Blog

  • திருக்குறள் நெறிகளைப் பின்பற்றுகிறோமா?

    அண்ணாகண்ணன்

    திருக்குறள் குறித்துத் தமிழர்களுக்கு எப்போதுமே பெருமிதம் உண்டு. அந்தக் குறட்பாக்களை வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் எழுதி வைக்கிறோம். அரசுப் பேருந்துகளில், அரசு அலுவலகங்களில், பள்ளி – கல்லூரி – பல்கலைக்கழகங்களில், பல்வேறு அரங்குகளில்…  திருக்குறளைக் காண்கிறோம். நாளிதழ்களில் தினமும் குறளும் உரையும் இடம் பெறுகின்றன. தொலைக்காட்சிகளில் திருக்குறளை விளக்குகிறார்கள். இணையத்திலும் பற்பல தளங்களில் குறள் வீற்றிருக்கிறது. திருக்குறளின் பெயரால் அமைப்புகளும் விருதுகளும் உலகெங்கும் உள்ளன. பாடப் பகுதியில் திருக்குறளின் சில அதிகாரங்கள் இடம் பெற்றுள்ளன. அது போக, 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் மாணவர்கள் பலரும் உள்ளனர். திருக்குறளை மேற்கோள் காட்டும் தமிழறிஞர்களும் அரசியல்வாதிகளும் இன்ன பலரும் பற்பலர். திருவள்ளுவர் நாளும் திருவள்ளுவர் ஆண்டும் வேறு இருக்கிறது.

    இப்படியெல்லாம் திருக்குறளைக் கொண்டாடும் தமிழ்ச் சமூகம், திருக்குறட் கருத்துகளை எந்த அளவுக்குப் பின்பற்றுகிறது? இந்தக் கேள்விக்கான பதில், நமக்கு உவப்பானது இல்லை.

    கள்ளுண்ணாமையை வலியுறுத்திய வள்ளுவருக்குக் குமரி முனையில் 133 அடி உயரச் சிலையைத் தமிழக அரசு அமைத்தது. அதே அரசுதான் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் அரசு மதுபானக் கடைகளைப் பட்டி தொட்டி முதல் பட்டணம் வரை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு மதுக் கடைக்கும் வணிக நிறுவனத்தைப் போல், விற்பனை இலக்கினை நிர்ணயித்து, வியாபாரத்தைப் பெருக்கி, பல்லாயிரம் கோடிகளை இலாபமாக ஈட்டி வருகிறது. அப்படியானால், வள்ளுவரைப் போற்றுவதன் பொருள் என்ன?

    ‘வள்ளுவர் கூறிய எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவர், புலால் உண்ணாமையை வலியுறுத்தினார். அதற்காக இறைச்சி உண்பதை விட்டுவிட முடியுமா?’ என்று பேரா.சுப.வீரபாண்டியன், நானும் பங்கேற்ற ஒரு பட்டி மன்றத்தில் வினவினார். மாமிசம் உண்ணும் தமிழர்கள், வள்ளுவ நெறிப்படிதான் நடக்கிறார்களா?

    பிறனில் விழையாமை என்ற கோட்பாட்டினை வள்ளுவம் முன் நிறுத்துகிறது. ஆனால், வாய்ப்பு கிடைக்காத வரை மட்டுமே அவ்வாறு இருப்பது, பெரும்பாலோரின் இயல்பு. இதற்கு எண்ணற்ற சான்றுகளை நம் தெருக்களிலும் ஊடகங்களிலும் அன்றாடம் காணலாம்.  உடல் அளவில் பிறனில் விழைந்தவர்களைக் காட்டிலும் மனத்தளவில் விழைந்தவர்கள் பற்பல மடங்குகள் அதிகம் இருக்கும். மனச்சான்றின்படி நோக்கினால், இங்கும் குறளின் கருத்தினை நாம் பின்பற்றவில்லை.

    தாகத்திற்குத் தண்ணீர் கேட்டால், புட்டியிலும் நெகிழ்ம உறைகளிலும் அடைத்து வைத்துள்ளதைக் காசுக்கு விற்கிறார்கள். தொலைக்காட்சித் தொடர் ஓடும்போது கட்டிய கணவரே வந்தாலும் திரும்பிப் பார்க்காத இல்லத்தரசிகள் இருக்கிறார்கள். ‘கொட்டிக்கோ’ என்று சொல்லி, உணவு பரிமாறும் பண்பும் பல வீடுகளில் உள்ளது. நாம் விருந்தோம்பலைப் பற்றிப் பேசுவது தகுமா?

    கடவுள் இல்லை, இல்லவே இல்லை, கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றெல்லாம் சொன்ன பெரியாரின் மாணவர்கள், தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்துகிறார்கள். இவர்கள், கடவுள் வாழ்த்துப் பாடிய திருவள்ளுவரையும் போற்றுகிறார்கள்.

    பொய்யாமையை வலியுறுத்திய வள்ளுவரை முன்வைத்துக் கேட்கிறேன். பொய் சொல்லாத தமிழர்கள் எவ்வளவு பேர்? சிறிதோ, பெரிதோ, பொய் பொய்தானே? சரி, வாய்மை இருக்கிறதே என்கிறீர்களா? தீமையிலாத பொய்களைச் சொன்னவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்?

    இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்தவர்கள் எவ்வளவு பேர்? மனத்துக்கண் மாசிலனாக வாழ்பவர்கள்? ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் எனக் கருதுபவர்கள்? இன்னும் வள்ளுவத்தில் கூறிய நெறிகளின்படி வாழ்பவர்கள் எங்காவது இருக்கிறார்களா? அறியேன்.

    நான் பார்த்த வரை வள்ளுவ நெறிகளில் தமக்கு வசதியான வெகு சிலவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து, சில நேரங்களில் மட்டும் பின்பற்றுபவர்கள் சிலர் இருக்கிறார்கள். பிற நெறிகளை நினைத்துப் பார்ப்பதே அரிது. பலருக்கு ஏட்டுச் சுரைக்காய், கறிக்குதவாது; கொன்றால் பாவம் தின்றால் போச்சு என்பதே கொள்கை.

    போற்றுவது ஒன்றை, கடைப்பிடிப்பதோ வேறு ஒன்றை என்பதே தமிழரின் நிலைப்பாடோ? சொல்லுக்கும் செயலுக்கும் இடைவெளியுடன் அவர்கள் வாழ்வதற்கு வள்ளுவமே சான்று.

    வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

    வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

    என்ற பாரதியின் வரிகளுக்கு ஏதோ ஒரு பட்டிமன்றத்தில் ஒருவர் விளக்கம் தந்தார். வள்ளுவத்தை உலகிற்குத் தந்துவிட்டதால், உள்நாட்டில் அது இல்லை என நகைச்சுவைக்காக அவர் கூறினார். ஆனால், இந்தக் கூற்றில் ஓரளவு உண்மையும் உள்ளது.

    வள்ளுவத்தைக் கடைப்பிடிக்காவிட்டால் கூட புரிந்துகொள்ளலாம். அதைப் போற்றிக்கொண்டே கடைப்பிடிக்காததுதான் எனக்குப் புரியவே இல்லை. இந்த இரட்டை வேடம் எதற்காக?

    வள்ளுவர் சுட்டிய நெறிகள் அனைத்தும் அவர் ஒருவரே வகுத்தவை அல்ல. அவருக்கும் முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த நெறிகளைச் சீரமைத்து, அவர் வகுத்தும் தொகுத்தும் தந்துள்ளார். ஆதித் தமிழரின் சிந்தனை வளம் செறிந்த செவ்வியல் இலக்கியமே திருக்குறள். அப்படியானால், இவ்வளவு செழுமையான நெறிகளைக் கொண்டிருக்கும் ஒரு சமூகம், ஏன் அவற்றைப் பின்பற்றத் தயங்க வேண்டும்? பின்பற்ற மாட்டேன் என மறுக்க வேண்டும்?

    திருக்குறள் எழுதப்பட்ட காலத்திலிருந்தே அதற்கு முரணான செயல்களைக் கொண்டவர்களும் இருந்தே வருகிறார்கள். ‘நல்லவற்றை எடுத்துரைப்பது என் கடமை. அதைப் பின்பற்றுவது உன் விருப்பம்’ என்பதே தமிழரின் நடைமுறை. வன்முறையினால் ஒரு வழக்கத்தை நிலைநாட்டுவதை அவர்கள் விரும்பவில்லை. இயல்பாகவே மனத்திலிருந்து அது பூக்க வேண்டும் என்பதே நம் முன்னோரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இன்றும் எதைப் பின்பற்றுவது என்ற சுதந்திரம், நம் மக்களிடம் உள்ளது. அந்தச் சுதந்திரத்தை அவர்கள் முறையாக, முழுமையாகப் பயன்படுத்தினால் அது அவர்களிடம் நிலைக்கும்.

    வள்ளுவ நெறிகளைப் பின்பற்றாததால் இழப்பு, வள்ளுவத்திற்கு இல்லை; நமக்கே.

