Blog

  • தொல்லைகாட்சி – வாகைசூடவா-செல்லமேசெல்லம்

    மோகன் குமார்

    தொல்லைகாட்சி – வாகைசூடவா-செல்லமேசெல்லம்

    டிவி யில் பார்த்த படம் – வாகை சூடவா

    வாகை சூடவா – சன் டிவியில் மறுபடி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இம்முறை மிக வியந்த விஷயம் ஹீரோயின் நடிப்பு தான் ! தமிழில் இனியாவுக்கு முதல் படம் என்றால் நம்பவே முடியாது. என்ன ஒரு எக்ஸ்பிரஷன். உடல் மொழி..மிக அட்டகாசமான நடிப்பு.

     இயக்குனர் சற்குணம் மனதை தைக்கும் விதத்தில் படத்தை எடுத்திருந்தார். எங்கள் தஞ்சை மண்ணில் பிறந்த இவர் குடும்பத்துடன் பார்க்க கூடிய தரமான படங்களை மட்டுமே வழங்கி வருவது மிக மகிழ்ச்சி தருகிறது.

     

    வெறுப்பேற்றும் விளம்பரம்

    கோல்ட்வின்னருக்கு ஒரு மொக்கை விளம்பரம் வருகிறது. பார்த்தாலே பற்றி கொண்டு வருகிறது. ரம்யா என்று ஓர் தொகுப்பாளினி இருக்கிறாரே அவர் ” இந்த தீபாவளி….” என்று சொல்லி விட்டு வேகமாய் எதோ பிதற்றுகிறார். பின் இது தான் சொன்னேன் என்று ஒரு விளக்கம் வேறு. கொடுமையான விளம்பரத்துக்கு போட்டி வைத்தால் இந்த விளம்பரம் டப் பைட் கொடுக்கும் . மாத்தி யோசிங்க சாரே !

    சூப்பர் சிங்கர் புலோப்பர்ஸ்

    சென்ற சூப்பர் சிங்கர் சீசன் முடிந்ததும் சிவ கார்த்திகேயன் அடித்த கூத்துகளும், அவரின் புலோப்பர்ஸ்சும் தனியாக ஓரிரு நாள் போட்டார்கள். பலரும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நிகழ்ச்சியாக அது இருந்தது. பின் யூ டியூபிலும் ஆயிரகணக்கானோர் பார்த்து மகிழ்ந்தனர். ஆனால் இப்போது முடிந்த சூப்பர் சிங்கர் புலோப்பர்ஸ் இந்த வாரம் போட்டார்கள். மரண மொக்கை ! அஞ்சு நிமிஷம் கூட பார்க்க முடியாமல் சானல் மாற்றி விட்டோம். சிவ கார்த்திகேயன் சினிமாவுக்கு போனது தமிழ் காம்பியரிங் உலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது என்று தான் சொல்லணும் !

     

    மாணவன் ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம்

     

    தினம் ஏன் தாமதமாய் வருகிறாய் என ஆசிரியர் கேட்டதால் அவரை பின்னாலிருந்து கத்தியால் பதிமூன்று வயது மாணவன் குத்திய சம்பவம் இந்த வாரம் நடந்தது. இது பற்றி அந்த ஏரியாவின் கல்வி அதிகாரி பேசியதை நியூஸ்களில் காட்டினார்கள்

     

    ” சின்ன கத்தி தான் அது. ஒண்ணும் பிரச்சனை இல்லை. லேசா தான் குத்தினான். பெருசா பாதிப்பில்லை. ஆசிரியரை ஆஸ்பத்திரியில் சேத்துருக்கோம். அவரு நார்மலா நல்லாருக்கார். பையனை போலீசில் வச்சு விசாரிச்சிக்கிட்டு இருக்கோம். எல்லாம் கண்ட்ரோல்லே இருக்கு. எல்லாத்தையும் சரி பாத்துட்டோம் . ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை”

     

    வரிக்கு வரி ப்ராப்ளம் இல்லை; சரி பண்ணியாச்சு; கண்ட்ரோலில் இருக்கு என அவர் பேசியது, சீரியஸ் விஷயத்தை காமெடி ஆக்கிடுச்சு. எல்லாம் சொன்ன அவர், ” என்னைய வேலைய விட்டு மட்டும் தூக்கிடாதீங்க” என்ற கவுண்டர் டயலாக் மட்டும் சொல்லவே இல்லை 🙂

     

    பிளாஷ்பேக் : செல்லமே செல்லம்

     

    முன்பு டிவிக்களில் வந்து பலரும் ரசித்த சில நிகழ்சிகளை இந்த வரிசையில் பார்ப்போம்.

     

    ஜெயா டிவியில் உமா பத்மநாபன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி செல்லமே செல்லம். அம்மா மற்றும் குழந்தை பங்கு பெரும் இதில் குழந்தைக்கு என்ன வித உணவு பிடிக்கும், அவன் பெஸ்ட் நண்பன் யார் போன்ற எளிதான கேள்விகள் தான் கேட்பார்கள். அதற்கு குழந்தையும் அம்மாவும் பெரும்பாலும் மாற்றி தான் பதில் சொல்வார்கள். பார்க்க காமெடியாய் இருக்கும். சின்ன சின்ன குழந்தைகளை பார்க்கும் ஆவலிலேயே விடாமல் பார்ப்போம். துவக்கத்தில் வரும் “செல்லமே செல்லம்” என்கிற பாட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் நினைவில் இருக்கு ! இது போன்ற குழந்தைகள் நிகழ்ச்சி இப்போது ஏதும் வருதா என தெரிய வில்லை.

     

    ரசித்த முகநூல் செய்தி

     

    ஓராண்டு ஆட்சியில் நூறாண்டு சாதனை புரிந்த அம்மாவின் ஜெயா டிவியில் “நீங்களும் செல்லலாம் தெருக்கோடி” என்ற விளம்பரம் அடிக்கடி வருகிறது !

     

     படத்துக்கு நன்றி

    vaagai-sooda-vaa-wallpaper-05.jpg

    Share
  • வார ராசி பலன் 04.11.2012-10.11.2012 வரை

     

    .
    காயத்ரி பாலசுப்பிரமணியமன்

    மேஷம்: பணியில் உள்ளவர்கள்,  சின்ன சின்னப் பிரச்னைகளுக்கு உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்தால், வேலையில் அதிக கவனம் செலுத்தலாம். பெண்கள் மருத்துவச் செலவுகளைக் குறைக்க, பிள்ளைகள் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருதல் நல்லது. . மாணவர்கள் வரவு, செலவு விஷயங்களில் கவனமாக இருந்தால் கடன் தொல்லை இன்றி வாழ்க்கை ஓடும் . கலைஞர்கள் தன் இலக்கை அடையும் வரை விடாமுயற்சியை மேற்கொண்டால், வெற்றியை தன் பக்கம் வைத்துக் கொள்ள முடியும். பொறுப்பில் இருப்பவர்களுக்கு வழக்கு விவாகாரங்களில் நேரடி கவனம் தேவை.

    ரிஷபம்: . நிர்வாகத் திறமை கொண்ட பணியாளர்கள் பேச்சிலும் நிதானமாக இருந்தால், உடன் இருப்பவர்களின் உதவி எப்போதும் இருக்கும். மாணவர்கள் நண்பர்களோடு வீண் வாக்குவாதத்தில் இறங்கமலிருந்தால் தங்கள் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வது எளிது. வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் கலைஞர்கள்,  தகுந்த வாய்ப்பு வரும் வரை காத்திருந்தால், பண நஷ்டம் மனக் கஷ்டம் இரண்டையும் தவிர்த்து விடலாம். அதிகமாக புகழ்பவர்களிடமிருந்து,  பொது வாழ்வில் இருப்பவர்கள் விலகி இருப்பது அவசியம். இந்த வாரம் வியாபாரிகளுக்கு பயணங்களால் அலைச்சலும், ஆயாசமும் அவ்வப்போது வந்து போகும்.

    மிதுனம்: கர்ப்பிணிப்ப் பெண்கள், சரியான உணவுப்பழக்கம், முறையான தூக்கம் இரண்டையும் மேற்கொண்டால்,ஆரோக்கியம் பொலிவோடு திகழும். தன்னம்பிக்கையுடன் செயலாற் றும் மாணவர்களின் கனவுகள் நனவாகும். கலைஞர்கள் நண்பர்கள் வகையில் எதிர்பார்த்த அனுகூலம் குறைவாகவே இருக்கும். எனவே வேலைகளைத் தள்ளிப்போடாமல் உடன் செய்வது நல்லது. வியாபாரிகள் கடன் வாங்கி ஆடம்பரச் செலவுகள் செயவதைக் குறைத்துக் கொண்டால், சேமிப்பு தானே உயரும்.  பணியில் இருப்பவர்கள் முக்கியமான பொறுப்புக்களை தங்கள் வசம் வைத்துக் கொள்ளுதல் நல்லது.

    கடகம்:  இல்லத்தில் இனிமை தவழ பெண்கள் எப்போதும் கனிவாகப் பேசுவது அவசியம். மாணவர்கள் நினைவில் வைக்க வேண்டியவற்றை எழுதிப் பார்ப்பது நல்லது. பணியில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளின் சினத்திற்கு ஆளாகாதவாறு இருக்க, பணிகளை உடனுக்குடன் முடித்து விடுவதில் கவனமாக இருக்கவும். வியாபாரிகள் கொடுக்கல்- வாங்கல் ஆகியவற்றில் நம்பிக்கையோடு சிறிது புத்திசாலித் தனத்தையும் சேர்த்துக் கொள் வது முக்கியம். பொது வாழ்வில் இருப்பவர்கள் , நல்ல இதயங்களை புண்படுத்தாமல் நடப்பது நன்மையைத் தரும்.

    சிம்மம்: வியாபாரிகள் நன்கு முயற்சி செய்தால் வங்கி தரும் ஆதரவை வளத்துக்கு அஸ்திவாரமாக மாற்றிக் கொள்ளலாம். பெண்கள் விலை உயர்ந்த ஆபரணங்கையும், பொருள்களையும் தக்க விதத்தில் பராமரித்து வந்தால், வீண் செலவுகளை கட்டுக்குள் வைத்து விட முடியும். கலைஞர்கள் நண்பர்களை கண் மூடித்தனமாக நம்ப வேண்டாம். மாணவர்கள்  தேவையான இடங்களில் பணிவைப் பயன்படுத்தினால், எல்லோரிடமும்  நல்ல பெயரை பெறலாம். சுய தொழில் புரிபவர்கள், இந்த வாரம் ஏற்ற இறக்கமுள்ள பங்குச் சந்தையில் அகலக் கால் வைக்க வேண்டாம்.

    கன்னி: கலைஞர்கள் நேர்வழியில் போட்டிகளை எதிர்கொண்டால், எதிலும் வெற்றி பெறலாம். பெண்கள் பிறரின் நிறை குறைகளை அலசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. மாணவர்கள் , தேர்வு நேரங்களில் ஆரோக்கியத்தில் அலட்சியம் காட்டாமலிருப்பதே நல்லது. பணியில் இருப்பவர்கள் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற, பொறுமையாகவும், திறமையாகவும்  செயல்படுவது முக்கியம். பொது வாழ்வில் உள்ளவர்கள், எவ்வளவு நெருக்கமான நண்பரென்றாலும், பண விஷயங்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்வதை தவிர்த்தல் நலம். இந்த வாரம் வியாபாரிகள்,  கடன் தொல்லைகளினால் சிறிது மன சஞ்சலம் ஏற்படலாம்.

    துலாம்: பெண்கள் குடும்பத்தில் சச் சரவு, கருத்து வேறுபாடு ஆகியவை நுழையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் பாடங்களை கவனமாக பயில்வதன் மூலம் கடைசி நேர பதற்றத்தையும், பரபரப்பையும் குறைத்துக் கொள்ளலாம். பொது வாழ்வில் இருப்பவர்கள் சோம்பலையும், பணிகளை தள்ளிப் போடுதலையும் தவிர்த்தால், வாய்ப்பும், அதிர்ஷ் டமும் உங்களை தேடிவரும். வியாபாரிகள் குற்றம் குறைகளை பெரிது படுத்தாமலிருந்தால்,கூட்டு முயற்சிகள் மூலம் அதிக லாபமும், நல்ல பெயரும் பெற முடியும். கலைஞர்கள் கவனமாக இருந்தால், நல்ல பெயரோடு, பணவரவும் தங்கும்.

    விருச்சிகம்: பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கை அவ்வப்போது கவனித்து வாருங்கள். அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமையும். பெண்கள் அவ்வப்போது தோன்றும் வேற்றுமைகளை பொருட்படுத்தாமல் உங்கள் கடமைகளை முடித்தால் உறவுகள் நடுவே உங்கள் அந்தஸ்து உயரும். இந்த வாரம் வீட்டை விரிவுபடுத்துவதில் அதிக பணம் முடங்கும்.  கலைஞர்கள் அவசரப்பட்டு அடுத்தவர் பிரச்னைகளில் தலையிட வேண்டாம். மாணவர்கள் வேண்டாத தொல்லைகளிலிருந்து விடுபட எல்லாவற்றிலும் கவனமாக இருப்பதோடு பணம் செலவு செய்வதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது.

    தனுசு: பெண்கள் பணிபுரியும் இடம் மற்றும் இல்லத்தை நேர்த்தியாக வைத்திருப்பார்கள். இந்த வாரம் பூர்வீகச் சொத்தில் சில தொல்லைகள் வந்து போகும் நிலை இருப்பதால், ஆவணங்கள் அனைத்தையும் பத்திரமாக வைப்பது அவசியம். பணியில் இருப்பவர்கள் பொறுப்புடனும், பொறுமையுடனும் செயல்பட்டு வந்தால், நல்ல பெய ரைப் பெறுவது எளிதாகும். நண்பர்களிடம் ஏற்பட்ட மனஸ்தாபம் தீருவதால் மீண்டும் நட்பு பலம் பெறும். கலைஞர்கள் தங்கள் திறமையால் பிறர் கவனத்தையும், வாய்ப்புக்களையும் ஈர்ப்பார்கள். மாணவர்கள் தங்கள் தகுதியை உயர்த்திக் கொள்ள எடுக்கும் முயற்சிக்கு நல்ல பலனிருக்கும்.

