Blog

  • தமிழார்வம்: ‘திரிகடுகம் போலும் மருந்து’

     

    இன்னம்பூரான்

    1.1. பதினென் கீழ்க்கணக்கு என்ற சங்க கால இலக்கியத்தின் பிரிவில், நீதி நூல்கள் பல காணக்கிடைக்கின்றன. அவற்றில் திருக்குறள் மிகவும் பேசப்பட்ட, பற்பல உரைகள் கண்ட நீதி நூல். மற்ற நீதி நூல்களில், அக்காலத்திலேயே தமிழன் கண்டறிந்து பொருத்தமாக கையாண்டு பயன் பெற்ற மூலிகைகளை முன்னிறுத்தி அறிவுரை அளித்த நீதி நூல்கள் மூன்று. அநேகமாக யாவரும் அறிந்த மூலிகைகள் ஆன சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றும் வாழ்வாதாரம் தருபவை என்றால் மிகையாகாது. எனவே, நல்லாதனார் (நல்ல ஆதனார்: கி.பி. இரண்டாம் நூற்றாண்டு) இயற்றிய திரிகடுகம் (‘திரிகடுகம் சுக்கு மிளகு திப்பிலி’ என்கிறது, திவாகரம்.) என்ற நூல், இந்த ‘தமிழார்வ’ இழைத்தொகுப்பை ஆரம்பித்து வைப்பது, ஒரு நன்நிமித்தம். இந்த முயற்சியில், எனக்கு உறுதுணை: திருக்கோட்டியூர் இராமானுசாச்சாரியார்  செய்த உரை ( இனி: உரை): ஶ்ரீல.ஶ்ரீ. ஆறுமுக நாவலர் அவர்களின் பொருட்டு திரு.கா.சுப்ரமண்ய பிள்ளை 1934ல் பதித்தது  & வித்துவான், நாவலர் பு.சி. புன்னைவனநாத முதலியாரவர்களின் விருத்தியுரை (இனி:விருத்தியுரை):( சென்னை : திருநெல்வேலி,தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , 2003.) அவை இணைய தளத்தில் கிடைக்கின்றன. நிறைகள் அவர்களது. குறைகள் எனது. அவர்களிருவருக்கும் என் நன்றி உரித்ததாகுக.

    1.2. இந்த நூலை உயிர் மருந்து நூல் எனலாம். எடுத்தவுடனேயே, முதற்பாடலிலேயே ‘திரிகடுகம் போலும் மருந்து’ என்று நல்ல ஆதனார் பெயர்க்காரணத்தை உணர்த்துகிறார். திரிகடுகம் காப்புச் செய்யுள் உட்பட 101 வெண்பாக்களைக் கொண்டது. இம்மைக்கும் (கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் வகையறா) மறுமைக்கும் (அவாவறுத்தல், மெய்யுணர்தல் வகையறா) ஏற்புடைய நல்வழிகளை உணர்த்தி அறம் சாற்றும் நூல், இது. ‘இல்லறமல்லது நல்லறமன்று’ (கொன்றை வேந்தன் 3: ஒளவையார்)என்பதை 35 இடங்களில் படித்துப் படித்து சொல்லும் இந்த நூலின் ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன. அவற்றின் கோர்வை ஒரு தனிச் சிறப்பு. அவற்றின் தொடர்பாகவே, ஈற்றடியில் ஒரு பொதுக்கருத்து சொல்லப்படுவது, மேலும் ஒரு சிறப்பு.

    1.3. திரிகடுகம் அறம் சாற்றும் நூல். ‘அறம் செய்ய விரும்பு’ (ஆத்திச்சூடி 1: ஒளவையார்) என்று வழி காட்டும் நூல். நல்லறம் என்பது அறங்கள் பலவற்றின் ஒரு தொகுப்பு. இந்நூலின் அமைப்பு ஒரு குறித்த வரையறையுடன் அமைந்துள்ளது. அங்குமிங்குமாக, அவற்றில் சிலவற்றை முன் நிறுத்துவதை விட, நல்லாதனரின் பட்டியலை அனுசரித்து, அவருடைய வரிசைப்படி பயணித்து அவற்றை புரிந்து கொள்வது நலன் பயக்கும் என்பது என் கருத்து. அவ்வாறே செயல்படுகிறேன்.

    1.4. இறை வணக்கத்தில் துவக்குவது சங்ககாலத்திலிருந்து தமிழ் மரபு. அந்த காப்பு செய்யுட்களின் தனித்துவம் போற்றத்தக்கது. கடவுள் வணக்கம் இருவகைப்படும் ~ ஏற்புடைக் கடவுள் வணக்கம், வழிபடு கடவுள் வணக்கம். வழிபடுகடவுள் வணக்கம், இங்கே. காத்தற் கடவுளும் அந்த திருமாலே. இக் கடவுள் வாழ்த்துப் படர்க்கையிற் கூறப்பட்டுள்ளது; பிள்ளையாரும் சிறப்பாக வேண்டப்படுபவர் என்றும் பாடமுண்டு.

    1.5. நல்லாதனார் ‘திரிகடுகத்தின்’ காப்பு செய்யுளில், தர்ம சாஸ்திரத்தின் சிருஷ்டிகர்த்தாவான கிருஷ்ண பகவானின் புகழ் பாடுகிறார். திருமாலின் லீலாவிநோதங்களில், வாமனாவதாரமும், குருந்தை மரத்தை முறித்ததும், மாயச்சகடம் உதைத்ததும் பாலகர்களுக்குக் கூட தெரியும். அவற்றை கூறி, அந்த ‘பூவைப்பூ வண்ணன் அடி’ போற்றி வணங்குகிறார், நல்லாதனார். இதனால் அவர் வைணவமரபைச் சார்ந்தவர் என்போர் உண்டு.  எடுத்துக் கொண்ட இந்த நூல் இனிது வர வேண்டி இச் செய்யுளால் கடவுள் வணக்கம் செய்யப்பட்டது. இனி வரும் பாடல்களில் மூன்று மூன்று கருத்துக்களும், ஈற்றடியில் ஒரு பொது கருத்தும் கோர்க்கப்படுவது போல, இங்கும் மூன்று லீலாவிநோதங்களும், ஈற்றடியில் வணங்குதலும் பயின்று வரும் நுட்பத்தைசுவைப்போமாக.

    திரிகடுகம்
    காப்பு

    கண்ணகல் ஞாலம் அளந்ததூஉம் காமருசீர்த்

    தண்ணறும் பூங்குருந்தம் சாய்த்ததூஉம் –

    நண்ணிய மாயச் சகடம் உதைத்ததூஉம்

    இம்மூன்றும் பூவைப்பூ வண்ணன் அடி.

    1.6. உரைகளிலும் நடையழகு காணலாம். சான்றாக, இந்த மூன்று செயல்களையும் ‘அளந்த பொருள் (மூவுலகம்),சாய்த்த பொருள் (மரம்), உதைத்த பொருள் (சகடம்) என்று கூறுவர். இறைவனின் குணாதிசயங்களை ஒரு வரையறைக்குள் திணித்து வைக்கமுடியாது என்றாலும், ஒரு அனுபவ சுவை தென்படுகிறது, விருத்தியுரையில் கூறிய மாதிரி: திருமால் ஞாலத்தை அளந்தது பேரருளால். மரத்தை வீழ்த்தியது ஒரு பேராற்றல். சகடத்தை உதைத்து பேரறிவினால்(சமயோசிதம்). இறைவனின் குணாதிசயங்களை இவ்வாறு வருணிப்பது ‘பரிபாடல்’ என்ற சங்ககாலத்து பக்தி பாடலை நினைவுறுத்துகிறது.

    1.7. தற்காலத்தில் இலக்கியம் படிப்பவர்கள் குறைவு என்ற கருத்து நிலவுகிறது. இலக்கணம் என்றால் பிடி ஓட்டம்! ஆனால் நண்பர்களே, தமிழிலக்கணத்தின் சுவை அருமையானது. இது ஒரு சிறிய குறிப்பு கடுதாசி என்பதால், ஆங்காங்கே விருத்தியுரை அளித்துள்ள இலக்கண குறிப்புகளில் சிலவற்றை பகிர்ந்து கொள்கிறேன். # சான்றாக: ‘அளந்ததூஉம்/ சாய்த்ததூஉம்/உதைத்ததூஉம்’ என்று வசன நடையின் புழக்கத்தில் இல்லாத ‘உம்’மில் முடிப்பது ஒரு ஒலி உத்தி. பாடலில் இன்னிசை கூடி வருவதற்காக, தமிழிலக்கணம் அனுமதிக்கும் இந்த அலங்காரத்துக்கு, இன்னிசையளபெடை என்று பெயர். வினையாலணையும்பெயரென்பர். செய்யுளில் செவிக்கு இனிய ஓசை தரும்பொருட்டு குற்றெழுத்து நெடிலாகி அளபெடுக்குஞ் சொல்லில் “உ” எனும் உயிரெழுத்து இருக்கும். அச்சொல் மூவசைச் சீராக இருக்கும்.‘அளந்ததூஉம்’ என்ற தொடரில் “து” எனும் குறில் “தூ” என நெடிலாகி அளபெடுத்துள்ளது.  #காமரு  என்னும் உரிச்சொல் உகரச்சாரியை பெற்று ‘காமரு’ ஆயிற்று.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    28.10.2012

    சித்திரத்திக்கு நன்றி: http://img1.dinamalar.com/admin/Bookimages/247713.jpg

     

    Share
  • சொர்க்க வாசல்

    தமிழ்த்தேனீ

    இன்னிக்கு வைகுண்ட ஏகாதசி, நாங்க எல்லாரும் கோயிலுக்குப் போயி சொர்க்கவாசல் திறந்தவுடனே சுவாமியை நமஸ்காரம் செஞ்சிட்டு வரோம். வீட்டிலேயே இருங்க, கதவைத் தாப்பாள் போட்டுக்குங்க, போயிட்டு வந்துடறோம் என்றபடி கிளம்பினர் வீட்டிலுள்ள அனைவரும்.

    பெரியவர் ராமசாமிக்கு 88 வயசு காது கேக்கலை, கண்ணும் சரியாத் தெரியலை அவஸ்தைப் படறாரு. காலாகாலத்திலே மனுஷன் சீக்கிரமா போய்ச் சேர்ந்தா நல்லா இருக்கும் பாவம் என்று அங்கலாய்த்தாள் பக்கத்து வீட்டு பர்வதம்.

    அவருக்கு சொர்க்க வாசலை அடையும் நேரம் வந்து விட்டது. இவர்களுக்கு தெரியவில்லை என்று எண்ணமிட்டார் பெரியவர் ராமசாமி. அனுதாபச் சொற்கள் காதிலே விழவில்லை. அவர் மனம் பரபரத்துக் கொண்டிருந்தது.

    ஆயிற்று பொழுது விடிந்து ஆறு மணி ஆகிவிட்டது. திறந்திருப்பான் சொர்க்க வாசலை. கிளம்ப வேண்டியதுதான். நேத்து இராத்திரிலேருந்து தூக்கமே வரலை. புரண்டு புரண்டு படுத்து எப்போ விடியும்ன்னு காத்திட்டே இருந்து ஒவ்வொரு நிமிஷமும் ஒரு யுகமாகக் கழிச்சு தூங்காமல் அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார் .

    இன்னும் நுண்ணிய உணர்வு ஒட்டிக் கொண்டிருக்கிறதே, அதை வைத்து ஒரு துண்டை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு சந்தடி இல்லாத நேரமாய்ப் பார்த்து கிளம்பினார். தட்டுத் தடுமாறி மாடிப்படியில் இறங்கி வாயிலைக் கடந்து தெருவில் இறங்கி ஓரமாகவே நடந்து போய் அவருடைய சொர்க்கவாசலில் நின்றார்.

    அவருடைய சொர்க்க வாசல் திறந்திருப்பானா? சரியாக நேற்று ராத்திரி படுக்கப் போகும்போது கடைசீ துளியும் தீர்ந்து விட்டது.இன்னிக்கு விட்டா ஒரு நாள் வீணாயிடுமே, இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது .நல்ல வேளை! ஆஹா திறந்திருக்கிறது. எதிரே போய் நின்று கையை நீட்டினார்.

    ஐயா வாங்க வாங்க காணுமேன்னு பாத்துகிட்டே இருக்கேன் இந்தாங்க கட்டி வெச்சிருக்கேன் என்றபடி கடைக்காரர் ராயர் நீட்டிய பொட்டலத்தை வாங்கி பிரித்து ஒரு சிட்டிகை மூக்குப் பொடியை கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே எடுத்து அப்படியே உல்லாசமாய் காற்றில் இரண்டு முறை உதறி ஆனந்தமாக மூக்கில் வைத்து உறிஞ்சிவிட்டு கையை துண்டால் துடைத்தார்.

    அந்தப் பொடி கொடுத்த கிறக்கத்திலும் தள்ளாடாமல் மீண்டும் நிதானமாக ஒரு குத்து மதிப்பாக நடந்து வீட்டிற்கு வந்து மாடிப்படி ஏறி அவர் படுக்கையில் உட்கார்ந்து மிக கவனத்துடன் அந்த மூக்குப் பொடி பொட்டலத்தை பிரித்து, எப்போதும் பத்திரமாக வைத்திருக்கும் ஹார்மோனியப் பொட்டி போல் திறந்து மூடுகின்ற மாட்டுக் கொம்பினால் ஆன, அந்தச் சின்னப் பெட்டியில், சிந்தாமல் சிதறாமல் போட்டு அதைப் பத்திரமாக மூடி தலைகாணிக்கு அடியில் வைத்துவிட்டு நிமிர்ந்தார்.

    அவரையே குற்றப் பார்வையுடன் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள் மருமகள் மீனாக்ஷி. அந்தப் பார்வைக்கு பொருள் அவருக்கு தெரியும். “எத்தனை தடவை சொல்றது, ஏதாவது வேணும்னா எங்க கிட்ட சொல்லுங்களேன் நீங்க எங்கேயாவது போயி விழுந்து வெச்சா யாரு அவஸ்தைப் படறது, சொன்னா ஏன் கேக்க மாட்டேங்கறீங்க”, என்றாள் அவள்.

    அதற்கு பதில் சொல்லாமல் ஒரு அசட்டுச் சிரிப்புடன் தலைகாணியில் தலை வைத்து நிம்மதியாகத் தூங்கத் தொடங்கினார் ராமசாமி. குறட்டை எட்டு ஊருக்கு கேட்கத் தொடங்கியது.

