Blog

  • சங்க இலக்கியத்தில் தலைவி நெஞ்சொடு கிளத்தல்

    சங்க இலக்கியத்தில் தலைவி நெஞ்சொடு கிளத்தல்

    திருமதி கு. வளா்மதி, உதவிப் பேராசிாியா்,
    முதுகலை மற்றும் தமிழாய்வுத்துறை,
    தி ஸ்டாண்டா்டு ஃபயா்ஒா்க்ஸ்     
    இராஜரத்தினம் மகளிா் கல்லூாி,
    சிவகாசி.

    முன்னுரை

    மொழி வழிவழியாக, மரபு வழியாகப் பேசப்பட்டு வருகின்றது. பழமையின் படைப்புகள், அறிவியல் வளர்ச்சிகள் என அனைத்துமே மொழியோடு தொடர்புடையனவாகவே உள்ளன. கற்றோர், கல்லாதவர் என அனைவரும் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாற ‘மொழி’ இன்றியமையாததாகும். மனிதன் சமுதாயமாகக் கூடிவாழ்ந்த போது செய்திகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. தன்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளும் நிலை உருவாகியது. பேச்சுமொழி தோன்றிய பின் நேருக்குநேர் செய்திகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டனர். செய்திகளைப் பரிமாறிக் கொள்வதால் மனிதப்பண்பு நலன்களும், பரிமாறப்படும் செய்தியினுடைய புலப்பாட்டுத்திறனும் வெளிப்படுகின்றன. சங்க இலக்கியங்கள் பண்டைத்தமிழரின் அகவாழ்வு நிலையினையும், புறவாழ்வு நிலையினையும் அறிவதற்கு ஆதாரமாக விளங்குகின்றன. மனிதவாழ்வில் செய்திப்பரிமாற்றம் தமக்குள்ளேயும், இருவருக்கிடையேயும், குழுவினருக்கிடையேயும் நடைபெறுகின்றது. செய்திப்பரிமாற்றத்தில் மொழிவழிச் செய்திப்பரிமாற்றமே இன்றியமையாததாக அமைகின்றது. அவ்மொழிவழிச் செய்திப்பரிமாற்றத்தின் ஒரு அங்கமாக தலைவி நெஞ்சொடு கிளத்தல் அமைந்துள்ளது.  சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை நூல்களில் தலைவியின் நெஞ்சொடு கிளத்தல் இடம்பெற்றுள்ளமை பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

    மொழியும் செய்திப்பரிமாற்றமும்

    மொழி தானும் வளர்ந்து, தன்னைப் பயன்படுத்தும் மனிதர்களையும் வளர்த்தெடுக்கும் தனித்தன்மையைப் பெற்று விளங்குகின்றது. செய்திப்பரிமாற்றத்திற்கு மட்டுமே பயன்படக்கூடிய ஒரு கருவியாக அமையாமல் சிந்தனையின் வடிவாகவும் அதன் வெளிப்பாடாகவும் மொழி திகழ்கின்றது. நாகரிகத்தின் வித்தாகவும் எண்ணத்தின் உருவமாகவும் மாந்தர்களைப் பிணைப்பதாகவும் இருக்கின்ற மொழி வளர்ச்சியின் சிறப்பான நிலையே இலக்கியம் ஆகும்.

    மாந்தரின் மனதில் இன்பத்தை ஏற்படுத்தித் துன்பத்திலிருந்து விடுபடச் செய்வதற்கு இலக்கியம் பெரிதும் உதவுகின்றது. இலக்கியம் மாந்தரைச் சோர்விலிருந்து விலக்குகின்றது. ஒரு மொழியின் வளர்ச்சியையும் சிறப்பையும் உணர்த்துவதற்கு இலக்கியம் ஊடகமாக உள்ளது. இவை அனைத்திற்கும் மூலதனமாக மொழியும் அதன்வழிச் செய்திப்பரிமாற்றமும் உள்ளன.

    மொழிவழிச் செய்திப்பரிமாற்றம் – விளக்கம்

    மாந்தர்தம் வாய்மொழியாக செய்திப்பரிமாற்றம் நிகழுமாயின் அது ‘மொழிவழிச் செய்திப்பரிமாற்றம்’ எனப்படும். இம்மொழிவழிச் செய்திப்பரிமாற்றத்தினை ‘ஒருமுகச் செய்திப்பரிமாற்றம், பன்முகச் செய்திப்பரிமாற்றம்’ என்ற இருநிலைகளில் ஆராய இயலுகின்றது. மாந்தர் கேட்போர் யாருமின்றி, ஒருமுகமாகத் தனக்குத் தானே செய்தியைக் கூறுதல், ‘ஒருமுகச் செய்திப்பரிமாற்றம்’ ஆகும். ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் என்பது மாந்தர்கள் நெஞ்சொடு கிளப்பதாகவும், தனிமொழியாகவும் அமையும். பன்முகச் செய்திப்பரிமாற்றம் என்பது ஒரு மாந்தர் மற்றொரு மாந்தருடன் பேசுவதாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மாந்தருடன் பேசுவதாகவோ அமையும்.

    சங்கப்பாடல்களில் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம்

    மாந்தர் தனக்குத்தானே மனதுக்குள் பேசுவதும், தனக்குத்தானே வாய்திறந்து பேசுவதும் ‘ஒருமுகச் செய்திப்பரிமாற்றம்’ எனப்படும். சங்கப்பாடல்களி;ல் காணப்படும் நெஞ்சொடு கிளத்தல் மற்றும் தனிமொழியில் அமைந்த பாடல்களை ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் எனும் நிலையில் ஆராய இயலுகின்றது. சங்கஅக, புறப்பாடல்களில்;, ‘நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி, அஃறிணைப் பொருட்களுடன் பேசுதல்’ என்ற அடிப்படையில் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் அமைந்துள்ளது.

    சங்க அகப்பாடல்களில் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம்

    சங்க அகப்பாடல்களைப் புறப்பாடல்களுடன் ஒப்பிடும் போது மாந்தர்கள் தனக்குத் தானே பேசுவதாக அமைந்துள்ள பாடல்கள் அகஇலக்கியங்களிலேயே மிகுதியாகக் காணப்படுகின்றன. களவுக்காலத்திலும், கற்புக்காலத்திலும் தலைவன் – தலைவிக்கு இடையிலான பிரிவின்போதே தனக்குத்தானே பேசிக்கொள்ளும் சூழல் மிகுதியும் உருவாகின்றது. இதன் காரணம் பிரிவே, உணர்ச்சியை மிகுவிக்கின்றது எனலாம். பேசும் முறைமை பற்றி,

    “நாடக முன்னிலைக்கூற்று மூன்றுவகையாக வளர்ந்தது. ஒன்று மற்றொருவரை

    முன்னிலைப்படுத்தி ஒருவரே பேசுவது. இரண்டு தம் நெஞ்சிற்குக் கூறிக் கொள்வது. மூன்று பிற அஃறிணைப்பொருளை முன்னிலைப்படுத்தி விளித்துக் கூறுவது”1

    என்று அறிஞர்கள் பகுக்கின்றனர். இம்முறையில் குறிக்கப்படும் செய்திகளைச் சங்க இலக்கியப் பாடல்களில் காணமுடிகிறது. மாந்தர் கேட்போர் யாருமின்றி தன்னந்தனியாக நின்று பேசுவது ‘தனக்குத்தானே பேசுதல்’ எனப்படும். இம்முறை சங்க இலக்கியங்களில் ‘நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி’ என்ற சொற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    நெஞ்சொடு கிளத்தல்

    அகமாந்தர் பிரிவுத்துயரத்தினால்; தனிமையில் தன் நெஞ்சிற்குக் கூறும் நிலை ‘நெஞ்சொடு கிளத்தல்’ ஆகும். நெஞ்சொடு கிளத்தலில், நெஞ்சுக்குக் கூறுபவரின் நனவுமனச் செயல்பாடுகளும் நனவிலி மனவுணர்வுகளுமே ஒன்றுக்கொன்று எதிர்கொள்கின்றன. தொல்காப்பியர், களவிலும் கற்பிலும் தலைவன், தலைவியின் கூற்றுகளை வரையறுக்குமிடத்து ‘நெஞ்சொடு பேசுவதும்’ அவர்களுக்கு உரியது என்று குறிப்பிட்டுள்ளார். இதனை,

    “நோயும் இன்பமும் இருவகை நிலையில்
    காமம் கண்ணிய மரபிடை தெரிய
    எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய
    உறுப்புடை யதுபோல் உணர்வுடையது போல்
    மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும்”2    

    என்ற நூற்பா விளக்குகின்றது.

    “நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
    எவ்வநோய் தீர்க்கும் மருந்து”3

    இக்குறட்பா உள்ளத்தாலும், மொழியாலும் பேசும் நிகழ்வினை உணர்த்துகின்றது. சங்க அகப்பாடல்களில் தலைவன், தலைவி இருவருமே நெஞ்சொடு பேசுவதைக் காணமுடிகிறது.

    தலைவி

    மாந்தர் மிகுதியாக இன்புற்றிருக்கும் தருணத்தில் அவர்கள் உள்ளத்துள் மகிழ்ச்சி பிறப்பது இயல்பு. சோதனைகள் பலவும் வரும் சூழலில் துயருற்று மனம் ஆற்றாது தனக்குத்தானே புலம்பிக் கொண்டே இருத்தலும் இயல்பே ஆகும். தலைவி எப்போதும் தலைவனுடன் இணைந்திருக்கும் நிலையையே விரும்புகின்றாள். அதனால் பிரிவு நேரிடும் போது பெரிதும் வருந்துகின்றாள். தலைவன் அருகில் இல்லாத காலங்களில், தலைவிக்குத் தோழி உற்றதுணையாக இருக்கின்றாள். தோழி அருகில் இல்லாத தனிமைச் சூழலில், தலைவி நெஞ்சை விளித்துப் பேசுகின்றாள்.

    “தலைவிக்குப் பிரிவு ஆற்றாமை மிகுந்து விட்டது. தனக்குத் துணையாக     உதவுவாரைக் கண்டிலள். இப்பொழுது அவள் தனக்கு நெஞ்சைத் தவிர  துணையாவார் யாரும் இலர் என்று கருதி நெஞ்சை நோக்கிக் கூறுகின்றாள்”4

    என்பர்.

    இங்ஙனம், தலைவி அதிகமாகத் துன்புறும் போது தனக்குத்தானே நெஞ்சொடு புலம்பிக் கொள்வதும் உண்டு. தலைவி காப்புமிகுதியால் வருந்துகின்ற போதும், தலைவனைப் பிரிந்து தனித்திருக்கும் போதும், தலைவனிடம் ஊடல்கொள்ளும் போதும் நெஞ்சொடு பேசுகின்றாள். இச்சூழல்கள் அனைத்தும் தலைவியின் ஆழ்மனதில் கவலையை ஏற்படுத்தக்கூடிய காரணத்தாலேயே தலைவி மனதுடன் பேசும் நிலையைக் காணமுடிகிறது.

    காப்புமிகுதிக்கண் பேசுதல்

    களவுக்காலத்தில் தலைவியைப் புறத்தே செல்லவிடாமல் தாய் முதலானோர் பாதுகாத்தல் ‘காப்பு மிகுதி’ ஆகும். இதனை ‘இற்செறிப்பு’ என்பர். காவல்மிகுதிப்பட்ட போது தலைவனைக் காணாது துயிலை இழந்து வருந்துகின்ற தலைவியின் நெஞ்சம், தலைவனிடம் சென்றது. அந்நெஞ்சத்தை விளித்து,

    “எல்லையும் இரவும் துயில்துறந்து, பல்லூழ்
     அரும்படர் அவலநோய் செய்தான்கண் பெறல்நசைஇ,
     இருங்கழி ஓதம்போல் தடுமாறி,
     வருந்தினை – அளியஎன் மடங்கெழு நெஞ்சே!”                          (கலி.123: 16-19)

    என்று வருந்துகின்றாள். இப்பாடலடிகள் காப்புமிகுதிக்கண் ஆற்றாத தலைவி, தலைவன்பால் சென்ற நெஞ்சினை நோக்கி அழிந்து கூறுவதாக உள்ளன.