     படங்களுக்கு நன்றி:

    http://www.spiritofchennai.com/personalities/thiruvalluvar.htm

    http://en.wikipedia.org/wiki/File:Tiruvalluvar_Statue_Kanyakumari.jpg

    Share
  • என் இனிய சக இந்தியனே…

    மாதவன் இளங்கோ

    கவிதைக்குச் செல்வதற்கு முன்னர் ஒரு சிறு குறிப்பு:

    ஒவ்வொருநாளும் நம் சக இந்தியச் சகோதரனால் நாம் எவ்வளவு பாதிக்கப்படுகிறோம், நம்முடைய செயல்களால் மற்ற சகோதரர்கள்/ சகோதரிகள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்று பட்டியலிட எத்தனித்தபோது, அந்தப் பட்டியல் ஒரு கவிதையாக உருவெடுத்தது. இதைக் கவிதை என்றுகூட நான் அழைக்க விரும்பவில்லை. நம் எல்லோருடைய ‘உள்ளக்குமுறல்களின் ஒருங்கிணைந்த பதிவு’ என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்.

    என் இனிய சக இந்தியனே,

    பிறப்பு சான்றிதழுக்குப்

    பின்தலை சொறிந்துகொண்டே

    கையூட்டு கேட்டாய்

    கொடுத்துத் தொலைத்தேன்!

    இறப்பு சான்றிதழுக்கு

    இரண்டு மடங்கு

    அதிகமாய்க் கேட்டாய்

    அதையும் அளந்தேன் அழுதுகொண்டே!

    உள்ளாட்சித் தேர்தலின்போது

    உடையும் பணமும் தந்தாய்

    கடமைக்குக் காசெதற்கென்று

    திடமாய் நான் மறுத்தேன்!

    ஆட்சிக்கு அமர்த்தினோம்

    ஆட்டிப் படைத்தாய்;

    அடக்குமுறை செய்தாய்

    அடங்கி ஒடுங்கியே போனேன்!

    பட்டம் பெற்றேன், தகுதித்தேர்வில்

    வெற்றியும்  பெற்றேன் – வேறென்ன?

    எனக்குப் பாதி, ஆளும் மந்திரிக்கு மீதியென்றாய்

    தனியார் பணியில் தஞ்சம் புகுந்தேன்!

    இரத்தம் சுண்டி நானீன்ற பணத்தை

    இரக்கமின்றி நீ தின்றாய்

    இருந்தும் செலுத்தினேன்

    முறையாய் வரியை!

    ஏழ்மையைக் காட்டியுன்

    இனியமகள் கல்விபயில

    பள்ளிக்கு வருவதை நிறுத்தினாய்

    வருந்தியே கவனித்தேன்!

    ஆனாலுன் தலைவனவன் திரைப்படத்தின்

    ஆரம்பநாள் அமர்க்களங்களுக்கு

    இறைத்தாய் நீ இரண்டு மூன்றாயிரம்

    புரியாமல் தவித்தேன்!

    நான் செல்லும் பாதையிலே

    சிறுநீர் கழித்தாய்; குப்பைகள் போட்டாய்;

    சிந்தினாய்; துப்பினாய்

    அத்தனையும் சகித்தேன்!

    சாலைவிதிகளைக் கடைபிடித்து

    சிவப்பிற்கு முன்வரும் மஞ்சளுக்கு நின்றேன்

    அநாகரிகமாய்  வசைபாடினாய்

    அமைதி காத்தேன்!

    நான் கற்ற நன்னெறிகள்

    நானூற்றில் நான்கைந்துகூட

    பின்பற்ற முடியாமற் செய்தாய்

    பொறுமை காத்தேன்!

    படித்தவனாய்  இருந்தும்,

    பாதகா, கிராதகா, நீ

    பெண்சிசுக்கொலை செய்தாய்

    பனியாய் உறைந்தேன்!

    ‘மதம்’ பிடித்துப் போனதால்

    உன்னை அவன் அடித்தான்

    அவனை நீ கொன்றாய்!

    இருவருக்கும் அழுதேன், துடித்தேன்!

    பேருந்து ஓட்டுகையில்

    கைபேசியில் காதல் பேசி – கவனம்சிதறிப்

    பலபல கொலைகள் செய்தாய்

    பொறுப்பின்மையைக் கண்டு மனம் கொந்தளித்தேன்!!

    பிள்ளைகள் – எம் பிஞ்சுகள் செல்லும்

    பள்ளி வாகனங்களையே

    எமவாகனங்களாய் மாற்றிக்காட்டினாய்

    எதிர்த்துக் குரல் கொடுத்தேன்!

    வறுமை வாழ்வில் வளம்சேர்க்க

    நகரம் வந்தவென் அன்புத் தங்கையை

    வன்புணர்ந்தாய்; சிதைத்தாய்; பின் வீசினாய்

    மரித்தே போனாள் மலர் போன்றாள்!

    போராட்டம் எனும் பெயரில்

    பொதுச் சொத்துக்களைச் சிதைத்தாய்

    சிரித்தாய்ப் பின் குதித்தாய்

    சிந்தித்தேன் பின் மௌனித்தேன்!

    புதைச்சாக்கடை வாயிற்புழைகளுக்கு வழிகாண்போம்

    மழலைகள் மரிக்கின்றன என்றேன்

    விமானநிலையங்களை சீரமைக்கக் கோடிகளை வீசினாய்

    முன்னுரிமைகளைக் கண்டுக் கொதிப்படைந்தேன்!

    வீடு வாங்க வந்தேன்,

    வெள்ளைப் பாதி, கறுப்புப் பாதி

    வேண்டுமென்றாய்; தந்தால்தான் வீடென்றாய்

    வேண்டாம் வீடென விட்டொழித்தேன்!

    மக்களுக்கு வேலையில்லை, வாழ வழியில்லை,

    அடிப்படை வசதிகளில்லை என்றேன்

    விரைவிலே வல்லரசாவோமென்று வாயிலே வடைசுட்டாய்

    பேசுவதே வீணென்று விட்டுவிட்டேன்!

    இதை செய்வோம் அதை செய்வோம்

    சாதிப்போம் பின் போதிப்போம் என்றேன்,

    மேடைபோட்டு முன்னோர் புகழ்பாடிக் காலங்கடத்தினாய்

    வெறுத்துப்போய் ஒதுங்கிக் கொண்டேன்!

    ஐரோப்பியரைப் பாரேன்றேன்!

    ஐயா! தாய்மொழியைக் கொண்டே தழைப்போமென்றேன்

    ஆங்கிலத்தில் அசிங்கமாய் வசவுகள் வீசினாய்

    அமைதியாய் குமுறினேன்!

    சினிமா பின்னால் ஒருகூட்டம்

    கிரிக்கெட் பின்னால் மறுகூட்டம்

    அரசியல் பின்னால் தெருக்கூட்டம்

    இம்மூன்றின் பின்னால் ஊடகக் கூட்டம்!

    இலக்கியம் பல படைத்த இந்தியன் எங்கே!

    அறிவியல், சிற்பம், வானவியல், கணிதம் என

    அனைத்தும் கண்ட அவன் எங்கே?

    அன்பு, பண்பு, அறம், மறம் 

    இவையெல்லாம்தான் எங்கே?

    எதுவும் இன்றி எல்லாம் கண்டவன் 

    எல்லாமிருந்தும் செய்யாதிருக்கும் 

    நிலை ஏனோ?

    வந்தான் பாரதி மீசை முறுக்கியபடி,

    தொடர்ந்தான் முண்டாசை கழற்றி உதறியபடி,

    “‘நெஞ்சு பொறுக்குதிலையே

    இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்!’

    அன்றே பகர்ந்தேன் புரியலையோ?

    அறிவில்லையோ?

    நெஞ்சில் உரமுமில்லையடா,

    நேர்மை சிறிதுமில்லையடா,

    வஞ்சனை சொல்வாரடா,

    வாய்ச்சொல்லில் வீரரடா!

    நீ புறப்படடா!

    உலகெலாம் நம் புகழ் பரப்படா!

    நிலையாய், நீர்நிலையாய்,

    குளமாய் நீ இராதேடா!

    துர்நாற்றம் வீசுமடா

    ஓடும் ஓடையாய் மாறடா!

    ஓடடா! ஓடடா! ஓடடா!!”

    வந்தோம் ஓடி வெளிநாடு!

    வாவென்றது வளநாடு!

    கடுமையாய் உழைத்தோம் திறமோடு!

    மேலை நாட்டவர் பார்த்தனர் மதிப்போடு!

    நிமிர்ந்தோம் இந்தியர் இறுமாப்போடு!

    என்று மாறும் எம் திருநாடு?

    வாழ்கிறோம் இன்று ஏக்கமோடு!

    எம்மைப்போல் ஏங்குபவர்

    எத்தனை பேர்?

    எத்தனையோ பேர்!

    இருப்பது எங்கோ வென்றாலும்,

    இதயத்தால் என்றுமே இந்தியர்கள்!

    இதயத்திலும் என்றுமே இந்தியாதான்!

    சுழியைக் கண்டோம்!

    எண்ணத் தவறினோம்!

    மேல்நாட்டவரோ,

    சுழியோடு ஒன்றையும் சேர்த்து,

    கணிப்பொறியாக்கினர்!

    அதையே கற்றறிந்து – அவர்கள்

    திருடிச் சென்றதை,

    திரும்பப் பெறவே வந்தோம்!

    களவாடப்பட்ட நம்

    கோஹினூர் வைரங்கள்

    அந்நியச் செலாவணி வழியாயும்,

    அந்நிய முதலீடுகள் வழியாயும்,

    திரும்பப் பெறவே வந்தோம்!