    Share
  • சட்டம் ஆலோசனைகள் (17)

    மோகன் குமார்

    கேள்வி : சுதாகர் சென்னை 

    வணக்கம். என் பெயர் சுதாகர். என் மாமனார் பெயரில் அவருடைய அப்பா எழுதி வைத்த வீடு உள்ளது. தற்போது அவருடைய தம்பி அந்த வீட்டில் குடி இருந்து கொண்டு வீடு எனக்கு வேண்டும் என்று சண்டைஇடுகிறான். அதனால் அந்த சொத்தை என் அப்பா பெயரில் எழுதி வைத்து விற்று கொடுக்கும் படி கூறினார். தற்போது எல்லா ஆவணங்களும் என் அப்பா பெயரில் உள்ளது. இருப்பினும் என் மாமனாரின் தம்பி அந்த வீட்டை விட்டு போக மறுக்கிறான். தயவு செய்து உரிய ஆலோசனை கூறவும்.

    பதில் : 

    ஒரு தந்தை சுய சம்பாத்தியத்தில் சம்பாதித்த சொத்தை ஒரு மகனுக்கு மட்டும் எழுதி வைத்துள்ளார். இன்னொரு மகன் அங்கு இருந்து கொண்டு காலி செய்ய மாட்டேன் என்று சொத்தில் உரிமை கோருகிறார். 

    தற்போது சொத்து உங்கள் தந்தை பெயரில் உள்ளது என்கிறீர்கள். உங்கள் தந்தை குறிப்பிட்ட நபரை காலி செய்ய சொல்லி நோட்டிஸ் அனுப்ப வேண்டும். அவர் ஒரு Permissive occupier தான். அவரை தற்காலிகமாக தான் அங்கு தங்க அனுமதி தரப்பட்டது என்றும், உடனடியே தங்கள் உபயோகத்துக்கு தேவை என்பதால் காலி செய்ய வேண்டும் என்றும் நோட்டிஸ் அனுப்புதல் நலம்.  

    அவர் காலி செய்யாத பட்சத்தில்  Ejection -க்கு   வழக்கு தொடுக்க வேண்டியிருக்கும். முதலில் செய்ய வேண்டியது அவருக்கு நோட்டிஸ் அனுப்பவது தான். 

    நீங்கள் உடனடியாக ஒரு வழக்கறிஞரை அணுகி இது சம்பந்தமாக பேசி நடவடிக்கை எடுக்கவும். 

    **********

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் …………………….. (29)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    வணக்கங்களுடன் மனதின் மற்றொரு பக்கம் திறக்கிறது. மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாதது முதுமை. ஏழை, பணக்காரன், ஜாதி,மதம் என வேறுபாடு இன்றி அனைத்து மக்களையும் அணுகுவது முதுமை.

    இந்த முதுமையை நாம் எவ்வாறு அணுகுகிறோம்?

    பத்துகளின் முடிவில் இங்கிலாந்து நாட்டினுள் கால்வைத்த நான் இன்று ஐம்பதுகளின் நடுவில் அலசிக் கொண்டிருக்கிறேன்.

    வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று அறிவுரை சொல்லக்கூடிய வகையில் நான் ஒரு அறிஞனோ அன்றி ஒரு தத்துவஞானியோ அல்ல. வாழ்க்கையின் சகல திக்குகளுக்குள்ளும் நுழைந்து படக்கூடாத அடியெல்லாம் பட்டு தவற விடக்கூடாத சந்தர்ப்பங்களையெல்லாம் தவற விட்டு பட்டுத் தெளிந்த சாதாரண அனுபவவாதியாகவே இருக்கிறேன்.

    நான் ஒரு வாலிபனாக உடலில் இளரத்தம் துள்ளிப் பாய்ந்து கொண்டிருந்த போது வாழ்வில் அனுபவ முதிர்ச்சியடைந்தவர்களை நோக்கிய எனது பார்வை எப்படியிருந்தது எனும் அடிப்படையில் வாழ்வின் முதுமையை நோக்குகிறேன்.

    வயதில் மூத்த பலர் எனது தந்தை உள்ளடங்க அன்றைய காலகட்டத்தில் எனக்கு அறிவுரை என்று வழங்கிய அனுபவ மொழிகளை அதற்குரிய கெளரவத்தோடு ஏற்றுக் கொண்டேனா? எனும் கேள்விக்கு இல்லை என்பதுவே எனது உள்ளத்தில் இருந்து பிறக்கும் உண்மையான பதிலாகும்.

    கண்மூடித்தனமாக அவசரத்தில் எடுக்கும் முடிவுகளின் பலாபலன்களை அனுபவரீதியாக அவர்கள் விளக்க முற்பட்டபோது அதை அவர்கள் எனது முன்னேற்றப்பாதையில் போடும் தடைக்கற்களாகக் கருதிய காலங்களும் உண்டு 

    கவியரசர் கண்ணதாசன் ஓரிடத்தில்,

    “எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் நான் வாழ்ந்திருக்கிறேன். அதனால் இப்படித்தான் வாழ வேண்டும் என்று சொல்லும் யோக்கிதை எனக்குண்டு ” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

    அவரது அந்த வரிகளில் புதைந்திருக்கும் உண்மை, அனுபவத்தின் அனுகூலத்தை, அனுபவத்தின் அதிசயத்தை ஆழப் பறைசாற்றி நிற்கிறது.

    ஆனால் நான் வாழும் இந்த இங்கிலாந்து நாட்டிலோ அன்றி நாம் தளிர்த்த பின்புல நாடுகளிலோ முதுமையின் மொழிகளுக்கு சரியான கெளரவம் அளிக்கப்படுகிறதா ? மிகவும் ஆழமாக இளையதலைமுறையினரால் தீர்க்கமாக விவாதிக்கப்பட வேண்டிய விடயம்.

    உடலில் வலுவிருக்கும் காலமெல்லாம் உழைத்து விட்டு, தமது அந்திமக் காலத்தில் ஓய்வூதியத்தை எதிர்பார்த்து ஓய்வு வாழ்க்கையை ஒருவர் தேர்ந்தெடுத்து விட்டால் அவரது உபயோகம் முடிந்து விட்டதா? சமுதாயத்தின் ஓரத்தில் மெளன‌மாக உட்கார்த்தி வைக்கப்பட வேண்டியவராகிறாரா ?

    இதுவே இன்றைய சமூகத்தின் முன்னால் நிற்கும் பூதாகரமான கேள்வி.

    அவசரமாக உருளும் இந்த உலகில் காலமாற்றம் என்பது தவிர்க்கப்படமுடியாத ஒன்று. காலத்தின் முன்னேற்றமும் அக்காலமாற்றத்தின் விளைவுகளால் ஏற்படும் சமுதாயத் தேவைகளின் மாற்றமும் பலபுதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்குக் காரணமாகின்றன.

    இவ்விஞ்ஞான முன்னேற்றத்தை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள், இவற்றிற்கு அப்பாற்பட்டவர்கள் என்று வயதில் முதிர்ந்தவர்களை ஒதுக்கி வைக்கும் பழக்கத்தை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.

    சுமார் 13 வருடங்களின் முன்னால் காலமான என் தந்தையின் மனதில் அனைத்தையும் பற்றி ஓரளவு அறிந்து வைத்த தனக்கு கணினியைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வம் எழுந்துள்ளது என்று என்னிடம் கூறியபோது நான் அதை எத்தனை முக்கியமாக எடுத்தேன் என்பது எனக்கு இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    எனது தந்தை வாழந்த வாழ்க்கைமுறைகளை, அதற்காக அவர் கடைப்பிடித்த நெறிமுறைகள், அவர் வாழ்க்கையில் நடந்த எளிமையான பாதை, எதிர்கொண்ட தடங்களை எதுவித வலியுமின்றி அவர் கையாண்ட முறைகள் இவையனைத்தும் அவரின் மறைவுக்குப் பின்னால் எனக்கு ஆழ்ந்த அதிசயமாகப் படுகின்றது.

    ஏனென்கிறீர்களா?

    இன்று நானும் ஒரு தந்தையாக வாழ்வின் பல நெளிவு சுளிவுகளை அறிந்தவனாக பல அனுபவ அடிகளைப் பெற்றுக் கொண்ட ஒரு முதுமை வாசலுக்குள் காலடி வைத்த காரணமே !

    நான் விஞ்ஞானத்தில் எவ்வளவோ முன்னேறியிருக்கலாம், காலம் எத்தனையோ மாற்ற‌ங்களுக்கு உள்ளாகியிருக்கலாம். ஆனால் அவையெல்லாம் எமக்கு ஒரு புதிய தாய், தந்தையைரை உருவாக்கித் தந்து விட முடியுமா?

    முதுமை அளிக்கும் ஞானத்தை விஞ்ஞானம் ஆக்கிக் கொடுத்து விட முடியுமா? இந்த உண்மையை இன்றைய இளைய சமுதாயம் எத்தகைய அளவில் உள்வாங்கியிருக்கிறது என்பது கேள்விக்குறியே !

    பெரும்பான்மையாக பின்புலத்தில் வாழும் பெற்றோர்கள் தமது இளைப்பாறும் காலத்திற்காக என்று எதையும் சேர்த்து வைக்காமல் தமது எதிர்காலத்தை தமது குழந்தைகளின் முன்னேற்றத்தில் அடகு வைத்து விடுகிறார்கள். ஆனால் அவர்களின் இந்தத் தியாகத் தன்மையை, அவர்களது  குழந்தைகள், வளர்ந்து பெரியவர்களாதும் சரியான வகையில் புரிந்து கொள்கிறார்களா என்பது கேள்விக்குறியே !

    எங்கே?, எப்போது?, எப்படி? எனும் கேள்விகள் மனதில் எப்போதும் ஓங்கி ஒலித்துக் கொண்டேயிருக்கும்.

    மிகவேகமாக எமது பின்புலங்களில் வளர்ந்து வரும் முதியோர் இல்லங்கள் உணர்த்துவது என்ன?

    எம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களிடமிருந்து அவர்களின் ஓய்வுக்காலங்களில் நாம் எதிர்பார்ப்பது மிகையானவையே !

    பல சந்தர்ப்பங்களில் கூட்டுக் குடித்தனம் நடத்தும் இடங்களில் தமது குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்புக்களையும், சமையல் பொறுப்புகளையும் தம்முடன் வசிக்கும் ஓவ்வு பெற்ற பெற்றோர் வசம் ஒப்படைக்கும் நிலையைக் காண்கிறோம்.

    அப்படி ஒத்துழைப்புக் கிடைக்காத இடத்தில் அவர்கள் முதியோர் இல்லங்களை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.

    வாழ்க்கையின் அதிமுக்கிய திருப்பங்களில் முதியவர்களின் அறிவுரைகள் பல இடர்களைத் தவிர்க்கக்கூடிய சந்தர்ப்பங்களைக் கொடுக்கிறது. தமது உடலில் வலுவுள்ளவரை உழைத்து களைத்துப் போனவர்கள் வாழ்க்கையின் வளமான பாகத்தைச் சுவைக்கக்கூடிய சந்தர்ப்பங்களை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது இளைய சமுதாயத்தின் கடமையாகிறது.

    எனது இன்றைய அனுபவத்தில் புலம்பெயர்ந்த எமது சமுதாயங்களில் கூட பெற்றோரைத் தமது குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பை ஒப்படிக்கும் ஒரு சந்தர்ப்பமாகவே இளம் தலைமுறையினர் கருதுவது போலத் தோன்றுகிறது.

    அதேசமயம் தமது பேரக்குழந்தைகளைப் பராமரிப்பதையும், தமது பிள்ளைகளின் குடும்பத்தில் அவர்களுக்குத் துணையாக ஒத்தாசைகளைப் புரிவதையும் மிகவும் விரும்பித் தாமாகவே ஏற்றுக் கொண்டு வாழும் முதியோர்கள் பலருண்டு.

    அதேபோல தமது பெற்றோர் தமது ஓய்வுக் காலங்களில் எவ்வித சுமைகளுமின்றி வாழ்வைச் சுவைக்க வேண்டும் என்று எண்ணி அவர்களுக்கு அதற்கான வசதிகளைச் செய்து கொடுக்கும் பிள்ளைகள் இல்லாமலில்லை.

    அது மட்டுமல்ல !

    பல சந்தர்ப்பங்களில் தாம் முதுமையெய்தி விட்டோம் இனி தம்மால் இச்சமுதாயத்திற்கு எதையும் கொடுக்க முடியாது தாமாகவே ஒதுங்கிக் கொள்ளும் முதியவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    முதுமை என்பது நோயல்ல அது இயற்கையின் நிகழ்வு அதை நாமனைவரும் மறந்து விடக்கூடாது.

    கவியரசரின் வரிகள்

    “கடந்தகாலமோ திரும்புவதில்லை
    நிகழ்காலமோ விரும்புவதில்லை
    எதிர்காலமோ அரும்புவதில்லை
    இதுதானே அறுபதின் நிலை “

    என்பவை இத்தகைய சூழலைப் புரிந்து கொள்ளத்தான் வரையப்பட்டதோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • மாற்று(ம்) திறனாளி

    முகில் தினகரன்

    மாலை ஏழு மணிவாக்கில் வீடு திரும்பிய குணசேகர் உள்ளே வரும் போதே ‘செல்விக்குட்டி….அப்பா உனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் கண்டுபிடி’ என்று கூவிக்கொண்டே வந்தார். இரண்டு கைகளும் பின்புறம் எதையோ மறைத்துக் கொண்டிருந்தன. ஆனால் சோக முகத்துடன் சோபாவில் அமர்ந்திருந்த எட்டு வயது செல்வியின் முகத்தில் எந்தவித சலனமும் இல்லை.

    ‘அடடே…என் ராசாத்திக்கு ஏதோ கோவம் போலிருக்கே..’ என்றபடி அவள் அருகில் அமர்ந்து அவள் தாடையைத் தொட்டு;த் தூக்கி ‘ஏண்டா செல்லம்…அம்மா திட்டிட்டாளா?’

    அது இட, வலமாய்த் தலையாட்டியது.

    ‘இல்லையா?…அப்ப ஸ்கூல்ல…டீச்சர் திட்டினாளா?’

    ‘ம்ஹூம்’ என்றவாறு உள் அறையில் தரையில் அமர்ந்து எதையோ வரைந்து கொண்டிருந்த தங்கை நிர்;மலாவைக் காட்டினாள்.

