் மாறாமல் மொழி பெயர்க்கிறார்.

    முட்டிவரும் நீர்காற்று இருக்கு மட்டும்
    முத்தமிட்டுக் குமிழ்நீரின்பயணம் நீளும்!

    என்னும் இரண்டு வரிகளை

    “Lengthened will be the travel
    Of the water bristle with the kisses
    Till the butting moisture air survives ! “

    என்று மொழி பெயர்த்திருக்கிறார். ‘Moisture’ என்பது பனிக்காலத்தில் சன்னலின் கண்ணாடியில் படிந்திருக்குமே சிறிய நீர்த்துளிகள் அவை போன்றவை.  வாழ்க்கைச் சின்னஞ்சிறு கண்ணிகளால் தொடுக்கப்பட்ட மாலை. ஒவ்வொரு கண்ணியிலும் வாழ்வு ஊசலாடுகிறது. அந்த ஊசலாட்டத்தை நிறுத்திக் கொஞ்சம் கொஞ்சமாக அனுபவித்தால் முழுமையான மாலையின் மணத்தை நுகர முடியும். குடிப்பவன் கூடக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தால்தானே மகிழ்ச்சியடைகிறான்! இந்த சின்னஞ்சிறு நீர்த்துளிகள் இருக்கிறவரைதான் இந்தக் கோலமும் அழகும். இந்தத் துளிகள் மிகவும் மென்மையானவை. எந்த அளவுக்கு மென்மையானவை என்பதை அடுத்த வரிகளில் சொல்லுகிறார் வசந்தராசன்!

    தொட்டுவிட்டால் பட்டென்று உடைந்து போகும்
    தோற்றமுடி வெல்லாமே கரைந்து போகும்!”

    தொட்டுச் சுருங்கினால் கூட விரித்துக் கொள்ளலாம். ஆனால் வாழ்க்கை தொட்டவுடன் உடைந்துபோகும் நீர்க்குமிழியையொத்தது. இந்தப் பாட்டில் வாழ்க்கையை உவமமாக்கிய நுண்ணியம் இதுதான். வாழ்க்கையின் எந்தக் கூறும் சிதிலத்திற்கு ஆளாகிவிடக் கூடாது, சிறு சலசலப்பும் வாழ்க்கைப் பாதையைப் புரட்டி விடும். ஒரு சிறு ஐயம் வாழ்க்கையை நாசமாக்கிவிடும்;. ஒரு சிறு சொல் வாழ்க்கையைச் சிதறடித்துவிடும்.  ஒரு சிறிய நம்பிக்கைத் துரோகம் காலத்திற்கும் கேடு விளைவித்துவிடும். அது போல ஒரு மெல்லிய காற்றின் துகள் பட்டாலே உடைந்து போகும் பனித்துளி என்கிறார் தருமொழிக் கவிஞர். அதனைப் பெறுமொழிக் கவிஞர் எப்படி. மொழிபெயர்க்கிறார் தெரியுமா?

    “By the touch, suddenly breaks in sway !
    The Origin and End, all melt away! “

    தோற்றம் ;முடிவு என்பதற்கு ‘The Origin and End’ என்ற சொற்களை இணைத்துக் கொள்கிறார்.  கரைந்து போகும என்பதை melt away எனச் சொல்லிக் கவிதையின் அடர்த்தியைக் கூட்டுகிறார்.

    மொட்டவிழும் நேரம்தான் சருகாய் மாற!
    முத்தமிட்டு வாழ்ந்தால்தான் வரலா றாகும்!”

    என்னும் இறுதிவரிகளும் பொருள் பொதிந்தவை. வாழ்க்கை உருவெடுக்க நாள் வேண்டும். திங்கள் வேண்டும். ஆண்டுகள் வேண்டும். ஆனால் அதனை முடித்துவைக்க நொடிகள் போதும். அந்த நொடியை மொட்டவிழும் நேரம் என அளவிடுகிறார் மூல ஆசிரியர்.

    Time to get transformed as A Dry Leaf
    Is nothing but the time
    For the bud to spread its leaves !
    History, it becomes
    Only When Life is lead with kisses !