    தலைவி, தலைவனைக் காணும் போது, அவனால் வரும் அனைத்து துன்பங்களையும் மறந்து விடுகின்றேன் என்று தன் நெஞ்சின் சோர்வை வெளிப்படுத்துகின்றாள்.

    “மெல்லிய, இனிய, மேவரு தகுந,
    இவைமொழியாம் எனச் சொல்லினும், அவைநீ,
    மறத்தியோ வாழி என்நெஞ்சே! பலஉடன்
    காமர் மாஅத்துத் தாதுஅமர் பூவின்
    வண்டு வீழ்பு அயரும் கானல்
    தெண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே?”                            (குறுந்.306)

    என்ற பாடலில் நெய்தல்நிலத் தலைவனைப் பார்க்கத் துடிக்கும் தலைவியின் அகமனவுணர்வின் வெளிப்பாடு இடம்பெற்றுள்ளது.

    களவுக்காலத்தில் தலைவனைச் சந்திப்பது அரிதான செயலாகும். அதிலும் காப்பு மிகுதிக்கண் தலைவனைக் காணாமல் உறக்கமின்றி ஏங்கும் தலைவியின் அகமனவுணர்வு, ஒருமுகச் செய்திப்பரிமாற்றமாக நெஞ்சை நோக்கிப் பேசுவதாக அமைகின்றது. இங்கு, தலைவி அகமனவுணர்வைப் பரிமாறிக் கொள்வதற்கு நெஞ்சை வடிகாலாகக் கொள்கின்றாள் என்பது புலப்படுகின்றது.

    தனிமைச் சூழல்

    சங்ககாலத்தில் தலைவன் மட்டுமின்றி தலைவியும் பிரிவுத்துயரைத் தனக்குத் தானே நெஞ்சொடு கிளத்தல் உண்டு. தலைவனைப் பிரிந்து தனித்திருக்கும் தலைவி, தனிமைச் சூழலில் ஆற்றாமை மீதூர நெஞ்சை விளித்துப் பேசுவதாகப் பாடல்கள் உள்ளன.

    மொழி வேறுபட்ட நாட்டிற்குச் சென்று வாழ்தல் கடினமெனினும், தலைவனைப் பிரிந்து வாழ முடியாத நிலையில் அவன் வாழும் நாட்டிற்குச் செல்வதற்காகத் தலைவி நெஞ்சை விளிக்கின்றாள். இதனை,

    “கோடுஈர் இலங்குவளை நெகிழ நாளும்
    பாடுஇல கலிழும் கண்ணொடு புலம்பி,
    ஈங்குஇவண் உறைதலும் உய்குவம்; ஆங்கே
    எழு, இனிவாழி, என் நெஞ்சே!”                                  (குறுந்.11: 1-4)

    என்ற பாடலடிகள் குறிப்பிடுகின்றன. இதைப் போன்றே தலைவன் சென்ற வழியில் தானும் செல்லத் துணிந்து நெஞ்சை விளித்துப் பேசும் தலைவியின் ‘ஆற்றாமை உணர்வு’ அகநானூறு 303-ஆம் பாடலில் வெளிப்படுகின்றது. இதில், தலைவனின் இருப்பிடத்துக்குத் தன்னையும் கொண்டு செல்லத் தலைவி தன் நெஞ்சத்தை ஏவுகின்றாள்.

    இங்கு தலைவன் இல்லாத சூழலில், தனிமையில் வாழமுடியாத தலைவியின் மனவுணர்வு வெளிப்படுகின்றது. தலைவனுடன் சென்று இணைந்திருக்கும் வாழ்வில் துன்பம் ஏற்பட்டாலும் அதை ஏற்கத் தலைவியின் மனம் துணிகின்றது. ஆனால், தலைவனைப் பிரிந்திருக்கும் தனிமைச்சூழலை ஏற்க மறுக்கும் தலைவியின் மனநிலை தெளிவாகின்றது. தலைவன் மீது தலைவி கொண்ட அன்பும் அவள் நெஞ்சொடு கிளக்கும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றத்தால் வெளிப்படுகின்றது.

    ஊடலில் பேசுதல்

    பரத்தையரிடம் சென்று மீண்டு வந்த தலைவன், தலைவியின் உடன்பாட்டை வேண்டி நிற்க, அவன்பால் ஊடல் கொண்டவளாயினும் தன்னெஞ்சம் அவனிடத்துச் செல்வதை அறிந்த தலைவி நெஞ்சிடம், தலைவனுக்கு உடன்பட்டு அவனோடு பழகுவாயானால் மீண்டும் அவன் பிரிய, துன்பம் பல உண்டாகும். அதனால் நீ துயிலுகின்ற நாட்களோ மிகச் சிலவாகும் என்றாள். இதனைக் குறுந்தொகை 91-ஆம் பாடல் சுட்டுகின்றது. இங்கு, பரத்தமை மீது கொண்ட அருவருப்பும், தலைவனின் பிரிவைத் தாங்கவியலாத துன்பவுணர்ச்சியும் சேர்ந்து தலைவியிடம் தன்னிரக்கம் தோன்றச் செய்கின்றன. தலைவன் மீண்டும் பரத்தையிடம் சென்றுவிடுவானோ? என்ற தலைவியின் அச்சவுணர்வும் புலப்படுகின்றது.

    தலைவனின் எத்தகைய செயலையும் தலைவி பொறுத்துக் கொள்வாள். ஆனால், தன்னை விட்டு மற்றொரு பெண்ணை நாடிச் செல்வதைப் பரத்தமை மேற்கொள்வதை எந்தப் பெண்ணாலும் பொறுத்துக் கொள்ள இயலாது. இச்சூழலில் தலைவியின் மனதில் துன்பம் மிகுதியாகும் காரணத்தாலேயே அவள் தலைவனோடு ஊடல் கொள்கின்றாள். ஊடல் கொண்ட பின்பு, தன்னுடைய நிலையை எண்ணித் தனக்குத்தானே இரங்குகின்றாள். இச்சூழலில் தலைவியின் அகமனப் போராட்டம், ஒருமுகச் செய்திப்பரிமாற்றமாக நெஞ்சொடு கிளத்தலாகவே அமைகின்றது.

    இங்ஙனம், காப்பு மிகுதிக்கண் தலைவனை எண்ணி உறக்கமின்மை, தனிமைச்சூழலை விடத் தலைவனுடன் சென்று துன்பவாழ்க்கையை ஏற்கத் துணியும் மனநிலை, ஊடலைக் கூட வெளிப்படையாகத் தெரிவிக்க இயலாமை போன்ற தலைவியின் நிலை சங்க இலக்கியத்தில் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஊடலில், தலைவன் மீண்டும் தன்னை விட்டுப் பரத்தமை மேற்கொள்வானோ? என்ற அச்சவுணர்வில் பெண் வாழவேண்டிய கட்டாய நிலையினைச் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ளது. இவ்வாறு, தலைவனின் தவறுக்கும் தலைவியே வருந்தி ஒருமுகச் செய்திப்பரிமாற்றமாக நெஞ்சொடு கிளக்கும் அவலத்தைக் காணமுடிகிறது.

    புறப்பாடல்களில் நெஞ்சொடு கிளத்தல்

    சங்க இலக்கியங்களில் பெரும்பாலும் அகப்பாடல்களில் தலைவன், தலைவி போன்றோர் மனதுக்குள் பேசும் நிலையே உள்ளது. இருப்பினும் மனதிற்குள் பேசும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றத்தைப் புறப்பாடல்கள் சிலவற்றிலும் காணமுடிகிறது. புறநானூற்றில் நெஞ்சொடு கிளத்தும் பாடல்கள் உள்ளன. அவற்றில், புலவர்கள் தங்களின் மனவுணர்வுகளை நெஞ்சை விளித்துப் பேசுவதன் வாயிலாகப் புலப்படுத்துகின்றனர்.

    “ஒன்றைப் பற்றி நினைத்தல், மனதிற்குள் சிக்கல்களுக்குத் தீர்வு காணல்,    மனதிற்குள் படித்தல், கணக்குப் போடுதல், சிந்தித்தல், எண்ணங்கள், மனவுறுத்தல்கள் போன்றவை அகத்தொடர்பேயாகும்”5

    என்பர்.

    புறப்பாடல்களில் இதுபோன்ற அகத்தொடர்புச் சூழல்களைக் காணமுடிகிறது. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி இவ்விரு மன்னரும் போரிட்டு விழுப்புண்பட்டு வீழ்ந்து கிடப்பதைக் கண்ட கழாத்தலையார், கணவனை இழந்த மனைவியரின் செயல், பேய்மகளிரின் செயல், பதினெட்டுமொழி பேசும் படைத்தொகுதிகளின் செயல் போன்றவற்றைக் குறித்துத் தம் மனதுக்குள் பேசுகின்றார். இனி இந்த நாடு என்ன ஆகும்? என்ற கழிவிரக்கம் அவர் மனதில் தோன்றுகின்றது. இதனைப் புறநானூறு 62-ஆம் பாடல் உணர்த்துகின்றது. இப்பாடலில் கழாத்தலையார், போர்ப்புறத்து வீழ்ந்த வீரரின் சிறப்பினையும், மகளிர் உடன்கட்டை ஏறும் முறையினையும் கண்டு வருந்திப் பாடுகின்றார். இங்கு, புலவரின் தன்னிரக்க உணர்வு வெளிப்படுகின்றது.

    இளவெளிமானிடம் பரிசில் பெறுவதற்காகச் சென்ற பெருஞ்சித்திரனார், முகம் மாற்றமடைந்து மன்னன் அளிக்கும் பரிசிலைப் பெற்றுக் கொள்ளாமல் மீண்டுவரும் காட்சியினை,

    “எழுஇனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ,
    பருகு அன்ன வேட்கை இல்வழி,
    அருகில் கண்டும் அறியார் போல,
    அகம்நக வாரா முகன்அழி பரிசில்”                                     (புறம்.207: 1-4)

    என்ற அடிகள் சுட்டுகின்றன. புலவரின் அகமன விருப்பத்திற்கு மாறான பரிசில் ஏற்புடையதாகாது என நெஞ்சை விளித்துப் பேசும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றத்தைக் காணமுடிகிறது. பரிசில் பெறச் செல்லும் புறப்பாடலிலும் முகம் திரிந்து கொடுத்தால் பெறுபவரின் மனம் துன்பப்படும் என்று மனம் சார்ந்த அகவுணர்வு வெளிப்படுகின்றது.

    அதியமான், ஒளவையாருக்குப் பரிசில் கொடுக்கும் காலத்தை நீட்டிக்கும் சூழலில் அவர் தன் நெஞ்சிடம், வருத்தம் வேண்டாம். பரிசில் பெறுவது உறுதியே என்று கூறுகின்றார். இதனைப் புறநானூறு 101-ஆம் பாடல் தெரிவிக்கின்றது. பரிசில் பெறுவதற்கான காலம் தாழ்த்தப்பட்டால், புலவர்களின் மனதில் கோபமே உருவாகும். ஆனால் ஒளவையார், பொறுமையாக இருக்கின்றார். அதோடு, பரிசில் தவறாது; வருந்தாதே என்று தன் நெஞ்சுக்குக் கூறுவதாகத் தனக்குத் தானே ஆறுதல் கூறுகின்றார். காரணம், அதியன் மீது கொண்ட நட்பே ஆகும். புலவர்களின் மதிப்பினை உணராமல் இருந்தால் புலவர்களுக்கு கோபம் ஏற்படுவது இயல்பு. ஆனால், அதியனுடன் கொண்ட மேலான நட்பின் காரணமாக ஒளவையின் மனநிலை மாறுபடுகின்றது.