    செல்வியும் நிர்மலாவும் இரட்டைகள். ஓரே அச்சில் வார்த்தாற் போல் ஒரே நிறத்தில்….ஒரே பருமனில்….ஒரே உயரத்தில் இருக்கும் அவர்களிடத்தில் ஒரே வித்தியாசம் சின்னவள் நிர்மலாவின் வலது கால் கணுக்கால் பகுதி சற்று வளைந்திருப்பதும்….அதன் காரணமாய் அவள் நடக்கும் போது சற்று விந்தி விந்தி நடப்பதும்தான். பாவம் சிக்கலான ஆயுதப் பிரசவ போராட்டத்தின் விளைவு அது.

    சின்னவளை அவள் சுட்டிக் காட்டியதன் மூலம் நிலைமையை ஓரளவு யூகித்துக் கொண்ட குணசேகர் ‘ஓ….தங்கச்சிப் பாப்பா உன் கூட சண்டை போட்டுட்டாளா?’

    மறுபடியும் செல்வி இட, வலமாய்த் தலையாட்ட,

    ‘அய்யய்யோ…ஒண்ணும் புரிய மாட்டேங்குதே!’ என்று தலையைப் பிய்த்துக் கொண்டவர் சமையலறைப் பக்கம் திரும்பி ‘கலா…ஏய் கலா…’ மனைவியை அழைத்தார்.

    ‘என்னங்க…?’

    கையைத் துடைத்தபடி வந்தவளிடம் கேட்டார் ‘ஏண்டா செல்விக்குட்டி சோகமா இருக்கா?’

    ‘அதையேன் என்கிட்டக் கேட்கறீங்க…அவகிட்டவே கேளுங்க…’

    ‘அதுதான் வாயைத் திறந்து பேசவே மாட்டேங்குதே..’

    ‘என்ன?…பேச மாட்டேங்குதா?….அது செரி..இத்தனை நேரம் என்கிட்ட சரிக்கு சரி பேசி சண்டை போட்டாளில்ல…அதுல வாய் வலி கண்டிருக்கும்..’

    ‘ஓ…அப்ப நீதான் சண்டை போட்டிருக்க…’

    ‘அய்யய்யோ…சாமி…என்னை ஆளை விடுங்க..எனக்கு வேலையிருக்கு’ சொல்லிவிட்டு சமையலறையை நோக்கி அவள் ஓட்டமாய் ஓடி விட, உள் அறையிலிருந்து விந்தி விந்தி நடந்து வந்த சின்னவள் நிர்மலா குணசேகரின் தோளைத் தொட்டு ‘டாடி..நான் சொல்றேன்…’ என்றாள்.

    ‘சொல்லுடா…என் தங்கம்’

    ‘வந்து…வந்து….ஸ்கூல்ல பரத நாட்டியம் சொல்லித் தர்றாங்க…மாசம் ஐநூறு ரூபா ஃபீஸ்…’

    ‘அவ்வளவுதானே?…நான் சொல்றேன் நீ சேர்ந்துக்கடா செல்லம்…’ என்றான் குணசேகர் செல்வியைப் பார்த்து,

    அதுவரை அமைதி காத்து அமர்ந்திருந்த செல்வி திடீரென்று ஆவேசமாகி ‘நீ என்னைச் சேரச் சொல்லுறே…ஆனா இந்த அம்மா….என்னைய சேர வேண்டாம்…தங்கச்சி மட்டும் சேரட்டும்னு சொல்லுறா…’

    ‘சரி…சரி…ரெண்டு பேருமே சேருங்க…’

    ‘அது செரி…ரெண்டு பேருக்கு மாசம் ஆயிரம் ரூபாயை டான்ஸ் க்ளாஸூக்குக் குடுத்துட்டு…பற்றாக்குறைக்கு எங்க போறது?..ம்ஹூம்…அதெல்லாம் சரிப்பட்டு வராது…ஏதோ ஒருத்திக்குன்னா…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணலாம்…’

    ‘அப்படின்னா பெரியவளைச் சேர்த்து விடலாமே…’

    ‘த பாருங்க…இந்த விஷயத்துல நான் எடுக்கறதுதான் முடிவு….சின்னவதான் சேர்றா…அவ்வளவுதான்…மேற்கொண்டு இதைப் பத்தி பேச வேண்டாம.;’ கறாராய்ச் சொல்லி விட்டு கணவன் அழைப்பதையும் செல்வி வாய் விட்டு அழுவதையம் சிறிதும் சட்டை செய்யாது சமையலறை நோக்கி நடந்தாள் கலா.

    ‘அன்னிக்கும் இப்படித்தான் டிராயிங் க்ளாஸூக்கு என்னை வேண்டாம்னுட்டு தங்கச்சிய சேர்த்து விட்டுச்சு….இப்ப டான்ஸ் க்ளாஸூக்கும் அதே மாதிரி செய்யுது இந்த அம்மா..’ அழுது ஆர்ப்பாட்டம் செய்த மூத்தவள் செல்வியை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது குணசேகருக்கு.

    ‘ச்சே…ஏன்தான் இந்தக் கலா இப்படிப் பிடிவாதம் பிடிக்கறாளோ?’

    இரவு. குழந்தைகள் இரண்டும் உறங்கியபின் தன்னிடம் வந்த கணவர் முகத்தை உற்று நோக்கினாள் கலா. அதில் வாட்டம் தெரிய அதற்கான காரணத்தை யூகித்துக் கொண்டவள் ‘என்னங்க…என் மேல் கோபமா?’ கேட்டாள்.

    ‘ம்ம்ம்…கோபம்னு இல்லை…ஒரு வருத்தம்…அவ்வளவுதான்..’

    ‘எனக்குத் தெரியும்…நான் பெரியவளை விட்டுட்டு சின்னவளை மட்டும் டான்ஸ் க்ளாஸ்ல சேர்த்து விடறேனே…அதுதான் உங்க வருத்தத்திற்குக் காரணம்….சரிதானே?’

    ‘ஆமாம்…அன்னிக்கு டிராயிங் க்ளாஸூக்கும் இப்படித்தான் செய்தே…ஏன்?…என்னாச்சு உனக்கு?’

    பதிலேதும் சொல்லாமல் மெலிதாய்ச் சிரித்தாள் கலா.

    அவளின் அச்சிரிப்பு அவனுள் கோபத்தை மூட்டி விட ‘ஏண்டி…சின்னவளே ஊனக்காலை வெச்சுக்கிட்டு…விந்தி விந்தி…நடந்திட்டிருக்கா…அவளுக்கு பரத நாட்டியம் ரொம்ப முக்கியமா?’ கத்தலாய்க் கேட்டான்.

    ‘ஆமாங்க…சொன்னாலும் சொல்லாட்டியும் அவளுக்குத்தாங்க அது ரொம்ப முக்கியம்…’ அவளும் கத்தலாகவே பதில் சொல்ல, வாயடைத்துப் போனார் குணசேகர்.

    சில அவஸ்தையான நிமிடங்களுக்குப் பிறகு ‘என்ன கலா…என்ன சொல்ற நீ?..கொஞ்சம் புரியம்படிதான் சொல்லேன்…’ தணிவாய்க் கேட்டார் குணசேகர்.

    ‘இங்க பாருங்க…நான் சொல்றதை நல்லாக் கேட்டுக்கங்க….பெரியவ செல்வியைப் பற்றிப் பிரச்சினையே இல்லைங்க…அவ நார்மலா இருக்கா…சுமாராப் படிச்சு..எதிர்காலத்துல ஒரு சுமார் லெவலுக்கே வந்தாலும் யாரும் அவளை ஏதும் குறை சொல்ல முடியாது…அவ கல்யாணம் கூட ஈஸியா நடந்திடும்…ஆக…ஒரு இயல்பான வாழ்க்கைங்கறது அவளுக்கு உத்தரவாதமாயிருக்கு..என்ன நான் சொல்றது சரிதானே?’

    ‘சரிதான்…’

    ‘ஆனா சின்னவளைப் பொறுத்தவரை அப்படியில்லை….அவ உடல்ல ஆண்டவன் ஒரு குறையை வெச்சிட்டான்…இப்ப….பெரியவ மாதிரியே இவளும் ஒரு சுமார் லெவல்ல இருந்தான்னு வெச்சுக்கங்க….அப்ப அவளோட குறை அவளுக்கும் சரி…மத்தவங்களுக்கும் சரி ஒரு பெரிய விஷயமாத் தெரியும்…அது அப்படித் தெரியக் கூடாதுன்னா…அவ படிப்பு தாண்டிய சில விஷயங்கள்ல திறமைசாலியா இருக்கணும்…’

    நெற்றியைச் சுருக்கியவாறே கேட்டுக் கொண்டிருந்த குணசேகருக்கு லேசாய்ப் புரிய ஆரம்பித்தது.

    ‘இப்பவே அவளுக்கு ஓவியம் நல்லா வருது….இன்னும் டிராயிங் க்ளாஸ்ல சேர்த்து அதை அவ டெவலப் பண்ணினா நிச்சயம் ஓவியத்துல ஒரு சாதனையைப் படைப்பா…அதே மாதிரிதான் பரத நாட்டியம்…இப்ப இருந்தே பயிற்சியில் ஈடுபட்டா நாட்டியத்துல ஒரு சாதனையாளரா அவ வர முடியும்…அது மாதிரியான சாதனைகளை அவ நிகழ்த்தும் போது அவ மாற்றுத் திறனாளியா மத்தவங்க கண்ணுக்குத் தெரிய மாட்டா…குறைகளை மாற்றும் திறனாளியாத்தான் தெரிவா…அதனாலதான்….’

    தன் மனைவியின் அற்புதமான தொலை நோக்குப் பார்வையில் மெய் சிலிர்த்துப் போன குணசேகர் அவளை பெருமையாய்ப் பார்த்து பொறுமையாய் அணைத்தார்.

    (முற்றும்)

    Share
  • கன்யா குமரி


     தமிழ்த்தேனீ

    விடிகாலை நேரம்

    ஆதவனே வரத் தயங்கும்

    காரணம் என்னவென்று காணுதற்கு

    வாசற்கதவு திறந்தேன்

     

    எதிர் வீட்டு குடிசையின் வாசலில்

    ஏற்கெனெவே உதயமாகி மாக்கோலம்

    போடுகின்ற கன்னிப் பெண் உருவத்தில்

    வந்தானோ சூரியன்

     

     வண்ணக் கோலம் போடும் கன்னியவள்

    மனம் மயக்க மதி வதனம் காண வேண்டி

    பார்வையை கூர்மையாக்கினேன்

     

    நிழற் படமாய் நின்று அவள்

    நெற்றியில் சுருண்டு விழுந்த

    கருமேகக் கீற்றை புறங்கையால்

    ஒதிக்கிவிட்டு    நிமிர்ந்தாள்

     

    கன்னங் கரேலென்ற காரிருளின்

    சாயமதை தோய்த்தெடுத்து

    கன்னியாய் உருக் கொண்டு

    பூவுலக காரிருளை போக்குதற்கு

     

    தானே கருப்பான விக்ரகமாய்

    கருணை அன்னை ஆகி நின்று

    அருள் புரியும் விந்தையினை

    நான் காண நிமிர்ந்தாள் அவள்

     

    காதிலே தாடங்கமோ ,கால்களிலே

    கொலுசோ ஏதுமில்லை,ஆனாலும்

    சர்வாங்க பூஷிதையாய் கண நேரம்

    கண்களிரண்டில் கருணைக் காந்தமோடு

     

    காட்சி  தந்தாள்  கயல் விழிகளை 

    ஒரு சுழற்று சுழற்றி விட்டு,

    திரும்பினாள் அவள் முகம் பார்த்தேன்,

    அதில் பார்த்தேன்  அன்னை

     

    அகிலாண்டேஸ்வரியை கன்னியாகுமரியை

    கருவறையின் மூல விக்ரஹ கணநேரத்

    தோற்றம் போல் இதமான புன்சிரிப்பு

    பாதாரவிந்தமது மெல்லடி நடக்க

     

    மனம் முகிழ்த்தது தாமரையாய்

    கடையவனை கரை சேர்க்க

    வந்திட்ட தெய்வம் போல்

    காட்சி தந்த கருணைதெய்வம் !!!!!

     

    பாதாதி கேசம் வரையில் படர்ந்து

    படுமாற் போல் பூமியதில்

    நெடுண்ஞாண்கிடையாக நீண்டு வீழ்ந்து

    கும்பிட்டு மீண்டு மெழுந்து கை யெடுத்து

     

    அவள் இருந்த திசை நோக்கி கும்பிட்டேன்

    அட சூரிய நமஸ்காரமா நல்ல வழக்கம்

    போகிற போக்கில் சொல்லிவிட்டுச்

    சென்றான்  ஒரு பால்காரன்!

      படத்துக்கு நன்றி

    http://www.hindudevotionalblog.com/2011/06/kanyakumari-devi-temple-in-tamilnadu.html


    Share
  • சந்தேகம்…

    செண்பக ஜெகதீசன்

    ஏகப்பட்ட மனைவிக்கார தந்தை
    எந்த நிலையிலும்
    சந்கேப்படாதபோது,
    அவன் மகன்
    ஏகபத்தினிக்காரன்
    ஏன்
    சந்கேப்பட்டான் சீதைமீது…!

     படத்துக்கு நன்றி       

    http://religion-faith.com/hindu-and-hinduism/hindu-gods-goddesses/goddess-sita.html

    Share
  • விஜயதசமி

    விசாலம்

    விஜயதசமி என்றால் எல்லோருக்கும் முதலில் நடக்கும் முத்தேவிகளின் ஆராதனையும்  பின் ஆயுதபூஜையும் உடனே ஞாபகம் வரும் ,நான் தினமும் ஷீரடியின் சாயி ஸச்சரிதா படிப்பேன். அதில் “சாவடி ஊர்வலம் “என்ற பகுதி இரவு படுக்கும் முன் படிக்க அல்லது கண்முன் அந்தக் காட்சியைக்காண  மிகவும்  நன்மைப் பயக்கும்,  ஷீரடியில் இன்றும் விஜயதசமி அன்று ஊர்வலம் நடக்கிறது .சிறப்பு என்னவென்றால் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் மற்ற எல்லா மதப் பிரிவுகளும் இதில் பங்கு ஏற்கின்றனர் ,ஒருவித சச்சரவுமில்லாமல் அமைதியாகச் சிறப்புடன் நடைப்பெறுகிறது அன்பும் பாசமும் கலந்த ஊர்வலம் ,பிரசாதமும் எல்லாவித
    உணவும் கலந்த ஒன்று ,சீரடிபாபா ஒரு ஜோலிப்பையில்  எல்லோரும் கொடுக்கும் உணவைச் சேகரித்து பின் அதைக்கலந்து எல்லோருக்கும் வினோகித்து பின் காக்கை குருவி நாய் பூனை போன்றவைகளுக்கும் போட்டு பின் அவர் சாப்பிடுவாராம். இதே விஜயதசமி அன்றுதான் அவர் சித்தி அடைந்தார் அவர் வாழ்ந்த வாழ்க்கை மிக எளிமை ஆன ஒன்று .ஷீரடிக்குள்முதன் முதலாக அவர்  நுழைந்தப்போது  அவர் சீதனம் ஒரு செங்கலும் இரண்டு சாக்குகளும்தான்,”சாயி”என்றால் கூட வாழும் இறைவன் “என்று பொருள் கொள்ளலாம் அவரின் ஒரே மந்திரம் “அல்லா மாலிக்”. பல கோடி மக்கள் இன்று அந்தப் பக்கிரி பாபாவின் பொற்கமலங்களைப்பற்றி அமைதி காணுகிறார்கள்.