    என்னும் மொழிபெயர்ப்பில் மரபை வெல்ல முடியாமல் மொழிபெயர்ப்பாளர் சிக்கிக் கொள்வதையும காண முடிகிறது. ‘சருகு’ என்பதற்கு ‘dry leaf’ என்னும் மொழிபெயர்ப்பு ஒருசார் பொருளை உணர்த்துகிறதே அன்றி தமிழ் மரபிலிருந்து வெகுதொலைவு சென்றுவிடுவதைக காணலாம். வாழைச்சருகு, வெற்றிலைச் சருகு என்ற அளவில் இந்த மொழி பெயர்ப்பு சரியே. இலையின் பருவங்களுக்கு அது அவ்வளவாகப பொருந்தாது. தமிழில் இலையின் பருவங்கள் அதன் வளர்ச்சி நிலைகளையும் வாழ்வு நிலைகளையும் உணரத்தும். ஆங்கிலத்தில் இயலாது. அது அந்த மொழியின் இயல்பு. அவ்வளவுதான்.  மொழிபெயர்ப்பாளரின் இயலாமை அன்று. இலைக்கு ஒரு பண்படை சேர்த்துச் சொல்ல வேண்டியது மொழிபெயர்ப்பாளரின் கடமையாக இருக்கிறது. ஆனால் இலை வேறு. சருகு வேறு. மொழிபெயர்ப்பாளர் காய்ந்த இலை என்கிறார். காய்ந்த இலை சருகாகாது.  குருத்து. அரும்பு, துளிர், தளிர், இலை, பழுப்பு, சருகு, வீ என்னும் இலைபற்றிய பருவ நிலைச் சொற்கள் தமிழில் ஏராளம். மொழி பெயர்ப்பின் தொடக்கம் முதல் (சில பிரகஸ்பதிகள் துவக்கம் என்று எழுதித் தம் புலமையை நிலைநாட்டுவார்கள்) இறுதிவரை மூல ஆசிரியனின் இதயத்தோடும் மொழியோடும் உறவாடியிருக்கிறார். ‘நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’ என்று வசந்தராசன் சொல்லியிருப்பாரா?

    நிறைவுரை

    மொழிபெயர்ப்புக்கு வசப்படாது வசந்தராசன் கவிதை என்றுதான் இது வரை எண்ணிக் கொண்டிருந்தேன்.. காரணம் அவர் எழுதுவதெல்லாம் மரபுக்கவிதை. மரபை அவ்வளவு எளிதில் பெயர்த்தெழுத முடியாது என்பது முன்பே சொல்லப்பட்டது. ஆனால் தம்பி திருநாவுக்கரசு உண்மையான தமிழ்த் தொண்டர் ஆதலின் இதனைக் கைகூட வைத்திருக்கிறார். செறிவு குறையாமல், மையக்கருத்துக்கு மாசு வராமல், பா நயத்திற்குப் பங்கம் வராமல், துணிச்சலோடும் பொறுப்புணர்வோடும் எல்லாவற்றுக்கும் மேலாக அர்ப்பணிப்பு உணர்வோடும் செய்திருக்கும் இந்த மொழிபெயர்ப்புப் பணிக்கு நான் இந்த வயதான காலத்தில் தலைவணங்குகிறேன். ஒரு தமிழன் சக தமிழனுக்கு எந்த வகையில் உதவ வேண்டும் என்பதற்குத் தம்பி திருநாவுக்கரசு அமெரிக்காவிலிருந்து செய்முறை விளக்கம் தந்திருக்கிறார். .அதனுடைய விளைவு பாட்டின் பெருமையில் செம்பாதி அவருக்குத் தாய்வீட்டுச் சீதனமாகப் போய்விடுகிறது. பண்பாட்டு வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம், இலக்கியப் பெருக்கம், அறிவியல் மேம்பாடு, அரசியல் விழிப்புணர்ச்சி என்னும் மொழி பெயர்ப்பின் பயன்களில் சிலவற்றுக்குத் தம்மாலான பேருதவியைச் செயதிருக்கிறார் அரசு. அரசுக்கும் ஆக்கியோனுக்கும் அடியேன் வணக்கமும் வாழ்த்தும்!

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 4

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 4

    மீனாட்சி பாலகணேஷ்

    அம்பிகை மீதான இன்னும் சில பிள்ளைத்தமிழ் நூல்களைக் காணலாமா?

    4. திருக்கேதீச்சரம் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ்

    இந்த நூலைப் பார்க்கப் புகுமுன், கௌரிநாயகியம்மை குடிகொண்டுள்ள மிகப்பழமையான தலமாகிய திருக்கேதீச்சரத்தைப் பற்றிய தகவல்களைக் கட்டாயம் நாம் அறிந்துகொள்ள வேண்டும். திரு. ஆர் கந்தையா என்பவர் 1938ம் ஆண்டில் இத்தலத்தைப் பற்றி ஒரு நூலை வெளியிட்டுள்ளார். அதனின்றும் சில குறிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

    சமயக்குரவர்களால் பாடப்பெற்ற திருத்தலங்கள் 274 ஆகும். இவற்றுள் இரண்டு இலங்கையின்கண் உள்ளவையாம். இலங்கையின் பழமையானதும் திசைக்கொன்றாக இருப்பதுமான நான்கு சிவன் கோவில்கள் திருக்கேதீச்சரமும், திருக்கோணேச்சரமும் முன்னேஸ்வரமும், நகுலேஸ்வரமுமாகும். திருக்கேதீச்சரம் 2400 ஆண்டுகள் பழமை வாய்ந்தது (மகாவம்சம், பிரிட்டானிகா). திருக்கேதீச்சரத்தை சமயக் குரவர்களான சுந்தரமூர்த்தி நாயனாரும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரும் பாடிப்பரவியுள்ளனர். இந்த இடம் மன்னாரை அடுத்த மாதோட்டத்தில் (மாந்தோட்டம் எனவும் கூறப்படும்) அமைந்துள்ளது. மகாதுவட்டா வெனும் மன்னன் பூசித்த இடமாதலால் மாதோட்டம் எனப் பெயர்பெற்றது என்பர். மாந்தை எனவும் கூறப்படும். பழங்காலத்தில் இவ்விடம் பெரும் துறைமுகமாக விளங்கிற்று. சேர சோழ பாண்டியர்கள் ஆண்ட காலத்திலும், இலங்கையை விசயன் எனும் மன்னன் ஆண்ட போதும் இருநாடுகளுக்குமிடையே மாதோட்டத் துறைமுகத்தின் வாயிலாகவே பெரும் வாணிகம் நடைபெற்றது  என்பர். ஈழ மன்னன் விசயனுடைய இரண்டாம் மனைவியாகிய பாண்டிய இளவரசி திருமணஞ் செய்துகொண்டு வந்திறங்கிய துறைமுகம் மாதோட்டம் என்று ஈழத்தின் வரலாற்று நூலான, ‘மகாவம்சம்,’ எனும் நூல் மாதோட்டத்தைப்பற்றிக் குறிப்பிடுகின்றது.

