மாலயனின் மயக்கம் போக்கிய நாளுலகில்
மகாசிவ ராத்திரியாய் மலர்ந்ததென வுரைப்பார்
சீலமுடன் சிவனை சிரத்தையுடன் எண்ணி
விரதமதை விரும்பி நோற்றிடுவார் அடியார்
பசித்திருக்க வேண்டும் தனித்திருக்க வேண்டும்
விழித்திருக்க வேண்டும் மெய்யுணர்தல் வேண்டும்
ஆலமதை உண்ட அருட்கடலாம் சிவனை
அகமிருத்தி விரதம் அனுட்டிக்க வேண்டும்
அப்பனுக்கு ஒன்று அம்மைக்கு ஒன்பது
இப்புவியில் விரதமதை ஏற்கின்றார் அடியார்
எல்லாமே இராத்திரியாய் இருப்பதுதான் சிறப்பு
இறையுணர்வை ஊட்டுவதே இதன் நோக்கமாகும்
விரதமெனும் வார்த்தை வெறும் வார்த்தையல்ல
பவவினைகள் போக்கும் பாங்கான வார்த்தை
உடலுளத்தைத் தூய்மை ஆக்கிவிடும் வார்த்தை
உணர்வுடனே செய்தால் உயர்நிலையே வாய்க்கும்
ஆன்மீகக் கருத்துக்களை அலட்சியமாய் நோக்கும்
அவலமது அலையலையாய் எழுகிறது நாளும்
அறிவியலை நிறைத்தபடி ஆன்மீகம் அமைந்திருக்கு
அதை உணர்ந்தால் அலட்சியமும் அகன்றோடிப்போகும்
பிறக்கின்ற நாளெல்லாம் பெம்மானை நினைக்க
இருக்கின்ற வகையினிலே இணைத்தார்கள் முன்னோர்
வையத்து வாழ்வார்கள் வாழ்வாங்கு வாழ
மனஞ்சிறக்க விரதமெலாம் வண்ணமுற வைத்தார்
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.