    பெறவும் செய்தோம்!

    ஆனால்…

    நம் சக இந்தியர் 

    அடித்துச்சென்ற கொள்ளைப்பணத்தை – 

    அந்தக் கறுப்புப்பணத்தை

    எப்படிப் பெறுவோம்?

    எங்கே செல்வோம்?

    மாற்றம் வருமா?

    வரும்!

    மாறுவோம்.. மாற்றுவோம்..

    Share
  • இஸ்ரேல் பயணம் 7

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இப்போதைய ஜெருசலேம் நகரின் கிழக்குப் பகுதியில் இருக்கும் புராதன நகரம்தான் (old city) ஆதியில் இருந்த ஜெருசலேம் நகரம்.  இது மிகத் தொன்மை வாய்ந்தது.  கி.மு. பதினோராம் நூற்றாண்டில் டேவிட் (King David) என்னும் யூத மன்னன் இந்த ஊரை ஒரு குன்றின் மேல் உருவாக்கியதாகப் பைபிளில் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டிருக்கிறது.  இதன் அடிப்படையில் தாங்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து வாழ்ந்துவந்ததாக யூதர்கள் இந்த நகருக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.  அது எப்படியாயினும் இந்த நகரோடு யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் ஆகிய மூன்று மதத்தினர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  இந்த மதங்கள் சம்பந்தப்பட்ட பல புண்ணிய தலங்கள், தேவாலயங்கள், துறவி மடங்கள், மசூதிகள் இங்கு இருக்கின்றன.  அதனால் மூன்று மதத்தவர்களும் இந்த நகருக்குச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.  இதற்குள் நுழைந்துவிட்டால் சரித்திர காலத்திற்கே போய்விட்டது போன்ற பிரமை ஏற்படுகிறது.

    இந்நகர் கி.மு.வுக்கு முன்னும் கி.மு.வுக்குப் பின்னும் பல மதங்களைச் சேர்ந்தவர்களின்  கையில் இருந்திருக்கிறது. முதலில் யூதர்கள், பின் ரோமானியர்கள், அதன் பிறகு கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மறுபடி கிறிஸ்தவர்கள் என்று பலர் ஆட்சியின் கீழ் இருந்திருக்கிறது.  இதனால் இம்மூன்று மதங்களின் இறைவழிபாட்டு இடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.  அதிலும் ஒன்றன் மேல் ஒன்றாகக் கட்டப்பட்ட பல கட்டடங்களை அகழ்ந்து எடுத்திருக்கிறார்கள். இப்போதுள்ள பல இடங்கள் எந்த மதத்திற்கு உரியது என்ற சர்ச்சை நடந்துவருகிறது.  நம் நாட்டில் இந்துக் கோவிலான ராமஜென்ம பூமியை இடித்துவிட்டு அதற்கு மேல் பாபர் மசூதியைக் கட்டியதாக சர்ச்சை நடந்து வருவதைப் போல.  பல இடங்களில் இன்றும் அகழாய்வு நடந்துகொண்டிருக்கிறது.

    1967-இல் நடந்த அரேபிய-இஸ்ரேல் சண்டையில் (இஸ்ரேல் உருவாக்கப்பட்ட பிறகு இஸ்ரேலுக்கும் சிரியா, எகிப்து, ஜோர்டன் ஆகிய அரபு நாடுகளுக்கும் இடையே ஆறு போர்கள் நடந்திருக்கின்றன.  இவற்றில் இஸ்ரேல் 1948-இல் ஐ.நா. பாலஸ்தீனத்திற்குக் கொடுத்த பல இடங்களைப் பிடித்துக்கொண்டது.)  இஸ்ரேல் ஜோர்டனிடமிருந்து இந்த நகரத்தைக் கைப்பற்றியது.  பிறகு 1980-இல் ஜோர்டான், இதை உலகப் பாரம்பரியச் சொத்துகளில் (World Heritage Sites) ஒன்றாகச் சேர்க்க வேண்டும் என்று ஐ.நா.-வுக்குக் கோரிக்கை விடுத்ததை ஐ.நா. ஏற்று, அந்தப் பட்டியலில் இந்த நகரை இடம் பெறச் செய்திருக்கிறது.

    இதனுடைய பரப்பளவு 0.9 சதுர கிலோமீட்டர்தான்.  இதைச் சுற்றிக் கற்களாலான மதில் சுவர் இருக்கிறது.  இந்தச் சுவர் பல காலத்தில் பல மன்னர்களால் இடிக்கப்பட்டும் திரும்ப எழுப்பப்பட்டும் இருந்திருக்கிறது.  இப்போதுள்ள மதில் சுவர் ஆட்டோமான் பேரரசராகிய சுலைமான் என்பவரால் (Suleiman, the Magnificent) 1538-இல் கட்டப்பட்டது.  இந்த மதிலின் நீளம் 2.8 மைல்.  உயரம் 16 அடியிலிருந்து 49 அடி வரை இருக்கிறது.  சில இடங்களில் இதன் பருமன் 10 அடி கொண்டதாக இருக்கிறது.  இதில் 43 காவல் கோபுரங்களும் (Surveillance Towers) பதினொரு நுழைவாயில்களும் (Gates) இருக்கின்றன.  இப்போது ஏழு நுழைவாயில்களே உபயோகத்தில் இருக்கின்றன.  மூடப்பட்ட நுழைவாயில்களில் ஒன்றான தங்க வாயில் (Golden Gate) வழியாக யூதக் கடவுள் அவருடைய தூதரை அனுப்பும்போது அவர் இந்த வாயில் வழியாகத்தான் வருவார் என்று யூதர்கள் நம்புகிறார்கள்.  தூதர் வருவதைத் தடுக்க முஸ்லீம் மன்னன் ஒருவன் இதை மூடிவிட்டானாம். அப்படி மூடிவிட்டாலும் இவ்வளவு தூரம் வந்தவர் உள்ளே வருவதற்கு என்ன தயக்கம் இருக்க முடியும் என்று யூதர்கள் கூறிக்கொள்வார்களாம்.  1887-ஆம் ஆண்டு வரை எல்லாக் கதவுகளும் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மூடப்பட்டு, மறு நாள் சூரிய உதயத்திற்குப் பிறகுதான் திறக்கப்படுமாம்.

    இந்த நுழைவாயில்கள்  நேராக அமைக்கப்படாமல் L வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன.  எதிரிகள் குதிரைகளின் மேல் வேகமாக வரும்போது வாயில் இந்த வடிவில் இருந்தால் அது அவர்களின் வேகத்தைக் கட்டுப்படுத்துமாம்.  மேலும் யூதர்களின் குடியிருப்புகளுக்கு அருகே உள்ள சில வாயில்களில் பெரிய துவாரங்கள் இருக்கின்றன.  எதிரிகள் உள்ளே நுழையும்போது அவர்கள் மேல் காய்ச்சிய திரவத்தை ஊற்றுவதற்காக இந்த ஏற்பாடாம். இன்று இந்த மதில் சுவரின் மேலே நடந்து பார்த்தால் ஜெருசலேம் நகரம் முழுவதும் மிக அழகாகக் காட்சியளிக்கிறது.

    புராதன நகரின் தெருக்கள், சாலைகள் முழுவதும் cobble stones என்னும் ஒரு வகைக் கூழாங்கற்களால் அமைக்கப்பட்டிருக்கின்றன.  இந்தக் கற்கள் பல நூற்றாண்டுகளாக இருந்து வருவதாகக் கூறுகிறார்கள்.

    இந்த நகர் கிறிஸ்துவப்  பிரிவு, யூதர்கள் பிரிவு, முஸ்லீம்கள் பிரிவு, ஆர்மீனியர் பிரிவு என்ற நான்கு பிரிவுகளைக் கொண்டதாக இருக்கிறது.  அதிகபட்சமாக எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு வசிக்கிறார்களோ அந்த மதத்தின் பெயரால் அந்தப் பகுதி வழங்குகிறது.  அதனால் இப்படிப் பல பிரிவுகளாக இருந்தாலும் ஒரு மதத்தைச் சேர்ந்தவர்கள் இன்னொரு மதப் பிரிவில் இருக்க வாய்ப்பு இருக்கிறது.  ஒரு சிறிய மொரோக்கன் பிரிவும் இருக்கிறது.  இந்தப் பிரிவுகள் சம அளவில்  இல்லை.  டமாஸ்கஸ் (Damascus Gate) வாயிலிலிருந்து ஸயான் வாயில் (Zion Gate) வரை ஓடும் தெரு இந்நகரை கிழக்கு, மேற்காகப் பிரிக்கிறது.  ஜாஃபா வாயிலிலிருந்து (Jaffa Gate) சிங்க வாயில் (Lion’s Gate) வரை ஓடும் தெரு நகரை வடக்கு, தெற்காகப் பிரிக்கிறது.  நகரின் வடகிழக்குப் பகுதியில் முஸ்லீம் பிரிவும் வட மேற்கில் கிறிஸ்தவர்கள் பிரிவும் தென்மேற்கில் யூதர்கள் பிரிவும் தென்கிழக்கில் முஸ்லீம்கள் பிரிவும் இருக்கின்றன.