    ரோம, கிரேக்க நாணயங்கள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது, இது அக்காலத்தில் இந்நாடுகளுடன் நடந்த  வாணிகத்தை உணர்த்துகிறது.

    சுந்தரமூர்த்தி நாயனார் பாடியுள்ள, ‘வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நன்னகர்’ எனும் தேவாரத்தினாலும் இம்மாதோட்டம் பெரிய துறைமுகமாக விளங்கிற்று என அறியலாம். சம்பந்தப்பெருமானும் தமது தேவாரத்தில் மாதோட்டம் எனும் பெயரைக் குறிப்பிட்டுள்ளதனைக் காணலாம்.

    மேலும் இங்கிருந்த பாலாவி எனும் நதியினைப் பற்றி சம்பந்தர் தமது திருக்கேதீச்சரப் பதிகத்தில்  ‘மாதோட்டத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். ‘பாலாவியின் கரைமேல்’ எனும் தொடரை சுந்தரர் எடுத்தாண்டுள்ளர்.

    புராண வரலாற்றை நோக்கினால், வாயுதேவனுக்கும் ஆதிசேடனுக்கும் ஒருகாலத்தில் வாக்குவாதம் தொடங்கிப் பெரிய போராகவே மாறியது என்றும்,  ஆதிசேடன் ஒருகட்டத்தில் மேருமலைக்குள் சென்றொளிந்து கொள்ள, வாயுபகவான் அம்மலையைத்தாக்கி, அதன் மூன்று சிகரங்களையும் பெயர்த்தெடுத்துச் சென்றான் என்றும் காணலாம். அவற்றுள் ஒரு சிகரத்தைத் திருக்கேதீச்சரத்தில் வைத்துச் சென்றான் எனப்படுகிறது.

    இது கேது பூசித்த தலமாதலின் கேதீச்சரம் என்றானது. இதற்குமொரு புராணக்கதை உள்ளது. சாவா மருந்தான அமுதத்தை மோகினி வேடம்பூண்ட திருமால் தேவர்களுக்குப் பகிர்ந்தளித்தபோது,  ஒரு அசுரன் மாறுவேடம் பூண்டு, சூரிய சந்திரர்களுக்கிடையே மறைந்து நின்று தானும் ஒரு பங்கைப்பெற்று உண்டான். இதையறிந்த திருமாலின் சாபத்திற்காளான அவனது உடல் இராகு, கேது என இரு கூறுகளாயிற்று. அவ்வரக்கன் பெருந்துன்பமடைந்து இத்தலத்தில் சிவபிரானை வணங்கி அவர் அருளைப் பெற்றனன்.

    திருக்கேதீச்சரம் பழம்பெரும் தலமாகும். துவட்டா என்பவன் திருக்கேதீச்சரத்திற்கு வந்து பாலாவியிலே தீர்த்தமாடி, புத்திரப் பேற்றிற்காகச் சிவபெருமானை வழிபட்டான் என்றும், கேதீச்சரப்பெருமான் அவன்முன் தோன்றி, அத்தலம் மகாதுவட்டாபுரம் என வழங்கப்படும் எனவும், அவனுக்கு விசுவகர்மா எனும் மகன் பிறப்பான் எனவும் அருளினார். இத்தலத்தில் அகத்திய முனிவர் வழிபட்டார்.

    இது அழிந்து போனதற்குப் பலவிதமான காரணங்கள் கூறப்படுகின்றன.

    இத்தலத்தின் ஈசன் புகழை சம்பந்தர், சுந்தரர் ஆகிய இரு நாயன்மார்களும் தத்தம் பதிகங்களில் பாடிவைத்துள்ளனர்.

    இத்தலத்துப்பெருமானை வழிபட்டால் தீராத வினைகளும் நோயும் தீரும் என்பர். திருஞானசம்பந்தர்

    ‘மேருமலையை வில்லாகக் கொண்டு அரவை நாணாகப்பூட்டி, அனல் எரியை அம்பாகக் கொண்டு போரிட்டு முப்புரங்களை எரித்த சிவபிரான் விரும்பி உறையுமிடமாக அடியவர் கருதும் ஊர், கடலால் சூழப்பட்ட, வாசமிகு பொழில்கள் அணிசெய்யும் மாதோட்டத்தில் பலரும் விரும்பிப் பூசனை செய்திடும் திருக்கேதீச்சரமாகும். அப்பதியைக் கையால் தொழுதால் நம் கடுவினைகள் விலகியோடும்,’ என்கிறார்.

