Blog

  • மன அமைதிக்கு வித்து! – வேறுபாடற்ற மனித தத்துவம்

    பவள சங்கரி

    பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் – புவி
    பேணி வளர்த்திடும் ஈசன்
    மண்ணுக்குள்ளே சில மூடர் – நல்ல
    மாதர் அறிவைக் கெடுத்தார்
    கண்கள் இரண்டினில் ஒன்றைக் – குத்திக்
    காட்சிக் கெடுத்திட லாமோ?
    பெண்கள் அறிவை வளர்த்தால் – வையம்
    பேதைமை யற்றிடும் காணீர்!
    – பாரதியார்

    இந்தக் கட்டுரையில் எங்கேனும் ஆணாதிக்கம், அல்லது பெண்ணியம் என்பதன் சாயல் துளியும் தென்படக்கூடாது என்பதில் தெளிவாகவே இருக்கிறேன். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்த வேண்டி, போராட்டங்கள் நூற்றாண்டுகளாக நடந்துகொண்டிருந்தாலும், இன்று பெண்கள் தடம் பதிக்காதத் துறையே இல்லை என்னும் நிலை இருக்கும் ஒரு காலகட்டத்திலும் பெண்களின் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. இங்கு பெண்களின் போராட்டம் என்று நான் குறிப்பிடும்போது சில வேளைகளில் பெண்களே பெண்களுக்கு எதிரியாகவும், தமக்குத்தாமே தேவையற்ற ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயித்துக்கொள்பவளாக இருப்பதையும் சேர்த்தே குறிப்பிட வேண்டியுள்ளது. இந்த எல்லைக்கோடு என்று நான் குறிப்பிடுவது நம்முடைய பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் எந்த விதத்திலும் பாதிக்காமல் இருக்கக்கூடிய எல்லைக்கோடுகளைத்தான்!

    இன்றைய சமுதாயத்தில் ஒரு பெண் என்றால் அவளை இரண்டு எல்லைகளுக்குட்பட்ட நிலையிலேயே பார்க்கத் தோன்றுகிறது அனைவருக்கும். ஒன்று ‘மங்கையராய்ப் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டுமம்மா’ என்பது. மற்றொன்று ‘பெண் எனும் மாய வலை’ என்பது. இந்த இரண்டின் இடைப்பட்ட யதார்த்த நிலையிலான ஒரு பெண்ணின் வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள ஏன் இந்த சமுதாயம் மறுக்கிறது என்பதே இன்றைய பிரச்சனையாக உள்ளது. ஒன்று உச்சாணிக் கொம்பில் தூக்கி வைத்துக் கொண்டாட வேண்டும் அல்லது ‘மாயப்பிசாசு’ என்று அஞ்சி ஒதுக்க வேண்டும் என்ற மோசமான நிலைதான் பெண்களுக்கு இன்று பெரும் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. ஒரு சராசரி உயிராக, சக மனுசியாக நடத்தப்படுவதையே ஒரு தெளிவான பெண் விரும்பக்கூடும். அதுவே அவர்களை வாழ்க்கையின் மேன்மை நிலைக்கு இட்டுச் செல்லக் கூடியதாக இருக்கும். இப்படிச் சொல்லும்போது தற்போது மேன்மை நிலையில் பெண்கள் இல்லையா என்ற கேள்வியும் எழலாம். இன்னும் அந்தப் போராட்டம் ஓய்ந்தபாடில்லை என்பதே சத்தியம். சாண் ஏறினால் முழம் சரியத்தான் செய்கிறது. இதற்கு என்ன காரணம்? கற்கால மனிதன் தோன்றிய ஆதி காலந்தொட்டு இன்றுவரை விதி விலக்கில்லாமல் ஒன்று மட்டும் தெளிவாக நடந்து கொண்டிருக்கிறது. அது பெண்ணினத்தைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என்ற ஆணினத்தின் தீராத தாகம்! ஒரு பெண்ணை இரண்டே கோணங்களில் மட்டும் இவர்களால் பாகுபடுத்திப் பார்க்க முடிகிறது. ஒன்று மாதவம் செய்து மகளிராய்ப் பிறந்தவள், மற்றொன்று மாய வலையாய் சிக்க வைப்பவள்.

    ‘மங்கையராய்ப் பிறந்திடவே மாதவம் செய்திட வேண்டும்’ என்று முடக்கி வைத்து அவளை ஒரு தேவதையாக, மலராக, தெய்வமாக, இறுதியாக கற்சிலையாக, பேசா மடந்தையாக, கைப்பாவையாக, வைத்திருந்தால் வைத்திருப்பவர்களுக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம். ஆனால் இங்கு வளர்ச்சி என்பதற்கு இடமில்லாமலே போய்விடுகிறது. அன்றாடம் அவளுடைய வாழ்க்கை முறையே தியாகம் மட்டும் என்பதன் அடிப்படையிலேயே அமைந்து விடுகிறது. அதுதான் சுகம், அது மட்டுமேதான் வாழ்க்கை என்று வாழ்ந்து பழகியவர்கள், தம் சந்ததியையும் அப்படியே வாழப் பழக்குவதிலும் ஆச்சரியமில்லை. ஆனால் அதெல்லாம் சென்ற நூற்றாண்டு வரையிலும், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலகட்டம் வரை சரியாக இருந்திருக்கலாம். ஆனால் இன்று எந்த ஒரு துறையும் ஆண்களுக்கானது என்று தனியாக ஒதுக்கப்படவில்லை. இன்றைய வாழ்க்கை ‘SURVIVAL OF THE FITTEST’ என்ற அடிப்படையில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு பெண் தன்னை மிஞ்சி விடுவாளோ என்ற பதட்டமும், சுயபச்சாதாபமும் ஒரு ஆணுக்கு ஏற்படுவதாலேயே பல பிரச்சனைகள் எழுகிறது. எந்த வகையில் அவளை முடக்கினால் தனக்கு போட்டி இல்லாமல் இருக்கும், போராட்டம் இல்லாத வெற்றியாக அமையும் என்பதில் குறியாக இருக்கும் நிலையே இன்று அதிகமாகக் காணப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் ஒரு பெண்ணை எந்த வகையிலும் சக மனுசியாக வைத்துப் பார்க்க முடியாத நிலையே. எதையாவது சொல்லி, அவளை எப்படி முடக்க வேண்டும் என்று திட்டம் போட்டு செய்யும் செயலாகவே பல நேரங்களில் வெளிப்படுகிறது. இதற்கு பெண்ணை தெய்வமாகப் போற்றுகிறேன், அவள் பாதுகாப்பிற்காக அவளை வழிபட்டு, மிகச் சிறப்பானதொரு இடத்தில் வைத்திருக்கிறேன் என்று சொல்லியே முடக்கி வைக்கும் ஒரு வகை. இப்படி ஒரு சூழலில்தான் பெண்கள் வேதம் கற்கக் கூடாது எனும் நிலை இருந்ததைக் கண்டு பொங்கி எழுந்த பாரதி அன்று,

    “வேதம் படைக்கவும் நீதிகள் செய்யவும் வேண்டி வந்தோமென்று கும்மியடி” என்றும்,

    “சாத்திரங்கள் பலபல கற்பராம்,
    சவுரியங்கள் பலபல செய்வராம்
    மூத்த பொய்மைகள் யாவும் அழிப்பராம்,
    மூடக் கட்டுக்கள் யாவுந் தகர்ப்பராம்
    காத்து மானிடர் செய்கை யனைத்தையும்
    கடவுளர்க்கினிதாகச் சமைப்பராம்”

    என்று முழக்கமிட்டதோடு,

    “பெண் விடுதலை நீரில்லை என்றால்
    பின்னிந்த உலகினிலே வாழ்க்கை இல்லை,
    ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
    அறிவி லோங்கி இவ்வையகம் தழைக்குமாம்”

    என்றும் பாடிவைத்துச் சென்றான், பெண் விடுதலை பற்றி ஓயாது பேசியவன்! ஆனால் இவையனைத்தும் இன்று மேடைப் பேச்சுக்கும், திண்ணையில் உட்கார்ந்து சுகமாக அசை போடவும் மட்டுமே பயன்படுவதாகத் தெரிகிறது. பெண்ணை வெறும் போகப் பொருளாகவும், வேலை செய்யும் இயந்திரமாகவும், பொழுதுபோக்கு சாதனமாகவும் பார்க்கும் வழமையில் சற்றும் மாற்றம் இல்லை என்பதே கசப்பான உண்மை. ‘பாரதியே என் உயிர் மூச்சு’, என முழக்கமிடும் கவிச்சக்கரவர்த்திகளும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘படிப்பது இராமாயணம், இடிப்பது இராமர் கோயில்’ என்பதே வழமையாகிவிடுகிறது.

    நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
    நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
    திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
    செம்மை மாதர் திறம்புவது இல்லையாம்.

    தேடிச் சோறு நிதம் தின்று – பல
    சின்னஞ்சிறு கதைகள் பேசி
    வாடித் துன்பமிக உழன்று – பிறர்
    வாடப் பல செயல்கள் செய்து
    நரை கூடிக் கிழப்பருவம் யெய்தி
    கொடுங் கூற்றுக்கிரை எனப் பின்
    மாயும் பல வேடிக்கை மனிதரைப் போல
    நானும் இங்கு வீழ்வேன் என்று நினைத்தாயோ

    என்றும் சொல்லிச் சென்றவனை வணங்கி உள்ளத்தில் ஏற்றி உய்ய வேண்டிய காலகட்டமிது.

    படைப்பாளர்களில் பாலின வேறுபாட்டின் அடிப்படையில் எல்லைக்கோடுகள் நிர்ணயம் செய்யப்படுவதும் நிதர்சனமாகிறது. கற்பனைச் சிறகை விறிப்பதற்கும் எல்லைக்கோடுகள் தேவைப்படுகிறது. சுயகட்டுப்பாடும், சுய ஒழுக்கமும் உள்ள ஒரு பெண் தன் கண்முன் நடக்கும் சில விசயங்களை கௌரவமான மொழியில் எழுதுவதற்கு என்ன தடை வேண்டியிருக்கிறது. இதைவிட மோசமாக, வெளிப்படையாக எழுதும் ஆண் படைப்பாளர்கள் பற்றிய எந்தவொரு விமர்சனமும் எழாதபோது, வெகு நேர்த்தியாக, விரசமில்லாத ஒரு கட்டுப்பாட்டிற்குள் எழுதும் பெண் படைப்பாளிகளை குறி வைத்துத் தாக்கும் நோக்கம் இன்னும் பெண்களுக்கான சுதந்திரம் மறுதலிக்கப்படுவதே வெள்ளிடைமலை. ஒரு படைப்பில் ஆண் படைப்பு, பெண் படைப்பு என்ற பேதம் தேவைதானா? ஆணோ, பெண்ணோ அவரவர் எண்ணத்தில் உதிக்கும் வண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து வரைவதுதானே இலக்கியமாகிறது. இதற்கு நம் புராணங்கள், இதிகாசங்கள் என்று எத்தனையோ உதாரணங்களைக் காட்ட முடியும். இப்படி விமர்சனத்திற்கு உள்ளாகக் கூடிய படைப்புகளே பெரும்பாலும் வெற்றி பெறுகிறது. அது அந்த படைப்பின் வெற்றி அல்லவா?

    ஒரு பெண் சமுதாயத்தின் இப்படிப்பட்ட தளைகளைக் கடந்து ஒரு நிலைக்கு முன்னுக்கு வருகிறாள் என்றால் அதற்கு அவள் எந்த அளவிற்குப் போராட வேண்டியுள்ளது. குடும்பத்தையும் , குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, பணியிடங்களிலும் எந்த விசேச சலுகைகளையும் எதிர்பார்க்க முடியாமல் ஆண்களுக்குச் சரியாக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறாள். அத்துனைப் போராட்டத்திற்குப் பிறகும் அவளுக்குக் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அதையும் எந்த அளவிற்கு சிறுமைப்படுத்தி அவளை சின்னாபின்னமாக்கலாம் என்று துடிப்பவர்கள்தான் அதிகம். இதில் பல நேரங்களில் ஆண், பெண் என்ற பாகுபாடெல்லாம் கூட இல்லாமல் போய்விடுகிறது என்பதும் வேதனையான விசயம். மாறிவரும் காலப்போக்கிற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ள வேண்டி ஒரு சராசரி இந்தியப் பெண், தன் தகுதியை உயர்த்திக்கொள்ள எத்துனை விதமான போராட்டங்களை அன்றாடம் சந்திக்க வேண்டியுள்ளது என்று சற்றே அவர்கள் நிலையில் நின்று சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே. ஒரு ஆணுக்கு நிகராக ஒரு பெண் உழைக்க வேண்டுமானால் அவள் எத்தகைய மாற்றங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று பார்க்க வேண்டும். அறிவியல், தொழில்நுட்பம், பண்பாடு, இலக்கியம், கலை என்று எந்த ஒரு துறையை எடுத்துக்கொண்டாலும், உயர்ந்த நிலையில் இன்று பெண்களும் இருக்கின்றனர். வெளியில் சென்று பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் இன்றைய சூழலில் அவளுக்கு எந்த அளவில் பாதுகாப்பு இருக்கிறது என்று நினைத்துப்பார்க்க வேண்டும். பாதுகாப்பு என்பது சொல்லும் அளவிற்கு ஏதும் இல்லை என்பதே சத்தியம். குடும்பத் தேவைகளையும் கவனித்துக்கொண்டு, சுய முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு இரட்டிப்பு உழைப்பை வழங்கவும் தயாராக இருப்பவளின் ஆற்றலுக்கு உரிய ஆங்கீகாரம் வழங்கப்படாவிட்டாலும் பரவாயில்லை. அவள் முன்னேற்றத்திற்குத் தடையாக இல்லாமலாவது இருக்கலாமே. எத்துனை காழ்ப்புணர்ச்சி, கரிப்பு, கசப்பு என்று சேற்றை வாரிப் பூசுவதில் என்ன இலாபம் நம் நாட்டிற்கோ அல்லது சமுதாயத்திற்கோ? அந்தக் காலத்திலேயே வணிகம், விவசாயம் என அனைத்துத் துறைகளிலும், குடும்பத்து ஆண்களுக்கு இணையாக பெண்களும் பாடுபட்டுக்கொண்டுதானே இருந்திருக்கிறார்கள்.

    குடும்பமாகட்டும் அல்லது சமூகமாகட்டும், எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பெண்ணைக் குறித்த பிற்போக்குச் சிந்தனைகள் முற்றிலுமாக மாற்றப்பட வேண்டும். முறையான சுதந்திரமும், பாதுகாப்பும், கண்ணியமான முறையில் வழிநடத்துதலும் வழங்கப்பட வேண்டும். அத்தோடு ஒரு பெண் தனக்கு இருக்கும் உரிமைகளின் எல்லைக்கோட்டை அறிந்து, எந்த வகையிலும் அது மற்றொருவரின் முன்னேற்றத்தையோ அல்லது சுய மரியாதையையோ பாதிக்காத வகையில் பார்த்துக்கொண்டு, நல்ல வாய்ப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு, முன்னேற முயலவேண்டும். அதற்கானத் திட்டங்களை உருவாக்கிக்கொடுப்பதில், ஒரு பெண்ணின் தந்தை, சகோதரன், கணவர் என அனைவரின் ஒத்துழைப்பும் இருக்கும்பட்சத்தில் அவளின் வெற்றிக்கு உத்திரவாதம் நிச்சயம் அல்லவா? பெண்கள் சுயமாகப் பலம் பெற வேண்டுமானால், அதற்குப் பின்புலமாக ஆண்கள் இருந்து கொண்டு அவர்களை நல்ல முறையில் வழிநடத்த முயன்றால் மட்டுமே, அதாவது ஒரு கூட்டு முயற்சியின் மூலமாக மட்டுமே பெண்களின் பாதுகாப்பையும், அவள்தம் முன்னேற்றத்தையும் உறுதி செய்ய இயலும்.

    பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட வர்களில் குறிப்பிடத்தக்கவர்களான, இராஜாராம் மோகன் ராய், அண்ணல் மகாத்மா காந்தி அடிகள், , ஈ.வே.ரா. பெரியார், திரு வி.க. அவர்கள், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, பாரதியார், பாரதிதாசன் வரை அனைவரையும் நன்றியுடன் நினைவுகூர வேண்டும். . சுய உதவிக் குழுக்கள் மூலம் இன்று கல்வியறிவு குறைவாகப் பெற்ற பெண்கள்கூட சிறு தொழில் முதலீட்டாளர்களாகவும், சாதனை படைத்து சிகரத்தைத் தொட கடுமையாக உழைக்கின்றனர். அரசியல், அறிவியல், சமூகவியல் என அனைத்திலும் தங்கள் பங்களிப்பை செலுத்தி, வரலாற்று நாயகிகளாகவும், சாதனைப் பெண்களாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். மன உறுதியில் ஒரு பெண்ணிற்கு நிகராக ஒரு ஆண் இருக்க முடியாது. ஒரு சிறந்த இல்லாள் இருந்தால் மட்டுமே இல்லறம், நல்லறமாக நடக்கும் என்பதில் ஐயமில்லை. பதினெட்டாம் நூறாண்டுகளில் வாழ்ந்த வள்ளலார் பெருமான், பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டியது என்கிறார். மேலும், ஆண் பெண் என்ற பேதமில்லாமல் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். யோகம், ஆன்மீகச் சாதகம் என அனைத்தையும் பாகுபாடு இன்றி இருபாலருக்கும் கற்பிக்கப்பட்டால் குடும்பத்தில் அமைதி நிலவும் என்கிறார். கணவன் இறந்த பின்பு மதத்தின் பெயரால், ஒரு மனைவிக்கு இழைக்கப்படும் கொடுமைகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்றார். ஆனால் இன்றளவிலும் காட்டுமிராண்டித்தனமான அந்தக் கொடுமைகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

    வள்ளலாருக்குப் பின் வந்த முண்டாசுக் கவி பாரதியோ ‘

    ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
    அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
    பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
    போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
    நாணும் அச்சமும் நாய் கட்கு வேண்டுமாம்;
    ஞான நல்லறம் வீர சுதந்திரம்
    பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்;
    பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

    என்கிறார். நம் நாட்டின் பண்பாட்டின்படி, பெண் பிறப்பே தியாகம் என்ற அந்த ஒன்றின்மீதுதான் கட்டமைக்கப்படுகிறது எனலாம். திருமணத்திற்குப் பின் கணவன் வீட்டிற்கு வரும் ஒரு பெண், தன் தாய், தந்தை, உடன்பிறப்புகள், தாம் வளர்ந்த சூழல், சுற்றம் என அனைத்தையும் துறந்த பின்புதான் புகுந்த வீட்டிற்குள் வலது காலடி எடுத்து வைக்கிறாள். அப்படி ஒரு தியாகத்தின் அடிப்படையில் , அன்பு நாடி புகுந்த வீட்டில் அடி எடுத்து வைக்கும் பெண்ணிற்கு அன்பும், ஆதரவும் அளிக்க வேண்டியது அக்குடும்பத்தினரின் முக்கிய கடமை. அந்தக் கடமையிலிருந்து ஒரு குடும்பம் தவறும் போது மட்டுமே அங்கு எண்ணிலடங்கா பிரச்சனைகள் தோன்றிவிடுகின்றன.

