Blog

  • என்னைப் புகழாதே! (சிறுகதை)

    என்னைப் புகழாதே! (சிறுகதை)

    நிர்மலா ராகவன்

    (`அம்மா! நீ இன்னிக்கு அழகா இருக்கே!’ `அடீ, ஏதாவது வேணுமானா நேரடியா கேளு. இது என்ன கெட்ட வழக்கம், காரியம் ஆகணும்னு ஐஸ் வைக்கிறது!’)

    “இந்தாம்மா. வேண்டியவங்களுக்கெல்லாம் அனுப்பிடு. அழகா அச்சடிச்சிருக்கான்,” என்று அவளுடைய திருமண அழைப்பிதழ் கட்டை அப்பா கொடுத்தபோது, நினைத்தும் பார்த்திருப்பாளா, தொலைபேசியில் எல்லாரையும் அழைத்து, `கல்யாணம் நின்றுவிட்டது!’ என்று சொல்ல நேரிடும் என்று?

    பரிசுப்பொருட்களுடன் எல்லாரும் வந்துவைத்தால், அது வேறு துக்கம்.

    அந்த எண்ணம் உதிக்கையிலேயே, `அப்படி என்ன துக்கம் வந்துவிட்டது இப்போது?’ என்று தன்மீதே ஆத்திரப்பட்டாள் நளினி.

    `ஏதோ, இதுவரைக்கும் காலைச்சுற்றிய பாம்பு கடிக்காமல் விட்டதே’ என்று நிம்மதி அல்லவா அடையவேண்டும்!

    `பாம்பு யார், மணிவண்ணனா? நம் மனம்தான் எத்தனை சீக்கிரம் மாறுகிறது!’ லேசாகச் சிரிப்புகூட வந்தது நளினிக்கு.

    அடேயப்பா! அவனைப்பற்றி நினைக்கும்போதே தான் துடித்த துடிப்பென்ன, தனக்குத்தானே சிரித்துக்கொண்டதும், நிமிடத்துக்கு நிமிடம் கண்ணாடிமுன் நின்று தன் அழகை ரசித்ததும், பாட்டு முணுமுணுத்ததும்!

    முதன்முறையாக அவளைப் பார்த்தபோதே, “நீங்க எப்போ லைப்ரரிக்கு வந்தாலும், ஒங்களுக்குப் பக்கத்திலே எனக்கு இடம் பிடிச்சு வைங்க!” என்று சொல்வதானால், தான் அவரை எவ்வளவு தூரம் கவர்ந்திருக்கவேண்டும் என்ற பெருமைதான் உண்டாயிற்று அவளுக்கு.

    “நளினி! அன்னிக்கு, ஒன் பக்கத்திலே இடம் கேட்டேன். இப்போ, எப்பவும் என் பக்கத்திலேயே இருப்பியான்னு கேக்கத்தோணுது. ஒன் அழகைத் தரிசிச்சுக்கிட்டே இருக்கலாமில்ல?” என்று சினிமா வசனம் பேசினான், ஒரு நாள்.

    “எங்கப்பாகிட்ட வந்து பேசுங்க,” சற்றே நாணியபடி நளினி பதிலளித்தபோது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. அந்த அப்பா `வேண்டாம்’ என்றால் வேறு ஒருவனுக்குக் கழுத்தை நீட்டிவிடுவாளோ?

    “ஒங்கப்பாவைக் கேட்டுக்கிட்டா என்னோட சுத்தினே?”

    எப்போதும் அதிராத குரலில் பேசியவர்! எதற்கு இந்தக் கோபம்?

    அவள் மிரண்டு போனதைப் பார்த்து மணிவண்ணனின் தைரியத்தில் சிறிதளவு திரும்பியது.

    அவள் தோளைப்பற்றி அணைத்துக்கொண்டான். “ஸாரிடா. எங்கே நீ என்னைவிட்டுப் போயிடுவியோங்கிற பயம்,” என்று மன்னிப்பும் கேட்டுக்கொண்டான்.

    அப்படியே ஒருவரை ஒருவர் உராய்ந்தபடி அந்தப் பூங்காவில் நடந்துகொண்டிருந்தபோது அந்தக் குரல் கேட்டது: “ஹலோ, நளினி!”

    “டேய் சங்கர்! நீயா? உன்னைப் பார்த்து எத்தனை வருஷம் ஆச்சு! இந்த ஒலகத்திலேதான் இருக்கியா?” கலகலவென்று சிரித்தாள்.

    மணிவண்ணனின் முகம் சிறுத்தது. `யார் இந்த தடியன்? ஒரு மரியாதைக்காவது எனக்கு ஒரு ஹலோ சொல்லி இருக்கவேண்டாம்?’

    “என்னடா? முந்தி சோனியா இருப்பே. இப்ப ரொம்ப குண்டா ஆயிட்டியே!” உற்சாகமாகப் பொரிந்துதள்ளிய நளினியைக் கண்களைக் குறுக்கிக்கொண்டு பார்த்தான் மணிவண்ணன். சந்தேகமும் பொறாமையும் கொப்புளித்தன அப்பார்வையில்.

    அப்போதுதான் பக்கத்தில் ஒருவன் இருப்பதே நினைவு வந்தவளாக அறிமுகம் செய்ய ஆரம்பித்தாள்: “இது.. சங்கர். நாங்க ரெண்டு பேரும் கிண்டர் கார்டனிலேருந்து பன்னண்டு வருஷம் ஒண்ணாப் படிச்சோம். தமிழ்ச்சங்கத்திலே துடிப்பா இருப்போம். எத்தனை சண்டை போட்டிருக்கோம்! ஞாபகம் இருக்கா, சங்கர்?”

    பேசிக்கொண்டே போனவளை ஓர் அனல் பார்வை பார்த்துவிட்டு, எதிரிலிருந்த எதிரியைப் பார்த்து, “சரி, பாக்கலாம்,” என்று அவள் கையைப் பிடித்து இழுக்காத குறையாக அப்பால் நடந்தான் மணிவண்ணன்.

    பாலியத்தோழனிடம் விடைபெறவும் மறந்து, ஏதோ குற்றம் புரிந்தவள்போல், நிழலாகக் காதலனைத் தொடர்ந்தாள் நளினி.

    அவளை அடக்கிவிட்ட பெருமிதத்துடன், “எப்பவோ ஒண்ணாப் படிச்சிருந்தா என்ன? அதுக்காக இப்படி கண்ட ஆம்பளைகிட்ட கொஞ்சிக் குலாவணுமா?” என்று மிரட்டிய மணிவண்ணனின் தலையுடன் குரலும் உயர்ந்தது. “நாளைக்குக் கல்யாணம் ஆகிட்டாலும் இந்தக் குணம்தானே வரும்?”

    வாயடைத்துப்போயிற்று நளினிக்கு.

    செல்லமாக அவளை இடித்தான் மணிவண்ணன். “என்ன செய்யறது, நளினி? நீ எனக்கு மட்டுமே சொந்தமா இருக்கணும்னு நான் ஆசைப்படறது தப்பா? என்னை அவ்வளவு பைத்தியமா அடிச்சிருக்கே நீ!”

    தன் தடுமாற்றத்தை மறைக்க நளினி சிரிக்க முயன்றாள்.

    `அதிகம் யோசிக்காது எதற்குள்ளேயோ காலை விட்டுவிட்டோமோ? இவரிடம் அப்படி என்ன பிடித்துப்போயிற்று எனக்கு?’

    அவளுடைய குழப்பத்தைக் கவனியாது, “எங்கம்மா அவங்க மருமகளைப் பாக்க ஆவலா இருக்காங்க, நளினி. இப்பவே வா!” என்று அழைத்துப்போனான்.

    நளினியை மேலும் கீழும் பார்த்த பார்வதி அம்மாளின் முகம் சுருங்கியது. “ஒரு தோடுதான் போட்டிருக்கே. அதுவும் கண்ணுக்குத் தெரியாதமாதிரி. மத்தபடி, பொட்டுத்தங்கத்தைக்கூடக் காணுமே! பாங்கிலேயாவது வெச்சிருக்கீங்களா?”

    அவமானத்தால் சுருங்கிய நளினியைப் பொருட்படுத்தாது, பார்வதி தன்போக்கில் அடுக்கினாள்: “மணி எனக்கு ஒரே மகன். கறுப்புதான். ஆனாலும், ஆம்பளை இல்லியா? அவனோட படிப்புக்கு அம்பதாயிரம், லட்சம்னு குடுத்து, அதோட அம்பது பவுன் நகையும் போட எங்க சொந்தக்காரங்களே தயாரா இருக்காங்க. ஏதோ, ஒன்னோட அதிர்ஷ்டம் அவனுக்கு ஒன்னைப் பிடிச்சுப்போச்சு. அதுக்காக சும்மா பண்ணிக்க முடியுமா? ஒரு இருபதாயிரம் ரிங்கிட்டாவது கையில குடுப்பாரில்ல ஒங்கப்பா?”

    மெள்ளத் திரும்பி காதலனை ஒரு பார்வை பார்த்தாள், `நீ கிடைக்க நான் குடுத்து வெச்சிருக்கணும்!’ என்று எப்போதும்போல் ஆதரவாக ஏதாவது சொல்வான் என்ற எதிர்பார்ப்புடன்.

    அவனோ, `எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை!’ என்பதுபோல் தலையைத் திருப்பி எங்கோ பார்த்துக்கொண்டிருந்தான்.

    நடந்ததைக் கேட்டு அப்பா ஏன் கொதித்தெழவில்லை என்று ஆச்சரியப்பட்டாள் நளினி.

    “பெண்ணைப் பெத்துட்டா, இதுக்கெல்லாம் பயப்பட முடியுமாம்மா? முப்பத்தஞ்சு வருஷம் உழைச்சு நான் சேத்து வெச்சிருக்கிறதை ஒனக்கில்லாம, வேற யாருக்காக செலவழிக்கப்போறேன்!” என்று பாசத்தைக் கொட்டினார்.