    விருதுகுன்ற மாமேருவில் நாணர
    வாஅனல் எரியம்பா
    ……….. …………… ……………..
    கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ்
    பொழிலணி மாதோட்டம்
    கருத நின்றகே தீச்சரங் கைதொழக்
    கடுவினை யடையாவே.

                                       (திருக்கேதீச்சரப் பதிகம்- 2ம் திருமுறை)

    சுந்தரமூர்த்தி நாயனார், ‘தனது அடியார்களின் உடற்பிணிகளை  முற்றும் ஒழித்தருள்பவனாகிய சிவபிரான், மரக்கலங்கள் (வங்கம்) மிகுதியாகவுள்ள கடலருகேயுள்ள மாதோட்டம் எனும் நல்ல நகரத்தில், தனது திருமேனியைப் பங்கிட்டுக்கொண்ட மடமங்கையுடன், பாலாவியாற்றின் கரைமீது தென்னம்சோலை சூழ்ந்த திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியுள்ளான்,’ எனப் போற்றிப் பாடியுள்ளார்.

    அங்கத்துறு நோய்கள்ளடி
    யார்மேல் ஒழித்தருளி
    வங்கம்மலி கின்றகடல்
    மாதோட்டநன் னகரில்
    பங்கஞ்செய்த மடவாளொடு
    பாலாவியின் கரைமேல்
    தெங்கம்பொழில் சூழ்ந்ததிரு
    கேதீச்சரத் தானே. (சுந்தரர்- ஏழாம் திருமுறை)

    மேலும், மாதோட்டத்தின் சிறப்பினை, ‘மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன்னகர் புறமருவிய மாதோட்டம்,’ என சம்பந்தப் பெருமானும், ‘மாவின் கனிதூங்கும் பொழில் மாதோட்ட நன்னகர்’ என சுந்தரரும் தேவாரத்தில் பதிவு செய்துள்ளனர்.

    திருநாவுக்கரசரும் இத்தலத்துப்பெருமானை, அவர் பற்பல இடங்களிலும், திருக்கேதீச்சரத்திலும் உறைபவனாய்க்கண்டு ஏற்றுகிறார்.

    ‘பூதியணி பொன்னிறத்தர் பூண்நூலர்
    பொங்கரவர் சங்கரர் வெண்குழையோர் காதர்
    கேதீச்சர மேவினார் கேதாரத்தார்
    கெடில வடவதிகை வீரட்டத்தார்
    மாதுயரந் தீர்த்தென்னை வுய்யக்கொண்டார்
    மழபாடிய மேவிய மழுவாளனார்
    வேதிகுடியுளார் மீயச்சூரார்

    வீழி மிழலையே மேவினாரே’ என்று திருத்தாண்டகத்தில் எம்மிறைவர் உறையும் தலங்கள் அனைத்தையும் போற்றிக் குறிப்பிடுகிறார். இவற்றுள் கேதீச்சரமும் ஒன்றெனக் காணலாம்!

    மாணிக்கவாசகப்பெருமான் குயிற்பத்து, திருவார்த்தை இவற்றில் ‘இலங்கையில் மண்டோதரிக்கு அருள்செய்த தலம்’ எனக் கூறியுள்ளார். குயிற்பத்தின் பாடலில், ‘தென்னிலங்கைக்கு அரசியான வண்டோதரிக்கு, பேரருளாகிய இன்பத்தையளித்தவனும் பெருந்துறையில் உறைபவனுமாகிய பிரானை, உனது பெருமை பொருந்திய வாயால், அத்தென்பாண்டி நாட்டானை, என்னிடம் வரும்படிக் கூவுவாயாக, குயிலே’ என்கிறார்.

    இலங்கை அரசனான இராவணனின் மனையாளாகிய மண்டோதரி (இங்கு வண்டோதரி எனக் குறிப்பிடப்படுகிறாள்) வழிபட்ட இடமே கேதீச்சரமாகும்.

    ஏர்தருமேழ் உலகேத்த எவ்வுருவுந் தன்னுருவாம்
    ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் வண்டோதரிக்குப்
    பேரருளின் பமளித்த பெருந்துறை மேயபிரானைச்
    சீரியவா யாற்குயிலே தென்பாண்டி நாடனைக்கூவாய்.