    ஆன்மாவிற்கு ஆண், பெண் என்ற பேதமில்லை. வெளித்தோற்றத்தில் மட்டுமே அந்த பேதங்களெல்லாம் இல்லையா? ஒவ்வொரு பெண்ணும் பேதமற்ற ஒரு சக மனிதம் மட்டுமே எதிர்பார்க்கிறாள் என்பதே சத்தியம்.

    Share
  • ‘ஒரு புளிய மரத்தின் கதை’ – சுந்தரராமசாமி – புத்தக மதிப்புரை

    கலையரசி

    சுந்தரராமசாமி அவர்கள் எழுதிய முதல் நாவல்,‘ஒரு புளிய மரத்தின் கதை’. 1966 ஆம் ஆண்டு வெளி வந்தது. தற்கால உரைநடையைப் பேச்சு வழக்கில் எழுதிய முதல் நாவல் என்ற வகையில், தமிழிலக்கியத்தில் இது சிறப்பிடம் பெறுகிறது.

    காலச்சுவடு நிறுவனத்தின் நிறுவனரான இவரின் சொந்த ஊர் நாகர்கோவில்.  ‘ஜே.ஜே.சிலகுறிப்புகள்’, ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள்’, என்ற நாவல்களோடு, தகழி சிவசங்கரப் பிள்ளையின் ‘செம்மீன்’, ‘தோட்டியின் மகன்’, என்ற நாவல்களைத் தமிழில் மொழியாக்கமும் செய்துள்ளார்.

    இந்நாவலில் கதை சொல்லியாக அறிமுகமாகும் தாமோதர ஆசான் இரத்தமும் சதையும் கொண்ட உயிர்த் துடிப்புள்ள ஒரு கதாபாத்திரம். அவர் கதை சொல்லும் பாங்கு, கேட்போரை ஈர்த்துப் பிணிக்கும் ஆற்றல் கொண்டது.

    ஆசான் வெற்றிலை போட்டுக் குதப்பிவிட்டு ஹா, ஹூம் என்று ஆர்ப்பாட்டமாக கனைத்துப் புகையிலை சாற்றை வெளியேற்றிவிட்டுக் கதை சொல்லும் அழகை நீங்களும் சுவைக்க, நாவலிலிருந்து கொஞ்சம்:-

    ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்று அத்தைப் பாட்டிகள் பாணியில் கதை ஆரம்பம் ஆகாதுகதை உத்திகள் எல்லாம் அவரிடம் படிந்து போன சமாச்சாரம்.

    சற்றுத் தள்ளி முளைத்திருக்கும் ஒரு செடியை இரண்டு வினாடிகள் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுஅதென்ன செடி, தெரியுமா அது யாருக்காவது? என்கிறார்.

    நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத் தலையை அசைக்கிறோம்.

    இதெக் கொடுத்துத்தாலாதாலி கெட்டின புருஷனெக் கொன்னே போட்டா சண்டாளிமனசு வருமா ஒரு பொம்பிளைக்கு?அடுத்தவன் களுத்தெக் கட்டிக்கிடணும்னு ஒரே நெனப்பா நெனச்சுத் துணிஞ்சிட்டாளே பாவி

    அப்படித்தான் செய்தாளே, புருஷன்காரன் என்ன நொண்டியா, சப்பாணியா, கூன் குருடா, இல்லே மேலே ஒண்ணு இருக்கட்டும்னு இன்னொருத்தியெ வச்சுக்கிட்டு இருந்தானா?

    எப்படிப் போனாலும் அறுப்புக்கு நூறு கோட்டை நெல் வந்து விளும்நாள் ஒண்ணுக்குக் கொல்லேலே விளுற இலை அம்பதுக்குக் கொறயாதுஅவுத்து விட்டாத் தொளுவம் காலியாகுதுக்கு அரைமணி நேரமாகும்

    சவாரிக்கு மாடு புடிக்குதுக்கு வந்தான் வடசேரி சந்தைக்குஅரபிக் குதிரெ கணக்கா ரெண்டு மாட்டெப் புடிச்சுக்கிட்டு, அந்த மாபாவி தலையிலே ஆசையா வெச்சு முத்துதுக்கு மடி நெறயப் பூவும் வாங்கிட்டுத் தானே போனான் அண்ணைக்கும்.  பாலைத் தான் தாறான்னு வாங்கிக் குடிச்சான்ரெண்டு தவா ரெத்தம் மாட்டு வாந்தி எடுத்தான்குளோஸ்.

    இது தான் ஆசானுடைய எடுப்புகடைசியில் மண்ணைத் தூக்கி விண்ணில் நிறுத்திக் காட்டுகிறேன் என்று சொல்லி விட்டுத் துண்டை விரித்துமருந்துப் பெட்டிகளை அடுக்கும் செப்பிடு வித்தைக்காரன் போல், மீண்டும் வெற்றிலை போட்டுக் கொள்ள ஆரம்பித்துவிடுவார். பின்னால் விஷம் கொடுத்தவளின் குழந்தைப் பருவத்தில் கதை ஆரம்பமாகும்
    புளிய மரத்தின் ஆரம்பகால சுவாரசியமான கதைகளை, நாம் ஆசான் மூலமே அறிந்து கொள்கிறோம். கதை கேட்பதற்காகவே அவரைச் சுற்றி எந்நேரமும் சிறுவர்களின் கூட்டம் அலைகிறது.  பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும் வராததுமாக பையைத் தூக்கித் தூர எறிந்துவிட்டு, கதை கேட்க ஓடும் மாணவர் போன்றே, நாமும் ஆசான் எப்போது கதை சொல்லத் தொடங்குவார் என்று எதிர்பார்த்து ஏங்குகிறோம்!

    ஆனால் பாதியிலேயே ஆசான் மறைந்து விடுகிறார். அவர் மறைவுக்குப் பின்,  நாவலின் சுவை குறைந்துவிட்டதாகவே எனக்குத் தோன்றுகிறது. அந்தளவுக்கு ஆசான் கதாபாத்திரம், படிப்பவர்களின் மனதைக் கொள்ளை கொண்டு விடுகிறது.

    அதற்குப் பிறகு காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்பட்டுப் பூங்காவாகும் கதை விவரிக்கப்படுகிறது. நவீனமயம் என்ற பெயரில் இயற்கையை அழிக்கும் மனிதனின் பைத்தியக்காரத்தனத்தை இச்சிறு உரையாடல் மூலம், ஆசிரியர் எப்படி கிண்டல் செய்கிறார் பாருங்கள்!

    தோப்புமரம் ஒவ்வொன்றாக வெட்டப்பட்டு வீழ்வதைக் காணச் சகிக்காமல் முதியவர் ஒருவர், இளைஞனிடம்கேட்கிறார்:-

    தம்பி, எதுக்கு டேய் மரத்தெ வெட்டிச் சாய்க்கிறாங்க?”

    செடி வைக்கப் போறாங்க” 

    எதுக்கு டேய், செடி வைக்கப் போறாங்க?”

    காத்துக்கு

    மரத்தெக் காட்டிலும் செடியா டேய் கூடுதல் காத்துத் தரும்?”

    அளகுக்கு

    செடிதான் அளகாட்டு இருக்குமோ?”

    உம்

    செடி மரமாயுடாதோவ்?”

    மரமாட்டு வளராத செடிதான் வைப்பாங்க. இல்லை வெட்டி வெட்டி விடுவாங்க

    வெட்டி வெட்டி விடுவாங்களா?”

    ஆமா

    அட, பயித்தாரப் பசங்களா!” 

    அதன் பின்னர், அக்கிராமத்தில் ஒரே வியாபாரம் செய்யும் தாமுவுக்கும் காதருக்குமான போட்டியும் பொறாமையும், வியாபாரச் சண்டையும் விரிவாகச் சொல்லப்படுகிறது. நகர சபை தேர்தலில் போட்டியிடும் அவர்களுக்கிடையே ஏற்படும் பகைமை, ஒன்றுமறியாத அப்பாவி மரத்தை வெட்டுவதில் போய் முடிகிறது.

    தாமு கடைக்கு நிழல் கொடுக்கும் புளியமரம் வெட்டப்பட்டால், அவன் வியாபாரம் பாதிக்கும் என்று ஐடியா தந்து, காதரை தேர்தலில் போட்டியிட வைத்து, வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த அவர்களுக்கிடையே பகைமையை வளர்ப்பது எசக்கி என்கிற பத்திரிக்கை நிருபர்!

    இந்நாவலின் கரு பற்றி ஆசிரியரே முதல் அத்தியாயத்தில் சொல்கிறார்:- .

    மறக்க முடியாத விஷயங்களும் சில உண்டு தானேஅதில் ஒன்றுதான் புளியமரத்தின் கதையும்.

    சொல்லப் போனால் புளியமரம் என்ன செய்ததுசும்மா நின்று கொண்டு தானே இருந்தது?மனிதனின் அலகிலா விளையாடல்களுக்கு மெளன சாட்சியாக நின்றதே அல்லாமல் எதிலாவது பங்கெடுத்துக் கொண்டதாபட்டுக்கொண்டதாமனித ஜாதிக்கு அது இழைத்த கொடுமைதான் என்னயாரைப் பார்த்துக் கை நீட்டிற்றுயாரை நோக்கிப் பல்லிளித்ததுயாருடனாவது சேர்ந்து கொண்டு, யாருக்கேனும் குழி பறித்ததா

    ஆனால் நாட்டையும், பணத்தையும் பெண்டுகளையும் அதிகாரத்தையும், புகழையும் காயாக வைத்து விளையாடிய மனிதன், புளியமரத்தை மட்டும் விட்டு வைக்கிறேன் என்கிறானா?அதையும் காயாக வைத்து விளையாடித் தீர்த்துவிட்டான்புளியமரம் அழிக்கப்பட்டது.” 

    இந்நாவலில் புளியமரம் ஒரு குறியீடு. வாய்ப்புக் கிடைத்தால் இந்நாவலை அவசியம் வாசியுங்கள்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    வரும்காலம் பூராவுமே காகிதமில்லா உலகமாக மாற இருக்கிறது என்பதில் எல்லோருக்குமே ஒரு கவலையும், சந்தோஷமும் இருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். கவலை என்னவென்றால் பேப்பர் (செய்திகளாகட்டும், புத்தகங்களாகட்டும்) சம்பந்தப்பட்ட தொழிலின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறதோ என்றுதான். அதே சமயத்தில் பேப்பரில்லா காலத்தில் எத்தனை சேமிப்புகள், எத்தனை எளிமைகள், என்பதையும் எண்ணிப்பார்த்து சந்தோஷப்பட வேண்டும்தான்.

    எத்தனைதான் மின்வழிச் சாதனங்கள் மூலம் படித்துப் பார்த்தாலும் புத்தகம் மூலம் பொறுமையாக பார்த்துப் படித்து ரசிப்பது போல வருமா எனக் கேட்ப்போருமுண்டு. பழங்காலத்தில் செவி வழிக் கல்விதான். பின்புதான் ஏட்டுக் கல்வி வந்தது.ஏட்டுக் கல்வி போய் கணினிக் கல்வி வரும்போது கணினிக்கு ஏடு தாராளமாக வழிவிட வேண்டுமென்றுதான் நான் நினைக்கிறேன். ஏற்கனவே தினப் பத்திரிகைகள் மின்னிதழ்களை இப்போதே ஆரம்பித்து விட்டன. இந்தப் போக்கு இன்னும் வேகமடையுமா..காகிதம் முழுவதும் . மின் தொலைத் தொடர்புச் சாதனங்கள் மூலமாக ஓரங்கட்டப்பட்டு ஒரேயடியாக கிழிந்து போகும் நிலை வருமா. காகிதத்தை வெறும் காற்றாடிக்காக மட்டுமே பயன்படுத்தும் காலம் வருமா.. ஏனோ இதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

    இதற்கிடையில் இந்த கால கட்டத்தில் வாழும் படைப்பாளிகள் வரும் எதிர்காலத் தலைமுறைக்காக தம்மைத் தயார் செய்துகொள்ளத்தான் வேண்டும். காகிதப் புத்தகங்கள் நிச்சயமாக நமக்குச் செல்வம் போலத்தான்.ஆனால் காலம் மாறுகிறது என்பதை நம் கண் முன்னால் காணும்போது காலத்துக்கேற்றவாறு மாறுவதும் இயல்புதானே.. காகிதப் புத்தகங்கள் காகிதத்தைத் துறந்து மின் புத்தகமாக மாறி வரும் இந்த இடைப்பட்ட காலத்தை படைப்பாளிகள் தகுந்தமுறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

    480498_10151261068171644_1937474422_nஇப்படிப்பட்ட நிலையில் சென்னையைச் சேர்ந்த திரு ஸ்ரீனிவாசன் . படைப்பாளிகளுக்கு ஒரு நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் இந்த பணி ஒரு உயரிய பணி என்பதோடு படைப்பாளியின் படைப்புகள் உலகெங்கும் பரவ வழியின் செய்தது போல ஆகிறது. நல்லுதவி செய்து வரும் திரு ஸ்ரீனிவாசன் இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்

    தெடுக்கப்படுகிறார். அவருக்கு நம் வாழ்த்துகள். அவரைப் பற்றி மேலும் அறிய தேமொழியின் தொடுப்பைக் காணலாம்.

    I nominate Mr. Srinivasan   (https://www.facebook.com/tshrinivasan) as vallamaiyaalar for his continuing effort in making free eBooks possible and also for introducing authors by making their works available for the general public.
     
     

    கடைசி பாரா: கிரேஸி மோகன் அவர்களின் வேதாந்த பண்டு

    உண்டாகி உண்டுமிழும் குண்டாகி, வேதக்கற்
    கண்டாகி, வேதாந்த சிண்டாகி -தண்டாகி
    செண்டாகி, முண்டகத்து வண்டாகி ஜீவான்மா
    ரெண்டாகி வந்துபோகும் பண்டு

    Share
  • குளிரவன் போவதெங்கே?

    கீதா மதிவாணன்

    images

    அதோ… குளிரவன்!
    தூரத்து மலைமுகட்டு மரங்களுக்குப் பின்னே
    மெளனமாய்ப் பதுங்கி நழுவிப் போவதெங்கே?

    வசந்தமென்னும் பருவப்பெண் பச்சையம் பூசி
    ஓடைக் கண்ணாடியில் ஒப்பனை செய்வதை
    வழியில் பார்த்தவன், வெளிறிய தன் முகத்தை
    வேறுதிசையில் திருப்பிக்கொண்டு
    திரும்பிப் பாராமல் போகிறான்.

    ஆனால் எனக்குத் தெரியவேண்டும்
    அவன் சென்ற வழி எதுவென்று…
    அவனைக் கண்டுபிடிக்க இதுவரை
    எவரும் முயன்றாராவென்று…

    இடிமுழக்கத்தால் விண்ணுக்கு இழுத்துவரப்பட்டு
    மேகப் பஞ்சணையில் துஞ்சவைக்கப்பட்டிருக்கிறானோ?
    சமுத்திரத்துக்குள் சென்றிருப்பானாயின்
    சதிராடும் அலைகளால் சுழற்றியெறியப்பட்டிருப்பானோ?

    அலைக்கழிக்கப்பட்டு ஆறாத ரணங்களுடன்
    உயிர் ஊசலாடியபடி கரையோரம் ஒதுங்கி
    காட்சியளிக்கிறானா மீனவர் எவருக்கேனும்?
    ஆளரவமற்றத் தீவொன்றில் அசைவற்று
    விறைத்துக் கிடக்கிறானா எங்கேனும்?

    சாம்பல் நிறத் தலையைக் கவிழ்ந்தபடி
    நித்தமும் சூரியன் மறையும் நீலமலைகளுக்கப்பால்
    எவருமறியாப் பொழுதுகளில் சென்று
    கல்லறையொன்றைத் தோண்டுகிறானோ?

    தன் வெளிர்வண்ண ஆடையுடன்
    தானே வெட்டிய கல்லறைக்குழிக்குள்
    கரங்களை மார்பில் கோர்த்தபடி படுத்துக்கொண்டு
    “என் மறைவுக்காய் கண்ணீர் சிந்துவார் யார்?
    மாறாய் மகிழுமே வசந்தத்தின் வருகையால் ஊர்!
    என்றெண்ணி மருகுகிறானோ?

    ஐயோ… குளிரவனே…
    என் கண்கள் சிந்துகின்றனவே கண்ணீர்,
    உனக்கு மகிழ்வளிக்கப் போதுமானதா
    ஒரு குழந்தையின் கண்ணீர்?
    வசந்தம் தொலைவில் வரும்போதே
    உன் ஆடைநுனியை இறுகப் பற்றிக்கொண்டு
    உன்னை அழைத்தபடியே தொடர்ந்தேன்.
    உன் கரங்களில் முத்தமிடுகிறேன்.
    உன் வேதனையைப் புரிந்துகொண்டேன்,
    தொய்ந்துபோன உன் தலையை இதமாய்த் தடவுகிறேன்.

    ஓ…. என்னால் பாட இயலாது…
    குளிரவன் இங்கே வெளிறிச் சாகிற வேளையில்
    வசந்த கானமிசைத்திட என்னால் எப்படியியலும்?

    (Where does the Winter go? By Ethel Turner)

    படத்துக்கு நன்றி

    http://www.wallpapergang.com/Winter/cold-winter-morning-frost-leaves_11066.html

    Share
  • 24. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்! க்ருவெயர் சீஸ் அருங்காட்சியகம், சுவிஸர்லாந்து.

    சுபாஷிணி ட்ரெம்மல்

    அருங்காட்சியகங்கள் என்றாலே சில பல நூற்றாண்டுகள் பழமை கொண்ட கருவிகளும், விலங்குகளின் மனிதர்களின் எலும்புக் கூடுகளும், ஆவணங்களும், கட்டிடங்களின் உடைந்த பகுதிகளும் சிறபங்களும் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் இடம் என பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். உணவுப் பொருட்களுக்காகவும் அருங்காட்சியகங்கள் இருக்கின்றன என நான் சொன்னால் நம்புவீர்கள் தானே? அப்படி ஒரு அருங்காட்சியகத்திற்கு செல்வோமா?