     

    கிறிஸ்தவப் பிரிவில் 40 தேவாலயங்கள், கிறிஸ்தவத் துறவி மடங்கள் (Monasteries), கிறிஸ்தவ பயணிகள் தங்குமிடங்கள் ஆகியவை இருக்கின்றன.  கிறிஸ்தவர்களுக்கு மிகவும் புண்ணிய தலமாகக் கருதப்படும் Church of the Holy Sepulcher இங்குதான் இருக்கிறது.  இயேசு குற்றவாளி என்று ரோமானிய அரசன் பிலாத்து தீர்மானித்து அவருக்கு மரண தண்டனை வழங்கிய இடம் முஸ்லீம் பிரிவில் இருக்கிறது.  அங்கிருந்து தொடங்கி இயேசு சிலுவையில் அறையப்பட்டுக் கடைசியாக உயிர் துறந்து அவர் உடல் புதைக்கப்பட்ட இடம் வரை உள்ள பாதையைப் பதினான்கு பிரிவுகளாகக் குறித்திருக்கிறார்கள்.  அவற்றை ஆங்கிலத்தில் stations என்று குறிப்பிடுகிறார்கள். இயேசு தன்னுடைய கடைசி யாத்திரையை நோக்கி நடந்த பாதையை Via Dolorosa என்கிறார்கள்.  பாதையின் ஆரம்பத்தில் இயேசுவைக் குற்றவாளி என்று குற்றம் சாட்டிய இடம், பின் அவர் சிலுவையைத் தூக்கி வருமாறு ஆணையிட்ட இடம், அவர் சிலுவையின் சுமையால் விழுந்த இடம், பின் அவர் தன் தாயைக் கூட்டத்தில் சந்தித்த இடம், அவர் தன் ஆதரவாளர்களோடு பேசிய இடம், ஜெருசலேம் பெண்களைச் சந்தித்த இடம் என்று கூறப்படும் இடங்கள் முஸ்லீம் பிரிவில் இருக்கின்றன.  இயேசு சிலுவையின் சுமையால் மறுபடி விழுந்த இடம், ரோமர் சிப்பாய்கள் அவருடைய ஆடைகளைக் கழைந்த இடம், அவரைச் சிலுவையில் அறைந்த இடம், அவருடைய உடலைக் கீழே இறக்கி வைத்த இடம், அவருடைய கல்லறை ஆகியவை பின்னால் கட்டப்பட்ட Church of the Holy Sepulcher-குள்ளே இருக்கின்றன.  இயேசுவை அறைந்த சிலுவையை ஊன்றிய கல் இந்தக் கோயிலுக்குள் இருக்கிறது.  அதில் ஒரு சிலுவையை நட்டு இப்போது வழிபடுகிறார்கள்.  உலகின் பல கோடியிலிருந்தும் கிறிஸ்தவர்கள் இங்கு வருகிறார்கள்.  நாங்கள் சென்றிருந்தபோது ஆந்திராவிலிருந்து ஒரு கோஷ்டி வந்திருந்தது.  (கிறிஸ்தவர்களின் இந்தப் புண்ணிய தலத்திற்கு வர விரும்பும் கிறிஸ்தவர்களில் வருடத்திற்கு 500 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ.20,000 உதவிப் பணமாகத் தமிழ்நாடு அரசு வழங்கப் போவதாகச் செய்தித்தாளில் படித்தேன்.)  இயேசுவின் உடல் கிடத்தப்பட்ட இடம் என்று ஒரு கல்மேடை இருக்கிறது.  கிறிஸ்தவர்கள் அதில் தங்கள் தலையை வைத்து வழிபடுகிறார்கள்.  இயேசுவின் கல்லறையைப் பார்க்க மக்கள் பொறுமையாக வரிசையில் காத்திருக்கிறார்கள்.  ரோமானிய அரசன் கான்ஸ்டாண்ட்டின் (இவன்தான் கிறிஸ்தவ மதத்தை மறுபடித் துளிர்க்கச் செய்தவன்) காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோவில் பல முறை இடிக்கப்பட்டு மறுபடியும் கட்டப்பட்டது.  இப்போதைய கோவில் பன்னிரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம்.  இந்தக் கோவிலின் அதிகாரம் யார் கையில் இருக்க வேண்டும் என்பதில் பல கிறிஸ்தவ மதப் பிரிவினர்களுக்கிடையே நடந்த சச்சரவால் இதனுடைய பெரிய மரக் கதவுகளுக்கான சாவி ஒரு முஸ்லீம் கையில் ஒப்படைக்கப்பட்டதாம்!  இப்போதும் பத்து அங்குல நீளமுடைய இதன் சாவி ஒரு முஸ்லீம் கையில் இருக்கிறது.  அவர் காலையில் கதவைத் திறந்துவிட்டு மறுபடி இரவு எட்டு மணிக்கு வந்து கதவைப் பூட்டிவிட்டுச் செல்வாராம்.

    இயேசுவின் இந்தக் கடைசி  யாத்திரை வழியாக ஒவ்வொரு  வெள்ளிக்கிழமையும் இப்போது  ஃப்ரான்ஸிஸ்கன் (Franciscan) பிரிவைச் சேர்ந்த குருமார் தலைமையில் பக்தர்கள் பாடிக்கொண்டும் ஜபித்துக்கொண்டும் நடக்கிறார்கள்.  இப்போது இருக்கும் பாதைதான் இயேசு நடந்த அதே இடம் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள்.

    இயேசு தன் சீடர்களுடன்  கடைசியாக உணவருந்திய இடம் (Last Supper) என்ற ஒரு இடம் இருக்கிறது.  இது கிறிஸ்தவர்களுக்குரிய புண்ணிய தலம் என்று கருதி போப் இதைக் கிறிஸ்தவர்களுக்குக் கொடுத்துவிடும்படி இஸ்ரேல் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.  அப்படிக் கிடைக்கும் பட்சத்தில் ஸ்பெயின் நாட்டிலுள்ள யூதக்கோவில் ஒன்றை இஸ்ரேலுக்குக் கொடுத்துவிடுவதாக வாக்களித்திருக்கிறாராம்.

    யூதர்கள் பிரிவில் Western Wall என்னும் யூதர்களுடைய இரண்டாவது கோவிலின் இடிபாடுகளில் மிஞ்சிய மேற்குச் சுவர் இருக்கிறது.  இந்தச் சுவரின் மிகப் பெரிய கல்லின் எடை பத்து லட்சம் பவுண்டிற்கும் மேலானது.  நீளம் 45 அடி, உயரம் 15 அடி, ஆழம் 15 அடி.  இந்தச் சுவரின் உயரம் 65 அடி.  யூதர்களின் இரண்டாவது கோவில் இடிக்கப்பட்டது கி.பி. 70-இல்.  கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருஷங்களாக இது இருந்து வருகிறது.  தங்களுடைய இரண்டு கோவில்களும் இடிக்கப்பட்டுவிட்டதால் மூன்றாவது கோவிலை எப்படியும் மறுபடியும் கட்டிவிட வேண்டும் என்று யூதர்கள் நினைக்கிறார்கள்.  யூதர்கள் பகுதியில் உள்ள ஒரு சதுக்கத்தில் மெனோரா (menorah) என்னும் யூதர்களின் ஏழு தீப விளக்கு ஒன்று இருக்கிறது.  இது யூதர்களுக்கு மிக முக்கியமான விளக்கு.  இதில் எரிவதற்கு மிகச் சுத்தமான ஆலிவ் எண்ணெய்தான் உபயோகிக்க வேண்டுமாம். மிகப் பழங்காலத்தில் ஒரு முறை ஒரு நாளைக்கு மட்டுமே போதுமான ஆலிவ் எண்ணெய்தான் இருந்ததாம்.  ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த எண்ணெயிலேயே ஏழு நாளைக்கு தீபம் எரிந்ததாம்..  அதிலிருந்து இந்த விளக்கை ஏழு முகம் கொண்டதாக அமைத்தார்களாம்.  யூதர்கள் பகுதியில் இருக்கும் மெனோராவின் அடியில் ‘மூன்றாவது கோவிலை நாம் காலத்திற்குள் கட்டிவிடுவோம்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.