    மகரம்: பெண்கள் தங்க நகைகளை இரவலாய் வாங்குவது, இரவலாய் கொடுப்பது- இரண்டையும் தவிர்த்தால் வீண் தலைவலி வராமலிருக்கும். உயர் படிப்பிற்காக வெளியிடம் செல்பவர்கள் எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நன்மை தரும். பணியில் இருப்பவர்கள் சேமிப்பைக் கரைக்கும் செலவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.பொறுப்பில் இருப்பவர்கள் வழக்கு விவகாரங்களை நேரடியாக கவனித்துக் கொண்டால், நஷ்டங்களைத் தவிர்த்து விடலாம். கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களையும், அதன் மூலம் வெற்றிகளையும் பெற்று மகிழ்வர்.

    கும்பம்: முதியவர்கள் ஆகாரத்தில் கட்டுப்பாடாய் இருந்தால், ஆரோக்கியமும் சீராக இருக்கும். வியாபாரிகள் பணியாளர்கள் கொடுத்த பொறுப்புக்களை சரிவர செய்கிறா ர்களா என்று கவனித்துக் கொள்ளவும். பொது வாழ்வில் இருபவர்கள் வேண்டாத பிரச்னைகளில் ஈடுபட வேண்டாம். பணியில் இருப்பவர்கள் உங்களைத் தேடி வரும் இடமாற்றத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளுங்கள்.அது நல்ல திருப்பு முனையாக இருக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் நிலவும் சூழலுக்கேற்ப, திட்டங்களை செம்மைப்படுத்துவதோடு தங்கள் அணுகு முறைகளையும் மாற்றினால், அதிக லாபம் பெறலாம்.

    மீனம்: பெண்கள் அனுசரணையான போக்கை மேற் கொண்டால், குடும்பம் அமைதியாக இருக்கும். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பு குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. கலைத் துறையினர் பல சலுகைகள் எதிர்பார்த்திருந்தாலும், அவற்றில் சில மட்டுமே நிறைவேறும். மாணவர்கள் புதிய முயற்சிகளுக்கு வரும் தடைகளை தங்கள் திறமையால் வென்று சாதனை படைப்பார்கள். பொது வாழ்வில் இருபவர்கள் போட்டிகளைச் சவாலாக ஏற்றுக் கொண்டால் வெற்றி வாய்ப்புகள் அதிகமாகும். வியாபாரிகள் மனதில் கூடாரமிட்டிருந்த சஞ்சலங்கள் குறைந்து உற்சாகம் கூடும்.

    Share
  • தீக்கொழுந்தில் பனித்துளி (18)

     

    முகில் தினகரன்

    அத்தியாயம்  – 18

    இரவு.

    தேவியின் வர்த்தைச் சாட்டைகள் அவன் மனதில் ரத்தத் தீற்றல்களை ஏற்படுத்தியிருக்க, உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தான்.

    ‘நாளைக்கு நான் புருஷனைத் தொலைச்சிட்டு வந்து நின்னா…பொறந்த வீட்டுக் கோடி போடவாது வருவியா?…இல்ல அதுவுமில்லையா?”

    ‘நாளைக்கு நான் புருஷனைத் தொலைச்சிட்டு வந்து நின்னா…பொறந்த வீட்டுக் கோடி போடவாது வருவியா?…இல்ல அதுவுமில்லையா?”

    தேவியின் தேள் கொடுக்குச் சொற்கள் திரும்பத் திரும்ப காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டேயிருந்தன.

    ‘தேவி…நான் யாருக்காகம்மா வாழுறேன்?….உனக்காக மட்டும்தாம்மா வாழ்ந்திட்டிருக்கேன்!…உனக்காகத்தாம்மா இந்த உடம்பின் ஒரு முக்கிய உறுப்பையே வித்தேன்… உனக்காகத்தாம்மா என் காதலியையே இழந்தேன்….. உனக்காகத்தாம்மா…இதோ இந்தக் கிறுக்குப் பெண்ணையே கட்டிக்கிட்டேன்?… இப்படி ஒரே வர்த்தைல என்னைய நொறுங்கிப் போக வெச்சிட்டியேம்மா!”

    தலையணையில் முகம் புதைத்துக் கதறினான்.

    ‘தேவி…சத்தியமாச் சொல்றேம்மா…எனக்கு மட்டும் அந்தச் சாமி மூணு கிட்னியக் குடுத்திருந்தா….என்னோட மாப்பிள்ளைக்கு அழகாத் தூக்கிக் குடுத்திருப்பேனேம்மா!..”

    ‘இரவு முழுதும் கொசுக்கடி… அவள் நினைவுகள்’ என்று எழுதிய யாரோ ஒரு கவிஞன் சுந்தரின் நிலையைப் பார்த்திருந்தால் ‘இரவு முழுதும் சவுக்கடி…தங்க வார்த்தைகள்” என்றும் எழுதியிருப்பான்.
     
    பக்கத்தில் வாயைப் பிளந்தபடி கொர்…கொர்…”ரென்று பேய்த்தனமாய்க் குறட்டை விட்டு உறங்கும் ரேணுகாவை வெறுப்பாய்ப் பார்த்தான்.

    விடியற்காலை நேரத்தில் அவனையேயறியாமல் அவன் உறங்கிய போது, கனவில்…

    வெள்ளைச் சேலையுடன் நடந்து வந்த தேவி, ‘அண்ணா…இது உனக்கே நியாயமா?… என் கழுத்துல தாலி ஏறக் காரணமாயிருந்த நீயே…அது இறங்கவும் காரணமாயிட்டியே…சரி… பரவாயில்லை… கோடிச்சேலையாவது குடு…குடுண்ணா..குடு” என்று கேட்டபடி அவன் சட்டையைப் பிடித்து உலுக்க,

    வாரிச்சுருட்டிக் கொண்டு விழித்தவன், கடிகாரத்தைப் பார்த்தான். மணி 6.15.

    ‘அய்யோ…அதிகாலைக் கனவு பலிக்கும்பாங்களே….”நினைக்கும் போதே அவன் உடல் பதறியது.

    ஏழு மணிவாக்கில் தறிக் கூடத்திற்குக் கிளம்பியவன், போகிற போக்கில் தாயிடம், ‘அம்மா…தேவி நேத்திக்கு தறிக் கூடத்திற்கு வந்திருந்தா…அவ புருஷனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு என்னைய ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனா…”

    ‘அய்யய்யோ…. என்னடா இவ்வளவு சாவகாசமாச் சொல்றே?…மாப்பிள்ளைக்கு என்னடா உடம்புக்கு?”

    ‘அது…வந்து….”என்று திணறியவன், ‘நீயே போய் விசாரிச்சுக்கம்மா!” என்று அவசரமாய்ச் சொல்லி விட்டு அதே அவசரத்துடன் வெளியேறினான்.

    ‘என்னாச்சு இவனுக்கு?” குழம்பிப் போன லட்சுமி, ‘டேய்..டேய்..எந்த ஆஸ்பத்திரின்னாவது சொல்லிட்டுப் போடா!”

    ‘சிவா ஆஸ்பத்திரி” சொல்லிவிட்டுச் சென்றான்.

    ——

    ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த தாயிடம் தேவி அந்த விஷயத்தைச் சொன்னதும் அதிர்ந்து போனாள் அவள்.

    ‘யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத நல்ல மனுசனுக்கு பகவான் இப்படியொரு நோவக் குடுத்திட்டானே!” மகளுக்காக கண்ணீர் வடித்தாள்.

    நேரம் பார்த்து தேவி தன் அஸ்திரத்தைப் பிரயோகித்தாள்.

    ‘அம்மா…அண்ணன் நினைச்சா…என் மாங்கல்யத்தைக் காப்பாத்தலாம்மா!…ஆனா…அண்ணன்தான்…மாட்டேன்னு!” அழுகையை முன்னிறுத்தி தன் தேவைக்கான கொக்கியைப் போட்டாள்.

    ‘என்ன..என்னம்மா சொல்றே?…சுந்தர் உனக்காக என்ன வேணாலும் செய்வானாச்சே…அவனா மாட்டேன்கறான்?…என்கிட்டச் சொல்லும்மா…நான் அவன்கிட்டப் பேசறேன்!”

    தான் சுந்தரிடம் கிட்னி கேட்ட விஷயத்தையும், அவன் மறுத்த விஷயத்தையும் தனக்கே உரிய பாணியில் தேவி தன் தாயிடம் விவரிக்க,
     
    ‘என்னம்மா ஆச்சரியமாயிருக்கு!…நீ கேட்டு சுந்தர் மறுத்திட்டானா?…என்னால நம்பவே முடியலையே!”

    ‘அதெல்லாம் அப்ப…இப்ப அண்ணன் மாறிடுச்சு!”

    ‘சரி தேவி..நீ கவலைப்படாதே!…நான் அவன் கிட்டப் பேசி சம்மதிக்க வைக்கிறேன்!… போதுமா!” நம்பிக்கையுடன் சொன்ன லட்சுமியை பார்த்துச் சிரித்தாள் தேவி.

    ‘ஏண்டி சிரிக்கறே?”

    ‘பின்னே சிரிக்காம என்ன பண்ணச் சொல்றே?…நான் கேட்டே தராதவன்   நீ கேட்டா மட்டும் தந்திடவாப் போறான்?” தாயாரைத் தூண்டி விடும் விதமாய் அவள் சொல்ல,

    ‘நீ வேணாப் பாருடி..நான் சொன்னா அவன் கேட்பான்!” என்ற லட்சுமி மாப்பிள்ளையையும் பார்த்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினாள்

    தொடரும்

     

     

    Share
  • திருமூலத் தேவரின் சமத்துவ நெறி

     

    சுலோச்சனா

    யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை
    யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை
    யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி
    யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

    இந்தப் பூவுலகில் பிறந்து சராசரியான மக்களாக சாதாரண வாழ்க்கை வாழும் எண்ணற்ற மக்களின் பொருட்டும் ஏன் மாக்களின் பொருட்டும் மகான்கள் மண்ணுலகிற்கு வருகை தருகின்றனர்.

    இந்த சராசரியான உயிர்கள் உய்யும் பொருட்டு நல்லுரைகள் பல புகல்கின்றனர். மனித மனத்தினிடையே அவைகள் புகுந்து மந்திரம் போல் வேலை செய்கின்றன.
       
                மனிதன் தான் தள்ள வேண்டிய விஷயங்கள் என்ன? கொள்ளவேண்டிய விஷயங்கள் என்ன? என்று தெளிவுபட சிந்தித்து வாழும் வழி முறைகளை வகுத்துக் கொள்ள மகான்கள் அருளும் மந்திரங்கள் போன்ற உபதேசங்கள் பெரிதும் உதவுகின்றன.அப்படிப்பட்ட நூல்களில் ஒன்று திருமூலர் எனும் ரிஷியின் திரு மந்திரம் ஆகும்.

                   பசுக்களின் துயர் தீர்க்க “மூலன்” எனும் இடையனின் உடலில் நுழைந்தவர் அவர்தம் பெயரிலேயே அழைக்கப்பட்டவர்.அவர் அருளிய “திரு மந்திரம்” எனும் நூலில் கையாளப்படாத விஷயங்களே இல்லை எனலாம் இந்த “திரு மந்திரம்” எனும் நூல் ‘சைவத் திருமுறைகளில்’ பத்தாம் திரு முறையாக வைக்கப்பட்டுள்ளது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளைக் கடந்து நிலைத்து நிற்கும் இந்நூல் “ஒன்றே குலமும் ஒருவனே தேவன் என்று உலகம் தழுவிய உயர் கருத்தை எக்காலத்திற்கும் எவ்விடத்திற்கும் பொருந்துமறு கூறும் நூலாகும். நாம் எடுத்துக் கொண்டுள்ள பாடலும் யாவருக்கும் மற்றும் எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்தாகவும் இருக்கின்றது. முதல் வரியான,

    யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை எனும் வார்த்தைகளின் உள்ளே பொதிந்துள்ள பொருள் ஆழ்ந்த நோக்குடையதாம்.

              ‘பார்க்கும் இடம் எங்கனும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருளை யாவரும் வழிபட வேண்டும் என்பது பொருள், இன்னொரு பொருள், உள்ளுறையும் பொருள் யாவராயினும் சரி இறை வழிபாட்டைக் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும் என்பது மண்ணாளும் மன்னவனானாலும் சரி மண் குடிசையில் வாழ்பவன் ஆயினும் சரி இரு நிலையில் நிற்பவர்க்கும் நடுநாயகமாக பொதுவில் இருப்பது இறைவழிபாடாகும் மன்னவனின் அபிஷேக ஆராதனைகளும் சரி ஏழை அர்ப்பணிக்கும் ,ஒரு துளசி இலையோ வில்வமோ இரண்டும் ஒரே நிறையாகும். இதன் மூலம் சமத்துவம் எனும்  தத்துவத்தை புரிந்து கொள்ள முடிகின்றது.

                  அடுத்த “யாவர்க்கு ஆயினும் பசுவிற்கோர் கையுறை” என்பது.இவ்விடத்தில் பசு என்பது நமக்கு பால் தரும் பசு என்பதோடு விலங்கினங்களோ – பறவைகளோ அல்லது மனிதனை விட குறைந்த அறிவுள்ள அனைத்து உயிரினங்களுக்குமாக என்று புரிந்து கொள்ளலாம்.