    க்ருவெயர் நகர் (2009)
    க்ருவெயர் நகர் (2009)

    பச்சை பசேல் என்ற பசுமை… அதில் மஞ்சள் வெள்ளை, ஊதா என வர்ணங்களில் மலர்ந்திருக்கும் மலர்கள். அந்தப் பசுமையான புல்வெளியில் துளிர்த்து வளர்ந்திருக்கும் விதம் விதமான மூலிகை செடிகள்.. இங்கே கொழு கொழு என நம் கண்களை ஈர்க்கும் வகையில் கழுத்தில் மணியை கட்டிக் கொண்டு அசைந்து அசைந்து சுவைத்து ரசித்து புற்களைத் தின்று கொண்டிருக்கும் மாடுகளைப் பார்த்தவாறே சாலையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இப்போது நாம் பயணம் செய்து கொண்டிருப்பது சுவிஸர்லாந்தில். இங்கே ஆல்ப்ஸ் மலைத் தொடர்களின் ஒரு பகுதியில் அமைந்திருக்கும் எழில் நிறைந்த க்ருவெயர் நகரில் தாம் நாம் இருக்கின்றோம். இங்கிருக்கும் க்ருவெயர் சீஸ் அருங்காட்சியககத்திற்குத் தான் நான் இன்று உங்களை அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றேன்.

    சீஸ் ஐரோப்பிய உணவில் பிரதான இடம் பிடிக்கும் ஒன்று. ஐரோப்பா என்று மட்டுமல்லாமல் ஐரோப்பியர்கள் பரவிய வட அமெரிக்கா தென் அமெரிக்கா ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்க கண்டங்களில் விரிவாகப் பரவிய சீஸ் பயன்பாடு தற்சமயம் ஆசிய நாடுகளுக்கும் அறிமுகமாகிவிட்டது. ஆசிய நாடுகளில் கூட சூப்பர் மார்க்கெட்டுகளில் இப்போது சீஸ் கிடைக்கின்றது.

    சீஸ் என்பது அடிப்படையில் பாலைக் கொண்டு செய்யும் ஒரு பதார்த்தம் என்றாலும் அதில் சேர்க்கப்படும் பாக்டீரியா, தயாரிப்பு முறை, பதப்படுத்தும் முறை ஆகியன பொருத்து ஒவ்வொன்றும் அதன் தன்மையில் மாறுபடுகின்றன. ஐரோப்பாவில் குறிப்பிடத்தக்க வகையில் சீஸ் வகையிலேயே நாட்டுக்கு நாடு வித்தியாசமாக, நகருக்கு நகர் வித்தியாசமாக சீஸ்கள் தயாரிப்பதும் விற்பனை செய்யப்படுவதும் நிகழ்கின்றது. உதாரணமாக இத்தாலி, ப்ரான்ஸ், ஜெர்மனி, சுவிட்ஸர்லாந்து, இங்கிலாந்து, பெல்ஜியம், டச்சு, டென்மார்க், க்ரீஸ், ஆகியவை தங்களின் பிரத்தியேக சீஸ்களுக்காகப் புகழ் பெற்று விளங்குகின்றன. இவை ஒன்றிலிருந்து ஒன்று சுவையிலும் அதன் கெட்டித்தன்மையிலும், அமைப்பிலும், வர்ணத்திலும், வாசத்திலும் மாறுபடுகின்றன.

    அப்படி சிறப்புத்தன்மை வாய்ந்த ஒரு சீஸ் தான் க்ருவெயர் சீஸ். இந்தச் சீஸ் பற்றிய முழு விபரங்களையும் தரும் ஒரு அருங்காட்சியகம் தான் க்ருவெயர் நகரில் அமைந்திருக்கும் இந்த La Maison du Gruyère a Pringy (House of Gruyère) அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே சென்று பார்வையிட கட்டணம் செலுத்தி நுழைவுச் சீட்டைப் பெற வேண்டும்.

    இந்த அருங்காட்சியகம் வாரத்தின் ஏழு நாட்களிலும் காலை 9 மணியிலிருந்து மாலை 6 மணி வரை திறந்திருக்கும். ஆக சுவிஸர்லாந்து செல்பவர்கள் தாங்கள் சென்று பார்த்து வர வேண்டிய அம்சங்களில் இதனையும் ஒன்றாக மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

    இந்த அருங்காட்சியகத்தில் முதலில் நமக்கு க்ருவேயர் சீஸ் உருவான வரலாறு விளக்கப்படுகின்றது. அதனை விளக்கும் வகையில் புகைப்படங்கள், வீடியோ பதிவுகள், விளக்கத் தகவல்கள் ஆகியவை வரிசையாக வழங்கப்பட்டிருக்கின்றன. எவ்வகை மூலிகைகள் இந்தப் புற்களில் விளைகின்றன? அதனால் கிடைக்கும் மாட்டின் பால் இந்தச் சுவையைக் கொண்டதாக அமைந்திருக்கின்றது என்பன போன்ற விளக்கங்கள் இதில் அடங்கும். பின்னர் படிப்படியாக க்ருவெயர் சீஸ் எப்படி பிரபலமடைந்து இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கின்றது என்ற தகவலை விளக்கும் வகையில் விபரங்களை அமைத்திருக்கின்றனர்.

    சீஸ்கள் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன (2009)
    சீஸ்கள் வரிசையாக அடுக்கப்பட்டுள்ளன (2009)

    அங்கிருந்து தொடர்ந்து சென்றால் க்ருவெயர் சீஸ் தயாரிக்கப்படும் இடத்திற்கு வந்து சேர்வோம். முதலில் நம்மை மலைக்க வைப்பது வரிசை வரிசையாக ஏறக்குறைய 10 மீ தூரத்திற்கு அமைக்கப்பட்ட அலமாரியில் அடுக்கப்பட்டிருக்கும் ராட்ஷ்சஷ அளவிலான உருண்டை வடிவிலான சீஸ்கள்.

    இவற்றில் நாள் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும். சீஸ் தயாரிப்பில் எத்தனை நாட்கள் சீஸ் பதப்படுத்தப்பட வேண்டும் என்பது மிக முக்கியம். குறிப்பிட்ட நாட்கள் சீஸ் முறையாகப் பதப்படுத்தப்படும் போதே அது சரியான சுவையைப் பெறுகின்றது.

    சீஸ் தயாரிப்பை பார்வையிடும் ஊழியர் (2009)
    சீஸ் தயாரிப்பை பார்வையிடும் ஊழியர் (2009)

    அங்கிருந்து சற்று தள்ளிச் செல்லும் போது ஒரு ராட்சச அளவிலான பாணையில் அமைக்கப்பட்டிருக்கும் படியின் மேல் ஏறி நின்று கொண்டு ஒருவர் பெரிய துணியால் பால் கலவையை வடித்து எடுப்பதையும் இன்னொரு ராட்சச அளவிலான பானையில் ஒருவர் மரக்கம்பு கொண்டு திரண்டு வரும் பாலை கிளறுவதையும் இன்னொரு இடத்தில் வரிசை வரிசையாக ராட்சச அளவிலான பானைகளில் பால் நிறைந்து நிற்பதும் என வெவ்வேறு நடவடிக்கைகள் நிகழ்ந்து கொண்டிருப்பதைக் காண்போம். பார்க்கவே வியப்பூட்டுவதாக இருக்கும் இவை அனைத்தும்.

    இப்படி மிகப் பெரிய அளவில் வணிக நோக்கோடு இன்று தயாரிக்கப்படும் இந்த க்ருவெயர் சீஸின் வரலாறு பற்றியும் சிறிது அறிந்து கொள்வது இந்தச் சீஸ் எத்தனை காலமாக மக்கள் உணவுப் பயன்பாட்டில் இருக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள நிச்சயம் உதவும். இன்று கிடைக்கின்ற ஆவணங்களின் அடிப்படையில் உள்ள குறிப்புகளில், கி.பி.1115 ஆண்டின் ஒரு ஆவணத்தில் இந்த க்ருவெயர் சீஸ் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆக அதற்கும் முந்தைய பழமை வாய்ந்த ஒரு சீஸ் தான் க்ருவெயர் என்ற விஷயத்தை இதன் வழி அறியமுடிகின்றது. இதன் வரலாற்றை மேலும் பல தகவல்களோடு தொடர்ந்து அடுத்த பதிவில் வழங்குகின்றேன். தொடர்ந்து வாருங்கள்!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 108 (10.02.14)

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை

     

    சாரணரது அறிவுறையைக் கேட்டு, கவுந்தி கூறிய புகழ்மாலை

    சாரணர் மொழி கேட்ட
    தவத்தில் சிறந்த கவுந்தி
    தன் தலை மேல் கைவைத்து வணங்கி,

    “காமம், வெகுளி, மயக்கம்
    இம்மூன்றையும் அடக்கி வென்ற அருகதேவன்
    தம் அருளால் உரைத்த திருமொழி மட்டுமேயல்லாது
    பிறமொழிகளை எம் செவிகள் ஏற்காது….

    காமனை வென்ற அருகதேவனது
    ஆயிரத்தெட்டு நாமங்களைப் போற்றுவதேயல்லாது
    வேறொரு நாமத்தை என் நா நவிலாது…

    ஐம்புலன்களையும் அடக்கி வென்ற
    அருகதேவனின் திருவடிகளை மட்டுமேயல்லாது….
    வேறு தேவர்களின் திருவடிகள்
    மிக அருகில் இருந்தாலும்
    எம் கண்கள் அவற்றைப் பார்க்காது…

    அருளும் அறனும் பூண்டு ஒழுகும்
    அருகதேவனுக்கேயல்லாது
    வேறு எவருக்காகவும்
    என் பயனற்ற இவ்வுடல்
    பூமியில் பொருந்தி வணங்கிடாது…

    அறங்கூறும் அருகதேவனை வணங்குவதற்கேயல்லாது
    வேறெந்த தெய்வத்தையும் வணங்குவதற்கு
    என் கைகள் குவிந்திடாது…

    அருகனின் மலரடிகளை அணிந்திடுமேயல்லாது
    வேறு எந்தத் திருவடிகளையும்
    என் உச்சியானது அணிந்திடாது…

    என்றும் முடிவில்லா இன்பத்தையுடைய
    இறைவன் ஓதிய வேதத்தையல்லாது
    வேறு எந்த மொழியையும்
    என் உள்ளம் ஓதாது..”

    இங்ஙனம் அருகதேவனைப்
    போற்றித் துதித்தார் கவுந்தியடிகள்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  192 – 207

    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • பணிக்குச் செல்லும் பெண்

    பொன்ராம் 1-images

    பனியில் பூத்த ரோஜா

    பார்த்து ரசிக்க ஆளின்றி

    வாடிக் கிடக்கிறது!

    வெண்டை விரலின் ஸ்பரிசம் தேடி

    தோட்டத்தில் வெண்டைப்பூவின் தேடுதல் ஆரம்பம்!

    என் குழந்தையின் மழலை

    அடுத்த வீட்டிற்கு மட்டும்

    சொந்தமாகி விட்டது!

    அடுப்படியின் சிணுங்கல் ஒலி

    அன்னியமாகி விட்டது!

    குளிர்பதனப் பெட்டியில்

    உறைந்த உணவுகள்

    அன்றாட நண்பர்களாகி விட்டன!

    ஆறிலக்கப் பணித்தொகை

    உறவுகளின் ஆற்றுப்படையாகி விட்டன!

    உடைகளின் எண்ணிக்கை

    எனது துயரத்தினை வெளிக்காட்டாத

    மெழுகு முகமூடிகள்!

    எதைக் கொண்டு வந்தோம்

    எதைக் கொண்டு செல்கிறோம்?

    என்ற நோக்கின்றி வாழும்

    உயிரிருந்தும் இயந்திர மனிதர்களாய் நாங்கள்

    எங்கு செல்கிறோம்?

    படத்துக்கு நன்றி

    http://www.hindu.com/mp/2007/03/08/stories/2007030800730100.htm

    Share
  • ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

    கவிஞர் காவிரி மைந்தன்

    கற்பகம் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் முழுக்க முழுக்க கவிஞர் வாலியின் கைவண்ணமாகும். இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.. டி.கே.ராமமூர்த்தி. இன்னுமொரு விசேஷம் என்னவென்றால் பாடல்கள் எதிலும் ஆண்குரல் இல்லை. இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்களின் லேடீஸ் சென்டிமென்ட் படம் இது என்றால் அது மிகையில்லை.

    புதுமுக நாயகியாக புன்னகை அரசி கே.ஆர்.விஜயா.. நடிகையர்திலகம் சாவித்திரி.. ஜெமினி கணேசன் முத்துராமன் என்கிற நட்சத்திரப் பட்டாளத்துடன் அன்றைய நாளில் வெற்றியைக் குவித்த படம்! பாடல்கள் நான்கே நான்கு! அனைத்தும் அமர்க்கள வெற்றி!! அனைத்துப் பாடல்களையும் பாடியவர் பி.சுசீலா!!

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு அத்தை மடி மெத்தையடி..
    மன்னவனே அழலாமா? பக்கத்துவீட்டு பருவமச்சான்..

    2004ஆம் ஆண்டு கவிஞர் வாலி அவர்களுக்கு பம்மல் – கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் கண்ணதாசன் விருது வழங்கி பாராட்டு நடத்தியபோது இசைஞானி இளையராஜா குறிப்பிட்ட செய்தியை இங்கே பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    கவிஞர் வாலியின் தனித்திறமைகளைப் பட்டியலிட்டுக் காட்ட நேரமில்லையென்றாலும் அவர் குறிப்பிட்ட இரண்டு பாடல்கள்.. ஒன்று தளபதி திரைப்படத்தில் இடம்பெற்ற சுந்தரி கண்ணால் ஒரு சேதி.. மற்றொன்று கற்பகம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆயிரம் இரவுகள் வருவதுண்டு..

    என்ன சொன்னார் தெரியுமா.. இந்தக் கவிஞர் ஒருவர்தான்.. பாட்டுவரியின் முதல் வார்த்தையைச் சொல்லிவிட்டு அதன் அடுத்த வார்த்தையை சொல்லாமல் .. ஆனால் அந்த வார்த்தையையே நினைக்க வைத்தவர்.. என்றார். ஆம்.. இப்போது இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள் .. விளக்கம் கிடைக்கும்!

    முதல் இரவின் முன்னதாக நடக்கும் இந்தக் காட்சியில் நாயகியைத் தோழி துவள வைக்கிறாள்.. இன்பத்தை எண்ணித் துடிக்க வைக்கிறாள்.. வஞ்சியின் நெஞ்சம் வெட்கத்தில் தவித்திருக்க.. வேடிக்கை அல்லாமல்.. அனுபவக் கதையைப் பாட்டில் வைக்கிறாள்.. இன்பத்தின் அரிச்சுவடி இது என்று சொல்லி வைக்கிறாள்.. அதையும் முழுதாய் சொல்லிவைக்காமல்.. அங்கங்கே புள்ளிவைக்கிறாள்.. கேளுங்களேன்..

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு
    ஆனால் இது தான் முதல் இரவு
    ஆயிரம் உறவுகள் வருவதுண்டு
    ஆனால் இது தான் முதல் உறவு

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு

    வயதில் வருவது ஏக்கம்
    அது வந்தால் வராது….
    வந்ததம்மா மலர் கட்டில்
    இனி வீடினில் ஆடிடும்…..

    ஆயிரம் …

    வருவார் வருவார் பக்கம்
    உனக்கு வருமே வருமே ஊஹும்
    தருவார் தருவார் நித்தம்
    இதழ் தித்திக்க தித்திக்க….
    ஆயிரம் …

    யாரோ சொன்னார் கேட்டேன்
    நான் கேட்டதை உன்னிடம் சொன்னேன்
    நானாய் சொன்னது பாதி
    இனி தானாய் தெரியும் மீதி
    ஆயிரம் …

    http://www.youtube.com/watch?v=vaF4mNuLURM
    http://www.youtube.com/watch?v=vaF4mNuLURM

    ஆயிரம் இரவுகள் வருவதுண்டு – Aayiram iravugal varuvathundu

    Share
  • வார ராசி பலன் 10-02-14-16-02-2014

    காயத்ரி பாலசுப்ரமணியன்

    மேஷம்: மாணவர்கள் புது நட்புடன் வளைய வருவார்கள். கணவன் வழி
    உறவுகளுக்காக பெண்கள் தங்கள் சேமிப்பை கரைப்பர். கலைஞர்களுக்கு
    வெளிவட்டாரம் மூலம் மகிழ்ச்சி வரும். கூடவே சுற்றியிருப்பவர்களால் வீண்
    செலவுகளும் வந்து வந்து போகும். சில குழப்பங்கள் உருவாகும் சூழல்
    இருப்பதால்,வியாபாரிகள் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டு வாருங்கள்.நிலைமை
    மீண்டும் சகஜமாகிவிடும். வேலை நிமித்தம் அங்கும் இங்கும் அலைபவர்கள் உடல்
    ஆரோக்கியத்தில் தகுந்த கவனம் செலுத்தி வந்தால், உங்களின் அன்றாட
    அலுவல்கள் சீராக நடைபெறும். பொருளாதார வரவால்,நீங்கள் மன உற்சாகத்துடன்
    செயல்படலாம்.
    ரிஷபம்: மாணவர்கள் எட்டாக் கனியான விஷயங்களில் உங்கள் கவனத்தையும்,
    திறமையையும் வீணடிக்காததிருப்பது நல்லது. கலைஞர்கள் போட்டா போட்டியில்
    வெற்றி பெற,உங்களின் அனுபவ அறிவு கை கொடுக்கும். முக்கியமான
    பொறுப்புக்களை கையாள்பவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களை உங்கள் அருகில்
    வைத்துக் கொள்வது சிறந்தது. வியாபாரிகள் பழைய பாக்கிகளை வசூலிக்க அலைய
    நேரிடும். பெண்கள் இரவலாக உங்கள் பொருள்களைத் தருவதை நாசுக்காகத்
    தவிர்த்துவிடுங்கள். பாதிப் பிரச்னைகள் குறைந்து விடும். தொழிற்சாலைகளில்
    பணி புரிவோர் இரும்பு உபகர ணங்களை எச்சரிக்கையுடன் கையாள்வது அவசியம் .

    மிதுனம்: சரக்குகள் தேங்காதவாறு வியாபாரத்தை முடுக்கிவிடும்
    வியாபாரிகளுக்கு லாபத்தோடு புதிய ஒப்பந்தங்களும் உடன் வந்து சேரும்.
    பிறர் செய்யும் தவறுக்கு, நீங்கள் பதில் சொல்லும் சூழல் உருவாகும் நிலை
    இருப்பதால், மாணவர்கள் கவனத்துடன் செயல்படவும். தந்தை-மகள் உறவு
    நெருக்கமாகும். இதுவரை இருந்த மனத் தாங்கல் நீங்கி, ஒருவரையொருவர்
    பாராட்டிக் கொள்வீர்கள். பெண்கள் அவ்வப்போது தோன்றும் சிறிய பிரச்னைகளை,
    தெளிவுடனும், திறமையுடனும் கையாண்டால் உறவுகளின் ஆதரவு உங்கள் பலமாய்
    மாறும். ஆன்மீகப் பயணங்களுக்கான அழைப்பு உங்களைத் தேடி வரும்!