    இங்ஙனம் புலவர்கள் தம் மனஉணர்வுகளை வெளிப்படையாகக் கூறாமல் நெஞ்சொடு பேசும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் வாயிலாகவே வெளிப்படுத்தியுள்ளனர். புறப்பாடல்களிலும் புலவர்களின் மனநிலை என்ற அடிப்படையில் நெஞ்சொடு பேசுவதைக் காணமுடிகிறது. மன்னனை இழந்து தவித்தல், முகம் திரிந்து கொடுக்கும் பரிசிலால் பெறுபவரின் மனம் துன்பப்படுதல், காலம் நீட்டித்துப் பரிசில் கொடுக்கும் சூழலிலும் மேலான நட்பின் காரணமாகப் பொறுத்தல் போன்ற நிலைகளில் நெஞ்சொடு பேசும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் புறப்பாடல்களில் இடம்பெற்றுள்ளது. அதியன் – ஒளவை நட்பு உண்மையானது. தன்மானத்தைக் கூட உண்மை நட்பு விட்டுக் கொடுக்கும் என்பதே இங்கு மீள்தொடர்பாகும்.

    தொகுப்புரை

    சங்கப்பாடல்களில் பேசுவோரைத் தவிர பிறமாந்தர் எதிர்மொழிதல் இல்லாத ஒருமுகச் செய்திப்பரிமாற்றப் பாடல்கள் உள்ளன. ஒருவன் தனக்குத் தானே மனதுக்குள் பேசிக் கொள்வதும், தனக்குத் தானே வாய்திறந்து பேசிக் கொள்வதும் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் எனப்படும். தனக்குத் தானே பேசுதல் என்பது ‘நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி’ என்னும் இருநிலைகளில் நிகழ்கின்றது. சங்கஅக, புறப்பாடல்களில்;, நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி, அஃறிணைப் பொருட்களுடன் பேசுதல் என்ற அடிப்படையில் ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் அமைந்துள்ளது. அகவாழ்வில் இன்ப, துன்ப உணர்வு நிலைகளில் அன்றும் இன்றும் மாற்றம் இல்லை. இன்றைய காலகட்டத்தில் இன்பத்தில் நெஞ்சொடு கிளத்தல் பெரும்பாலும் இல்லையெனினும் துன்பத்தில் நெஞ்சொடு கிளத்தல் (புலம்பல்) என்பது மாறாமல் அப்படியே காணப்படுகின்றது. காப்பு மிகுதிக்கண் தலைவனை எண்ணி உறக்கமின்மை, தனிமைச்சூழலை விடத் தலைவனுடன் சென்று துன்பவாழ்க்கையை ஏற்கத்துணியும் மனநிலை போன்ற தலைவியின் நிலை சங்கஇலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது. தலைவனின் தவறுக்கும் தலைவியே வருந்தி ஒருமுகச் செய்திப்பரிமாற்றமாக நெஞ்சொடு கிளக்கும் அவலத்தைக் காணமுடிகிறது. கேட்போர் இன்றியும், கேட்போர் இருப்பினும் எதிர்மொழி இல்லாமல் ஒருமுகமாகவே செய்திப்பரிமாற்றம் நிகழும் என்பது இக்கட்டுரையில் தெளிவாகின்றது. பெரும்பாலும் துன்ப மனநிலையில் மட்டுமே ஒருமுகச் செய்திப்பரிமாற்றம் நிகழும் என்பது சங்கப் பாடல்கள் வழி இங்கு கண்டறியப்பட்டுள்ளது.

    சான்றெண் விளக்கம்

    1. இராம.பெரிய கருப்பன், சங்க இலக்கிய ஒப்பீடு – இலக்கிய வகைகள், ப.122.
    2. தொல்.பொருள்.பொருளியல், நூ.2
    3. குறள், 1241
    4. சி.இலக்குவனார், வள்ளுவர் கண்ட இல்லறம் அல்லது காதல் வாழ்க்கை, ப.139.
    5. வெ.கிருட்டிணசாமி, தகவல் தொடர்பியல், 1992, ப.144

    துணைநூற் பட்டியல்

    1. அறவாணன், க.ப., – அற்றைநாள் காதலும் வீரமும், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், முதல் பதிப்பு – 2002.
    1. அமிர்த கௌரி, ஆ., – சங்க இலக்கியத்தில் உரையாடல், கவின்கலை அச்சகம், சென்னை – 41. முதல் பதிப்பு – டிசம்பர், 1989.
    1. இராமகிருட்டிணன், ஆ., – அகத்திணை மாந்தர் – ஓர் ஆய்வு, சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை. முதல் பதிப்பு – 1982.
    1. சிவராஜ், து., –  சங்க இலக்கியத்தில் உளவியல், சிவம் பதிப்பகம், வேலூர், 1994.

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    “சங்க இலக்கியத்தில் தலைவி நெஞ்சொடு கிளத்தல்’  என்னுந்  தலைப்பில் அமைந்த இக்கட்டுரையைப் பலமுறை பயின்று கட்டுரையின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி ‘வல்லமை’ முன்மதிப்பீட்டு விதிகளை முழுமையாகக் கருத்திற்கொண்டு செய்யப்படும் மதிப்பீடு

    Ø  எதிர்மறுத்துரைத்தல் உடன்பட்டு இசைதல் என்னும் இவை இயலாத நேர்வுகளிலும் தலைவி தனக்குத்தானே பேசிக் கொள்கிற அகத்திணை மாண்பு சங்க இலக்கியத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பதே கட்டுரையாளர் சொல்லவந்த பொருண்மை என்பதாகக் கொள்ளப்படுகிறது. 

    Ø  அகத்திணைத் தொடர்பான கட்டுரையின் பொருள் விளக்கத்திற்கு மொழியியல் சார்ந்த முன்னுரை எந்த அளவிலும் உதவவில்லை.

    Ø  “அவ்மொழிவழிச் செய்திப் பரிமாற்றத்தின் ஒரு அங்கமாக தலைவி நெஞ்சொடு கிளத்தல் அமைந்துள்ளது” என்னுந் தொடர் ஆய்வுப் பொருண்மையில் கட்டுரையாளருக்குள்ள தடுமாற்றத்தைக் காட்டுவதாக உள்ளது.

    Ø  ‘செய்திப் பரிமாற்றம்’ என்பது பழங்கால மொழி வளர்ச்சி மற்றும் தற்கால ஊடகவியல் தொடர்பான கருத்தியல் சார்ந்ததொரு சொற்றொடர். நெஞ்சொடு கிளத்தல், நெஞ்சொடு புலத்தல் முதலியன பழந்தமிழ் அகப்பொருள் சார்ந்த புலனெறி வழக்கம். இந்த நுண்ணியத்தைக் கட்டுரை வெளிப்படுத்தியிருப்பதாகத் தெரியவில்லை.

    Ø  ‘ஒருமுகச் செய்திப் பரிமாற்றம்’ என்பது கட்டுரையாளர் தனக்குத்தானே வடிமைத்துக் கொண்ட சொல்லாகவே தெரிகிறது.

    Ø  கிளத்தல், புலத்தல் என்பனவற்றிற்கும் பரிமாறுதல் என்பதற்கும் உள்ள உறவு நிலை விளக்கப்படவில்லை. கிளத்தல் – சொல்லுதல், புலத்தல் – ஊடுதல்.

    Ø  கட்டுரையின் தலைப்பும் உள்ளடக்கமும் தலைவியின் தனிமைப் புலம்பலையே முன்னெடுப்பதாக அமைந்துள்ளன.

    Ø  ‘நெஞ்சொடு கிளத்தல்’ (125), ‘நெஞ்சொடு புலத்தல்’ (130) என்னும் இரண்டு அதிகாரங்கள் திருக்குறளில் உண்டு.

    Ø  கட்டுரையாசிரியர் காட்டுகின்ற “நோயும் இன்பமும் இருவகை நிலையில்” எனத் தொடங்கும் தொல்காப்பிய நூற்பா (1142) வின் உள்ளடக்கத்திற்கும் ஒருமுகச் செய்திப் பரிமாற்றத்திற்கும் எள்ளின் முனையளவும் தொடர்பிருப்பதாகக் கருதமுடியவில்லை.

    Ø  இருதிணை பொருளமைதியை நச்சினார்க்கினியர் ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறார். கட்டுரையாசிரியர் நெஞ்சொடு கிளத்தலை இருதிணைக்குமான பாடல்களோடு ஒப்பிட்டுக் காட்டியிருப்பது பொருத்தமுள்ளதாகத் தெரியவில்லை.

    Ø  பிரிவில் புலம்பும் தலைவியின் வெளிப்பாடும், வறுமை தீர்க்கப்படவில்லையே என்னும் விரக்தியில் துன்புறும் புலவனின் வெளிப்பாடும் அடிப்படையில் வேறானவை.

    Ø  ‘புலவர்களுக்கு கோபம்’, ‘மனதில்’, ‘அன்றி தலைவியும்’’ முதலிய தொடர்களில் இழையும் சந்திப்பிழைகளும், ‘இதைப் போன்றே’, ‘ஒரு அங்கம்’ முதலிய தொடர்களில் தோன்றும் பிழைகளும் கட்டுரையாளரின் புலமைக்கு உகந்தவையல்ல.

    Ø  நெஞ்சொடு கிளத்தல் பற்றிய செய்திகளைத் தொகுத்துத் தருவதே கட்டுரையாளர் நோக்கமெனின் அதில் ஆய்வுச் சிக்கல் எங்கே வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள இயலவில்லை.

    Ø  எந்தச் சிக்கலை விடுவிப்பதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்பது தெளிவாக்கப்படல் வேண்டும்.

    Ø  ஆய்வுக் கட்டுரையெனின் அதற்கான நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு உருவாக்கம் செய்யப்படல் வேண்டும்.

    இந்த மதிப்பீட்டின் அடிப்படையிலும் பழந்தமிழ் அகம் சார்ந்த கூற்றுப் பகுதியைத் தற்காலத் தமிழியல் ஆய்வுலகிற்கு அறிமுகம் செய்த அடிப்படையிலும் இந்தக் கட்டுரையை ஆய்வுக் கட்டுரையாக அல்லாது, இலக்கியக் கட்டுரை என்ற பகுதியில் வெளியிடுகிறோம்.

    Share
  • ஒரே ஒரு இட்லி (சிறுகதை)

    ஒரே ஒரு இட்லி (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    “அம்மா! எனக்கு இன்னும் ஒரு இட்லி!” சமையலறைக்கு வெளியே இருந்த இடத்தில் தரையில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த மாது கத்தினான்.

    ஓயாத பசி ஏன் என்று யோசித்ததில் இன்னும் அதிகமாகப் பசித்தது. அந்த பதினைந்து வயதுப் பையனுக்கு உடலை வளர்க்க வேறு வழி கிடையாது என்பது புரியவில்லை.

    ஒரே மகனை அகாலத்தில் பறிகொடுத்த துக்கம் ஆறாது, சற்றுத் தொலைவில் காலை நீட்டியபடி உட்கார்ந்திருந்த பாட்டிக்கு ஆத்திரம் பொங்கியது. “அதான் இந்த வயசிலேயே அப்பனை முழுங்கிட்டியே! போதாதா? இன்னும் இட்லியை வேற முழுங்கணுமா?” என்று பதிலுக்குக் கத்தினாள்.

    அவ்வளவுதான். தட்டை ஒரு பெரிய ஓசையுடன் தள்ளிவிட்டு, கையைக்கூடக் கழுவாது வாசலை நோக்கி நடந்தான் பையன்.

    அவன் கேட்டபடி இட்லியை எடுத்துக்கொண்டு வந்தவள், “இட்லி கொண்டுவான்னு என்னைக் கேட்டுட்டு, எங்கே போறான்?” என்றாள் முணுமுணுப்பாக.

    “சுப்பு போனதிலிருந்தே இவனுக்கு மூளை சரியில்லை!” என்று அனுமானித்தாள் பாட்டி. “எவ்வளவு கட்டுப்பாடா வளர்த்தார் தாத்தா!” என்று என்றோ இறந்துபோன கணவரை நினைத்துப் பெருமூச்சு விட்டாள்.

    `கட்டுப்பாடு,’ `ஒழுக்கம்’ என்று நினைத்து, கையில் பிரம்புடன் அவன் பின்னாலேயே நடந்தவர் அந்தத் தாத்தா.