    உடனே, “அவசரமா அவ்வளவு புரட்ட முடியுமோ, என்னமோ!” என்று கவலைப்பட்டுவிட்டு, “வட்டிக்கு வாங்கினாப்போச்சு!” என்று வயதுக்குரிய நிதானத்துடன் பேசியபோது, தந்தையை ஒரு புதிய மரியாதையுடன் பார்த்தாள் நளினி.

    கல்யாணப் பத்திரிகையைக் கையில் எடுத்தபோது அதுவரை எழுந்த கவலை, குழப்பம் எல்லாம் மறைந்தன.

    “நளினி மணிவண்ணன்’ என்று மந்திரம் ஜபிப்பதுபோல் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துக்கொண்டாள். அடிநாக்கில் இனித்தது.

    இனி யாருக்கும் பயந்து திரைப்படங்களுக்குப் போக வேண்டியதில்லை. உரிமையுடன் என் கணவரின் கையோடு என் கையைக் கோர்த்துக்கொண்டு எங்கு வேண்டுமானால் போகலாம்.

    நான் அணியவேண்டிய உடைகளை அவர் தேர்ந்தெடுப்பார். நான் அவருக்குப் பிடித்த வகைகளைச் சமைத்துப்போட்டு..!

    அத்தையிடம் கேட்கவேண்டும் அவருக்கு என்னென்ன பிடிக்கும் என்று.

    சிந்தனையில் ஒரு சறுக்கல்.

    `மாமியார்!’ என்று சொல்லி, ஒரு சிறு துரும்பை எடுத்துப்போட்டால்கூடத் துள்ளுமாமே!

    தலையை இருபுறமும் வேகமாக ஆட்டி, அந்த வேண்டாத எண்ணத்தைத் தள்ள முயன்றாள் நளினி.

    `ஆரம்பத்தில் அப்படித்தான் கெடுபிடியாக இருக்கும். ஒரு பேரனைப் பெற்றுக்கொடுத்தால்..!’ கற்பனை போன திசையை உணர்ந்து நளினியின் முகம் சிவந்தது.

    “நளினி! யார் வந்திருக்காங்க, பாரேன்!” தந்தையின் உற்சாகக் குரல் கேட்டது.

    “வாங்க மாப்பிள்ளை! உக்காருங்க!”

    `கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம்கூட இல்லை. அதுக்குள்ளே அவசரத்தைப் பாரு!’ போலிக்கோபமும் வெட்கமுமாக நளினி வெளியே வந்தாள்.

    `எத்தனை வருடப் பழக்கம்! இப்போது என்ன, புதிதாக வெட்கம்?’ தன்னிடம் தோன்றிய மாறுதல் அவளுக்கே வேடிக்கையாக இருந்தது.

    “ஒக்கார நேரமில்லே மாமா”. அவளைக் கவனியாது வேகமாகப் பேசினான் மணிவண்ணன். “அம்மா ஒரு சேதி சொல்லி அனுப்பினாங்க. நீங்க சொன்னதுக்குமேலே பத்து பவுனில ஒரு நெக்லஸ் போடணுமாம். அப்பத்தான் சபையில கௌரவமா இருக்கும்னாங்க”.

    அந்த இடத்தில் ஓர் அசாதாரணமான மௌனம் நிலவியது.

    “என்ன மாமா யோசனை? ஒங்க பொண்ணுக்குத்தானே செய்யச் சொல்றோம்? நானா வளையலும் நெக்லஸும் போட்டுக்கப்போறேன்?”

    அதற்குமேலும் பொறுமையாக இருக்க முடியவில்லை நளினியால். “இப்படி அம்மாபிள்ளையா இருக்கிறதுக்கு வளையல் போட்டுக்கிட்டா ஒண்ணும் தப்பில்லே, என்று ஆங்காரத்துடன் கத்தியவள், கையிலிருந்த பத்திரிகையை இரண்டாகக் கிழித்தாள்.

    “நளினி!” பதறினார் தந்தை.

    “சுயபுத்தி இல்லாம, அம்மா பேச்சுக்குத் தாளம் போடறவரோட என்னால வாழமுடியாதுப்பா. இவரைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டா, அந்தப் பண்டிகை, இந்தப் பண்டிகைன்னு ஏதாவது சுரண்டிக்கிட்டே இருப்பாங்க,” என்று பொரிந்தவள், “நான் மட்டும் என்னப்பா, விலைபோகாத சாமானா?” என்றபோது குரல் கம்மியது. வெறுப்புடன் அவனைப் பார்த்தாள்.

    கரிய முகம் மேலும் கறுக்க, விறுவிறுவென்று வெளியே நடந்தான் மணிவண்ணன்.

    ஏதோ சொல்லவந்த தந்தையைப் பேசவிடாது, “நல்லவேளை, அவங்க குணம் கல்யாணத்துக்கு முன்னாலேயே தெரிஞ்சுபோச்சு! எனக்காக வேற ஒருத்தர் பிறந்திருக்கமாட்டாரா, என்ன!” என்று அந்த சமாசாரத்துக்கு ஒரு முடிவு கட்டினாள் நளினி.

    `இனிமேல் யார் என்ன புகழ்ந்தாலும் மயங்கிவிடக் கூடாது,’ என்று அவள் முடிவெடுத்தது அப்போதுதான்.

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 20

    பரிமேலழகர் உரைத்திறன் – 20

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    சொல் – சொற்பொருள் – சொற்பொருள் விளக்கம்

    முன்னுரை

    திருக்குறளில் பயின்று வரும் சீர்களாகிய சொற்கள் உரையாசிரியர்கள் பார்வையில் அகராதிப் பொருளைத் தருவதில்லை. திருக்குறளின்  பொருண்மையை உணர்ந்து உள்வாங்கிக் கொண்டு எழுதும் உரையாசிரியர்கள் அச்சொற்களுக்குப் புலனெறி வழக்கத்திலும் உலகியல் வழக்கத்திலும் உள்ள பொருளைத் தராது சிறப்புப் பொருளைத் தருகின்றனர். இவ்வாறு இயல்பாக உள்ள பொருளைத் தவிர்த்துப் பொருள்புலப்பாட்டை நோக்கமாகக் கொண்டு பாட்டில் அமைந்துள்ள சொற்களுக்குச் சிறப்புப் பொருள் தருவதையே தலைப்பின் ‘சொற்பொருள்’ என்பது குறிக்கும். இனி அப்பொருளுக்கேற்ற விளக்கத்தையும் அவர்கள் தந்திருக்கிறார்கள். சொல், சொற்பொருள், அதற்கான விளக்கம் என்னும் நிரலை முற்றுமாகக் கற்கின்ற நிலையில்தான் அச்சொல்லுக்கு இயல்பான பொருளைத் தவிர்த்துச் சிறப்புப் பொருள் தந்ததன் உரை நுட்பம் புலப்படுகிறது. ஆசிரியர் பரிமேலழகர் தம் திருக்குறள் உரையில் இவ்வாறு உரைத்த சில இடங்களை ஆராய்ந்து சுட்டிக்காட்டுவதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டு அமைகிறது.

    சேர்தல் – நினைத்தல்

    ‘’அவன் சென்னை சென்று சேர்ந்தான்’’ ‘இந்த வண்டி மதுரைக்கு எப்போது சென்று சேரும்?’ ‘இந்தப் பள்ளியில் நான் சேரலாமா?’ என்றெல்லாம் செவிமடுத்திருக்கலாம் இந்தத் தொடர்களில் உள்ள ‘சேர்தல்’ என்னும் சொல் அந்த வாகனம் அல்லது மாணவன் பௌதிக ரீதியாகச் சேர்வதைக் குறிக்கும். அதாவது வாகனம் சென்னை சேரும். மதுரை சேரும். மாணவன் பள்ளியில் சேர்வான். இந்தச் ‘சேர்தல்’ என்னும் சொல் ‘மானம்’ என்னும் பகுதிப்பொருள் விகுதி பெற்றும் வழக்கில் பேசப்படுவது உண்டு. ‘அவன் நல்லவனாகத்தான் இருந்தான் சேர்மானம் சரியில்லை, கெட்டுவிட்டான்’ என்பது போல அது அமையும். இங்கே ‘சேர்மானம்’ என்பதைப் ‘பிடிமானம், அடமானம், வெகுமானம், வருமானம்’ என்ற சொற்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால்,

    “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்” (3)

    என்னும் குறட்பாவில் வரும் ‘சேர்ந்தார்’ என்னும் சொல்லுக்கு மேற்கண்ட பொருள் கொண்டால் இறைவனுடைய திருவடியை அடியார் தழுவிக் கொண்டதாகப் பொருள்படும். பாட்டின் பொருண்மை அதுவன்று. தற்காலத்தில் ஒருவர் ‘இறைவனடி சேர்ந்தார்’ என்றால் இறந்துபோனார் என்றுதான் பொருள். அவருக்குத்தான் சுவரொட்டி வழியாகக் கண்ணீர் சிந்துவார்கள். அதே பொருளை இங்கே கொண்டால் பாட்டுக்கான பொருள் முரண்படும். என்ன முரண்? உள்ளத்தில் இறைவனை இடைவிடாது எண்ணுவார் வீட்டுலகின்கண்  அழிவின்றி வாழ்வார் என்பதுதான் பாட்டின் பொருள். கடவுள்வாழ்த்து பாயிரத்துள் அமைந்திருப்பதாலும் நூலின் ஒட்டுமொத்தப் பொருளையும் சுருக்கமாக முன்னுரைபோலச் சொல்ல வேண்டியது பாயிரத்தின் பணியாதலாலும் மேற்கண்ட ‘சேர்ந்தார்’ என்னும் சொல்லுக்கு இயல்பான அகராதிப் பொருளைச் சொல்லுவது முரணாகும் என்பதோடு குழப்பத்தையும் உண்டாக்கும். எனவே பரிமேலழகர்,

    “சேர்தல் – இடைவிடாது நினைத்தல்”

    என்று உரையெழுதிக் காட்டுகிறார். சரி, இவ்வாறு இவர் உரைகொள்ளுவது சரியா? சரியானால் அதற்குக் காரணம் என்ன என்பதை ஆராய்ந்தால் திருக்குறள் அதிகாரக் குறட்பாக்களை அவர் நோக்கிய பாங்கு புலப்படும். அதாவது,

    “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்” (3)

    “வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல” (4)

    “இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” (5)

    “பொறிவாயில் ஐந்தவித்தான் ஆற்றல் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்” (7)

    என்னும் நான்கு குறட்பாக்களையும் அவர் ஓரலகாகக் கொள்கிறார். அது என்ன ஓரலகு? இறைவனை வழிபடு முறைகளின் தொகுப்பாகக் காண்கிறார். மனம், மொழி, மெய்களால் இறைவனை வழிபட வேண்டும் என்பதுதான் வழிபடு முறைகள். நினைப்பதும் வழிபாடு. இறைவன் திருநாமங்களைச் சொல்வதும் வழிபாடு. நித்திய, நைமித்தியங்கள் செய்வதும் வழிபாடே. மூன்றும் தத்தம் அளவில் சிறந்து நிற்பன. ‘உள்ளம் பெருங்கோயில்’ என்றார் திருமூலர். ‘வாழ்த்த வாயும் நினைக்க மடநெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவன்’ என்பார் அப்பர் பெருமான். “தூமலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க” என்பார் ஆண்டாள் நாச்சியார்.