    கடகம்: இதுநாள் வரை மந்த கதியில் சென்று கொண்டிருந்த வேலை, புதிய
    வேகத்துடன் நடைபெறுவதால், சுய தொழில் புரிபவர்கள் உற்சாகத்துடன்
    திகழ்வார்கள். கல்விப் பணியில் இருப்பவர்க்கு இது ஏற்ற வாரமாகும்.
    அனுசரித்து நடந்து கொள்ளும் கொள்கை உடையவரின் கூட்டு முயற்சி வெற்றியாய்
    முடியும். வியாபாரிகள் எதிரிகளின் செயல்களை கண்காணிப்பது அவசியம். இது
    வரை தன் முயற்சிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று வருந்தியவர்க்கு
    பாராட்டு வந்து சேரும். முக்கியமான முடிவு எடுக்கும் தருணங்களில்
    அவசரப்பட வேண்டாம். சிலர் பழைய நண்பர்களை சந்தித்து பேசி மகிழலாம்.

    சிம்மம்: நீங்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள், உங்களின் எதிர்கால
    முன்னேற்றத்திற்கு அடித்தளமாகும் . இளம் வயதினர் புதிய சூழலில் கவனமாகப்
    பழகுவதோடு யோசித்து செயல்படுவது அவசியம். தொழிலதிபர்கள் தங்கள்
    நாவன்மையால் தங்கள் கருத்துக்களை எடுத்துச் சொல்ல ஏற்ற வாரம். வீடு,மனை
    விற்பனை அவ்வளவு லாபகரமாய் இராது. எனவே பணத்தை அதில் முடக்க வேண்டாம்.
    இல்லச்சூழலோடு பணிச்சுமை மோதாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். கலைஞர்கள்
    புதிய ஒப்பந்தம், பயணம் என்று மகிழ்ச்சியாய் இருப்பார்கள். பணியில்
    இருப்போர் தன் திறமைக்குரிய வாய்ப்பு வரும் வரை பொறுமை காப்பது அவசியம்.

    கன்னி: பெண்கள் பேச்சில், படபடப்பைக் குறைத்து இனிமையைக் கூட்டுங்கள்.
    இல்லறம் நல்லறமாய் திகழும். பெற்றோர்கள் பிள்ளைகள் கேட்டவுடன் பணம்
    கொடுப்பதை விட, அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைப்பது நல்லது.
    பணியில் இருப்பவர்கள் இடம், பொருள், ஏவல் தெரிந்து உங்கள் கோரிக்கைகளை
    முன் வைப்பது அவசியம். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமிருக்கும். எனவே
    செலவுப் பட்டியலை குறைவாக்குங்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் ,
    சிரமங்களுக்கிடையே வெற்றி காண்பர். சில நேரங்களில் நண்பர்கள் உங்களை
    முழுமையாய் புரிந்து கொள்ளாமல் செயல்படலாம்.

    துலாம்: உயரதிகாரிகள் காட்டும் ஆதரவு புதிய உற்சாகத்தை அளிப்பதோடு,
    உங்களின் ஆர்வத்திற்கு உரிய வாய்ப்பும் உங்களைத் தேடி வரும். மாணவர்கள்
    படிப்புக்கு முக்கியத்துவம் தந்தால், பாடங்கள் கரும்பாய் இனிக்கும். பொது
    வாழ்வில் இருப்போர் ஆவேசமான பேச்சு, மற்றும் செயல் பாடு இரண்டும் எல்லா
    நேரங்களிலும் விரும்பிய பலனைத் தராது என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.
    வேலையில் இருக்கும் பெண்கள் சில மறைமுக எதிர்ப்புகளை சமாளித்து, தங்களின்
    திறமையைத் தக்க வைத்துக் கொள்வர். பிறரின் தனிப்பட்ட விஷயங்களில்
    தலையிடாமல் இருந்து வந்தால், மன அமைதி குறையாமலிருக்கும்.

    விருச்சிகம்: நண்பர்களிடையே பணம் கைமாற்றாக கொடுப்பதை தவிர்த்தால், நட்பு
    கெடாமல் இருக்கும். மாணவர்கள் தெளிவான சிந்தனையுடன் செயலாற்றினால் தடுமாற
    வேண்டி யிருக்காது. பெண்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்கும் முன்
    அவற்றைப் பற்றி அறிந்து கொள்வது அவசியம். சிலருக்கு புதிய மனை மற்றும்
    இடம் வாங்கும் வாய்ப்பு கனிந்து வரும். அலுவலக விழா விருந்து
    ஆகியவற்றிற்கு கணிசமான பணம் செலவழியும். நீங்கள் மேற்கொள்ளும் பயணங்களை
    நண்பர்கள் இனிமையாய் மாற்றிடு வார்கள். உறவுகளிடையே கருத்து வேறுபாடு
    தோன்றி மறையும். அவசர கதியில் உணவு உண்ணும் பழக்கத்தை மாற்றிக் கொண்டால்,
    தேக நலன் சீராக இருக்கும்.
    தனுசு:குடும்ப விஷயத்தில் மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்காதீர்கள்.
    பிரச்னைகள் சுமுகமாக முடியும். வெளி இடங்களில் தங்கி படிக்கும் மாணவ
    ர்கள் அவசியமற்ற இரவு நேரப் பயணங்களை தவிர்த்து விடுதல் நலம். கலைஞர்கள்
    கவனமாக இல்லை என்றால், சிலரின் சூழ்ச்சியால், வரும் வாய்ப்புகள் திசை
    மாறலாம். குழந்தைகள் பெறக் கூடிய பெருமையால், உங்களின் பெருமையும்
    உயரும். அலுவலக கொடுக்கல் வாங்கலில் கவனமாய் இருந்தால், மன இறுக்கமின்றி
    வேலையில் ஈடுபட முடியும். மற்றவருக்கு ஜாமீன் போடுவதை தவிர்த்துவிடவும்.

    மகரம்: குடும்ப உறுப்பினர் உங்களின் திட்டங்களுக்கு, வலிமை சேர்க்க முன்
    வருவார்கள். பங்குச்சந்தை விஷயங்களில் ஏற்றம், ஏமாற்றம் இரண்டும்
    கலந்திருக்கும். எனவே பணத்தை முதலீடு செய்யும் முன் யோசனை செய்வது
    நல்லது. பெண்கள் பேச்சில் கடுமை கலவாதவாறு பார்த்துக் கொண்டால், குடும்ப
    உறவுகள் சுமூகமாக இருக்கும்.வியாபாரிகள் கணக்கு வழக்குகளில் உள்ள
    குளறுபடிகளை கவனமாக சரிசெய்தால், அபராதம் செலுத்தவதை தவிர்த்துவிடலாம்.
    வெளியூர் பிரயாணங்களில், உணவு விஷயத்தில் மிதமாக இருப்பது நல்லது.
    பொறுப்புக்களில் உள்ளவர்கள் கோப்பு களை நன்கு படித்தபின்,
    கையெழுத்திடுவது அவசியம்.

    கும்பம்: சில நேரங்களில் கண் மற்றும் பல்சம்பந்தமான உபாதைகள் உங்கள்
    இயல்பு வாழ்வை பாதிக்கக் கூடும். எனவே சிறு தொந்தரவுகளை உடன் கவனித்து
    விடுங்கள். கலைஞர்கள் விழா விருந்து போன்றவற்றில், உங்கள் எல்லையை
    அறிந்து, நடந்து கொள்வது அவசியம். வியாபாரிகள் எழுத்துப் பூர்வமாகவே
    ஒப்பந்தங்களை முடிப்பது நல்லது. பொருள் விநியோகத்தில்
    ஈடுபட்டிருப்பவர்கள் வேலையாட்களை நம்பி முழு பொறுப்பை அளிக்காமல், உங்கள்
    கவனமும் அதில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.பணியில் இருப்போர்
    வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்வதால், வாழ்க்கையில் உயரும்
    வாய்ப்பு உங்களை நாடி வரும்.

    மீனம்:பெண்கள் தங்கள் துணைவரின் உடல்நலத்தில் விசேஷ கவனம்
    செலுத்தி வந்தால், இல்லப் பணிகள் தடையின்றி தொடரும். மாணவர்கள் சோர்வை
    விரட்டியடி க்கும் சத்தான பானங்களை குடித்து வந்தால், சிந்தனை வளம்
    மேலும் பெருகும். வியாபார விஷயங்களில் வெளுத்ததெல்லாம் பால் என்றிருப்பதை
    தவிர்த்தல் நலம். பணியில் இருப்போர்கள் புதிய விஷயங்களை அறிந்து கொள்ளும்
    துடிப்புடன் செயலாற்றுவார்கள். பிள்ளைகளிடம் உங்கள் கருத்துக்களை இதமான
    முறையில் எடுத்துச் சொன்னால்,அவர்களின் ஒத்துழைப்பையும் பெறலாம். பழைய
    கடன்கள் அடைவதால், பொருளாதார இறுக்கம் குறையும்.

    Share
  • நாசா நிலவைச் சுற்றும் “லாடி” [LADEE] விண்ணுளவி ஆய்வு காலத்தை நீடிக்கிறது

    நாசா நிலவைச் சுற்றும் “லாடி” [LADEE] விண்ணுளவி 
     
    ஆய்வு காலத்தை நீடிக்கிறது.
     
     
     LADEE CIRCLING THE MOON

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=ckEYg0upIU0

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=RpzLo5y3s9E

    http://www.youtube.com/watch?v=OcD5uhZHcE8&feature=player_detailpage

    http://www.youtube.com/watch?v=hf0SIRxXvRo&feature=player_embedded 

    http://www.youtube.com/watch?v=7uuTWLZ3n_o&feature=player_embedded

    http://www.youtube.com/watch?v=SQLBLgFckak&feature=player_embedded

    http://www.youtube.com/watch?feature=player_embedded&v=mEutj2kDylE

    [NASA’S Spacecraft LADEE Was Launched on September 6, 2013]

     

    நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில்
    கால் வைத்து
    நாற்பது ஆண்டுகள் கடந்து
    நாசா மீண்டும்
    விண்ணுளவுப் பயணம் துவங்கும்
    வெண்ணிலவை நோக்கி !
    நுண்ணிய ஏழு கருவிகள்
    வெண்ணிலவுப் பரப்பை விரிவாய்
    உளவு செய்யும்.
    துருவப் பகுதியில்
    ராக்கெட் ஒன்றை நிலவுமேல்
    தாக்கிடச் செய்து
    தளத்தில் குழி பறித்து
    தண்ணீர் உள்ளதா எனக் கருவி
    மண்ணுளவு செய்யும் !
    எரிசக்தி ஹைடிரஜன் வாயு
    இருக்கிறதா வென்றும்
    துருவி ஆய்ந்திடும் !
    வருங் காலத்தில்
    செவ்வாய்க் கோளுக்குச்
    செல்லும் விண்வெளி விமானிகட்குத்
    தங்குமிடம் காண
    நிலா யாத்திரை புரியும் இந்த
    நீண்ட பயணம் !

    +++++++++++++++++++

    LADEE SPACESHIP

    “லாடி உட்கள எஞ்சின்கள் இயக்கி உந்தப்பட்டு துல்லியமாய்த்  திசை திருப்பிப் பயணம் செய்ததால், எரிபொருள் மிச்சமாகி மேற்கொண்டு தொடர்ந்து ஆய்வுகள் நடத்த நீடிக்கப் பட்டுள்ளது.   அந்த நீடிப்புக் காலம் பேரளவு விஞ்ஞானத் தகவல் பெற வாய்ப்புகள் அளிக்கும்.”

    பட்லர் ஹையின்  [நாசா லாடி திட்ட ஆளுநர், காலிஃபோர்னியா]

    “ஏற்கனவே விஞ்ஞானக் குழுவினர் நிலவின் நுட்பமான சூழ்வெளி, அல்லது நிலவின் சூழ்நிலைத் தூசிப் பாதிப்பு அடிப்படை மட்டநிலை வரம்பைத் தீர்வு செய்து விட்டோம்.  இந்த நீடிப்பால் பெறும் ஒரு சாதக அனுகூலம் என்ன வென்றால், நிலவுக்கு நெருங்கிய தூரத்தில் லாடி விண்ணுளவி பறந்து சுழல்வீச்சு விரைவாக்கம் அடைய முடியும்.”

    ரிக் எல்ஃபிக் [லாடி விண்ணுளவித் திட்ட விஞ்ஞானி]

    “நிலவைப் படைத்த நியதி இயக்கங்களே பூமியையும் மற்ற பரிதி மண்டலக் கோள்களையும் ஆக்கியுள்ளன.  ஆதலால் நிலவைப் பற்றி ஆராய்வது எல்லாப் பாறைக் கோள்களைப் பற்றி அறியும் பலகணியாக உள்ளது.  நிலவின் தளப்பரப்பை உளவித் தேவையான மூல வளங்கள் (Useable Resources Like Water & Hydrogen) உள்ளனவா என்று தேடிச் செல்லும் ஆய்வில் பயன்களை எதிர்நோக்கி யுள்ளோம்.”

    டாட் மே (Todd May, Manager Lunar Presursor Robotic Program)

     

    LADEE COMMUNICATIONS

    நாசா நிலவை ஆய்வு செய்யும் “லாடி” திட்டப் பணியை நீடிக்கிறது

    2013 செப்டம்பர் 6 ஆம் தேதி ஏவப்பட்டு, இப்போது நிலவைச் சுற்றி ஆராய்ந்து வரும் “லாடி” [LADEE – Lunar Atmosphere and Dust Environment Explorer] விண்ணுளவியின் ஆய்வுக் காலம் 28 நாட்களுக்கு நீடிக்கப் பட்டது. அந்த நீட்சியில் விண்ணுளவி ஆய்வுத் தகவல் 2014 ஏப்ரல் 21 வரை அனுப்பிய பிறகு, இறுதியில் நிலவின் மீது விழும்படித் திட்டமிடப் பட்டுள்ளது. மேலும் அந்த 28 நாட்கள் விண்ணுளவி நிலவுக்கு மிக நெருங்கிய சுற்று வீதியில் [250 கி.மீ. உயரம்] [150 மைல்] பயணம் செய்து புதுத் தகவல் அனுப்பும்.

    விண்ணுளவி லாடி ஏவிய நாள் : 2013 செப்டம்பர் 6.

    ஏவுதளம் : வெர்ஜினியா வாலப்ஸ் ஏவுப் பயணத் தளம்

    ஏவிய ராக்கெட் : மினோடௌர் — 5 [Minotaur -V]

    விண்ணுளவியின் பளு : 383 கி.கி. [844 பவுண்டு]

    லாடி மின்னாற்றல் : 295 வாட்ஸ்.

    திட்டப் பயண நாட்கள் : 160 [30 நாள் பயணம், 30 நாள் சோதனை, 100 நாட்கள் ஆய்வு.]

    LADEE ROCKET LAUNCH

    நாசாவி லாடி விண்ணுளவி ஆய்வுத் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

    லாடி விண்ணுளவி நிலவைச் சுற்றி ஆராயும் மனிதரற்ற ஒரு தன்னியக்க யந்திரத் திட்டச் [Robotic Mission]  சுற்றுளவி. அதன் பணி, நிலவின் மெலிந்த சூழ்வெளி வாயுக்களை ஆராய்வது. நிலவுத் தளம் மீதும், காலநிலைச் சூழ்நிலை நிலவுத் தூசி மீதும் உண்டாக்கும் பாதிப்புகள் அறிந்து தகவல் அனுப்புவது.  நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் இறங்கும் போது முதலில் விண்ணுளவி நீள்வட்டத்தில் 24 மணி நேரத்துக்கு ஒரு முறையாக நிலவு மத்திய ரேகைப் பகுதியில் [Equatorial Orbit] சுற்றி வரும். பன்முறை நிலவை நெருங்கி ஒரு வட்டப் பாதையில் 250 கி.மீ. [150 மைல்] ஆராயும். பிறகு இறுதியாக 160 மைல் உயரத்தில் தணிந்து பறக்கச் செய்து,  லாடி விண்ணுளவியை நிலவில் விழ வைத்து முகிலையும் தூசியையும் ஆராயும்.  2009 செப்டம்பர் 18 இல் ஏவப்பட்டு தற்போது துருவ வட்ட வீதியில் சுற்றிக் கொண்டி

    ​ ​

    ருக்கும் நாசாவின் “லரோ” [LRO – Lunar Reconnaissance Orbiter] ] விண்ணுளவியை நோக்கிப் படம் எடுக்கும். “”லாடியும்”, “லரோவும்” ஒரே வேகத்தில் [3600 mph] [1600 meter per sec] நிலவைச் சுற்றி வருகின்றன.

    “நாசாவின் இந்த இரண்டு விண்ணுளவுக் குறிப்பணிகளும் (LRO -Lunar Reconnaissance Orbiter & LCROSS -Lunar Crater Observation & Sensing Satellite) நமது அண்டைக் கோளான நிலவைப் பற்றிக் கிளர்ச்சி யூட்டும் புதிய தகவலை அளிக்கப் போகின்றன.  தேவை யான தளக் காட்சிப் படப் பதிவுகள் (Images), பாதாள தளச் சரிவுகள் (Lunar Landscapes) ஒரு மீடர் துல்லிமத்தில் நோக்கப்படும்.

    Fig 1C LRO Satellite

    அவ்விதத் தகவல் அடுத்து நாசா குறிவைக்கும் தளங்களுக்கு விபரங்கள் தரும்.  அந்த இரண்டு விண்ணுளவிகளைத் தயாரித்த குழுவினர் உன்னத டிசைன் செய்து சாதனங்களைப் படைத்துள்ளனர்.

    டக்ளஸ் குக் (Douglas Cooke, Associate Administrator of NASA’s Exploration Systems)

    “நிலவு தள ஆய்வு விண்கப்பல் (LRO) நுணுக்கமான ஓர் உன்னத விண்ணுளவி.  அந்த ஏழு கருவிகளின் விண்சிமிழ் நிலவின் தள மண்டலத்தில் எமக்குப் பல்லாண்டுகள் தேவைப்பட்ட தகவலைத் தொடர்ந்து அனுப்பி வரும்.”

    கிரெய்க் டூலி (Craig Tooley, LRO Project Manager at NASA)

    “நிலவின் குழிகளை நோக்கி உளவும் “லகிராஸ்” துணைக்கோள் (LCROSS) நிலவைக் கோலாகலமாக நெருங்கப் போகும் (அக்டோபர் 2009) காட்சியையும், அதன் அடித்தளத்திலே நீர் உள்ளதா என்று முதன்முதல் ஆராயப் போவதையும் உலகப் பொதுமக்கள் கண்டு களிக்க எதிர்நோக்கி யுள்ளோம்.”

    டானியல் ஆன்டிரூஸ் (Daniel Andrews LCROSS Project Manager NASA)

    “நிலவின் தளத்திலே புதைபட்ட பூர்வச் சுவடுகளின் [Fossils] கண்டுபிடிப்பே ஓர் பரபரப்பான, மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது !  ஒருவேளை ஆதியில் உண்டான உயிரினத் தோற்றங்களின் ஆர்கானிக் துணுக்குகளும் அங்கே இருக்கலாம். ஆனால் அவை யாவும் அபூர்வமாகவே இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கிறோம்.”