                 ஓர் கைப்பிடி அளவு ஏதோ ஒரு உணவு அளிப்பது என்பது உயர் அறிவுள்ள மனிதனின் கடமையாக நினைக்கின்றார் தவயோகி .தனவந்த்ர் தாராளமாக அனைத்து உயிர்களுக்குமே அளவின்றி அன்னமிட்டு பெரும் பிணியான தீராப் பிணியான பசிப்பிணியை போக்கலாம் எனில் எளியவனான ஏழை தன் கையில் ஓர் பிடி அளவாவது தருமம் செய்வது சாலச் சிறந்ததுதானே. தன்னிலையில் இருந்து குறைந்த அறிவுள்ள ஜீவனுக்கு  கருணை புரிய வேண்டும் என்பது கடமை. “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடவில்லையா?” நம் வள்ளல் பெருமானார், இராமலிங்க அடிகளார்.

                       யாவர்க்காயினும் உண்ணும் போது ஓர் கைப்பிடி”

    புரட்சிக் கவிஞர் பாரதி தாசனின் பிறர் உண்ண தான் உண்ணுதல் வேண்டும்
    பிறர் உடுத்த தான் உடுத்துதல்  வேண்டும்.

    எனும் சம நீதிக் கருத்தை அன்றே கூறிய வரிகள் இவையாகும்.வாழ்வின் அடித்தட்டில் உள்ளவனுக்கான-அவனுக்கும் சாத்தியமாகக் கூடிய எளிதாகக் கடைபிடிக்கக் கூடிய வழியைக் கூறும் வரியாகும். ஒரு நாளைக்கு ஒரே வேளை உண்ணுபவன் கூட தன் முன் வைக்கப்பட்டிருக்கும் உணவில் இருந்து ஒரு கைப்பிடியேனும் பசித்தவனோடு பகிர்ந்து உண்பது என்பது தியாகத்தின் திடத்தையும் சகோதரத்துவத்தையும் ஊட்டுவதாக இருக்கின்றது. இந்த சிந்தனைக்கு இடம் கொடுத்துவிட்டால் உலகில் யாரும் யாருக்கும் “பகை” என்பதே இல்லாத இனிய உல்கமாக அல்லவா மாறுகின்றது.

                                 “யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே”

    இனிய உளவாக இன்னாத கூறல்  இனிய கனி இருக்க காயை சுவைப்பது போன்றது என்கிறார் தெய்வப் புலவர் திருவள்ளுவர் “பிறர்க்கு” என்கிறார் திரு மூலதேவர் தனக்குச் சுற்றமாகவோ- நட்பாகவோ இல்லாத தன்னோடு சம்பந்தம் இல்லாத ஒருவருக்கு ‘இனிய வாய்ச்சொல் அருளல்., ஒருவருக்கு எவ்வளவு ஆறுதலைத் தரும்! கடுஞ்சொல் யாரிடமும் பேசுதல் கூடாது. என்ற கட்டளை போன்ற நீதியும் இதன் மூலம் அறிகின்றோம்.

                பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே” என்ற பாரதியின் பாடல் நம் நினைவிற்கு வருகிறது. எந்த தானமும் தர்மமும் செய்ய இயலாதவர்கள் கூட, ஆண்டவன் அளித்துள்ள பேசும் திறமையை நல்ல விதமாக பயன்படுத்தி இனிய சொற்களைக் கூறி தளர்ச்சியுற்றவனைக் கூட எழுந்து நின்று செயலாற்றும் திறமையை உண்டு பண்ணும் புனித சேவையைச் செய்யலாமே.

                  உலகெங்கும் நன்னெறிகளும் நன் மணிகளாக நிறைந்து கிடக்கின்றன. அனைத்து மகான்களும் சாதி மதபேதமின்றி நற்சிந்தனைகளை நமக்குத் தருகின்றன. நாம்தான் அவைகளை நமதாக்கிக் கொள்வது மட்டுமன்றி அடுத்த தலைமுறைக்கும், கொண்டு சேர்ப்பது நம் தலையாய் கடமையாகும். இளம் தலைமுறையினருக்கு இதைவிட சிறந்த செல்வம் எதுவாக இருக்கும்.

         திருமூலத் தேவரின் தவ நெறிகள் உலகிற்கே உகந்தது. அதனால் உலகம் முழுவதற்கும் உரியது.

    தட்டச்சு உதவி : திருமதி உமா சண்முகம்

    படத்திற்கு நன்றி :

    http://tamilnanbargal.com/tamil-kavithaigal/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D

    Share
  • நாசாவின் விண்ணுளவி புலர்ச்சி [DAWN] வக்கிரக் கோள் வெஸ்டாவைச் சுற்றி விட்டு செரிஸ் குள்ளக் கோள் நோக்கிச் செல்கிறது.

     

                                                                                   சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா



    நிலவினில் தடம் வைத்தார்
    நீல்ஸ் ஆர்ம்ஸ் டிராங் !
    செவ்வாய்க் கோள் ஆராயத்
    தளவுளவி சிலவற்றை
    நாசாவும்
    ஈசாவும் உளவ இறக்கின !
    வால்மீன் வயிற்றில் அடித்து
    தூசிகளை விண்ணில் ஆராய்ந்தார்
    நாசா விஞ்ஞானிகள் !
    வால்மீனை விரட்டிச் சென்று
    தூசியைப் பற்றிக்
    காசினியில் இறக்கினார் !
    வக்கிரக் கோள் ஒன்றின்
    மாதிரி மண்ணை
    வையத்தில் இறக்கியது
    ஜப்பான் விண்ணுளவி !
    அயான் எஞ்சினை இயக்கி
    பில்லியன் மைல்கள்
    பயணம் செய்து
    முரண் கோள் வெஸ்டாவை
    முற்றுகை இட்டு
    நாசா விண்ணுளவி ஏகும்
    செரிஸ் குள்ளக் கோள்  நோக்கி,
    சூரிய மண்டலத் தோற்றம்
    ஆராய் வதற்கு !

    +++++++++++

     

    “முதன்முதல் முரண்கோள் வளையத்தில் (Asteroid Belt) முக்கிய வக்கிரக் கோள் ஒன்றை நாசாவின் விண்ணுளவி சுற்ற ஆரம்பித்து விண்வெளித் தேடலில் ஓர் உன்னத மைல்கல் நட்ட இன்றைய தினத்தை நாங்கள் கொண்டாடுகிறோம்.  வெஸ்டா வக்கிரக் கோளை விண்ணுளவி ஆராய்வது மாபெரும் விஞ்ஞானச் சாதனையாகக் குறிக்கப்படுகிறது.  அது எதிர்காலப் பரிதி மண்டலக் கோள்களுக்கு மனிதர் பயணம் செய்யப் பாதை விரிக்கிறது.”

    சார்லஸ் போல்டன் (NASA Administrator)

    “2025 ஆண்டுக்குள் விண்வெளி விமானிகளை ஒரு வக்கிரக் கோளுக்கு அனுப்பி வைக்க நாசாவுக்கு நான் ஆணை இடுகிறேன்.  அந்தக் குறிக்கோளை நிறைவேற்றப் “புலர்ச்சி” விண்ணுளவி (Dawn Space Probe) தேவையான விபரங்களை இப்போது சேமிக்கும்.”

    ஓபாமா அமெரிக்க ஜனாதிபதி

    “புலர்ச்சி விண்ணுளவி வெஸ்டாவைச் சுற்றும் போது ஆராய எத்தனை தணிவாகச் செல்ல முடியுமோ அத்தனைத் தணிவு உயரத்தில் பயணம் செய்ய முயல்கிறோம்.  விண்ணுளைவி வக்கிரக் கோளில் தவறி விழுந்து முறிந்து போனால் நாசா எங்கள் மீது படுகோபம் அடையும்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (University of California, LA)

    “வக்கிரக் கோள் வெஸ்டாவில் ஓர் உலோகக் கரு (Metal Core) மையத்திலும் சிலிகேட் பாறை அதைச் சுற்றிலும் இருப்பதாக நாங்கள் ஊகிக்கிறோம்.  பரிதி மண்டல வரலாற்றில் எப்போதோ அதன் தென் துருவ முனை உடைந்து பெரும்பான்மைப் பகுதி சப்பையாகப் போனது.

    அப்பகுதியின் சிதறிய சில துணுக்குகள் பூமியிலும் விழுந்திருக்கலாம்.  பூமியில் விழுந்த 20 விண்கற்களில் ஒன்று வெஸ்டாவிலிருந்து விழுந்திருக்கிறது என்பதை நிரூபித்துள்ளார்.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    “வெஸ்டா, செரிஸ் வக்கிரக் கோள்களை ஆராயும் போது விண்கோள்களின் முரணான தோற்றப் பண்பாடுகளை அறிய முடியும்.  முன்னது பரிதி மண்டல அகக் கோள்கள் போல் (Inner Planets) பாறைக் கட்டமைப்பில் வார்க்கப் பட்டது.  பின்னது புறக்கோள்கள் போல் (Outer Planets) பனித்தள வடிவத்தில் உருவானது.”

    டாக்டர் கிரிஸ் ரஸ்ஸல், பிரதம விண்ணாய்வாளர் (UCLA)

    நாசா விண்ணுளவி புலர்ச்சி செரிஸ் முரண் கோள் நோக்கிச் செல்கிறது.

    முதல் விண்வெளிக்  குறிக்கோள் பயணத்தை வெற்றிகரமாக முடித்து, நாசாவின் புலர்ச்சி விண்ணுளவி இரண்டாவது குறிப்பணியைத் துவங்க முரண்கோள் “செரிஸ்”  [Asteroid Ceres] நோக்கி இப்போது [2012 நவம்பர்] சென்று கொண்டிருக்கிறது.    2011 ஜூலை 15 ஆம் தேதி விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண் கோள் ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டு அதைச் சுற்ற ஆரம்பித்தது.   ஏறக்குறைய  ஒன்பது மாதங்கள்  புலர்ச்சி வெஸ்டாவை வலம் வந்து பல ஆய்வுத் தகவல் அனுப்பி, 2012 ஆகஸ்டு மாதத்தில் ஈர்ப்பி லிருந்து விடுபட்டு அடுத்த முரண் கோள் செரிஸை நோக்கிச் செல்லத் துவங்கியது.

    2007 செப்டம்பர் 7 ஆம் தேதி விண்வெளியில் ஏவப்பட்ட புலர்ச்சி விண்ணுளவி  2008 ஆகஸ்டில் பூமி, செவ்வாய்க் கோள் கடந்து முரண் கோள்கள் நிரம்பிய வக்கிரக் கோள் வளையத்த நெருங்கி 2011 ஜூலை 15 ஆம் தேதி வெஸ்டா ஈர்ப்பு விசையில் இறங்கி  அதைச் சுற்ற ஆரம்பித்தது.   விண்ணுளவி புலர்ச்சி முரண் கோள்கள் வெஸ்டாவும், செரிஸும் போல சூரினைச் சுற்றி வருகிறது.   சூரியனிலிருந்து பூமி சுமார் 93 மில்லியன் மைல்கள் [150 கி.மீ.] சராசரி தூரத்தில் சூரினைச் சுற்றுகிறது.  இந்த தூரமே [One Astronomical Unit (1 AU)] என்று குறிப்பிடப்  படுகிறது.  இப்போது புலர்ச்சி விண்ணுளவி  வெஸ்டாவை விட்டு விலகி செரிஸ் முரண் கோளை நெருங்க தனிப்பட்ட சூரிய நீள்வட்டச் சுற்று வீதியில் பயணம் செய்கிறது.

    இவ்விதம் புலர்ச்சி விண்ணுளவி பல மில்லியன் மைல்கள் எளிதாய், ஆனால் மெதுவாய்ப் பயணம் செய்ய உந்துசக்தி தருவது அதன் : அயான் எஞ்சின் [Ion Propulsion System].   அதன் உந்துசக்தி வேகம் மணிக்கு 16,300  மைல்கள்.  அதாவது வினாடிக்கு 7.3 கி.மீ.  இப்போது [2012 நவம்பர்]  புலர்ச்சி விண்ணுளவி பூமியிலிருந்து 166 மில்லியன் மைல் [267 மில்லியன் கி.மீ.] தூரத்தில் பயணம் செய்கிறது.   புலர்ச்சிக்குச் செரிஸ் முரண் கோள் 37 மில்லியன் மைல் [59 மில்லியன் கி.மீ.] தூரத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது.

    நாசா விண்ணுளவி புலர்ச்சி வெஸ்டா முரண்கோளைச் சுற்றி முடித்தது.

    நாசா 2007 செப்டம்பரில் ஏவிய புலர்ச்சி விண்ணுளவி புவியைத் தாண்டிப் பரிதி மண்டலத்தில் நான்கு ஆண்டுகள் பல மில்லியன் மைல்கள் பயணம் செய்து, 2011 ஜூலை 17 ஆம் தேதிமுதன் முதல் முரண் கோள் வளையத்தில் (Asteroid Belt) தடம் வைத்துப் பெரிய வடிவில் ஒன்றான வெஸ்டா வக்கிரக் கோளை (Asteroid Vesta) நெருங்கிச் சுற்ற ஆரம்பித்தது.  பரிதி மண்டல முரண் கோள் வளையத்தில் கோடான கோடி வக்கிரக் கோள்கள் செவ்வாய்க் கோளுக்கும் வியாழக் கோளுக்கும் இடையே வியாழனைச் சுற்றிக் கொண்டு வருகின்றன.  நகரும் இந்த அடர்த்தி மந்தையில் வெஸ்டாவைக் கண்டுபிடித்துப் பிற வக்கிரக் கோள்கள் மோதிச் சிதையாமல் சுற்றி வருவது ஒரு மாபெரும் விண்வெளிச் சாதனையாகவும் வரலாற்று மைல் கல்லாகவும் கருதப்படுகிறது.  விண்ணுளவி அன்றைய தினத்தில் வெஸ்டாவை 530 கி.மீ. (300 மைல்) உயரத்தில் வலம் வந்தது.  வெஸ்டாவை நெருங்கவே நான்கு வருடங்கள் கடந்து விட்டன.  ஒன்பது மாதங்கள் வெஸ்டாவை ஆய்வு செய்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி மேலும் நான்கு ஆண்டுகள் பயணம் செய்து அடுத்துள்ள எல்லாவற்றுக்கும் பெரிய முரண்கோள் செரிஸை (Asteroid Ceres) 2015 இல் சுற்றத் துவங்கும்.  2015 இல் செரிஸை ஐந்து மாதங்கள் ஆய்வு செய்து புலர்ச்சியின் குறிப்பணி முடியும் போது அது சுமார் 3 பில்லியன் மைல்கள் பயணம் செய்திருக்கும்.

