கன்யா குமரி
விடிகாலை நேரம்
ஆதவனே வரத் தயங்கும்
காரணம் என்னவென்று காணுதற்கு
வாசற்கதவு திறந்தேன்
எதிர் வீட்டு குடிசையின் வாசலில்
ஏற்கெனெவே உதயமாகி மாக்கோலம்
போடுகின்ற கன்னிப் பெண் உருவத்தில்
வந்தானோ சூரியன்
வண்ணக் கோலம் போடும் கன்னியவள்
மனம் மயக்க மதி வதனம் காண வேண்டி
பார்வையை கூர்மையாக்கினேன்
நிழற் படமாய் நின்று அவள்
நெற்றியில் சுருண்டு விழுந்த
கருமேகக் கீற்றை புறங்கையால்
ஒதிக்கிவிட்டு நிமிர்ந்தாள்
கன்னங் கரேலென்ற காரிருளின்
சாயமதை தோய்த்தெடுத்து
கன்னியாய் உருக் கொண்டு
பூவுலக காரிருளை போக்குதற்கு
தானே கருப்பான விக்ரகமாய்
கருணை அன்னை ஆகி நின்று
அருள் புரியும் விந்தையினை
நான் காண நிமிர்ந்தாள் அவள்
காதிலே தாடங்கமோ ,கால்களிலே
கொலுசோ ஏதுமில்லை,ஆனாலும்
சர்வாங்க பூஷிதையாய் கண நேரம்
கண்களிரண்டில் கருணைக் காந்தமோடு
காட்சி தந்தாள் கயல் விழிகளை
ஒரு சுழற்று சுழற்றி விட்டு,
திரும்பினாள் அவள் முகம் பார்த்தேன்,
அதில் பார்த்தேன் அன்னை
அகிலாண்டேஸ்வரியை கன்னியாகுமரியை
கருவறையின் மூல விக்ரஹ கணநேரத்
தோற்றம் போல் இதமான புன்சிரிப்பு
பாதாரவிந்தமது மெல்லடி நடக்க
மனம் முகிழ்த்தது தாமரையாய்
கடையவனை கரை சேர்க்க
வந்திட்ட தெய்வம் போல்
காட்சி தந்த கருணைதெய்வம் !!!!!
பாதாதி கேசம் வரையில் படர்ந்து
படுமாற் போல் பூமியதில்
நெடுண்ஞாண்கிடையாக நீண்டு வீழ்ந்து
கும்பிட்டு மீண்டு மெழுந்து கை யெடுத்து
அவள் இருந்த திசை நோக்கி கும்பிட்டேன்
அட சூரிய நமஸ்காரமா நல்ல வழக்கம்
போகிற போக்கில் சொல்லிவிட்டுச்
சென்றான் ஒரு பால்காரன்!
படத்துக்கு நன்றி
http://www.hindudevotionalblog.com/2011/06/kanyakumari-devi-temple-in-tamilnadu.html