    குயிலர்மோ கன்ஸாஸ், பௌதிகத் துணைப் பேராசிரியர் [Guillermo Gonzalez, Iowa State University]

    LADEE Control Centre

    நிலவை நோக்கி மீண்டும் நாசாவின் பயணம்

    2009 ஜூன் மாதம் 17 ஆம் தேதி நாசா பிளாரிடா கனாவரல் முனை (Cape Canaveral) விமானப்படை ஏவு தளத்திலிருந்து மனிதரற்ற இரண்டு துணைக்கோள்களை அட்லாஸ்-5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக நிலவை நோக்கி அனுப்பியுள்ளது.  அவற்றின் முக்கிய குறிக்கோள்கள் : 2020 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் தடம் வைக்கப் போகும் நாசா விண்வெளி விமானிகள் தங்கும் ஓய்வுக் கூடத்துக்கு இடம் தேடுவது, நிலவின் அடித்தளத்தில் நீர் உள்ளதா, எரிசக்திக்கு ஹைடிரஜன் வாயு இருக்கிறதா என்று ஆய்வுகள் செய்வது.  நாசாவின் இரட்டைத் துணைக்கோள்கள் (LRO -Lunar Reconnaissance Orbiter & LCROSS -Lunar Crater Observation & Sensing Satellite) அவற்றை இன்னும் ஓராண்டில் கண்டுபிடிக்கும்.  அந்த இரண்டு துணைக்கோள்களும் ராக்கெட் ஏவிய 45 நிமிடங்கள் கழித்துப் பிரிந்து சென்றன.  நிலாவின் விண்வெளிச் சுற்றித் துணைக்கோள் LRO இப்போது நிலவின் ஈர்ப்பாற்றலில் சிக்கி 50 கி.மீடர் (30 மைல்) உயரத்தில் வட்டவீதியில் சுற்றி வருகிறது.  இரண்டாவது கட்ட சென்டார் ராக்கெட்டில் (Centaur Rocket) செல்லும் துணைக்கோள் LCROSS நான்கு மாதங்கள் கழித்து (அக்டோபர் 2009) நிலவை நெருங்கித் துருவப் பகுதிகளில் சுற்றி இரு கணைகளால் தளத்தைத் தாக்கித் துளையிட்டு நீருள்ளதா என்று ஆராயும்.  முதன்முதல் புரியும் இந்த அற்புத இரட்டைச் சோதனைக்கு ஆகும் நிதிச் செலவு சுமார் 583 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) !

    LADEE Orbit

    சூரிய சக்தி பயன்படும் LRO துணைக்கோள் பயணம் செய்து நாலரை நாட்களில் நிலவின் ஈர்ப்பு மண்டத்தில் சிக்கியது.  பிறகு அது நிலவின் துருவப் பகுதிகளில் 2 மணிக்கு ஒருதரம் 30 மைல் (50 கி.மீ) உயரத்தில் சுற்றி வந்தது.  நாசாவின் இந்த விண்வெளிப் பயணம் இரண்டு அவசியமான தகவலை அறிந்து கொள்ள உதவும்,  ஒன்று நிலவின் துருவத்தில் ஆழ்குழி பறித்து அடித்தளத்தில் நீருள்ளதா என்று கண்டுபிடிப்பது;  இரண்டாவது எரிசக்தி அளிக்கும் ஹைடிரஜன் வாயு நிலவில் உள்ளதா என்று ஆய்வு செய்வது.  விண்வெளித் தேடற் பயணங்களில் சந்திரனுக்கு ஒரு பவுண்டு எடைப் பொருளைத் தூக்கிச் செல்ல நாசாவுக்கு 50,000 டாலர் செலவாகிறது.  ஆகவே விண்வெளி விமானிகளுக்குப் பேரளவில் நீர் கொண்டு செல்வதோ, ராக்கெட்டுக்கு எரிசக்தித் திரவத்தை ஏற்றிச் செல்வதோ பெரும் நிதிச் செலவை உண்டாக்கும் தேவைகளாக இருக்கின்றன.

     Fig 6 LRO Instruments

    புதிய நிலவுத் தேடலில் கதிர்வீச்சு, ஹைடிரஜன் வாயு ஆராய்தல்

    1969 ஆம் ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலாவில் தடம் வைத்த பிறகு 1972 ஆண்டு வரை நாசா மொத்தம் 12 விண்வெளி விமானிகளை நிலவில் உலவிடச் செய்துள்ளது.  1959 ஆண்டு முதல் 2009 வரை ஐம்பது ஆண்டுகளாக உலக நாடுகள் (ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் கூட்டு, ஜப்பான், சைனா, இந்தியா) நிலவை நோக்கி 17 பயணங்களைச் செய்திருக்கின்றன.  ஆனால் நிலவில் இதுவரைத் தடம் வைத்த எல்லா விண்வெளி விமானிகளும் அமெரிக்கர் ஒருவரே ! அவ்விதம் அமெரிக்க விண்வெளி விமானிகள் இதுவரைக் கால்வைத்த இடங்கள் ஆறு. அந்தத் தளங்கள் யாவும் விமானிகளால் பகலில் மட்டுமே வாகனங்கள் மூலம் தேடப் பட்டன !  2020 ஆண்டில் மறுபடியும் நாசா தனது விமானிகளை நிலவுக்கு அனுப்ப இதுவரைத் தேடாத இடங்களை இப்போது நிலவில் ஆராயத் திட்டமிட்டுள்ளது.

    Fig 1 Lunar Reconaissancs Mission

    LRO துணைக்கோள் ஓராண்டு நிலவைச் சுற்றி வந்து 50 குறிப்பிட்ட தளங்களின் தகுதியை எதிர்காலப் பயணங்களுக்கு ஒப்புநோக்கும்.  “LRO துணைக்கோள் அனுப்பும் உயர் நுணுக்கத் தளப் படங்கள் (High Resolution Maps) எதிர்கால நிலவுப் பயணத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்” என்று LRO திட்ட விஞ்ஞானி ரிச்சர்டு வான்டிராக் (Richard Vondrak) கூறுகிறார்.  நிலவுக்குச் செல்லும் எதிர்கால விண்வெளி விமானி களைத் தாக்கும் கதிர்வீச்சுப் பாதிப்புகளை அறியும் கருவிகளும், சாதனங்களும் அதில் அடங்கி யுள்ளன,  மேலும் ஹைடிரஜன் வாயுச் சேமிப்பு மிக்க பகுதிகளைத் தேடும் கருவிகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன.  LRO துணைக்கோள் (50 கி.மீ.) 30 மைல் உயரத்தில் ஓராண்டு சுற்றி வந்து நிலவின் தளப் பண்புகளையும் சூழ்வெளியையும் தொடர்ந்து ஆராய்ந்து வரும்.

    LCROSS துணைக்கோள் நீர் இருப்பை ஆராய்தல்

    LRO துணைக்கோள் துரித உந்துகணைகள் மூலம் நிலவை நெருங்க நாலரை நாட்கள் கடந்தன. ஆனால் இரண்டாவது துணைக்கோளான LCROSS மெதுவாக நகர்ந்து நிலவை நெருங்க நான்கு மாதங்கள் எடுக்கும்.  LCROSS துணைக்கோளில் இரண்டு தனித்தனிப் பாகங்கள் உள்ளன. ஒன்று 41 அடி நீளமுள்ள பளுவான இரண்டாம் கட்ட சென்டார் ராக்கெட் (Second Stage Centaur Rocket).  அடுத்தது அத்துடன் இணைக்கப் பட்ட சிறு துணைக் கோள் (Shepherding Spacecraft).  2009 அக்டோபர் மாதம் முதலில் சென்டார் ராக்கெட் நிலவை நோக்கித் தாக்க அனுப்பப்படும்.  முதல் ராக்கெட் தாக்குதல் நிகழ்ந்து 4 நிமிடங்கள் கழிந்து சிறு துணைக்கோளும் நிலவை நோக்கித் தாக்க அனுப்பப்படும்.  அவை உண்டாக்கும் குழிகள் நிலவின் அடித்தளத்தின் தன்மைகளைக் காட்டுவதோடு அடியில் நீர் உள்ளதா என்பதையும் கருவிகள் கண்டுபிடிக்கும்.

    Fig 1E NASA Lunar Satellite

    சென்டார் ராக்கெட் தாக்குவதற்கு முன்னால் அது நிலவுக்கு மேல் 54,000 மைல் (87,000 கி.மீ.) உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.  அது நிலவைத் தாக்கும் போது அதன் பளு குறைந்தது 4958 பவுண்டு (2249 கி.கிராம்) முதல் உச்சம் 5216 பவுண்டு (2366 கி.கிராம்) வரை இருக்கும்.  சிறு துணைக்கோள் 1369 பவுண்டு (621 கி.கிராம்) முதல் 1909 பவுண்டு (866 கி.கிராம்) வரை இருக்கும்.  சென்டார் தாக்குதல் நிலவின் தளத்தில் 66 அடி நீளம், 13 அடி விட்டமுள்ள(20 மீடர் நீளம், 4 மீடர் விட்டம்) பள்ளத்தை உண்டாக்கும்.  அது போல் சிறு துணைக்கோள் உண்டாக்கும் துளை : 46 அடி நீளம் 6 அடி விட்டமுள்ள (14 மீடர் நீளம், 2 மீடர் விட்டம்) குழி.  முதல்முதல் இவ்விதம் இரட்டைத் தாக்குதல் செய்து நிலவில் நிகழும் அதிர்ச்சிக் காட்சிகளை நாசாவின் LRO துணைக்கோள், ஹப்பிள் தொலைநோக்கி மற்றமுள்ள துணைக்கோள்களும் தொலைநோக்கிகளும் படமெடுத்து உலக மக்களுக்கு அறிவிக்கும்.

    நிலவுத் தளப்பதிவு துணைக்கோளில் உள்ள ஏழு நுட்பக் கருவிகள்

    LRO துணைக்கோளில் ஏழு நுட்பக் கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன :

    1.  (CRATER) (Cosmic Ray Telescope for the Effcts of Radiation) :  கதிர்வீச்சுப் பாதிப்புகளை அறியும் அகிலக்கதிர் தொலைநோக்கி.

    விண்வெளி விமானிகள் சந்திர தளத்தில் நடமாடும் போது அவருக்கு ஏதேனும் கதிர்வீச்சுப் பாதிப்புகள் விளையுமா என்பதை அறியும் சாதனம்.  மனிதத் தசை போன்ற பிளாஸ்டிக் மற்றும் கவசங்கள் கதிர்வீச்சால் தாக்கப்பட்டால் என்ன நேரும் என்பதைக் காணும் சாதனங்களையும் கொண்டது.  அதன் மூலம் சிறந்த கவசங்கள் தயாரிக்க நாசாவுக்குத் தகவல் கிடைக்கும்.

    Fig 3 LRO & LCROSS Together

    2.  (DLRE) (Diviner Lunar Radiometer Experiment) : வெப்ப எதிரொளிப்புச் சோதனைக் கருவி

    நிலவின் தள வெப்பம், அடித்தள வெப்பம் ஆகியவற்றை சுற்றுவீதியிலிருந்து அறியும் கருவி.

    இது குளிர்ந்த பிரதேசங்களில் உள்ள பனிப்படிவு (Ice Deposits) கரடு முரடான கற்பகுதி, பாறைப் பகுதிகளை அறியும்.  இவை எதிர்கால நிலவுத் தேர் (Lunar Landing Module) இறங்கும் இடங்களைத் தேர்தெடுக்க உதவும்.

    3.  (LAMP) (Lyman Alpha Mapping Project) லைமன் ஆல்·பா தளப்பதிப்புத் திட்டம்.

    புறவூதா ஒளிப்பட்டைக்குக் கடந்த (In the Far Ultraviolet Spectrum) நிலையில் நிலவின் தளம் முழுவதும் நோக்கிப் பதிவு செய்யும் கருவி.  துருவப் பகுதிகளில் பனிப்படிவு, பனிப் படர்ச்சியும் (Ice & Frost) காணும் கருவி.  நிரந்தரமாய் பரிதி ஒளிவிழாத நிழலில் இருந்து பிறக் கோள் வெளிச்சம், வாயு ஒளிகள் எதிரொளிக்கும் பகுதிகளைப் படமெடுக்கும்.

    4.  (LEND) (Lunar Exploration Neutron Detector) : நிலவுத் தேடலில் நியூட்ரான் உளவும் கருவி.

    நிலவுச் சூழ்வெளியில் ஹைடிரஜன் பரவியுள்ளதைப் பதிவு செய்வது.  சந்திரனில் உணரப்படும் கதிர்வீச்சு அரங்குகளில் நியூட்ரான் பரமாணுக்களை அறியும் கருவி.  இதன் மூலம் சந்திர தளத்தில் நீர்ப்பனி இருப்பைக் கண்டு கொள்ளலாம்.

    5.  (LOLA) (Lunar Orbiter Laser Altimeter) : நிலவுத் தேர் இறங்கும் பகுதிகளின் சரிவை (Landing Site Slopes) அளக்கும் கருவி.

    தளத்தின் கரடுமுரடான தன்மைகளையும் அறியும்.  நிரந்தரமாய் வெளிச்சமுள்ள வெளிச்சமில்லா பகுதிகளையும் அடையாளம் காணும் தளக்கருவி.  எதிர்கால நிலவுத் தேர் இறங்கும் இடங்களைத் தேர்ந்தெடுக்க இந்தத் தகவல் உதவும்.

    6.  (LROC) (Lunar Reconnaissance Orbiter Cameras) :  நிலவுத் தளப் பரப்பு உளவியின் மூன்று காமிராக்கள்.

    ஒரு மீடர் துல்லிமத்தில் கறுப்பு-வெள்ளைப் படமெடுக்கும் இரு நுட்பக் குறுங்கோணக் காமிராக்கள் (Two Narrow-angle High Resolution Cameras) அமைக்கப் பட்டுள்ளன.. 100 மீடர் துல்லிமத்தில் விரிவு கோணக் காமிரா ஒன்று. (One Wide-anglle Camera)

    7.  (Mini-RF) (Miniature Radio Frequency) (Technology Demonstration)  சிறு வடிவு ரேடியோ அதிர்வலைக் காமிரா.

    துருவப் பகுதிகளில் நீர்ப்பனி அமைப்பைப் படமெடுக்கும்.  பிறகு இது பூமியில் உள்ள துணைக் கோள் கட்டுப்பாடு அரங்குகளுடனும் தொடர்பு கொள்ள வசதி அளிக்கும்.

    LCROSS

    நாசா சந்திரனை மீண்டும் தேடிச் செல்லக் காரணம் என்ன ?

    முதல் மனிதன் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கடந்த பிறகு நாசா மறுபடியும் அங்கே போவதற்குக் காரணம் செவ்வாய்க் கோளுக்கு 2020 இல் தடமிடப் பயணம் செய்யும் போது இடையே ஓய்வெடுக்கத் தற்போது தங்கு நிலையம் ஒன்றைச் சந்திரனில் அமைப்பதற்கே ! அத்துடன் பூமிக்கும் நிலவுக்கும் இடையே விமானிகள் ஓய்வெடுக்கத் தற்போது புவியைச் சுற்றிக் கொண்டிருக்கும் “அகில நாட்டு விண்வெளி நிலையமும்” (International Space Station) தயாராகப் போகிறது.  ஏற்கனவே பன்னாட்டு விமானிகள் செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் நீண்ட காலப் பயணத்துக்குப் பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் தமது விண்வெளி வாகனங்களில் அனுப்பி அளித்து வருகின்றன. குறிப்பாக 2010 ஆண்டில் நாசா பயன்படுத்தும் “விண்வெளி மீள்கப்பல்கள்” (Space Shuttles) நிரந்தர ஓய்வு எடுக்கும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது..

    ஆதலால் நாசாவின் முதல்பணி விண்வெளி மீள்கப்பலுக்கு இணையான விண்கப்பல் ஒன்றைத் தயாரித்து அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்களை அனுப்பிப் பயிற்சிகளைத் தொடர்வது. இரண்டாவது சந்திரனில் விமானிகள் ஓய்வெடுக்கத் தக்க தளத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்குமிடம் ஒன்றை அமைப்பது. மூன்றாவது செவ்வாய்க் கோளுக்கு மனிதர் பயணம் செய்யத் தகுந்த விண்கப்பல் ஒன்றைத் தயாரிப்பது. இம்மூன்று முக்கியப் பணிகளை நிறைவேற்றத்தான் நாசாவின் “ஓரியன் விண்வெளித் திட்டம்” இப்போது மும்முரமாய்த் தயாராகி வருகிறது.

    LRO in Lunar Orbit

    நிலவிலிருந்து செவ்வாயிக்குத் தாவும் முயற்சிகள்!

    ஒவ்வோர் ஆண்டிலும் இரண்டு முறைகள் நிலவை நோக்கிச் சென்றுவர நிரந்தர நிலவுக் கூடாரத்தை விரைவில் அமைக்கப் போகிறார்கள்.  பூமியிலிருந்து நிலவுக்குப் போகும் காலம், நாலரை நாட்கள்!  நிலவுப் பயணக் குழுவினர் நீண்ட காலம் தங்கிச் சந்திர தளத்தில் கிடக்கும் புதைக் களஞ்சியங்களை ஆராய்வார்கள்.  நிலவுக்குப் பளு ஏற்றிச் செல்லும் பார வாகனம், பண்டங்களை இறக்கிய பிறகு திரும்பி பூமிக்கு வந்துவிடும்.  நிலவில் ஆய்வுகள் நடத்தி வரும் ஆராய்ச்சிக் குழுவினர் ஆறாறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் அடைவர்.  நாசா நிலவின் தென் துருவத்தில் ஹைடிரஜன் எரிவாயு கிடைக்கும் நீர்ப்பனிப் பாறைகளை எதிர்பார்க்கிறது.  நிலவில் பரிதியின் ஒளி வெப்பத்தைப் பயன்படுத்திப் பேரளவு மின்சக்தி பெற விமானிகளுக்கு வாய்ப்புள்ளது.  அதைக் கொண்டு நிலவுக் கூடாரத்தை ஒளிமயமாக்க முடியும். பனிப்பாறைகளை உருக்கி நீர் பெற்றுக் கொள்ள முடியும்.  நீரைப் பிரித்து ஹைடிரஜன், ஆக்ஸிஜென் வாயுக்களைச் சேமித்துக் கொள்ள முடியும்.  நிரந்தர நிலவுக் கூடார அமைப்பின் முக்கிய காரணம், செவ்வாய் கோளுக்கு 2020 ஆம் ஆண்டுக்குள் மனிதர் பயணம் செய்து கால் தடம் வைத்து மீள்வது.  பிறகு செவ்வாய்க் கோளில் நிரந்தரக் கூடாரம் அமைத்து செவ்வாய்க் கோளை ஆராய்வது.  அதற்குத் தேவையான அசுர உந்து சாதனங்கள், விண்வெளி விமானிகளுக்கு வேண்டிய பயிற்சிகள் யாவும் நாசாவிடம் தயாராக உள்ளன.