    1948-இல் நடந்த இஸ்ரேல்-அரேபிய யுத்தத்தில் ஜெருசலேம் ஜோர்டனின் கீழ் வந்தது.  ஜோர்டானிய அரசு இங்கு வாழ்ந்துவந்த யூதர்களை இங்கிருந்து வெளியே அனுப்பிவிட்டது.  மறுபடி 1967-இல் நடந்த சண்டையில் ஜெருசலேம் முழுவதையும் பிடித்துக்கொண்ட இஸ்ரேல் மறுபடி யூதர்களை அங்கு குடியேற்றியது.  ஆங்காங்கே யூதர்கள் சென்ற இடங்களில் எல்லாம் அவர்களுடைய யூதக்கோவில்களைக் (synagogues) கட்டிக்கொண்டாலும் பழைய நகரத்தில் உள்ள மேற்குச் சுவர் யூதர்களைப் பொறுத்த வரை மிகவும் புனிதமானது.  கி.பி.70-இல் ரோமானியர்கள் யூதர்களின் இரண்டாவது கோவிலை இடித்தபிறகு இது மட்டும் மிஞ்சியிருக்கிறது.  ரோமானியர்கள் கோவிலை இடித்த போது இது கோவிலின் சுற்றுச் சுவருக்கு வெளியே இருந்திருக்க வேண்டும் என்றும் இது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்று நினைத்து அதை இடிக்காமல் விட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள்.  அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று இடிக்காமல் விடப்பட்ட இந்தச் சுவரே இத்தனை பிரமாண்டமாக இருக்கிறதென்றால் கோவில் எத்தனை பிரமாண்டமானதாக இருந்திருக்க வேண்டும்!  நவீன கட்டடக் கலை உத்திகள் எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் கற்களைக் கொண்டே இப்படி ஒரு பிரமாண்டமான மதில் சுவரைக் கட்டியிருக்கிறார்கள். இப்போது இது யூதர்களின் தலைசிறந்த புண்ணிய இடமாகக் கருதப்படுகிறது.  உலகிலுள்ள யூதர்கள் எல்லோரும் இதைத் தரிசிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.  1948-லிருந்து 1967 வரை இது பாலஸ்தீனர்களின் கையில் இருந்தபோது பல யூதர்களால் இதைத் தரிசிக்க முடியவில்லையாம்.  அதனால் பலர் மிகவும் சோகப்பட்டார்களாம்.  எங்கள் அமெரிக்க யூத நண்பர் ஒருவர் அவருடைய தாத்தாவும் பாட்டியும் ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்து குடியேறியவர்கள் என்றும் இஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்ட பிறகு அங்கு சென்று இந்தப் புண்ணிய இடத்தைப் பார்க்க விரும்பியதாகவும் ஆனால் அது அப்போது ஜோர்டனின் கீழ் இருந்ததால் அதைப் பார்க்க முடியாமல் போனதாகவும் அதனால் மிகவும் மனவேதனை அடைந்ததாகவும் கூறினார்.

    இந்த மேற்குச் சுவரை (Western Wall), Wailing Wall என்று கூறுவோரும் உண்டு.  இந்தச் சுவரின் முன்னே நின்று யூதர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.  இந்தப் பகுதி ஆண்களுக்கு ஒரு பெரிய பிரிவாகவும் பெண்களுக்கு ஒரு சிறிய பிரிவாகவும் ஒரு வேலி மூலம் பிரிக்கப்பட்டிருக்கிறது.  இந்தச் சுவரின் அருகில் நின்று பிரார்த்தனை செய்பவர்கள் ஒரு சிறு தாளில் தங்கள் வேண்டுகோளை எழுதிச் சுவரில் உள்ள இடுகல்களில் சொருகிவிடலாம்.  இறைவன் அந்த வேண்டுகோள்களை நிறைவேற்றுவார் என்று நம்புகிறார்கள்.  அவர்கள் உருக்கமாகப் பிரார்த்திப்பதால் Wailing Wall என்று இதற்குப் பெயர் வந்ததாம்.  நாங்களும் எங்கள் வேண்டுதல்களை ஒரு தாளில் எழுதி சுவரில் செருகிவிட்டு வந்தோம்.  குறை தீர்க்கும் கடவுள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தால் என்ன?

    இதை அடுத்து இருக்கும்  இடத்திற்குப் பெயர் கோவில் குன்று (Temple Mount). இதில் அல்-அக்ஸா (Al-Aksa) என்னும் மசூதியும் குன்றின் மேல் கூண்டு (Dome of the Rock) என்னும் மசூதியும் இருக்கின்றன.  இவை இரண்டும் அழிக்கப்பட்ட யூதர்களின் கோவிலின் இடத்தில் கட்டப்பட்டது என்று யூதர்கள் நம்புகிறார்கள்.  இந்த இரண்டு மசூதிகளிலும் முஸ்லீம்களின் ஐந்து பிரார்த்தனை நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகள் உள்ளே நுழைய முடியாது.  இந்த இரண்டு மசூதிகளுக்குள்ளும்  முஸ்லீம் அல்லாதவர்கள் உள்ளே செல்லவே முடியாது.  ஆனால் இந்த மசூதிகளின் வளாகத்திற்குள் முஸ்லீம் அல்லாதவர்களும் போகலாம்.

    கோவில் குன்று என்று  அழைக்கப்படும் Temple Mount-இல் தான் யூதர்களின் இனத்தை ஸ்தாபித்த ஆபிரகாம், இறைவனின் ஆணைக்கு இணங்கி தன் மகன் ஐஸக்கைப் பலியிடத் தயாரானாராம்.  இதே இடத்தில்தான் முஸ்லீம் மத ஸ்தாபகரான முகம்மது தன் குதிரையின் மீது ஏறி சொர்க்கத்தை நோக்கிச் சென்றாராம்.

    இந்த இரண்டு புராணச்  சம்பவங்களாலும் யூதர்களும் முஸ்லீம்களும் இதற்குச் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.  புராதன காலத்தில் இவை யூதர்களுக்குச் சொந்தமான இடமாக இருந்தன  என்றும் மசூதி இருக்கும்  இடத்தில்தான் யூதக் கடவுள் ஒரு கல்லிலிருந்து உலகைப் படைத்தார் என்றும் யூதர்கள் நம்புவதால், அவர்கள் அல்-அஸ்கா மசூதிக்குள் எப்படியாவது சென்று அங்கு வழிபட விரும்புகிறார்கள்.  அப்படி சிலர் நுழைய முயலும்போது கலவரங்கள் வெடிக்கின்றன.  இவற்றைத் தவிர்க்க இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூதர்கள் யாரும் அங்கு போகாதவாறு அந்த இடங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இஸ்ரேல் காவலர்கள் அங்கு போகும் எல்லோரையும் அவர்கள் இஸ்ரேல் பிரஜைகள் அல்ல என்று சரிபார்த்துக்கொள்கிறார்கள்.  (1967 சண்டைக்குப் பிறகு இந்த இடம் இஸ்ரேலின் கீழ் இருந்தாலும் இஸ்ரேலுக்கும் ஜோர்டானுக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் அந்த இடங்களின் பராமரிப்பு இப்போது ஜோர்டன் கையிலும் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடு இஸ்ரேல் கையிலும் இருக்கின்றன.)  எங்களிடமும் எங்கள் பாஸ்போர்ட் பற்றிக் கேட்டார்கள்.  நாங்கள் எங்கள் பாஸ்போர்ட்டுகளை எடுத்துச் சென்றிருக்கவில்லையாதலால் என் கணவருடைய அமெரிக்க டிரைவர் லைசென்சைச் சரிபார்த்துவிட்டு எங்களை உள்ளே விட்டார்கள்.

    கோட்டைச் சுவரில்  ஒரு ஒலி-ஒளிக் காட்சி உண்டு.  இது கோட்டைச் சுவரின் பின்னணியில்  காட்டப்படுகிறது.  இஸ்ரேலின்  வரலாற்றை ஆதிகாலத்திலிருந்து இயேசு காலம் வரை யூதர்களின் பார்வையில் இக்காட்சி காட்டுகிறது.  அந்தச் சூழ்நிலையும் பிரமாண்டமான  காட்சியமைப்பும் நம்மை  புராதன காலத்திற்கே கொண்டுசெல்கின்றன.  இந்தக் காட்சி இரவில் நடக்கிறது.  பகலில் சுவரில் உள்ள பல அறைகளில் இஸ்ரேலின் வரலாற்றுக்கால  நிகழ்ச்சிகளை காட்சிப் பொருள்களாக வைத்திருக்கிறார்கள்.  இவற்றில் ஜெருசலேம் மற்றும் பிற  நகரங்களின் மீது யார், எப்போது, எதற்குப் படையெடுத்தார்கள் என்பதை விளக்கமாகக் காணலாம்.  ஒரு அறையில் வரலாற்றைத் திரைப்படமாகக் காட்டுகிறார்கள்.  கோட்டைச் சுவரின் உச்சியில் ஒரு தொலைநோக்கிக் கருவி இருக்கிறது.  ஜெருசலேமின் முக்கியமான இடங்களை விளக்கும் ஒலிப் பேழையை வைத்துக்கொண்டு தொலைநோக்கி மூலம் பார்த்தால் ஜெருசலேமின் வரலாறும் சிறப்பும் நம் கண் முன்னே நிற்கும்.