                                                               (குயிற்பத்து, எட்டாந் திருமுறை)

                                                               0000000

    இவ்வாறெல்லாம் பெருமையும் பீடும் வாய்ந்த இத்தலத்தின்மீது ஒரு ஊஞ்சல் பிரபந்தம், திருக்கேதீச்சுரர் வண்டுவிடு தூது, திருக்கேதீச்சுர நாதர் கிள்ளைவிடு தூது, திருக்கேதீச்சுர புராணம் ஆகிய நூல்கள் உள்ளன. தமிழ்ச்சுவை நனிசொட்டச் சொட்ட பாடப்பெற்றவை இவை. திருக்கேதீச்சுர நாதர் கிள்ளைவிடு தூது எனும் நூலினை எழுதிய திரு. சி. இ. சதாசிவம் பிள்ளை என்பவரே 1976ம் ஆண்டுவாக்கில் இத்தலத்தில் வதியும் கௌரியன்னை மீது ஒருபிள்ளைத்தமிழ் நூலினையும் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்காலத்திற்கேற்ற எளிய நடையில் அமைந்துள்ளது இதன் தனிச்சிறப்பு.

    இதனின்றும் சில செய்யுட்களைக் கண்டு மகிழலாமா?

    வழக்கமான பத்துப் பருவங்களில் பத்துப்பாடல்கள் வீதம் இயற்றப்பெற்ற இப்பிள்ளைத்தமிழ் நூலின் செங்கீரைப் பருவப்பாடலொன்று; குமரகுருபரனார் இயற்றிய மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் செங்கீரைப்பருவப் பாடலொன்றின் கருத்தை அடியொற்றி இருப்பினும், வேறு நயங்களிலமைந்து சிறப்பாக உள்ளது.

    ‘காற்று, நெருப்பு, நீர்,நிலம், ஆகாயம் எனும் ஐந்து பூதங்களையும் கொண்டு தாமரை மலரில் உறையும் கஞ்சனான பிரமன் உலகைப் படைக்க, கருமேக வண்ணனான திருமால் அதைக் காக்க, கயிலைவாசியான சிவபிரான் அழித்திடவும், அவர்களையும் அழித்தும் ஆக்கியும் விளையாடி, அழகான உருக்கொண்டும், குதலைமொழி பேசியும், எம்மிடம் அருள்கொண்டும், கேதீச்சரத்தில் குடிகொண்டும் நற்குணங்களையும் கொண்டு தெய்வமாக உள்ள அம்மையே, செங்கீரையாடுக! செங்கண்மாலின் தங்கையான கௌரி அம்மையே செங்கீரையாடியருளுக!’ என் வேண்டும் பாடல்.

    காலங்கி நீர்நிலங் காயமெனு மைம்பூத
    காரணத் தாயவுலகு
    கஞ்சன் படைக்கவுங் கருமேக வண்ணனவை
    காக்கவுங் கயிலையாளி
    மேலங் கழித்திட ………………………………
    …………………………….
    மீண்டும் அவர்தமை யாக்கிமுத் தொழிலதாம்
    விளையாட்டயர்ந்து வேண்டும்
    …………………………………………………..
    செங்கண்மா லுக்கரிய தங்கையாய் வருகௌரி
    செங்கீரை யாடியருளே.

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் ‘சுற்றுநெடு நேமிச் சுவர்க்கிசைய எட்டுச் சுவர்க்கால் நிறுத்தி’ எனும் செங்கீரைப்பருவப் பாடலிலும் அம்மை உலகங்களை ஆக்குவதனையும், பித்தனான சிவபிரான் நடனமாடி அதனை அழிப்பதனையும், இவ்வாறு மாறிமாறி இன்னிகழ்வு நடைபெறுவதனையும் குமரகுருபர சுவாமிகள் பாடியிருப்பார். இதுவும் கருத்தில் அதனை யொத்துள்ளது.

    சப்பாணிப்பருவப் பாடலொன்று, வெள்ளிக் கயிலை மலையைப் பெயர்க்க முயற்சித்த இலங்கேசனான இராவணனும் அவனது மனையாள் மண்டோதரியும் அன்னையை இத்தலத்தே தொழுது போற்றியதைப் பதிவு செய்கின்றது.

    வெள்ளிக் கயிலை மலையெடுத்த
    வீறார் மெய்ம்பன் இலங்கேசன்
    வேற்கண் மனைமண் டோதரியும்
    விண்ணார் அணங்கி னருமேத்தப்
    …………. …………….. …………..
    கயிலைக் கிறைவர் பங்கிலமர்
    கௌரீ தாலோ தாலேலோ.

    சொல்நயம் செறிந்தவொரு அம்மானைப்பருவப் பாடல் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது.

    கௌரியன்னை பாலாவியாற்றின் கரையினில் அம்மானையாடுகிறாள். அவள் பெரும்புகழை வருணிக்கிறார்.