    Fig 5 Future Plan to the Moon

     

    21 ஆம் நூற்றாண்டில் சந்திரனுக்கு மீண்டும் பயணம் போகும் நாசா !

    1969 ஆம் ஆண்டில் விண்வெளித் தீரர் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதலில் நிலவில் பாதம் வைத்துப் பாதுகாப்பாய்ப் பூமிக்குத் திரும்பிய பிறகு அமெரிக்கா மேலும் ஐந்து தடவைகள் சந்திரனில் தடம் வைத்தது. 240,000 மைல் தூரத்தில் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கைத் துணைக்கோள் நிலவு ஒன்றுதான். அநேக முறை 20 ஆம் நூற்றாண்டில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய நாசா மீண்டும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நிலவுப் பயணத்தை மீண்டும் துவக்கி இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறதல்லவா ? பல மில்லியன் டாலர் செலவில் பழைய சாதனங்களைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் நாசா சந்திரனுக்குப் போவதின் காரணம் என்ன ? சோவியத் ரஷ்யாவின் சந்திரத் தளவுளவி இறங்கி நிலவின் மாதிரி மண்ணை அள்ளி வந்தாலும், ரஷ்ய அகிலவெளித் தீரர்கள் நிலவின் தளத்தில் இதுவரைத் தடம் வைக்க வில்லை. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் குழுவின் ஈசா, ஜப்பான், சைனா, இந்தியா ஆகிய ஆறு நாடுகள் சந்திரனைத் தேடிச் சென்று தகவலைச் சேமித்தாலும், அமெரிக்கா ஏன் மறுபடியும் ஏராளமான நிதியைச் செலவழித்து மனிதப் பயணத்தை துவங்குகிறது என்ற கேள்வி எல்லாருக்கும் எழுகிறது !

     

    LCROSS Impacting the Moon

     

    ************************

    தகவல்கள்:

    Picture Credits: NASA, JPL; Time Magazine.

    1. Returning to the Moon By: Jeffrey Kluger Time Magazine [March 20, 2006]
    2. Apollo Missions (11-17) First Man on the Moon [www.panoramas.dk/]
    3. (a) http://www.thinnai.com/science/sc0505022.html [Authors Article on First Moon Landing (May 5, 2002)]
    3 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811271&format=html (NASA’s Moon Trip)
    3 (c) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603311&format=html (NASA’s Trip to Moon Again)
    4. Return to the Moon Frequently Asked Questions [www.space-frontier.org/projects/moon]
    5. NASA How We will Get Back to the Moon [www.nasa.gov./mission_pages/exploration/spacecraft/]
    6. BBC Science News: Space Agencies Take New Look at Moon [July 27, 2002]
    7. The Space Review- Return to the Moon By: Anthony Young [Jan 3 2006]
    8. Moon -Astronomical Data [www.amastro.org/at/mo/mod.html] [May 15, 2001]
    9 Space & Earth Explorations : NASA Details Plans for Lunar Exploration Robotic Missions (May 22, 2009)
    10 Rocket Launches NEW U.S. Moon Probes By Tariq Malik (June 18, 2009)
    11 BBC News – Lift off for NASA’s Lunar Probes By Paul Rincon (June 18, 2009)
    12 NASA Lunar Reconnaissance Orbiter Fact Sheets LRO & LCROSS Space Probes (2009)
    13 U.S. Lunar Probes Lift off on Mission to Scout Water, Landing Sites (June 22, 2009)

    14  http://www.space.com/22697-ladee-moon-mission-launch-reader-photos.html [September 7, 2013]

    15 http://www.spaceflight101.com/ladee-mission-and-trajectory-design.html  [2013]

    16http://en.wikipedia.org/wiki/Lunar_Atmosphere_and_Dust_Environment_Explorer [January 31, 2014]

     

    17 http://zeenews.india.com/news/space/nasa-s-ladee-lunar-exploration-mission-gets-extension_908857.html  [February 3, 2014]

    18 http://www.moondaily.com/reports/NASA_Extends_Moon_Exploring_Satellite_Mission_999.html  [February 6, 2014]

    19  http://www.spaceflight101.com/ladee-mission-updates.html  [February 4, 2014]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) February 8, 2014

    http://jayabarathan.wordpress.com

    NASA’s LADEE Spacecraft Begins Science Operations

    NASA Ames LADEE Mission: NASA Briefing Previews Lunar Mission

    LADEE: Lunar Atmosphere and Dust Environment Explorer Mission Overview 2013 NASA Ames Reseach Center

    LADEE Launches!

    NASA Ames LADEE Mission – Lunar Orbital Insertion Animation

    NASA Ames LADEE Mission Animation: Updated Orbital Variations

    NASA Ames LADEE Mission Animation: Mission Ending
    Share
  • பிரான்சில் ‘புலம்பெயர் தமிழர் திருநாள் – 2014’ : மக்கள் சங்கமித்த பெருவிழா

     குணன்

    pongal 6

    பாரிஸ் பெரு நகர மையத்தினுள் அமைந்திருக்கும் மண்டபத்தில் அரங்கம் நிறைந்த  மக்களை பார்த்தவுடன் ஆச்சரியமாகத்தான் இருந்தது. காரணம் நான் சென்றிருந்தது குடும்ப கொண்டாட்டத்திற்கோ, ஆண்டு விழாவுக்கோ, மதம் சார்ந்த நிகழ்வுக்கோ அல்ல. புலம்பெயர் வாழ்வில் எமது அடுத்த தலைமுறையினர்க்கு நாங்கள் யார் என்பதை அடையாளப்படுத்தும் வகையில் பிரான்ஸ் சிலம்புச் சங்கம் ஏற்பாட்டில் 19.01.2014 அன்று நடாத்தப்பட்ட எட்டாவது புலம்பெயர் தமிழர் திருநாள் நிகழ்வு.

    pongal 4

    இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக, புகழ்பெற்ற இலங்கைத் தமிழ் வானொலி தொகுப்பு அறிவிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீட், சுவீடன் கீழத்தேய மத வரலாற்றுத்துறைப் பேராசிரியர் பீட்டர் சல்க் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மங்கள விளக்கேற்றல், அமைதி வணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

    pongal 14

    அரங்க வெளி முற்றத்தில் அழகான கோலப் பின்னணியில் அடுப்பு வைத்து விறகிட்டு தீ மூட்டி மட்பானையில் பொங்கல் நிகழ்வு தொடங்க, குழுமியிருந்த கலைஞர்கள் பறையடித்து முழங்க ஆடல் பாடலாக வெளியரங்கம் களைகட்டியது. பாரீஸ் பெருநகர மையத்தில் முதற்தடவையாக நடந்த நிகழ்வாகையால் பெரும்பான்மையோருக்குப் இது புதுமையானதாக இருந்தது. திரும்பிய பக்கமெல்லாம் ஒளிப்படமெடுத்தபடி மலர்ந்த முகத்துடன் வருகைதந்தோர் காணப்பட்டனர்.

    Pongal 17

    பிரான்சு கலைஞர்களுடன் இலண்டனிலிருந்து வருகை தந்திருந்த சந்தோஷ் குழுவினரும் பறையிசை முழக்கம் செய்தனர். இவர்களுடன் முன்னைநாள் கிழக்கிலங்கைப் பல்கலைக் கழக நுண்கலைப் பீடாதிபதி பாலசுகுமார் அவர்களும் இணைந்துகொண்டு பறை வாத்திய இசையின் அருமையான தொன்மையையும் விபரித்து பறையை இசைத்தது சிறப்பாக இருந்தது. இவர்களுடன் மக்களும் கலந்து ஆடிப் பாட, குதிரையாட்டக் கலைஞர்களும் இணைந்துகொள்ள பல்லின பல்தேசியப் பார்வையாளர்களுடன் வெளியரங்கம் குதூகலித்தது. குவாதூப் வழி வந்த 160 ஆண்டுப் புலம்பெயர் நீட்சியின் தலைமுறை பெண் கலைஞர்கள் குதிரைட்டத்தில் ஈடுபட்டது சிறப்பாக இருந்தது.

    pongal 8

    இதேவேளையில், உள்ளரங்கில் தமிழர்களின் பாரம்பரியப் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையிலான இசைக் கருவிகள், நூல்கள், பாவனைப் பொருட்கள், உணவு வகைகள் என கண்கொள்ளாக் காட்சியரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன.

    காட்சியரங்கம். புலம்பெயர் வாழ்வில் வாரிசுகளாகி எம்முடன் வளரும் சிறார்கள் எமது பண்பாட்டு ஓவியக் கலைக்கூடத்திலும், கோலமிடல் போட்டியிலும் உற்சாகமாகப் பங்கேற்றது மிகுந்த நம்பிக்கையுடன் மகிழ்வைத் தந்தது.  எமது வளரும் புலம்பெயர் வாரிசுகளுக்கு எம் பாரம்பரிய உணவுகளின் பெயர்கள் தொடர்பான புரிதலைப் பரிசோதிக்கும் வகையில் பி. எச். அப்துல் ஹமீத் அவர்களால்  திடீரென நிகழ்த்தப்பட்ட போட்டியில் பலரும் கலந்துகொள்ள ஆர்வம் காட்டினர். இந்நிகழ்வு அரங்கத்தினுள் புதியதொரு அதிர்வலையாகப் பரவி மகிழ்வூட்டியது.

    மதிப்புக்குரிய தமிழ் வானொலி அறிவிப்பாளர் அப்துல் ஹமீது கைபிடித்து எமது சிறார்கள் அகரம் எழுதிய காட்சி தமிழின் வாழ்வின்  அர்த்ததை உணர்த்தியதாக பார்வையாளரை புளங்காகிதமடைய வைத்தது.

    அரங்கத்தினுள் பல் வயதையும் கொண்ட ஆண்களில் பலரும் வேட்டி சட்டையுடன் எமது கலாச்சாரத்தை விளக்கும் வகையில் வலம் வந்தனர். கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுவானவர்கள் எனப் பலரையும் சந்தித்து உரையாடக்கூடியதாக இருந்தது.

    Pongal 19

    மேடை நிகழ்வாக, சிறுவர்களின் நடனம், பாடல்கள் என்பன தமிழ்த் தொன்மையை எடுத்தியம்பும் வகையில் இருந்தமை இந்நிகழ்விற்கு மேலும் சிறப்பைத் தந்தது. கடும் குளிர் காலம், பசி வேளை என்பன மறந்து இந்நிகழ்வை மக்கள் அனைவரும் பொறுமையாக இரசித்ததை பதிவிடவேண்டும். குவதூலூப் வழி வந்த ஐந்தாம் ஆறாம் தமிழ்த் தலைமுறையினைச் சேர்ந்த பெண்ணின் ஆடல் அரங்கம் மறக்கப்பட முடியாததாக கால நீட்சியில் மூல அடையாளக் குறியீடாக இந்நிகழ்வு அதிர்வுகளை கிளறிவிட்டுள்ளது.

    சிறப்பு விருந்தினர் உரையில், அப்துல் `ஹமீது அவர்கள், « ஒரு பிள்ளையின் தாய் மொழி அப்பிள்ளை தாயின் கருவறையில் தனது 13ம் வாரத்திலிருந்து கேட்கத் தொடங்கும் மொழியாகும். இது எம் சந்ததியினருக்கு அந்தந்த நாட்டு மொழியாக அமையும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் ஒரு குழந்தையின் பத்து வயதிற்குள் பத்து வகை மொழிகளைக் கற்கும் திறனுடையதென அறிஞர்களது ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. அந்த வகையில் நம் சந்ததியினர் தமிழைக் கற்று அதன் வழி சிறக்க வேண்டும். இலண்டனில் எம் பாடகனொருவன் குறிப்பிடுவது போல் ‘I  am a tamil, but i don’t know tamil ‘ என்ற அவலம் நிகழக் கூடாது. சூழல் மொழி வேறாயினும் வீட்டு மொழியாக தமிழ் இடம்பெற வேண்டும். இதற்காக முகுந்தன் போன்ற பல சமூக ஆர்வலர்கள் செயற்படுகிறார்கள். இப்படியானதொரு நிகழ்வரங்கை பிரான்சு மண்ணில் நிகழ்த்திய சிலம்புச் சங்கம் பெரும் பாராட்டுதலுக்குரியது. சங்கம் கண்டு வளர்ந்த தமிழின் பாராம்பரிய வாழ்வில் நான்காவது சங்கமாக சிலம்பு திகழ்வதை பாராட்டுகிறேன். » என கரவொலியுடன் கூறினார்.

    எமது புலம்பெயர்வு வாழ்வின்  நீட்சியில் மூலத்தொடர்பின் தகவமைப்பு தொடரோட்டமாக அடுத்த தலைமுறையிருக்கு கையளிக்கும் மக்கள் நிகழ்வரங்காக இந்நிகழ்வை அமைத்திருந்தது சிலம்புச் சங்கம் என்பதை பெருமிதத்துடன் குறிப்பிடவேண்டும்.

    புலம்பெயர்வு வாழ்வில் தமிழால் ஒருத்துவமாகி, சாதி, மத, தேச, அரசியல் பேதம் கடந்த தமிழ்க் குடும்பங்களாக ஒன்றிணைந்த நிகழ்வில் கலந்து கொண்டது மிகுந்த மனத் திருப்தியைத் தந்தது. விழா முடிவுற்று வீடு திரும்புகையில், பிரான்சில் தமிழ் வழி ஆறாம் ஆண்டில் கல்வி கற்கும் எனது மகனிடம் நிகழ்வைப் பற்றி கேட்டேன். தனக்கு மிகவும் சிறப்பாகவும் தனக்கு நன்றாகப் பிடித்திருப்பதாகவும் மலர்ச்சியுடன் கூறினான்.

    வாழ்கை என்பது அஞ்லோட்டம் போன்றது எம்முன் சந்ததியினர் எம்மிடம் வழங்கிச் சென்ற வரலாற்று அடையாளத் தடியை புதிய மெருகுடன் அடுத்த தலைமுறையினரிடம் கையளிப்பதென்பது தார்மீகக் கடமை. இந்த அரிய செயலைப்புரியும் சிலம்புச் சங்கத்தை பாராட்டுவதில் பெரு மகிழ்வு கொள்கிறேன்.

    விழியப் பதிவைக் காண:

    http://youtu.be/WWFjHjxmqpY

     https://mail.google.com/mail/ca/u/1/#inbox/14410877872d2870?projector=1

    குணன்

    25.01.2014

    Share
  • வேதாந்த அந்தாதி

    கிரேசி மோகன்

     

    ஆக்கப் பொறுத்தாலும் ஆறப் பொறுத்தாலும்
    காக்கும் கடவுள் கவலைப்படான் -நோக்கு
    விதித்ததை ஏற்றி வினையால் அணைத்து
    புதைப்ப(து) அவன்பொழுது போக்கு….(1)

    போக்கத்(து) உலகில் பொழுதைக் கழித்திரு
    காக்கும் கடவுளுடன் கைகோர்த்து -தாக்கும்
    செடியாய வல்வினைகள் செங்கரும்பாம், ஊன்றத்
    தடியாகும் பட்டினத் தார்….(2)

    தாரில் மலரவன் நாராம் மணக்கும்நாம்
    சோறில் சுவையவன், சக்கைநாம் -நேரில்
    வரத்தயங்கும் கீதமவன் வந்துவிட்ட நாமக்
    கரத்தியங்கும் புல்லாங் குழல்….(3)

    குழலுற்ற கீதத்தைக் காதுற்றுக் கேளீர்
    விழலுக்(கு) இறைக்காதீர் வீணாய் -தழலுக்குள்
    வேகாது, தண்ணீரில் வீழ்ந்தும் நனையாது
    சாகாத அவ்வுணர்வே சத்து….(4)

    சத்துக்கு ஆனந்தம் சித்தின் விளையாட்டு
    அத்தனையும் வேடிக்கை ஆகப்பார் -புத்தி
    மனமுள்ளம் நெஞ்சென்ற மாயங்கள் நால்வர்
    உனையுண்ணத் தூக்கும் உறவு….(5)

    உறவும் பகையும் துறவும் தெளிவும்
    வரவு செலவாகும் வாழ்க்கை -பறவை
    ஒருகூடு விட்டு மறுகூடு போகும்
    பெறுவீடு காணப் பயன்….(6)

    பயனற்ற பாண்டம் பழுதாக மீண்டும்
    வியனுலகை விட்டேக வேண்டும் -அயனோ
    அரனோ, அரியோ அவதாரம் வந்தும்
    மரணத்தில் தானே முடிவு….(7)

    முடிவற்ற ஆசை முதலுக்கே மோசம்
    வெடிவைத்து வந்திடுமா வானம் -படியற்ற
    சொர்கத்தைக் காண செடியேறு கின்றாயே
    தர்கமற்ற தேடல் தவம்….(OR)
    தர்கத்தைத் தாண்டல் தவம்….(8)

    தவமாய்த் தவமிருந்து தத்துவங்கள் தேர்ந்து
    சவமாய் சுடுகாடு செல்வீர் -சிவஞானம்
    சிந்திக்க வாராது சித்தம் ஒருமிக்க
    சந்திக்க முந்துவான் சம்பு….(9)

    சம்பு மஹேசனை நம்பியவன் நானென்று
    கும்பிடப் போக வரும்குறுக்கே -ஒன்பது
    வாசலுடற் கோசத்தில் நேசமுறக் காண்போமே
    ஈசனிடம் சாத்தான் இயல்பு….(10)

    இயல்பாய் இருத்தல் இயலாமல் பாடும்
    குயில்கரையும் காகத்தின் கூட்டில் -பயில்வீர்
    பெருக்கெடுக்கும் கங்கையும், பாழான நீரும்
    சிரம்தெளித்துக் கொள்ளும் சமம்….(11)

    சமர்த்தஅவ் ஆன்மனை சிந்தா சனத்தில்
    அமர்த்தி இகபரம் ஆளு -நிமிர்த்த
    முடியாத நாய்வால், மரம்தாவும் மந்தி
    விடியாத நெஞ்சை விலக்கு….(12)

    விலக்க விருப்பம் , விரைந்து நெருங்கும்
    விளக்கம் தெளிவு விடியல் -கலக்கம்
    இனிநமக்(கு) இல்லைநாம் கண்ணனைப் போல
    தனிமரத் தோப்பில் திளைப்பு….(13)

    திளைப்பாய், இளைப்பாய், களைப்பாய் புலனார்
    அலைக்கழிப்பால் ஆயுள் அடைப்பாய் -முலைப்பால்
    அருந்திட மீண்டும் அவனிக்கு வருவாய்
    திருந்திட ஏற்பாய் துறவு….(14)