    மேற்கண்ட உணர்வுப் பதிவுகளை உற்றுநோக்குவார் பரிமேலழகர் அதிகாரத்துக்குள் உள்ள இந்த நான்கு குறட்பாவையும் ‘இறைவழிபாடு’ என்னும் ஓர் அலகுக்குள் கொண்டு வரும் நுட்பம் உணரக்கூடும். அதாவது இறைவனை நினைத்தவர்க்கும் வீடுபேறு உண்டு. அவன் திருநாமங்கள் வாழ்த்தியோருக்கும் வீடுபேறு உண்டு. அவன் நெறிநின்றார் தமக்கும் வீடுபேறு உண்டு என்பது கருத்து.

    ‘நெறிநின்றார்’ எனத் தெளிவாக அமைந்திருக்கிறது. ‘புரிதல்’ என்பதும் ‘சேர்தல்’ என்பதும் அவ்வாறு அமைந்திருப்பதாகக் கருத முடியாது. புரிதல் என்பதற்குப் புரிந்து கொள்ளுதல் என்பதே நேர்பொருளாகும். எனவே ‘புரிதல்’ என்பதற்கு ‘எப்போதும் சொல்லுதல்’ என்று உரை காண்கிறார் அழகர். அதாவது இறைவன் திருநாமங்களை எப்போது உச்சரிப்பது ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’  அத்திருநாமங்களைச் சொல்லுவது வீடுபேற்றுக்கு வழிவகுக்கும் ஆதலின் இறைவனுடைய பொருள்சேர் புகழை விரும்பிச் சொல்லுதல் வேண்டும் என்கிறார். இதற்கேற்பப் ‘புரிதல்’ என்னும் சொல்லுக்கு ‘எப்போதும் சொல்லுதல்’ என உரைகாண்பதை அறியலாம்.

    அறியவே மனத்தால் எண்ணுவார்க்கும் வீடுபேறு என்பதும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். அதனைத் திருவள்ளுவர் இரண்டு பாடல்களால் சொல்லுவதாகப் பரிமேலழகர் கருதுகிறார். இறைவனை எண்ணுகிறபோது அவனுடைய ஏனைய உறுப்புக்களைவிடத் திருவடியே நினைவுக்கு வரும்., வரவேண்டும் என்பது மரபு. ‘ஈசன் அடிபோற்றி எந்தையடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி’, ‘கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்’ என்னும் திருவாசகமும் அவை. ‘மலர்சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்’ என்பது பெரியபுராணம். ‘திருவடிப்புகழ்ச்சி’ என்பது வள்ளலார் பாடியது. ‘சொற்கழிவு பாதமலர்’ என்பது திருவாசகம். அந்தத் திருவடியை மனத்தால் எண்ணுதல் வேண்டுமல்லவா? ‘மாணடி சேர்ந்தார்’, ‘இலானடி சேர்ந்தார்’ என்னும் இரு பாடல்களில் பயின்றுள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கு இடைவிடாது நினைத்தல் என உரைகாண்கிறார். ‘நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பது உன்னை’ என்பது அபிராமி அந்தாதி. ‘மாணடி சேர்ந்தார்’ என்பதிலுள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கு இவ்வாறு உரைகண்ட பரிமேலழகர் அடுத்த பாடலில் ‘இலானடி சேர்ந்தார்’ என்பதில் உள்ள ‘சேர்ந்தார்’ என்பதற்கான அவ்விளக்கத்தை மீளவும் குறிக்கவில்லை என்பதும் நோக்கத்தக்கது.

    1. ‘மாணடி சேர்ந்தார்’, இலானடி சேர்ந்தார்’ என்னும் இரண்டு குறட்பாக்களையும் இறைவனைச் சிந்திப்பதற்கும்
    1. ‘புகழ்புரிந்தார்’ என்பதை இறைவன் திருநாமங்களைச் சொல்லுவதற்கும்
    1. ‘ஒழுக்க நெறிநின்றார்’ என்பதைச் செயலுக்கும்

    அவர் பொருத்திக் காட்டி எழுதுகிறார்.

    “இவை நான்கு பாட்டானும் இறைவனை நினைத்தலும் வாழ்த்தலும் அவன் நெறி நிற்றலும் செய்தார் வீடு பெறுவார் என்பது கூறப்பட்டது”

    என்னும் விளக்கத்தாலேயே அவர் ‘சேர்தல்’ என்பதற்கு ‘இடைவிடாது நினைத்தல்’ என்றும் புரிதல் என்பதற்கு எப்போதும் சொல்லுதல் என்றும் உரையெழுதியதற்கான காரணம் புலப்படுகிறது. ‘சேர்தல் என்பது குறட்பாச் சொல். இடைவிடாது நினைத்தல் என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள்.  ‘புரிதல்’ என்பது குறட்பாச் சொல். ‘எப்போதும் சொல்லுதல்’ என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள். இவ்விரு சொற்பொருளுக்குமான அவர் தந்த காரண விளக்கங்கள் மேலே தரப்பட்டன.

    ‘குறை’ என்றால் இன்றிமையாத பொருள் (முக்கியம்)

    பொதுவாகக் ‘குறை’ என்ற சொல்லுக்குக் குற்றம் என்பது பொருள். ‘எப்பொழுதும் குறைசொல்லிக் கொண்டிருப்பது அவனுக்கு இயல்பு’ குறையே இல்லாதவர் இவ்வுலகில் இலர். நிலவிலும் குறை உண்டு ‘நிறைகுறை நோக்கி’ என்பன வழக்கு. இலக்கியங்களிலும் இப்பொருளே பெரும்பான்மை. ஆனால் பரிமேலழகர் இந்தச் சொல்லுக்கு ‘இன்றியமையாமை’ என்று உரைகண்டிருக்கிறார்.

    “வினைக்கண் வினைகெடல் ஓம்பல்! வினைக்குறை
    தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு” (612)

    “வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது. அதனான் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக!” என்று பொழிப்புரை எழுதியிருக்கிறார். பாட்டில் அமைந்துள்ள தொடர்களை முன்பின்னாக்கி உலகு வினைக்குறை தீர்ந்தாரின் (ஐ) தீர்த்துவிடும் ஆதலின் வினைக்கண் வினை கெடல் ஓம்பாது ஒழிக’ என்னுமாறு கண்ணழித்து உரையெழுதுகிறார்.

    இங்கே ஆய்வுக்குள்ளாவது ‘வினைக்குறை’ என்னும் சொல்லாகும். வினையாகிய இன்றியமையாத பொருளைக் கைவிட்டாரை இந்த உலகம் மதிக்காது என்பது கருத்து. இந்த உரையை முன்னெடுக்கும் பரிமேலழகர் ‘குறை’ என்பதற்கு ‘இன்றியமையாமை’ என்று உரைகாண்கிறார். பாட்டில் ‘குறை’ என்று இருக்க பரிமேலழகரோ (வினையாகிய) ‘இன்றியமையாத பொருள்’ என்று உரைசொல்வதற்குரிய முகாந்திரம் ஏதேனும் உண்டா என்பதே கருதுகோள்.

    குறை – இன்றியமையாப் பொருள்.

    அதாவது வினையாகிய இன்றியமையாத பொருளாம். தொடக்கத்தில் கூறியவாறு ‘குறை’ என்பதற்குப் ‘பழுது’ என்றே பொருளிருக்க பரிமேலழகர் தாம் கொண்ட பொருளுக்குப் புறநானூற்றுப் பாடலில் வந்த இந்தச் சொல்லைத் துணைக்கழைக்கிறார். அந்தப் பாட்டு,

    “படைப்புப் பல படைத்துப் பலரோடுண்ணும்
    உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
    குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
    இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
    நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
    மயக்குறு மக்களை இல்லோர்க்கு
    ‘பயக்குறை இல்லை’ தாம் வாழும் நாளே!” (188)

    என்னும் பாடலாகும். இந்தப் பாடலின் இறுதி வரியிலுள்ள ‘பயக்குறை’ என்ற சொல்லில் உள்ள ‘குறை’ என்பதற்கான பழைய உரையைத் தன்னுரைக்குச் சான்றாக்கிக் கொள்கிறார். மழலையின் செயல்களால் அறிவு மயங்கும். அத்தகைய குழந்தைகளைப் பெறாதவர்க்கு இல்லறத்தின் பயனாகிய ‘இன்றியமையாப் பொருள்’ வேறு ஏதும் இல்லை என்பது இப்பாட்டிற்கான பழைய உரை. இதனை,

    அது “பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே” என்பதனானும் அறிக.

    என்னும் தமது விளக்கவுரைக் குறிப்பின் வழி இதனை அறிய வைக்கிறார் பரிமேலழகர். மழலையாகிய இன்றியமையாத பொருள் இல்லையெனின் வாழ்நாள் பெருமை இல்லை. வினையாகிய இன்றியாமையாப் பொருள் இல்லையெனின் ஆள்வினைப் பெருமை இல்லை என இயைத்துப் பொருளறிக.