    (தொடரும்)

    ஜெருசலேமில் என் மகள் மெல்லி எடுத்த புகைப்படங்களின்  ஆல்பத்தை இந்த இணைப்பில்  விரும்புபவர்கள் பார்க்கலாம்.  இந்த ஆல்பத்தில் புராதன நகரின் முக்கிய கட்டடங்கள், தெருக்கள், இயேசுவின் கடைசி யாத்திரைப் பாதை ஆகிய படங்களைப் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/OldJerusalem?authkey=Gv1sRgCJeW6_aWko-T_AE

    Old Jerusalem  Views

    Dome of the Rock:

    https://picasaweb.google.com/108173580006522327175/OldJerusalem?authkey=Gv1sRgCJeW6_aWko-T_AE#slideshow/5835971938641884274

    Grape leaves:

    https://picasaweb.google.com/108173580006522327175/OldJerusalem?authkey=Gv1sRgCJeW6_aWko-T_AE#slideshow/5835963078573758306

    Dresses:

    https://picasaweb.google.com/108173580006522327175/OldJerusalem?authkey=Gv1sRgCJeW6_aWko-T_AE#slideshow/5835968513212583826

    Jewish lamp

    :https://picasaweb.google.com/108173580006522327175/OldJerusalem?authkey=Gv1sRgCJeW6_aWko-T_AE#slideshow/5835966967605652066

    Store:

    https://picasaweb.google.com/108173580006522327175/OldJerusalem?authkey=Gv1sRgCJeW6_aWko-T_AE#5835969088319312386

    Old Jerusalem view:

    https://picasaweb.google.com/108173580006522327175/OldJerusalem?authkey=Gv1sRgCJeW6_aWko-T_AE#slideshow/5835963622904367954

    Old Jerusalem view:

    https://picasaweb.google.com/108173580006522327175/OldJerusalem?authkey=Gv1sRgCJeW6_aWko-T_AE#slideshow/5835963669435672962

    Credit Melli Annamalai

    Share
  • குடதிசை மருங்கில் – 3

    தேமொழி

    குடதிசை மருங்கில் – 3

    இந்தியத் தெய்வங்களின் கற்சிலைகள்:
    (தொடர்ச்சி)

     

    பிரம்மா:

     

    அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001


    பிரம்மாவை நான்கு தலைகள் இருப்பதைக் கொண்டு அடையாளம் கண்டு கொள்ளலாம் (பார்வைக்குத் தெரியாமல் பின்புறம் ஒரு தலை அமைந்திருக்கும்).  படைப்பதனால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கடவுளாக இருந்தாலும், பிரம்மாவிற்கு மிகக் குறைந்த அளவில்தான் பக்தர்களும் கோயில்களும் இந்துமதக் கலாச்சாரத்தில் உண்டு. படத்தில் காட்டப் படும் இச்சிலை ஒரு சிவன் அல்லது திருமாலின் கோயிலின்  வெளிபிரகாரத்தில் இடம் பெற்றிருந்திருக்கக் கூடும். இதுபோன்று மென்மையாக,  கண்கவரும் வண்ணம் நுட்பத்துடன் வடிவமைக்கப் பட்ட பல சிற்பங்கள் தென்னிந்தியாவில் ஆட்சி புரிந்த சோழப் பேரரசுக் காலத்தில் உருவாக்கப் பட்டவை. இவ்வகை சிற்பவடிவமைப்பிற்கு உபயோகப் படுத்தப்பட்ட கடினமான கருங்கற்களில் மிக நுண்ணிய வேலைப்பாடுகளை செதுக்குவது இயலாத செயலாகும்.

    அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001


    இந்து தெய்வம் பிரம்மா: இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த இந்தக் கருங்கற்சிலை 10-12 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B60S46+L2012.0801.001

     

     

    விஷ்ணு:

    அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003

    விஷ்ணு இந்துமதத்தின் மிகவும் சிறப்பு பெற்ற தெய்வம். உலகில் நீதியை நிலைநாட்டி காக்கும் தொழிலைச் செய்பவர் விஷ்ணு. உலகைத்  தீய சக்திகள் ஆட்டிப் படைக்கும் பொழுது, மண்ணில் பல வகையான அவதாரங்களில் அவதரித்து அத்தீய சக்திகளை அழித்து மக்களைக் காப்பார்.  அந்த அவதாரங்களில் குறிப்பிடத் தக்கவை வினோதமான மனிதனும் சிங்கமும் இணைந்த உருவ அமைப்பினை உடைய நரசிம்ம அவதாரமும், மனித உருவிலேயே அவதரித்த ராமர் மற்றும் கிருஷ்ண அவதாரங்களும் ஆகும். விஷ்ணுவின் தெய்வீகத் தன்மையைச் சித்தரிப்பது  அவருடைய நான்கு கரங்களும் அவற்றில் வழக்கமாக ஏந்திய கதை, சங்கு, சக்கரம் போன்றவைகளும் ஆகும்.

    அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003

    இச்சிலையில் விஷ்ணுவின் இருபக்கங்களிலும் சிறிய உருவங்களில் காட்டப் பட்டிருப்பது அவருடைய மனைவிகள். அவர்களுக்கும் அருகில், மேலும் சிறிய உருவத்துடன் காட்டப் பட்டிருப்பது விஷ்ணுவின் சங்கு சக்கரத்தை சித்தரிக்கும் உருவங்கள், முறையே சங்கு சக்கரத்தை  தங்கள் தலையில் மகுடமாக தரிதுள்ளார்கள். விஷ்ணுவின் வாகனமான கருடன் மனித உருவில் உள்ள பறவையாக, இறக்கைகளுடன் மண்டியிட்டு அமர்ந்திருப்பதாக சிற்பத்தின் கீழே வலப்புறம் அலங்காரங்கள் நிறைந்த பகுதியில் காட்டப் பட்டுள்ளது. சிற்பத்தின் வலது மற்றும் இடது மேற்புறங்களில் தேவர்கள் மலர்மாலைகளைக் கையிலேந்தி விஷ்ணுவிற்கு அணிவிப்பதற்காகப்  பறந்து வருவது போலச் செதுக்கப் பட்டுள்ளது.

    இந்து தெய்வம் விஷ்ணு, அருகில் லக்ஷ்மி மற்றும் சரஸ்வதி: பங்களாதேஷ், டாக்காவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 11-12 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B60S48+L2012.0801.003

     

    சிவன்:

     

    அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015

    இந்தியக் கடவுள் சிலைகளில் சிவனை அடையாளம் காட்ட உதவுபவை அவர் நெற்றியில் உள்ள மூன்றாம் கண், கழுத்திலணியும்  பாம்பு, கையிலேந்திய மண்டை ஓடு, தலையில் முடிந்த கொண்டை போன்ற சிகையலங்காரத்தில் உள்ள பிறை. சிவனைக் குறிக்கும் அனைத்து உருவங்களிலும் இவை யாவும் அமைந்திருக்காது. இங்கு காணும் சிலையில் தட்சிணாமூர்த்தி வடிவத்தில் அமர்ந்து முனிவர்களுக்கு உபதேசம் செய்யம்  சிவன், தனது  காலடியில் அறியாமையைக் குறிக்கும் குள்ள அசுரனை மிதித்திருப்பதாகக் காட்டப் பட்டுள்ளது.   உலகில் தோன்றும் மனிதப் பிறப்பில் இருந்து விடுதலை அடைவதற்கு வழியைக் கூறி அருளுவது  தட்சிணாமூர்த்தியின் உபதேசமாகும்.  சமஸ்கிரதத்தில் தட்சிணாமூர்த்தி என்பதற்கு ‘தென்திசை நோக்கும்’ என்ற மற்ற ஒரு பொருளும் உண்டு. தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தச் சிலை, பெரும்பாலும் அப்பகுதி கோயில்களில் தெற்குப் பிரகாரச் சுவர்களில் இடம் பெற்றிருக்கும்.

    அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015

    இந்து தெய்வம் சிவன், தட்சிணாமூர்த்தி வடிவில், தென்னிந்தியாவைச் சேர்ந்த இந்தக் கருங்கற்சிலை 13 – 14 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஆவ்ரி ப்ரண்டேஜ் அவர்களின் சேகரிப்பில் இடம் பெற்றது.
    அருங்காட்சியக அடையாள எண்: B61S1+L2012.0801.015

     

    ஹரிஹரன்:

    அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013

    இந்து மதத்தின் இரு முதன்மை ஆண் தெய்வங்களான விஷ்ணுவும் (ஹரி) சிவனும் (ஹரன்), சில சமயங்களில் இணைந்து ஹரிஹரனாக இருப்பதாகச் சித்தரிக்கப் படுவார்கள். இங்கு காணும் அது போன்ற ஹரிஹரன் சிலையில், மேலிருந்து கீழாக வலப்பக்கத்தில் சிவனும் இடப்பக்கத்தில் விஷ்ணுவும் காட்டப் பட்டுள்ளார்கள். வலது பக்க நெற்றியில் சிவனின் பாதி நெற்றிக்கண் காட்டப்படுள்ளது, சிதைந்த வலக்கையில் சிவனின் சூலாயுதம் இடம் பெற்றிருந்திருக்கக் கூடும். இடக்கைகளில், சிதையாத கை ஒன்றில் விஷ்ணு சங்கைப் பிடித்திருபதாகக் காட்டப் பட்டுள்ளது.

    அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013

    இந்து தெய்வம் ஹரிஹரன், இந்தியாவைச் சேர்ந்த இந்தக் கற்சிலை 9 – 11 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. காட்சியகம் வாங்கிய சிலைகளின் சேகரிப்பில் உள்ளது.
    அருங்காட்சியக அடையாள எண்: B67S6 L2012.0801.013

     

    (தொடரும்)

     

    [படங்களின் குறிப்பு, அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு வழங்கும் குறிப்பின் மொழிபெயர்ப்பு]

    Source:

    http://www.flysfo.com/museum/exhibitions/deities-stone-hindu-sculpture-collections-asian-art-museum
    Deities in Stone: Hindu Sculpture from the Collections of the Asian Art Museum
    San Francisco Asian Art Museum
    August 25, 2012–February 25, 2013

    All objects and images, and translated descriptions displayed here are from the collections of the Asian Art Museum of San Francisco.
    © Asian Art Museum, San Francisco. Used with obtained expressive permission from the museum.

     

    << குடதிசை மருங்கில் – 4                                                                                                         குடதிசை மருங்கில் – 2 >>

     


    Share
  • பொழுதின் மீதான உறவு – கவிதை

    மு.கோபிசரபோஜி

    மொக்கொன்று
    அப்பொழுது தான்
    பூத்த தருணம் போல இரவு.