    தாமரை மலரில் இருக்கும் பெரியோனான பிரமன் வேதங்களை யோதும் ஒலி ஒருபுறம்; கழுமலம் எனப்படும் சீர்காழியிலுதித்த முத்தமிழிற் சிறந்த சம்பந்தப்பெருமான் முதலியோர் திருமுறைகள் ஓதும் ஒலி இன்னொரு புறம்; தேனோடு பாலைக் கலந்தாற்போன்று அன்பர்கள் செவி இவற்றைக் கேட்பதனால் இனிமைபெறுகின்றது. திருவீதியில் நீண்ட மதில்களும், வானளாவு கோபுரங்களும் ஓங்கி நிற்கின்றதும், வானிலுள்ள தேவர்கள் காணவியலாதவனும் வேதங்களின் முதல்வன் எனப்படும் சிவபெருமான் அமர்ந்து வரமருளுவதுமான திருக்கேதீச்சுரத்தில், அவனுடைய இடதுபாகத்தைப் பகிர்ந்துகொண்டு அன்பர்களுக்கு அருள்செய்கின்ற மலைவல்லி, சியாமளை, வராகியான அம்மையே நீ, அளவற்ற அருளினோடு பாலாவியின் கரையில் அம்மானை யாடுக. அரியும் பிரமனும் அறியவொண்ணாத அமலரான பெருமானிடம் அமரும் கௌரி, அம்மனை யாடி அருளுக! என வேண்டுவதாக அமைந்த பாடல்.

    கானாறு கஞ்சப் பொகுட்டுறு பிதாமகன்
    கழறுமறை யோதை யுடனே
    கழுமல முதித்தமுத் தமிழ்விரக ராதியோர்
    கண்டதிரு முறையோ தையும்
    …………………………………………………
    வாமபா கம்பகிர்ந் தன்பருக் கருளுமலை
    வல்லியா மளைவ ராகீ
    ஆனாத அருளினொடு பாலாவி மறுகதனில்
    அம்மானை யாடி யருளே
    அரிபிரம ரறிவரிய வமலரிட மமர்கௌரி
    யம்மானை யாடி யருளே.

    இதுபோன்று கவிநயமும் பத்திநயமும் சேர்ந்தமைந்த பலப்பல பாடல்கள். எளிய தமிழிலமைந்தவை. படித்துப்பொருளுணர்ந்து மகிழலாம்.

    (இன்னும் வளரும்)

    பார்வை நூல்கள்:

    1. திருக்கேதீச்சரம் – ஆர். கந்தையா
    2. மகாவம்சம் – இலங்கைத் தீவின் புராதன வரலாறு
    3. சம்பந்தர் தேவாரம்
    4. சுந்தரர் தேவாரம்
    5. அப்பர் தேவாரம்
    6. மாணிக்கவாசகர் திருவாசகம்
    7. திருக்கேதீச்சரம் கௌரிநாயகி பிள்ளைத்தமிழ் – சி. இ. சதாசிவம் பிள்ளை.

    Share
  • வேங்கடாசல நிலையம் வைகுந்தபுர வாசம்

    வேங்கடாசல நிலையம் வைகுந்தபுர வாசம்

    புரந்தர தாசர் இயற்றிய ‘வேங்கடாசல நிலையம் வைகுந்தபுர வாசம்’ என்ற புகழ்பெற்ற பாடலை, மோகன்தாஸ் உடன் இணைந்து, ஆனந்த கிருஷ்ண பஜனை சபா உறுப்பினர்கள் இன்னிசையுடன் பாடுகிறார்கள். சென்னை, கிழக்குத் தாம்பரம், அருள்மிகு இராஜ கிருஷ்ணர் கோவிலில் நடைபெற்ற பஜனை. கேட்டு மகிழுங்கள். அன்பர்களுடன் பகிருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • எம்.ஜி.ஆர். பேச்சு | அதிமுகவைத் தொடங்கியது எதற்காக? | 1972

    எம்.ஜி.ஆர். பேச்சு | அதிமுகவைத் தொடங்கியது எதற்காக? | 1972

    திமுகவிலிருந்து விலகிய எம்.ஜி.ஆர்., அதிமுகவைத் தொடங்கி, அசைக்க முடியாத ஆளுமையாக, பெரும் புகழோடு திகழ்ந்தார். 1977ஆம் ஆண்டு முதல், அவர் இறக்கும் வரை அவரே தமிழக முதலமைச்சர். 1972ஆம் ஆண்டு அதிமுகவைத் தொடங்கியபோது, அதிமுகவைத் தொடங்கியது ஏன் என்பதை விளக்கிப் பேசினார். புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் அந்தச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பேச்சு இதோ.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அறியாயோ சிறுகிளியே  (கலித்தாழிசை)

    அறியாயோ சிறுகிளியே  (கலித்தாழிசை)