    ‘குறை’ என்பது குறட்பாச் சொல். இன்றியமையாப் பொருள் என்பது பரிமேலழகர் தரும் சொற்பொருள். அச்சொல் அப்பொருளுக்கு உரித்தாமாறு புறநானூறு கொண்டு விளக்கியது அவர்தம் சொற்பொருள் விளக்கம்.

    இதற்கு இவ்வாறு உரைகாணாது வேறுவகையாக உரைகண்டால் ‘வினையே ஆடவர்க்குயிரே’ என்னும் கருத்தினை உள்வாங்கிக் குறள் கூறும் கருத்து சிறக்காமல் போய்விடுவதுடன் ‘ஆள்வினையுடைமை’ என்னும் அதிகாரத்தோடும் பொருந்தாதாம்.

    ‘உயர்வு’ என்பது பணியாமை

    உலகியலிலும் இலக்கிய வழக்கிலும் உயர்வு என்பது உடன்பாட்டுச் சொல். அது எதிர்மறை அன்று. ஒருவன் உயர்ந்தான் என்றால் அவன் தாழ்ச்சியடையவில்லை என்பது பொருளன்று. முன்பு இருந்த நிலையைவிட இன்னும் உயர்ந்திருக்கிறான் என்பதுதான் பொருள். ‘தாழ்ச்சியடையவில்லை’ என்றால் இருந்த நிலையிலேயே இருந்திருக்கிறான் என்றே பொருளாகும்.  இத்தகைய பொருளைப் பரிமேலழகர் குறட்பா ஒன்றில் பதிவு செய்து தம் உரை நுண்ணியத்தை உறுதி செய்வதைக் காணலாம்.

    “பெருக்கத்து வேண்டும் பணிதல்., சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு”  963

    என்பது குறட்பா. இந்தக் குறட்பாவிற்குக்,

    “குடிப்பிறந்தார்க்கு நிறைந்த செல்வம் உளதாயவழி யாவர்மாட்டும் பணிவு வேண்டும். குறைந்த நல்குரவு உளதாயவழிப் பணியாமை வேண்டும்.”

    என்று பொழிப்புரை எழுதுகிறார். பெருக்கத்து வேண்டும் பணிதல் என்பதற்கு அவர் எழுதிய செல்வம் உளதாயவழிப் பணிவு வேண்டும் என்ற உரையில் மாறுபாடு ஏதுமில்லை. ஆனால் சுருக்கத்து வேண்டும் உயர்வு என்பதற்கு அவர் ‘நல்குரவு உளதாயவழிப் பணியாமை வேண்டும்’ என்று எழுதுகிற உரைதான் ஆய்வுப் பொருளாகிறது.

    இந்த உரைக்கு மூலமாக அவர் வருவித்துக் கொண்ட சொல் ‘குடிப்பிறந்தார்’ என்பதாகும். இது இதற்கு (97) முந்தைய அதிகாரமான ‘குடிமை’ (96) என்னும் அதிகாரப் பொருண்மை நோக்கி அமைந்ததாகும். எப்படி? குடிப்பிறந்தார்க்குப் பணிவு இயல்பு. ‘தன்னிலையில் தாழாமை’ (96) என்று குறிப்பாகப் பொருள் விரிப்பார் பரிமேலழகர். எனவே செல்வம் வந்து உற்றக்காலை ஆணவம் கொள்வதும் செல்வம் குறைந்து வறுமை வந்தக்கால் குலைந்து நடுங்குவதும் அவர் அறியாதவை. வறுமையாகிய சுருக்கம் வந்துற்ற காலை அவர் நிமிர்ந்து நிற்பது முந்தைய பணிவு நிலையையே குறிக்கும். இந்தப் பணிவு செல்வம் வந்து குவியும் போது உயராது. அதனால் செல்வம் குறைகிறபோது தாழாது. அதாவது முந்தைய பணிவிலிருந்து குறையாது. அதனால்தான்,

    ‘பணியாமை – தாழ்வு வராமல் பழைய உயர்ச்சிக்கண்ணே நிற்றல்’

    என்று உரையெழுதுகிறார். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்று கருதிய பரிமேலழகர்,

    “செல்வக்காலை அது உயர்ச்சி செய்யத் தாம் தாழ்தலும் அல்லற்காலை அது தாழ்வு செய்ய தாம் உயர்தலும் வேண்டும் என்பதாம்”

    என்றும் விளக்கவுரை எழுதுகிறார். செல்வம் தன்னை உயர்த்துங்கால் உயராமல் தாழ்ந்து நிற்றலும் செல்வம் இல்லாத போது அச்செல்வம் தன்னைத் தாழ்த்த தான் உயர்ந்து நிற்றலும் குடிப்பிறந்தார்க்கு இயல்பாம் என்பது இவ்விளக்கவுரையால் பெறப்படும். பணிவும் உயர்வும் செல்வத்தை நோக்கியது என்பது அறிக.

    இவ்வுரையில் ‘உயர்வு’ என்பது குறட்பாச் சொல். அதற்குப் பணியாமை என்பது பரிமேலழகர் கண்ட சொற்பொருள். “அது (செல்வம்) தாழ்வு செய்ய தாம் உயர்தலும் வேண்டும்” என்பது அச்சொற்பொருளுக்கான விளக்கம்.

    உயர்வு ‘பணியாமை’ என்றால் பணிவு ‘உயராமை’ என்பது பெறப்படும். ‘மலர்தலும் கூம்பலும் இல்லது அறிவு’ என்பதும் ‘மெய்த்திருப் பதம் மேவு என்ற போதினும் ‘இத்திரு துறந்து ஏகு’ என்ற போதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரையினை ஒத்திருக்கும் முகம்’ (5088) என்னும் கம்பராமாயணமும் இந்த வெளிப்பாட்டை ஒத்திருப்பதை உணரலாம். இது எந்த நிலை வந்தாலும் இருந்தநிலை மாறாதிருத்தல். இவ்வாறு உரைகாணாது ‘உயர்வு’ என்பதற்கு இயல்பான பொருளைக் கொண்டால் குடிப்பிறந்தார் இயல்பாகக் கொண்டிருந்த பணிவு சலனத்திற்கு ஆளாகிவிடும் என்பது அறிக.

    நிறைவுரை

    வள்ளுவர் சொல்லுக்குப் பரிமேலழகர் காணும் பொருளும் அதற்கான விளக்கமும் ஒரே அலைவரிசையில் நிற்பதைக் காணலாம். திருக்குறளில் நூற்றுக்கணக்கான இடங்களில் இந்த உரைநெறியை அவர் பின்பற்றியிருக்கிறார். அவர் சொல்லுக்கு இவர் தரும் பொருள் அகராதியில் கிட்டாது. முன்னது மொழிசார்ந்தது. பின்னது படைப்பவன் உள்ளம் அறியும் முயற்சி சார்ந்தது. ஏனைய உரையாசிரியர்களாலும், இல்லாத காரணங்களைச் சுட்டியோ மிகச் சிறுபான்மை மாற்றுக்கருத்துக்களுக்காகவோ அவர் கருத்தினை மிகக் கடுமையாக மறுப்பவர்களாலும் எண்ணிப் பார்க்க இயலாத இத்தகைய புலமைப் பேராற்றல் அவருக்கு இயல்பு.

    (தொடரும்…)

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 31

    கதை வடிவில் பழமொழி நானூறு – 31

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 63

    மறந்தானும் தாமுடைய தாம்போற்றின் அல்லால்
    சிறந்தார் தமரென்று தோற்றார்கை வையார்
    கறங்குநீர்க் காலலைக்கும் கானலஞ் சேர்ப்ப!
    ‘இறந்தது பேர்தறிவார் இல்’.

    பழமொழி – ‘இறந்தது பேர்த்தறிவார் இல்’

    என்னிக்குமில்லாத படபடப்பு இன்னிக்கு. நிலவன் அந்த அறையின் குறுக்கும் நெடுக்குமா எதையோ யோசிச்சுக்கிட்டே நடந்துக்கிட்டு இருக்கார். அந்த அறை குளிரூட்டப்பட்டு இருந்தாலும் அவருக்கு வேர்க்குது. அவர் மனைவி வேலைக்காரிக்கு கட்டளையிடறாங்க.

    மேகலா… ஐயாவுக்கு சட்னு ஒரு ஜூஸ் எடுத்துட்டு வாம்மா.

    சொல்லிவிட்டு அந்த அறையில் போடப்பட்டிருக்கிற பெரிய சைஸ் குஷன் நாற்காலியில சாய்ந்து உட்கார்ந்து தன் ஆரணி பட்டுப் புடவைத் தலைப்பால முகத்தைத் துடைச்சிக்கிறாங்க. ஆரஞ்சு நிற புடவையிலிருக்கிற நீலநிற வண்ணத்துப்பூச்சிகள் அதிலேருந்து விடுதலையாகி அந்த அறை முழுக்க பறக்கற மாதிரி இருக்கு. அந்த வண்ணத்துப் பூச்சிகளப் பாத்தவொடனே நிலவனுக்கு மனதில் சந்தோசம். இருக்காதா பின்ன அவர் கவிஞர் இல்லயா. கவிதை எழுதி தான் சம்பாதிச்ச இருபது பவுன் நகைகளில் பிரச்சினைன்னுதானே இப்ப இவ்வளவு துக்கம் அவருக்கு.

    யோவ்…. நிறுத்துய்யா. வண்ணத்துப்பூச்சி புடவைத் தலைப்புலேந்து வெளிய வந்து பறக்குதுங்கறதே ஜாஸ்தி. அதுல ஒரு கவிஞர் கவிதை எழுதியே இவ்வளவு சம்பாதிச்சிட்டாருன்னு காட்டினா சீரியல யாரும் பாக்க மாட்டாங்க. நமக்கு நஷ்டம்தான்.