    பாபா தான் படுக்கப் போகும் போது தான் கொண்டு வந்தச் செங்கலை ஒரு பழைய துணியில் சுற்றி அதில் தலை வைத்துக் கொள்வார்.அவருக்கு உதவ ஒரு குட்டிப்பையன். பாபாகூடவே இருந்து அவர் படுக்கப் போகும் முன் தூசியும் தட்டி அந்த இடத்தைக் கூட்டுவான் ,அவர் இறக்கும்  சில தினங்களுக்கு முன் அவன் தான் கூட்டும் போது குப்பை   செங்கலில் விழ்க்கூடாதே என்ற நல்லெண்ணத்தில் செங்கலை ஒரு துணியில் சுற்றத்  தூக்கினான ஆனால் அது கைத்தவறி கீழே விழுந்து இரண்டாகி விட்டது மிகவும் வருந்தி அழ ஆரம்பித்தான். பாபா வெளியில் போயிருந்தவர் உள்ளே வந்தார். செங்கல் உடைந்ததைக் கண்டார் ,அந்தச் செங்கலில் தலை வைக்க  புதுப்புது சிந்தனைகளும் ஞானமும்  பூககளாக மலருவது அவருக்குத்தான்  தெரியும் அது உடைந்தது அவருக்கு  தன் ஆயுள் முடியும் தருணம் வந்து விட்டது என்று புரிந்தது .

    சீரடியில் ராமசந்தரபடேல் என்பவருக்குக் கடும் காய்ச்சல் . ஏற்பட்டது. .உடல் நிலை நாளுக்கு நாள் குன்றியது தான் பிழைப்பது அரிது என அவர் தன் கடைசி  நாட்களை எண்ணிக்கொண்டிருந்தார் , ஒரு நாள் அவர் படுக்கையின் அருகில்  பாபா  வந்து நின்றார் . அவரைக்கண்ட  படேல்  அவர் காலைக்கெட்டியாக பிடித்துக் கொண்டார். “பாபா நான் இனி பிழைக்க மாட்டேன் .என்னால் இந்த வேதனை தாங்க முடியவில்லை .எனக்கு எப்போது மரணம் ? தயவு செய்து சொல்லுங்கள் ‘அவரையே கருணையாக  பார்த்த பாபா ” என் அன்பு படேல்  ஏன் கவலைப்படுகிறாய்? ?உன் மரணம் தடுக்கப்பட்டது . நீ இனி கொஞ்ச, கொஞ்சமாக தேறிவிடுவாய் . .ஆனால்  தாத்யாபடேலை நினைத்தால் வருத்தமாக உள்ளது .அவர்  விஜயதசமி அன்று இந்த உலகை விட்டுப்போய்விடுவார் . இதை உன்  மனதிலேயே வைத்துக்கொள் .தாத்யாபடேலிடம்  சொல்லாதே . அவர் பயத்திலேயே கலங்கிவிடுவார் “

    ராமசந்தர  படேலின்  உடல் தேறியது  ஆனால் உள்ளம்  வரப்போவதை நினைத்து வருந்தியது. “தாத்யா படேலைக்காப்பாற்ற முடியாதா? நாள் நெருங்கி வந்து விஜயதசமியும் வந்துவிடுமே ” என்று கவலை மனதை அரித்தது .ஒருவரிடம் இதைச்சொல்லாமல் ரஹஸ்யமாக வைத்திருக்க முயற்சித்தும் கடைசியில் தன் தையற்காரர் பாலா ஷிம்பி என்பவரிடம் இந்த விஷயத்தைஸ் சொல்லிவிட்டார் .நாட்கள் ஓட நவராத்திரி யும் ஆரம்பித்தது  பாபா சொன்னது போல் ஸ்ரீதாத்யாபடேல் சுரத்துடன் படுக்கையில் விழுந்தார் .சீரடி பாபாவைத் தினமும் தரிசிக்கப்போவது நின்றுவிட்டது .  பாபாவைப்பார்க்க முடியாமல் மனம் வருந்தினார். பின் மிக நம்பிக்கையுடன்’  பாபா  தாங்கள் என்னுடன் இருக்க எனக்கு என்ன பயம் ! என் உடலுக்கு ஒன்றும் ஆகாது . எல்லாம் உங்களிடமே  சமர்ப்பணம் ” என்று படுத்த படுக்கையிலேயே  வேண்டிக்கொண்டார் .பாபா இப்போது என்ன செய்வார் ? தன்னை நம்பியவரை கைவிடலாமா ?அவரைக்காப்பாற்ற எண்ணம் கொண்டார் .அவருடைய கர்மாவை தான் ஏற்றுக்கொண்டு மரணத்திற்கும் தயாரானார்

    அந்த மரணமும் அவர் தன் பக்தனின்  ஆயுள் முடிவைக் காப்பாற்ற,  தான் அதை ஏற்றுக் கொண்டு விட்டார் ,,,,,,,,,,,,,

    அவருடைய மிகவும் விருப்பமான  சில  தொண்டர்கள் கனவில்  வந்து தன்னுடைய மரணத்தைப்பற்றியும் சூசகமாக கூறியிருக்கிறார். தாஸகணு என்பவர் கனவில் வந்து  “மஸ்ஜித சாய்ந்து விழுந்துவிட்டது .  சில எண்ணெய் வியாபாரிகள்  .கடைக்காரர்கள் என்னை மிகவும் கிண்டல் செய்து விட்டனர் நான் விடை   பெறுகிறேன் .  நீ உடனேஅந்த இடம்சென்று என்னைப் பூக்களால் மூடிவிடு ”    என்று சொல்லி மறைந்து விடுகிறார் .தாஸ்கணுவும் அவர் சொன்னபடி பூக்களுடன்  அங்கு சென்று பஜன் கீர்த்தன் பாடி .பாபாவின் பெயரில் அன்னதானம் செய்தார். இந்த விஜயதசமியன்று “சாயி சச்சரிதா” படித்தால் சாயியின்  அருள் பரி பூர்ணமாகக்  கிடைக்கும்  . இதை நான் கண்கூடாகக் கண்டிருக்கிறேன்.

    ,,,போலோ சச்சிதானந்த சத்குரு சாயி ம்ஹராஜ் கி ஜெய்           

    http://www.kollyinsider.com/2011/10/happy-vijayadashami-from-kollyinsider.html

    Share
  • தேவாரத் தலங்கள் – மாந்துறை

     

    நூ த லோகசுந்தர முதலி

    மயிலை

    இக்குறுத் தொடரில் திருச்சி சமயபுரம் அருகு முதற்கண் பிடவூர் ஊற்றத்தூர் என இரு வைப்புத் தலங்களைக் கண்டோம். பின்பு திருச்சி மாநகருக்கு வடகிழக்கே காவிரி-கொள்ளிடம் (தோல்கேட்) கடந்து வடக்காக சமயபுரம் செல்லாமல் கிழக்காக லால்குடிக்கு பிறிந்து செல்லும பெருவழியில் 5 கி மீ சென்றால் காணும்  மாந்துறை எனும் ஞானசம்பந்தர் பதிகம் பெற்ற தலத்தினைக் காணலாம். இருந்தும் செலவுவழி பொருத்தமாக அமைய நேராக மேலும் 2 கிமீ கிழக்கு திருத்தவத்துறை என தேவாரம் குறிக்கும் லாலல்குடி வைப்புத் தலத்தினைக் வழிபட்டோம் பிறகு அதற்கு மேலும் 5 கிமீ கிழக்கமைந்த அன்பிலுளள்ள ஆலந்துறை எனும் பாடல் பெற்றத்தலத்தினையும் கண்டு இப்போது கடைசியாக திருச்சி திரும்பும் முன்பு இரண்டாம் திருமுறையில் திருஞானசம்பந்தரின் நட்டராகப் பண்ணமைந்த ஓர் பதிகம் உள்ள மாந்துறை திருத்தலத்தினைக் காண்போம்

    இதன் பதிகப் பாடல் ஒவ்வொன்றிலிலும் வடகரை என வேறு ஒரு மாந்துறையிலிருந்து வேறு படுத்திக் காட்டும் சிறப்புள்ளது. காவிரி வெள்ள நீரில் சுமந்து வரும் பல்வகைப் மலைவளப் பொருள்கள் நிரல்பெற குறிக்கப்படுவது மிக நன்றாக உள்ளது.

    வேங்கை ஞாழல் செருந்தி செண்பகம் மாதவி சுரபுன்னை குருந்தம் ஆரம் (சந்தனம்) விளா மூங்கில் குன்றி பூகம் (பாக்குவகை) இலவம் ஈஞ்சு (ஈச்சமரம்) இளமருது இலவங்கம் குரா கோங்கு செண்பகம் குருந்து பாதிரி சந்தனம் காரகில் நறவம் மல்லிகை முல்லை மௌவல் கழை(முங்கில்) நறவு வேலம் மா கதலி (வாழை) என நீளும் 32 பயிர்வகைகளும் ஆனைக்கொம்பு மயிற்பீலி மாணிக்கம் நீலமணி நித்திலம் என மிதந்து வரும் மாண்புடை பொருள்களும் மந்திகள் மாங்கனி மாந்தல் முதலிய இயற்கை வருணனைகள் முதலியவையும் இப்பதிகப்பாடலில் பேசப்பட்டுள்ளன.

    மேலும்
    திரையார்புனல் கெடில வீரட்டமும் திருவாரூர் தேவூர் திருநெல்லிக்கா
    உரையார் தொழநின்ற ஒற்றியூரும் ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும்
    வரையார் அருவிசூழ் மாநதியும் மாகாளம் கேதாரம் மாமேருவும்
    கரையார் புனல் ஒழுகு காவிரிசூழ் கடம்பந் துறை உறைவார் காப்புக்களே 6.7.4
    அப்பரடிகள் தேவாரம்-திருவீரட்டானம்-காப்புத்திருத்தாண்டகம்
    நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே
    மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே
    மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே
    இறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே. 7.47.3

    சுந்தரர் தேவாரம் – ஊர்த்தொகை

    ஊரெலாம் துஞ்சி உலகெலாம் நள்ளென்று
    பாரெலாம் பாட இந்தப் பாய் இருள்கண்-சீருலாம்
    மாந்துறைவாய் ஈசன் மணிநீர் மறைகாட்டுப்
    பூந்துறைவாய் மேய்ந்(து) உறங்கா புள் 11.295

    சேரமான் பெருமான் பாசுரம்- திருவாரூர் மும்மணிக்கோவை 26

    என வரும் திருமுறைப்படல்களிலும் மாந்துறை / திருமாந்துறை என இரு தலங்கள் காட்டப்பட்டுள்ளன. இவைப்பற்றி வேறு துணைக் குறிப்புகள்/முன்அடை/பின்அடை ஏதும் காணாமையால் இவை வேறு வைப்புத் தலங்களாகவும் கொள்ளலாம்.

    நன்காய்ந்த பின்பே பெரியபுராணம் இயற்றிய சேக்கிழார் பெருந்தகை ஞானசம்பந்தரின் வழிபாட்டுச் செலவு பற்றி விளக்குங்கால்
                   கஞ்சனூர் ஆண்ட தம்கோவைக் கண்உற்று இறைஞ்சி முன்போந்து  
                   மஞ்சணி மாமதில் சூழும் மாந்துறை வந்து வணங்கி
                  அஞ்சொல் தமிழ் மாலை சாத்தி அங்கு அகன்று அன்பர் முன்னாகச்
                 செஞ்சடை வேதியர் மன்னும் திருமங்கலக் குடி சேர்ந்தார் 6.1.293
    என கூறுகிறார்

    இங்கு ஒரு மாந்துறைதனை காட்டுவதன்றி அதற்கு பதிகம் பாடி உள்ளதாகவும்  கூறுகின்றார். “மஞ்சணி மதில் சூழ்ந்த” என்பதால் குறைந்தது சேக்கிழார் காலமாகிய 13 ம் நூற்றாண்டில் இருந்துள்ள ஓர் கோயில் பெறப்படுகின்றது. இஃது தற்காலத்தில் போற்றுதலுடன் விளங்கும் சூரியனார் கோயிலிலிருந்து சிறிது துரத்தே அமைந்துள்ளது என்கின்றனர். சம்பந்தர் பதிகப் பாடல்களில் காணும் விளக்கங்கள்படி அது ஓர் அகண்ட காவேரிக் கரையில்தான் இருக்க வேண்டும் அப்பண்பு இக்கஞ்சனூர் மங்கலக்குடி இடையுள்ளதற்கு சிறிதும் பொருந்தாது.சேக்கிழார் காலத்திருந்து பின் தொலைந்து பட்ட ஓர் பதிகமாவதற்கு வாய்ப் மிகக்குறைவே. ஆக இதனில் ஏதோ ஓர் கருத்து வைப்பினில் முரண்பாடுள்ளது.

    ஆனால், நம் வடகரை மாந்துறை பற்றி பேசுங்கால் சேக்கிழார் மிகச் சரியாகவே சம்பந்தர் பதிக 6வது பாடலில் குறிக்கப்பட்ட சூரிய சந்திரர் வழிபாட்டினை காட்டுவதால் பாடல்பெற்ற வடகரை மாந்துறை பற்றி யாதொரு ஐயமுமில்லை
         
    மேலும்
    திருமாந்துறை என ஓர்த்தலம் பெரம்பலுர் மாவட்டத்தில் தொழுதூர் அருகு ஓர் சீரிய ஆற்றங் கரையில் அமைந்துள்ளது. தற்காலம் திருச்சி சென்னை பெருஞ்சாலைவழியில் திருச்சிக்கு அடுத்து காணும் சாலை வரி தண்டும் TOLL PLAZA அமைந்த திருமாந்துறையிலும் பெரிய
    பழமையான கோயில் உள்ளது.