     

    2007 செப்டம்பர் 27 ஆம் தேதி புலர்ச்சி விண்ணுளவி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவுகணை முனையிலிருந்து டெல்டா -2 ராக்கெட் மூலம் ஏவப்பட்டது.  10 கி. வாட் மின்னாற்றல் கொண்ட சூரிய சக்தி அயான் எஞ்சின் முடுக்கி மெதுவாகச் சென்று 2011 ஆண்டு ஜூலையில் வெஸ்டா முரண்கோளையும், 2015 இல் செரிஸ் முரண்கோளையும் ஆராயத் திட்டமிடப் பட்டது  2015 இல் அதன் விண்ணுளவு முடியும் போது அது சுமார் 3 பில்லியன் (5 பில்லியன் கி.மீ) தூரம் பயணம் செய்திருக்கும் என்று கணிக்கப் பட்டுள்ளது.  இந்த திட்டத் துக்குச்  செலவாகும் நிதித் தொகை 475 மில்லியன் டாலர்.  பூமியைக் கடந்த பிறகு புலர்ச்சி விண்ணுளவி செவ்வாய்க் கோளை அண்டி ‘நெருக்க ஈர்ப்பு வீச்சில்’ (Flyby Gravity Force) வேகம் மிகையாகி வெஸ்டாவை விரைவில் அடையத் திட்டமிடப் பட்டது.

    வக்கிரக் கோள் வெஸ்டா 1807 ஆண்டில் பூதக் கோள் வியாழனுக்கும், செந்நிறக் கோள் செவ்வாயிக்கும் இடையே உள்ள முரண்கோள் வளையத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெஸ்டாவின் குறுக்கு நீளம் 326 மைல் (525 கி.மீ).  தென்புறத்தில் நேர்ந்த பெருத்த மோதலில் வெஸ்டா துருவப் பகுதியில் சிதைவடைந்து சப்பையான கால்பந்து போல் தோற்றம் அளிக்கிறது.  பூமியிலிருந்து சுமார் 117 மில்லியன் மைல் (188 மில்லியன் கி.மீ.) தூரத்தில் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இந்த விந்தை வரலாறு நிகழ்ந்திருக்கிறது !  திட்டத்தில் அடுத்த சிறப்பு முயற்சி என்ன வென்றால் புலர்ச்சி விண்ணுளவி இத்தனை தூரப் பயண நகர்ச்சிக்கும், திசை திருப்பத்துக்கும் ஒரு புதுவித அயான் எஞ்சினைப் (Solar Electric Ion Engine) பயன் படுத்தியுள்ளது.  ஆரம்பத்தில் புலர்ச்சி 6200 மைல் உயரத்தில் பறந்து வெஸ்டாவின் ஈர்ப்பு விசையில் பிடிபட்டு சுற்றியது.  சிறிது சிறிதாகப் புலர்ச்சி வெஸ்டாவை நெருங்கி இறுதியில் 120 மைல் (200 கி.மீ) உயரத்தில் வலம் வந்து முரண்கோளின் இயற்கைத் தன்மைகளை 9 மாதங்கள் ஆராயும் திட்டம் உள்ளது

    பூமி போன்ற கோள்கள் முதலில் தோன்றிய போது சிதறிய இந்த வக்கிரக் கோள்கள் பரிதி மண்டலத்தின் தோற்றத்தைத் தெரிவிக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்.  வெஸ்டா, கிரிஸ் முரண்கோள்கள் விஞ்ஞானிகளுக்குப் புதிய படைப்புக் கருத்துக்களைத் தெரிவிக்கும்.  புதன், பூமி, வெள்ளி, செவ்வாய், வியாழன் போன்ற கோள்கள் உருவான பிறகு சிதறி எஞ்சிய மிச்சத் துணுக்குகள்தான் இந்த வக்கிரக் கோள்கள்.!  முரண்கோள் வெஸ்டாவின் மையத்தில் ஓர் உலோகக் கரு உள்ள தாகவும், அதைச் சுற்றிலும் சிலிகேட் பாறைகள் மூடி இருப்ப தாகவும் விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்.  வெஸ்டாவின் மேற்தளம் அடித்தள எரிமலைகள் பீறிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.

     

    முரண்கோள் வளையத்தில் எல்லாவற்றுக்கும் பெரிய வக்கிரக் கோள் செரிஸ்.  அதன் பூதளத்  தன்மைகளைக் கண்டறிய முதலில் உதவியது ஹப்பிள் தொலைநோக்கி.  செரிஸின் குறுக்கு நீளம் 580 மைல் (930 கி.மீ).  ஏறக்குறைய உருண்டையான கிரிஸ் புளுடோ போல் பரிதி மண்டலத்தின் குட்டிக் கோள் (Dwarf Planet) என்ற வகுப்பணியில் வைக்கப் படுவது.  செரிஸ் முரண்கோளில் 40 – 80 மைல் (60 – 120 கி.மீ) ஆழப் பனித்தளம் உள்ளதாகவும் பூமியை விட இனிப்பு நீர்ச் சேமிப்பு (Sweet Water Storage) ஆறு மடங்கு மிக்கதாகவும் அறியப் படுகிறது.

    புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

    புலர்ச்சி வெஸ்டாவை 9 மாதங்கள் சுற்றி வரும்,  பிறகு செரிஸை நெருங்கி குறைந்தது 5 மாதங்கள் சுற்றி வரும். புலர்ச்சி முரண்கோளைத் திசை திருப்பி நகர்த்த 10 கி.வாட் சூரிய சக்தி அயான் எஞ்சின் (Solar Electric Ion Engine) பயன்படுத்தப் படுகிறது.  இதுவரைப் பயன் படுத்திய இரசாயன ராக்கெட்டுகள் போலின்றி அயான் எஞ்சின்கள் துடிப்புத் தள்ளு (Push by Impulse) ஆற்றல் உடையது.  உந்து சக்திக்கு எஞ்சினில் ஸீனான் அயான்கள் (Xenon Ions) வெளியே தள்ளப் படுகின்றன.

     

    பூமியின் பெருவாரியான கடல்நீர் வெள்ளம் பற்பல முரண்கோள்களில் உள்ள பனிப்பாறையிலிருந்து மோதலின் போது பரவிச் சேமிப்பானது என்று சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

    புலர்ச்சி விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள் :

    1. வெஸ்டா, செரிஸ் முரண் கோள்களின், மேற்தள அமைப்பு, உட்தள அமைப்பு, திணிவை ஆராய்வது.

    2. முரண் கோள்களின் வடிவளவு, உட்கலவை, உருவத் தோற்றம், நிறையை அறிவது.

    3. மேற்தள ஆய்வு, ஆழ்குழிகளை ஆராய்தல்.

    4. முரண் கோள் வடிவ அமைப்பில் பனிநீர்ச் சேமிப்புத் தேக்கம் பற்றி அறிவது.

    புலர்ச்சி விண்ணுளவி தாதுக்கள், மூலக, மூலக்கூறுகளைக் காணும் கருவிகளைச் சுமந்து செல்கிறது.  2011 ஆகஸ்டு மாதத்தில் புலர்ச்சி வெஸ்டா மீது 120 மைல் உயரத்தில் பறந்து கருவிகள் வேலை செய்யத் துவங்கும்.  பூதள வேறுபாடுகள், சூழ்வெளி அமைப்பு, மலைச் சிகரத் தோற்றங்கள், எரிமலைச் சிதைவுகள், எரிமலைக் குழம்போட்டம் ஆகியவற்றை ஆராயும்.

     



    (தொடரும்)

    ************************
    தகவல்:

    Picture Credits: NASA, JPL, ESA, JAXA

     

    1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
    2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
    3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
    4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
    5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
    5 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006061&format=html (Plasma Rocket Engines)
    6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
    7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
    8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
    9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
    10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
    11. Space Probe Enthralls Japan, as it Heads Home By : Sagamihara (AFP) June 8, 2010
    12 Scientific American Hayabusa Spacecraft Headed Back Toward Earth, Perhaps with Asteroid Dust in Hand
    By : John Matson (June 11, 2010)
    13 Space Flight Now – Japan Spacecraft will Plunge Back to Earth Sunday By : Stephen Clark (June 12, 2010)
    14 Wikipedia : Missio Type Asteroid Sample Returned to Earth (June 13, 2010)
    15 Space Flight Now : Hayabusa Completes Fiery Return to Earth (June 13, 2010)
    16 Aviation Week – Japan Hayabusu Spacecraft Capsule Successful Landing (June 13, 2010)
    17. Space Daily : Asteroid SampleReturn Capsule Recovered in Outback Australia (June 14, 2010)
    18 Japan Seeks Guiness Record Listing for Space Probe. (June 15, 2010)
    19. BBC News : Successful Launch for NASA Probe (Dawn) (Sep 27, 2007)
    20 Wikipedea : http://en.wikipedia.org/wiki/Asteroid_belt (July 19, 2011)
    21 BBC News : Dawn Probe Orbits Asteroid Vesta By : Jonathan Amos (July 17, 2011)
    22 Space Flight Now : Dawn Asteroid Explorer Moves into Orbit ar Versa By Stephen Clark (July 17, 2011)
    23 BBC News : Asteroid Vesta Reveals its Scars By : Jonathan Amos (July 19, 2011)
    24 Daily Galaxy : Was Earth’s Original Water Delivered by Ice-covered Asteroids ? (July 19, 2011)
    25. NASA JPL Site on Dawn : http://dawn.jpl.nasa.gov/mission/trajectory.asp [Dawn Update]
    26 ANew Dawn For NASA’s Asteroid Explorer [October 1, 2012]
    27. http://en.wikipedia.org/wiki/Dawn_(spacecraft) [October 17, 2012]
    28. Dawn Update : http://dawn.jpl.nasa.gov/mission/journal_10_31_12.asp [October 31, 2012]

    ++++++++++++++++++
    S. Jayabarathan (jayabarat@tnt21.com) (November  3, 2012)

    Share
  • Ladies special weekly Magazine 15th Anniversary Function

     


    Looking forward your presence

    Parvathy balasubramanian

    (Sruthilaya Vidyalaya)

     
     

    Thanks & Regards

    S.Selvaragu-PRO 

    (Film & Channel)
    9003024334
    9382209649
    8015765631
    selvaragu.s.pro@gmail.com
    Share
  • புத்தக வெளியீட்டு விழா அழைப்பிதழ்

     

    நண்பர்களே….  

    குர்து தேசிய இனப்போராட்டம் ஓர் அறிமுகம் என்ற என் புத்தகத்தின் வெளியீட்டு விழா ஞாயிறு (04-11-2012)மாலை 5 மணிக்கு சென்னை கே.கே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறுகிறது. நண்பர்கள் அனைவரும் இதில் அவசியம் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன். அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது.

    நட்புடன்,

    எச்.பீர்முஹம்மது

     
    Share
  • பொறுமை

    கவிநயா

    தாகூரின் ‘கீதாஞ்சலி’யில் உள்ள ‘பொறுமை’ என்ற கவிதையின் தமிழாக்கம்.

     பொறுமை

     நீ ஏதும் பேச மறுத்தால்…

    என் இதயம் முழுக்க உன் மௌனத்தால் நிரப்பி

    அதனை அடைகாத்து வைத்திருப்பேன்.

    சிறிதளவும் அசையாமல்

    தலை குனிந்து விழிப்புடனே காத்திருக்கும்

    நட்சத்திரங்கள் நிறைந்த இரவைப் போல

    மிகப் பொறுமையுடன் நானிருப்பேன்.

    காலை நிச்சயம் மலரும்,

    கவிந்திருக்கும் காரிருள் மறையும்,

    வானவெளியைப் பிளந்து கொண்டு உன் குரல்

    பொன்னருவியாகப் பொழியும்.

    சிறகு முளைத்த உன்னுடைய சொற்கள்

    என் குருவிக் கூடுகள் ஒவ்வொன்றிலிருந்தும்

    இனிய கானங்களாய் ஒலிக்கும்,

    என் காடுகளில் அடர்ந்த மரங்களுக்கிடையில்

    உனது இன்னிசை புகுந்து,

    வண்ணப் பூக்களாய்ப்

    பூத்துச் சொரியும்.

    Original in English

    Patience

    Rabindranath Tagore

     

    If thou speakest not I will fill my heart with thy silence and endure it.
    I will keep still and wait like the night with starry vigil
    and its head bent low with patience.
    The morning will surely come, the darkness will vanish,
    and thy voice pour down in golden streams breaking through the sky.
    Then thy words will take wing in songs from every one of my birds’ nests,
    and thy melodies will break forth in flowers in all my forest groves.

    படத்துக்கு நன்றி

    http://discomaulvi.wordpress.com/2011/04/30/sabr-patience-by-ibn-qayyim-al-jawziyyah/

     

     


    Share
  • சொக்காய்

     

    திவாகர்

    ஹல்லோ.. எங்க இருக்கீங்க..

    டிரைவிங் ல இருக்கேன்

    சரி சரி, வண்டியை கொஞ்சம்  ஓரமா நிறுத்திட்டு எனக்கு போன் பண்ணுங்க.. பார்த்து.. போன  தடவை மாதிரி நோ பார்க்கிங்’ல நிறுத்திட்டு போலீஸ்காரன்கிட்டே திட்டும் வாங்கிண்டு, காசையும் அழுதுட்டு வந்தீங்களே.. அது மாதிரி இல்லாம ஓரமா பார்த்து நிறுத்தி போன் போடுங்க..