    “ரெண்டு வயசுக் குழந்தையை ஏம்பா ஓயாம திட்டறீங்க? அதுக்கு என்ன தெரியும்?” என்று கெஞ்சலாகக் கேட்ட மகனை அலட்சியமாகப் பார்த்தார் கிழவர்.

    “ஆண்பிள்ளையை அடிச்சு, மிரட்டி வளர்க்கணும். அப்போதான் கெட்டுப்போக மாட்டான். கடைசிக் காலத்திலே நமக்கு ஆதரவா இருப்பான்,” என்று உபதேசித்தார். “இப்போ நீ இல்லியா?”

    தந்தை கையால் தான் வாங்கிய அடிகள் நினைவிலெழ, அதன்பின் மகன் வாயைத் திறக்கவில்லை. தன் சிறு வயதில் தான் அடைந்த ஆத்திரம், ஆனால் அப்பாவை எதிர்த்து எதுவும் செய்ய இயலாத கையாலாகாத்தனம், அதுவே தன்னையும் எளிதில் உணர்ச்சிவசப்படுத்துகிறவனாக மாற்றியது – எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தன.

    அதன்பின் தந்தையைப் பிடிக்காது போக, `வயதில் மூத்தவர்களே இப்படித்தான்!’ என்றெழுந்த கசப்பு ஆசிரியர்களையும்கூட வெறுக்க வைத்தது.

    அரைகுறையாகப் படிப்பு நின்றுபோனது நிம்மதியாக இருந்தது. `படி, படி’ என்று அப்பா இனி உயிரை வாங்கமாட்டார்.

    தனக்கென ஒரு குடும்பம் அமைந்த பின்னர்தான் தோன்றியது சுப்புவுக்கு, அப்பாவை எதிர்ப்பதாக நினைத்து, படிப்பை நிறுத்தியது சரியில்லையோ என்று. எதுவும் மாறவில்லை — அப்பாவிற்குப் பதில் மேலதிகாரி, ஓயாது அவனிடம் குற்றம் கண்டுபிடிக்கத், தன் மனப்பொருமலை மனைவியை அடக்கி ஆள்வதன் மூலம் தணித்துக்கொள்ளப் பார்த்தான். ஆனால் நிம்மதி என்னவோ கிடைக்கவில்லை. `இதென்ன வாழ்க்கை!’ என்ற கசப்புதான் மிஞ்சியது.

    `இதென்ன வாழ்க்கை!’ என்ற கசப்பு எழ, வேகமாக நடந்த மாதுவுக்கு ரயில் நிலையத்தைப் பார்த்ததும் ஒரு வழி தோன்றியது.

    முதலிலேயே தண்டவாளத்தின்மேல் படுத்துக்கொண்டால், யாராவது பார்த்து, எழுப்பி விடுவார்கள் என்று யோசித்து, பிளாட்பாரத்தின் ஓரத்தில் நின்றுகொண்டான்.

    ஒரு கை அவனைப் பிடித்து இழுத்தது. “தம்பி! விழுந்துடப் போறே!”

    “விடுங்க,” என்று திமிறினான். “நான் சாகணும்”.

    அந்த மனிதருக்கு அறுபது வயதிருக்கும். “ஏம்பா? பெயிலாயிட்டியா?” குரலில் கனிவு.

    “ஊகும்”.

    “பின்னே?”

    “அப்பா செத்துப் போயிட்டாரு!”

    “அடப்பாவமே! துக்கம் தாங்காமதான் இந்த முடிவுக்கு வந்தியா?” தனக்குள் கேட்டுக்கொள்வதுபோல் பேசியவர், “வா! காண்டீனில் சாப்பிட்டபடியே பேசலாம்,” என்று, அவனை எதுவும் பேசவிடாது அழைத்தார். பிடித்த கை இன்னும் இறுகியிருந்தது.

    “காலையில ஏதாச்சும் சாப்பிட்டியா?” அவன் சாப்பிட்ட வேகம் அப்படிக் கேட்கவைத்தது.

    “ஒரே ஒரு இட்லி!” சுயபரிதாபத்துடன் வந்தது குரல். “இன்னொண்ணு கேட்டப்போ எங்க பாட்டி `அதான் அப்பனை முழுங்கிட்டியே’! ன்னு..,” குரல் விக்கியது.

    “அப்பாவோட அம்மாவா?”

    “ம்!”

    “பாவம்! அவங்க துக்கத்தை ஒம்மேல ஆத்திரமா காட்டி இருக்காங்க. நீ செத்துப்போனா, ஒங்கம்மாவும் பிள்ளையைப் பறிகொடுத்த வருத்தத்திலே இப்படித்தானே ஆகிடுவாங்க?”

    வாயருகே போன கை நின்றது. தன் உணர்ச்சிகளிலேயே ஆழ்ந்துபோன தனக்கு ஏன் அம்மாவைப் பற்றியும் நினைக்கத் தோன்றவில்லை?

    அம்மா!

    வாயில்லாப்பூச்சி!

    வீட்டுக்கு வெளியில் தன்னைப் பிறர் நடத்தியதுபோல் மனைவியிடம் அதிகாரம் செலுத்திய கணவன், மகனை மிஞ்சிய மாமியார்.

    தானும் போய்விட்டால், அந்த அப்பாவி அம்மாவின் கதி?

    அவனையே பார்த்துக்கொண்டிருந்தவருக்கு அவனுடைய மனநிலை புரிந்திருக்க வேண்டும். “சீக்கிரமா சாப்பிடு. அடுத்த ரயில் வரப்போ, தண்டவாளத்திலே குதிக்கத் தெம்பு வேணாம்?” என்றார் கேலியாக.

    அவருடைய சிரிப்பில் அவனும் கலந்துகொண்டான்.

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 6

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 6

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • சாட்ஜிபிடியின் சொதப்பல்கள்

    சாட்ஜிபிடியின் சொதப்பல்கள்

    பெரும் கவனம் பெற்றிருக்கும் சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவுச் செயலி, தமிழில் உரையாடும்போது பல நேரங்களில் சொதப்புகிறது. இன்று அந்தச் செயலியுடன் என் உரையாடல் இங்கே.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • 2023 நிதிநிலை எப்படி இருக்கும்?

    2023 நிதிநிலை எப்படி இருக்கும்?

    2023 நிதிநிலை எப்படி இருக்கும்? எந்த எந்தத் துறைகள் முன்னேற்றம் காணும்? முதலீட்டாளர்களுக்கு இந்த ஆண்டு எத்தகைய லாபத்தைத் தரும்? அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர் ராமகிருஷ்ணன் நாயக் உடன் ஒரு நேர்காணல்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • பிரபஞ்ச ஒளிமந்தை [Galaxy] இயக்குவது நியூட்டனின் புலப்படா புற இயக்கி [External Dark Force]

    பிரபஞ்ச ஒளிமந்தை [Galaxy] இயக்குவது நியூட்டனின் புலப்படா புற இயக்கி [External Dark Force]

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பிரபஞ்சக் குயவனின்
    மர்மக் களிமண்
    கண்ணுக்குத் தெரியாத
    கருமைப் பிண்டம் !
    கண்ணுக்குப் புலப்படாத
    கருமைச் சக்தி,
    பிரபஞ்சச் சக்கரத்தின்
    இயக்க சக்தி !
    கவர்ச்சிக்கு எதிராக நியூட்டன்
    புலப்படா புற இயக்கி,
    முதல் விதியில் எழுதி உளது .
    கைத்திறன் காண்பது படைப்பாளி
    மெய்வினை உணர்வது,
    தாரணி
    காரண நிகழ்ச்சி அறிவது,
    அற்புத மனிதனின் கற்பனை
    மகத்துவம் !

    **************

    A change in velocity means, by definition, that there is acceleration. Newton’s first law says that a net external force causes a change in motion; thus, we see that a net external force causes nonzero acceleration. We defined external force in Forces as force acting on an object or system that originates outside of the object or system.

    Newton’s First Law of Universal Dynamics

    நியூட்டனின் புலப்படும் அக இயக்கிகள் / புலப்படா புற இயக்கிகள்

    நமது பூகோளத்திலும், விண்மீன்களிலும் பிரபஞ்ச சக்தி தேய்வு (Entropy) தீவிரமாய் மிகையாகிக் கொண்டு வருகிறது.  அதாவது சிறுகச் சிறுக முடிவிலே விண்மீன்களில் அணுக்கரு எரிசக்தி தீர்ந்துபோய் அவை செத்து வெறும் கனலற்ற பிண்டமாகி விடும்.  விண்மீன்கள் அவ்விதம் ஒவ்வொன்றாய்ச் சுடரொளி மங்கிப் பிரபஞ்சமானது ஒருகாலத்தில் இருண்ட கண்டமாகிவிடும்.

    டாக்டர் மிசியோ காக்கு, (அகிலவியல் விஞ்ஞான மேதை)

    1998 ஆண்டுக்கு முன்னால் “கருமைச் சக்தி” என்னும் ஓர் விஞ்ஞானக் கருத்தை யாரும் கேள்விப்பட்ட தில்லை !  கருமைச் சக்தி என்பது அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) ! அது முக்கியமாகக் காலாக்ஸிகளின் நகர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.  அத்துடன் காலாக்ஸிகளின் வடிவங்களைச் சிற்பியைப் போல் செதுக்கி, அவை ஒன்றையொன்று மோதிக் கொள்ளாதவாது அவற்றுள் இடைவெளிகளை ஏற்படுத்திக் கொண்டும் வருகிறது.

    கிரிஸ்டொஃபர் கன்ஸிலிஸ்  (வானோக்காளர், நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகம்)

    அகிலத்தின் மர்மப் புதிர்களை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள்

    பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராயப் புகுந்த காலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஜார்க் காமாவ், கார்ல் சேகன், சுப்ரமணியன் சந்திரசேகர், ஸ்டீஃபென் ஹாக்கிங் ஆகிய விஞ்ஞான மேதைகளின் அணியில் நின்று, இப்போது இந்தியாவில் விஞ்ஞானப் பணி புரிந்து வருபவர், டாக்டர் ஜெயந்த் நர்லிகர்! உலகப் புகழ் பெற்ற நர்லிகர், வானோக்கியல், வானவியல் பெளதிகம், அகிலவியல் ஆகிய துறைகளுக்குத் [Astronomy, Astrophysics, Cosmology] பெருமளவு பங்கை அளித்துள்ளவர். பிரபஞ்சத் தோற்றத்தின் ஆதி வரலாற்றையும், பிற்பாட்டு விரிவையும் விளக்கும் பெரும்பான்மையோர் ஒப்புக் கொண்ட ‘பெரு வெடிப்பு அகிலவியல் நியதிக்குச் ‘ [Big Bang Cosmology Theory] சவால்விடும் முறையில், விஞ்ஞானிகள் வேறுபட்ட கோட்பாடுகளில் ஆராய்ச்சிகள் புரிந்திட வழி வகுத்தன,

    நர்லிகரின் அடிப்படை விஞ்ஞானப் பணிகள்!

    ஜெயந்த் நர்லிகர் அகிலவியல் துறையில் ஆய்வுகள் புரியும் ஓர் ஆராய்ச்சி விஞ்ஞானி [Cosmology Researcher]. அகிலவியல் ஆய்வு பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான அமைப்பைப் பற்றியது. பிரபஞ்சம் எத்துணை அளவு பெருத்த உடம்பை உடையது ? அது எத்தகைய உபரிப் பண்டங்களால் ஆக்கப்பட்டது ? ஒரு பெரும் பிரளயத்தில் இந்தப் பிரபஞ்சம் உண்டானதா ? அந்த முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு நேர்ந்த தொடர் விளைவுகள் யாவை ? அண்ட வெளியில் உயிர்ஜீவிகள் எவ்விதம், எங்கே தோன்றின ? பிரபஞ்சத்தின் இறுதி முடிவுதான் என்ன ? அகிலாண்டத்தின் மர்மமான, புதிரான, நூதனமான, விந்தையான இந்த வினாக்களுக்குப் பதில் தேடிய முற்கால விஞ்ஞானிகள், தேடிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தற்கால விஞ்ஞானிகளின் வரிசையில் வருபவர், ஜெயந்த் நர்லிகர்!