    துறவில் மரமாய், உறவில் கிளையாய்
    பிரிவில் கனியாய்ப் பழுத்து -நிறைவில்
    நிலைத்திருப்பாய் நெஞ்சமே ஞானக் கடலின்
    அலைக்கரத்தால் மண்தொட்(டு) அகன்று….(15)

    அகன்று விரியும், அணுவாய்க் குறையும்
    உகந்த உறவில் உலவும் -புகன்ற
    மறைகளும் காணா மகத்துவம் நெஞ்ச
    அறைதனில் வாழும் அவன்….(16)

    அவனால் அவனி, அவன்தான் புவனி
    அவனை அவனால் கவனி -அவனே
    வருவான் குருவாய் அறிவைத் தருவான்
    பெருவாய் பரம பதம்….(17)

    பதப்பருக்கை பானை புசிக்கின்ற பூதம்
    முதற்கொண்டிங்(கு) எல்லாமே மாயை -எதற்காக
    அம்மா பசியென்றிங்(கு) ஆலாய்ப் பறக்கின்றாய்
    சும்மா இருக்க சுகம்….(18)

    சுகம்கிடைத்தும் ஓரிடத்தில் சும்மா இராமல்
    நகம்கடித்து நாற்புறமும் நோக்கி -முகம்சுளிப்பாய்
    மேலான பேரின்பம் தோலால் கிடைக்காது
    வேளாண்மை செய்யான்மா வில்….(19)

    வில்லிருந்தும் தோளிருந்தும் வீரம் பிறக்காது
    கள்ளிருந்தும் போதை கிடைக்காது -உள்ளிருக்கும்
    ஆன்மனே ஆண்மை அவனெழுச்சி சம்போகம்
    ஊன்மனங்கள் சோரும் உறுப்பு….(20)

    உறுப்பதற்கு ஞானம், உரைப்பது மோனம்
    பிறப்பிறப்(பு) இல்லா புருஷன் -கருப்பொருளாய்
    சக்தியவள் , அன்பில் சிவனவன், பாலில்
    யுக்தியிலாண் பெண்ணாம் அது….(21)

    அதுவாக ஓர்நாள் ருதுவாகும் ஆன்மா
    அதுவரை ஐம்புலனை ஆள்வாய் -கதையல்ல
    கற்பனை மாயையைக் கட்டக் களித்துடுவான்
    அற்பனும் அக்குடையை ஆண்டு….(22)

    ஆண்டோனும் ஆண்டியும் மாண்டபின் மீண்டுமிங்கு
    ஆண்டியாய் ஆண்டோனாய் ஆகிடுவர் -வேண்டாமே
    வேஷமிது அஞ்ஞானம் வேதாந்த கும்பலின்
    பாஷையில் கோவிந்தா போடு….(23)

    போடுவதை உண்ணாது போயின்ப வேட்டையில்
    ஆடியிரை ஆகி அனல்சுடு -காடுவர
    அய்யோ எனக்கூவ அய்யோ மணவாளன்
    கொய்யா(து) இருப்பானா கூறு….(24)

    கூறிடும் கீதை குரான்பைபிள் எல்லாமே
    போரிட ஐம்புலன் போகுமென்று -சாறான்மா
    விட்டிந்த சக்கையாம் கட்டையைப் பேணுகிற
    மட்டிங்கு ஜீவனுக்கு மண்….(25)

    மண்ணோடு மண்ணாகும் மேனியை மெய்யென்று
    உன்னோடு சேர்த்து உழலாதே -பெண்ணோடு
    ஆணாகும் பேரின்ப ஆன்மா அசலாம்
    நானாகும் தோற்றம் நகல்….(26)

    நகிலைப் புகழ்ந்து முகில்குழலைப் பாடி
    துகிலணி மாதர் துணையே -புகலென்று
    வீழ்ந்து வணங்காதே தாழ்ந்து துதிக்காதே
    ஆழ்ந்திரு ஆன்மாவில் வாழ்ந்து….(27)

    வாழ்க்கையில் வென்றென்ன வாரிக் குவித்தென்ன
    சீழ்க்கை அடித்து சிலிர்த்தென்ன -ஊழ்பையன்
    எள்ளி நகையாடி ஏய்ப்பது கேட்கிலையோ
    பள்ளி எழுந்திருப் பாய்….(28)

    பாயில் படுத்து பணியாய் புணர்ந்திட
    நோயாய் வயோதிகம் நேர்ந்ததே -காயை
    தனியாய்த் தவத்தில் பிணிமூப்(பு) இராது
    கனியாக்கும் வித்தையைக் கல்….(29)

    கல்வியா செல்வமா கேட்போர்க்கு வீரமாய்
    சொல்லுவாய் ஆன்ம சுதந்திரத்தை -அல்லலாய்
    பாரமாகி மூப்பில் பிணியுற்ற வேளையில்

    வீரமா கோழைக்கு வாய்ப்பு…(30)

    வாய்க்கரிசி போட்டவாய் மாய்ந்தவுயிர் போகும்முன்
    வாய்க்கு ருசியாய் விருந்துண்ணும் -வாய்க்குவாய்
    பேராண்மை போற்றுவர் பத்தாம்நாள் தூற்றுவர்
    ஓரான்மா தானுன் உறவு….(31)

    உறவுக்குத் தேவை உருவும் திருவும்
    கறவைக்குப் பின்லாடம் காலில் -பறவைக்கு
    உள்ள சுதந்திரமும் இல்லை, சிறகுவிரி
    கள்ளத் தனத்திலென்ன கற்பு….(32)

    கற்பூர வாசம் கழுதை அறியுமா
    விற்பனைக்கு வந்தாலும் வீடுபெறும் -நற்கதியை
    நெஞ்சமது ஏற்காது வஞ்சக மாயைகை
    அஞ்சுவிரல் கோர்க்கும் அசடு….(33)

    அசடுக்கு உண்டு அடைக்கும்தாள் வாழ்க்கை
    கசடற கற்றுக் கொடுத்தும் -முசுடாய்
    கதவைத் திறக்காது, காற்றாக ஞானப்
    பதவி வரப்போடும் பூட்டு….(34)
    பூட்டாத நெஞ்சக வீட்டாசை வாயிலில்
    கூட்டைம் புலன்களே காவலாம் -கோட்டான்கள்
    ஆண்டவன் வேடத்தில் ஆளை மயக்கிடும்
    வேண்டாமை வேண்டல் விதி….(35)

    விதியை ஜெயிக்க மதியின் முயற்சி
    நதியை குடத்தில் நிரப்பல் -எதையும்
    புதிதாய்ப் பழகேல் பழயன போற்று
    உதவிக்கு உபநிடதம் உண்டு….(36)

    உண்டாகி உண்டுமிழும் குண்டாகி, வேதக்கற்
    கண்டாகி, வேதாந்த சிண்டாகி -தண்டாகி
    செண்டாகி, முண்டகத்து வண்டாகி ஜீவான்மா
    ரெண்டாகி வந்துபோகும் பண்டு….(37)

    பண்டமாய் பாத்திரமாய் உண்டவனாய் ஜீரணிப்பாய்
    பிண்டமாய் மோட்சமாய் பித்ருவாய் -எண்டிசையாய்
    பூதமாய் புல்பூண்டாய் யாதுமாய் உள்ளதாய்
    ஆதலே ஆன்மீக ஆய்வு….(38)

    ஆய்ந்தரிய ஆன்மா அவரைக்காய் அல்லவே
    மேய்ந்தழியும் ஐம்புல மாடுகளை -சாய்ந்திருந்து
    வேடிக்கைப் பார்த்திடும் வேதாந்த பட்சியாம்
    பாடிக்கை கோர்த்துப் பற….(39)

    பறந்திடும் ஆவி ,பிறந்திறக்கும் மேனி
    மறந்திடும் மாயமனக் கூனி -நிரந்தரம்
    ஒன்றந்த ஆன்மனுடன் ஒன்றி இருத்தலே
    கன்றிந்த ஜீவனுக்கு காப்பு….(40)

     

     

    Share
  • சீதாயணம் நாடகப் படக்கதை – 1 ​9​

     

     

    சி. ஜெயபாரதன், கனடா

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    சீதாயணம் படக்கதை -19​

     

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு :  வையவன்

    ஓவியம் :  ஓவித்தமிழ்

     
    jay1
     
    jay2
    தகவல் :

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

    3.  Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

    6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/  [நெஞ்சின் அலைகள்]​

    8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • ராமன் வரும் வரை காத்திரு – முடிவுரை

        ராமஸ்வாமி ஸம்பத்

                                                                         முடிவுரை

    ”ஒரு எழுத்தாளர் கதையை எழுத ஆரம்பித்தபின் அக்கதையே அவரை ஆட்கொண்டு தன்போக்கில் அவரை எழுதவைக்கும்” என்று பேராசிரியர் கல்கி அவர்கள் ஒரு சந்தர்ப்பத்தில் கூறினார். அதற்கு தன் அனுபவத்தையே மேற்கோளாகக் காட்டினார். ‘சிவகாமியின் சபதம்’ என்னும் வரலாற்று நெடுங்கதையை அவர் எழுத ஆரம்பித்தபோது நாகநந்தியெனும் பாத்திரத்தை ஒரு வழிப்போக்கனாகத்தான் அறிமுகம் செய்ய இருந்தாராம். ஆனால் கதை உருவெடுக்கும்போது நாகநந்தி ஒரு முக்கிய கதாபாத்திரமாகப் பரிணமித்து புலிகேசியின் அண்ணன் நீலகேசியாக மாறிவிட்டாராம். அதேபோல் ‘பொன்னியின் செல்வன்’ எனும் வரலாற்று நவீனத்தில் சேந்தனமுதன் என்னும் பாத்திரம் தஞ்சைத் தனிக்குளத்தார் ஆலயத்தில் புஷ்பகைங்கர்யம் செய்பவனாகத் துவங்கி இறுதியில் செம்பியன் மாதேவியாரின் ‘திருவயிறு உதித்த’ மதுராந்தக உத்தம சோழராக மாறிவிட்டதும் தன்னை மீறிய செயல் எனக்குறிப்பிட்டார் கல்கி   அதே நவீனத்தில் அவர் பிற்காலத்தில் ராஜராஜ சோழன் எனப்புகழ்பெற்ற அருள்மொழி வர்மன் தனக்கு எல்லாரும் மிக்க விரும்பி அளித்த மகுடத்தைத் திரஸ்கரித்து அதனை மதுராந்தகனுக்கு சூட்டியதை சிலாகித்து அந்த இறுதிப் பகுதிக்கு ‘தியாகசிகரம்’ என்று தலைப்பினை அளித்திருந்தார். பேராசிரியரின்  நோக்கம் அருள்மொழியின் வரலாற்றுப் புகழ்பெற்ற தியாகம் வாசகர்களின் மனத்தில் நிலைக்க வேண்டும் என்பதே. ஆனால் வாசகர்களின் மனத்தில் நிலை பெற்றது என்னவோ வல்லவரையன் வந்தியத்தேவன் எனும் பாத்திரமே.

    ‘ராமன் வரும் வரை காத்திரு…’ எனும் இத்தொடரை எளியேன் எழுத நினைத்தபோது ராமாயண காவியத்தில் எத்தனை பாத்திரங்கள் அவனுக்காகவும் ராமகாரியத்தில் உதவுவதற்காகவும் காத்திருந்தன என்பதனை ஒரு பட்டியல் போட்டு இரண்டு அல்லது மூன்று பகுதிகளில் முடித்துவிடலாம் எனக்கருதித் தொடங்கினேன். ஆனால் அது என் கைமீறி பதினைந்து (இந்த முடிவுரையையும் சேர்த்து) பகுதிகளில் கிட்டத்தட்ட மொத்த ராமகாதையையே சொல்ல வைத்துவிட்டது. இது ஸ்ரீ ஸீதாராமன் கிருபையால் மட்டுமே சாத்தியம். ஏனெனில், நான் பண்டிதன் அல்ல. வால்மீகி ராமாயணத்தில் சுந்தர காண்டம் முழுவதையும் மற்றும் ஏனைய காண்டங்களில் சில சர்கங்களை மட்டும் படித்தவன் நான. அதேபோல் கம்ப ராமாயணத்தையும் முழுமையாகப் படித்ததில்லை. மூதறிஞர் ராஜாஜி அவர்களின் ‘சக்ரவர்த்தி திருமகன்’, மற்றும் ‘Ramayana’ என்ற நூல்களை முழுமையாகப் பலமுறை படித்திருக்கிறேன். மற்றபடி பிரபல பெளராணிகர்களான அண்ணாசாமி பாகவதர், எம்பார் விஜயராகவாசாரியார், சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர், டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரி, தூப்புல் லக்ஷ்மிநரசிம்மன், வேளுக்குடி கிருஷ்ணன் ஆகியோரது தமிழ் உபன்யாசங்களையும் ஸ்ரீமான் ஸ்ரீபாஷ்யம் அப்பாலாசார்யுலு, மல்லாடி சந்திரசேகர சாஸ்திரி, சாகண்டி கோடீஸ்வரராவ், சாமவேதம் ஷண்முக சர்மா முதலானோரின் தெலுங்கு காலக்ஷேபங்களையும் கேட்ட பாக்கியத்தால் ராமாயணத்தில் புதைந்திருக்கும் தர்ம சூக்ஷ்மங்களையும் ஆன்மீக ரஹஸ்யங்களையும் ஓரளவுக்குத் தெரிந்து கொண்டேன். ”ஒருவன் தர்மத்தின் மார்கத்தில் நடந்தால் மிருகங்கள், பட்சிகள், ஏன் அணில் கூட, அவனுக்கு உதவிக்கரம் நீட்டும். அறநெறி வாழ்க்கைக்கு புறம்பாக நடக்கும் ஒருவனை அவன் உடன்பிறப்பு கூட கைவிட்டுவிடுவான்”  என்று ராஜாஜி அவர்கள் ராமாயண சூக்ஷ்மத்தை அழகாக எடுத்துக் காட்டியுள்ளார்.

    இந்த தொடரை உன்னிப்பாகப் படித்துவந்த இனிய நண்பர் லக்ஷ்மிநாராயணன் ஒரு நாள் என்னிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு ஸ்ரீ தியாகராஜரின் ‘மோஹன ராமா’ எனும் மோஹன ராக கீர்த்தனையில் வரும் சரணத்தைச் சுட்டிக்காட்டினார். அதன்படி ராமனின் திருமேனி அழகைக் காண எவரெவரெல்லாம் பூமியில் பிறந்தார்கள் என்று தியாகராஜர் இவ்வாறு கூறுகிறார்: ‘தரமனுஜாவதார மஹிம வினி சுர கின்னர கிம்புருஷ வித்யாதர சுரபதி விகி விபாகர சந்திராதுலு கரகுச்சு பிரேமதோ வர மிருக பக்ஷி வானர தனுவலசே கிரினி வேலயு ஸீதாவர! சிரகாலனு குறி தப்பக மெய்மறச்சி ஸேவிசிரி…’ [(ராமா) உன் உருவம் விவரிக்க முடியாத அளவில் என்னை ஈர்க்கிறது. ஸீதை மணாளனே! உன்னுடைய மானுட ரூபத்தின் மஹிமையைக் கேட்டறிந்து, ஆயிரக்கணக்கான தேவர்கள், கின்னரர்கள், கிம்புருஷர்கள், வித்யாதரர்கள், பிரமன், இந்திரன், சூர்யன், சந்திரன் முதலானோர் பொங்கிவழியும் அன்போடு தாங்களாகவே இப்புவியில் விதவிதமான மிருகங்களாகவும், பறவைகளாகவும் வானரர்களாகவும் அவதரித்து உன் ரூப லாவண்யத்தை குறி தப்பாமல் இமை கொட்டாமல் பலகாலம் கண்டு மெய்மறந்து ஸேவித்து மகிழ்ந்தார்கள் அல்லவா….] ‘பும்ஸாம் மோஹன ரூபஹ’ என்று ராமனின் எழிலை சான்றோர்கள் வர்ணிப்பார்கள். அதாவது ஆண்களும் ‘ஆஹா! நாம் பெண்களாகப் பிறந்து இவ்வழகனை மணம் புரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று ராமனின் அழகை ஆராதிப்பார்களாம்!  செம்மொழியாம் தமிழில் இனிய ராம நாடகக் கீர்த்தனைகளை இயற்றிய அருணாசல கவிராயர் ராமனின் திவ்ய ரூபத்தை முதன்முதலாகக் கண்ட விபீஷணனின் மனநிலையை இவ்வாறு வர்ணிக்கின்றார்: “ராமனைக் கண்ணாறக் கண்டானே, விபீஷணன் தன் மாமுடிமேல் வைத்துக் கொண்டானே!” அப்பேற்பட்ட மயக்கும் எழில் ராமனுடையது.

    இருபதிற்கும் மேற்பட்ட பாத்திரங்கள் மற்றும் அசேதனப் பொருட்கள் ராமன் வரும் வரை காத்திருந்ததைக் கண்டோம். இவற்றிற்கும் மேலாக எனது பட்டியலில் இரு பெரும் பாத்திரங்களான ராவண கும்பகர்ணர்கள் கூட ராமன் வரும் வரை காத்திருந்தார்கள் என்பது சேர்க்கப்பட வேண்டும். பண்டிதர்கள் இக்கருத்தை ஒப்புக் கொள்வார்களோ என்னவோ? சனகர், சனந்தனர், சனாதனர் மற்றும் சனத்ஜாதர் என்னும் பிரம புத்திரர்களான யோகிகளின் சாபத்தால் பூமியில் பிறப்பெடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்தினால் மும்முறை திருமால்மீது வைரபாவத்துடன் புவியில் தோன்றிய ஜயன் விஜயன் என்னும் வைகுந்த காவலாளர்கள் தமது இரண்டாம் ஜன்மத்தில் ராவண கும்பகர்ணர்களாக விளங்கி திருமாலின் மானிட அவதாரமான ராமன் வரும் வரை காத்திருந்து அவன் கையால் விடுதலை பெற்றனர் அல்லவா?

    கவியரசர் கண்ணதாசன் ‘வானம்பாடி’ என்னும் திரைப்படத்திற்காக “கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்” என்ற ஓர் பாடலை காதலியைப் பிரிந்த காதலனின் புலம்பலாக இயற்றினார். திருமால் ராமன் எனும் ஓர் மானிடனாக அவதரித்து இருமுறை தன் இனிய மனைவி ஸீதையை பிரிந்து பட்ட துயரத்தை அப்பாடல் பிரதிபலித்தது.

    ’வேதம் தமிழ் செய்த மாறன் குருகூர் சடகோபன்‘ என்று பக்தர்களால் போற்றப்படும் நம்மாழ்வார் இவ்வாறு கூறுவார்:

    நாட்டில் பிறந்தவர் நாரணற்கு ஆள் அன்றி ஆவரோ

    நாட்டில் பிறந்து படாதன பட்டு மனிசர்க்கா

    நாட்டை நலியும் அரக்கரை நாடித் தடிந்திட்டு

    நாட்டை அளித்து உய்யச் செய்து நடந்தமை கேட்டுமே?