    சரி, அதையெல்லாம்  இன்னுமா ஞாபகம் வெச்சிருக்கே.. முதல்ல போனை வை.. நான் பேசறேன்..
    …………………………………………………………….

    ஹெல்லோ.. சொல்லு

    ஒழுங்கா பார்க் பண்ணிங்களா.,. உங்களுக்கென்னு யாராவது  போலீஸ்காரன் வந்து மாட்டுவான்.. தண்டம் அழுவீங்க..

    இதோ பார்.. நம்ம ரோட்’ல பார்க்கிங் கிடைக்கறது கஷ்டம்.. எப்பவோ ஒரே ஒரு தடவை அப்படி போலீஸ்கிட்டே மாட்டிட்டேனு இப்படி சொல்லி சொல்லிக் காட்டாதே..

    யார் சொல்லிக் காட்டறா.. ஒரு தடவை மாட்டினது வாஸ்தவம்தானே.. ஜாக்கிரதை’ன்னு சொன்னேன்.. இப்போ ஷாப்பிங் மால்’ல இருக்கேன்.. அதனாலதான் போன் போட்டேன்..ஆமா.. உங்க சொக்கா சைஸ் என்ன?

    ஹாஃப் ஆ.. ஃபுல்லா.. எதைக்  கேக்கிறே?

    நேத்து ராத்திரி ஏதாச்சும்  பார்ட்டியா.. ஐயோ.. உங்களுக்கு ஏன்தான் இப்படி புத்தி போகறதோ.. சொக்காய்ல ஹாஃப்க்கும்  ஃபுல்’க்கும் ஒரே அளவுதானே..

    ஆமா இல்லே.. ஹி ஹி.. நாற்பதுன்னு  வெச்சுக்கோயேன்..

    என்னத்தை நான் வெச்சுக்கறது.. சரியா சொல்லுங்க.. போன தடவை நாற்பத்திரண்டு எடுத்ததா எனக்கு ஞாபகம்..

    அது போன தடவை.. இப்பதான் எக்ஸெர்ஸைஸ் பாடி ஆக்கிட்டேன்..

    ஆஹா.. கேக்கறதுக்கே சுகமா  இருக்கு..

    கிண்டலா.. கொஞ்ச நாள் கழிச்சுப் பாரு.. இது உன்  புருஷன்தானா ந்னு மலைச்சு  நிப்பே.. சிக்ஸ் பேக் கூட  ட்ரை பண்றேன்.. கிட்டதட்ட  ஷாருக் மாதிரின்னு வெச்சுக்கோயேன்..

    ஐய்யோ போதுமே.. அவங்களுக்கு  அதெல்லாம் காசு.. உங்களுக்கென்ன  வந்துது.. அப்படி ஏதாவது பண்ணி  உடம்பை கெடுத்துக்காம இருந்தா  போதும்..

    உனக்குப் பொறாமை..

    ஐய்யோ அழகே.. எனக்கு பொறாமைன்னா ஊரே சிரிக்கும்.. போன தடவை நீங்களும் நானும் உங்க ஆபீஸ் ஃபங்க்‌ஷன்  போகறச்சே என்னைப் பார்த்து யார் இவங்க.. உங்க பொண்ணா’ன்னு கேட்டாங்களே..  நீங்க ஷாக் ஆகி நின்னீங்களே.. மறந்து போயிட்டிங்களா.. ஆங்.. இப்ப ஞாபகம் வந்திருச்சு.. அதனாலதான் பாடி பில்டப் கொடுக்கறிங்களா..

    ஐய்யோ.. உனக்கு எப்படி இவ்வளோ ஞாபக சக்தி.. நான் இதெல்லாம்  அப்பப்போ மறந்துபோகறேன்  தெரியுமா..

    போதும்.. போதும்.. என்ன கலர்ல வேணும் உங்களுக்கு..

    கலர்ரா

    ஐய்யோ.. நான் சொக்காயைச் சொன்னேன்..

    ஏதானும் லைட்கலர்’ல எடு..

    எதுக்கு லைட் கலர்.. உங்க பீரோல பாருங்க அத்தனையும் லைட் கலர்தான்..

    லைட்கலர் எடுக்காதே’ன்னு சொல்ல வந்தேன்.. நான் லைட் கலர்ன்னு சொன்னா நீ எப்படியும் எடுக்க மாட்டே..  டார்க்கா பாரு.. சரிங்க..இதோ வண்டியை எடுத்துடறேங்க..

    ஐய்யையோ யார்கிட்ட  வண்டியை எடுத்துடறேன்னு சொல்றிங்க..

    அட.. இங்கே கார் பக்கத்துல..

    ஐய்யோ.. போலீஸ்காரனா.. தண்ட இழவுதான்.. போனாப் போகுதுன்னு காசு வேணும்னா கொடுங்க.. கன்னா  பின்னான்னு திட்டு வாங்காதீங்க..

    ஐய்யோ.. பக்கத்துல  பொட்டிக்கடைக்காரர் – கடை  முன்னாடி வண்டியை நிப்பாட்டாதீங்க’ன்னு சொல்றார்.. நீ சொல்லு..

    அவங்க எதுக்கு ரோடு ஃபிளாட்ஃபார்ம் மேல கடையை  வெக்கணும்.. நீங்க அவனுக்கொண்ணும் பதில் சொல்ல வேணாம்..

    சரி, வுடு, நான் பாத்துக்கறேன்..

    சரி, சரி, உங்களுக்கு யாரைக் கண்டாலும் பயம்.. அதனாலதான்  சொல்லறேன்..

    எதுக்கு இப்போ இதெல்லாம்  நடு ஷாப்பிங் மால்’ல கத்திச் சொல்லறே.. எல்லாரும் கேக்கப் போறங்க.. வுட்டுடு..

    டார்க் கலர் டிசைன் எல்லாம் நல்லாதான் இருக்கு.. ஆனா உங்களுக்கு சூட் ஆகுமான்னு  தெரியலே..

    மறுபடியும் உனக்குப் பொறாமை.. எனக்கு டார்க்’தான் பிடிக்கும்.. எந்த டிசைன் வேணும்னாலும் எடு.. நான் போட்டுக்கறேன்..

    ஆனா எல்லாம் கட்டம் போட்ட சட்டைங்க.. உங்களுக்கு சூட் ஆகாதுங்க..

    ஆஹா.. கட்டம் போட்ட  சட்டையா.. போனவாரம் டி.வி ல  பார்த்த சுமதி என் சுந்தரி  பட்த்துல சிவாஜி போட்டுண்டு சூபரா பாட்டு பாடுவாரு.. எடு  எடு..

    ஐய்யோ வேணாமே.. அது  சிவாஜிக்கு வேணும்னா அழகா இருக்கும்.. ஆனாலும் அது  பழைய டிசைன்.. சிவாஜியே போயிட்டாரு.. சரி வுடுங்க..

    இப்ப என்னதான் எடுக்கப்போறே.. வந்ததுதான் வந்தே..உனக்கும் டிரெஸ் வேணும்னா அப்படியே செலக்ட் பண்ணிக்கோ..

    ஐய்ய,, நான் காலைலையே வந்து நிதானமா பார்த்துப் பார்த்து சுடிதார்லாம் நல்ல டிசைன்’ல இருக்குன்னு முதல்லயே வாங்கிட்டேன்

    ஓஹோ..

    ஆமாம்.. அப்படியே உங்களுக்கும் ஒரு ஷர்ட் வாங்கலாமேன்னுதான்னு  போன் போட்டேன்..

    சரி, வாங்கிடு.. டார்க் கலர்..

    அட, பேசிண்டே வெளியே வந்துட்டேங்க.. அடுத்த முறை உங்களோட வந்து எனக்குன்னு வாங்கறச்சே உங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டா போச்சு..

    சார்.. இதோ எடுத்துடறேன் சார்..

    யார்கிட்டே சொல்லறீங்க.. மறுபடியும் அந்த கடைக்காரனா..

    இல்லே.. போலீஸ்..

    **********************************************************************

     

    Share
  • சரிங்க…நீங்க சொல்றபடியே செஞ்சிடலாம்ங்க!

    முகில் தினகரன்

    வழக்கமாக மனைவி என்பவளின் வாயிலிருந்து அந்தத் தகவல் வரும் போது கேட்கும் அனைத்துக் கணவன்மார்களும் உற்சாகத்தின் உச்சிக்குப் போய்…உவகைக் கொந்தளிப்பில் உல்லாச ஊஞ்சலாடி…மகிழ்வர். ஆனால் திவாகர் மட்டும் அதற்கு நேர்மாறாயிருந்தான்.

    ‘என்ன…என்ன பாக்யம் சொல்றே?..நீ சொல்றது நெஜமா?’

    பாக்யலட்சுமி தலையை மேலும் கீழுமாய் ஆட்ட,

    ‘பச்…ச்சே…’ என்று சலித்தவாறே தலையில் கையை வைத்துக் கொண்டு நாற்காலியில் சென்றமர்ந்தான் திவாகர்.

    அவனின் அந்தச் செயலுக்கான காரணம் புரியாத பாக்யலட்சுமி ‘ஏங்க..நான் எவ்வளவு சந்தோஷமான வியத்தைச் சொன்னேன்..அதைக் கேட்டு…சந்தோஷப்படா விட்டாலும் அட்லீஸ்ட்…சங்கடப் படாமலாவது இருக்கலாமல்ல?…ஏன்?…என்னாச்சு உங்களுக்கு?’

    அவளை நேருக்கு நேர் பார்த்த திவாகர் ‘பாக்யம்…நான் ஒரு சின்னக் கம்பெனில…சாதாரண கிளார்க்கா வேலை பார்க்கறேன்…இன்னமும் அந்த வேலை கூட நிரந்தரமாகலை..அத்தோட எனக்கு இப்ப வர்ற வருமானம்…நம்ம ரெண்டு பேரோட செலவுக்கே சரியாப் போய்டுது..இதுல குழந்தையும் வந்திட்டா….ம்ஹூம் என்னால சமாளிக்க முடியாது சாமி……துணிமணி…பால் பவுடர்…மருந்து மாத்திரை…டாக்டர் செலவு…ன்னு என்னோட மென்னியைத் திருகிடும் செலவு…அதனால…அதனால…’

    ‘அதனால?’

    ‘நீ…இந்தக்….கருவைக் கலைச்சிடு….பின்னாடி எனக்கு வேலை நிரந்தரமாகி….நான் கை நெறையச் சம்பாதிக்கும் போது பெத்துக்கலாம்’

    ‘விருட்’டென்று தலையைத் தூக்கி அவனை எரித்து விடுவது போல் பார்த்தாள் பாக்யலட்சுமி. அவளுள் கோபம்…ஆவேசம்…எரிச்சல்..எல்லாம் கலவையாய்ப் பொங்கியது. தொண்டை வரை வந்துவிட்ட சொற்களைக் கஷ்டப்பட்டு விழுங்கிக் கொண்டு யோசித்தாள். ‘இவர் சொல்வது…இவரோட கோணத்திலிருந்து பார்க்கும் போது சரிதான்…ஆனா…இப்படி எல்லோரும் நெனச்சிருந்தா இந்த நாட்டுல எப்பவுமே…யாருமே..குழந்தை பெத்துக்கவே முடியாதே..ஏழ்மையும்..கஷ்டங்களும் எப்போதும் இருந்திட்டுத்தான் இருக்கும். அதற்காக நடக்க வேண்டியவற்றை நாம் நிறுத்தி வைக்க முடியுமா?…இல்லை தள்ளித்தான் போட முடியுமா?….அதும் பாட்டுக்கு அது இருந்திட்டே இருக்கட்டும்……இதும் பாட்டுக்கு இது நடந்திட்டே இருக்க வேண்டாமா?…அதுதானே வாழ்க்கை?…இதை எப்படி இந்த மனுசூனுக்குப் புரிய வைக்கறது?’

    அப்போதைக்கு அப்பிரச்சினையை ஆறப் போட நினைத்தவள் ‘சரிங்க…நீங்க சொல்றபடியே செஞ்சிடலாம்ங்க’ என்று சொல்லி விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

    இரண்டு நாட்களுக்குப் பிறகு காலை பதினோரு மணியிருக்கும். பவர்கட் காரணமாக அன்று திவாகரின் கம்பெனிக்கு லீவு விட்டிருந்தார்கள்.

    பொழுது போகாமல் படுக்கையில் படுத்துக் கொண்டு ஏதோ ஒரு புத்தகத்தை அசுவாரஸியமாய் வாசித்துக் கொண்டிருந்தான். வெளியே பாக்யலட்சுமி யாருடனோ பேசிக் கொண்டிருக்கும் குரல் கேட்க மெல்ல எழுந்து ஜன்னலருகே சென்று பார்த்தான்.

    ஒடிசலான உடல்வாகுடன் நைந்து போன சேலையில் நின்று கொண்டிருந்த அந்தப் பெண்ணின் மேடான வயிற்றுப் பகுதி அவள் ஒரு நிறைமாத கர்ப்பிணி என்பதை அறிவித்துக் கொண்டிருந்தது.

    ‘யாரிவள்?…இவளோட எதுக்கு பாக்யம் பேசிட்டிருக்கா?’

    ‘த பாரு விஜயா…என் வீட்டுல…நான்…எங்க வீட்டுக்காரர்…ரெண்டு பேர்தான் இருக்கோம்…அதனால இப்போதைக்கு என் வீட்டு வேலைகளை என்னாலேயே செஞ்சுக்க முடியும்…பின்னாடி…எப்பவாது தேவைப் படும் போது உன்னைக் கூப்பிட்டுக்கறேன்…இப்ப வேண்டாம்…சரியா?’