    இரவுடனான
    அந்த நெருக்கத்தை
    எந்தவொரு பகலும்
    எட்டவேயில்லை என்னிடம்.

    துருத்தி தெரியும் படி
    தன் இயலாமைகளையும்
    இல்லாமைகளையும்
    வார்த்தை கத்திகளாக்கி……..

    என் நெஞ்சில் தேக்கி
    நெருடலின்றி சன்னமாய்
    கடந்து போகிறவர்கள்
    பகலில் உலவித்திரிகையில்…….

    வஞ்சத்தை விட
    பரிதாபம் மட்டுமே
    மிஞ்சுகிறது
    எனக்கான
    எல்லா பகலிடமும்!

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    மகாபாரதத்தில் யட்சனின் கேள்விகளுக்கு தருமராசன் பதில் சொல்லியே தீரவேண்டும். எல்லா உயிர்களையும் கவர்ந்து செல்லும் யமதர்மராசனின் மகன் என்று புகழ்பெற்ற யுதிர்ஷ்டிரனுக்கு அந்தச் சமயத்தில் தன் உயிர் தன் கையில் இல்லை என்று புரிகிறது. கீழே நான்கு தம்பியரும் மரணப்படுக்கையில், தானோ தனியாள்.. கேள்வி கேட்பவனோ, தங்கள் வீரத்தை விட சிறந்தவன், இல்லையென்றால் வீராதிவீரர்களை, தம் தம்பியரையே, மூர்ச்சை அடையச் செய்வானா.. தங்கள் ஞானத்தை விட சிறந்த ஞானத்தினைப் பெற்றவனாகத்தான் இருக்கவேண்டும்.. இல்லையென்றால் தன் கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு நீரை அருந்து எனக் கட்டளை இடுவானா.. இருந்தும் நிலைமையை தைரியமாக எதிர்கொள்கிறான் தருமன்.

    யட்சனின் கேள்விகளில் மிக முக்கியமானது ‘ஆச்சரியமானது என்பது எது’ என்பதுதான். அதற்கு தருமன் பதில்சொல்வான் ‘தானும் ஒருநாளில்லாவிட்டால் ஒருநாள் இறந்துதான் தீரவேண்டும் எனத் தெரிந்தும் அந்தச் சமயத்தில் இறந்து போனவனுக்காக பரிதாப்படுவதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்’ என்பான் அவன்.

    மனிதனின் மரணம் என்பது நிச்சயம் என்றாலும் அது வரும் காலத்தில் அதை எதிர்கொள்வது என்பது மிகவும் சிரமமான விஷயம்தான். மரணகாலத்தில் மனிதனால் இறைவன் நாமம் சொல்லமுடியாது போகலாம் என்பதால் தான் நன்றாக இருக்கும்போதே ’மாதவனை தன் மார்பில் இருத்தி அனுக்கணமும் பூசை செய்தால்’ இந்தக் கடைசிகால எமபயத்தைப் போக்கிவிடலாம் என்று உபாயம் சொல்வர் பெரியாழ்வார். ஆனால் மரணம் வருபவருக்குதானே இந்தப் பிரச்னை.. முதிர்ந்த வயதில் அந்த மரணம் வரும் வேளையில் அவரைச் சார்ந்தவர்கள் எப்படியெல்லாம் எதிர்கொள்கிறார்கள்.. ஒரு குரூரமான நகைச்சுவைத் துணுக்கு கூட உண்டு. கணவன் இறந்துவிட்டான், தேகம் திடீரென பெரிதாக உப்பிவிடுகிறது. வெளியில் எடுத்துச் செல்ல வாசல் நிலைப்படியை இடித்து அகலப்படுத்தி எடுத்துச் செல்லவேண்டும். ஆனால் மனைவி ஒப்புக்கொள்ளவில்லை. இறந்துபோனபின் அவன், அவள் எல்லாம் வெறும் கட்டைதானே.. இந்தக் கட்டையை வேண்டுமென்றால் அறுத்துச் செல்லவும், வீட்டு நிலைப்படிக் கட்டையை இடிக்கவேண்டாம்’ என்கிறாள்.

    ஆனால் சென்ற வார பொங்கல் வல்லமை சிறப்பிதழில் உயிர் போகும்போது கூடி உள்ள உறவினர் நிலையைத் தெளிவாக எளிமையாகச் சொல்லி இருக்கிறார் திரு ரிஷி ரவீந்திரன் அவர்கள். அந்தப் பாட்டியைப் பற்றி அகப் பார்வையாகச் சொல்லாமல் புறப்பார்வையாக சொல்லி இருப்பது சுவையாகவும் இருக்கிறது. இதோ அவரின் கைவண்ணத்தில்

    தாடி  ராமசாமி மாமா பாட்டியின் மரணமடையக்கூடிய நேரத்தை  எதிர்நோக்கி கவலையுற்றார். அடைப்பு நட்சத்திரத்தில் மரணித்தால் பிணத்தை வாசல் வழியாக எடுக்க இயலாதே !. தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் மரணித்தால், கூரையைப் பிரித்து அதன் வழியாகவோ அல்லது சுவற்றினை இடித்து அதன் வழியாகவோதான் பிணத்தினை எடுக்கவேண்டும் என்பது நியதி.

    தனிஷ்டா பஞ்சமி என்றழைக்கப்படும் நட்சத்திரங்களில் ஏற்படும் மரணம் அடைப்பு ஆகிவிடுகின்றது. ஆவிமூலமாகவோ, கனவு மூலமாகவோ அல்லது ப்ரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி வீட்டிலுள்ளோர்களைப் பயமுறுத்தி ஆறு மாதத்திற்குள் மரணப்படுகையில் தள்ளிவிடும் என்றொரு ஐதீகம். முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்தி எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன என்றொரு நம்பிக்கை.

    தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்களில் மரணித்தவர்கள் எமலோகம்  சென்றடைய இந்த அடைப்பு என்றழைக்கப்படுகின்ற கால அவகாசம் தேவைப்படுகின்றது என கருடபுராணம் உறுதிப்படுத்துகின்றதே ? மருத்துவன் நாடி பிடித்த கணக்கினை வைத்துக் கணித்தால், கிழவி பஞ்சமி நட்சத்திரத்தில்தான் மரணிப்பாரோ…? என்ன பரிகாரம் செய்வது…? என்ற எண்ணவோட்டம் தாடி ராமசாமி மாமாவின் மனதினில் பெளர்ணமி அலைகளாக ஆர்ப்பரித்துக்கொண்டிருந்தன.

    ஊரின் எல்லையில் ப்ளஷர் காரின் ஹார்ன் சப்தம் கேட்டு சின்னஞ்சிறார்கள் வழியும் மூக்கினை இடக்கையால் வழித்துக்கொண்டு வலக்கையால் கீழிறங்கும் டவுசரை இழுத்துக்கொண்டே  ஓடினர். பெரும்பாலான டவுசரின் பின்பக்கங்கள் இந்திய வரைபட  வடிவினில் கிழிந்திருந்தன.

    லட்சுமி தன் குடும்பத்துடன் வந்துவிட்டதாய் கூட்டம் அனுமானித்தது. பஜனை தாத்தா எதோ தயார் செய்ய  கூடத்தினுள்ளே சென்றார். பாட்டி தன் காதுகளைக் கூர்மையாக்கினார்.

    பேரக்குழந்தைகள் ஐவரும் ஆஜர்,  அந்த இடமே இப்பொழுது  சாவுக்கலையிலிருந்து மங்களகரமாய் மாறியிருந்தது. உற்சாகமான அதிர்வலைகள் ஜனித்திருந்தன. பாட்டியின் முகத்தினில் ஒருவித பரவசநிலை.

    ஒரு வயது நிரம்பாத கடைக்குட்டி வரதன் பாட்டியைக் கூர்மையாகப் பார்த்தான். பாட்டி இவன் பிறப்பதற்கு முன்பே பார்வை இழந்தவர், வரதன் முகத்தில் புன்னகை, ”யார்ரா…இது….?” எனத் தன் பிஞ்சுக் கரங்களினால் பாட்டியைத் தொட்டுச் சிரிக்கும்பொழுது பாட்டி மெய்சிலிர்த்துப் போனாள்.
    http://www.vallamai.com/special/pongal/1878/

    ரிஷி இப்படி யதார்த்தத்தை எளிமையாகச் சொல்லும் முறை நன்றாக இருக்கிறது. பிறப்பென்று ஒன்று இருக்கும்போது மரணம் நிச்சயம்தான். வந்தவர் எல்லாம் தங்கி விட்டால் பூமியிலே நமக்கிடமேது’ என்பார் கண்ணதாசன். நம்மாழ்வாரோ ஒரு படி மேலே போய், ’இந்த பூமியின் தாங்கமுடியாத ப்ளுவைக் குறைக்க ஒரு உபாயத்தைக் கண்டுபிடித்தாய், அதுதான் பாரதயுத்தம் கண்ணா!’ என்பார். எது எப்படியாகினும் மரணத்தைக் கண்டு பயப்படாது எல்லையில் போராடும் யுத்த வீரன் போல எல்லா மனித உயிர்களும் இருக்கவேண்டும் என்பேன் நான். நல்லதொரு சிந்தனையை அளித்த திரு ரிஷி ரவீந்திரனை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினர் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுகிறார். வல்லமையாளர் ரிஷி வாழ்க என வாழ்த்தி மேலும் பல கட்டுரைகளை அள்ளி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    கடைசி பாரா: மனோகரனின் கவிதை

    முதியோர் இல்லங்களுக்கு உதவிசெய்
    பணம் கொடு, பொருள் கொடு, வசதிகொடு
    பெற்றவர்களையே கொடுக்காதே!!!!!!!!!!!!