    எனவே குறிக்க மட்டும் காணும் இம் மாந்துறைகளை வைப்புத் தலங்களாகக் கொள்ளவது மரபு எனலாம்

    நம் வடகரை மாந்துறை இறைவர்=மாந்துறை நாதர் அம்மை=பாலாம்பிகை, தலப்பயிரினம்=மா. கோயில் சாலைக்கு மிக அருகேயே உள்ளது. சிறிய சீர்மிகு 3 நிலை 7 கலச பதுமைகள் நிறைந்த கோபுரம் தேவார திருப்புகழ்ப் பாடல்கள் பொளித்த கற்பலகைகள் சில நூற்றாண்டு பழமையான கல்வெட்டு ஒன்றும் அம்மை அப்பன் திருமுன்களை சூற்றிவர அகன்ற தூய்மையாக பராமரிக்கப்பட்டுள்ள திருச்சுற்றும் காணப்படுகின்ன.

    முன்பு குறித்தபடியே லால்குடி அன்பில் மாந்துறை என மூன்றினையும் ஓர் முற்பகலிலலேயே திருச்சியிலிருந்து நகரப்பேருந்து பிடித்தே சென்று ஆரவாரமற்ற தியான நிலையில் வழிபட்டு திரும்ப முடியும்.

    என் கருவி உட்கொண்ட சில காட்சிகளை இணைப்பினில் காண்க

    முறையான திட்டத்துடன் திருமுறைத் தலங்களை வழிபட நினைவோர் திருவானைக்கா பாச்சில் பைஞ்ஞீலி பாற்றுறை எனும் அணித்தே உள்ள ஏனைய காவிரி வடகரைத் தலங்களுடன் இணைந்தும் இவற்றை வழிபடலாம்.

    11 attachments — Download all attachments   View all images  
    1mAntuRairaja.jpg 1mAntuRairaja.jpg
    140K   View   Download  
    2talavaralARu-kal1.jpg 2talavaralARu-kal1.jpg
    95K   View   Download  
    3talavarlRu-kal2.jpg 3talavarlRu-kal2.jpg
    355K   View   Download  
    4mAntuRai-gnAnatEvAram.jpg 4mAntuRai-gnAnatEvAram.jpg
    208K   View   Download  
    5mAntuRai-gnAnatEvAram2.jpg 5mAntuRai-gnAnatEvAram2.jpg
    272K   View   Download  
    6mAntuRai-tEvAram-d-f.jpg 6mAntuRai-tEvAram-d-f.jpg
    552K   View   Download  
    6mAntuRai-tiruppukazh.jpg 6mAntuRai-tiruppukazh.jpg
    231K   View   Download  
    7mAntuRai_inscr.jpg 7mAntuRai_inscr.jpg
    445K   View   Download  
    7mAntuRaisuRRukkoyilkaL.JPG 7mAntuRaisuRRukkoyilkaL.JPG
    124K   View   Download  
    8mAntuRaimUlaSW.jpg 8mAntuRaimUlaSW.jpg
    417K   View   Download  
    9mAntuRaimUlaNW.jpg 9mAntuRaimUlaNW.jpg
    406K   View   Download  

     

    Share
  • மாணவர் தளம்: தமிழார்வம்

     

    இன்னம்பூரான்

    1.முகவுரை


    1.1. இன்று விஜயதசமி. வித்யாரம்பத்திற்கு உகந்த சுபதினம். துவஜாரோகணம். கொடியேற்றத்துடன் துவங்குவோமாக.

    1.2. மாணவர்கள் படிக்கும்போது குறிப்பு வைத்துக்கொள்வது நல்ல பழக்கம். அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது அந்த நல்ல பழக்கத்தின் அடுத்த கட்டம். ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினால், இந்த பயிற்சி மேன்மை பெறும். அதற்கு எல்லை என்பது இல்லை. தொடுவானம், நெருங்க நெருங்க, எட்டக்கூடாமல் நகருவதைப் போல், கற்றுக்கொள்வதற்கு விண்மீன்களை போல கணக்கற்ற விஷயங்கள் உளன. கற்றது கைமண்ணளவு: கல்லாதது உலகளவு. வாழ்நாள் முழுதும் தொடரக்கூடியது, கல்வி ஒன்றே. ஏன்? அதற்கு பின்னும் கல்வியின் அரும்பணி தொடருகிறது. அதனால் தான் 2012ல் கம்பனுக்கு விழா எடுக்கிறார்கள். இந்த எல்லை கடந்த யாத்திரையை ‘தமிழார்வம்’ துவக்கி வைப்பது ஒரு நன்நிமித்தமே.  

    1.3. தமிழ் மொழி தொன்மையானது. அதனுடைய இலக்கியத்தின் எழிலும், இலக்கணத்தின் கட்டுக்கோப்பும், வழுவமைதியும், நீதி நூல்களின் நன்கொடையாகிய நன்னெறியும் நம் தாய்மொழியாகிய தமிழுக்கு ஒளி வட்டமாயின. காப்பியங்களின் விசால தளங்களும், இயல், இசை, நாடக கலைகளின் கவின் வசீகரமும், பக்தி இலக்கியத்தின் ஆழமும், அதற்குக் கட்டியம் கூறின. பரண்களில் தூங்கிய ஏட்டுச்சுவடி கருவூலங்களும், சி.வி.தாமோதரம் பிள்ளை, தமிழ்த்தாத்தா போன்ற சான்றோர்களின் திருப்பணியால், அச்சுக்கு வந்தன. தமிழார்வலர்களின் உழைப்பினால், இன்று பல நூல்கள் மின் கருவூலங்களில் சேகரிக்கப்படுகின்றன.

    1.4. நூறாண்டுகளுக்கு முன்னால், குடத்திலிட்ட தீபம் போல் ஆங்காங்கு தமிழ் மணம் பரப்பிய புலவர் பெருமக்கள் பலர். அவர்களின் தமிழ்த்தொண்டு, தமிழன்னைக்கு மாலை மரியாதை செய்து, வணங்கியது. குருகுலவாசமும், திண்ணைப்பள்ளிக்கூடங்களும், அணி வகுத்து, அவளை ஆராதித்தன. அதற்கு பின் வந்து நூதனமாக வந்த தமிழ் உரை நடை, நாளொரு மேனியாகவும், பொழுதொரு வண்ணமாகவும், விரைவாகவே வளர்ந்தது.

    1.5. செழித்து வளரும் தமிழுக்கு மெருகேற்றிய புதின/கட்டுரை/ சிறுகதை/மொழியாக்க/புதுக்கவிதைப் படைப்பாளர்களின் நுட்பமான அணுகுமுறையையும், கற்பனைத்திறனையும், படைப்பாற்றலையும், பிரதிபலிப்பு மென்மையையும் பாராட்டுவோமாக. எப்படி? நாம் அவற்றை திறனாய்வு செய்தது மிகக்குறைவு. க.நா. சுப்ரமண்யம், சி.சு. செல்லப்பா போன்ற விமர்சகர்கள் தற்காலம் தென்படுவதில்லை. தமிழுலகில் பல முன்னேற்றங்கள் இருந்தாலும், தமிழ் மொழி வளர்ச்சி/ அதன் மீது ஆர்வம்/ கல்வித்தரம்/ வரலாற்று பதிவுகள்/ இலக்கிய தாகம் ஆகியவை போதவே போதாது. தயங்கி, தயங்கி, இப்படி ஒரு அரில் அகற்ற நினைத்தபோது, எதிர்பாராமல், ஆதரவு வந்து சேர்ந்தது. அதை அனுபந்தமாக இணைத்திருக்கிறேன்.     நம்மால் இயன்றதை செய்வோம். வருங்காலத்தில் தமிழ் பிரகாசிக்கட்டும்.

     

    1.6. ‘மாணவர் தளத்தில்’ இயல்பாகவே குற்றம் குறைகள், தவறுகள் இருக்கலாம். திசை மாற்றாமல் அவற்றைக் களைந்தும், மேலதிக விவரங்களை அளித்தும், மேன்மை படுத்துவோர்க்கு என் நன்றி உரித்ததாகுக.

    1.6. அடுத்து வருவது, முதலாவதாக மூலிகைத்தமிழ்.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    24 10 2012

    *

    அனுபந்தம் :மாணவர் தளம்: தமிழார்வம்

    புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தின் சமீபத்திய அறிவிப்பு ஒன்றிலிருந்து:

    ‘தமிழியல் ஆய்வானது இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, தொல்லியல், மானுடவியல், நாட்டுப்புறவியல் உள்ளிட்ட பன்முகத்தன்மையைக் கொண்டதாக விளங்குகிறது. தமிழகப் பல்கலைக்கழகங்களில் நடைபெறும் தமிழியல் ஆய்வுகள் என்பவை இப்பன்முகத்தன்மையை வெளிக்கொணரும் வகையில் நடைபெறுகின்றபோதிலும், அவை தனித்தனி தீவுகளாகவே இருந்துவருகின்றன. ஒரு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் ஆய்வுகள் குறித்து வேறு பல்கலைக்கழக ஆய்வாளர்களில் பெரும்பான்மையினருக்குப் போதிய அறிமுகம் இருப்பதில்லை. சமகால ஆய்வுப் போக்குகள் குறித்து பரஸ்பர புரிதல் இல்லாத சூழலே இன்றளவும் தமிழியல் ஆய்வுலகில் நிலவிவருகிறது. அவ்வாறான புரிதலை வளர்த்தெடுப்பதற்கான அக்கறையும் அரிதாகவே காணப்படுகிறது.

    ஒரு பொருண்மை குறித்து முன்னர் நடைபெற்ற அல்லது சமகாலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஆய்வுகள், அவற்றில் பின்பற்றப்படும் ஆய்வு முறைமைகள், ஆய்வு முடிவுகள் என இவற்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளாத சூழலில் மேற்கொள்ளப்படும் ஆய்வு என்பது அடுத்த கட்டத்தை நோக்கி முன்னேறாமல் ஒரே இடத்தில் தேங்கி நின்றுவிடுவதற்கான வாய்ப்புகளே அதிகம். மாறாகச் சமகால ஆய்வுப் போக்குகளை உள்வாங்கிக்கொண்டு மேற்கொள்ளப்படும் ஆய்வானது ஆய்வுப் பொருண்மை குறித்த புரிதலை மேம்பட்ட நிலைக்குக் கொண்டுசெல்வதாக அமையும்.

    பலதரப்பட்ட பொருண்மைகளில் தமிழியல் ஆய்வுகளை மேற்கொண்டுவரும் ஆய்வாளர்கள் ஆய்வு தொடர்பான தங்களது கருத்துகளை, ஆய்வு முறைமைகளை, ஆய்வுலகில் சந்திக்கும் சிக்கல்களை இன்ன பிறவற்றைத் தங்களுக்குள் பரிமாறிக்கொள்ளும் வெளியை உருவாக்குவது இன்றைய தமிழியல் ஆய்வுலகில் அவசியத் தேவையாக உள்ளது. இத்தகு வாய்ப்புகளை ஆய்வாளர்களுக்கு உருவாக்கித்தருவதன் மூலம் அவர்களது சிந்தனையையும் ஆய்வு தொடர்பான புரிதலையும் அடுத்த கட்டத்திற்கு உயர்த்த முடியும்.

    தமிழியல் ஆய்வுலகில் இருக்கும் ஆய்வாளர்கள் தங்களுக்குள் ஆய்வு தொடர்பான கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவும், தமிழியலின் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளவும் ஒரு களத்தை அமைத்துத்தருவதாகக் கருத்தரங்கங்கள் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அந்த வகையில் புதுச்சேரி பிரெஞ்சு ஆய்வு நிறுவனமும், பெர்க்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகமும் இணைந்து கடந்த 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12, 13 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத் தமிழியல் ஆய்வாளர்களை ஒருங்கிணைத்து ஒரு கருத்தரங்கை முன்னெடுத்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்தக் கருத்தரங்கமும் ஒருங்கிணைக்கப்படுகிறது.’

    Retrieved with thanks,on October 24, 2012 and acknowledging their copyright, from

    http://www.ifpindia.org/Research-in-Tamil-Studies-A-Platform-for-Dialogue.html

    சித்திரத்திற்கு நன்றி: http://img129.imageshack.us/img129/7631/tamil3qe.gif

    ===================================================================

     

     

    Share
  • நவராத்திரி மகிமை

     

    தமிழ்த்தேனீ

    மகாராஜா சுரதா,  ராஜ குரு சுமதாஅவர்கள் கூறிய  ஆலோசனையின்படி  “பஞ்சபூதங்களில்  ஒன்றான மண்ணால் ஆன பொம்மையால் என்னை  பூஜிப்போருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன்…’ என்று, தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளபடி,  மகாராஜா சுரதா தூய்மையான ஆற்றுக் களிமண்ணைக் கொண்டு, காளி ரூபத்தைச் செய்து, அதை ஆவாஹனம் செய்து, உண்ணாவிரதம் இருந்து, காளி தேவியை வேண்டினார். அந்த வேண்டுதலின் பயனாக அந்த மகாராஜா தன் பகைவர்களை அழித்து,  அவர்களின் இன்னல்களிலிருந்து விடுதலை பெற்றார். எனவே, அம்பிகைக்கு பிடித்த பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு செய்வது, நவராத்திரியில், குறிப்பாக சரஸ்வதி பூஜை வழிபாட்டின் முக்கிய அங்கம் பெறுகிறது. மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பதுபொதுவான  மரபு.