    நர்லிகர் தன் குருவான பிரிட்டிஷ் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயிலுடன் [Fred Hoyle (1915-2001)] இணைந்து ஆக்கி முடித்த ‘நெறிக்குட்படும் ஈர்ப்பு நியதியை ‘ [Conformal Theory of Gravity], ஹாயில்-நர்லிகர் ஈர்ப்பியல் நியதியாக [Hoyle-Narlikar Theory of Gravitation] தற்போது விஞ்ஞானச் சகபாடிகள் ஏற்றுக் கொள்கிறார்கள். குவஸார்ஸ் [போலி விண்மீன் கதிரலை எழுப்பிகள்], மிகுசக்தி வானியல் பெளதிகம், குவாண்டம் அகிலவியல், தூர மின்னாட்டம் [Quasars, High Energy Astrophysics, Quantum Cosmology, Distance Electrodynamics] ஆகிய விஞ்ஞானத் துறைகளுக்கு ஜெயந்த் நர்லிகர் பெருமளவில் தன் படைப்புகளை அளித்துள்ளார்.

    பிரிட்டிஷ் மேதை ஃபிரெட் ஹாயிலுடன் நர்லிகர் செய்த ஆராய்ச்சிகள்

    பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கிய பிரிட்டிஷ் விஞ்ஞானி டாக்டர் ஃபிரெட் ஹாயில்தான் [Dr. Fred Hoyle (1915-2001)] ‘பொதுநிலை அமைப்புப் பிரபஞ்ச பெரு வெடிப்பு நியதி ‘[Standard Theory of the Origin of Universe (The Big Bang Theory)] என்னும் பதங்களை முதலில் பறைசாற்றியவர்! ஆனால் அந்த நியதியை ஏற்றுக் கொள்ளாது ஹாயில் புறக்கணித்தவர்! அதற்கு மாறாக ஃபிரெட் ஹாயில் தனது ‘நிரந்தரநிலை அமைப்புப் பிரபஞ்சத்தை’ [Steady State Theory of the Universe] பிரகடனம் செய்தார் ! ஆனால் தற்போது ஹாயிலின் கோட்பாடை நம்புவோர் எண்ணிக்கை சிறிது சிறிதாய்க் குறைந்து கொண்டே வருகிறது!

    ஹாயில் நர்லிகர் இருவரும் பறைசாற்றிய ‘நிரந்தரநிலை நியதி ‘ ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய ‘பொது ஒப்புமை நியதியின் ‘ [General Theory of Relativity] அரங்கிற்குள் அடங்கிப் பிண்டம் தொடர்ந்து உருவாகும் [Continuous Creation of Matter] ஒரு நடப்பானக் கோட்பாடை முதன்முதலில் கூறியது.  ஜெயந்த் நர்லிகரும் ஃபிரெட் ஹாயிலும் படைத்த ‘பிரபஞ்சத் தோற்றத்தின் நிரந்தரநிலை நியதியை ‘ [Steady State Theory of the Universe], நம்பி வருபவர் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது !  காரணம் பெரு வெடிப்பு நியதியை நம்பி வானாராய்ச்சி செய்து வருபவர்கள், புதிதாகக் கண்டுபிடித்த கருமைப் பிண்டம், கருமைச் சக்தி ஆகிய கோட்பாடுகள் பெரு வெடிப்பு நியதியின் நிழலாகப் பின் தொடர்கின்றன.

    பிரபஞ்சக் கூண்டுக்குள்ளே இருக்கும் புதிரான பொருட்கள் என்ன ?

    காரிருள் விண்வெளி எங்கணும் குவிந்த குடைபோல் பரந்து விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தின் கூண்டுக்குள்ளே சிதறிக் கிடக்கும் பொருள்கள் என்ன ?  சூரியன், சூரிய மண்டலம், சூரிய மண்டலத்தைப் போல் பல்லாயிரம் கோடி விண்மீன்களின் ஒளிக் குடும்பங்கள் கொண்ட நமது பால்மய வீதி, பால்மய வீதி போல் கோடான கோடி ஒளிமய மந்தைகள் கொண்டது பிரபஞ்சம் !  அவை எல்லாம் போக கருமையாகத் தெரியும் பரந்த கரு விண்ணில் உள்ளவைதான் என்ன ?  அவை எல்லாம் சூனிய மண்டலமா ? வெறும் இருள் மண்டலமா ?

    சுமாராகச் சொல்லப் போனால் பிரபஞ்சத்தில் 75% கருமைச் சக்தி (Dark Energy), 21% கருமைப் பிண்டம் (Dark Matter) 4% தான் சூரிய மண்டலம் போன்ற ஒளிமய மந்தைகள் (Normal Matter).  விபரமாகச் சொன்னால் கருமைச் சக்தி 65%, கருமைப் பிண்டம் 30%, விண்மீன்கள் 0.5% [Stars],  உலவும் ஹைடிரஜன், ஹீலியம் சேர்ந்து 4% [Free Hydrogen & Helium], கன மூலகங்கள் 0.03% [Heavy Elements], மாய நியூடிரினோக்கள் 0.3% [Ghostly Neutrinos].  இவற்றில் நமக்குப் புரியாமல் புதிராகப் இருக்கும் கருமைப் பிண்டம் என்பது என்ன ?  ஒளிச்சக்தி, ஒலிச்சக்தி, மின்சக்தி, காந்த சக்தி, அணுசக்தி, ஈர்ப்புச் சக்தி போலத் தெரியும் பிரபஞ்சத்தின் புதிரான கருமைச் சக்தி என்பது என்ன ?

    கருமைப் பிண்டம் செய்வ தென்ன ? கருமைச் சக்தி செய்வ தென்ன?  

    சூரியனைப் போன்று கோடான கோடி விண்மீன்களைக் கொண்ட நமது பால்மய வீதியின் விண்மீன் எதுவும் அந்த காலாக்ஸியை விட்டு வெளியே ஓடி விடாதபடி ஏதோ ஒன்று கட்டுப்படுத்தி வருகிறது.  அதாவது அத்தனை விண்மீன்களின் அசுரத்தனமான ஈர்ப்பு ஆற்றல்களை அடக்கிக் கட்டுப்படுத்த ஏதோ பேரளவு ஆற்றல் உள்ள ஒன்று அல்லது பல பிண்டம் (Matter) அல்லது பிண்டங்கள் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஊகித்தனர்.  நமது பால்மய காலாக்ஸியில் அவை எங்கே மறைந்துள்ளன என்று ஆழ்ந்து சிந்தித்த போதுதான் காலாஸியில் கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்டத்தின் இருப்பு (The Existance of Dark Matter) பற்றி அறிய முடிந்தது.

    1930 இல் டச் வானியல் மேதை ஜான் ஓர்ட் (Jan Oort) சூரியனுக்கருகில் விண்மீன்களின் நகர்ச்சிகளை ஆராயும் போது,  முதன்முதல் கரும் பிண்டத்தின் அடிப்படை பற்றிய தன்மையை அறிந்தார்.  அவரது அதிசய யூகம் இதுதான்.  நமது பால்மய வீதி போன்று, பல்லாயிர ஒளிமய மந்தைகள், (Galaxies) மந்தை ஆடுகள் போல் அடைபட்ட ஒரே தீவுகளாய் சிதைவில்லாமல் தொடர்ந்து நகர்கின்றன.  அதாவது அந்த மந்தை அண்டங்கள் வெளியேறாத படி ஒன்றாய் குவிந்திருக்க மகாப் பெரும் கனமுள்ள பொருட்கள் அவற்றில் நிச்சயம் பேரளவில் இருக்க வேண்டும் என்று நம்பினார்.  கனமான அந்த பொருட்களே விண்மீன்கள் தப்பி ஓடாதபடி, காலாக்ஸின் மையத்தை நோக்கிக் கவர்ச்சி விசையால் இழுத்து வைக்கின்றன என்று திட்டமாகக் கண்டறிந்தார்.

    1998 ஆண்டுக்கு முன்னால் “கருமைச் சக்தி” என்னும் ஓர் விஞ்ஞானக் கருத்தை யாரும் கேள்விப்பட்ட தில்லை !  கருமைச் சக்தி அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) ! அது முக்கியமாகக் காலாக்ஸிகளின் நகர்ச்சியைக் கட்டுப் படுத்துகிறது.  அத்துடன் காலாக்ஸிகளின் வடிவங்களைச் சிற்பி போல் செதுக்கி, அவை ஒன்றையொன்று மோதிக் கொள்ளாதவாது அவற்றுள் இடைவெளிகளை ஏற்படுத்தியும் வருகிறது என்று கூறுகிறார், பிரிட்டன் நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகத்தின் பேருரையாளரும், வானோக்காளரும் ஆகிய கிரிஸ்டொஃபர் கன்ஸிலிஸ் (Christopher Conselice)


    கருமைப் பிண்டமும், கருமைச் சக்தியும் (Dark Matter & Dark Energy) பிரபஞ்சப் படைப்பின் கண்ணுக்குத் தெரியாத மர்மக் கருவிகள்.  கண்ணுக்குத் தெரியாத படைப்பு மூலத்தின் பிரபஞ்ச இயக்கக் கருவிகள் அவை இரண்டும் !  நியூட்டன் கண்டுபிடித்த ஈர்ப்பு விசை விண்மீனையும் அண்டங்களையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஓர் குறிப்பிட்ட விண்வெளிச் சூழலில் இயக்கிய வண்ணம் உள்ளது.  அதுபோல கருமைப் பிண்டத்தின் அசுரக் கவர்ச்சி விசை காலாக்ஸியில் உள்ள விண்மீன்கள் தமக்குரிய இருக்கையில் இயங்கி எங்கும் ஓடிவிடாதபடி இறுக்கிப் பிடித்துக் கொண்டு வருகிறது.

    கருமைச் சக்தி பிரபஞ்சத்தில் என்ன செய்கிறது? பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறிச் சென்று உண்டான காலாக்ஸிகள் நியூட்டனின் நியதிப்படி நகரும் தீவுகளாய் மிதந்து செல்கின்றன !  ஆற்றல் மிக்க மிகப் பெரும் தொலைநோக்கிகள் மூலமாக நோக்கும் போது, பிரபஞ்ச விளிம்புகளில் நகரும் தொலைத்தூர காலாக்ஸியின் வேகம் மிகுந்து விரைவாகுவதை (Acceleration of Galaxies) விஞ்ஞானிகள் கண்டனர் !  நியூட்டனின் அடுத்தொரு நியதிப்படி தனிப்பட்ட தொரு விசையின்றி காலாக்ஸிகளின் வேகம் மிகுதியாக முடியாது.  அந்த காரண-காரிய யூகத்தில்தான் காலாக்ஸிகளைத் தள்ளும் கருமைச் சக்தியின் இருப்பை விஞ்ஞானிகள் உறுதியாகச் சிந்தித்துக் கூறினர் !

    பிரபஞ்சத்தின் கண்ணுக்குத் தெரியாத மர்மக் கருவிகள்

    பிரபஞ்சத்தின் மர்ம விதிகள், புதிரான நியதிகள் பல இன்னும் நிரூபிக்கப் படாமல்தான் இருக்கின்றன.  பிரபஞ்சத்தின் விரிவு அல்லது சுருக்கத்தைத் தீர்மானிக்க கருமைப் பிண்டத்தின் இருப்பைத் தெளிவு படுத்தும் பிரச்சனை ! கருமைப் பிண்டம் “காணாத திணிவு” (Missing Mass) என்றும் அழைக்கப் படுகிறது.  பிரபஞ்சப் பொருட்களின் 90% திணிவாக கருமைப் பிண்டம் கருதப் படுகிறது. அவை பெரும்பாலும் செத்த விண்மீன்கள், கருங்குழிகள், புலப்படாத துகள்கள் (Dead Stars, Black Holes & Unknown Exotic Particles).  கண்ணுக்குத் தெரியும் பொருட்களின் மீது படும் அசுரக் கவர்ச்சி விசையை அறியும் போது, விஞ்ஞானிகள் கண்ணுக்குத் தெரிவதை விட, மிகையாகத் தெரியாத பொருட்கள் இருப்பதை நம்புகிறார்கள்.  அது மெய்யானால் பிரபஞ்ச விரிவைத் தடுத்து மீட்கக் கூடிய பேரளவுத் திணிவு உள்ளதென்றும், அது முடிவாகத் திரண்டு பிரளயத் சிதைவடைந்து (Eventual Collapse) “மூடிய பிரபஞ்ச நியதியை” (Closed Universe Theory) உறுதியாக்கச் செய்கிறது.