    ‘பரவாயில்லைம்மா…இங்க…பக்கத்துல ரெண்டு வீட்டுல வேலை பார்த்திட்டிருக்கேன்…உங்க வீடும் கிடைச்சதுன்னா…மூணு வீடாய்டும்…கொஞ்சம் காசும் கூட வரும்…ஏன்னா…இன்னும் கொஞ்ச நாள்ல எனக்கு அடுத்த குழந்தையும் பொறந்திடும்…அப்புறம் இப்ப வர்ற வருமானம் பத்தாது…அதான்…கேட்டேன்’ அவள் படு யதார்த்தமாய்ச் சொல்ல,

    ‘ஏன்? உன் வீட்டுக்காரர் சம்பாதிக்கிறார்தானே?’ பாக்யலட்சுமியும் விடாமல் கேட்டாள்.

    ‘ம்ம்…சம்பாதிக்கிறார்…ஆனா…தள்ளு வண்டில பலகார வியாபாரம் பண்ணி…எவ்வளவு சம்பாதிச்சுட முடியும்?…இப்பவே அவரு சம்பாதிக்கறதையும்…நான் சம்பாதிக்கறதையும் சேர்த்துப் போட்டு செலவு பண்ணியுமே ‘அடிச்சுக்கோ…புடிச்சுக்கோ’ன்னுதான் இருக்கு…’

    ‘சரி…இப்ப உனக்கு எத்தனை குழந்தைக?’

    ‘ரெண்டு…ரெண்டும் பொட்டைப் புள்ளைக’

    ‘அப்படியிருக்கும் போது….இந்தக் கரு உண்டானப்பவே கலைச்சிருக்கணுமல்ல?…இப்பத்தான் அதையெல்லாம் வெகு ஈஸியாப் பண்ணிடறாங்களே’

    ‘எதுக்கு?….எதுக்கு கலைக்கணும்?’ அந்த விஜயாவின் குரலில் கோபம் தெறித்தது.

    ‘இதென்ன கேள்வி?….நமக்கே பற்றாக்குறை வருமானம்… அப்புறம் எதுக்கு அடுத்த குழந்தை?’ பாக்யலட்சுமி குறுஞ்சிரிப்படன் கேட்க,

    ‘என்னம்மா நீ?….பாத்தா படிச்சவளாட்டம் இருக்கே…இப்படிப் புரியாமப் பேசறே…ஏம்மா வருமானத்துக்கும் கொழந்தை பெத்துக்கறதுக்கும் என்னம்மா சம்மந்தம்?…வருமானத்தைக் கணக்கு வெச்சுத்தான் கொழந்தை பெத்துக்கணும்னா…டாட்டாவும்…பிர்லாவும்…ஆளுக்கு அம்பதாயிரம் கொழந்தைகளைப் பெத்துப் போட்டிருக்கணும்…அதேமாதிரி…ரோட்டோரத்துல…பிளாட்பாரத்துல வாழுறவங்க யாருமே கொழந்தையே பெத்துக்க கூடாது…அப்படியா இருக்கு?…ம்ஹூம்…அங்க போய்ப் பாருங்க…பணக்காரங்கெல்லாம்…அளவா…ஒண்ணும்…ரெண்டும்…இங்க பிளாட்பாரத்துக்காரங்க…கணக்கு வழக்கே இல்லாம ஏழெட்டு பெத்துக்கறாங்க’

    அவளது பேச்சில் வாயடைத்துப் போய் சிலையாய்ச் சமைந்தாள் பாக்யலட்சுமி.

    ‘த பாரும்மா…எங்களுக்கு ஒடம்பிலேயும் …மனசிலேயும் தெம்பிருக்கு…அதை வெச்சு கொழந்தைகளைப் பெத்துக்கறோம்…கையிலேயும்…காலிலேயும் தெம்பிருக்கு…அதை வெச்சு அதுகளை வளர்த்தறோம்…..அடுத்ததா ஒரு கொழந்தை பொறக்கப் போகுதுன்னா அதை வளர்க்கறதுக்காக இனி நாம எவ்வளவு அதிகம் சம்பாதிக்கறது?…அதை எப்பிடிச் சம்பாதிக்கறது? ன்னுதான் யோசிக்கணும்…அதை விட்டுட்டு அதைக் கலைக்கறதைப் பத்தி யோசிக்கக் கூடாது..ஏம்மா…ஒண்ணை யோசிச்சுப் பாரு…அதுவும் ஒரு உசுருதானே?…அது தானாவா உருவாச்சு?…நாமதானே உருவாக்கினோம்…ஆக செய்யுற தப்பையெல்லாம் நாம செஞ்சிட்டு அதைப் பலி குடுக்கறது எந்த விதத்திலேம்மா நியாயம்?’

    ‘ஆக…பொறக்கப் போற கொழந்தைக்காக வருமானத்தை அதிகப் படுத்தற முயற்சில நீ இறங்கியிருக்கே….அப்படித்தானே?’

    ‘ஆமாம்…அதுக்காகத்தானே உன் கிட்ட வேலையே கேட்டேன்?…நான் மட்டுமல்ல என் வீட்டுக்காரரும் அவரோட வருமானத்தை அதிகப்படுத்தறதுக்காக வேற ஏதோ ஒரு புது யாவாரம் பண்ண யோசிச்சிட்டிருக்கார்’

    ஜன்னலருகே நின்று கேட்டுக் கொண்டிருந்த திவாகருக்கு அந்த விஜயாவின் பேச்சு ஒவ்வொன்றும் தன்னைக் குறித்தே பேசப்படுவது போலிருந்தது.

    அவள் அங்கிருந்து நீங்கிச் சென்ற பின்னும் நீண்ட நேரம் அவள் குரல் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருந்தது.

    ‘பாக்யம்…பாக்யம்’ திடீரென்று மனைவியை அழைத்தான்.

    ‘ஏங்க?’ கேட்டபடியே வந்தவளிடம,;

    ‘வந்து…நீ…கருவைக் கலைக்க வேண்டாம் பாக்யம்…நாம நம்ம குழந்தைய நல்ல முறைல பெத்து…நல்ல முறைல வளர்ப்போம் பாக்யம்’

    அமைதியாய் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தவள் ‘சரிங்க…நீங்க சொல்றபடியே செஞ்சிடலாம்ங்க’ என்றாள்.

    மறுநாள் காலை.

    திவாகர் அலுவலகத்திற்குச் சென்ற பின் வந்திருந்தாள் அந்த விஜயா.

    ‘ரொம்ப நன்றி விஜயா….நான் சொன்ன மாதிரியே பேசி…என் வீட்டுக்காரர் மனசை மாத்திட்டே….இல்லேன்னா இன்னேரம் என்னைக் கருவைக் கலைக்க வெச்சிருப்பார் அந்த மனுஷன்’

    ‘இதுக்கெதுக்கும்மா நன்றி?…இது ஒரு பொண்ணு…இன்னொரு பொண்ணுக்கு செய்யற கடமைம்மா.’

    அவள் வயிற்றிலிருக்கும் அந்தச் சிசுவும் பிறக்கும் முன்பே இன்னொரு சிசுவைக் காப்பாற்றிய புண்ணியத்தைக் கட்டிக் கொண்டது. 

    Share
  • சட்டம் ஆலோசனைகள் (18)

    மோகன் குமார்

    கேள்வி: விஸ்வேஷ்  , ராமாபுரம் 

    நாங்கள் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு ஒரு பில்டரிடம் புக் செய்தோம். அப்போது அட்வான்ஸ் பணம் தருமாறும் அரசுடைமை ஆன வங்கி மூலம் லோன் பெறலாம் என்றும் கூறியிருந்தார். இதன் அடிப்படையில் முதல் அட்வான்ஸ் பணமும் பின் அடுத்தடுத்து அட்வான்ஸ் தொகையும் கொடுத்து வந்தோம்.

    இப்போது குறிப்பிட்ட கட்டிடத்திற்கு பிளான் அப்ரூவல் இல்லை என்றும், அதனால் அரசுடைமை ஆன வங்கிகள் லோன் தராது, தனியார் வங்கியில் லோன் பெற்று தருகிறேன் என்கிறார். எங்களுக்கு பிளான் அப்ரூவல் இல்லாமல் அந்த வீட்டை வாங்க விருப்பமில்லை. நாங்கள் இதுவரை பத்து லட்சத்துக்கும் மேல் பணம் தந்து விட்டோம். அந்த பணத்தை எப்படி திரும்ப பெறுவது? 

    பதில்:  

    வீடு புக் செய்யும் போது பிளான் அப்ரூவல் பற்றி என்ன கூறினார்? அப்போது பிளான் அப்ரூவல் உள்ள கட்டிடம் என்று எழுத்தில் தந்துள்ளாரா?  

    பிளான் அப்ரூவல் ஆகாத வீட்டை உங்களுக்கு விற்க முயல்வதும், அந்த தகவலை உங்களிடம் முதலில் மறைத்தும் அவரது தவறு தான்.  பிளான் அப்ரூவல் இல்லாத வீட்டை வாங்க  விருப்பம் இல்லை என்றும், நீங்கள் கட்டிய பணத்தை உடன் வட்டியுடன் திருப்ப தருமாறும் அவருக்கு ஒரு நோட்டிஸ் அனுப்புங்கள். 

    அவர் அதன் பின் உங்கள் பணத்தை தராவிடில் நீங்கள் கன்சியூமர் கோர்ட்டில் வழக்கு தொடரலாம். நீங்கள் போட்ட அக்ரீமென்ட் செல்லாது என்றும், தவறான தகவல்கள் தந்து உங்களுக்கு இந்த வீட்டை விற்றுள்ளார் என்றும் நிரூபிக்க வேண்டியிருக்கும். 

    உடனடியாக நீங்கள் இது சம்பந்தமான அனைத்து ஆவணங்களுடன் உங்களுக்கு நம்பிக்கையான வழக்கறிஞரை அணுகவும்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் ……….. (30)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    வாரங்கள் ஓடுகின்றன. வரம்பில்லா நிகழ்வுகள் வாழ்க்கையில் நடந்தேறுகின்றன. ஒரு மனிதன் மறைந்ததும் அவன் தன் நாட்டுக்கும் வீட்டுக்கும் ஆற்றிய செயல்களிலே தான் அவனது புகழ்ச்சியும், இகழ்ச்சியும் அடங்கியிருக்கின்றது.

    நாம் வாழும் மட்டும் வேஷம் போட்டு வாழ்ந்து ஊரையும், உலகத்தையும் ஏமாற்றி வாழ்ந்து விட்டு மறைந்ததும் எமது ஈனச்செயல்கள் அப்படியே எம்முடன் சேர்ந்து புதைக்கப்பட்டு விடுகிறதோ அன்றி எரிக்கப்பட்டு விடுகிறதோ எனும் எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருப்பின் அது எத்தகைய மாயையான நினைப்பு என்பது இன்றைய நடைமுறைகளின் படி நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    மனிதர் இரட்டை வேடம் போட்டு வாழ்வதை சினிமாக்களில் பார்க்கிறோம். பார்த்து விட்டு சிலசமயங்களில் என்ன இது மிகைப்படுத்தப்பட்டு விட்டதோ என்று கூட எண்ணுகிறோம். ஆனால் இப்போ எமது கண்முன்னால் இங்கிலாந்தில் அரங்கேறிக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் இத்தகைய இரட்டை வேட மனிதர்கள் நிஜ வாழ்க்கையில் இருப்பது யதார்த்தமே என்று எமக்கு புலப்படுத்திக் கொண்டிருக்கிறது.

    எதற்காக இத்தனை ஆலாபனை என்று எண்ணுகிறீர்களா ?

    ஜிம்மி சவைல் (Jimmy Saville) பிரித்தானிய ஊடகங்களில் கடந்த பத்து நாட்களாக வறுத்தெடுக்கப்படும் ஒரு பெயர். 

    அது சரி யார் இந்த ஜிம்மி சவைல் ?

    1926ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 31ம் திகதி இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் (Leeds) எனும் நகரில் ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் 7 பிள்ளைகளில் கடைசிப்பிள்ளையாகப் பிறந்தார்.

    இளவயது முதலே இசையில் நாட்டம் கொண்டு வளர்ந்த இவர் தானே இங்கிலாந்தில் வந்த டிஸ்க் ஜொக்கி (Disc Jokki or DJ) எனப்படும் வகையிலான இசைநிகழ்ச்சி தொகுப்பாளர்களில் முதன் முதலாக வந்தவர்களில் முன்னணியில் திகழ்ந்தவர் என்று கூறிக் கொள்கிறார்.

    இரண்டாவது உலக  மகாயுத்தத்தின் போது நிலக்கரிச் சுரங்க வேலைக்காக கட்டாயப் பணியின் பேரில் சேர்க்கப்பட்டவரார். நாட்டிய ஹால்களிலும், பார்களிலும் இசை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் DJ ஆக பணிபுரியத் தொடங்கிய இவரின் முதலாவது வானொலிப் பிரவேசம் 1958ம் ஆண்டு ரேடியோ லக்ஸம்பேர்க் (Radio Luxemburg) இலும் முதலாவது தொலைக்காட்சிப் பிரவேசம் டைன் டீஸ் தொலைக்காட்சி ( Tyne Tees Television) யில் 1960 இலும் நிகழ்ந்தது.

    நகைச்சுவைப் பாணியிலும், மிகவும் விசித்திரமான வகையிலும் தனது நிகழ்ச்சித் தொகுப்புகளையும் வழங்கிய இவர் இங்கிலாந்து மக்களிடையே பெரும் செல்வாக்குப் பெற காரணமாகவிருந்தது இவரது சமூக சேவையும், இவர் பலரது தீராக் கனவுகளை நிறைவேற்றி வைக்கும் தொலைக்காட்சி நிகழ்வான ஜிம் வில் ப்க்ஸ் இட் (Jim`ll Fix It) எனும் பி.பி.ஸி தொலைக்காட்சியில் வந்த நீண்ட தொடராலாகும்.

    தொடர்ந்து பி.பி.ஸி நிறுவனத்தில் பல வருடங்கள் அவரது மறைவு வரைக்கும் பலவித நிகழ்வுகளில் பங்கு பெற்று வந்தார்.