    யாருய்யா இந்த எழுத்தாளர இங்க கூட்டிக்கிட்டு வந்தது. இவர் ஏதோ குழந்தைகளுக்குக் கதை எழுதரவர் போல. நம்ம சீரியலோட ரேஞ்சுக்கு ஒருத்தரக் கூட்டிக்கிட்டு வாங்கன்னா ….. என்னய்யா நீங்கயெல்லாம். பேசாம நானே உக்காந்து எழுதித் தொலைச்சிரலாம் போல. இப்ப நேரம் வேற இல்ல.

    சரி. உன் கற்பனையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு நேரடியா கதையச் சொல்லு. அதுல ஏதாவது மாற்றம் செய்யணும்னா நான் சொல்றேன். டேரக்சன்லேந்து மேக்கப் வரை எல்லாம் பண்ணியாச்சு. என்ன…. எனக்குக் கற்பனை கொஞ்சம் கம்மினு நினைச்சு கதை எழுத முயற்சிக்கல. இனிமே அதையும் செஞ்சிட வேண்டியதுதான்.

    அந்த சிடுமூஞ்சி சீரியல் டேரக்டர் வசவுகளை நிறுத்தியவுடன் நான் சொல்ல ஆரம்பித்தேன். அந்த நிலவனுக்கு அன்னிக்கு வங்கியிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதுல அவர் அடகு வைத்த இருபது பவுன் நகைகளும் போலினு நிரூபிக்கப்பட்டதால இருபத்துநான்கு மணிநேரத்துக்குள்ள வங்கியிலேந்து வாங்கின பணத்தைத் திருப்பிக்கட்டணும்னு சொன்னாங்க. இல்லையினா சட்டப்படி நடவடிக்கை எடுப்பாங்களாம். இதைச் சொன்னது.வங்கி மேலாளரான அவரதுநெடுநாள் நண்பர்தான். அவராலதான் பணம் விரைவா கிடைச்சது. வாங்கின பணத்தை மகனோட பொறியியல் படிப்புக்காக கல்லூரியில கட்டியாச்சு. மிச்சப் பணத்த பெரியப்பா மகனுக்கு அனுப்பி ஒரு துண்டு நிலமும் வாங்கச் சொல்லியாச்சு. இப்ப போயி இப்படின்னா மானப் பிரச்சினையில்லயா.

    மனைவியோட நகை முழுக்க பெண் கல்யாணத்துக்கு செலவழிஞ்சுபோச்சு.

    நிலவனோட மனைவி அந்த நகை வாங்கிய கடையோட சீட்டத் தேடிக்கிட்டு இருக்காங்க. அவங்க போலி நகை வித்தாங்களானு கண்டுபிடிக்க. இது இப்படியிருக்க அவரோட பெரியப்பா மகன்னு ஒரு கேரக்டர் சொன்னேனே அவர் மனசுக்குள்ள சந்தோசப்பட்டுக்கிட்டு இருக்கார்.

    நிலவன் அண்ணன் பட்டணத்துல நல்லா சம்பாதிக்குது போல. நம்மகிட்ட குடுத்துவச்சிருந்த இருபது பவுன ஆட்டையப்போட்டு மக கல்யாணத்த சிறப்பா நடத்தியாச்சு. இருந்தாலும் எம் பொஞ்சாதி கெட்டிக்காரி. அண்ணன சமாளிச்சுக்கிடலாம்னு  அதுகணக்காவே கவரிங் நகை வாங்கி குடுத்து உட்டுட்டா.  அண்ணன் பேங்குல வைக்கப்போறேம்னு சொன்னப்போ கொஞ்சம் திக்குனு இருந்திச்சு. பெறகு அதைவச்சு வாங்கின பணத்தையும் எங்கிட்டல்லா அனுப்பி நிலம் வாங்கச்சொல்லுது. இனி ஒரு பிரச்சினையில்ல…. மனசுக்குள்ள நினைச்சுக்கிட்டே வரப்ப்புல நடந்துக்கிட்டு இருக்கார்.

    என்னய்யா இது. உன் கதையில எல்லாரும் நடந்துக்கிட்டே இருக்காங்க. தனக்குத்தானே பேசிக்கிறாங்க. இதுல ஒரு வசீகரமும் இல்லயே… சரி உன்னயத் திட்டி எனக்கு என்ன லாபம். நாளைக்கு வா பாக்கலாம்… என்னை அனுப்பி விட்டார் சிடுமூஞ்சி டேரக்டர். ஏதோ கதை சொல்லி கொஞ்சம்பணம் சம்பாதிக்கலாம்னு நினைச்ச எனக்கு ஏமாற்றம்தான். மொதல்ல வீட்டுக்குப்போய் உக்காந்து அம்மா கூட எல்லா சீரியலயும் பாக்கணும்.அப்பதான் இவர் என்ன எதிர்பார்க்கறார்னு தெரியும். நான் என்னமோ கருத்து சொல்லலாம்னு இந்தக் கதையச் சொன்னேன். முழுசா சொல்ல உட்டாதானே. ‘இறந்தது பேர்த்தறிவார் இல்’ங்கற பழமொழியச் சொல்லி தம்முடைய உடைமைகளைத் தாமே காத்துப் பேண வேண்டுமேயல்லாமல், நம்பிக்கையற்ற பிறர் பேணுவார் என விடுதல், அதனை இழத்தற்கே காரணமாகும் அப்டிங்கற அதன் பொருளக் கடைசியில சொல்லணும்னு இருந்தேன்.

    நல்லவேளை சொல்லல. சொல்லியிருந்தா நான் என்ன பொழுதுபோக்குக்காக சீரியல் எடுக்கறேனா அல்லது பாடம் நடத்தறேனான்னு அதுக்கும் கத்தியிருப்பார். நல்லதுக்குக் காலம் இல்ல.

    பாடல் 64

    இரப்பவர்க்(கு) ஈயக் குறைபடும் என்றெண்ணிக்
    கரப்பவர் கண்டறியார் கொல்லோ – பரப்பிற்
    துறைத்தோணி நின்றுலாம் தூங்குநீர்ச் சேர்ப்ப!
    ‘இறைத்தோறும் ஊறும் கிணறு’.

    பழமொழி – ‘இறைத்தொறும் ஊறும் கிணறு’

    ஏ…..ஐயா…. கதவ ஒருக்களிச்சு வச்சுக்கிட்டு சாப்பிடக்கூடாதா. மட்ட மல்லாக்க திறந்து வச்சா யாரும் உள்ள வந்துற மாட்டாகளா… அப்பத்தா தன் பாட்டுக்கு சொல்லிக்கொண்டே போகிறாள். இன்னிக்கு எங்க வீட்ல ஸ்பெஷல் சமயல். அவியல், சாம்பார், வாழைக்கா பொடிமாஸ், வாழைப்பூ வடை, அப்பளம்….. இப்படி. எங்க அப்பத்தா சமைச்சது. நானும் என் மனைவியும் எல்லாத்தையும் மேசைமேல பரப்பி வச்சிக்கிட்டு நிதானமா ஒரு கட்டு கட்டிக்கிட்டு இருக்கோம்

    பாம்பேக்கு தனிக்குடித்தனம் வந்ததிலேந்து நம்ம ஊரு சமயல இப்படி சாப்பிடவே முடியல. வந்த முதல் நாளே வெள்ளக் காடா இருந்த பாம்பேயில தான் கால் வைச்சோம். கொரோனா ஊரடங்கால வொர்க் ப்ரம் ஹோம்னு சொல்லிட்டதால வெளியில போக வேண்டிய அவசியமே ஏற்படல. சாமான்களையும் வீட்டுக்கே வர வச்சிடறோம். திரும்பத் திரும்ப சமைச்சு சாப்பிட்டுட்டு வீட்டுக்குள்ளயே இருக்கறதால இங்க உள்ள பழக்கப்படி சப்பாத்திக்கு அதிகமா மாறிட்டோம். இரண்டு நாள் முன்ன அப்பாவும், அப்பத்தாவும் வந்ததிலேருந்துதான் தோசை,இட்லி எல்லாம் பாக்க முடியுது. சாப்பிட்டுக்கிட்டு இருக்கும்போதே எதிர் ப்ளாக் அன்மோல் வருகிறார். அவர் கூட அவரோட பத்து வயசுபொண்ணும் நுழையறாங்க.

    என்ன பையா சௌத் இந்தியன் சாப்பாடு மணக்குது. பாட்டியோட கைப்பக்குவமானு கேட்டுக்கிட்டே டைனிங் டேபிள் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கிட்டு உட்காரறார். அங்க இருந்த தட்டை எடுத்துவச்சி என் மனைவி அவரை உபசரிக்கிறாள். பாப்பா இப்பதான் சாப்பிட்டான்னு சொல்லிட்டு தான் பாட்டுக்கு ரசிச்சுச் சாப்பிட ஆரம்பிச்சுட்டார். நாங்க இங்க குடி வந்ததிலேருந்து அவர் அப்படி வித்தியாசம் பாக்காம சொந்தக்காரன் மாதிரிதான் பழகிக்கிட்டு இருக்கார். ஆனா அப்பாக்கும் பாட்டிக்கும் இது புடிக்கலனு நல்லாவே தெரியுது.

    அப்பத்தா திரும்பவும் புலம்ப ஆரம்பிச்சிட்டாங்க. இதுக்குதான் கதவ மூடி சாப்பிடுனு சொன்னேன். சொன்னா அப்பத்தா… கஞ்சம்னு நினைச்சுக்கிடுவீங்க.. நாங்களும் நாலுபேருக்கு தினமும் சோறுபோட்டுதான் வாழ்ந்தோம். உங்க தாத்தா தெனைக்கும் வரையிலேயே யாரையாச்சும் கூட்டிக்கிட்டு தான் சாப்பிட உட்காருவார். விறகு அடுப்புல சமைக்கறதால பொசுக்குனு பொங்கிப்போட முடியாதுனு மதியம் நாலுபேருக்குள்ள சாப்பாட்ட சேத்து பொங்கறது வழக்கந்தான். ஆனா அவுக கூட்டிக்கிட்டு வாரவுகயெல்லாம் சோத்துக்கு வீங்கி அலையுதவங்கயில்ல. வெறுங்கைய வீசிக்கிட்டு வரமாட்டாக. ஒரு குலை வாழைப்பழம், மாங்கா, என்னமும் விளைஞ்சத கையில குடுத்துட்டுதான் அடுத்த வீட்ல கைநனைப்பாக. என்னம்போ எம் மனசுல பட்டதச் சொல்லிப்போட்டேன். இந்த ஆளு சாப்புட உக்காந்தாலே வந்துருதார். சோத்துல கொதி போட்டுட்டாருன்னா  பொறவு சங்கடந்தான். அதுக்குத்தான் சொல்லுதேன்.

    அன்மோல் அப்பத்தாவப் பார்த்து சொல்றது எதுவும் அவங்களுக்குப் புரியல. அவர் அவங்கள தன்னோட குழந்தைகள் காப்பகத்துக்கு வரச்சொல்லி அழைக்கிறார். அவங்களுக்காக புது கட்டிடம் கட்டியிருக்காராம். இப்ப இருக்கற கட்டிடத்துல அடிக்கடி வெள்ள நீர் நுழைஞ்சிருதாம். அதோட தொடக்க பூசைக்குதான் அப்பத்தாவ வரச்சொல்றார். அங்க இருக்கற இருபது பிள்ளைகளுக்கும் ஏதாவது ஸ்வீட் பண்ணிக்குடுக்க முடியுமான்னு கேக்கறார். லட்டு பண்ண மிடாயிவாலாவ வரச்சொன்னாராம். அப்பத்தா சரின்னாங்கன்னா அவன வரவேண்டாம்னு சொல்லிடுவேங்கறார்.

    அவர் சொன்னதை முழுசும் சொல்லாம என் மனைவி, அப்பத்தா…..  உங்களுக்கு லட்டு பண்ணத் தெரியுமா இவர் கேக்கறார்னு சொன்னவுடனே கோவிச்சுக்கிட்டு எழுந்து போயிட்டாங்க. படுத்துக்கிட்டு இருந்த அப்பாவ எழுப்பி கூட்டிக்கிட்டு வராங்க.

    உம்மவன் செய்யுத நாயத்த நீயே கேளு அய்யா. நான் பேசுதது எதுவும் புரிஞ்சுக்கிடாம புருசனும் பொஞ்சாதியும் அந்த ஆளுக்கே பரிஞ்சுக்கிட்டு வாராக. இனி நான் இருக்க மாட்டேன். ரயிலுக்கு புக் பண்ணிப்போடு. அப்பத்தா கத்திவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். அப்பா எல்லாத்தையும் பொறுமையா உக்காந்து கேட்டுட்டு அப்பத்தாவுக்கு வயசாகிப்போச்சு. திடீர்னு லட்டு பண்ணச்சொன்னா டென்சன் ஆயிடும்னு சொல்லிட்டார்.

    அடுத்த நாள் எல்லாரும் கிளம்பி அன்மோல் நடத்தற காப்பகத்துக்கு வந்துட்டோம். உள்ள நுழையும்போதே ஒரு ஒல்லியான பையன் ஓடி வந்து ஆச்சினு அப்பத்தாள கட்டிப்பிடிச்சிக்கிட்டான். அவன் அழுதுக்கிட்டே எங்க ஆச்சியும் உங்கள மாதிரிதான் இருப்பாங்க. எங்கம்மாவும் அப்பாவும் விபத்துல இறந்த பிறகு ஆச்சிதான் என்னய இட்லி வித்து காப்பாத்திக்கிட்டு வந்தாங்க. பெறகு போனவருசம் பெய்த மழையில குளிர்தாங்க முடியாம ஆச்சி இறந்துட்டாங்க. பக்கத்துல கடை வச்சிருந்த அண்ணாச்சி என்னய இங்க கொண்டு வந்து சேத்து விட்டாங்கனு சொல்றான்.

    அப்பத்தாளுக்கு கண்ணுலேந்து கண்ணீர் தாரதாரையா கொட்டுது. என்னப்பெத்த ஐயா இவ்வளவு நல்ல மனசுக்காரன புரிஞ்சுக்கிடாம என்னமெல்லாம் பேசிப்போட்டேன். அப்பன் ஆத்தா இல்லாம ரோட்டுல நிக்குத புள்ளைங்கள கூட்டியாந்து தம் பிள்ளை கணக்கா பாத்துக்கிடுதவருக்கு ஒரு வாய் சோறுபோடாம வாய் ஓயாம வஞ்சிக்கிட்டு இருந்தேனே….. இந்தப் பிள்ளைங்களுக்கு நாளைக்கு நானே என் கையால சோறு ஆக்கி பரிமாறுவேன். அதை அன்மோலுக்கு விளக்கியவுடன்… பேசிக்கிட்டே நிக்கற அப்பத்தாள அன்மோல் கட்டிக்கொள்கிறார். நீ ஒண்ணுத்துக்கும் கவலப்படாத. ‘இறைத்தொறும் ஊறும் கிணறு’னு பழமொழியே இருக்கு. உனக்கு மேல மேல நிறைய காசுபணம் வந்து சேரும். அப்பத்தா வாழ்த்த அதன் பொருளை அறிய என் முகத்தைப் பார்க்கிறார் அன்மோல்.

    அது ஒண்ணுமில்ல. கொடுக்க கொடுக்க செல்வம் பெருகும்னு சொல்றாங்கனு நான் அவருக்கு விளக்கறேன்.

    Share
  • தனிமை

    தனிமை

    சு. திரிவேணி
    கோயம்புத்தூர்

    தனித்திருக்கிறேன் நான்
    கருவுக்குள் இருக்கும்
    கருவைப் போல.
    கவசமாய்த் தனிமை என்னைக்
    காத்து நிற்கிறது
    உலகச் சுழல்கள் தீண்டாத
    பாதுகாப்பான இடத்தில்
    நானிருக்கிறேன் வாழும் பொருட்டு
    சாகுமளவு போராட்டம்
    தேவையாய் இருப்பதில்லை
    எந்த வரவையும்
    இயல்பாய் ஏற்க முடிகிறது
    யாரையும் பயமின்றிப்
    பார்க்க முடிகிறது
    சுதந்திரமாய்
    சுவாசிக்கவும் வாசிக்கவும்
    ஏற்ற சூழல்
    யாருமற்ற தனிமைதான்
    என் வாழ்வையும் நேரத்தையும்
    யாரும் ஆக்கிரமிக்காமல்
    காத்துக் கொள்ளும்
    மெத்த மகிழ்ச்சி
    தருவதிந்தத் தனிமைதான்
    ஆனாலும்
    மனதை உறுத்துவது
    பரிதாபம் காட்டும் உங்கள் விழிகளே!

    Share
  • குறளின் கதிர்களாய்…(329)

    செண்பக ஜெகதீசன்

    குறளின் கதிர்களாய்...(329)

    தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
    கொள்வர் பயன்தெரி வார்.

    – திருக்குறள் – 104 (செய்ந்நன்றி அறிதல்)

    புதுக் கவிதையில்...

    தினையளவு மிகச்சிறிய
    உதவியே
    ஒருவன் செய்திருந்தாலும்,
    உதவியதன் பயனை
    நன்கு அறிந்தவர்கள்
    அதனைப்
    பனையளவு
    பெரிய உதவியாகவே
    கருதுவர்…!

    குறும்பாவில்...

    செய்த உதவி தினையளவு
    சிறிதெனிலும் அதைப் பனைபோல் கருதுவர்,
    உதவியதன் பயனை நன்கறிந்தோர்…!

    மரபுக் கவிதையில்...

    தினையின் அளவே சிறிதெனிலும்
    தெரிந்தே செய்த உதவியதை
    நினைவில் சிறிதெனக் கொண்டேதான்
    நினைவ தகற்றிச் செல்லாமல்,
    பனையி னளவுப் பெரிதாகப்
    பண்பி லுயர்வெனக் கருதுவரே
    அனைத்து முணர்ந்தே உதவியதன்
    அரிய பயனதை அறிந்தவரே…!

    லிமரைக்கூ..

    செய்த உதவி தினையளவு,
    உதவியின் பயனதனை நன்றாய் அறிந்தவர்கள்
    கொள்வர் அதனைப் பனையளவு…!

    கிராமிய பாணியில்...

    மறக்காத மறக்காத
    செய்த ஒதவிய மறக்காத,
    சின்ன ஒதவியா இருந்தாலும்
    செய்த ஒதவிய மறக்காத..

    தெனயளவு
    சின்ன ஒதவி
    ஒருத்தருக்குச் செய்தாலும்,
    அதனோட பயனப்பத்தி
    நல்லாத் தெரிஞ்சவுருக்கு
    அது
    பனயப் போலப்
    பெருசாத் தெரியுமே..

    அதால
    மறக்காத மறக்காத
    செய்த ஒதவிய மறக்காத,
    சின்ன ஒதவியா இருந்தாலும்
    செய்த ஒதவிய மறக்காத…!

    Share
  • திருக்கார்த்திகை விளக்கீடு

    திருக்கார்த்திகை விளக்கீடு

    திருக்கார்த்திகையை முன்னிட்டு, இன்று நம் இல்லத்தில் தீபங்கள் ஏற்றி வழிபட்டோம். எல்லோர் வாழ்வும் ஒளிரட்டும்!

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தீபம் ஏற்றுவோம்!

    தீபம் ஏற்றுவோம்!

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
    மெல்பேண், ஆஸ்திரேலியா.

    கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்
    கந்தனை நினைந்து போற்றுவோம் வாரீர்
    வீட்டிலும் வெளியிலும் ஏற்றுவோம் வாரீர்
    வேலவன் திருவடி பற்றுவோம் வாரீர்

    அகமதில் உறைந்திடும் ஆணவ இருளை
    அகற்றிடத் தீபம் ஏற்றுவோம் வாரீர்
    சிவனது மைந்தனைச் சிந்தையில் இருத்தி
    சிறப்புடன் தீபம் ஏற்றுவோம் வாரீர்

    கார்த்திகைப் பெண்கள் ஏந்திய குழந்தை
    கந்தனாய் வந்தனன் கலியுகம் காக்க
    கந்தனைச் சொந்தமாய்க் கொண்டிடும் பக்தர்
    கார்த்திகைத் தீபம் ஏற்றுவோம் வாரீர்

    மாலயன் அடிமுடி தேடிய நிலையில்
    மாபெரும் சோதியாய் வந்தனன் சிவனும்
    பேரொளிப் பிழம்பு தோன்றிய நாளை
    யாவரும் கார்த்திகைத் தீபமாய்க் கண்டனர்

    அக்கினித் தலமாய் ஆகிய தலத்தில்
    அகண்ட தீபம் ஏற்றுவார் அடியார்
    கார்த்திகை நாளில் ஏற்றிடும் தீபம்
    கந்தனைத் தந்தையை இணைத்திடும் தீபம்

    சோதியாய் சுடராய் ஆகிடும் தெய்வம்
    ஆதியாய் அந்தமாய் ஆகிடும் தெய்வம்
    அப்பனாய், பிள்ளையாய் அமைந்திடும் தெய்வம்
    அனைத்துமே கார்த்திகைத் தீபத்துள் சுடருமே

    Share
  • கிராமபோனில் பாட்டு கேட்பது எப்படி?

    கிராமபோனில் பாட்டு கேட்பது எப்படி?

    அண்ணாகண்ணன்

    கிராமபோன் என்ற இசைக்கருவியை நாம் பழைய திரைப்படங்களில் பார்த்திருப்போம். இன்று ஒரு காட்சிப் பொருளாகவே மாறிவிட்டது. ஆனால், 100 ஆண்டுகள் பழைமையான ஒரு கிராமபோன், இன்றும் இயங்குகிறது. சென்னை, சிட்லபாக்கத்தில் உள்ள பேக் டு த 90ஸ் மிட்டாய் கடையில் உள்ளது. இதைக் கொண்டு, கிராமபோன் எப்படி இயங்குகிறது? அதில் எப்படிப் பாட்டுக் கேட்பது என்று பாருங்கள்.

     

    அந்தக் காலத் தொலைபேசி

    இன்று நம் செல்பேசிகள், உள்ளங்கைக்குள், கைக்கடிகாரத்தில், மோதிரத்தில் சுருங்கிவிட்டன. ஆனால், ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பேசுவதற்கும் கேட்பதற்கும் தனித் தனியே இரண்டு பாகங்களைப் பிடித்துக்கொண்டு பயன்படுத்தினோம். அப்படியான ஒரு தொலைபேசி, சென்னை, சிட்லபாக்கத்தில் உள்ள பேக் டு த 90ஸ் மிட்டாய் கடையில் உள்ளது. அந்தத் தொலைபேசியை இன்று பார்ப்போம்.

     

    அந்தக் காலத் தொலைநோக்கி

    அந்தக் காலத் தொலைநோக்கி வழியே அந்தக் காலத்தையே பார்க்கலாம்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • செர்ரி தக்காளி

    செர்ரி தக்காளி

    அண்ணாகண்ணன்

    நம் வீட்டு மாடித் தோட்டத்தில் விளைந்துள்ள செர்ரி தக்காளிகளை இன்று அறுவடை செய்தோம்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

     

    Share
  • ஆள்காட்டிப் பறவையின் குரல்

    ஆள்காட்டிப் பறவையின் குரல்

    அண்ணாகண்ணன்

    இன்று காலை எழுந்தவுடன், ஆள்காட்டிப் பறவையின் உரத்த பாடலைக் கேட்டேன்.

    கணந்துள்–ஆள்காட்டி (Lapwing) என்ற தலைப்பில் சற்குணா பாக்கியராஜ், வல்லமை மின்னிதழில் எழுதிய கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

    பறவையியலாளர்கள் ஆள்காட்டியின் குரலை, ”loud and penetrating” என்று குறிப்பிடுகின்றனர். பறவைகளின் தந்தை என்று போற்றப்படும் முனைவர் சலீம் அலி, இந்தப் பறவைகளின் குரலை வர்ணிக்கும் போது, “மஞ்சள் மூக்கு ஆள்காட்டி, இரட்டை அசையில், “twit, twit” என்று இரண்டு வினாடிக்கொரு தடவையும், இடைஇடையே, மிகவும் உயர்ந்த குரலில் “twit-twit-twit-twit”, என்று இரக்கமான குரலும் கொடுக்கும், சிவப்பு மூக்கு ஆள்காட்டி, சூழ்நிலைக்கேற்றவாறு, குரலை உயர்த்தியோ, தாழ்த்தியோ, “Did-he-do-it?” என்று வருத்தம் தோய்ந்த குரல் கொடுக்கும்” என்கிறார் (The Book of Indian Birds, Salim Ali. p.139-140).

    இந்தக் காணொலியில் உள்ளது எந்த ஆள்காட்டிப் பறவையின் குரல் என்பதை நீங்களே கண்டுகொள்ளுங்கள்.

     

    முகப்புப் படத்திற்கு நன்றி : https://www.wikiwand.com/en/Red-wattled_lapwing

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • கனமழையில் இரு பறவைகள்

    கனமழையில் இரு பறவைகள்

    அண்ணாகண்ணன்

    நிவர் புயல் விர்ரென வீசிய நவம்பர் 25ஆம் தேதி கனமழையும் பிளந்து கட்டியது. அப்போது நம் வீட்டருகே உள்ள மதிலில் இரு பறவைகள் நடை பயின்றன. நத்தை குத்தி நாரையும் உண்ணிக் கொக்கும் நெருங்கி வந்து என்ன பேசியிருக்கும்?

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • தாம்பரத்தில் தண்ணீர் வடிகின்றது!

    தாம்பரத்தில் தண்ணீர் வடிகின்றது!

    அண்ணாகண்ணன்

    நிவர் புயல் தாக்கத்தால் மேற்குத் தாம்பரத்தில் பல பகுதிகளில் நேற்று வெள்ளம் சூழ்ந்திருந்தது. ஆயினும் படிப்படியாக இப்போது குறைந்து வருகின்றது. ஆயினும் குப்பைகளும் பாம்புகளும் இறந்த உயிரினங்களின் சடலங்களும் ஆங்காங்கே சூழ்ந்துள்ளன. மரங்களும் மரக்கிளைகளும் விழுந்து கிடக்கின்றன. தேங்கியுள்ள நீரிலிருந்து குபுகுபுவென குமிழ்கள் வெளிவருகின்றன. இதோ, களத்திலிருந்து நேரடிக் காட்சிகள்.

     

    (அண்ணாகண்ணன் யூடியூப் அலைவரிசையில் இணைய, இங்கே சொடுக்குங்கள் : http://www.youtube.com/subscription_center?add_user=Annakannan)

    Share
  • படக்கவிதைப் போட்டி – 286

    படக்கவிதைப் போட்டி – 286

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    புகைப்படக் கலைஞர் ஐயப்பன் கிருஷ்ணன் எடுத்த இப்படத்தை அவரது ஃபிளிக்கர் பக்கத்தில் இருந்து ராமலக்ஷ்மி தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை (29.11.2020) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கெனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    Share
  • Salute the Heroes

    Salute the Heroes

    Baskar Seshadri

    It was around seven am this morning (November 26, 2020).

    Rain was moderate. The activity on road was almost nil except for few people who have to move out anyway for the daily bread.

    It was at this time I spotted these uniformed men of the conservancy contractor company who were cleaning. These people are hardworking, young, affable and friendly too. They were thankfully in their rain suit and doing their work tirelessly.

    We may know that even to clean a house its a big task but doing that on a big road like RK Mutt road is no way a small task. And they don’t do for the sake of doing it.

    They literally engage with their full heart and do it. I have seen them even cleaning the areas under the bus shelter near Mylapore tank bus stand and in next thirty minutes the road was clean and neat. They did this amid the rains with a little cup of tea and biscuit and since they know me well they extended their gesture with a big smile.

    I reciprocated. But they need this from all. When you happen to see them next time on the road just stop for a minute and say that they are doing a yeomen service and pat their shoulders if you can or wish a women worker with a Namaste. They need this and we need them.

    Our salutes Guys for all that you do to us in the climate of all seasons braving rain and shine .

    Share
  • பழகத் தெரிய வேணும் – 44

    பழகத் தெரிய வேணும் – 44

    நிர்மலா ராகவன்

    நம்மையே வருத்திக்கொள்ளலமா?

    எல்லா வயதிலும் மன அழுத்தம் உண்டாகிறது.

    `தவறு செய்தால் தாய் திட்டுவார்களோ!’ என்ற பயம் சிறுவர்களுக்கு.

    `தாய்’ என்ற வார்த்தைக்குப்பதில் அலுவலக மேலதிகாரி, வீட்டில் கணவன் அல்லது மனைவி என்று போட்டுப் பார்த்தால், அனேகருக்கும் பொருந்தும்.

    எல்லாத் தருணங்களிலும், பிறரை மகிழ்விக்க விரும்புவோருக்கு, `மாட்டேன்,’ `வேண்டாம்,’ என்றெல்லாம் கூறத் தெரியாது. இதனால், தம்மையே வருத்திக்கொள்கிறார்கள்.

    கதை

    திருமணமான முதல் வருடம் ஒரு பெண் அழுதுகொண்டே இருந்தாள். பொறுக்க முடியாது, அவளைத் தாய்வீட்டுக்கே அனுப்பினார் கணவர்.

    எந்நேரமும் அழுதுகொண்டிருந்தவளுக்கு என்ன குறை என்று புரியாத தந்தை உளவியல் சிகிச்சைக்கு அழைத்துப்போனார். அங்கு, தன்னால் தன் பழைய காதலனை மறக்க முடியவில்லை என்று மேலும் அழுதாள்.

    `காதலனைத்தவிர வேறு யாரையும் மணக்கமாட்டேன்,’ என்ற உறுதி அவளுக்கு இருக்கவில்லை. அப்போது நிதானமாக யோசித்து, தனக்குப் பிடித்த ஒன்றைத் தேர்ந்தெடுக்காதது அவளுடைய குற்றம்.

    கணவன்மேல் குற்றம் கண்டுபிடித்து, `காதலனை மணந்திருந்தால் இப்படியெல்லாம் ஆகியிருக்காதே!’ என்று சிலர் வருந்துவார்கள். அவனுக்கு மட்டும் குறைகளே இருந்திருக்காதா? காதலனாக இருக்கும்போது வெளிவராத பல குணாதிசயங்கள் கணவனானபிறகுதான் தெரியவரும்.