    புரட்டாசி மாதம் 29ம் தேதி, அக்டோபர் 15ம் தேதி திங்கட்கிழமை சித்தயோகம், அமாவாசை அன்று நவராத்திரி விழா தொடங்குகிறது .இந்த நவராத்திரி விழாவை சிறப்பாகக் கொண்டாட அவரவர்கள் சக்திக்கும், இருக்கும் இடத்துக்கும் ஏற்ப  மூன்று படிகள். ஐந்து படிகள், ஏழு படிகள், ,ஒன்பது படிகள் என்று அமைத்து அந்தப் படிகளில் பலவிதமான தெய்வங்களின் உருவ பொம்மைகளை, மற்றும் நமக்கு மனதுக்கு உகந்த நடைமுறை வாழ்க்கையில் இருக்கும் மக்களில் நம்மைக் கவர்ந்த 12 ஆழ்வார்களின் பொம்மைகள், 63 நாயன்மார்களின் பொம்மைகள். மஹாத்மாகாந்தி, சுபாஷ் சந்திரபோஸ், வாஞ்சிநாதன், கப்பலோட்டிய தமிழன் வ.உ .சிதம்பரம்பிள்ளை, ஜவஹர்லால்நேரு, இந்திராகாந்தி, காமராசர், பாரதியார் ,பாரதிதாசன் ,வியாபாரச் செட்டியார் பொம்மை, குறவன் குறத்தி பொம்மைகள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, போன்ற நம் தேசத்தில் நினைவு கூரவேண்டியவர்களின், தலைவர்களின் உருவ பொம்மைகள்  போன்றவற்றை வைக்கிறோம், அதையும் தவிர நாம் அன்றாடம் பார்க்கும் விலங்குகள் பசு ,ஏரில் பூட்டிய காளைகள், நிலத்தை உழும்  உழவன்,  போன்றவர்களின் பொம்மைகள் எல்லாவற்றையும் அவைகளை வைக்கவேண்டிய  தகுந்த இடங்களில் வைத்து மகிழ்வது நம் வழக்கம்.

    அதே போல் பக்கத்திலே  மண் கொட்டி பூங்கா அமைத்து, அதன் பக்கத்திலே கோயில் அமைத்து, அந்தக் கோயிலுக்கு எதிரே நம் வீட்டில் உள்ள தாம்பாளத்தில் படிக்கட்டுகள் அமைத்து நடுவிலே நீர் ஊற்றி குளம்போல் தோற்றம் ஏற்படுத்தி அதில் நீர்வாழ் மீன்கள், தவளை கொக்கு போன்ற பொம்மைகளை  வைத்து, அலங்கார விளக்குகள் அமைத்து அழகுக்கு அழகு சேர்த்து கலைநயத்துடன் நவராத்திரியைக் கொண்டாடுகிறோம்.

    இப்படி எல்லாப் பொம்மைகளையும் வைத்துவிட்டு, நம் சுற்றத்தார், அண்டை அயலார் என்கிற பாகுபாடு இல்லாமல் அனைவரையும் இந்த விழாவிலே கலந்துகொள்ள அவர்கள் வீடுகளுக்கு சென்று அவர்களுக்கு  தாம்பாளத்தில் வெற்றிலைபாக்கு,மஞ்சள், குங்குமம், பலவிதமான பழங்கள் போன்றவைகளை வைத்து அழைத்துவிட்டு, தினமும் அன்றிலிருந்து தொடங்கி விசேஷமான பூஜைகள் செய்து  பலவிதமான  உகந்த தின்பண்டங்களை , சமைத்து  நிவேதனம் செய்து   அவைகளை வீட்டிற்கு வரும் அனைவருக்கும் பகிர்ந்தளித்து  மகிழும் பண்டிகை நவராத்திரி ஆகும். இந்த ஒன்பது நாட்களிலும் வீட்டிற்கு வரும் குழந்தைகள், மற்றும் பெரியவர்கள் அனைவரும் மகிழும்படி வரவேற்று , நம் இதிகாச, புராணங்களில் இருந்து நம் மனதைக் கவர்ந்த  ஶ்ரீராமன், ஶ்ரீ கிருஷ்ணன், ராதை, பக்த மீரா போன்ற பலவேடங்களை குழந்தைகளுக்கு  அணிவித்து எல்லோரும் மகிழும்படியாக ஆடிப் பாடி மகிழ்ந்து  ஒன்பதாம் நாள் நவமி அன்று  சரஸ்வதிக்கு பூஜை செய்து பத்தாம்   நாளாகிய தசமிஅன்று ஆயுத பூஜை என்றும்  விஜய தசமி என்றும் கொண்டாடுகிறோம்.  அன்று நாம் அன்றாடம் உபயோகிக்கும் நம் வாகனங்கள், ஆயுதங்கள், எல்லாவற்றிர்க்கும் முறையே குங்குமம் இட்டு பூஜைகள் செய்து கொண்டாடி  நிறைவு செய்வோம் நவராத்திரி விழாவை.

    ஆட்சி, அதிகாரம், நாடு உள்பட சகலமானதையும் இழந்த பாண்டவர்கள் 12 ஆண்டு வனவாசம், ஓராண்டு அக்ஞாத வாசம் முடிந்து, விஜயதசமியன்றே மீண்டும் அனைத்து ஆயுதங்களையும் தாங்கள் இழந்த பலம் ஆகியவற்றையும் பெற்றனர் .இந்த விஜயதசமி நன்நாளில்தான் துர்க்கா வெற்றி பெற்றாள் ,ஆகவே இந்த நாளில் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்தால் சகலவிதமான வித்தைகளிலும் வெற்றி பெறுவார்கள் என்பது ஐதீகம்.

     

    வீரத்தின் தெய்வமான சிவப்பிரியையான, இச்சா சக்தியான  துர்க்கை  அல்லது காளி என்னும் சக்தியானவள் துர்க்கை. இந்த துர்க்காதேவி  மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டு  அவனை வதம் செய்தாள் அதாவது தீமை என்னும் அரக்கனை அழித்து  மக்களுக்கு  நன்மையாகிய வெற்றியை அருளினாள். அதனால் மகிஷசுரமர்த்தனி என்று பெயர்கொண்டாள்.    ” விஜய ” என்றால்   வெற்றி   . தசம் என்றால் பத்து வெற்றியை பெற்ற நாள்  பத்தாம் நாள். இப்படி மகிஷனை துர்க்கை வதம் செய்த பத்தாம் நாளே விஜயதசமி என்று அழைக்கப்பட்டது.

    இந்த துர்க்கா தேவி மகி‌ஷனுடன் போர் புரியத் தொடங்கிய நாளே நவராத்திரி விழாவின்  தொடக்க நாள்.  நவராத்திரி விரதம் புரட்டாசி  மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை  குறித்து நோற்கப்படும்  நோன்பாகும். இது தக்ஷிணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்திராயண காலம் தேவர்களுக்கு பகல் காலம் ஆகும்.  

    நவராத்திரி பூஜை புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றது ஆகவே புரட்டாசி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் நோன்பு  சாரதா நவராத்திரி நோன்பாகும்.

    உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தக்ஷினாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாசி மாதத்தில் நோற்கப்படும்  சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.

    பிரளயம் என்னும் அழிவுக்  காலத்தின் முடிவில் இறைவன் மீண்டும் உலகத்தை உண்டாக்க விரும்புகின்றான் ஆகவே இறைவன் விரும்பத் தொடங்கும் அந்தக் கணமே   இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. அந்த இச்சை சக்தியினால்  எவ்வாறு உலகை உண்டாக்குவது என்று இறைவன் அறிகின்றான். எவ்வாறு என்று யோசிக்கும் போதே ஞான சக்தி தோன்றுகிறது . அதன்பின் தன்னுடைய கிரியை என்னும் சக்தியினால் கிரியா சக்தியைத் தோற்றுவித்து  உலகைப் படைக்கின்றான்.
     
    நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
     
    நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்
     
    இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான்
     
    சாந்தி துர்க்கை ,சபரிதுர்க்கை, ஶ்ரீ ஜ்வாலாதுர்க்கை, ஶ்ரீ ஜெயதுர்க்கை,ஶ்ரீ ஆசூரி துர்க்கை, ஶ்ரீ மூலதுர்க்கை, ஶ்ரீ வன துர்க்கை, ஶ்ரீ சூலினி துர்க்கை, ஶ்ரீஜாதவேதா துர்க்கை. ஆகியோர் நவதுர்க்கைகள்.

    முதல் நாளில் 2 வயதுக் குழந்தை – குமாரி அதாவது ஷைலபுத்ரி யாகவும்,
    இரண்டாம் நாள் 3 வயதுக் குழந்தை – திரிமூர்த்தி அதாவது பிரம்மசாரிணி யாகவும்,
    மூன்றாம் நாள் – 4 வயதுக் குழந்தை – கல்யாணி  அதாவது சந்தரகாந்தா ஆகவும்,
    நான்காம் நாள் – 5வயதுக் குழந்தை – ரோகிணி  அதாவது  கூஷ்மாண்டா ஆகவும்,
    ஐந்தாம் நாள் – 6 வயதுக் குழந்தை – காளிகா  அதாவது  ஸ்கந்த மாதா ஆகவும்,
    ஆறாம் நாள் – 7 வயதுக் குழந்தை – சண்டிகா  அதாவது காத்யாயனி  ஆகவும்,
    ஏழாம் நாள் – 8 வயதுக் குழந்தை – சாம்பவி  அதாவது  காலராத்ரி ஆகவும்,
    எட்டாம் நாள் – 9 வயதுக் குழந்தை – துர்க்கா   அதாவது மஹா கௌரி ஆகவும்,
    ஒன்பதாம் நாள் – 10 வயதுக் குழந்தை – சுபத்ரா  அதாவது  சித்திதாத்ரி ஆகவும்
    கொண்டாடுகிறோம்.
     
    அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதி ஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள் சிறப்பாக உள்ளன.
     
    துர்க்கை: 1. மகேசுவரி, 2. கெளமாரி , 3. வராகி. இலட்சுமி: 4. மகாலக்ஷ்மி 5. வைஷ்ணவி 6. இந்திராணி. 7. சரஸ்வதி
    8. நாரசிம்மி , 9. சாமுண்டி.
     
    நவராத்திரியின் போது இந்த ஒன்பது தேவியர்களையும் முறையாக வழிபடுகிறோம். ஒரு தேவியை முதன்மையாகவும், மற்றவர்களைப் பரிவார தெய்வங்களாகவும் கொள்ளவேண்டும். நவராத்திரியில் கன்னி வழிபாடு என்பது ஒரு வகை. நவராத்திரியின் போது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னியை ஒவ்வொரு தேவியாக பாவனை செய்து வழிபடுவது ஒரு முறை.

     
    ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.
     1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)
     2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)
     3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)
     4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)
     5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)
     6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)
     7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
     8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
     9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.
     இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.

    நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது.  கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.
     
    நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்பதுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்தி மயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். பராசக்தியே சர்வ வல்லமை படைத்தவர் ஆவார். அந்த அம்பிகையின் மகிமைகளை ‘தேவி பாகவதம்’ விரிவாகப் பேசுகிறது.  நவம் என்றால் ஒன்பது என்று ஒரு பொருள் உண்டு. நவம் என்றால் புதிய, புதுமை, என்றொரு பொருளும் உண்டு! சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கும் புரட்டாசி மாதம் வளர் பிறை பிரதமை முதல் 9 நாள் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.

    இதில் முதல் 3 நாள் துர்க்கை அன்னையையும், அடுத்த மூன்று நாள் திருமகளையும், அதற்கு அடுத்த மூன்று நாள் கலைமகளையும் வழிபடுவார்கள்.  துர்க்கை என்ற பெயருக்கு கோட்டை என்ற பொருளும், துன்பத்தை அழிப்பவள் என்ற பொருளும் உண்டு. இந்தப் பெயரைச் சொன்னாலே மனிதன் தன்னைத் துன்பங்களை அணுக விடாமல் காத்துக்கொள்ள முடியும். அத்துடன் தீய சக்திகள் மற்றும் தீய எண்ணங்களையும் அழித்தால்தான் உலகில் நல்லவை நிலைபெறும். அதனால்தான் மனிதன் தன் வாழ்வில் சந்திக்கும் பல தீயவற்றை அழித்து நல்லவற்றை நிலை நிறுத்தி வெற்றி பெற உதவும் அன்னையை முதல் மூன்று நாள் வழிபடுகிறோம்.

    அடுத்த மூன்று நாள் செல்வ வளத்தை அளிக்கும் திருமகளை வழிபடுகிறோம். மனிதன் வாழ்வில் சிறப்பான நிலையை அடைய உதவுவது செல்வம்.  அடுத்த மூன்று நாள் கல்விச் செல்வத்தை அளிக்கும் கலைமகளுக்கு உரியவை. காலத்தால் அழியாத செல்வம் கல்வி. இந்தச் செல்வம் வேண்டி கலைமகளைத் துதிக்கிறோம். நவம் என்றால் புதிய என்று பார்த்தோம். துன்பங்கள் தீர்ந்து, பொருள் வளம், கல்வி வளம் இரண்டும் பெற்றால் மனிதனுக்கு வாழ்க்கை தினம் புதியதுதான்!

    அதுமட்டுமல்ல; இந்த மூன்றும் சேர்ந்தால் வெற்றிதான் என்பதைக் குறிக்கும் விதமாக பத்தாம் நாள் விஜயதசமியாகக் கொண்டாடப்படுகிறது. துன்பத்தை அழித்து நன்மையை நிலைநாட்டி, பொருள் செல்வம் மற்றும் அறிவுச் செல்வம் பெற உதவும் மூவரையும் நவராத்திரியில் முறைப்படி துதிப்போம். வளம் பெறுவோம்! வெற்றி பெறுவோம்!
     
    ஒரு மனிதனிற்கு உடல்வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம, தேவைகளிற்கு பணம் போன்ற அனைத்து அம்சமும் நிறைந்திருந்தால் தான் அவன் சிறந்த வெற்றியாளனாக திகழ முடியும். அதாவது வீரம், செல்வம், கல்வி ஆகியவை அனைத்தும் நிறைந்திருக்க வேண்டும். இவற்றை பெறுவதற்காகவே நவராத்திரி விரதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வாழ்க்கையில் நமக்கு செல்வம் ,வீரம் ,ஞானம் மூன்றும் இருந்தால்தான் நாம் வெற்றி பெற முடியும்.  இதற்காக மகாலட்சுமி தேவியை,  துர்க்கா தேவியை வழிபடுகிறோம்.   சரசுவதிதேவியை வணங்குகிறோம்.