    1998 இல் விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தில் சுமார் 75% மேவி அகிலத்தைக் கையிக்குள் இறுக்கிப் பித்து நம்மைச் சுற்றியுள்ள கருமைச் சக்தியைப் பற்றிக் கண்டுபிடித்தார்கள் !  அதன் இருப்பைத் தெரியாது நாம் குருடராய் இருந்திருக்கிறோம்.  அகிலக் கூண்டைப் பெருமளவில் ஆக்கிரமித்துள்ளதைத் தவிர, இந்தக் கருமைச் சக்தியின் நிலைப்புத் தன்மை நீடித்தால், தற்போதைய பௌதிகக் கோட்பாடுகள் விருத்தி செய்யப்பட வேண்டும்.


    பிரபஞ்சத்தில் கருமைச் சக்தி ஆட்சியின் கைத்திறன் ! 

    காலாக்ஸியின் தோற்றக் கோட்பாடுகளில் இடையிடையே சேராமல் இருக்கும் ஐயப்பாடுகளை இணைக்கும் ஓர் இணைப்பியாக கருமைச் சக்தி எண்ணப் படலாம்.  அவற்றில் ஒரு முடிவு காலாக்ஸிகளின் ஈர்ப்பாற்றல் விரிவைத் தடுப்பதில்லை (Galaxies’s Gravity does not resist Expansion).  சுருக்கமாக விளக்கினால் கீழ்க்காணும் முறையில் கருமைச் சக்தியைப் பற்றிச் சொல்லலாம் :

    1.  கண்ணுக்குப் புலப்படாமல் பிரபஞ்ச முழுமையாக ஓர் அசுர விலக்கு விசையாக (Anti-Gravity Force) ஆட்சி செய்யும் கருமைச் சக்தி “அகில விரைவாக்கி” (Cosmic Accelerator) என்று குறிப்பிடப் படுகிறது.

    2.  பிரபஞ்சத்துக் குள்ளே இருக்கும் பொருட்களின் மீது கருமைச் சக்தி விளைவிக்கும் இரண்டாம் தரப் பாதிப்புகள் (Secondary Effects) என்ன வென்றால் :  பெரும்பான்மை அளவில் பிண்டத்தின் நுண்மை துகள் சீரமைப்பை (Filigree Pattern of Matter) அறிய உதவியது.  சிறுபான்மை அளவில் ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே “காலாக்ஸி முந்திரிக் கொத்துகள்” வளர்ச்சியை கருமைச் சக்தி நெறித்தது (Choked off the Growth of Galaxy Clusters) !

    3.  மிக்க சிறிய அளவில் கருமைச் சக்தி காலாக்ஸிகள் ஒன்றுடன் ஒன்று இழுத்துக் கொள்வதையும், மோதிக் கொள்வதையும், பின்னிக் கொள்வதையும் குறைத்துள்ளது !  அவ்வியக்கங்கள் காலாக்ஸிகள் உருவாகச் சிற்ப வேலை புரிகின்றன.  கருமைச் சக்தி வலுவற்றதாகவோ, வல்லமை யுற்றதாகவோ இருந்திருந்தால், நமது பால்மய காலாக்ஸி மெதுவாக உருவாகி இருக்கும் !  அதனால் நமது பூகோளத்தில் நிரம்பியுள்ள “கன மூலகங்கள்” (Heavy Elements) பிணைந்து கொண்டு தாதுக்களாய்ச் சேராமல் போயிருக்கும்.

    (தொடரும்)

    *********************

    தகவல் :

    Picture Credit : 1. Astronomy (August 21, 2007) 2.  Universe 6th Edition (2002)  3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004)

    1.  Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)
    2.  Universe By Roger Freedman & William Kaufmann III (2002)
    3.  National Geographic Encyclopedia of Space By Linda Glover.
    4.  The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)
    5.  Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)
    6.  BBC News – Hubble Obtains Deepest Space View By Dr. David Whitehouse, Science Editor (Jan 16, 2004)
    7.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html (பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள்)
    8.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310231&format=html (ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்!
    9.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40211102&format=html (பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் [George Gamow (1904-1968)]
    10. Cosmic Collision Sheds Light on Mystery on Dark Matter [www.dailygalaxy.com/my_weblog/2007/05/dark_matter_hub.html  (May 16, 2007)
    11. “Beyond Einstein” Search for Dark Energy of the Universe
    [www.dailygalaxy.com/my_weblog/2007/07/beyond-einstein.html  (July 10, 2007)
    12.  Dark Matter & Dark Energy: Are they one & the Same ? Senior Science Writer [www.space.com/scienceastronomy/mystery_monday_040712.html  (April 12, 2007)
    13 Dark Energy By LSST Observatory – The New Sky (www.lsst.org/Science/darkenergy.shtml)
    14. Stephen Hawking’s Universe By John Boslough (1985)
    15. The Hyperspace By: Michio Kaku (1994)
    16. The New York Public Library Science Desk Reference (1995)
    17. Scientific American “The Cosmic Grip of Dark Energy” By Christopher Conselice (Feb 2007).

    Share
  • அழகிய மீன்கொத்தி

    அழகிய மீன்கொத்தி

    அழகிய வண்ணமயமான மீன்கொத்தி, குளித்து முடித்து வந்த பிறகு தன் உடலை எப்படியெல்லாம் நீவி, கோதி, சிலுப்பி, உலர்த்தி அனுபவிக்கிறது என்று பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • வால் காக்கையின் குரல்

    வால் காக்கையின் குரல்

    வால்காக்கையின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? கோகீ கோகீ எனக் குரல் எழுப்பும் என்பர். ஆனால், வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு குரல் எழுப்பும். துணைப் பறவையை அழைக்கும் இதன் இனிய குரலைக் கேளுங்கள். இதன் குரலுக்கு இடையிடையே இதன் துணைப் பறவை எதிர்க்குரல் கொடுக்கிறது. அது குரல் கொடுக்கிறதா என அவ்வப்போது பார்த்துக்கொள்கிறது. ஆனால், பதில் வந்தாலும் வராவிட்டாலும் இடைவிடாமல் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. மன்றாடி, மன்னிப்புக் கேட்பது போல் இது இருக்கிறதா? கேட்டுச் சொல்லுங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 6

    ஈழம் தந்த பிள்ளைத்தமிழ் நூல்கள் – 6

    மீனாட்சி பாலகணேஷ்

    இனி கையில் கிடைத்துள்ள அம்பிகை மீதான எஞ்சிய இரு பிள்ளைத்தமிழ் நூல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

    6. சுதுமலை புவனேசுவரி பிள்ளைத்தமிழ்

    சுதுமலை இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊர். புவனேசுவரி அன்னைக்கான ஆலயம் இங்கு அமைந்துள்ளது. இந்த அன்னையின்மீது ஒரு அழகிய பிள்ளைத்தமிழ் நூல் பண்டிதர் மு. கந்தையா அவர்களால் இயற்றப்பெற்று1987-ல் வெளியானது.

    பிள்ளைத்தமிழின் கூறுகள் அனைத்தையும் கொண்டு பத்துப்பருவங்களில் பத்துப்பத்துப் பாடல்களுடன் பெருமைபெற விளங்குகிறது. இதன் நயங்கள் சிலவற்றைக் காண்போம்.

    சப்பாணிப்பருவத்தின் முதற்பாடல், மிக அருமையாக உள்ள ஒரு பாடல்:

    தாமரைமலரில் வைத்த பவளச் செப்பொன்று சிறிது திறந்தபடியுள்ளது. அதனுள்ளே உள்ள முத்துக்களில் சில தெரிகின்றன. இது எதற்கு உவமை? தாமரை போன்ற முகத்தில் பவளவாய் திறந்து சிரிக்கும் அம்மையின் பற்கள் முத்துப்போன்று காண்கின்றன. தாமரை மலரின் உள்ளிதழ்கள் ஒரு அரிய சிவப்பாகக் காணப்படும்; அப்படிப்பட்ட பாதங்களை மடித்து பத்மாசன நிலையில் அமர்ந்துள்ள குழந்தை. அனிச்ச மலரையொத்த மென்மையான சிவப்பு மெத்தையில் அழகாக அமர்ந்துகொண்டு சப்பாணி கொட்டுகிறாள் குழந்தை.

    பங்கயத்தில் வைத்த பவளநற் செப்பினிற்
    பாதிமுத் தொளிர்வ தேய்ப்பப்
    பல்லினொளி சிறிதே பளிச்சிட மொழிச்சிதர்ப்
    பால்வாய் குதட்டி யாணர்ச்
    செங்கமல வகவிதழ் சிவணுமிரு பதமடித்
    தொன்றுபத் மாசனத்திற்
    சீர்திக ழனிச்சசெஞ் செந்தூவி யணையினிற்
    செவ்வே நிமிர்ந்தமர்ந்து
    ………………………………………………………..
    சங்களை யிருக்கைகொண் டெங்களை யுருக்குமனை
    சப்பாணி கொட்டியருளே. (1)

    புலவரின் கற்பனை தேனினுமினிதன்றோ?

                                  ***

    அடுத்து நீராடற் பருவத்துப் பாடல்களுள் ஒன்றினைக் காண்போம்.

    இளம்பெண்கள், சிறுமியர், நீராடும்போது நிகழும் சில நிகழ்வுகளை வருணிக்கும் இனிய பாடலிது. சொல்லின் தெய்வமான கலைமகள், திருவின் தெய்வமான திருமகள் இருவரும் இருபக்கமும் இருக்க, சுழித்தோடும் நதி நீரில் துழாவியளைந்து மிதந்து ஆடுகின்றனள் அன்னை. செவிபொத்தி, கண்களை மூடி விளையாடும்போதில் கைகளும் கால்களும் நீரில் அளைவதனால் ‘முகேர்’ எனும் ஒலி எழுகின்றதாம். தாமரை மலரின் இனிய நறுமணத்தையும் நுகர்ந்து மகிழ்கின்றனர். ஒளிவீசும் பற்கள் தெரியுமாறு நகைத்தபடி தோழியரோடு மழலைச்சொல் பேசி  கமலமலரின் அழகினைப் பழிக்கும் முகத்தின் எழில் பொங்குமாறு புதுநீராடுக என வேண்டுகின்றார் புலவர்.

    சொற்படு கலைமகள் திருமகளெனுமிரு
    தோழியர் பாங்காகச்
    சுரிபுன லாழ்ந்து துழந்து மிதந்தும்
    துணைவிழி செவிபொத்தி
    முற்படு நீரில் முகேரெனு மொலியெழ
    மூழ்கி யெழுந்துமயல்
    முளரிப்புண மளவிக் கனிகொள
    மூசி முகந்தார்த்தும்
    எற்படு முத்தி னிளம்பத மூரல்
    இலங்க நகைத்துநகைத்
    தெதிருறு மகளிரோ டிதமுறு மழலை
    இசைத்து நசைக்கமலப்
    பொற்படு முகவெழில் பொங்கவே மங்கலை
    புதுநீ ராடுகவே
     …………………………………………………..

    இவ்வாறெல்லாம் அழகான பாடல்களைக் கொண்டது இந்நூல்.

                                                      0000000

    7. இணுவை சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ்

    இந்நூல் எவ்வாறு எழுந்தது?