    இவரது சமூக சேவைக்காகவும், மக்களிடையே இவருக்கிருந்த செல்வாக்குக் காரணமாகவும் இவருக்கு இங்கிலாந்து மகாராணியால் “சர்” பட்டம் வழங்கப்பட்டது. இவரது சமூக சேவைகள் முக்கியமாக “ஸ்டோக் மண்டர்வைல் (Stoke Mandervile) ஹாஸ்பிட்டல், “லீட்ஸ் ஜெனரல் இன்வேர்மரி (Leeds General Infermory)” ஹாஸ்பிட்டல், “பிராட்மோர் (Broadmoor) ஹாஸ்பிட்டல் போன்றவற்றில் பிரபலப்பட்டிருந்தன.

    இத்தகைய ஹாஸ்பிட்டல்களில் மனநலம் குன்றிய குழந்தைகள் அதிகமாகப் பராமரிக்கப்பட்டு வந்தன. அதுமட்டுமின்றி மனநலம் குன்றிய இளம் யுவதிகள், இளைஞர்களும் இவற்றில் அடங்குவர்.

    சரி , எதற்காக இந்த ஜிம்மி சவைல் என்பவரைப் பற்றிய இவ்வளவு முன்னோட்டம் எனும் கேள்வி எழுந்திருக்குமே !

    இங்கேதான் இங்கிலாந்து மக்களிடையே அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. இந்த சமுதாயப் பெரிய மனிதன், மகாராணியாரின் அதியுயர் விருதைப் பெற்றவர், சமுதாயத்தினால் முன்னோடியாகக் கருதப்பட்டவர் இரட்டை வாழ்வு வாழ்ந்திருக்கும் அந்தரங்கம் அம்பலத்திற்கு வந்துள்ளது.

    அப்படி என்னதான் செய்து விட்டார் என்கிறீர்களா?

    யாராலும் எண்ணிப்பார்க்கவே கூசும் வகையில் சிறுவர், சிறிமிகளை இவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியிருப்பது அம்பலப்படுத்தப் பட்டுள்ளது.

    இவரது ” Jimm`ll Fix It” எனும் நிகழ்ச்சி பொதுவாக சிறுவர் சிறுமியரின் மனதில் இருக்கும் கனவுகளை தொலைக்காட்சியில் நிறைவேற்றி வைக்கும் ஒரு நிகழ்ச்சியாகும். இதிலே சம்பந்தப்பட்டிருந்த பல சிறுமியரின் கனவுகளை நிறவேற்றுவதற்குக் கூலியாக அவர்கள் மீது தனது பாலியியல் துஷ்பிரயோகத்தை மேற்கொண்டிருப்பது வெளிவந்துள்ளது.

    இவரால் பாதிக்கப்பட்ட பல சிறுவர்  சிறுமியர் தற்போது வயது முதிர்ந்தவர்கள். பகிரங்கமாக இவர் தம்மீது நிகழ்த்திய பாலியல் துஷ்பிரயோகத்தைப் பற்றித் தொலைக்காட்சி நிகழ்வொன்றில் குறிப்பிட்டதன் பின்னாலேயே பல அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இவர் உயிரோடு இருந்த காலங்களிலேயே இவர் மீது சில குற்றச்சாட்டுகள் எழுந்து, சில போலிஸ் பிரிவுகள் அவற்றை விசாரிக்க முற்பட்டு பின் அவ்விசாரணைகள் முடங்கிப் போய்விட்டன.

    இவர் சமுதாயத்தில் வகித்த முன்னணி அந்தஸ்தும், பல சமூக நிறுவனக்களின் நிதிச் சேகரிப்பில் இவர் ஈடுபட்டு அவற்றிற்கு நிதி ஈட்டிக் கொடுக்கும் வல்லமை இவரிடம் இருந்ததுமே இவர் மீதான விசாரணைகள் முடங்கிப் போனதிற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

    இவரது இந்த செய்கைகளினால் பாதிக்கப்பட்டது உலகப்பிரசித்தி பெற்ற பீ.பீ.சீ நிறுவனத்தின் நற்பெயருமேயாகும்.

    ஏன் பீ.பீ.ஸி க்கு மட்டும் அதிகமான அவப்பெயர் என்கிறீர்களா?

    1) பி.பி.ஸி யிலேயே இவர் அதிக காலம் பணியாற்றி வந்துள்ளார். இவரது பாலியல் துஷ்பிரயோகங்களில் பெரும்பாலானவை நிகழ்ந்தது பி.பி.ஸி ஸ்டூடியோவிலேயே.

    2) இவர் மீது சந்தேகங்கள் பல காலகட்டங்களில் துளிர்த்து எழுந்தும் அதனை மேற்கொண்டு விசாரிக்கத் தவறியமை.

    3) 2011ம் ஆண்டு பி.பி.ஸி யின் நியூஸ் நைட் எனும் நிகழ்வு இவரின் மீது இவரது நடத்தையின் மீதான சந்தேகங்களின் அடிப்படையில் ஆக்கிய ஒரு நிகழ்ச்சி பி.பி.ஸி மேலதிகாரிகளால் நிறுத்தப்பட்டதும், அதைத் தொடர்ந்து 2011 கிறீஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் இவருக்கான பாராட்டு நிகழ்ச்சி ஒன்றை பி.பி.ஸி நடத்தியமை.

    இவைகளினால் பி.பி.ஸி மீது மக்களுக்கு ஒருவித நம்பிக்கையின்மை தோன்றியுள்ளதோ எனும் ஜயம் எழுந்துள்ளது.

    சென்ற திங்கட்கிழமை பி.பி.ஸி தனது பனோரமா எனும் நிகழ்ச்சியில் இந்நபரின் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படாமல் போனதிற்கும், 2011ம் ஆண்டு நடத்தப்படவிருந்த நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டதுக்குமான காரணங்களை ஆராய்ந்து தம்மைத் தாமே கடுமையான கண்ணோட்டத்துடன் விசாரித்துக் கொண்டது.

    இவர் மீது கடந்த காலங்களில் எழுந்த குற்றச்சாட்டுகளை ஏன் அரசாங்க குற்றத்தடுப்புப் பிரிவு விசாரிக்கத் தவறியது என்பதை அரசாங்கக் குற்றத்தடுப்புப் பிரிவு விசாரிக்க ஆரம்பித்துள்ளது.

    பி.பி.ஸி தமது நடவடிக்கைகளை ஆராயும் பொருட்டு இரண்டு விசாரணைக் கமிஷன்களை நியமித்துள்ளது.

    இதைத்தவிர பொலீசாரும்  தமது விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    இன்றைய கால்கட்டத்தில் குடும்பங்களின் பிரிவு என்பது சமுதாயத்தில் சாதாரண் நிகழ்வாகி விட்டது. இக்குடும்பங்களின் பிரிவாலும், திருமணமாகாமலே குழந்தைகளை பெற்றெடுக்கும் கலாச்சாரத்தினாலும் இங்கிலாந்து சமுதாயத்தில் மனநலம் குன்றிய பல சிறுவர், சிறுமியர் உருவாக்கப்படுகின்றனர். இவர்களைப் பாதுகாக்கப்படும் மையங்களில் இவர்களை இத்தகைய கொடுமையான மனிதர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டியது இன்றைய சமூகத்தின் முக்கிய கடமையாகிறது. 

    தம்க்கெதிராக நடக்கும் கொடுமைகளை, அக்கொடுமைகளைப் புரிபவரின் சமுதாய அந்தஸ்தின் காரணத்தினால் வெளிப்படுத்த முடியாத நிலை அன்றைய காலகட்டங்களில் இருந்திருக்கலாம். ஆனால் இன்றோ இத்தகைய கொடுமைகளை வெளிப்படுத்த பல சந்தர்ப்பங்க‍ள் அனைவருக்கும் கிடைக்கின்றன. தம்மீது நிகழ்த்தப்பட்ட கொடுமை மற்றையோருக்கும் நடக்கக்கூடாது என்னும் மனப்பான்மையை முன்வைத்து ஏதாவது ஒரு வகையில் இத்தகைய குற்றச்செயல்களைத் தடுப்பது அனைத்து மக்களின் கடமையாகிறது.

    அனைத்து மக்களும் ஒன்றிணைவதே சமுதாயம். இவ்வமைப்பில் நம் அனைவரும் எமக்குரிய பங்கை உளசுத்தியுடன் ஆற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது.

    இவரது வாழ்க்கையும் அதன் பின்னால் இவருக்கு நடந்த நிகழ்வும் எமக்கு ஒரு விடயத்தை ஜயமின்றித் தெளிவு படுத்துகிறது. நாம் வாழும் வரைக்கும் தவறான வாழ்க்கைமுறையைத் திரைக்குப் பின்னால் வாழ்ந்துவிட்டு நாம் மறைந்ததும் அது எம்மோடு மறைந்து விடும் என்று எண்ணுவதோ அன்றி வெளிவந்தால் நமக்கென்ன என்று எண்ணுவதோ தவறானது. உண்மைகள் என்று மே அழிந்து விடாது. அவை நிச்சயம் வெளிவரத்தான் போகிறது. வாழும் வரைக்கும் மனசாட்சிக்கு விரோதமின்றி வாழ்வதுவே முறையான வாழ்வாகும்.

    இதற்காகத்தான் கவிஞன்,

     “இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்” என்றானோ ?

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    படங்களுக்கு நன்றி ( விக்கி பீடியா இணையத்தளம் , பி.பி.ஸி இணையத்தளம்)

    Share
  • ஒரு வினாடி உயிர்

    தமிழ்த்தேனீ                      

    இரவு  மணி 12 அடித்தது.

    நிமிர்ந்து பார்த்த சத்தியமூர்த்தி  கணிணியில் அவர் எழுதிக்கொண்டிருந்த “ஒரு வினாடி உயிர்”  என்று அவர் எழுதிய வரிகளை மீண்டும் ஒரு முறை படித்துப்பார்த்தார். ஒவ்வொரு வினாடியும் உயிர் பிறக்கிறது, ஒவ்வொரு வினாடியும் உயிர் பிரிகிறது, ஒவ்வொரு வினாடியும் உயிர் பயணிக்கிறது, ஒவ்வொரு வினாடியும் உயிர் தேங்குகிறது, ஒவ்வொரு வினாடியும் உயிர் ஓங்குகிறது, ஒரு வினாடிக்குள் உயிரே போய் உயிர் வந்தது என்று உவமானமாய்க் கூறினாலும், உயிர் ஒவ்வொரு வினாடியும் போய்ப் போய்தான் வருகிறது.

    உயிருக்கு விலையுமில்லை, உயிருக்கு நிலையுமில்லை, ஒரு உடலிலே ஒரு உயிர்தான் என்றால், உயிரில்லாத உடலிலேதான் வேறுயிர்  கூடு விட்டுக் கூடு பாய முடியுமென்றால், கர்ப்பிணியின் உள்ளே  இரு உயிர் வாழ்வதெங்கனம்?  ஒரு உடலில் இரு உயிர் வாழ்வதெப்படி? உயிரில்லா உடலில் கூடு பாய்ந்தால்  அது கூடுவிட்டுக் கூடு பாய்தல்.

    உயிருள்ள உடலில் உள்ளே  இரு உயிராய்க் கலந்து இணைந்து உள்ளேயே உருவாகி கருவாகி  உயிரானால் அதன் பெயர்  என்ன  பாய்தல்  உயிர் பாய்தலா…?

    ஆமாம்  எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்த முடியாமல்  மனதில் ஓடிய  எண்ணங்களை  வார்த்தையாய்  வடித்திருக்கிறோமே, இதற்கு என்ன பெயர் கொடுப்பதென்று தெரியவில்லையே . 

    இது கவிதையா  கட்டுரையா  சந்தேகத்தின் வித்தா அல்லது இந்த தேகத்தின் விதையா..? அது தெரியவில்லை   ஆனால்  த்ருப்தியாக  இருந்தது.

    தூங்கினாலும் விழித்திருந்தாலும் மனதில் ஓடும் எண்ணங்களை  தடுத்து நிறுத்த  யாராலும் முடியவில்லை.  தறிகெட்டு ஓடும் மனதை  ஒரு கட்டுக்குள் வேண்டுமானால் கொண்டு வர முடிகிறது. கட்டுக்குள் கொண்டு வந்து ஒரு குறிப்பிட்ட சக்தியை  நினைத்து  அதன் நினைவாகவே  எண்ணங்களை சுழலவிட்டு, அந்தப்புரம் இந்தப்புரம்  அலையவிடாமல் அப்படியே  ஒருவழிப் பாதையில் அந்த எண்ணங்களை ஒருமித்த மனதோடு  அந்த எண்ணக் குதிரையின் லகானை  சரியாகப் பிடித்து,  அந்த குதிரையை  சரியாக வழி நடத்திச்சென்று,  தாம் அடைய நினைத்த  குறிக்கோளை,  பொருளை, பரம்பொருளை அடையமுடிகிறது. அது சிலருக்கு மட்டுமே சித்திக்கிறது. அவர்களைத்தான் சித்தர்கள், ஞானிகள், தவஸ்ரேஷ்டர்கள் என்கிறோம்.

    மனம் ஓடிக்கொண்டே  இருந்தது.  அட  இது சரிப்பட்டு  வராது. இந்த எண்ண ஓட்டங்களுக்கு  முடிவே கிடையாது.   எப்படியாவது  இந்த எண்ண ஓட்டங்களைக்  கட்டுப்படுத்திக்கொண்டு  தூங்க ஆரம்பிக்க வேண்டும். இப்போதே மணி இரவு 12 ஐத்  தாண்டி விட்டது. கணிணிக் கூட்டில்  இருந்த மின்சார உயிரை  தற்காலிகமாக  நிறுத்திவிட்டு,  கணிணியை மூடினார்.  ஆமாம்  ஏன் இந்தக் கணிணியை  மூடுகிறோம் ? திறந்து வைத்தால்  கணிணிக்கு உயிர் போய்விடுமா என்னும் எண்ணம் எழவே  அந்த எண்ணத்தை  மூடிவிட்டு  படுக்கைக்குப் போனார்  சத்தியமூர்த்தி.