    ——————————————————————————————————————————————————————————————
     நவராத்திரி விழா காணும் ஆலயங்கள் :-

    ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், திருவானைக்காவல் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி உடனாய ஐம்புகேஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில்,நாகை நீலாயதாட்சி கோயில், கன்யாகுமரி ஸ்ரீ பகவதி அம்மன் கோயில், புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில்,திருவண்ணாமலை ஸ்ரீ உண்ணாமுலை உடனாய அண்ணாமலையார் கோயில், நெல்லை ஸ்ரீ காந்திமதி அம்மன் கோயில், திருவேற்காடு ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் கோயில்,மாங்காடு அம்மன் ஆலயம்,சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ கற்பகாம்பாள் கோயில்,காளிகாம்பாள் கோயில்,திருவையாறு அறம் வளர்த்த நாயகி கோயில்,திருமெய்யம் ஸ்ரீ வேணுவனேஸ்வரி அம்பாள் கோயில்,சமயபுரம், பண்ணாரி,பொள்ளாச்சி,திண்டுக்கல்,தஞ்சை,திருச்சி மாரியம்மன் கோயில்கள்,படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயில்,மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்,மேல் மலையனூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோயில்,காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் கோயில், திருக்கடையூர் அபிராமி கோயில்  ஆகிய  ஆலயங்களில் நவராத்திரி விழாவை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவார்கள்

    அம்பத்தூரை அடுத்த வட திருமுல்லை வாயிலில் வைஷ்ணவி ஆலயத்தில் ஒன்பது நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்து  வைஷ்ணவியை வழிபடுவார்கள். மிகவும் விசேஷமாக  இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படும்

    படத்திற்கு நன்றி :

    http://www.desicomments.com/desi/kali-puja/

     

    Share
  • மனக்கனவுகள்

     

    திருமலைசோமு

    செடியில்லை கொடியில்லை
    செங்காத்து பூமியில் வேர் விட்டு
    மொட்டு விடவும் இல்லை
    ஆயினும் ஏனோ..
     
    இமைக்கும் இடைவெளியிலும்
    நொடிக்கொரு பொழுதுமென 
    பூத்து நிற்கிறதென் மனக்கனவுகள்
     
    நிறைவேறும் என காத்திருந்த
    நிமிடங்களில் கூட 
    நீரோட்ட்த்தில் புதையும்
    காகித கப்பலாய் 
    காணாமல் போயிருக்கிறது..
     
    கனப் பொழுதில் கரைந்தே போனாலும்
    விடிகாலை வானில் 
    புன்னகைக்கும் புது சூரியனாய்…
    மீண்டும் மீண்டும் எழுகிறது
    என் மனக்கனவுகள்…
     
    கதவுகள் அடைத்து துரத்தவோ…
    கடிவாளம் போட்டு இழுக்கவோ
    முடியாத என் மனக்கனவுகளுக்கு
    காலம் ஒரு நாள் கைகொடுக்கும்
     
    என் கனவுகளை 
    கொன்று தின்று கொக்கரித்தவர்களே..
    நினைவில் கொள்ளுங்கள்..
    காற்றும் கடவுளும் என்றும்
    ஒரு திசையில் நின்றதில்லை..!
     
    படத்துக்கு நன்றி

    http://abi-shameena.blogspot.in/2010/12/dream-in-islam.html

    Share
  • மரகதவல்லி மீனாட்சி !

     

     
    ராஜராஜேஸ்வரி ஜெகமணி


    யா தேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா:
    நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமஸ் தஸ்மை! நமோ நம:                  

    அன்னையின் அன்பிற்கு ஈடாக ஏதும் இல்லை என்பதனாலேயே பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து இறைவன் அருள்வதாக இறைவனின் அடியார்கள் இறைவனைத் தாய்க்கு நிகராகக் கொண்டு வழிபட்டனர்.

    தாயின் வடிவில் அருள் புரியும் அன்னை பராசக்தி
    மதுரையில் மீனாட்சியாகஅருள் பாலிக்கிறாள்.

    அன்னை மீனாக்ஷி சின்னஞ்சிறு பெண்போல சிற்றாடை இடையுடுத்து பொற்றாமரைக்குளத்தருகில் கோவில் கொண்டு ஆட்சிபுரியும் மதுரையில் நவராத்ரி உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    பகல்- இரவு இரு வேளைகளிலும் ஒன்பது நாட்கள் பூஜை செய்வது நவராத்திரி விரதம் என்றும்; ஒன்பது இரவுகள் மட்டும் பூஜை செய்வது நவராத்திரி பூஜை என்றும்  அழைக்கிறோம்…

    முதல் மூன்று நாட்கள் அன்னை சக்தியையும்; அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும்; கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வீடுகளிலும் கோவில் களிலும் கொலுப்படி அமைத்து வழிபடுகிறோம்..பத்தாவது நாளான விஜயதசமியை வெற்றித் திருநாளாகக் கொண்டாடி வருகிறோம்.

    சக்தி, செல்வம், ஞானத்தைத் தருவதாக  நவராத்திரி பூஜை அமைந்துள்ளது.

    மதுரை வீதிகளில் நடந்தாலே முக்தி.காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையில் வாழ்ந்தால் முக்தி

    தடாதகை, கோமளவல்லி, அங்கயற்கண்ணி, பாண்டிய ராஜகுமாரி, மாணிக்க வல்லி, சுந்தர வல்லி  என்றெல்லாம் அழைக்கப்படும் அன்னை மீனாட்சியின் விகரகம் சுத்தமான மரகத்தால் செதுக்கியது தேவலோகச்சிற்பியான மயன் !.

    மரகதவல்லி என்றும் அருமையாய் அழைக்கப்படுகிறாள் அன்னை !

    அன்னை மீனாட்சி கருணையே வடிவானவள் என்பதை அவளது நிறம் உணர்த்துகிறது…

    பொற்றாமரைக்குளம்  இறைவன் சோமசுந்தரேஸ்வரரால்  உருவாக்கப்பட்டது…
    பொற்றாமரைக்குளத்தில் தினமும் மலர்ந்த தங்கத்தாமரைகளால் சப்த ரிஷிகளும் அன்னை மீனாட்சியை ஆராதித்து வந்தார்களாம்.

    சங்கப்பலகைகொண்டு தமிழ்ப்புலவர்களை சோதித்த இடம் !

    மீன் , புழு , பூச்சிகள் என்று எந்த உயிரினமும்  வாழமுடியாத வரம் பெற்ற குளம் !

    நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதாடிய தமிழ்ப்புலவர்  நக்கீரர் இறைவனின் நெற்றிக்கண் வெப்பம் தாளாமல் குதித்த குளம் !

    மந்திரமாவது நீறு என்று கூண்பாண்டியனின் தீராத வயிற்றுவலியை  கோவில் பிரசாதம் சமைக்கும் அடுப்பின் சாம்பல் தீர்த்துவைத்து  உணர்த்தியது !

    மற்றவர்களின் கண்கள் இமைக்க வாய்ப்புண்டு; ஆனால், மீனின் கண்கள் இமைப்பதில்லை.

    மீன் இமைக்காமல், தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் தன்மையுடையது. அதுபோல், கயற்கண்ணியான மீனாட்சியும், தன் பக்தர்களை இரவும், பகலும் விழித்திருந்து பாதுகாக்கிறாள்.

    அவளது கண்கள் இமைப்பதில்லை என்பதால் தான், மதுரையும் தூங்கா நகராக விளங்குகிறது.

    மீன்தன் கண் பார்வையாலேயே தன் முட்டைகளை  போஷித்து  காத்து வளர்ப்பதைப்போல் தன் கண் இமையாமல் நம்மையையும் உ;லகத்து உயிர்களைப் பாதுகாத்து ரட்சிப்பதால் அன்னைக்கு மீனாட்சி என்று பெயர் …

    அன்னை மீனாக்ஷி தன் அருட்கண்களின் பார்வை பட்ட மாத்திரத்தில் அவளது சகல குழந்தைகளுமான புல்- பூண்டிலிருந்து ஆரம்பித்து பிரம்மாதி தேவர்கள்வரை எல்லோரையும் தனது கருணா கடாக்ஷத்தால் நனைத்து அறிவை, உயிரை வளர்த்து உய்வித்து விடுகிறாள்.

    .மதுரையில் மீனாக்ஷி தினமும் 8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுவது கண்கொள்ளாக்காட்சி.

     மீனாட்சி அம்மனின் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக மீனாட்சி அம்மனுக்கு புதிதாக ஒரு வைர கிரீடம் தயாரிக்கப்பட்டுள்ளது. 11/2 கிலோ தங்கத்தால் செய்யப்பட்டு, 300 காரட் எடையுள்ள வைரக்கற்கள், 154 காரட் எடை கொண்ட மரகத, மாணிக்க, கற்கள் பதிக்கப்பட்டுள்ள வைரகீரிடம் அணிந்து அலங்காரமாய் காட்சி அளிக்கிறாள் அன்னை !

     

    Share
  • புதிய கலப்பைகள்

    முகில் தினகரன்

    மூட நம்பிக்கை
    முட்புதர்களுக்கு
    முடிவுரை எழுதிடுவோம்!
    முகத் தடாகத்தில்
    முல்லைச் சிரிப்பால்
    முன்னுரை வரைவோம்!

    பழமைப் பதர்களை
    புதிய சிந்தனையால்
    பளபளப் பாக்கிடுவோம்!
    புதுமைப் பூகோளத்தைப்
    புரவியேற்றி
    பூரித்துப் புடைப்போம்!

    வறுமை வியாதிக்கு
    வயல்வெளி மருந்திட்டு
    விரட்டி வீழ்த்திடுவோம்!
    வெறுமை வானத்தை
    வெண்புறா கூட்டத்திற்கு
    விலைபேசி விற்றிடுவோம்!

    தடுக்கும் தளைகளை
    தகிக்கும் விரல்களால்
    தெறிக்கச் செய்திடுவோம்!
    கெடுக்கும் கயமையை
    கருணைக் கோடாரியால்
    கிழித்துத் துடைப்போம்!

    உழைப்புக் களத்தில்
    உயர்வுக் குணத்தை
    உரமாய்த் தெளிப்போம்!
    கலப்பைக் கூரில்
    கையேந்து குணத்தை
    காணாது போக்கிடுவோம்!

     

    http://india.blogs.nytimes.com/2012/03/16/budget-2012-13-infrastructure-industry-and-agriculture/

    படத்துக்கு நன்றி

    Share
  • பிரக்ஞையே இல்லாத இரண்டு பாதகங்கள்!

     

    வெங்கட் சாமிநாதன்

    நினைவுகளின் சுவட்டில் பாகம் – II (பகுதி – 52)

    சினிமா பார்த்துவிட்டு ஹோடடலுக்குத் திரும்பி வந்தேன். பயப்படும்படி ஒன்றும் நேரவில்லை. ஹோட்டலும் ரூமும்  பத்திரமாகத்தான் இருந்தன. பூட்டு உடைக்கப்படவில்லை. உடைப்பதற்கு அறையில் ஏதும் இல்லை. முதல் தடவையாக தனியாக வந்துள்ள அனுபவமும் தான் சற்று பயப்பட வைத்துள்ளது என்று மனம் சமாதானம் சொன்னாலும் ஹோட்டல் ஒன்றும் அப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் சூழ்நிலையில் இல்லை. இருப்பினும் படுத்துக்கொண்டேன். இரவு முதலில் கொஞ்ச நேரம் மனம் அமைதியின்றி கழிந்தாலும் எப்படியோ தூக்கம் வந்து கவலையைத் தீர்த்தது. தூங்கினால் காட்டில் தனிமையில் இருந்தாலும் நகரச் சந்தடியில் கூட்டத்தோடு இருந்தாலும் தூக்கம் எல்லாவற்றையும் அழித்து விடுகிறது. சுய நினைவே இல்லையென்றால் எது எப்படி இருந்தால் என்ன?

    காலையில் எழுந்ததும் காசிக்குப் போனால் என்ன என்று தோன்றியது. இவ்வளவு தூரம் வந்து விட்டு காசிக்குப் போகவில்லையென்றால்…? பின், எப்போது இந்தப் பக்கம் காசிக்கு இவ்வளவு அருகில் வரும் சந்தர்ப்பம் ஏற்படுமோ? அதிலும் என் காசியாத்திரைக்காகும் செலவு அலஹாபாதிலிருந்து காசிக்குப் போய் வரும் செலவுதான். யார் யாரெல்லாமோ நிறைய பணம் வாழ்நாளெல்லாம் சேர்த்துக்கொண்டு, சொத்துக்களை நிர்வகிக்க ஏற்பாடு செய்து,  உயில் எழுதி வைத்து விட்டுப் போவார்களாம். எனக்கு அந்த கஷ்டம் இல்லையே. அதோடு அப்பா அம்மாவுக்கு காசியிலிருந்து கங்கை ஜலச் செம்பு வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தால் இன்னும் சந்தோஷப்படுவார்களே. அத்தோடு புள்ளையாண்டானுக்கு அபூர்வமா காசிக்குப் போகணும், கங்கை ஜலம் வாங்கிக் கொடுக்கணும்னு அக்கறையும் பக்தியும் வந்து விட்டது என்றால் சந்தோஷம்தானே. நான் சொன்னால் நம்ப மாட்டார்கள். ஆனால் கங்கைச் செம்பு சாட்சி சொல்லுமே.

    திரும்பி வரவேண்டும் அலஹாபாதுக்கு. இலவச பாஸ் அலஹாபாதிலிருந்து சம்பல்பூருக்கு. காசிக்கு டிக்கட் வாங்கி ரயிலில் உட்கார்ந்து கொண்டால், சுற்றி இருப்பவர்கள் ஒரு கூட்டம், ஐந்தாறு பேர், தமிழ் பேசுகிறவர்களாக இருந்ததில் ஒரு ஆச்சரியமும் சந்தோஷமும். எல்லாம் நாற்பது ஐம்பது வயசுக்காரர்கள். பெண்கள் யாரும் இல்லை. பேச்சுத் துணையாயிற்று. யார், எந்த ஊர், எங்கே வந்தீர்கள், எங்கே போகணும்? இத்யாதி விசாரிப்புகள் இல்லாதிருப்பது சாத்தியமில்லையே. பேசிக்கொண்டோம். அவர்களும் அதிசயமாக காசிக்குப் போகிறவர்கள்தான். அதுவும் நல்லதாயிற்று. என்னைப் பற்றித்தான் அவர்கள் துருவித் துருவி கேட்டார்களே ஒழிய, அவர்கள் பற்றி அவர்களாகச் சொன்னதைத் தவிர எனக்கு அவர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள எதுவும் கேட்கத் தோன்றவில்லை.

