நான் அறிந்த சிலம்பு – 108 (10.02.14)
மலர் சபா
சாரணரது அறிவுறையைக் கேட்டு, கவுந்தி கூறிய புகழ்மாலை
சாரணர் மொழி கேட்ட
தவத்தில் சிறந்த கவுந்தி
தன் தலை மேல் கைவைத்து வணங்கி,
“காமம், வெகுளி, மயக்கம்
இம்மூன்றையும் அடக்கி வென்ற அருகதேவன்
தம் அருளால் உரைத்த திருமொழி மட்டுமேயல்லாது
பிறமொழிகளை எம் செவிகள் ஏற்காது….
காமனை வென்ற அருகதேவனது
ஆயிரத்தெட்டு நாமங்களைப் போற்றுவதேயல்லாது
வேறொரு நாமத்தை என் நா நவிலாது…
ஐம்புலன்களையும் அடக்கி வென்ற
அருகதேவனின் திருவடிகளை மட்டுமேயல்லாது….
வேறு தேவர்களின் திருவடிகள்
மிக அருகில் இருந்தாலும்
எம் கண்கள் அவற்றைப் பார்க்காது…
அருளும் அறனும் பூண்டு ஒழுகும்
அருகதேவனுக்கேயல்லாது
வேறு எவருக்காகவும்
என் பயனற்ற இவ்வுடல்
பூமியில் பொருந்தி வணங்கிடாது…
அறங்கூறும் அருகதேவனை வணங்குவதற்கேயல்லாது
வேறெந்த தெய்வத்தையும் வணங்குவதற்கு
என் கைகள் குவிந்திடாது…
அருகனின் மலரடிகளை அணிந்திடுமேயல்லாது
வேறு எந்தத் திருவடிகளையும்
என் உச்சியானது அணிந்திடாது…
என்றும் முடிவில்லா இன்பத்தையுடைய
இறைவன் ஓதிய வேதத்தையல்லாது
வேறு எந்த மொழியையும்
என் உள்ளம் ஓதாது..”
இங்ஙனம் அருகதேவனைப்
போற்றித் துதித்தார் கவுந்தியடிகள்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 192 – 207
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html