    [கர்மங்களுக்குக் கட்டுப்படாத திருமால் இராமனாக அவதரித்த பொழுது படாத பாடுபட்டு நல்லோர்களைத் துன்புறுத்தும் அரக்கர்களைக் கொன்று நாட்டாரைக் காப்பாற்றினான். தன்னடி சோதிக்கு எழுந்தருளிய பொழுது அவன் அவர்களைத் தன்னுடன் அழைத்துப்போனான். இதைக் கேட்டபின் நாராயணனுக்கு ஆட்படுவதை விட்டு வேறு யாருக்கு ஆட்படுவார்கள்?]

    மானிடர் தாம் படும் துயரங்களை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதனை எடுத்துக்காட்டவே திருமால் ராமனாக அவதரித்தார் என்பது எளியேனின் கருத்து. ராவண வதம் ஒரு வியாஜமே. ரகு குல திலகனாக சக்ரவர்த்தித் திருமகனாகத் திகழ்ந்தாலும் ஒரு சாமான்யன் போல் எல்லா கொடுமைகளுக்கும் தன்னை ஆட்படுத்திக்கொண்டான் ராமன். ஆசை காட்டி மோசம் செய்வது  (முதல் நாள் அரியணை, அடுத்த நாள் அரண்யம்), ஒருவன் மனைவியை அவனிடமிருந்து பிரிப்பது போன்றவை எந்த மானிடனுக்கும் இழைக்கப்படும் இரு பெரும் அநீதிகளாகும். அப்படிபட்ட சந்தர்ப்பங்களில் ராமன் நடந்துகொண்டவிதம் மானிடர் அனவருக்கும் ஒரு பாடமாகும். அறநெறியில் வாழ்க்கை நடத்துவது எவ்வளவு கடினமானாலும், அதனை எவ்வாறு சாதிப்பது என்பதற்கு ராமனின் வரலாறே அத்தாட்சி.

    காவிய ராமனைக் குறை கூறுவோருக்கு, தாளும் தடக்கையும் கூப்பி அடியேன் விடுக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் அவனிடம் குறைகண்டால் அதற்கு பொறுப்பு அக்கதாநாயகனைப் படைத்த வால்மீகியே என்பதனைப் புரிந்து கொள்ளவேண்டும். ராமனை தெய்வத்தின் அவதாரமாகக் கருதினால், அந்த தெய்வத்தைக் குறை கூற நமக்கு அருகதை இல்லை என்பதையும் உணரவேண்டும். வாலி வதமாகட்டும், ஸீதையை நாடுகடத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஆகட்டும், ராமனுக்கு ஏற்பட்ட பழிகளின் பிண்ணனியில் பல சூக்ஷ்மங்கள் மறைந்திருக்கின்றன என்பதற்குப் புராணங்களில் சான்றுகள் உள்ளன. அவற்றைத் தீவிரமாக ஆலோசிக்காமல் வெறும் குப்பையெனக் கருதுவது ராமனுக்குச் செய்யும் அநீதியாகும். “தும்பைப் பூவை ஒத்த வெண்பட்டில் ஒரு சிறு கறைபட்டாலும் பார்ப்பவற்கு அந்த கறைதான் பளிச்சென்று தெரியும்” என்று ராஜாஜி கூறுவார். ஆகவே ராமனின் தர்மசங்கடங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவ்வவதார புருஷனுக்கு எவருடைய – முக்கியமாக அடியேனுடைய – வக்காலத்தும் வாங்கவேண்டிய அவசியம் கட்டாயமாக இல்லை. அதே நேரத்தில் யுக தர்மங்களை மறந்து நமது சிற்றறிவுடன் அம்மஹாபுருஷனை எளிதாக எடைபோடும் devil’s advocate ஆகவும் நாம் திகழக்கூடாது.

    ஆந்திரப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், முனைவர் (அவர் ஒரு முனிவரைப் போன்றவர் கூட) கே. ஆர். ஸ்ரீனிவாச ஐயங்கார், ஒருமுறை நாகர்ஜுனா பல்கலைக் கழகத்தில் ‘Irony’ (புரியாத புதிர்) என்ற தலைப்பில் உரையாற்றும்போது கீழ்கண்டவாறு கூறினார்:

    …..ஒருநாள் ராஜாராமன் அன்றைய அரசு அலுவல்களை முடித்தபின், அந்தப்புரத்திற்கு வருகிறான். நிறை மாதத்தில் இருக்கும் பட்டமஹிஷி ஸீதையின் பேரழகு அவனை மெய்மறக்கச் செய்கிறது. உடனே, ‘என் கண்ணே! உனக்கு ஒரு வரம் தர ஆசைப்படுகிறேன். கேள்’ என்கிறான். ‘ஆருயிரே! எனக்கு மீண்டும் கானகத்தில் முனிவர்களின் ஆசிரமத்திற்குச் செல்ல விருப்பம்’ என்கிறாள் ஸீதை. அவளிடம் இல்லாதது என்ன? மாயப் பொன்மானுக்கு ஆசைபட்டு அதனால் ஏற்பட்ட பிரிவாற்றாமையை அவள் மறந்திருப்பாளா? ராமன் ஏன் ஸீதைக்கு வரம் கொடுக்க விரும்ப வேண்டும்? சூலுற்றிருக்கும் ஸீதை ஏன் கானகம் செல்ல ஆசைப்பட வேண்டும்? இக்கேள்விகளை விடுவிக்க முடியாத புதிர்கள் அன்றி வேறெவ்வாறு கொள்வது?

    லண்டன் மாநகரில் உள்ள ஷேக்ஸ்பியர் நாடக மன்றத்தில் அன்னார் படைத்த ‘ஒதெல்லோ’  நாடகம் வெற்றிகரமாக நாட்கணக்கில் நடந்து கொண்டிருந்தது. அந்த நாடகத்தின் நாயக நாயகி பாத்திரங்களில் நடித்தவர்கள் இயல் வாழ்க்கையில் கணவன் மனைவி ஆவர். நாடகத்தின் உச்சகட்டத்தில் ஒதெல்லோ தன் மனைவி டெஸ்டிமோனாவின் கற்பினை சந்தேகித்து அவள் கழுத்தினை நெரிக்க முற்படவேண்டும். ஒருநாள், தன் பாத்திரத்தில் ஒன்றிப்போன அவன் மெய்யாகவே அவள் கழுத்தை பலத்துடன் நெரிக்க, அவள் மெல்லிய குரலில் ’இது நாடகம் என்பதை மறந்துவிட்டீரா?’ என்று கேட்க அவன் சுதாரித்துக் கொள்கிறான். நாடகம் முடிந்து வீடு திரும்பும்போது கணவன் மனைவியிடம், ‘அன்பே உன்னை வலிக்க வலிக்க நெரித்து விட்டேனா?’ என்று கேட்கிறான்.

    ஆதிதம்பதிகளான் லக்ஷ்மி நாராயணர் புவியில் ராமன் ஸீதையாக அவதரித்து நம் வாழ்க்கை நெறியை செப்பனிடுவதற்காக ஒரு நாடகத்தினைச் சிறப்பாக நடத்திவிட்டு வைகுந்தம் ஏகியுள்ளனர். இதைப் புரிந்து கொண்டால் நாம் ’ராமன் ஸீதையிடம் கடுமையாக நடந்தான்’ என்று குறை சொல்ல இயலாது…..

    கைகேயி பாத்திரத்தைப் பற்றி ஒரு விளக்கம். ஈன்ற கெளசலையைவிட ராமன்மேல் கைகேயி அதீதமான அன்பைப் பொழிந்தவள். தன் மகன் பரதன்கூட அவளுக்கு இரண்டாம் பட்சம் தான். அப்படிப்பட்டவள் எப்படி மனம் மாறி ராமன் நாடு கடத்தப்பட வேண்டும் எனப் பிடிவாதம் பிடித்தாள்? சேடியான மந்திரையின் துர்ப்போதனையால் மட்டும் அத்தகைய மனமாற்றம் ஏற்பட்டிருக்குமா? இக்கேள்விகள் என் மனத்தில் பிறந்து ஆண்டாண்டுகளாக என்னை வாட்டி வதைத்தவாறு இருந்தன. அவற்றிற்கு பதில் கிடைக்காமல் போகவில்லை. ஸப்தகிரி என்னும் தூர்தர்ஷன் தெலுங்குத் தொலைகாட்சியில் (நமது பொதிகை போன்றது) பல ஆண்டுகளுக்கு முன் ஓளிபரப்பான கைகேயியைப் பற்றிய ஒரு ஓரங்க நாடகம் எனக்கு அந்த பதிலைத் தந்தது. அதன்படி கைகேயி ஒரு ஜோடிப்பறவைகளின் சம்பாஷனையின் மூலம் அடுத்த பதினான்கு ஆண்டுகட்கு அயோத்தி அரியணையில் யார் அமர்ந்திருந்தாலும் அவர் மாள்வார் என்ற முன்கூட்டிய தகவலைத் தெரிந்து கொண்டு எவ்வகையிலாவது ராமன் அரியணை ஏறுவதைத் தடுக்க வேண்டும் எனத்தீர்மானிக்கிறாள்.

    மற்றொரு புராணத் தகவல்படி, தண்டகாரண்யம் வரை தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்த ராவணன் அயோத்தியை ஆக்கிரமிக்க தசரதனுடன் போர் புரிந்தபோது கைகேயி தன் கணவனுக்கு தேரோட்டியாக இருந்தாள். அப்போரில் ராவணன் எய்த அம்பினால் தசரதன் மூர்ச்சை அடைந்தான். அவன் மாண்டுவிட்டான் எனக்கருதி போர்க்களத்தை நீங்க நினைத்த ராவணன்மீது கைகேயி ஒரு சபதம் செய்தாள். “இலங்கை அரசனே! எம் ரகு வம்சத்தில் உதிக்கப்போகும் ஒருவனால் உனக்கு மரணம் நிச்சயம்” என்று சூளுரைத்தாள். ராவணன் சிரித்து, “மலட்டுத் தன்மையினால் வாடிய உன் கணவன் மாண்டுவிட்டான். இனி அவனுக்கு ஏது வாரிசு?” எனப்பகர்ந்து அங்கிருந்து அகன்றான். இது நடந்து பல ஆண்டுகளுக்குப்பின் புத்திர காமேஷ்டி யாகத்தின் மூலம் பிறந்த ராமன் தன் சபதத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் அவனை வனவாசம் செய்ய வைத்தாள் கைகேயி. இதனை எனக்குக் கூறிய ஒரு தெலுங்கு பெளராணிகர், “ராமனின் பிறப்பு ரகசியத்தை அறிந்தவர்களில் கைகேயியும் ஒருவள்”  என்ற தகவலையும் அளித்தார். ஆக, ராமகாரியத்திற்கு உதவியவர்களில் கைகேயி முதன்மையானவள்.

    இத்தொடரில் ஆங்காங்கு காணப்படும் கம்பனின் சொல்லோவியங்களின் தெளிவுரைகள் பேராசிரியர் முனைவர் பூவண்ணனின் கைவண்ணம். அதேபோல் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு முனைவர் மதி ஸ்ரீனிவாசன் அவர்களின் தெளிவுரைகள் கைகொடுத்தன. சுந்தர காண்டப் பகுதியில் வரும் ஒரு வடமொழி சுலோகத்திற்கான விளக்கத்தை திரு மா.கி. வெங்கடராமன் அளித்துள்ளார். இவர்களுக்கு அடியேன் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

    ’ராமன் வரும் வரை காத்திரு…’ என்ற தலைப்போடு கூடிய இத்தொடரை மிக்க விருப்பத்துடன் காத்திருந்து படித்துவந்த கீதா சாம்பசிவம், பார்வதி ராமச்சந்திரன், நந்திதா, தஞ்சை வி. கோபாலன், தமிழ்த்தேனீ, ஷைலஜா, சதீஷ் குமார் டோக்ரா, மற்றும் ‘வல்லமை’ ஆசிரியர் பவள சங்கரி போன்ற மேதைகளும் மனத்துக்கு இனியவர்களும் தங்கள் பின்னூட்டங்களின் மூலம் மேலும் பல அரிய தகவல்களை நம்மிடையே பகிர்ந்து கொண்டது நான் பெற்ற வரமே. அவர்களுக்கு என் நன்றி. ஸ்ரீ ஸீதாராமனின் பேரருள் அவர்கள்மீதும் ‘வல்லமை’ குழுமத்தின்மீதும் அல்லும் பகலும் அனவரதமும் பொழிய வேண்டும் என்பதே என் பிரார்த்தனை.

    ஒருமுறை அடியேனின் ஆசான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஹனுமத் காளி வர பிரஸாத பாபுஜி மஹராஜ் அவர்களை ”இப்புவியில் ராமராஜ்யம் மீண்டும் மலருமா?” என்று கேட்டபோது அவர் தனக்கே உரிய மந்தஹாசத்துடன், “ஓஹோ! உனக்கு அப்படி ஒரு ஆசை இருக்கிறதா? அப்படிப்பட்ட பரிபாலனம் வேண்டுமானால், ஸ்ரீ ராமபிரானே மறுபடி அவதரிக்க வேண்டும். அல்லது ஒவ்வொருவரும் அவன் காட்டிய அறநெறியில் தம்தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும். இவ்விரண்டும் சாத்தியமா? ’இல்லை’ என்பதே என் முடிவு. ஒரே ஒரு வழி உண்டு. ஸ்ரீ ராமனின் கருணைக்காக உன் ஏக்கம் உச்ச நிலையை அடையவேண்டும். ஆகவே ராமன் கருணைக்காகக் காத்திரு” என்றார்.

    நாமும் ஸ்ரீ ஸீதாராமனின் கருணைக்காகக் காத்திருப்போம்!

             நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

        தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே

        சென்மமும் மரணமும் இன்றித் தீருமே

        இம்மையே ‘இராம’ என்ற இரண்டு எழுத்தினால்.

                             —கம்ப ராமாயண தனியன் 

       

     

    Share
  • இன்னும் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..

    கவிஞர் காவிரி மைந்தன்

    தஞ்சை ராமையாதாஸ் – பாடல் 

     

    கோபதாபங்களின் உணர்ச்சிக் குவியலாக மனித மனம்! அதுவும்கவிஞர்கள் உணர்வுகளின் சூறாவளியோடு தங்கள்வெளிப்பாடுகளை தருகின்றவர்களாக! வால்மீகிராமாயணத்தை வாசித்த கம்பன் – அதனைத் தமிழில்மொழிபெயர்க்கிறான் என்றால் அதுவும் 12000 செய்யுள்களாக..அவன் அந்தந்தப் பாத்திரங்களாய் மாறி அல்லவா சந்தக்கவிதைகளாக தந்த தமிழ் அமுதம் கம்பனின் உள்ளத்தைஉணரவைக்குதன்றோ?

    பாட்டுக்கொரு புலவன் பாரதியார் – வெகுண்டெழுந்துவெஞ்சினம் கொண்டு அந்நியர் ஆட்சிக்கு எதிராக சுதந்திர கீதமுழக்கங்களைத் தந்தானே.. அதுவும் உணர்வுகளின்உச்சக்கட்டம்தானே!

     

    பாவேந்தர் பாரதிதாசன் – தூங்கிக்கிடந்த தமிழினத்தைத்தட்டியெழுப்பி புரட்சிக் கருத்துக்களை உத்வேகத்துடன்ஊட்டிவளர்த்து மொழி, இன உணர்வுகளின் முன்னணித்தூதுவனாய் காட்சி தந்தானே – மறுப்பவர் உண்டோ?

     

    மலைக்கள்ளன் திரைப்படத்திற்காக ஒரு பாடல் எழுதத்தொடங்கிய போது.. இசையமைப்பாளருக்கும்பாடலாசிரியருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளால் தஞ்சைராமையாதாஸ் இயற்றிய பல்லவி மட்டுமே நமக்குக் கிடைக்கப்பெற, வேற்று வழியின்றி அங்கிருந்த கோவை ஐயா முத்துஎன்னும் மற்றொரு கவிஞரைக் கொண்டு சரணங்கள்வரையப்பட்டதை என்ன சொல்வது? முன்னர் அமைந்த பல்லவிஇதோ..

    தொடரும் சரணங்கள் பாணி தனி..

     

    இரண்டையும் இணைத்து இசையமைக்கப்பட்ட பாடல்!

     

    காலங்கள் மாறி வந்த போதும் இந்தப் பாடலில் உள்ளகருத்துக்கள் சோடை போகாமல்.. அதுவும் பல்லவி இந்தசமூகத்தின் புரையோடிக்கிடக்கும் அயோக்கியர்களின் மீதுசாட்டையடியாய் விழுகிறது!

     

    அரசியல் செய்யும் கபளீகரங்களைப் பட்டவர்த்தனமாய் கேட்கும்கேள்வி.. காலங்களைத் தொடர்ந்து எதிரொலியாய் நம்காதுகளில் விழுகிறது!

     

    அடுத்து எழுதிய ஐயா முத்து அவர்களின் வரிகள்ஆட்சியிலிருப்பவர் செய்ய வேண்டிய திட்டங்கள் எவை என்றுபட்டியலிட்டுக்காட்டுகிறது! தேர்தல் அறிக்கையைநினைவூட்டும் சரணங்கள்.. எம்.ஜி.ஆர் பானுமதி நடிப்பில்..கலைஞர் கருணாநிதி வசனத்தில் வெற்றிபெற்ற திரைப்படம் -மலைக்கள்ளன்!

     

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்……

    படம : மலை கள்ளன்
    இசை : SM. சுப்பையாஹ் நாய்டு
    பாடல் : ராமையாஹ் தாஸ்
    பாடியவர் : T.M.S.

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

    சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
    சமயம் பார்த்துப் பல வகையிலும் கொள்ளை அடிக்கிறார்
    பக்தனைப் போலவே பகல் வேஷம் காட்டி
    பாமர மக்களை வலையினில் மாட்டி

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

    தெருவெங்கும் பள்ளிகள் கட்டுவோம் (2) –
    கல்விதெரியாத பேர்களே இல்லாமல் செய்வோம்
    கருத்தாகப் பலதொழில் பயிலுவோம் (2) –
    குடிகஞ்சிக்கில்லை என்ற சொல்லினைப் போக்குவோம்
    இன்னும்

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

    ஆளுக்கொரு வீடு கட்டுவோம் (2) –
    அதில்ஆய கலைகளை சீராகப் பயில்வோம்
    கேளிக்கையாகவே நாளிதைப் போக்கிட
    கேள்வியும் ஞானமும் ஒன்றாகப் போற்றுவோம்
    இன்னும்

    எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
    இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே.

     
    http://www.youtube.com/watch?v=FwxtJ4YJ1Ec
    http://www.youtube.com/watch?v=FwxtJ4YJ1Ec

     
     
     
     
     
     
    எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்…
    Share