    Share
  • அக்காம்மா

    கோழி மிதித்துக் குஞ்சுகள்
    சாவதில்லை!
    குஞ்சுகள் மிதிக்கக் கோழி
    செத்துச் சீர்குலையும்
    பின்னாளில்,
    சொத்துப் பிரிக்கையில்!!
    ஆனால் இந்தக் குஞ்சுகள்
    மொத்தக் குஞ்சுகளாய்
    முத்தக் குஞ்சுகளாயின!
    அம்மாவுக்கு அம்மாவா இருந்து
    எங்களை வளர்த்தினேதானே?
    பிரிக்கவே வேண்டாமக்கா
    எல்லாத்தையும் நீயே வெச்சிக்க!!

     

    Share
  • காவிரிக்கு ஒரு கடிதம்

    முகில் தினகரன்

    (1)   காவிரிக்கு ஒரு கடிதம்
    அன்புள்ள காவிரியே!
    என் நினைவின் பக்கங்களில்
    மறைத்து வைத்திருக்கிறேன்
    நீ
    தளும்பித் தளும்பிச் சிரித்த
    அந்தக் கருப்பு வெள்ளைக் காட்சிகளை!

    உன்னில் மூழ்கிக் குளித்து
    உவகை ஊஞ்சலாட
    நயாகரா நீர்வீழ்ச்சியே
    விண்ணப்பமிட்ட காலமுண்டு!

    புது வெள்ளக் காலத்தில்
    பூப்படைந்த பெண்ணாய்
    நாணம் பொங்க நீ நளினத்தோடு
    வளைந்து நெளிந்து
    வருவதைப் பார்த்த இந்தக் கண்கள்

    இன்று நீரற்று
    வெள்ளச் சேலை கட்டிய விதவையாய்…
    மொட்டையடித்து நீட்டிப் படுத்திருக்கும்
    உனைக் கண்டு சிந்திய கண்ணீர்
    எப்போதோ உன்னிடம் பருகிய நீரின் எச்சம்!

    உன் கரையில் நடந்து போகும்
    உல்லாசத்திற்காக மட்டுமே
    நாள் தவறாமல் பள்ளிக்குப் போனவன் நான்!

    காவிரியே…
    எங்களுக்கு நீதான்
    எகிப்தின் நைல்..லண்டனின் தேம்ஸ்…
    நியூயார்க்கின் ஹட்ஸன்…ஆக்ராவின் யமுனை!
    ஆம்!
    சங்கத் தமிழனின் பெருமை நீ
    எங்கள் பழைய வாழ்க்கையின்
    மிச்சம் நீ….ஆனாலும்

    இந்த ஊரை விட்டுப் பலர் வெளியேற
    உன்னோட வறட்சியே காரணமானதுதான்
    இதயத்தைப் பிழியும் ரண காவியம்!

    எங்கள் விவசாய இல்லங்களில்
    விடிவிளக்காய் இருந்து விட்டு
    இன்று
    வறுமை இருட்டை அவர்களுக்கு
    வாழ்க்கையாக்கி விட்டாயே..

    எந்தப் பாவத்திற்கான பழி தீர்ப்பு இது?
    ஓ…இங்கிருக்கும் சில
    அரசியல் அகத்தியர்கள்
    தங்கள் சுயநலக் கமண்டலத்தில்
    உனை அடைத்து விட்டாரென்ற
    கோபத்திற்கா?

    இறுதியாய் காவிரி..
    எனக்கு நம்பிக்கை இருக்கின்றது
    மீண்டும் பொங்கிப் பெருகி நீ வருவாய்!
    தளும்பித் தளும்பி நீ சிரிப்பாய்!
    அப்போது..

    உன் கரையிலிருக்கும்
    ஏதேனுமொரு சுடுகாட்டில்
    என் உடல் எரிந்து கிடக்கும்
    ஆனாலும் நான் மகிழ்வேன்!

    (2)    எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்.

    தொல்காப்பியம் தந்த தொன்மைத் தமிழுக்கு…
    வள்ளுவம் வழங்கிய வண்டமிழுக்கு….
    இதிகாசங்கள் ஈந்த இயற்றமிழுக்கு….
    குறள்நெறி கண்ட தெய்வீகத் தமிழுக்கு….
    எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!……….
    ஆம்!

    கன்னித் தமிழும் கணிணித் தமிழும்
    கைகோர்த்து நிற்க,

    அறிவியல் தமிழும் ஆட்சித் தமிழும்
    அரவணைத்து நடக்க,

    சட்டத் தமிழும் மருத்துவத் தமிழும்
    சம காலத்தைச் செழிப்பாக்கிட,

    சென்னைத் தமிழும் செட்டிநாட்டுத் தமிழும்
    மட்டிலாக் காப்பியமாய் மலர்ந்திருக்க,

    தஞ்சைத் தமிழும் நெல்லைத் தமிழும்
    தலைமுறை தாண்டித் தத்துவம் பொழிய,

    மதுரைத் தமிழும் மலையகத் தமிழும்
    மணிப்பிரவாளமாய் மாண்பு காட்ட,

    கொங்குத் தமிழும் குமரித் தமிழும்
    செங்கோலேந்தி சிம்மாசனம் அமர,

    செந்தமிழ் சீர் பெற..
    தனித்தமிழ் தரம் பெற…
    நற்றமிழ் நயம் பெற…
    முத்தமிழ் முழங்கியெழ…
    எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!……….

    ஆற்றுப் படைகளை
    சேற்றுப் படைகளாக்கி
    அந்தாதிகளைப் பந்தாடி
    ஏலாதிகளை ஏலம் கூவி
    நிகண்டுகளை நிர்வாணமாக்கும்
    சொத்தைச் சமூகத்தின் சுயம் தொலைத்த
    வித்தைத்தமிழரை விரட்டியடித்து
    வீரத் தமிழரின் விலாசங் கூற
    எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!……….

    சொல்லை அறிந்து…அதன்
    பொருளை அறிந்து!
    தூய்மை அறிந்து….இடத்
    தன்மை அறிந்து!
    பயனுறுத்தும் பாவலரும்
    நயனுறுத்தும் நாவலரும்
    தனித் தமிழ் ரதத்தில் தடையின்றி உலா வர…
    எல்லைகளில்லா ஓர் உலகம் வேண்டும்!………… .

    அஹிம்சை வேதத்தால் அவனியழுக்கை
    அமைதியாய்க் கழுவிய அண்ணல் காந்தியும்!
    அன்புத் தேனை ஆன்மீகச் சங்கில்
    வார்த்துத் தந்த வள்ளலாரும்!
    எழுதுகோலில் நெருப்பை நிரப்பி
    கனல் கவி கக்கிய பாரதியும்!
    மரணிக்காது உலவும் மாத்ரு பூமி வேண்டும்!……

    படத்திற்கு நன்றி:

    http://www.nivalink.com/orangecounty/

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 55

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    (10)

    வலைகொண்டு வாழ்வு நடத்துபவர்
    வாழ்கின்ற சேரிதனிலே
    வலை உலர்த்தியிருக்கும் முற்றத்திலே
    பூங்கொத்து ஒன்றினைக் கைதனில் ஏந்தி
    விற்பதற்குரிய வற்றல் மீன்களைக்
    காத்து நின்றாள் கன்னியொருத்தி.

    அவள்தானும்
    தான் வேண்டிய உருவம் எடுத்துக் கொண்டு,
    கொலைத்தொழில் புரியும்
    நீண்ட வேல்போன்ற விழிகளுடன்,
    அலைகின்ற நீரையுடைய குளிர்ந்த கானகத்தில்
    இங்ஙனம் வாழ்ந்து வருவதை
    முன்னரே நான் அறியேனே!
    அறிந்திருந்தால் அங்குதான்
    சென்றிருக்க மாட்டேனே!

    (11)

    நிலை வரி
    தமியளாக இடத்து எதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன் கூறுதல்

    கண் எனக் கயலையும்
    புருவம் என வில்லையும்
    கூந்தல் எனக் கார் மேகத்தையும்
    இவற்றுடன் சேர்த்து
    எதிர்வரும் என்னையும்
    வருத்துகின்ற கொடுந்தொழிலையும்
    எழுதி வைத்துள்ள
    இவளது முகம்தான் திங்களோ?!

    அழகிய பரப்புடைய
    வானத்தில் இருந்தால்
    பாம்புகள் விழுங்கிவிடுமோ
    என்று அஞ்சியே
    மீன்பிடிக்கும் படகுகள் கொண்டு
    வாழ்க்கை நடத்திவரும்
    பரதவர் வாழும் சிற்றூரில்
    தான் வந்து வாழ்கின்றதோ?!

    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram19.html

    படத்துக்கு நன்றி:
    http://www.shutterstock.com/pic-41345068/stock-vector-fishing-boat-with-seagulls-in-the-night.html

    Share