    மாலை வரைதான் உறவு. பின் பிரியப் போகிறோம். தெரிந்து என்ன ஆகப் போகிறது என்பதற்கு  மேல், அப்படி ஒரு சுபாவம் வளரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும் அவர்களுடன் பேசிக்கொண்டே வந்ததில் பொழுது போயிற்று. சுவாரஸ்யமாகவும் இருந்தது. காசி வந்ததும் இறங்கினோம். அவர்களோடு சேர்ந்ததில் ஒரு லாபம். எல்லா விசாரிப்புகளையும் அவர்களே செய்தார்கள். ஒரு சத்திரமோ மடமோ சரியாக நினைவில் இல்லை. அங்கே தங்கினோம். இதுவும் இதை எழுதும் இச்சமயம் ஒரு சந்தேகம் தட்டுகிறது. தங்கின இடத்தின் முகப்பு, தூண்களும் தாழ்வாரமும் கொண்ட முகப்பு நினைவில் பதிந்திருக்கிறது. ஆனால் அது காசியிலா, இல்லை, பூரியிலா என்று நிச்சயமில்லாது ஒரு மங்கலான நினைவாக இருக்கிறது

    இதை இடையில் சொல்ல மறந்து விட்டேன். ஒரு சமயம் ஊருக்கு  விடுமுறையில் போக, கட்டக் வரை  பஸ்ஸிலும் பின்னர் அங்கிருந்து  கல்கத்தா மெயிலில் ஊருக்கும்  செல்லலாமே என்று தோன்றியது. இரவு பூராவும் பஸ்ஸில். அப்போது  என்னுடன் இன்னும் சிலர்  ஹிராகுட்வாசிகள் இருப்பது இடையில் தெரிந்து அவர்கள் நண்பர்களாகி, பூரி போய் ஜகந்நாதர் தரிசனம் செய்து விட்டு போகலாமே என்று பெல்லாரிக்காரர், தன் தங்கையுடன் வந்தவர் சொல்ல, சரி என்று எல்லோரும் பூரி சென்றோம். அங்கு தங்கியிருந்த ஒரு மடம், இலவசமாகக் கிடைத்த தங்கல். அது ஒரு மிகவும் மனதுக்கு சந்தோஷம் அளித்த அனுபவம். அதை எழுத எப்படி ஏன் மறந்தது என்று தெரியவில்லை.

    கூட வந்தவர்கள் சொல்லி, வழியில் ரோடில் பூரி சாப்பிட்டதும், அவ்வளவாக ரசிக்காத பூரி, நிழலாடுகிறது. ஆனால் இதெல்லாம் முக்கியமில்லை. குறுகி வளைந்த இருபுறமும் இர்ண்டு மூன்று அடுக்கு மாளிகை போன்ற பெரிய வீடுகள் கொண்ட நீண்ட தெருக்கள் வழி சென்றது ஒரு புதுமையான அனுபவம். இப்படிப்பட்ட குறுகிய, வளைந்து நீளும் சந்துகள் இருபுறமும் உயர்ந்த கட்டிடங்கள் என்பது இதுகாறும் காணாத ஒன்று. எத்தனை நூற்றாண்டு பழமையான, சரித்திரப் பிரசித்தி பெற்ற நகரம் இது.! அதன் குறுகிய சந்துகளின் ஊடே நடந்து செல்வதே பெருமையாக இருந்தது. தரையில் வெயில் படாத சந்துகளான தெருக்கள்.

    முதலில் கங்கைக்கரையை அடைந்தோம். எந்த படித்துறை என்பதெல்லாம் நினைவிலில்லை. நீண்ட விசாலமான படிகள். வெகுதூரம் படிகளில் இறங்கியே ஆழத்தில் கங்கை நதி பாயும் நீர்த்தடத்தை அடைய முடியும். படிகளின் இடையே ஒரு சமதளம். ஒரு பெரிய மரம் பின் மறுபடியும் படிகள். ஆற்றின் அருகே சென்றதும் எதிர்க்கரையைப் பார்த்தால் அது எங்கோ தூரத்தில். எவ்வளவு பிரம்மாண்ட ஆறு. இதற்கு முன் காவிரி எல்லாம் வெறும் வாய்க்கால் தான். எதிர்க்கரையிலும் பெரிய பெரிய மாளிகைகள். கண்ணுக்கெட்டிய தூரம் இரு புறமும், இரு கரைகளிலும் மாளிகைகள். கோயில்கள் போன்ற கோபுரங்கள். நீண்ட விஸ்தாரமான, ஆற்று நீரைத் தொட்டுக் கொண்டிருக்கும் படிகள்.

    பார்க்க ஆனந்தமாகத்தான் இருந்தது. இது நாள் வரை காணாத காட்சி. காணாத பிரம்மாண்டம். என்னுடன் வந்தவர்கள் இறங்கிக் குளித்துக்கொண்டிருந்தார்கள். எனக்கு ஆற்றில் இறங்குவதா, வேண்டாமா என்ற தயக்கம். ஆற்றையும் அதில் கண்ட இடமெல்லாம் மிதக்கும் பொருள்களையும் குப்பைகளையும் பார்க்க மிகக் கஷ்டமாக இருந்தது. மேலும் ஆற்று நீரின் கலங்கல் இறங்குமிடத்தில் காணும் சேறு என்னவோ மனத்தைப் புரட்டியது. காவிரி ஆற்றின் நீரும் கலங்கல்தான். ஆனால் அது இப்படி அசுத்தங்கள் மிதக்கும் ஆறு இல்லை. இத்தகைய சேறு நிறைந்த கரையும் அல்ல. உடையாளூரின் ஆற்றில் இறங்க படியில் கால் வைத்தால் படிகளை கலங்கலற்ற  நீரின் அடியில் பார்க்கலாம். மீன்கள் கால்களைக் கடிக்கும். இப்போது தான் ஆற்றில் நீரும் இல்லை. ஒரு வேளை மணலும் இல்லை என்று நினைக்கிறேன்.

    குளித்துக்கொண்டிருந்தவர்கள் “பயப்பட வேண்டாம் . நாங்கள்  இருக்கோம்.” என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். ஒரு சின்னப் பெண் பாவாடை அணிந்த பத்து வயசுப் பெண், அவர்களைத் திட்டிக்கொண்டே கரையில் நின்று கொண்டிருந்தது. ரொம்ப சூட்டிக்கையான பெண். முகத்தைப் பார்த்தாலே அதோடு விளையாடத் தூண்டும் முகம். “அது ”ஐயோ” என்று இடையில் கத்தியது தமிழ்ப் பெண்ணோ என்ற எண்ணம் தோன்றவே அதன் பயம் நீக்கி அதோடு பேச்சுக் கொடுத்தால், அந்தக் குழந்தை அங்கு கங்கைக் கரையிலேயே வசிக்கும் ஒரு தமிழ்க் குடும்பத்தின் பெண் என்று தெரிந்தது. . இங்கு விளையாட வந்திருக்கிறது. கங்கைக் கரையில் குடியிருந்தால் குழந்தைகள் விளையாட கங்கைக் கரைக்கு வருவது பற்றி பெற்றோருக்கு பயம் இல்லை போலும். சகஜமாகியிருக்கும் வாழ்க்கை. சூழல். அப்பா அங்கேயே அருகில் ஏதோ கோயிலில் பூஜை செய்பவர். அதற்கு அதிக நேரம் என்னோடு பேசுவதில் இஷ்டம் இருக்க வில்லை. “ரொம்ப நாழியாயிடுத்துன்னு அம்மா கோவிச்சுப்பா” என்று சத்தம் போட்டு சொல்லிக்கொண்டே ஓடிவிட்டது.

    ”போறும் பேசினது. வாங்க குளிக்க” என்று அழைப்பு தொடர்ந்தது. வெகு தயக்கத்திற்குப் பிறகு இஷ்டமில்லாமல் அரை மனதோடு ஆற்றில் இறங்கினேன். இது நடந்தது 1956-ம் வருடம். அதன் பிறகு கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு ராஜீவ் காந்தி கங்கையைச் சுத்தம் செய்ய ஒரு பெரும் திட்டம் வகுத்து பல ஆயிரங்கோடிகள் செலவழித்த பிறகு, 1990 களில் நான் ஒரு முறை காசிக்கு நாடகக் கருத்தரங்குக்குப் போயிருந்தேன். கங்கையோ இன்னும் 45 வருட அசுத்தங்களைச் சுமந்து கொண்டு பிரவாஹித்துக்கொண்டு இருந்தது. நாங்கள் ஒரு படகில் கங்கையைக் கடந்து அக்கரைக்குச் சென்றோம். படகில் எங்களுடன் அமர்ந்திருந்த காசிவாசிகள், காசி பல்கலைக் கழக பேராசிரியர்கள் பேராசிரியைகள், மற்றும் பல நகரங்களிலிருந்து வந்திருந்த பேராசிரியர்கள், படகு நதியில் இறங்கியதும் கங்கை நீரைக் கையில் ஏந்திப் பருகினர். பக்தி பரவசத்தோடு தலையில் தெளித்துக் கொண்டனர். எனக்கு அந்த  நீரைத் தொடவே அருவருப்பாக இருந்தது. அன்று 1956-ல் ஆற்றில் குளிக்க இறங்கியவர்கள் வற்புறுத்தியது போல இவர்களும் வற்புறுத்துவார்களோ என்ற பயம் ஏற்பட அவர்களைப் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொண்டேன். என்னில் பக்தி உணர்வும் புனிதம் பற்றிய சிந்தனையும் அறவே வற்றிவிட்டதோ என்னவோ, தெரிய வில்லை.

    எல்லோரும் பின் விஸ்வநாதர் கோயிலுக்குச் சென்றோம். அதைக்  கோயில் என்று சொல்வதா இல்லை ஒரு மடத்தின் அறையில் தரையில் ஒரு தொட்டியில் பதிக்கப்பட்டிருக்கும் லிங்கம் என்று சொல்வதா என்று கேட்கத் தோன்றும். ஒரு பாண்டா லிஙகத்தின் அருகில் உட்கார்ந்து கொண்டிருந்தான். வருபவர்களுக்கு புஷ்பங்கள் எடுத்துக் கொடுத்து ஆசீர்வதிப்பான். அவன் ஆசிர்வதிக்கிறானோ என்னவோ, அதை வாங்கிக்கொள்பவர்கள் மிகுந்த பக்தி பாவத்தோடு கைகளைச் சேர்த்துக் குவித்து வாங்கிக்கொண்டார்கள். நம் கோயில்களில் காணும் யாரும் அண்டாத கர்ப்பக்கிரஹம், தூர இருந்து சேவிப்பது, மந்திரங்கள் சொல்லி அர்ச்சிப்பது என்று ஏதும் இல்லை. ஜனங்கள் அதிகம் இல்லை. இல்லையென்று இல்லை. பத்திருபது பேர் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இது கோயிலாக, கர்ப்பக்கிரஹமாக, ஒரு புனித ஸ்தலமாக, இல்லை. விஸ்வநாதர் ஏதோ நீண்ட தூர பயணத்தில் தாற்காலிகமாக இங்கு ஒரு அறை எடுத்து விஸ்ராந்திக்காக, பயணக் களைப்பு போக தங்கியிருக்கிறார். இன்று மாலையோ நாளைக் காலையோ இந்த அறையை விட்டு தன் பயணத்தைத் தொடங்குவார் என்பது போலிருந்தது.

    அப்போது எனக்குத் தோன்றவும் இல்லை. அது பற்றிய விவரமோ பிரக்ஞையோ இருக்கவில்லை. இந்தக் கோயில் என்னும் அறை, ஒரு பெரிய மசூதியை ஒட்டி இருப்பது. ஒரு பெரிய மாளிகையை ஒட்டி ஒரு அவுட் ஹவுஸ் என்று ஒரு அறை கட்டியது போலத் தான் இந்த காசி விஸ்வநாதர் ஆலயம். தெற்குக் கோடியிலிருந்தும் ராமநாதபுரத்திலிருந்து இந்தியாவின் தூர எல்லைகளிலிருந்து நூற்றாண்டு காலங்களாக தம் ஆயுட்கால தவமாக பணம் சேர்த்து, இறுதிக்கால ஏற்பாடுகள் செய்து காசியாத்திரை வருவது விஸ்வநாதரைத் தரிசிக்க இந்த அறைக்குத்தான். ஒரு காலத்தில், பிருமாண்டமாக இருந்த ஆலயம் இது. எத்தனை முறை இது இடிக்கப்பட்டுக் கட்டப்பட்டதோ. இப்போது என் பூர்வீக இடத்தை விட்டு நான் போகமாட்டேன் என்று காசி விஸ்வநாதர் மசூதியின் பின் சுவரை ஒட்டி “தாரணா” வில் உட்கார்ந்திருப்பது போல பட்டது.

    கங்கையும் ஏமாற்றியது. காசி விஸ்வநாதரும் ஏமாற்றினார். ஒன்று, சரித்திரம் வாங்கிய பழி. இன்னொன்று நம்மை நாமே அழித்துக் கொண்டிருப்பது. இரண்டு பாதகங்கள் பற்றியும் நமக்கு பிரக்ஞை இல்லை. வழியில் ஒரு கடையில் கங்கை ஜலம் நிரப்பி பற்று வைத்து மூடிய செம்பு இரண்டு வாங்கிக் கொண்டேன். ஒன்று அப்பாவுக்கு. இன்னொன்று நிலக்கோட்டை மாமாவுக்கு. இரண்டும் அவரவர் பூஜை அறையில் இடம் கொள்ளும்.

    என்னோடு வந்தவர்கள் அங்கேயே தங்கினார்கள். அவர்களூக்கு இன்னும் சில நாட்கள் தங்கும் திட்டம் இருக்கும். நான் அலஹாபாதுக்குத் திரும்பினேன். வேறு எங்கும் போகும் எண்ணமில்லாததால் சம்பல்பூர் வந்து புர்லா போய்ச் சேர்ந்தேன்.

    திரும்பி வந்த பயணத்தின் நினைவு எதுவும் இல்லை.

    யாருக்குத் தெரியும்? நேர்காணலும்  தேர்வும் என்னவாகும் என்று?. ஏதும் வேலைக்கான உத்திரவு வரும் வரை, இது போல, தினம் பத்திரிக்கைகளில்  wanted column –ஐத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான். இதை எழுதிய வாக்கியத்தில் ஒரு அலுப்பும் சோர்வும் தட்டுவதாகத் தோன்றலாம். இல்லை. இப்படி மனுச் செய்து கொண்டே இருக்கலாம். நேர்காணலுக்கு அழைப்பு வந்து கொண்டே இருக்கும். நானும் புதுப்புது இடங்களை இலவசமாகப் பயணம் செய்து பார்க்கலாம் என்று ஒரு புதிய வாழ்க்கையும் அனுபவமும் கிட்டத் தொடங்கியிருப்பது நினைக்க எனக்கு உற்சாகமாகத் தான் இருந்தது.  

     படங்களுக்கு நன்றி :

    http://travel.wikinut.com/Varanasi-,also-known-as-Kashi-and-Banaras-is-the-worlds-oldest-city/1vpvjumm/

    Share