    படுக்கையில் படுத்த படியே  மனதை அமைதியாக  வைத்துக்கொண்டு தூங்க  முயன்றார். எண்ண அலைகள் அவ்வளவு விரைவாக  விட்டுவிடுமா என்ன…? அவ்வளவு பெரிய வீட்டில்  அன்று அவர் மட்டும் தனியே  இருக்கிறார்   என்னும் எண்ணம்  தோன்றியது. 

    ஒரு வினாடி  சுற்றும் முற்றும் பார்த்தவருக்கு,  அந்த அமானுஷ்ய அமைதி  பயத்தை  ஊட்டியது. இதென்ன இப்பிடி  இன்று எண்ணங்கள்  சிறகடித்துப் பறக்கிறதே தூங்கவிடாமல்  என்று எண்ணியவர், கண்களை  மூடித் தூங்க முயன்றார். 

    கண்ணின் உள்ளே காட்சி விரிந்தது. அந்தக் காட்சிகளுக்கேற்றவாறு  ஒலியும் ஒளியும் வினாடிக்கு வினாடி  உயிரூட்டிக்கொண்டிருந்தது.  அவருடைய எண்ணங்கள்.    வாழ்க்கையில் முதன் முறையாக  தனியாக  இருக்கிறோம் என்னும் எண்ணம்.   அதை உணர்ந்ததும், இன்னும் அதிகமாக எண்ண அலைகள் தாக்கத் தொடங்கின.

    ஒரு  பெரிய குடும்பத்தில் கடைக்குட்டியாகப் பிறந்த காலத்திலிருந்தே  தனிமையை  அனுபவித்தறியாத   செல்லக் குழந்தை. உற்றார் உறவினர்கள்  என்று ஒரு பெரிய கூட்டமே  வீட்டில்  இருக்கும்.  சிறுவயது முதல் யாராவது  ஒருவர் மடியிலோ, அல்லது யாரையாவது  கட்டிக்கொண்டோ  படுத்து  தூங்கித்தான் பழக்கம். அப்படிப்பட்ட  அவர் இன்று தனியாக  யாருமே  இல்லாத வீட்டில்   ஒற்றை ஆளாக  படுத்துக்கொண்டிருப்பது  ஒரு வினோதமான  அனுபவமாக  உணர்ந்தார் அவர்.

    “என்னங்க  நாளைக்கு  காலையிலே  ப்ரும்ம முஹுர்த்தத்தில் கல்யாணம், நீங்க இன்னிக்கே அங்கே  வந்தால்  உங்களாலே  அந்த சத்திரத்து  சந்தடிலே  தூங்க முடியாது.  நானும் எனக்கு துணையா  ரமேஷும் இன்னிக்கே சத்திரத்துக்கு  போயிடறோம்.  நீங்க  நாளைக்கு காலையிலெ வந்தா போதும்”   இல்லத்தரசி  சாவித்ரி சொல்லிவிட்டுச்  சென்றது  நினைவுக்கு  வந்தது.

    ஒரு வேளை  யோசிக்காமல்  சரி என்று சொல்லிவிட்டோமோ, அங்கே போயிருந்தால்  எல்லோரையும் பார்த்திருக்கலாம்.  இப்படி தனிமையில் மாட்டிக்கொண்டு  அவதிப்பட்டிருக்க வேண்டாமே என்று தோன்றியது. சரி  ஆனது ஆகிவிட்டது  இப்போது வேறு வழியில்லை. தூங்கித்தான் ஆகவேண்டும். கடிகாரத்தை  எடுத்து காலை 4 மணிக்கு  அலாரம் வைத்துவிட்டு,  மீண்டும்  தூங்க யத்தனித்தார் சத்தியமூர்த்தி. அவருக்கு  தோன்றியது,  இந்தப் பெண்களே மிகவும் முன் யோசனைக்காரர்கள்.

    நாம்  எத்தனையோ முறை  அலுவல் நிமித்தமாக  வெளியூர் செல்லும் போதெல்லாம்  எப்படி  சாவித்திரியால் தனியே  இருக்க முடிந்தது ? மனக்கட்டுப்பாடு பெண்களுக்கு  கைவந்த கலையோ ? அதெல்லாம்

    இருக்கட்டும். தன்னைத் தனியே விட்டுவிட்டு  இவளால் எப்படிப் போக முடிகிறது. அவருக்கு சிரிப்பாய் வந்தது, அவர் என்ன குழந்தையா..?  எவ்வளவு பெரிய ஆண்மகன்.

    தன்னைத்தனியே  விட்டுவிட்டு  அதுவும் ஒரே ஒரு நாள் போயிருக்கிறாள் அதற்குள்ளே  மொத்தப் பெண்களுக்குமே இரக்கமே கிடையாது  என்று எண்ணும் அளவுக்கு  என்ன ஆகிவிட்டது இப்போது..?  ஆனால்  இது போல் அவரைத் தனியே விட்டு விட்டு  செல்லும் நிலை  இது வரை  ஏற்படவே  இல்லை  இது தான் முதல் முறை.

    “முதல் இரவு”   முதல்  இரவா     அதுவும் ஐம்பது வயதைத் தாண்டிய  அவருக்கா..?  களுக்கென்று அவரே  சிரித்துக்கொண்டார்.  இந்த மனம் இருக்கிறதே  என்ன பாடு படுத்துகிறது,  எண்ண ஓட்டங்களைக் கட்டுப்படுத்த விடாமல் கற்பனைச் சாட்டை கொண்டு  விரட்டி விரட்டி  ஓட வைக்கிறது.

    எப்படித்தான்  இந்த சித்தர்களும் முனிவர்களும் யோகிகளும் ஞானிகளும் இந்த எண்ணக் குதிரையை கட்டுப்படுத்தினரோ.?  எண்ணிப்பார்த்தாலே  சுவாரஸ்யமாய் இருந்தது.  சரி  எண்ணித்தான் பார்ப்போமே  என்ன குறைந்துவிடும்.?  எதற்காக  இந்த எண்ண ஓட்டத்தை நிறுத்தவேண்டும்.? அப்படியே எண்ணத்தை ஓடவிட்டார்.

     

    எப்போது தூங்கினார் என்றே  தெரியாமல் அவரை  அறியாமல் தூங்கிப்போனார். நல்ல தூக்கத்தில்  திடீரென்று படார்படார் என்று ஒரு சத்தம். மீண்டும் பட ப்-பட,பட் படார் என்று ஏதோ சத்தம் கேட்டு  திடுக்கிட்டு கண்விழித்தார். மின்சாரம் போய்விட்டது.

    அப்படியே சற்று நேரம்  எங்கிருந்து அந்த சத்தம் வருகிறது  என்றே தெரியாமல் அசைவற்றுக் கிடந்தார். மீண்டும் ஒரு முறை தலைக்கு மேலே அந்தச் சத்தம், என்ன இது ஏதோ ஒரு பொருள் வெளி நீலத்தில் அறையின் இந்த மூலையிலிருந்து  அந்த மூலைக்கு  நகர்ந்து சென்றது, உற்றுப்பார்த்தார்  அது என்னவென்று தெரியவில்லை. ஆனால்  அந்தப் பொருள் மிதந்துகொண்டே இருந்தது.

    பயமாகவும் இருந்தது, அது என்னவென்று அறிந்துகொள்ளும் ஆவலும் வந்தது. தனியாக இருக்கிறோம் என்னும் உணர்வு அவரின் ஜாக்கிரதை உணர்வைத் தூண்டியது. மிகவும் மெதுவாக  எழுந்து இருட்டில் தட்டுத் தடுமாறி  சமையலறைக்குச் சென்று  அங்கே தீப்பெட்டியைத் தேடினார்.

    மின்சாரம் வந்துவிட்டது. வேகமாக படுக்கை அறையை நோக்கி நடக்க ஆரம்பித்தார். மீண்டும் அதே பட் பட்டார்பட-ப்ட்ட்படா என்று சத்தம் கேட்டது. படுக்கை அறையை வெளியிலிருந்தே நோட்டமிட்டார். ஒன்றும் தெரியவில்லை. கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு வந்து  நிதானமாக மிக ஜாக்கிரதையுடன் படுக்கை அறையினுள் கம்பை ஓங்கியபடி அடிப்பதற்கு தயாராக  நுழைந்தார். அந்தப் பொருள் கண்ணில் பட்டது. அதைப் பார்த்துவிட்டு  திகைத்து நின்றார். ஓ  இதுதான் அந்த சத்தத்துக்கு காரணமா

    காலையில் அவருடைய  பேரன் கண்ணன் தாத்தா  வாசல்ல  கியாஸ் பலூன் வந்திருக்கு  எனக்கு ஒரு கியாஸ் பலூன் வாங்கித் தரயா, என்று கேட்டதும், அவர் வாங்கி தந்ததும் நினைவுக்கு வந்தன. கண்ணன்  அந்தக் கியாஸ் பலூனை அப்படியே  விட்டிருக்கிறான்.

    அந்த நீல நிறப் பலூன்  மேலே போய் முட்டிக்கொண்டு   நின்றிருக்கிறது, அந்தப் பலூன்  மின்சார விசிறியின் வேகத்துக்கு  நகர்ந்து மின்சார விசிறியின் இறக்கைகளில் பட்டு  சத்தம் அளித்திருக்கிறது. இருட்டில்  நீலமாக  அந்தப் பலூன் காற்றில் உலா  வந்திருக்கிறது  ,அதைப் பார்த்து பயந்து போனோம், அந்தச் சத்தம் கேட்டுத்தான்  பயந்து விழித்திருக்கிறோம்   என்பதை உணர்ந்தார்.

    முதலில் அந்தப் பலூனை எடுத்து காற்றை வெளியேற்றி விடலாம்  என்று அதை ஒரு ஊசியால் குத்த கையை  வைத்தார். மனதில் மீண்டும் நினைவுகளின் ஊர்வலம்.   ஏனோ  ஒரு இரக்கம்  அவர் மனதில்.   வேண்டாம்  என்று நினைத்து  கையிலிருந்த ஊசியை  அந்த பலூன் அருகிலிருந்து தொலைவாக கொண்டு சென்றார்.

    இப்படித்தானே  இறைவன்  இந்தக் காற்றை ஊசி கொண்டு நாம் வெளியேற்றுவது போலப் போல நம் உயிரை  இந்தக்  கூட்டை விட்டு வெளியேற்றிவிடுகிறான்  என்று உணர்ந்து  ஊசியால் குத்தாமல் கையை எடுத்தார்.

    படார் என்று ஒரு சத்தம் கேட்டது. பலூன் தானாக  உடைந்தது.

    ஏதோ  ஒன்று புரிந்தது   அவருக்கு.

     

                                   சுபம்

    Share
  • ஞாபக சாரலினூடே

    திருமலைசோமு

    தேடி அலையும்
    இந்த வாழ்க்கையில்..
    ஒடித்திரிந்து பெற்றது பாதி

    மீதிக்கு ஏங்கி..
    தூக்கம் இழந்து
    தொலைந்து போன
    பழைய நாட்களை..
    எண்ணி எண்ணி

    ஞாபக சாரலினூடே நகர்கிறது

    முற்றுப்புள்ளியின்
    முகம் தேடி
    ஓய்ந்து கிடக்கும்..
    என் புதிய நாட்கள்.

    படத்துக்கு நன்றி

     http://www.mde-art.com/art-blog/abstract-drawing-of-a-face-determination/

    Share
  • காந்தி தாத்தா!

     

    பாகம்பிரியாள்

    கண்ணான தலைவராம் என புகழப்படும்    
    காந்தியிடமிருந்து எல்லோரும், தனக்கு
    வேண்டியதெல்லாம் எடுத்துக்கொண்டார்கள். .

    அவரின் வாழ்க்கை சரிதத்தை
    வெள்ளைக்காரன் படமாய் எடுத்தான்.
    வாரிக் கொட்டியது பணமும் பெயரும்!

    அரைக்கால் தெரியும் வெள்ளை ஆடையை
    அனைத்து ஏழைகளும் பாரபட்சமின்றி
    தனது உடையாய்  எடுத்துக் கொண்டனர்.

    அவரின் ஒத்துழையாமை கொள்கையை
    எல்லா கட்சி  அரசியல்வாதிகளும்
    அவரவர் கையில் ஆயுதமாய் எடுத்துக் கொண்டனர்.

    கம்பி போட்ட சிறைச்சாலையும்,  
    கண்ணைக் கட்டி இருக்கும்  நீதித்துறையும்
    களையான அவர் படத்தை எடுத்துக் கொண்டன.

    சுண்டியிழுக்கும்  அவரின்  நல்ல பெயரை,
    சுறுசுறுப்பான அங்காடிகளும், தெருக்களும்,
    சிறார்களின்  பள்ளிகளும் எடுத்துக் கொண்டன.

    அகலமாய்  சிரிப்பை சிந்தும் அவர்  முகம்
    அழகாய் காட்சியளிக்கும்  ரூபாய்  நோட்டுக்களை  
     அச்சடிக்கும் பணியையோ அரசாங்கம் எடுத்துக் கொண்டது.
     
    அனைத்தையும் பங்கு போட்டுக் கொண்டவர்கள்
    அவசியமில்லை என்று விட்டுச் சென்ற உண்மையும்,
    அஹிம்சையும்  எங்கிருக்கின்றன என்று தெரியவில்லை  

    அதனை மீட்கவே, காந்தி தாத்தா தடி ஊன்றியே   
    ஓய்விலாது செல்கிறார் வீதி தோறும்,
    எங்கேனும் ஓரிடத்திலாவது காண முடியுமென்றே!
     
     
    படத்துக்கு நன்றி

    http://oxmedia.oxford.emory.edu/studentwiki/index.php/Durga

    Share