    ஈழத்து அரசன் திருக்கோவலூர்ப் பேராயிரவன் காலத்தில் சிவகாமியம்மையின் ஒரு திருவுருவம் சிதம்பரத்தினின்றும் கொண்டுவரப்பட்டு இணுவையூரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவ்விடம் சிதம்பர வளவு எனவும் அறியப்பட்டது. ஆலயமும் உடன் எழுந்தது. இங்கு குடிகொண்டுள்ள அம்பிகை மீது அடியாரான சின்னத்தம்பிப் புலவர் பாடியதே ‘சிவகாமியம்மை தமிழ்’ என்னும் நூல்.

    இலங்கையைச் சிவபூமி என்பார் திருமூலர். பல சிவன், சக்தி, முருகன், விநாயகர் திருக்கோவில்களைக் கொண்டது. இணுவில் எனும் ஊர் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் யாழ் நகரிலிருந்து காங்கேசன் துறைக்குச் செல்லும் பெருவீதியில் நான்காவது கல் தொலைவில் உள்ளது. யாழ்ப்பாணத்துப் பரராசசேகர மன்னன் இவ்வூரிலிருந்து அரசு செய்தான் என்று சில பாடல்களால் அறிகிறோம். பரராசசேகர விநாயகர் கோவிலை அமைத்த அரசனும் இவனே எனப்படுகிறது.

    சின்னத்தம்பிப்புலவர் சிவகாமியம்மை மீது சிறை நீக்கிய பதிகம், பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை துதி, சிவகாமியம்மை திருவூஞ்சல் ஆகிய நூல்களைப் பாடியுள்ளார்.

    சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ் எனும் நூல் பிள்ளைத்தமிழ் இலக்கணத்தின் பாற்பட்டதன்று. புலவர் சிவகாமி அம்மையைத் தாயாகவும் தம்மைச் சேயாகவும் வைத்து இந்நூலை ஆக்கியுள்ளார். பிள்ளையாகத் தம்மையே வைத்துப் பாடிய பாடல்கள் இருப்பதனால் பிள்ளைத்தமிழ் எனப் பெயர்பெற்றது. இதில் மொத்தமே பத்துப்பாடல்கள் தாம் உள்ளன.

    அன்னை சிவகாமியின் அருட்சிறப்பும், அருள் தத்துவங்களும்,  திருப்பெயர்களும் அமைந்தும், புலவர் தம்மைப் பிள்ளையாக்கிக் கொண்டு அன்னை அவளிடம் முறையிடுவதும் இந்நூலில் சிறப்பாக அமைந்துள்ளன. இப்பிள்ளைத்தமிழில் வடமொழிச் சொற்களும் சொற்பிரயோகங்களும் மிகுந்து காணப்படுகின்றன.

    இந்நூலின் பத்துப் பாடல்களும் பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தமாக இசைக்கப் பட்டுள்ளன.

    முதற்பாடலில் அன்னையின் ஸ்ரீ சக்ர வடிவைப் போற்றி, அவள் அடியார்களுக்கு அருளும் தகைமையைப்போற்றியும், இணுவை நகரின் வளத்தை ஏற்றியும் பாடியுள்ளார்.

    சீரணி முக்கோ ணத்து ளிருக்குந் தேவிசட் கோணத்துட்
    சேருங் கன்னி அட்ட தளத்துட் சீரார் கௌமாரி
    நாரணி யென்றுன் செய்ய பதங்கள் நாளுந் துதிசெய்யும்
    நம்பின பேருக் கம்புவி மீதே நல்லருள் புரிவாயே
    காரணி சோலையும் மணிமண் டபமுங் கஞ்ச மலர்த்தடமும்
    காவிச் செடியுங் கழுநீர்த் தொகையுங் கதிர்நித் திலங்களுந்
    தேரணி வீதிகளு மெங்கும் நெருங்குஞ் செல்வந் தழைக்கின்ற
    திருவள ரிணுவைப் பதிதனி லுறையுஞ் சிவகாமித் தாயே. (1)

    எட்டாம் பாடலில் அன்னையிடம் உரிமை கொண்ட பிள்ளை தனக்கவள் அருள்புரியத் தாமதிப்பதனால் அவளிடம் கோபித்துக் கொள்வதனைக் காண்கிறோம்.

    எள்ளுக்குள் எண்ணெயாக உள்ளவள் நீ; என்னிடம் ஏன் நீ இல்லை? உனக்கு எல்லாம் தெரியும்; எனது வறுமையும் பிணியும் நீ அறிந்திலையோ? உலகத்தே முப்பத்திரண்டு அறங்களை வளர்த்தாய் நீ; என்னிடம் மட்டும் ஏன் இரக்கமில்லை? நீ பிள்ளையே பெறாத மலடியோ? உலகெலாம் நீ பெற்றெடுத்தாய் என்பதும் பொய்தானோ? தான் பெற்ற பிள்ளை பேய்ப்பிள்ளை ஆனாலும் தாயென்பவள் அதனை இகழ்வாளோ? என்றெல்லாம் உரிமையோடு ஏசுகிறார்.

    எள்ளுக் குணெய்போ லெங்கும் நிறைந்தா யென்னிடத் தில்லையோ
    எல்லா மைந்தநீ யென்றனில் லாமையும் பிணியுந் தெரிந்திடாயோ
    உள்ளந் திகழ்பா வியேனென் பாசம் உனையடுத் தாலுமுண்டோ
    உலகத் துமுப்பத் திரண்டறம் வளர்த்தா யிரக்க மில்லையோ
    பிள்ளை பெறாமுழு மலடியோ யுலகெலாம் பெற்றதும் பொய்தானோ
    பேய்ப்பிளை யாகிலும் பெற்றதா யிகழ்வளோ பிழைபொறுத் துன்கருணை
    அள்ளித் தாராதெனைத் தள்ளிவிடல் நீதியோ ……. …………

                                                               (8)

    அன்னையின் அன்பினில் ஆழ்ந்து விட்டால் தான் பிள்ளையெனும் உரிமையுடன் அவளிடம் வேண்டலாமன்றோ?

    இத்துடன் அம்பிகை மீதான பிள்ளைத்தமிழ் நூல்கள் பற்றிய சிந்தனைகள் முடிவுறுகின்றன. இனி அவளுடைய திருமகனான முருகப்பெருமான் மீதான ஈழத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களைப் பற்றிக் காண்போம்.

    (வளரும்)

    Share
  • சிறிய கொக்கின் தந்திரம்

    சிறிய கொக்கின் தந்திரம்

    இரையைப் பிடிக்க இந்தச் சிறிய கொக்கு செய்யும் தந்திரத்தைப் பாருங்கள்.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • நெற்றியில் நாமத்துடன் தாழைக் கோழி

    நெற்றியில் நாமத்துடன் தாழைக் கோழி

    நெற்றியில் நாமத்துடன் அழகிய தாழைக் கோழி.

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • குறளின் கதிர்களாய்…(439)

    குறளின் கதிர்களாய்…(439)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்…(439)

    மிகினுங் குறையினு நோய்செய்யும் நூலோர்
    வளிமுதலா வெண்ணிய மூன்று.

    -திருக்குறள் -941(மருந்து)

    புதுக் கவிதையில்…

    மருத்துவ நூலறிஞர்கள்
    சொல்லும்
    வாதம் பித்தம் சிலேட்டுமம்
    என மூன்றாம்,
    உடல்நிலைக்கு ஒவ்வாமல்
    ஒருவனின்
    உணவும் செயலும்
    மிகுதியாயினும்
    மிகக் குறையினும்,
    மேனியில்
    நோய்கள் வரும்…!

    குறும்பாவில்…

    மருத்துவநூலோர் சொன்ன வாதமுதல்
    மூன்றாம் உடலுக்கொவ்வா உணவும் செயலும்
    மிகுந்தாலும் குறையினும் நோய்வரும்…!

    மரபுக் கவிதையில்…

    வருத்தியே உடலதைச் சாய்த்திடவே
    வந்திடும் நோய்களைக் குணப்படுத்தும்
    மருத்துவ நூலவர் கண்டறிந்த
    மகத்துவக் காரணம் வாதமுதல்
    இருந்திடும் மூன்றென உள்ளதான
    இவைகளாம் உடலதற் கொவ்வாத
    அருந்திடும் உணவதும் செயலதுவும்
    அதிகமோ குறையினும் நோய்வருமே…!

    லிமரைக்கூ…

    மருத்துவ நூலோர் கண்டவை,
    உடலுக்கொவ்வாத உணவுடன்செயல் கூடினும் குறையினுமவை
    நோய்தரும் குணத்தைக் கொண்டவை…!

    கிராமிய பாணியில்…

    நோய்வருமே நோய்வருமே
    ஒடலுக்கு நோய்வருமே,
    ஏதுவுமே
    அளவுக்குமிஞ்சினா நோய்வருமே..

    மருத்துவ நூலெல்லாம் படிச்சவுங்க
    கண்டறிஞ்சி சொன்னபடி
    ஒடலுக்கு ஒத்துக்காத
    ஒணவும் செயலுமே
    அளவுக்கு மிஞ்சியே
    கூடிப் போச்சிண்ணாலும்
    கொறஞ்சாலும்
    கொண்டுவருமே நோயத்தான்..

    தெரிஞ்சிக்கோ,
    நோய்வருமே நோய்வருமே
    ஒடலுக்கு நோய்வருமே,
    ஏதுவுமே
    அளவுக்குமிஞ்சினா நோய்வருமே…!

    Share
  • ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 5

    ஏழ்மைக் காப்பணிச் சேவகி (மூவங்க நாடகம்) I இரண்டாம் அங்கம் I பாகம் – 5

    ஆங்கில மூலம்: ஜார்ஜ் பெர்னாட் ஷா
    தமிழாக்கத் தழுவல்: சி. ஜெயபாரதன், கனடா


    Share
  • மகா சிவராத்திரி: சீவனை அன்பெனக் கோளும் நாள்

    மகா சிவராத்திரி: சீவனை அன்பெனக் கோளும் நாள்

    பேரா. முனைவர். அழ. நா. அருணாசலம், அழகப்பா பல்கலைக்கழகம், தமிழ்நாடு

    உலகில் பிறந்த ஒவ்வொருவரும் நாம் நம்மை முதலில் நேசித்து, அதன் மூலம் நாம் நம் சக மனிதர்களை அன்பு செய்யும் பிரபஞ்ச நோக்கத்தை அடைய, நாம் நம் வினைப்பயனை கடக்க வேண்டும். ஒருவர் தன்னுடைய முற்பிறவி கர்ம வினைகள் அனைத்தையும் இறை வழிபாடு என்கிற மந்திர ஜெபம், யாகங்கள், அபிஷேக ஆராதனைகள், உழவாரப் பணி, அன்னதானம், முன்னோர்கள் தர்ப்பணம், ஆன்மிக பணி போன்றவைகள் மூலமாக வழிபாடு செய்து, நம் வினைப் பயனை கடந்து ஆன்ம விமோசனம் பெறவே இந்தப் பிறவி எடுத்து இருக்கிறோம். நாம் வாழும் பூமியை கர்ம பூமி என்று கூறுகிறார்கள். நம்முடைய ஒவ்வொரு செயலும் பாவக் கணக்கில் அல்லது புண்ணியக் கணக்கில் சேரும். பாவபுண்ணியம் பற்றிய சித்தர்களின் கர்ம விளக்கத்தையும் அதை கடக்கும் வழிமுறைகளையும் நம்முடைய தமிழ் மொழியில் ஏராளமான நூல்களில் காணலாம்.

    சித்தர்களின் கோட்பாடுகள் மதங்களைக் கடந்தவை, வாழ்க்கை என்னும் மாயப் பிடியில் சிக்காமல் இந்த பிரபஞ்ச இரகசியங்களையும், தன்னை உருவாக்கிய ஆதித் தலைவனையும் உணர்ந்து, நம் வாழ்வில் சகல நலன்களைப் பெறுவதே மகா சிவராத்திரியின் தத்துவம் ஆகும். அனுத் துகள்கள் மற்றும் பிரஞ்சத்தின் அனைத்து இரகசியங்களையும் சித்த மகான்கள் சொல்லியபடி நாம் சிவராத்திரி அன்று வழிபடுவது அறிவியல் சார் மெய் ஞானம் ஆகிறது.

    பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு கிரகங்கள் மற்றும் கோடான கோடி அண்ட நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்கள் நம்மை கடந்து சென்றுக் கொண்டிருகின்றன. இத்தகைய கதிர்வீச்சுக்களை அறிவியல் பூர்வமாக சித்தர்கள் தம் யோக தியான வலிமையினால் இந்த ரகசியங்களை அறிந்து அதை நமக்கு தியான வழிபாடு என்று வெளிப்படுத்தினார்கள். அந்த வலிமையான தினம் மகா சிவராத்திரி என்பதை நமக்கு அறிவித்து சென்று உள்ளார்கள்.

    மனிதர்கள் உடலின் கட்டுப்பாட்டில் இருந்தால் வெளி முகமாகவும், ஆன்மாவின் கட்டுப்பாட்டில் இருந்தால் உள் முகமாகவும் செயல்படுகிறார்கள். மனிதன் தனது உடல் செயல் மூலம் வெளிமுகமாக திரும்ப முயற்சி செய்தால் அவனது உடலும், மனமும் சமநிலை தவறுகிறது, மேலும் தடுமாறுகிறது. மனிதன் சமநிலை தவறாத வண்ணம் அவனை உள்முகமாகவே வைத்திருக்க, மகா சிவராத்திரி வழிபாட்டில் தியானம் என்கிற ஒரு முக நிலை நம்மை என்றும் வாழ்வில் உள்முகமாக வைக்க நிலை செய்கிறது.

    மகா சிவராத்திரியன்று வழிபாடு செய்து ஆதி சிவனையும், நம் குல தெய்வத்தையும் வணங்கினால் நாம் செய்த அத்தனை பாவங்களும் நம்மை விட்டு காணாமல் போய்விடும். அடுத்த வரும் மூன்று ஆண்டுகளில் நாம் எதிர்பார்க்கும் அளவிற்கு மகத்தான வளம் மற்றும் வலிமை நம்மை வந்து சேரும் என்பது சித்த ரகசியம் ஆகும். மகா சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற வழிபாட்டின் பலனை மகாசிவராத்திரி வழிபாடு ஒன்றே கொடுத்துவிடும் என்கின்றனர் சித்தர்கள். தொடர்ந்து பனிரெண்டு சிவராத்திரி இரவுகளில் அண்ணாமலையை கிரிவலம் வந்தால், கர்ம வினைகள் அனைத்தும் போய்விடும் என்பது சித்தர்களின் வாக்கு. நித்திய, யோக மற்றும் மகா சிவராத்திரிகள் நம் வினைப்பயன் போக்கும் ஆற்றல் கொண்டது. மகா சிவராத்திரி வழிபாடு மரணம் என்கிற எம பயத்தை போக்கி, அன்று வழிபாடு செய்யும் மக்களை எமதூதர்கள் நெருங்க அஞ்சுவார்கள் என சிவ புராணதில் மாணிக்கவாசகர் கூறுகின்றார். சிவராத்திரியின் நான்காம் காலத்தில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுவதின் மூலம் நம் பிணிகள் அனைத்தும் விலகும்.

    சித்தர்களின் தலைவராக இருப்பவரும், தமிழ் மொழியை ஈசனிடம் இருந்து பெற்று பூமிக்குக் கொண்டு வந்தவரும், ஜோதிடத்தின் தந்தையும், சித்த மருத்துவத்தின் தந்தையும், மந்திரங்களின் தந்தையுமாகிய அகத்திய மகரிஷி பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை ஒன்றே கொடுத்துவிடும் என்கிறார்.

    சிவராத்திரி அன்று தான தருமங்கள் செய்வதால் பெரும் புண்ணியம் கிடைக்கும். சிவலிங்கம், ருத்திராட்சம், ரத்தினங்கள், நிவேதனப் பொருட்கள், அன்னதானம் வழங்கினால் நன்மை உண்டாகும் என்று சித்தர்கள் கூறுகின்றனர். எனவே சிவராத்திரி அன்று வெறும் வழிபாடு மட்டும் வேண்டும் என்கிற கருத்து ஏற்புடையது அல்ல. எனவேதான் பல நூறு ஆண்டுகள் முதல் தொடங்கி இன்று வரை பல குல தெய்வக் கோயில்களில் ஊர்கூடி அன்னதானம் செய்து மகிழ்கின்றனர். தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் மகா சிவராத்திரி வழிபாட்டை உரிய முறையில் செய்தால் அனைத்து பாவங்களும் நம்மை விட்டு நீங்கும். மகா சிவராத்திரி வழிபாட்டை அனைவரும் சேர்ந்து சிவ ஆலயத்திலும், நம் குல தெய்வக் கோயிலிலும் வணங்கி அதன் பின் அன்னதானம் செய்தால் நம் பிறந்த பலனை பரிபூர்ணமாக தெய்வ அருள் கொண்டு பெறலாம் என்பது வாழ்வியல் உண்மை.

    உண்மையில் மகா சிவராத்திரியின் நான்கு காலத்திலும் விழித்திருந்து உயர்வான தியான நிலையில் மனம் ஒன்றி சிவத்தை உணர்ந்து சிவம் அருகே செல்ல முயலும் நிலையே மகா சிவராத்திரியின் அடிப்படை ஆகும். மனம் அமைதி கொண்டு தூய நிர்மலமான சிந்தனைகளோடு சிவத்தில் ஒன்றுவது என்பதே மகா சிவராத்திரியின் தாத்பர்யம் ஆகும். மகா சிவராத்திரி அன்று உருவமும் இல்லாது அருவமும் இல்லாத இறையை தியானித்து, நம் மனதை உள்முககமாக பயணிக்கச் செய்வதே முதல் நிலலை. அதன் பின் நாம் நம்மை உணர்ந்து, நாம் நம் தன்மையைக் கடந்து உள் சென்று உய்ய வழி பெறுவதே இறுதி நிலை, இதுவே மகா சிவராத்திரி வழிபாட்டின் மூலக்கரு ஆகும்.

    மகா சிவராத்திரி அன்று குறிப்பிட்ட கிரகங்களின் மற்றும் பேரண்டங்களின் கதிர்வீச்சுக்கள் இந்த பூமி முழுவதும் வியாபித்துக் காணப்படும், அதே சமயம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பூமிக்கடியில் இருந்து நீரூற்று பிறப்பெடுத்து ஓடும். இந்த நீரூற்றுதான் சித்தர்கள் கூறும் மூப்பு, அண்டக்கல் என்றழைக்கப்படும் என்று சித்தர்கள் கூறுகின்றனர்.
    மகா சிவராத்திரி நாளில் நாம் செய்யும் தியானமானது, மூன்று மாதங்கள் இடைவிடாது தொடர்ந்து தியானம் செய்தால் கிடைக்கும் பலனைக் கொடுக்கும். இது சித்தர்களின் சாதனை முறை. இதையே நாம் அன்றைய தினம் கண்விழித்து இறைவனை துதி பாடி தியானித்து வருடம் தோறும் கொண்டாடினாலும், சித்தர்கள் சொல்லிய அகக்கண் விழிப்பு நிலையுடன் கூடிய தியான நிலையை பெரிதும் நாம் விட்டு விட்டு, புறக் கண் விழிப்பை மட்டுமே இன்றளவும் செய்து வருகிறோம்.

    சீவனும் சிவனும் இரண்டு அல்ல, அன்பும் சிவனும் இரண்டு அல்ல, இரண்டும் ஒன்றே என்றும் உணரும் ஆன்ம பேரொளியை நம் ஆன்மாவில் தோற்றுவிக்கும் வழிபாடே மகா சிவராத்திரி. எனவே நாமும் இப்புனித தினத்தில் எல்லாம் வல்ல பிரபஞ்சப் பேரியக்க ஆற்றலைக் கிரகித்து “அன்பு சிவம் இரண்டென்பார் அறிவிலார், அன்பே சிவமென்று ஆரும் அறிகிலார், அன்பே சிவமென்று ஆரும் அறிந்த பின் அன்பே சிவமென்று அமர்ந்திருந்தாரே என்று அன்பு செய்து புறக்கண் திறக்கும் வண்ணம் மகா சிவராத்திரியை தியான வழிபாட்டின் மூலம் மேற்கொண்டு அன்பு என்கிற சிவத்தை உணர முயற்சித்து மகிழ்வுடன் வாழ்வோமாக.

    Share
  • பக்தியாய் பாடிப் பரவிடுவோம் வாருங்கள்!

    பக்தியாய் பாடிப் பரவிடுவோம் வாருங்கள்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
    மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
    மெல்பேண் ….. ஆஸ்திரேலியா

    வேதத்தின்   முதல்வன் விடமுண்டன் கண்டன்
    ஆதியந்தம் இல்லான் அருளொளியாய் நிறைவான்
    சோதியென எழுந்தான் துடுக்கொழிய வைத்தான்
    மாலயனின் மயக்கம் போக்கியவன் நின்றான்

    மாலயனின் மயக்கம் போக்கிய நாளுலகில்
    மகாசிவ ராத்திரியாய் மலர்ந்ததென  வுரைப்பார்
    சீலமுடன் சிவனை சிரத்தையுடன் எண்ணி
    விரதமதை விரும்பி நோற்றிடுவார் அடியார்

    பசித்திருக்க வேண்டும் தனித்திருக்க வேண்டும்
    விழித்திருக்க வேண்டும் மெய்யுணர்தல் வேண்டும்
    ஆலமதை உண்ட அருட்கடலாம் சிவனை
    அகமிருத்தி விரதம் அனுட்டிக்க வேண்டும்

    அப்பனுக்கு ஒன்று அம்மைக்கு ஒன்பது
    இப்புவியில் விரதமதை ஏற்கின்றார் அடியார்
    எல்லாமே இராத்திரியாய் இருப்பதுதான் சிறப்பு
    இறையுணர்வை ஊட்டுவதே இதன் நோக்கமாகும்

    விரதமெனும் வார்த்தை வெறும் வார்த்தையல்ல
    பவவினைகள் போக்கும் பாங்கான வார்த்தை
    உடலுளத்தைத் தூய்மை ஆக்கிவிடும் வார்த்தை
    உணர்வுடனே செய்தால் உயர்நிலையே வாய்க்கும்

    ஆன்மீகக் கருத்துக்களை அலட்சியமாய் நோக்கும்
    அவலமது அலையலையாய் எழுகிறது நாளும்
    அறிவியலை நிறைத்தபடி ஆன்மீகம் அமைந்திருக்கு
    அதை உணர்ந்தால் அலட்சியமும் அகன்றோடிப்போகும்

    பிறக்கின்ற நாளெல்லாம் பெம்மானை நினைக்க
    இருக்கின்ற வகையினிலே இணைத்தார்கள் முன்னோர்
    வையத்து வாழ்வார்கள் வாழ்வாங்கு வாழ
    மனஞ்சிறக்க விரதமெலாம் வண்ணமுற வைத்தார்

    புராணக் கதையெல்லாம் பொருந்துமா என்பார்
    பூதலத்தில் கருத்துரைக்க தேர்ந்த வழியன்றோ
    கதையுரைத்து கதையுரைத்து கடவுளுணர் வூட்டும்
    காரியத்தை புராணமாய் கண்டார்கள் முன்னோர்

    மூடத் தனமென்று முழஞ்சுழிக்க வேண்டாம்
    முன்னோர்கள் சிந்தனையில் முகிழ்த்ததுதான் புராணம்
    முன்னைப் பழம்பொருளாய் முதலுக்கும் முதலாக
    விண்ணிற்கும் பரம்பொருளை விளக்கியதும் புராணமன்றோ

    திருமுறைகள் போற்றுகின்ற செம்பொருளாம் சிவனை
    சிவராத்திரி தினத்தில் சிந்திப்போம் வாருங்கள்
    சித்தர்க்குச் சித்தராம் திருச்சிற்றம் பலத்தானை
    பக்தியாய் பாடிப் பரவிடுவோம் வாருங்கள்

    Share