கீதா மதிவாணன்

images

அதோ… குளிரவன்!
தூரத்து மலைமுகட்டு மரங்களுக்குப் பின்னே
மெளனமாய்ப் பதுங்கி நழுவிப் போவதெங்கே?

வசந்தமென்னும் பருவப்பெண் பச்சையம் பூசி
ஓடைக் கண்ணாடியில் ஒப்பனை செய்வதை
வழியில் பார்த்தவன், வெளிறிய தன் முகத்தை
வேறுதிசையில் திருப்பிக்கொண்டு
திரும்பிப் பாராமல் போகிறான்.

ஆனால் எனக்குத் தெரியவேண்டும்
அவன் சென்ற வழி எதுவென்று…
அவனைக் கண்டுபிடிக்க இதுவரை
எவரும் முயன்றாராவென்று…

இடிமுழக்கத்தால் விண்ணுக்கு இழுத்துவரப்பட்டு
மேகப் பஞ்சணையில் துஞ்சவைக்கப்பட்டிருக்கிறானோ?
சமுத்திரத்துக்குள் சென்றிருப்பானாயின்
சதிராடும் அலைகளால் சுழற்றியெறியப்பட்டிருப்பானோ?

அலைக்கழிக்கப்பட்டு ஆறாத ரணங்களுடன்
உயிர் ஊசலாடியபடி கரையோரம் ஒதுங்கி
காட்சியளிக்கிறானா மீனவர் எவருக்கேனும்?
ஆளரவமற்றத் தீவொன்றில் அசைவற்று
விறைத்துக் கிடக்கிறானா எங்கேனும்?

சாம்பல் நிறத் தலையைக் கவிழ்ந்தபடி
நித்தமும் சூரியன் மறையும் நீலமலைகளுக்கப்பால்
எவருமறியாப் பொழுதுகளில் சென்று
கல்லறையொன்றைத் தோண்டுகிறானோ?

தன் வெளிர்வண்ண ஆடையுடன்
தானே வெட்டிய கல்லறைக்குழிக்குள்
கரங்களை மார்பில் கோர்த்தபடி படுத்துக்கொண்டு
“என் மறைவுக்காய் கண்ணீர் சிந்துவார் யார்?
மாறாய் மகிழுமே வசந்தத்தின் வருகையால் ஊர்!
என்றெண்ணி மருகுகிறானோ?

ஐயோ… குளிரவனே…
என் கண்கள் சிந்துகின்றனவே கண்ணீர்,
உனக்கு மகிழ்வளிக்கப் போதுமானதா
ஒரு குழந்தையின் கண்ணீர்?
வசந்தம் தொலைவில் வரும்போதே
உன் ஆடைநுனியை இறுகப் பற்றிக்கொண்டு
உன்னை அழைத்தபடியே தொடர்ந்தேன்.
உன் கரங்களில் முத்தமிடுகிறேன்.
உன் வேதனையைப் புரிந்துகொண்டேன்,
தொய்ந்துபோன உன் தலையை இதமாய்த் தடவுகிறேன்.

ஓ…. என்னால் பாட இயலாது…
குளிரவன் இங்கே வெளிறிச் சாகிற வேளையில்
வசந்த கானமிசைத்திட என்னால் எப்படியியலும்?

(Where does the Winter go? By Ethel Turner)

படத்துக்கு நன்றி

http://www.wallpapergang.com/Winter/cold-winter-morning-frost-leaves_11066.html

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *