தனிமை
சு. திரிவேணி
கோயம்புத்தூர்
தனித்திருக்கிறேன் நான்
கருவுக்குள் இருக்கும்
கருவைப் போல.
கவசமாய்த் தனிமை என்னைக்
காத்து நிற்கிறது
உலகச் சுழல்கள் தீண்டாத
பாதுகாப்பான இடத்தில்
நானிருக்கிறேன் வாழும் பொருட்டு
சாகுமளவு போராட்டம்
தேவையாய் இருப்பதில்லை
எந்த வரவையும்
இயல்பாய் ஏற்க முடிகிறது
யாரையும் பயமின்றிப்
பார்க்க முடிகிறது
சுதந்திரமாய்
சுவாசிக்கவும் வாசிக்கவும்
ஏற்ற சூழல்
யாருமற்ற தனிமைதான்
என் வாழ்வையும் நேரத்தையும்
யாரும் ஆக்கிரமிக்காமல்
காத்துக் கொள்ளும்
மெத்த மகிழ்ச்சி
தருவதிந்தத் தனிமைதான்
ஆனாலும்
மனதை உறுத்துவது
பரிதாபம் காட்டும் உங்கள் விழிகளே!