    சில சமயம், விரும்பி ஏற்ற உறவுகள் முறியலாம். ஆனால், ஆரம்பத்தில் மன ஒற்றுமை இருந்ததால்தானே இணைந்திருப்பார்கள்?

    கனடா நாட்டில் நான் சந்தித்த ஒரு பெண் தான் காதலித்து மணந்த கணவன் தன் அனுமதி இல்லாமல் தன்னுடன் உடலுறவு கொண்டான், அது வன்முறை என்று வழக்கு தொடுத்து, விவாகரத்து பெற்றிருந்தாள்.

    “ஆனால், எங்களுக்குள் சில இனிமையான தருணங்களும் இருந்தன,” என்று அந்த இளம்பெண் கூறியபோது, அந்த நேர்மை எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது.

    கீதோபதேசம்

    ஒரு காரியம் நடக்க வேண்டுமென்றால் அது நடந்தே ஆகும். `நடந்திருக்கக் கூடாதா!’ என்று காலங்கடந்து ஏங்கி என்ன பயன்?

    கதை

    நான் இயற்றிய பாடல்களை உடனுக்குடன் எழுதி வைத்துக்கொள்வேன். அலமாரியில் வைத்திருந்த நாலைந்து நோட்டுப் புத்தகங்களில் சிறு புழுக்கள் இருந்ததைப் பார்த்து அவைகளை வெயிலில் காயவைத்தேன். (புழுக்களை அல்ல).

    செய்த காரியத்தை மறந்துவிட்டு, வெளியில் போய் திரும்பியபோது, மழையில் புத்தகங்கள் நனைந்து, நுனியிலிருந்த எழுத்துக்கள் உருமாறி இருந்தன.

    `நடந்ததை இனி மாற்றவா முடியும்? என்று தோன்ற, நான் புத்தகங்களைக் காயவைத்ததோடு நிம்மதி அடைய வேண்டியதாயிற்று.

    `அதைப்பற்றி நினைக்காதே!’ என்று என்னை நானே கடிந்துகொண்டு, அதன்படி நடந்துகொண்டேன்.

    விடாமுயற்சி இங்கு உதவாது

    எதையாவது தொலைத்துவிட்டு, வெகு நேரம் தேடினாலும் அது கிடைக்காது. தேடும்போது மன உளைச்சலுக்கு ஆளாவதுதான் மிச்சம். பிறகு, நாம் எதிர்பாராத விதத்தில் எங்கிருந்தாவது கிடைத்துவிடும். இது புரியாது, தொலைந்ததை விடாது தேடி, மன உளைச்சலுக்குத் தம்மை ஆளாக்கிக்கொள்கிறவர்கள் பலர்.

    ஒரு கதையையோ, பாடலையோ எழுத ஆரம்பித்தபின், பாதியில் எப்படித் தொடர்வது என்று எனக்குப் புரியாதுபோகும். அதை அப்படியே விட்டுவிட்டு, வேறு காரியங்களில் கவனம் செலுத்துவேன். ஓரிரு மாதங்கள் கழிந்தபின், அது முற்றுப்பெற்றதும் உண்டு. இதனால், `பாதியில் நின்றுவிட்டதே! அப்புறம் என்னவென்று தெரியவில்லையே!’ என்று மனதைக் குழப்பிக்கொள்வது கிடையாது.

    நம் வாழ்வில் தினமுமே நம்மை ஆத்திரப்படவைக்கும், ஏமாறவைக்கும் சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றை அதிகம் பாராட்டாமல் இருந்தால் மனம் அமைதியாக இருக்கும்.

    வம்படித்துப் பொழுது போக்குகிறவர்

    நம்மை ஆத்திரப்படவைக்கிறாரா ஒருவர்?

    `அவருக்குத் தெரிந்தது அவ்வளவுதான்!’ என்று பெரியமனதுடன் விடவேண்டியதுதான்.

    பெண்கள் தமக்குப் பிடித்ததைப்பற்றியே பேசுவார்கள் என்று கூறுவதுண்டு. பிடிக்கிறதோ, இல்லையோ, கடந்த காலத்திலேயே நிலைத்திருப்பார்கள் சிலர். தம்மை நோகடித்ததைப்பற்றி, பலமுறை, பிற பெண்களிடம் கூறிக்கொள்வார்கள். அப்போது கிடைக்கும் அனுதாபம் அவர்களுக்கு அன்பாகத் தோன்றிவிடும்.

    அதேபோல், பிறர் வாழ்வில் நடந்த அசம்பாவிதங்களைப்பற்றியும் தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள். அப்போதுதானே, `நல்லவேளை, நமக்கு இப்படி நிகழவில்லையே!’ என்று திருப்தி அடையமுடியும்?

    “உன் மகனைப்பற்றிச் சொல்!” என்றாள் என்னுடன் எப்போதோ வேலைபார்த்த ஒருத்தி, சற்று அதிகாரமாக. அவன் மறைந்ததைப்பற்றி அவளுக்குத் தெரிந்திருந்தது. அவளைப் பொறுத்தவரை, பொழுதைப் போக்க அது ஒரு வழி. அவ்வளவுதான்.

    அது புரிந்து, “ஸாரி. நான் அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை,” என்று முகத்தில் அடித்தாற்போல் கூறிவிட்டு, அப்பால் நகர்ந்தேன், தான் அலட்சியமாக நடத்தப்பட்டுவிட்டோமே என்ற அதிர்ச்சியை அவளுக்கு அளித்துவிட்டு.

    நம்மைப் பாதித்ததைப்பற்றி ஓயாது பேசினாலோ, வருந்தினாலோ அதன் பாதிப்பு குறைந்துவிடப்போவதில்லை. ஒவ்வொரு முறையும் மேலெழுந்து, நம்மை வாட்டும். மாற்ற முடியாததை ஏற்பதைத்தவிர வேறு என்ன செய்யமுடியும்?

    நம் துயரத்தைப் புரிந்துகொள்கிற ஓரிருவரிடம் மட்டும் கூறுவதுதான் விவேகம். ஆறுதல் கிடைக்கும்.

    ஏமாற்றத்தின் விளைவுகள் பலவிதம்

    சிறுவயதில் நாம் எதையாவது அடைய விரும்பி, அது கிடைக்காமல் போனால் ஏமாற்றம் விளையும். வளர்ந்தபின்னும் அதே மனநிலை இருந்தால் திண்டாட்டம்தான்.

    மன நிலை பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் நீண்டகாலம் தங்கியிருந்த ஓர் இளைஞனைப் பார்த்தேன்.

    தெரிந்த கதைதான். ஒரு பெண் அவனைக் காதலிப்பதாகச் சொல்லி நம்ப வைத்துவிட்டு, பிறகு ஏமாற்றிவிட்டாள்.

    நன்றாகப் படித்துக்கொண்டிருந்தவனுக்கு அதற்குப்பின் எல்லாவற்றிலும் ஆர்வம் போயிற்று.

    இதேபோன்று, ஒரு பெண் ஏமாற்றப்பட்டபோது, அவளுடைய நெருங்கிய தோழிகள் இருவர், `இது உன் தவறல்ல. உன் வாழ்க்கை இத்துடன் முடிந்துவிடவில்லை,’ என்று ஆதரவாக இருந்தனர்.

    பிறகு, வேறு ஒருவரைக் கல்யாணம் செய்துகொண்டாள். எப்போதாவது மனம் உறுத்தும். ஆனால், தனக்குப் பிடித்த பொழுதுபோக்குகளில் ஈடுபட்டு, அதைச் சமாதானப்படுத்திக்கொள்ள அவளுக்குத் தெரிந்திருந்தது.

    பல வருடங்கள் கழிந்ததும், `அந்த கயவன் செய்த காரியத்துக்காகவா அவ்வளவு வருத்தப்பட்டேன்!’ என்று தோன்றிப்போயிற்று.

    எதிர்மறையான உணர்வுகள் நம்மைத் தாக்கும்போது ஆக்கபூர்வமான, கடினமான எதையாவது செய்தால் மனநிலையில் மாற்றம் உண்டாகும். தோட்டவேலை, விளையாட்டு, நாட்டியம் – இப்படி அவரவர்களுக்குப் பிடித்தது ஏதாவது இருக்காதா?

    பொறுக்க முடியாததைப் பொறுத்தபின்

    வெளிநாட்டுக்கு உத்தியோக நிமித்தம் செல்பவர்களுக்கு, `வாழ்க்கை இத்தனை கடினமானதா!’ என்ற அயர்ச்சி உண்டாகும். புதிய இடம், வசதியின்மை, கலாசார மாறுபாடு, உறவினரைப் பிரிந்து, தனிமையில் வாடவேண்டிய கொடுமை என்று எவ்வளவு இல்லை!

    எப்படியோ சகித்துக்கொண்டு காலத்தை ஓட்டியபின், `நாம் எத்தனை இடர்களைத் தாங்கி, அவைகளைக் கடந்து வந்திருக்கிறோம்!’ என்ற மலைப்புடன், பெருமையும் எழும். பிறருக்கு ஆலோசனை கூறும் அளவுக்கு உயர்ந்திருப்பார்கள்.

    உனக்காகவும் நேரம் ஒதுக்கு

    நான் உத்தியோகம் பார்த்த காலத்தில், திங்கட்கிழமையிலிருந்து, சில சமயம், சனிக்கிழமைகூட வேலை செய்ய வேண்டியிருக்கும். எனக்கென்று ஞாயிற்றுக்கிழமையை ஒதுக்கி இருப்பேன் — கூடியவரை, அன்று பகலில் வெளியில் போவதைத் தவிர்த்துவிட்டு.

    இது சுயநலமா? எனக்கு முக்கியமான, பிடித்த காரியங்களில் நேரத்தைச் செலவிட முடிகிறதே!

    பிறருக்குப் பயந்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்துவிட்டு, மகிழ்ச்சியின்றி எதற்கு வாழ்வது?

    Share