    நமக்கானது என்பதெலாம் நமைவிட்டு போகாது

    நம்மைவிட்டு போவதெலாம் நமக்கென்று ஆகாது

    கிடைக்காத எதுவுமெளிதாய் தானாயாய கிடைக்கும்

    நிலைக்காதது காலவயதும் கர்மம் வினையில் நடக்கும் அறியாயோ சிறுகிளியே

    எதுவும் இல்லை என்றே சொல்வார்

    பணமும் பகட்டும் செருக்கும் கண்டார்

    அதுவும் அவரை அழிக்கும் ஒருநாள்

    பழிக்கும் விதிக்கும் பலியாய் சுருண்டார்  அறியாயோ சிறுகிளியே

    கதவை மூடிட கண்ணை மூடிட

    செய்திடும் தப்புகள் காண்பான்

    காலசக்கர மேந்திட புவிபோல்

    பால்வெளி பலவும் ஏற்பான்  அறியாயோ சிறுகிளியே

    கெடுதல் செய்தார் செழிப்பார் தெரியும்

    வளரும் அவர்தம் ஆசையும்  வெறியும்

    நொடியில் முன்வினை புண்ணியம் அழியும்

    யாவும் கரைந்த பின்னால்  மரியும் அறியாயோ சிறுகிளியே

    வரவும் செலவும் கணக்கு எல்லாம் உனக்கும் மட்டுமல்ல

    பிறவிகள் நோக்கம் அறியும் இறைவன் கணக்கும் தப்புமல்ல

    உறவுகள் பிரிவும் இன்பம் துன்பம் பக்தியும் அதுபோலல்ல

    மனமும் தெளிவும் சரணம் அடைந்தால் இறைவன் தூரமல்ல அறியாயோ சிறுகிளியே

    பார்க்கும்  சுவற்றின் சிற்றெரும்பேநீ

    பாரில் முழுதும்  உனைக்கண்டால்

    கார்க்கும் சிறுகரு கடுகளவேதான்

    பாரும் வளிக்கு  நம்முன்னால்   அறியாயோ சிறுகிளியே

    பெற்றவர் அன்பும் கற்றவர் பண்பும் உற்றது பக்திசாலை

    விற்றவர் வணிகர் மற்றவர் மடையர் பற்றிடு கடவுளின்காலை அறியாயோ சிறுகிளியே

    Share
  • நாசாவின் ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய பூமியின் முதல்படம்

    நாசாவின் ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய பூமியின் முதல்படம்

    NASA’s Artemis 1 Shares First Image of Earth on the Way to the Moon

    https://twitter.com/i/status/1592918520337088512

    சி. ஜெயபாரதன், கனடா

    2022 நவம்பர் 23 இல் நாசா ஆர்டிமிஸ் -1 காமிரா அனுப்பிய பூமியின் முதல் படம்

    காமிரா அனுப்பிய நிலவின் முதல் படத்தில் நெடுங் குழிகள் தெரிந்தன.  பாதாளக் குழிகளில்  பனிப்பாறைகள் காணப் பட்டன.  நிலவில் நீர் உறைந்த நெடும் பாறைகள் இருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது.

    ஓரியன் விண்சிமிழ் காமிரா நிலவை நெருங்கி 80 மைல் உயரத்தில் பாதாளக் குழிகளை உற்று நோக்கிப் படம் எடுத்தது.  ஆழத்தில் தெரிந்த நீர்ப்பனி உறைவுப் படங்கள் பதிவு செய்யப்பட்டன.

    ஓரியன் விண்சிமிழ் நிலவை நோக்கி

    அடுத்துத் திட்டமிட்ட ஓரியன் விண்சிமிழ் ஆறு பேர் அமரும் வசதி உடையது.  சில நாட்களில் ஓரியன் விண்சிமிழ் நிலவை விட்டு தள்ளி  தூரப் பின்சுற்றுப் பாதையில் [Distant Retrograde Orbit] 50,000 மைல் தொலைவில் செல்லும். அப்பாதையில் ஓரியன் ஆறு நாட்கள் சுற்றும். எதிர்காலத்தில் இப்பாதையில் ஒரு நிலா சுற்று நிலையம் அமைக்கத் திட்டம் உள்ளது. நிலவுக்கு வரும் விண்வெளிப் பயண விமானி களுக்குத் தங்க இந்த நிலையம் ஓர் ஓய்வு சிமிழாகப் பயன்படும். ஆறு நாட்கள் சுற்றிய பின், விண்சிமிழ் 2022 டிசம்பர் 11 இறுதியில் புவியீர்ப்பு கடந்து பூமிக்கு மீளும். பசிபிக் கடலில் மூன்று பாராசூட் குடைகள் தாங்க மனிதரற்ற விண்சிமிழ் வந்து இறங்கும்.  2025 ஆண்டுக்குள் மீண்டும் ஓரியன் விண்சிமிழ் மூலம் புவி மனிதர் பயணம் செய்து தமது தடம் வைப்பர் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    Unmanned Spaceship Orion

    NASA’s Artemis 1 Shares First Image of Earth on the Way to the Moon: See Photo of ‘Our Blue Marble’ (msn.com)

    As far as the next priority for Artemis missions, NASA says “they will land the first woman and the first person of color on the Moon, paving the way for a long-term lunar presence, and serving as a steppingstone to send astronauts to Mars.”

    Share
  • குறளின் கதிர்களாய்…(427)

    குறளின் கதிர்களாய்…(427)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(427)

    கொடுத்தலு மின்சொல்லு மாற்றி னடுக்கிய
    சுற்றத்தாற் சுற்றப் படும்.

    – திருக்குறள் -525 (சுற்றந்தழால்)

    புதுக் கவிதையில்

    உற்றர் உறவினர்க்கு
    உறுபொருள் கொடுத்துதவி.
    உபசரித்தே இன்சொல்
    உரைக்க வல்லவனானால்,
    ஒருவன்
    ஒன்றையொன்று தொடர்ந்த பல
    சுற்றங்களால்
    சூழப்படுவான்…!

    குறும்பாவில்

    சுற்றத்தார்ப்குப் பொருள் கொடுத்துதவி
    இன்சொல் இயம்பவல்ல ஒருவன் தொடர்ந்து
    மேலும்மேலும் சுற்றங்களால் சூழப்படுவான்…!

    மரபுக் கவிதையில்

    நாடும் சுற்ற மெல்லாமே
    நலமே பெறவே கொடுத்துதவி
    கூடும் வரையில் இன்சொல்லால்
    குறையா வகையில் உபசரித்தே
    பாடு படவே வல்லமையாம்
    பண்பு கொண்ட ஒருவன்தான்
    தேடும் சுற்றம் பலவற்றால்
    தெரிந்தே சூழப் படுவானே…!

    லிமரைக்கூ

    வந்திடும் உறவினர்க்குக் கொடுத்தே
    உதவி இன்சொலால் உபசரிக்க வல்லானைச்
    சூழும் சுற்றமெலாம் அடுத்தே…!

    கிராமிய பாணியில்

    பெருக்கணும் பெருக்கணும்
    ஒறவப் பெருக்கணும்,
    வேண்டிய ஒதவிசெஞ்சி
    ஒறவப் பெருக்கணும்..

    தேடிவாற ஒறவுகளுக்கு
    வேணுங்கிற ஒதவிசெஞ்சி,
    நல்லவார்த்த பேசி
    நல்லா ஒபசரிக்கத்
    தெரிஞ்சவன் கிட்ட
    அடுத்தடுத்து ஒறவுக்காரங்க
    வந்து சேருவாங்களே..

    அதால,
    பெருக்கணும் பெருக்கணும்
    ஒறவப் பெருக்கணும்,
    வேண்டிய ஒதவிசெஞ்சி
    ஒறவப் பெருக்கணும்…!

    Share
  • தி.மு.க.வின் எதிர்காலம் | அறிஞர் அண்ணா உரை

    தி.மு.க.வின் எதிர்காலம் | அறிஞர் அண்ணா உரை

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் குறித்து, 1962ஆம் ஆண்டு, அறிஞர் அண்ணா ஆற்றிய உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பயத்தை உண்டாக்கு

    பயத்தை உண்டாக்கு

    சி. ஜெயபாரதன், கனடா

    ஆயுள் உறுதி இல்லை.

    செய்யும் தொழில்
    வேலை கூலி
    நிரந்தரம் இல்லை.

    கட்டிய மனை, மாளிகை
    இல்லாது போகலாம்
    புயல் அடித்து.

    பறக்கும்
    விமான எஞ்சின்
    பழுதாகிக் கடலில் வீழலாம்.

    கார் டயர் வெடித்து
    விபத்து
    நேர்ந்துவிடலாம்.

    சுற்றுலாவில்
    தொற்றுநோய் பற்றி
    மருத்துவமனையில்
    பலநாள்
    படுத்துக் கிடக்கலாம்.

    அணு உலைகள் வெடித்து,
    கதிரியக்கம்
    காசினியில் பரவலாம்.

    பூகம்பம், காட்டுத் தீ
    சூறாவளி,
    சுனாமி,
    ஹரிக்கேன் அடித்து மக்கள்
    எல்லாம் இழக்கலாம்.

    இப்படி
    பயம் காட்டியே பிழைத்து வரும்
    பண முதலைகள் !

    மிஞ்சும் சம்பாதிப்பில் நீ
    எத்தனை சதவீதம்
    கப்பம்
    கட்டுவாய்
    ஆண்டாண்டுதோறும்?

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I முதல் அங்கம் I பாகம் – 1

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I முதல் அங்கம் I பாகம் – 1

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


     

    Share
  • சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்

    சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்

    சுவாமி ஐயப்பன் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம்’ என்ற இனிய பக்திப் பாடலை, ‘கான பிரம்மம்’ கிருஷ்ணகுமார் குரலில் கேட்டு மகிழுங்கள். சுவாமியே சரணம் ஐயப்பா!

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பரதாஞ்சலிக்கு ஒரு கவிதாஞ்சலி | இசைக்கவி ரமணன்

    பரதாஞ்சலிக்கு ஒரு கவிதாஞ்சலி | இசைக்கவி ரமணன்

    பரதாஞ்சலி வழங்கிய “சத்ய பாரதி சுந்தரம்” என்னும் விருதினைப் பெற்றுக்கொண்டு, இசைக்கவி ரமணன் பொழிந்த கவிமழை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • அண்ணாவின் ஆவேசப் பேச்சு | 1957

    அண்ணாவின் ஆவேசப் பேச்சு | 1957

    1957ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் சீனிவாசனை எதிர்த்து, சுயேச்சையாகப் போட்டியிட்ட அண்ணா வெற்றி வாகை சூடினார். (தேர்தல் ஆணையத்தால் தி.மு.க. ஒரு கட்சியாக அங்கீகரிக்கப்படாத காரணத்தால், தி.மு.க. உறுப்பினர்கள் சுயேச்சைகளாகப் போட்டியிட்டனர்). அந்தத் தேர்தல் பரப்புரையில் அண்ணா ஆற்றிய ஆவேச உரை.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share